நாடக மேடை நினைவுகள்
பம்மல் சம்பந்த முதலியார்
நாடக மேடை
நினைவுகள்
ராவ் பகதூர்
பம்மல் சம்பந்த முதலியார்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
INTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES
சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை - 600 113
BIBLIOGRAPHICAL DATA
Title: Nataka Medai Ninaivugal
Author: Rao Bahadur Pammal Sambanta Mudaliar, B.A., B.L.
Published by: International Institute of Tamil Studies, C.I.T. Campus Taramani, Chennai-600 113.
Publication No.:317
Language: Tamil
Date of Publication: 1998
Edition: First (Six volumes)
Paper used: 18.6 kg TNPL Super Printing
Size: 1/8 Demy
Printing types: 10 Points
No. of copies: 1000
No. of pages: xiv +730
Price: Rs. 160/-
DTP: Sri Vignesh Printers 158/5, Lake view Rd., West Mambalam, Chennai - 33
Printer: Parkar Computers and publications Chennai - 14
Subject: Memories of My Theatre Career
This book is published with financial assistance from Sangeet Nataka Akademy, New Delhi.
உள்ளடக்கம்
அணிந்துரை
முதல் பாகம் முதல் அத்தியாயம்
இரண்டாம் அத்தியாயம்
மூன்றாம் அத்தியாயம்
நான்காம் அத்தியாயம்
ஐந்தாம் அத்தியாயம்
ஆறாம் அத்தியாயம்
ஏழாம் அத்தியாயம்
எட்டாம் அத்தியாயம்
ஒன்பதாம் அத்தியாயம்
இரண்டாம் பாகம் பத்தாம் அத்தியாயம்
பதினோராம் அத்தியாயம்
பன்னிரண்டாம் அத்தியாயம்
பதின்மூன்றாம் அத்தியாயம்
பதினான்காம் அத்தியாயம்
பதினைந்தாம் அத்தியாயம்
பதினாறாம் அத்தியாயம்
பதினேழாம் அத்தியாயம்
மூன்றாம் பாகம் பதினெட்டாவது அத்தியாயம்
பத்தொன்பதாம் அத்தியாயம்
இருபதாவது அத்தியாயம் நான்காம் பாகம்
21 ஆவது அத்தியாயம்
22ஆவது அத்தியாயம்
23 ஆவது அத்தியாயம் ஐந்தாம் பாகம்
24ஆவது அத்தியாயம்
25ஆவது அத்தியாயம்
26ஆவது அத்தியாயம்
27ஆவது அத்தியாயம்
28ஆவது அத்தியாயம்
29ஆவது அத்தியாயம்
30ஆவது அத்தியாயம் ஆறாம் பாகம்
31 ஆவது அத்தியாயம்
32 ஆவது அத்தியாயம்
33ஆவது அத்தியாயம்
34ஆவது அத்தியாயம்
முனைவர் ச. சு. இராமர் இளங்கோ
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை - 600 113
அணிந்துரை
‘தமிழ் நாடகத் தந்தை’ என்றும், ‘நாடகப் பேராசிரியர்’ என்றும், ‘தமிழ் மேடை நாடகத்தின் சேக்சுபியர்’ என்றும் நாடகக் கலைவாணர்களால் போற்றிப் பாராட்டப்பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் நாடகத்தின் நிலை மிகவும் இரங்கத்தக்கதாக இருந்தது. கற்றவர்களால் நாடகக் கலை வெறுத்து ஒதுக்கப்பட்டது. இத்தகைய காலக் கட்டத்தில் பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடகத் துறைக்குள் நுழைந்தார். தமிழ் நாடகத்திற்குப் புத்துணர்வும் புதுப்பொலிவும் தந்தார். அவர் இதிகாச நாடகங்களையும், புராண நாடகங்களையும் நடத்தி வந்த தொழில்முறை நாடகக் குழுவினரின் போக்கையும் மாற்றினார். அவர்கள் வரலாறு மற்றும் சமூக நாடகங்கள் நடிக்கத் தூண்டுகோலாக அமைந்தார்.
நாடக நடிகர்களைக் கூத்தாடிகள் என்று அழைக்கப்பட்ட வழக்கத்தை மாற்றி, அவர்களைக் கலைஞர்கள் என்று சிறப்பாகக் குறிப்பிடும் நிலைக்கு உயர்த்தினார். தமிழ் நாடக வரலாற்றில் பம்மல் சம்பந்த முதலியாரின் பங்களிப்பு மிகவும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. ஆங்கில நாடகங்களையும், வடமொழி நாடகங்களையும் தமிழில் மொழி பெயர்த்து, அவற்றை மேடைகளில் நடித்துத் தமிழ் நாடகத்திற்கு ஒரு புது வடிவத்தைத் தந்தார். அவர் காலத்துத் தமிழ் நாடகங்களில் பாடல்கள் அதிகமாக இருந்தன. அத்துடன் பாடல்களின் விளக்க உரையாடல்கள் மிகவும் குறைந்த அளவில் இடம் பெற்றிருந்தன.
பம்மல் சம்பந்த முதலியார் ஆங்கில நாடகங்களின் அமைப்பைப் பின்பற்றி உரைநடையில் நாடகங்களைப் படைத்தார்.
நாடகக் கலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பம்மல் சம்பந்த முதலியார் 9.2.1873இல் சென்னையில் பிறந்தார். மாநிலக் கல்லூரியிலும் பின்னர்ச் சட்டக் கல்லூரியிலும் படித்து பி.ஏ., பி.எல். பட்டங்கள் பெற்றார். சில காலம் வழக்கறிஞராகவும், நீதியரசராகவும் பணியாற்றினார். 24.9.1967இல் மறைந்தார்.
பம்மல் சம்பந்த முதலியார், நாடகத்திற்கு ஆற்றிய தொண்டு தமிழர்கள் என்றும் நினைவில் வைக்கத் தக்கது. கற்றவர்களும் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்களும் தமிழ் நாடகத்தைப் பார்க்க மாட்டார்கள் என்ற கருத்து பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களால் மாற்றம் பெற்றது. உயர் குடியில் பிறந்தவர்களையும் புகழ் பெற்ற அரசியல்வாதிகளையும், அறிஞர்களையும் பம்மல் சம்பந்த முதலியார் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி. இராமசாமி அய்யர், தேசிய இயக்கத்தின் தலைவராக விளங்கிய சத்தியமூர்த்தி, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் முதலியோர் ஆவார்கள். அக்காலத்தில் நீதி மன்றத்தில் நீதியரசராகப் பணியாற்றிய பி.வி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் பம்மல் சம்பந்தனாரின் நாடகப் பணிக்குத் துணை செய்தார்.
நாடகம் என்பது தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டும் அதனைக் கண்டுகளிப்பர் என்றும் நிலவிய கருத்தை மாற்றி நல்ல மேடை அமைத்து, பலவகை நாடகங்களை நடத்தித் தமிழ் நாடகத்தை மேம்படுத்தினார்.
தற்போதுள்ள போக்குவரத்து வசதிகள் அறவே இல்லாத அக்காலக்கட்டத்தில், பம்மல் சம்பந்த முதலியார் தன்னுடைய நாடகங்களை இந்தியாவில் உள்ள நகரங்களிலும் கடல் கடந்து பர்மா, இலங்கை முதலிய நாடுகளிலும் மேடை ஏற்றினார். இலங்கையில் அவருடைய நாடகங்களைப் பார்த்த கலையரசு சொர்ணலிங்கம் என்பவர், பிற்காலத்தில் ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சிக்குப் பாடுபட்டார். அவர் பம்மல் சம்பந்த முதலியாரைத் தன்னுடைய ஆசான் என்று குறிப்பிட்டுள்ளார்.
அக்காலத்தில் நடத்தப்பட்ட நாடகங்கள் அனைத்தும் இன்பியல் முடிவுடையன. சம்பந்த முதலியார் அந்நிலையை மாற்றி ஆங்கில நாடகங்கள் அமைப்பைப் போன்று, இன்பியலும் துன்பியலும் கலந்து வரும் நாடகங்களைப் படைத்தார். தமிழ் நாடக மேடையில் செய்த பெரிய புரட்சி இதுவாகும்.
ஆங்கில நாடகங்களையும், வடமொழி நாடகங்களையும் அரங்கேற்றும்போது அவற்றைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தார். அதன் விளைவாக வேற்று மொழி நாடகங்கள் தமிழர்களுக்கு அந்நிய நாடகங்களாக ஆகாமல் தடுத்தார்.
வடமொழி, ஆங்கிலம், பிரெஞ்சு, செர்மன், லத்தீன் முதலிய மொழிகளிலிருந்து அரங்கேற்றியதன் மூலம் நாடகம் பற்றிய பரந்த - விரிந்த பார்வையைத் தமிழக மக்களிடம் ஏற்படுத்தினார்.
பம்மல் சம்பந்த முதலியார் ஆங்கிலம், வடமொழி, பிரெஞ்சு, செர்மன், லத்தீன் முதலிய மொழிகளிலிருந்து நாடகங்களைத் தமிழில் மொழி பெயர்த்தார். அவருடைய மொழிபெயர்ப்பு, தமிழ் நாடகக் கலைக்குக் கிடைத்த பெருஞ் செல்வமாகும். “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்” என்ற மகாகவி பாரதியாரின் கருத்தை மெய்ப்பித்துள்ளார்.
அந்நாட்களில் தமிழ் நாடகங்கள் விடிய விடிய நடக்கும். அந்நிலையை மாற்றித் தமிழ் மேடை நாடகங்களை மூன்று மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று காலத்தைச் சுருக்கிய பெருமை சம்பந்த முதலியார் அவர்களையே சாரும். இவ்வாறு நாடகத்திற்குரிய கால எல்லையை வரன்முறை செய்தவர் பம்மல் சம்பந்த முதலியார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடகங்களை எழுதுகின்ற ஆசிரியர்கள் அவர்கள் படைத்துள்ள நாடக மாந்தர்களின் உள்ளுணர்வுப் போராட்டங்களை விவரிக்க வேண்டும். அவ்வாறு விவரிக்கும்போது அந்நாடகங்களைப் பார்க்கின்ற மாந்தர்களுடைய மனங்களும் தூய்மை பெறும் என்று நாடக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய ‘மனோகரா', ‘இரு நண்பர்கள்’ முதலியவை இவ்வகையைச் சார்ந்தவை.
பம்மல் சம்பந்த முதலியார் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். அவை பின்வருமாறு : 1. புஷ்பவல்லி 2. சுந்தரி (அல்லது) மெய்க்காதல் 3. இரு சகோதரிகள் (அல்லது) லீலாவதி - சுலோசனா 4. கள்வர் தலைவன் 5. யயாதி 6. மனோகரன் 7. சாரங்கதரன் 8. இரண்டு நண்பர்கள் 9. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் 10. ரத்னாவளி 11. சத்ருஜித் 12. காலவ ரிஷி 13. நற்குலத் தெய்வம் 14, கண்டுபிடித்தல் 15. மார்க்கண்டேயர் 16. விரும்பிய விதமே 17. காதலர் கண்கள் 18. பேயல்ல பெண்மணியே 19. வாணீபுர வணிகன் 20. அமலாதித்யன் 21. சபாபதி - 1 பாகம் 22. சபாபதி துணுக்குகள் 23. சிம்ஹௗநாதன் 24. வேதாள உலகம் 25. மகபதி 26. பொன்விலங்குகள் 27. ஹரிச்சந்திரன் 28. கோனேரி அரசகுமாரன் 29. சிறுத்தொண்டர் 30. சந்தையிற் கூட்டம் 31. ரஜபுத்ர வீரன் 32. சபாபதி - II பாகம் 33. விஜயரங்கம் 34. ஊர்வசி சாபம் 35. புத்த அவதாரம் 36. வள்ளி மணம் 37. சபாபதி - III பாகம் 38. சந்திரஹரி 39. சபாபதி - IV பாகம் 40. தாசிப் பெண் 41. மனைவியால் மீண்டவன் 42. சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து 43. விச்சுவின் மனைவி 44. இடைச்சுவர் இருபுறமும் 45. இந்தவிதமும் 46. விபரீதமான முடிவு 47. சுல்தான்பேட்டை சப் அசிஸ்டென்ட் மாஜிஸ்டிரேட் 48. நோக்கத்தின் குறிப்பு 49. இரண்டு ஆத்மாக்கள் 50. சாகுந்தலை 51. சுபத்ரா - அர்ஜுனா 52. விக்ரமோர்வசி 53. மாளவிகாக்னிமித்ரம் 54. கொடையாளி கர்ணன் 55. சஹாதேவனின் சூழ்ச்சி 56. உண்மையான சகோதரன் 57. காளப்பன் கள்ளத்தனம் 58. பிராமணனும் சூத்திரனும் 59. உத்தமபத்தினி 60. குறமகள் 61. வைகுண்ட வைத்தியர் 62. சதி சுலோசனா 63. நல்லதங்காள் 64. ஏமாந்த இரு திருடர்கள் 65. சபாபதி - V பாகம் 66. சோம்பேறி சகுனம் பார்த்தல் 67. கண்டதும் காதல் 68. காவல்காரர்களுக்குக் கட்டளை 69. மன்மதன் சோலை 70. ஸ்திரீ ராஜ்யம் 71. மாண்டவர் மீண்டது 72. அஸ்தினாபுரத்து நாடக சபை 73. சங்கீதப் பைத்தியம் 74. இருவரும் கள்வர்களே 75. கணநாதனும் அவனது அமைச்சர்களும் 76. பாடலிபுரத்துப் பாடகர்கள் 77. புத்திசாலிச் சிறுவன் 78. விருப்பும் வெறுப்பும் 79. ஆலவீரன் 80. பிறந்தவூர் 81. ஜமீன்தாரின் வருகை 82. ஸ்திரீ சாகசம் 83. சபாபதி ஜமீன்தார் 84. மனை ஆட்சி 85. சதிசக்தி 86. கலையோ காதலோ 87. இந்தியனும் ஹிட்லரும் 88. தீயின் சிறு திவலை 89. தீபாவளி வரிசை 90. துவிபாஷி சபாபதி 91. இல்லறமும் துறவறமும் 92. சபாபதி சினிமா 93. நான் குற்றவாளி 94. மனைவியைத் தேர்ந்தெடுத்தல் என்பனவாகும்.
பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய 94 நாடகங்களில் முதன் முதலாக அச்சிடப்பட்ட நாடகம் ‘லீலாவதி - சுலோசனா’ ஆகும். இந் நாடகம் 1895ஆம் ஆண்டு சனவரித் திங்களில் வெளிவந்தது. இந்நாடக நூலுக்குப் பம்மல் சம்பந்தனாரின் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான முருகேச முதலியார், மாநிலக் கல்லூரித் தமிழாசிரியர் கிருஷ்ணமாச்சாரி, கிருத்துவக் கல்லூரித் தமிழாசிரியர் பரிதிமாற்கலைஞர், பூவை கல்யாணசுந்தர முதலியார், திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை, தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர், தமிழ்ச்சுவடி பதிப்புத் துறையின் முன்னோடிகளில் ஒருவரான சி.வை. தாமோதரம் பிள்ளை, மனோன்மணீயம் நாடக ஆசிரியர் சுந்தரம் பிள்ளை முதலியோர் சாற்றுக் கவிகள் வழங்கியுள்ளனர்.
பம்மல் சம்பந்தனார் எழுதிய இராமலிங்க சுவாமிகள், விசுவாமித்திரர் எனும் இரு நாடகங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று நாடக ஆய்வாளர் முனைவர் ஏ.என். பெருமாள் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றை இதிகாச, புராண நாடகங்கள் என்றும் வரலாற்று நாடகங்கள் என்றும் சமூக நாடகங்கள் என்றும் மொழிபெயர்ப்பு நாடகங்கள் என்றும் பிரிக்கலாம். இந்நாடகங்கள் சுகுண விலாச சபாவில் அரங்கேறின.
சுகுண விலாச சபா நடத்திய அனைத்து நாடகங்களிலும் பம்மல் சம்பந்த முதலியார் நடித்துள்ளார். மனோகரா நாடகத்தில் மனோகரனாகவும், பின்னர்ப் புருடோத்தமனாகவும் நடித்துள்ளார். ‘சபாபதி’ நாடகத்தில் சபாபதி முதலியாராகவும் அவருடைய பணியாளராகவும் நடித்துள்ளார்.
மேலும் ‘சிறுத்தொண்டர்’ நாடகத்தில் சித்திரபுத்திரனாகவும் ‘காலவ ரிஷி’ என்ற நாடகத்தில் நாரதராகவும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். மேலும் பெண் வேடம் புனைந்தும் நடித்துள்ளார்.
நாடகத்தில் பெரிய பாத்திரங்களில் மட்டுமன்றி இங்ஙனம் சிறிய பாத்திரங்களில் நடித்ததால் அவர் மேலும் புகழ் பெற்றார். நாடகத்தில் தலைவனாக நடித்தவர்கள் மற்றச் சிறிய பாத்திரங்கள் ஏற்று நடிக்க முன்வர மாட்டார்கள் என்ற கருத்தை முறியடித்தார்.
‘இரண்டு நண்பர்கள்’ எனும் நாடகத்தில் சுந்தராதித்யனுக்கு இறுதியில் பைத்தியம் பிடித்துவிடுகிறது. அப்பாத்திரத்தை ஏற்று நடிக்க பம்மல் சம்பந்தனார், மன நோயாளிகளின் செயல்களை இரு திங்கள் மருத்துவமனையில் இருந்து நுணுகி அறிந்த பின்பு அவ்வேடத்தில் நடித்தார்.
சேக்சுபியரின் 'ஹேம்லட்' நாடகத்தில் நடிப்பதற்கு முன்னர் அந்நாடகத்தில் ஆங்கிலத்தில் நடித்த எட்மண்ட் கீன், எட்வின் பூத், கெம்பிள் ஆகியோர் நடிப்பைக் கூர்ந்து ஆராய்ந்து அதன் பின்னரே அப்பாத்திரத்தில் நடித்தார்.
மொழி பெயர்ப்பு நாடகங்களான சாகுந்தலை, மாளவிகாக்னிமித்ரம், விக்ரமோர்வசி, ரத்னாவளி முதலிய வடமொழி நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். சேக்சுபியர் ஆங்கிலத்தில் எழுதிய 'Hamlet' என்ற நாடகத்தை அமலாதித்யன் என்றும், 'As you Like it' என்ற நாடகத்தை 'விரும்பிய விதமே' என்ற பெயரிலும் 'Cymlealine' என்ற நாடகத்தை 'சிம்ஹௗநாதன்' என்றும், 'Merchant of Venice' என்ற நாடகத்தை 'வாணீபுரத்து வாணிகன்' என்றும், ‘Macbeth'என்ற நாடகத்தை 'மகபதி' என்றும், பிரஞ்சு மொழியிலுள்ள 'The knavery of Scalphin' என்ற நாடகத்தை 'காளப்பன் கள்ளத்தனம்' என்றும் தமிழில் மொழி பெயர்த்தார்.
சுகுண விலாச சபையின் நிறுவனராகவும், நாடக ஆசிரியராகவும், நடிகராகவும், நாடக இயக்குநராகவும் விளங்கிய பம்மல் சம்பந்த முதலியார், தாம் படைத்த அனைத்து நாடகங்களையும் அச்சிட்டு வெளியிட்டார்.
பம்மல் சம்பந்த முதலியார் பல்துறைப் புலமை மிக்கவர். நாடகங்கள் எழுதியதுடன், ‘பேசும்பட அனுபவங்கள்', ‘தமிழ்ப் பேசும் படக்காஷி', ‘கதம்பம்', ‘தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை', ‘காலக் குறிப்புகள்', ‘சிவாலயங்கள்-இந்தியாவிலும் அப்பாலும்', ‘சிவாலய சிற்பங்கள்', ‘சிவாலய உற்சவங்கள்', ‘சுப்பிரமணிய ஆலயங்கள்', ‘தீட்சிதர் கதைகள்', ‘ஹாஸ்யக் கதைகள்', ‘ஹாஸ்ய வியாசங்கள் ‘முதலிய நூல்களையும் எழுதியுள்ளார்.
சிறுத்தொண்டர் நாடகத்தில் சிறுத்தொண்டர் மகனான சீராளனாகவும், அரிச்சந்திரன் நாடகத்தில் அரிச்சந்திரன் மகனான லோகிதாசனாகவும் யாரும் நடிக்க அக்காலத்தில் முன்வரவில்லை. எனவே பம்மல் சம்பந்த முதலியார் அவருடைய மகனை அவ்விரு பாத்திரங்களையும் ஏற்று நடிக்கச் செய்தார். நாடகத் துறையில் அவருக்கிருந்த மிகுந்த ஈடுபாட்டை இதன்வழி அறியலாம்.
சம்பந்த முதலியார் நாடகக் கலையை வளர்க்கும் முகத்தான் ‘Indian Stage' (இந்திய நாடக மேடை) என்ற ஆங்கில இதழை நடத்தினார். தமிழ் நாடகத் தோற்றத்தை விளக்கும் வகையில் ‘நாடகத் தமிழ்’ என்ற நூலை எழுதினார். ‘நான் கண்ட நாடகக் கலைஞர்கள்', ‘என் சுயசரிதம்', ‘நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி?’ முதலிய நூல்கள் அவருடைய நாடக அனுபவங்களோடு தொடர்புடைய நூற்களாகும்.
பம்மல் சம்பந்த முதலியார் தமக்கு ஏற்பட்ட நாடக அனுபவங்களைத் தொகுத்துப் பிற்காலத் தலைமுறைக்குப் பயன்படும் வகையில் 'நாடக மேடை நினைவுகள்' என்ற நூலை எழுதினார். இந்நூல் ஆறு தொகுதிகளைக் கொண்டது. நாடக மேடை நினைவுகள் முதல் தொகுதி 1932இலும், இரண்டாம் தொகுதி 1933இலும், மூன்றாம் தொகுதி 1935இலும், நான்காம் தொகுதி 1936இலும், ஐந்தாம் தொகுதி அதே ஆண்டிலும், ஆறாம் தொகுதி 1938இலும் வெளிவந்தன.
இவ்வாறு தனித்தனியாக வெளிவந்த ஆறு தொகுதிகளையும் ஒன்றாகத் தொகுத்து வெளியிட வேண்டும் என்பது நாடக ஆர்வலர்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் முகத்தான் ஆறு தொகுதிகளையும் ஒரே நூலாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறது.
பம்மல் சம்பந்த முதலியார், நாடகக் கலையை வளர்ப்பதை வாழ்வின் நோக்கமாகக் கொண்டார். தன்னுடைய வாழ்க்கையை நாடகத்திற்காக அர்ப்பணித்தவர். அவருடைய நாடக வாழ்க்கை , மகிழ்ச்சியான அனுபவங்களையும் கசப்பான உண்மைகளையும் கொண்டது.
‘நாடக மேடை நினைவுகள்’ என்னும் இந்நூலில் அவருடைய நாடக மேடை அனுபவங்களை நமக்கு எடுத்துக் காட்டுகிறார். நாடகக் கலையை முன்னெடுத்துச் சொல்லும் வகையில் அவர் இந் நூலை எழுதியுள்ளார். அவருடைய 94 நாடகங்களையும் மேடை ஏற்றுகின்ற போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்நூலில் விளக்கியுள்ளார்.
பம்மல் சம்பந்தனார் இளம் வயதில் தமிழ் நாடகங்களை வெறுத்தார். ‘அரிச்சந்திரா’ என்ற நாடகத்தைப் பார்க்க அவருடைய நண்பர் அழைத்தபோது அவர் மறுத்தார்.
1891ஆம் ஆண்டு பெல்லாரியில் இருந்து கிருஷ்ணமாச்சார்லு என்ற புகழ் பெற்ற தெலுங்கு நடிகர் ‘சரச விநோதினி சபா’ என்ற நாடகக் குழுவுடன் சென்னைக்கு வந்து தெலுங்கு நாடகங்களை மேடையேற்றினார். அந்நாடகங்களைக் கண்ணுற்ற பம்மல் சம்பந்தனார் தமிழிலும் அவை போன்ற நாடகங்களை நடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். கிருஷ்ணமாச்சார்லு நடத்திய நாடகங்களில் ஒன்று ‘ஸ்திரீ சாகசம்’ என்பதாகும். இந்நாடகத்தைப் பம்மல் சம்பந்தனார் ‘புஷ்பவல்லி’ என்ற பெயரில் மொழிபெயர்த்தார். ‘சரச விநோதினி சபா’ என்ற அந் நாடகக் குழுவில் கற்றவர்களும், உயர் பதவியில் உள்ளவர்களும், அரசு அலுவலர்களும் பங்கேற்றிருந்தனர். அதே போன்ற நாடகக் குழுவைச் சென்னையில் அமைக்க வேண்டும் என்று பம்மல் சம்பந்தனார் விரும்பினார். அதன் விளைவாக 1-7-1891ஆம் ஆண்டு ‘சுகுண விலாச சபை’ என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். அக்குழுவில் பம்மல் சம்பந்தானாரும் ஊ. முத்துக்குமார சாமி செட்டியார், வி. வெங்கடகிருஷ்ண நாயுடு, அ. வெங்கடகிருஷ்ண பிள்ளை , த. செயராம் நாயகர், ஜி.இ. சம்பந்து செட்டியார், சுப்பிரமணிய பிள்ளை ஆகிய எழுவர் இடம் பெற்றிருந்தனர். பம்மல் சம்பந்தனார் ‘புஷ்பவல்லி’ என்ற நாடகத்தைத் தொடக்கத்தில் எழுதி இருந்தாலும் சுகுண விலாச சபையின் சார்பாக முதலில் அரங்கேறிய நாடகம் ‘சுந்தரி’ ஆகும்.
பம்மல் சம்பந்தனார் சுகுண விலாச சபையை நிறுவியதுடன் அந் நாடகக் குழுவுக்கு நிதி ஆதாரம் கேட்டு, சென்னையில் புகழ்பெற்ற செல்வந்தர்களை நாடிச் சென்றார். அவர்களுள் ஒருவர் திவான்பகதூர் பாக்கம் இராசரத்தின முதலியார் ஆவார். பம்மல் சம்பந்தனாரும் அவருடைய நாடகக் குழுவைச் சார்ந்தவர்களும் இராசரத்தினம் அவர்களைச் சந்தித்து, தங்களுடைய நாடகக் குழு வளர நிதி உதவி வழங்கும்படி கேட்டு கொண்டனர். திரு. இராசரத்தினம் “ இதுபோன்ற நாடகக் குழுவால் நாட்டிற்கு என்ன பயன்?” என்று கேட்டார். பம்மல் சம்பந்தனார், அதற்குப் பதில் ‘சேக்சுபியர் மகா கவியைக் கேளுங்கள்’ என்று கூறினார். அதன்பின் இராசரத்தினம் ‘சேக்சுபியர் இங்கிலாந்தைச் சார்ந்தவர். அப்படிப்பட்ட நாடக ஆசிரியர் நம் நாட்டில் யார் இருக்கிறார்கள்?’ என்று கேட்டார். பம்மல் சம்பந்தனார் ‘இன்று இல்லாவிட்டாலும் இனிமேல் அவர் போன்ற நாடக ஆசிரியர்கள் நம் நாட்டில் பிறப்பார்கள்’ என்று உறுதியாகப் பதில் அளித்தார்.
பம்மல் சம்பந்தனார் தமிழ் நாடகங்களின்மேல் கொண்டிருந்த ஈடுபாட்டையும், நம்பிக்கையையும் இந் நூலில் காணலாம்.
‘சுகுண விலாச சபா’ என்ற நாடக அமைப்பைச் சென்னையில் உருவாக்கிய பின்னர், இந் நாடகக் குழுவைப் பின்பற்றித் தமிழகத்தில் புதிய நாடகக் குழுக்கள் தோன்றின. அவற்றுள் ஒன்று 'ஓரியன்டல் டிராமேட்டிக் சொசைட்டி' என்பதாகும். இந் நாடகக் குழு சுகுண விலாச சபா தோன்றுவதற்கு முன்னரே உருவாகி, பின்னர்ச் செயலற்று விட்டது. சுகுண விலாச சபாவுக்குப் பின் மீண்டும் செயல்படத் தொடங்கியது. ‘ஓரியன்டல் டிராமேட்டிக் சொசைட்டி’ என்ற இந் நாடகக் குழுவில் பார்ப்பனர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். இந் நாடகக் குழுவினர் பிற சாதியினரைச் சேர்ப்பதில்லை. மேலும் அந் நாடகக் குழு சுகுண விலாச சபையில் நடிகராக இருந்த ரங்கசாமி அய்யங்காரை அவர் பார்ப்பனாராக இருந்ததால் அவர்களுடைய குழுவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.
சாதி சமய பேதங்களைக் கடந்த பம்மல் சம்பந்தனார், நாடகக் கலையை வளர்க்கத் தோன்றிய அந் நாடகக்குழு சாதியைப் பாதுகாக்கும் அரணாக மாறியதைக் கண்டு வெகுண்டார். அந் நாடகக் குழுவைக் கடுமையாக இந் நூலில் சாடியுள்ளார்.
அன்றைய தமிழ் நாடகங்களில் உண்மைக்கு மாறாகப் பொருந்தாத நிலையில் உரையாடல்களும், நிகழ்வுகளும் அமைந்திருந்தன. எடுத்துக்காட்டாக அரசன் அவைக்கு வந்தவுடன் அமைச்சரைப் பார்த்து, “மாதம் மும்மாரி மழை பொழிகிறதா? பிராமணர்கள் யாகம் செய்கிறார்களா? சத்திரியர்கள் சரியாகச் சண்டை போடுகிறார்களா? சூத்திரர்கள் வேலை செய்கிறார்களா?” என்று கேட்க, அமைச்சர் அரசனின் ஒவ்வொரு கேள்விக்கும் ஆமாம் என்று பதில் கூறுவார்.
இந் நாடக உரையாடலைக் கேட்ட பம்மல் சம்பந்தனார், இந்த அரசன் ஊரில் மழை பெய்வதைக்கூட அறியாமல் அந்தப்புரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தானா? என்று கூறி நகைத்ததாக இந் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் ஒரு துறையில் நூல்களே இல்லையென்றால் அறிஞர்கள் அத் துறையில் கவனம் செலுத்தி நூல்களைப் படைக்க வேண்டும். அதற்கு மாறாகத் தமிழில் ஒன்றுமே இல்லை என்று எப்போதும் புலம்பிக் கொண்டு இருக்கக்கூடாது. அவ்வாறு கூறுவோர் ‘பெற்ற தாய்க்கு உடை இல்லை’ என்று சொல்வதற்குச் சமமாவர். ‘தாய்க்கு உடை இல்லை’ என்றால் முதலில் வெட்கப்பட வேண்டியவன் மகனாவான். அதற்கு மாறாக அவன் ஊரெல்லாம் சொல்லித் திரிவது இழிந்த செயலாகும். சம்பந்தனார் தமிழில் நல்ல நாடகங்கள் இல்லை என்று வருந்தியதோடு நில்லாமல், நல்ல நாடகங்களைப் படைத்தார். இப்பொருண்மையை விளக்க பம்மல் சம்பந்தனார் இந்நூலில் ஒரு கதையைக் கூறுகிறார். அக் கதை வருமாறு:
தெனாலிராமனிடம் ஒருவன் வந்து உன் தந்தைக்கு நாளை ‘சிரார்த்தம்’ என்று கூற, தெனாலிராமன், ‘அப்படியானால் நீதான் சிரார்த்தம் செய்ய வேண்டும்’ என்று கூறினான். ‘உன்னுடைய தந்தைக்கு நான் ஏன் சிரார்த்தம் செய்ய வேண்டும்?’ என்று கேட்க, அதற்குத் தெனாலிராமன் ‘நீதானே எனக்கு நினைவூட்டினாய்; எனவே நீதான் செய்ய வேண்டும்’ என்று பதில் கூறினான். இவ்வாறு தமிழில் நல்ல நாடகங்கள் இல்லை என்று குறை கூறுவோர், அவ்வாறு கூறுவதை விடுத்து நல்ல நாடகங்களை எழுத முற்பட வேண்டும் என்று பம்மல் சம்பந்தனார் இந் நூலில் கூறியுள்ளார்.
பம்மல் சம்பந்தனார் நாடகக் கதையை எழுதும் முறை ஒரு புதுமையானதாகும். பம்மல் சம்பந்தனார் நாடகக் கதையை மனத்தில் அமைத்துக்கொண்ட பின்னர், நோட்டுத்தாளில் பென்சிலால் ‘ஏ’ என்ற அரசனுக்கு ‘பி’ என்று ஒரு மகன் இருந்தான். ‘சி’ என்ற அரசனுக்கு, ‘டி', ‘இ’ என்று இரு புதல்வியர் இருந்தனர். ‘ஏ’ என்ற அரசன் தன் மகனுக்குத் திருமணம் முடிக்க அமைச்சருடன் ஆலோசனை செய்து முடித்தபின் ‘எஃப்’ என்ற தூதுவனை ‘சி’ எனும் அரசனிடம் அனுப்பினான்.
இவ்வாறு கதை அமைப்பை எழுதிக்கொண்ட பின், புதிதாக ஏதாவது தோன்றினால் கதைப்போக்கை மாற்றி எழுதி விடுவதும் உண்டு. நாடகத்திற்கு ஏற்றவாறு காட்சிகளைப் பிரித்தபின்னர் ஏ, பி, சி, டி, இ, எஃப் முதலிய நாடகப் பாத்திரங்களுக்கு அவரவர் பண்புகளுக்கு ஏற்றவாறு பெயர்களைச் சூட்டுவார்.
பம்மல் சம்பந்தனார் எழுதிய நாடகங்களில் ஒன்று ‘தாசிப்பெண்’. இந் நாடகத்தை எழுதி அரங்கேற்றிய பின் விமர்சகர் ஒருவர், ‘சம்பந்தனாருக்குத் தாசிகளிடம் நிரம்ப அனுபவம் இருக்கும் போலும்; எனவேதான் அவருடைய இந் நாடகத்தில் மிக நுணுக்கமாக தாசிகளைப் பற்றி எழுதியுள்ளார்’ என்று குறிப்பிட்டார்.
பம்மல் சம்பந்தனார், அவருடைய விமர்சனத்தை மறுத்து இந் நூலில் எழுதியுள்ளார்.
ஓர் ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அவனுடன் அமைச்சரும் துறவியும் இருந்தனர். அமைச்சருக்குத் துறவிமேல் பொறாமை, எனவே துறவி ஒரு நாள் அரசனிடம் சிற்றின்பம் குறித்து விரிவாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, அமைச்சர், ‘துறவிக்குச் சிற்றின்பத்தில் அதிக ஈடுபாடு இருக்கும்போலும்’ என்று ஏளனமாகப் பேசினார். துறவி, அமைச்சரின் கருத்துக்கு அப்போது பதில் சொல்லவில்லை.
சில நாள் கழித்துத் துறவி ஏவலரிடம் துருப்பிடித்த வெண்கலப் பாத்திரம் ஒன்றை எடுத்து வரும்படி அரசர் மற்றும் அமைச்சர் முன்னிலையில் சொன்னார். அந்தப் பாத்திரத்தை மலத்துடன் சேர்த்து மண்ணில் புதைத்து வைக்கும்படி கூறினார். சில நாள் கழித்து அரசன் மற்றும் அமைச்சரின் முன் ஏவலாளர் மூலம் அந்தப் பாத்திரத்தை மண்ணில் இருந்து எடுக்கும்படி கூறினார். அப்பாத்திரம் பிரகாசமாயிருப்பதைத் துறவி அரசனிடம் காட்டினார். அருகிலிருந்த அமைச்சர், துறவியிடம், ‘இதிலென்ன புதுமை? மலத்தின் புளிப்பு வெண்கலப் பாத்திரத்தில் இருந்த களிம்பை நீக்கிவிட்டது’ என்று விளக்கிக் கூறிய அமைச்சரை நோக்கி, ‘அமைச்சர் மலத்துடன் அதிக ஈடுபாடு கொண்டு இருப்பார் போலும்’ என்று பதில் உரைத்தார் துறவி.
படைப்பாளர்கள் தங்களுடைய படைப்புகளை அவர்கள் வாழ்வுப் பட்டறிவின் மூலமும், நண்பர்களின் அனுபவங்களின் மூலமும், செவிவழிச் செய்திகளின் மூலமும் படைப்பர். எனவே ‘தாசிப்பெண்’ என்ற நாடகத்தில் பம்மல் சம்பந்தனார் கருத்துப்படி அவர் தாசியோடு தொடர்பு இல்லை என்ற கருத்தை இக்கதையின் வழி அவருக்கு அறிவுறுத்துகிறார்.
பம்மல் சம்பந்தனார் 1891இல் பதினெட்டு வயதில் நாடக மேடை ஏறி நடிக்கத் தொடங்கினார். அத்துடன் நாடகங்களை எழுதவும் தொடங்கினார். அவருடைய பணி அவர் இறக்கும் வரை நீடித்தது. நீண்ட காலம் நாடகத் துறையில் இருந்ததால் அவருடைய நாடக அனுபவங்கள் நமக்கு வழிகாட்டத்தக்கன.
தொடக்கக் காலத்தில் பம்மல் சம்பந்த முதலியாருக்கு நடிப்பில் போதிய பயிற்சி இல்லை என்பதை அவரே இந்நூலில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். பின்பு நடிப்புத் துறையில் தேர்ச்சி பெற்ற விவரத்தையும் விளக்கியுள்ளார்.
பம்மல் சம்பந்தனார் பல்வேறு நாடகங்களை நடத்தியதுடன் மற்ற நாடகக் குழுக்களின் நாடகங்களைப் பார்த்து அவற்றில் வரும் புதிய உத்திகளைத் தன்னுடைய நாடகங்களிலும் கையாண்டார்.
‘மதராஸ் டிராமடிக் சொசைட்டி’ என்னும் பெயரில் அமைந்த நாடகக் குழு நடத்திய நாடகங்களில் காட்சிகளுக்கு ஏற்பவும் இடங்களுக்கு ஏற்பவும் திரைகளைப் (Scenic arrangements) பயன்படுத்தியதைக் கண்ணுற்ற பம்மல் சம்பந்தனார், தன்னுடைய நாடகங்களிலும் அந்த முறையைப் பின்பற்றினார்.
மேலும் பாரசீக நாடகக் குழுவினர் நடத்திய நாடகங்களின் திரைகள், பக்கத் திரைகள் (Side wings), மேல் தொங்கட்டான்கள் (Flies) முதலியவை புதிய முறையில் அமைந்திருந்தன. அவற்றைக் கண்ணுற்ற பம்மல் சம்பந்தனார், அவர்கள் பயன்படுத்தியதைப் போன்ற திரைகளைத் தன்னுடைய நாடகங்களிலும் பயன்படுத்தினார்.
பாரசீக நாடகக் குழுவினர் தமிழ் நாடக மேடை அமைப்பில் ஒரு திருப்பத்தை விளைவித்தனர். இதற்கு முன்னர்த் தமிழ் நாடகங்களில், ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் இடையே இடைவெளி விடப்பட்டது. இக்குறை பாரசீக நாடகக் குழுவினர் வருகையால் தமிழ் நாடக மேடையில் களையப்பட்டது.
பாரசீக நாடகக் குழுவினர் பாத்திரங்களுக்கு ஏற்ப உடைகள் அணிந்திருந்தனர். அந்நாட்களில் தமிழ் மேடை நாடகங்களில் வறியவர்களாக நடிப்பவர்கள் செல்வந்தர்கள் போல் உடையணிந்திருந்தனர். அத்தகைய பொருந்தாப் போக்கையும் அந்நாடகக் குழு நீக்கிற்று.
நாடக அரங்கில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் கதை நிகழ்ச்சிக்கு ஏற்ப உடனடியாக மாறுகின்ற காட்சி அமைப்பையும் (Transformation scenes) பாரசீக நாடகக் குழுவினர் தமிழ் நாடக மேடைக்கு அறிமுகப்படுத்தினார்.
அந்நாளில் தமிழ் நாடக மேடையில் பக்க வாத்திய இசைக் கலைஞர்கள் ஓரத்தில் அமர்ந்திருந்தனர். ஆயின் பாரசீக நாடகக் குழுவினர் பக்க வாத்தியக் கலைஞர்களை நாடக மேடைக்கு முன்னர் அமர வைத்தனர். அதன் விளைவாகப் பக்க வாத்தியக் கலைஞர்கள் தமிழ் நாடக மேடையின் முன்னர் அமர்ந்தனர்.
பம்மல் சம்பந்தனார் ‘ருக்மாங்கதா’ என்ற நாடகத்தை உரையாடல்களும் பாடல்களும் இன்றித் தோற்றக் காட்சிகளின் மூலம் (Tableau vivantes) அமைத்து முதன்முதலில் தமிழில் நாடகத்தை நடத்தினார். இது மௌனக்காட்சி என்ற நாடக வகையைச் சார்ந்தது.
பம்மல் சம்பந்தனார் பல்வேறு ஊர்களில் நாடகங்கள் நடத்தியபோது அவருக்கு ஏற்பட்ட இடையூறுகளால் மனம் நொந்தார். ஆயினும் தமிழ்ச் சான்றோர் பழமொழிகளை நினைவுகூர்ந்து மனவலிமை பெற்றார். நாடகத்தில் நடிக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளையும் ஒவ்வொரு காட்சிக்கேற்றவாறு வரவேண்டிய பின்னணிக் காட்சிகளையும் நாடக நுணுக்கங்களையும் பிறர் நடத்தும் நாடகங்களுக்குச் சென்று பார்த்து அவற்றுள் கொள்ள வேண்டியவற்றை அவர் நடத்திய நாடகங்களில் பின்பற்றினார் என்பதை ஒளிவு மறைவின்றி இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நாடக மேடையில் அவர் செய்த மாற்றங்களைக் கண்டு முதலில் முகம் சுளித்தவர்கள், பின்னர் அம்மாற்றங்களை முழுமனத்துடன் வரவேற்றனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
நாடக நடிகர்கள் மது அருந்தக் கூடாது என்றும், தன்னைக் காட்டிலும் நடிப்பில் சிறந்தவர்கள் இல்லை என்ற ஆணவம் கொள்ளக் கூடாது என்றும், தன்னோடு நடிப்பவர்களுடன் ஒத்த மனப்பான்மையோடு பழக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். நாடக நடிகர்கள் தீய பழக்கங்களை விட்டுவிட்டு நல்ல பழக்கங்களை மேற்கொண்டால்தான் அவர்கள் வாழ்வு செம்மை பெறும் என்றும், சமூகத்தில் அவர்கள் உயர்வாகக் கருதப்பெறுவர்கள் என்றும் நெறிப்படுத்தியுள்ளார்.
‘சுகுண விலாச சபையில் சேர வரும் நடிகர்கள் முதலில் சிறிய பாத்திரங்களையே ஏற்று நடிப்பர். பின்னரே அவர்கள் பெரிய பாத்திரங்களை ஏற்று நடிப்பர். இந்நிகழ்ச்சியைப் பம்மல் சம்பந்தனார் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாடகத்தில் நடிக்க வருபவர்கள் உடனடியாகத் தலைவனாகவும், தலைவியாகவும் நடிக்க வேண்டும் என்று விரும்புவது தவறு என்பதை, ‘மெத்தையில் படிப்படியாக ஏறுவதை விடுத்து ஒரே மூச்சாக ஏற முற்பட்டால் கால் ஒடிந்து விடும்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.
நாடகக் கலைஞர், நியாயமான கருத்தைக்கூட பிறர் மனம் கொள்ளக் கனிவாகக் கூறவேண்டும். அதற்கு மாறாக முரட்டுத்தனமாகக் கூறினால் அந்த நியாயமான கருத்துக்கூட வெற்றி பெறாமல் போய்விடும் என்று பம்மல் சம்பந்தனார் இந்நூலில் கூறியுள்ள அறிவுரை எல்லோரும் பின்பற்றத்தக்கதாகும்.
‘நாடகக் கலைஞர்கள் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்’ என்ற கருத்துடையவர் பம்மல் சம்பந்தனார். ‘ஒருவருக்கு நூறு ரூபாய் வருமானம் என்றால் 99 ரூபாய் 15 அணா செலவு செய்துவிட்டு மீதியைச் சேமிப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.’ அதை விடுத்து நூறு ரூபாய் முழுவதையும் செலவு செய்யக்கூடாது. அவ்வாறு செலவு செய்கின்றவர்கள் வாழ்வில் துன்பப்படுவர் என்று இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இது நாடகக் கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் கூறப்படுகின்ற அறிவுரை என்றே கருதலாம்.
நாடக அரங்கேற்றம் என்பது பல்துறைக் கலைஞர்களின் கூட்டு முயற்சியால் உருவாவது. எனவே நடிகர்கள் அனைத்துக் கலைஞர்களையும் மதித்துப் பழகத் தெரிய வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார்.
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்”
என்ற வள்ளுவர் குறளுக்கு ஏற்ப நடிகர்கள் ஒழுக்கத்துடனும் கட்டுப் பாட்டுடனும் வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாடக அரங்கேற்றம் சிறப்பாக அமைய, அரங்க வடிவமைப்பும் திரைச்சீலை ஒப்பனையும் காட்சிக்குரிய பொருள்களும் பெருந்துணையாக அமைகின்றன. இவற்றின் ஏற்றமுறு பங்கினையும் நடிகர்கள் பேச வேண்டிய, நடிக்க வேண்டிய முறையினையும் சிறப்பான நிலையில் விளக்கியுள்ளார். திரை இழுக்க வேண்டிய முறையினைக்கூட விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனிதருக்குள் ஏற்றத்தாழ்வை உருவாக்கிய சாதி அமைப்பு முறையை எதிர்த்தும் மக்கள் எல்லாரும் ‘ஒரே குலம்’ என்ற கருத்தை வலியுறுத்தியும், சாதிச் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பம்மல் சம்பந்தனார் ‘பிராமணனும் சூத்திரனும்’ என்ற நாடகத்தை அந்நாளிலேயே எழுதியுள்ளார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளைச் சுவரில் கருப்புப் புள்ளி இருந்தால் பார்ப்பவர்களின் கண்களுக்கு உடனடியாகப் புலப்படுவதுபோல, நாடக அரங்கேற்றத்தின்போது சிறு தவறுகூடப் பார்வையாளர்களுக்குப் பெரிதாகத் தெரியும். எனவே நாடக அரங்கேற்றத்தில் சிறு தவறுகூட நிகழாமல் விழிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பம்மல் சம்பந்தனார் 1891இல் ‘சுகுண விலாச சபா’ என்ற நாடகக் குழு தோற்றம் பெற்றது முதல் 1930ஆம் ஆண்டு வரை அவர் எழுதிய நாடக நூல்கள், அவரோடு நடித்த நடிகர்கள், நாடகத் துறை தொழில் நுட்பக் கலைஞர்கள், பிற நாடகக் குழுவில் பணியாற்றிய கலைஞர்கள், நாடகத் துறையில் ஈடுபாடு கொண்ட அறிஞர்கள் முதலியோரைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் இந்நூல், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தித் தொகுத்துத் தரும் நாடக வரலாறாக அமைகிறது. தமிழ் நாடக வளர்ச்சிக்குப் பாடுபடுபவர்களுக்கும், நாடக ஆய்வாளர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் இந்நூல் மிகவும் பயனுள்ளதாகும்.
இவ்வரிய நூலை மறுபதிப்புச் செய்து வெளியிடுவதற்கு நிதி உதவிய நடுவணரசு நிருவாகத்தில் இயங்கும் சங்கீத நாடக அகாதமிக்கும், இந்நூலை வெளியிடுவதில் தூண்டுகோலாக இருந்த சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்களுக்கும், பம்மல் சம்பந்தனாரின் நூல்களை அச்சிட்டு வெளியிடுவதற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு உரிமை தந்த பம்மல் சம்பந்தனாரின் குடும்பத்தார்க்கும் நன்றி.
நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் காட்டி வருகின்ற நிறுவனத் தலைவர் மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி - பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் முனைவர் மு. தமிழ்க்குடிமகன் அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி-பண்பாடு மற்றும் அறநிலையத் துறைச் செயலாளர் திருமிகு. த. இரா. சீனிவாசன் இ.ஆ.ப. அவர்களுக்கும் நன்றி.
மெய்ப்புத் திருத்திய பாரதி அச்சக உரிமையாளர் திரு. தி. நடராசன் அவர்களுக்கும் நன்றி.
இந்நூலினை ஒளிக்கோர்வை செய்து தந்த விக்னேஷ் பிரிண்டர்ஸ் உரிமையாளர்க்கும், கவினுற நூலாக்கம் செய்து தந்த ‘பார்க்கர் கம்ப்யூட்டர்’ உரிமையாளர்க்கும் நன்றி.
இயக்குநர்
நாடக மேடை
நினைவுகள்
முதல் பாகம்
முதல் அத்தியாயம்
அநேக சாஸ்திரங்களில், இன்ன காரணத்தினால் இன்ன காரியம் உண்டாகிறதெனச் சற்றேறக்குறைய நிச்சயமாய்க் கூறலாகும். மனிதனுடைய குணாதிசயங்களைப் பற்றி ஆராயுங்கால், இன்ன காரணத்தால்தான் இன்னது உண்டாயிற்று என்று கூறுவது மிகவும் கடினமென்பதே என் கொள்கை. என்னுடைய பதினெட்டாவது வயதுக்கு முன், யாராவது ஒரு ஜோஸ்யன் “நீ தமிழ் நாடக ஆசிரியனாகப் போகிறாய்” என்று கூறியிருப்பானாயின், அதை நானும் நம்பியிருக்க மாட்டேன், என்னை நன்றாயறிந்த எனது வாலிப நண்பர்களும் நம்பியிருக்க மாட்டார்கள். அதற்கு முக்கியமான காரணம் ஒன்றுண்டு. நான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு மிகவும் அருகாமையில் பல வருடங்களுக்கு முன் ஒரு கூத்துக் கொட்டகை இருந்தபோதிலும், சென்னை பட்டணத்தில் அடிக்கடி பல இடங்களிலும் தமிழ் நாடகங்கள் போடப்பட்ட போதிலும், அதுவரையில் ஒரு தமிழ் நாடகத்தையாவது நான் ஐந்து நிமிஷம் பார்த்தவனன்று. நான் தமிழ் நாடகங்களைப் பாராமலிருந்தது மாத்திரமன்று; அவைகளின் மீது அதிக வெறுப்புடையவனாயு மிருந்தேன். அதற்குக் காரணம், நான் இப்பொழுது யோசித்துப் பார்க்குமிடத்து, நான் பால்யத்தில் பீபில்ஸ் பார்க்கில் வருடந்தோறும் நடந்து வந்த வேடிக்கையிலும், இன்னும் இதர இடங்களிலும், அகஸ்மாத்தாய் நான்
கண்ட கூத்தாடிகளின் நடையுடை பாவனைகள் என் மனத்திற்கு உண்டாக்கிய ஜிகுப்சையேயென்று நினைக்கிறேன். அன்றியும் என்னுடைய தகப்பனார் என்னைத் தன்னுடன் நுங்கம்பாக்கம் பழைய காலேஜ் என்று சொல்லப்பட்ட இடத்தில் ஆங்கிலேய நாடகங்கள் ஐரோப்பியரால் நடிக்கப்பட்டபோது அழைத்துக் கொண்டு போயிருந்தார். அவர்கள் பூண்ட வேஷங்களையும், நான் மேற்கூறிய தமிழ்க் கூத்தாடிகளின் வேஷங்களையும் ஒத்திட்டுப் பார்க்கும் பொழுது, எனக்கு அக் காலத்திய தமிழ் நாடகங்களின்மீதும் அதனை ஆடுவோர்மீதும் விருப்பமில்லாமலிருந்தது ஓர் ஆச்சரியமன்று. அங்ஙனமிருக்க, அந்த வெறுப்பு நீங்கி, தமிழ் நாடகங்கள் மீது விருப்புண்டாகி, இது வரையில் சற்றேறக் குறைய அறுபது தமிழ் நாடகங்களுக்குக் கர்த்தாவாகும்படி என் மனம் மாறியதற்குக் காரணங்களையறிய இதை வாசிக்கும் எனது நண்பர்கள் விரும்புவார்கள் என்று நம்பி இக்கதையை எழுத விருப்பங் கொண்டேன்.
நான் தமிழில் நாடகங்கள் எழுதுவதற்கு அஸ்திவாரமாயிருந்த முதற் காரணம், நான் சிறுகுழந்தையாயிருந்தபோது நான் உட்கொண்ட உணவு ஜீரணிக்கும்படியான சக்தி குறைவாயிருந்ததே என்று உறுதியாய் நம்புகிறேன். இதை அநேகர் நம்புவது கடினம்; ஆயினும் இது உண்மையே! சற்றேறக்குறைய எனது ஒன்பதாம் வயது வரையில் அடிக்கடி, இரவு போஜனம் செய்தவுடன், அது செரிக்காமல் நான் வாந்தியெடுப்பது வழக்கம். அதைத் தடுக்கும் பொருட்டு, எனது தாயார் ஒரு கதை சொல்லி எனக்கு உணவு ஊட்டுவது வழக்கம். கூறிய கதையையே கூறினால் எனக்கு அதில் வெறுப்புண்டாகுமென அறிந்து என் மாதா அவர்கள் சற்றேறக் குறைய தினம் ஒரு புதுக் கதையாகச் சொல்ல முயல்வார்கள். இவ்வாறாக எனது ஒன்பதாவது வயதுக்குள் ராமாயணம், பாரதம், ஸ்காந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய இதிகாச புராணங்களிலுள்ள கதைகள் எல்லாம் அமிர்தம் போன்ற அவர்களது வாய்ச்சொற்களால் என் செவியால் உண்டேன். இதனால் என் மனத்திற்கு அக்கதைகளின்மீது பெரும் விருப்பமும் அக்கதா நாயகர்களின் மீது பெரும் ஆர்வமும் உண்டாயிற்று. அவை என் மனத்திற்கு பெருங்கிளர்ச்சியையும் ஊக்கத்தையும் உண்டாக்கியது என்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. நான் அப்பொழுது கற்றறிந்த கதைகள் பிறகு நான் நாடகம் எழுதுவதற்கு உபயோகப்பட்டன என்பது திண்ணம். ஆகவே நான் நாடக ஆசிரியன் ஆனதற்கு, என் முதல் தெய்வமாகிய மாதாவுக்கே கடன்பட்டிருக்கின்றேன். எனக்கிப்பொழுது வயது ஐம்பத்து எட்டுக்கு மேல் ஆகிறது. என் தாயார் எம் பெருமான் திருவடியை அடைந்து நாற்பது வருடங்களாகின்றன. ஆயினும் இப்பொழுதும் அவர்களை நினைத்து இதை எழுதும்பொழுது என்னையுமறியாதபடி எனக்குக் கண்ணீர் வருகிறது.
நான் நாடக ஆசிரியனானதற்கு இரண்டாவது காரணமாக, என் தந்தையார் (காலஞ்சென்ற பம்மல் விஜயரங்க முதலியார் அவர்கள்) எங்கள் வீட்டில் சேர்த்துவைத்த தமிழ் ஆங்கிலேயப் புஸ்தகங்களே என்று கூறவேண்டும். அவர் கலாசாலையில் தேறின பிறகு, முதலில் தமிழ் உபாத்தியாயராக இருந்தார். பிறகு பள்ளிக்கூடங்களைப் பரீட்சை செய்யும் “இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ்"என்னும் உத்தியோகத்தில் அமர்ந்திருந்தார். தானே தமிழ் வாசக புஸ்தகங்கள் முதலிய பல அச்சிட்டார். இவை காரணமாக எங்கள் வீட்டில் ஏறக்குறைய இரண்டாயிரம் புஸ்தகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந்தன. தமிழ்ப் புஸ்தகங்களை அச்சிடும் ஒவ்வொருவரும் அவருக்கு ஒரு புஸ்தகம் அனுப்புவதுண்டு. நான் தமிழ் நன்றாய்ப் படிக்கத் தெரிந்த நாள் முதல், அவரிடமுள்ள தமிழ்க்கதைப் புஸ்தகங்களையெல்லாம் ஒவ்வொன்றாகப் படித்து வந்தேன்; அங்ஙனமே ஆங்கிலம் படிக்கக் கற்றவுடன், ஆங்கிலேய கதைப் புஸ்தகங்களையும் நாடகங்கள் முதலியனவையும் படிப்பேன். இவ்வாறு ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி எழுதிய நாடகங்களையும் அச்சிறு வயதிலேயே படித்தேன். அச்சிறு வயதில் மேற்கண்ட புஸ்தகங்களில் நான் அர்த்தம் அறியக்கூடாத பல வார்த்தைகளும் சொற்றொடர்களும் இருந்தன என்றாலும், மொத்தத்தில் கதைகளைக் கிரஹித்துக் கொள்வேன். அக்கதைகளை யெல்லாம் படிக்கும்பொழுது, அக்கதைகளின் நாயகர்களாக என்னையே பாவித்துக்கொண்டு, அவர்கள் துக்கப்படுங்கால் நானும் துக்கப்படுவேன்; அவர்களுக்கு யாராவது இடையூறுகள் செய்யுங்கால் கோபங்கொள்வேன்; அவர்களுக்கு நற்கதி வாய்க்குங்கால் குதூஹலமடைவேன்; இது பிற்காலத்தில் நான் நாடகங்ககள் எழுதுவதற்கு மிகவும் பிரயோஜனப்பட்டது மன்றி, நாடகங்களை நடிப்பதற்கு எனக்குப் பேருதவியாயமைந்தது. ஷேக்ஸ்பியர் மகாகவி யெழுதிய நாடகங்களின் கதைகளை லாம்ப் (Lamb) என்பவர் வசன ரூபமாக எழுதிய புஸ்தகத்தை நான் வாசித்த பொழுது, அதில் மெக்பெத் (Macbeth) என்னும் துக்ககரமான கதையைப் படிக்குங்கால், டங்கன் (Duncan) கொலையுண்ட பாகத்தை நான் முதல் முதல் படித்த பொழுது, தனியாய் நான் மேல் மாடியில் என் தகப்பனாருடைய மேஜையருகில் படித்துக் கொண்டிருந்த அப்புஸ்தகத்தை மூடாமலும் விட்டு, பயந்து, படபடத்த மார்புடன் என் தாயாரிருக்குமிடம் நான் ஓடியது, இப்பொழுதும் எனக்கு ஞாபகம் வருகிறது. மஹாபாரதத்தில் துரோண பர்வத்தில் பதின்மூன்றாம் நாள் யுத்தத்தில் அபிமன்யு கொலையுண்ட கதையை வாசித்த பொழுது, என்னையும் அறியாதபடி கண்ணீர் தாரை தாரையாக எனக்குவர, அருகிலிருந்த எனது அத்தையும் சிற்றன்னையும் என்னை “ஏன் அழுகிறாயிப்படி, இது கதைதானே” என்று தேற்றியது இன்னும் என் ஞாபகத்தில் நேற்று நடந்தது போல இருக்கிறது.
மேற்கூறியவைகள் அன்றி, மற்றொரு காரணம் அடியில் வருமாறு:- நான் சிறுவனாயிருந்தபொழுது பள்ளிக்கூடங்களில் வருஷோற்சவக் கொண்டாட்டங்களில் பிள்ளைகள் ஆங்கிலேய கவிகள் இயற்றிய கிரந்தங்களிலிருந்து சிலபாகங்களை ஒப்புவிப்பது வழக்கம்; அப்படி நன்றாய் ஒப்புவிக்கும் சிறுவர்களுக்குப் பரிசுகள் கொடுப்பதும் வழக்கம். இம்மாதிரியான பரீட்சைகளில் நான் சிறுவயது முதல் தேர்ந்தவனாய் பல பரிசுகள் பெற்றேன். இதனால் ஆங்கில நாடகங்களின்மீது எனக்கு அதிக விருப்பம் ஜனித்தது. அக்காலத்தில் கலாசாலைகளில் வாசிக்கும் மாணவர் வருடந்தோறும் ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி எழுதிய நாடகங்களை ஆங்கிலேயத்தில் நடிப்பார்கள். அந்நாடகங்களையெல்லாம் தவறாமல் நான் போய்ப் பார்த்து வருவேன்; அப்படி மற்றவர்கள் நடிப்பதை நான் பார்க்கும் பொழுதெல்லாம் நாமும் அப்படி நடிப்பதற்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லையே என்று ஏக்கமுறுவேன். அக்காலத்தில் என் விளையாட்டுத் துணைவர்களாயிருந்த என் நேர் மூத்த சகோதரனும் என் இளைய சகோதரியும் நானுமாக, நாங்கள் பார்த்த சிறுநாடகங்களை எல்லாம், விளையாட்டாக வீட்டில் எங்கள் தகப்பனார் வெளியில் போயிருக்கும் சமயம் பார்த்து நடிப்போம். ஒருமுறை ஒரு ஆங்கில சர்க்கஸில் நாங்கள் பார்த்த “டிக்டர்ப்பின் என்னும் திருடன் யார்க் பட்டணத் துக்குக் குதிரைச் சவாரி செய்தது” (Dick Turpin's ride to York) என்னும் நாடகக் கதையை, வசனரூபமாக நான்கு ஐந்து காகிதங்களில் நான் எழுத, அதை நாங்கள் காகிதத்தினால் ஒரு திரைசெய்து, அதன் முன் நடித்தது எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது.
ஆயினும் மேற்கண்ட காரணங்களால் ஆங்கில நாடகங்களின் மீது எனக்குப் பெரும் உற்சாகம் உண்டாயதேயொழிய, தமிழ் நாடகங்களின்மீது எனக்கிருந்த வெறுப்பு கொஞ்சமேனும் குறையவில்லை . என்தாயாதியாகிய ஒரு சிறுவன், அக்காலத்தில், எங்கள் வீட்டிற்கு அருகாமையில் அமைக்கப்பட்ட மூங்கில் கொட்டகையில், அக்காலத்தில் ஹரிச்சந்திரனாக நடிப்பதில் தனக்குச் சமமானவர்கள் இல்லையென்ற கீர்த்தி பெற்ற சுப்பராயாச்சாரி, வாரம் தோறும் சனிக்கிழமைகளில் ஹரிச்சந்திர நாடகம் நடத்து வதைப் போய்ப்பார்ப்பதுண்டு. அத்தாயாதி என்னைத்தன்னுடன் வரும்படி என்னை அழைப்பதுண்டு. அப்படி நான் அழைக்கப்படும் பொழுதெல்லாம், தமிழ் நாடகங்களைப் பற்றி இழிவாகப் பேசி அவைகளைப் பார்க்க எனக்கிஷ்டமேயில்லை என்று நான் கூறுவேன். இவ்விஷயம் நான் முன்பு குறிப்பிட்டபடி, என் சம வயதுடைய நண்பர்களுக்கெல்லாம் தெரிந்த விஷயமாயிருந்தது.
தமிழ் நாடகங்களின்மீது இருந்த இந்த வெறுப்பு மாறி, தமிழ் நாடகங்களை நான் எழுத வேண்டுமென்றும், அவைகளில் நடிக்கவேண்டுமென்றும் எனக்குப் பெரும்பிரீதி உண்டானதற்கு முக்கியமான காரணம், என்னுடைய பதினெட்டாம் வயதில், (1891), சென்னையில், பல்லாரியிலிருந்து காலஞ்சென்ற மா-ள-ள-ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்லு என்பவர், “சரச வினோதினி சபா” என்னும் தனது நாடகக் கம்பெனியாருடன் வந்து, விக்டோரியா பப்ளிக் ஹாலில் அவ்வருஷம் நான்கைந்து நாடகங்கள் தெலுங்கு பாஷையில் நடத்தியதேயாம். இக்காரணம் நான் தமிழ் நாடகாசிரியன் ஆனதற்கு ஒரு முக்கியமான காரணமாயிருந்தபடியால் இதைப்பற்றி சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன்.
சரசவினோத சபையார் அச்சமயம் நாடகங்கள் நடத்தியது வரை, சென்னையில் எனக்குத் தெரிந்தவரையில் திராவிட பாஷைகளில், கல்வியறிவுடைய பெரிய மனிதர்கள் ஒருவரும் நடித்ததில்லை. கொத்தவால் சாவடி முதலிய இடங்களில் எப்பொழுதுதாவது தெருக்கூத்தாடிகள் ஆடுவது தவிர, வேடிக்கைக்கன்றி தங்கள் ஜீவனமாக நாடகம் நடத்தும் இரண்டொரு நாடகக் கம்பெனிகளே இருந்தன. மேற்சொன்ன சுப்பராயாச்சாரி கம்பெனி அதில் ஒன்று; கவர்மென்ட் உத்தியோகத்திலிருந்ததைவிட்டு, நாடகமாடுவதையே தன் ஜீவனோபாயமாகக் கொண்ட காலஞ்சென்ற கோவிந்தசாமி ராவினுடைய “மனமோஹன நாடகக் கம்பெனி” ஒன்று. இரண்டாவது கூறிய கம்பெனி பட்டணத்துக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருதரம் வந்து, இரண்டு மூன்று மாதங்களுக்கு செங்காங்கடையில் கட்டியிருந்த ஓட்டுக் கொட்டகையில் தமிழில் புராண சம்பந்தமான சில நாடகங்களை நடத்துவதுண்டு. ஆயினும் அதனால் வரும் ஊதியத்திற்கின்றி, வேடிக்கையாக நாடகம் திராவிட பாஷைகளில் அதுவரையில் ஒருவரும் நடத்தியதேயில்லை . ஆகவே அவ்வருஷம், பல்லாரியில் வக்கீல் வேலையிலிருந்த கிருஷ்ணமாச்சார்லு என்பவர், கற்றறிந்து தன்னைப் போலவே வினோதத்திற்காகவே நாடகம் ஆடப் பிரியம் கொண்டு ஆடும் இதர அங்கத்தினருடன், சென்னைக்கு வந்து தெலுங்கு பாஷையில் முதல் முதல் நடித்த பொழுது, சென்னையில் ஒரு சிறு குழப்பத்தை யுண்டாக்கியது. கற்றறிந்த வக்கீல்கள் உத்தியோகஸ்தர்கள் முதலியோர் நாடகம் நடத்துகிறார்களென்று கேள்விப்படவே, சென்னையிலிருந்த அந்தஸ்துள்ள பெரிய மனிதர்கள் மேற்சொன்ன பல்லாரி கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் நடத்திய நாடகங்களைக் காணச் சென்றனர். என்னுடைய தமயனார்களில் ஒருவராகிய ஐயாசாமி முதலியாரும் அம்மாதிரி தன் சினேகிதர்கள் சிலருடன் சென்றனர். அவர் ஒரு நாடகத்தைப் பார்த்து வந்து மிகவும் நன்றாயிருந்ததெனப் புகழ்ந்து பேசினார். அதன்மீது நானும் அச்சபையார் நாடகங்களில் ஒன்றைப் பார்க்கவேண்டும் என்னும் இச்சை எனக்குப் பிறந்தது. அதுவரையில் தமிழ் தெலுங்கு நாடகங்களுக்கு நான் அறிந்த வரையில் போயிராத என் தகப்பனாரை, என்னை அழைத்துக் கொண்டு போகும்படி எப்படிக் கேட்பதென்று நான் கொஞ்சம் சங்கோசப்பட்டுக் கொண்டிருந்த பொழுது, மறுநாள், என் தந்தையாருடைய நண்பர் ஒருவர் அந்த கிருஷ்ணமாச்சரியார் அவர்களையே எங்கள் வீட்டிற்கு என் தகப்பனாரிடம் அழைத்துக் கொண்டு வந்தார். அப்பொழுது நான் பார்த்த அவரது உருவம் இன்னும் என் மனத்தில் பதிந்திருக்கிறது. அப்பொழுது அவர் வாலிபம் கடந்து முதிர் வயதுடையவராயிருந்தார்; இருந்தும் தலையில் பிள்ளைகள் அணியும் ஒரு சரிகைத் தொப்பியை அணிந்திருந்தார். கிருஷ்ண மாச்சாரியார் என் தகப்பனாரை அன்றிரவு தான் நடத்தப் போகும் “சிரகாரி” என்னும் நாடகத்திற்கு அழைத்தார். என் தகப்பனார் என்னையும் என் நேர் தமயன் ஆறுமுக முதலியாரையும் அழைத்து நீங்களும் வருகிறீர்களா? என வினவினார். நாங்கள் இருவரும் மிகுந்த குதூஹலத்துடன் ஒப்புக்கொண்டோம். அன்றிரவு விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு அந் நாடகத்தைப் பார்க்க என் தகப்பனாருடன் என் சகோதரனும் நானும் சென்றோம். எங்களுக்கெல்லாம் ரிசர்வெட் டிக்கட்டுகள் இருந்தபடியால், நாடக ஆரம்பத்திற்கு சில நிமிஷங்களுக்கு முன்புதான் போனோம். நாங்கள் போன பொழுது விக்டோரியா ஹாலில் இடமில்லாதபடி ஏராளமாக ஜனங்கள் வந்திருந்தனர். எங்களுக்கு ரிசர்வெட் டிக்கட்டுகள் இல்லாவிட்டால் இடம் கிடைத்திருக்காதெனவே நம்புகிறேன். ஹாலில் நுழைந்தது முதல் நாடகம் முடியும் வரையில், சற்றேறக்குறைய 5 மணி நேரமான போதிலும், நாடக மேடையை விட்டு என் கண்களை எடுத்தவனன்று. அரங்கத்தின் முன்னாகக் கட்டப்பட்டிருந்த திரையானது மேலே சென்றது முதல், கடைசியில் நாடகம் முற்றிய பொழுது, அது மறுபடியும் விடப்பட்டதுவரையில் நான் கண்டகாட்சிகள் பெரும்பாலும் என் ஞாபகத்தில் இன்றும் மறையாதபடி இருக்கின்றன. நாடகமானது தெலுங்கு பாஷையில் நடத்தப்பட்ட போதிலும், அக்காலம் இப்பொழுது அப்பாஷையிலிருக்கும் கொஞ்சப் பயிற்சியும் இல்லாதவனாயினும், சற்றேறக் குறைய நடிக்கப்பட்டதையெல்லாம் கதையின் வரலாற்றைக் கொண்டு ஆவலுடன் கிரஹித்து வந்தேன். அதுவரையில் பகல் வேஷக்காரர்கள் முகங்களில் அரிதாரத்தை அலங்கோலமாய்ப் பூசிக்கொண்டு வருவதைக் கொண்டு நான் அருவருப்புற்றேன் என்று முன்பே கூறியிருக்கிறேன் அல்லவா? அன்று அப்படி அசங்கியமாக ஒன்றுமிராது, நாடகப் பாத்திரங்களெல்லாம் வெகு அழகாய் வேடம் புனைந் திருந்தனர். ஸ்திரீவேஷம் பூண்டவர்கள் நான் ஸ்திரீகளே என்று சந்தேகிக்கும்படி இருந்தது. சங்கீதத்தில் எனக்கு அச்சமயம் ஒருவிதப் பயிற்சியும் இல்லாதபோதிலும் அவர்கள் பாடிய பாடல்கள் எனக்கு மிகுந்த ஆனந்தத்தை விளைத்தது. நாடகப் பாத்திரங்கள் நடித்ததும் எனக்கு மிகவும் திருப்தியைத் தந்தது; நாடக ஆரம்பமுதல் கடைசிவரை, நாடக மேடையையன்றி நான் வேறொன்றையும் கவனித்தவன் அன்று; என் பக்கத்தில் யார் உட்கார்ந்திருந்தது என்றுகூடப் பார்த்தவனன்று ; நாடகம் முடிந்தவுடன், சற்றேறக்குறைய முன்பு கூறியபடி ஐந்து மணி நேரம் ஆனபோதிலும், முடிந்துவிட்டதே என்று வருத்தமுற்றேன். பிறகு தகப்பனாருடன் வீட்டிற்குத் திரும்பி வந்து தூங்குவதற்காக என் படுக்கையில் படுத்தும் ஏறக்குறைய விடியுமளவும் அன்று நான் உறங்கினவன் அன்று; நாடகமேடையில் கண்ட ஒவ்வொரு பாத்திரங்களைப் பற்றியும் அவர்கள் நடித்ததைப் பற்றியும் திருப்பித் திருப்பி என் மனத்தில் வியந்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். அன்றிரவு எப்படியாவது நானும் நாடக சபையில் அவர்களைப் போல் நடிக்கவேண்டுமென்று எனக்கு ஒரு பெரும் அவா பிறந்தது. அன்றிரவே, பிறகு ஆந்திர நாடகப் பிதாமகன் எனும் பட்டப்பெயர் பெற்ற, இந்த கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எப்படி தெலுங்கில் ஒரு நாடக சபை ஏற்படுத்தி நடித்தாரோ, அம்மாதிரியாகவே தமிழில் ஒரு நாடக சபை ஏற்படுத்தி நான் அதில் நடிக்கவேண்டுமென்று உறுதியான தீர்மானம் செய்து கொண்டேன். அன்று முதல் இன்று வரை சற்றேறக்குறைய நாற்பது வருடங்கள் கழிந்தன. இந்த நாற்பது வருடங்களில், அன்று செய்த தீர்மானத்தை நிறைவேற்றி என்னை ஒரு தமிழ் நாடக ஆசிரியனாக்கியது, எல்லாம் வல்ல கருணைக் கடவுளின் கிருபையும் என் பெற்றோர்கள் அனுக்கிரஹமுமென்றே உறுதியாய் நம்புகிறேன். இத்துடன் இக்கதையை முடித்து, பிறகு நான் சுகுணவிலாச சபையை ஸ்தாபித்ததும், என்னுடைய முதல் நாடகத்தை எழுதினதும் இதை வாசிக்கும் என் நண்பர்களுக்கு இனி தெரிவிக்கிறேன்.
இரண்டாம் அத்தியாயம்
எனது ஆயுளில் 1891 ஆம் வருடம் ஜூலை மாதம் முதல் தேதி ஒரு முக்கியமான தினமாம். அதற்குக் காரணம், நான் தமிழ் நாடகங்கள் எழுதுவதற்கும் நடிப்பதற்கும் இன்றியமையாத முக்கியக் காரணமாயிருந்த “சுகுண விலாச சபை"யானது அத்தேதியில் சென்னையில் ஸ்தாபிக்கப் பட்டதேயாம். ஆகவே “சுகுண விலாச சபை’ ஸ்தாபிக்கப்பட்ட விருத்தாந்தத்தைச் சற்று விவரமாக எழுத விரும்புகிறேன். மேற்கண்ட தேதியில் ௸ சபையை ஸ்தாபித்தவர் எழுவர். அவர்கள் ஸ்ரீமான்கள் ஊ. முத்துக்குமாரசாமி செட்டியார், வி. வெங்கட கிருஷ்ண நாயுடு, அ. வெங்கடகிருஷ்ண பிள்ளை , த. ஜெயராம் நாயகர், ஜி.இ. சம்பத்து செட்டியார், சுப்பிரமணிய பிள்ளை , நான். மேற்கண்டவர்களில் முதல் மூவர்கள் காலகதியடைந்து விட்டனர். சம்பத்து செட்டியாரும், சுப்பிரமணிய பிள்ளையும் சபையைவிட்டு இடையில் நீங்கி விட்டனர். ஜெயராம் நாயகரும் நானும் சற்றேறக்குறைய 40 வருடங்களாக அச்சபைக்கு உழைத்து வருகிறோம்.
சென்னையில் “சுகுண விலாச சபை” ஸ்தாபிக்கப்பட்டதற்கு ஆதி காரணம், பல்லாரி கிருஷ்ணமாச்சார்லு என்பவர் இவ்விடம் பல்லாரியிலிருந்து வந்து விக்டோரியா ஹாலில் தெலுங்கு பாஷையில் நான்கு ஐந்து நாடகங்கள் நடத்தினதேயாம் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே. காலஞ்சென்ற கிருஷ்ணமாச்சார்லு அவர்கள், அக்காலத்தில் ஏற்படுத்திய “சரச வினோத சபையார்” தெலுங்கில் அச்சமயம் ஆடிய நாடகங்களைப் பற்றி முன்பே தெரிவித்திருக்கிறேன். அந்நாடகங்களைக்கண்ணுற்ற சிறுவர்கள் மனத்தில் அப்படிப்பட்ட நாடக சபை ஒன்று சென்னையில் ஸ்தாபிக்க வேண்டுமென்று யோசனை பிறந்தது சகஜமே. அப்படிப்பட்ட எண்ணங்கொண்டவர்களுள் மேற்கண்ட எழுவரும் ஒரு பிரிவினராவர். அவர்களுள் வெங்கடகிருஷ்ண நாயுடு என்பவர் ஒருதினம் நான் அப்பொழுது வசித்துவந்த ஆச்சாரப்பன்வீதி 54 ஆம் நெம்பருடைய வீட்டிற்கு வந்தார். அச்சமயம் சரசவினோத சபையாருடைய கடைசி நாடகமாகிய சிரகாரி எனும் நாடகத்தைக்கண்ணுற்று அப்படிப்பட்ட நாடக சபையொன்றை ஏற்படுத்தி அதில் நடிக்கவேண்டுமென்று பெருங்கவலை கொண்டிருந்த நான், அந்த எண்ணத்தை ஈடேற்றுவதற்கு முதல் பிரயத்தனமாக, வேறுவகை யொன்றும் காணாதவனாய், மானியர்வில்லியம்ஸ் (Monier Williams) என்பவர் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த “சகுந்தலா” என்னும் நாடகத்தைத் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தேன். இந்த வெங்கடகிருஷ்ண நாயுடு என்பவர் எனது பால்ய சிநேகிதர்;அவர்குடும்பத்தாரும் என்குடும்பத்தாரும் மதுரையிலிருந்த பொழுது மிகவும் அந்யோந்யமாகப் பழகினவர்கள்; ஆகவே இவருக்குத் தமிழ் நாடகங்களின்மீது எனக்கிருந்த வெறுப்பு நன்றாய்த் தெரியும். அதனால் அவர்பல்லாரி சரச வினோத சபையைப் போல் சென்னையில் ஒரு நாடக சபை ஸ்தாபிக்கவேண்டி ஒரு சபை கூடப்படும் என்று அச்சடித்த அறிக்கைப் பத்திரிகைகளை எனது இரண்டு மூத்த சகோதரர்களுக்குக் கொடுத்தார்; “நீ இதையெல்லாம் ஏளனம் செய்வாய்” என்று கூறி எனக்குக் கொடுக்கமாட்டேன் என்று மறுத்தார். இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட நான், பணத்தைத்தேடிச் செல்லவேண்டுமென்று தீர்மானித்திருந்த ஒருவனுக்கு, அவன் வீட்டிலேயே பெரும் நிதி கிடைத்தது போல் சந்தோஷப்பட்டு, எனக்கும் ஒரு அறிக்கைப் பத்திரிகையைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டேன். “நீ அக்கூட்டத்திற்கு வந்து ஏதாவது குறும்பாய்ப் பேசுவாய், உன்னை அழைக்க மாட்டேன்,” என்று பதில் உரைத்தார். (அக்குறும்பு குணம் இன்னும் என்னைவிட்டு முற்றிலும் அகலவில்லை என்றே எண்ணுகிறேன்.) அதன்மீது நானும் அப்படிப்பட்ட சபையொன்று ஏற்படுத்த உத்தேசங் கொண்டிருந்ததைத் தெரிவித்து, அதை மெய்ப்பிக்க வேண்டி, நான் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்த ‘சகுந்தலா’ நாடகத்தையும் காண்பித்தேன். அதனாலும் அவர் சந்தேகம் நீங்கினவர் அன்று. அக்கூட்டத்திற்கு வந்து ஒன்றும் விரோதமாய் நான் பேசலாகாதென உறுதி மொழி வாங்கிக்கொண்ட பிறகுதான் என்னையும் அக்கூட்டத்திற்கு வரும்படி அழைத்தார். பிறகு அக்கூட்டத்திற்கு நான் போயிருந்தேன்.
அக்கூட்டம் சென்னையில் மண்ணடிக்கடுத்த ஒரு வீதியில், அக்காலத்தில் ஜாக்கியஸ் (Zacheus) பள்ளிக்கூடம் என்ற பெயரை உடைத்தாயிருந்த ஒரு பள்ளிக்கூடத்தின் கட்டிடத்தில் நடைபெற்றது. சுமார் முப்பது அல்லது நாற்பது பெயர்தான் வந்திருந்தார்கள். கூட்டம் ஆரம்பிக்கப்படுமுன், அன்றுதான் முதல் முறை, அந்நாள் முதல் இந்நாள்வரை எனது நண்பராயிருக்கும் த. ஜெயராம் நாயகரைக் கண்டேன். எங்கள் பொது நண்பராகிய வெங்கடகிருஷ்ண நாயுடு, எங்களிருவரையும் ஒருவருக்கொருவர் இன்னாரெனத் தெரிவித்தார். கூட்டத்திற்கு அக்கிராசனாதிபதியாக ம-ள-ள-ஸ்ரீ (தற்காலம் திவான்பஹதூர் என்கிற கௌரவப்பட்டம் பெற்ற), பி.எம். சிவஞான முதலியார் பி.ஏ.பி.எல். வீற்றிருந்தார். அமிர்தலிங்கம் பிள்ளை பி.ஏ. என்பவரும், இன்னும் ஒன்றிரண்டு பெயர்களும் ஆங்கிலத்தில், சென்னையில் சரசவினோத சபையைப்போன்ற கற்றறிந்தவர்கள் சேரக்கூடிய நாடக சபை ஒன்று உண்டாக்க வேண்டும் என்கிற விஷயத்தைப்பற்றிப் பேசினார்கள். அன்று அக்கூட்டத்தில் பேசிய விஷயங்கள், ஒன்றைத்தவிர மற்றவை, எனக்கு இப்பொழுது ஞாபகத்திலில்லை. எனக்கு இப்பொழுது முக்கியமாக ஞாபகத்திலிருப்பதென்ன வென்றால், அக்கிராசனம் வகித்த முதலியார் அவர்கள், சிறுவர்களாகிய நீங்கள் இப்படிப்பட்ட சபையை ஸ்தாபிக்கக் கூடாதென்று எடுத்துப் பேசியதே! “இளங்கன்று பயம் அறியாது"என்னும் பழமொழிக்கிணங்க அந்த உபதேசமானது எங்கள் செவியிற்புகவில்லை. கூட்டத்தின் முடிவில் யார் யார் இப்படிப்பட்ட சபையை ஸ்தாபிக்க இஷ்டமுடையவர் களாயிருக்கிறார்களோ, அவர்களெல்லாம் மேஜையின் பேரில் வைத்திருக்கும்காகிதத்தில் கையொப்பமிடலாம் என்று தெரிவிக்கப்பட, எனது நண்பர் ஜெயராம் நாயகர்முதலில்கையொப்பமிட்டார். எனக்கு ஞாபகமிருக்கிறபடி நான் இரண்டாவது கையொப்பமிட்டேன். இக்காரணம் பற்றி அன்று முதல் இன்றுவரை ஜெயராம் நாயகர் அவர்கள் சுகுண விலாச சபைக்கு முதல் அங்கத்தினராகக் கௌரவப்படுத்தப்பட்டு வருகிறார்.
மேற்கண்ட கூட்டம் கூடிய இரண்டு மூன்று தினங்களுக்கெல்லாம், 1891 ஆம் வருஷம் ஜூலை மாதம் முதல் தேதி, மேற்குறித்த லிகிதத்தில் கையொப்பமிட்ட எழுவரும் சென்னையில் ஒரு நாடக சபை ஸ்தாபிப்பதற்காகத் தம்பு செட்டி வீதியில் ஜெயராம் நாயகருடைய தகப்பனார் வீட்டில் ஒரு கூட்டம் கூடினோம். அன்று அச் சிறு கூட்டத்திற்கு என்னை அக்கிராசனம் வகிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்; அங்ஙனமே செய்தேன். அன்று மாலை சுமார் 6 மணிக்கு சென்னையில் ஒரு நாடக சபை ஸ்தாபிக்க வேண்டுமென்றும், அதற்கு ‘சுகுண விலாச சபை’ யென்று நாமதேயம் வைக்கவேண்டுமென்றும் தீர்மானித்தோம். எனக்கு ஞாபகம் இருக்கிறவரையில் ‘சுகுண’ என்கிற வார்த்தை அப்பெயரில் இருக்க வேண்டுமென்று பிரேரேபித்தவர் ஊ. முத்துக் குமாரசாமி செட்டியார்; ‘விலாசம்’ என்ற பதம் அடங்கியிருக்க வேண்டுமென்று பிரேரேபித்தவர் சம்பத்து செட்டியார். இக் கூட்டத்தில்தான் முத்துக்குமாரசாமி செட்டியாரும் வெங்கடகிருஷ்ண பிள்ளை யென்பவரும் எனக்குப் பரிச்சயமானார்கள். இக்கூட்டத்தில் முத்துக்குமாரசாமி செட்டியார், வெங்கடகிருஷ்ண நாயுடு, வெங்கடகிருஷ்ணப் பிள்ளை , ஜெயராம் நாயகர், நான் ஆகிய ஐவரும் சபையின் காரியங்களைப் பார்க்க நிர்வாகச் சபையாக ஏற்படுத்தப் பட்டோம். முத்துக்குமாரசாமி செட்டியார் காரியதரிசியும் பொக்கிஷதாரருமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கு முக்கியமாகக் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், சுகுண விலாச சபையை மேற்கண்டபடி ஸ்தாபித்த எழுவரும் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில் வாசித்துக் கொண்டிருந்த சிறுவர்கள், அல்லது அப்பொழுதுதான் பள்ளியை விட்ட சிறுவர்களாயிருந்தோம் என்பதே. முதல் அங்கத்தினராகிய ஜெயராம் நாயகருக்குச் சுமார் பதினேழு வயதிருக்கும்; பள்ளிக் கூடத்தில் அக்காலத்திலே மெட்ரிகுலேஷன் (Matriculation) என்று சொல்லப்பட்ட பரீட்சைக்குக் கிறிஸ்துவ கலாசாலை எனப் பெயர் வழங்கிய பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தார். இவர் பூவிருந்தவல்லியில் டிஸ்டிரிக்ட் முன்சீப் வேலையிலிருந்து பென்ஷன் வாங்கிக் கொண்ட ம-ள-ள-ஸ்ரீ செல்லப்ப நாயகர் அவர்களுடைய கடைசி குமாரர். வெங்கடகிருஷ்ண நாயுடு என்பவர் மதுரையில் நட்சத்திரங்களின் நிலையைக் கணிக்கும் ஆபீசில் இருந்த சேஷாசலம் நாயுடு என்பவரின் குமாரர். எல்.எம்.எஸ். என்னும் வைத்தியப் பரீட்சைக்காகச் சென்னையில் வைத்தியகலாசாலையில் படித்துக் கொண்டிருந்தார். வெங்கட கிருஷ்ணப்பிள்ளை என்பவர் ஜெயராம் நாயகருடைய பந்து; முதல் எல்.எம்.எஸ்.பரீட்சையில் அப்பொழுதுதான் தேறி, இரண்டாவது எல்.எம்.எஸ். என்னும் வைத்தியப் பரீட்சைக்கு சென்னை வைத்திய கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தார். முத்துக்குமாரசாமி செட்டியார், அப்பொழுதுதான் பி.ஏ. பரீட்சையில் தேறி, அவர் தகப்பனார் ஊ. புஷ்பரத செட்டியார் காலஞ்சென்றமையால் அவர் ஸ்தாபித்த கலாரத்னாகரம் அச்சுக்கூடத்தை மேல் விசாரணை பார்க்க ஆரம்பித்தார். நான், (இப்பதத்தை இவ்வியாசங்களில் அடிக்கடி உபயோகிக்க வேண்டி வரும்; இதற்குக் காரணம் என் அகம்பாவமன்று; எனது நாடகமேடை நினைவுகளைப் பற்றி நான் எழுதப் புகுந்தமையால் இப்பதம் அடிக்கடி உபயோகிக்க வேண்டியது அவசியமாகிறதென எனது நண்பர்கள் குறிப்பார்களாக) அக்காலம், சென்னை பிரசிடென்சி (Presidency) கலாசாலையில் பி.ஏ. பரீட்சைக்காகப் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அப்பொழுது வயது 18; என் தகப்பனார் பள்ளிக்கூடங்களுக்கு இன்ஸ்பெக்டர் (Inspector) வேலையிலிருந்து, 60 வயதாகிக் கொஞ்ச காலத்திற்கு முன் பென்ஷன் வாங்கிக்கொண்ட ம-ள-ள-ஸ்ரீ பம்மல் விஜயரங்க முதலியார். சம்பத்து செட்டியார் என்பவருக்கும் ஏறக்குறைய என் வயதுதான் இருக்கும். பி.சி. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பி.ஏ. பட்டம் பெற்றிருந்தார். அவருக்கு என்னைவிட சுமார் நான்கு ஐந்து வயது அதிகமாயிருக்கும். இங்ஙனம் சுகுண விலாச சபையை ஸ்தாபித்தவர்கள் எழுவரும் சிறு வயதுடையவர்களாயிருந்தோம். அன்றியும் எங்களுக்குள் சிலருடைய தகப்பன்மார்கள் உயர் பதவியிலிருந்து சம்பாத்தியமுடையவர்களா யிருந்தபோதிலும், நாங்களாகப் பெரும்பாலும் சுயார்ஜிதமுடையவர்களாயில்லை. எங்களுக்குக் கையில் பணம் இல்லாவிட்டாலும், மேற்கொண்ட கருமத்தை முடிக்க வேண்டுமென்னும் கருத்தில் பெரும் உற்சாகம் மாத்திரம் எங்கள் மனத்தில் குடிகொண்டிருந்தது என்று நான் உறுதியாய்க் கூறவேண்டும். இந்த உற்சாகமே அன்று முதல் இன்றுவரை நாற்பது வருஷங்களாக அச் சபையை என்ன இடையூறுகள் இடையில் வந்த போதிலும், அவற்றையெல்லாம் பாராது, ஈசன் கருணையினால் தளரா ஊக்கத்துடன் நடத்தி வரும்படி செய்ததெனக் கூறல்வேண்டும். இதுதான் சுகுண விலாச சபை பிறந்த கதையும் நாமகரணம் செய்யப்பட்ட கதையுமாம்; இனி அது வளர்ந்தோங்கிய கதைகளைப் பின்வரும் அத்தி யாயங்களில் இறைவன் திருவருளை முன்னிட்டு எழுதுகிறேன்.
மூன்றாம் அத்தியாயம்
சுகுண விலாச சபையை மேற்சொன்னபடி 1891 ஆம் வருடம் ஜூலை மாதம் முதல் தேதி ஸ்தாபித்தவுடன் நாங்கள் காலத்தை வீணாகக் கழிக்கவில்லை. உடனே ஒரு வாரத்திற்கெல்லாம் நிர்வாக சபைக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. அதில் சபைக்கு அங்கத்தினரைச் சேர்ப்பதற்காக ஒரு பிரசுரம் அச்சிட்டு வெளியிட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. அத்தீர்மானத்தின்படி ஒரு விளம்பரத்தை ஆங்கிலேய பாஷையில் நான் எழுதினேன். அதுதான் நான் எழுதியவற்றுள் முதல் முதல் அச்சிடப்பட்ட விஷயமாகும். அச்சிடப்பட்டு வெளிவந்த அந்த விளம்பரத்தை நான் பார்த்தபொழுது எனக்கு ஒருவித மகிழ்ச்சியுண்டாயது. அதில் சுகுண விலாச சபை சென்னையில் ஏற்படுத்தப்பட்ட காரணமும், அக்காலத்தில் நமது தேசத்தில் நடத்தப்பட்ட நாடகங்களிலுள்ள குறைகளும், அக் குறைகளைத் தீர்க்க மேற்படி சபையார் மேற்கொண்ட மார்க்கங்களும், தெரிவிக்கப்பட்டிருந்தன. சாதாரணமாக அச் சபையைச் சார்ந்த பழைய காகிதங்களை யெல்லாம் நான் ஜாக்கிரதையாகப் பாதுகாத்து வந்தும், இந்த விளம்பரத்தின் பிரதியொன்று, இப்பொழுது நான் எங்கெங்கு தேடிப் பார்த்தும் எனக்கு அகப்படவில்லை. இதை வாசிக்கும் எனது நண்பர்கள் எவர்களுக்காவது நாற்பது வருடங்களுக்கு முன் பிரசுரிக்கப்பட்ட அக்காகிதம் ஒன்று கிடைக்குமாயின், அதை என் விலாசத்திற்கு அனுப்புவார்களாயின் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவனாயிருப்பேன். மேற்கண்டபடி அச்சிடப்பட்ட விளம்பரங்கள் சிலவற்றை நான் அக்காலம் வாசித்துக் கொண்டிருந்த ராஜதானி கலாசாலைக்குக் கொண்டு போனேன். ஆயினும் நானாக என்னுடன் வாசிக்கும் என் வயதுடைய சிறிய நண்பர்களுக்குக் கொடுக்க வெட்கப்பட்டவனாய், மத்தியான போஜனத்திற்காக ஒரு மணி சாவகாசம் விட்டபொழுது, அக் காலாசாலை சேவகன் ஒருவனிடம் கொடுத்து கலாசாலை மாணவர்களுக்குக் கொடுக்கச் செய்தேன். இச் சமாச்சாரத்தை இங்கு முக்கியமாகக் குறிப்பிட்ட காரணம், இப்போதிருப்பதுபோல் அல்லாது, அக்காலம், ஒரு நாடகச் சபையைச் சேர்ந்திருப்பதென்றால், கௌவரமாக மதிக்கப்படாது, ஏதோ கொஞ்சம் இழிவான தொழிலைச் செய்வதுபோல் பெரும்பாலும் மதிக்கப்பட்டது என்பதை எனது நண்பர்கள் அறியும் பொருட்டே.
இந்த விளம்பரத்துடன் சுகுண விலாச சபையில் அங்கத்தினராகச் சேர விரும்புவோர்களெல்லாம், கையொப்பமிட்டு அனுப்பும்படியாக ஒரு துண்டுக் காகிதத்தையும் சேர்த்திருந்தோம். அதில் கையொப்பமிட்டு எத்தனை பெயர் அங்கத்தினராகச் சேர்கிறார்கள் என்று ஒரு மாதம் வரையில் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தோம். நிர்வாக சபையிலிருந்த எனது நண்பர்கள் அநேகம் பெயர் சேர்வார்கள் என்று மிகவும் உற்சாகத்துடன் பேசினார்கள். எனக்கு மாத்திரம் சந்தேகமாக வேயிருந்தது. நான் எண்ணியபடியே, ஒரு மாதத்தில் பத்துப் பன்னிரெண்டு பெயர்தான் சேர்ந்தனர். ஆயினும் இது எனது நண்பர்களுடைய உற்சாகத்தைக் குறைத்தபோதிலும், எனது உற்சாகத்தைக் குறைக்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம், நான் அதிகமாய் ஆசைப்படாததே என்று நம்புகிறேன். இக்குணமானது, உலக வாழ்க்கையில் அநேக விஷயங்களில் எனக்கு அந்நாள் முதல் இந்நாள்வரை மிகவும் உபயோகப்பட்டு வருகிறது. இக்குணத்தை எனது வாலிப நண்பர்கள் ஒரு நற்குணமாகக் கொண்டு, அதன்படி நடந்துவருவார்களாயின், அது அவர்களுக்குப் பெரும் நன்மையைப் பயக்கும் என்று உறுதியாய் நம்பி இதை இங்கு எழுதலானேன். எந்தக் காரியத்தை மேற்கொண்டாலும் அதில் அதிகப் பலனை அடைவோம், பெரும் ஜெயத்தைப் பெறுவோம் என்று கருதாது, “சிறுகக்கட்டி பெருக வாழ்” என்னும் பழமொழியினைப் பற்றுக்கோடாகக் கொண்டு, சிறிது பலன் கிடைத்த போதிலும் சந்துஷ்டியடைந்து, எடுத்துக் கொண்ட முயற்சியை மாத்திரம் கைவிடாமல் அதை நிறைவேற்ற கஷ்டப்பட வேண்டியது மாந்தர் கடன்; பலனை அளிப்பது பரமனது அருள் என்று நம்பினவராய் நடந்து வந்தால் எவர்களுக்கும் இன்பம் அதிகமாகவும், துக்கம் குறைவாகவும் கிடைக்குமென்பது என் ஆயுட்காலத்தில் நான் அறிந்த ஓர் உண்மையாம். இதனால் நான் அடைந்த பலனை, இதனை வாசிக்கும் எனது நண்பர்களும் பெறுவார்களென்று இதை இங்கு எழுதலானேன்.
சபை ஸ்தாபித்து ஒரு மாதம் ஆனபிறகு, என்ன நாடகத்தை நாங்கள் நடத்துவது என்கிற முக்கியமான கேள்வி பிறந்தது. அக்காலத்தில் அச்சிடப்பட்டிருந்த தமிழ் நாடகங்கள் மிகச் சில. அவைகளைக் கைவிரலில் நாம் எண்ணிவிடலாம். அவைகள் ஏறக்குறைய எல்லாம் புராண இதிகாசக் கதைகளாயிருந்தன. அவை அரிச்சந்திர நாடகம், மார்க்கண்டேயர் நாடகம், இரணியவிலாசம், சிறுத்தொண்டர் நாடகம் முதலியவைகளாம். இவைகளெல்லாம் எங்களுக்குப் பிடிக்கவில்லை. அன்றியும் நிர்வாக சபையார் இவ்விஷயத்தைப் பற்றி ஆலோசித்தபொழுது, மற்றவர்கள் ஆடும் நாடகங்கள் நாம் ஆடக்கூடாது, புதிதான தமிழ் நாடகங்களே நாம் ஆடவேண்டுமென்று நான் வற்புறுத்தினேன். நான் இதன் சார்பாக எடுத்துக் கூறிய நியாயங்களை எனது நண்பர்கள் ஒப்புக்கொண்டனர். அதன் மீது சபையின் காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியார் தனக்குத் தெரிந்த தமிழ் வித்வான்களுக்குக் கடிதம் எழுதி அவர்களைக் கொண்டு ஏதாவது நூதன தமிழ் நாடகம் எழுதிக் கொடுக்க முடியுமா என்று விசாரிப்பதாகச் சொன்னார். என்னையும் அப்படியே விசாரிக்கும்படி சொன்னார்கள். அதன்பேரில், அதுவரையில் அச்சிடப்பட்டிருந்த சில தமிழ் நாடகங்களைப் படித்து அவற்றின்மீது வெறுப்புக்கொண்டிருந்த நான், என்னுடைய ராசாங்க கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த எனது பால்ய நண்பராகிய ராமராயநிம்கார் என்பவருடன் இதைப்பற்றிக் கலந்து பேசினேன்; இவர்தான் பிற்கால “பானகல் ராஜா” என்கிற பட்டம் பெற்ற பெரியோர். பல்லாரி சரச வினோத சபையாருடைய ‘சிரகாரி’ என்னும் நாடகத்தை நான் பார்த்தது போல் இவரும் பார்த்தவர். தெலுங்கு பாஷையில் அக்காலத்திலேயே மிகுந்த தேர்ச்சியுடையவராய் இருந்தார்; எனக்குத் தெலுங்கு பாஷையில் இப்பொழுதிருக்கும் சிறிது பயிற்சியும் அப்பொழுது இல்லாதிருந்ததால், இவரை, நாங்களிருவரும் கண்ட மேற்குறித்த தெலுங்கு நாடகத்தை, ஆங்கிலேய பாஷையில் எழுதித்தரும்படி வேண்டினேன். அச்சமயம் எனது நோக்கம் என்னவென்றால் அதைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமென்பதே. என் வேண்டுகோளுக் கிணங்கி எனது நண்பர் அந்நாடகத்தை வெகு அழகாக ஆங்கில பாஷையில், எனக்காகக் கஷ்டப்பட்டு எழுதிக் கொடுத்தார்.
இந்த நோட்டுப் புஸ்தகம் இன்னும் என்னிடம் இருக்கிறது. இதைத் தமிழில் கூடிய சீக்கிரத்தில் மொழி பெயர்க்க வேண்டுமென்று உத்தேசித்திருந்தேன். நான் அப்பொழுது படித்துக் கொண்டிருந்த பி.ஏ. பரிட்சை தேறினவுடன் அங்ஙனம் செய்யலாமென்று தீர்மானித்து வைத்தேன். சபையின் நிர்வாக சபைக் கூட்டமொன்றில் ஒருநாள், சபையைச் சார்ந்தவர் பெரும்பாலும் மாணவர்களாயிருப்பதனால், அவர்களுடைய கல்விப் பயிற்சி கெடாமலிருக்கும் பொருட்டும் அவர்களுடைய தாய் தகப்பன்மார் சபையின்மீது குறை கூறாமலிருக்கும் பொருட்டும், பரீட்சைக்குப் போகும் ஒவ்வொரு அங்கத்தினரும் பரீட்சைக்கு மூன்று மாத காலம் முதல் சபைக்கு வரலாகாதென்று ஒரு சட்டத்தை நான் பிரேரேபித்து நிர்வாக சபையார் அதை ஒப்புக்கொள்ளும்படிச் செய்தேன். அவர்கள் அச்சட்டத்தை ஒப்புக்கொண்டதும், நான் இனி மூன்று மாத காலம் வரை சபைக்கு அச் சட்டத்தின்படி வர முடியாதென்று தெரிவித்து சபைக்குப் போகாமல் நின்று விட்டேன். பிறகு அவ்வருஷத் தின் கடைசியில் ஏற்படுத்தியிருந்த பி.ஏ. பரீட்சையில் ஆங்கிலத்திலும் தமிழிலும் தேறின பிறகே மறுபடி சபையின் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தேன். இந்த மூன்று மாதத்திற்கிடையில், ஒருவன் ஆயுளில் ஒருவனுக்கு எல்லாவற்றைப் பார்க்கிலும் என்ன பெருங் கஷ்டம் சம்பவிக்குமோ அப்படிப்பட்டது எனக்குச் சம்பவித்தது. என்னை ஈன்ற, நான் வழிபட்டு வந்த தெய்வமாகிய என் மாதா திடீரென்று பரமனது பாதம் போய்ச் சேர்ந்தனர். இப்பெருந் துர்ப்பாக்கியத்தினால் என் மனத்திற்குண்டான வருத்தத்தை வகுத்துரைக்க நான் வார்த்தையற்றவனாயிருக்கிறேன்; அப்படி ஒருக்கால் வல்லவனாயினும், அதை, எனது நாடக மேடை நினைவுகளைப் பற்றி எழுதப்புகுந்த நான், இங்கு வரைவது ஒழுங்கன்று. அக்காலத்தில் எனது தாய் தந்தையர் அனுமதியின்றி நான் ஒன்றும் செய்வது வழக்கமில்லை. நான் சுகுண விலாச சபையைச் சேர்ந்த பொழுது அவர்களுக்குத் தெரிவித்தே சேர்ந்தேன். என் தகப்பனார் “உனது படிப்பானது இதனால் கெடாதென்று எனக்கு நன்றாய்த் தெரியும், ஆகவே சேரலாம்" என்று கூறி விடையளித்தனர்; என் தாயார் மாத்திரம் சற்றே வெறுப்புடையவர்களாய் “வேஷமா நீ போட்டுக் கொள்கிறது!” என்று கூறினார்கள். அவர்கள் தெருக்கூத்துகளைத்தவிர வேறு நாடகங்களைப் பார்த்தவர்களல்ல. ஆகவே அம்மாதிரி இருக்கக் கூடாதென்று கூறினர் போலும். ஒருக்கால் அவர்கள் ஜீவந்தராயிருந்து நான் நாடக மேடையில் வேஷம் தரித்து ஆடுவதை ஆட்சேபணை செய்திருந்தால், என் வாழ்க்கை யானது எந்த விதத்தில், எப்படி மாறியிருக்கும்? நான் தமிழ் நாடகங்களை எழுதுவதை விட்டு வேறேதாவது செய்திருப்பேனா? இக்கேள்விகளுக்கெல்லாம் பதில் யாரால் கூற முடியும்? என்னால் கூறமுடியாது; என்னைப் படைத்த பரமனுக்குத்தான் தெரியும்!
துக்க சாகரத்தில், இனி ஏது பிழைப்பது என்று அமிழ்ந்திருந்த என்னைக் கைகொடுத்துக் கரையேற்றிய கடவுளின் கருணையானது, அத்துக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கவும் வழி கற்பித்தது; அதாவது என் மனத்தை ஏதாவது படிக்கும் வேலையிலோ, எழுதும் வேலையிலோ, செலுத்தும்படி உந்தியது. இப்பொழுதும், ஏதாவது பெருந் துயரங்கள் எனக்குச் சம்பவிக்கும்பொழுது, இம் மார்க்கத்தையே பற்றுக் கோடாகக் கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறேன். இதன்படி அச்சமயம், முன்னமே ஆரம்பித்து, என் பரீட்சையின் பொருட்டு எழுதுவது தடைப்பட்டிருந்த சகுந்தலை நாடக மொழிபெயர்ப்பை, மறுபடியும் தொடங்கினேன். அன்றியும் ஷேக்ஸ்பியர் மஹாகவியின் நாடகங் களைப் படிக்க ஆரம்பித்தேன்.
மேற்சொன்ன பெரும் துயரம் இக்காரணங்களினால் கொஞ்சம் குறைய, மறுபடியும் சபைக்குப் போக ஆரம்பித்தேன். சபையின் காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியார் என்பவர், சபையின் கூட்டங்களுக்கு வந்து போய்க் கொண்டிருந்தால் உனக்குக் கொஞ்சம் ஆறுதலாயிருக்குமே என்று சொல்லியனுப்பினார். அவருடைய வேண்டுகோளுக்கிணங்கி ஒரு ஞாயிற்றுக்கிழமை சபையின் கூட்டத்திற்குப் போனேன். அங்கு நான் அன்றைத்தினம் கண்டது என் மனத்திற்கு மிகுந்த ஆச்சரியத்தையும் கொஞ்சம் வெறுப்பையும் விளைத்தது.
சுகுண விலாச சபையை ஸ்தாபித்த பின் ஒத்திகைகள் நடத்த எங்களுக்கு ஓர் இடம் அதிக அவசியமாகத் தேவையாயிருந்தது. ஜனங்கள் குடியிருக்கும் வீடுகளில் நாடக ஒத்திகைகள் நடத்துவது உசிதமல்லவெனத் தீர்மானித்தோம். அதன்பேரில் தம்புசெட்டித் தெருவில் விஜயநகரம் மகாராஜா அவர்கள் நடத்தி வந்த பெண்கள் பள்ளிக்கூடக் கட்டிடம் இதற்கு சௌகர்யமாக இருக்குமென்று சபையின் காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியார் எனக்குத் தெரிவித்தார். அச்சமயம் அப்பள்ளிக்கூடத்தின் மேல் விசாரணைத் தலைவராக என் தகப்பனார் இருந்தார். ஆகவே அவரது உத்தரவைப் பெற என்னைக் கேட்டுக்கொண்டார்கள் ஒருநாள். முன்பே, என் தகப்பனாருடைய உத்தரவைப் பெற்றே இச்சபையைச் சேர்ந்தேன் என்று தெரிவித்திருக்கிறேன். ஆகவே அன்றிரவு நாங்கள் எல்லோரும் வீட்டில் சாப்பிட்டானவுடன் இவ்விஷயத்தைப்பற்றி என் தகப்பனாரிடம் தெரிவித்தேன்; வாரத்தில் இரண்டுநாள், வியாழக்கிழமை சாயங்காலம் ஆறுமணி முதல் எட்டு மணி வரைக்கும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு மணி முதல் எட்டுமணி வரைக்கும் வேண்டுமென்று தெரிவித்தேன்; அன்றியும் வாடகை ஒன்றும் எங்களால் கொடுக்க முடியாதென்பதையும் அவருக்குத் தெரிவித்தேன். அதற்கு அவர் ஒரு ஆட்சேபணையும் சொல்லாமல் ஆகட்டும் என்று இசைந்தார். இது சபையின் நிர்வாக சபையாருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதுமுதல் சபையின் கூட்டங்கள் இங்கு நடந்து வந்தன.
நான்காம் அத்தியாயம்
முன்னமே தெரிவித்தபடி என் பரீட்சை யெல்லாம் முடிந்த பிறகு ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் நான்கு மணிக்கு இவ்விடம் போனேன். அப்பொழுது அக்கட்டிடத் தின் மாடியில் ஓர் அறையில் ஒத்திகை நடந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்த பொழுது ஒருபுறம் எனக்கு விந்தையாகவும் வினோதமாகவும் இருந்த போதிலும், மற்றொருபுறம் வருத்தமாயிருந்தது. ஒரு புறம் ஒருவர் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்; மற்றொருபுறம் ஒருவர் மிருதங்கம் வாசித்துக்கொண்டிருந்தார்; இரண்டு பெயர் இரண்டு தம்புருகளை மீட்டிக்கொண்டிருந்தனர்; ஒத்திகை போட்டுக் கொண்டிருந்த நாடகமாகிய, அப்பாவு பிள்ளை அவர்களால் இயற்றப்பட்ட “இந்திரசபா எனும் நாடகத்தில் அயன் ராஜபார்ட் எனும் சந்தனுமகராஜாவாக நடித்த வரதராஜலு நாயகர் என்பவர் கையில் ஒரு தாளமும் அவரது சிநேகிதர் ஒருவர் கையில் ஒரு தாளமும் வைத்துக்கொண்டு, காது செவிடு படும்படியாகத் தாளம்போட்டுக் கொண்டிருந்தனர்; எல்லாம் பாட்டுமயமாயிருந்தது! நான்கு ஐந்து பாட்டிற்கு இடையில் சில வார்த்தைகள் தப்பிப் பிழைத்து வந்தனவோ என்னவோ, எனக்குச் சந்தேகமாயிருந்தது. வரதராஜலு நாயகர் அவர்கள் ஒரு பாட்டில் ஒரு அடி பாடினவுடன் பின் பாட்டாக நான்கு ஐந்து பெயர் அதே அடியை உரக்கப் பாடுவார்கள்! இதையெல்லாம் வாய் திறவாது கேட்டுக்கொண்டிருந்த போதிலும், என் மனத்தில் மாத்திரம் கொஞ்சம் வெறுப்புத் தட்டியது. ஷேக்ஸ்பியர் மகாகவியின் சில நாடகங்களைப் படித்திருந்த எனக்கு இந்த இந்திரசபா எனும் நாடகமானது கொஞ்சமேனும் ருசிக்கவேயில்லை. சில ஆங்கிலேய நாடகங்களைப் பார்த்த எனக்கு இவர்கள் நடிக்கும் விதம் எள்ளளவேனும் பிடிக்கவில்லை. இந்த இந்திரசபா நாடகமானது, தற்காலத்தில் கோவலன் நாடகம் கொஞ்சம் பிரபலமாகி வாரத்திற்கொரு முறையாவது நடிக்கப்படுவது போல், அக்காலத்தில் பிரபலமாயிருந்து மாதத்திற்கொரு முறையாவது நடிக்கப்பட்டு வந்தது. ஒரே நாடகமானது, கடல் இந்திர சபா, மலை இந்திர சபா, கமல இந்திர சபா, அக்கினி இந்திர சபா எனும் இப்படிப்பட்ட வேறு வேறு பெயர்களுடன் ஆடப்பட்டு வந்தது. இக்கதையிலுள்ள ஆபாசங்களில் ஒன்றை மாத்திரம் இங்கே எடுத்துக் கூறுகிறேன். இந்நாடகத்தில் கதாநாயகன் சந்திரவம்சத்தரசனாகிய சந்தனு ; இவன் வேட்டையாடி விட்டுக் கானகத்தில் உறங்குங்கால் ஊர்வசியெனும் அப்சரக் கன்னிகை இவனைக் கண்டு மோகம் கொள்கிறாளாம். இச்சந்தர்ப்பத்தில் சந்தனு எனும் பதத்தை சந்தனம் என்று மாற்றி, ஊர்வசி கானகத்தில் வந்தவுடன் சந்தன வாடை வீசுகிறதாகத் தெரிவிக்கிறாள். சந்தனு ஊர்வசியால் எழுப்பப் பட்டவுடன், திடீரென்று உண்டான மின்னலைக் கண்டு கண் பொட்டையானவன், பின் தாங்கி கண்களை நிமிட்டிக்கொள்வதுபோல் அபிநயிப்பார்! இது அக்காலத்தில் வயிற்றை வளர்க்க நாடகங்கள் ஆடி வரும் எல்லாக் கம்பெனிகளிலும் சாதாரண வழக்கம் என்பதைப் பிறகுதான் அறிந்தேன். ஒத்திகை ஒருவாறு எட்டுமணிக் கெல்லாம் முடிந்தவுடன், அங்கிருந்த புதிய அங்கத்தினர்க்கெல்லாம், முத்துக்குமாரசாமி செட்டியார், ஜெயராம் நாயகர் முதலியவர்களால் தெரிவிக்கப்பட்டேன்.
அன்றிரவு நான் வீட்டிற்குப் போனவுடன் மேற்குறித்த ஆபாசங்களை யெல்லாம் எப்படித் தவிர்ப்பது என்று யோசித்தேன். மறுநாள் நிர்வாக சபையின் அங்கத்தினராகிய எனது நண்பர்களைச் சாயங்காலம் சந்தித்தேன். அவர்களுடன் எனது நியாயங்களை யெல்லாம் எடுத்துக்கூறி, பின்பாட்டை விட்டுவிட வேண்டுமென்று அவர்களும் ஒப்புக்கொள்ளும் படி செய்தேன். பின்பாட்டென்பது பழைய காலத்து வழக்கமாயினும் தற்காலத்திய நாகரிகத்திற்கு அது பொருந்திய தல்லவென்று அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். ஆயினும் நாடகமாடும் பொழுது பக்க வாத்தியத்துடன், தாளமும் இருக்க வேண்டியது அதி அவசியம் என்று அவர்கள் கூறினார்கள். அதன்மீது அவர்கள் அறியாதபடி இதற்கு ஒரு யுக்தி செய்ய வேண்டுமென்று தீர்மானித்தேன். ஒன்றிரண்டு ஒத்திகைகள் பொறுத்துக் கொண்டிருந்தேன். பிறகு ஒரு நாள் ஒத்திகை முடிந்ததும் எல்லோரும் வீட்டிற்குப் போன பிறகு மெல்ல, அங்கு வைத்திருந்த இரண்டு ஜதை தாளங்களையும் வீட்டிற்குத் திருடிக்கொண்டு போய்விட்டேன்! எனது சுயலாபத்தை நாடவில்லை என்பதுதான் இதற்குச் சாக்காகும். இல்லாவிட்டால் இது என்னை இந்தியன் பீனல்கோட் (Indian Penal Code) குற்றத்திற்கு உட்படுத்தியிருக்க வேண்டும்! மறு ஒத்திகைக்கு வழக்கத்தைப் போல் சென்று மற்றவர்களுடன் உட்கார்ந்திருந்தேன். சங்கீதம் ஆரம்பிப்பதற்காகப் பக்கவாத்தியங்கள் சித்தமானவுடன், தாளங்களைக் காணோம் என்று எல்லோரும் தேட ஆரம்பித்தார்கள். கோழித் திருடி கூடக்குலாவினாள் என்பது போல், நானும் அவர்களுடன் தேடினேன்! என் வீட்டில் ஒளித்து வைத்திருந்த தாளங்கள் அங்கே எப்படி அகப்படும்? கொஞ்ச நேரம் தேடி அகப்படாமற் போகவே, “இனி என்ன செய்வது, பிறகு பார்த்துக் கொள்வோம், இப்பொழுது ஒத்திகை தாளங்கள் இல்லாமல் ஆரம்பிப்போம்” என்று கூறினேன். வேறுவழியில்லாமல் அதற்குடன்பட்டு, நாடகப் பாத்திரங்களெல்லாம் ஒத்திகை ஆரம்பித்தார்கள். அன்று ஒத்திகை முடிந்தவுடன் ஒவ்வொரு அங்கத்தினருடனும் மெல்லப் பேசி, தாளம் இல்லாவிட்டால் தவறு ஒன்றுமில்லை யென்றும், தாளத்துடன் பாடுவதைவிட தாளம் போடாமலே பாடுவது அழகாயிருக்கிற தென்றும், தாளத்தைத் தட்டிக் கொண்டு பாடுவது தற்கால நாகரிக நாடகங்களுக்குப் பொருத்தமாக இல்லையென்றும் ரூபித்துக் காட்டினேன். வரதராஜுலு நாயகர் தவிர மற்றவர்களெல்லாம் மெல்லமெல்ல என் வழிக்கு வந்தனர். அவர் மாத்திரம் எனக்கு ஞாபகமிருக்கிறபடி கடைசிவரையில் எனது எண்ணம் சரியானதென்று ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு பாடும் பொழுது தாளங்கள் தட்டுவதை அறவே விட்டபிறகே, நான் செய்த களவினைக் கூறி அத்தாளங்களை வீட்டிலிருந்து கொண்டு வந்து சொந்தக்காரரிடம் அவைகளை ஒப்புவித்தேன். இந்தத் தாளங்கள் விஷயமாக வரதராஜுலு நாயகருக்குக் கோபம் பிறந்து “இந்திர சபா என்னும் நாடகத்தில் நான் நடிக்க மாட்டேன்” என்று கூறிவிட்டார். அதன்மீது நிர்வாக சபைக் கூட்டத்தில் முதல் முதல் சபையார் ஆட என்ன நாடகம் எடுத்துக் கொள்வது எனும் கேள்வி பிறந்தது. அச்சமயம் காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியார் தனக்குத் தெரிந்த சில பழைய தமிழ் வித்வான்களைக் கொண்டு எழுதி வைத்த ஒன்றிரண்டு தமிழ் நாடகங்களைப் படித்துக் காட்டினார். அதில் அக்காலத்திய குஜிலிகடை நாடகங்களி லிருந்த ஆபாசங்களெல்லாம் இருந்தன. அதை எழுதிய வித்வான்கள் மீது குற்றங் கூற வந்தவனன்று நான். அவர்கள் பழைய வழக்கப்படி யெழுதியிருந்தார்கள். அதற்கு ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன். அரசன் சபைக்கு வந்தவுடன், மந்திரியைப் பார்த்து, “மாதம் மும்மாரி பெய்கிறதா? பிராமணர்கள் யாகங்களைச் செய்கிறார்களா? க்ஷத்திரியர்கள் சரியாகச் சண்டை போடுகிறார்களா? வைசியர் சரிவர வியாபாரம் செய்கிறார்களா? சூத்திரர்கள் வேலை செய்கிறார்களா?” என்று கேட்க, ஒவ்வொரு கேள்விக்கும் மந்திரி “ஆமாம்” என்று விடை கொடுப்பதாக எழுதியிருந்தது. இதைக் கேட்டவுடன் எனக்கு நகைப்பு வந்து, “இந்த ராஜா என்ன, மழை பெய்கிறதும் பெய்யாததும் அறியாதவராய் அந்தப்புரத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறவரா?” என்று கேட்டேன். இம்மாதிரியாக அதில் உள்ள குற்றங்களை எடுத்துக்கூறி ஏளனம் செய்யவே, எனது நண்பர்களுக்குக் கோபம் பிறந்து, “எல்லாவற்றிற்கும் ஏதாவது குறை கூறுகின்றாயே, குற்றமில்லாதபடி நீதான் எழுது” என்று என் மீது திரும்பினார்கள். இது தென்னாலிராமனுடைய கதைகளில் ஒன்றைப் போலிருந்தது. தென்னாலிராமனிடம் ஒருவன் ஒருநாள் “அப்பா, உன் தந்தைக்கு நாளை சிரார்த்தம்” என்று கூறினானாம். அதற்கு அவன் “ஆனால் அந்த சிரார்த்தத்தை நீதான் செய்ய வேண்டும்” என்று கூறினானாம். “ஏனடா, அப்பா! உனது தந்தையின் சிரார்த்தத்தை நான் ஏன் செய்ய வேண்டும்?"என்று கேட்க, “நீ தானே எனக்கு ஞாபகப்படுத்தினாய், அக்காரணத்தினால் நீதான் செய்ய வேண்டும்” என்று பதில் உரைத்தனனாம்! அம்மாதிரியாக மற்றவர்கள் எழுதிய நாடகத்திலுள்ள குறைகளை எடுத்துக் கூற, குற்றமில்லாத நாடகமாய் எழுதும்படி நான் கேட்கப்பட்டேன். அதன்மீது இளங்கன்று பயமறியாது என்றபடி, கஷ்டத்தை அறியாதவனாய் “ஆகட்டும்” என்று வீம்பாய் ஒப்புக்கொண்டேன். அக்காலத்தில் என்னிடம் அறியாமை எவ்வளவு குடிகொண்டிருந்ததோ, அவ்வளவு வீம்பும் இருந்தது.
அன்றிரவு வீட்டிற்குப் போனவுடன், என்னடா இப்படி அகப்பட்டுக் கொண்டோமே என்று கவலைப்படலானேன். “எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவம் என்பதிழுக்கு” என்னும் தெய்வப் புலமைத் திருவள்ளுவருடைய திவ்ய வாக்கு ஞாபகம் வந்தது. அதுவரையில் ஒரு தமிழ் நாடகத்தையும் பார்த்திராத நான், எப்படி தமிழில் நூதனமாக நாடகம் - எழுதுவது என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்க எனக்கு ஒரு யுக்தி தோன்றியது. அன்றிரவு வழக்கப்படி என் தகப்பனாருடன் உட்கார்ந்து சாப்பிடும் பொழுது நிர்வாக சபையில் நடந்ததை யெல்லாம் கூறி, “இந்த சங்கடத்திற்கு என்ன செய்வது நான்” என்று கேட்டேன். அப்பொழுது என் தந்தை, “நீ ஏதாவது தமிழ் நாடகத்தை இதுவரையில் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார். நான் இல்லை என்று பதில் சொல்ல, கொஞ்சம் நகைத்து, சற்று ஆலோசித்து “நாளை சனிக்கிழமை, கோவிந்தசாமி ராவ் நாடகக் கம்பெனியின் ஆட்டத்திற்கு உன்னை அழைத்துப் போகிறேன். இருப்பதற்குள் அவ்விடம்தான் தமிழ் நாடகங்கள் சுமாராக நடிக்கப்படுகின்றன. அதைப் பார்த்து நீ கற்றுக் கொள்” என்று கூறினார். சொன்னபடியே அடுத்த சனிக்கிழமை தனது வயதின் சிரமத்தையும் பாராமல், என் வேண்டுகோளுக்கிரங்கி, தானே அழைத்துச் சென்றார். கோவிந்தசாமி ராவ் நாடகக் கம்பெனி “மனமோஹன நாடக சபா” என்கிற பெயருடையதாயிருந்தது. இக்கம்பெனியின் நாடகங்கள் சென்னை செங்காங்கடை நாடகக் கொட்டகையில் அக்காலம் நடத்தப்பட்டு வந்தன. தற்காலம் இந்த இடத்தில் ஒரு சினிமா நடைபெற்று வருகிறது. அக்காலத்தில் தட்டோடு வேய்ந்த கூரைக் கொட்டகையாயிருந்தது. ஒன்பது மணிக்கு நாடகம் ஆரம்பம் என்று என் தந்தையைத் துரிதப்படுத்தினேன். அவர் அக்காலத்திய நாடகக் கம்பெனிகள் குறிப்பிட்டபடி ஆரம்பியாத வழக்கம் அறிந்தவராய், “அவசரமொன்றுமில்லை, சற்றுப் பொறுத்துப் போகலாம்” என்று கூறியும், நான் நிர்ப்பந்திக்க, எனக்கு புத்தி புகட்ட வேண்டி, “சரி ஆனால் உன்பாடு” என்று பதில் உரைத்து, ஒன்பது மணிக்கு முன்பாக நாடகக் கொட்டகைக்கு என்னை அழைத்துச் சென்றார். போனவுடன், எனக்குப் புத்தி வந்தது. என் தகப்பனார் கூறியது சரியென்று அப்பொழுதுதான் பட்டது. நாடகக் கொட்டகையில் அப்பொழுது தான் ஜனங்கள் வர ஆரம்பித்துக் கொண்டிருந்தனர். விளக்குகள் கூட முற்றிலும் ஏற்றப்படவில்லை.
சற்றேறக்குறைய முக்கால் மணி சாவகாசம் மொட்டு மொட்டு என்று உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஒன்பதே முக்கால் மணிக்கு நாடகம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்குள்ளாக ஜனங்கள் கொட்டகையில் நிரம்பினார்கள். அது வரையில் ஏன் நாடகம் குறித்தபடி ஆரம்பிக்கவில்லை என்று ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்த என்னைப் பார்த்து என் தகப்பனார் புன்சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்தார். என் தந்தை எனக்குப் புத்தி வரும்படி செய்த மார்க்கங்களில் இது ஒன்றாகும். தான் கூறுவதற்குக் குறுக்காக நான் என் அறியாமையினால் ஏதாவது ஆட்சேபணை செய்து பிடிவாதம் பிடித்தால், என்னிஷ்டப்படி போகவிட்டு, அதனால் படும் கஷ்டத்தை அனுபவிக்கச் செய்து நான் புத்தியறியும்படி செய்வார்.
அன்றைத் தினம் நாடகம் “ஸ்திரீசாகசம்” என்பது; இது புராதனமான தமிழ்க்கதை யொன்றை ஒட்டியது. ஒன்பதே முக்கால் மணிக்கு ஆரம்பம் செய்யப்பட்டது என்று முன்பு கூறியதனால், நாடகமே ஆரம்பிக்கப்பட்டது என்று நினைத்து விடாதீர்கள். ஒன்பதே முக்காலுக்கு அரங்கத்தின் முன்பு விடப்பட்டிருந்த திரை தூக்கப்பட்டது! உடனே நாடகம் ஆரம்பம் ஆகும் என்று சந்தோஷப்பட்டேன். ஆயினும் அச்சந்தோஷம் அதிக நாழிகை நிலைக்கவில்லை. முன்திரை தூக்கப்பட்டவுடன், மேடையின் உள்ளே சங்கீதம் கேட்டது. பிறகு சுமார் கால்மணிசாவகாசம், விநாயகர் துதி, கலைவாணி துதி, கம்பெனியாரின் இஷ்ட தேவதைகள் துதி முதலியன பாடப்பட்டன. நாடகக் கதையைப் பார்க்க ஆவல் கொண்டிருந்த எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. கடைசியில் சுமார் பத்து மணிக்கு கோவிந்தசாமி ராவ் அரங்கத்தின்மீது வந்தார். இப்பொழுதாவது நாடகமானது ஆரம்பிக்கப்பட்டதே என்று குதூஹலம் கொண்ட என் மனமானது சடுதியில் தணிவையடைந்தது. அவர் கையில் தாளங்கள் வைத்துக் கொண்டு “ராமமஹீ” என்கிற பாட்டைப் பாட ஆரம்பித்தார். அப்பாட்டு முடிந்தவுடன் ஒரு வேஷதாரி, அலங்கோலமாய் ஆடை அணிந்து தலையில் வேப்பிலை யைக் கட்டிக்கொண்டு, காலில் சலங்கை அணிந்தவனாய், ஆடிக்கொண்டு அரங்கத்தில் பிரவேசித்தான். இவன் யார் என்று என் தந்தையைக் கேட்க, இவன்தான் விதூஷக வேஷதாரி என்று அவர் எனக்குத் தெரிவித்தார். பிறகு அவனுக்கும் சூத்திரதாரனாக வந்த கோவிந்தசாமி ராவுக்கும் தர்க்கம் நடந்தது. அதில் கோவிந்தசாமி ராவ் சுமார் கால்மணி சாவகாசம், நாடகக்கதை இன்னதென்று சவிஸ்தாரமாகத் தெரிவித்தார்! இதனால் நடக்கப்போகிற நாடகக்கதை இன்னதென்று நான் நன்றாயறிந்த போதிலும், இதெல்லாம் நாடகத்திற்கு அத்தனைப் பொருத்தமாக எனக்குத் தோன்ற வில்லை. இனி அங்கு நான் கண்ட நாடகத்தைப் பற்றியும் அந்நாடகக் கம்பெனியின் தலைவராக இருந்த கோவிந்தசாமி ராவைப் பற்றியும் சற்று சவிஸ்தாரமாக வரைய விரும்புகிறேன்.
அக் காலத்தில் என் ஞாபக சக்தியானது கூர்மையாகவேயிருந்ததென நான் சொல்ல வேண்டும். ஏறக்குறைய இரண்டு மூன்றுமுறை ஏதாவது ஒன்றைப் படிப்பேனாயின் அதைப் பிறகு அப்படியே ஒப்பித்துவிடுவேன். அன்றைத்தினம் நடந்த நாடகத்தை மிகவும் கவனமாய்க் கவனித்து வந்தேன். வசன பாகமெல்லாம் என் மனத்தில் அப்படியே படிந்து விட்டது. சங்கீதப் பயிற்சி கொஞ்சமும் அக்காலத்தில் இல்லாதவனாயிருந்தபடியால், நான் கேட்ட சங்கீதத்தை சரியாக அனுபவிக்க அசக்தனாயிருந்தேன். நான் கேட்ட பாட்டுகள் ஒன்றும் என் மனத்தில் நிலைக்கவில்லை.
நான் அன்றைத்தினம் கண்ட ‘ஸ்திரீ சாகசம்’ என்னும் கதையையே, ‘புஷ்பவல்லி’ என்னும் நாடகமாக எழுதி பிறகு வெளியிட்டிருக்கிறபடியால், அக்கதையைப் பற்றி இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு நான் தெரிவிக்க வேண்டியதில்லை என நம்புகிறேன். அக்காலத்தில் இக் கம்பெனியார் நாடகங்கள் நடத்தும் விதத்தைத் தெரிவித்தால் இதை வாசிப்பவர்களுக்கு வினோதமாயிருக்கும். இன்றிரவு இன்ன நாடகம் என்று கோவிந்தசாமி ராவ் தீர்மானித்துப் பத்திரிகைகளில் பிரசுரம் செய்துவிட்டு, தனது நடர்களை யெல்லாம் ஒருங்கு சேர்த்து, நாடகக் கதையை அவர்களுக்குச் சொல்லிவிடுவார். கதை சொல்லி முடிந்ததும் கதையில் இன்னின்ன பாத்திரம் இன்னின்னார் நடிக்கவேண்டியது என்று பகிர்ந்து கொடுத்து விடுவார். அதன்பேரில் வேஷதாரிகளெல்லாம் நாடகத்தில் பேச வேண்டிய வசனங்களைத் தங்கள் புத்திக்கேற்படி ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதே! தற்காலத்தில் பெரும்பாலும் இருப்பதுபோல நாடகத்தில் வசனம் அச்சிடப் பட்டாவது எழுதப்பட்டாவது கிடைத்திலது! வசனம் வரையில் ஒவ்வொரு வேஷதாரியும் நாடக ஆசிரியனாகவே இருந்தான்! இவ்வாறு சமயோசிதமாய் அவர்கள் காட்சிக்குக் காட்சி பேசவேண்டி வந்தபோதிலும், அவர்களில் பெரும்பாலார் தஞ்சாவூரிலிருந்த தமிழ் நன்றாகப் பேசும் வன்மை வாய்ந்தவர்களாயிருந்தபடியால், மொத்தத்தில் நாடகமானது கேட்கத் தக்கதாகவேயிருந்தது. வசனத்திற்கு ஒத்திகை மேற்கூறிய அளவுதான்; ஆயினும் பாட்டுகளுக்கு மாத்திரம் ஒத்திகை நடத்தி வந்தார்கள். இன்னின்ன காட்சியில் இன்னின்ன பாட்டுகள் பாட வேண்டுமென்று கோவிந்தசாமி கோவிந்தசாமி ராவ் தீர்மானிப்பார். சில சந்தர்ப்பங்களில் பொதுவாயிருக்கப்பட்ட, வசந்தருதுவின் வர்ணனை, தோட்ட சிருங்காரம், விரகதாபம், மன்மத தூஷணை முதலிய இடங்களிலெல்லாம் பழைய பாட்டுகளை உபயோகிப்பார்கள். மற்ற இடங்களில் தானே, புதிய பாட்டுகள் வர்ணமெட்டுகளுடன் அமைத்துக் கொடுப்பார். இப்பாட்டுகளை மாத்திரம், வேஷதாரிகள் பக்க வாத்தியக்காரர்களுடன் ஒத்திகையில் பழகி வருவார்கள்.
இனி அன்றிரவு நான் கண்ட நபர்களைப் பற்றிச் சிறிது விஸ்தாரமாகக் கூற விரும்புகிறேன். முதலில் அக்கம்பெனியை ஸ்தாபித்தவரும் கம்பெனியின் தலைவருமாயிருந்த கோவிந்த சாமி ராவை எடுத்துக் கொள்கிறேன். இவரை இறந்துபட்ட தமிழ் நாடகங்களை மறுபடியும் உயிர்ப்பித்தவர்களுள் முதன்மையானவராகக் கொள்ள வேண்டும். இவர் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்துஸ்தானி, மஹாராஷ்டிரம் முதலிய பல பாஷைகளில் வல்லவர். அப்பாஷைகளிளெல்லாம் நன்றாய்ப் பேசக்கூடிய சாமர்த்தியம் வாய்ந்தவர். இவர் முதலில் கவர்மெண்ட் உத்தியோகத்தில் இருந்தவர். சுமார் நூறு ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தனராம். (அக்காலத்தில் நூறு ரூபாய் என்பது தற்காலத்தில் முன்னூறு ரூபாய் வரும்படிக்குச் சமானமெனலாம்.) பூனா தேசத்திலிருந்து, சாங்கிலி கம்பெனியென்று பெயர் கொண்ட மஹாராஷ்ர நாடகக் கம்பெனியொன்று இதற்கு சில வருஷங்களுக்கு முன்பாக, தஞ்சாவூருக்கு வந்ததாம்; அக்கம்பெனியின் நாடகங்களைப் பார்த்து நாடகமாடுவதில் மிகுந்த விருப்பமுடையவராய், அதைப் போன்ற தமிழ் நாடகக் கம்பெனியொன்று ஸ்தாபிக்க வேண்டுமெனத் தீர்மானித்து தஞ்சாவூரிலும் சுற்றுப்பக்கத்திலுமுள்ள தனக்குத் தெரிந்த நாடகமாடுவதில் விருப்பமுடையவர்களும் சங்கீதப் பயிற்சி யுடையவர்களுமான சில சிறுவர்களைத் தனக்குத் துணையாகக் கொண்டு, மேற்சொன்ன “மனமோஹன நாடக கம்பெனி” என்பதை உண்டுபண்ணினார். உடனே, இதற்காகத் தனது காலமெல்லாம் செலவழிக்க வேண்டுமென்று கருதினவராய் தானிருந்த கவர்ன்மெண்ட் உத்தியோகத்தை ராஜினாமா கொடுத்துவிட்டார்! நாடகமாட வேண்டுமென்று அவருக்கு அவ்வளவு. ஊக்கம் இருத்தது போலும்! பிறகு தன் கம்பெனியைச் சேர்ந்த சிறுவர்களுக்கெல்லாம் தமிழ் பாஷையில் சில நாடகங்களைக் கற்பித்து, ஏற்கனவே சங்கீதப் பயிற்சி உடைத்தாயிருந்தபடியால், அவர்களுக் கெல்லாம் நாடகங்களுக்கு வேண்டிய பாட்டுகள், ராமாயண பாரத கீர்த்தனை முதலிய பழைய புஸ்தகங்களிலிருந்து எடுத்தும், இல்லாதவிடத்து மேற்குறித்தபடி நூதனமான பாட்டுகளைத் தானாக வர்ணமெட்டுக்களுடன் எழுதிக் கொடுத்தும், சங்கீதப் பயிற்சியுண்டாக்கினார். தனது சொத்திலிருந்து செலவழித்து சாங்கிலி கம்பெனியாரைப் போல் நாடக உடுப்புகளும், திரைகளும் தயார் செய்தார்.
பிறகு, தான் குடியிருந்த தஞ்சாவூரில் முதல் முதல் சில நாடகங்களை ஆடி, அங்குள்ள ஜனங்களையெல்லாம் சந்தோஷிக்கச் செய்து, அவர்களெல்லாம் நன்றாயிருக்கிற தெனப் புகழவே, பிறகு தன் நாடகக் கம்பெனியைச் சென்னைக்கு அழைத்து வந்து செங்கான்கடைக் கொட்டகையில் நாடகங்களைத் தமிழில் நடத்த ஆரம்பித்தார். முதலில் அன்று இவரைப் பார்த்த பொழுது இவருக்கு நான் உத்தேசிக்கிறபடி சுமார் முப்பத்தைந்து முப்பத்தாறு வயதிருக்கும். கொஞ்சம் ஸ்தூல தேகமுடையவராயிருந்தார். பழைய காலத்தில் மஹாராஷ்டிரர்கள் தலைக்கணிந்து கொண்டிருந்த சரிகைக் குச்சுவிட்ட, சிகப்புப் பாகையொன்றை இவர் சாதாரணமாக அணிவார். மஹாராஷ்டிரராயிருந்தாலும், தமிழ் சுத்தமாகப் பேசுவார். நல்ல கம்பீரமான குரல் உடையவர். இவருக்குக் கொஞ்சம் வாத நோய் உண்டு போலும். “ஸ்திரீசாகசம்” என்னும் நாடகத்தில் அரசனுடைய மந்திரியாக நடித்தார். (இது மேற்குறித்த சூத்திரதாரனாக வந்தது அன்றி) மந்திரி வேஷத்திற்கு, ஒருவிதத்தில் பொருத்த மாயிருந்த, தன் சுய உடையுடனே வந்து விட்டார். இவர் முகத்தில் வர்ணம் பூசுவது சாதாரணமாகக் கிடையாது. அதற்கேற்ப மந்திரி, குரு முதலிய வேஷங்களையே தனக்கு ஏற்படுத்திக் கொள்வார். இப்படிப்பட வேஷங்களை இவர் தரிப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு; கதாநாயகனாகவும் இன்னும் பெரிய வேஷதாரியாகவும் வருவது இவருக்குக் கடினமன்று. ஆயினும் நாடகக் கதையின் கோர்வை எங்காவது விட்டுப் போனாலும், ஏதாவது நாடகப் பாத்திரம் வராமற் போனாலும் அல்லது அரங்கத்தின்மீது வருவதற்கு ஆலஸ்ய மானாலும், மந்திரி முதலிய வேஷந் தரித்து கதையின் கோர்வையைப் பூர்த்தி செய்துவிடுவார். எந்த வேஷம் தரித்தாலும், தரித்த வேஷத்திற்குத் தக்கபடி வசனங்களை உபயோகித்து, நன்றாய் நடிக்கும் குணம் இவரிடம் அதிகமாயுண்டு. அக்காலத்தில் தமிழ் நாடகங்களில் நடித்த நடர்களில் இவரை ஒரு முக்கியமானவர் என்று கூறல் வேண்டும். இவர் பாரதக் கதையினின்றும் ராமாயணக் கதையினின்றும் அநேக பாகங்களை நாடகங்களாகத் தன் சபையைக் கொண்டு நடிக்கச் செய்தவர். எனக்கு ஞாபகம் இருக்கின்றவரையில், துரௌபதி துகில் உரிவு, கர்ணவதம், பாண்டவர் அஞ்ஞாதவாசம், அபிமன்யு வதம், சீதா கல்யாணம், பாதுகா பட்டாபிஷேகம் தாராசசாங்கம், சித்ராங்கி விலாசம், ராமதாஸ் சரித்திரம், சிறுத்தொண்டர் புராணம் முதலியன இவரால் நடத்தப்பட்ட நாடகங்களில் பிரபல மானவை. கோவிந்தசாமி ராவ் தரித்த முக்கிய வேஷங்கள் தாராசசாங்கத்தில் பிரஹஸ்பதியும், ராமதாஸ் சரித்திரத்தில் நவாபும், பாதுகா பட்டாபிஷேகத்தில் பரதனுமாம். கோவிந்த சாமி ராவ் நவாபாகவோ அல்லது பரதனாகவோ வருகிறார் என்று நோட்டீசுகள் கிளம்பினால் அன்றிரவு நாடகக் கொட்டகை, ஆரம்பத்திற்கு ஒரு மணி முன்பாக நிறைந்து விடும்; கடைசி வகுப்புகளில் டிக்கட்டுகள் கிடைக்காமற் போகும். அப்பாத்திரங்களாக நடிப்பதில் அவ்வளவு பிரசித்தி பெற்றவர். இப்பாத்திரங்களாக நடிக்கும் பொழுது, கொட்டகையில் இருப்பவர்கள் எல்லோரும் கண்ணீர் விடும்படியாக வசனங்களை உருக்கமாக மொழிந்து கல்மன முடையோரையும் கரையும்படி சோகத்துடன் பாடுவார். ஆதிகாலத்தில் தமிழ் நாடகத்திற்கு இவர் ஓர் அணிகலனாக இருந்தாரென்றே நான் உறுதியாய்க் கூறக்கூடும். இவரிடம் நாம் எல்லோரும் போற்றத்தக்க ஓர் அரிய குணம் இருந்தது. அதாவது மற்றக் கம்பெனிகளிலிருந்தது போலல்லாமல், தனது கம்பெனியைச் சேர்ந்த சிறுவர்களை தன்னாலியன்ற அளவு சன்மார்க்கத்தில் இருக்கச் செய்வதில் முயன்று வந்தார். இவ்வளவு நற்குணமிருந்தும், சரஸ்வதியிருக்குமிடத்தில் சாதாரணமாக லட்சுமி தங்குவதில்லை என்கிற பழமொழியின் படி, இவர் நாடகங்களை நடத்துவதனால் பெரும் ஊதியம் ஒன்றும் பெற்றிலர். முதலில் சில வருஷங்கள் கொஞ்சம் தனம் சம்பாதித்த போதிலும், பிறகு அதெல்லாம் செலவாகி, கடனாளியானார். இவரால் தேர்ச்சி செய்யப்பட்ட இவருடைய மாணவர்களும் இவரைவிட்டுப் பிரிந்து வேறு வேறு கம்பெனிகள் ஸ்தாபித்தனர். கடைசியில் இவரது வயோதிகக் காலத்தில் பாலாமணி கம்பெனியில் சூத்திரதாரனாகவும் வேஷதாரியாகவும் நடிக்கும் கதிக்கு வந்து சேர்ந்தார். பாபம்! இவர் க்ஷணதசைக்கு வந்த காலத்தில் தான் எனக்கு நேராகப் பரிச்சயமானார். நான் எழுதிய நாடகங்களில் ஒன்றாகிய லீலாவதி சுலோசனா என்பதை, இவரது மாணாக்கராகிய சுந்தர ராவ் கம்பெனி நடத்திய பொழுது இவர்தான் சூத்திரதாரனாக இருந்து நடத்தினார். பாலாமணி கம்பெனியும் அந்த நாடகத்தை முதல் முதலில் நடத்தியபொழுது இவர் சூத்திரதாரனாக நடத்தினார். இதைப் பற்றிய விவரங்களை அவைகளைச் சொல்ல வேண்டிய சந்தர்ப்பத்தில் பிறகு சொல்லுகிறேன். இவ்விடத்தில் தமிழ் நாடகத்திற்கு இவர் பூர்வ காலத்தில் மிகவும் பாடுபட்டவர் என்பதை எண்ணினவனாய், அவர் மடிந்து இப்பொழுது எங்கிருந்த போதிலும் அவரது ஆன்மா நற்கதியிலிருக்குமாக எனக் கோரி, இப்பகுதியை முடிக்கிறேன்.
ஐந்தாம் அத்தியாயம்
மேற்சொன்ன கோவிந்தசாமிராவுடைய மாணவர்களுள் சிறந்தவர்கள் நான்கு பெயர்கள் - கோனேரி ராவ், சுந்தர ராவ், குப்பண்ண ராவ், பஞ்சநாத ராவ். இந்நால்வரும் அவரால் நாடகமாடுவதில் நன்றாய்ச் தேர்ச்சி பெற்றவர்கள். அன்றிரவு ஆடிய நாடகத்தில் கோனேரி ராவ் என்பவர் ‘அயன் ராஜபார்ட்’ என்று வழங்கப்பெற்ற ராஜ குமாரன் வேஷம் தரித்தார்; சுந்தர ராவ் செட்டி மகளாக வேஷம் பூண்டார்; குப்பண்ண ராவ் ராஜ குமாரனுடைய முதன் மனைவியாகத் தோன்றினார்; பஞ்சநாத ராவ் விதூஷகனாக வேடம் கொண்டார்.
கோனேரி ராவ் சங்கீதத்தில் மிகவும் தேர்ந்தவர்; சாரீரம் மிகவும் சிறந்ததானவர்; சரீரமும் அப்படியேயிருக்கும். இதனால் இவருக்கு எப்பொழுதும் ‘அயன் ராஜபார்ட்’ என்று இப்பொழுதும் வழங்குகின்ற முக்கியமான வேஷங்கள் கொடுக்கப்பட்டன; அதாவது நாடகங்களில் பெரும்பாலும் கதாநாயகனாக வருவார்; ஆயினும் இவரது வசனமும், மேற்கொண்ட பாத்திரங்களுக்குத் தக்கபடி நடிப்பதும் என் மனத்திற்கு எப்பொழுதும் திருப்தியைத் தரவில்லை. இவர் கோவிந்தசாமி ராவினுடைய கம்பெனியை விட்டு விலகி சீக்கிரம் வேறொரு நாடக சபை ஏற்படுத்தி ஆடி வந்தார், சில வருஷங்கள். இவரை நான் சில வருஷங்களுக்குப் பிற்காலம் பார்த்தபொழுது வறுமையடைந்தவராகி நோயாளியாய், நாடக சபையில் டிக்கட்டுகள் சரிபார்க்கும் இடத்தில் உட்கார்ந்திருந்தார்! இவரது நடவடிக்கையே இவரை அந்த ஸ்திதிக்குக் கொண்டு வந்துவிட்டது போலும்.
சுந்தர ராவ் என்பவர் சாதாரணமாக அக்கம்பெனியின் நாடகங்களில் முக்கிய ஸ்திரீவேஷம் தரிப்பவர். நல்ல சாரீரமும் சங்கீத ஞானமும் வாய்ந்தவர். இவர் மேடையில் நின்று பாடும் பொழுதெல்லாம் ஜனங்கள் நிசப்தமாய்க் கேட்பார்கள். சிறிது கருமை நிறம் வாய்ந்தவராக இருந்தபோதிலும் ஸ்திரீ வேஷம் தரித்தால் பொருந்தியதாகவே யிருக்கும். இவரை நான் முதன் முதல் பார்த்தபொழுது ஒத்தை நாடியுடையவராயிருந்த போதிலும் நாளடைவில் ஸ்தூல சரீரமுடையவாராய் ஆகிவிட்டார். அவ்வளவாகியும், ஸ்திரீ வேஷம் பூணுங்கால் இவரது நடையுடை பாவனைகளெல்லாம் ஏற்றதாகவே யிருந்தன. இவரும் கொஞ்ச காலம் பொறுத்து தனியாக வேறொரு நாடகக் கம்பெனி ஏற்படுத்தினார். கோவிந்தசாமி ராவ் க்ஷணதசையை யடைந்தபிறகு, தன் மாணாக்கனாகிய இந்த சுந்தரராவ் கம்பெனியில் தானே ஒரு வேஷதாரியாக நடித்தார்! ஊழிற் பெருவலி யாவுள?
அன்றிரவு என்முன் நாடகமாடியவர்களுள் என் மனதைக் கவர்ந்தவர் குப்பண்ணராவே. இவருக்கு சற்றேறக்குறைய பாடவே தெரியாது. ஆயினும் வசனத்தில் மற்றெல்லோரை யும்விட மேம்பட்டிருந்தார். இவர் அன்று ராஜகுமாரனுடைய முதன் மனைவியாக நடித்தது இப்பொழுதும் என் மனத்தில் குடிகொண்டிருக்கிறது. இவர் துன்மார்க்கமுடைய ஸ்திரீயாக நடிப்பதில் மிகுந்த நிபுணர்.
இக்கம்பெனியில் தாரை, சித்ராங்கி முதலிய வேஷங்களை இவர்தான் தரிப்பார். ஸ்திரீகளுடைய நடவடிக்கைகளை மிகவும் நுட்பமாய் ஆராய்ந்து அதன்படி நடிக்கும் சிறந்த சக்தி வாய்ந்தவர். இவர் மேற்குறித்த இரண்டு நடர்களைப் போல் அற்பாயுசுடையவராயன்றி, அநேக வருஷம் வாழ்ந்திருந்தார். வயோதிகரான பிறகும் ஸ்திரீ வேஷம் தரித்து வந்தார். நான் பிறகு எழுதிய நாடகமாகிய லீலாவதி சுலோசனாவில் இவர் லீலாவதியாக நடித்தார். இவரை நான் கடைசி முறை பார்த்தது அந்த வேஷத்தில்தான். இவர் அந்த லீலாவதியாக நடிப்பதைப் பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் நான் கூறவேண்டி வரும்.
அன்றைத்தினம் விதூஷகனாக வேடம் பூண்ட பஞ்சநாதராவ் அவ்வேடத்தில் தனக்கு நிகரில்லை என்று பெயர் பெற்றவர். அவரை அவரது நேயர்கள் ‘பஞ்சு’ என்றும் ‘பஞ்சண்ணா’ என்றும் அழைப்பார்கள். ஸ்தூல தேகமுடையவராயிருந்தார். அக்காலத்திய வழக்கத்தின்படி விதூஷகனாக வரும் பொழுதெல்லாம் முதலில் நர்த்தனம் செய்தே பிறகு தான் சொல்ல வேண்டிய வசனத்தை ஆரம்பிப்பார். இவர் இந்த வேஷத்தில் எப்பொழுதும் பூணும் ஆடையானது ஆங்கிலேய கிளொன் (Clown) அல்லது பப்பூன் (Buffoon) உடையேயாகும்! சராயும் சொக்காயும் அப்படியேயிருக்கும். பல வர்ணங்களுடையதாய இந்த உடுப்பிற்கு இவர் பரிகாசமாய் சோபா (Sofa) டிரஸ் என்று பெயர் வைத்தார். அதாவது சோபா முதலிய நாற்காலிகளுக்குப் போடும்படியான உடுப்பு என்று அர்த்தமாகும். தலையில் மாத்திரம் வெள்ளைக்கார பபூன்களைப் போல் கோணக் குல்லாய் அணிவதில்லை. ராமாயணக் கதையாயிருக்கட்டும், பாரதக் கதையாயிருக்கட்டும், தாராசசாங்க மாயிருக்கட்டும், என்ன நாடகமாயிருந்தபோதிலும் இவருக்கு இந்த விதூஷகன் உடுப்பு ஒன்றே; சாதாரணமாக பாத்திரங்களுக்கேற்றபடி உடைகள் அணியச் செய்த கோவிந்தசாமி ராவ் அவர்கள் இந்த ஆபாசத்தை ஏன் சீர்திருத்தாதிருந்தாரோ காரணம் அறிகிலேன். அது சாங்கிலி நாடகக் கம்பெனியாருடைய வழக்கம். இந்தப்படி விதூஷகனாக வந்த இவருக்கு இன்ன காட்சியில் தான் வரலாம், இதைத்தான் பேசலாம் என்னும் வரையறை கிடையாது. தனக்கிஷ்டமானபடி எந்தக் காட்சியிலும் நடுவில் வந்துவிடுவார். தாரையும் சந்திரனும் அந்தரங்கமாய்ப் பேசிக் கொண்டிருக்கும் சமயத்திலும் நடுவில் நுழைந்துவிடுவார்! அன்றியும் நாடகக் கதைக்குப் பொருத்தமானதோ இல்லையோ ஜனங்களுக்கு சிரிப்பையுண்டாக்குமென்று தோன்றினால் எதை வேண்டுமென்றாலும் பேசி விடுவார். இக்குறை அவரைப் பொறுத்ததன்று. அக்காலத்திய நாடகங்களின் வழக்கத்தைப் பொறுத்ததாகும். முக்கியமாகத் தன் ஆசிரியராகிய கோவிந்தசாமி ராவையே சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் அரங்கத்தின் மீது ஏளனம் செய்து விடுவார். உண்மையில் மிகுந்த புத்திக்கூர்மை வாய்ந்தவரென்றே கூறவேண்டும். சந்தர்ப்பத்திற்குத் தக்கப்படி திடீரென்று புத்தி சாதுர்யமாக விகடம் செய்வதில் இவர் மிகுந்த நிபுணராயிருந்தார். இவர் வேடிக்கையாய்க் கூறிய பல சமாசாரங்களை நான் எனது நாடகங்களில் சில இடங்களில் உபயோகப்படுத் தியிருக்கிறேன். இவர் நாடக மேடையில் வந்தவுடன் ஜனங்களெல்லாம் நகைக்க சித்தமாயிருப்பார்கள். இவர் ஏதாவது அசௌக்கியமாய் ஒரு தினம் வேஷம் தரிக்கா விட்டால், அன்றைக்கு காலரி (Gallery) வகுப்பில் பெரும் குழப்பமுண்டாகும். இவரும் காலகதியால் க்ஷணதசைக்குப் பிறகு வந்துவிட்டதை நினைத்து இப்பொழுதும் நான் துக்கப்படுகிறேன். கடைசியில் சில வருஷங்களுக்கு முன் நான் பார்த்தபொழுது, தனது ஹாஸ்ய வார்த்தைகளையெல்லாம் மறந்து வெறும் மரப்பாவையைப் போல அரங்கத்தின் மீது வந்து நிற்பார். நான் ஆச்சரியமும் பரிதாபமும் கொண்டனவாகி, இவர் மாறியிருப்பதற்கு என்ன காரணம் என்று விசாரித்த பொழுது, இவருக்கு யாரோ சூன்யம் வைத்து விட்டார்கள் என்று சொன்னார்கள். இது எவ்வளவு உண்மையோ அறியேன் நான். ஆயினும் அச்சமயம் ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி ஆங்கிலத்தில் எழுதிய பிரசித்தி பெற்ற நாடகமாகிய ஹாம்லெட் என்னும் நாடகத்தில், ஹாம்லெட், தன் தந்தையின் அரண்மனை விதூஷகனான யாரிக் (Yorick) என்பவனைப் பற்றிக் கூறிய வார்த்தைகள், எனக்கு நினைவுக்கு வந்தன. “அவனை நான் நன்றாய் அறிவேன். அபாரமான விகடமுடையவன், அதிசூட்சும புத்தியுடையவன். இப்பொழுது உன் விளையாட்டுகள் எங்கே? வினோதங்கள் எங்கே? ஆடல்கள் எங்கே? பாடல்களெங்கே? சபையோரை எல்லாம் சந்தோஷத்தால் ஆரவாரிக்கச் செய்யும் உனது சாதுர்ய மொழிகள் எங்கே? உனது இளிப்பையாவது ஏளனம் செய்ய ஒன்றையாவது கூறமாட்டாயா? உன் முகவாய்க்கட்டை அடியுடன் அற்றுப் போயதா!” இவர் தன் தேகஸ்திதியை ஜாக்கிரதையாகக் கவனிக்காதபடியால் அக்கதிக்கு வந்தார் போலும்!
மேற்சொன்ன நான்கைந்து நாடகப் பாத்திரங்களில் அன்றைத் தினம் நாடகத்தில், என் மனத்தைக் கவர்ந்தவன் இன்னும் ஒருவனே. அவன் வாலிபனான மந்திரிகுமாரன் வேஷம் தரித்தான். அவன் வயது சற்றேறக்குறைய என் வயதுதான் இருக்கும். அன்றியும் அன்றிரவு நாடகத்தில் இவன் பாடவேயில்லை! இவ்விரண்டும்தான் இவன் மீது என் மனத்தை உந்தியதோ என்னவோ? இவன் வசனமானது மிகவும் சுத்தமாக இருந்தது. அன்றிரவு நாடகம் முடிவதற்குள் இந்தக் கதையையே நான் நாடகமாக எழுதி, இவன் பூண்ட மந்திரிகுமாரன் வேஷமே நான் பூணவேண்டுமென்று தீர்மானித்தேன்.
இந்நாடகத்தில் நான் கண்ட ஓர் ஆபாசம் மாத்திரம் என் மனத்தை வருத்தியது; ராஜகுமாரனுடைய முதன் மனைவி, தன் சோர நாயகனாக ஒரு குஷ்டரோகியிடம் சென்றதாக ஒரு காட்சி நடிக்கப்பட்டது. இது எனக்கு மிகவும் வெறுப்பைத் தந்தது. என்னதான் கெட்டவாளயிருந்த போதிலும் ஓர் அழகிய ராஜகுமாரி குஷ்டரோகியிடம் அணுகமாட்டாள் என்று தீர்மானித்தவனாய், நான் எழுதும்பொழுது இதை மாற்றிவிட வேண்டுமென்று தீர்மானித்தேன். எனக்கு அருவருப்பைத் தந்த போதிலும் அங்கு நாடகம் பார்க்க வந்த ஜனங்கள் இக்காட்சியைக் கண்டு சந்தோஷப்பட்டனர் என்றே நான் உரைக்க வேண்டும். இவ்விஷயத்தைப் பற்றி அன்றிரவு என் தந்தையுடன் நான் கலந்து பேசியபொழுது, நான் எண்ணியது தான் சரியென்று அவரும் ஆமோதித்தார். அன்றிரவு நாடகம் முடிந்து நாங்கள் வீட்டிற்குப் போவதற்கு சுமார் இரண்டரை மணியாச்சுது!
மறுநாள் நான் எழுந்திருந்து என் காலைக்கடன்களை முடித்தவுடன், முந்திய தினம் இரவு நான் பார்த்த கதையை நாடகமாக எழுத உட்கார்ந்தேன். கதா நாயகிக்கு, புஷ்பவல்லி என்கிற பெயரை இட்டு, நாடகத்திற்கும் அப்பெயரையே வைத்தேன். கோவிந்தசர்மி ராவ் நடத்திய நாடகத்தில் எந்தப் பாத்திரத்திற்கும் பிரத்தியேகமாகப் பெயர் கிடையாது. ராஜகுமாரன், மந்திரி குமாரன், ராஜா, மந்திரி, செட்டி, செட்டிப் பெண் என்ற அழைக்கப்பட்டார்களே யொழிய ஒவ்வொரு நாடகப் பாத்திரத்திற்கும் பிரத்யேகமான பெயர் கிடையாது! தான் ஆட விரும்பிய மந்திரிகுமாரன் பாத்திரத்திற்குப் புத்திசேனன் என்று பெயர் வைத்தேன். சாப்பிடுகிற வேளை தூங்குகிற வேளை தவிர மற்றக் காலமெல்லாம் எழுதுவதற்கே செலவழித்து மறு வியாழக்கிழமைக்குள் ஏறக்குறைய பாதி நாடகத்தை எழுதி முடித்தேன். இதை எழுதியதில் மனமோஹன நாடகக் கம்பெனி நடர்கள் உபயோகித்த வார்த்தைகளையே பெரும்பாலும் நான் உபயோகித் திருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. அக்காலத்தில், எனக்கு வயது பத்தொன்பதாயிருந்தபடியால் என் ஞாபக சக்தி அதிகமாயிருந்தது. நான் பார்த்த நாடகக் கதையில் ஒரு முக்கியமான வித்தியாசம் மாத்திரம் உண்டு பண்ணினேன். முன்பே நான் கூறியபடி ராஜகுமாரனது முதல் மனைவி குஷ்ட ரோகியிடம் போனதாக நடித்ததை மாற்றி அரசனது சபையிலிருந்த ஒரு கனவானிடம் களவாகப் போனதாக மாற்றினேன். அந்த வியாழக்கிழமை சாயங்காலம் சபைக்குப் போனபோது, எனது நண்பர்களை யெல்லாம் ஒருங்குசேர்த்து, என்னைச் சுற்றிலும் உட்கார வைத்துக்கொண்டு நான் எழுதியதைப் படித்துக் காட்டினேன். அவர்கள் எல்லாம் மிகவும் நன்றாயிருக்கிறதெனச் சந்தோஷப்பட்டார்கள். இதை இங்கு நான் தற்புகழ்ச்சியாக எடுத்துக் கூறவில்லை. நடந்த உண்மையெல்லாம் எனது நண்பர்களுக்கு நான் கூறவேண்டும் என்று நான் மேற்கொண்ட நியமனத்தின் படிதான் கூறுகிறேன். நான் அன்று தொடங்கி இதுவரையில் எழுதியிருக்கும் சற்றேறக்குறைய அறுபது நாடகங்களில் இது மிகவும் கீழ்ப்பட்டதென்பதே என்னுடைய உறுதியான தீர்மானம். ஆயினும் அச்சமயத்தில் எனக்கு இது மிகுந்த ஆனந்தம் விளைத்தது. முக்கியமாக என் இளைய நண்பர்களெல்லாம் இதைப் புகழ்ந்ததே இதற்கு முக்கியமான காரணமாயிருக்கலாம். அன்றியும் ஒரு தாய், பிறகு எத்தனை புத்திசாலிகளான குழந்தைகளைப் பெற்றபோதிலும், முதலிற்பெற்ற குழந்தை, புத்தியில்லாததாயிருந்தபோதிலும், அவலட்சணமுடையதாயிருந்த போதிலும் அதன்மீது ஒரு விதமான அபூர்வ ஆர்வமுடையவராயிருப்பதுபோல, இந்தப் புஷ்பவல்லி என்னும் நான் முதல் முதல் எழுதிய நாடகத்தின் மீது எனக்கு இன்னாளளவும் ஓர் அன்பு உண்டு. இந்த நாடகமானது இதுவரையில் சில முறையே சுகுண விலாச சபை முதலிய சபைகளில் நடிக்கப்பட்டது.
அன்றைத்தினம் நான் எழுதிய பாகத்தைப் படித்தவுடன் எனது நண்பர்கள், நான் சீக்கிரம் மற்ற பாகத்தையும் எழுதி முடிக்க வேண்டுமென்று வற்புறுத்தினர். இவர்கள் வேண்டுகோளுக்கிணங்கியோ அல்லது முடிக்கவேண்டு மென்னும் என்னுடைய ஆர்வத்தினாலோ உந்தப்பட்டவனாய், வெகு சீக்கிரத்தில் அந்த நாடகத்தை எழுதி முடித்தேன். நான் நாடகத்தை முடிக்கு முன்னமே, சபையின் நிர்வாக சபையில் இன்னின்னார் இன்னின்ன பாத்திரங்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. எனக்கு ஞாபகம் இருக்கிறபடி, கதாநாயகனான ராஜகுகுமாரன் வேஷம், முன்பு நான் கூறிய வரதராஜுலு நாயகருக்குக் கொடுக்கப்பட்டது. அதற்கு முக்கியமான காரணம், அவர் கூடியவரையில் மிகவும் நன்றாய்ப் பாடுவார் என்பதேயாம்.
மந்திரி குமாரனான புத்தி சேனன் பாத்திரம் எனக்குக் கொடுத்தார்கள். கதாநாயகியாகிய புஷ்பவல்லியின் பாகம் ஜெயராம் நாயகருக்குக் கொடுக்கப்பட்டது. புத்திசேனன் மனைவியின் பாகம் சுப்பிரமணிய ஐயர் என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. அக்காலத்தில் சுகுண விலாச சபையில் ஸ்திரீவேஷம் தரிக்கத்தக்கவர்கள் இரண்டு மூன்று பெயர்களுக்குமேல் கிடையாது. ஆகவே இவர்களிவருக்கும் இரண்டு பாத்திரங்களும் கொடுக்கப்பட்டன. எம்.வை. ரங்கசாமி ஐயங்கார் என்பவருக்கு, புத்திசேனன் தகப்பனாராகிய மந்திரி பாத்திரம் கொடுக்கப்பட்டது. தனபால செட்டி என்ற பாத்திரத்தை (புஷ்பவல்லியின் தந்தை) வெங்கட கிருஷ்ணப் பிள்ளை எடுத்துக் கொண்டார். துரைசாமி ஐயங்கார் என்பவர் விதூஷகனுடைய பாத்திரமாக நியமிக்கப்பட்டார். இந்நாடகத்தின் ஒத்திகைகள் நடத்திய விவரமும் முதல் முதல் பஹிரங்கமாக ஒத்திகை நடத்திய கதையும் இனி எழுதுகிறேன்.
புஷ்பவல்லி என்னும் நாடகத்தை நான் எழுதி முடிப்பதற்கு முன் ஒரு முக்கியமான கஷ்டம் முளைத்தது. நாடகப் பாத்திரங்கள் எல்லாம் தங்கள் தங்கள் வசனத்தை எழுதிக் கொண்டு ஒத்திகை ஆரம்பிக்கு முன், நாங்கள் என்ன பாட்டுகள் பாடுவதென்று கேட்க ஆரம்பித்தார்கள். அக்காலத்தில் பாட்டில்லாமல் நாடகம் என்றால் நூலில்லாமல் வஸ்திரமா என்னும் ஸ்திதி. ஏறக்குறைய அதற்கப்புறம் நாற்பது வருடங்களாகியும் தற்காலத்தில் பெரும்பாலும் பாட்டில்லாமல் நாடகமே கிடையாதல்லவா? ஆதிகாலத்தில் தென்னாட்டில் நாடக மென்றால் முற்றிலும் பாட்டாகவே இருந்திருக்கவேண்டு மென்பதற்கு ஐயமேயில்லை. பிறகு வசனமானது கொஞ்சம் கொஞ்சமாக இடையிடையே சேர்க்கப்பட்டது. இப்பொழுதுதான் கேவலம் வசன ரூபமான நாடகங்கள் கார்த்திகைப் பிறைபோலக் காணப்படுகின்றன.
தாங்கள் பாடப் பாட்டுகள் வேண்டுமென்று நாடகப் பாத்திரங்கள் கேட்டபொழுது எனக்குப் பெருங் கவலையுண்டாயிற்று. எனக்கும் பாட்டிற்கும் அக்காலம் கன்யா குமரிக்கும் இமய மலைக்குமுள்ள தூரம்தான் இருந்தது. (இப்பொழுதும் அந்த தூரம் அதிகமாகக் குறுகவில்லை யென்றே எண்ணுகிறேன்) சங்கீதத்தில் “டா என்றால் “டு என்று சொல்லத் தெரியாத நான், பாட்டுகள் எப்படிக் கட்டுவது? சில நண்பர்கள் எனக்குக் கூறியபடி, மற்ற நாடகங்களிலிருந்து சமயோசிதமான வர்ணமெட்டுகளை எடுத்துக் கொள்ள என் மனம் கொஞ்சமேனும் இசையவில்லை . இந்தக் கஷ்ட திசையில் எனக்கு ஒரு வழிதான் தோன்றியது. கஷ்டம் நேரிடும் போதெல்லாம் என்னைக் கைகொடுத்துக் கரையேற்றிய என் இரண்டாம் தெய்வமாகிய என் தந்தையிடம் சென்று என் குறையைக் கூறினேன். அவர் உடனே, என் உதவிக்கு வந்து, நாடகங்களுக்கேற்ற பாட்டுகள் கட்ட வல்லமை வாய்ந்த தாயுமானசுவாமி முதலியார் என்பார் தனக்குத் தெரியுமென்று சொல்லி, அவருக்கு ஒரு சீட்டு எழுதி சீக்கிரத்தில் வரவழைத்தார். இவருடன் நான் கலந்து பேசி, புஷ்பவல்லியின் கதையை அவருக்குச் சொல்லி அதற்கு ஏற்ற பாட்டுகளைக் கட்டிக் கொடுக்கும்படி கேட்டேன். அவரும் அதற்கு இசைந்தார். சுகுண விலாசசபையின் நிர்வாக சபையார் ஒவ்வொரு நாடகத்திற்கும் பாட்டுகள் கட்ட அவருக்கு இருபத்தைந்து ரூபாய் கொடுப்பதாகத் தீர்மானித்தார்கள்.
இந்தத் தாயுமான சுவாமி முதலியாரைப் பற்றி எனது நண்பர்கள் அறிய வேண்டியது அவசியம். இவருக்கு அச்சமயம் வயது எண்பதுக்குக் குறைந்ததல்ல. மிகவும் வயோதிகராய்த் தடியொன்றை ஊன்றிக் கொண்டு நடப்பாராயினும், தேகவலிமை வாய்ந்தவர். இவர் மேற்கண்ட புஷ்பவல்லி என்னும் நாடகத்துக்குப் பாட்டுகள் எழுதி, ஒத்திகை செய்யும் போதெல்லாம் எங்களுக்கு அப்பாட்டுகளைக் கற்பிப்பார். சாரீரம் அவ்வளவு திவ்யமாயில்லா விட்டாலும், கம்பீரமாயிருக்கும்; சிறுவர்களாகிய எங்கள் குரலைவிட இவர் குரல்தான் ஒத்திகை செய்யும் பொழுது அதிகமாய்க் கேட்கும்! மூன்று நான்கு மணி நேரம் எங்களுடன் தளராது பாடுவார்! அவருக்குப் பின்னால், அவரைக் கிழவர் என்று ஏளனம் செய்தபோதிலும், அவருக்கு அவ்வயதில் அவ்வளவு சக்தி இருந்ததேயென்று இரகசியத்தில் பொறாமைப்படுவோம். அப்படி அவரை ஏளனம் செய்தவர்களில் நானும் இன்னும் ஒன்றிரண்டு பெயர்கள் தவிர, மற்றவர்களெல்லாம் அவருடைய வயதில் பாதிக்கும் முக்காலுக்கும் வராமல் இறந்து விட்டனர்! இப்பொழுது சிலர் கூறுகிறபடி அவர் பழைய காலத்து மண்ணாலானவர். இவ்வளவு இருந்தும் அவரிடத்தில் ஒரு குறைமாத்திரம் இருந்தது. கொஞ்சம் தாகத்திற்குச் சாப்பிடுகிற வழக்கம் உண்டு. அந்தப் பதத்தின் அர்த்தம் அறியாத எனது நண்பர்களுக்கு கொஞ்சம் வெளிப்படையாய்ச் சொல்ல வேண்டும் நான். தாகத்திற்குச் சாப்பிடுவதென்றால் வெறும் தண்ணீ ரைக் குடிப்பதன்று; சாராயம் முதலிய லாகிரி வஸ்துகளை உபயோகிப்பதாம். ஒத்திகை முடிந்தவுடன் தினம், காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியாரிடமிருந்து கால் ரூபாய் கடனாக வாங்கிக்கொண்டு போய்விடுவார். முதலில் ஏதோ செலவிற்கு வாங்கிக்கொண்டு போகிறார் பாபம் என்று எண்ணியிருந்தேன். சில தினங்களுக்குப் பிறகுதான் அந்தச் செலவு சாராயக்கடையில் செய்யப்பட்டது என்பதை அறிந்தேன்! அறிந்தும் நான் என்ன செய்வது? அவரன்றி பாட்டுகள் எழுதி எங்களுக்குப் பாட்டுகள் கற்பிக்கத் தகுந்தவர்கள் ஒருவரும் அச்சமயம் கிடைக்கவில்லை . இவரைக் கொண்டுதான் மேற்கண்ட புஷ்பவல்லி என்னும் நாடகத்திற்கும், எனது இரண்டாவது நாடகமாகிய “சுந்தரி அல்லது மெய்க்காதல்” என்பதற்கும் பிறகு நான் எழுதிய “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்திற்கும் பாட்டுகள் எழுதிக்கொண்டோம். இவர் தமிழ் நன்றாய் வாசித்தவர். சொற்பிழையில்லாமல் பாட்டுகள் எழுதுவார். அன்றியும் சங்கீதத்தில் மிகவும் தேர்ந்தவர். அதற்குச் சில வருஷங்களுக்கு முன்பாகக் காசி விஸ்வநாத முதலியார் என்பவர் அச்சிட்ட டம்பாச்சாரி விலாசத்திற்கு வர்ண மெட்டுகள் எழுதுவதில் மிகவும் உபயோகமாயிருந்தவர். நான் இப்பொழுதிருக்கும் வீட்டிற்கு அருகாமையில்தான் வசித்துக் கொண்டிருந்தார். இவர் இரண்டு மூன்று வருடங்கள் சென்ற பின் காலகதியடைந்தார். அதைக் கேள்விப்பட்ட என் தந்தையாரும் நானும் துக்கப்பட்டோம். இவரை நான், சங்கீதத்திற்கேற்றபடி சாஹித்யம் தமிழிற் செய்ய, எனக்குக் கற்பித்த குருவாகப் பாவிக்கின்றேன்.
மேற்கண்டபடி பாட்டுகளெல்லாம் கட்டியான பிறகு சற்றேறக்குறைய மூன்று மாதங்கள், அந்நாடகத்திற்கு ஒத்திகை நடத்தினோம். வியாழக்கிழமைகளில் சாயங்காலம் மூன்று மணிநேரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆறுமணி நேரமும் ஒத்திகை நடத்துவோம். அக்காலத்தில் நாடகர்களெல்லாம் சிறுவயதுடையவர்களா யிருந்தபடியால் சீக்கிரம் எங்கள் பாடத்தைப் படித்துவிட்டோம். அன்றியும் எங்களில் பெரும்பாலர்க்கு ஞாபக சக்தி நன்றாகவிருந்தது. பிறகு ஒரு நாள் நியமித்துப் பகிரங்கமான ஒத்திகை போடவேண்டு மென்று தீர்மானித்தோம். அதற்கு எங்களுக்குத் தெரிந்தவர்களாகிய நண்பர்களில் சில முக்கியமானவர்களை மாத்திரம் வரவழைத்தோம். இந்தப் பகிரங்க ஒத்திகையானது தம்பு செட்டித் தெருவில் ஜெயராம் நாயகருடைய வீட்டில் நடந்தது; ஏறக்குறைய 50 பெயர் வந்திருந்தனர். எங்களிடம் அப்பொழுது திரைகளே கிடையாது. அரங்கத்தை மறைக்க ஒரு தோம்புதிரை தான் கட்டினோம். உடைகளும் எங்களிடம் அப்போது ஒன்றும் கிடையாது; என் தகப்பனார் கார்டியனாக விருந்த ஒரு ஜமீன்தாரருடைய சரிகை உடுப்புகளில் சிலவற்றை நான் கொடுக்க, அவைகளைத்தான் உபயோகிக்க வேண்டியதாயிருந்தது. இரண்டு ஸ்திரீ வேஷங்களுக்கும் ஜெயராம் நாயகர் வீட்டிலிருந்து இரண்டு புடவைகளைக் கொடுத்தனர். நாற்பது வருடங்களுக்கு முன் நடந்த இந்த ஒத்திகையில் எனக்கு இரண்டு மூன்று சமாச்சாரங்கள்தான் முக்கியமாய் ஞாபகம் இருக்கிறது.
ஒன்று, ராஜாவேடம் தரித்த ஒருவர் (அவர் இன்னும் ஜீவந்தராயிருப்பதால் அவர் பெயரை வெளியிட எனக்கு இஷ்டமில்லை) நாடக ஆரம்பத்திற்குச் சில நிமிஷங்களுக்கு முன்தான் தன் வீட்டிலேயே வேஷம் போட்டுக் கொண்டு ஜட்கா வண்டியில் ஏறிக்கொண்டு வந்து சேர்ந்தார்! அவர் முகத்திற் பூசிய வர்ணமானது வியர்வையினால் ஒழுக ஆரம்பித்து மிகவும் ஆபாசமாயிருந்ததென நாங்கள் எல்லாம் நகைத்தோம் என்பதே! போதாக் குறைக்கு, ஒரு காட்சியின் கடைசியில் இவர் பாடவேண்டியிருந்தது. பாடுவதற்காக உடனே ஆரம்பிக்க வேண்டுமென்று எவ்வளவோ சொல்லியும், அன்று அதைக் கவனியாது, பக்கவாத்தியக்காரர்களைப் பார்த்து தலையை அசைக்க ஆரம்பித்தார். அதன் பேரில் திரையை இழுக்க வேண்டி நியமிக்கப்பட்டவர்; திரையை இழுக்கச் சொல்லுகிறார் என எண்ணி, திரையை இழுத்து விட்டார்; அதன் மீது அவருக்கு அடங்காக் கோபம் வந்து திரைக்குப் பின்னிருந்தே தான் பாடவேண்டிய பாட்டைப் பாடி முடித்தார்! இதைச் சொல்லிச் சொல்லி அநேகதரம் நாங்கள் நகைத்துக் கொண்டிருந்தோம். இந்த அங்கத்தினர் எங்கள் மீது மிகவும் கோபம் கொண்டு சீக்கிரத்தில் சபையைவிட்டு நீங்கி விட்டார் பாவம்! இரண்டாவது; எங்களுக்கெல்லாம் முகத்தில் வர்ணம் தீட்ட அக்காலத்தில் பெயர்போன நடராகிய சுப்பராயாச்சாரி என்பவரின் கம்பெனியில், அவருக்கு வேஷம் தீட்டும் அப்பு என்பவன் வந்ததே. இவன் அன்று முதல் ஒன்பது வருஷகாலம் ஒரு நாடகம் தவறாது எங்கள் சபைக்கு ஊழியனாய், மிகந்த சுருசுருப்புடன் உழைத்த வேலையாள். இவனைப்பற்றிச் சில விஷயங்கள் பிறகு கூறவேண்டியிருக்கும் நான்; இவன் நான் அன்று நடித்ததைப் பார்த்து சுப்பராயாச்சாரியைப் போல் நன்றாகப் பெயர் எடுப்பேன் என்று கூறினான். இதை எனக்கு முகஸ்துதியாகக் கூறியிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.
அன்று ஸ்திரீவேஷம் பூண்ட ஜெயராம் நாயகருக்கும் பானுமதி வேஷம் பூண்ட அ. சுப்பிரமணிய ஐயருக்கும், ஜெயராம் நாயகருடைய வீட்டு ஸ்திரீகள், ஸ்திரீவேஷம் தரிப்பித்தனர். சுப்பிரமணிய ஐயர் ஜெயராம் நாயகருடன் சிறுவயது முதல் ஒன்றாய்ப் படித்தவர்; அவர் வீட்டில் உள்ளவர்களுக் கெல்லாம் குழந்தை வயது முதல் நன்றாய்த் தெரிந்தவர்.
அன்றைத்தினம் ஒத்திகையைப் பார்த்த எங்களுடைய நண்பர்களுள் பெரும்பாலர் ஒத்திகை மிகவும் நன்றாயிருந்ததெனப் புகழ்ந்தனர். இது சிறுவர்களாகிய எங்களுக்கு மிகவும் குதூஹலத்தைக் கொடுத்தது.
உடனே சபையின் நிர்வாகசபைக் கூட்டத்தில், நாங்கள் கூடிய சீக்கிரத்தில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடகங்கள் நடத்த வேண்டுமென்றும், அதற்கு முன் இன்னொரு நாடகம் தயார் செய்து கொண்டு, இரண்டு நாடகமாகப் போட வேண்டும் என்றும் தீர்மானித்தோம். அந்த இரண்டாவது நாடகத்தை நானே எழுதவேண்டுமுன்று எனது நண்பர்கள் வற்புறுத்தினர். நான் ஆலோசித்து, இரண்டாவது நாடகம் பழைய கதையை ஒட்டியதாக இருக்கலாகாது, புதியகதையாக இருக்கவேண்டுமெனத் தீர்மானித்தது, “சுந்தரி அல்லது மெய்க்காதல்” என்னும் நாடகத்தை எழுதத்தொடங்கி கூடிய சீக்கிரத்தில் எழுதி முடித்தேன். இந்நாடகக் கதை என்னால் கற்பிதமானதே; சில இடங்களில் நான் சிறு வயதில் என் தாயாரிடமிருந்து கேட்ட கதைகளின் சந்தர்ப்பங்களை உபயோகித்திருக்கலாம். இருந்தும் மொத்தத்தில் நாடகக் கதை நூதனமான தென்றே சொல்லவேண்டும். இந்த நாடகத்தையும் சில வருஷங்களுக்கு முன் அச்சிட்டிருக்கிறேன். ஆகவே இதைப்பற்றி எனது நண்பர்களுக்கு நான் அதிகமாய்க் கூறவேண்டியதில்லை. இதுவும் இதற்குமுன் நான் எழுதிய புஷ்பவல்லி என்னும் நாடகமும், நான் எழுதியவற்றில் மிகவும் கீழ்ப்பட்டவை என்றே கூற வேண்டும். ஆயினும் அக் காலத்தில் இதை எழுதி முடித்து எனது நண்பர்களுக்கு நான் வாசித்துக் காட்டிய பொழுது, அதை அவர்கள், மிகவும் புகழ்ந்தார்கள். உடனே நிர்வாகசபையில் இன்னின்னார் இன்னின்ன வேடம் தரிக்க வேண்டுமெனத் தீர்மானிப்பதற்குக் கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் நடந்த ஒரு முக்கியமான சமாச்சாரம் என் மனத்தில் இன்னும் அதிகமாய் மறக்க முடியாதபடி அழுந்தியிருக்கிறது.
‘சுந்தரி அல்லது மெய்க்காதல்’ என்னும் நாடகத்தை எழுதும் பொழுதே சபையின் அங்கத்தினருள் நாடக மேடை ஏற இச்சையுள்ளவர்களுக்குள் இன்னின்னாருக்கு இன்னின்ன பாத்திரம் கொடுத்தால் நன்றாயிருக்குமெனத் தீர்மானித்தே அவரவர்கள் திறமைக்கு ஏற்றபடி நாடகத்தை எழுதிக்கொண்டு வந்தேன். இதைப் பற்றிச் சிலர் அவ்வளவாக சிலாக்கியமான மார்க்கம் அல்லவென்று கூற இடமுண்டு. அப்படி அவர்கள் கூறுவது முற்றிலும் தவறு என்று நான் கூறமாட்டேன். ஆயினும் அநேக விதங்களில் யோசித்துப் பார்க்குமிடத்து, இதனால் பெரும்பலன் உண்டென்று உறுதியாய் நம்புகிறேன். அன்று ஆரம்பித்த இவ்வழக்கத்தை இன்றளவும் விட்டவனல்ல. புராண கதைகள், சரித்திர சம்பந்தமான கதைகள் இவை போன்றவைகளில் இம்மாதிரிச் செய்வது கூடாமைதான். ஆயினும் கேவலம் கற்பனைக் கதைகளடங்கிய நாடகங்களில் இம்மாதிரி செய்வது அவைகள் பிறகு நாடக மேடை ஏறுங்கால் நன்றாய் நடிக்கப்படுவதற்கு மிகவும் அதுகுணமாயிருக்கிறதென்றே உறுதியாய் நம்புகிறேன்.
ஆகவே, நிர்வாக சபையார் கூட்டத்தில் இன்னின்னாருக்கு இன்னின்ன வேஷம் கொடுக்க வேண்டுமென்று யோசித்த பொழுது, ஒவ்வொரு பாத்திரத்தின் பெயரைக் கூறி அதை இன்னாருக்குக் கொடுத்தால் நலமாயிருக்குமென்று சொல்லிக் கொண்டு வந்தேன். அவர்களும் சரி சரியென்று ஒப்புக் கொண்டு வந்தனர். நான் எனக்காக எழுதிய பாத்திரமாகிய சத்யவந்தன் வேடத்தை யாருக்குக் கொடுப்பது என்கிற கேள்வி வந்தபொழுது, நான் மௌனமாயிருந்தேன். அக்கூட்டத்திலிருந்த பெரும்பாலர் அதை நீ எடுத்துக்கொள்ளுகிறதுதானே என்று சொன்னார்கள். அவர்கள் பக்கமாக உட்கார்ந்திருந்த வரதராஜுலு நாயகர் என்பவர் மாத்திரம், அப்பாத்திரம் தனக்குக் கொடுக்க வேண்டுமென்று கேட்டார். அதன்மீது எனக்காக நான் எழுதிய பாத்திரம் அது என்று வெளிப்படையாய்ச் சொல்ல வெட்கப்பட்டவனாய், அப்பாத்திரம் 17 அல்லது 18 வயதுடைய சிறு பிள்ளையாயிருக்க வேண்டுமே என்று ஆட்சேபித்தேன். அதன்மீது அவர் “எனக்கென்ன வயதாகிவிட்டது என்று நினைக்கிறாய், எனக்கு வயது 28 தானே” என்றார். அந்த ஆட்சேபணை வரையில் அவர் கூறியது நியாயம்தான் என்று, இப்பொழுது அந்த 28க்கு இரட்டிப்பாக 56க்கு மேல் எனக்கு வயதானபிறகுதான் தெரிகிறது. அப்பொழுது தெரியாமற் போய் விட்டது! சுயநன்மையைக் கருதும்பொழுது, ஒருவனுடைய அறிவெல்லாம் அவனைவிட்டு அறவே அகலுகின்ற தென்பதற்கு என்னைவிட வேறு உதாரணம் வேண்டுமோ? அக்காலத்தில் இருபத்தெட்டு வயதுடைய ஒருவர் பதினெட்டு வயதுடைய ஒரு நாடகப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஆட்சேபித்தவன்; என்னுடைய ஐம்பத்தொன்பதாம் வயதில் சுமார் பதினேழு பதினெட்டு வயதுடைய இளம்பிராயம் பொருந்திய நாடகப் பாத்திரங்களையே இன்னும் நடிக்க வேண்டுமென்று, அந்தரங்கமாய் இச்சைப்படுகிறேன்! நாடகமேடைகளின் கெடுதிகளுள் இது ஒரு முக்கியமானதென்பதற்கு ஐயமென்ன? இதன்பொருட்டே நமது பூர்வீகர்கள் நாடக மேடையைப் பெரும்பாலும் வெறுத்தனர் போலும்.
முடிவில் நிர்வாக சபையார் நான் கூறியதை ஒப்புக் கொண்டு எனக்கே அந்த நாடகப் பாத்திரத்தைக் கொடுத்தனர். இதனால் மேற்சொன்ன வரதராஜுலு நாயகருக்கு மிகவும் கோபம் பிறந்தது. பிறகு அவர் சபையைவிட்டுச் சீக்கிரம் நீங்கியதற்கு இது ஒரு முக்கியமான காரணமாயிருந்ததென நம்புகிறேன். பட்சபாதமின்றி இப்பொழுது இவ்விஷயத்தைப் பற்றி யோசிக்குமிடத்து, அப்பாத்திரத்தை என்னைவிட அவர் நன்றாய் நடத்தியிருப்பார் என்று சொல்வதற்குக் கொஞ்ச மேனும் ஏதுவில்லாவிட்டாலும், அம்மாதிரியான ஆட்சேபணை கூறி அவர் மனத்தைப் புண்படுத்தியது தவறென்றே எனக்குத் தோற்றுகிறது. அச்சமயம் அப்படி நான் செய்தது தவறென்று நான் ஒப்புக்கொள்வதைவிட, வேறு அவருக்கு நான் பிராயச்சித்தம் செய்ய அசக்தனாயிருக்கிறேன்.
நாடகப் பாத்திரங்களெல்லாம் பகிர்ந்து கொடுக்கப்பட்ட பிறகு, அவரவர்கள் தங்கள் தங்கள் பாகங்களை எழுதிக் கொண்டு விரைவில் படிக்க ஆரம்பித்தார்கள். ஒரு வாரத்திற் கெல்லாம் ஒத்திகை ஆரம்பித்துவிட்டோம். இதை இவ்விடம் ஏன் எழுதுகிறேன் என்றால், தற்காலத்தில் நாடகங்களெல்லாம் அச்சிடப்பட்டு, ஒவ்வொருவனுக்கும் ஒரு புஸ்தகம் கொடுக்கப்பட்ட போதிலும் நாடக தினம் வரையில் பாடம் படிக்காதவர்கள் வெகு பெயர்கள் இருக்கின்றனர். அக் காலத்திலோ பென்சிலினால் எழுதப்பட்ட ஒரு காபியை வைத்துக்கொண்டு அத்தனை பெயரும் அவரவர் பாகங்களை அவரவர்களாக எழுதிக்கொண்டு, குருட்டுப் பாடம் செய்து ஒரு வாரத்திற்கெல் லாம் ஒத்திகை ஆரம்பித்து விட்டோம் என்பதைக் குறிக்கவே. அக்காலத்தில் எங்களுக்கிருந்த ஊக்கம் தற்காலத்தில் வெகுவாய் இல்லை யென்றே நான் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.
இன்னொரு விஷயம் இங்கு குறிக்க விரும்புகிறேன். அக்காலந் தொடங்கி இந்த நாற்பது வருஷங்களாக எனது நாடங்களை யெல்லாம் பென்சிலைக் கொண்டே எழுதி வருகிறேன். இது நான் கைவிடக் கூடா வழக்கமாகி விட்டது. இதற்கு முக்கியமான காரணம் நான் எழுத உட்காரு முன் எழுத வேண்டிய வசனத்தை மனனம்பண்ணி, சித்தஞ்செய்து கொண்டே, பிறகு உட்கார்ந்து எழுத ஆரம்பிப்பேன். அப்படி மனனஞ்செய்தது எழுதி முடித்து விட்டால், மறுபடி எழுந்து அதற்கு மேல் எழுதவேண்டிய வாசகங்களை மனனம் செய்ய உலாவுவேன். இதனால் எழுத ஆரம்பிக்கும்பொழுது என்கை தடையின்றித் தாராளமாகப் போகும். இதற்குப் பென்சிலினால் எழுதுவதே அநுகுணமாயிருந்தது. அடிக்கடி பேனாவைக் கொண்டு மைக் கூட்டில் தோய்த்து எழுதுவது எனக்குத் தடையாயிருந்தது; அக்காலத்தில் பௌண்டன் பென் என்பது கிடையாது. பிறகு பௌண்டன்பென் சென்னையில் வாடிக்கைக்கு வந்த போதிலும், என் பழைய வழக்கமானது நன்றாய் வேர் ஊன்றிய என் மனத்தை, மாற்ற முடியாமற் போய்விட்டது. இப்பொழுதும் இந்த நாடக மேடை நினைவுகளைப் பென்சிலினாலேயே எழுதுகிறேன். இந்த ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் போர்மன் (Foreman) இப்படி பென்சிலினால் நீங்கள் எழுதுவதைப் படிப்பது கஷ்டமாயிருக்கிறது! கொஞ்சம் இங்கியினால் எழுதி விடுங்கள் என்று வற்புறுத்தியும் அவர் வேண்டுகோளுக்கிசைய அசக்தனாயிருக்கிறேன். “பழக்கம் பொல்லாது பாறை மேற் கோழி சீர்க்கும்” என்னும் பழமொழி என் மனத்திற்கு ஞாபகம் வருகிறது. என் செய்வது? நம்மில் பெரும்பாலர் வேறெதற்கும் அடிமைகளாகா விட்டாலும் இந்தப் பழக்கம் என்பதற்கு எளிதில் அடிமைகளாகி விடுகிறோம். அந்த அடிமைத் தனத்தினின்றும் நம்மை விடுத்துக் கொள்ள அசக்தர்களாகி யிருக்கிறோம்!
மேற்சொன்ன ‘சுந்தரி’ என்னும் நாடகத்திற்கு நான் ஒருமுறை கணக்கிட்டபடி ஐம்பத்திரண்டு ஒத்திகைகள் நடத்தினோம். தற்காலத்தில் ஏதாவது ஒரு நாடகத்தை எடுத்துக் கொண்டு, இரண்டு மூன்று ஒத்திகைகள் நடந்தவுடன் நாடகத்தைப் பகிரங்கமாக நடிக்கலாம் என்று நினைக்கும் எனது சிறு நண்பர்கள் இதைக் கவனிப்பார்களாக. இந்த ஐம்பத்திரண்டு ஒத்திகைகள் பெரும்பாலும் 4 மணி நேரத்திற்குக் குறைந்தனவன்று. சில ஒத்திகைகள் ஆறு அல்லது ஏழு மணி பிடிக்கும். அவைகள் முக்கியமாக ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தியவையாம். நல்ல வெயிற் காலத்தில் சித்திரை வைகாசி மாதங்களில் சுமார் ஒரு மணிக்கு என் வீட்டிலிருந்து என் தகரப்பெட்டி ஒன்றில் நாடகக் காகிதங்களை எடுத்துக் கொண்டு, சபை ஸ்தாபித்திருந்த தம்பு செட்டித் தெரு வீட்டிற்குப் போவேன். மற்ற நடிகர்கள் எல்லாம் சீக்கிரம் வந்து சேர்வார்கள். உடனே ஒத்திகை ஆரம்பிப்போம். ஞாயிற்றுக்கிழமை ஒத்திகைகளுக்கெல்லாம் சற்றேறக்குறைய ஒன்றும் தவறாமல், ம-ள-ள-ஸ்ரீ. வி. திருமலைப் பிள்ளையாகிய எங்கள் கண்டக்டர் வந்து சேர்வார். அவரைப்பற்றி இச்சந்தர்ப்பத்தில் சில விஷயங் களைக் கூற விரும்புகிறேன்.
அவர் ம-ள-ள-ஸ்ரீ, பசவப் பிள்ளையின் குமாரர். அப்பொழுதுதான் லாயர் பரீட்சையில் தேறி, லாயர் ஆனவர். ஆஜானுபாகுவாய், பெரிய காத்திரமுடையவர். அதற்கேற்ற படி உயரமுமுடையவர். இவர் ஜெயராம் நாயகருடைய மைத்துனர். இவர் நாடகங்களில் அக்காலத்தில் மிகவும் ஊக்கமுடையவராயிருந்தார். இவரை எங்கள் தலைவராகக் கொண்டு இவருக்கு என்ன பெயர் கொடுப்பது என்று நாங்கள் யோசித்த பொழுது அக்காலத்தில் மற்ற நாடகக் கம்பெனிகளில் வழங்கிய ‘ஸ்டேஜ் மானேஜர்’ என்னும் பெயர் எங்களுக்கு இஷ்டமில்லாதபடியால் கண்டக்டர் என்கிற பெயர் வைத்தோம். சாதாரணமாக ஆங்கிலேய பாஷையில் கண்டக்டர் என்கிற பதம், நாடக சந்தர்ப்பத்தில், பக்கவாத்தியக்காரர்களை சரியாக வாசிக்கச் செய்யும் தலைமை பெற்றவர்க்கே உபயோகப்படுவது. ஆயினும் பெரிதல்லவென்று அப்பெயரையே திருமலைப் பிள்ளை அவர்களுக்கு நிர்வாக சபையார் கொடுத்தார்கள். இவர் மற்ற நடர்கள் வருவது போல் சுமார் இரண்டு மணிக்கெல்லாம் வந்து விடுவார். இவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு, நான் நாடக புஸ்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, ஒத்திகை ஆரம்பிப்பேன். நாடகப் பாத்திரர்களும் பாத்திரமில்லாத அங்கத்தினரும் அறையில் சுற்றிலும் உட்காருவார்கள். அறையின் மத்தியில் நாங்கள் ஒத்திகை நடத்துவோம். ஒரு காட்சி ஒத்திகையானவுடன், திருமலைப் பிள்ளை அவர்கள், இன்னின்னார் பாடம் சரியாகப் படிக்கவில்லை, நடித்ததில் இன்னின்ன குற்றங்கள் இருந்தன வென்று சொல்லுவார். எடுத்துக்காட்டப்பட்ட குற்றங்கள் குறைவாக இருந்தால், மறு ஒத்திகையில் பார்த்துக்கொள்வோம்; அதிகமாக இருந்தால், அக்காட்சியை முழுவதும், ‘அடியைப் பிடியடா பாரதபட்டா’ என்று முதல் முதல் மறுபடியும் நடத்திக் காட்டுவோம் அவருக்கு.
இப்படி நாங்கள் வெயிலின் கொடுமையும் பாராமல் ஐந்தாறு மணிநேரம் ஒத்திகை நடத்தும்பொழுது, நாங்கள் அருந்த என்ன சிற்றுண்டிகள் எங்களுக்குக் கொடுக்கப்பட்டன வென்பதை எனது நண்பர்கள் அறிய விரும்புவார்களன்றோ ? இதைப்பற்றி சபையின் சட்டங்களில் எழுதப்படாத சட்டம் ஒன்றுண்டு. அதாவது, ஒத்திகை செய்யும் ஒவ்வொரு நாடக பாத்திரமும் தனக்கு வேண்டிய மட்டும் ஒருவிதமான ஆட்சேபனையுமின்றி, எத்தனை லோடா குழாய் ஜலம் வேண்டுமென்றாலும் தாராளமாய்ச் சாப்பிடலாம் என்பதே! தற்காலம் அரைமணி நேரம் ஒரு மணி நேரம் ஒத்திகை செய்துவிட்டு, ஒரு காரம், ஒரு தித்திப்பு, கொஞ்சம் வாதுமைக் கொட்டை, ஒரு டம்ளர் காப்பி வேண்டுமென்று கேட்கும் எனது சிறிய நண்பர்கள் இதைச் சற்றுக் கவனிப்பார்களாக.
மேற்சொன்ன புஷ்பவல்லி, சுந்தரி என்னும் இரண்டு நாடகங்களுக்கும் ஒத்திகை நடத்தி, 1893 ஆம் வருடம் மார்ச்சு மாதம் விக்டோரியா பப்ளிக்ஹாலில் மேற்படி நாடகங்களை நடித்த வரையில், எங்கள் சபைக்கு மாதாந்த வரும்படி சுமார் ரூபாய் 51
யே! அதில் பிடில் வாசிக்கும் மனிதனுக்கு மாதச் சம்பளம் ரூபாய் 5, நாற்காலி மேஜை முதலியவற்றை தூசியில்லாமல் தட்டி விளக்கேற்றிவைத்த வேலைக்காரனுக்கு ரூபாய் 1
சரியாகப் போச்சுது; ஒத்திகை நடக்கும் பொழுது இருட்டிய பின் ஏற்றிய கிரோசின் (kerosine) எண்ணெய் விளக்குக்கு எண்ணெய் சில நாட்களில், காரியதரிசியாகிய முத்துக்குமார சாமி செட்டியார் வீட்டிலிருந்தும், சில நாட்களில் என் வீட்டிலிருந்தும் அனுப்பப்படும். இவ்வாறு மிகுந்த கஷ்டப்பட்டு அந்த ஒன்றரை வருடத்துக்குமேல் நாங்கள் ஒத்திகைகள் நடத்தியபோதிலும், அப்பொழுது என் மனத்தில் இருந்த சந்தோஷம் பிறகு எங்கள் சபை மாதத்திற்கு ஆயிரக்கணக்கான ரூபாய் வரும்படியுடைய தாயிருந்தும், நாடகப் பாத்திரங்களுக்கு வேண்டியனவெல்லாம் வழங்கும் ஸ்திதியிலிருந்தும், இப்பொழுது அதில் நூற்றில் ஒரு பங்கில்லை. இதற்குக் காரணம் எனக்கு வயதானது மாத்திரமாய் இருக்கக் கூடுமா? அப்படித்தான் என்று யாராவது எனது நன்பர்கள் எனக்கு ரூபித்தால் மிகவும் சங்தோஷமுள்ளவனாயிருப்பேன். வயதானபடியால் என் தேக சக்தி குன்றிய போதிலும், என் உற்சாகமானது, என்னையே நான் பட்சபாதமின்றி ஆராயுமிடத்து, கொஞ்மேனும் குன்றவில்லையென்றே நான் கூற வேண்டும். ஆகவே வேறு காரணங்களிருக்க வேண்டுமென்று எனக்குத் தோற்றுகிறது. இனி சுந்தரி நாடகத்திற்குப் பகிரங்க ஒத்திகை நடத்திய கதையை எனது நண்பர்களுக்குக் கூறுகிறேன்.
ஆறாம் அத்தியாயம்
ஒத்திகைகள் எல்லாம் சரியாக நடந்தேறியது என்று நிர்வாக சபையார் தீர்மானித்த பிறகு, பகிரங்கமான ஒத்திகை நடத்த வேண்டுமென்று தீர்மானித்தோம். முன்பு புஷ்பவல்லி நாடகத்திற்கு பகிரங்க ஒத்திகை நடத்திய இடம் போதாதென்று எனது நண்பர்கள் கூறவே, என் தந்தையிடம் இச் சமாச்சாரத்தைக் கூறி, சுமார் 200 பெயர் இருக்கக் கூடிய இடம் ஒன்று வேண்டுமென்று கேட்டேன். அதற்கு அவர் இசைந்து, நாங்கள் அப்பொழுது குடியிருந்த ஆச்சாரப்பன் வீதி 54ஆம் நம்பருடைய வீட்டிற்குப் பக்கத்து வீடாகிய 53 கதவிலக்க முள்ள வீட்டை, என்னை அழைத்துக் கொண்டு போய்க் காண்பித்து அங்கு மாடியிலுள்ள ஹால் போதுமா என்று கேட்க, அதற்கு நான் ஒப்புக்கொண்டேன். அந்த வீடு எனது நெருங்கிய பந்துவாகிய திருமணம் அண்ணாமலை முதலியாருடையது. அவர் என் தந்தையின் வேண்டுகோளுக் கிசைந்து, நாங்கள் அங்கு பகிரங்க ஒத்திகை நடத்த ஏற்றுக் கொண்டார். என் தகப்பனார் இந்த ஒத்திகையைத் தான் கட்டாயமாய்க் காண வேண்டுமென்று வற்புறுத்தினார். முன்பு புஷ்பவல்லி ஒத்திகை நடத்திய பொழுது அவர் வரலாகாதென்று நான் மறுத்திருந்தேன். அதற்குக் காரணம் அவர் வந்தால் நானும் எனது சிறு வயதுடைய நண்பர்களும் வெட்கப்படுவோம் என்பதே. இம்முறை அதெல்லாம் உதவாது என்று அவர் பலவந்தப்படுத்தவே நான் இசைந்தேன். அதன்பேரில் என் தகப்பனார் தானாகக் கடிதங்கள் எழுதி தனது நண்பர்களுக்கெல்லாம் இந்த நாடகத்தின் பகிரங்க ஒத்திகைக்கு வரும்படி டிக்கட்டுகளை அனுப்பினார். அன்றியும் தானாகக் கிட்ட இருந்து நாங்கள் நாடகமாடுவதற்கு ஹாலில், நாடகமேடை சித்தம் செய்து கொடுத்தார். ஒத்திகைக்கு முந்தியதினம், இவ்வாறு எங்களுக்காக மிகுந்த அலைச்சல்படவே வயோதிகரான அவருக்கு (அப்பொழுது அவருக்கு வயது 62) ஜ்வரம் வந்துவிட்டது. அதன் பேரில் இந்த ஒத்திகையும் தான் பார்ப்பதற்கில்லையென்று விசனப்பட, “பெரிதன்று, விக்டோரியா ஹாலில் நாடகம் போடும் பொழுது நீங்கள் பார்க்கலாம்” என்று சொல்லி நான் தேற்றியும், அக்கவலை நீங்கினவர் அன்று. மறுநாள், அதாவது ஒத்திகை தினம் காலை, கொஞ்சம் ஜ்வரம் நீங்கவே, “நான் இரவு வருகிறேன்,” என்று மெல்லக் கூறினார். அதற்கு நான் ஆட்சேபித்து, “இரவில் தூக்கம் இல்லாதபடி விழித்தால் உங்கள் உடம்பிற்கு உதவாது; மறுபடி ஜ்வரம் வந்தாலும் வரும், வேண்டாம்” என்று சொல்லி, ஒருவேளை என்னையறியாதபடி எங்கு வந்து விடுகிறாரோ என்று, அவருக்கு நாங்கள் கொடுத்திருந்த டிக்கட்டை என் பீரோவில் வைத்துப் பூட்டிவிட்டு, சாயங் காலம் ஒத்திகை நடக்கும் வீட்டிற்கு வேஷம் போட்டுக் கொள்ளச் சென்றேன்.
இந்த ஒத்திகைக்கு பெஞ்சுகளாலாகிய மேடை ஒன்று நிர்மாணித்தோம். அன்றியும் இரண்டு மூன்று திரைகளும் கிடைத்தன; மிகவும் பழமையான திரைகள். அதில் காட்டுத்திரை ஒன்று மாத்திரம் எனக்கு மிகவும் நன்றாய் ஞாபகம் இருக்கிறது; அக்காட்டுத் திரையின் முக்கால் பாகத்தில் ஒரு பெரும்புலி எழுதப்பட்டிருந்தது! ஆகவே நாங்கள் காட்டு சீனில் வேட்டையாடியபொழுது இந்தப் பெரும் புலியின் பக்கத்தில் நின்று கொண்டு தான் வேட்டையாடினோம்!
நாடகம் பார்ப்பதற்காக ஸ்திரீகளுக்கும் பிரத்தியேகமாக இடம் ஹாலின் பின்னால் ஏற்பாடு செய்திருந்தோம். அங்கத்தினருடைய பந்துக்களாகிய ஸ்திரீகளுக்குச் சுமார் 50. டிக்கட்டுகள் வரையில் கொடுத்திருந்தோம். ஆயினும் ஸ்திரீகள் கோஷாக்களாக இருக்க வேண்டுமென்று தீர்மானித்து, ஒரு பச்சை வர்ணமுடைய கொசுவலையை எதிரில் கட்டி வைத்தோம்!.
முன்சொன்ன ஜமீன்தாருடைய உடுப்புகளில் சிலவற்றை இப்பொழுதும் உபயோகித்த போதிலும், இந்த ஒத்திகைக் கென்று இரண்டு புதிய உடைகள் தைத்தோம், சாடின் (Satin) பட்டில் தைத்துச் சரிகைக் கோண்டு வைக்கப்பட்டிருந்தது. அதைவிட நூறுமடங்கு விலையுள்ள உடைகளைப் பின் வந்த நாடகங்களில் நான் தரித்திருக்கிறேன்; இருந்தும் முதல் முதல் அந்த உடையைத் தரித்த பொழுது எனக்குண்டான உவகை, பிறகு நூற்றிலொரு பங்குகூடப் பெற்றிலேன்! எந்த அனுபவமும் முதல் முதல் கிடைப்பதற்குச் சமானமாகாது, சந்தோஷத்திலும் சரி-துக்கத்திலும் சரி.
அன்றைத்தினம் ஒத்திகையின் நாடகப் பாத்திரங்களைப் பற்றி எனது நண்பர்கள் கொஞ்சம் அறிய விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். முக்கியமான கதாநாயகன் வேடம் பூண்டது, ரங்கசாமி ஐயங்கார். இவர் என்னைவிடச் சிறு வயதுடையவர். சாரீரம் மிகவும் சுத்தமானது. இவருடைய பாட்டைப் போன்றது ஆண் மக்களுள் பிற்காலம் ஒன்றிரண்டு பெயரிடம்தான் கேட்டிருக்கிறேன். நடிப்பதில், முதலில் சங்கோசம் அதிகமாக உடையவராயினும், நாளடைவில் மிகவும் தேர்ச்சி பெற்றார். அக்காலத்தில் முக்கியமாக நாடகங்களில் கானத்துக்கே அதிக உன்னதப் பதவி கொடுத்திருந்ததால், இவருக்குக் கதாநாயகன் வேஷம் கொடுக்கப்பட்டது. ஆயினும் இவர் ஒத்திகை நடத்துங்கால் ஒரு விஷயத்தில் மிகவும் கஷ்டப்பட்டார். கதாநாயகனான இவர் கதாநாயகி வேடம் பூண்ட ஜெயராம் நாயகரை முத்தமிட வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. அந்தப் பாகம் ஒத்திகை நடத்தும் பொழுதெல்லாம், முகத்தைச் சுளித்துக் கொண்டு மிகவும் சங்கோசப்படுவார், உடம்பெல்லாம் நடுங்கிப்போய்! சரியாக எப்படி முத்தமிடுவது என்பதை நான் அவருக்குப் பன்முறை கற்பிக்க வேண்டியிருந்தது! இவ்விஷயமாகப் பன்முறை அவரை நாங்கள் எல்லாம் ஏளனம் செய்வோம். இன்னொரு விஷயம் இவரைப் பற்றி எனது நண்பர்கள் அறிய வேண்டும். இவர் தகப்பனார் வயதான லௌகீகப் பிராம்மணர். நாடகமாடுவ தென்றால் அவருக்குக் கொஞ்சமேனும் பிடிக்காது; ஆகவே இரண்டு மூன்று வருடங்கள் வரையில் ரங்கசாமி ஐயங்கார் நாடகமாடுவதை அவர் தந்தை அறியாதபடி மறைத்து வைக்க வேண்டியிருந்தது! ஏழு எட்டு மணிக்கெல்லாம் அவர் தந்தை சாப்பிட்டுப் படுத்துக்கொண்ட பின், தனது தாயாருடைய அனுமதி பெற்றுத் தெருக் கதவை மெல்லத் திறந்து கொண்டு நாடகமாட வந்து விடுவார். நாடகம் முடிந்தவுடன் வீட்டிற்குத் திரும்பிப் போகும் பொழுதும் தனது தாயாரிடம் முன்பே சொல்லிவைத்து, மெல்ல தெருக் கதவைத் தட்டி அவர்களைத் திறக்கச் செய்து தந்தை அறியாதபடி வீட்டிற்குள் நுழையந்து சந்தடி செய்யாமல் தன் அறைக்குப் போய் படுத்துக் கொள்வார். அக் காலத்தில் நாடகமாடுவ தென்றால் அவ்வளவு நிகருஷ்டமாக எண்ணப் பட்டது. இப்பொழுதும் அம்மாதிரியான எண்ணம் இந்நாட்டை விட்டு முற்றிலும் அகலவில்லை யென்றே நான் எண்ணுகிறேன்.
நான் கதாநாயகனுடைய நண்பனாகிய சத்யவந்தன் என்பான் வேடம் தரித்தேன். கதாநாயகனுடைய தந்தையாகிய அரசனுடைய வேஷம் கோதண்டபாணி நாயகர் தரித்தார். இவர் ஜெயராம் நாயகருடைய மூத்த தமயன். எங்களுள் எல்லோரைப் பார்க்கிலும் இவர்தான் அக்காலத்தில் வயதில் முதிர்ந்தவர். அச்சமயம் இவருக்கு ஏறக்குறைய நாற்பது வயதிருக்குமென நினைக்கிறேன். அதற்கு முன் இவர் நாடகமேடையே ஏறியவர் அன்று. இருந்தும், நாடகமாட வேண்டுமென்று விருப்பங்கொண்டவராய் ஜெயந்தன் எனும் அரச பாத்திரமாகத் தோன்றினார். இதைத் தவிர இவர் வேறு நாடகங்களில் ஆடியதாக எனக்கு ஞாபகமில்லை இவர் அக்காலம் சென்னை ஹைகோர்ட்டில் ஏதோ வேலை யாயிருந்தார்.
இவருடைய நண்பராகிய நரதாச்சார்லு என்பவர் இவர் மனைவியாகிய ராஜபத்னி வேஷம் தரித்தார். இவர் தெலுங்கு சப்தரத்னாகரம் என்னும் நூல் இயற்றிய சீதாராமாசார்லுவின் புதல்வர். மெல்லிய சாரீரத்துடன் பாடுவார். ஸ்திரீவேஷத்திற்கு லாயக்கானவர்; ஆகியும் உரத்த சப்தத்துடன் பேச முடியாதவர். இவர் சபையில் பிறகு இரண்டொரு வேஷங்கள் தான் தரித்தார். இவர் சுமாராக வீணை வாசிப்பார். சுந்தரி நாடகத்தில் முதற் காட்சியில் இவர் வீணை வாசிக்கும்படியான சந்தர்ப்பத்தை இவருக்காக ஏற்படுத்தினேன்.
முக்கியமான இரண்டு ஸ்திரீ பாத்திரங்களை, ஜெயராம நாயகரும், சுப்பிரமணிய ஐயரும் எடுத்துக் கொண்டனர். என்னுடன் அக்காலத்தில் நடித்தவர்களுள் அநேகர் அல்ப ஆயுசுடையவர்களாய் மறித்தது போல் அல்லாமல், பரமேஸ்வரனுடைய கிருபையினால் இன்னும் இவர்களிரு வரும் உயிருடனிருக்கிறார்கள். இவர்களிருவர்களைப் பற்றிச் சற்று விவரமாய் எழுத வேண்டியிருக்கிறது.
இவ்விருவர்களுள் ஜெயராம் நாயகர், கதாநாயகியாகிய சுந்தரி வேஷம் தரித்தார். நான் முதல் முதல் எழுதிய நாடகமாகிய “புஷ்பவல்லி” என்னும் நாடகத்திலும் புஷ்பவல்லி என்னும் கதாநாயகி வேஷம் பூண்டனர். அன்றியும் 1895ஆம் வருஷம் வரையில் எங்கள் சபையில், அயன் ஸ்திரீபார்ட் என்று சொல்லும்படியான, முக்கிய ஸ்திரீ வேஷம் தரித்தவர் இவரே. எனது மூன்றாவது நாடகமாகிய “லீலாவதி - சுலோசனா அல்லது இரண்டு சகோதரிகள்” என்னும் நாடகத்தில் இவர் லீலாவதியாக நடித்தனர். அந்த நாடகம் இவருக்கென்றே நான் எழுதியது. (இந்தக் கதையை பிறகு சவிஸ்தாரமாகக் கூறலாமென்றிருக்கிறேன்.) இவர், எனது நாடகங்களுக்குள், ‘யயாதி’ என்னும் நாடகத்தில் சர்மிஷ்டையாகவும், ‘சாரங்கதரன்’ என்னும் நாடகத்தில் சித்ராங்கியாகவும் நடித்துள்ளார். இவருக்கு சபையின் முதல் நான்கைந்து வருஷங்கள்வரையில் சபையின் ஹீரோயின் என்று பெயர் - அதாவது சபையின் நாடகங்களில் முக்கிய ஸ்திரீ வேடம் பூணுபவர் என்று பொருள்படும்.
இவர் அக்காலத்தில் மிகவும் ஒல்லியா யிருந்தார். என்னைப் பார்க்கிலும் ஒரு வருடம் வயதில் குறைந்தவராயிருந்த போதிலும் அரும்பைப் போல முகத்தில் மீசையுண்டு. இவருக்கு முக்கியமான கஷ்டமென்ன வென்றால். ஸ்திரீ வேஷம் தரிக்கும் ஒவ்வொரு சமயமும் இதை எடுத்துவிட வேண்டுமென்பதே! முதலில் இதை எடுத்துவிடுவது இவரது தந்தைக்குத் தெரியாமலிருந்தது. பிறகு இவர் தந்தை இதற்கு ஆட்சேபணை செய்ததே இவர் ஸ்திரீ வேஷம் பூணுவதை விட்டதற்கு ஒரு முக்கியமான காரணமாம். குரல் ஸ்திரீயின் குரலைப்போல் மெல்லியதாயிருந்தது. ஆயினும் சங்கீதத்தில் இவர் அவ்வளவாகப் பெயர். எடுக்கவில்லை . இவர் ஸ்திரீ வேஷம் தரிப்பதில் முக்கியமாகப் பெயர் பெற்றது இவரது நடையுடை பாவனைகளின் சிறப்பைக் கொண்டே. கறுப்பு நிறமுடையவராயிருந்த போதிலும் முகத்தில் மிகவும் அங்கலட்சண முடையவராயிருந்தார். ஸ்திரீகள் எப்படிப் பார்க்கின்றனர், எப்படி நடக்கின்றனர், எப்படிப் பேசுகின்றனர், எப்படி உடுக்கின்றனர் என்பதை யெல்லாம் மிகவும் நன்றாய்க் கவனித்து, அப்படியே அரங்கத்தில் நடிக்கும் வல்லமை வாய்ந்தவர். இதனால்தான் இவருக்கு அப்போது முக்கிய ஸ்திரீ வேஷம் கொடுக்கப்பட்டது. எங்கள் சபையில் 1895ஆம் வருஷத்திற்கு மேல்தான் இவர் ஆண் வேஷம் தரிக்க ஆரம்பித்தார். தற்காலம் என்னைப் போல் வயதாகி, உடம்பு கொஞ்சம் பெருத்திருந்த போதிலும், இன்னும் ஸ்திரீவேடம் தரிப்பவர்களுக்கு நடைபாவனைகளில் ஏதாவது சொல்லிக் கொடுக்க வேண்டுமென்றால், ஊக்கத்துடன் சொல்லிக் கொடுப்பார். சுகுணவிலாச சபையின் முதல் அங்கத்தினராகிய இவர், இன்னும் ஜீவந்தராயிருப்பது சபை செய்த புண்ணியமென்றே கருதுகின்றேன்.
அக்காலத்தில் இரண்டாவது ஸ்திரீ வேஷம் தரித்தவர், அ.சுப்பிரமணிய அய்யர் என்பவர். சில விஷயங்களில் ஜெயராம் நாயகருக்கு நேர் விரோதமான குணங்களையுடையவர் இவர். அவர் கருப்பாயிருந்தார்; இவர் மிகவும் சிவப்பாயிருப்பார். அவருக்கு சங்கீதத்தில் அதிகப் பயிற்சி இல்லை ; இவர் இனிய குரலுடன் நன்றாய்ப் பாடுவார். அவர் நடிப்பதில் மிகவும் நிபுணர்; இவர் இவ்விஷயத்தில் நாம் எவ்வளவு சொல்லிக் கொடுக்கிறோமோ அவ்வளவுதான் மேடையில் நடிப்பார். மிகுந்த அடக்கமான சுபாவமுடையவர். பேசுவதும் மெல்லிய குரலுடன் பேசுவார். இவர் புஷ்பவல்லி என்னும் நாடகத்தில் முதலில் புஷ்பவல்லியின் தோழியாகவும், பிறகு மந்திரி குமாரனான புத்திசேனன் மனைவியாகிய பானுமதியாகவும் வேடம் பூண்டனர். ‘சுந்தரி’ என்னும் நாடகத்தில் சத்யவந்தன் மனைவியாகிய சாகரிகை வேடம் பூண்டனர். எனது மூன்றாவது நாடகமாகிய லீலாவதிசுலோசனாவில் இவர்தான் முதல் முதல் சுலோசனையாக நடித்தவர். இவருக்கென்றே இந்த நாடகப் பாத்திரத்தை நான் எழுதினேன் என்று ஒரு விதத்தில் கூற வேண்டும். இவர் இரண்டு முறை அரங்கத்தில் என் மனைவியின் வேடம் தரித்ததனால், எனது நண்பர்கள் இவரை எனது மனைவி என்று ஏளனம் செய்வார்கள். இவர் கடைசியாக ஸ்திரீவேடம் தரித்தது சுகுண விலாச சபை பெங்களூருக்குப் போயிருந்த சமயத்தில் மனோஹரன் என்னும் நாடகத்தில் விஜயாளாக. அதன் பிறகு இவர் உத்யோக விஷயமாக வெளியூருக்கு மாற்றப்பட்டபடியால் சபையில் வேடம் தரிப்பதற்கு அனுகூலப்படாமற்போயிற்று. இவர் அக்காலம் மந்திரி குமாரன் மனைவியாகிய பானுமதியின் வேடத்தில் ஆகிரி ராகத்தில் பாடிய ஒரு பாட்டு இன்னும் எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. கேட்பவர் உள்ளம் உருகும்படியாக அப்பாட்டைப் பாடுவார். அதைக் கேட்பவர்கள் ஏதாவது கூட்டங்களில் சங்கீதம் கேட்க வேண்டுமென்றால் இவரை அப்பாட்டைத்தான் பாடச் சொல்வார்கள். ஆகிரி ராகமானது நடு நிசியல் பாட வேண்டிய ராகம். நாடகம் ஆடும் பொழுது இவர் அப்பாட்டைப் பாடவேண்டிய காலமும் சுமார் பனிரெண்டு மணியாகும். நடு நிசியில் இவர் அப்பாட்டை நிசப்தமாயிருக்கும்பொழுது பாடுவது மிகவும் மன உருக்கமாயிருக்கும்.
இவர் இப்பொழுது வயோதிகராய் கவர்வுன்மென்ட் உத்தியோகத்திலிருந்து பென்ஷன் வாங்கிக் கொண்டு பட்டணம் வந்து சேர்ந்து, தம்புச்செட்டி வீதியில் வசித்துக் கொண்டிருக்கிறார். ஏதோ கிரஹசாரத்தினால் பாரிச வாய்வினால் பீடிக்கப்பட்டு சில வருஷங்களாகப் படுத்த படுக்கையாய் இருக்கிறார். இளமையும் யௌவனமும் நிலையாமைக்கு இவரே எனக்குப் பிரத்தியட்சப் பிரமாணமாயிருக்கிறார். இவரது தேக சௌக்கிய விசாரணை செய்வதற்காக எப்பொழுதாவது நான் போகும் போதெல்லாம், இவர் என்னுடன் நாடகமேடையில் நடித்ததெல்லாம் எனக்கு நினைவு வந்து மிக்க துக்கம் விளைக்கும். இது காரணம் பற்றியே நான் இவரை அடிக்கடி பார்ப்பதற்கில்லாமற் போகிறது. இவர் தற்காலம் பேரன் பேத்தியை எடுத்த “தாத்தா"வாகி விட்டார். இவருடைய குமாரனாகிய துரைசாமி ஐயர், ‘இரண்டு நண்பர்கள்’ என்னும் எனது நாடகமொன்றில், என் காதலியாகிய சத்யவதியாக என்னுடன் சில வருடங்களுக்கு முன் நடித்தார்: அச்சிறுவன் முக ஜாடையும் முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன் சாகரிகையாக என்னுடன் அரங்கத்தில் நடித்த சுப்பிரமணிய ஐயருடைய முக ஜாடையும் ஒன்றாய் இருந்தது! அச்சமயம் சுப்பிரமணியருடன் நான் நடிக்கின்றேனோ என க்ஷண நேரம் பிரமித்தேன்! காலம் ஓடுகின்றது என்பதற்கு இதைவிட வேறு அத்தாட்சி எனக்கு வேண்டியதில்லை.
இனி அந்தப் பகிரங்க ஒத்திகையைப்பற்றி எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில் கூறுகிறேன்.
ஒன்பது மணிக்கு நாடகம் ஆரம்பம் என்று டிக்கட்டுகளில் விளம்பரம் செய்திருந்தோம். எட்டுமணிக்கெல்லாம் ஜனங்கள் வர ஆரம்பித்து விட்டனர். அதற்குள்ளாக என் வேஷத்தை நான் பூண்டு, ஏதோ சில்லரை விஷயங்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று எங்கள் சபை காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியார், நாங்கள் வேஷம் தரித்துக் கொண்டிருந்த அறைக்குள் பெருமூச்சு வாங்க ஓடி வந்து ஒரு நாற்காலியில் விழுந்தார். நான் என்னவென்று கலவரத்துடன் கேட்க அவர், “நான் தப்பு செய்துவிட்டேன். சம்பந்தம்! என்னை மன்னித்துவிடு! யாரோ ஒருவர், ஒரு சால்வையைப் போர்த்துக் கொண்டு வந்தார். அவர் கையில் டிக்கட் இல்லை. டிக்கட்டில்லாமல் ஒருவரையும் உள்ளே விடமாட்டேன் என்று உறுதியாய்க் கூறினேன். அதன்மேல், அவர் என் டிக்கட், என் பிள்ளையிடம் இருக்கிறதெனச் சொன்னார். நான், நீங்கள் யாரென்று கேட்க தன் பெயரைச் சொன்னார். அப்பொழுதுதான் அவர் உன் தகப்பனார் என்று தெரிந்தது. சம்பந்தம்! நான் என்ன செய்வது! ‘என்று வாய்குளறச் சொன்னார். அதன் மீது நான் அவர் செய்தது தவறல்லவென்றும் அதுதான் நியாயமென்றும் சொல்லித் தேற்றி, என் சாவியைக் கொடுத்து என் ஜேபியிலிருந்த டிக்கட்டைக் கொண்டு வரும்படி சொல்ல, “வேண்டாம்! வேண்டாம்! அவர் இன்னாரென்று தெரிந்தவுடன், உள்ளே டிக்கட்டு இல்லாமலே விட்டு விட்டேன்” என்று பதில் உரைத்தார். அப்படிச் செய்ததுதான் தவறு என்று அவரைக் கடிந்து கொண்டேன்.
பிறகு, எட்டரை மணியாகியும் கதாநாயகன் வேஷம் தரிக்க வேண்டிய ரங்கசாமி ஐயங்கார் வந்து சேரவில்லை! நாடகம் ஆரம்பிக்க இன்னும் அரை மணிதான் இருக்கிறதே என்று நாங்ககளெல்லோரும் கலவரப்பட்டுக் கொண்டிருந்தோம். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் கஷ்டத்தினின்றும் கரையேற அன்று முதல் இன்றுவரை, எனக்கு ஒரு மார்க்கம்தான் தெரியும். அதாவது மௌனமாய் தெய்வத்தைக் குறித்துப் பிரார்த்திப்பதே; ஒரு மூலைக்குச் சென்று ஒருவருமறியாதபடி, நான் அவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் இடையிலேயே, ரங்கசாமி ஐயங்கார் வந்து விட்டார் என்கிற கூச்சல் கிளம்பியது. உலகத்தில் தெய்வம் ஒன்று உண்டென்றும் அதற்குப் பிரார்த்தனை செய்வதனால், தமது மனோபீஷ்டம் தவறாக இல்லாவிட்டால் நிறைவேறு மென்றும் மற்றவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ, நான் நம்புகிறேன். இதில் நம்பிக்கையில்லாதவர்களுக்கு இங்கிலாண்டு தேசத்திய மஹாகவி டெனிசன் (Tennyson) என்பவர் “கடவுளை வணங்குவதில், கனவிலுங் கைகூடாவென எண்ணும் அநேக விஷயங்கள் கைகூடுகின்றன” என்று எழுதியிருப்பதைக் கவனப்படுத்துகிறேன்.
அதன்மேல், அவரை ஏன் இவ்வளவு நேரம் சென்று வந்தாய் என்று நான் கடிந்து கொள்ள, தன் தகப்பனாரைத் தூங்கப்படுத்தி விட்டு வரவேண்டியதாயிற்று என்று பதில் உரைத்தார்! பிறகு அவசரமாய் அவருக்கு வேஷமெல்லாம் போட்டு, சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் நாடகத்தை ஆரம்பித்துவிட்டோம். அன்று முதல் இருபத்தைந்து வருஷம் பேரிலில்லா விட்டாலும் வாஸ்தவமாக, சுகுண விலாச சபையின் தமிழ் நாடகங்களுக்கெல்லாம் கண்டக்டராக இருந்து நூற்றுக்கணக்கான நாடகங்களை நடத்தி வந்தேன்; அவைகளிலெல்லாம், ஒன்றிலாவது குறித்த மணி தவறி ஆரம்பித்ததாக ஞாபகமில்லை . இது, பாதி ஈசன் அருளினால் என்றும், பாதி எனது நண்பர்கள் என்னிடங்கொண்ட அன்பினால் என்றும் உறுதியாய் நம்புகிறேன்.
நாடகம் ஒன்பது மணிக்கு ஆரம்பித்து இரண்டு மணி வரையில் நடத்தினோம். ஐந்து மணி நேரம் ஆகியும், எங்களுக்குக் கஷ்டமாகத் தோன்றவில்லை! வந்தவர்களும் ஒருவரும் தங்கள் ஆசனங்களை விட்டு எழுந்திருக்கவில்லை. மொத்தத்தில் நாடகம் நன்றாகவே நடிக்கப்பட்டதென்று நான் நினைக்கிறேன். நாடகம் நடிக்கும் பொழுது என் தகப்பனார் அரங்கத்தின் எதிரில் உட்கார்ந்திருக்கிறார் என நான் அறிந்தும், கடைசிவரையில் நான் அவரைப் பார்த்தவனன்று. அவர் எங்கே எப்படி உட்கார்ந்திருந்தார் என்பதையும் கவனித்தவன் அன்று. இதை நான் இங்கு குறிப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்றுண்டு. அது, மேடையின் மீதேறி நாடகங்களில் நடிக்க விரும்பும் எனது சிறிய நண்பர்களுக்கெல்லாம் மிகவும் உபயோகப்படும் என்று நான் உறுதியாய் நம்புகிறபடியால் அதைப்பற்றி விவரமாய்க் கூற விரும்புகிறேன்.
அன்று முதல் இன்று வரை, நான் கணக்கிட்டபடி சுமார் ஐந்நூற்றுச் சில்லரை நாடகங்களில் நடித்திருக்கிறேன். இவற்றுள் ஒன்றிலாகிலும் அரங்கத்தின் எதிரில் யார் எங்கே இருக்கிறார்கள் என்றுகூடக் கவனித்தவனன்று. அப்படிக் கவனியாததற்கு இரண்டு முக்கியக் காரணங்களிருக்கின்றன; முதலாவது, அப்படிக் கவனிப்பேனாயின், அந்த க்ஷணம், நான் பூண்டிருக்கும் வேஷதாரியாயில்லாமல், வெறும் சம்பந்தம் ஆகி விடுகிறேனல்லவா? ஒருவன் அமலாதித்யனாக அரங்கத்திலிருக்கும்பொழுது, அவனது சொந்த தந்தையோ, தாரமோ, நண்பனோ, அரங்கத்தின் எதிரில் யார் உட்கார்ந்திருக்கிறது என்று கவனிப்பானோ? அவனது எண்ண மெல்லாம் அரங்கத்தின் மீதிருக்கும். அவனது நாடகத் தந்தையோ, சிற்றப்பனோ, காதலியாகிய அபலையோ தாயாராகிய கௌரிமணியோ, நண்பனான ஹரிஹரனோ எங்கிருக்கிறார்கள் என்றல்லவோ கவனிக்க வேண்டும்? மற்றொரு காரணமும் முக்கியமானதே; மேடையில் நடிக்கும் ஒரு நாடக பாத்திரம் அரங்கத்தில் யார் யார் வந்திருக்கிறார்கள் அவர்கள் தன்னைப்பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் தான் நடிப்பது நன்றாயிருக்கிறது என்று நினைக்கிறார்களா, அல்லது நன்றாக இல்லையென்று எண்ணுகிறார்களா என்று கவனிக்கத் தொடங்கினால், உடனே அவனுக்கு, அரங்கப் பீதி அல்லது பயம் உண்டாகும். புதிதாய் அரங்கத்தின்மீது ஏறும் எனது இளமையுடைய நண்பர்கள் அநேகர். “சார்! நான் போனவுடன், என் சிநேகிதன் (அல்லது தகப்பனார், தாயார்) அரங்கத்தின் பேரில் எதிரில் உட்கார்ந்ததைப் பார்த்து விட்டேன். உடனே எனக்குப் பயமாகி விட்டது. கை கால் உதற ஆரம்பித்துவிட்டது. என் பாடத்தை மறந்துவிட்டேன்” என்று எத்தனையோ முறை எனக்குக் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் கூறும் பதில் என்னவென்றால், “உங்களை யார் அவர்களையெல்லாம் பார்க்கச்சொன்னது? அப்படிப் பாராதிருந்தால் இந்தப் பயம் வந்திராதே ‘என்பதுதான். இப்படிக் கூறுவதனால்; நாடகம் பார்க்க வந்திருக்கும் ஜனங்களுக்கு, நடர்கள் தங்கள் பின் பாகத்தைக் காட்டவேண்டும் என்பது என் எண்ணமல்ல. சம்ஸ்கிருத நாடக சாஸ்திரங்களில் அரங்கத்தில் முதுகைக் காட்டக் கூடாதென்று ஒரு நிபந்தனையுண்டு. அது மிகவும் நல்ல நிபந்தனையே. ஜனங்களுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு பேசினால், நீங்கள் பேசுவது அவர்களுக்கு எப்படித் தெளிவாகக் கேட்கும்? ஆகவே நாடகத்தில் தேர்ச்சியடைய வேண்டுமென்று விரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு நான் கூறுவதென்னவென்றால், அரங்கத்தின் மீதிருக்கும் மற்ற நாடகப் பாத்திரங்களைப் பார்த்துப் பேசவேண்டிய சந்தர்ப்பங்கள் தவிர மற்ற சந்தர்ப்பங்களிலெல்லாம், எதிரிலிருக்கும் ஜனங்கள்புறம் திரும்பிப் பேச வேண்டி வரும் சமயங்களிலெல்லாம், அவர்கள் தலையளவுக்கு இரண்டு முழம் உயரமாகப் பார்த்துப் பேசுங்கள் என்பதே. இதனால் உங்கள் வார்த்தையும் அவர்களுக்கு நன்றாய்க் கேட்கும்; உங்களுக்கும் அரங்கப் பீதி உண்டாகாது.
அன்றிரவு நாடகம் முடிந்தவுடன் எனக்கு மிகவும் இளைப்பாயிருந்தபடியால் நேராக என் வீட்டிற்குப் போய்ப் படுத்து விட்டேன். மறுநாள் காலை எழுந்தவுடன் என் பிதாவைக் கண்டேன். அவர் தான் முந்தியநாள் இரவு பார்த்தது மிகவும் நன்றாயிருந்ததெனக் கூறி, பிறகு, “உன் தாயார் இதைப் பார்ப்பதற்கில்லாமற் போயிற்றே” என்று கூறி கொஞ்சம் விசனப்பட்டார். அதற்கு நான், “அவர்கள் நமது கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும், அவர்களிருக்குமிட மிருந்து இவைகளையெல்லாம் பார்த்து சந்தோஷிக்கிறார்களென்றே நான் நம்புகிறேன்” என்று பதில் உரைத்தேன். அந்த எண்ணம் இதுவரையில் எனக்குக் கொஞ்சமேனும் மாறவில்லை. இவ்வெண்ணம் இன்னொரு விதத்தில் எனக்கு மிகவும் உபயோகப்படுகிறது; என் மனத்தில் ஏதாவது தவறான எண்ணங்கள் புகும்பொழுதெல்லாம், அவர்கள் இதை அறிவார்களே என்று அஞ்சினவனாய், என் மனத்தைத் திருப்பிக்கொள்கிறேன்.
என் தகப்பனார் தான் பார்த்த நாடகத்தைப்பற்றி மிகவும் சந்தோஷப்பட்டார் என்பதற்கு முக்கிய நிதர்சனம் என்ன வென்றால், அவர் மறுநாளே எங்கள் சபை அங்கத்தினர்க்கு, மறுஞாயிற்றுக் கிழமை தினம் ஒரு டீ பார்ட்டி (Tea Party) கொடுத்தார் என்பதே. அந்த பார்ட்டிக்கு, அன்றைத் தினம் வந்திருந்த எனது நண்பர்களையும் வரவழைத்தார். இவ்வாறாக சென்னையிலுள்ள தமிழ் அபிமானிகளாகிய பல கனவான்களுக்குச் சபையின் பெருமையைப் பரவச் செய்தார். இதன் மூலமாக சபையின் அங்கத்தினரும் அதிகமாயினர். ஆகவே சுகுண விலாச சபை, சிறு குழவியாயிருந்த பொழுது, அதை அன்புடன் ஆதரித்து வளர்த்தவர்களுக்குள், என் தந்தையை முக்கியமானவர் என்று கூற வேண்டும் என எண்ணுகிறேன்.
மேற்சொன்னபடி இரண்டு நாடகங்களுக்குப் பகிரங்க ஒத்திகை நடத்தி, பார்த்தவர்களுடைய சம்மதத்தைப் பெற்ற நாங்கள், கூடிய சீக்கிரத்தில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் அந்நாடகங்கள் நடத்த வேண்டுமென்று தீர்மானித்தோம்.
அக்காலத்தில் சபையின் அங்கத்தினர் பெரும்பாலும் பள்ளிக்கூடத்தில் வாசிக்கும் சிறுவர்களாயிருந்தபடியால், எங்களது படிப்புக்கு விக்னம் வராதபடி, பரீட்சைக்குப் போகும் ஒவ்வொருவரும் பரீட்சை காலத்துக்கு மூன்று மாதம் முன்பாகசபையின் கூட்டங்களுக்கு வரக்கூடாது என்று ஒரு சட்டம் ஏற்படுத்திக் கொண்டோம் என்று முன்பே தெரிவித்திருக்கிறேன். அந்தச் சட்டத்தின்படி மறுபடி மூன்று மாத காலம் நான் சபைக்குப் போகாதிருந்தேன். இதற்குள்ளாக விக்டோரியா ஹாலில் மேற்சொன்ன இரண்டு நாடகங்களையும் ஆடுவதற்கு ஏற்பாடுகள் செய்தோம்.
அவ்வாறு செய்வதில் எங்களுக்கு ஏற்பட்ட முதல் கஷ்டம் என்னவென்றால், நாடகங்களுக்கு வேண்டிய திரைகள் எல்லாம் இல்லாமையே. இலவசமாகத் திரைகள் வாடகைக்கு இப்பொழுது கிடைப்பது போல் அப்பொழுது கிடையாது. அன்றியும் அப்படிக் கிடைப்பதாயினும் எங்களுக்கு வேண்டிய திரைகள் அகப்படுவது கஷ்டமாயிருந்தது. ஆகவே எப்படியாவது, எங்களுக்கு வேண்டிய திரைகளைப் புதிதாய்ச் செய்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தோம். இதற்குக் கையில் காசில்லை; என்ன செய்வது என்று யோசித்து ஒரு யுக்தி செய்தோம். அச்சமயம் ராமநாதபுரம் சேதுபதி அவர்கள் சென்னைக்கு வந்திருந்தார். அவரை சபைக்கு ஒரு பேட்ரன் (Patron) ஆகக்கோரி, அவர் தயாள குணத்தின் மூலமாக ஏதாவது பொருள் சம்பாதிக்கலாம் என்று தீர்மானித்தோம். பாஸ்கர சேதுபதி அவர்களுடைய தகப்பனார், என் தகப்பனாருக்கு நன்றாய்த் தெரியும் என்று அறிந்த நான், இவ்விஷயத்தைப்பற்றி, என் தந்தையிடம் சாப்பாட்டின் பேரில், மெல்லத் தெரிவித்தேன். அவரும் இதற்கிசைந்தார். சேதுபதி அவர்களுக்கு எழுதி ஒருநாள் நாங்கள் அவரைப் பார்ப்பதற்காக குறித்துக் கொடுத்தார். அன்றைத்தினம், சபையின் நிர்வாக சபையாரை அழைத்துக்கொண்டு போய் சேதுபதியவர்களிடம் என் தகப்பனார் விட்டார். அதன் பேரில் சேதுபதி அவர்களுக்கு ஒரு வந்தனோபசாரப் பத்திரிகையை நான் படித்தேன். அதன் பிறகு கொஞ்சநேரம், அவர் எங்கள் சபையைப்பற்றி விசாரித்தார். அப்பொழுது பேசியதில் எனக்கு ஒன்று தான் நன்றாய் ஞாபகமிருக்கிறது. நீங்கள் எப்பொழுது நாடகங்கள் நடத்தப் போகிறீர்கள். என்று அவர் கேட்டதற்கு, நான் மார்ச்சு மாதம் என்று பதில் உரைக்க அச்சமயம், நானும் ராமநாதபுரம் மார்ச்சாய் (March) விடுவேன் என்று அவர் நகைத்துக்கொண்டே சொன்னார். பிறகு நாங்கள் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு வந்துவிட்டோம். பிறகு சில தினங்கள், பயிரானது மேகத்தை எதிர்பார்ப்பது போல் அவரிடமிருந்து ஏதாவது கிடைக்குமாவென எதிர்பார்த்து வந்தோம். கூடிய சீக்கிரத்திலேயே அச்சீமான் ரூபாய் 300 எங்களுக்குக் கொடையாக அனுப்பினார். பின்வாங்காது கொடுப்பதையே தன் பிருதாகக் கொண்டிருந்த சீமான் எங்களுக்கு அப்பொழுது செய்த உதவி, மிகவும் பாராட்டத் தக்கதாம்; “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது” என்று தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறியதன் உண்மையை அன்றே கண்டேன்.
இந்தத் தொகை எங்களுக்குக் கிடைத்தபொழுது நாங்கள் கொண்ட உவகை கொஞ்சம் அல்ல. உடனே இதைக் கொண்டு ஏழு திரைகள் எழுதி வைத்தோம். அக்காலத்தில் “மதிராஸ் டி-ரமாடிக் சொசைடி” என்று சொல்லப்பட்ட ஆங்கிலேயர்களுடைய நாடக சபையில் சீன்கள் எழுதிக் கொண்டிருந்த, டுவார்ட் என்னும் பரங்கிக்காரனைக் கொண்டு அவைகளை எழுதி வைத்தோம். எங்கள் சபையின் காரியதரிசியின் வீட்டு மேல்மாடியில்தான் அவைகள் எழுதப்பட்டன. இன்னின்ன படுதாக்கள் இருக்க வேண்டுமென்று நாங்களே தீர்மானித்து, டிராப் படுதா, தர்பார் படுதா, அரண்மனை உட்புறப் படுதா, தோட்டப் படுதா, காட்டுப் படுதா, தெருப் படுதா, ஜெயில் படுதா என்று மேற்கண்ட இரண்டு நாடகங்களுக்கும் அதி அவசியமான படுதாக்கள் எழுதி வைத்தோம். அன்றாடம் எவ்வளவு வேலையாகி வருகிறதென்று மிக்க ஆவலுடன் போய்ப் பார்த்து வருவோம். மனிதனுடைய ஞாபக சக்தியென்பது ஒரு விதத்தில் ஆச்சரியகரமானதே! நாற்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட படுதாக்களைப் பற்றி எல்லா விஷயமும் நன்றாய் எனக்கு ஞாபமிருக்கிறது; நான்கு தினத்திற்கு முன் படித்த புஸ்தககத்தின் பெயரும் சில சமயங்களில் இப்பொழுது மறந்துவிடுகிறேன்! எங்கள் டிராப் படுதாவில், கற்றறிந்த வர்களுடைய நாடகசபை என்று காண்பிப்பதற்காக, கலா சங்கத்தின் இருப்பிடமாகிய செனெட் ஹவுஸை (Senate House) எழுதி, தமிழ் நாடகத்தை ஒரு மாதுருவமாக உருவகப்படுத்தி வரைந்து, ‘நற்குணத்தின் பலன் நற்குணமே’ என்று பொருள் படும்படியான ஒரு ஆங்கிலப் பழமொழியை எங்கள் பிருதாக வரைந்துவைத்தோம். இந்தப் படுதா அநேக வருஷம் எங்கள் சபையின் முதல் படுதாவா உபயோகிக்கப்பட்டு, நாளாவர்த்தியில் மிகவும் பழமையடைந்து கிழிந்து போய்விட்டது; மற்றப் படுதாக்களும் சுமார் பத்து அல்லது பன்னிரண்டு வருஷங்கள் உழைத்து ஜீரணமாகிப் போயின.
சேதுபதி அவர்கள் அளித்த முன்னூறு ரூபாயும் இதற்குச் சரியாகப் போகவே, நாடக உடுப்புகளுக்கு என்ன செய்வது என்று ஆலோசிக்க ஆரம்பித்தோம். இதிலும் கருணைக் கடவுள் எங்களுக்கு வழி காண்பித்தார். தஞ்சாவூர் அரண் மனையைச் சார்ந்த, சரபோஜி மகாராஜாவின் வம்சத்திலுதித்த ஒருவர், பிரின்ஸ் பாட்சா ராம் சாயப் என்பவர் சென்னைக்கு வந்தார். வெங்கடகிருஷ்ண நாயுடு என்னும் எங்கள் சபை நிர்வாகக் கூட்டத்தின் அங்கத்தினர் (இவரைப் பற்றி முன்பே எனது நண்பர்களுக்குக் கொஞ்சம் கூறியிருக்கிறேன்) இவருக்கு சிநேகமானார். பாட்சாராம் சாயப் தஞ்சைக்குத் திரும்பிப் போன போது, வெங்கடகிருஷ்ண நாயுடுவையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அந்தச் சமயம் பார்த்து, எங்கள் நிர்வாக சபையார், சபைக்கு ஏதாவது பொருள் உதவி செய்ய வேண்டுமென்று ஒரு நிருபம் அவருக்கு அனுப்பினார்கள். சில தினங்கள் ஒன்றும் பதில் வரவில்லை.
ஒரு நாள் நான் ஏதோ படித்துக்கொண்டிருந்த பொழுது திடீரென்று, எனது நண்பரிடமிருந்து பாட்சாராம் சாயப் ரூபாய் 200 கொடையளித்ததாகக் காகிதம் வந்தது. அதை கண்டவுடன் மிகவும் சந்தோஷப்பட்டவனாய், அன்று சாயங்காலம் எனது மற்ற நண்பர்களைச் சந்தித்தபொழுது, இதைக் குதூகலத்துடன் அறிவித்தேன். அவர்களும் சந்தோஷப்பட்டார்கள். உடனே இந்த ரூபாயைக் கொண்டு எங்களுக்கு வேண்டிய உடுப்புகளைத் தைத்துக்கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தோம். பணத்துடன் நாயுடு தஞ்சாவூரிலிருந்து வந்தவுடன், காலம் போக்காமல் உடனே வேண்டிய வெல்வெட்டுகள் வாங்கி, அக்காலத்தில் நாடகங்களுக்கு உபயோகிக்கப்பட்ட சம்கி (Chamki) உடுப்புகளைத் தைத்தோம். இந்த உடுப்புகளைப் பற்றி எனது நண்பர்கள் கொஞ்சம் அறியவேண்டியது அவசியம். அக்காலத்தில் இன்ன நாடகத்தில் இன்ன வேஷதாரிக்கு, காலக்கிரமப்படி, இப்படிபட்ட உடுப்பு இருக்க வேண்டுமென்று நிர்ணயம் கிடையாது. (இப்பொழுதும் பெரும்பாலும் கிடையாதென்றே சொல்லவேண்டும்!) ராஜா உடுப்பு, மந்திரி உடுப்பு, ராஜகுமாரன் உடுப்பு, மந்திரிகுமாரன் உடுப்பு, கொத்தவால் உடுப்பு என்று இம்மாதிரி தான் தைப்பது வழக்கம்; அந்த வழக்கத்தின்படியே நாங்களும் தைத்தோம். இந்த சம்கி உடுப்புகளெல்லாம் வெங்கிட கிருஷ்ண நாயுடுவின் தகப்பனார் வீட்டில், தறிபோட்டுத் தைக்கப்பட்டன. அந்த நாயுடுவின் தந்தை வயோதிகத்தினால் கண்பார்வை ஏறக்குறைய அறவே அற்றவராயினும் அதை வேலையாட்களுக்குக் காட்டிக் கொடுக்காமல், வாக்கு சாதுர்யத்தினால் அவர்களிடமிருந்து நன்றாய் வேலை வாங்கிவிடுவார்! இந்த உடுப்புகளைப் பற்றி முதல் முதல் ஒரு குட்டிக்கலகம் பிறந்தது எங்கள் சபையில்; ஆண் வேஷதாரிகளுக்கு மாத்திரம் இவைகளையெல்லாம் தைத்துக் கொள்கிறீர்களே, எங்களுக்கு ஒன்றுமில்லையா என்று ஸ்திரீ வேஷதாரிகள் முறையிட்டனர்! அதன் மீது அவர்களுக்காக ரவிக்கை பேட்டுகளும், டோபாக்களும் தயார் செய்தோம். புடவைகள் வாங்க எங்கள் கையில் பணமில்லை. சபை ஆரம்பித்து சுமார் பன்னிரண்டு வருஷங்கள் ஸ்திரி வேஷதாரிகள் அவரவர்கள் வீட்டிலிருந்தே அவர்கள் வீட்டு ஸ்திரீகளினுடைய புடவைகளைக் கொண்டு உபயோகிப்பது வழக்கம்! மேல் வரைந்துள்ளதில் “டோபா” எனும் பதம் சில நண்பர்களுக்கு அர்த்தமாகாதிருக்கலாம். நாடகமாடும் பொழுது வேஷதாரிகள் தலைமயிருக்குப் பதிலாக அணிவதற்கு டோபாவென்று பெயர். ஆண் வேடம் பூணுபவர்கள் தங்கள் தலைமயிரையே சாதாரணமாகக் கட்டிக்கொள்வார்கள். ஸ்திரீ வேஷம் பூண்பவர்களுக்கு பிரத்யேகமாக ஏற்பாடு செய்யவேண்டுமல்லவா? இந்தத் தலைமயிருக்கு டோபா என்று பெயர். அக்காலத்தில் “பாதி டோபா” தான் பெரும்பாலும் நாடக மேடையில் உபயோகிக்கப்பட்டு வந்தது. சில வருடங்களுக்குப் பிறகுதான், இப்பொழுது வழக்கத்திலிருக்கும் முழு டோபாவானது உபயோகிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது.
பிறகு, விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடகங்களை நடத்து முன் சென்னையிலுள்ள பெரிய மனிதர்களைக் கண்டு அவர்களுடைய ஆதரணையைப் பெற வேண்டுமென்று தீர்மானித்தோம். அத் தீர்மானத்தின் பிரகாரம் என் தகப்பனாரிடமிருந்து ஒரு காகிதம் வாங்கிக் கொண்டு ராஜா சர் சவலை ராமசாமி முதலியாரைப் போய்க் கண்டேன்; அக்காலத்தில் சென்னையிலிருந்த ஸ்ரீமான்களில் இவர் ஒரு முக்கியமானவர். மிகுந்த தர்ம சீலர்; சென்னபட்டணத்தில் முதல் முதல் பிரயாணிகள் வந்து தங்குவதற்காக சத்திரம் கட்டி வைத்தவர்; தர்மம் செய்வதில் தனது கூர்மையான புத்தியைக் கொண்டு மிகவும் சாதுர்யமாய்ச் செய்வார். அதற்கு உதாரணமாக மேற்குறித்த சத்திரத்தையே கூறலாம். இரண்டு ரெயில் ஸ்டேஷன்களுக்கும் மத்தியில், பிரயாணிகளுக்கு மிகவும் அனுகூலமாயிருக்கும்படி இடம் சம்பாதித்துக் கட்டிய அச் சத்திரம், இன்னும் தினம் எத்தனை நூற்றுக்கணக்கான ஜனங்களுக்கு சவுகரியத்தைத் தருகிறதென்பது பட்டணவாசிகளாகிய என் நண்பர்களுக்கு எடுத்துரைக்க வேண்டியதில்லை. இவர் பிரசவ ஆஸ்பத்திரிகள், அம்மை குத்துகிற இடங்கள், மாடுகள் குதிரைகள் தண்ணீர் குடிப்பதற்காகத் தண்ணீர்த் தொட்டிகள் முதலிய ஜனங்களுக்குப் பல சௌகர்யத்தை உண்டுபண்ணும்படியான தர்மங்களைச் செய்துள்ளார். அக்காலத்தில் சென்னையில் தர்ம விஷயமாக ஏதாவது கைங்கர்யம் எடுத்துகொன்டால் இவரது பெயர் அதன் ஜாபிதாவில் முதலில் வராமலிராது! என் தகப்பனாருடைய கடிதத்தை இவரிடம் கொடுத்தனுப்ப, உடனே என்னைப் பரிவுடன் வரவழைத்து, தன் பக்கலில் உட்கார வைத்துக் கொண்டு, எங்கள் சபையைப்பற்றிப் பத்து நிமிஷத்தில், தான் அறியவேண்டிய விஷயங்களை யெல்லாம், சில கேள்வி களால் அறிந்து கொண்டார். யூனிவர்சிடி பட்டம் பெறா விட்டாலும், இவ்விஷயத்தில் இவர் புத்தி சாதுர்யம் மிகவும் மெச்சத் தக்கதே. பிறகு என் வேண்டுகோளுக்கிரங்கி எங்கள் சபையின் பிரசிடெண்ட்டாயிருக்க ஒப்புக் கொண்டதுமன்றி, எனக்கு சபை நடத்த வேண்டிய விஷயங்களில் சில புத்திமதிகளையும் கூறினார். அவைகள் அனைத்தையும் இங்கு நான் கூற வேண்டிய அவசியமில்லை . எனது சிறிய நண்பர்களுக்கு மிகவும் உபயோகப்படும் என்று தோன்றும் ஒன்றை மாத்திரம் இங்கெடுத்துக் கூறுகிறேன். இவர் எழும்பூரிலுள்ள இவரது மாளிகைக்குப் போகுமுன், ஆச்சாரப்பன் வீதியில் எங்கள் வீட்டிற்கு நூறு அடிக்குள்ளதாக இருக்கும் ஒரு வீட்டில் வசித்திருந்தார்; எனது தந்தையாரிடம் இவருக்கு அதிக மதிப்புண்டு. அது பற்றி அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருகிற வழக்கமுண்டு. அப்போது நான் முன்கோபமுடையவன் என்று கவனித்திருக்கக் கூடுமென்று நினைக் கிறேன். அது காரணம் பற்றியோ, அல்லது மொத்தத்தில் இப் புத்திமதியை எனக்கும் கூறவேண்டுமென்றோ “அப்பன், ஒன்று முக்கியமாக ஞாபகம் வைத்துக்கொள். கழுதையா யிருந்தாலும் நாம் காலைப் பிடிக்கவேண்டிய சமயம் ஒன்று வந்தாலும் வரும். ஆகவே, ஒருவரையும் பகைத்துக் கொள்ளாதே!” என்றார். எனது பத்தொன்பதாம் ஆண்டிலிருந்தபடியால், எனக்கு அப்பொழுது அப்புத்திமதியின் நுட்பம் தெரியாமற் போயிற்று. பிறகு அதைக் கவனியாது நடந்து பல தடவைகளில் துன்பம் அனுபவித்து, பிறகுதான் அப்புத்திமதியின் பெருமையையும் . உபயோகத்தையும் அறிந்தேன்! இன்னும் அப்புத்திமதி என் மனத்தில் நன்றாய் வேர் ஊன்றவில்லை என்றே நான் எண்ண வேண்டியதாயிருக்கிறது. சில சமயங்களில் அதை மறந்து நடந்து, அதற்காகப் பிறகு பிராயச்சித்தம் செய்கிறேன்! அவர் அன்று எனக்குக் கூறிய இப்புத்தியை, எனது இளைய நண்பர்கள் நன்றாய் ஆராய்ந்தறிந்து, அதன்படி நடந்து வருவார்களாயின் அதனால் பெரும் நன்மையைப் பெறுவார்களென்று உறுதியாய் நம்பி இதை இங்கு வரையலானேன்.
ராஜாசர் சவலை ராமசாமி முதலியார், தான் பிரசிடென்டாக ஒப்புக்கொண்ட பிறகு, ராவ்பஹதூர் ரங்கநாத முதலியாரை வைஸ் பிரசிடென்டாக ஒப்புக்கொள்ளும்படி கேட்கிறது தானே என்று சொன்னார். அதைச் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டு, என் தந்தையிடம் தெரிவித்து, அவருக்கும் ஒரு கடிதம் வாங்கிக்கொண்டு அவரைப் போய்க் கண்டேன். இவர் இன்னாரென்று எனது இளைஞரான நண்பர் அறியாதிருக்கலாம். ஏனெனில் இவர் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னமே காலமாய் விட்டார். அக்காலம் தென் இந்தியாவில் கற்றறிந்தவர்களுக்குள் இவர் முதலாக மதிக்கப்பட்டவர். சென்னை கலாசாலையில் கணிதப் புலவராக நியமிக்கப்பட்ட போதிலும், ஆங்கில பாஷை, தர்க்க சாஸ்திரம், சரித்திரம் முதலிய பல சாஸ்திரங்களிலும் பெரிய நிபுணர். தமிழிலும் நன்றாகக் கற்றுணர்ந்தவர். கச்சிக்கலம்பகம் என்னும் அரிய நூலை இயற்றியுள்ளார். இவருக்கு அக்காலம், பிரின்ஸ் ஆப் கிரேட்யூயேட்ஸ் (Prince of Graduates) என்று பெயர். அபாரமான ஞாபக சக்தியுடையவர். ஏதாவதொன்றை இரண்டு முறை படித்தால் அப்படியே ஒப்புவிக்கும் திறமை வாய்ந்தவரென்று சொல்லுவார்கள். இவர் என்னை என் சிறுவயது முதல் அறிவார். என் தகப்பனார் முதன் முறை என்னை இவர் முன் அழைத்துக்கொண்டு போனபோது, என்னை நீதிமஞ்சரியிலுள்ள ‘கற்கைநன்றே கற்கைநன்றே, பிச்சைபுகினும் கற்கை நன்றே, கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுட் பிறந்த பதராகும்மே’ என்பதை ஒப்பிக்கச்சொன்னார். அப்படியே நான் ஒப்பித்தபொழுது, “தம்பி, இது எப்பொழுதும் ஞாபகம் இருக்கட்டும் என்று சொன்னது, இப்பொழுது என் மனத்தை விட்டகலவில்லை; நேற்றுதான் இவர் அதை எனக்குக்கூறியது போலிருக்கிறது. இவரும், என் தகப்பனாருடைய காதகிதத்தைப் படித்துப் பார்த்து, எங்கள் சபையின் வைஸ் பிரசிடென்டாக ஒப்புக் கொண்டார்.
இதன் பேரில், சபையை ஆதரிக்கத் தக்கவர்கள் என்று எங்களுக்குத் தோன்றிய பெரிய மனிதர்களை எல்லாம் பார்த்து வந்தோம். அவர்களுள் இரண்டு பெயர்களுடன் நடந்த விருத்தாந்தத்தை மாத்திரம் இங்கு எடுத்து எழுதுகிறேன். காரிய தரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியாரும் நானுமாக காலஞ்சென்ற ராமசாமி ராஜு என்பவரைப் பார்க்கப் போனோம். இவர் சீமைக்குப் போய் பாரிஸ்டர் பரீட்சையில் தேறி வந்தவர். சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் வல்லவர். தமிழில் இதற்குச்சில வருஷங்களுக்கு முன்னமே “பிரதாப சந்திர விலாசம்” என்னும் நாடகத்தை எழுதி அச்சிட்டவர். ஆகவே ‘எங்கள் சபையை இவர் ஆதரிக்கத் தக்கவர் என்றெண்ணி ; இவரிடம் சென்றோம். இவரது பங்களாவின் கதவு சாத்தப்பட்டிருந்ததால், அரைமணி சாவகாசம் வெளியில் உட்கார்ந்திருந்தோம். காலை எட்டு மணிக்குமேல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். உடனே நாங்கள் வணங்கி, எங்களை இன்னாரென்றும் இன்ன காரியத்திற்காக வந்திருக்கின்றோம் என்றும் தெரிவித்துக்கொண்டோம். அதன்பேரில் கோர்ட்டில் சாட்சியை கிராஸ் (Cross) கேள்விகள் கேட்பது போல் எங்களைக் கேட்கத் தொடங்கினார். அவற்றிற் கெல்லாம் நான் பதில் கூறிக்கொண்டே வந்தேன். என்ன நாடகங்கள் போடப் போகிறீர்கள் என்று கேட்க, நான் எனது இரண்டு நாடகங்களின் பெயரையும் சொன்னேன். யார் அவைகளை எழுதியது? என்று அவர் கேட்க, நான்தான் எழுதினேன் என்று பதில் உரைத்தேன். உடனே கண்கள் மலர, என்னை விழித்துப் பார்த்தார்! அப்பொழுது எனக்கு வயது 19; உருவத்தில் அவ்வளவு வயதுடையவனாகக்கூட நான் தோற்றவில்லை என்று என் அக்காலத்து நண்பர்கள் பல தடவைகளிற் கூறியதுண்டு. ஆகவே இந்தச் சின்னப் பையனாவது நாடகமெழுதுவதாவது என்று ஆச்சரியப்பட்டார் போலும். பிறகு சுந்தரியென்னும் நாடகத்தின் கதையைக் கேட்க, சுருக்கிச் சொன்னேன். அதனுடன் விடாமல், இந்த நாடகத்தில் பாட்டுகள் உண்டோவென்று கேட்டார். உண்டுடென்று சொல்ல தாயுமான முதலியார் கட்டியிருக்கிறார் என்று கூற, அதில் ஏதாவதொன்றைப் பாடு என்று கேட்டார்! உடனே, என் யௌவனக் கொழுப்பி னாலும், சபையின் காரியத்தை எப்படியாவது ஈடேற்ற வேண்டுமென்னும் ஊக்கத்தினாலும் சுந்தரி நாடகத்தில் சத்தியவந்தன் பாட வேண்டிய பாட்டுகளிலொன்றை, பக்க வாத்தியம் ஒன்றுமின்றிப் பாடினேன்! இவன் என்ன விடாக் கண்டனாயிருக்கிறான் என்ற எண்ணத்தினாலோ, அல்லது தனது கிராஸ் பரிட்சைக்கெல்லாம் சரியாகப் பதில் உரைத்தேன் என்கிற உவகையினாலோ, பிறகு தானும் சபையை ஆதரிப்பவர்களில் ஒருவராக இருக்க ஒப்புக் கொண்டார்.
பிறகு திவான்பஹதூர் பாக்கம் ராஜரத்தின முதலியார் வீட்டிற்குப் போனோம். அப்பொழுது அவர் எங்கள் குடும்பத்திற்குச் சம்பந்தியாகவில்லை. அவர் ஆரம்ப முதல் இம்மாதிரி யான நாடகச் சபைகளினால் ஒன்றும் பிரயோஜனமில்லை என்று கூறி ஆட்சேபிக்க ஆரம்பித்தார். முதலில் சாந்தமாகவே, பெரியவராயிற்றே என்று மிகவும் மரியாதையுடன் எனக்குத் தோன்றிய நியாயங்களை யெல்லாம் எடுத்துக் கூறிப் பார்த்தேன். அதனால் அவர் ஒன்றும் சளையாமற் போகவே, எனக்குக் கோபம் பிறந்து விட்டது. பிறகு ஏட்டிக்குப் போட்டியாய் அவர் கூறுவதற்கெல்லாம் பதில் உரைக்க ஆரம்பித்தேன். என் பக்கத்திலிருந்த முத்துக்குமாரசாமி செட்டியார் மெல்ல சைகை செய்தும், பல தடவைகளில் என் ஆத்திரம் அடங்காது பேச ஆரம்பித்து விட்டேன். கடைசியாக முதலியார் அவர்கள், இம்மாதிரியாக நாடகங்கள் ஆடுவதில் தேசத்திற்கு என்ன பிரயோஜனம் என்று கேட்டார். அதற்கு நான் “அதற்குப் பதில் ஷேக்ஸ்பியர் மகாகவியைக் கேட்டுப் பாருங்கள்” என்று பதில் பகர்ந்தேன். அதெல்லாம் சீமைக்கு; நம்முடைய தேசத்தில் அம்மாதிரி யார் இருக்கிறார்கள்? என்று கேட்க, “இப்பொழுதில்லாவிட்டாலும், இனி ஒரு காலம் அப்படிப்பட்ட நாடக ஆசிரியர் நமது தேசத்திலும் பிறப்பார்” என்று பதில் உரைத்தேன். நான் என்ன கூறியும் அவர் மனம் அப்பொழுது மாறவில்லை . ஒரே பிடிவாதமாய் எங்கள் சபையை ஆதரிப்பவர்களுள் ஒருவராக இசைய மாட்டேன் என்று மறுத்து விட்டார். பிறகு நாங்களிருவரும் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு திரும்பிப் போகும் பொழுது செட்டியார், “என்ன அப்பா சம்பந்தம்! பெரியவராகிய அவரிடம் அப்படிப் பேசலாமா?” என்று என்னை மிகவும் கடிந்து கொண்டார். நான் பேசியதில் என்ன தவறு இருந்தது சொல்லுங்கள், என்று நான் அவரைக் கேட்டபொழுது ஒரு குற்றத்தையும் எடுத்துக் காட்ட அவரால் முடியாமற் போன போதிலும், “நீ பேசிய மாதிரி தப்பிதம்” என்று கூறினார். இப்பொழுது இதைப்பற்றி நான் சாவகாசமாய் யோசித்துப் பார்க்குமிடத்து செட்டியார் கூறியது வாஸ்தவம் என்று எனக்குத் தோன்றுகிறது. அக்காலத்தில் என்னிடமிருந்த பல துர்க்குணங்களில் இது ஒன்றாம். ஏதாவது ஒரு விஷயத்தைப்பற்றி நான் கொண்ட அபிப்பிராயங்கள் மிகவும் சரியானவையாயிருந்த போதிலும், அவற்றை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறும் விஷயத்தில் சாந்தமாய் அவைகளைக் கூறி மற்றவர்களை என் வசம் திருப்பும்படியான சக்தியே என்னிடம் அக்காலம் இல்லை. இது பெரிய தவறு என்பதை அப்பொழுது அறிந்திலன்; பட்ட பின்தான் புத்தி வரும் என்பதற்கிசைய, இதனால் பல துயரங்கள் அனுபவித்த பிறகுதான் இந்தப் புத்தி எனக்கு வந்தது. இதைப்பற்றி என் தந்தையும் பல தடவைகளில் எனக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார். “சம்பந்தம் சொல்லுவது சரிதான், ஆயினும் அதையேன் அவ்வளவு முரட்டுதனமாய்ச் சொல்கிறான்?” என்று எனது தமயனிடம் அவர் ஒரு முறை கூறியது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது.
இதே முதலியார் அவர்கள், அக்காலம் எங்கள் வேண்டு கோளுக்கிசையா விட்டாலும், பிறகு 1895ஆம் வருஷம் நாங்கள் “மனோஹரன்” என்னும் நாடகத்தை முதல் முறை விக்டோரியா ஹாலில் ஆடியபொழுது, அதைப் பார்க்க வந்து, ஆரம்பம் முதல் நாடக முடிவுவரையில் ஏறக்குறைய ஐந்து மணி நேரம் அதைப் பார்த்து, பிறகு மறுநாள் தான் கண்டதை மிகவும் புகழ்ந்து, அந்நாடகத்தைப் பற்றி ஐந்து பக்கங்களுக்குமேல் சிறப்பாக எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அக்கடிதம் இன்னும் என்னிடம் இருக்கிறது. நாடகமே கூடாதென்று பழித்தவர் மனத்தைத் தெய்வா தீனத்தால் அவ்வளவு திருப்பினோமே என்று சந்தோஷப் பட்டு, அக்கடிதத்தை மிகவும் அருமையாகப் பாதுகாத்து வருகிறேன். அதற்கப்புறம் பல தடவைகளில் எனது நாடகங் களைப் பார்த்து முதலியார் அவர்கள் சந்தோஷித்திருக்கிறார். முதலில் இதை வெறுத்ததற்காக இவர் மீது நான் குற்றங் கூறவில்லை. சென்னையில் அநேகம் கற்றறிந்த பெரிய மனிதர்கள் மனமும் இவருடையது போல்தானிருந்தது. சுகுண விலாச சபையின் நாடகங்களைப் பார்ப்பதற்குமுன் நாடகம் என்பதையே வெறுத்திருந்தவர்கள், அதை ஒரு முறை பார்த்தபின் மனம் மாறியிருக்கிறார்கள். இதையே எனது சிறு முயற்சிக்கு ஈசன் அளித்த பெரும் பரிசாக எண்ணுகிறேன்.
பிறகு சென்னை ராஜதானியில் எங்கள் சபையை ஆதரிப் பதற்கிசைந்த பெரிய மனிதர்களின் பெயரை யெல்லாம் அச்சிட்டு ஒரு பிரசுரம் வெளிப்படுத்தினோம். இதற்கு முக்கியக் காரணம் நாடகமாடுவது ஓர் இழிதொழிலாக மற்றவர்கள் எண்ணக்கூடாது என்று வற்புறுத்தும் பொருட்டே.
மேற்கண்ட ஏற்பாடுகளெல்லாம் செய்த பிறகு விக்டோரியா பப்ளிக் ஹாலில் இரண்டு நாடகங்கள் ஆடுவதற்கு வேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்கினோம். முதலில் இரண்டு நாடகங்களுக்காக ஹால் குத்தகைத் தொகையைச் சேகரிக்க வேண்டியது அவசியமாயிற்று. அக்காலத்தில் தினம் ஒன்றுக்கு வாடகை ரூபாய் 50 கொடுக்க வேண்டியதாயிருந்தது. இப்போது ரூபாய் 30க்குக் கிடைப்பது போல் அக்காலம் கிடையாது. எங்கள் சபையிலோ பணம் இல்லை. முன்னிருந்ததைவிட நாளடைவில் சில அங்கத்தினர் அதிகமாய்ச் சேர்ந்த போதிலும், அதற்கேற்றபடி செலவும் அதிகமாக ஆரம் பித்தது. இதன் பொருட்டு, எங்கள் பிரசிடென்டாகிய ராஜாசர் சவலை ராமசாமி முதலியாருக்கு எழுதி, அவரிடமிருந்து ரூபாய் 50 நன்கொடையாகப் பெற்று, அதை முதல் நாடகத்துக்காகக் கட்டி விட்டோம். புதுச்சேரியில் அக்காலத்தில் தனவந்தராயிருந்த கூனிச்சம்பெட் லட்சுமண சாமி செட்டியாருக்கு நான் எழுதி அவரிடமிருந்து ரூபாய் 50 பெற்றுக் கொடுக்க, அதை இரண்டாவது நாடகத்திற்கு வாடகையாகக் கட்டினோம். இதை வாசிக்கும் எனது நண்பர்களிற் சிலருக்கு, ஒரு நாடகம் ஆடுவதென்றால் என்னென்ன கஷ்டங்கள் இருக்கின்றன என்பதே தெரியாதிருக்கலாம் என்றெண்ணி எங்கள் நாடகங்களைப் பற்றிச் சற்று விவரமாய் எழுதுகிறேன்.
ஒரு நாடகமாடுவதென்றால் ஒரு கலியாணம் செய்வதற்குச் சமானமாகும்; முதலில் கலியாணங்களிற் போல் பத்திரிகைகள் அச்சிட்டு அனுப்ப வேண்டும்; பந்தல்காரர் களுக்கு ஏற்பாடு பண்ண வேண்டும்; மேளக்காரனுக்குச் சொல்ல வேண்டும்; சமையல்காரனை அமர்த்த வேண்டும்; புஷ்பக்காரனுக்குத் திட்டம் செய்ய வேண்டும்; புடவைகள் முதலியன சேகரிக்க வேண்டும்; விளக்குகளுக்கு உத்தரவு கொடுக்க வேண்டும்; கலியாணத்திற்கு ஒரு வாத்தியார் வேண்டியிருந்தால், நாடகம் நடத்தவும் ஒரு வாத்தியார் வேண்டியிருக்கின்றது!
சுந்தரி, புஷ்பவல்லி இரண்டு நாடகங்களுக்கும் சுவற்றில் ஒட்டும்படியான நோட்டீசுகள், ஒன்றாய் அச்சடித்தோம். அத்தனை பெரிய சுவர் நோட்டீசுகள் அது வரையில் இந்திய நாடகக் கம்பெனிக்காக ஒருவரும் அச்சிட்டதில்லை. கோவிந்தசாமி ராவ் நாடகக்கம்பெனி, சுப்பராயாசாரி கம்பெனி முதலியவர்களெல்லாம் சிறுசிறு நோட்டீஸ்களாகத்தான் அச்சிடுவார்கள். நாங்கள் பஞ்ச வர்ணத்தில் பெரிய நோட்டீசுகளாக அச்சிட்டு சென்னையில் ஒரு முக்கிய தெரு பாக்கியில்லாமல் ஒட்டி வைத்தோம். சரியாக, முக்கியமான இடங்களெல்லாம் விடாமல் ஒட்டி இருக்கிறார்களாவென்று, இராக்காலங்களில் சில அங்கத்தினரை அனுப்பி, பரிசோதிக்கச் செய்தோம். யார் இவ்வளவு பெரிய நோட்டீசுகள் ஒட்டினது என்று சென்னைவாசிகள் கேட்கும்படி செய்தோம்.
இதன்றி, 25000 கைநோட்டீசுகள் அச்சிட்டு ஒரு பென்ஷன் சிப்பாயைப் பிடித்து அவனுக்கு ஏறு குதிரை ஒன்று வாடகைக்கு ஏற்படுத்தி, அதன் மீது அவனை ஏற்றி, சேணத்தின் இரு புறத்திலும் இரண்டு பைகளில் நோட்டீசு களை நிரப்பி கையில் ஒரு ப்யூகிளை (bugle) கொடுத்து அனுப்பினோம். அவன் சந்துக்கு சந்து நின்று, ப்யூகிளை ஊதி, ஜனங்கள் சேர்ந்தவுடன் தன்னிடமிருக்கும் கைநோட்டீ களை அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டு போனான்! இம்மாதிரியாகப் பட்டணமெல்லாம் எங்கள் ஆட்ட நோட்டீசுகளைப் பரவச் செய்தோம்.
இதுவுமன்றி சென்னையிலுள்ள பெரிய மனிதர்களுக் கெல்லாம், பிரத்யேகமாக அறிக்கைப் பத்திரிகை அச்சிட்டு அனுப்பினோம். அக்காலத்தில் சபைக்கு குமாஸ்தா முதலிய சிப்பந்தியென்பதே கிடையாது; பத்திரிகைகளை யெல்லாம் அடித்து கவர்களுக்குள் போட்டு மேல் விலாசம் எழுதுவது முதலிய வேலைகளை யெல்லாம் நிர்வாக சபையாராகிய நாங்கள் ஐவருமே செய்தோம் - சம்பளமில்லாமல்.
விக்டோரியா பப்ளிக் ஹாலினுடைய இரண்டு கேட்டுகளிலும், சிறு பந்தல்கள் போட்டு கம்பங்களுக்கெல்லாம் தழைகளைக் கட்டி, கொடிகள் நாட்டி அலங்கரித்தோம். ஆட்ட தினம் சாயங்காலம் 4 மணி முதல் 9 மணி வரை வாசிக்கும்படியாக பாண்டுக்காரர்களுக்கு ஏற்பாடு செய்தோம். (சபையானது பிரபலமடைந்த பிறகு இவைகளை யெல்லாம் பெரும்பாலும் நிறுத்திவிட்டோம்.) ஆட்டம் சரியாக 9-மணிக்கு ஆரம்பிக்க வேண்டுமென்று தீர்மானித்து, ஆக்டர்கள் அவரவர்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வருவதென்றால் நேரமாகுமென்றெண்ணி, நாடக தினம் ஆக்டர்களுக்கெல்லாம் ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் சத்திரத்தில், ஒரு பிராம்மணனிடம் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்து சாயங்காலம் 4 மணிக்கெல்லாம் எல்லோருக்கும் சாப்பாட்டை முடித்தோம். உடனே ஆக்டர்களை யெல்லாம் டவுன் ஹாலுக்கு நேராக அழைத்துக் கொண்டு போனேன். போனதும் எல்லா ஆக்டர்களுக்கும் முதலில் ஸ்திரீ வேஷதாரிகளுக்கும், பிறகு ஆண் வேஷதாரிகளுக்குமாக, எல்லோருக்கும் க்ஷவர கல்யாணமாயிற்று! பிறகு முகங்களையெல்லாம் கழுவிக் கொண்டு, ஒவ்வொருவராக அப்பு வென்பவனெதிரில் போய் உட்கார்ந்தோம். இந்த அப்பு என்பவனைப் பற்றி முன்பே கொஞ்சம் எனது நண்பர்களுக்குக் குறித்திருக்கிறேன். இவன் எங்கள் சபை ஆரம்ப முதல், தான் இருந்த நாள்வரை, மனப்பூர்வமாக சபையின் நன்மைக்காக மிகவும் பாடுபட்டு உழைத்த தொழிலாளியானது பற்றி, இவனைக் குறித்து எனது நண்பர்களுக்குச் சற்று விவரமாய்க் கூற விரும்புகிறேன். ஆக்டர்களுக்கு வர்ணம் தீட்டுவதில் காலஞ்சென்ற சுப்பராயாச்சாரியிடம் தேர்ந்த மனிதன் இவன். நாடக தினம் காலையில், ஒரு கட்டை வண்டி பேசி, எங்கள் திரைகள், உடுப்புகள் முதலியவை களையெல்லாம், அதன் மீது ஏற்றிக்கொண்டு விக்டோரியா ஹாலுக்குப் போவான். அவைகளை இரண்டு ஆட்களைக் கொண்டு நாடகமாடும் மேல்மாடிக்குக் கொண்டு போவதன் முன் நான் அங்கு போய்ச் சேர்வேன். பிறகு அவனை அழைத்து இன்னின்ன திரை இன்னின்ன இடத்தில் கட்ட வேண்டும் என்று குறிப்பிடுவேன். நான் சொன்னபடி கொஞ்சமேனும் தவறில்லாமல் பன்னிரண்டு மணிக்குள்ளாகக் கட்டி முடிப்பான். (தற்காலம் இதே வேலையை முடிக்க, 5 ஆட்கள் தேவையாயிருக்கிறது.)
பிறகு வீட்டிற்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து எங்கள் உடுப்புகளை யெல்லாம் கிரமமாக எடுத்து வைத்து, முகத்திற்கு வேண்டிய வர்ணங்களை யெல்லாம் சித்தம் செய்வான். அக்காலத்தில் இப்பொழுது இருக்கும் கிரீஸ் பெயின்ட் (Grease Paint) முதலிய சவுகர்யங்களே கிடையாது. அரிதாரம், செந்தூரம், கரிப்பொடி முதலியனதான் உபயோகிக்கப் பட்டன. அரிதாரம் முகத்தைக் கெடுக்குமென்று, முதலில் விளக்கெண்ணெயைத் தொட்டு நன்றாய்ப் பூசி விடுவான். பிறகு அரிதாரத்தை வஸ்திரகாயம் செய்து ஒரு துணியில் கட்டி, மெல்ல அதை முகத்தில் சமமாகத் தட்டி கையினால் ஒழுங்காகத் தேய்த்து விடுவான். பிறகு செந்தூரத்தைக் குழைத்து, கன்னங்களுக்கும், உதடுகளுக்கும் தீட்டி விடுவான். புருவத்திற்கு, கரிப்பொடியைக் குழைத்து ஈர்க்கினால் கோடுகள் கிழிப்பான். எல்லாம் முடிந்ததும் அபிரேக்கை வஸ்திரகாயம் செய்து, ஒரு முடிச்சாகக் கட்டி அதனால் முகம் முழுவதும் தட்டிவிடுவான்! இதுதான் அக்காலத்தில் வேஷம் தீட்டும் விதம். இப்பொழுது எல்லாம் மாறி விட்டபடியால், எனது நண்பர்கள் இப் பூர்வீக வழக்கம் அறிந்திருப்பது நலமென்றெண்ணி, இதை விரிவாகவுரைத்தேன்.
மேலே விவரித்தபடி ‘சுந்தரி’ நாடகத்திலுள்ள எல்லா ஆக்டர்களுக்கும் முகத்தில் வர்ணம் பூசியபின், அப்பு ஒருவனாக, பெண் வேடம் பூண்டவர்களுக்கெல்லாம் தலையில் டோபா கட்டி தலைவாரிப் பின்னல் போட்டான்; ஆண் வேடம் பூண்டவர்களுள் வேண்டியவர்களுக்குத் தலைமயிரைச் சுருட்டி விட்டான். இந்த வேலையைத் தற்காலத்தில் ஒரு நாடகத்தில் நான்கு கிரீன் ரூம் டைரக்டர்களும், ஒன்றிரண்டு உதவி செய்பவர்களுமாகச் செய்கிறார்கள். அக்காலத்தில் அவன் ஒருவனே செய்து முடிப்பான். தற்காலத்திலுள்ள விமரிசையும் ஒழுங்குமில்லா விட்டாலும் அவன் ஒருவனாக அத்தனைத் துரிதமாகச் செய்து முடித்தது மிகவும் மெச்சத்தக்கதே. ஸ்திரீ வேஷதாரிகளெல்லாம் நான் முன்பு குறித்தபடி, அவரவர்கள் வீட்டிலிருந்து புடவைகள் கொண்டு வந்து கட்டிக் கொண்டார்கள். சற்றேறக்குறைய எட்டு மணிக்கெல்லாம் எல்லா ஆக்டர்களும் தயாராகி விட்டோம். உடனே எங்கள் கண்டக்டராயிருந்த திருமலைப் பிள்ளை வந்து எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று விசாரித்து விட்டு என் கையிலிருந்து சீனிக் அரேன்ஜ்மென்ட்ஸ் காகிதம்அதாவது இன்னின்ன காட்சியில் இன்னின்ன படுதா விடவேண்டும், மேடையின் பேரில் இன்னின்ன நாற்காலிகள், படுக்கைகள் முதலியன வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட காகிதத்தை வாங்கிக்கொண்டார். இவர் எங்கள் ஒத்திகைதோறும் வந்திருந்து எங்களுக்குச் சொல்லிக்கொடுத்ததன்றி நாடகத் தினங்களில் செய்த உதவியைப்பற்றி எனது சிறிய நண்பர் அறிய வேண்டியது அதி அவசியம். நாடக தினத்திற்கு இரண்டு மூன்று நாள் முன்பே மேற்சொன்ன ஜாபிதாவை நான் தயார் செய்துவிடுவேன். நாடக தினம் பகல் வந்து, ஒவ்வொரு காட்சிக்கும் படுதா முதலியன விட்டு, வைக்க வேண்டிய சாமான்களை வைக்க வேண்டிய இடங்களில் வைத்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வார். ஏதாவது ஒன்று குறைவாயிருந்தாலும் விடமாட்டார்; இராத்திரிக்கு வைத்துக் கொள்ளுவோம் என்று யாராவது சொன்னால், ஒரே பிடிவாதமாக அது உதவாது என்று கூறி அதைக் கொண்டுவரச் சொல்லி வைத்துப் பார்த்த பிறகுதான் திருப்தி அடைவார். சுருக்கிச் சொல்லுமிடத்து நாடகத்தில் வசனத்திற்கும் பாட்டிற்கும் ஒத்திகை போட்டுப் பார்ப்பது போல, காட்சிகளுக்கும் ஒத்திகை போட்டுப் பார்ப்பார். அவர் கற்பித்த இந்த வழக்கத்தைப் பிற்காலம் எனது நண்பனாகிய ரங்கவடிவேலு முதலியார் அனுசரித்து வந்தார். எனது தௌர்பாக்கியத்தால் சில வருஷங்களுக்கு முன் நான் அவரை இழந்த பிறகு புதிய நாடகங்கள் ஏதாவது போடும்போதெல்லாம் நானும் அனுசரித்து வருகிறேன்.
பிறகு நாடகம் நடக்கும்பொழுது ஒரு பக்கமாய் நின்று ஒவ்வொரு காட்சி ஆனவுடன் பிறகு வரவேண்டிய காட்சிக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்துவருவார். தன்மேற்சட்டையை கழற்றி விட்டு, ஷர்ட்டின் கைளைத் திருப்பிவிட்டு, வேலைக்காரர்களுடன் வேலைக்காரனாய், பூந் தொட்டிகளை எடுத்து வைப்பது முதலிய வேலைகளையும் தளராமல் செய்துவருவார். மேலே திரைகளாவது திரைக் கயிறுகளாவது ஏதாவது சிக்கி கொண்டால், உடனே, ஏணியின்மீது ஏறி பரணுக்குப்போய் அதைச் சரிப்படுத்துவார். தற்காலத்தில் கண்டக்டர் என்று பெயர் வைத்துக் கொண்டு, நாடகம் நடிக்குங்கால் சாய்வு நாற்காலிகளில் உட்கார்ந்துகொண்டு, பேசிக் கொண்டிருக்கும் சிலரை நான் பார்த்திருக்கிறேன்; அப்படிப் பட்டவர்களுக்கு, கண்டக்டர்கள் செய்ய வேண்டிய வேலைக்கு உதாரணமாக, திருமலைப்பிள்ளை அவர்களையே கூறுவேன். மேற்கூறியவை அன்றி நாடகம் நடக்கும் பொழுது அப்போதைக்கப்போது ஆக்டர்களை உற்சாகப் படுத்திக் கொண்டே வருவார்.
திருமலைப் பிள்ளை , எல்லாம் சரியாக இருக்கிறதா வென்று பார்த்துவிட்டு மேடைக்குப்போனவுடன், எங்களுக்குப் பாட்டு கற்பித்த வயோதிகரான தாயுமான முதலியார் மெல்லப் படியேறி மெத்தைக்கு வந்து எங்களுக்கெல்லாம் பிள்ளையார் கோயில் விபூதி கொடுத்தார். அதை நாங்களெல்லாம் சந்தோஷமாய் வாங்கி அணிந்துகொண்டு, சரியாக எட்டேமுக்கால் மணிக்கு, அதாவது நாடக ஆரம்பத்திற்குக் குறிக்கப்பட்ட மணிக்கு 15 நிமிஷம் முன்னதாகவே, தாயுமான முதலியார் எங்களுக்கு எழுதிக்கொடுத்த வினாயகர் துதி, சரஸ்வதி துதி பாட்டுகளை எல்லா ஆக்டர்களுமாகப் பாடினோம். பிறகு சரியாக ஒன்பது மணிக்கு நாடகம் ஆரம்பித்தோம்.
சரியாக ஒன்பது மணிக்கு ஆரம்பித்து நாடகம் முடிவுபெற 2 மணியாயிற்று. அக்காலத்தில் இரவு இரண்டு மணிக்கெல்லாம் நாடகம் முடிய வேண்டுமென்று போலீஸ் நிர்ப்பந்தம் கிடையாது; அன்றியும் அக்காலத்தில் சாயங்கால் நாடகங் களின் அனுகூலத்தை ஜனங்கள் அறிந்திலர். ஆகவே வந்திருந்த ஜனங்களெல்லாம் 5% மணிசாவகாசம் எழுந்திருந்து போகாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். நாடகத்தைப்பற்றி நிஷ்பட்சபாதமாய்க் கூறுமிடத்து அவ்வளவு நன்றாய் ஜனங்களை ரமிக்கச் செய்யவில்லை என்றே நான் எண்ணுகிறேன். நாடகக் கதாநாயகன் வேஷம் தரித்த ரங்கசாமி ஐயங்கார் பாடல்கள் நன்றாய் இருந்ததெனக் கூறினர்; ஆயினும் அவர் நடித்தது அவ்வளவு உசிதமாயில்லை யென்றே பெரும்பாலும் கூறினார்கள். நாடகக் கதாநாயகி யாகிய ஜெயராம் நாயக்கரைப்பற்றி இதற்கு முற்றிலும் மாறுபாடாக எண்ணப்பட்டது; அதாவது நடித்தது நன்றாயிருந்ததென்றும் பாட்டு நன்றாயில்லை யென்றும்; என்னுடன் நடித்த சுப்ரமணிய ஐயரைப் பற்றிப் பார்க்க வந்தவர்கள் ஸ்திரீ வேஷம் நன்றாயிருந்தது, பாட்டு சுமார், நடித்தது போதாது என்று கூறினார்கள். விதூஷகன் வேஷம் தரித்த துரைசாமி ஐயங்காரைப் பற்றி அப்பாத்திரத்திற்கு ஏற்றபடி நன்றாயிருந்ததென்றே கூறினார்கள். மற்ற நடர்களைப்பற்றி ஒன்றும் விசேஷமாகக் கூறவில்லை ஆயினும், அன்றைத்தின நாடகத்தில் ஜனங்களின் மனத்தையெல்லாம் பூர்ணமாய் சந்தோஷிக்கச் செய்து அவர்களது கரகோஷத்தைப் பெற்றவர், ஒரே காட்சியில் குறத்தியாக வந்த முனுசாமி ஐயர் என்பவரே! இதை நாடக மேடையில் பிரசித்தி பெற விரும்பும் எனது சிறிய நண்பர்கள் நன்றாய்க் கவனிப்பார்களாக. சம்கி உடுப்புகளைத் தரித்துக் கொண்டு ராஜாவாகவும் ராஜகுமாரனாகவும் வந்த வேஷதாரி களை விட, விலையுயர்ந்த சரிகைப் புடவைகள் கட்டிக் கொண்டு கதாநாயகியாகவும் ராஜகுமாரியாகவும் வந்தவர்களைவிட, கிழிந்த கறுப்புப் புடவைக் கட்டிக் கொண்டு, முகத்தில் கறுப்பாகத் தோற்றக் கரியைப் பூசிக்கொண்டு, ஆபரணங்களுக்குப் பதிலாக, வெண்மணி கருமணிகளைக் கழுத்தில் கட்டிக்கொண்டு, அலங்கோலமாய் வந்த இந்தக் குறத்தி வேஷதாரியே, நாடகத்தைப் பார்க்க வந்தவர்களுடைய மனத்தைத் திருப்தி செய்தனர்! காரணம், அரங்கத்தில் வேஷம் தரித்து நடிக்கும் பொழுது மேற்கொண்ட நாடகப் பாத்திரத்தின் குணத்திற்குப் பொருத்தமான வேஷம் தரித்து நடிப்பதே முக்கியம் என்பதாம். என்னைப்பற்றி, எனக்குப் பாடல் நன்றாய் பாடத் தெரியவில்லை என்று உண்மையை எடுத்துரைத்தனர்; பாட்டே பாடத் தெரியாது என்று கூறியிருப்பார்களாயின் அது முற்றிலும் உண்மையாயிருக்கும். நான் நடித்ததைப் பற்றி மறுநாள் ஒரு செட்டியார் எனது நண்பராகிய சுப்பிரமணிய ஐயரிடம் கூறியதே சரியெனத் தோற்றுகிறது. அது, “நீ மொண மொண வென்று ஒருவருக்கும் கேட்காதபடி பேசுவதற்கு, வாயாடி அகமுடையாளைப் பிடித்ததுதான் சரி” என்று செட்டியார் தன்னிடம் சொன்னார் என்பதேயாம். அவர் என்னை வாயாடி என்று அழைத்ததற்கு நியாயமுண்டு; ஒரு காட்சியில், தனிமொழியாக நான்கு பக்கங்கள் வசனம் பேசினேன்! “என்னடா இவன் வள வளவென்று சும்மா பேசிக் கொண்டே போகிறான்” என்றொருவர் சொன்னார். ‘சாலிலோக்வி’ (soliloquy) என்னும் தனி மொழியானது எவ்வளவு நல்லதாயிருந்த போதிலும் நாடக மேடையில் அதிக நீளமுள்ளதாயிருந்தால் சோபிக்காது என்பதை, சில வருஷங்களுக்குப் பின்தான் தெரிந்து கொண்டேன். பிறகுதான் தனி மொழிகளைக் குறுக்கிச் சொல்லும் சூட்சுமம் அறிந்து கொண்டேன்.
சுப்பிரமணிய ஐயர் வசனமானது ஜனங்களுக்கு நன்றாய்க் கேட்கவில்லையென்று முன்பே குறிப்பித்தேன். இக்குறை இவரைப்பற்றி மாத்திரமன்று, மஹிஷத்தினுடைய சாரீரத்தைப் பெற்ற என்னைப் போன்ற இரண்டு மூன்று நாடகப் பாத்திரங்கள் தவிர மற்றவர்கள் பேசிய எல்லாம் முற்றிலும் சரியாகக் கேட்கவில்லை என்று ஏறக்குறைய எல்லோரும் கூறினார்கள். இது மிகவும் வாஸ்தவமான குறை என்று ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். சாதாரணமாக மேடை மீதேறும் நடர்களில் பெரும்பாலர், தாங்கள் பேசும் வசனம், ஹாலில் வந்திருக்கும் எல்லோருக்கும் கேட்கிறதா என்று கவனிக்கிறதில்லை . இது பெரும் தவறாகும். ஒரு நடன் எவ்வளவு நன்றாய் நடித்த போதிலும், அவன் பேசுவது நன்றாய்க் கேட்காவிட்டால், அதில் என்ன பிரயோசனம்? அதைவிட ஊமையைப் போல் அபிநயம் பிடிக்கலாம். இக்குறையை எனது நண்பர்கள் நன்றாய்க் கவனித்து அகற்றுவார்களாக. முதலில் தங்களாலியன்ற அளவு உரக்கப்பேசக் கற்றுக்கொள்ளவேண்டும். இக்குணம் அநேக விஷயங்களில் அவர்களுக்குப் பிரயோசனத்தைத் தரும். பிறகு சபைகளில் பேசும்பொழுதும், மிகவும் உபயோகமாகும். எப்பொழுதும், உரக்கப் பேசக் கற்றுக்கொண்டு அப்யாசப்படுத்தினால், நமது சுவாசாசயங்கள் (Lungs) மிகவும் பலப்படும். சிறு வயது முதல் நான் உரக்கப்படிக்கவும் பேசவும் அப்யாசஞ் செய்தபடியால், எனக்கு இப்பொழுது 59 வயதாகியும் நான் பேசுவது கேட்கவில்லை என்கிற ஆட்சேபணை இன்றளவும், எந்த நாடக மேடையிலும் கிடையாது.
மேற்கண்ட குறையை நான் எடுத்துக் கூறிய போதிலும் நாங்கள் நாடகமாடிய விக்டோரியா பப்ளிக் ஹாலிலுள்ள குறையையும் எடுத்துக் கூறவேண்டியவனாயிருக்கிறேன். இந்த ஹாலானது, நாடகங்கள் ஆடுவதற்கேற்றபடியிருக்க வேண்டுமென்று கட்டப்பட்டதன்று. சாதாரண ஜனக் கூட்டங்களுக்காக நிர்மாணிக்கப்பட்டது. இந்த ஹாலில் பேசினால் கேட்கும்படியான சக்தி குறைந்தபடி யென்று எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். நான் இந்த 40 வருடங்களாகத் தென் இந்தியாவிலுள்ள அநேக நாடக மேடைகளிலிருந்து நடித்திருக்கிறேன். அவைகள் எல்லா வற்றைப் பார்க்கிலும் பேசுவதைக் கேட்கும் திறத்தில், விக்டோரியா பப்ளிக் ஹாலே மிகவும் கீழ்ப்பட்டதென்பது, என்னுடைய சொந்த அனுபோகம். இந்த விக்டோரியா பப்ளிக் ஹாலில் முதல் முதல் நாடகமேடை போட்டவர்கள் சென்னை டிரமாடிக் சொசைடியாரே. அவர்களும் ஒன்றிரண்டு வருஷங் கள் பார்த்து இக் குறையை நிவர்த்திக்க முடியாதவர்களாய், இதை விட்டு மியூசியம் (Museum) தியேடருக்குப் போய்விட்டார்கள். சுகுண விலாச சபையாரும் தங்களாலி யன்றளவு இக்குறையைத் தீர்க்கப் பிரயத்தனப்பட்டார்கள். ஹாலுக்கு மேலே கம்பிகள் கட்டினால் அவைகளின் மூலமாகப் பேசுவது நன்றாய்க் கேட்கும் என்று சிலர் சொல்ல அதையும் செய்து பார்த்தோம். அரங்கத்தின்மீது உயரத்தில் ஜமக்காளத்தைப் பரப்பினால் இக்குறை நீங்கும் என்று சிலர் சொல்ல, அதையும் பார்த்தோம். ஒன்றிலும் பயன்படவில்லை. கடைசியாக எனது தீர்மானம் என்ன வென்றால், இந்த ஹாலில் நடிக்கும்பொழுது சுயமாக பலத்த சாரீரம் இல்லாதவர்கள் பேசும் பொழுதெல்லாம், கூடிய வரையில் அரங்கத்தின் முன்பாகத்தில் வந்து நின்று பேசவேண்டு மென்பதே.
இந்த எங்கள் முதல் நாடகத்தில் நடந்த ஒரு ஹாஸ்யமால் விஷயம் எனக்கு ஞாபகமிருக்கிறது. இரண்டாவது காட்சியில் ராஜகுமாரனும், மந்திரி குமாரனான நானும் காட்டில் வேட்டையாடும் பொழுது ஒரு பன்றி, மேடையின் மீது காட்டில் ஓடுவது போல் ஓடவேண்டியிருக்கிறது. அதற்காக யுக்தி செய்து, அட்டையில் பன்றியைப்போல் வெட்டி அதற்குத்தக்கபடி வர்ணம் பூசிக்கயிற்றினால் ஒரு பக்கமிருந்து மற்றொரு பக்கம் ஓடுவது போல் செய்து வைத்தோம். மத்தியானம் அது சரியாக ஓடுகிறதாவென்று ஒத்திகை செய்து பார்த்தோம். சரியாக இருந்தது. இராத்திரி நாடகம் நடக்கும் பொழுது சரியாகவே வேண்டியபடி ஒரு பக்கமிருந்து மற்றொரு பக்கம் ஓடியது. பிறகு நாங்களிருவரும் மேடையின் மீதிருந்து வேறு விஷயம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது இந்தப் பன்றியானது மேடையின் பேரில் பின்பக்கம் வர ஆரம்பித்தது! அதற்குக் காரணம் என்னவென்று பிறகு விசாரித்த பொழுது, யாரோ தெரியாமல் அதைக் கட்டியிருந்த கயிற்றைப் பின் புறமாக இழுத்துவிட்டதாகத் தெரிய வந்தது. அது அப்பன்றியின் தவறல்ல. ஆயினும் அசந்தர்ப்பமாய் அது அங்கு வருவதை - அதுவும் பின்புறமாக நடந்து வருவதைக் கண்டவுடன் எனக்கு மிகவும் கோபம் வந்தது. நான் வேறு ஒன்றும் செய்வதற்கில்லாமல் என் கையிலிருந்த வில்லால் அதை அடித்து மேடையினின்றும் அகற்றினேன்! இரண்டு மூன்று தினங்கள் கழித்து, எனது நண்பரும் என்னுடன் துரைத்தனக் கலாசாலையில் நான்கு வருடங்கள் ஒன்றாய்ப் படித்தவருமாகிய காலஞ்சென்ற ராமராய நிம்கார் என்பவர் (பிறகு அவர் மந்திரியாகி, பானகல் ராஜா என்கிற பட்டப்பெயர் பெற்றார்), எங்கள் முதல் நாடகத்தைக் குறித்து என்னுடன் பேசியபொழுது, “நீ ஆக்டு செய்தது எல்லாம் நன்றாகத் தானிருந்தது. ஆயினும் பன்றி வேட்டையில், பன்றியை ஈட்டியால் குத்த வேண்டியது நம்முடைய வேட்டை சாஸ்திரமேயொழிய, வில்லால் அதை அடிக்கக் கூடாது” என்று கூறினார். பிறகு நான் நடந்த வாஸ்தவத்தைக் கூற, இருவருமாகப் பெருஞ்சிரிப்புச் சிரித்தோம். இதை நான் தெரிவியாதிருந்தால், “கருடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு கருடி” என்பது உண்மையாயிருக்கும்.
மேற்சொன்னபடி சனிக்கிழமை இரவு சுந்தரி நாடகம் முடிந்தவுடன் ஆக்டர்களெல்லாம் வேஷங்களைக் கலைத்து விட்டு வீட்டிற்குப் போய் விட்டோம். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் எல்லோரும் சந்தித்துக் கொஞ்ச நேரம் முந்திய நாள் இரவு நாடகத்தைப் பற்றிப் பேசிவிட்டு, உடனே மறு நாடகமாகிய புஷ்பவல்லியின் ஒத்திகையை ஆரம்பித்தோம். முதல் நாடகத்தில் எங்களுக்குக்குறையாகத் தோன்றியவைகளை யெல்லாம் இந்த நாடகத்தில் சீர்திருத்த முயன்றோம்.
மறு சனிக்கிழமை இரவு சரியாக ஒன்பது மணிக்கு ‘புஷ்பவல்லி’ என்னும் நாடகத்தை ஆரம்பித்தோம். இந்த நாடகக் கதாநாயகனான ராஜகுமாரனாக நடித்தவர் சி.பி. சீதாராம நாயுடு என்பவர். அவர் அப்பொழுது வைத்தியக் கலாசாலையில் மாணாக்கனாகப்படித்துக் கொண்டிருந்தார்; பாட்டு சுமாராக இருக்கும்; ஆயினும் உருவத்தில் மிகுந்த அழகு வாய்ந்தவர். இவரது சுய பாஷை தெலுங்கு; இருந்தும் தமிழ் நன்றாகப் பேசுவார்; குரல் மாத்திரம் திடமானதல்ல. ஆகவே விக்டோரியா ஹாலில், இவர் பேசினது கடைசி வரைக்கும் கேட்கவில்லையென்கிற குறை இருந்தது. என்னுடைய அபிப்பிராயம் இவர் ஸ்திரீ வேஷத்திற்கு லாயக்கானவரே யொழிய ஆண்வேஷத்திற்கு ஏற்றவர் அல்ல என்பது. அப்படியே எங்கள் மூன்றாவது நாடமாகிய லீலாவதி - சுலோசனாவில் இவருக்கு ஸ்திரீ வேஷம் கொடுத்தேன்; இதன் பிறகு மீசை கொஞ்சம் நீளமாய் வளர்ந்து போக, வீட்டில் அதை எடுத்து விடுவதற்கு ஆட்சேபணை செய்கிறார்கள் என்று சொல்லி, இவர் ஸ்திரீ வேஷம் தரிக்க ஆட்சேபித்துவிட்டார். கதாநாயகியாக இந்நாடகத்தில் நடித்தவர் சுகுண விலாச சபையின் முதல் மெம்பராகிய ஜெயராம நாயகரே. இவர் முந்திய நாடகத்தில் நடித்ததைவிட, இந் நாடகத்தில் மிகவும் சாதுர்யமாக நடித்தார் என்பது என்னுடைய அபிப்பிராயம்; எங்கள் சபையில் நான் முன்பே குறித்தபடி பாட்டு நன்றாய்ப் பாடக் கூடியவராகிய எம்.வை. ரங்கசாமி ஐயங்கார், மந்திரி வேடம் பூண்டார். நான் மந்திரிகுமாரனான புத்திசேனன் வேடம் பூண்டேன். அ. சுப்பிரமணிய அய்யர், மந்திரிகுமாரன் மனைவியாகிய பானுமதி வேடம் தரித்தனர். இவரது பாட்டுகள் மிகவும் நன்றாயிருந்தன வென்று நாடகத்திற்கு வந்திருந்தவர்கள் கொண்டாடினார்கள். எம். துரைசாமி ஐயங்கார், விதூஷகன் வேடம் பூண்டார். இவர் நாடகம் பார்க்க வந்தவர்களை மிகவும் நகைக்கச் செய்தார். மற்ற ஆக்டர்களைப் பற்றி நான் ஒன்றும் விசேஷமாகக் கூறுவதற்கில்லை. இந்நாடகம் சுந்தரியைவிட, கொஞ்சம் சிறிதானபடியால், அதைவிட சீக்கிரம் முடிந்தது; அதாவது ஏறக்குறைய இரண்டு மணிக்கெல்லாம் முற்றுப் பெற்றது. நாடகம் முடிந்தவுடன், சீமைக்குப் போய் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஒருவரும், ஒரு டாக்டரும் ஆங்கிலேய பாஷையில் சபையின் இந்த இரண்டு நாடகங்களைப் பற்றிப் புகழ்ந்து சில வார்த்தைகள் கூறினர். அது ஆக்டர்களாகிய எங்களுக்கெல்லாம் மிகவும் சந்தோஷத்தைத் தந்தது. எங்களைப் புகழ்ந்தார்களே என்று யோசித்தோமே யொழிய, அப்புகழ்ச்சிக்குத் தக்க பாத்திரமானோமா என்று நாங்கள் கருதவில்லை.
இவ்விருவரில் ஒருவர் (அவர் பெயர் எனக்கு ஞாபகமில்லை) நாடகம் நடக்கும்பொழுது, இடையில் அரங்கத்திற்கு வந்து என்னைச் சந்தித்து “கிரீன் ரூம்” எங்கே என்று கேட்டார். அக்காலத்தில் அச்சொற்றொடரின் அர்த்தம் எனக்குத் தெரியாதிருந்தது! ஆகவே இங்கே கிரீன் ரூம் என்பது கிடையாது என்று பதில் உரைத்தேன். அவர், என்ன மூடனாயிருக்கிறான் இவன் என்றே என்னைப்பற்றி எண்ணியிருக்க வேண்டும். வாஸ்தவத்தில், கிரீன் ரூம் என்றால் ஆக்டர்கள் வேஷம் தரிக்கும் இடம் என்பதைப் பிறகுதான் தெரிந்து கொண்டேன். ஸம்ஸ்கிருதத்தில் இதற்கு நேபத்யம் என்று பெயர்.
என் அபிப்பிராயம் முதல் நாடகத்தைவிட, இந்நாடகத்தில் நாங்கள் எல்லோரும் நன்றாய் நடித்தோம் என்பது; இரண்டு நாடகங்களையும் பார்த்தவர்களில் பெரும்பாலர் அப்படியே அபிப்பிராயப்பட்டதாக அறிந்தேன்.
நாடகம் முடிந்தவுடன், ஆக்டர்களில் பெரும்பாலர், நாடக மேடையிலேயே, கொஞ்சநேரம் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்து அப்படியே தூங்கிவிட்டோம். மறுநாள் காலைதான் வீட்டிற்குப் போனோம். மறுநாள் சாயங்காலம், அதாவது ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம், ஆக்டர்கள், மெம்பர்கள் எல்லோரும் சபையின் ஸ்தலத்தில், ஒருங்கு சேர்ந்தோம். இரண்டாவது நாடகத்தில், நாங்களெல்லாம் நன்றாக நடித்தோ மென்கிற சந்தோஷத்தாலே, மிகவும் குதூஹலத்துடன் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டோம்! அப்படிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எங்கள் கண்டக்டராகிய திருமலைப்பிள்ளை அவர்கள் வந்து சேர்ந்தார். அவரும் நாங்கள் இந்த இரண்டாவது நாடகத்தில் சரியாக நடித்ததாகக் கூறிச் சந்தோஷப்பட்டார். அதன்பேரில், நாங்களெல்லோரும் சேர்ந்து, அப்படி “உங்கள் மனத்தைத் திருப்தி செய்ததற்காக, எங்களுக்கெல்லாம் ஏதாவது மிட்டாய் வாங்கிக் கொடுக்க வேண்டும்!” என்று நிர்ப்பந்தித்தோம். அவரும் சந்தோஷமாய் உடன்பட்டு உடனே இரண்டு ரூபாய்க்குப் பகோடா வாங்கி வரச் சொல்லி எங்கள் எல்லோருக்கும் வழங்கினார்.
பிறகு நடந்த நாடகங்களில் இன்னின்ன குறையிருந்தது, இன்னின்ன விஷயங்கள் நன்றாயிருந்தது என்று எல்லோரு மாகக் கலந்து பேசினோம். அன்று முதல் சற்றேறக்குறைய இருபத்தைந்து வருஷங்கள் வரை, நாடகம் முடிந்த மறுதினம் இம்மாதிரியான கூட்டங்கள் நடத்தி வந்தோம். இவைகளுக்குப் “பகோடா மீட்டிங்” என்று பெயர் வழங்கலாயிற்று. சில வருடங்களாக இடையில் இவ்வழக்கம் இல்லாதிருந்தபோதிலும் மறுபடியும் இவ்வழக்கத்தை விடாது தொடரவேண்டுமென்று கொஞ்ச காலமாகப் பிரயத்தனப்படுகிறோம். இப்படி ஒரு நாடகத்தில் நடித்த ஆக்டர்களெல்லாம் மறுதினம் ஒருங்குகூடி, அந்நாடகத்தைப் பற்றிப் பேசுவது அதி அவசியம். அதனால் மிகவும் நலமுண்டு என்று என்னுடைய தீர்மானமான எண்ணம். இவ்வாறு ஒருங்கு சேர்ந்து ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொள்ள வேண்டுமென்பதல்ல என் கோரிக்கை. முக்கியமாகக் குறைகளை எடுத்துப்பேசி அவைகளைத் தீர்க்க வேண்டிய மார்க்கம் தேடுவதுதான் இப்படிப்பட்ட கூட்டத் தினாலுண்டாகும் பெரும் நன்மையாம். அன்றியும் நாடகம் நடக்கும்பொழுது ஒரு ஆக்டருக்கும் மற்றொரு ஆக்டருக்கும் மாச்சரியம் உண்டாகக்கூடும். ஒருவன் தன் வசனத்தை மறந்து மற்றொருவனுக்குக் கஷ்டமுண்டாக்கியிருக்கலாம். பாட்டிற்கு ஸ்ருதி எடுத்துக் கொடுக்க வேண்டியவன் தப்பான ஸ்ருதியை எடுத்துக் கொடுத்திருக்கலாம்; ஒருவன் அரங்கத்தில் வரவேண்டிய காலப்படி வராமல், மற்ற ஆக்டர்களுக்குக் கஷ்டம் கொடுத்திருக்கலாம் இவ்வாறு ஒரு நாடகத்தில் ஆக்டருக்கும் ஆக்டருக்கும், மனவருத்தமுண்டாக்கத்தக்க அநேக சிறு விஷயங்கள் நடந்திருக்கலாம். இவைகளை யெல்லாம் மனத்தில் அடக்கி வைத்துப் புகைய விடாது, வெளிப்படையாய் எடுத்துப் பேசி மனத்திலிருப்பதை வெளியிட்டால், இம்மாதிரியான சிறு மாச்சரியங்களெல்லாம் மனத்தில் நிற்கா. ஏதாவது தப்பு நடந்திருந்த போதிலும், ஒருவரையொருவர் மன்னித்துக் கொள்ள இது மிகுந்த அனுகூலமான சமயமாம். சென்னை ராஜதானியில் இப்பொழுது அநேக இடங்களில் கற்றறிந்தவர்கள் நாடக சபைகளை ஏற்படுத்தி யிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் இந்த “பகோடாமீட்டிங்”கை நாடகத்தின் மறுதினம் மறவாது வைக்கும்படியாக இதனால் நான் விண்ணப்பம் செய்து கொள்ளுகிறேன். இதனால் இன்னொரு பெரிய அனுகூலமுண்டு. அதென்னவெனில், நமது முன்னோர்கள் கூறும் மூன்று வைராக்கியங்களாகிய, புராண வைராக்கியம், ஸ்மாசன வைராக்கியம், பிரசவ வைராக்கியம் என்பவைகளோடு, நாடக வைராக்கியம் என்பதையும் சேர்த்து நான்காவது வைராக்கியம் என்பதாகச் சொல்ல வேண்டும். ஒரு நாடகத்தை எழுதி, ஆக்டர்களைத் தயார் செய்து, ஒத்திகைகள் நடத்தி மேடையேற்றுவதென்றால், அக்கஷ்டத்தை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். அன்றியும்; ஒரு வேஷம் தரித்து நாடகமாடுவதென்றால் அதன் கஷ்டமும் நடித்த நடனுக்குத் தான் தெரியும். “பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம். பிள்ளை பெறாப் பேதையறிவாளோ?” என்றார் தாயுமானவர். வெளியில் ஹாலில் ஒன்பது மணிக்கு வந்து வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு வேடிக்கையாய் மூன்று அல்லது நான்கு மணி அவகாசம், பாட்டைக் கேட்டு, நடிப்பதைப் பார்த்துச் சந்தோஷித்துப் போகுபவர்களுக்கு, மேடையின் பேரில் நடிக்கும் ஆக்டர்கள் படும் கஷ்டம் என்ன தெரியும்? ஒரு நாடகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, அந்நாடகப் பாத்திரத்தின் வசனத்தை யெல்லாம் எழுதிக்கொண்டு குருட்டுப் பாடம் செய்து, அதற்குத் தக்க பாட்டுகளைத் தேர்ந்தெடுத்து பாட்டுகளைக் கட்டிக் கொடுக்கச் செய்து சிரமப்பட்டு அவைகளைப் பழகி, ஒத்திகைகளுக்கெல்லாம் தவறாமல் காலப்படி போய், ஒத்திகைள் நடத்தும் கண்டக்டர்கள் கூறும் குறைகளை யெல்லாம் பொறுத்து, அவர்கள் வசைகளை யெல்லாம் சகித்து, நாடக தினம் ஆரம்பத்திற்கு மூன்று நான்கு மணி நேரம் முன்னதாக ஹாலுக்குப் போய் க்ஷவரம் செய்து கொண்டு (ஸ்நாநமில்லாமல்), ஒரு மணிசாவகாசத்திற்குமேல் கஷ்டப்பட்டு முகத்தில் வர்ணம் முதலியவற்றைப் பூசிக் கொண்டு, வேஷத்திற்குத் தக்கபடி ஆடை முதலியவற்றை அணிந்து, (சில சமயங்களில் சில ஆக்டர்கள் அனுமார் முதலிய குரங்கு வேஷம் தரிக்க வேண்டுமென்பதை இதைப் படிக்கும் எனது நண்பர்கள் கவனிப்பார்களாக) நாம் நடிப்பதும் பாடுவதும் வந்திருக்கும் ஜனங்களுக்குத் திருப்திகரமா யிருக்கிறதோ இல்லையோ என்னும் சந்தேகத்துடன், நாலு மணி சாவகாசம் மேடையில் நடித்து, நாடகத்தை முடிக்கும் ஒவ்வொரு ஆக்டருக்கும், நாடகம் முடிந்தவுடன் தன் தலையிலிருந்த பெரும்பாரம் நீங்கியது போலத்தான் தோன்றும் என்பதற்குச் சிறிதேனும் சந்தேகமில்லை. கடைசியாக ஒரு முக்கியமான கஷ்டம் ஒன்றைச் சொல்ல மறந்தேன். வேஷம் போட்டுக் கொள்வதற்கு ஒரு மணி சாவகாசமானால் அதை ஒழிப்பதற்கு அரைமணி சாவகாசமாகும்! சில சமயங்களில் கிருஷ்ணவேஷம் புத்தர் வேஷம் முதலிய வேஷம் தரிப்பவர்கள், ஏறக்குறைய உடல் முழுவதும் வர்ணம் தீட்டிக்கொள்ள வேண்டியிருந்தால், அந்த வர்ணமானது மறுநாள் காலை எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நாநம் செய்தால்தான் போகும்!
களைத்து அலுத்துப் போயிருக்கும் பொழுது வேஷத்தை அழிக்க வேண்டிய சமயத்தில் எத்தனையோ ஆக்டர்கள் “அப்பா! இனி இந்தத் தொல்லை வேண்டாம்! மறுபடியும் நான் அரங்கத்தின் பேரில் ஏறுகிறேனா பார்” என்று சொல்லியதைப் பன்முறை கேட்டிருக்கிறேன். எனக்கும் அவ்வண்ணம் பன்முறை தோன்றியிருக்கிறது. ஆயினும் மற்ற வைராக்கியங்களைப்போல் இந்த வைராக்கியமும் இரண்டு மூன்று நாட்களுக்குள் மறைந்து போம். இப்படி மறப்பதற்கு மிகவும் அநுகுணமான விஷயங்களில் இந்த “பகோடா மீடிங்” ஒன்றாம்! பட்ட கஷ்டங்களையெல்லாம் மறந்து, வேடிக்கையாகப் பேசி, பகோடா சாப்பிட்டு விட்டு, சந்தோஷமடைந்த பின், “உம் -அப்புறம் - பிறகு என்ன நாடகம் எடுத்துக்கொள்வோம்!” என்று மெல்லப் பேச ஆரம்பிப்பது வழக்கம்! அவ்வாறு எங்கள் முதல் பகோடா மீடிங்கிலும் கடைசியில் வீட்டிற்குப் புறப்படுமுன் யாரோ ஒருவர் “பிறகு என்ன நாடகம் போடுவது?” என்கிற கேள்வி கேட்டார்.
மேற்சொன்ன இரண்டு நாடகங்களுள் “சுந்தரி” என்பது எங்கள் சுகுண விலாச சபையில் மறுபடியும் முழு நாடகமாக ஆடப்படவேயில்லை. “புஷ்பவல்லி”யும் அப்படியே. இதில் இரண்டு காட்சிகள் மாத்திரம் சபையின் நவராத்திரி கொண்டாட் டத்தில் ஒருமுறை பிறகு ஆடப்பட்டதென்பது என் ஞாபகம். ஆயினும் இவ்விரண்டு நாடகங்களும் பெங்களூரில் 1896ஆம் வருஷம் ஸ்தாபிக்கப்பட்ட சுகுண விலாச சபையின் கிளைச் சபையிலும், இன்னும் இதர சபைகளிலும் சில முறை ஆடப்பட்டிருக்கின்றன. இருந்தும், நான் எழுதிய நாடகங்களுள் இவ்விரண்டும் மிகுந்த குறைவான தரம் ஆடப்பட்டன வென்றே சொல்ல வேண்டும். இவ் விரண்டு நாடகங்களையும் அநேக வருஷங்கள் பொறுத்தே அச்சிட்டேன். “சுந்தரி” ஒன்பது வருஷங்களுக்கு முன் இரண்டாம் பதிப்பு ஏற்றது. “புஷ்பவல்லி”யை இரண்டாம் முறை போன வருடந்தான் அச்சிட்டேன். இவை இரண்டும் அவ்வளவாகச் சிறந்த நாடகங்களாக இல்லாவிட்டாலும், முப்பத்தொன்பது வருடங்களுக்கு முன் எழுதிய இந் நாடகங்களை, மறுபடி அச்சிடுவதற்காக நான் படிக்கவேண்டி வந்தபொழுது, இவைகள் எனக்கொருவிதமான சந்தோஷத்தைத் தந்தனவென்றே கூறவேண்டும். நாடகம் எழுதுவதில் பிறகு நான் கொஞ்சம் தேர்ச்சி பெற்றவனாகிய போதிலும், முப்பத்தொன்பது வருடங்களுக்கு முன் இவ்விரண்டு நாடகங்களையும் எப்படி எழுதினேனோ, அப்படியே ஒருவார்த்தையையும் மாற்றாமல் அச்சிட்டேன். இவ்விரண்டு நாடகங்களையும் விட்டுப் பிரியுமுன் அவைகளைப் பற்றி இன்னொரு வார்த்தை கூற விரும்புகிறேன். அதாவது புதிதாய் ஏற்படுத்தப்படும் நாடக சபைகளும், பள்ளிக்கூடத்தில் வாசிக்கும் சிறுவர்களும், முதல் முதல் ஏதாவது நாடகம் ஆட எடுத்துக்கொள்ள விரும்பினால், இவைகளில் ஒன்றை எடுத்துக்கொள்வது சௌகர்யமாயிருக்கும் என்பதேயாம். இவ்விரண்டு நாடகங்களையும் அதிகக் கஷ்டமில்லாமல் ஆடலாம்.
ஏழாம் அத்தியாயம்
பிறகு நான் மூன்றாவதாக எழுதிய நாடகம் “லீலாவதி சுலோசனா” என்பதே. இதுதான் நர்ன் எழுதிய நாடகங்களுக் கெல்லாம் மிகச் சிறந்தது என்று எனது பால்ய நண்பரும், ஹைகோர்ட் வக்கீலாகி நற்பெயரெடுத்து பிறகு ஹைகோர்ட் ஜட்ஜாகி, ராஜினாமா கொடுத்து விட்டு, இப்பொழுது அட்வகேட்டாக இருக்கும் மகா-ள-ள-ஸ்ரீ ஸ்ரீனிவாசஐயங்கார் எண்ணுகிறார். இவர் நாடகங்களைப் பரிசீலனம் பண்ணுவதில் மிகுந்த நிபுணர்; இவரை அநேக விஷயங்களில் எனது ஞானாசாரியனாகக் கொண்டு நடந்து வருகிறேன். ஆகவே இவர் புகழ்ந்ததை நான் ஒப்புக் கொள்ள வேண்டிய வனாயிருக்கிறேன். அன்றியும் இந் நாடகமானது எங்கள் சுகுண விலாச சபையில் ஏறக்குறைய 50 தடைவைக்குமேல் ஆடப்பட்டிருக்கிறது. இதர சபைகளினாலும் பன்முறை ஆடப்பட்டிருக்கிறது. என்னுடைய அனுமதியின் பேரில், எனது இன்னின்ன நாடகம் இத்தனை முறை ஆடப்பட்டிருக்கிறது என்று நான் ஒரு ஜாபிதா வைத்திருக்கிறேன்; அதன்படி இந்த லீலாவதி-சுலோசனா இதுவரையில் 336 முறை ஆடப்பட்டிருக்கிறது. எனது உத்தரவில்லாமல் எத்தனை முறை ஆடப்பட்டிருக்கிறதோ நான் அறியேன். இப்பொழுது சாதாரணமாக மற்ற சபையார் என் உத்தரவில்லாமல் என் நாடகங்களை ஆடுவது வழக்கமில்லாவிட்டாலும், பல வருஷங்களுக்கு முன் அப்படிச் செய்வது சாதாரணமாயிருந்த தென்பதற்குச் சந்தேகமில்லை. சில வருஷங்களுக்கு முன் ஒரு நாடகக் கம்பெனி மாத்திரம் இந்நாடகத்தை ஒரு வருஷத்தில் ஆறுமுறை என் உத்தரவின்றி நடித்ததாகக் கண்டு பிடித்தேன். ஆகவே மற்ற சபைகளும் நாடகக் கம்பெனிகளும் இந் நாடகத்தைக் கணக்கில்லாதபடி, பலமுறை ஆடியிருக்க வேண்டுமென்பதற்கு ஐயமில்லை.
அன்றியும் இந்த “லீலாவதி-சுலோசனா” தான் நான் முதல் முதல் அச்சிட்ட நாடகம். இதை என்னை அச்சிடும்படித் தூண்டியவர் எனதருமை நண்பராகிய ஸ்ரீனிவாச ஐயங்கார வர்களே. இதை 1895ஆம் வருஷம் ஜனவரி மாதம் அச்சிட்டு வெளிப்படுத்தினேன். அதற்கு முன்பாக, தமிழ் நாடகத்தை அச்சிட்டால் யார் வாங்கிப்படிப்பார்கள் என்று மிகவும் சந்தேகப்பட்டதனால், இதை அச்சிட வேண்டும் என்னும் தீர்மானம் என் மனத்தில் உதிக்கவேயில்லை . எனது நண்பர் ஸ்ரீனிவாச ஐயங்கார், “நீ எண்ணுவது தவறு, அச்சிட்டுப் பார், எத்தனை பெயர் வாங்கிப் படிக்கிறார்கள் பார்” என்று வற்புறுத்தினார். அதன் பேரில் என் தந்தையைக் கேட்டபொழுது அவரும் அப்படியே சொன்னார்.
அதன்மீது 1894ஆம் வருஷம் கடைசியில் இதை அச்சிடத் தொடங்கி 1895ஆம் வருஷம் ஜனவரி மாதம் வெளியிட்டேன். பகிரங்கமாக வெளிப்படுத்து முன், சில பிரதிகளைச் சென்னையிலுள்ள தமிழ் வித்வான்களுக்கெல்லாம் அனுப்பி அவர்களிடமிருந்து சாற்றுக் கவிகள் பெற்றேன். அவைகளை யெல்லாம் அவ்வருஷம் வெளிப்படுத்திய முதற் பதிப்பில் சேர்த்து அச்சிட்டேன். இந்த “லீலாவதி-சுலோசனா” நாடகத்தை எழுதிய பொழுது எனக்கு வயது சரியாக 20; அச்சிட்டபொழுது 22 வயதுக்குக் கொஞ்சம் குறைவே. ஏதோ சிறுவன் என்று அசட்டை செய்யாமல் எனக்குச் சாற்றுக் கவிகளையும், நற்சாக்ஷிப் பத்திரங்களையும் கொடுத்து எனக்கு ஊக்கத்தையுண்டு பண்ணின தமிழ் வித்வான்களுக்கும் தமிழ் அபிமானிகளாகிய பெரியோர்களுக்கும் அன்று முதல் இன்றுவரை என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்தி வருகிறேன். இதுதவிர அவர்களுக்கு நான் என்ன பிரதி செய்யக்கூடும்? கருணையுடன் மழை பொழிந்த மேகத்திற்கு, அதன் பலனையடைந்த நெற்பயிரானது என்ன பிரதி செய்யக்கூடும்?
மேற்குறித்தபடி சாற்றுக்கவிகள் அனுப்பியவர்களுள், எனது ஒன்பதாம் வயது முதல் எனக்கு வீட்டில் தமிழ் உபாத்தியாயராயிருந்த வரதாச்சாரியார் ஒருவர்; பச்சையப்பன் ஹை ஸ்கூலில் எனக்குத் தமிழ் உபாத்தியாயராயிருந்த முருகேச முதலியார் ஒருவர்; துரைத்தனக் கலாசாலையில் எனது தமிழ் உபாத்தியாயராயிருந்த கிருஷ்ணமாச்சாரியார் என்பவர் ஒருவர்; அக்காலத்தில் கிருஸ்துவக் கலா சாலையென்று பெயர் பெற்ற கல்லூரியின் தமிழ்ப் பண்டிதராகிய சின்னசாமிப் பிள்ளை என்பவர் ஒருவர்; எனக்கு வயதிற் சிறியவராயிருந்த போதிலும் தமிழில் அக்காலத்தில் பிரசித்தி பெற்ற சூரியநாராயண சாஸ்திரி ஒருவர்; இன்னும் அஷ்டாவ தானம் பூவை கலியாணசுந்தர முதலியார், திருமயிலை வித்வான் ஷண்முகம் பிள்ளை அவர்கள், கனகசபை நாயக்கர் முதலியோரும் சாற்றுக்கவிகள் எழுதி எனக்கு அன்போடனுப்பினர். இவைகள் எல்லாவற்றுள்ளும் நான் மிகுந்த அருமையாகப் பாவிப்பது, மூழ்கிப்போகக் கிடந்த தமிழ் மாதின் தௌர்ப்பாக்கிய ஸ்திதியைக் கண்டிரங்கி, கைகொடுத்துக்கரை யேற்றி, முன்பிருந்த உன்னத பதவிக்குக் கொண்டுவர, தன் ஆயுட் காலமெல்லாம், தனது முதுமையையும் கவனியாது உழைத்து வரும். மஹா மஹோபாத்தியாயர் என்கிற பட்டப் பெய்ரைப் பெற்ற, நான் தமிழ்ப் பாஷையைப்பற்றி நினைக்கும்போதும், தமிழில் ஏதாவது எழுதும்போதும், அவரது அடி பணிந்து வரும், பிரம்மஸ்ரீ வே. சாமிநாத அய்யர் எனக்கனுப்பிய சாற்றுக் கவியேயாம். இதை அந்நூலின் முகப்பில் அச்சிட்ட சாற்றுக் கவிகளில், முதலாகவே அமைத்துள்ளேன். என் மனத்திலும் அங்ஙனமே அமைத்துள்ளேன். இவருக்கு நான் செய்யத்தக்க கைம்மாறு ஒன்றுதான் இருக்கிறது. அதாவது, இவருக்கு இவர் மேற் கொண்ட பழைய தமிழ் நூல்களை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் இச்சையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, அவரது ஆத்மதெய்வமாகிய ஸ்ரீ தியாகராஜப் பெருமான் இன்னும் பல்லாண்டு ஆயுளையும் தேகாரோக்கியத்தையும் கொடுப்பாராக என்று பிரர்த்திப்பதேயாம்.
மேற்சொன்ன சாற்றுக்கவிகளின்றி, சென்னை கலா சங்கத்தில் முதல் முதல் பி.ஏ. பட்டம் பெற்ற, “இலக்கண விளக்கம்” முதலிய அரிய பெரிய நூல்களை அச்சிட்டு வெளிப்படுத்திய ராவ்பஹதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களும் “மனோன்மணீயம்” என்னும் சிறந்த நாடகத்தைத் தமிழில் இயற்றிய, ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் விற்பன்னராகி தமிழ் மாது செய்த தௌர்ப்பாக்கியத்தினால் குறைந்த வயதிலேயே இறைவனடி சேர்ந்த திருவனந்தபுரம் சுந்தரம் பிள்ளை அவர்களும், இன்னும் சிலரும், ஆங்கிலத்தில் நற்சாட்சிப் பத்திரங்கள் அன்புடன் அனுப்பினர். அவற்றையும் இந்நாடகத்தின் முதற் பதிப்பில் சேர்த்து அச்சிட்டேன். கடைசியாக இந் நாடகத்தை அச்சிடும்படிக் கூறிய என் பால்ய நண்பர் ஸ்ரீனிவாச ஐயங்கார், இதற்கு ஆங்கிலத்தில் வெகுவிமரிசையாக ஒரு முகவுரை எழுதினார்.
ஏதோ ஒருவிதமாகத் தமிழ் நாடகக் கர்த்தாவாக எனக்கு ஊக்கம் என் சிறுவயதில் அளித்த மேற்சொன்ன பெரியோர்களுக்கெல்லாம் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அக்கடனைத் தீர்க்க என்னால் ஏலாது என்று ஒப்புக்கொண்டு, “இந் நாடக மேடை நினைவுகள்” மூலமாக என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன்.
எனக்கு அக்காலம் இருந்த பயம் முக்கியமாக ஒன்று. இந்நூலின் முகவுரையில் நான் எழுதியபடி அதுவரையில் நாடகத் தமிழ் என்பதற்கு இலக்கியங்கள் இல்லையெனவே ஒருவாறு கூற வேண்டும். அதற்குமுன் வெளிவந்த சில நாடகங்கள் பெரும்பாலும் செய்யுள் நடையிலேயே எழுதப்பட்டன. நான் எழுதிய இந்த லீலாவதி -சுலோசனாவோ முற்றிலும் வசன ரூபமாக எழுதப்பட்டது. இதைக் கற்றறிந்த தமிழ் உலகம் எங்ஙனம் ஏற்கும் என்னும் பீதியேயாம்.
அப் பயத்தைப் போக்கி அன்று முதல் இது வரையிலும் ஏறக்குறைய அறுபது நாடகங்களைத் தமிழில் வசனரூபமாக எழுதும்-படி அடியேனைச் செய்து வைத்த எல்லாம் வல்ல கருணையங் கடவுளின் பாதாரவிந்தங்களைப் பணிந்து, இந்த “லீலாவதி- சுலோசனா” என்னும் நாடகத்தை நான் எழுதிய கதையை இதை வாசிக்கும் என் நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.
இந்த “லீலாவாதி-சுலோசனா” என்னும் நாடகத்தின் கதை எப்படி என் மனத்தில் முதல் முதல் உதித்தது என்று அநேகம் நண்பர்கள் என்னைக் கேட்டிருக்கின்றனர். ஆகவே அதைச் சற்று விவரமாய் எழுதுகிறேன். எங்கள் சபையின் முதல் இரண்டு நாடகங்கள் ஆடி முடிந்தவுடன், அதன்பொருட்டு சந்தோஷக் கொண்டாட்டமாக ‘ஒரு பிக்னிக்’ (Picnic-வன போஜனம் என்று இதை ஒருவாறு கூறலாம்). வைத்துக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தோம். அதற்காகத் தக்கதோர் இடம்வேண்டுமென்று, வழக்கப்படி நான் என் தகப்பனாரைக் கேட்க, அவர், அருணாசலீஸ்வரர் பேட்டை யில் காகிமானு சேஷாசல செட்டியாருடைய பங்களாவை, எங்களுக்கு சனி ஞாயிறு இரண்டு தினங்களுக்கு வாங்கிக் கொடுத்தார். அச்சமயம் எங்கள் சபையில் சுமார் 50 அங்கத்தினர் இருந்தனர்.
சற்றேறக்குறைய இந்த 50 பெயரும் ஒரு சனிக்கிழமை சாயங்காலம் அவ்விடம் ஒருங்குசேர்ந்து மறுதினம் ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் வரையில் வேடிக்கையாய்க் காலங்கழித்தோம். சனிக்கிழமை சாயங்காலம் நாங்கள் எல்லாம் அந்தப் பங்களாவின் பின்பக்கத்திலுள்ள நடைவாயிலின் சுற்றிலு முள்ள பூந்தோட்டத்தைச் சுற்றி உலாவி வேடிக்கையாய்ப் பேசிக்கொண்டு காலங் கழித்த பொழுது, அவ்விடமிருந்த ரோஜாச் செடியில் மலர்ந்திருந்த, என் கண்ணைக் கவர்ந்த ஒரு ரோஜாப் புஷ்பத்தைப் பறித்து, என் பக்கத்திலிருந்த என் நண்பனாகிய ஸ்ரீமான் அ. சுப்பிரமணிய ஐயருக்குக் கொடுத்தேன். இதைச் சற்றுத் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த என் நண்பர் ஜெயராம் நாயகர், “சம்பந்தம்! அவனுக்குத்தானே கொடுத்தாய். எனக்குக் கொடுக்க வில்லையே!” என்று சொல்லி வேடிக்கையாய்ப் பொறாமை கொண்டது போல் முகத்தைச் சுளித்தார். அந்த க்ஷணம் ஒரு நாடகத்தில் இவர்களிருவரையும் இரண்டு சகோதரிகளாக அமைத்து, தங்கையின் மீது அக்காள் பொறாமை கொள்வதாக ஏற்படுத்தி இந்த ரோஜாப் பூ விருத்தாந்தத்தை அதில் ஒரு சந்தர்ப்பமாக வைத்து, எழுத வேண்டுமென்று தோன்றியது! இதுதான் இந்நாடகக் கதைக்கு என் மனத்தில் அங்குரார்ப் பணமாயது. பிறகு ஜெயராம் நாயகர் நடிக்கும் சக்திக்கேற்றபடி “லீலாவதி"யையும், அ. சுப்பிரமணிய ஐயர் நடிக்கும் சக்திக்கேற்றபடி “சுலோசனா"வையும் இரண்டு சகோதரிகளாக அமைத்து நாடகத்தை எழுத ஆரம்பித்தேன். ஸ்ரீதத்தனாகிய கதாநாயகன் வேஷம் நான் தரிக்கவேண்டுமென்று தீர்மானித்து எனது நாடகமாடும் சக்திக்கேற்றவாறு அதை அமைக்கலானேன். இப்படியே எங்கள் சபையில் அச்சமயம் நடித்த முக்கியமான ஆக்டர்களுக்கெல்லாம் இன்னின்ன வேஷம் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்து, அவரவர்களுக்கு ஒவ்வொரு நாடகப் பாத்திரத்தை அமைத்து அவர்கள் நடிக்கும் திறமைக்கேற்றபடி அந்தந்தப் பாத்திரங்களை எழுதலானேன்.
எனது நண்பராகிய ராஜகணபதி முதலியாரை நாங்களெல்லோரும் ‘நாட்டுப்புறம்! நாட்டுப்புறம்!’ என்று ஏளனம் செய்வது வழக்கம். (இவர் பிறகு கவர்ன்மென்டில் சிறந்த உத்தியோகஸ்தராய், சென்ற ஐரோப்பிய யுத்தத்தில் பிரான்ஸுதேசம் வரைக்கும் போய்த் திரும்பி வந்து பென்ஷன் வாங்கிக்கொண்டு சுவாமியின் அருளினால் சௌக்கியமாயிருக்கிறார்) இவருக்காக இந்நாடகத்தில் “சாரங்கன்” என்னும் நாட்டுப்புறத்து வழிப்போக்கன் பாத்திரம் எழுதினேன். எந்நேரமும் வேடிக்கையாய்ப் பேசி எல்லோரையும் சிரிக்கச் செய்யும் சக்தி வாய்ந்த, எனது காலஞ்சென்ற நண்பர் ம. துரைசாமி ஐயங்காருக்காக இந்நாடகத்தில் “விசித்ரசர்மா"என்னும் விதூஷகன் பாத்திரம் எழுதினேன். அவர் அக்காலம் யாராவது அவசரப்பட்டால், “அவசரப்படேல்” என்று ஒரு விதமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்லி ஏளனம் செய்வார். இதையே அஸ்திவாரமாகக் கொண்டு, இந்நாடகத்தில் ‘அவசரப் படேல் சீன்’ என்று எனது நண்பர்களும் அந்நாடகத்தைப் படிப்பவர்களும் கூறும் காட்சியை எழுதி முடித்தேன். எனக்குப் பாடத் தெரியாதென்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு முன்பே நான் தெரிவித்திருக்கிறேன்; அன்றியும் அப்பொழுது எங்கள் சபையில் நன்றாய்ப் பாடத்தக்கவர் எம். வை. ரங்கசாமி ஐயங்கார் என்பதையும் தெரிவித்திருக்கிறேன். நான் பாடாத குறையைப் பூர்த்தி செய்வதற்கும் அவரது சங்கீதஞானம் சபையோர் நன்றாயனுபவிக்கும்படிக்கும், பாட்டு பாடுவதற்குப் பல சந்தர்ப்பங்களை அமைத்து, அவருக்காக “கமலாகரன்” பாத்திரத்தை எழுதலானேன். இப்படியே மற்ற அங்கத்தினர்க்கும் அவர்வர்கள் நடிக்கும் சக்திக்கேற்றவாறு நாடகப் பாத்திரங்களை அமைத்து எழுதினேன்.
“லீலாவதி - சுலோசனா” போன்ற புதிய கதையையுடைய நாடகங்களை நான் எழுதும் விதம் இப்படி என்று அறிய எனது நண்பர்கள் விரும்புவார்கள் என நினைக்கிறேன்.
ஒரு புதிய நாடகத்தின் கதை என் மனத்தில் தோற்றியவுடன் பல தினங்கள் அக்கதையை என் மனத்தில் திருப்பித் திருப்பி எனக்குச் சாவகாசமிருக்கும் பொழுதெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பேன். அப்படி யோசித்து, ஒரு விதமாக இப்படி ஆரம்பித்து, இப்படி நடத்தி, இப்படி முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று தீர்மானித்தவுடன், ‘ஏ’ என்னும் அரசருக்கு, ‘பி’ என்னும் ஏக புத்திரனுண்டு . ‘சி’ என்னும் மற்றொரு அரசருக்கு, ‘டி,இ’ என்னும் இரண்டு புத்திரிகள் இருந்தார்கள். ‘ஏ’ தன் குமாரனுக்கு மணம் செய்விக்க வேண்டித் தன் மந்திரிகளுடன் ஆலோசித்து ‘எப்’ என்னும் ராயபாரியை ‘சி’ அரசரிடம் அனுப்பினார் என்று இம்மாதிரியாகக் காட்சி காட்சியாக ஒரு காகிதத்தில் குறித்து கொண்டே போவேன். இப்படிச் செய்யும் பொழுது, கதையின் போக்கில் முன்பு நான் யோசித்ததைவிட, யுக்தமானதாக ஏதாவது தோற்றினால், இதன்படி கதையை மாற்றுவேன்; பிறகு இம்மாதிரியாகக் காட்சிகளை முற்றிலும் பிரித்தானவுடன், ஏ,சி,டி முதலிய பாத்திரங்களுக்கெல்லாம் தக்கபடி யோசித்து பெயர்கள் கொடுப்பேன்; கூடியவரைக்கும் ஒவ்வொரு நாடகப் பாத்திரத்திற்கும் குணத்திற்குத் தக்கபடி பெயர்களைக் கொடுத்துக் கொண்டு போவேன். இது முடிந்த பின்தான் உட்கார்ந்து நாடகத்தை எழுத ஆரம்பிப்பேன்.
மேற் சொன்னபடி “லீலாவதி-சுலோசனா"வுக்கும், நாடகத்தின் பிரிவுகளைக் காட்சி காட்சியாக முதலில் எழுதி வைத்துக் கொண்டேன். முதல் முதல் இந்நாடகத்திற்குப் “பொறாமை” என்கிற பெயரையே கொடுக்கத் தீர்மானித்தேன். பிறகு காட்சிகளின் பிரிவுகளைக் குறித்துக் கொண்டபின் அதை மாற்றி “லீலாவதி- சுலோசனா” என்கிற பெயரைக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்தேன்.
எனது இன்னொரு வழக்கமும், நாடகங்களைப் புதிதாய் எழுத விரும்பும் எனது நண்பர்கள் அறிவது நலமெனத் தோன்றுகிறது. நாடகத்தின் காட்சிகளை இவ்வாறு பிரித்துக் குறித்துக்கொண்டபின், அறிவிற் சிறந்தோர்களாகிய எனது நண்பர்களுட் சிலரை வரவழைத்து, அவர்களுக்கு நான் எடுத்துக் கொண்ட நாடகத்தின் காட்சிகளின் குறிப்பைப் படித்துக் காட்டுவேன். அதில் ஏதாவது குற்றங் குறையிருக்கிறதா என்று அவர்களைக் கேட்பேன். சங்கோசமில்லாமல் தாராளமாக அதைப்பற்றி என்னுடன் பேசும்படி வேண்டுவேன். அவர்கள் கூறும்படியான குணாகுணங்களை யெல்லாம் கவனித்து, என் சிற்றறிவிற்குப் பொருத்தமானது என்று தோற்றும்படியான விஷயங்களை யெல்லாம் எடுத்துக் கொண்டு, அதன்படி கதையின் விவரங்களை மாற்றிக் கொள்வேன். இப்படிச் செய்வதனால் நான் பெரும்பலன் பெற்றிருக்கிறேன். எனது இளைய நண்பர்களும் இவ்வாறே செய்வார்களாயின் பெரும்பலன் அடையக் கூடும் என்று எனக்குத் தோற்றுகிறது.
இதற்கொரு உதாரணமாக இந்த “லீலாவதி-சுலோசனா” நாடகத்தின் ஒரு பாகத்தையே எடுத்துரைக்கக்கூடும். இந்த நாடகத்தின் கதையை அக்காலத்தில் எனக்கு அத்யந்த நண்பர்களாயிருந்தவர்களுள் ஒருவராகிய வாமன்பாய் (Vaman Pai) என்னும் மங்களூர் சிநேகிதர் ஒருவரிடமும் கூறிய பொழுது, நாடகத்தில் இரண்டாம் அங்கத்தில் “கைவளை” சீன் என்று வழங்கும் ஒரு காட்சியில் முக்கியமான ஓர் அம்சத்தை அவர்தான் இப்படி எழுதுவாயாயின் நன்றாயிருக்கு மென்று எடுத்துக் கூறினார். அவர் கூறியது மிகவும் சரியென ஒப்புக்கொண்டு, அப்படியே மாற்றி எழுதினேன். இவரிடமிருந்து இன்னும் சில நாடகங்களிலும் சில முக்கியமான குறிப்புகளைப் பிறகு பெற்றேன். இவர் தெய்வகடாட் சத்தினால் இன்னும் உயிருடன் இருக்கிறார். இவர் செய்த உதவிக்காக இவருக்கு நான் இந்த “நாடக மேடை நினைவுகளின்” மூலமாக எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்த “லீலாவதி-சுலோசனா” என்னும் நாடகத்தைச் சென்னையில் எழுத ஆரம்பித்த போதிலும், அதன் பெரும் பாகம், திருவனந்தபுரத்தில் எழுதும்படி நேர்ந்தது. எங்களுடைய சிறுபிராயம் முதல் பள்ளிக்கூடத்தில் வெயிற்காலத்திற்காக விடுமுறை விடும் பொழுதுதெல்லாம், வருஷா வருஷம் எங்கள் தகப்பனார் எங்களை ஒவ்வோர் ஊருக்கு அனுப்புவது வழக்கம். இதனால் நான் பெரும் பலன் அடைந்தேன் என்றே சொல்லவேண்டும். இம் மாதிரியாக என் இருபதாவது வயதுக்குள் அநேகம் ஊர்களைப் பார்த்ததனால், என் சிற்றறிவு கொஞ்சம் விசாலமடைந்ததென்றே நான் சொல்லவேண்டும். இவ்வழக்கப்படி இவ்வருஷம் எங்கள் தகப்பனார், என்னையும் என் மூத்த சகோதரர்களுள் ஒருவரையும் திருவனந்தபுரம் அனுப்பினார். இங்ஙனம் நான் திருவனந்தபுரம் போயிருந்த பொழுது, மத்தியான காலங்களில் வேறொன்றும் கவலையில்லாமல் சாவகாசம் அதிகமாயிருந்த படியால், இந்த நாடகத்தை எழுத எனக்கு மிகவும் சௌகர்யமாயிருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து திரும்பி வந்தவுடன் நாடகத்தைப் பூர்த்திசெய்து, என் நண்பர்களுக்கெல்லாம், என் வழக்கப்படி அதைப் படித்துக்காட்டினேன். அவர்களெல்லோரும் மிகவும் நன்றாயிருக்கிறதெனக் கூறிக் குதூஹலத் துடன் சீக்கிரத்தில் அதை ஆடவேண்டுமென்று சொன்னார்கள். இன்னின்னாருக்கு இன்னின்ன நாடகப் பாத்திரம் என்று நான் உத்தேசித்து எழுதியபடியே, ஒரு கஷ்டமுமில்லாமல், அவரவர்களுக்கு நாடகப் பாத்திரங்களெல்லாம் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. ஒத்திகைகள் வெகு மும்முரமாய் மூன்று மாதம் நடத்தினோம். அன்றியும் ஒரு நாள் இரவு பூர்ண ஒத்திகையாக வைத்துக்கொண்டு, வேஷத்துடனும் சங்கீதத்துடனும் நடத்திப் பார்த்தோம். தற்காலம் சில சபைகளில், ஒத்திகைகள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, நாடகத்திற்காக ஹாலுக்குப் பணம் கட்டி விடுகிறார்களே அம்மாதிரியான வழக்கம் எங்கள் சபையில் அக்காலம் இல்லை. நன்றாய் ஒத்திகைகள் நடத்தி எல்லோரும் தங்கள் வசனத்தையும் பாட்டையும் சரியாகப் படித்திருக்கிறார்களா என்று கண்டறிந்து, பூர்ண ஒத்திகை ஒன்றை வைத்து, அதற்கு எல்லா அங்கத்தினரையும் வரவழைத்து அவர்களைப் பார்க்கச் சொல்லி, அவர்களெல்லாம் சரியாக இருக்கிறதென அனுமதி கொடுத்த பின்தான், ஹாலுக்குப் பணம் கட்டுகிற வழக்கம்! இந்த வழக்கத்தை எங்கள் சபையாரும் இதர சபையோர்களும் பின்பற்றி வந்தால், மிகவும் நலமாயிருக்குமெனத் தோன்றுகிறதெனக்கு.
இந்த “லீலாவதி - சுலோசனா” நாடகத்திற்குப் பாட்டுகள் எழுதிக் கொடுத்தவர், என் நண்பராகிய பண்டிட் கோபாலாச் சாரியார் அவர்கள். இவர் அக்காலம் திருவல்லிக்கேணி ஹைஸ்கூலில் தமிழ் உபாத்தியாயராக இருந்தார். இப்பொழுது வயதாகி, பென்ஷன் வாங்கிக்கொண்டு, ஸ்ரீமந் நாராயணனது கிருபையால் ஜீவந்தராயிருக்கிறார். எங்கள் பாட்டு உபாத்தியாயராயிருந்த தாயுமான முதலியார், யாதோ காரணத்தினால் எங்களோடு சச்சரவிட்டு, எங்கள் சபைக்கு வருவதை நிறுத்திவிட்டபொழுது, பாட்டுகள் கட்டுவதற் கென்ன செய்வது என்று நாங்கள் கலக்கப்பட்டிருக்கும் பொழுது, என் நண்பர் எம். வை. ரங்கசாமி ஐயங்கார் இந்த கோபாலாச்சாரியார் அவர்களை எங்கள் சபைக்கு அழைத்து வந்து, எங்களுக்கெல்லாம் தெரிவித்தார். அதன் பேரில் இந்த நாடகத்திற்கு வேண்டிய பாட்டுகளை எல்லாம் இவர் வெகு விமரிசையாகக் கட்டிக் கொடுத்தார், இதற்காக ஒரு ஊதியமும் பெறாமல். இப்பாட்டுகளை யெல்லாம் எனது “கீதமஞ்சரி” என்னும் புஸ்தகத்தில் அச்சிட்டிருக்கிறேன். பண்டிட் கோபாலாசாரியார் அவர்கள் அக்காலத்தில் எங்களுக்குச் செய்த உதவி மிகவும் கொண்டாடற் பாலது; “பயன் றூக்கார்ச் செய்த உதவி நயன்றூக்கினன் மைகடலிற் பெரிது” என்ற திருவாக்கின்படி, இவர் செய்த உதவிக்காக என் மனமார்ந்த வந்தனத்தை, இந்த “நாடக மேடை நினைவுகள்” மூலமாகச் செலுத்துகின்றேன்.
இவர் பாட்டுகளைக் கட்டியதுமன்றி, அருகிலிருந்து எல்லோருக்கும் அப்பாட்டுகளைப்பாடும் விதத்தையும் கற்பித்தார். இந்நாடகத்தின் பாட்டுகளில், ஒன்றைப்பற்றிய சிறு நகைப்புக்கிடமான விஷயம் ஒன்றை என் நண்பர்களுக்குத்தெரிவிக்க விரும்புகிறேன். இந்நாடகத்தில் பிரதாபசீலன் பாட வேண்டிய பாட்டொன்றில் அநுபல்லவியில் “அல்லும் பகலும் சொல்லி முடியாத” என்கிற ஒரு அடி எழுதப்பட்டது. அதைப் பாடுபொழுது, பாடுபவன், சங்கீதத்தின் பூர்ணத்தின் பொருட்டு “அல்லும் பகலும் சொல்லி முடியாதரீ” என்று இழுத்தான்; சிறுவயதுக் குரும்பில் நான் “என்னடா அப்பா, அது? அல்லும் பகலும் சொல்லி முடியாதரீ! எவ்வளவு பெரிய ரீயாக இருக்கவேண்டும்!” என்று ஏளனம் செய்தேன். பாட்டை எழுதிவர் உட்பட எல்லோரும் நகைத்தும், அதைவிட்டு வேறுவிதமாகப் பாட வழியில்லாமற் போயிற்று! எங்கள் சபையில் நாங்கள் பாடும் சில பாடல்களில் இம்மாதிரியான குற்றங்கள் இன்னும் இருக்கின்றன. இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் இக் குறை வராமல் எப்படிப் பாடுவது என்பது இன்றளவும் ஒரு கஷ்டமாகத்தானிருக்கிறது. இக்குறையை அகற்றும் மார்க்கம் இதைக் கண்ணுறும் சங்கீத வித்வான்கள் யாராவது அறிவிப்பார்களாயின், நானும் எங்கள் சபையாரும் மிகவும் கிருதக்ஞர்களாயிருப்போம்.
இந்த நாடகத்திற்காக நாங்கள் ஒத்திகைகள் நடத்திக் கொண்டிருந்த தறுவாயில், எங்களுக்கு நேரிட்ட ஒரு முக்கியமான கஷ்டத்தைத் தெரிவிக்க வேண்டியவனாயிருக்கிறேன். பல்லாரி சரச வினோத சபையார் சென்னையில் நாடகங்கள் ஆடியதைப் பார்த்து, எப்படி நாங்கள் சுகுண விலாச சபையை ஏற்படுத்தினோமோ, அந்தப் பிரகாரம் இன்னும் சிலர் வேறு சபைகளை ஸ்தாபிக்கத் தொடங்கினர். இம்மாதிரியாக உற்பவித்த நாடக சபைகளில் “ஓரியண்டல் டிராமாடிக் ஸொஸைடி” என்பது ஒன்று. அப்பெயர் கொண்ட சொஸைடி பல வருடங்களுக்கு முன் ஒன்றிருந்து, யாது காரணத்தாலோ அது க்ஷணத்தை அடைந்து அற்றுப் போய் விட்டது. அதன்பேரில் நாங்கள் சுகுண விலாச சபையை ஸ்தாபித்த வருஷம் வேறு சிலர் இந்த ‘ஓரியண்டல் டிராமாடிக் சொஸைடி'யை மறுபடியும் உத்தாரணம் பண்ணவேண்டுமென்று தீர்மானித்து அங்கத்தினரைச் சேர்க்க ஆரம்பித்தனர். இந்தச் சபையின் அங்கத்தினரெல்லாம் பிராமணர்களே. பிராமணர்களைத் தவிர மற்றவர்களை இந்தச் சபையில் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்வதில்லையென்று ஒரு நிபந்தனை செய்து கொண்டனர். இச்சபையாரும் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடகங்கள் ஆட ஆரம்பித்தனர். இதன் மூலமாக அச் சபையாருக்கும் எங்கள் சபையினருக்கும் கொஞ்சம் பொறாமையுண்டானது என்று நான் ஒப்புக் கொள்ள வேண்டியதே. இதன்பேரில் இச்சபையார் எங்கள் சபையில் மிகவும் அழகாய்ப் பாடிப் பெயர் பெற்ற எம். வை. ரங்கசாமி ஐயங்கார் என்பவரை எங்கள் சபையினின்றும் நீக்கி, தங்கள் சபையில் சேர்த்துக் கொள்ளப் பிரயத்தனப் பட்டனர். இதை எப்படியாவது தடுக்க வேண்டுமென்று நாங்கள் ஒரு சூழ்ச்சி செய்தோம். “சுகுண விலாச சபையின் ஆக்டர்களாகிய நாங்கள் மற்ற சபைகளில் ஆக்டு செய்வதில்லை என்று பிரமாணம் செய்கிறோம்” என்று ஒரு பிரமாணக் கடிதத்தை வரைந்து அதில் நாங்கள் எல்லோரும் கையொப்பமிட்டோம். அதை மெல்ல மறுநாள் ரங்கசாமி ஐயங்காரைப் பார்த்தபொழுது, நான் அவரை ஒரு புறமாக அழைத்துக் கொண்டுபோய்ப் படித்துக் காட்டி, அவரது கையொப்பத்தையும் வாங்கிக்கொண்டேன். அன்று அவர் செய்த பிரதிக்ஞையினின்றும் அவர் தன் ஆயுள் வரை அணுவளவும் மாறவில்லை . அவரது பந்துக்கள், நண்பர்கள், ஆபீஸ் உத்தியோகஸ்தர்கள், இன்னும் பெரிய மனிதர்கள் அநேகர் அவரது மனத்தைக் கலைக்க எவ்வளவோ முயன்றும், மாறாதிருந்தார்; எவ்வளவு முயன்றும் அவர் மாறாதிருப்பதைக் கண்டு அந்தச் சபையார் கடைசியாக, சுகுண விலாச சபையில் சூத்திரர் மெம்பர்களாக இருக்கிறார்கள்; ஆகவே அவர்களே நாடகமாடும் பொழுது அவர்களுக்குப் பிராமணனாகிய நீ நமஸ்காரம் செய்யவேண்டி வந்தாலும் வரும், காலில் விழவேண்டி வந்தாலும் வரும்! ஆகையால் அதை விட்டுவிட வேண்டும் என்று அவர் தகப்பனார் மூலமாகவும் சொல்லிப் பார்த்தனர்! இதை நான் இங்குக் குறிப்பிட்டது, பிராமணர்களுக்கும் மற்ற ஜாதியாருக்கும் துவேஷம் உண்டு பண்ண வேண்டுமென்றல்ல; நான் எந்த ஜாதியாரையும் அவர்கள் ஜாதியின் பொருட்டுத் துவேஷிப்பதில்லை என்கிற விஷயம் என் நண்பர்கள் அனைவரும் அறிவார்கள்; ஆயினும் எங்கள் சபையைப் பற்றி நடந்த உண்மையையெல்லாம், என் சிறிய நண்பர்களுக்கு உள்ளது உள்ளபடி உரைத்திடல் வேண்டு மென்று நான் தீர்மானித்திருக்கிறபடியால் இதை எழுதலானேன். அன்றியும் இம்மாதிரியாக எவ்வளவோ நிர்பந்திக்கப்பட்டும், அந்த ரங்கசாமி ஐயங்கார் அணுவள வேனும் மனம் மாறவில்லை என்பதை எல்லோரும் அறியும் பொருட்டுமாம். இவரது மன உறுதியை வியந்து, இவருக்கு நான் என்ன கைம்மாறு செய்யக் கூடும்? இவர் இறந்து பல வருடங்கள் ஆயின; ஆயினும் இவர் எங்கள் சபைக்கும் எனக்கும் செய்த பேருபகாரத்திற்கு நான் செய்யத்தக்க கைம்மாறு என்னுளது? இதை எழுதும்பொழுது, என்னையு மறியாதபடி நான் கண்ணீர் விடுகின்றேனே அதுதான்!
மேற்சொன்னபடி எங்கள் சபை அங்கத்தினராகிய எம். வை. ரங்கசாமி ஐயங்காரை, மற்றொரு சபையார் வலித்துக் கொள்ளப் பார்த்தார்களே என்று அக்காலம் எனக்கு மிகவும் கோபம் பிறந்தது. அதன் மீது அச்சபையாரைத் தக்கபடி நான் கண்டிக்க வேண்டும் என்னும் எண்ணம் உண்டாயது. அவ்வாறு எனக்கு எண்ணம் உண்டானது தவறு என்று இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது. ஆயினும் அப்பொழுது தோன்றவில்லை. இப்பொழுதிருக்கும் சிறிது நற்புத்தி அப்பொழுது இல்லை; யாராவது எனக்கு ஏதேனும் கெடுதி தற்காலம் செய்வதாக என் மனதுக்குட்பட்டால், இவ்வாறு ஆலோசனை செய்கிறேன் - அவர்கள் செய்தது சரியாகவாவது இருக்கவேண்டும் தப்பாகவாவது இருக்க வேண்டும். சரியாக இருந்தால் நான், அவர்கள் மீது கோபம் கொள்வது பாபமாகும்; தப்பாகவிருந்தால், பரமேஸ்வரன் தண்டிக்கிறார் என்று சும்மா இருந்து விடுகிறேன். அக்காலம் எனது யௌவனத்தின் கொழுமையில் இந்தப் புத்தி எனக்குத் தோன்றாமற் போயிற்று என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டியதே.
மேற்கண்டபடி அச்சபையாரைக் கண்டிக்கத் தீர்மானித்தவனாய் உடனே அச்சபையார் எங்கு நாடகம் ஆடுகிறார்கள், அச்சபையின் அங்கத்தினர் யாவர் என்று அச்சபையைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அறிய முயன்றேன். சீக்கிரத்தில் அவர்கள் ஓர் ஒத்திகை நடத்துவதாக அறிந்து, எனது நண்பர் ஒருவர் மூலமாக அந்த ஒத்திகைக்கு ஒரு டிக்கட்டைப் பெற்று அந்த ஒத்திகையைப் பார்க்கப்போனேன். அச்சமயம் “பிரதாப சந்திர விலாசம்” என்னும் நாடகத்தை, எழும்பூரில் பெகன்ஸ் பீல்ட் (Beaconsfield) என்னும் நாடார் பங்களாவில் நடத்தினார்கள். எனக்கு டிக்கட் கொண்டுவந்து கொடுத்த நண்பராகிய தியாகராஜன் முதலியாரும் நானும் அன்றிரவு ஒத்திகையைப் பார்த்தோம். அதைப் பார்த்த பொழுது, அதில் அ. கிருஷ்ணசாமி ஐயர், “பிரதாப சந்திரனாக” நடித்தார். இவர்தான் பிறகு எங்கள் சபையைச் சேர்ந்து அது முதல் இதுவரையில் நூற்றுக்கணக்கான தமிழ், தெலுங்கு நாடகங்களில் முக்கிய ஸ்திரீவேஷம் தரித்து, எங்கள் சபைக்கு மிகவும் பெருமை கொண்டு வந்தவர். ஆகவே இவரைப்பற்றி சற்று விவரமாய் எழுதவேண்டியது என் கடமை என்றெண்ணி அவ்வாறு செய்கிறேன். அன்றைத் தினம் இவர் பாட்டைக் கேட்டவுடன், எனக்கு மிகவும் ஆனந்தம் உண்டாச்சுது. எப்படியாவது இவரை எங்கள் சபையில் அங்கத்தினராகச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று உடனே என் மனத்தில் ரகசியமாகத் தீர்மானித்தேன்.
என்னடா, நம்முடைய சபை அங்கத்தினரொருவரை இச் சபையார் வலித்துக் கொள்ளப் பார்த்தபொழுது நாம் எவ்வளவு துயரப்பட்டோம், கோபங் கொண்டோம். அப்படித்தானே அச்சபை அங்கத்தினர் ஒருவரை நாம் வலித்துக் கொண்டால் அவர்களுக்குமிருக்கும் என்னும் யோசனை எனக்குக் கொஞ்சமாவது இல்லாமற் போயிற்று! கிருஷ்ணசாமி ஐயருடைய பாடல் என் மனத்தைக் கவர்ந்த போதிலும் அவர் ஆண் வேடம் பூண்டு நடித்தது எனக்கு அவ்வளவு திருப்திகரமாயில்லை . இவருக்கு இவர் குரலுக்கேற்றபடி, ஸ்திரீ வேடம்தான் தகுந்தது என்று என் மனத்துக்குள் தீர்மானித்தேன். ஒத்திகை முடிந்து வீட்டிற்கு வந்த மறுநாள், என் நண்பராகிய மேற்சொன்ன தியாகராஜ முதலியார் மூலமாக, கிருஷ்ணசாமி ஐயரைப் பற்றிய சமாச்சாரங்களெல்லாம் தெரிந்து கொண்டு, மறு ஞாயிற்றுக் கிழமை எங்கள் சபை ஒத்திகைக்கு அவரை அழைத்து வரச்செய்து, கிருஷ்ணசாமி ஐயருடன் கலந்து பேசி, மெல்ல அவரை எங்கள் சபை அங்கத்தினராகச் சேரும்படி யுக்தி செய்தேன். சில தினங்கள் பொறுத்து அவரும் இசைந்து அப்படியே எங்கள் சபையைச் சேர்ந்தார். அச்சமயம் நாங்கள் மேற்குறித்த “லீலாவதி- சுலோசனா” நாடகத்தின் ஒத்திகையை நடத்திக் கொண்டிருந்தோம். மற்றப் பெரிய நாடகப் பாத்திரங்களெல்லாம் மற்றவர்களுக்கு முன்பே கொடுத்துவிட்டபடியால், மிகுதியாயிருந்த ஒரு சிறு நாடகப் பாத்திரமாகிய காந்திமதி யென்னும் பாகத்தை இவருக்குக் கொடுத்தேன். அவரும் சிறுபாகமாயிருக்கிறதென்று ஆட்சேபணை செய்யாமல் ஒப்புக்கொண்டு அந்தப் பாகத்தை எழுதிக்கொண்டு, உடனே எங்களுடன் சேர்ந்து ஒத்திகை நடத்தி வந்தார். இதில் இவருக்கு இரண்டு பாட்டுகளுக்குத்தான் இடமிருந்தது. அந்த இரண்டு பாட்டுகளையும் சுறுசுறுப்புடன் கற்று மிகவும் நன்றாய் ஒத்திகைகளில் பாடிக் கொண்டிருந்தார். இவ்விடம் என் பழைய நண்பராகிய இவரிடம் அப்பொழுதே இருந்த ஒரு பெரும் நற்குணத்தை நான் எழுத வேண்டியது அதி அவசியம். முதலில் மற்றொரு சபையில் கதாநாயகனாக வேடம் தரித்திருந்த போதிலும் எங்கள் சபையைச் சார்ந்த பொழுது ஒரு சிறு நாடகப் பாத்திரத்தை நடிக்க ஒப்புக் கொண்டார்! தற்காலத்தில் நாடக மேடையில் பயிற்சி ஒன்றுமில்லாதவர்கள்கூட, ஒரு சபையில் சேர்ந்தவுடன், கதாநாயகன் அல்லது கதாநாயகி வேடம் கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள்! மேலும் இவர் நல்ல சாரீரத்துடன் சங்கீதப் பயிற்சி நன்றாயடைந்தவராயிருந்தபோதிலும் இரண்டே இரண்டு பாட்டுகளைக் கொடுத்த போதிலும், போதும் என்று ஒப்புக்கொண்டு அதை நன்றாய்ப் பயின்று வந்தது, மெச்சத்தக்கது. தற்காலத்தில் இவரது சாரீரத்தில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாதவர்கள் ஒரு ஸ்திரீ வேடம் கொடுத்தால், இவ்வளவு பாட்டுதானா, இன்னும் அதிகம் வேண்டும் என்று சச்சரவிடுபவர்கள் பலரைக் கண்டிருக்கின்றேன். இந்தக் கிருஷ்ணசாமி ஐயர் எங்கள் சபையில் சற்றேறக்குறைய முப்பத்தொன்பது வருடங்களாக முக்கியமான பாகங்கள் நடித்ததைப் பற்றிப் பிறகு விஸ்தாரமாய் நான் எழுத வேண்டி வரும். ஆயினும் முதலில் மற்ற ஆக்டர்களெல்லாம் இவரிடமிருந்து கற்கவேண்டிய ஒரு முக்கியமான நற்குணத்தை நான் எடுத்துரைக்க வேண்டியது அவசியம். அதென்ன வென்றால், தான் எடுத்துக்கொண்ட பாத்திரத்தை நடிப்பதில் யாராவது இப்படி படித்தால் நலமாயிருக்கும் என்று கூறுவார்களானால் அதை அசட்டை செய்யாது கவனிக்கும் குணமேயாம். யார் என்ன சொன்ன போதிலும், இவர்களுக்கென்ன தெரியும், இவர்கள் என்ன நம்மைவிட அறிந்தவர்களாயென்று அவமதிக்காமல், இவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்வதா என்று கர்வமும் கொள்ளாமல், அவர்கள் சொல்லுவதை மரியாதையுடன் கவனிக்கும் குணம் மிகவும் அருமையானது. இந்த நற்குணத்தை என் பழைய நண்பராகிய கிருஷ்ணசாமி ஐயர், அன்று முதல், இன்று வரை உடைத்தாயிருக்கின்றார் என்று நான் உறுதியாகச் சொல்வேன். அன்றியும் முதலில் என்னைப் பார்த்த நாள் முதல், இதுவரையில் இவர் என்னை நாடக விஷயத்தில் தனது ஆசாரியனாக மதித்து வருகிறார். அக்கௌரவத்தை ஏற்க என்னிடம் பாண்டித்யமில்லையென்று எண்ணுகிறேன். ஆயினும் அதுமுதல் இதுவரை, சபையில் தமிழில் எந்த நாடகப் பாத்திரத்தை ஆட ஒப்புக்கொண்ட போதிலும், என்னிடம் வந்து இதை எப்படி நடிப்பது என்று எல்லா விவரங்களையும் பொறுமையாகக் கேளாமற் போவதில்லை. சென்ற 1930ஆம் வருஷம் தனக்கு ஏறக்குறைய ஐம்பத்தைந்து வயதாகியும், நாடகமாடுவதில் முப்பத்தேழு வருடங்கள் பயிற்சி பெற்றவராயினும், சற்றேறக் குறைய ஐந்நூறு நாடகங்களில் நடித்தவராயினும், “கொடையாளி கர்ணன்” என்னும் என்னுடைய ஒரு நாடகத்தில், குந்திதேவியாக நடிக்க நேர்த்தபொழுது, ஒவ்வொரு வரியையும் கிரந்தகர்த்தாவாகிய நான் எப்படி நடிக்க வேண்டுமென்று சொல்கிறேன் என்பதைக் கவனமாய்க் கேட்டு, பிறகு நடித்தார். இவரது இந்த வழக்கமானது நாடக மேடையில் பெயர்பெற வேண்டுமென்று விரும்பும் எனது இளைய நண்பர்களெல்லாம் நன்கு மதிக்கத்தக்கதென இதனை இங்கு வரையலானேன். ஆக்டர்களெல்லோரும் எவ்வளவு தான் தேர்ச்சி பெற்றவர்களாக்யிருந்தும் நாடகக் கர்த்தாவின் அபிப்பிராயத்தை முன்பு அறிந்து, பிறகே அந்நாடகத்தில் ஆடவேண்டியது அவசியமென்பது என்னுடைய உறுதியான எண்ணம்.
இந்த “லீலாவதி-சுலோசனா” நாடகமானது எங்கள் சபையாரால் 1893ஆம் வருஷம் அக்டோபர் மாதம் விக்டோரியா பப்ளிக்ஹாலில் ஆடப்பட்டது. இரவு 9 மணிக்கு ஆரம்பித்து மறுநாட்காலை 31
மணிக்கு முடித்தோம்! அக்காலத்தில் இத்தனை மணிக்குள் நாடகங்கள் முடிக்கவேண்டுமென்னும் நிபந்தனை கிடையாது. ஜீவனத்திற்காக நாடகமாடுபவர்கள், தெருக்கூத்துக்காரரைப்போல் 4 மணி வரையிலுங்கூட ஆடுவதுண்டு. இப்படி 61
மணிநேரம் இந்த நாடகம் நடந்தும் அதைப் பார்க்க வந்திருந்த ஜனங்களில் ஒருவரும் எழுந்திருந்து போகவில்லை! அன்றைத்தினம் ஏராளமான ஜனங்கள் வந்திருந்தார்கள் என்றே நான் சொல்ல வேண்டும். டிக்கெட் விற்றதனால் சபைக்கு அன்று வந்த ரொக்கம் 350 சில்லரை; இதன்றியும் எங்கள் அங்கத்தினர் ஏறக்குறைய எல்லோரும் வந்திருந்தார்கள். இந்த நாடகம் இத்தனை நாழிகை பிடித்தற்குக் காரணம், அதை முதலில் அச்சிட்டபடி ஒரு வார்த்தையும் குறைக்காமல் ஆடப்பட்டதேயாம். அச்சுக் காகிதத்தில் சுமார் 150 பக்கங்கள் அடங்கிய ஒரு நாடகத்தை ஒரு வரியும் விடாமல் ஆடுவதற்கு 612 மணி நேரம் பிடித்தது ஒரு ஆச்சரியமன்று. இதன்றியும் ஏறக்குறைய எல்லா ஆக்டர்களும் பாடினோம்! பாடினவர்களில் நானும் ஒருவன்! ராகம் தவறாமல் சுமாராகப்பாடும் சக்தி எனக்கிருந்தபோதிலும் அக்காலம் தாளம் எனக்கு நன்றாய் வராது. (இக்காலம் முற்றிலும் வராது!) அப்படித் தாளம் தவறி ஒரு பாட்டை நான் பாடியபொழுது, மேடையின் பேரில் பக்கப் படுதாவின் புறமாக நின்று கொண்டிருந்த எங்கள் கண்டக்டராகிய திருமலைப் பிள்ளை அவர்கள் காட்சி முடின்தவுடன் “சம்பந்தம், நீ நன்றாய் நடிப்பதை ஆபாசமாகப் பாட்டைப் பாடி ஏன் கெடுத்துக் கொள்கிறாய்?” என்று கேட்டார். அது முதல் நாடக மேடையின் மீது பாட்டைப் பாடுவதில்லையென்று தீர்மானம் செய்து அநேக வருஷங்கள் பாடாமலே இருந்தேன். பிறகு என் ஆருயிர் நண்பனான சி. ரங்கவடிவேலு முதலியார் வேண்டுகோளின்படி “வள்ளி மணம்” என்னும் நாடகத்தில் இத்தீர்மானத்தைக் கொஞ்சம் மாற்றினேன்.
அன்றைத்தினம் நாடகத்தில் சங்கீதத்தில் பெரும் கீர்த்தி பெற்றவர் எம்.வை. ரங்கசாமி ஐயங்காரே. இவர் கமலாகரன் வேஷம் பூண்டு பாடிய பாடல்கள் சபையோரனைவருடைய மனத்தையும் கவர்ந்ததென்றே நான் சொல்ல வேண்டும். இவர் பாடிய பாட்டுகளுக்கெல்லாம், ஒன்றும் விடாமல், எல்லாவற்றிற்கும் வந்திருந்த ஜனங்கள் கரகோஷம் செய்தனர் என்பது என் நினைவு. முக்கியமாக அந் நாடகத்தின் இடையில் ஒரு முக்கியமான காட்சியில், இவர் தாயுமானவர் பாடலில் தோடி ராகத்தில் “காடுங்கரையும்” என்னும் பாடலைப் பாடியது மிகவும் ரமணீயமாயிருந்ததென அனைவரும் புகழ்ந்தனர். அக்காட்சி முடிந்தவுடன், அக்காலத்தில் தமிழறிந்தவர்களுக்குள் பிரசித்தி பெற்ற பல தமிழ் நூல்களை அச்சிட்ட ராவ் பஹதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை என்னும் பெரிய மனிதர், நாகடமேடைக்குள் வந்து இப்பாட்டைப் பாடிய சிறுவன் யார் என்று விசாரித்து, என் நண்பராகிய எம். வை. ரங்கசாமி ஐயங்காரை நேராகக்கண்டு, சிலாகித்துப் போனார். இந்த “லீலாவதி - சுலோசனா” நாடகமானது அதற்கப்புறம் சற்றேறக்குறைய 50 முறை எங்கள் சபையாரால் ஆடப்பட்டிருக்கிறது. மற்றப் பாட்டுகளை யெல்லாம் மற்ற ஆக்டர்கள் எவ்வளவோ மாற்றிப் பாடியபோதிலும், இந்த “காடுங்கரையும்” என்னும் தாயுமானவர் பாடலை மாத்திரம், எந்த ஆக்டர் கமலாகரன் வேஷம் பூண்டபோதிலும், எம். வை. ரங்கசாமி ஐயங்கார் பாடிய அந்தத் தோடி ராகத்திலேயே பாடி வருகின்றனர். எம். வை. ரங்கசாமி ஐயங்காருக்கு இதர ஆக்டர்கள் செய்த கௌரவம் இதுவேயாகும். இவர் நடித்ததும் மிகவும் நன்றாயிருந்தது. என்னுடன் இந்த நாடகத்தில் கமலாகரன் வேஷம் பூண்டு அநேகர் நடித்திருக்கின்றனர். ஆயினும் இந்த வேஷத்தில் எம். வை. ரங்கசாமி ஐயங்காருக்கு இணையாக ஒருவரும் நடிக்கவில்லை என்பதே என் தீர்மானமான அபிப்பிராயம்; இந்த வேடத்திற்கு அவ்வளவு பொருத்தமானபடி அவர் பாடி நடித்தார்.
ஸ்திரீ வேஷங்களில் த. ஜெயராம் நாயகர் “லீலாவதி” யாக நடித்தது மிகவும் கொண்டாடப்பட்டது. இவருக்குப் பிற்காலம் எங்கள் சபையிலும் இதர சபைகளிலும் இந்த நாடகத்தில் அநேகர் இந்த “லீலாவதி” வேடம் பூண்டு நடித்திருக்கின்றனர். ஆயினும் கேவலம் வசனத்தை மாத்திரம் கருதுமிடத்து அன்றைத் தினம் இவர் லீலாவதியாக நடித்ததுபோல் மற்றொருவரும் நடித்ததில்லை என்று நான் நிச்சயமாய்க் கூறுவேன். இவர் அன்று ஒரு தரம்தான் இந்த லீலாவதியாக நடித்தார். பிறகு இவர் இந்த வேஷம் பூண்டிலர். இருந்தும் இவர் அன்றிரவு நடித்தது என் மனத்தில் இன்னும் படிந்திருக்கிறது. இவர் பிறகு இரண்டு முறை ஸ்திரீ வேடம் தரித்தபோதிலும் இவரது “லீலாவதி"க்குச் சமானமாக அவைகள் வரவில்லை. எங்கள் சபையில் முதல் அங்கத்தின ராகிய இவர் பூண்ட வேடங்களிலெல்லாம் “லீலாவதி"யே மிகச் சிறந்ததென்பதற்கு ஐயமில்லை. இப்பொழுது வயதாகி ஸ்தூல சரீரமுடையவராய்க் கேசம் நரைத்தவராயிருக்கும் இவரைப்பார்க்கும் என் இளைய நண்பர்கள், இவரா ‘லீலாவதி'யாக நடித்தார் என்று ஆச்சரியப்படக்கூடும். அப்பொழுது மெல்லிய ரூபமுடையவராயிருந்தார். ஸ்திரீ பாவத்தை நன்றாயறிந்து முக்கியமாக “லீலாவதி"யின் குணத்தை ஆராய்ந்தறிந்து பார்த்தவர்கள் யாவரும், இந்த “லீலாவதி” வேஷம் இவருக்குத்தான் தகும் என்று புகழ்ந்தார்கள். சுருக்கிச் சொல்லுமிடத்து எங்கள் சபையிலும் இதர சபைகளிலும் பின் வந்த “லீலாவதி"களெல்லாம் இவரையே ஓர் உதாரணமாக வைத்துக்கொண்டு, இவர் நடித்தது போலவே நடிக்க வேண்டுமென்று முயன்றனர் என்பதற்குச் சிறிதும் ஐயமில்லை .
ஆயினும் சங்கீதத்தில் மாத்திரம் இவர் பெயரெடுக்கவில்லை; என்னைப் போல்தான், தாளத்தில் கொஞ்சம் குறையுள்ளவர். இந்த வேஷத்தில் இவருக்குப் பின் வந்த அ. கிருஷ்ணசாமி ஐயர் இவரைவிட எளிதில் சங்கீதத்தில் மேம்பட்டவர் என்பதற்குச் சந்தேகமில்லை. இந்தக் கிருஷ்ணசாமி ஐயருக்கும், பிறகு எங்கள் சபையில் “லீலாவதி” வேஷம் பூண்ட அநேகருக்கும், ஜெயராம் நாயகர் இந்த நாடகப் பாத்திரத்தை இப்படி நடிக்க வேண்டுமென்று கற்பித்திருக்கிறார்.
இந்நாடகத்தில் “சுலோசனா” வேடம் தரித்தவர் அ. சுப்பிரமணிய ஐயர். இவர் நடித்தது மொத்தத்தில் நன்றாகவேயிருந்தது என்பது வந்திருந்தவர்களுடைய அபிப்பிராயம். என்னுடைய அபிப்பிராயமும் அப்படியே. இவர் நடித்ததும் நன்றாயிருந்தது, பாட்டும் நன்றாயிருந்தது. எம். வை. ரங்கசாமி ஐயங்காரைப் போல் சங்கீதத்தில் பெயரெடுக்கவில்லை; இருந்தபோதிலும் இரண்டிலும் சுமாராகவிருந்தது என்று சபிகர்களுடைய நன்மதிப்பைப் பெற்றார். இந்த வேடத்தில் ஜெயராம் நாயகர் “லீலாவதி” வேஷம் இப்படித்தான் நடிக்க வேண்டுமென்று பின் வந்தவர்களுக்கு ஓர் ஏற்பாட்டைத் தந்தது போல், இவர் தந்தார் என்று சொல்வதற்கில்லை. அப்பெருமை, எங்கள் சபையில் இந்த நாடகத்தை இரண்டாம் முறை போட்ட பொழுது “சுலோசனா” வேடம் பூண்ட, என் ஆருயிர் நண்பனான சி. ரங்கவடிவேலு முதலியாருக்கு உரித்தாயது.
ஹாஸ்ய பாகத்தில், எம். துரைசாமி ஐயங்கார் விசித்ர சர்மன் வேடம் பூண்டு, மிகவும் நன்றாய் நடித்தார்; இவருக்கென்றே இந்த நாடகப் பாத்திரம் எழுதப்பட்டதென்று முன்பே இதைப் படிப்பவர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். இவர் “அவசரப்படேல்” காட்சியில் நடித்தது இடைவிடா நகைப்பை உண்டாக்கியது; வந்திருந்தவர்கள் எல்லோரும் விதூஷகன் வேஷம் இவருக்கு மிகவும் பொருத்தமானது என்று புகழ்ந்தனர். இவர் நான்கைந்து காட்சிகளில் நடித்து சபையோரைச் சந்தோஷிக்கச் செய்தபோதிலும், ஒரே காட்சியில் வந்த ராஜ கணபதி முதலியார் இவரைவிட நன்றாக நடித்தார் என்பது என் அபிப்பிராயம். ராஜகணபதி முதலியார், வழிப்போக்கனான “சாரங்கன்” வேடம் பூண்டார். அவருக்குப் பாடவே தெரியாது. பிறகு இந்நாடகத்தில் நடித்த அநேகம் சாரங்கர்கள், பல பாட்டுகள் பாடிய போதிலும் இவர், அன்றைத்தினம் ஒரு பாட்டும் பாடவில்லை. அதற்கு முக்கியமான காரணம், ஆமைக்கு எவ்வளவு சங்கீதப் பயிற்சியுண்டோ அவ்வளவு பயிற்சி இவருக்கும் சங்கீதத்தில் உண்டு என்பதே! இவரது வசனமெல்லாம் பத்து அல்லது பன்னிரண்டு வரிக்குமேல் இராது. இருந்தும் இவர் சாரங்கனாக வேடம் பூண்டு பாத்திரத்திற்குத் தக்கபடி நடித்தது மிகவும் சிலாகிக்கத் தக்கதாயிருந்தது. நடிக்கப்பட்ட நாடகங்களின் குணாகுணங்களை எடுத்துக் கூறுவதில் மிகவும் தேர்ச்சி பெற்ற என் பால்ய நண்பராகிய ஸ்ரீனிவாச ஐயங்கார், ஒரு முறை இந்த “லீலாவதி சுலோசனா” பிறகு நடந்தபொழுது, கதாநாயகி, கதாநாயகன், மற்றுமுள்ள முக்கியமான பாத்திரங்களை யெல்லாம் விட்டு, இந்த ராஜ கணபதி முதலியார் ‘சாரங்கனாக’ நடித்ததுதான் மிகவும் மெச்சத்தக்கதாயிருந்ததென, அக்காலத்தில் அச்சிடப்பட்ட “இந்தியன் ஸ்டேஜ்” என்னும் பத்திரிகையில் எழுதியுள்ளார்.
இதற்குக் கொஞ்ச நாளைக்கு முன்புதான் புதிதாய் எங்கள் சபையைச் சேர்ந்த அ. கிருஷ்ணசாமி ஐயர், காந்திமதி வேஷம் பூண்டனர் என்பதை முன்பே தெரிவித்திருக்கின்றேன். இவர் அன்று நடித்ததில் ஒரு வேடிக்கையான சந்தர்ப்பம் நேரிட்டது. இவருக்கு இரண்டு பாட்டுகள் இருந்தன. அவற்றுள் இரண்டாவதைப் பாடவேண்டிய சந்தர்ப்பத்தில் பாட மறந்து விட்டனர்! அக்காட்சி முடிந்தவுடன், நான் நேபத்யத்தில் (Green Room) வேஷம் பூண்டு கொண்டிருக்கும் பொழுது, என்னிடம் ஓடிவந்து “சம்பந்தம்! சம்பந்தம்! என்னுடைய இரண்டாவது பாட்டைப் பாட மறந்து விட்டேன்! என்ன செய்வது?” என்று கவலையுடன் கேட்டார். நான் உடனே அப்பாட்டைக் கொஞ்சம் மாற்றி, பின்வரும் காட்சியில் அதைச் சந்தர்ப்பத்திற்கேற்றபடி செய்து, அதில் பாடும்படியாகச் சொன்னேன். அப்படியே அதைப் பாடி முடித்தார்! ஆக்டர்களாகிய எங்களுக்குத் தவிர நாடகத்தைப் பார்க்க வந்த மற்ற ஜனங்களுக்கு இது தெரியாது. இம்மாதிரியாக அநேக நாடகங்களில் தவறுகள் வாய்ப்பதுண்டு. அவற்றைச் சரிப்படுத்திக்கொண்டு சமாளிக்கும்படியான சக்தியிருப்பது மிகவும் அனுகுணமாம்.
மேற்கண்ட நாடகப் பாத்திரங்கள் தவிர, மற்றுமுள்ள பாத்திரங்களையும் தரித்தவர்கள் ஏறக்குறைய நன்றாகவே நடித்தார்களென்று எண்ணுகிறேன். என்னுடைய அபிப் பிராயத்தில் இந்த நாடகமானது பார்த்தவர்களுடைய மனத்தை ரமிக்கச் செய்ததன் முக்கியக் காரணம், சற்றேறக்குறைய எல்லா ஆக்டர்களும் தங்கள் பாடங்களையும் பாட்டுகளையும் நன்றாகக் கற்று மொத்தத்தில் குறையொன்றுமின்றி நடித்ததேயாம்.
நாடகம் அன்றிரவு 31
மணிக்கு முடிந்தவுடன், நாடகம் பார்க்க வந்த பெரிய மனிதர்களுள் பலர் நாடக மேடைக்கு வந்து எங்களைப் புகழ்ந்து கூறி உற்சாகப்படுத்தினர். எங்கள் வேஷங்களை யெல்லாம் களைந்த பிறகு ஆக்டர்களில் பெரும்பாலர் நாடகமாடிய மேடையின்மீதே படுத்துக் கொண்டு, பேசிக் காலம் கழித்தோம். அன்றிரவு நாங்கள் தூங்கவேயில்லையென்றே சொல்ல வேண்டும். நாடகம் நன்றாயிருந்தது என்கிற சந்தோஷத்தில் எங்களுக்குத் தூக்கமே வரவில்லை. பொழுது விடிந்தவுடன் பல் விளக்கிக்கொண்டு காப்பி வரவழைத்துச் சாப்பிட்டுவிட்டுப் பிறகுதான் அவரவர்கள் வீடு போய்ச் சேர்ந்தோம்!
இந்த “லீலாவதி - சுலோசனா” நாடகம்தான் எங்கள் சபையை முதல் முதல் சென்னையில் பிரபலமடையும்படி செய்தது. அந்நாடகம் அது முதல் இதுவரையில் எங்கள் சபையோரால் சுமார் 50 முறை ஆடப்பட்டிருக்கிறது. இந்த ஒரு நாடகத்தின் மூலமாக எங்கள் சபைக்கு 25000 ரூபாய்க்கு மேல் வரும்படி வந்திருக்கிறது. சபைக்கு எப்பொழுதாவது பணம் வேண்டியிருந்தால் “லீலாவதி - சுலோசனா” போடுகிறதுதானே என்று அங்கத்தினர் வேடிக்கையாகப் பேசிக்கொள்வார்கள். இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்புவரை, வெளியூர்களில் நாடகமாடும் பொழுதும், சென்னையில் டிசம்பர் மாதம் தொடர்ச்சியாக நாடகங்கள் போடும் பொழுதும், முதலில் இந்த நாடகத்தைத்தான் போடுவது எங்கள் சபையில் வழக்கமாயிருந்தது.
அன்றியும் இந்நாடகமானது மற்றச் சபையோர்களாலும் பெரும்பாலும் நடிக்கப்பட்டிருக்கிறது. நான் எழுதிய நாடகங்களுள் இதைவிட “மனோஹரன்” ஒன்று அதிகமாக ஆடப்பட்டிருக்கிறது.
எங்கள் சபையாரன்றி இந்நாடகத்தை முதல் முதல் நடித்தது, எனக்கு ஞாபகம் இருக்கும்வரை, கோவிந்தசாமி ராவின் ‘மனமோன நாடகக் கம்பெனி'யாரே. அவர்கள் சென்னையில் இந்த நாடகத்தை நடித்தபொழுது, என் உத்தரவைப் பெற்றே நடித்தார்கள். கோவிந்தசாமிராவ் என்னை வரும்படி நேராக அழைத்தார். முதல் முதல் நான் எழுதிய நாடகத்தை மற்றவர்கள் நடிக்கக் கண்டது இதுதான். அதுவரையில் நான் எழுதிய நாடகங்களிலெல்லாம் நானே நடித்துக்கொண்டிருந்தபடியால், இம்மாதிரியான சந்தர்ப்பம் எனக்கு வாய்க்காமற் போயிற்று. அக்கம்பெனியில் சிறந்த பாடகராயிருந்த சுந்தரராவ் என்பவர் சுலோசனையாக நடித்தார். குப்பண்ணராவ் என்பவர் லீலாவதியாக நடித்தார். இதில் ஒரு விசேஷம், நாடகத் தோரணையை நோக்குமிடத்து, லீலாவதியே கதாநாயகி என்று ஒருவிதத்தில் சொல்ல வேண்டும். அன்றியும் சுலோசனா பாத்திரத்தைவிட லீலாவதி பாத்திரத்தை ஆடுதல் மிகவும் கடினம் என்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. அப்படியிருந்தும், ஏறக்குறைய எல்லாக் கம்பெனிகளிலும், “அயன் ஸ்திரீ பார்ட்” என்று சொல்லப்படும் முக்கியமான ஸ்திரீ வேஷம் தரிப்பவரே, சுலோசனா பாத்திரமாக நடிப்பது வழக்கமாய்விட்டுது. கதாநாயகன் மனைவி கதாநாயகி என்று தீர்மானித்து விடுகிறார்கள். இது பெரும்பாலும் வாஸ்தவமாக இருந்த போதிலும், அப்படியிருக்க வேண்டிய அவசியமில்லை. இதை ஷேக்ஸ்பியர் நாடகங்களைக் கற்கும் என் இளைய நண்பர்கள் நன்கு அறிவார்கள். இதில் இன்னொரு வேடிக்கை, சுந்தரராவ் என்பவர் கொஞ்சம் ஸ்தூல சரீரமுடையவர்; குப்பண்ணராவ் மெல்லிய சரீரமுடையவர். இருந்தும் குப்பண்ணராவ் மூத்தவளாகவும் சுந்தரராவ் இளையவளாகவும் நடித்தார்கள். சில குடும்பங்களில் மூத்த பெண்ணைவிட இளைய பெண் பெரிய உடம்பை உடைத்தாயிருப்பதை நான் அறிந்திருக்கிறேன். இருந்தும், கூடுமானால் இதைத் தவிர்த்திருந்தால் நலமாயிருக்குமெனத் தோன்றியது. அன்றைத் தினம் நடிகரில் சுந்தர ராவ் பாடல் நான் முன்பே குறித்தபடி மிகவும் நன்றாயிருந்தது; ஆயினும் கேவலம் வசனத்தை மாத்திரம் கருதுங்கால் குப்பண்ணராவ் நடித்ததே சிலாகிக்கத்தக்கதாயிருந்தது. நான் பார்த்த அநேகம் லீலாவதிகளுக்குள், ஜீவனத்துக்காக நடிக்கும் நடர்களுக்குள் இவரே சிறந்தவரென்று நான் சொல்லவேண்டும். ஜீவனத்துக்காக நடிக்கும் பிரபல நடிகர்கள் சாதரணமாக அநேக காரணங்கள் பற்றி நெடு நாள் ஜீவித்திருப்பதில்லை. இதற்கு விரோதமாக இந்தக் குப்பண்ணராவ் அநேக வருஷங்கள் ஜீவித்திருந்தார். கடைசியாகச் சில வருஷங்களுக்கு முன், அவருக்கு வயது அதிகமான போதிலும், இந்த லீலாவதி வேடம் பூண்டு நடித்தபோது, பூர்வகாலத்திலிருந்த மிடுக்குடனேயே வெகு விமரிசையாக நடித்ததைக் கண்டு மகிழ்ந்தேன். இவரிடமிருந்து, இந்நாடக ஆசிரியனாகிய நானே, லீலாவதி பாத்திரம் நடிப்பதில் ஒன்றைக் கற்றுக்கொண்டேன்! அதுவரையில் எங்கள் சபையில் இந்த நாடகம் ஆடிய பொழுதெல்லாம் லீலாவதி, இரண்டாவது காட்சியில், தன் தங்கை சுலோசனையைக் கொல்வதற்காகப் பாலில் விஷமிடவேண்டிய சந்தர்ப்பத்தில், ஒரு காகிதப் பொட்டலத்தில் விஷமருந்தை வைத்து, அதை அப்பாலில் கொட்டிவிடுவது போல் நடித்து வந்தோம். இதுதான் லீலாவதி ஆக்டருக்கு நான் கற்பித்தது. முதல் முதல் குப்பண்ணராவ் இந்த கோவிந்தசாமி ராவ் கம்பெனியில் நடித்த பொழுது, வெகு புத்தி சாதுர்யமாய்த் தன் விரலில் ஏதோ ஒரு விஷத்தை இரகசியமாய் வைத்து, அதை குலோசனையறியாதபடி பாலில் கலக்கியதுபோல் நடித்துக் காட்டினார். அதைக் கண்டதும் எனக்கு ஆச்சரியமும் சந்தோஷமும் உண்டாயிற்று; இதுதான் சரியான முறை, இனி இப்படித்தான் செய்ய வேண்டுமென்று தீர்மானித்து அதுமுதல் இந்த நாடகத்தை நடித்த பொழுதெல்லாம் இம்மாதிரியாகவே நடித்து வந்திருக்கின்றோம். ஒரு விதத்தில் இந்த யுக்தி எனக்கு முன்பே தோன்றாமற் போயிற்றே என்று வெட்கப்பட்டேன். அன்றியும் இதனால் நான் இன்னொரு பெரும் நன்மை அடைந்தேன்.
நாடக ஆசிரியனாகிய எனக்கு எனது நாடகத்தைப்பற்றி எல்லாம் தெரியும் என்று நான் அடைந்திருந்த கர்வமானது பங்கப்பட்டு, மற்றவர்களிடமிருந்து, நான் எழுதிய நாடகங் களிலேயே நான் கற்க வேண்டிய விஷயங்கள் அனேகம் இருக்கக்கூடும் என்னும் புத்தி வந்தது. அது முதல் நான் எழுதிய நாடகங்களாயிருந்த போதிலும் அவற்றை மற்றவர்கள் நடிக்கும்போது, அதிலுள்ள நாடகப் பாத்திரங்கள் எப்படி நடிக்கிறார்கள் என்று கவனமாய்ப் பார்த்து வர வேண்டு மென்றும் புத்தியுண்டாயிற்று.
இக்கம்பெனியில், அன்று மற்றப் பாத்திரங்களாக நடித்தவர் களுடைய ஆக்டிங் எனக்குப் பிடிக்கவில்லை. “பஞ்சண்ணா” என்கிற செல்லப் பெயர் பெற்ற பஞ்சநாதராவ் என்பவர், விதூஷகனாகிய விசித்திரசர்மாவாக நடித்தது மாத்திரம் கொஞ்சம் சுமாராக இருந்தது. நாடகம் முடிவதற்கு வெகு நேரமாகியும் கடைசிவரையில் உட்கார்ந்து பார்த்துவிட்டுப் போனேன். நாம் எழுதிய நாடகத்தை ஜீவனத்திற்காக நாடகமாடுபவர்களும் ஆடினார்களே என்னும் சந்தோஷத்துடன் அன்றிரவு உறங்கினேன். இந்த நாடகத்தை அனேகம் கம்பெனியார்கள் பிறகு ஆடியிருக்கின்றனர். அதைப்பற்றி இன்னொரு சமயம் எழுதலாமென்றிருக்கிறேன்.
இந்நாடத்தை விட்டு விலகுமுன் இதை நான் அச்சிட்ட பொழுது, என் தந்தையின் அனுமதியின் மீது என் தாயாருடைய ஞாபகத்திற்கே இதை அர்ப்பணம் செய்தேன் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். இதை அச்சிட்ட சில மாதங்களுக்குள் என் ‘அருமைத்’ தந்தையார் என் தாயாரிடம் போய்ச் சேர, பிறகு 1923ஆம் வருஷம் வரையில் நான் அச்சிட்ட நாடகங்களை யெல்லாம், நான் தினம் தொழுதுவரும் தெய்வங்களாகிய என் தந்தை தாயாருக்கே அர்ப்பணம் செய்திருக்கிறேன் என்கிற விஷயம், எனது நாடகங்களை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு எல்லாம் தெரிந்த விஷயமே. இனி எனது நான்காவது நாடகமாகிய “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்தை, நான் எழுதிய கதையை எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.
எட்டாம் அத்தியாயம்
‘கள்வர் தலைவன்’ என்பது நான் பிறகு எழுதிய நாடகமாகும். அது சோகரசமமைந்தது. ஆங்கிலேய பாஷையில், நாடக வகுப்பில் டிராஜடி (Tragedy) என்று சொல்லும் வகுப்பைச் சார்ந்தது. கதாநாயகன் முதலியோர் மரிக்க, கடைசியில் துக்ககரமாய் முடியும் நாடகத்திற்கு டிராஜடி என்று பெயர். சம்ஸ்கிருத பாஷையில் இப்படிப்பட்ட நாடகங்கள் கிடையா. அதற்கு முக்கியக் காரணம், நாடகமானது இடையில் எவ்வளவு சோகரசம் கலந்ததாயிருப் பினும், முடிவில் சந்தோஷமாய் முடிய வேண்டுமென்பது சம்ஸ்கிருத நாடக லட்சணங்களில் முக்கியமான தொன்றாம். தமிழ் பாஷையிலும் அதுவரையில் இவ்வாறு சோகமாய் முடியும் நாடகங்கள் இல்லையென்றே கூற வேண்டும். தமிழ் பாஷையில் நான் அறிந்தவரை, சோகமாய் முடியும் நாடகங்களில் இதுதான் முதலாம். இவ்வாறு இந்நாடகத்தை துக்ககரமான முடிவுடன் முடித்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அது கீழ்வருமாறு:- முன்பு கூறிய ‘லீலாவதிசுலோசனா’ என்னும் நாடகம் விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆடப்பட்ட பொழுது, அதுவரையில் எங்கள் சபையில் அங்கத்தினராகச் சேராத என் பால்ய சிநேகிதராகிய ஸ்ரீனிவாச ஐயங்கார் மற்றவர்களைப் போல் அதைப் பார்க்க வந்தாராம். அது அப்பொழுது எனக்குத் தெரியாது. பிறகுதான் அறிந்தேன். அந் நாடகத்தைப் பார்த்த பிறகு எனது நண்பர் ஒரு பத்திரிகையில் (ஹிந்துப் பத்திரிகையில் என்று எனக்கு ஞாபகம்) அதைப்பற்றி ஒரு விமரிசை எழுதினார். அன்றியும் பிறகு ஒருநாள் அவர் என்னைச் சந்தித்த பொழுது, அவரது அபிப்பிராயத்தை எனக்கு நேராகவும் அறிவித்தார். அதன் தாத்பர்யம் என்னவென்றால், “நாடகம் நன்றாகத் தானிருந்தது; நன்றாகத்தான் நடிக்கப்பட்டது; ஆயினும் நாடகாசிரியன் அதைக் கலியாணமாகிய சந்தோஷத்துடன் முடித்திருக்கக் கூடாது; துக்ககரமான மரணங்களுடன் முடித்திருக்க வேண்டும். எங்ஙனமெனில், சுலோசனையைக் கமலாகரன் ஸ்ரீதத்தன் உத்தரவின்படி கொன்றிருக்கவேண்டும்; உடனே ஸ்ரீதத்தன் ஓடிவந்து, சுலோசனை நிரபராதியாகக் கொல்லப் பட்டதைக் கண்டு தன்னைத்தானே வெறுத்துக்கொண்டு தற்கொலை புரிந்திருக்க வேண்டும்; இதைவிட்டு, இந் நாடகாசிரியன், சுலோசனையும் ஸ்ரீதத்தனும் மணம் புரியும்படி விட்டது, தற்கால நாடகவியலுக்குப் பொருத்தமானதன்று” என்று தெரிவித்தார். நாடகத்தை சோகரசத்துடன் முடிக்க இந் நாடக ஆசிரியனுக்குத் தைரியம் இல்லை என்று ஏளனம் செய்தார். இதைக் கேட்டவுடன், எனக்குள் ஓர் வீம்பு உண்டாயிற்று. ‘ஆகட்டும்! அப்படியா சமாச்சாரம்! நான் இனி எழுதுகிற ஒரு நாடகத்தில், ஒரு நாடகப் பாத்திரம் பாக்கியில்லாமல் எல்லோரையும் கொன்று, முடிவில் உனக்கு எவ்வளவு சோக ரசம் வேண்டுமோ, அதை வட்டியுடன் தருகிறேன்!” என்று தீர்மானித்தேன். அந்தத் தீர்மானத்துடன் எழுதிய நாடகம் “கள்வர் தலைவன்.
இக் “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்தைப் பெரும்பாலும் எங்கள் எழும்பூர் பங்களாவாகிய “பம்மல் அவுஸ்” என்னும் இடத்தில் எழுதி முடித்தேன். அச்சமயம் யாதோ ஒருகாரணத்தினால் என் மனம் சஞ்சலமடைந்திருந்தது. அதனால் ஒரு நாடகத்தில் எவ்வளவு சோகரசமமைக்கக் கூடுமோ அவ்வளவையும் நிரப்பி இந்த நாடகத்தை எழுதினேன். இந்நாடகத்தை எனது நண்பர்கள் வாசித்துப் பார்ப்பார்களாயின் இதன் உண்மை அவர்களுக்குத் தெரியும். புத்திக் கூர்மையுடைய ஒருவன் ஈசன் தனக்கருளிய புத்தியை நல்வழியில் உபயோகியாது, தீய வழியில் உபயோகித்தால், அதனால் என்னென்ன தீமைகள் நேர்கின்றன என்பதே இந் நாடகத்தின் முக்கிய கருத்தாம்.
முன்பு நான் எனது நண்பர்களுக்குத் தெரிவித்தபடி, என் வழக்கத்தின்படி, எங்கள் சபையிலிருந்த இன்னின்ன அங்கத்தினர்க்கு இன்னின்ன நாடகப் பாத்திரம் என்று தீர்மானித்து, அந் நாடகத்தை எழுதி முடித்தேன். என் பழைய நண்பராகிய அ. வெங்கடகிருஷ்ணப் பிள்ளை , ஏதாவது ஒரு நாடகத்தில் தான் நாடகத் தலைவனாக நடிக்க வேண்டுமென்று என்னைக் கேட்டுக்கொள்ள, அவர் படிக்கும் சக்தியைக் கருதி அவருக்காக “ஹேமாங்கதன்” என்னும் நாடகப் பாத்திரத்தை எழுதினேன். சோகரசத்தில் நன்றாய் நடிப்பாரெனக் கருதி கிருஷ்ணசாமி ஐயருக்காக “சௌமாலினி” என்னும் நாடகப் பாத்திரத்தை எழுதினேன். தன் பாடல்களினால் சபையோரை மிகவும் ரமிக்கச் செய்வாரெனக் கருதியும் எம். வை. ரங்கசாமி ஐயங்காருக்கு “பால சூரியன்” பாத்திரத்தை ஏற்படுத்தினேன். ஸ்வாமி கொடுத்த புத்தியை நல்வழியில் உபயோகிக்காமல், கெட்ட வழியில் உபயோகித்து, விஷப்பரீட்சகனாகி, அதனால் பல துயரங்களை அனுபவித்து, முடிவில் தன் உயிரையே இழந்த ஜெயபாலன் என்னும் பாத்திரத்தை நான் எடுத்துக்கொண்டேன். “லீலாவதி - சுலோசனா” நாடகத்தில் பிரதாபசீலனாக நன்றாக நடித்த ராஜரத்தின முதலியாருக்கு “சௌரிய குமாரன்” என்னும் பாத்திரத்தைக் கொடுத்தேன். வாஸ்தவத்தில் வயிறு கொஞ்சம் பெருத்தவராயிருந்த ராஜகணபதி முதலியாருக்காக, “வயத்தான்” என்னும் கள்வன் பாத்திரம் எழுதி வைத்தேன்.
அக்காலத்தில் எங்கள் ஆக்டர்களெல்லாம் ஒத்திகைகளை வெகு குதூஹலத்துடனும் சுறுசுறுப்புடனும் நடாத்துவது வழக்கம். இப்போதிருப்பதுபோல் பெரும்பாலும் அக்காலம் அச்சிட்ட நாடகங்கள் கிடையாது. ஒவ்வொரு ஆக்டரும் தனது பாகத்தை எழுதிக்கொண்டுதான் படித்தாகவேண்டும். நான் காட்சி காட்சியாக எழுதி முடித்தவுடன், அவரவர்கள் தங்கள் தங்கள் பாகத்தை அவ்வப்பொழுதே எழுதிக்கொண்டார்கள். இப்படித் தாங்களாக எழுதிக் கொள்வதனால் ஒரு பெரும் நன்மையுண்டு. ஒரு ஆக்டருக்குப் பாடம் நன்றாய் வர வேண்டுமென்றால், தன் பாகத்தைப் பத்து முறை படிப்பதை விட, ஒரு முறை எழுதுதல், அதிகப் பிரயோஜனத்தைத் தரும்.
நாடகத்தைச் சீக்கிரம் கொடுக்க வேண்டுமென்று எண்ணி, ஒத்திகைகள் இரவு பகலாக நடத்தினோம். அச்சமயம், என் தகப்பனார், அண்ணன்மார் முதலிய பந்துக்கள், என் மனைவி உட்பட, காசி யாத்திரைக்குப் போயிருந்தார்கள். நான் மாத்திரம் லா (Law) பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தபடியால், அவர்களுடன் போவதற்கில்லை. நான் தனியாக “பம்மல் ஹவுஸ்” என்னும் எங்கள் பங்களாவில் இருந்தேன். என் தகப்பனார் வண்டி, எங்கள் வண்டி இரண்டும் என் சுவாதீனத்தில் இருந்தன. காலை எழுந்தவுடன் ஒரு வண்டியைப் போட்டுக்கொண்டு எழும்பூரிலிருந்து பட்டணம் வந்து, சில ஆக்டர்களை அழைத்துக்கொண்டு, எங்கள் பங்களாவுக்குப் போய், அவர்களுக்கு ஒன்பது மணிவரை ஒத்திகை நடத்துவேன். பிறகு அவர்களை மறுபடி பட்டணத்துக்குக் கொண்டுவந்து விடுவேன். மத்யானம் என் லா பரீட்ச்சைக்காகப் படிப்பேன். சாயங்காலம் இன்னொரு வண்டியிலேறி, மற்ற ஆக்டர்களையெல்லாம் அவரவர்கள் வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு, எங்கள் சபைக்குப்போய் அவர்களுடைய பாடங்களை ஒத்திகை செய்து, அவரவர்கள் வீட்டிற்குக் கொண்போய் விட்டுவிட்டு, இரவு ஒன்பது மணிக்கு நான் எழும்பூர் போய்ச் சேர்வேன். இம்மாதிரியாக ஒத்திகைகள் வெகு மும்முரமாக நடத்தி நாடகத்தைச் சித்தம் செய்தோம். ஓர் இரவு உடையுடன் ஒத்திகை போட்டுப் பார்த்த பிறகே, விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடகமாடத் தினம் குறித்துக்கொண்டோம்.
நோட்டீசுகளையெல்லாம் முன்போலவே ஏராளமாய்ப் பிரச்சாரம் செய்து, விக்டோரியா ஹாலில் 1894 ஆம் வருஷம் மார்ச்சு மாதம் 31ஆம் தேதி நாடகத்தை நடத்தினோம். இந்நாடகத்திற்கு வேண்டிய பாட்டுகளையெல்லாம், முன்பு கோபித்துக் கொண்டு போன தாயுமானசாமி முதலியார், மறுபடியும் எங்களிடம் வந்து சேர்ந்து, தக்கபடி எழுதிக் கொடுத்தார். அப்பாட்டுகளையெல்லாம் கீதமஞ்சரி என்னும் பெயருடன் அச்சிட்டிருக்கும் பாட்டு புஸ்தகத்தில் காணலாம்.
இனி அன்றையத் தினம் நடந்த நாடகத்தைப்பற்றி விவரமாக எழுதுகிறேன்.
“கள்வர் தலைவன்” என்னும் இந் நாடகத்தைச் சரியாக ஒன்பது மணிக்கு ஆரம்பித்தோம். முடிவதற்குச் சற்றேறக் குறைய 2 மணி ஆயிற்று. “லீலாவதி-சுலோசனா"வைப் போல் அத்துணைப் பெரிய நாடகமாயில்லாவிட்டாலும், ஐந்து மணி நேரம் பிடித்தது. இப்பொழுது இந்நாடகத்தை எங்கள் சபையோர் ஆடுவதென்றால் ஏறக்குறைய நான்கு மணிக்குள் முடித்துவிடலாம் என்று தோன்றுகிறது. அப்பொழுது அத்துணை நாழிகை பிடித்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அக் காலம் ஒவ்வொரு காட்சி முடிந்தவுடன், இன்னொரு காட்சி ஆரம்பிப்பதற்கு முன் டிராப் படுதாவை விட்டு பின் நடக்க வேண்டிய காட்சிக்காக நாடக மேடையில் ஏற்பாடு செய்வது வழக்கம். இப்பொழுதும் சில சமயங்களில் சில காட்சிகளுக்கிடையில் அவ்வாறு செய்தபோதிலும் பெரும்பாலும் அவ்வழக்கத்தை விட்டோமென்றே சொல்லலாம். பார்சி நாடகக் கம்பெனியார் முதல் முதல் சென்னைக்கு வந்து, ஒரு நாடகத்தில், இரண்டு மூன்று முறை டிராப் படுதாவை விட்டு அவகாசம் கொடுக்கும் வழக்கத்தை சென்னையிலுள்ள நாடகக் கம்பெனிகளுக்குக் கற்பித்தனர் என்றே சொல்ல வேண்டும். இவ் வழக்கத்தை அனுசரித்தால் நலமாயிருக்குமென்று தோற்றுகிறதெனக்கு. நாடகங்கள் எழுதும் பொழுதே, இதற்குத் தக்கபடி நாடக ஆசிரியர்கள் எழுதி வந்தார்களானால் மிகவும் நலமாயிருக்கும். மேடையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டிய இரண்டு பெரிய காட்சிகளுக் கிடையில், ஏற்பாடுகளில்லாத-திரை மாத்திரம் விட வேண்டிய ஒரு சிறிய காட்சியை அமைத்து, எழுதி வருவார்களானால், நாடகமாடும் பொழுது, காட்சிக்கும் காட்சிக்கும் இடையில் அதிக அவகாசம் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாமல், நாடகமானது விரைவில் நடந்தேறி, சீக்கிரம் முடிவு பெறும் நான் பிற்காலத்தில் எழுதிய நாடகங்களில் பெரும்பாலும் இம் முறையை அனுசரித்திருக்கிறேன்.
இக் “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்தில் காட்சிகளில் செய்ய வேண்டிய “சீனிக் அரேன்ஜ்மென்ட்ஸ் ” (Scenic arrangements) என்று சொல்லப்பட்ட நாடக மேடை ஏற்பாடு களை எல்லாம், எனது நண்பர்களாகிய ஸ்ரீனிவாச ஐயங்காரும், ஸ்ரீனிவாசபாய் என்பவரும் தலைமேற்கொண்டு வெகு விமரிசையாய்ச் செய்தனர். அவ்விருவரும் இன்னும் எனது இதர நண்பர்களுடன் “லீலாவதி- சுலோசனா” நாடகத்தைப் பார்த்த பிறகு, எங்கள் சபையில் அங்கத்தினராகச் சேர்ந்தனர். இது ஒன்றே அந்த “லீலாவதி- சுலோசனா” என்னும் நாடகம் நன்றாகயிருந்ததென்பதற்குப் போதுமான அத்தாட்சியாம். இந்த நாகடத்தில்தான் நாடகத்தின் காலத்திற்குத் தக்கபடி, மேற்சொன்ன ஏற்பாடுகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து நாங்கள் செய்ய ஆரம்பித்தது. இதற்கு முக்கியக் காரணபூதராயிருந்தது எனது நண்பராகிய ஸ்ரீனிவாச ஐயங்காரே. அதற்கு முன்பாகச் சாதாரணமாக நாடக மேடைகளில் நடந்து வந்த ஆபாசத்தைச் சற்று விவரமாகக் குறித்தால்தான், எனது நண்பர்களுக்கு இவ்விஷயம் வெளியாகும்.
அக்காலத்தில் சில முக்கியமான காட்சிகளுக்குத் தவிர, மற்றக் காட்சிகளுக்கெல்லாம் இன்னின்ன திரையை விட வேண்டுமென்னும் நியமமே கிடையாதென்றே சொல்ல வேண்டும். நான் எனது கண்ணாரக்கண்ட ஒரு உதாரணத்தைக் கொடுக்கிறேன். “திரௌபதி வஸ்திராபஹரணம்” என்னும் நாடகத்தில் துரியோதன மகாராஜன் தன் மாமனாகிய சகுனியிடம் தான் பாண்டவர் சபையில் பட்ட அவமானத்தைச் சொல்லும் காட்சிக்கு ஒரு தெருப்படுதா விடப்பட்டிருந்தது! அத்தெருப் படுதாவில் சென்னை போஸ்ட் ஆபீசும் மின்சார வண்டிகள் போவதற்காக வேண்டிய இரும்புக் கம்பங்களும், தந்திகளும் வரையப்பட்டிருந்தது! நாடகம் நடந்த காலம் துவாபர யுக முடிவு; அன்றியும் வணங்காமுடி மன்னனும் அவன் மாமனாகிய சகுனிராஜனும் உட்கார்ந்து பேச, அந்த வீதியின் மத்தியிலிருந்ததுபோல், ஆஸ்டிரேலியா தேசத்தில் செய்யப்பட்ட இரண்டு பென்ட்வுட் (Bent Wood) நாற்காலிகள் போடப்பட்டிருந்தன! என்னடா, இப்படி துவாபர யுகத்தில் நடந்திருக்குமா? ராஜாதி ராஜனெனப் பெயர் பூண்ட துரியோதனன், சகுனியுடன் மந்திராலோசனை செய்யும் பொழுது, ஒரு வீதியில்தான் செய்வானா? அதுவும் சென்னப் பட்டணம் போஸ்ட் ஆபீசுக்கெதிராகவா? அவர்களுக்கு பென்ட் பிவுட் நாற்காலிகள் தவிர, உட்கார வேறு ஆசனங்க ளில்லையா? என்று இம்மாதிரியான கேள்விகளைக் கேட்பார், அக்காலம் அதிகமாக இலர். இப்படிப்பட்ட ஆபாசங்களையெல்லாம் தவிர்க்கவேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு, நாடகத்தின் காலத்திற்கும் காட்சிகளுக்கும் தக்கபடி அரங்க பூமியில் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று மன்றாடி, எனது நண்பர், இக் ‘கள்வர் தலைவன்’ எனும் நாடகத்திற்கு மிகுந்த சிரத்தையுடன் கஷ்டப்பட்டு ஏற்பாடுகள் செய்தார். அதற்கு முன் எங்கள் சபையிலும் மேற்சொன்ன படியான ஆபாசங்கள் பல இருந்தன; இப்பொழுதும், இக்குற்றமானது முற்றிலும் அற்றுப் போய் விட்டது என்று நான் சொல்லவில்லை. ஆயினும் தற்காலம் கூடிய மட்டும் இப்படிப்பட்ட ஆபாசமான விஷயங்கள் இராவண்ணம் பார்த்துக் கொள்கிறோம். நம் நாட்டிலுள்ள நாடகக் கம்பெனிகளிலும், இதர சபைகளிலும், இக்குற்றமானது முற்றிலும் களையப்பட்டால் மிகவும் நலமெனவெண்ணி, இவ்விஷயத்தைப்பற்றி, சற்று விவரமாய் எழுதலானேன். நாடக நிகழ்காலத்தை உணர்ந்து, அக்காலத்திற்கேற்றபடியும், காட்சிக்கு ஏற்றபடியும் ஏற்பாடுகள் செய்வது எக்காரணத் திலாவது கடின மாயிருந்தால், மேல் நாட்டாரும் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் செய்கிறபடி, வெறும் திரையொன்றை விடுவதே மேலாகும்.
இந்நாடகத்திற்காக ஸ்ரீனிவாச ஐயங்காரும், ஸ்ரீனிவாச பாய் என்பவரும் செய்த ஏற்பாடுகளைப்பற்றி இன்னொரு விஷயம் எடுத்துரைக்க விரும்புகிறேன். இந் நாடகத்திற்குச் செய்த மேற்கண்ட ஏற்பாடுகளெல்லாம் மிகவும் பொருத்த மானவையாயும், அழகாயும் இருந்தபோதிலும், அதற்காக அவர்கள் சபையின் பணத்தைச் செலவழித்த ரொக்கமெல்லாம் சுமார் ஏழரை ரூபாய் என்று எனக்குக் கவனமிருக்கிறது! ஆகவே நாடகங்களை நடத்த வேண்டுமென்று விரும்பும் எனது நண்பர்கள், இவ்வாறு செய்வதில் அதிக செலவு பிடிக்குமென்று பயப்பட வேண்டியதில்லை. நூற்றுக் கணக்காகக் செலவழித்துக் காட்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டிய நிமித்தமில்லை. காலத்திற்குத் தக்கபடி ஏற்பாடு செய்ய வேண்டுமென்பதுதான் முக்கியம் என்று அறிவார்களாக.
இக் “கள்வர் தலைவன்” நாடகம் அன்று நடித்தபொழுது முக்கியமாகப் பெயர் பெற்றவர்கள், சௌமாலினியாக நடித்த அ. கிருஷ்ணசாமி ஐயரும், பாலசூர்யனாக நடித்த எம். வை. ரங்கசாமி ஐயங்காருமே; இவர்களுடைய பாடல்களும் வசனமும் மிகவும் நன்றாக இருந்ததென்று எல்லோரும் புகழ்ந்தனர். முக்கியமாகப் பாலசூர்யன், தன் தாயாகிய சௌமாலினியை விட்டுச் சிறைச்சாலையிலிருந்து பிரிக்கப்பட்ட காட்சி, எல்லோருடைய மனத்தையும் உருக்கியது. சௌமாலினி தன் கைக் குழந்தையுடன் மரணமடைந்த காட்சி அநேகம் ஸ்திரீ புருஷர்கள் கண்ணீர்விடச் செய்ததெனக் கேள்விப்பட்டேன். நானும் ஜெயபாலனாக நடித்தது நன்றாயிருந்ததெனச் சொன்னார்கள்.
நான் அன்று ஜெயபாலன் வேடம் பூண்டதில் ஒரு சிறு சமாச்சாரம் ஞாபகமிருக்கிறது. அப்பொழுது எனக்கு வயது 21. நல்ல யௌவனம். என் தாடைகளெல்லாம் நல்ல ரக்த புஷ்டியுடையவைகளாயிருந்தன. விஷத்தினால் பீடிக்கப்பட்ட ஜெயபாலன் வேடத்திற்கு அப்படி யிருக்காதென்றெண்ணித் தாடைகள் வற்றினவைகளாய்த் தோற்றுமாறு, நாடக தினத்திற்குச் சற்றேறக் குறைய ஒரு மாச காலத்துக்கு முன்பாக, ஒரே வேளை உணவு உட்கொண்டு வந்தேன்! தற்காலம் எப்படிப்பட்ட ரக்த புஷ்டியுடையவனையும், மெலிந்த வனாகத் தோற்றும்படி செய்யவல்ல-முகத்தில் பூசும்படியான வண்ணங்களின் குணத்தை அப்போது அறிந்திலன். அறிந்திருந்தேனாயின் நான் அவ்வாறு கஷ்டப்பட்டிருக்க வேண்டியதில்லை.
இந்நாடகத்தைப்பற்றி இன்னொரு சமாச்சாரம் முக்கியமாக எனக்கு ஞாபகம் வருகிறது. நாடகத்தின் இடை இடையில் ஆக்டர்கள் நன்றாய் நடிக்கும்பொழுதெல்லாம் சபையோர்கள் கரகோஷம் செய்து வந்த போதிலும், நாடகம் பூரணமாகி முடிந்தவுடன், எல்லோரும் மௌனமாயிருந்தனர்! ஒரு பத்து விநாடி செயலற்றிருந்தே பிறகு மெல்ல எழுந்து அவரவர்கள் விட்டிற்குச் சென்றனர்; இதற்கு முக்கியமான காரணம் கடைசி காட்சியில், கள்வர்கள் தவிர மற்றெல்லா நாடகப் பாத்திரங்களும் அரங்கத்தில் மடிந்ததே என்பதற்குச் சந்தேகமில்லை. மிகவும் துக்ககரமாய் முடிந்தது ஜனங்களைப் பிரமிக்கச் செய்தது; திருப்தியைக் கொடுக்கவில்லை; இதுவரையில் பாராதபடி, என்னடா இப்படி நாடகம் முடிந்ததே என்கிற ஆச்சரியத்துடனும் விசனத்துடனும் சென்றனர் என்றே சொல்ல வேண்டும். இதைப்பற்றி, இக் ‘கள்வர் தலைவன்’ நாடகத்தை நான் அச்சிட்ட பொழுது, பாயிரத்தில் எனது நண்பராகிய ஸ்ரீனிவாஸ ஐயங்கார் வெகு விமரிசையாய் எழுதியிருக்கிறார். இதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பும் நண்பர்கள் இந்நாடகத்தின் முதற் பதிப்பில், ஆங்கிலத்தில் இதைக் காணலாம். இப் புஸ்தகம் இரண்டு பதிப்பும் ஆகிவிட்டது. மூன்றாம் பதிப்பு சீக்கிரத்தில் வெளிவரும்.
இந்நாடகத்தைப்பற்றிக் கடைசியாக என் நண்பர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், இந்நாடகமானது சோகரசமமைந்ததாய், மரணங்களுடன் முடிவு பெறுகின்றமையால், கடைசியில் எங்கள் சபை வழக்கம்போல், “கல்லார்க்கும் கற்றவர்க்கும்” என்னும் ஸ்தோத்திரப் பாடலையாவது அல்லது மங்களப் பாட்டையாவது, பஹிரங்கமாய்ப் பாடாது நிறுத்தியதேயாம். அதுமுதல் சோகத்துடன் முடியும் நாடகங்களிலெல்லாம் இந்த வழக்கத்தை அனுசரித்து வருகிறோம்; ஆயினும் பழைய வழக்கத்தை முற்றிலும் விடக்கூடாதென்று திரைக்குப் பின்னால், மெல்ல, மேற்சொன்ன பாட்டுகளைப் பாடுகிறோம். தற்காலத்தில் இந்தக் “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்தை முதல் முதல் என் நண்பர்களுக்கெல்லாம் படித்துக் காட்டிய பொழுதே, எனது பழைய நண்பராகிய ஜெயராம் நாயகர், “என்னப்பா இது? மிக்க துக்ககரமாயிருக்கிறதே! கடைசியில் எல்லோரும் இறந்து போய்விடுகிறார்களே ! அசுபமாய் முடிகிறதே! இதை ஆடுவது நமது சபைக்கு விருத்திகரமல்ல” என்று ஆக்ஷேபித்தார். அவர் சொன்னதற்குத் தகுந்தாற்போல், எங்கள் சபையார் இந்த நாடகத்தை நடித்த பிறகு பலவிதக் காரணங்களால் ஒரு வருஷம் வரையில் ஒரு நாடகமும் ஆடவில்லை! அங்கத்தினர்க்குள் குட்டிக் கலகங்கள் பிறந்து சபை செயலற்றிருந்தது. அன்றியும், இது என் சொந்த நாடகமாயிருந்த போதிலும் இதன்மீது நான் அவ்வளவு பிரீதி கொள்ளாததற்கு இன்னொரு முக்கியமான காரணம் நேர்ந்தது. இந்நாடகத்தை நடித்தபொழுது, என் அருமைத் தந்தை காசி யாத்திரையாகப் போயிருந்தார் என்று முன்பே தெரிவித்தேனல்லவா? அவர் காசியிலிருந்த பொழுது இந்நாடகத்தை நேரிற்பார்த்த, அவரது அந்தரங்க சிநேகிதர்களில் ஒருவராகிய சப் ஜட்ஜ் வேலை செய்து பென்ஷன் வாங்கிக்கொண்ட, கனகசபை முதலியார் என்பவர், என் தகப்பனாருக்கு இந்த நாடகத்தையும், நான் அதில் நடித்த விதத்தையும் புகழ்ந்து நான்கு ஐந்து பக்கங்கள் எழுதியனுப்பினார். இந்தக் கடிதம் இன்னும் என்னிடம் பாதுகாத்து வரப்பட்டிருக்கிறது. காசி யாத்திரையிலிருந்து திரும்பி வந்த என் தகப்பனார் அதை என்னிடம் கொடுத்து, அந்த நாடகத்தை நான் பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தினார். ஒரு முறை ஆடிய நாடகத்தை மறுமுறை ஆடுவதா என்று என் அறியாமையால் மறுத்தேன். அவ்வளவுதான் அக்காலத்தில் நாடகங்களைப் பற்றி எனக்கிருந்த அறிவு; நல்ல நாடகமாயிருந்தால் பலர் பார்க்கும்படியாக அதைத் திருப்பித் திருப்பி ஆடவேண்டு மென்று என் தந்தையார் எவ்வளவு சொல்லியும் என் செவிக்கேறவில்லை. ஒரு நாடகமானது அடிக்கடி ஆடப்படுவதே அதற்குப் பெருமையென்பதை அப்பொழுது சற்றும் அறிந்திலன். இவ்வாறு என் மூடத்தனத்தினால் நான் பிடிவாத மாய் மறுக்கவே, என் தகப்பனார், அதைப்பற்றிப் பேசுவதை விட்டனர். பிறகு சில மாதங்களுக்குள், என் பூர்வ பாபவசத் தால், என் தந்தை ‘கான்சர்’ என்னும் தீராத நோயால் பீடிக்கப்பட்டார். வைத்தியர்கள் இது தீராத நோய், அவர் பிழைப்பது அரிது என்று எங்களுக்கு இரகசியமாகத் தெரிவித்தனர்; அவருக்கும் இவ்வியாதி நீங்கி நாம் பிழைப்பது கடினம் என்று தோன்றிவிட்டது. இப்படியிருக்கும் சமயத்தில், ஒருநாள் என் அருமைத் தந்தை “சம்பந்தம், நான் இறப்பதற்குள், உனது நாடகம் ஒன்றைப் பார்த்துவிட்டுத்தான் இறக்கவேண்டும்” என்று வற்புறுத்தினார். அப்பொழுது எனக்கு வந்த துக்கம் கொஞ்சம் அல்ல. நான் என் செய்வது? அவர் இருந்த இருப்பில், துக்ககரமான, அக் “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்தை அவர் முன் ஆட எனக்கு மனம் ஒப்பவில்லை! ஆயினும் எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு நாடகத்தை அவர் பார்க்கும்படி செய்யவேண்டுமென்று தீர்மானித்தவனாய் ஒரு சனிக்கிழமை, மியூஜியம் (Museum) புஸ்தக சாலைக்குப் போனேன். அங்கு ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் “தி ஐ ஆப் லவ்” என்கிற (The Eye of Love) பெயர் கொண்ட, ஒரு சிறு நாடிகையைப் பார்த்தேன். இதைத் தமிழில் எழுதலாமாவென்று யோசித்துக்கொண்டே வீட்டிற்குத் திரும்பினேன். பிறகு இது மிகவும் சிறிதாயிருக்கிறது என்று அந்த எண்ணத்தை விட்டேன். (இதைப் பெரிதாக்கிக் காதலர் கண்கள் என்னும் நாடகமாகப் பல வருஷங்கள் கழித்து எழுதி முடித்தேன். அக்கதையை அப்புறம் எனது நண்பர்களுக்கு உரைக்கிறேன்.) வீட்டிற்குப் போனதும், மஹாபாரதம் ஒன்று என் மேஜையின் மீதிருந்தது. அதைத் திறந்து படித்து, பயாதியின் கதையை நாடகமாக எழுதலாமென்று தீர்மானித்தேன். இதை ஒரு வாரத்திற்குள் எழுதி, ஒத்திகைபோட்டு, நாடகமாக முடித்ததை வரிசைக்கிரமத்தில் பிறகு எழுதுகிறேன். இவ்விடம் இதைப்பற்றி எழுத வேண்டி வந்ததென்னவென்றால், மேற்கூறிய காரணங்களால் என் தந்தையார் அக் ‘கள்வர் தலைவன்’ என்னும் நாடகத்தைப் பார்க்க முடியாமற் போனதென்பதாம். இந்நாடகமானது பிறகு ஒருமுறை 1898ஆம் வருஷம் டிசம்பர் மாதத்தில் எங்கள் சபையாரால் ஆடப்பட்டது.
நான் முக்கியமாக இந்நாடகத்தை மறுபடியும் அடிக்கடி மற்ற நாடகங்ளைப் போல் நடத்தாததற்குக் காரணம், இதைப்பற்றி நான் நினைக்கும்போதெல்லாம், என் தந்தை இதைப் பார்ப்பதற்கு இல்லாமற் போச்சுதே என்று எனக்கு மன வருத்தம் உண்டாவதேயாம். 1898ஆம் வருஷத்திற்குப் பிறகு முப்பத்திரண்டு வருடங்கள் கழித்து 1930ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி, மறுபடியும் எங்கள் சபையார் இதை நடத்தினர். சோககரமாக முடியும் இரண்டு நண்பர்கள், சாரங்கதரன், அமலாதித்யன் முதலிய அநேக நாடகங்களை நான் நடத்தியிருக்கிறேன். ஆகவே இக் “கள்வர் தலைவன்” நாடகத்தைப் பன்முறை நடத்தாதது சோககரமாய் முடியும் நாடகங்களை ஆடக் கூடாது என்னும் காரணத்தினாலன்று.
இந் நாடகத்தை வேலுநாயர் பன்முறை நடத்தியிருக்கிறார். அன்றியும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ்கம்பெனியாரும் பலதரம் நடத்தியிருக்கின்றனர். இரண்டு மூன்று ஆமெட்டூர் (Ameteur) சபைகளும் இதை நடத்தி இருக்கின்றன. ஆயினும் இந் நாடகம் எனது மற்ற நாடகங்ளைப்போல் அவ்வளவு அதிகமாக ஆடப் படவில்லையென்றே சொல்லவேண்டும். என் குறிப்பின்படி, இது வரையில் என் அனுமதியின் மீது 80 தரம்தான் ஆடப் பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் முக்கியமாக, அது சோககரமாய் முடிவு பெறுவதுவேயாம் என்பதற்கு ஐயமில்லை. நமது தேசத்தார் நாடகங்களைப் பார்க்கப் போகும்பொழுது, அவைகள் க்ஷேமமாய், சந்தோஷமாய் முடிய வேண்டுமென விரும்புகிறார்கள் என்பது திண்ணம்.
‘யயாதி’ என்னும் நாடகத்தை வெகு விரைவில் எழுதி முடித்ததாக முன்பே கூறியுள்ளேன். எழுதுவதற்குச் சரியாக இரண்டு தினங்கள்தான் பிடித்தன; சாப்பிடும் வேளை தூங்கும் வேளை தவிர மற்ற வேளைகளிலெல்லாம் ஒரே மூச்சாய் உட்கார்ந்து எழுதினேன் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சியாக நான் எழுதி முடித்ததும், கீழே அறையில் நோயாய்ப் படுத்திருந்த என் தந்தையிடம் அனுப்புவேன். அவ்வறையில் என் கடைசித் தங்கை, அதை அவருக்குப் படித்துக் காட்டுவாள். அதில் முக்கியமாக பப்பரன் என்னும் விதூஷகனுடைய பாகம், படிக்கும் என் தங்கைக்கும் கேட்கும் என் தந்தைக்கும் அதிக நகைப்பை விளைத்தது. என் அருமைத் தந்தையின் அந்திமகாலத்தில் இம்மாதிரியாக வாவது அவருக்குச் சந்தோஷத்தை விளைவித்தேனே என்று இப்பொழுதும் நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். ஒவ்வொரு தினமும் சாயங்காலம் சபைக்குச் சென்று என்னுடைய நண்பர்களிடம் நான் எழுதிய காட்சிகளைக் கொடுப்பேன். அவர்களும் அதி விரைவில் தங்கள் தங்கள் பாகங்ளை எழுதிப் படித்து விட்டார்கள். அதே வாரம் வியாழக்கிழமை இரவு முழு ஒத்திகை வைத்துக் கொண்டோம். அடுத்த சனிக்கிழமை விக்டோரியா ஹாலில் நாடகத்தை நடத்தினோம். என் தந்தையார் படியேறிச் செல்ல தேகபலமில்லாதவரா யிருந்தபடியால், ஏழு ஏழரை மணிக்கெல்லாம் ஸ்திரீகள் வருவதற்கு முன்பாக, ஸ்திரீகள் வருவதற்காகப் பிரத்யேகமாய் ஏற்படுத்தியிருக்கும் படி வழியாக அவரை ஒரு சாய்வு நாற்காலியில் உட்காரவைத்து, மேல்மாடிக்கு நாடகம் பார்க்க எடுத்துச் சென்றோம். இதுதான் அவர் நான் எழுதிய நாடகங்களில் கடைசியாகப் பார்த்த நாடகம்.
இந்த யயாதி நாடகத்திற்கு ஆங்கிலத்தில் “விதியும் காதலும்” என்று பெயர் வைத்தேன். நாடகம் கொஞ்சம் சிறிதாயிருந்தபடியால் கடைசியில், ஒரு பிரஹசனத்தைச் சேர்த்து ஆடினோம்; அப்படியாடியும் ஒரு மணிக்கெல்லாம் முடிந்து விட்டது. நாங்கள் இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே யென்று கொஞ்சம் பயப்பட்டபோதிலும் நாடகம் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலர், அவர்கள் தூக்கம் அதிகமாய்க் கெடாமல் சீக்கிரம் முடிந்ததற்காகச் சந்தோஷப்பட்டனர். இந்த நாடகத்தைப் போட்ட பிறகுதான் சாதாரணமாக நாடகங்கள் நான்கு மணி நேரத்திற்கு மேல் கொள்ளக் கூடாது என்று யோசிக்க ஆரம்பித்தோம்.
இந்த நாடகத்தில் ஜெயராம் நாயகர், கதாநாயகியாகிய சர்மிஷ்டை வேஷம் தரித்தனர். ஒரு பாட்டும் பாடாவிட்டாலும் அவரது வசனங்கள் மிகவும் நன்றாய் நடிக்கப்பட்டனவென்று எல்லோரும் கொண்டாடினர். பிறகு போஸ்ட் ஆபீசில் உத்தியோகஞ் செய்த, பி.எ. துரைசாமி ஐயர் என்பவர் தெய்வயானையாக மிகவும் விமரிசையாய் நடித்தனர். எம். வை. ரங்கசாமி ஐயங்கார், என் தோழனான காஞ்சேயனாக வேடம் பூண்டு தனது சங்கீதத்தினால் சபையோரை மிகவும் ரமிக்கச் செய்தார். ஆயினும் எல்லோரையும் விட இந்நாடகத்தில் சபையோரைச் சந்தோஷிக்கச் செய்தவர், ‘பப்பரன்’ வேடம் பூண்ட எம். துரைசாமி ஐயங்காரே! அவர் அரங்கத்தில் தோன்றும் பொழுதெல்லாம் விடாத நகைப்பை உண்டாக்கினர்.
இந்த நாடகத்தில்தான் என் ஆருயிர் நண்பராயிருந்த சி. ரங்கவடிவேலு முதலியார் முதல் முதல் எங்கள் சபையில் வேடம் பூண்டனர். அன்று முதல், தன் மரணபர்யந்தம், உடலும் நிழலும்போல் என்னைப் பிரியாதிருந்து, என்னுடன் ஏறக்குறைய எல்லா நாடகங்களிலும் என் மனைவியாக நடித்த இவரைப்பற்றிச் சற்று விரிவாக எழுத வேண்டியது என் முக்கியக் கடமையாகக் கொண்டு, அவரைப்பற்றி இனி எழுதுகிறேன்.
மேலே வரைந்துள்ள வாக்கியத்தை எழுதி இன்று நான்கு நாட்களாயின; இந்த நான்கு தினங்களாக, எனது நண்பரைப் பற்றி நான் எழுத வேண்டியதைப் பன்முறை எழுதப் பிரயத் தனப்பட்டும், என் மனமும், கண்களும், கையும் சோர்ந்தவனாய், அங்ஙனம் செய்ய அசக்தனாயிருந்தேன். இன்றே திருவருளை முன்னிட்டு, என் மனத்தை ஒருவாறு திடம் செய்து கொண்டு எழுத ஆரம்பித்தேன். எல்லாம்வல்ல கடவுள், வான் இழந்த என்னுயிர் நேயனுக்குச் செய்ய வேண்டிய கடமையைப் பத்திலொரு பங்காவது செய்து முடிக்க எனக்கு மனோதிடமளிப்பாராக!
இந்த ஜன்மத்தில் ஈசன் தன் கருணையினால் எனக்களித்த பெரும் பேறுகள் மூன்றைச் சொல்லும்படியாக யாராவது என்னைக் கேட்பார்களாயின், க்ஷணமும் தாமதியாமல், என் தாய், என் தந்தை, எனது நண்பன் இம் மூன்றுதான் என்று பதில் உரைப்பேன். இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்களுள் சிலர், நாங்களிருவரும் எவ்வளவு அன்யோன்யமாய் ஏறக்குறைய இருபத்தெட்டு வருஷம் வாழ்ந்து வந்தோம் என்பதை அறிந்திருக்கலாம். அதை அறியாத மற்றவர்களுக்கு, ஷேக்ஸ்பியர் மஹாகவி, ‘ஆஸ் யு லைக் இட்’ (‘As you Like it’) என்னும் நாடகத்தில் இணைபிரியாத் தாயாதிகளாகிய, ராசலிண்ட, சிலியா என்பவர்களைப்பற்றி எழுதியதை இங்கு எழுத விரும்புகிறேன். அந்நாடகத்தில் முதல் அங்கம் மூன்றாவது காட்சியில் சிலியா, தங்களிரு வருடைய நட்பைப்பற்றிக் கூறும் பொழுது “ஒரே காலத்தில் நாங்கள் எப்பொழுதும் உறங்கினோம்; ஒரே காலத்தில் எழுந்திருந்தோம்; ஒரே காலத்தில் விளையாடினோம்; ஒரே காலத்தில் படித்தோம்; நாங்கள் எங்கு சென்ற போதிலும், ஒன்றை விட்டொன்று பிரியாத கின்னர மிதுனங்களைப்போல் ஜோடியாய்ப் பிரியாது சென்றோம்” என்று உரைத்தது எங்கள் நட்பை ஒருவாறு குறிக்கிறதெனக் கூறுவேன். இப்படிப்பட்ட நண்பனை இழந்த துக்கம், இப்போதைக்கு ஒன்பது வருஷங்களாகியும் மாறவில்லை . ஒரு சமயம் வந்தால்தான் அது மாறும்.
நாடக மேடை நினைவுகளைப்பற்றி எழுதுபவன், என் நண்பனைப்பற்றி இவ்வளவு அதிகமாக நான் எழுதுவானேன் என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு நான் கொடுக்க வேண்டிய விடை என்னவென்றால், என் தாய் தந்தையருக்குப் பிறகு, நான் நாடக ஆசிரியனானதற்கும், ஏதோ நாடக மேடையில் கொஞ்சம் பெயர் பெற்றதற்கும், என் நண்பனே முக்கியக் காரணமென உறுதியாய் நம்புகிறேன் என்பதே.
இனி இத்தகைய நண்பனை எப்படி நான் முதல் முதல் சந்திக்கும்படி நேர்ந்தது என்கிற விஷயங்கள் எல்லாம் இனி விவரித்து எழுதுகிறேன்.
நான் நாடக ஆசிரியனாகிச் சிறிது பெயர் பெற்றதற்கு என் தாய் தந்தையர்களே முக்கியக் காரண பூதர்களென்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். 1895ஆம் வருஷம் முதல் 1923ஆம் வருஷம் வரையில் நாடக மேடையில் எனது மனைவியாக நடித்த, என் ஆருயிர் நண்பனாகிய சி. ரங்கவடிவேலு முதலியாரை நான் பெற்றதற்கும், என் தந்தையே ஒருவிதக் காரணமாயிருந்தார் என்று நான் கூற வேண்டும். “லீலாவதி-சுலோசனா” நாடகம் முடிந்ததும் எங்கள் சபையார் வழக்கம்போல் ஒரு வனபோஜன பார்ட்டி வைத்துக் கொண்டார்கள். அன்றிரவு என் தந்தையார், “கிருஸ்தவ கலாசாலை மாணாக்கர்கள் சமஸ்கிருதத்தில் சாகுந்தலம் என்னும் மஹாகவி காளிதாசர் இயற்றிய நாடகத்தை நடத்தப்போகிறார்கள். எனக்கு இரண்டு டிக்கட்டுகள் அனுப்பியிருக்கிறார்கள், நீ வருகிறாயா?” என்று கேட்டார். நான் வரமுடியா தென்று சொல்லிவிட்டேன். பிறகு மறுநாள் என்னைப் பார்த்பொழுது “நேற்றிரவு நீ என்னுடன் வராமற் போயினையே. நாடகம் நன்றாக யிருந்தது; முக்கியமாக ஒரு சிறுபிள்ளை ‘அனசூயா’ வேஷம் தரித்தது மிகவும் நன்றாயிருந்தது” என்று தெரிவித்தார். அவர் இவ்வளவு சிலாகித்துச் சொல்லும்படியான பிள்ளை யாண்டான் யாராயிருக்கலாம் என்று யோசித்தவனாய், அக்கலாசாலையில் அப்பொழுது படித்துக்கொண்டிருந்த, என் நண்பனாகிய எம்.வை. ரங்கசாமி ஐயங்காரை “அனசூயை பாத்திரம் ஆடியது யார்?” என்று கேட்டேன். அவர் “அனசூயையாக நடித்தது சி. ரங்கவடிவேலு என்னும் ஒரு முதலியார் பிள்ளை . எனக்கு நன்றாய்த் தெரியும். மிகவும் அழகாயிருப்பான்” என்று பதில் உரைத்தார். அதன்பேரில் “ஒருநாள் சபைக்கு உன்னுடன் அழைத்துக் கொண்டு வா பாப்போம்” என்று சொன்னேன். அதன் மீது ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம், சபைக்கு சி. ரங்கவடி வேலுவை அழைத்துக்கொண்டு வந்தார். இவ்வகையாக, ஏறக்குறைய 28 வருஷங்கள் அன்று முதல் இணைபிரியா திருந்த எனது ஆருயிர் நண்பனைச் சந்திக்க நேர்ந்தது தெய்வக்கடாக்ஷத்தினால்.
நான் அன்றைத்தினம் அவரைப் பார்த்தபொழுது, அவருக்குச் சுமார் 16 வயதிருக்கும். என்னைப்போலவே, அவ்வளவாக உயரமில்லை; மிகவும் சிறப்பாகவுமில்லை; மாநிறம் என்றே சொல்ல வேண்டும்; முதல் முதல் அவரது உருவத்தை நோக்கினபொழுது மிகவும் அழகாயிருப்பார் என்று புகழ்ந்தார்களே, இவ்வளவுதானா? என்று என் மனத்திற்பட்டது. பிறகு அவரது கண்களை நோக்கினேன்; அக்கண்கள் அச்சமயம் என் ஆவியைக் கவர்ந்தவர் இதை வாசிக்கும் எனது நண்பர்கள், ஏதோ இவன் தன் உயிர் நண்பனை வெறும் புகழ்ச்சியாகக் கூறுகிறான் என்று எண்ணாதிருக்கும்படியாகக் கேட்டுக் கொள்கிறேன். அவரது பதினாறாம் வயதில் அவருக்கிருந்த கண்களைப் போல, இவ்வுலகில் எந்த ஆடவனுடைய கண்களையும் நான் பார்த்ததில்லை; அவரை அந்த வயதில் பார்த்தவர்கள் நான் கூறியதன் உண்மையை ஒப்புக்கொள்வார்களென்று உறுதியாய் நம்புகிறேன். ஸ்ரீதத்தனுடைய கண்கள் முதலில் சுலோசனாவின் கண்களைச் சந்தித்த பொழுது, அவைகளுக்கு க்ஷணத்தில் ஈடுபட்டதாக நான் எழுதிய “லீலாவதிசுலோசனா” என்னும் நாடகத்தில் எழுதியுள்ளேன். அவ்வாறு நான் எழுதியது என் இயற்கை அறிவைக்கொண்டு, இப்படியிருக்கலாம் என்று ஊகித்து எழுதியதாகும். அவ்வுண்மையை நான் வாஸ்தவத்தில் அனுபவித்தது, எனது கண்கள் அன்று அவரது கண்களைச் சந்தித்த பொழுமேயாம். பிறகு நான் மெல்ல அவர் பக்கத்தில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தேன். நான் பத்து வார்த்தைகள் பேசினால், ஒரு வார்த்தை பதில் சொல்லுவார்; அவ்வளவு சங்கோசமுள்ள வராயிருந்தார். அச்சமயம் கொஞ்சம் கொஞ்சமாக அவரது சங்கோசத்தையெல்லாம் போக்கி, எங்கள் சபையில் அங்கத்தினராக அவரைச் சேரும்படி வற்புறுத்தினேன். அவரும் இசைந்தார். அன்று முதல் இறந்துபோன என் அன்னை வீற்றிருந்த என் ஹிருதய ஸ்தானத்தில், அவர் வீற்றிருக்க ஆரம்பித்தார் என்றே நான் கூற வேண்டும். இவர் மேற்கூறியவாறு எங்கள் சபையில் அங்கத்தினராகச் சேர்ந்த பிறகு இவருக்கு முதல் முதல் வேஷம் கொடுத்தது நான் மேற்கூறிய “யயாதி"என்னும் நாடகத்தில்தான். அந்நாடகத் தில் முக்கியமான ஸ்திரீவேஷங்கள் இரண்டே. சர்மிஷ்டையும், தெய்வயானையும்; அவ்விரண்டு பாத்திரங்களும் ஜெயராம் நாயகருக்கும், துரைசாமி ஐயருக்கும் கொடுக்கப்பட்டன. ஆகவே சி. ரங்கவடிவேலுவுக்கு (இனி ரங்கவடிவேலு முதலியார் என்று எழுதாமல், நான் அவர் உயிருடன் இருந்த பொழுது அழைத்தபடி ரங்கவடிவேலு என்றே எழுதுவேன்) பாங்கியாகிய நீலலோசனி எனும் பாத்திரத்தைக் கொடுத்தேன். இதற்கு முக்கியக் காரணம், ஸ்திரீ வேஷம் பூண்டால் எப்படி யிருக்கிறதென நான் நேரிற் காண வேண்டும் என்னும் இச்சையேயாம். அன்றியும் அக்காலத்தில், யார் வந்து எங்கள் சபையில் அங்கத்தினராய்ச் சேர்ந்த போதிலும், முதல் முதல், ஒரு சிறிய பாகமே கொடுப்பது வழக்கமாயிருந்தது; சிறு பாகங்களில் எப்படி நடிக்கிறார்களென்று பார்த்தே, பிறகு அதில் திருப்திகரமாயிருந்தால் பெரிய பாகங்கள் கொடுத்து, கடைசியில் முக்கியப் பாத்திரங்களைக் கொடுப்பது எனத் தீர்மானித்து அதன்படி நடந்து வந்தோம். இப்படித்தான் பிறகு, கதாநாயகர்களாகவும் கதாநாயகிகளாகவும் எங்கள் சபையில் நடித்த அங்கத்தினரெல்லாம் முதல் முதல் சிறு பாகங்களையே பெற்று நடித்தனர். தற்காலத்தில் ஒரு சபையைச் சேர்ந்தவுடன், எனக்கு ஹீரோ (Hero) வேஷம் அல்லது ஹீரேயின் (Heroine) வேஷம் வேண்டுமென்று சச்சரவிடும் எனது இளைய நண்பர்கள் இதைக் கவனிப்பார்களாக. படிப்படியாகத்தான் மெத்தையின் மீது ஏற வேண்டும்; ஒரேமுட்டாய் எகிறிக் குதிக்கப் பார்த்தால், பெரும்பாலும் கால் ஒடிந்து போவதுதான் கை கண்ட பலனாகும் என்பது உலகத்தில் நாம் எல்லோரும் தெரிந்திருக்க வேண்டிய ஒரு பெரிய உண்மையாம்.
இந்த “யயாதி” நாடகத்தில், என் நண்பர் நீலலோசனியாக நடித்தார். இவர் நடித்த பாத்திரத்திற்கு அப்பெயர் நான் கொடுத்த காரணம் அவர் அதை நடிக்கப் போகிறார் என்பதே. நாடகம் முழுவதிலும் இரண்டு காட்சிகளில்தான் நீலலோசனி வரவேண்டியதிருக்கிறது; அவரது பாகம் முழுவதும் சேர்த்தாலும் சுமார் முப்பது வரிகளிருக்கலாம். அந்தப் பாகத்திற்கு ஒரு பாட்டும் கிடையாது. இருந்தபோதிலும், நாடகத்தைப் பார்க்க வந்தவர்களும், எங்கள் சபையின் அங்கத்தினரும், இவரது பாகம் சிறியதாயிருந்த போதிலும் நன்றாய் நடித்தார், ரூபமும் மிகவும் அழகாயிருந்தது என்று மெச்சினார்கள். ஸ்திரீயின் உடையில் அவரை நாடக மேடையில் கண்டபின், நானும் அவ்வாறே எண்ணினேன். இந்த ‘யயாதி’ நாடகத்தைப்பற்றி எனக்கு வேறொன்றும் அவ்வளவாக ஞாபகமில்லை .
இந்நாடகம் பிற்காலம் எங்கள் சபையோராலும் இதர சபையோர்களாலும் பன்முறை ஆடப்பட்டது. புதிதாய் ஆரம்பிக்கும் நாடக சபைகள், “சுந்தரி” “புஷ்பவல்ல” என்னும் முன்னே நான் கூறியிருக்கும் இரண்டு நாடகங்களுக்குப் பிறகு, இந்த நாடகத்தைச் சுலபமாய் எடுத்துக்கொண்டு ஆடலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.
ஒன்பதாம் அத்தியாயம்
இனி எனது ஆறாவது நாடகமாகிய “மனோஹரன்” என்னும் நாடகத்தைப் பற்றி எழுதுகிறேன். இதைப்பற்றி, மற்ற நாடகங்களைக் குறித்து எழுதியதைவிட அதிக விவரமாய் எழுத வேண்டியது அவசியமெனத் தோற்றுகிறது. ஏனெனில், எனது இளைய நண்பர்களுக்குள் பலர் அறிந்தபடி இதுதான் என் நாடகங்கள் எல்லாவற்றைப் பார்க்கிலும், எனக்குப் புகழைக் கொணர்ந்தது; அன்றியும் எனது மற்ற நாடகங்களைவிட, எல்லோராலும் அதிகமாய் ஆடப்பட்டது; என்னிடமிருக்கும் குறிப்பின்படி இந்நாடம் என் அனுமதியின் மீது 859 முறை இதுவரையில் ஆடப்பட்டிருக்கிறது; நேரில் அறியாத ஒரு விஷயத்தைப்பற்றி, ஒருவன் ஊகையினால் கூறக்கூடுமானால், ஏறக்குறைய அத்தனைமுறை என் அனுமதியின்றி ஆடியிருக்கவேண்டுமென்றும் நான் கூறலாம். இப்பொழுது சில வருஷங்களாகத்தான், என் உத்தரவின்றி மற்றவர்கள் எனது நாடகங்களை ஆடக்கூடாதென்று கண்டிப்பாயிருக்கிறேன். அதற்குமுன் அவ்வளவு கண்டிப்பாயில்லை. ஆகவே அநேக சபையார் முன்பு என் உத்திரவில்லாமலே இதை நடித்திருகின்றனர் என்பதை நான் அறிவேன். சென்னை ராஜதானியிலுள்ள எல்லாத் தமிழ் நாடகச் சபைகளும் இந் நாடகத்தை நடத்தியிருக்கின்றனர் என்றே நான் கூறவேண்டும். அன்றியும் நாடகமாடுதலையே ஜீவனோபாயமாகக் கொண்ட பல நாடகக் கம்பெனிகள் இதை நடத்தியிருக்கின்றன. அவையடக்கத்தை விடுத்து வெளிப்படையாய்ச் சொல்லுமிடத்து, இதைப் படிக்காத தமிழ் நாடகாபிமானி ஒருவரும் இல்லையென்றே கூறுவேன். என் சொந்த அபிப்பிராயத்தை உரைக்குமிடத்து, இதற்குப் பிறகு, இதைவிடச்சிறந்த நாடகங்கள் பல எழுதியிருக்கிறேன் என்று நான் உறுதியாய் எண்ணியபோதிலும், இந்நாடகமே எனக்கு மிகவும் கீர்த்தியைக் கொடுத்ததென்று உரைத்திடல் வேண்டும். சில வருடங்களுக்கு முன் என் நண்பராகிய ஸ்ரீனிவாச ஐயங்கார், அதுவரையில் நான் எழுதிய நாடகங்களுக்குள் “லீலாவதி - சுலோசனையே” மிகச் சிறந்ததெனக் கூறியுள்ளார். மற்றெல்லா விஷயங்களிலும், அநேகமாக அவர் அபிப் பிராயத்தை நான் ஒப்புக்கொள்வது என் வழக்கமாயினும், இதில் மாத்திரம் அவரது அபிப்பிராயத்தை நான் ஒப்புக் கொள்ளவில்லை . “லீலாவதி-சுலோசனா” வைவிட, “மனோஹரன்” நாடகமே மேம்பட்டது என்பது என் கொள்கை. இந்நாடகமானது ஆறாம் பதிப்பை அடைந்திருக்கிறது. ஆகவே என் நாடகங்களை வாங்கி வாசிப்பவர்களுடைய அபிப்பிராயமும் என் அபிப்பிராயத்தை ஒத்திருக்கிறதென ஊகிக்க வேண்டியவனாயிருக்கிறேன்.
இந்நாடகத்தை நான் எழுதி முடிப்பதற்குமுன் எனக்கு இவ்வுலகில் நேரிட்ட தௌர்ப்பாக்கியங்களுக்குள், இரண்டாவது நேரிட்டது-என் அருமைத் தந்தையார் இவ்வுலகை நீத்து, என் அன்னையிடம் போய்ச் சேர்ந்தார். இதை வாசிக்கும் எனது நண்பர்கள் எனது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமே யொழிய, என் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளலாகாதெனும் கோட்பாடுடையவனாதலின், என் தந்தை இறந்ததனால் எனக்குண்டான துயரத்தைப்பற்றி இங்கு எழுதாது விடுக்கின்றேன்.
“மனோஹரன்” நாடகத்தின் கதையானது என் அருமைத் தந்தை உயிருடனிருக்கும் பொழுதே, என்னால் கற்பனை செய்யப்பட்டது. இந்நாடகத்தை வாசித்த அல்லது ஆடப்பட்டபொழுது பார்த்த என் நண்பர்களில் அநேகர் இக் கதையை எங்கிருந்து எடுத்தாய் என்று கேட்டிருக்கின்றனர். இன்னும் சிலர் உன்னுடைய சுய அனுபவத்தைக் கொண்டு இதை எழுதினையோ? என்று கேட்டிருக்கின்றனர். அநேகம் கிரந்த கர்த்தர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை, தாங்கள் எழுதும் நவீனங்களிலாவது அல்லது நாடகங்களிலாவது புனைந்து எழுதியிருக்கிறார்கள் என்பது உலகப் பிரசித்தமே. நானும் எனது நாடகங்களில் சிற்சில இடங்களில் என் சொந்த அனுபவத்தையாவது அல்லது எனது நண்பர்களின் அனுபவத்தையாவது புனைந்து எழுதியிருக்கிறேன் என்று ஒப்புக்கொள்ள வேண்டியதே. அதற்கு உதாரணமாக “லீலாவதி-சுலோசனை” யில் ரோஜாப்பூக் காட்சியை உதாரணமாக முன்பே கூறியிருக்கிறேன். அம்மாதிரியாகவே இந்த மனோஹரன் நாடகத்திலும் இரண்டொரு விஷயங்கள் இருக்கலாம். அவற்றைப் பிறகு எடுத்துக் கூறுகிறேன். இச்சந்தர்ப்பத்தில் நான் எடுத்துக்கூற வந்ததென்னவென்றால், மனோஹரன் நாடகமானது என் மனத்தினால் நிர்மாணம் செய்யப்பட்ட கட்டுரைக் கதையேயாம் என்பதே. என் சொந்த அனுபவங்களையே என் நாடகத்தில் எழுதுகிறேன் என்பது முற்றிலும் தவறான எண்ணமாகும். அவ்வாறு எண்ணுவது வாஸ்தவமாயின், நான் ஸ்ரீதத்தனாகவும், மனோஹரனாகவும், சுந்தராதித்யனாகவும், ஜெயபாலனாகவும், விஜயரங்கப் பிள்ளையாகவும், ராமச்சந்திர ஐயராகவும், ராஜசிம்மனாகவும், ரகுவீரனாவும், சத்ருஜித்தாகவும், ஜெயசிங்காகவும், சபாபதி முதலியாராகவும், சுப்பிரமணிய ஐயராகவும், இன்னும் நான் எழுதியுள்ள மற்ற நாடகங்களின் கதாநாயகர்கள் எத்தனைப் பெயர் உண்டோ , அத்தனைப் பெயர்களாகவும் நானிருக்க வேண்டும்-இவ்வாறு எண்ணுவது தவறென இதை வாசிப்பவர் கொஞ்சம் தீர்க்காலோசனை செய்வார்களாயின் ஸ்பஷ்டமாய் விளங்கும்.
ஒரு கிரந்த கர்த்தா தன் அனுபவங்களையே எழுதுகிறார் என்று எண்ணுபவர்கள், அக்கிரந்தகர்த்தா எழுதிய முக்கியமான பாத்திரங்களுடைய அனுபவம் மாத்திரமன்றி, அவர் எழுதும் எல்லாப் பாத்திரங்களின் அனுபவத்தையும் (ஸ்திரீ பாத்திரங்கள் உட்பட) அடைந்திருக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாகிறார்கள்!
இந்தச் சந்தர்ப்பத்தில் இரண்டு வருஷங்களுக்கு முன்பாக “தாசிப் பெண்” என்னும் எனது நூதன நாடகமொன்றை அச்சிட்டபொழுது நடந்த ஒரு விருத்தாந்தத்தை இங்கு எழுதுகிறேன்.
அந்நாடகமானது அச்சிடப்பட்டபின் அதை வாசித்த எனது நண்பர்களுள் ஒருவர் “முதலியார் அவர்களுக்கு தாசிகள் விஷயமெல்லாம் நன்றாய்த் தெரியும் போலிருக்கிறது. அவ்விஷயங்களை எல்லாம் மிகவும் நுட்பமாய் அறிந்து எழுதியிருக்கிறார்” என்று ஏளனம் செய்தார். நான் உடனே “அப்படியாயின் உங்கள் நியாயப் பிரகாரம் நான் எழுதியது சரியென்று கூற உங்களுக்கும் அவர்கள் விஷயங்களெல்லாம் நன்றாய்த் தெரிந்திருக்க வேண்டுமே” என்று பதில் உரைத்திருக்கக்கூடும். ஆயினும், அவ்வாறு கூறியவர் என்னிலும் அதிக வயதுடையவராதல் பற்றி, அவ்வாறு எனக்குக் கூற இஷ்மில்லாது, பின் வரும் கதையைக் கூறினேன். “ஓர் ஊரில் ஓர் அரசன் இருந்தானாம். அந்த அரசனுக்கு ஆப்தரான ஒரு சன்யாசியும் அமைச்சனும் இருந்தார்களாம். அந்த மந்திரிக்கு அந்தச் சன்யாசியிடம் அவ்வளவு மனப்பொருத்தம் இல்லையாம். ஒரு நாள் அந்தச் சன்யாசி சிற்றின்ப விஷயத்தைப் பற்றி உதாரணம் எடுத்துக் கூற, அம்மந்திரி, ‘சன்யாசி அவர்களுக்குச் சிற்றின்பத்தில் அதிகப் பரீட்சையிருக்கிறாற் போலிருக்கிறது அந்த ருசி அறிந்திருக்க வேண்டும்!’ என்று ஏளனம் செய்ய, சன்யாசி அதைக் கவனியாதவர் போலிருந்து, சில தினங்கள் சென்ற பிறகு அரசன் எதிரில், துருப்பிடித்த ஒரு வெண்கலப் பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதை ஒரு குழியில் மலத்தினால் புதைத்து வைக்கச் சொன்னாராம். பிறகு சில தினங்கள் கழித்து, மூடிய அக்குழியைத் தோண்டி வெண்கலப் பாத்திரத்தை எடுக்கச் செய்து, அதுகளிம்பு நீங்கிப்பிரகாசமாயிருப்பதைக் காட்ட, மந்திரியானவன், இதென்ன ஒரு புதுமையா? மலத்திலுள்ள புளிப்பு வெண்கலப் பாத்திரத்தின் களிம்பை நீக்கி விட்டது என்று கூற, உடனே சன்யாசி ‘மந்திரி அவர்களுக்கு மலத்தில் அதிகப் பரீட்சையிருக்கிறாற் போலிருக்கிறது. அந்த ருசி அறிந்திருக்க வேண்டும்’ என்று பதில் உரைத்தாராம் என்று கதையைக் கூறி முடித்தேன். ஆகவே ஒரு விஷயத்தைப்பற்றி அறிவதென்றால் சொந்த அனுபவத்தினால்தான் அறியக் கூடும் என்று நாம் கருதலாகாது. சுயானுபவம், அநேக மார்க்கங்களில் ஒன்றேயாம். புத்தி நுட்பமுடையவர்கள் மற்றவர்களுடைய அனுபவத்தைப் பற்றிப் பார்த்தும், கேட்டும் பல விஷயங்கள் அறியக் கூடுமன்றோ? அன்றியும் நமது அறிவைக் கொண்டு ஆராய்ந்து அநேக விஷயங்களை அறியலாமன்றோ? ஆகவே இச்சந்தர்ப்பத்தில், இதை வாசிக்கும் என் இளைய நண்பர்களுக்கு வற்புறுத்தும் சங்கதி என்னவென்றால், கிரந்த கர்த்தாக்கள் எழுதுவதெல்லாம் அவர்கள் சுயானுபவத்தைக் கொண்டே என்று என்ணுவது பெரும் தவறாகும் என்பதேயாம்.
மேற்கண்ட மனோஹரன் நாடகமானது என் சொந்தக் கற்பனைக் கதையடங்கியது என்று முன்பே தெரிவித்திருக்கிறேன். இக்கதை என் மனத்தில் எவ்வாறு முதல் முதல் உதித்தது என்பதை என் நண்பர்கள் அறிய விரும்புவார்களென நம்புகிறேன். அக்காலத்தில் நான் அடிக்கடி எனது நண்பராகிய ஸ்ரீனிவாச-ஐயங்காருடன் காலட்சேபங்களுக்குப் போவது வழக்கம். ஒரு நாள் மேற்சொன்னபடி ஒரு காலட்சேபத்துக்குப் போயிருந்தேன்; பாகவதர் (அந்தக பாகவதர், என்பது அவர் பெயரென நினைக்கிறேன். ஆயினும் இதை நான் நிச்சயமாய்ச் சொல்ல முடியாது) துருவ சரித்திரத்தை வெகு அழகாய்ச் சொன்னார். அக்கதையைச் சொல்லிக்கொண்டு வரும்பொழுது துருவன் தனது சிற்றன்னையால் அவமதிக்கப்பட்டபொழுது தன் தாயாரிடம் போய் முறையிட, அத் தாயார் துக்கப்பட்டதைக் கண்டு, தன் அவமானத்தையும் கருதாமல், தன் தாயார் துக்கப்பட்டதைப்பற்றி மிகவும் வருந்தி வெகுண்டெழுந்ததாக மிகவும் சாதுர்யமாகவும் அழகாகவும் கூறினார். அக்கதையில் இந்தப் பாகம் என் மனத்தை மிகவும் உருக்கியது. உடனே அக்கதையை நாடகமாக எழுதலாமா என்று அன்றிரவு யோசிக்க ஆரம்பித்தேன். அக்காலத்தில் ஏதாவது நல்ல பாட்டைக் கேட்டால்; இதை நமது சபையில் எந்த நாடகத்தில் உபயோகிக்கலாம்? ஏதாவது அழகிய பொருளைப் பார்த்தால், இதை நமது நாடக மேடையில் எந்தக் காட்சியில் உபயோகிக்கலாம்? யாராவது அழகிய சிறுவனைப் பார்த்தால் இவனை எப்படி நமது சபையில் அங்கத்தினனாகச் சேர்த்துக் கொள்ளலாம்? இவன் எந்த நாடகப் பாத்திரத்திற்கு உபயோகப் படுவான்? என்று இம்மாதிரியே எண்ணிக் கொண்டிருந்ததால், (இந்தப் பழக்கம் இன்னும் என்னைவிட்டு அகலவில்லையென்றே நான் கூறவேண்டும்) துருவ சரித்திரத்தை நாடகமாக எழுத வேண்டுமென்று என் மனத்தில் உதித்தது ஓர் ஆச்சரியமன்று. இப்படி நான் யோசித்துக் கொண்டிருக்கையில் அச்சரித்திரம் நாடகமாடுவதற்கு மிகவும் சிறியதாயிருக்கிறதென அந்த எண்ணத்தை விட்டேன்.
ஆயினும் அவன் தன் தாயாருக்கு நேரிட்ட வருத்தத்தைக் குறித்து வெகுண்டெழுந்த காட்சி, என் மனத்தில் உறுத்திக் கொண்டேயிருந்தது. திடீரென்று, இவ்வாறு அவமானம் செய்தவள், சிற்றன்னையாயிராது கேவலம் ஒரு வேசியாய் இருந்தால் அவனுக்கு இன்னும் எவ்வளவு கோபம் வரும் என்று தோன்றியது. உடனே ஒரு ராஜகுமாரனை அவன் தந்தை முன்னிலையில், அந்த அரசனது வைப்பாட்டி, வேசி மகனென வைதால் எப்படியிருக்குமென என் மனத்திற் பட்டது. அந்த ராஜகுமாரன் எவ்வாறு வெகுண்டெழுவான் என்று அக்காட்சியை என் மனத்தில் எண்ணிப் பார்த்தேன். இதுதான் ‘மனோஹரன்’ நாடகத்தின் கதை என் மனத்தில் உற்பவித்த தற்குக் காரணம். இனி படிப்படியாக இந் நாடகக் கதை விரிந்ததைச் சற்று விவரமாகக் கூறுகிறேன்.
அக கூறுகிறேன. மனோஹரன் தாயாரை, மிகுந்த உத்தம ஸ்திரீயாக்கினால் அவளை வேசியென ஒருத்தி வைவது, கேட்பவர்கள் மனத்திலெல்லாம் ஆத்திரத்தை உண்டுபண்ணுமென எண்ணி, நான் எழுதிய ஸ்திரீரத்னங்களுக்குள் எல்லாம் சிறந்தவர்களாக, ‘பத்மாவதி தேவி’யைக் கற்பனை செய்தேன். இவர்களுடைய குணாதிசயங்களைப்பற்றி வரைவதில், என் அருமைத் தாயாரின் குணங்கள் எனக்கு மிகவும் உபயோகப்பட்டன. மனோஹரன் தந்தை அரண்மனைத் தாசி ஒருத்தியின் வலையிலகப்பட்டது தவிர, மற்ற துர்க்குணங்கள் ஒன்றுமில்லாதவனாய், உத்தம புருஷனாயிருக்க வேண்டுமெனத் தீர்மானித்து, அவனுக்குப் புருஷோத்தமன் என்கிற பெயரையிட்டு சிருஷ்டித்தேன். வசந்தனைச் சிருஷ்டித்ததற்கு வேடிக்கையான காரணம் ஒன்று உண்டு. எனது நண்பனாகிய ச. ராஜகணபதி முதலியாரைப்பற்றி, இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு முன்னமே தெரிவித்திருக்கிறேன். அவர் என்னை அடிக்கடி “என்ன சம்பந்தம்? எப்பொழுது பார்த்தாலும் எனக்கு நல்ல வேஷம் கொடுப்பதில்லை. நல்ல ராஜா வேஷமாக ஒரு முறையாவது எனக்கு ஒன்றைக் கொடு” என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார். அவர் மேடையின் மீது வந்தாலே எல்லோருக்கும் நகைப்பை விளைப்பார் என்று தெரிவித்திருக்கிறேன். இப்படிப்பட்டவருக்கு எப்படி ராஜா வேஷம் கொடுப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது, வசந்தசேனையின் மகனை ஒரு பைத்தியக் காரனாக்கி அவ்வேஷம் இவருக்குக் கொடுத்தால் நலமாயிருக்குமெனத் தோன்றியது. இதுதான் வசந்தன் உற்பவித்ததற்குக் காரணம். மனோஹரன் நாடகத்தை வாசித்த நண்பர்கள், இவ்வசந்தன், வசந்தசேனைக்குக் கேசரிவர்மனால் பிறந்த பிள்ளை என்பதை நன்கு அறிவார்கள்.
ஆகவே, வாஸ்தவத்தில் வசந்தன் வேசி மகனாயிருக்க வசந்தசேனை மனோஹரனை வேசி மகன் என வைதது நாடக அலங்காரத்திற்கு மிகவும் பொருந்தியதாகும் என்பதைக் கவனிப்பார்களாக.
இனி விஜயாள் என்னும் நாடகப் பாத்திரத்தைப்பற்றி ஒரு விசேஷமுண்டு. அதாவது முதல் முதலில் மனோஹரன் கதையை நான் நிரூபணம் செய்தபொழுது, “விஜயாள்” என்னும் பாத்திரமே-இக்கதையில் கிடையாது! இந்நாடகக் கதையை எப்படி ஆரம்பித்து எப்படி முடிப்பது என்று முதல் முதல் நான் என் மனத்தில் திருப்பிக் கொண்டிருந்த பொழுது, என் தந்தையுடன் புதுக்கோட்டையில் ஒரு ஜமீன்தாருடைய
கலியாணத்துக்காகப் போயிருந்தேன். அங்கு, இக் கதையை, இப்பொழுது அச்சிட்டிருக்கும் இரண்டாவது அங்கம் முதற் காட்சியில் ஆரம்பித்து, ஒருவாறாக முடிக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். அச்சமயம் நான் புருஷோத்தமனுடைய வேடம் தரிக்க வேண்டுமென்று எண்ணம் கொண்டேன். அதற்குத் தக்கபடி கதையின் அம்சங்களை யெல்லாம் யோசித்து வைத்தேன். ஒரு நாள் இரவு ஏதோ காரணத்தினால் எனக்கு நன்றாய்த் தூக்கம் வராமலிருந்த பொழுது, என் வழக்கப்படி, கதையின் காட்சிகளைப் பற்றி நான் பன்முறை யோசித்துக் கொண்டிருந்த பொழுது, திடீரென்று, புருஷோத் தமன் குமாரனாகிய மனோஹரன் வேடம்தான் நமக்கு நன்றாயிருக்குமென்று என் புத்தியிற்பட்டது. உடனே கதையின் போக்கை மாற்றி, இப்பொழுது அச்சிட்டிருக்கும் நான்கு காட்சிகள் அடங்கிய முதல் அங்கத்தைச் சேர்த்து, அதற்குத் தக்கபடி கதையின் போக்கை யெல்லாம் மாற்றினேன்! அன்றிரவு சற்றேறக்குறைய மூன்று மணிவரையில் இதனால் விழித்திருந்தேன் என்றே நான் கூற வேண்டும். எனக்குத் திருப்திகரமாய்க் கதையை விவரித்து முடிவு பெறச் செய்த பிறகுதான் தூங்கினேன்! இவ்வாறு மாற்றியதில் மனோஹரனுக்கு ஒரு மனையாளாக ஒரு பெண்மணியைச் சிருஷ்டித்தேன் அன்றிரவு.
மறுநாள் காலை நான் எழுந்தவுடன், இம் மனைவிக்கு என்ன பெயர் கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது, என் அருமைத் தந்தையார், அக்காலத்தில் புதுக்கோட்டையில் வழங்கி வந்த வட்டமான சில காசுகளை என் கையில் கொடுத்து, இதைப் பார்த்திருக்கிறாயா என்று கேட்டார். இல்லை என்று அவருக்குப் பதில் சொல்லிவிட்டு, அக்காசுகளின் பேரில் செதுக்கியிருந்த எழுத்துகளை நோக்கினேன். “விஜய” என்று இருந்தது. உடனே அப்பெயர் சிறிதாயும் அழகாயும் இருக்கிறதென்று தீர்மானித்து அப்பெயரை மனோஹரன் மனைவிக்குக் கொடுக்கத் தீர்மானித்தேன். விஜயாள் பிறந்தது இவ்விதமாம்.
நான் எழுதும் நாடகங்களின் நாடகப் பாத்திரங்களுக்குச் சாதாரணமாக அவர்கள் குணத்திற்கேற்றபடி பெயர் வைப்பது வழக்கம். மனோஹரன் என்கிற பெயர் காலஞ்சென்ற ஆந்திர நாடகப் பிதாமகனான கிருஷ்ணமாச்சார்லு அவர்களுடைய நாடகத்தில் ஒரு விட புருஷனுக்குப் பெயராக இருந்தது. அப்பெயரை நான் கேட்டவுடன் இது நல்ல பெயராக இருக்கின்றது, இப் பெயரை விடபுருஷனுக்கு வைத்ததைவிட, ஒரு நல்ல உத்தம ராஜகுமாரனுக்கு வைத்தால் நலமாயிருக்கு மெனத் தோன்றியது. அப்பெயரையே இந்நாடத்திற்கும், இந்நாடகத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாயிருக்கும் ராஜகுமாரனுக்கும் வைத்தேன். ‘புருஷோத்தமன்’ ‘பத்மாவதி’ இப்பெயர்களைப் பற்றி முன்பே வரைந்துள்ளேன். விஜயாள் என்கிற பெயரைப்பற்றியும் எழுதியிருக்கிறேன். இந்த விஜயாள் என்ற பெயரைப்பற்றி இன்னொன்று எழுத விரும்புகிறேன்; சாதாரணமாக நான் நாடகங்கள் எழுதும் பொழுது, அதில் வரும் பாத்திரங்களின் பெயர்களை யெல்லாம் உரக்க உச்சரித்துப் பார்ப்பது வழக்கம். செவிக்கு எப்படி அவைகள் படுகின்றன என்று பரிசோதித்துப் பார்ப்பது என் வழக்கம். ஒரு கதா புருஷன் தன் நாயகியை ‘அலர்மேல் மங்கைத்தாயே’ அல்லது ‘கனகவல்லித் தாயாரம்மாளே!’ என்று கூப்பிடுவதென்றால், நாடகம் நடிக்கப்படும்போது நகைப்பையே உண்டாக்குமென்பது என் அபிப்பிராம். ஆகவே நாடகப் பாத்திரங்களுக்குப் பெயர் வைப்பதிலும் அழகிய பெயர்களை வைக்க வேண்டுமென்பது என் கொள்கை; ஆகவே விஜயாள் என்று அழைப்பது செவிக்கு இனிப்பா யிருப்பதனாலும், அந்நாடகப் பாத்திரம் ஒரு சிறு வயதுடைய பெண்மணியாயிருப்பதனாலும் அப் பெயரையிட்டேன். வசந்தசேனை என்கிற பெயர் ரவிவர்மா வரைந்த ஒரு தாசியின் படத்திலிருந்து எடுக்கப்பட்டது. வசந்தசேனையின் மைந்தன் ‘வசந்தன்’ என்று வரலாயிற்று.
ஒவ்வொரு நாடகத்திலும் ஏதாவது ஹாஸ்ய ரசம் இருக்க வேண்டுமென்று, சம்ஸ்கிருத நாடகங்களிலிருப்பதுபோல், ஒரு விதூஷக பாத்திரத்தை எழுதுவது அக்காலத்தில் எனக்கு வழக்கம். அவ்வழக்கப்படி ‘விகடன்’ என்னும் விதூஷகனை மனோஹரா நாடகத்தில் எழுதினேன். ‘வசந்தன்’ பைத்தியம் பிடித்தவனானபடியால் அவனுக்கு வைத்தியனாக அமிர்தகேசரியை நியமித்தேன். ரண வீரகேது எனும் சேனாதிபதியும், சத்யசீலன் எனும் மந்திரியும் வந்ததற்குக் காரணம், அவர்களுடைய பெயர்களின் அர்த்தத்தை நோக்கினாலே தெரியும்.
இனி, என் வழக்கப்படி இந்நாடகத்தில் முக்கிய நாடகப் பாத்திரங்கள் எனது நண்பர்களுக்குப் பகிர்ந்து கொடுத்த விதத்தைப் பற்றி எழுதுகிறேன். புருஷோத்தமனுடைய வேடம், அதுவரையில் இதர நாடகங்களில் நன்றாய் நடித்துப் பெயர் பெற்ற ராஜரத்தின முதலியார் என்பவருக்குக் கொடுத்தேன்; சத்தியசீலரின் வேடம், எம். வை. ரங்கசாமி ஐயங்காருக்குக் கொடுத்தேன்; அ. கிருஷ்ணசாமி ஐயருக்குப் பத்மாவதியும், சி. ரங்கவடிவேலுக்கு விஜயாளும் கொடுக்கப்பட்டது; எம். துரைசாமி ஐய்யங்காருக்காக ராஜப்பிரியன் நாடகப் பாத்திரம் எழுதினேன்; ஆகவே அது அவருக்குக் கொடுக்கப்பட்டது. வசந்தசேனை வேடம், எம். கந்தசாமி முதலியாருக்குக் கொடுக்கப்பட்டது; வசந்தன் வேடம் எஸ். ராஜகணபதி முதலியார் பூண்டனர். நீலவேணி வேடம், பிறகு ஹைகோர்ட்டில், அபிஷல் ரெபரியாக (Official Referee) இருந்து அகஸ்மாத்தாய்க் குற்றால அருவியில் உயிரை இழந்த கே.செங்கல்வராயருக்குக் கொடுக்கப்பட்டது. காலஞ்சென்ற என் தமயனாகிய ஆறுமுக முதலியார் குருவேடம் புனைந்தனர்; ஜே.பி. ஷண்முகம் பிள்ளை விகடனாக நடிக்க ஒப்புக் கொண்டார். கேசரிவர்மன் பிசாசு என்னும் நாடகப் பாத்திரத்தை மற்றெவரும் எடுத்துக் கொள்ள ஆட்சேபணை செய்தபடியால், சாரங்கபாணி முதலியார் என்னும் ரங்கவடி வேலுவின் பள்ளிக்கூடத் தோழனை எடுத்துக்கொள்ளும்படி செய்தேன். அமிர்தகேசரி என்னும் வைத்தியன் வேஷம், வாஸ்தவத்தல் வைத்தியராக இருந்த வெங்கடகிருஷ்ணப் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்டது.
இந்நாடகத்தை நான் காட்சிகாட்சியாக எழுதி முடிக்கும் பொழுதே, அவரவர்கள் அவர்களுடைய பாகத்தை எழுதிக் கொண்டு படிக்க ஆரம்பித்தார்கள். இந்நாடகத்தை எழுதிய பொழுது நேர்ந்த ஒரு சம்பவத்தை இதை வாசிக்கும் என் நண்பர்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.
என் தந்தை உயிருடன் இருக்கும் பொழுதே இந்நாடகத்தை எழுத ஆரம்பித்தேன் என்று முன்பே தெரிவித்திருக்கிறேன். முதல் ஐந்து காட்சிகள் எழுதி முடிந்ததும் அவர் தேகவியோகமானார்; தகனக்கிரியை முடித்து மறுநாள் சஞ்சயனம் ஆனவுடன் மற்றக் காட்சிகளை எழுதத் தொடங்கினேன். இதற்கு முக்கியமான காரணம் என் துக்கத்தை யடைந்த மனத்தை இவ்விஷயத்தில் செலுத்துவதனால், அத்துக்கத்தை மறந்திருக்கும் பொருட்டே. அச்சமயம், காலஞ் சென்ற, என் பழைய நண்பராகிய ரகுநாத சாஸ்திரியார் என்பவர் என்னிடம் துக்கம் விசாரிக்க வந்தார். வந்தவர் நான் நாடகம் எழுதிக்கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, “என்ன சம்பந்தம் நீ துக்கத்தில் மூழ்கியிருப்பாயென்று எண்ணினேன். என்ன, நாடகம் எழுதிக்கொண்டிருக்கிறாயே!” என்று கேட்டார். “என் துக்கத்தை மறந்திருப்பதற்கு இதுதான் நான் கைகண்ட மார்க்கம். அன்றியும் நடந்ததைப்பற்றித் துக்கப்படுவதில் என்ன பிரயோஜனம்?” என்று கூறி, நான் எழுதிக்கொண்டிருந்த காட்சியை அவருக்கு வாசித்துக் காட்டினேன்; அக்காட்சி, இந்நாடகத்தில் இரண்டாம் அங்கம் இரண்டாம் காட்சியாம். அதற்குச் சாதாரணமாக “ஙப்போல் வளை” காட்சி என்று எங்கள் சபையின் அங்கத்தினர் வேடிக்கையாகப் பேர் வைத்திருக்கின்றனர். இந்த விஷயத்தை சற்று விவரமாய் இப்படி எழுதினதற்கு ஒரு காரணம் உண்டு; நான் ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜாகயிருந்தபொழுது, சில வருஷங்களுக்கு முன், என் மனைவி, என் தௌர்பாக்கியத்தால் மடிந்த பொழுது, தகனக்கிரியை ஆனவுடன், கோர்ட்டுக்குப் போய் கோர்ட் கேசுகளை நடத்தினேன். அச்சமயம், எனது நண்பர்களில் பலர், இவன் என்ன கல் மனதுடையவனா யிருக்கிறான்; பெண்சாதி இறந்த தினம்கூடக் கோர்ட்டுக்கு வந்து கோர்ட்டில் விவஹாரம் நடத்துகிறானே! என்று என்னைப் பழித்ததாகக் கேள்விப்பட்டேன். இவ்வாறு நான் செய்ததற்கு நியாயம், இதற்கு முன் நான் குறிப்பிட்டதுதான்; உயிர் உள்ளவரையில், நம்மால் எவ்வளவு கஷ்டம் எடுத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவும் எடுத்துகொள்ள வேண்டியதுதான். உயிர் நீங்கினபின், பேதை மனிதனால் என்ன செய்ய முடியும்? நான் செய்தது தப்போ ஒப்போ என்று யோசிப்பவர்கள், மஹா பாரதத்தில், சுவர்க்காரோஹண பர்வத்தில் “புத்திமான்கள் இறந்தவர்களுக்காகத் துக்கப்பட மாட்டார்கள்” என்று தர்மராஜன் கூறிய வார்த்தையைக் கவனிப்பார்களாக.
இனி இம் மனோஹரன் நாடகத்தில் சில காட்சிகள் என் மனத்தில் உதித்ததற்குக் காரணத்தைக் கூறுகிறேன். இந்த நாடகத்தின் முதற் காட்சியானது விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடக மேடையொன்று பல வருஷங்களுக்கு முன், முதல் முதல் கட்டப்பட்ட பொழுது, அதில் டிராப்படுதாவில் எழுதப்பட்டிருந்த ஒரு காட்சியே. இது அநேக வருஷங்களுக்கு முன்னமே பழசாகப்போய்க் கிழிந்து போய்விட்டது. ஆயினும் முதல் முதல் அதை நான் பார்த்தபோது அக்காட்சி என் மனத்தை உருக்கியது. ஓர் ஏரியின் கரையில் ஒரு வாலிபனும் பெண்மணியும் நெருங்கி உட்கார்ந்திருந்தது போல் வரையப்பட்டிருந்தது.
அதை வரைந்த சித்திரக்காரர் என்ன எண்ணத்துடன் வரைந்தாரோ அறிகிலேன். ஆயினும் என் மனத்திற்கு அப்பெண்மணி ஏதோ துக்கப்படுவது போல் தோற்றியது. என்ன காரணம் பற்றியிருக்கலாமென்று நானாக யோசித்து, அருகிலிருக்கும் அவள் காதலன் ஐரோப்பா தேசத்தில் குரூசேட் (crusade) சண்டைக்குப் போகப் போகிறவன் புறப்படு முன், தன் காதலியிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு புறப்படுகிறான். அதற்காகக்தான் அப்பெண்மணிதன் காதலனை மறுபடியும் காண்போமோ என்னவோ என்னும் சங்கையினால் துக்கப்படுகிறாள், என்று என் மனத்தில் யோசித்துக் கொண்டேன். அப்படுதாவைப் பிறகு நான் பன்முறை பார்க்கும் பொழுதெல்லாம் இதே ஞாபகம்தான் எனக்கு வந்தது. மனோஹரன் நாடகத்தில் முதல் அங்கத்தில் முதற் காட்சியில் மனோஹரன் தன் தாயாரிடமும் மனைவியிடமும் யுத்தத்திற்குப் போகுமுன் விடை பெற்றுக் கொண்டு போகும் காட்சி, இதனின்றும் என் மனத்தில் உண்டாயதென்றே நான் சொல்லவேண்டும்.
மற்றொரு காட்சிக்குக் காரணம் சற்று நகைப்பை உண்டாக்குவதாயிருக்கும். சி. ரங்கவடிவேலு எனக்கு சிநேகிதனான பிறகு சைதாப்பேட்டையில் ஒரு நாள் எங்கள் சபையார் வனபோஜனத்துக்காகப் போயிருந்தபொழுது, நாங்கள் எல்லாம் சாப்பிட்டுவிட்டு, வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த சமயம், ரங்கவடிவேலுவை, தான் கையில் வைத்துக்கொண்டிருந்த வெற்றிலைச் சுருள் ஒன்றை எனக்குக் கொடுக்கும்படி கேட்டேன். தனக்கு இயல்பாயுள்ள வெட்கத்தினால் அத்தனை பெயர் எதிரில் கொடுப்பதா என்று எண்ணி மறுத்தனர். ஆகட்டும், இதற்கா வெட்கப்படுகிறாய்? ஆயிரக்கணக்கான ஜனங்கள் எதிரில், உன்னை அங்ஙனம் செய்யும்படி செய்கிறேன் பார்! என்று மனத்தில் தீர்மானித்து, மனோஹரன் நாடகத்தில் மூன்றாவது அங்கத்தில் இரண்டாவது காட்சியில் (இதற்கு ஊஞ்சல் காட்சி என்று சாதாரணப்பெயர் உண்டு) விஜயாள் மனோஹரனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பதாக எழுதினேன்! இது மேற்கண்ட வேடிக்கையான காரணத்தில் ஆரம்பமுடையதாயிருந்த போதிலும், நாடகத் திற்கு மிகவும் பொருந்தியதாய் ஜனங்களுக்கு மிகவும் சந்தோஷத்தைத் தரும்படியான ஒரு காட்சியாய் முடிந்தது.
நான் அக்காலத்தில் படித்த ஓர் ஆங்கில நாவலில் ஒரு ஸ்திரீ, தான் விரும்பும் காதலனுக்கு ஒரு கடிதமும், தான் வெறுக்கும் ஒரு புருஷனுக்கு ஒரு கடிதமும், ஏக காலத்தில் எழுதியபொழுது, அவைகளை அகஸ்மாத்தாய், மாறான கவர்களில் (Covers) போட்டனுப்பிவிட, பிறகு அதனால் பெருங்கஷ்டமனுபவித்ததாகப் படித்திருந்தேன்; இது அகஸ்மாத்தாய் நடந்திருக்க, ஒரு கெட்ட எண்ணமுடைய ஸ்திரீ, வேண்டுமென்று இரண்டு நிருபங்களை மாற்றிவிட்டால் அதனால் எவ்வளவு தீமை உண்டாக இடங்கொடுக்கும் என்று யோசித்து, வசந்தசேனை இம் மனோகரன் நாடகத்தில் பத்மாவதி தன் கணவனுக்கும் மந்திரிக்கும் எழுதிய நிருபங்களை, வேண்டுமென்று மாற்றச் செய்தேன். இக்காட்சியைப் பற்றி அநேக நண்பர்கள் அக்காலத்தில் காகிதங்களும் கவர்களும் ஏது? என்று என்னைக் கேட்டிருக்கின்றனர். அதற்கு பதில் என்ன வென்றால், காகிதங்களும் கவர்களும் அப்பொழுதில்லை; வாஸ்தவம் தான். ஆயினும் ஓலைச்சுருள்கள் அனுப்புவது புராதன வழக்கமாம். இவைகளைச் சுருட்டி, மேல் விலாசம் எழுதி ‘லகோடா’ என்கிற ஒரு சுருளில் அடக்குவது வழக்கமுண்டு என்பதேயாம்: இந்நாடகத்தை நடத்தும் எனது நண்பர்கள் இக்காட்சிகளில், காகிதத்திற்குப் பதிலாக ஓலைச் சுருள்களை உபயோகித்து அவைகளை ‘லகோடா’ என்னும் சுருள்களுக்குள் வைத்து, உபயோகிப்பார்களாக.
ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் நாடகங்களைப் படித்த எனது நண்பர்கள், அவர், ஹாம்லெட், ஜுலியஸ் சீசர் முதலிய நாடகங்களில் உபயோகப்படுத்தியிருக்கும் அருவங்களினின்றும், இம்மனோஹரன் நாடகத்தில் ‘கேசரிவர்மன்’ அருவன் உதித்ததென எளிதில் அறியக்கூடும். அன்றியும் கொலை செய்யப்பட்டவர்கள் பிசாசாகத் தோன்றி தங்களைக் கொன்றவர்களை வருத்துகிறார்கள் என்பது நம்முடைய நாட்டில் சாதாரணமாக வழங்கும் அபிப்பிராயம்.
பத்மாவதிதேவி, புருஷோத்தமன் யுத்தத்திற்குச் செல்லும் பொழுதும் நேராகப் பாரேன் என்று, திரையிட்டு அத்திரைக்கு வெளியில் நின்று பார்க்கும்படியாகச் செய்த காட்சி, தேசிங்கு ராஜன் கதையில், தேசிங்கு யுத்தத்திற்குச் செல்லுமுன், தன் சொந்த மனைவியாயிருந்தபோதிலும், அவளது முகத்தைப் பார்ப்பதற்கில்லாமல், திரையை நடுவில் இட்டு அவளைப் பார்க்கும்படி நேர்ந்த சந்தர்ப்பத்திலிருந்து, என் மனத்தில் உதித்ததாகும்.
இம் மனோஹரன் நாடகத்திற்கு, உடையுடன் முழு இரவு ஒத்திகையானது எனது நண்பர் ஜெயராம் நாயகருடைய வீட்டில் நடந்தது. அதில் முக்கியமாக எனக்கு ஞாபகம் இருக்கும் விஷயம் என்னவென்றால், இந்நாடகத்தில் தற்காலத்தில் “இரும்புச் சங்கிலிக் காட்சி” என வழங்கி வரும் முக்கியமான காட்சியில், என் முழு தேக வலிவுடன் மிகுந்த உரத்த சப்தத்துடன் ஆக்டு செய்ததனால், அக்காட்சியின் முடிவில் சற்றேறக்குறைய வாஸ்தவத்திலேயே மூர்ச்சையாயினேன் என்பதே. அவ்வளவு நான் தேக சிரமப்பட்டது அனாவசியம் என்றே இப்பொழுது யோசிக்குமிடத்து எனக்குத் தோன்றுகிறது. அப்பொழுது அது தோன்றாமற் போயிற்று. அன்றியும் அச்சமயம் ஷேக்ஸ்பியர் மஹாகவி, ஹாம்லெட் வாயிலாக நாடகப் பாத்திரங்களுக்குச் செய்திருக்கும் உபதேசத்தை அறிந்தவனல்ல. அறிந்திருப்பேனாயின் அவ்வாறு என்னைக் கஷ்டத்திற்குள்ளாக்கிக் கொண்டிருக்க மாட்டேன் என்பது திண்ணம். இந்நாடகத்தை ஆட விரும்பும் அனைவர்க்கும், முக்கியமாக மனோஹரன் பாத்திரத்தை எடுத்துக் கொள்பவர்க்கெல்லாம், ஷேக்ஸ்பியர் எழுதியுள்ள அடியிற்கண்ட வார்த்தைகளை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவைகள்:- “நான் வகுத்த வண்ணம் உமது வசனங்களை நாவினால் நயம்பட வழங்கும்படி உம்மை வேண்டுகிறேன். உங்களுள் அநேகர் உரைப்பதுபோல அவ்வசனங்களை வாய்விட்டுக் கத்துவீராயின், அதைவிடப் பட்டணங்களில் பறை சாற்றும் வெட்டியானைக் கொண்டு, நான் வரைந்ததைப் பகர்ந்திடச் செய்ய நான் விரும்புவேன்..... இடிபோல் முழங்கி, சண்டமாருதமெனவரும் உமது ரௌத்திரம் முதலிய ஆவேசங்களிலும் ஒருவித அடக்கத்தை வகித்தவராய், அத்து மீறாது ஒழுங்கினை உடையவரா யிருத்தல் வேண்டும். அர்த்தமில்லா அபிநயங்களையும் ஆரவாரக் கூச்சல்களையுமே அதிகமாய் விரும்பும் அற்ப ஜனங்களின் காதுகள் பிளந்து போகும்படி கத்துவதைக் காணுங்கால், என் மனமெல்லாம் புண்படுகின்றது. இராட்சதர் களைத் தோற்கடிக்கச் செய்யும் அப்படிப்பட்ட ஒருவனைத் துடைப்பத்தால் அடித்துத் துரத்த விரும்புவேன் நான். .......உம்மை வேண்டுகிறேன், இதை விட்டொழியும்.... அத்துமீறிப் போவது நாடகமாடுவதன் தாத்பர்யத்துக்கு முற்றிலும் விருத்தமாகும்” என்பனவேயாம். இவ்வார்த்தை களைச் சற்று நான் விவர்மாய் வரைந்ததற்கு ஒரு முக்கியக் காரணமுண்டு. இம் மனோஹரன் பாத்திரத்தை ஆடும் ஆக்டர்கள் பெரும்பாலும் ஷேகஸ்பியர் மகா நாடகக் கவி, எக்குற்றங்களை யெல்லாம் களைய வேண்டுமென்று போதித்திருக்கின்றாரோ, அக்குற்றங்களையெல்லாம் உடையவர்களாயிருப்பதே. அக்குற்றங்களை யெல்லாம் நீக்கி ஆடாமையே, அவர்கள் இப் பாத்திரத்தில் பெயர் பெறாமைக்குக் காரணம் என்று உறுதியாய் நம்பி, சரியான வழியில் இதை ஆடுவார்களென்று விரும்பியே இதை எழுதலானேன். முக்கியமான இக்காட்சியில் மனோஹரனாக நடிக்கும் பாத்திரம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், இதைப் பார்க்கும் ஜனங்கள், மனோஹரனுடைய முழு தேக பலத்தையும் நாம் கண்டு விட்டோம் என்னும் யோசனையை அடையச் செய்யலாகாது என்பதேயாம். மனோஹரனுடைய முழு வல்லமையையும், நாம் கண்டோமில்லை; ஒரு கூற்றினைத்தான் நாம் பார்க்கிறோம் இதற்கே இப்படி இருக்கிறதே, இன்னும் அவனது முழு சக்தியையும் நாம் காண்போமாயின் எப்படி இருக்கும் என்று ஆச்சரியத்தை யுண்டுபண்ண வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. இப் புத்திமதியை இப் பாத்திரத்தை ஆட விரும்பும் என் இளைய நண்பர்களெல்லாம் சற்றுக் கவனிப்பார்களாக. நான் வாஸ்தவத்தில் மிகுந்த பலஹீனமுடையவன். என் யௌவனத்திலும், அவ்வயதுள்ள சிறுவர்களுடைய தேக பலத்திற்குக் குறைவான சக்தி யுடையவனாயிருந்தேன். ஆயினும் இக்காட்சியில் நான் நடிக்கும் பொழுது ஏதோ மிகுந்த பலமுடையவனாகத் தோற்றப்பட்டேன் என்று என் பால்ய நண்பர் ஸ்ரீனிவாச ஐயங்கார் பன்முறை கூறியுள்ளார். இல்லாத ஒன்றை இருப்பதுபோல் நடித்துக் காட்டுவதே நாடகத்திற்கு முக்கியமான ஒரு பெருமையும் அழகும் என்று அறிஞர் கூறுகின்றனர்.
இந் நாடகம் முக்கியமாக அநேகம் சபைகளாலும் நாடகக் கம்பெனியார்களாலும் நடிக்கப்பட்டிருப்பதால், அவற்றைப் பற்றி பிறகு எழுதலாமென்றிருக்கிறேன்.
இந்நாடகமானது எங்கள் சபையோரால் 1895ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆடப்பட்டது. இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, ஐந்துமணி நேரத்திற்குமேல் பிடித்தது என்பது என் ஞாபகம். டிக்கட்டு வசூலில் இருநூறு ரூபாய்தான் வந்தபோதிலும், வந்திருந்தவர்கள் அனைவரும் நன்றாயிருந்ததென மெச்சினர். நான் அறிந்த வரையில் ஆக்டர்களாகிய நாங்கள் நன்றாய் நடித்தோமென்பதே எங்கள் துணிவு. புருஷோத்தமனாக நடித்த ராஜரத்தின முதலியார் அந்நாடகப் பாத்திரத்திற்கு மிகுந்த அமைந்தபடி நடித்தார். இவர் எங்கள் சபையில் பூண்ட வேஷங்களிலெல்லாம் இதுதான் மிகவும் மேம்பட்டதென்பது என் அபிப்பிராயம். பிறகு வந்த அநேகம் புருஷோத்தமர்கள் பாடியிருக்கின்றனர்; இவர் இந்த வேடத்தில் ஒரு பாட்டும் பாடாமல், தன் வசனத்தினால் மாத்திரம் சபையோரைச் சந்தோஷிக்கச் செய்தது மெச்சத் தகுந்ததே. பத்மாவதியாக நடித்த அ. கிருஷ்ணசாமி ஐயர்; நடிப்பதற்கு மிகவும் கஷ்டமான அப்பாத்திரத்தை மிகவும் நன்றாக நடித்தார் என்று எல்லோரும் ஒப்புக்கொண்டனர். இவரது சங்கீதமும் வசனமும் மிகவும் பொருத்தமானதாயிருந்ததென்பது என் தீர்மானம். முதல் அங்கம் நான்காம் காட்சியில், இறந்ததாகக் கருதிய மனோஹரனை, உயிருடன் மறுபடி காணப்பெற்ற பொழுது “காணக் கிடைத்ததேதோ மைந்தா” என்னும் பாட்டை கமாஸ் ராகத்தில் இவர் முப்பத்தேழு வருடங்களுக்கு முன் பாடியது இன்னும் என் மனத்தை விட்டகலவில்லை. அநேகம் பேர்கள் என்னுடன் பத்மாவதியாக நடித்திருக் கின்றனர்; ஆயினும், கேவலம் சங்கீதத்தை மாத்திரம் கருதுங்கால் இவரது பத்மாவதியே என் மனத்தை மிகவும் திருப்தி செய்தது என்று நான் சொல்ல வேண்டும். நான் ஒரு நாடகத்தில் மேடை மீது நடிக்கும் பொழுது, என்னுடன் நடிக்கும் ஆக்டர் எப்படி நடிக்கிறார்களென்று அறிவதற்கு, என்னிடம் ஓர் அளவைக் கருவியுண்டு. அதாவது, எனக்கு அவர்களுடன் நடிப்பதனால் உண்டாகும் சந்தோஷமே. இக்கருவியைக் கொண்டு அளந்திடுங்கால் கிருஷ்ணசாமி ஐயர் அன்று பத்மாவியாக நடித்தது மிகவும் சிறப்பினை வாய்ந்ததென்றே நான் கூறல் வேண்டும். எனது பழைய நண்பனாகிய இவர் அநேக ஸ்திரீ வேடங்களில் பெயர் பெற்றிருக்கின்றனர். அவற்றுளெல்லாம் இவரது பத்மாவதி மிகவும் சிறந்ததென்றே நான் சொல்ல வேண்டும்.
முன்பே கூறியபடி இந்நாடகத்தில்தான் எனது ஆருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலு முதல் முதல் என் மனைவியாகிய விஜயாளாக நடித்தனர். இவர் வந்திருந்த சபையோரு டைய மனத்தை எளிதில் கவர்ந்தனர் என்பதற்கு ஐயமில்லை.
இந்த விஜயாள் பாத்திரம் நடிப்பதற்கு அவ்வளவு கஷ்ட மானதல்ல; இருந்த போதிலும் அதைச் சரியாக நடிப்பது சுலபமல்ல. இந்தப் பாத்திரம் சம்ஸ்கிருத நாடகத்தில் ‘முக்தா’ நாயகி வகுப்பைச் சார்ந்தது. இதை ‘ப்ரௌடை’ நாயகியாகக் கொஞ்சம் நடித்தாலும் ரசாபாசமாகும். வேண்டிய அளவிற்கு மிஞ்சாது நடிப்பதுதான் இதில் கஷ்டம். பாத்திரத்திற்கேற்றபடி, உலக வழக்கம் ஒன்றும் அறியாத பேதையைப்போல் எனது நண்பர் இதை மிகவும் சாதுர்யமாக நடித்தார். அன்றைத்தினம் இவர் நான்கே நான்கு பாட்டுகள்தான் பாடினார் என்பது என் ஞாபகம். அவைகளை மிகவும் ஒழுங்காய்ப் பாடிச் சபையை பிரமிக்கச் செய்தார். இவரது பாட்டைவிட இவரது வசனங்களே மிக்க நன்றாயிருந்ததென்பது என் துணிவு. சுருக்கிச் சொல்லுமிடத்து, இதன் பிறகு இம்மனோஹரன் நாடகத்தில் விஜயாள் வேடம் பூண்ட அனைவரும் இவர் ஆக்டு செய்ததையே ஓர் உதாரணமாகக்கொண்டு அதன்படி நடக்க முயன்றனர் என்றே இயம்பவேண்டும். இப்பொழுதும் இந்த நாடகப் பாத்திரம் ஆடும் பொழுது, ஏதாவது ஒரு காட்சியில் எப்படி நடிப்பது என்று சந்தேகம் வந்தால், “ரங்கவடிவேலு இதில் எப்படி நடித்தது?” என்றே கேட்பார்கள். எங்கள் சபையிலும் இதர சபைகளிலும் மற்றுமுள்ள நாடகக் கம்பெனிகளிலும், அநேகம் பெயர் (ஸ்திரீகள் உட்பட) இந்த விஜயாள் பாத்திரத்தை ஆடப் பார்த்திருக்கிறேன்; ஆயினும் உண்மையாய்ப் பட்சபாதமின்றி உரைத்திடுவதானால், இவருக்கு மேலாகவாவது இவருக்குச் சமானமாகவாவது ஒருவரும் நடித்ததில்லை என்றே நான் கூறவேண்டும். ஏதோ எனது நண்பனைப் பற்றி வெறும் புகழ்ச்சியாகக் கூறுகிறேன் என்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் கருதாதிருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். இவரைவிட ரூபலாவண்யமுடைய ஆக்டர்களை நான் தென்னிந்திய நாடக மேடையில் கண்டிருக்கிறேன்; இவரைவிடப் பதின்மடங்கு நன்றாய்ப் பாடும்படியான அநேக ஆக்டர்களது சங்கீதத்தைக் கேட்டிருக்கிறேன்; அன்றியும் இவர் ஆக்ட் செய்த இன்னும் சில பாத்திரங்களைவிட நன்றாய் ஆக்டு செய்தவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆயினும் இந்த விஜயாள் பாத்திரத்தில் இவருக்கு இணையாக நடித்தவர்கள் இல்லை யென்பதே என் முடிவான தீர்மானம். இவர் ஒவ்வொரு காட்சியிலும் என்னுடன் நடித்த பொழுது இப்படி இப்படி நடித்தார் என்பது என் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கிறது. ஒன்றை மாத்திரம் உதாரணமாகக் கூறகிறேன். இந்நாடகத்தில் முதல் அங்கம் நான்காவது காட்சியில் ராஜப்பிரியன் பாண்டிய நாட்டிற்குச் சென்று வெற்றி பெற்றபொழுது, மனோஹரன் அங்கு ஒரு ஸ்திரீயை மணந்ததாக ஏளனம் செய்தக்கால், அதை ஏளனம் என்று அறியாத விஜயாள் ‘என்னபிராண நாதா?’ என்று கேட்கிறாள். சி. ரங்கவடிவேலு, நாடக மேடையில் அந்த இரண்டு சிறு பதங்களைச்சொல்லும் பொழுது, விஜயாளின்பேதைமையையும் கணவன் மீதுள்ள காதலையும், சிறு கோபத்தையும் என்ன அழகாகத் தெரியப்படுத்தினார் என்பது அவர் அவ்வார்த்தைகளைக் கூறக் கேட்டவர்களுக்குத்தான் தெரியும். அவருக்குப் பின் விஜயாளாக நடித்த (ஏறக்குறைய ஒருவர் தவிர) மற்றெல்லா ஆக்டர்களும் அதிக கோபத்தையோ, அதிக ஊடலையோ, அதிக அவநம்பிக்கையையோ அல்லது மேற்சொன்ன பாகங்களையெல்லாம் குறைவாகவோ காண்பித்தார்களே யொழிய, பாத்திரத்திற்குத் தக்கபடியான பக்குவத்துடன் பகர்ந்திலர் என்பது என் துணிபு. இந்தக் கட்டத்தில் சாதாரண ஆக்டர்கள் இழைக்கும் பிழையாவது, கோபத்தை அதிகப்படுத்தி அபிநயிப்பதேயாம். இதற்கு ஆங்கிலத்தில் ஓவர் ஆக்டிங் (Over acting) என்று சொல்லுவார்கள்.
இவர் அன்று விஜயாளாக நடித்ததில் என் மனத்தில் முக்கியமாகப்பட்ட மற்றொரு விஷயத்தை எழுத விரும்புகிறேன். இந்நாடகத்தில் நான்காவது அங்கத்தில் புருஷோத்தமன், நடந்த உண்மையையறிந்து பத்மாவதியிடம் சென்று மன்னிப்புக் கேட்கும் சந்தர்ப்பத்தில் திரைக்கு வெளியில் வந்து, தன்னுடன் பேசிய தன் மருமகளாகிய விஜயாளைப் பார்த்து, தான் அவளது கணவனுக்கு இழைத்த பெரும் தீங்கையெல்லாம் மன்னிக்கும்படியாகக் கேட்கும் பொழுது, விஜயாள், “சரிதான் மாமா” என்று பதில் சொல்லுகிறாள்; இவ்வார்த்தைகளை நான் எழுதியபொழுது, விஜயாள் தன் மாமனாரை எளிதில் மன்னித்திருக்க வேண்டும் என்று கருதி எழுதினேன்; அவ்வளவுதான். அந்த இரண்டு பதங்களை என் நண்பர் சி. ரங்கவடிவேலு அற்றைத் தினம் இந்நாடகம் முதன் முறை நடந்தபொழுது, தக்கபடி உச்சரிக்கக் கேட்ட பிறகுதான், அந்த இரண்டு பதங்களில் எவ்வளவு அர்த்தம் அடங்கியிருக்கிறதெனும் உண்மையை, நூலாசிரியனாகிய நானே உணர்ந்தேன்! நான் பல வடருஷங்களுக்குமுன் படித்த ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் எனக்கு இச் சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது. அதன் தாத்பர்யம் என்னவென்றால். ஒரு குளத்தை வெட்டினவன், அதன் சுகத்தை அறிந்திலன்; வெயிலிலடிபட்டு வேட்கையுடன் வந்து, அக்குளத்திலிறங்கி, கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு, அதன் தெள்ளிய நீரை உண்பவனே அதன் சுகத்தை உண்மையில் அறிகிறான்; அங்ஙனமே ஒரு பெண்ணைப் பெற்ற தந்தை அவள் மேன்மையையறியான்; அவளது ரூபலாவண்யத்தையும் குணாதிசயங்களையும் அனுபவிக்கும் அவளது புருஷனே, அவற்றை உண்மையில் அறிகிறான்! அங்ஙனமே, ஒரு கிரந்த கர்த்தா, தான் எழுதுவதன் மகிமையை அறிவதில்லை; அதை ஆராய்ந்தறியும் அப்புஸ்தகத்தை வாசிப்பவனே, அதன் நுட்பங்ளை யெல்லாம் நன்றாயறிகிறான், என்பதே! மேற்சொன்னபடி நாடகங்களை எழுதும் நாங்கள் “ஏதோ எங்கள் மனத்திற்குத் தோன்றியபடி எழுதி விடுகிறோம். சில சமயங்களில் நாங்கள் உப்யோகிக்கும் பதங்களின் நுட்பங்களை நாங்களே அறிகிறதில்லை. புத்திசாலிகளான நடர்கள் அவற்றை அரங்கத்தில் நடிக்கும் பொழுதுதான், அவ்வார்த்தைகளில் அடங்கியிருக்கும் அனேக விஷயங்களை அறிகிறோம். இந்த “சரிதான் மாமா” என்னும் வார்த்தைகள் சொல்லப்படும் பொழுதெல்லாம் சபையிலுள்ளவர்கள் அன்று முதல் இன்றுவரை கரகோஷம் செய்யாத நாளில்லை: அப்படி அவர்கள் செய்யாவிட்டால், அது விஜயன் வேடம் பூணும் ஆக்டருடைய குற்றம் என்பதற்கு எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த விசேஷத்தை அவ்வார்த்தைகளுக்கு உண்டாக்கியவர் எனது நண்பராகிய சி.ரங்கவடிவேலுவே. அவருக்குப்பின் இந்த விஜயாள் பாத்திரத்தை நடிக்கும் ஆக்டர்களெல்லாம் அவர் காட்டிய வழி பற்றியே இதை நடத்தி வருகின்றனர் என்பதற்கு ஐயமில்லை.
இனி அன்றிரவு நடித்த வசந்தசேனைப் பாத்திரத்தைப் பற்றிக் கொஞ்சம் எழுதுகிறேன். இந்நாடகத்தில் நடிப்பதற்கு மிகவும் கஷ்டமான பாத்திரங்களில் இது ஒன்று. பத்மாவதி, விஜயாள் முதலிய உத்தம குணமுடைய ஸ்திரீவேஷங்களைப் பூணுபவர்கள், சபையோர்களைச் சந்தோஷிக்கச் செய்வது சுலபம். இப்படிப்பட்ட ஸ்திரீரத்னங்கள் இன்னலுக்குட்படுகிறார்களே யென்று நாடகம் பார்ப்பவர்களெல்லாம், அவர்கள் மீது பச்சாதாபம் கொள்கிறார்கள். வசந்தசேனை முதலிய துஷ்ட சாரிதமுடைய ஸ்திரீகள் நாடக மேடையின்மீது தோன்றும் பொழுதெல்லாம், இத்துஷ்டையா! என்று எல்லோரும் வெறுக்கிறார்கள். ஆகவே இப்படிப்பட்ட வேஷங்களில் பெயரெடுப்பது கடினமே. அன்றியும் வசந்தசேனை நாடகப் பாத்திரத்தைத் தக்கபடி நடிப்பது சுலபமல்ல. பத்மாவதியின் தோழியாயிருந்து புருஷோத்தம மகாராஜாவைத் தன் மோகவலைக்குள் சிக்கச் செய்து, அதனால் பத்மாவதியின் வைரியாகி, கேசரிவர்மன் என்னும் தன் சோரநாயகனுக்குதித்த வசந்தனை, மகாராஜாவின் மைந்தன் என்று எல்லோரும் நம்பும்படிச் செய்து, எங்கு தன் சூது வெளியாகி விடுகிறதோ என்னும் பயமொரு பக்கமும், மகாராஜா எங்கு பத்மாவதியிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறாரோ என்னும் பயம் இன்னொரு பக்கமும் உடையவளாய், சூழ்ச்சியின்மேல் சூழ்ச்சி செய்து கொண்டு, தன் நிலையைக் காப்பாற்றப் பார்க்கும் ஒரு ஸ்திரீ வேடம் பூண்டு தக்கபடி நடிப்பது, மிகவும் கடினமென்றே நான் கூற வேண்டும். இப்படிப்பட்ட, எவரும் விரும்பாத வேடத்தை முதல் முதல் எங்கள் சபையில் அன்று பூண்டவர், ம. கந்தசாமி முதலியார் என்பவர். இவர் அக்காலத்தில் என் தமயனார் ஆறுமுக முதலியாருடன், சென்னை கவர்ன்மென்ட் கலாசாலையில் படித்தவர். அதன் மூலமாக எனக்கு இவரைத் தெரிய வந்தது. எனக்கு ஞாபகம் இருக்கிறவரையில் இவர் எங்கள் சபையில் மிகவும் சில நாடகங்களில்தான் நடித்தார். பிறகு எங்கள் சபையைவிட்டு நீங்கிவிட்டார். அதன் பிறகு சில நாடகக் கம்பெனிகளிற் சேர்ந்து என்னுடைய முக்கியமான சில நாடகங்களை அவர்சளுக்குக் கற்பித்தார்; இங்ஙனமே சில பால நாடகக் கம்பெனளிலும் சிறுவர்களுக்கு அவைகளைக் கற்பித்தனர். தற்காலம் சிங்கப்பூர், மலேயா பிரதேசங்களுக்கும் போயிருந்து இப்பொழுது மதுரைக்கு வந்திருக்கிறார்.
இவர் வசந்தசேனையாக ஒத்திகைகள் நடத்தும் பொழுது நேரிட்ட சிறு நகைப்புக்கிடமான சமாச்சாரம் ஒன்று கூற விரும்புகிறேன். இவருக்கு சாதாரணமாகப் பேசும் பொழுது இடது தோளைச் சற்று அடிக்கடி தூக்குகிற வழக்கம் உண்டு. இவ்வழக்கம் நாடகமாடும் பொழுதும் வந்தால் நலமாயிராதென்று, அதை அகற்றும்படி எவ்வளவு சொல்லிப் பார்த்தும், அவரால் அதை விடமுடியவில்லை . அதன்மீது ஒரு யுக்தி செய்தேன். இவர் அனுமதியின்மீது இவர் ஒத்திகை செய்யும் பொழுதெல்லாம், இவருக்குப் பின்பக்கமாக அங்கத்தினரை நிற்கச்செய்து இவர் தன்னையுமறியாதபடி இடது தோளை உயர்த்தும் பொழுதெல்லாம், மெல்ல அத்தோள் மீது ஒரு குட்டு குட்டச் செய்தேன்! பல ஒத்திகைகளில் இவ்வாறு செய்து வந்தபடியால், இவ்வழக்கத்தைப் பெரும்பாலும் விட்டனர்! ஆயினும் முற்றிலும் விடாதபடியால் நாடக தினத்தில், மேற்சொன்னபடி செய்வதற்கில்லாமையால், பக்கப்படுதாவண்டையில் (side wing) ஒருவரை நிறுத்தி, எப்பொழுதாவது இடது தோள் உயர்த்தும்படி நேரிட்டால், ஊம்காரம் செய்து அதைத் தடுக்க ஏற்பாடு செய்தேன். இதை இவ்வளவு விவரமாக இங்கு நான் கூறியதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. சில ஆக்டர்கள், மேடையின்மீது, கையை முன்னால் கட்டிக்கொள்வது, கண்களை எந்நேரமும் உயர்த்திப் பார்த்துக் கொண்டிருப்பது, வேஷ்டியை அல்லது ஆடையை எந்நேரமும் பற்றிக்கொண்டிருப்பது முதலிய வழக்கங்கள் உடையவளர்களாயிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவைகளெல்லாம் நாடகத்தின் அழகிற்குப் பொருத்தமானவைகள் அல்லவென்றும், அவைகளை எளிதில் மேற்சொல்லியபடி நிவர்த்திக்கலாம் என்றும் என் இளைய நண்பர்கள் அறியும் பொருட்டேயாம். மொத்தத்தில் அன்றிரவு கந்தசாமி முதலியார் வசந்தசேனையாக நடித்தது நன்றாயிருந்ததெனவே சொன்னார்கள். ஆயினும், பிறகு அநேகம் ஆக்டர்கள் இந்த வசந்தசேனைப் பாத்திரத்தை ஆடிய போதிலும், இந்தப் பாத்திரத்தில் மிகவும் நன்றாய் நடித்து, நற்பெயர் எடுத்தவர், இதற்குச் சில வருஷங்கள் பிறகு எங்கள் சபையைச் சேர்ந்த டி.சி.வடிவேலு நாயகரே. இவரைப்பற்றிப் பிறகு நான் எழுதவேண்டிவரும். வசந்தன் வேடம் பூண்ட ச. ராஜகணபதி முதலியாரைப்பற்றி நான் அதிகமாய் எழுத வேண்டியதில்லை. எப்படி விஜயாள் பாத்திரம் சி. ரங்கவடிவேலு முதலியாருக்காக எழுதினேனோ, அப்படியே இவருக்கென்றே இப்பாத்திரம் எழுதப்பட்டதால், இதை அவர் எளிதில் நன்றாய் நடித்தார் என்று சொல்லலாம். இவர் பைத்தியக்காரனைப்போல் நடிப்பதற்கு அவ்வளவாகப் பிரயாசை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லாதிருந்தது. தற்காலத்தில் இந்த வேஷம் பூணுபவர்கள் பல பாட்டுகளைப் பாடுகிற வழக்கமாயினும், அச்சமயம் இவர் ஒரு பாட்டும் பாடவில்லை . அப்படியிருந்தும், பிறகு வந்த வசந்தர்களெல்லாம் இவருக்கு இணையாகமாட்டார்கள் என்றே நான் கூற வேண்டும். இவரிடம் ஒரு முக்கியமான நற்குணமுண்டு. அதாவது எழுதியிருப்பதற்குமேல், ஒரு வார்த்தை அதிகமாகவும் பேச மாட்டார், குறைவாகவும் பேச மாட்டார்; அன்றியும் இவருக்கேற்ற பாத்திரத்தை மாத்திரம் பொறுக்கி இவருக்குக் கொடுத்துவிட்டால், ஒரு முறை இப்படி நடிக்க வேண்டுமென்று காண்பித்தபின், மறுபடி ஒன்றும் சொல்ல வேண்டியதில்ல; அப்படியே கிரஹித்துக்கொள்வார். சில ஆக்டர்களுக்குப் பத்து முறை ஒரே விஷயத்தைத் திருப்பித் திருப்பிக் கற்பித்த போதிலும், நாடக தினத்தில் நாடக மேடை ஏறுமுன், “வாத்தியார், இந்த வரியை எப்படிச் சொல்வது, இன்னொரு முறை சொல்லிக் காட்டுங்கள்” என்று கேட்பவர்களுமிருக்கிறார்கள்; அப்படிப்பட்டவர்களில் இவர் ஒருவரன்று.
முதல் பாகம் முற்றிற்று
நாடக மேடை
நினைவுகள்
இரண்டாம் பாகம்
இவர் இதற்குச்சில வருஷங்களுக்குப் பின்கவர்ன்மென்ட் உத்தியோகத்தில் அமர்ந்து, கடந்த ஐரோப்பிய யுத்தத்தில் பிரான்சு முதலிய தேசங்களுக்குப் போயிருந்து தற்காலம் பென்ஷன் வாங்கிக்கொண்டு, தெய்வகடாட்சத்தினால் சுகஜீவியாயிருக்கிறார். மேற்சொன்ன ராஜகணபதி முதலியாருடைய தோழனான ஜே.பி.ஷண்முகம் பிள்ளை என்பவர், அன்று விகடனாக நடித்தார். இவர்கள் இருவரும் கிறிஸ்துவக் கலாசாலையில் ஒன்றாய்ப் படித்துக் கொண்டிருந்தவர்கள். ஷண்முகம் பிள்ளை என்னைப் போல் கொஞ்சம் குறும்பு குணமுடையவர்; எந்நேரமும் ராஜகணபதி முதலியாரை ஏளனம் செய்து கொண்டிருப்பது அவருடைய வழக்கம். ராஜகணபதி முதலியாருக்குக் கொஞ்சம் கருடப்பார்வை; அதைப்பற்றி அவர் ஏளனமாகச் செய்த இரண்டு பாட்டுகளை இங்கு எழுதுகிறேன்:
“குண்டனாம் கணபதி Crooked faced creature, அண்டங்கள்திர அடிவைப்பவனாம் - முண்டம், எதிலும் பயனில்லை எண்ணிப் பார்த்தால், ஒதியிலும் Worthless tree"; “மூடனாம் கணபதி, மூன்றில் பாதி கண்ணனாம் - நாட என்றால் நம்மாலு மாகாதே-கூட-படி அரிசி தன்னைப் பரிவுடன் சமைத்து வைத்தால், நொடியில் நுகர்ந்து விட்டு Not sufficient என்பானே.”
இப்பாட்டுகள், தமிழும் ஆங்கிலமும் கலந்த மணிப்பிரவாள நடையிலெழுதப்பட்ட வெண்பாக்கள் என்பார் ஷண்முகம் பிள்ளை! இவ்வாறு வெளியில் வேடிக்கை பண்ணுவதுபோல், நாடக மேடையிலும் ராஜகணபதி முதலியாரை ஏளனம் செய்வது சுலபமாயிருக்குமென்று எண்ணி, வசந்தனாகிய ராஜகணபதி முதலியாருக்கு வேடிக்கைத்தோழனாக விகடனாகிய ஷண்முகம் பிள்ளையை நியமித்தேன். வெங்கடகிருஷ்ண பிள்ளை என்பவர் தொழிலிலே வைத்தியராக இருந்தபடியால், அவருக்கு அமிர்தகேசரி வேஷம் கொடுக்கப்பட்டது. இம்மனோஹரன் நாடகத்தில் ஒரு காட்சியில் இந்த வைத்தியருடைய பூரணாதி லேகியத்தைச் சாப்பிட்டுவிட்டு விகடன் மயங்கிக்கிடக்கிறான். இது எழுதியதற்கு ஒரு வேடிக்கையான காரணம் உண்டு. நானும் என் நேர் சகோதரன் ஆறுமுக முதலியாரும் சிறுவர்களாயிருந்த பொழுது, எங்கள் வீட்டில் வைத்தியர் ஒருவர், ஒரு நாள் தன் கடைக்கு எடுத்துக்கொண்டு போக வேண்டி சித்தம் செய்த பூரணாதி லேகியத்தைக் கொஞ்சநேரம் வைத்துவிட்டு வேறு வேலையாகப் போயிருந்தார். அவர் வைத்துவிட்டுப் போனது பூரணாதி லேகியம் என்றும் அதன் குணம் இப்படிப்பட்டதென்றும் எங்களிருவருக்கும் தெரியாது; எங்கள் தாயார் எங்களுக்கு எப்பொழுதுதாவது சுக்கு லேகியம், மிளகு லேகியம் ஜீரண சக்திக்காகக் கொடுப்பதுண்டு. அதுபோல இது ஒன்று என்றெண்ணி, அப் பூரணாதி லேகியத்தில், நாங்கள் இருவரும் கொஞ்சம் சாப்பிட்டு விட்டோம்! பிறகு மூன்று நான்கு மணி சாவகாசம் வரையில் வெறி பிடித்தவர்கள் போல் நாங்கள் குழப்பஞ் செய்ததாக எங்கள் வீட்டிலுள்ளவர்கள் சொல்லக் கேட்டோம்; எங்களுக்கு நாங்கள் இன்னது செய்தோம், இன்னது பேசினோம் என்பது தெரியாது! பலதரம் இதைக்குறித்து எங்கள் அண்ணன்மார்கள் எங்களை ஏளனம் செய்ததுண்டு; இந்த அனுபவத்தைக் கொண்டுதான், பூரணாதி லேகியக் காட்சி எழுதினேன். இதை வெங்கட கிருஷ்ண பிள்ளையும் ஷண்முகம் பிள்ளையும் மிகவும் வேடிக்கையாக நடித்தார்கள். இம் மனோஹரன் என்னும் நாடகத்தில் புருஷோத்தமனுடைய குருவின் பாகம் ஒன்றுண்டு; அது சிறிதானதே; ஆயினும் முக்கியமானது. இதை ஒத்திகைகள் நடத்தும் பொழுது ஒருவருக்குக் கொடுத்திருந்தேன். அவர் ஒத்திகைகள் செய்யும் பொழுது கூட நடித்து வந்தார். கடைசியில், நாடகத்திற்காக விக்டோரியா பப்ளிக்ஹாலுக்குப் பணம் கட்டின பிறகு, யாதோ ஒரு காரணத்தால் அப் பாத்திரத்தை நடிக்க முடியாது என்று கை விட்டார். அச்சமயத்தில் நான் இதற்கென்ன செய்வது. என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, என்தமயனார் ஆறுமுக முதலியார், “நீ கலவரப்படவேண்டாம், நான் அதை எடுத்துக்கொள்கிறேன்” என்று கூறி, அதை எடுத்துக்கொண்டார். தனக்கு ஞாபக சக்தி குறைவாக இருந்த போதிலும், இரண்டு மூன்று தினங்களுக்குள் கஷ்டப்பட்டு அப்பாகத்தைக் குருட்டுப்பாடம் செய்து, அன்றைத்தினம் நாடகத்தில் நடித்தார். இவர் சாதாரணமாக நாடக மேடையில் நடிப்பதுமில்லை; நடிக்க வேண்டும் என்னும் இச்சையுடையவருமன்று. ஆயினும் ஏதாவது சமயத்திற்கு உதவ வேண்டுமென்றால் கைகொடுப்பார். இத்தகைய நற்குணத்தினாலே, எங்கள் சபையின் அங்கத்தினரையெல்லாம் சந்தோஷிக்கச் செய்து ஏறக்குறைய இருபது வருடங்களுக்குமேல் எங்கள் சபையின் காரியதரிசியாக வருடாவருடம் நியமிக்கப்பட்டார்.
பௌத்தாயனன் வேடம், மர்க்கன்டைல் பாங்கில் காஷியராக இருந்த, தமிழில் பல நாடகங்களை இயற்றிய, எனது நண்பராகிய ம. முருகேச முதலியார் எடுத்துக்கொண்டார். இவர் இதற்குப் பிறகு எனது அனேக நாடகங்களுக்கு, பாட்டுகளை எழுதிக் கொடுத்திருக்கிறார்; ஏதாவது தமிழ் நாடகத்திற்கு மெட்டுகளும் பாட்டுகளும் வேண்டுமென்றால் எங்கள் சபையின் தமிழ் ஆக்டர்களெல்லாம் இவரை நாடுவது வழக்கம்; இவரும் கஷ்டம் ஒன்றும் பாராமல் கேட்பவர்களுக்கெல்லாம் பாட்டுகளைக் கட்டிக்கொடுத்துக் கொண்டு வந்தார். இதற்காக இதன் மூலமாக, என் வந்தனத்தை இவருக்கு நான் செலுத்துகிறேன்.
நீலவேணியாக அன்றைத்தினம் செங்கல்வராய ஐயர் நடித்ததாக முன்பே கூறியுள்ளேன். இந்நாடகப் பாத்திரமானது ஒரு சிறுபாகமே. அக்காரணம்பற்றி, இந்நாடகம் எத்தனை முறை எங்கள் சபையில் நடிக்கப்பட்டிருக்கிறதோ, அத்தனை முறை வேறு வேறு ஆக்டர்கள் நடித்தார்கள் என்றே ஒருவாறு சொல்லலாம். யாராவது புதிதாக எங்கள் சபையில் ஸ்திரீபாகம் எடுத்துக்கொள்ளத் தக்கவர்கள் வந்தால், அவர்களுக்கு முதல் முதல் இந்த வேஷம்தான் கொடுப்பது வழக்கமாயிருந்தது; இப்பொழுதும் இந்த வழக்கம் முற்றிலும் அற்றுப்போகவில்லை. இந்த நீலவேணியின் பாகத்தைப் பற்றிய சிறு நகைப்புக்கிடமான கதையொன்றுண்டு. இம் மனோஹரன் எனும் நாடகத்தை ஒரு நாள் நான் ஒத்திகை நடத்திக்கொண்டிருந்தபொழுது புராம்டராக (Prompter), அதாவது, ஒரு பக்கமாக புஸ்தகத்தை வைத்துகொண்டு நாடகப் பாத்திரங்கள் ஏதாவது மறந்துபோனால் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டியவராக வேறொருவரும் அன்று கிடைக்காதபடியால், எனது பழைய நண்பராகிய வெங்கடகிருஷ்ண நாயுடுவை அத் தொழிலைப் பார்க்கும்படிக் கேட்டுக் கொண்டேன். அவர் அதற்கு முகவாட்டத்துடன் இசைந்தார். இதற்குக் காரணம் அவருக்குத் தமிழ் நன்றாய்ப் படிக்க வராது என்பதே. வீட்டில் அவர் பேசுவது தெலுங்கு பாஷையே. ஒரு சந்தர்ப்பத்தில், “பிறகு யார் பேச வேண்டும்?” என்று நான் கேட்க, அவர் புஸ்தகத்தைப் பார்த்து ‘கோழி’ என்று பதிலளித்தார்! இதென்னடா, கோழி என்கிற நாடகப் பாத்திரம் ஒன்று இதில் எழுதினோமா என்னவென்று நான் ஆச்சரியப்பட்டு, புஸ்தகத்தை வாங்கிப்பார்த்த பொழுது “தோழி” என்றிருந்தது. ‘தோ’ என்கிற எழுத்தின் கால் கொஞ்சம் குட்டையாக எழுதியிருந்தபடியால் அவர் தோழியைக் கோழியாக்கினார்! இதைக் கேட்டதும் எங்களுக்கெல்லாம் பெரும் நகைப்பு உண்டாயிற்று. அது முதல் பல வருடங்கள் வரை, தோழியாக நடிக்கும் ஆக்டர்களை எல்லாம் ‘கோழி கோழி’ என்று நாங்கள் ஏளனம் செய்வது வழக்கமாயிருந்தது.
இனி நான் மனோஹரனாக நடித்ததைப்பற்றிக் கொஞ்சம் எழுத விரும்புகிறேன். நான் இதுவரையில் நாடக மேடையில், என்னிடம் இருக்கும் குறிப்பின்படி சுமார் 75 வேடங்களைத் தரித்திருக்கிறேன். அவற்றுளெல்லாம் எனக்கு அதிக தேக சிரமத்தைக்கொடுப்பது இந்த மனோஹரன் பாகமே. இதைவிட, அமலாதித்யன், பௌத்தர் முதலிய நான் ஆடிய நாடகப் பாத்திரங்கள், நடிப்பதற்குக் கஷ்டமானவைகளே; ஆயினும் கேவலம் தேக சிரமத்தை மாத்திரம் கருதுமிடத்து மனோஹரன் தான் மிகவும் கஷ்டத்தைத் தருவது. நான் குழந்தைப் பருவமுதல் மிகவும் பலஹீனமுடையவனாயிருந்தேன் என்று என் தாய் தந்தையர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் வாலிபனான பிறகு, “இவன் முப்பது வயதுக்குமேல் உயிருடன் இருக்க மாட்டான்” என்று ஒருவர் கூறினார். எப்பொழுதும் நான் தேக புஷ்டியுடையவனாயிருந்ததில்லை; சாதாரணமான ஆயுர்வேதிகள் என்னை “ஒற்றை நாடி” உடையவன் என்று சொல்லுவார்கள். அதற்குக் காரணம், என் இருதயம் பலமுள்ளதாயிராமையே என்று எண்ணுகிறேன். என்னுடைய 17ஆம் வயதில், என் ஹிருதயத்தைப் பரிசோதித்து, அக்காலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற வைத்தியராகிய டாக்டர் வரதப்ப நாயுடு என்பவர், “நீ கிரிக்கெட், (Cricket) முதலிய கஷ்டமான தேகப்பயிற்சி எடுத்துக்கொள்ளக்கூடாது” என்று கூறினார்; கிரிக்கெட் ஆடுவதை விட்டு, டெனிஸ் (Tennis) ஆட ஆரம்பித்தேன்; கொஞ்ச காலம் பொறுத்து அதையும் விடவேண்டுமென்று சொன்னார். அதை விட்டு சைக்கில் (Cycle) ஏறப் பழகி வந்தேன். இன்னொரு வைத்தியர் அதையும் விடவேண்டுமென்றார். அதைவிட்டு அன்று முதல் இன்று வரை காலால் நடப்பதையே தேகப்பயிற்சியாகக் கொண்டுவருகிறேன்; இதனுடன் நிற்கவில்லை; என்னுடைய இருபத்தைந்தாம் வயதில் டாக்டர் கோமன் (Koman) என் ஹிருதயத்தைப் பரிசோதித்து, “நீ நாடக மேடையில் ஆடக்கூடாது” என்று தெரிவித்தார்! மற்றெல்லாவற்றையும் விடும்படி வைத்தியர்கள் கூறியபொழுது, எனக்கு அவ்வளவாகத் துக்கமில்லை நாடகமாடுவதை விடு என்று டாக்டர் கோமன் சொன்னபொழுது, இடி விழுந்தவன் போல் ஆனேன்! இன்னும் சில வைத்தியர்களைப் பார்த்த பொழுது, அவர்கள், “நாடகமாடுவதில் உன்னை அதிகமாக அலட்டிக் கொள்ளக்கூடாது” என்று கூறினார்கள். நான் என்ன செய்வது? நாடகமாடுவதில் எனக்குள்ள ஆசையானது அதை விடுவதற்கு எனக்கு மனோதிடம் கொடுக்கவில்லை. கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்னும் பழமொழியையே உறுதியாகக் கொண்டு “ஈசனே! நாடகமாடுவதில் பாபமொன்று மில்லை. நீர் படைத்த சில மனிதர்களுக்காவது சிறிது காலம் கொஞ்சம் சந்தோஷத்தை உண்டுபண்ணுகிறேன் என்று உறுதியாய் நம்புகிறேன். ஆகவே, அடியேனைக் காப்பது உமது பாரம்!” என்று அவர்மீது பாரத்தைச் சுமத்தி, நாளது வரையில் நாடகமாடி வருகிறேன். இதுவரையில், என் குறிப்பின்படி ஐந்நூறு முறைக்குமேல் நாடக மேடையில் நடிக்கும்படி செய்தது அவரது கருணையே என்று நிச்சயமாய் நம்புகிறேன்.
அன்றியும் இச்சந்தர்ப்பத்தில் இன்னொரு விஷயமும் கூற விரும்புகிறேன். இதைக் கூறுவதற்காக இதை வாசிக்கும் எனது நண்பர்கள் மன்னிப்பார்களாக. நாடக மேடையில் என் அனுபவங்களையெல்லாம் ஒன்றும் விடாது கூற வேண்டும் என்று நான் நிச்சயித்திருக்கிறபடியால் இதை இங்கு எழுதலானேன். எனது பதினெட்டாவது வயது முதல் எனக்குக் குடல் வாதம் (Hernia) வியாதியுண்டு. அதற்காக வைத்தியர்கள் கட்டளைப்படி ஒரு டிரஸ் (Truss) இடுப்பில் அணிந்து வருகிறேன். இதனால் இம்மனோஹரனாக நடிக்கும் பொழுது “சங்கிலி அறுக்கும் காட்சி” என்னும் காட்சியில், என் உயிரை ஹானிக்குட்படுத்தியே நடிக்கிறேன் என ஒருவாறு நான் கூறவேண்டும்; அச்சமயத்தில் என் டிரஸ் உடையுமாயின், என் உயிருக்கே ஹானிதான் என்பதை இதை வாசிக்கும் வைத்திய சாஸ்திரம் உணர்ந்தவர்கள் நன்கு அறிவார்கள். இவ்வளவுமிருந்தும் இதுவரையில் இம்மனோஹரன் வேடம் பூண்டு, ஏறக்குறைய நாற்பது முறைக்குமேல் ஒரு அபாயமுமின்றி நடிக்கச் செய்தது கடவுளின் கருணையே என்று உறுதியாய் நம்புகிறேன். 1895ஆம் வருடம் முதல் 1928ஆம் வருடம் வரையில் எங்கள் சபையில் இந்நாடகத்தில், நான் ஒருவனே மனோஹரன் வேடம் பூண்டு நடித்து வந்தேன். அதன் பிறகு என் இளைய நண்பர், வி.சி.கோபாலரத்னம் ஐயங்கார், எங்கள் சபையில் இவ்வேடம் பூண்டார். அவருக்குப்பின் எஸ். சத்யமூர்த்தி ஐயர் இவ்வேடத்தில் நடித்திருக்கிறார். அன்றைத் தினம் நான் மனோஹரனாக நடித்தது நன்றாயிருந்ததென எல்லோரும் புகழ்ந்தார்கள் என்றே நான் கூற வேண்டும். அவையடக்கத்தைச் சற்று அகற்றி, உண்மையை உரைக்குமிடத்து, இப்பாத்திரம்தான் எனக்கு நாடக மேடையில் பெரும் பெயரைக் கொண்டு வந்ததெனக் கூற வேண்டும்.
நான் அன்றிரவு நாடகம் ஆடியபொழுது நேரிட்ட ஒரு சந்தர்ப்பத்தை மாத்திரம் இங்கு வரைகிறேன். “சங்கிலி அறுக்கும் காட்சி” மேலே விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடந்தபோது, கீழே உறங்கிக்கொண்டிருந்த விக்டோரியா பப்ளிக் ஹால் சூபரின்டென்டென்டாகிய எல்லிஸ் (Ellis) துரை, மேலே ஏதோ கலகம் நடக்கிறதென்று பயந்து, தன் வயோதிகத்தையும் பாராமல் மேல்மாடிக்கு ஓடிவந்தார்! மறு நாள் என்னைச் சந்தித்தபொழுது, “என்ன மிஸ்டர் சம்பந்தம்! நேற்றிரவு அவ்வளவு காபுரா பண்ணிவிட்டாயே!” என்று நகைத்துக்கொண்டு கேட்டார்.
இந்த நாடகம் நான் எழுதிய நாடகங்களிலெல்லாம், எங்கள் சபைக்குப் பெரும்பெயரைக் கொண்டு வந்ததெனக் கூற வேண்டும். இவ்வொரு நாடகத்தினால் எங்கள் சபைக்குச் சுமார் 16,000 ரூபாய் வசூலாகியிருக்கிறது. அன்றியும் தென் இந்தியாவிலுள்ள எல்லாத் தமிழ் நாடகச் சபைகளும், நாடகக் கம்பெனிகளும், (ஸ்திரீகள் கம்பெனிகள் பாலர் கம்பெனிகள் உட்பட) இதை நடத்தியிருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.
இந்த மனோஹரன் வேடத்தை எப்படி நன்றாய் நடிப்பது என்று என்னை அநேகர் கேட்டிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் இந்தப் பதிலைத்தான் நான் கூறுவேன். இந்த இடத்தில் இப்படி நிற்க வேண்டும், இந்த இடத்தில் இப்படி உட்கார வேண்டும், இந்தச் சந்தர்ப்பத்தில் நகைக்க வேண்டும், இந்தச் சந்தர்ப்பத்தில் கோபாவேசங்கொள்ள வேண்டும் என்பது முதலானவைகள் எல்லாம் எளிதில் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம். இதில் கற்பது கடினமானது என்னவென்றால், மனோஹரன் தன் தாய் தந்தையர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதே. இது ஒருவன் சொல்லிக் கொடுத்து வருவதல்ல. சுயானுபவம் இருந்தால்தான் வரும். “என்னைப் பெற்ற தாய் தந்தையரன்றி எனக்குப் பிறிதொரு தெய்வமில்லை” என்று மனோஹரன் கூறியவாறு, அக்கோட்பாட்டை உறுதியாய்க் கொண்டு உலகில் ஒழுகுபவர்கள் மாத்திரம்தான், இந்த வேடத்தை நன்றாய் நடிக்கச் சக்தியுள்ளவர்கள் என்பது என் தீர்மானமான எண்ணம். அக்கொள்கையில்லாதவர்கள் எவ்வளவு நன்றாய் நடிக்க முயன்றாலும், பார்ப்பவர்களுக்கு முழு திருப்தியை விளைக்க முடியாதென்பது என் அனுபவம்.
இனி இந்நாடகத்தில் மனோஹரனாக நடிக்க விரும்புவோர்கள், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ஒரு விஷயம் கூற வேண்டியவனாயிருக்கிறேன். நான் முதல் முதல் அன்றையத் தினம் இவ்வேடத்தில் நடித்தபொழுது “பிள்ளையார் குட்டாக” ஒன்று நேர்ந்தது; சங்கிலியறுக்கும் காட்சியில், மேடையின்மீது அரச சபையிலுள்ளவர்களாகிய உத்தியோகஸ்தர்களையெல்லாம் விலக்கிக் கொண்டு புருஷோத்தம மகாராஜாவின்மீது கையில் வாள் கொண்டு பாய யத்தனிக்கும் பொழுது, அக்கோபாவேசத்தில் அருகிலிருந்த மந்திரி சத்யசீலராக வேடம் தரித்த எனது நண்பர் எம். வை. ரங்கசாமி ஐயங்காரை அகஸ்மாத்தாய்க் காயப்படுத்தினேன். அது முதல் பன்முறை இக்காட்சியில் அநேகம் பெயருக்குக் காயப்படுத்தியிருக்கிறேன். அதன் பேரில் நிஜமான வாளைக் கையிலெடுத்தால் அக்காட்சியில் அரண்மனை உத்யோகஸ்தர்களாக வர யாவரும் அஞ்சத் தலைப்பட்டனர். பிறகு அவர்கள் ஆட்சேபிப்பது நியாயம்தான் என்று ஒப்புக் கொண்டு, சிலசமயங்களில், மரத்தினால் செய்த கத்தியை உபயோகப்படுத்திப் பார்த்தேன். அதைக் கொண்டும் ஒரு முறை என்னைத் தடுக்க வந்தவர் ஒருவருக்கு ‘ஊமை வடு’ உண்டாக்கினேன்! ஒவ்வொரு முறையும் நான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென்று தீர்மானித்தும், எனது நண்பர்கள் இக்காட்சி ஆரம்பிக்குமுன் ஜாக்கிரதையாக இருக்கும்படி எவ்வளவோ எச்சரிக்கை செய்தும், சில சமயங்களில் என்னையும் மறந்து யாருக்காவது காயப்படுத்தியதுண்டு. ஒரு முறை சத்யசீலராக வந்த எனது நண்பர் ஷண்முக முதலியாருக்கு என் கைவாளினால் காயமுண்டாக்க, மேடையின்மீது ரத்தம் சொரிய ஆரம்பித்து விட்டது; என்ன செய்வார் பாபம்! அக்காட்சியைக் கெடுக்க மனமில்லாதவராய் காட்சி முடிந்தவுடன் அரங்கத்தைவிட்டு விலகிப் போய் சிகிச்சை செய்து கொண்டார். நான் அதைக் கண்டு மிகவும் மனவருத்தப்பட்டு, அவருடைய மன்னிப்பைக் கேட்டேன். நான் எவ்வளவு மன்னிப்பைக் கேட்டும் காயம் பட்டது பட்டதே! ஆகவே இந்நாடகத்தில் மனோஹரனாக நடிக்க விரும்பும் ஒவ்வொரு வருக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், இக்காட்சி யில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதே. இக்காட்சி, எனக்கும் மற்றவர்களுக்கும், ஒரு கெடுதியுமின்றி முடிவு பெறும்போதெல்லாம் ஈசனுக்கு என் வந்தனத்தைச் செலுத்துகிறேன்.
இந்நாடகம் அன்றைத் தினம் முடிவு பெறுவதற்கு 5½ மணி சாவகாசம் பிடித்தது; சில சமயங்களில் வெளியூர்களில் இதை நாங்கள் ஆடியபொழுது 6 மணி நேரமும் பிடித்திருக்கிறது. இது மிகவும் பெரியதாயிருக்கிறதெனத் தீர்மானித்து, அவசியமாக இல்லாத சில பாகங்களைக் குறுக்கி கடைசியாகப் பதிப்பித்த இரண்டு மூன்று பதிப்புகளில், நான்கு மணிநேரத்தில் முடியும்படியானதாகச் செய்து அச்சிட்டிருக்கிறேன். இதை ஏன் இப்படிக் குறைத்து விட்டாய் என்று எனது நண்பர்கள் சிலர் என் மீது குற்றஞ் சாட்டியிருக்கின்றனர். ஆயினும் அவ்வாறு இந்நாடகத்தைக் குறுக்கியதன் முக்கியக் காரணம் எங்கள் சபையார், இரவில் நாடகங்கள் ஆடுவதை விட்டு, சாயங்காலங்களில் நாடகங்களை நடத்துவதேயாம் என்று அறிவார்களாக; சாயங்காலங்களில் நாடகங்களாடும் பொழுது சுமார் 9 மணிக்குமேல், நாடகம் முடிவது நலமென்றெண்ணி, இப் புஸ்தகத்தில் ஏறக்குறைய 45 பக்கங்களுக்குமேல் குறைத்து விட்டேன்.
எங்கள் சபையானது வெளியூர்களுக்குப் போய் நாடகங்கள் நடத்திய பொழுதுதெல்லாம் லீலாவதி சுலோசனாவும், இம் மனோஹரனும் எப்பொழுதும் ஆடப்பட்டு வந்திருக்கின்றன. பெரும்பாலும் இவ்விரண்டிலொன்றையே ஆரம்ப நாடகமாக வைத்துக் கொள்வது எங்கள் வாடிக்கை. “லீலாவதி-சுலோசனா” வைப்போலவே, இந்நாடகமும் சில கலாசாலைகளில் பாடப் புஸ்தகமாக வைக்கப்பட்டிருக்கிறது. இனி இம் மனோஹரன் நாடகமானது இதர சபையோர்களாலும் நாடகக் கம்பெனிகளாலும் ஆடப்பட்டதைப்பற்றிச் சிறிது எழுதுகிறேன்.
நான் பார்த்ததற்குள் நாடகக் கம்பெனிகளில் வேலு நாயர் என்பவரே இம் மனோஹரன் வேடத்தை என் மனத்திற்குத் திருப்தியாகப் பூண்டிருக்கிறார். ஆயினும் இவர் இவ் வேஷம் தரிப்பதில் ஒரு முக்கியமான குறையை மாத்திரம், தமிழ் நாடக மேடையின் அபிவிருத்தியின்பொருட்டுக் கூற வேண்டியவனாயிருக்கிறேன். இவர் உடுக்கும் உடை மாத்திரம் இந்தப் பாத்திரத்திற்கு ஏற்றதன்று. ஸ்காட்லாண்டு தேசத்திலிருப்பவர்கள் உடுக்கும் ஹைலாண்டு ஸ்கர்ட் (Highlander's skirt) மாதிரியாக முழங்காலளவு ஓர் ஆடையை உடுத்தி நடிக்கிறார். இது என்ன காரணம் பற்றியோ அறிகிலேன். இதை இந்த வேஷத்தில் அணிவது உசிதமல்லவென்றே எனக்குத் தோன்றுகிறது. இம்மாதிரியான உடைகள் நமது பூர்வீகர்கள் உடுத்ததாக எங்கும் சொல்லப்படவில்லை. காலுக்கு ஜல்லடம் போன்ற உடையே உடுத்தல் நியாயமாகும். ஜல்லடம் மாத்திரம் அக்காலத்தில் இருந்ததோ என்று இதைப் படிப்பவர்கள் சந்தேகப்பட வேண்டாம்; பூர்வகாலத்தில் இடுப்பு முதல் கால் வரைக்கும் அணியும் உடைகளிருந்திருக்கின்றன. சங்க காலத்தில் அதற்கு ‘வட்டுடை’ என்று ஒரு பெயர் உண்டு. சில பாட்டுகளை மாத்திரம் அதிகமாய்ச் சேர்த்த போதிலும், வசனத்தில் ஒன்றும் மாற்றாமலும், அதிகமாய்ச் சேர்க்காமலும் என் அபிப்பிராயப்படி, இப்பாத்திரத்தை சற்றேறக்குறைய நன்றாய் நடிப்பவர் இவரே என்று சொல்ல வேண்டும்.
தற்காலத்திய தென் இந்தியத் தமிழ் நாடக மேடையில் ஸ்திரீகள் ஆண் வேடம் தரிப்பது மிகவும் கொஞ்சமேயாம். அதில் மனோஹரன் வேடம் ஒன்றாகும். சில நாடகக் கம்பெனிகளில் ஸ்திரிகள் இம் மனோகரன் வேடம் பூண்டு நடித்ததை நான் பார்த்திருக்கிறேன். அவர்களிலெல்லாம் காலஞ்சென்ற பாலாம்பாள் என்னும் மாதே மிகவும் நன்றாக நடித்ததாக என் அபிப்பிராயம். ஆடவர்கள் ஸ்திரி வேஷம் பூணுவதைவிட ஸ்திரிகள் ஆண் மக்கள் வேஷம் பூணுவது மிகவும் கடினம் என்பது என் எண்ணம். அப்படியிருந்தும் இந்தப் பாலாம்பாள் (இம் மாது சில வருஷங்களுக்கு முன் காலகதியடைந்து விட்டனள்) மனோஹரனாக நடித்தது எனக்குத் திருப்தியைத் தந்தது. என்ன இருந்த போதிலும் பெண்பாலாதலால் “சங்கிலி அறுக்கும் காட்சி”யில் மாத்திரம் அவ்வளவு திருப்திகரமாயில்லை.
பாய்ஸ் கம்பெனிகளில் (Boy's Company) அநேக கம்பெனிகள் இந்நாடகத்தை நடத்தி வருகின்றனர். ஏறக்குறைய எல்லா பாய்ஸ் கம்பெனிகளும், என் அனுமதியைப் பெற்று, நடத்தி வருகிறார்கள் என்றே நான் கூறவேண்டும். அவைகளில் இம் மனோஹரன் வேஷம் பூண்டவர்களுக்குள் ஜகன்னாத ஐயர் கம்பெனியில், காலஞ்சென்ற மதனகோபால் என்னும் சிறுவன்தான் மிகவும் நன்றாக நடித்ததாக என் அபிப்பிராயம். இச்சிறுவன் சிறு வயதிலேயே சில வருஷங்களுக்கு முன்பாக இறந்ததாகக் கேள்விப்பட்டு நான் துக்கப்பட்டேன்.
ஆமெடூர் சபையில் (Ameteur Dramatists) அநேகம் பெயர் இவ்வேஷம் தரித்திருக்கின்றனர்; அவர்களிலெல்லாம், கூடிய வரையில் என் மனத்திற்குத் திருப்திகரமாயிருந்தது; சில வருஷங்களுக்கு முன் எக்செல்சியர் கிளப்பில் (Excelsior Club), சுப்பிரமணிய முதலியார் என்பவர் நடித்ததேயாம். இச்சந்தர்ப்பத்தில் என் நண்பர் ம.கிருஷ்ணய்யர் சில மனோஹரன் வேடம் பூண்டவர்களுக்கு வேடிக்கையாய்ப் பெயர் வைத்தது எனக்கு நினைவிற்கு வருகிறது; அவர்களுள் ஒருவருக்குக் காட்டு ராஜா மனோஹரன் என்று பெயரிட்டார்; மற்றொருவருக்குப் பஞ்சாங்கம் மனோஹரன் என்று பெயரிட்டார்; மற்றும் ஒருவருக்கு தாசரி மனோஹரன் என்று நாமமிட்டார்!
இவ்வேடம் பூண்டு நடிப்பதில் அநேகர் ஒரு முக்கியமான தவறிழைக்கிறார்கள் என்றே நான் கூறவேண்டும். இங்ஙனம் நான் எடுத்துக்காட்டுவது அவர்கள் மீது குற்றம் கூறுவதற்கன்று. இக் குற்றத்தைத் திருத்தி இன்னும் செம்மையாக அவர்கள் நடத்த வேண்டுமெனக் கோரியே இதை எழுதுகிறேன். இந்நாடகத்தில் இரண்டாவது அங்கம் முதற்காட்சியில் மனோஹரன் தான் தன் தாயாருக்காகப் பகைவரிடமிருந்து ஜெயித்துக் கொணர்ந்த சிம்மாசனத்தின்மீது, தன் தந்தையும் அவரது வைப்பாட்டியாகிய வசந்தசேனையும் உட்கார்ந்திருப்பதைக் கண்டு, கோபாவேசங்கொண்டு, வாளை உருவியும் சத்தியசீலர் பத்மாவதி தேவிக்கு மனோஹரன் அளித்த வாக்குத் தத்தத்தை ஞாபகப்படுத்த, தன் வாக்கால் கட்டுப்பட்டவனாய், கண்களில் நீர் ததும்ப சபையைவிட்டு விலகுகிறான்; இச் சந்தர்ப்பத்தில் நான் நடிக்கும் பொழுதெல்லாம், ஒரு முறை சரேலென்று திரும்பிக் கோபத்துடன் வசந்தசேனையைப் பார்த்து விட்டுப் பெருமூச்செறிந்து, உடனே அரங்கத்தினின்றும் வெளியிற்போவது என் வழக்கம். இது நாடகம் பார்க்க வந்திருப்பவர்களுக்கெல்லாம் திருப்தியைக் கொடுக்கிறதென நான் சொல்ல வேண்டும். இப்படிச் செய்வது நன்றாயிருக்கிறதெனச் சபையோர் மெச்சுகிறார்களே என்று, இதை ஒரு முறைக்கு இரண்டு மூன்று முறை திருப்பித் திருப்பிச் செய்கிறார்கள் மற்றவர்கள். இது தவறென்பது என் கொள்கை. ஒன்றை ஒரு முறை செய்தால் நன்றாயிருந்தால், அதைப் பன்முறை செய்தால் அதிக நன்றாயிருக்கும் என்று எண்ணுவது நாடகச்சுவைக்கு உவப்பானதன்று. இச்சந்தர்ப்பத்தில் எனக்கு இரண்டு தமிழ்ப் பழமொழிகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஒன்று “அளவுக்கு மேல் உண்டால் அமுதமும் விஷமாகும்” என்பது; மற்றொன்று, “கரும்பு தித்திக்குமென்று வேருடன் உண்ணலாமா?” என்பதாகும். நான் மேற்சொன்னதைக் கருதி, இனியாவது இம் மனோஹரன் வேடம் பூணுபவர்கள், மேற்சொன்ன சந்தர்ப்பத்தில், ஒரு முறையே அவ்வாறு திரும்பிப் பார்த்துப் போவார்களாக.
இனி விஜயாளாக மற்றவர்கள் நடித்ததைப்பற்றிச் சிறிது எழுதுகிறேன். இப்பாத்திரத்தைப் பற்றி எனது நண்பர்கள் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இப்பாத்திரம் பத்மாவதியைப் போல் நாடகத்திற்கு அவ்வளவு முக்கியமானதல்லவென்பதே. விஜயாள் பாத்திரமல்லாமல் மனோஹரன் நாடகத்தை நடத்தி முடிக்கலாம். ஒரு சந்தர்ப்பத்தில் அவ்வாறே நடத்தி முடிக்க யத்தனம் செய்தேன் (அதைப்பற்றிப் பிறகு எழுதுகிறேன்). மனோஹரனைக் கதாநாயகனாகக் கொண்ட போதிலும், மனோஹரன் மனைவி கதாநாயகி என்று கொள்ளலாகாது. ஷேக்ஸ்பியர் மஹா நாடகக்கவி எழுதிய ஜுலியஸ் சீசரின் மனைவி கதாநாயகியாவளோ? மனோஹரன் நாடகத்தில் பிரதான ஸ்திரீ பாகம் பத்மாவதியே என்று அதை ஒரு முறை வாசித்தவர்களும் ஒப்புக்கொள்வார்கள். அப்படியிருக்க, இந்நாடகத்தை ஆடுவதற்கு எடுத்துக்கொள்ளும் எல்லாச் சபையாரும் பெரும்பாலும், விஜயாள் பாத்திரத்தை அதன் ஸ்திரீ வேடம் தரிக்கும் ஆக்டருக்கே கொடுப்பது வழக்கமாய் விட்டது.
முக்கியமாக நாடகக் கம்பெனிகளில் இது மாமூலாய் விட்டது. இதற்கு ஒரு முக்கியமான காரணம், அவர்களெல்லாம் இந்நாடகத்திற்கு மனோஹரன் கதாநாயகன், ஆகவே மனோஹரன் மனைவி கதாநாயகியாக வேண்டுமென்று எண்ணுவதே என்று நினைக்கிறேன். முதலில் மனோஹரன் இந்நாடகத்திற்குக் கதாநாயகன்தானா என்பதே எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. அது எப்படியிருந்த போதிலும் மனோஹரன் மனைவி கதாநாயகியல்ல வென்பதற்குச் சிறிதும் சந்தேகமில்லை. இச் சந்தர்ப்பத்தில் கதாநாயகி என்கிற பதத்தைக் கதையின் முக்கியமான பாத்திரம் என்னும் அர்த்தத்தில் உபயோகிக்கின்றேன் என இதை வாசிப்பவர்கள் அறிவார்களாக. இன்னொரு காரணம், காலஞ்சென்ற என் ஆருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு இப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நடித்ததே என்று தோற்றுகிறது. இப்பாத்திரம் நான் முன்பே குறித்தபடி முக்தாநாயகி பிரிவினைச் சார்ந்தது. அப்படியிருக்க, மனோஹரன் தாயாராக இருக்கக்கூடிய ரூபமுடையவர்கள் இப்பாத்திரத்தை எடுத்துக் கொள்வது ரச ஆபாசமாம். அன்றியும் ஸ்திரீ நாடகக் கம்பெனிகளில், ஸ்திரீகள் இப் பாத்திரத்தைப் ப்ரௌடா நாயகியாக நடிக்கிறார்கள், பெரும்பாலும்; இது முற்றிலும் தவறெனவே நான் எடுத்துக் காட்ட வேண்டியவனாயிருக்கிறேன்.
இனி பத்மாவதியாக நடித்தவர்களைப் பற்றிக் கொஞ்சம் ஆராய்வோம். இதை எங்கள் சபையில் முதல் முதல் மேலே கூறியபடி அ. கிருஷ்ணசாமி ஐயர் மிகவும் நன்றாய் நடித்தபோதிலும், இப்பாத்திரத்தில், மிகச்சிறந்த பெயர் பெற்றவர் எனது நண்பராகிய எஸ். பத்மநாபராவ் பி.ஏ. என்பவரே. இவருக்குப் பாடத் தெரியாது. நாடகமேடையில் இவர் வாயெடுத்துப் பாடியதில்லை யென்றே நான் சொல்லவேண்டும். ஆயினும் கேவலம் வசனத்தில் மாத்திரம், இந்த வேஷத்தில் இவருக்கு நிகரில்லை என்று இவர் பெயர் பெற்றது மிகவும் மெச்சத்தக்கதே. இவருடைய ரூபம் பத்மாவதியின் வேடத்திற்கே சிருஷ்டிக்கப்பட்டது போலும் என்று பலர் புகழ நான் கேட்டிருக்கிறேன். அவ்வாறே நானும் எண்ணுகிறேன். பத்மாவதியின் கம்பீரியத்தையும், ஆழ்ந்த அறிவையும் திடச்சித்தத்தையும், இப்பெண்மணியே ஸ்திரீகளுக்கெல்லாம் ஓர் உதாரணமாயிருப்பவள் என்னும் அருங்குணங்களையும், ஒரு விதத்தில் தனக்குத் துரோகம் செய்தவராயினும் தன் புருஷனான புருஷோத்தமனிடமுள்ள பதிவிரதையின் வாஞ்சையையும், தன் குமாரனான மனோஹரனிடம் உள்ள அளவிலா - அழிவிலா அன்பும், தன் மருமகளாகிய விஜயாளிடம் பிரியமும், எப்படிப்பட்ட சோகத்திலும் உத்தம க்ஷத்திரிய குலத்துதித்த ஸ்திரீகளுக்குரிய மனோதிடமும், இன்னும் இந்த ஸ்திரீ ரத்னத்தின் இதர அரிய குணங்களையும், நாடக மேடைமேல் இவரைப்போல் நடித்துக் காட்டவல்லவர்கள் இந்த நாற்பது வருடங்களாக வேறொரு வரை நான் கண்டதில்லை யென்றே கூறவேண்டும். “கண்ணிற் சொலிச் செவியிநோக்கும் இறைமாட்சி” என்று கவி வர்ணித்ததை இவர் நாடக மேடையின்மீது நடித்துக் காட்டியுள்ளவர் என்றே நான் உறுதியாய்க் கூறவேண்டும். இவர் தற்காலம், (என்னைப்போல) வயோதிகனாகி, நாடகமாடுவதை விட்டு விலகிப் பல வருஷங்களாயின. இவரை நான் பார்த்தும் பல வருஷங்களாயின; ஆகவே இதை வாசிப்பவர்கள் இவரைப் பற்றி ஏதோ முகஸ்துதியாய்க் கூறுகிறேன் என்று எண்ணலாகாது. இவரைப்பற்றி இவ்வாறு உண்மையை எழுதவேண்டியது என் கடமை என எண்ணி எழுதியதாகவே கொள்ளும்படி நான் எனது நண்பர்களை வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வேடம் தரிப்பதில் இவருக்குள்ள பாண்டித்தியத்தைப் பற்றி. இன்னொருவிதமாக மதிப்பிட வேண்டியவனாயிருக்கிறேன். என்னுடன் நாடக மேடையில் நடிப்பவர்களுடைய பாண்டித்தியத்தைப்பற்றி அளவிட என்னிடம் ஒரு கருவியுண்டு - அதாவது அவர்கள் என்னுடன் நடிக்கும் பொழுது, எனக்கு மனமகிழ்ச்சி கொடுக்கின்றார்களா என்பதே. இது சரியோ தவறோ நான் அறிகிலேன். இது தவறன்று என நான் கூறவேண்டும். ஏனெனில், அருகில் உடன் நடிக்கும் ஆக்டர் எனக்குத் திருப்தியைத் தராவிட்டால், அரங்கத்திற்கு வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கும் ஜனங்களுக்கு எப்படி திருப்திகரமாயிருக்கக் கூடும்? இதைக் கொண்டு நான் அளவிடுவதானால், என்னுடன் பத்மாவதியாக நடித்த ஆக்டர்களுக்குள் எல்லாம், பத்மநாபரே மிகவும் மேம்பட்டவர் என்று நான் சங்கையின்றிக் கூறவேண்டும். இவர் எனது அன்னையாக நடித்தபொழுது எனக்குண்டான மகிழ்ச்சியில், மற்றவர்கள் நடித்தபொழுது ஒரு பாதியும் நான் பெற்றேனில்லை என்பது திண்ணம். இவர், சென்னையில் மாத்திரமன்று; எங்கள் சபை, கொழும்பு திருச்சினாப்பள்ளி, கும்பகோணம், திருநெல்வேலி, மதுரை முதலிய பல வெளி ஜில்லாக்களுக்குப் போய் வந்த பொழுதெல்லாம், இந்நாடகத்தில் பத்மாவதியாக நடித்து, அழியாப் பிரசித்தியை பெற்றார். இவர் பத்மாவதியாக இரும்புச் சங்கிலிகளை அறுக்கும் காட்சியில், அரங்கத்தில் தோன்றியது முதல், சபையோரின் கண்களையெல்லாம் இவரே கவர்வார்; மனோஹரனைக் கவனிப்பதும் இவருக்கு இரண்டாவதாகத் தான் என்றே நான் கூறவேண்டும். இவர் அரங்கத்தை விட்டு நீங்குமளவும் எல்லோரும் இவரையே பார்த்துக் கொண்டிருக்கும்படியாக, அவ்வளவு அற்புதமாக நடிப்பார்! சில வருஷங்களுக்கு முன் இவர் பத்மாவதியாக நடித்தபொழுது இப்பொழுது வந்திருக்கும் சினிமா (Cinema) கம்பெனிகள் அக்காலத்தில் இருந்திருந்தால் அப்படியே சினிமாவில் இந் நாடகத்தைப் படமெடுத்திருந்தால், பத்மாவதியின் வேஷம் இப்படித்தான் நடிக்கப்பட வேண்டுமென்று, நாடக உலகமானது அறிந்திருக்கும். அப்பேறு கிடைக்காமற் போனது தென் இந்திய நாடக மேடையானது செய்த தௌர்ப்பாக்கியமே என்று எண்ணுகிறேன்.
நான் மேலே குறித்தபடி அவ்வளவு முக்கியமான பாத்திரமாகிய இப்பத்மாவதி. பாத்திரத்தை, நாடகக் கம்பெனிகளில் பெரும்பாலும் இருப்பவர்களுக்குள் முக்கியமான ஆக்டருக்குக் கொடுப்பதை விட்டு, இரண்டாவது மூன்றாவது தரமான ஆக்டர்களுக்குக் கொடுத்து வருகிறார்கள். அப்படிச் செய்வது அவர்கள் இந்நாடகத்தின் முக்கிய சாராம்சத்தைக் கிரகிக்காததனால் என்பதற்குச் சந்தேகமில்லை. இனியாவது இந்நாடகத்தில் இப்பாத்திரத்தின் மகிமையை நன்கு உணர்ந்து, முக்கியமான ஸ்திரீ வேஷம் தரிப்பவர்களுக்கே இதைக் கொடுப்பார்களாக.
இந்தப் பத்மாவதி பாத்திரத்தை விட்டு அகலுமுன் ஒரு விஷயத்தைக் குறிக்க விரும்புகிறேன். பத்மாவதி வேஷம் தரிப்பவர்கள் பாடுவதில் தவறில்லை; சில சந்தர்ப்பங்களில் பாடுவது மிகவும் பொருத்தமாயுமிருக்கும்; ஆயினும் தக்க சந்தர்ப்பங்களில்லாத இடங்களில் பாடுவது மிகவும் தவறாகும். நான் சில சபைகளிலும் கம்பெனிகளிலும் பார்த்தபடி, “சங்கிலியறுக்கும் காட்சியில்” பத்மாவதி பாடுவது மிகவும் தவறாகும். மனோஹரன் அடங்காக் கோபாவேசங் கொண்டவனாய்த் தன் தளைகளை அறுத்துக் கொண்டு தன் தந்தையின் சிரத்தையே சேதிக்கப்போகும் தருவாயில், பத்மாவதி அச்சபையில் தோன்றி அவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு “வேண்டாம்” என்று தடுக்கிற சந்தர்ப்பத்தில், பத்மாவதி பாட ஆரம்பிக்கிறாள்! அதற்குப் பதிலாக மனோஹரனும் பாட ஆரம்பிக்கிறான்! இது மிகவும் ரசாபாசமாம்! இக்காட்சியானது வெகு விரைவில் முடிக்கவேண்டியதாயிருக்க, இச்சமயத்தில் இவ்விருவரும் பாடிக்கொண்டிருப்பது மிகவும் அனுசிதமாம். உபாத்தியாயர் வீட்டில் தீப்பற்றிக்கொண்டது என்கிற விஷயத்தை அவருக்குத் தெரிவிக்க வேண்டிய மாணாக்கன், சங்கராபரண ராகத்தில் சவுக்கமாக ஆதிதாளத்தில் அதைப் பாடி அறிவிப்பதற்குச் சமானமாகும்! இக் குற்றத்தை இனியாவது இந்நாடகத்தை ஆடுபவர்கள் விலக்குவார்களாக. பத்மாவதி பாடவேண்டு மென்றிருந்தால், இதைவிடத் தக்க இடங்கள் இந்நாடகத்தில் அநேகம் இருக்கின்றன.
இதர நாடக சபைகளும் கம்பெனிகளும் இந்நாடகத்தை ஆடும்பொழுது, என் கண்ணுக்குப் புலப்பட்ட இன்னொரு குறையை எடுத்துக் கூறுகிறேன். அது, வசந்தசேனையின் பாகத்தை மிகவும் அற்புதமாகப்பாவித்து நன்கு தேர்ச்சியடையாத ஆக்டர்களுக்கே கொடுப்பதேயாம். இந்தப் பாகத்தை நடிப்பது மிகவும் கடினம் என்று முன்பே தெரிவித்திருக்கிறேன். இப்பாத்திரம் சரியாக நடிக்கப்படா விட்டால் இந்நாடகமே நன்றாயிராது என்பது என் நம்பிக்கை. இதையும் தக்கபடி தேர்ச்சி பெற்ற ஆக்டருக்கே கொடுத்தாலொழிய நாடகம் சரியாயிராது.
மேற்சொன்னபடியே ‘வசந்தன்’ பாத்திரமும் நடிப்பதற்கு மிகவும் கஷ்டமானதே. சாதாரணமாக, நாடகக் கம்பெனிகளில் இவனைக் ‘கோமாளி’யைப்போல் வேஷம் தரிக்கச் செய்து ரசாபாசமாக்குகிறார்கள். பைத்தியக்காரனுக்கும் கோமாளிக்கும் எவ்வளவோ வித்தியாசம் உண்டு என்பதை அறியாமல் இவ்வாறு நடத்துவது பெரும் தவறாகும். அன்றியும், வசந்தன் பைத்தியக்காரன்தானே, அவன் என்ன செய்தாலும் பெரிதல்ல என்று நினைக்கிறார்கள். அதுவும் தவறாகும். வசந்தன் பைத்தியக்காரன்தான். ஆயினும் அவனது பைத்தியத்திற்கேற்றபடி என்ன பேசவேண்டுமோ, எப்படி நடிக்க வேண்டுமோ அதை விட்டு எந்தச் சந்தர்ப்பத்திலும் எதை வேண்டுமென்றாலும் பேசலாம் என்று எண்ணுவது பெருங்குற்றமாகும். தப்போ, ஒப்போ நாடகாசிரியன் இந்தப் பாத்திரம் இவ்வளவுதான் பேசவேண்டுமென்று எழுதியிருக்க, அதற்குமேல், சாதாரண ஜனங்கள் சிரிக்கிறார்களேயென்று, அதிகமாக ரசாபாசமான வார்த்தைகளைப் பேசுவது தவறு என்று நான் உறுதியாய்க் கண்டிக்க வேண்டும். இதற்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். இந் நாடகத்தில் ‘சங்கிலியறுக்கும்’ காட்சி மிகுந்த வீர ரசமும் சோகரசமும் அமைந்தது. இக்காட்சியில், ஹாஸ்ய ரசத்திற்கு இடமில்லை. அப்படியிருக்க பத்மாவதிதேவி தன் சொந்த மகனை மரிக்கும்படியாகக் கட்டளையிட்டபின், மனோஹரன் மூர்ச்சையாகிக் கீழே விழுந்தவுடன், எல்லோர் கண்களிலும் நீர்ததும்பிக் கொண்டிருக்கும் சமயத்தில், சில ‘வசந்தர்’கள் சபையோரை நகைக்கச் செய்யவேண்டி, ஏதாவது நாடகத்தில் எழுதியிராத வார்த்தைகளைப் பேசி, அல்லது கோமாளிக்கூத்தாய் ஏதாவது சேஷ்டைகள் செய்து ரசாபாசம் விளைத்ததை, நான் என் கண்ணாற் கண்டிருக்கிறேன். அச் சமயங்களிலெல்லாம் எனக்கு உண்டான கோபம் கொஞ்சமல்ல; இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தை அறியச் சக்தியற்றவர்களுக்கு இந்நாடகத்தை ஆட ஏன் உத்தரவு கொடுத்தோம் என்றே என்னைப் பழித்துக் கொண்டிருக்கிறேன். இனிமேலாவது, இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் வசந்தன் வேஷம் பூணுபவர்கள் இக்காட்சியில் ஜாக்கிரதையாக நடித்து, சபையிலுள்ள ரசிகர்களின் மனதைப் புண்படுத்தாதிருப்பார்களெனக் கோருகிறேன். அன்றியும் வசந்தன் வேடம் பூணுபவன் கறுப்பாயிருக்கவேண்டும்; பிறப்பிலேயே கறுப்பாயிருக்கும் ஆடவன் இவ்வேடம் பூண்டால் முகத்திற்கு வர்ணமே பூசலாகாது; ஒருக்கால் சிவப்பாயிருக்கும் ஆடவன் இவ்வேடம் பூண்டால் முகத்தையும், கை கால்களையும் கறுப்பாக்க வேண்டும்; இந்நாடகத்திலேயே இவன் கறுப்பு நிறமுடையவனாயிருக்கிறான் என்று குறிப்பிட்டிருப்பதைக் கவனிப்பார்களாக.
இந்நாடகத்தை ஆடுவதில் ஒரு முக்கியமான கஷ்டம் என்ன வென்றால் இதில் வரும் குலகுரு பௌத்தாயனர், அமிர்த கேசரி, கேசரிவர்மன், பிசாசு முதலிய பாத்திரங்கள் சிறியவைகளாயிருந்த போதிலும், ஒவ்வொன்றும் சரியாக நடிப்பது கடினமே; அப்படிச்சரியாக நடித்தாலொழிய, நாடகம் சோபிக்காது. ஆகவே இதை நடிக்க விரும்பும் நாடக சபைகளும், கம்பெனிகளும் எல்லாப் பாத்திரங்களுக்கும் சரியான ஆக்டர்கள் இருந்தாலொழிய இந்நாடகத்தை எடுத்துக்கொள்வது உசிதமல்லவென்பது என் துணிபு.
பத்தாம் அத்தியாயம்
இனி மனோஹரனுக்குப் பின் நான் எழுதிய, எனது ஏழாவது நாடகமாகிய ‘சாரங்கதர’னைப் பற்றி எழுதுகிறேன். சாரங்கதரன் கதையை நான் நாடக ரூபமாக எழுதியதற்குக் காரணம், எங்கள் சபையில் அக்காலம் எங்களுக்கெல்லாம் நான் முன்பு அறித்தபடி வேஷம் போட்டுக்கொண்டிருந்த ‘அப்பு’ என்பவனே! மனோஹரன் நாடகம் முடிந்த பிறகு, ஒரு வாரத்திற்கெல்லாம், ஒரு நாள் நான் இப்பொழுது வசிக்கும் வீட்டின் மேல்மாடியின் உடகார்ந்து கொண்டிருந்த பொழுது, மெல்லப் படியேறி அப்பு என்னிடம் வந்தான். “என்ன அப்பு? என்ன சமாச்சாரம்?” என்று நான் கேட்டேன். “ஒன்றுமில்லை - இனிமேல் நீங்கள் என்ன நாடகம் எழுதப் போகிறீர்கள் என்று கேட்க வந்தேன்?” என்று சொன்னான்.
‘இதென்ன ஆச்சரியமாகவிருக்கிறது? இவன் நம்மை இந்தக் கேள்வி கேட்பானேன்?’ என்று யோசித்தவனாய், “என்ன அப்பு, என்ன சமாச்சாரம்? இதை ஏன் நீ கேட்கிறாய்? என்ன உன் மனத்திலிருக்கிறது சொல்!” என்று கேட்டேன். அதன்மீது அவன், நான் சாரங்கதர நாடகத்தை எழுத வேண்டுமென்றும், அதில் நான் சாரங்கதரனாக நடிக்க வேண்டு மென்றும் தான் விரும்புவதாக மெல்லத் தெரிவித்தான். இச்சாரங்கதரன் கதையை முன்பு நான் எங்கேயோ படித்திருந்தேன். கதை என் மனத்துக்கு அருவருப்பைத் தந்தது. அதன் பேரில் அப்புவிடம் அக்கதை என் மனத்திற்குத் திருப்தியாகவில்லை யென்பதை அறிவிக்க, அவன், “வாஸ்தவம்தான். ஆனாலும், நீங்கள் அதையெல்லாம் மாற்றிச் சரியாக எழுதி விடுவீர்கள்” என்று தெரிவித்தான். அதன் பேரில், இவன் இவ்வளவு வற்புறுத்துகிறானேயென்று ‘எல்லாம் பாப்போம்’ என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டேன். சில தினங்களில் இவ்விஷயம் என் மனத்தை விட்டகன்றுவிட்டது என்றே சொல்ல வேண்டும். பிறகு ஒரு நாள் சுந்தராச்சாரி நாடகக் கம்பெனி, கொட்டகையில் நாடகமாடுவதற்குப் பதிலாக ஒரு பெரிய கூடாரம் வரவழைத்து அதில் பச்சையப்பன் கலாசாலைக்கெதிரிலுள்ள மைதானத்தில் நாடகமாடுகிறார்களெனக் கேள்விப்பட்டேன். கூடாரத்தில் நாடகமாடுவதென்றால் விந்தையாகவேயிருந்தது. அதைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று ஆவல் கொண்டவனாய், அவ்விடம் மறு ஆட்டம் என்னவென்று விசாரிக்க, “சாரங்கதர நாடகம்” என்று கேள்விப்பட்டேன். உடவே அப்பு அதைப்பற்றி எனக்குச் சொன்னது ஞாபகம் வந்தது. நானும் ஜெயராம் நாயகர் முதலிய நண்பர்களும் அதைப் பார்க்கப் போனோம். இந்த சுந்தராச்சாரி கம்பெனி யென்பது சுப்பராயாச்சாரி கம்பெனியினின்றும் உற்பவித்ததாம்.
ஹரிச்சந்திரன் நாடகமாடுவதில் பிரசித்திபெற்ற சுப்பராயாசாரியைப்பற்றி முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன். அந்த சுப்பராயாச்சாரி காலமான பிறகு அவரிடம் அரிச்சந்திர விலாசத்தில் சத்யகீர்த்தி வேஷம் போட்டுக்கொண்டிருந்த சுந்தராச்சாரி, தான் ஒரு நாடகக் கம்பெனி ஆரம்பித்தார். அன்றிரவு இந்த ‘சாரங்கதர’ நாடகத்தில், சுந்தராச்சாரி சாரங்கதரனாகவும், அப்பாவுப் பிள்ளை என்னும் சிறுவன் சித்ராங்கியாகவும் நடித்தார்கள். சங்கீதம் அதிகமாகவும், வசனம் கொஞ்சமாகவும் இருந்தது; அவர்கள் மீது குறை கூறிப் பிரயோஜனமில்லை. அது அக்காலத்திய நாடகக் கம்பெனிகளின் வழக்கமாயிருந்தது. இப்பொழுதும் அவ் வழக்கம் போகவில்லையென்று நான் கூற வேண்டியவனாயிருக்கிறேன். இவர்கள் இருவரும் நடித்தது சுமாராக இருந்த போதிலும், நான் பார்த்த ஆக்டர்களுக்குள் மிகவும் திருப்திகரமாக நடித்தது கோபாலாச்சாரி என்னும் ஒரு பிராம்மணப் பிள்ளை. நான் பள்ளிக்கூடத்தில் கீழ் வகுப்புகளில் வாசித்த பொழுது, இவனைத் தெரியும். இவனுடன் கிரிக்கெட் ஆடியிருந்தேன். இவன் படிப்பைவிட்டுப் பிறகு இக் கம்பெனியைச் சேர்ந்ததாகக் கேள்விப்பட்டேன். கோபாலாச்சாரி அன்று விதூஷகனாக வேடம் பூண்டு மிகவும் நன்றாய் நடித்தான். அக்காலத்தில் விதூஷகன் வேடம் தரிப்பவர்கள், ஒன்றும் பாடம் செய்ய வேண்டியது நிமித்தமில்லை; சமயோசிதப்படி, அவர்கள் புத்தி சாதுர்யத்துக்கேற்ற வண்ணம், ஹாஸ்யம் செய்ய வேண்டியதே. இந்தக் கோபாலாச்சாரி அன்று செய்த ஹாஸ்யங்களை எல்லாம், நான் பிறகு சாரங்கதர நாடகத்தை எழுதின பொழுது, ஒன்றும் விடாமல் எழுதியிருக்கிறேன் என்று எண்ணுகிறேன். என் ஞாபக சக்தி மிகவும் நன்றாயிருந்த காலம் அது. நாடகம் முடிந்து நாங்கள் வீட்டிற்குத் திரும்பியபொழுது, ஜெயராம் நாயகர், நான் இந்த சாரங்கதர நாடகத்தை எழுத வேண்டும் என்றும், தான் சித்ராங்கியாக நடிக்க வேண்டும் என்றும் இச்சைப்படுவதாகத் தெரிவித்தார். எனக்கும் இக்கதையை, சில ஆபாசங்களை ஒழித்து, ஒழுங்காய் எழுதினால் நன்றாயிருக்குமெனத் தோன்றியது. உடனே மறுநாள் இக்கதையை, சில, ஆபாசங்களை ஒழித்து, ஒழுங்காய் எழுதினால் நன்றாயிருக்குமெனத் தோன்றியது. உடனே மறுநாள் இக்கதையை நாடகமாக எழுத ஆரம்பித்தேன். இதை அதி சீக்கிரத்தில் எழுதி முடிக்கும்படியாக எங்கள் சபையில் ஒரு சந்தர்ப்பம் நேரிட்டது; அதைப்பற்றிப் பிறகு எழுதுகிறேன். இப்பொழுது, சாதாரணமாக நாடகக் கம்பெனிகள் இந் நாடகத்தை நடிக்கும் விதத்திற்கும், நான் இதை நாடகமாக எழுதிய விதத்திற்கும் உள்ள பேதத்தை என் நண்பர்களுக்கு அறிவிக்க வேண்டியது அவசியமெனத் தோன்றுகிறது. ஏனெனில் இந்நாடகத்தைப் பற்றி, என்து கற்றறிந்த நண்பர்களுட் சிலர் தவறான எண்ணம் கொண்டிருக்கின்றனர்.
அதைப் போக்கவேண்டி நான் இதைச் சற்று விவரமாக எழுத வேண்டியவனாயிருக்கிறேன். சாதாரணமாக நாடகக் கம்பெனிகள் இதை ஆடும்பொழுது, நரேந்திர பூபதிக்கு ரத்னாங்கி என்று ஒரு மனைவியிருப்பதாகவும், அவள் வயிற்றிற் பிறந்த பிள்ளையாகிய சாரங்கதரனுக்கு மணம் பேச வேண்டி, இதர தேசத்து ராஜகுமாரிகளின் படத்தை நரேந்திரன் வரவழைத்துப் பார்த்த பொழுது, சித்ராங்கியின் படத்தைக் கண்டு தானே மோஹித்து, அவளைத் தானே மணந்ததாவும், பிறகு சித்ராங்கி சாரங்கதரனைக் கண்டு, அவன் மீது இச்சைக் கொண்டு அவனைப் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அவன் சிற்றன்னையாயிற்றே என்று முறைக்க, அதன்பேரில் சித்ராங்கி, தன் கணவனிடம் சாரங்கதரன் தன் கற்பை அழித்ததாகப் பழி சுமத்தி அவனைக் கொல்லும்படி நரேந்திரன் உத்தரவு செய்யும்படியாகச் செய்ததாகவும், சாரங்கதரனுடைய கை கால்களை அரசன் ஆக்கினைப்படி கொலையாளிகள் வெட்டியதாகவும் நாடகத்தை நடத்துகின்றனர். புராணக்கதையும் இப்படியே. வடக்கேயுள்ள சாஜமஹேந்திரபுரத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன் ராஜாவாக நரேந்திரன் ஆண்டதாகவும் அவனுக்குச் சாரங்கதரன் என்று ஒரு மகன் இருந்ததாகவும் இக்கதையின்படி அவ்விடம் உண்மையில் நடந்தேறியதாகவும் சரித்திரமுண்டு. ஆகவே இது உண்மையில் நடந்த விருத்தாந்தமேயொழிய கட்டுக் கதையல்லவென்று அனு மானிப்பதற்கு ஆதாரங்கள் உண்டு. “ஆந்திர நாடகப் பிதாமகன்” என்று பட்டப் பெயர் பெற்ற காலஞ்சென்ற பல்லாரி கிருஷ்ணமாச்சார்லு அவர்களும் தெலுங்கில் இந் நாடகத்தை இப்படியே எழுதியிருக்கின்றனர். இந்நாடகமானது 1891இல் அவர்கள் சபையாகிய சரச வினோத சபை சென்னைக்கு வந்த பொழுது அவர்கள் ஆடிய நாடகங்களில் ஒன்றாகும். இங்ஙனம் இருந்தும் மேற்சொன்ன கதையின் போக்கு எனக்குத் திருப்திகரமாயில்லாமல், அதை மாற்றி எழுத வேண்டுமென்று தீர்மானித்தேன். முக்கியமாக சித்ராங்கி, நரேந்திர பூபதியை மணந்த பிறகு, தன் சக்களத்தி மகனாகிய சாரங்கதரன் மீது இச்சை கொண்டது தவறு என்று என் புத்தியிற்பட்டது. முக்கியமாக நான் எழுதும்படியான நாடகங்களெல்லாம் நமது குண ஸ்திரீகள் சங்கையின்றிப் படிக்கக் கூடியவைகளாயிருக்க வேண்டும் என்றும், அவைகள் ஒவ்வொன்றும், சன்மார்க்கத்தை நம்மவருக்குக் காட்ட வேண்டியவைகளாயுமிருக்க வேண்டுமென்றும் தீர்மானித்த எனக்கு, சித்ராங்கியின்மீது இப் பழி வராவண்ணம் நாடகத்தை மாற்றவேண்டியது அவசியமாயிற்று. இனி நான் எழுதிய நாடகத்தில் இதை எவ்வாறு மாற்றினேன் என்பதைத் தெரிவிக்கிறேன். எனது நாடகக் கதையில் சித்ராங்கிக்கும் நரேந்திரனுக்கும் விவாகமாகவில்லை. சித்ராங்கி கன்னிப் பருவமடைந்த பிறகு, நரேந்திரன் சாரங்கதரனுக்குப் பெண் பேசும்படி தூதர்களையனுப்ப, அவர்கள் மூலமாகச் சித்ராங்கி சாரங்கதரனுடைய படமொன்றைப் பெற்று, சாரங்கதரன் மீது காதல் கொண்டவளாய் அவனையே மணக்கத் தீர்மானித்து, நரேந்திரன் பட்டணம் வந்து சேர்கிறாள். நரேந்திரன் அவள்மீது மோஹங் கொண்டு அவளைத் தானே மணக்கத் தீர்மானிக்கிறான். அதற்காக சாரங்கதரனை மெல்ல வேட்டைக்கு அனுப்பிவிட்டு, சித்ராங்கியிடம் அணுகித் தன்னை மணக்கும் படி வேண்டுகிறான். இதை யறிந்த சித்ராங்கி, கோபம் கொண்டாளாயினும், அரசனை நேராக எதிர்க்கச் சக்தியற்றவளாய், ஏதோ தான் நோன்பு நோற்று வருவதாயும், அந் நோன்பு முடியும் வரையில் தான் ஒரு புருஷன் முகத்தையும் பார்க்கலாகாதென்றும் சொல்லி, அவனைத் தடுத்து விடுகிறாள். இச்சந்தர்ப்பத்தில் சாரங்கதரனுடைய புறா அகஸ்மாத்தாய்த் தன் மாளிகைக்கு வர, அதைப் பிடித்து வைத்துக்கொண்டு, சாரங்கதரனை நேரில் பார்க்கவேண்டி, அவன் வந்தாலொழிய அதைக் கொடேன் என்று சொல்லி அனுப்புகிறாள்.
நடந்த சூதெல்லாம் அறியாத சாரங்கதரன், மனத்தில் ஒரு களங்கமில்லாதவனாதலால், நேராகச் சித்ராங்கியிடம் சென்று புறாவைக் கேட்கிறான். அப்பொழுது சித்ராங்கி நரேந்திரன் செய்த சூதை அவனுக்குத் தெரிவித்து, தான் கன்னிகை யென்பதையும் சொல்லித் தன் காதலை வெளியிட்டுத்தன்னை மணக்கும்படியாக வேண்டுகிறாள். தன் தந்தை மணக்கா விட்டாலும், மணக்கும்படி இச்சை கொண்டாராதலால், தனக்குச் சித்ராங்கி சிற்றன்னையாகி விட்டதாகத் தெரிவித்து, சாரங்கதரன் மறுக்கிறான். சித்ராங்கி எவ்வளவு வேண்டியும் சாரங்கதரன் இசையாது அவள் அறையினின்றும் தப்பிச் செல்ல, சித்ராங்கி, தன் காதல் கை கூடாததால் மிகவும் சினம் கொண்டவளாய், அவளது தோழியாகிய மதனிகையின் தூண்டுகோலினால், சாரங்கதரன் தன்னைப் பலாத்காரம் செய்ததாக நரேந்திரனிடம் முறையிடுகிறாள். அப்படி முறையிட்டதற்கும் முக்கியமான காரணம், அவளே பிறகு கூறுகிறபடி, எப்படியாவது நரேந்திரன் சித்ராங்கியைச் சாரங்கதரனுக்கு மணம் செய்விப்பான் என்று எண்ணியே. ஒரு பாபமுமறியாத சாரங்கதரன்மீது இவ்வாறு பழி சுமத்தியது தவறுதான்; இல்லையென்று சொல்வாரில்லை; இக் குற்றத்திற்காகச் சித்ராங்கி முடிவில் தன் உயிரைக் கொடுத்துப் பிராயச்சித்தம் செய்கிறாள்; ஆயினும், ஒரு கன்னிகை, தான் காதல் கொண்ட புருஷனை மணக்க வேறு வகையறியாது, இப்படிப் பழி சுமத்தியாவது அவனை மணக்கப் பார்த்தது பெரும் தவறா? அல்லது நரேந்திரனை மணந்த ஒரு பெண் தன் சக்களத்தியின் குமாரனைக் கண்டு தன் கற்பின் கடமையையும் கருதாது, அவனைப் பலாத்காரம் செய்து, இணங்காமையால், அவன் மீது தன் கற்பைப் பழித்ததாகப் பழி சுமத்தியது பெருந்தவறா? என்று இதைப் படிக்கும் எனது நண்பர்களே தீர்மானிக்கலாம். அன்றியும் கதையின் உருக்கத்தை அதிகப்படுத்தும் பொருட்டு, சாரங்கதரனை, ஸ்திரீகளின் விஷயம் ஒன்றும் அறியாது விளையாட்டின் மீதே கவனமுள்ள பாலகனாக வர்ணித்துள்ளேன்; இந்த அறியாமையே ஒரு குற்றமாகும்; இக்குற்றத்திற்காக இவன் உயிரிழக்க வேண்டி வருகிறது. அச்சிடப்பட்டிருக்கும் இந்நாடகத்தைப் படிப்பவர்களெல்லாம் சித்ராங்கி ஓர் உயர்குணமுடைய ஸ்திரீயென்றும், அவள் புராணக்கதையிலுள்ளபடி அத்தனைக் கெட்ட நடத்தையுடையவள் அல்லவென்றும் ஒப்புக்கொள்வார்களென்றே நம்புகிறேன். இந்நாடகத்தை எங்கள் சபை நடிக்கும்பொழுது கண்டவர்களும் இந்நாடகத்தை அச்சில் படித்தவர்களும், இதில் கற்புடைய நமது தேசத்து ஸ்திரீகள் பார்க்கக்கூடாத அல்லது படிக்கக்கூடாத விஷயம் ஒன்றுமில்லை யென்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்நாடகம் எங்கள் சபையோரால் பிறகு நடிக்கப்பட்டபொழுது ஒரு முறை நடந்த விருத்தாந்தத்தை இங்கெடுத்து எழுத அனுமதி கேட்டுக்கொள்கிறேன். இது முதன் முதல் பெங்களூரில் எங்கள் சபையோரால் நடிக்கப் பட்டது (அதற்குக் காரணம் முதலியவை யெல்லாம் பிறகு எழுதுகிறேன்); அப்புறம் பல தடவைகளில் சென்னையில் நடிக்கப்பட்டது. அவ்வாறு சென்னையில் ஒருமுறை நடிக்கப்பட்டபொழுது, காலஞ்சென்ற ஐகோர்ட்டு ஜட்ஜாயிருந்த கனம் சர் சதாசிவ ஐயர் அவர்கள், இதைப் பார்க்கத் தன் பத்தினியுடன் விக்டோரியா பப்ளிக்ஹாலிற்கு வந்திருந்தார். அம்முறை என் உயிர் நண்பனாகிய சி. ரங்கவடிவேலு சித்ராங்கியாகவும் நான் சாரங்கதரனாகவும் நடித்தோம். பத்மநாதராவும் சாரங்கதரனும் சம்பாஷிக்கும் காட்சிகள் வந்தபொழுது, சதாசிவ ஐயர் அவர்கள், தன் பக்கலில் ஹாலில் உட்கார்ந்துகொண்டிருந்த என் பால்ய நண்பர்வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரிடம் “இதுதான் உங்கள் சபை நாடகங்களில் அதிக சிற்றின்பம் அடங்கிய நாடகம் போலும்?” என்று ஆங்கிலத்தில் கேட்டார். அதற்கு ஸ்ரீனிவாச ஐயங்கார் “கொஞ்சம் பொறுங்கள். பிறகு தெரியும்” என்று பதில் உரைத்தனர். அக்காட்சிக்குப் பிறகு, சித்ராங்கி துயரப்படும் காட்சியும், ரத்னாங்கி தன் மகனைப் பிரியும் காட்சியும், சாரங்கதரன் தன் நண்பனைவிட்டுப் பிரியும் காட்சியும் ஒன்றன்பின் ஒன்றாக வர, அவற்றை யெல்லாம் பார்த்து, கண்களில் நீர் தாரை தாரையாக வடிய, நாடகத்தை மெச்சினர். மேற்சொன்ன விஷயங்களெல்லாம் எனது நண்பராகிய ஸ்ரீனிவாச ஐயங்கார், மறுநாள் என்னிடம் நேராகக் கூறினார். பிறகு சதாசிவ ஐயரும் எனக்கு நேராகப் பரிச்சயமான பிறகு, இந்நாடகத்தைப் பற்றியும், நடிக்கும் முறையைப் பற்றியும் என்னை சிலாகித்துக் கூறியிருக்கின்றனர். அன்றியும் காலஞ்சென்ற, ஐகோர்ட் ஜட்ஜாயிருந்து, பிறகு எக்சிக்யுடிவ் கவுன்சில் மெம்பராயிருந்த, எங்கள் சபையிலும் பிரசிடென்ட் (President) ஆகயிருந்த, வி.கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள், இந்நாடகத்தை மெச்சியிருக்கின்றனர். குற்றமற்ற மனமுடைய, நற்குணத்தையுடைய இவர்கள் ஆமோதிப்பைவிட எவரும் வேறு நற்சாட்சிப்பத்திரம் விரும்பார்கள் என்பது திண்ணம். இந்நாடகம் எழுதியதில் மாத்திரமன்று, நான் எழுதும் எல்லா நாடகங்களிலும், நமது சொந்தத் தாய்மார்களும், சகோதரிகளும், குழந்தைகளும் படிக்கக்கூடாத விஷயம் ஒன்றையும் எழுதலாகாது என்று நான் கங்கணம் பூண்டு இந்த நாற்பது வருடங்களாக எழுதி வருகிறேன். என் நாடகங்களைப் படித்த ஒரு பெண்மணியும் அவைகளில் தவறான ஒரு வார்த்தையும் இருப்பதாக இதுவரையில் குறை கூறினதில்லை. இதுவே எனக்கு ஒரு பெருங்கீர்த்தியாகக் கொண்டு சந்தோஷப்படுகிறேன். ஆயினும் இந்நாடகத்தில் ஒரு குற்றமிருப்பதாக, ஒரு பத்திராதிபர் மாத்திரம் எழுதியுள்ளார். அதையும் மறைக்காது இங்கு எழுதுகிறேன்.
பல வருடங்களுக்கு முன் ஒரு முறை இந்நாடகம் எங்கள் சபையோரால் நடிக்கப்பட்ட பொழுது, அதைப் பார்த்த ‘சசிரேகா’ என்னும் ஆந்திரப் பத்திரிகையின் பத்திராதிபராயிருந்த சேஷாச்சாரியார் என்பவர், சித்ராங்கி சாரங்கதரனை முத்தமிட்டது தவறு; அதற்குச் சாரங்கதரன் இணங்கியதும் தவறு என்று தன் பத்திரிகையில் எழுதினார். என் நாடகங்களைப் பற்றி அச்சில் வரும் அபிப்பிராயங்களையெல்லாம் ஒரு புஸ்தகத்தில் ஒட்டி வைப்பது வழக்கம்; அதன்படியே இதையும் ஒட்டி வைத்திருக்கிறேன். ஆகவே என்ன சந்தர்ப்பத்தில், என்ன காரணம் பற்றி, நான் எழுதிய நாடகத்தில் சித்ராங்கி சாரங்கதரனை முத்தமிடும்படி நேரிட்டது, அதற்குச்சாரங்கதரன் இணங்கும்படி நேரிட்டது என்பதை அறியார்போலும் நான் அச்சிடப்பட்டிருக்கும் இந்நாடகத்தை, இதைப் படிப்பவர்கள் படித்துப் பார்ப்பார்களாயின், இதில் அவர் கூறியபடி தவறொன்றுமில்லை என்று நன்கு அறிவார்கள்.
இந்தச் சாரங்கதர நாடகமானது எங்கள் சபையோரால் பன்முறை ஆடப்பட்டிருக்கிறது. காலஞ்சென்ற என் ஆருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு மடிந்தபின் நாங்கள் இதை ஆடுவதை விட்டிருக்கின்றோம். என்னிடமிருக்கும் குறிப்பின் படி இந்நாடகமானது என் அனுமதியின் பேரில் இதுவரையில் 198 முறை ஆடப்பட்டிருக்கிறது. இந்நாடகத்தை எங்கள் சபையோர் ஆடும் பொழுதெல்லாம் அதிகப் பணம் வசூலாயிருக்கிறது. எங்கள் சபைக்குப் பெருமையைக் கொண்டுவந்த நாடகங்களுள் இதுவும் ஒன்றே என்று நான் கூறவேண்டும்.
இந்நாடகத்தில் இதன் பூர்வகதையில் இல்லாது நான் புதிதாய் எழுதிய நாடகப் பாத்திரம் மதுரகவி என்பது ஒன்றே. இப்பாத்திரத்தை நான் ஹாஸ்ய பாகத்திற்காக இந்நாடகத்தில் சேர்த்தேன். இது முக்கியமாக என் பழைய நண்பராகிய, நான் முன்பே இதைப் படிப்பவர்களுக்குத் தெரிவித்திருக்கிற, ச. ராஜகணபதி முதலியாருக்காக எழுதப்பட்டது. இந்த மதுரகவிக் கவிராயர் பேசும்பொழுதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை தன் தகப்பனாரை “எங்கள் தகப்பனார் கூறியிருக்கிறார்” என்று இழுத்துக் கொண்டிருப்பார். இது அரங்கத்தின்மீது சொல்லப்படும் பொழுதெல்லாம் அதிக நகைப்பை விளைத்திருக்கிறது. இதை நான் இவ்வாறு எழுதியதற்கு வேடிக்கையான காரணமுண்டு. என் அருமைத் தந்தையார் இறந்தபின், கொஞ்ச காலம்வரையில், நான் அடிக்கடி சந்தர்ப்பம் நேரிடும் பொழுதெல்லாம், என் தந்தையார் புகட்டிய புத்திமதிகளை யெல்லாம் என் நண்பர்களுக்குச் சொல்வது வழக்கமாயிருந்தது. நான் அடிக்கடி இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் பொழுது, நானே ஒரு முறை இதைப்பற்றி யோசித்துப் பார்த்தேன். என் தந்தை எனக்கு அருமையாயிருக்கலாம்; நான் அடிக்கடி அவரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தால் கேட்பவர்களுக்கு, “என்னடா இது! இவன் எப்பொழுதும் தன் தந்தையைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறான்!” என்று ஏளனமாகத் தோன்றாதா? என்று என் புத்தியிற்பட்டது. இது மற்றவர்களுக்கு நகைப்பை விளைக்குமென்று கண்டு, இதை அடிக்கடி கூறிக்கொண்டி ருக்கும் “மதுரகவி” என்னும் பாத்திரத்தை சிருஷ்டித்தேன். இப்பொழுதும் இப்பாத்திரத்தை யாராவது மேடையின் மீது ஆடினால், எங்கள் சபையில் அவரைப் பிறகு, “உங்கள் தகப்பனார் இதைப்பற்றி என்ன சொல்லுகிறார்?” என்று ஏளனம் செய்வது வழக்கம்.
நாங்கள் இந்நாடகத்தை முதல் முதல் ஆடியபொழுது நான் மேலே குறித்தபடி, ராஜகணபதி முதலியார் மதுரகவியாக நடித்தார்; வெங்கடகிருஷ்ண பிள்ளை, நரேந்திரனாக வந்தார்; சித்ராங்கி பாத்திரத்தை ஜெயராம் நாயகர் பூண்டனர். அ. கிருஷ்ணசாமி ஐயர், சாரங்கதரன் தாயாராகிய ரத்னாங்கி வேடம் பூண்டனர்; தற்காலம் திருநெல்வேலியில் அட்வகேட்டாக இருக்கும் சாது கணபதி பந்துலு பி.ஏ.பி.எல். மதனிகையாகத் தோன்றினார்; எம். துரைசாமி ஐயங்கார் வழக்கப்படி, விதூஷகனாக ஆக்டு செய்தார்; சுமந்திரன் எனும் சாரங்கதரன் தோழனது பாத்திரம், என் பழைய நண்பராகிய எம்.வை. ரங்கசாமி ஐயங்காருக்காக எழுதப்பட்டபடியால், அதை அவருக்குக் கொடுத்தேன். எனது நண்பர் சி. ரங்கவடிவேலு அச்சமயம் பி. ஏ. பரீட்சைக்காகப் படித்துக்கொண்டிருந்த படியால், அவருக்கு ஒரு பாகமும் கொடுக்கவில்லை.
இந்நாடகமானது சென்னையில் ஆடப்படாமுன் முதல் முதல் பெங்களூரில் எங்கள் சபையாரால் ஆடப்பட்டதற்குக் காரணம், சற்று சவிஸ்தாரமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நானும் எனது நண்பர்களும் ஒருங்குகூடிப் பேசிக் கொண்டிருந்தபொழுது, பல்லாரியிலிருந்து சென்னைப் பட்டணத்திற்கு சரச வினோத சபையார் அடிக்கடி வருகிறார்களே, அம்மாதிரி நாமும் வெளியூருக்கு ஏன் போகக்கூடாது என்கிற பேச்சு வந்தது. அப்பொழுது அருகில் நின்று கொண்டிருந்த “அப்பு” என்பவன், “ஆமாங்கள், பெங்களூருக்குப் போனால் நன்றாயிருக்கும்” என்று சொன்னான். அதற்குக் காரணம் அவன் தன் பழைய எஜமானனான காலஞ்சென்ற சுப்பராயாச்சாரியுடன் பலதரம் அங்கு போய் வந்ததே. அதன்மீது நாங்கள் எல்லோரும் பெங்களூருக்கு, டிசம்பர் விடுமுறை, அதாவது கிறிஸ்ட்மஸ் லீவில் (Xmas Leave) போகலாம் என்று தீர்மானித்தோம். பிறகு, சபையார் வெளியூருக்குப் போய் நாடகமாடுவதென்பது நூதனமாகையால், சபையின் பொதுக்கூட்டத்தில் இதற்காக உத்தரவு பெற வேண்டுமென்று ஒரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. சபையின் பொதுக்கூட்டத்தார் இதற்கு ஓர் ஆட்சேபணையும் செய்ய மாட்டார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். இக்கூட்டம் கூடுவதற்கு நியமித்த தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன்பாக ஒரு நாள் இரவு என் நண்பர்களாகிய வெங்கிடகிருஷ்ண நாயுடும், வெங்கிட கிருஷ்ணப் பிள்ளையும் என்னிடம் வந்து ரகசியமாக, சபை பெங்களூருக்குப் போவதற்குப் பொதுக் கூட்டத்தில் ஆட்சேபணை வரும்போலிருக்கிறது என்று தெரிவித்தார்கள். அப்படி ஒன்றுமே ஆட்சேபணையிராது என்று எண்ணியிருந்த நான் இதைக் கேட்டவுடன் ஆச்சரியம் கொண்டவனாய், “யார் ஆட்சேபிக்கப் போகிறது?” என்று வினவினேன். அதன் பேரில் நூதனமாய் நமது சபையில் தெலுங்கு நாடகப் பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறதே, அதைச் சார்ந்தவர்கள்தான் இதற்குக் காரணமாயிருக்கிறார்கள் என்று என்னிடம் தெரிவித்தனர். அதன் மீது எனக்கு அதிகக் கோபம் பிறந்தது. தமிழில் மாத்திரம் அங்கு நாடகங்கள் போட உத்தேசித்திருக்கிறபடியால் இவர்கள் தாங்கள் போவதற்கில்லையே யென்று ஆட்சேபிக்கிறார்கள் என்று எண்ணினவனாய், எப்படியாவது அவர்கள் எண்ணத்தைத் தடுத்துப் பெங்களூருக்குப் போய்த்தான் தீரவேண்டும் என்று தீர்மானித்தேன். நூதனமாய் சபையில் ஸ்தாபிக்கப்பட்ட தெலுங்குப் பிரிவின் ஆக்டர்கள், வெளியூருக்கே சபையார் போகக்கூடாது என்கிற கோட்பாட்டின் மீது ஆட்சேபித்தார்களோ, அல்லது தாங்கள் அங்கு போவதற்கில்லையே என்று ஆட்சேபித்தார்களோ அது ஈசனுக்குத்தான் ஸ்திரமாய்த் தெரியும்.
ஆயினும் இதற்கப்புறம் இரண்டு வருஷங்கள் கழித்து மறுபடியும் பெங்களூருக்குச் சபை போகவேண்டுமென்றும், அச்சமயம் தமிழிலும் தெலுங்கிலும் அங்கு நாடகங்கள் நடத்தவேண்டுமென்றும் தீர்மானித்தபொழுது, இவர்களெல்லாம் ஓர் ஆட்சேபணையும் செய்யாது, குதூஹலத்துடன் உடன்பட்டபடியால், என் புத்தியிற்பட்ட காரணம் அவ்வளவாகக் தவறானதல்ல என்று நினைக்க வேண்டியவனாயிருக்கிறேன்.
அக்காலம் எனக்கு இருபத்திரண்டாம் வயது. அப்பொழுது நான் மிகவும் பிடிவாதக்காரனாயிருந்தேன் என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டியதே. “கொடியும் பேதையும் கொண்டதுவிடா” என்று ஆன்றோர் கூறியுள்ளபடி ஏதேனும் ஒன்றைத் தீர்மானித்தால், தப்போ ஒப்போ, அதைச் சாதித்துத்தான் வேறு வேலை பார்க்க வேண்டும் என்னும் பிடிவாத குணமுடையவனாயிருந்தேன். இப்பொழுதும் அப்பிடிவாதக் குணம் போகவில்லை யென்று எனது நண்பருட் சிலர் கூறுகின்றனர். ஆயினும் அவ்வயதில் இருந்த பிடிவாதத்திற்கும், இப்பொழுதிருப்பதற்கும் ஒரு முக்கியமான வித்தியாசமுண்டென நினைக்கிறேன். அக்காலத்தில் நான் ஏதாவது ஒன்றைத் தீர்மானித்தால், பிறகு அது தவறு என்று எனக்கே தோன்றிய போதிலும், தவறென்பதை ஒப்புக் கொண்டு அதை விட்டுவிட வேண்டும் என்னும் புத்தியில்லாதவனாயிருந்தேன்; இப்பொழுது எவ்வளவுதான் உறுதியாக ஒன்றைத் தீர்மானித்தபோதிலும், அது தவறு என்று என் புத்தியிற் பிறகு பட்டால், அதை விட்டுவிடவேண்டும் என்னும் புத்தி ஒரு சிறிது உடையவனாயிருக்கிறேன், என்று எண்ணுகிறேன்.
இனி அப் பொதுக்கூட்டத்தில் நடந்த வியவஹாரத்தை எழுதுகிறேன்.
பொதுக் கூட்டத்திற்குமுன் எனக்கிருந்த மூன்று நான்கு நாட்களுக்குள் எப்படியாவது பெங்களூருக்குப் போக வேண்டும் என்று தீர்மானித்ததற்காக, எவ்வளவு முயற்சி செய்ய வேண்டுமோ அவ்வளவு முயற்சியும் எடுத்துக் கொண்டேன். தற்காலம் முனிசிபாலிடி எலக்ஷனுக்காகவும், சட்ட நிரூபண சபை எலக்ஷனுக்காகவும் ஓட் சம்பாதிப்பதற்காக எப்படி வீடு வீடாய்ப் போய்ப் பிரயத்தனப்படுகிறார்களோ, அவ்வாறு சபையின் அங்கத்தினர் வீடுகளுக்கெல்லாம் போய் ஒவ்வொருவருடைய அபிப்பிராயத்தையும் அறிந்து, அவர்களை யெல்லாம் என்பட்சம் திரும்பும்படியாக முயன்றேன். இம்முயற்சியில் என் நண்பர்களாகிய வெங்கடகிருஷ்ண நாயுடும், வெங்கடகிருஷ்ண பிள்ளையும் எனக்கு மிகவும் உதவியாயிருந்தனர். அப்பொழுது எங்கள் சபையில் 63 அங்கத்தினர் இருந்தனர். இது எனக்கு எப்படி ஞாபமிருக்கிற தென்றால், அவ்வருஷம் மயிலாப்பூர் அறுபத்து மூவர் உற்சவத்தின் பொழுது நான் சபையின் அங்கத்தினர்க்கெல்லாம், மயிலாப்பூரில் ஒரு சிற்றுண்டிப் பார்ட்டி கொடுத்தேன். அச்சமயம், இன்று அறுபத்து மூவர் உற்சவம், நமது சபையிலும் இன்று அறுபத்து மூவர் இருக்கிறோம் என்று வேடிக்கையாகச் சொன்னார்கள். பெங்களூருக்கு நாங்கள் போகவேண்டும் என்று முயன்ற படியே, போகக்கூடாது என்று எதிர்க்கட்சிக்காரர்களும் முயற்சி செய்தார்கள். அக்கட்சியில் பெரும்பாலும் நூதனமாக ஸ்தாபிக்கப்பட்ட தெலுங்குப்பிரிவின் அங்கத்தினராயிருந்த போதிலும், அவர்கள் எங்கள் சபையின் காரியதரிசியாகிய ஊ. முத்துக்குமாரசாமி செட்டியாரையும், கண்டக்டராகிய வி. திருமலைப்பிள்ளை அவர்களையும் கட்டிக்கொண்டார்கள். இதை மெல்ல அறிந்த நான் என் பிரயத்தனத்தைப் பதின்மடங்கு அதிகமாகச் செய்ய ஆரம்பித்தேன். இதில் எனக்கு நேரிட்ட முக்கியமான கஷ்டம் என்னவென்றால், இதைத் தீர்மானிக்க எங்கள் சபை பொதுக்கூட்டம் நாளைக்குக் கூடுவதாயிருக்க, இன்று, அதுவரையில் எங்கள் பட்சமிருந்து, பெங்களூருக்குப் போக வேண்டுமென்று மிகவும் உற்சாகத்துடனிருந்த ஜெயராம் நாயகர், அவருடைய மைத்துனராகிய வி. திருமலைப்பிள்ளைக்கிணங்கி எதிர்க்கட்சியில் சேரப்போகிறதாகக் கேள்விப்பட்டதே! அதன் மீது அன்று சாயங்காலம் அவர் வீட்டிற்குப் போய் என் நியாயங்களையெல்லாம் எடுத்துக் கூறி, எங்கள்பட்சம் ஓட் கொடுக்காவிட்டாலும் எதிர் பட்சம் ஓட் கொடாதே என்று வற்புறுத்தி, அவர் இரண்டு பக்கத்திலும் சேராது, (நியூட்ரல்) பொதுவாக இருக்கும்படி வாக்கு வாங்கிக் கொண்டேன். எதிர்க்கட்சிக்காரர்களும் தங்களாலியன்ற அளவு சூழ்ச்சி செய்து பார்த்தார்கள் என்றே நான் கூறவேண்டும். அதற்கு ஓர் உதாரணமாக இது நடந்து 35 வருஷம் பொறுத்து போன மாதம் எங்கள் சபையின் பழைய அங்கத்தினராகிய நம் பெருமாள் செட்டியார் என்பவர் எனக்குக் கூறியதை இங்கு வரைகிறேன். ஏதோ சபையைப்பற்றிப் பேச்சு வந்த பொழுது அந்தச்சமயம் தெலுங்கு ஆக்டர்களெல்லாம் தன்னிடம் வந்து, “நீ தெலுங்கு மனிதனாயிருக்கிறாய். ஆகவே நீ தமிழ்க் கட்சியில் சேரலாகாது. எங்கள் பக்கம்தான் உன்னுடைய ஓட் கொடுக்க வேண்டும்” என்று வற்புறுத்தினதாயும், அதற்கு அவர் இசையாது தனக்கு நியாயம் என்று தோன்றிய என்பட்சமேதான் ஓட் கொடுத்ததாகவும் தெரிவித்தார். இவ்வாறு மும்முரமாக இருதிறத்தாரும் தங்கள் பட்சம் ஓட் கொடுக்கும்படியாக எல்லாவிதப் பிரயத்தனங்களும் முடிந்த பிறகு, ஒரு ஞாயிற்றுக்கிழமை ஜெயராம் நாயகருடைய வீட்டில் எங்கள் சபையின் பொதுக்கூட்டம் கூடப்பட்டது. எனக்கு ஞாபகம் இருக்கிற வரையில், திருமலைப்பிள்ளையின் சிநேகிதரும் அட்டர்னி தொழிலில் பாகஸ்தருமாகிய சி. ரங்கநாதம் நாயுடு என்பவர் அக்கிராசனம் வகித்தார். ஏதோ ஒரு காரணத்தினால் என்பட்சம் சேர்ந்த எனது நண்பர்கள், நான் அந்தக் கூட்டத்தில் வாய் திறந்து பேசக்கூடாது என்று கட்டுப்பாடு செய்து விட்டனர்! அவ்வாறு வாக்குக் கொடுத்த நான் வாயைத் திறக்க அசக்தனானேன்! அவர்கள் அவ்வாறு என் வாயைக் கட்டிவிட்டது, இவன் அடங்காப்பிடாரி, வாயைத் திறக்க விட்டால் ஏதாவது அதனப் பிரசங்கித்தனமாய்ப் பேசி விடுவான், அதனால் குழப்பமுண்டாகும். ஆகவே இவனைப் பேசவிடலாகாது என்று தீர்மானித்து இவ்வாறு செய்திருக்க வேண்டுமென்று நான் ஊகிக்கிறேன். அப்பொழுது அவ்வாறு கட்டுப்பட்டது எனக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்த போதிலும், அப்பொழுது எனக்கிருந்த குணத்தையும், மற்ற சந்தர்ப்பங்களையும் நோக்குமிடத்து, அவர்கள் செய்தது சரியென்றே இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது. நான் பேசாவிட்டாலும் என் பக்கம் சிலரைப் பேசும்படிச் செய்தேன். எதிர்க்கட்சியில் முக்கியமாக வி. திருமலைப்பிள்ளை அவர்கள் பெங்களூருக்குச் சபை போகக்கூடாது என்று பேசினார். இன்னும் சிலரும் ஆட்சேபித்தனர். அப்படி ஆட்சேபித்தவர்களெல்லாம், ஏதோ தமிழ்ப் பிரிவின் மீதுள்ள பொறாமையினால் அவ்வாறு செய்தனர், என்று நான் எண்ணுவதற் கிடமில்லை. எங்கள் தரப்பில் பெங்களூருக்குப் போவதில் தவறில்லை; அதனால் சபைக்கு நலமுண்டாகும் என்று நாங்கள் எண்ணியபடியே, அவர்கள் தரப்பிலும் சிலர், வாஸ்தவத்தில் சபையானது வெளியூர்களுக்குப் போய் நாடகங்களாடுவது உசிதமன்று, சபைக்கு அழகன்று, அதனால் சபையின் பெயர் கெடும் என்ற எண்ணியிருக்கலாம். அவ்வாறே சிலராவது எண்ணியிருந்தனர் என்று நான் உறுதியாய்க் கூறவேண்டியவனாயிருக்கிறேன். இருதிறத்தாரும் பேசி முடிந்தவுடன், ஓட் எடுக்கப்பட்டது. மொத்தம் வந்திருந்த அங்கத்தினர் 55; ஓட் எடுத்தபொழுது இருபத்தைந்து பெயர் போகலாம் என்றும், இருபத்து நான்கு பெயர் போகக்கூடாதென்றும் ஓட் கொடுத்தார்கள். மிகுந்தவர்கள் பொதுவாக (Neutral) இருந்தார்கள். எதிர்க்கட்சிக்காரர் உடனே மறுபடியும் எண்ணிப்பார்க்க வேண்டுமென்று போல் (Poll) கேட்டார்கள். மறுபடியும் எண்ணிப்பார்த்த பொழுது இருபத்தாறு பெயர் போகலாமென்றும், இருபத்தைந்து பெயர் போகக் கூடாதென்றும் தெரிவித்தனர். அதன் பேரில் இன்னொரு முறை கணக்கிட்டுப் பார்க்க வேண்டுமென்று கேட்டார்கள். இம்முறை ஓட் எடுத்த பொழுது இருபத்தேழு பெயர் போவதற்காகவும், இருபத்தாறு பெயர் போகக்கூடாதென்றும் ஓட் கொடுத்தார்கள்! இவ்வாறு மூன்று முறை ஓட் எடுத்த பொழுதெல்லாம், நான் ஜெயராம் நாயகர் முகத்தை விட்டு என் கண்களை எடுக்கவில்லை; அவரைத் தங்கள் பக்கம் சேரும்படியாக அநேகர் வற்புறுத்திப் பார்த்தார்கள். ஜெயராம் நாயகர், அவர்கள் வற்புறுத்துதலுக் கெல்லாம் இணங்காமல் தன் வாக்கின்படி பொதுவாகவே இருந்து விட்டார். அவர் அன்று மாறியிருப்பாராயின், நாங்கள் பெங்களூருக்குப் போவது நின்று போயிருக்கும். ஏனெனில், இருபக்கமும் ஓட்டுகள் சமமாக இருந்தால், அக்கிராசனம் வகித்த சி. ரங்கநாதம் நாயுடு, போகக்கூடாது என்று தன் தீர்மானிக்கும் ஓட்டை (Casting Vote) கொடுத்திருப்பார் என்பதற்கு ஐயமில்லை . கடைசியாகத் தீர்மானமானவுடன் நடந்த வரலாற்றை எழுதக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில், அதனால் நான் ஒரு பெரும் சபையார் போகக்கூடாது என்று மிகவும் ஆட்சேபணை செய்துவந்த வி. திருமலைப்பிள்ளை அவர்கள், உடனே என்னிடம் வந்து, என் முதுகைத் தட்டிக்கொடுத்து, “சம்பந்தம்! போவதென்று இப்பொழுது தீர்மானமாகி விட்டபடியால், நானும் உங்களோடு பெங்களூருக்குப் போகிறேன். எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று பார்த்துக்கொள்; சபையின் பெயர் கெடாதபடி பார்த்துக்கொள்” என்று சொல்லிவிட்டுக் கூட்டத்தை விட்டுச் சென்றார். என் எண்ணத்தின்படி முடித்து நான் அன்று ஜெயித்தபோதிலும், திருமலைப்பிள்ளை அவர்கள் தன் நடவடிக்கையால் என்னை அன்று ஜெயித்தார் என்றே கூறவேண்டும். அன்று முதல் அவரை இந்தப் புத்திமதியை எனக்குப் புகட்டிய ஆசானாகக்கொண்டு நடந்து வருகிறேன். எங்கள் சபையின் கூட்டங்களிலாவது, அல்லது இதர கூட்டங்களிலாவது நான் மேற்கொண்ட கட்சி ஜெயம்பெறாது, எதிர்க்கட்சி ஜெயிக்கும் போதெல்லாம், திருமலைப்பிள்ளை அவர்கள் நடந்து கொண்டதையே என் பற்றுக்கோடாகக் கொண்டு நடக்க என்னாலியன்றவளவு முயன்று வருகிறேன். நம்முடைய பக்கம் ஜெயிக்காவிட்டால், எதிர்ப் பக்கம் ஜெயித்ததே என்று பொறாமை கொண்டு, அதற்கு அப்பக்கத்திற்கு எவ்வளவு இன்னல் விளைக்கக்கூடுமோ அவ்வளவு உண்டாக்குவதுதான் இவ்வுலகில் சகஜமாயிருக்கிறது. அதைத் தவிர்த்து, தாங்கள் எண்ணிய எண்ணமே சரியென்று தங்கள் புத்திக்குட்பட்ட போதிலும், எதிர்ப்புறம் ஜெயித்தபின் அவர்கள் பக்கமும் நியாயமாயிருக்கலாம். இனி உழைத்துப் பொது நலத்தைக் கோரவேண்டுமே என்னும் புத்திமான்கள் இவ்வுலகில் சிலரே; அவ்வாறு நடந்து வந்த சிலருள் காலஞ்சென்ற என் நேர் சகோதரனான ஆறுமுக முதலியார் ஒருவர் என்று நான் இங்குக் கூறவேண்டும். இதைக் கூறுவதில், ஏதோ சகோதர வாஞ்சையினால், இவன் கூறுகிறான் என்று எனது நண்பர்கள் எண்ணாதிருப்பார்களாக. காலஞ்சென்ற ஆறுமுக முதலியாரை நேரில் நன்றாய் அறிந்தவர்கள் நான் கூறியது உண்மையென ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். அநேக சங்கங்களிலும், வியவஹாரங்களிலும் மேற்சொன்ன விஷயத்தை ஆராய்ந்தறிந்து, எனது கற்றறிந்த சகோதர சகோதரிகள், அதன்படி நடந்து வருவார்களாயின் அவர்களுக்கும் நன்மை யுண்டாம், நமது நாட்டிற்கும் பெரும்பாலும் நன்மை யுண்டாம் என்று நான் உறுதியாய் நம்புகிறேன்; இதை அறிவது மாத்திரம் போதாது, அறிந்ததை அப்யசிக்கவும் வேண்டும்; நாம் ஓர் உண்மையை அறிந்ததன் பலன் அதை அப்யாசத்திற்குக் கொண்டு வருவதேயாம்.
மேற்சொன்னவாறு எங்கள் சபையோரால் பெங்களூருக்குப் போவதென்று தீர்மானிக்கப்பட்டவுடன், நாட்கள் அதிகமாயில்லாதபடியால், இரவு பகலாக எழுதி சாரங்கதர நாடகத்தை முடிக்க வேண்டியவனாயினேன். அதில் பாத்திரங்களை எடுத்துக்கொண்ட எனது நண்பர்கள் தங்கள் பாகங்களை எழுதிக்கொள்வதற்குத்தான் அவகாசமிருந்தது. ஒரு ஒத்திகையும் சென்னையில் நடத்துவதற்குக் காலமில்லாமற் போயிற்று.
இதுதான் எங்கள் சபை முதல் முதல் வெளியூருக்குப் போய் நாடகங்கள் ஆடின சந்தர்ப்பமாகையால், இதைப்பற்றிச் சற்று விவரமாக எழுத விரும்புகிறேன்.
ஒரு நாடகமாடுவது ஒரு கலியாணம் செய்து முடிப்பது போல் கஷ்டமான காரியமென்று, முன்பே எழுதியிருக்கிறேன்; அப்படியிருக்குமாயின், இது வெளியூருக்குப் போய் ஒரு கலியாணத்தைச் செய்து வைக்கும் கஷ்டத்திற்குச் சமானமாகும்! டிசம்பர் விடுமுறையில் நாங்கள் போனோம். போவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, எங்களில் ஒருவராகிய வெங்கடகிருஷ்ண நாயுடுவை முன்பாக அனுப்பி எங்களுக்கு விடுதி முதலியவைகளை யெல்லாம் ஏற்பாடு செய்யும்படி செய்தோம். அவர் முன்னதாகப் போய் எங்களுக்காக வேண்டிய ஏற்பாடுகளை யெல்லாம் செம்மையாகச் செய்து வைத்தார். நாங்கள் நாடகமாடுவதற்காக, கப்பன்ரூம்ஸ் (Cubbon Rooms) என்னும் சிறிய நாடக சாலைதான் கிடைத்தது. அக்காலம், அதில்தான் பெங்களூரிலுள்ள ஐரோப்பியர்கள் நாடகமாடுவது வழக்கமாயிருந்தது. தற்காலம், போனவருஷம் அங்கு நான் போயிருந்தபொழுது அதைப்பற்றி விசாரித்துப் பார்த்தேன். பெங்களூரில் மற்ற இடங்களில் பெரும் நாடக சாலைகள் பல கட்டப்பட்டபடியால் கப்பன் ரூம்சில் நாடகமாடுவது அற்றுப் போய் விட்டது என்று சொன்னார்கள்.
நாங்கள் எல்லாம் திருமலைப்பிள்ளையின் இஷ்டப்படியே, ரெயிலில் இரண்டாவது வகுப்பில்தான் போக வேண்டுமெனத் தீர்மானித்தோம். மொத்தமாக நாடகமாடும் சங்கமாகப் போனபடியால், ரெயில் அதிகாரிகள் எங்களுக்குக் குறைந்த சார்ஜில் போகும்படியான உத்தரவு கொடுத்தார்கள். சபையில், பணம் இல்லாதபடியாலும், அப்பொழுது அங்கத் தினராயிருந்தவர்களுக்கு ஊக்கம் அதிகமாயிருந்தபடியாலும், ரெயில் செலவும், சாப்பாட்டுச்செலவும் நாங்களே வகித்தோம். இப்பொழுது சில சபைகளில் வெளியூருக்குப் போவதென்றால், சபையானது மேற்சொன்ன செலவுகளை யெல்லாம் மேற்கொண்ட போதிலும், தங்கள் வீட்டிலிருந்து ரெயில் ஸ்டேஷனுக்குப் போக வர வண்டிச் செலவுகூடச் சபையார் கொடுக்க வேண்டும் என்று மன்றாடும் எனது சில நண்பர்கள் இதைக் கவனிப்பார்களாக.
ஆக்டர்கள் தவிர, இன்னும் சில அங்கத்தினர், பெங்களூரைப் பார்க்க வேண்டும் என்னும் இச்சையாலும், போய் வருவதற்கு இலவசமாயிருந்தபடியாலும், பலருடன் கூடி ஒன்றாய்ப் போவது சங்தோஷத்தைத் தரும் என்னும் எண்ணத்தினாலும் எங்களுடன் வந்தார்கள். அப்படி வந்தவர்களுள், பெங்களூருக்குப் போகக் கூடாது என்று மன்றாடிய சிலரும் இருந்தனர். முக்கியமாக அப் பொதுக் கூட்டத்தில் அக்கிராசனம் வகித்த சி. ரங்கநாதம் நாயுடும் வந்தார். முன்பே நான் குறித்தபடி எங்கள் கண்டக்டராகிய வி. திரு மலைப்பிள்ளையும் வந்தார். பரீட்சைக்காகப் படித்துக்கொண் டிருந்த எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலு தவிர மற்ற முக்கியமான ஆக்டர்களெல்லாம் வந்தார்கள்.
காலை ரெயிலில் சென்னையிலிருந்து புறப்பட்டு இரண்டு இரண்டாவது வகுப்பு வண்டிகளைப் பூராவாக அமர்த்திக் கொண்டு, அவைகளிலேறி சாயங்காலம் இருட்டியவுடன் பெங்களூர் போய்ச் சேர்ந்தோம். அப்பொழுது தற்காலமிருப்பது போல் பெங்களூர் ரெயில் சீக்கிரமாகப் போகவில்லை.
இடையில் நாங்கள் ரெயில் பிரயாணம் செய்த பொழுது நிகழ்ந்த ஒரு முக்கியமான விஷயத்தை எழுத வேண்டியதிருக்கிறது. நாங்கள் புறப்பட்டவுடன் திருமலைப் பிள்ளை என்னைத் தன் அருகில் அழைத்து, “என்ன சம்பந்தம், சாரங்கதரா நாடகத்தில் ஆக்டர்களெல்லாம் இன்னும் ஒன்றும் படிக்கவேயில்லையாமே?” என்று கேட்டார். எதிர்க் கட்சியில் சார்ந்த சிலர், இதை அவருக்குத் தெரிவித்தார்கள் போலும். அவர்கள் என்ன எண்ணத்துடன் தெரிவித்தார்களோ நான் சொல்வதற்கில்லை; அப்படிச் செய்தது எங்களுக்கு (முக்கியமாக எனக்கு) மிகவும் நன்மையாய் முடிந்தது. “அதெல்லாம் நீங்கள் பயப்பட வேண்டாம்” என்று அவருக்குப் பதில் சொல்லி விட்டு என் வார்த்தையையும் சபையின் மானத்தை யும் காப்பாற்றும் பொருட்டு, மெல்ல அவருக்குத் தெரியாமல் ஒவ்வொரு ஆக்டராக அழைத்து, எங்கள் வண்டியில் காலியாயிருந்த கடைசி கம்பார்ட்மெண்டில் அவரவர்களுடைய பாகத்தை நடித்துக் காட்டி எப்படியாவது நமது பெயரைக் காப்பாற்ற வேண்டும், உங்கள் பாகங்களைக் குருட்டுப்பாடம் செய்து விடுங்கள் என்று அவர்களை வேண்டிக் கொண்டேன். அவர்களும் என் வேண்டுகோளுக்கிணங்கி, ரெயில் பிரயாணம் செய்யும் பொழுது, தங்கள் பாடங்களைச் சுறுசுறுப்புடன் படித்து வந்தனர்.
நாங்கள் போய் பெங்களூர் சேர்வதற்குள் இருட்டி விட்டது. முன்பே அங்கு போயிருந்த வெங்கடகிருஷ்ண நாயுடு எங்களுக்கெல்லாம் கோச் வண்டிகள் ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஏறிக்கொண்டு எங்களுக்கு ஏற்படுத்திய விடுதிக்குப் போகுமுன் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கு குறிக்க வேண்டிய வனாயிருக்கிறேன். ரெயில் ஸ்டேஷனுக்கு எங்களை வரவேற்க வந்தவர்களுள், எனது நண்பராகிய எம். வை. ரங்கசாமி ஐயங்காருடைய பந்து ஒருவர் வந்திருந்தார். ரங்கசாமி ஐயங்காருக்காகப் பால் கொண்டு வந்து கொடுத்தார். ரங்கசாமி ஐயங்கார் தான் சாப்பிட்டுவிட்டு, என்னையும் கொஞ்சம் சாப்பிடும்படி கேட்டுக் கொண்டார். அவர் வெண்டு கோளுக்கிணங்கி பெங்களூரில் டிசம்பர் மாசத்துக் குளிர்ச்சியால் பனிக்கட்டியைப் போல் சில்லென்றிருந்த அப் பாலை அருந்தினேன்.
இதென்ன, இந்த அல்ப விஷயத்தை இவன் இங்கு எடுத்துரைப்பானேன் என்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் நினைக்கலாகாது. இதனாலும், இன்னும் இனி நான் கூறப்போகிற சில சிறு காரணங்களாலும், முடிவில் நான் என்ன கஷ்டத்திற்கு ஆளானேன் என்பதை இனி இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறிவார்கள்.
எங்கள் விடுதிக்குப் போகும்பொழுது, பெங்களூரின் குளிர்ந்த காற்றையும் கவனியாது, எங்கள் வண்டிகளின் ஜன்னல்களை யெல்லாம் திறந்து கொண்டு போனோம். போனவுடன் சீக்கிரம் சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டோம். நான் படுத்துக் கொண்ட இடம், எங்கள் பகுதியில், ஒரு கூடம். நான் படுத்துக் கொண்ட இடத்துக்கு நேராகக் காற்று வருவதற்காக ஒரு ஜன்னல் இருந்தது. அதை மூடுவதற்கு ஏதோ காரணத்தினால் சாத்தியமில்லாமலிருந்தது. பின்வருவதை அறியாதவனாய், இதனால் என்ன கெட்டுப் போகின்றது என்று அதைக் கவனியாதவனாய் அந்த ஜன்னலுக்கு நேராக நான் படுத்துறங்கி விட்டேன். மறுநாட் காலை நான் எழுந்தவுடன் வாயைத் திறந்து பேச முயன்றால், என் குரல், எனக்கே கேட்காதபடி தொண்டை ஒரேமுட்டாய்க் கட்டிக் கொண்டது! குளிர்ந்த பாலைச்சாப்பிட்டது ஒரு பக்கம், வண்டியில் வரும்பொழுது குளிர்ந்த காற்றில் பட்டது ஒரு பக்கம், இரவில் மூடப்படாத ஜன்னலுக்கெதிராகப் படுத்துக் கொண்டது ஒரு பக்கம், எல்லாம் சேர்ந்து, என் தொண்டை ஒன்றும் பேசமுடியாமற்படி கட்டிக் கொண்டது. பாடுவதற்கு ஏதாவது கஷ்டமாயிருந்தால் சில பாகவதர்கள், தொண்டை கம்மலாயிருக்கிறது என்று கூறுவதுண்டு. “ஸ்திரீகள் காதில் அணிவது, எனக்குத் தொண்டையிலிருக்கிறது” என்று வேடிக்கையாய்ச் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட கம்மல், மிகவும் பெரிதாய், என் தொண்டையைப் பிடித்து விட்டது; எனக்கு இன்னது சொல்வதென்று தோன்றவில்லை. “அழ முடியாத துக்கம்” என்று அதற்கு முன் கேள்விப்பட்டிருக் கிறேன். அப்பொழுதுதான் அது இத்தன்மையது என்று நேரில் சுய அனுபவத்தில் அறிந்தேன். அன்றைத் தினம் நாங்கள் ஆட வேண்டிய நாடகம் “மனோஹரன்.” வேறு எந்த நாடகமாவது இருந்தாலும் கொஞ்சம் பெரிதல்ல. இந்த மனோஹரன் நாடகத்தில் முன்பே இதை வாசிக்கும் எனது நண்பர்பளுக்கு நான் அறிவித்திருக்கிறபடி, நான் நன்றாய் நடிப்பதற்கு என் தொண்டையானது மிகவும் வன்மையுடையாதாயிருக்க வேண்டியது அதி அவசியம். அப்படிப்பட்ட தருவாயில் என் குரலை நானே கேட்பது கஷ்டமாயிருந்தால், என் மன நிலைமை எப்படி இருந்திருக்க வேண்டுமென்று எனது நண்பர்களே ஊகித்துக் கொள்ளலாம். மெல்ல எழுந்திருந்து பக்கத்து அறையில் இருந்த வெங்கிடகிருஷ்ணப் பிள்ளையிடம் என் ஸ்திதியை, பாதி என் மெல்லிய குரலாலும் பாதி கை ஜாடையாலும் தெரிவித்தேன்! அவர் இதற்காக ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை; காலையில், குளிர் தேசமாகையால் அப்படித்தானிருக்கும்; வெயில் ஏற ஏறச் சரியாப் போய்விடுமென்று தெரிவித்தார்; வைத்தியம் தெரிந்த அவர் அப்படிக் கூறியும் என் மனம் திருப்தி அடையவில்லை . பிறகு காப்பி சாப்பிட்டுவிட்டு, எல்லோருமாக, அன்று காலை பெங்களூரில் “புஷ்பக்காட்சி” நடந்த இடத்திற்குப் போய்ப் பார்த்து விட்டுத் திரும்பி வந்தோம். இதற்குள்ளாகப் பத்து மணியாகியும் என் தொண்டை அப்படியே யிருந்தபடியால், வெங்கடகிருஷ்ணப் பிள்ளையைப் பார்த்து, இதற்கு ஏதாவது மருந்து கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினேன்; அவர் இதற்கு வேறு ஒரு மருந்தும் உடனே கேட்காது, அரை அவுன்ஸ் பிராந்தி சாப்பிட்டால் சரியாகப் போய்விடும் என்று சொன்னார். அவர் வார்த்தையில் முழு நம்பிக்கையுடையவனாய், அப்படியே கொஞ்சம் பிராந்தி வரவழைத்து, அரை அவுன்ஸ் தண்ணீரில் விட்டு அதைச் சாப்பிட்டேன். அதற்கு முன் எப்பொழுதும் அதைச் சாப்பிட்ட வழக்கமில்லாத படியால், அது என் வயிற்றில் எரிச்சலைக் கொடுக்க ஆரம்பித்தது. உடனே சாப்பாடு சாப்பிட்டுவிட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று எனது நண்பர் தெரிவிக்க அப்படியே செய்தேன். அதனால் எரிச்சல் சற்றுத் தணிந்த போதிலும், என் தொண்டைக் கம்மல் மாத்திரம் தீரவில்லை.
அதன்பேரில் என் மனத்தில் திகிலடைந்தவனாய், எனது நண்பரிடம் அணுகி, மறுபடியும் அவரது அபிப்பிராயத்தைக் கேட்க, அவர் சற்று உலாவினால் நல்லது என்று சொல்ல, அவரும் நானும் இன்னும் சிலருமாக நாங்கள் இறங்கியிருந்த “ஆஸ்பார்ன் அவுஸ்” என்னும் வீட்டிலிருந்து, நாடகம் நடத்தவேண்டிய இடமாகிய கப்பன் நாடகசாலைக்கு நடந்து போனோம். வேகமாய் நடந்ததனால் எனக்குக் கொஞ்சம் குணமாயிருந்தது போல் தோன்றியது. பிறகு, இதுவரையில் நான் பார்த்திராத அந்த நாடக சாலையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்பொழுது, அங்கே வேஷம் தரிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த கிரீன் ரூம்கள் ஒன்றில் பெரிய சோபாக்களும், கட்டில்களும் போடப்பட்டிருந்ததைக் கண்டு ஒருவேளை படுத்துறங்கி விட்டால் உடம்பு செம்மையாகி விடும் என்று எண்ணினவனாய், நடந்து வந்த அலுப்பினால் களைத்தவனாய், படுத்து உறங்கி விட்டேன். அதுதான் அன்றைத் தினம் நான் செய்த இரண்டாம் பெரும் தவறென்று நினைக்கிறேன். தொண்டை யெல்லாம் சரியாகிவிடும் என்று தூங்கப் போய், “குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டு வந்தானாம்” என்கிற பழமொழிக்கிலக்காக, சாயங்காலம் நான்கு மணிக்கு நான் விழித்தெழுந்திருக்க, என் தொண்டை அடியுடன் அற்றுப்போய்விட்டது! முன்பாவது என் குரல் கொஞ்சம் கேட்டது; இப்பொழுது அதுவும் போய்விட்டது! “உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா” என்கிறபடி, காலையில் இருந்த குரலும் போய்விட்டது! ஒன்றும் தோன்றாதவனாய், பிரமித்துப் போய், எனது நண்பராகிய வெங்கட கிருஷ்ணப் பிள்ளையைக் கேட்க, அவர் “நீ தூங்கியிருக்கக் கூடாது, அதனால்தான் இப்படியாயிற்று” என்று கூறினார். இந்தப் புத்திமதியை நான் தூங்குமுன் கூறியிருந்தால் நலமாயிருக்கும். தூங்கி எழுந்த பின் கூறி என்ன பிரயோஜனம் என்று எண்ணினவனாய், வைத்தியப்பரீட்சையில் தேறின ஒரு வைத்தியரை வரவழைத்து, என் ஸ்திதியைக் கூறி, எப்படி யாவது என் தொண்டையைச் சரிப்படுத்தும்படியாக வேண் டினேன். அவர் என்னை நன்றாய்ப் பரிசோதித்துப் பார்த்து, தேர்ந்த புத்தியுடையவராயிருந்தபடியால் “நீ பிராந்தி சாப்பிட்டது தவறு; பேசாமல் சுபாவத்திற்கே அதை விட்டிருப்பாயானால், சாயங்காலத்திற்குள் உன் தொண்டை சரியாகிப் போயிருக்கும். இப்பொழுது நான் வேறொன்றும் செய்வற்கில்லை. தொண்டை மாத்திரைகள் ஒரு புட்டி தருகிறேன். அவைகளை ஒவ்வொன்றாகக் கறையும் வரையில் வாயில் அடக்கி வைத்துக்கொண்டிரு; கொஞ்சம் சுமாராக இருக்கும்” என்று சொல்லி, ஒரு புட்டி தொண்டை மாத்திரைகள் அனுப்பினார். அவர் சொன்னபடியே, அந்த மாத்திரைகளை ஒவ்வொன்றாக வாயில் போட்டுக் கொண்டிருந்தேன். சாயங்காலமானவுடன் என்னுடைய இதர நண்பர்களெல்லாம் வேஷம் தரிப்பதற்காக வந்து சேர்ந்தார்கள். என் தொண்டையின் நிலைமையறிந்து அவர்களெல்லாம் துக்கப்பட்டார்கள் என்று சொல்வது அதிகமன்று. சி. ரங்கவடி வேலுடன் படித்தவராகிய சாரங்கபாணி முதலியார் என்பவர், என் தொண்டையின் நிலைமையறிந்து அவர்களெல்லாம் துக்கப்பட்டார்கள் என்று சொல்வது அதிகமன்று. சி. ரங்கவடிவேலுடன் படித்தவராகிய சாரங்கபாணி முதலியார் என்பவர், என் நிலையைப் பார்த்து, “வாத்தியார், நீங்கள் எப்படி இன்றிரவு ஆக்டு செய்ய போகிறீர்கள்!” என்று கூறி வாஸ்தவமாகக் கண்ணீர் விட்டழுதுவிட்டார். இவர்தான் எனக்கு “வாத்தியார்” என்று முதல் முதல் பெயர் வைத்தது! அப்பெயர் பிறகு சாதாரணமாக வழக்கத்தில் வந்து, இப் பொழுது எங்கள் சபையில் எனக்கு வயதிற் சிறியவர்களெல்லாம் என்னை “வாத்தியார்” என்றே அழைக்கின்றனர்.
பிறகு மற்ற ஆக்டர்களெல்லாம் எப்படி வேடம் தரித்தனர் முதலிய விஷயங்கள் ஒன்றையும் நான் அன்று கவனித்தவனே அன்று. மாத்திரைகள் சாப்பிடும்படி சொல்லிவிட்டுப் போன வைத்தியர், தொண்டைக்குச் சுடுகை தாக்கும்படியாக ஏதாவது செய்தால் கொஞ்சம் குணமாகும் என்றும் சொல்லிப் போனார்; ஆகவே, ஒரு தணல் சட்டியை வரவழைத்து, ஓர் ஊது குழாயைக் கொண்டு, அதன் சுடுகையை என் வாயிற் படும்படியாக, சுவாசத்தை இழுத்துக் கொண்டிருந்தேன், எட்டு மணி வரையில்; அதனால் கொஞ்சம் குணமாக சற்றுப் பேச முடிந்தது. உடனே கொஞ்சம் சந்தோஷப் பட்டவனாகி, ஜனங்கள் வந்துசேருவதற்கு முன், டிராப் படுதாவை எடுக்கச் சொல்லி, நான் நாடகத்தில் பேச வேண்டிய சில வார்த்தைகளைப் பேசிப்பார்த்தேன். வெளியிலிருந்து நான் கேட்டுப் பார்க்கச் சொன்ன சில நண்பர்கள் “பெரிதல்ல, சுமாராகக் கேட்கிறது” என்று சொன்ன பிறகு கொஞ்சம் மனத் தேர்ச்சியடைந்தேன். “ஊமைக்கு உளறுவாயன் உற்பாத பிண்டம்” என்னும் பழமொழிக்கிலக்காய் சந்தோஷப்பட்டேன். அதன் பிறகுதான் என் வேஷத்தைத் தரித்தேன். அப்பு, என் முகத்தில் வர்ணம் தீட்டும்பொழுதும் என் நோய்க்குக் கைகண்ட ஒளஷதமாகிய தணல் சட்டியையும் ஊது குழாயையும் விடவில்லை! அன்றிரவு நான் மேடையின் மீது நடித்ததெல்லாம், ஏதோ ஒரு பயங்கரமான கனவைக் கண்டது போல் இருக்கிறது. நாடகம் நடித்த பொழுது, மேடையின்மீது என். பாகம் ஆனவுடன், ஒவ்வொரு காட்சியிலும் விரைந்து போய் தணல் சட்டி பக்கத்தில் உட்கார்ந்து, ஊதுகுழாயால் புகையைத் தொண்டையிற் படும்படி இழுத்துக்கொண்டிருந்தேன். வெளியிற் போய் எனது குரல் கேட்கிறதா என்று பார்த்துவந்த என் நண்பர்கள் சுமாராகக் கேட்கிறது என்று என்னை உற்சாகப்படுத்திக் கொண்டு வந்தனர். இம்மாதிரியாக நான் வரும்படியான முதல் மூன்று காட்சிகளையும் கடந்தேன். நான் வரும்படியான நான்காவது காட்சியில், அதாவது “தோட்டக் காட்சியில்” நான் கோபத்துடன் பேச வேண்டியது அவசியமாயிருந்தபடியால், என் முழு சக்தியைக்கொண்டு கூவ வேண்டியதாயிற்று. அப்படிச் செய்யவே, அப்பிரயத்தனத்தினால், மறுபடியும் என் குரல் போகும் போலிருந்தது. இதற்கப்புறம், எனக்கு மிகவும் கஷ்டமான, நான் முன்பே பன்முறை குறித்துள்ள “இரும்புச் சங்கிலிக் காட்சி” வருகிறது. இக்காட்சியில் எப்படியாவது என் குரல் சரியாக இருக்க வேண்டுமென்று கோரிக்கொண்டிருந்தேன்.
இதில் நான் தவறுவேனாயின், நாடகம் அதோகதியாய் விடுமே என்று மிகவும் பயந்தவனாய், அந்தக் காட்சியில் நான் மேடைக்குப் போகுமுன், அதுவரையில் நான் உட்கொண்ட மாத்திரைகள் தவிர மிகுதியாயிருந்த மாத்திரைகள் அவ்வளவையும், வாயில் போட்டுக்கொண்டு நெறநெறவெனக் கடித்து விழுங்கிவிட்டு, அக்காட்சியில் சங்கிலிகளால் கட்டப்பட்டவனாய், மேடையின்மீது குதித்து, நான் ஆக்டு சரியாக நடிக்க வேண்டும் என்கிற ஒரு எண்ணம் தவிர வேறொன்றையும் கவனியாதவனாய், என் முழு பலத்தைக்கொண்டு உரக்கப் பேச ஆரம்பித்தேன்; இந்தக் காட்சியில் இவன் குரல் எப்படியாகுமோ என்று சந்தேகப்பட்டுக்கொண்டிருந்த எனது நண்பர்கள் எல்லாம் சம்பந்தத்திற்குப் பழைய குரல் வந்துவிட்டது என்று சந்தோஷப்பட்டவர்களாய்க் கரகோஷம் செய்தனர். நான் ஆக்டுசெய்தது நன்றாயிருந்ததென, வந்திருந்த ஜனங்களும் அங்ஙனமே செய்தனர் என்று நினைக்கிறேன். சாதாரணமாக நான் மேடையில் நடிக்கும் பொழுது வந்திருக்கும் ஜனங்கள் அதை நன்றாயிருக்கிறதென ஆமோதிக்கிறார்களா இல்லையா என்பதை நான் கவனிப்பதேயில்லை. ஆயினும் அன்று நான் அதை மிகவும் கவனித்தேன் என்றே சொல்லவேண்டும். சபையோர்களது கரகோஷமானது எனக்கு உற்சாகத்தைத் தந்தது. நான் புசித்த மாத்திரைகளின் பலன் பாதி, சபையோரின் உற்சாகம் பாதி, என்னை அக்கஷ்டமான காட்சியை நன்றாக நடித்து முடிக்கும்படியாக உந்தியதென நான் கூற வேண்டும். இந்த இரும்புச் சங்கிலிக் காட்சியின் முடிவில் மனோஹரன் மூர்ச்சையாகிறான் என்று நாடகத்தில் எழுதியுள்ளேன். நான் அன்றிரவு நடித்தபொழுது, வாஸ்தவமாகவே மூர்ச்சையாகினேன் என்றே நான் உரைத்திடல் வேண்டும். அக்காட்சி முடிந்து திரை விழுந்ததும், எனது நண்பராகிய சாரங்கபாணி முதலியாரும் இன்னும் இரண்டு மூன்று ஆக்டர்களும் என்னை அப்படியே தூக்கிக் கொண்டு போய்ச் சோபாவின்மீது வளர்த்தியதாக, எனக்குக் கனவு கண்டது போலிருக்கிறது. இதன் பிறகு நாடகம் முடியும் வரையில் நான் இரண்டு காட்சிகளில்தான் நடிக்கவேண்டி யிருந்தது. அக்காட்சிகளில் நான் பேசின வார்த்தைகள் அரங்கத்தின் மீதிருந்தவர்களுக்கே கேட்டிராது என்று நினைக்கிறேன். முந்தைய காட்சியில் நான் பட்ட சிரமத்தினால் என் குரல் அடியோடு அற்றுப் போய் விட்டது! அன்றிரவு இந்நாடகம் முடிந்த பொழுது என் மனத்தில் தோன்றிய ஓர் எண்ணத்தை இங்கெழுதுகிறேன். எங்கள் சபையில் ஒவ்வொரு நாடக முடிவிலும் “கல்லார்க்கும் கற்றவர்க்கும்” என்னும் இராமலிங்க ஸ்வாமிகளின் திவ்யமான பாட்டொன்றைப் பாடி மங்களம் பாடுவது வழக்கம். இவ்வழக்கம் இதுவரையில் இடைவிடாது வழங்கி வருகிறது. எங்கள் சபை உலகிருக்குமளவும் அப்படியேயிருக்குமெனக் கோருகிறேன். இந்த வழக்கப்படி, மனோஹரன் நாடகம் அன்றிரவு முடிந்த உடன், எல்லா ஆக்டர்களும் வரிசையாக நின்று “கல்லார்க்கும் கற்றவர்க்கும்” எனும் பாட்டைப் பாட ஆரம்பித்தோம். இப்பாட்டை அறிந்தவர்கள் தெய்வ வணக்கமான பாட்டுகளுள் இது ஒரு மிகவும் உருக்கமான பாட்டு என்பதை அறிவார்கள்; இந்தப்பாட்டை மற்றவர்களுடன் கூடி நான் பாடும்பொழுதுதான், அன்று காலை எழுந்தது முதல் அதுவரையில், என்னைப் படைத்த ஈசனை நான் தொழவில்லை என்பது எனக்கு ஞாபகம் வந்தது! எனது பத்தாம் வயது முதல், என் தாயார் ஒரு நாள் எனக்கு உபதேசித்தபடி, குறைந்தபட்சம், போஜனங்கொள்ளுமுன், இரண்டு முறையாவது பகல் இரவில், சுவாமியைத் துதிக்காத நாளில்லை. நோயாயிருக்கும் காலத்தில்கூடப் பத்தியம் செய்யு முன் ஈசனைப் பிரார்த்தித்து விட்டே அதைக்கொள்வது என் வழக்கம். அப்படியிருந்தும் அன்று ஒரு நாள் காலை முதல் அது வரையில் ஈசனை நினைத்தவனன்று! என் தொண்டையிருந்த ஸ்திதியில் நாடகத்தில் எப்படி நடிக்கப் போகிறோமென்று கவலையுற்று, அதைச் சரிப்படுத்துவதற்கு விருதாவாக அநேகம் வழிகளைத் தேடினேன்: இரண்டு வைத்தியர்களை நாடினேன். அதை வாஸ்தவத்தில் சரிப்படுத்தக்கூடிய ஈசன் இணையடியை நாட மறந்தேன்! இப்பொழுது அதை நினைத்துப் பார்க்கும்பொழுது அன்று நான் பட்ட கஷ்டம், நான் செய்த பிழைக்குச் சரியான தண்டனையென்றே தோன்றுகிறது. அன்றுடன் போகாமல், நான் அளவுக்கு மிஞ்சி அதிகமாய் உட்கொண்ட மாத்திரைகளின் குணத்தினால், இரண்டு நாட்கள் வரையில் உடம்பெல்லாம் சூடாகி மிகவும் கஷ்டப்பட்டேன்.
மறுநாள் காலை எழுந்ததும் என் குரல் சரியாகிவிட்டது! ஈசன் செயலை அறிந்தார் யார்? காலையில் என் பழைய வழக்கப்படி ஈசனைத் தொழுத பின், இனி பிராந்தி முதலிய வஸ்துக்களை என் உயிருள்ளளவும் தீண்டுவதில்லை என்று அவர் முன்னிலையில் பிரமாணம் செய்து கொண்டேன். அன்று செய்த பிராமணத்திலிருந்து இன்றளவும் மனப்பூர்வமாய்த் தவறினவன் அன்று.
மேற்சொன்னபடி அன்று நான் என் தொண்டையைச் சரிப்படுத்துவதற்காக அரை அவுன்ஸ் பிராந்தியைச் சாப்பிட்டதும் அதனால் அடைந்த பலனையும் இவ்வளவு விவரமாய் நான் எழுதுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. இது எனக்கு அவமானத்தைத் தரும்படியான விஷயமே. ஆயினும் எனது நாடக மேடை அனுபவங்களை யெல்லாம் ஒன்றும் விடாது உண்மையை வெளியிட வேண்டும் என்னும் அவாவினாலும், மேலும் இதனால் இதை வாசிப்பவர்களுக்கு இது ஒரு சிறிது நற்புத்தியைப் புகட்டும் என்னும் காரணத்தினாலும் இதை வெளியிட்டுள்ளேன். தென் இந்தியாவில் எனக்குத் தெரிந்தவரையில், அநேகம் ஆக்டர்கள், அநேக நூற்றாண்டுகளாக மதுபானம் செய்து வரும் இங்கிலாந்து முதலிய தேசத்துப் பிரபல வைத்தியர்கள் அநேகர் மதுபானம் கூடாதென்றும் அதனால் ஒரு நற்பயனும் கிட்டாது என்றும் போதித்து வந்த போதிலும், நமது தேசத்திலிருக்கும் இந்த ஆக்டர்கள், கொஞ்சம் மதுவை உட்கொண்டால் உடம்பிற்கு நல்லது, முக்கியமாகத் தொண்டைக்குப் பலன் கொடுத்து, நம்மை நன்றாய்ப்பாடவும் ஆக்டு செய்ய உதவும் என்று நம்பி மோசம் போகிறார்கள்.
முக்கியமாக நாடகமாடுவதையே ஜீவனமாக உடைய ஆக்டர்கள் பெரும்பாலார், இவ்வழக்கத்தை மேற்கொண்டு குடியர்களாகி விரைவில் கெட்டழிகின்றனர் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே. அன்றியும், ஆமெட்சூர் (Ameteurs) என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கும், வேடிக்கை வினோதத்திற்காக நாடகமாடும் கற்றறிந்தவர்களுள்ளும் சிலர், கொஞ்சம் மதுவைச் சாப்பிடுவதனால் குரல் விருத்தியடைகிறது என்னும் கெட்ட தவறான அபிப்பிராயத்தை உள்ளவர்களா யிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அவ்வாறு எண்ணுபவர்களெல்லாம் நான் அரை அவுன்ஸ் மதுவையுண்டு, அதனால் பட்ட பலனையும், கஷ்டத்தையும், பிராயச்சித்தத்தையும் படித்தறிந்தாவது அத் தவறான எண்ணத்தை விட்டொழிவார்களென்று கோரியே இதை இவ்வளவு விரிவாக எழுதலானேன். இதை வாசிக்கும் அநேகருள் ஒருவனாவது, இனிமேல் தான் மதுவை எக்காரணத்தினாலும் தீண்டுவதில்லை என்று பிரமாணம் செய்துகொண்டு அதன்படி நடந்து வருவதானால், ஈசனுக்கு, என்னைப் படைத்ததற்கு நான் செய்ய வேண்டிய கைம்மாறில், ஒரு கூறு செலுத்தினவனாவேன்!
இனி நாங்கள் பெங்களூரில் ஆடிய இரண்டாவது நாடகமாகிய “சாரங்கதரனை”ப் பற்றி எழுதுகிறேன்.
இந்த நாகடத்திற்கு அது வரையில் ஒரு ஒத்திகையும் நடக்கவில்லை என்பதை முன்பே குறித்துள்ளேன். வருகிற பொழுது ரெயில் வண்டியில் ஆக்டர்களுக்கு நான் படித்துக் காட்டியது தான். இதைப்பற்றி எங்களுடன் வந்த, தெலுங்கு வகுப்பைச் சார்ந்த ஒருவர் (அவர் பெயரைக் காட்ட இஷ்டமில்லை) கண்டக்டராகிய திருமலைப் பிள்ளையிடம் போய் குறை கூறிக்கொண்டாராம். அவர் நாகடத்திற்கு முந்திய நாள் என்னிடம் வந்து “என்ன சம்பந்தம்? சாரங்கதராவில் இன்னும் ஒருவரும் பாடம் படிக்கவேயில்லையாமே” என்று கேட்டார். அதன் மீது நான் “எல்லாம் சரியாகப் படித்திருக்கிறார்கள். “நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம்” என்று பதில் உரைக்க, “ஆனால் இன்றையத் தினம் சாயங்காலம் நான் ஒத்திகை பார்க்க வேண்டும்” என்று சொன்னார். அதன் மீது என் ஆக்டர்களையெல்லாம் ரகசியமாக அழைத்து நடந்ததைக் கூறி “எப்படியாவது என் வார்த்தையை நீங்கள் காப்பாற்ற வேண்டும்; கூடுமாவனரையில் உங்கள் பாடத்தைப் படித்து வையுங்கள்; இன்று சாயங்காலம் ஒத்திகையில் ஏதாவது மறந்து போனால் நான் சொல்லிக் கொடுக்கமாட்டேன், சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி உங்கள் சொந்த வார்த்தையை உபயோகித்துக் கொண்டு, பூர்த்தி செய்து விடுங்கள்; உங்கள் பாடம் சரியா வராது என்பதை மாத்திரம் காட்டிக் கொடுக்காதீர்கள்” என்று சொன்னேன். அதன்மீது எனது நண்பர்களெல்லாம் கூடியமட்டும் தங்கள் வசனங்களைச் சரியாகப் படித்து வைத்தார்கள். பாட்டுகளுக்கு மாத்திரம் முன்பே ஒத்திகை செய்திருந்தேன். முன்பு மனோஹரன் நாடகத்திற்கே வேண்டிய பாட்டுகள் நான் கட்டக் கற்றுக் கொண்டேன். ஆகவே வேறொருவர் உதவியின்றி, இந்நாடகத்திற்கும் சென்னையிலிருக்கும் பொழுதே பாட்டுகளைக் கட்டிக் கொடுத்திருந்தேன். முக்கியமாக இந் நாடகத்தில் பாடினவர்கள் சுமந்திரன் வேஷம் தரித்த ரங்கசாமி ஐயங்காரும், ரத்னாங்கி வேஷம் தரித்த அ. கிருஷ்ணசாமி அய்யருமே.
சாயங்காலம் ஒத்திகை ஆரம்பிக்குமுன் என் சூழ்ச்சி எங்கு வெளியாகி விடுகிறதோ என்று நாடகம் எழுதியிருந்த புஸ்தகத்தை மெல்ல ஒளித்து வைத்துவிட்டேன். திருமலைப் பிள்ளை வந்து உட்கார்ந்தவுடன், “புஸ்தகம் எங்கேயோ இருக்கிறது. புஸ்தகத்தின் உதவியில்லாமலே ஒத்திகை நடத்துகிறோம் பாருங்கள்!” என்று சொல்லிக் கிருஷ்ணசாமி ஐயர், ரங்கசாமி ஐயங்கார், ஜெயராம் நாயகர், துரைசாமி ஐயங்கார், நான் முதலிய முக்கியமான ஆக்டர்கள் வரும் காட்சிகளை முதலில் எடுத்துக் கொண்டு, பரபரவென்று ஒத்திகை நடத்தினேன். இரண்டு மூன்று முக்கியமான காட்சிகளைப் பார்த்தவுடன் திருமலைப் பிள்ளை அவர்கள் நாங்கள் பாடம் படிக்கவில்லை என்று குறை கூறியவரைத் திரும்பிப் பார்த்து, “என்ன, ஒருவரும் பாடம் படிக்கவில்லை யென்று சொன்னாயே, எல்லாம் மிகவும் நன்றாய்ப் படித்திருக்கிறார்களே!” என்று கோபித்து மொழிந்து விட்டு, “எல்லாம் சரியாக இருக்கிறது, ஆக்டர்களை யெல்லாம் அதிகமாக அலட்டாதே” என்று சொல்லிவிட்டு ஏதோ அலுவலாக வெளியில் போய்விட்டார். எப்படி முடியுமோ எவ்று பயந்து கொண்டிருந்த நான் மிகவும் சந்தோஷப் பட்டேன் என்றே சொல்ல வேண்டும்; திருமலைப் பிள்ளை தலை மறைந்தவுடன், என்னுடைய நண்பர்களெல்லாம், எங்கள் மீது குறைகூறிய அங்கத்தினரைச் சூழ்ந்து கொண்டு, ஏளனம் செய்ய ஆரம்பித்தனர். நான் அவர்களைத் தடுத்து, “இவர் நமக்கு நன்மையே செய்தார். இவர் இவ்வாறு குறை கூறியில்லாவிட்டால், நாம் எல்லாம் நமது பாகங்களை இவ்வளவு விரைவில் கஷ்டப்பட்டுப் படித்திருப்போமா?” என்று சொல்லி எல்லோரையும் சமாதானம் செய்து வைத்தேன். வாஸ்தவத்தில் அவர் எங்களுக்குத் தீங்கிழைக்கப்போய் அது எங்களுக்கு நன்மையாகவே முடிந்தது.
எங்கள் இரண்டாவது நாடகமாகிய “சாரங்கதரன்,” முதல் நாடகத்தைவிட மிகவும் நன்றாயிருந்ததெனப் பார்த்தவர்கள் சொன்னார்கள். முதல் நாடகத்திற்கு வந்திருந்தவர்கள், நன்றாயிருக்கிறதெனத் தங்கள் நண்பர்கள் முதலியோருக்குத் தெரிவிக்க, இரண்டாவது நாடகத்திற்கு முதல் நாடகத்தைவிட ஏராளமான ஜனங்கள் வந்திருந்தனர். முதல் நாடகத்திற்கு எனக்கு ஞாபகம் இருக்கிறவரையில் 150 ரூபாய்தான் வசூலாகியது. இரண்டாவது நாடகத்திற்கு 250 ரூபாய்க்குமேல் வசூலாகியது. அந்த கப்பன் நாடகசாலை மிகவும் பெரியதல்ல; ஆகவே, நாடகசாலை முழுவதும் ஜனங்கள் நிரம்பியிருந்தனர். அன்றியும் ஆரம்ப முதல் கடைசிவரையில் ஒவ்வொரு காட்சியிலும் சபையோர்கள் கரகோஷம் செய்து தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்தனர்.
இனி ஒவ்வொரு ஆக்டரும் நடித்ததைப்பற்றிச் சிறிது எழுதுகிறேன். முதலில் சித்ராங்கியாக வேடம் பூண்ட ஜெயராம் நாயகர் மிகவும் நன்றாய் நடித்தார்; இந்தப் பாகம் அவர் மேடையில் நடிக்கும் திறத்திற்கு மிகவும் பொருந்தியதாயிருந்தது. ஒன்றிரண்டு பாட்டுகள் பாடினாரோ இல்லையோ எனக்கு ஞாபகமில்லை. இந்த சித்ராங்கி பாகத்தில் பின் வந்தவர்களெல்லாம் அநேகம் பாடல்கள் பாடியிருக்கின்றனர். இவர் பாட்டு அதிகமில்லாமல் வெறும் வசனத்தினால் எல்லோரையும் சந்தோஷிக்கச் செய்தது மிகவும் மெச்சத்தக் கதே. எனது நண்பராகிய ஜெயராம் நாயகர் எங்கள் சபையில் ஸ்திரீ வேஷம் தரித்தது இதுதான் கடைசி முறை. அவரது தந்தையார் இனி நீ ஸ்திரீ வேஷம் தரிக்கக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தபடியால், இதுதான் கடைசி முறை சங்கத்தில் ஸ்திரீ வேஷம் தரிக்கப் போகிறது என்பதை அறிந்தவராய், அன்றிரவு, தன் முழுசாமர்த்தியத்தைக் கொண்டு சித்ராங்கியாக நடித்தனர். அவரது வசனங்களில் முக்கியமான பாகங்களிலெல்லாம் சபையோர் கரகோஷம் செய்து ஆமோதித்தனர் என்று நான் கூற வேண்டும்.
அன்றிரவு ஸ்திரீ வேஷம் தரித்தவர்களுக்குள் இரண்டாவதாக அ. கிருஷ்ணசாமி ஐயரைக் கூறவேண்டும். இவர் அன்று சாரங்கதரன் தாயாராகிய ரத்னாங்கிதேவியாக நடித்தார். அப்பொழுது இவர் நல்ல யௌவனத்திலும் தேகபலத்திலும் இருந்தார்; இவருடைய உருவமும் மிகவும் மெச்சத்தக்கதாயிருந்தது. சங்கீதமும் மிகவும் மெச்சத்தக்கதாயிருந்தது. இவர் எங்கள் சபையின் நாடகங்களில், தமிழிலும் தெலுங்கிலும் பல ஸ்திரீ வேஷங்கள் தரித்திருக்கின்றனர். அவற்றுள் ரத்னாங்கி தேவி ஒரு முக்கியமானதெனக் கூற வேண்டும். சோகபாகத்தில் இவர் சபையோரையெல்லாம் கண்ணீர் விட்டழச் செய்தார் என்பதற்கு ஐயமில்லை.
இந் நாடகத்தில் ஸ்திரீ பாகம் இன்னொன்றுதான். அது “மதனிகை"யெனும் தோழியின் பாகமாம். இதை நான் முன்பே குறித்தபடி, தற்காலம் திருநெல்வேலி ஜில்லாவில் அட்வோகேட்டாக இருக்கும் சாதுகணபதி பந்துலு எடுத்துக் கொண்டார். அன்றிரவு இவர் இந்த வேஷம் தரித்தபொழுது நடந்த ஒரு சிறிய விருத்தாந்தத்தை இங்கு எழுதுகிறேன். முன்பே என் நண்பர்களுக்கு நான் தெரிவித்திருக்கிறபடி எங்கள் சபையில் அக்காலம் புடவைகளில்லாதபடியால், ஒவ்வொரு ஸ்திரீ வேஷதாரியும் தான் கட்டிக்கொள்ளப் புடவைகள் எங்கேயாவதிருந்து கொண்டு வரும்படி நேர்ந்தது. இப் பழக்கத்தின்படி சாதுகணபதி பந்துலு அவர்கள், தனது சிநேகிதர்களைக் கேட்டு இரண்டு புடவைகள் வாங்கிக்கொண்டு வந்தார்; அதில் ஒன்று அதிக விலையுயர்ந்ததும் அழகமைந்தது மாயிருந்தது; அதை அவர் கட்டிக்கொண்டிருக்கும்பொழுது பார்த்த ஜெயராம் நாயகர், என்னிடம் வந்து, “என்ன சம்பந்தம்! சித்ராங்கியைவிட, அவள் பாங்கி அதிக விலையுயர்ந்த புடவையைக் கட்டிக் கொள்ளலாமா?” என்ற மெல்லக் கேட்டார். இதையறிந்த - நான் சாதுகணபதி பந்துலுவிடம் போய், ராஜகுமாரியைவிட அவளது பாங்கி அதிக விலை உயர்ந்த சேலையைத் தரிப்பது உசிதமல்லவென்று நியாயம் எடுத்துக் கூற, கற்றறிந்த புத்திமானாதலால் பந்துலு அவர்கள் உடனே அதைக் களைந்துவிட்டு, சாதாரணப் புடவையொன்றை உடுத்திக்கொண்டதுமன்றி, விலையுயர்ந்த சேலையை, சித்ராங்கி கட்டிக் கொள்ளட்டும் என்று ஜெயராம் நாயகரிடம் கொடுத்துவிட்டார். இவ்வாறு செய்த பந்தலு அவர்களின் குணத்தை நாங்கள் எல்லோரும் மெச்சினோம். இந்த சொற்ப விஷயத்தை இவ்வளவு சவிஸ்தாரமாக நான் என் எழுதவேண்டும் என்னும் சங்கை இதை வாசிப்பவர்களுக் குண்டாகலாம். இதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அநேக நாடக சபைகளில் (முக்கியமாக ஆமெட்சூர் சபைகளில்) ராஜகுமாரியைவிட, அவளது பாங்கி அதிக விலையுயர்ந்த நகைகளையும், சேலைகளையும் தரிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ராஜகுமாரியைவிட, அவளது பாங்கி அதிக விலையுயர்ந்த ராஜகுமாரி வேஷம் பூணும் ஆக்டர் கொஞ்சம் எளியவனாயிருப்பான். அவனுக்கு நகைகளையும் உயர்ந்த சேலைகளையும் இரவல் கொடுப்பார் ஒருவரு மில்லாதிருப்பார்கள்; அந்த ராஜகுமாரியின் பாங்கி வேஷம் பூணும் ஆக்டர், செல்வந்தனாயிருப்பான்; அவனுக்கு விலையுயர்ந்த நகைகளும் சேலைகளும் எளிதில் கிடைக்கக் கூடியதாயிருக்கும்; இதனால் இவர்களிருவரும் மேடையின் மீது வந்தவுடன், பாங்கியை ராஜகுமாரி யென்றும், ராஜ குமாரியைப் பாங்கி யென்றும் எல்லோரும் சந்தேகிக்க இடமுண்டாகும்! இப்படிச் செய்வது தவறு. இதைக் கற்றுணர்ந்த நமது ஆக்டர்கள் தவிர்க்க வேண்டுமென்றே, மேற்கண்ட விஷயத்தைச்சற்று விவரமாய் எழுதலானேன். ஒரு முறை எங்கள் சபையிலே, சிலவருஷங்களுக்கு முன், தசராக் கொண்டாட்டத்தில் ஒரு நாள், ஒரு கோமுட்டிசெட்டியார், ஸ்திரீ வேஷம் தரிக்கவேண்டும் என்று கோரினவராய் அநுமதி பெற்று லட்சக்கணக்கான விலையுயர்ந்த நகைகளையும், மத்தாப்பு சேலையும் அணிந்து, மேடையின்மீது பாங்கியாய்த் தோன்றினார்; வந்திருந்த அங்கத்தினரெல்லாம் கொல் என்று நகைத்துவிட்டனர்! அதனால் அவர் வெட்கப்பட்டு, மறுபடியும் அரங்கத்தின்மீது ஏறவேயில்லை! நான் சொல்ல வந்ததன் முக்கியக் கருத்தென்னவென்றால், நாடகங்களில் என்ன வேடம் தரித்தபோதிலும் அந்த வேடத்திற்குத் தக்கபடிதான் ஆடையாபரணங்களை அணிய வேண்டுமேயொழிய, நமக்குக் கிடைக்கிறதேயென்று அதிகமாய் அணிவது பெரும் தவறாகும் என்பதே.
ஆண் வேடம் தரித்தவர்களுக்குள் சுமந்திரனாகத் தோன்றிய எம். வை. ரங்கசாமி ஐயங்கார் அன்றிரவு மிகவும் நன்றாய் நடித்தார். இவரது இனிய குரலினாலும் சங்கீதப் பயிற்சியினாலும், சபையோரை மிகவும் ரமிக்கச் செய்தார். இவர் அச்சமயம் சுமந்திரனாக நடித்தபொழுது நடந்த ஒரு சம்பவத்தை இங்கு வரைய விரும்புகிறேன். இந்நாடகத்தில் புறா விடுகிற காட்சி ஒரு முக்கியமான காட்சியென்று இதைப் படித்தவர்கள் அனைவரும் அறிவார்கள். ஆகவே, சாரங்கதரனுக்கொன்றும், சுமந்திரனுக்கொன்றுமாக இரண்டு புறாக்களை வாங்கி, இராத்திரி உபயோகிப்பதற்காக ஒரு கூண்டில் அடைத்து வைத்திருந்தோம். இந்தக் காட்சி வந்தவுடன், சாரங்கதரனாகிய நான், விதூஷகனாக என்னுடன் நடித்துக் கொண்டிருந்த துரைசாமி ஐயங்காரை எங்கள் இருவருடைய புறாக்களையும் கொண்டு வரும்படி கட்டளையிட, அவர் உள்ளே போய் ஒரு புறாவை மாத்திரம் கொண்டு வந்து என் கையில் கொடுத்து, என் காதில் மற்றொரு புறா கூண்டில் இறந்து கிடப்பதாக மெல்லத் தெரிவித்தார்! இறந்த புறாவைக் கொண்டு எப்படிப் பந்தயம் விடுவது? நான் உடனே, “என்ன விதூஷகா? சுமந்திரன் புறாவை என்னிடம் கொடுத்தாயே!” என்று சொல்லி, அப்புறாவை ரங்கசாமி ஐயங்காரிடம் கொடுத்துவிட்டு, நான் உள்ளே சென்று மடிந்து கிடக்கும் புறாவைக் கையிலெடுத்துக் கொண்டு மரித்துப்போனதை ஒருவரும் அறியாதபடி வைத்திருந்து, ஆகாயத்தில் விடுவதுபோல, சைட் படுதாவுக்குப் போய் விட்டுவிட்டு வந்தேன்! வேறு நான் என்ன செய்வது? இறந்த அப்பட்சியைத் தொடுவதற்கே பிராம்மணராகிய துரைசாமி ஐயங்கார் சங்கோசப்பட்டார் என்றால், அதைக் கையில் வைத்திருந்து பிறகு அதைப்பந்தயம் விடுவதற்கு, அவரை விட வைதீகரான எம்.வை. கோபால்சாமி ஐயங்கார் எப்படி ஒப்புவார்? அந்தப் புறா பெங்களூரில் அப்பொழுது இருந்த குளிர்ச்சியினாலோ வேறெக் காரணத்தினாலோ இறந்து எங்களுக்கு இவ்வளவுகஷ்டத்தை விளைத்தது. இந்நாடகத்தை ஆட விரும்பும் என் இளைய நண்பர்கள் புறா விடுவதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமிருக்கிறது. புறாவைப் பந்தயத்திற்காக விடுபவர்களும் ஒரு புறாவைக் கையிலெடுப்பதென்றால், அதன் இரண்டு கால்களையும் சற்று மடக்கி, ஒரு மாதிரியாகப் பிடிக்கவேண்டும். இல்லாவிட்டால் புறாவிற்கு ஹிம்சையாவதுண்டாகும் அல்லது அது எளிதல் கையினின்றும தப்பிப் பறந்தாவது போய்விடும். மற்றவர்கள் இந்த நாடகத்தை நடத்தும்பொழுது, இக்காட்சியில் அநேகம் ஆக்டர்கள் புறாக்களைத் தவறாகப் பிடித்துக் கொண்டு மேடையின்மீது வந்து கஷ்டப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அன்று காலை அப்புவிடமிருந்து புறாக்களைக் கையில் எப்படிப் பிடிப்பது என்பதை நான் கற்றுக்கொண்டபடி, இந்நாடகத்தையாட. விரும்புவோர், புறாக்களுடன் பழகியவர்களிடமிருந்து தெரிந்து கொள்வார்களாக. செய்வன திருந்தச் செய்ய வேண்டும். ஆகவே இது ஓர் அல்ப விஷயமாயிருந்த போதிலும், இதையும் சற்று தக்கபடி நடத்த வேண்டும். இல்லாவிடில் புறாவைவிடும் ரசிகன் எவனாவது நாடகத்தைப் பார்க்க வந்திருந்தால், செய்தது! தவறெனக் கண்டுபிடித்து விடுவான்; அவன் மனம் கசந்து போகும்; அதற்கு இடங்கொடுக்கலாகாது.
விதூஷனாகிய “சுந்தரகன்” என்பவனாகத் தோன்றிய எம். துரைசாமி ஐயங்கார் அவர் விரும்பியபடி நாடக ஆரம்ப முதல் ஏறக்குறைய கடைசிக் காட்சி வரையில் அவருக்கு வேலையிருந்தபடியால், தனது பாகத்தை மிகவும் நன்றாய் நடித்து, சபையோரையெல்லாம் விடா நகைப்புடையவராக்கினார். இவர் சில வருஷங்களுக்குமுன் இளவயதிலேயே காலமானார். அது வரையில் தமிழிலும் தெலுங்கிலும் எங்கள் சபையில் அநேகம் ஹாஸ்ய பாகங்களில் இவர் நடித்திருந்தனர். இவற்றுளெல்லாம் அவரே மிக விரும்பியது இந்தச் சுந்தரகன் பாகமே. இவரிடமிருந்த ஒரு முக்கியமான நற்குணம் என்ன வென்றால், ஹாஸ்ய பாகங்களில் ஒரு முறை இதை இப்படி நடிக்க வேண்டுமெனச் சொல்லிவிட்டேனாயின், மறுமுறை கூற வேண்டியதில்லை. அன்றியும் நாடகத்தில் எழுதியிருப் பதற்குமேல் ஒரு வார்த்தையும் பேசமாட்டார். ஹாஸ்ய பாகங்களை நடிப்பவர்கள் இதை முக்கியமாகக் கவனிப்பார் களாக. எவ்வளவுதான் புத்தியுடையவர்களாயிருந்தபோதிலும், முக்கியமாக ஹாஸ்ய பாகங்களில் கிரந்த கர்த்தர் எழுதியதற்கு மேல் தங்கள் சுய புத்தியைக்கொண்டு; வேடிக்கையாய்ப் பேசுவது தவறு என்று ஷேக்ஸ்பியர் மஹாகவி ‘ஹாம்லெட்’ என்னும் அவரது மிகச் சிறந்த நாடகத்தில் குறித்திருக்கின்றார்.
மேற்சொன்ன துரைசாமி ஐயங்காருடன் ஹாஸ்ய பாகங்களில் இந்நாடகத்தில் சற்றேறக்குறைய எல்லாக் காட்சிகளிலும் கூட வந்தவர், மதுரகவி வேடம் பூண்ட ராஜ கணபதி முதலியாரே. இந்த மதுரகவியின் பாகத்தைப்பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். இப்பாத்திரம் இவருக்கு மிகவும் பொறுத்தமாயிருந்ததென நான் கூற வேண்டிய அவசியமில்லை. இவர், முன் நடந்த மனோஹரன் நாடகத்தில் வந்தனாக நடித்தார் என்பது என் நண்பர்களுக்கெல்லாம் ஞாபகமிருக்குமென நினைக்கிறேன். இந்த இரண்டு நாடகங்களிலும் இவரைக் கண்டவர்கள், பிறகு வெகுகாலம் வரையில் இவரைப் பார்க்கும்போதெல்லாம் “சந்தேகமில்லை!” என்றாவது, அல்லது “உங்கள் தகப்பனார் என்ன சொல்லுகிறார்?” என்றாவது இவரை ஏளனம் செய்துகொண்டிருந்தனர். இந்த வேடிக்கையை முதல் முதல் ஆரம்பித்தவர்கள், பெங்களூரில் இவரை நாடகமேடையிற் பார்த்த சில நண்பர்களே! சில வருஷங்கள் வரையில், தற்காலம் எங்கள் சபையில், வி.வி. சௌந்தரராஜ ஐய்யங்கார், கே. வரதாச்சாரியார், ஷண்முக முதலியார் மூவரும் எப்படி அடிக்கடி ஒன்றாய் ஹாஸ்ய பாகங்களில் வருகிறார்களோ அப்படியே அக்காலத்தில், துரைசாமி ஐயங்கார், ராஜ கணபதி முதலியார், ஷண்முகம் பிள்ளையாகிய மூவரும் ஒன்றாய் வந்து கொண்டிருந்தனர். இம்மூவருக்கென்றே, இரண்டு நண்பர்கள், சத்ருஜித் முதலிய நாடகங்களில் ஹாஸ்ய பாகங்களை நான் எழுதியிருக்கிறேன். ச. ராஜகணபதி முதலியார் எங்கள் சபையில் நன்றாய் நடித்த ஹாஸ்ய பாகங்களில் “மதுரகவி” ஒரு முக்கியமானதென்பது என் அபிப்பிராயம்.
நான் “சாரங்கதரனாக” நடித்ததும் நன்றாயிருந்ததென எனது நண்பர்கள் கூறினார்கள். நாடகம் பார்க்கவந்தவர்களும் அப்படியே அபிப்பிராயப்பட்டதாக நான் அறிந்தேன். மனோஹரன் நாடகத்தில் என் குரல் கம்மிப்போய் நாம் நன்றாய் நடிக்காதபடி கெட்டதே, இதிலாவது நற்பெயர் எடுக்கவேண்டு மென்று நான் பிரயத்தனப்பட்டேன். சாரங்கதர நாடகம் நடந்த நாள் என் குரல் செம்மையாகி விட்டபடியால், என் பிரயத்தனத்தில் நான் சித்தி பெற்றேன் என்றே எண்ணுகிறேன்.
என் பால்ய சிநேகிதராகிய ஸ்ரீனிவாசஐயங்கார், என்னிடம் ஏதாவது குறை இருந்தால் அதையெடுத்து அஞ்சாது கூறுபவர். அவர் பல வருஷங்களுக்கு முன் எங்கள் சபை நடத்திக்கொண்டு வந்து பிறகு நிறுத்திவிட்ட “இந்தியன் ஸ்டேஜ்” (Indian stage) என்னும் மாதாந்த பத்திரிகையில், அதுவரையில் நான் ஆடிய நாடகப் பாத்திரங்களைப் பற்றிச் சீர்தூக்கிக் கூறுங்கால், “சம்பந்தம் க்ஷயரோகம் பிடித்த யயாதியகவும், விளையாட்டின்மீதே கருத்துடைய பாலனாகிய சாரங்கதரனாகவும் நடித்ததுதான் என் மனத்திற்குத் திருப்திகரமாயிருந்தது” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த சாரங்கதர நாடகத்தைப் பெங்களூரில் ஆடிய பொழுது அதை முடித்த விதத்தைப்பற்றி நான் எழுதவேண்டிய திருக்கிறது. நான் எழுதி முடித்தபடி நாடகம் துக்ககரமாகவே முடிகிறது. சாரங்கதரன் கொலையுண்டதுடன் நாடகம் முற்றுப் பெறுகிறது. அப்படியே அச்சிட்டுமிருக்கிறேன். நாடகக் கதையை அச்சிட்டு, வந்தவர்களுக்கெல்லாம் கொடுத்தோம்; அதன்மீது அதைப் பார்த்தவர்கள் (ஏறக்குறைய எல்லோரும் என்றே சொல்ல வேண்டும்) “இதென்ன இது? நாடகம் சோகத்துடன் முடிவு பெறலாமா? இது சரியல்ல” என்று கூறினதாக, என்னிடம் எங்கள் சபை அங்கத்தினர் வந்து சொன்னார்கள். பெங்களூரில் எங்களுக்குப் புதிதாய் நட்பினரான, எங்கள் கிரீன் ரூமுக்குள் வரத்தக்க சிலரும், “ஆம்! ஆம்! வாஸ்தவம்தான். அதை எப்படியாவது மாற்ற வேண்டும்” என்று வற்புறுத்தினர். அதன் மீது எங்கள் கண்டக்டராகிய திருமலைப் பிள்ளையை நான் கேட்க, அவரும் “அத்தனை பேர்கள் சொல்லும் பொழுது அவர்கள் இச்சைப் படி நாடகத்தைசுபகரமாய் முடித்து விடுகிறதுதானே” என்றார். அதன் மீது அவர்கள் மனம் கோணாதிருக்கச் செய்ய வேண்டுமென்று எண்ணினவனாய், மடிந்த சாரங்கதரனை பரமேஸ்வரன் வந்து உயிர்ப்பித்ததாகச் சில வார்த்தைகளைச் சேர்த்து, சுபமாக முடியும்படி செய்தேன். நாடகம் பார்க்க வந்திருந்தவர்களும் சந்தோஷமாய்ச் சென்றனர். ஆயினும் அவ்வாறு நான் அவர்களது வேண்டுகோளுக்கிணங்கியது எனக்குத் தவறெனத் தோன்றுகிறது. சாரங்கதரன் இறக்க நேரிடுவதுதான் சரியானது. பெண்டிர்க்குப் பேதைமை யென்பது ஓர் அணிகலன் என நமது முன்னோர்கள் கூறியபோதிலும் ஆண் மக்களுக்கு அது உசிதமாகாது. அவன் அறியாத்தனம் அவனை ஹானியிற் படுத்தியது; தர்மலோபமன்று. அன்றியும் தன் உயிர்த் தோழனான சுமந்திரன் வார்த்தைகளைக் கேளாது அவன் சித்ராங்கியிருக்குமிடம் சென்றது பெருந்தவறாகும். அதற்கு அவன் தன் உயிரைக் கொடுத்துப் பிராயச்சித்தம் செய்ய வேண்டியது நியாயமே. பிறகு இந் நாடகத்தை, ஒரு முறையோ இரண்டு முறையோ, வெளியூர்களில் ஆடிய பொழுது, மேற்சொன்னபடி சுபமாய் முடித்தபோதிலும் பெரும்பாலும் துக்ககரமான முடிவுடனேயே இதை முடித்திருக்கிறேன். நான் எழுதிய நாடகங்களில் நான் ஆடிய நாடகப் பாத்திரங்கள், பிறகு எங்கள் சபையில் அநேகர் ஆடியிருக்கின்றனர். ஆயினும் இந்த சாரங்கதர நாடகப் பாத்திரம் மாத்திரம், வேறெவரும் இதுவரையில் தமிழில் ஆடியதில்லை . இதுவரையில் இந்த சாரங்கதர நாடகமானது எங்கள் சபையோராலும், இதர சபைகளாலும், என்னிடம் வைத்திருக்கும் கணக்கின்படி 198 முறை ஆடப்பட்டிருக்கிறது. இந்த நாடகமானது நான் எழுதியபடி நாடகமாடுதலையே ஜீவனமாக உடைய கம்பெனிகள் ஆடுகிறதில்லை. இதற்கு முக்கியமான காரணம், கதையை நான் முன்பு குறித்தபடி வேறுவிதமாக மாற்றியெழுதியதே என எண்ணுகிறேன்; ஆயினும் பல பாலநாடகக் கம்பெனிகள்மாத்திரம் இதை நான் எழுதியபடி பன்முறை நடித்திருக்கின்றனர். அவற்றுளெல்லாம் மதுரை ஜெகன்னாத ஐயர் கம்பெனி ஆடியதுதான் என மனத்திற்குத் திருப்திகரமாயிருந்தது. அக் கம்பெனியார் சென்னையில் இந்நாடக்தை முதல் முறை என் அனுமதியின்மீது நடித்தபொழுது என்னை வரவழைத்தார்கள். நானும் எனது நண்பராகயி சி. ரங்கவடிவேலும் போயிருந்தோம். அப்பொழுது சித்ராங்கியாக நடித்த குமாரசாமி என்னும் சிறுவன் சி. ரங்கவடிவேலு நடிப்பது போலவே நடித்தான். நான் இதைக் கண்டு ஆச்சரியங்கொண்டவனாய், “இச்சிறுவன் நீ சித்ராங்கியாக நடிக்கும் பொழுது எப்பொழுதாவது பார்த்திருக்கிறானா என்ன?"வென்று என் பக்கத்திலுட்கார்ந்திருந்த ரங்கவடிவேலுவை வினவ, ரங்கவடிவேலு புன்னகையுடன் “அப்படியில்லை. இவன் என்னிடம் வந்து பாடங் கற்றுக் கொண்டான். உங்களிடம் அதை இதுவரையில் ரகசியமாக வைத்திருந்தேன்” என்று விடை பகர்ந்தது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. இந்த ஜகன்னாத ஐயர் கம்பெனியில் சித்ராங்கி மாத்திரமன்று; சாரங்கதரனாக நடித்த நடேசனும் சுமந்திரனாக நடித்த சுப்பையா என்னும் சிறுவனும் இந்நாடகத்தை எங்கள் சபையில் நடத்துவது போலவே நடத்தினார்கள். இதற்குக் காரணம் என்னவென்று நான் விசாரித்ததில், நான் முன்பு கூறிய ம. கந்தசாமி முதலியார் என்பவர், இவர்கள் கம்பெனியைச் சேர்ந்து இவர்களுக்கு எங்கள் சபையில் இந்நாடகத்தை நடத்தும் முறையை யெல்லாம் கற்பித்ததாக அறிந்தேன். இந்த நாடகக் கம்பெனி யில் சில வருஷங்களுக்கு முன் முக்கியமான பாகங்கள் ஆடிக் கொண்டிருந்த சிலர் இளவயதிலேயே காலகதியடைந்தனர் என்பது இப்பொழுதும் எனக்குத் துக்கம் விளைவிக்கிறது.
பெங்களூரில் சாரங்கதர நாடகம் முடிந்தவுடன் நாங்கள் எல்லாம் மிகவும் சந்தோஷப்பட்டோம். அதற்கு முக்கியக் காரணம், வந்திருந்த ஜனங்கள் எல்லாம் நன்றாயிருந்ததெனக் கூறியதுமன்றி, அந்நாடகத்தில் அதிகப் பணம் வசூலானதே யாம். முதல் நாடகத்தைப் போல் குறைந்த வசூலாயிருந்தால், சபைக்கு நஷ்டமே ஆகியிருக்கும். பெங்களூருக்குப் போகக்கூடாது என்று ஆட்சேபித்த எதிர்க் கட்சியார் எங்களை ஏளனம் செய்திருப்பார்கள். அந்தப் பயமே எங்களுக்குப் பெரிதாயிருந்தது; சாரங்கதர நாடகத்தில் நல்ல வசூலான பின்தான் அந்த பயம் எங்களை விட்டகன்றது. மறுநாள் நாங்கள் விழித்தெழுந்தவுடன் வெங்கடகிருஷ்ண நாயுடும் நானுமாகத் தபால் ஆபீசுக்குப் போய் இந்த சந்தோஷகரமான சமாச்சாரத்தைத் தந்தி மூலமாகச் சென்னையிலுள்ள எங்கள் அங்கத்தினர்க்குத் தெரிவித்தோம். இந்த எங்கள் பெங்களூர்ப் பிரயாணம் ஈசன் கடாட்சத்தினால் சந்தோஷமாய் முடிந்ததற்காக நான் உவப்பை அடைந்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. சென்னையிலிருந்து வெளியூருக்குப் போய் ஒரு அமெடூர் (Amateur) நாடக சபை நடித்துப் பெயர் பெற்றது இதுதான் முதன் முறை; இப்படி நாங்கள் முதன் முறை வெளியூருக்குப் போனதில் ஏதாவது கெடுதியாய் முடிந்திருந்தால், எங்கள் சபையார் வெளியூருக்குப் போவதைப்பற்றி மறுபடியும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் என்பது திண்ணம். இந்தப் பெங்களூர்ப் பிரயாணம் நன்மையாக முடிந்தது, எங்கள் சபையோரை அடிக்கடி வெளியூருக்குப் போகும்படி உந்தியதுமன்றி, எங்கள் சபையைப் பார்த்து இதர நாடக சபைகளையும் அவ்வாறு செய்யும்படி உந்தியதென்ப தற்குச் சந்தேகமில்லை. இந்தப் பெங்களூர்ப் பிரயாணத்தினாலுண்டான இரண்டாம் நன்மை எங்கள் சபையைப்போன்று ஒரு தமிழ் நாடகச் சபை பெங்களூரில் ஏற்படுத்தப்பட்டதேயாம்.
எங்கள் சபையை நாங்கள் சென்னையில் 1891ஆம் வருஷம் ஸ்தாபித்தபொழுது தமிழ் நாடகமானது சென்னை ராஜதானியில் எங்கணும் விருத்தியடைய வேண்டுமென்பது எங்கள் முக்கியக் கருத்துகளில் ஒன்று என்று வெளிப்படுத்தியதற்குச் சரியாக, தமிழ் நாடகத்தை சென்னை ராஜதானியில் அபிவிருத்தி செய்வதற்கு இது மிகவும் அனுகுணமாயிருந்தது. பிறகு எங்கள் சபையார்பன்முறை, கொழும்பு, யாழ்ப்பாணம், கும்பகோணம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மாயவரம், திருவனந்தபுரம், மதுரை முதலிய இடங்களுக்கும் போயிருக்கிறார்கள். அவ்விடங்களிலெல்லாம் பெங்களூரில் நடந்தது போல் எங்களைப் பார்த்து எங்கள் சபையைப் போன்ற தமிழ் நாடக சபைகள் ஸ்தாபிக்கப்பட்டதே, எங்கள் சபைக்குப் பெரிய கீர்த்தியாகக் கொண்டாடுகிறேன். எங்கள் சபையின் நாடகங்களைப் பார்த்து, அவ்விடங்களிலெல்லாமிருந்த கற்றறிந்தவர்கள், நாடகமாடுவதில் தவறில்லையென்றும், அதில் நன்மையுண்டென்றும் அறிந்தவர்களாய், எங்கள் சபையைப்போன்ற சபைகள்ஸ்தாபித்திருக்கின்றனர். அச்சபைகளும், அச்சபைகளிலிருந்துண்டான கிளைச் சபைகளும் இன்னும் அந்த ஊர்களிலெல்லாம் வளர்ந்து வருகின்றன. அச்சபையோர்களெல்லாம், எங்கள் சுகுண விலாச சபையை, தாயச் சபையாக ஒப்புக்கொள்ளுகின்றாரென்று நான் உறுதியாய்க் கூறலாம். பெங்களூரில் மேற்சொன்னபடி ஸ்தாபிக்கப்பட்ட நாடக சபையானது எங்கள் சபையின் உத்தரவின்மீது அதன் கிளைச் சபையாகவே (Branch Sabha) ஸ்தாபிக்கப்பட்டது. இக் கிளையை ஸ்தாபித்து அதற்காக மிகவும் உழைத்தவர்கள் சி.கே. ஷண்முகராஜ செட்டியார், ராமாநுஜ முதலியார், கோவிந்தராஜ முதலியார், எம்.டி. நாராயணன், மகாதேவ முதலியார் முதலியவர்கள். மூன்று நான்கு வருஷங்கள் இக்கிளைச்சபை ஆடியிருக்கிறது. இவர்கள் முதல் முதல் ஆட ஆரம்பித்தபொழுது இவர்களுக்குள் ஸ்திரீவேஷம் தரிக்கத் தக்கவர்கள் இல்லாதிருந்தபடியால், சென்னையிலிருந்து, எங்கள் அங்கத்தினருள் ஒருவராகிய அ. கிருஷ்ணசாமி ஐயரைப் பன்முறை பெங்களூருக்கு நாடகமாட அனுப்பியிருந்தோம். சில வருஷங்களுக்குப் பிறகு இக் கிளைச்சபையானது யாது காரணம் பற்றியோ நசித்துவிட்டது. நான் சென்ற வருஷம் பெங்களூக்கு, அங்கு வாழ்க்கைப்பட்டிருக்கும் என் குமாரத்தியைப் பார்ப்பதற்காகப் போனபொழுது, விசாரித்ததில், பெங்களூரில் தமிழ்ச் சபைகள் ஒன்றும் இருப்பதாக அறிய வில்லை. இது எனக்கு மன வருத்தத்தை உண்டுபண்ணிற்று. பெங்களூரில் அனேக தமிழர்கள் குடியிருக்கின்றனர்; இருந்தும் கன்னட நாடக சபைகளும் ஆங்கில நாடக சபைகளும் இருக்கின்றனவேயொழிய தமிழ் நாடக சபையில்லை. அங்குள்ள தமிழ் அபிமானிகள் இக்குறையைச் சீக்கிரம் தீர்ப்பார்களென்று இதை எழுதலானேன்.
பதினோராம் அத்தியாயம்
பெங்களூரிலிருந்து நாங்கள் திரும்பி வந்தவுடன் எங்கள் முக்கியமான கோரிக்கை, அவ்விடம் நடித்துப் பெயர்பெற்ற சாரங்கதர நாடகத்தை சென்னையில் நடத்த வேண்டுமென்பதாயிருந்தது. அப்படியே நடத்த வேண்டுமென்று நிர்வாக சபையில் தீர்மானித்து, விக்டோரியா பப்ளிக் ஹாலுக்குப் பணம் கட்டி விட்டோம். கட்டின மறுதினம் ஒரு பெருங் கஷ்டம் நேர்ந்தது. சித்ராங்கியாக நடித்த ஜெயராம் நாயகருடைய தகப்பனார் எப்படியாவது இந்தக் கடைசிதரம் அவர் ஸ்திரீ வேஷம் தரிப்பதற்கு உத்தரவளிப்பார் என்று மூடத்தனமாய் எண்ணியிருந்தோம்; அவர் ஒரே பிடிவாதமாய் தான் மீசை எடுத்து விடுவதற்கு உடன் படமாட்டேன் என்று சொன்னதாக ஜெயராம் நாயகர் எங்களுக்கு மிக்க வருத்தத்துடன் தெரிவித்தார். ஹாலுக்குப் பணம் கட்டியாய் விட்டது. நாடகத்திற்கு இன்னும் ஒரு வாரம்தானிருந்தது. நாங்கள் இன்னது செய்வதென்று அறியாதவர்களாய்க் கலங்கிக் கொண்டிருக்கும் பொழுது, எங்களுடன் இருந்த அ. கிருஷ்ணசாமி ஐயர், “சம்பந்தம், உனக்கு ஆட்சேபணை யில்லாவிட்டால் நான் சித்ராங்கி பாகம் எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறினார்; ஜலத்தில் மூழ்க இருந்தவனுக்கு அகஸ் மாத்தாய்த் தெப்பம் கிடைத்ததுபோல் சந்தோஷப்பட்ட வனாய், உடனே ஒப்புக்கொண்டேன். சித்ராங்கி பாகத்தில் ஜெயராம் நாயகர் நடித்ததை, பக்கத்திலிருந்து மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்தபடியால் நாடகத்திற்குக் கொஞ்சம் தினங்கள்தான் இருந்தபோதிலும் இவருக்கு அதை எடுத்துக்கொள்வது சுலபமாயிற்று. இந்த இடத்தில் எனது இளைய நண்பர்களெல்லாம் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், ஒரு நல்ல ஆக்டர், ஏதாவது ஒரு பாகத்தை நடிக்கும்பொழுது, பக்கத்திலிருந்து முற்றும் கவனித்துக் கொண்டிருத்தல் அதிகப் பலனைத் தருவதாகும் என்பதே. கிருஷ்ணசாமி ஐயர் அவ்வாறு கவனித்தபடியால் தான் அவ்வளவு சீக்கிரத்தில் அந்தக் கடினமான சித்ராங்கி பாகத்தை எடுத்துக்கொள்ள சக்தி வாய்த்தது. “இவனிடமிருந்து நாம் கற்கவேண்டியது என்ன இருக்கின்றது?” என்று சொல்லி அவ்வாறு கவனியாது கிரீன்ரூமில் (நேபத்யத்தில்) உட்கார்ந்து கொண்டு தற்காலம் சில ஆக்டர்கள் செய்கிறபடி கதை பேசிக் கொண்டிருந்தால், இது சாத்யமாயிராது. ஆகவே இதை வாசிக்கும், நாடக மேடையில் நாம் பெயர் பெற வேண்டு மென்று விரும்பும் எனது இளைய நண்பர்கள், சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் அதைக் கைவிடாது, தேர்ந்த ஆக்டர்கள் நடிக்கும் பொழுதெல்லாம் அவர்களைக் கவனித்துக் கற்றுக் கொள்வார்களாக. எவ்வளவுதான் ஒரு ஆக்டர் இப்படி இப்படி நடிக்க வேண்டுமென்று ஒத்திகைகளில் சொல்லிக் கொடுத்த போதிலும், அவனைப் பார்த்துக் கற்க வேண்டுமென்று விரும்புவோர்க்கு மேடையின் மீதேறி நடித்துக் காட்டுவதைப் போல் அவ்வளவு பிரயோஜனப்படாது.
இது காரணம் பற்றியே சென்ற நாற்பது வருஷங்களாகச் சமயம் வாய்க்கும் போதெல்லாம், கைவிடாது யாராவது சிறந்த ஆக்டர்கள் சென்னையில் வந்து நடிக்கும்போதெல்லாம், அவர்கள் இங்கிலீஷ்காரர்களாயினுமாகுக, ஆந்திரர்களாயினுமாகுக, கன்னட தேசத்தவர்களாயினுமாகுக, அவர்களைப் போய்க் கவனித்து வருகிறேன். “கற்றது கணைக்காலளவு கற்க நின்றது கடலளவு” என்னும் பழமொழியின்படி, இன்னமும் கற்க விரும்புகிறேன். மேற்சொன்னபடி கிருஷ்ணசாமி ஐயர் சித்ராங்கியாக நடிக்க ஒப்புக் கொண்ட பொழுது, எங்கள் முக்கியமானகஷ்டம் தீர்ந்த போதிலும், அவருடைய பாகமாகிய ரத்னாங்கி வேஷத்திற்கு ஒருவரைச் சீக்கிரத்தில் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. உடனே எங்கள் சபையிலிருந்து நடந்து போய், காயார் சி. தேசிகாச்சாரியார் என்பவரைப் பார்த்து, அவரை இந்த வேடம் பூணும்படி வேண்டிக் கொண்டேன். அவரும் இசைந்தார். அவர் இதற்குக் கெஞ்ச நாளைக்கு முன்பாகத்தான் எங்கள் சபையில் அங்கத்தினராகச் சேர்ந்தார். அதுவரையில் தமிழ் நாடக மேடையில் ஏறினவரே அன்று. பள்ளிக்கூடத்தில் ஆங்கில நாடகத்தில் ஏதோ ஒரு முறை இரண்டு முறை அவர் ஆக்டு செய்ததாக எனக்கு ஞாபகம். இவர்ஸ்திரீவேஷத்திற்குப் பொருத்தமாயிருப்பார் என்று முன்பே எண்ணியிருந்தேன். இவரும் தான் ஸ்திரீ வேஷம் பூண வேண்டுமென்று தனக்கு இச்சையிருப்பதாக எனக்குத் தெரிவித்திருந்தனர். ஆகவே இந்த சமயம் வாய்ந்ததும் அவரை அணுகி நான் கேட்க, அவரும் ஆகட்டும் என்று ஒப்புக்கொண்டனர்; ஆயினும் “ரத்னாங்கி பாகம் கொஞ்சம் பெரிதும் கஷ்டமாயினதுமாயிற்றே, இவ்வளவு சீக்கிரத்தில் நான் சரியாக அதைப் படிக்க முடியுமா?” என்று சந்தேகித்தார். “உனக்கு அந்தச் சந்தேகமே வேண்டாம், நான் எல்லாம் சரிப்படுத்திவிடுகிறேன்” என்று அவருக்கு உறுதி கொடுத்து, அந்த நான்கைந்து தினங்களும் அவருக்குச் சாயங்காலங்களில் ஒத்திகை செய்து கற்பித்தேன். அவர் மிகவும் நன்றாய் நடித்த விதத்தை அப்புறம் சொல்லுகிறேன்.
சென்னையில் சாரங்கதர நாடகத்தை முதல் முதல் நாங்கள் நடித்த பொழுது, பெங்களூரில் சுமந்திரனாக நடித்த ஸ்ரீமான் எம்.வை. ரங்கசாமி அய்யங்கார், யாது காரணத்தினாலேயோ அப்பாத்திரத்தை எடுத்துக்கொள்ளத் தடைப்பட்டது. அதன் பேரில் எனதுயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலுதான் அதை நடிக்க வேண்டுமென்று என்னைக் கேட்டார். அவர் ஆண் வேடம் பூணுவது எனக்கிஷ்டமில்லாவிட்டாலும், அவர் வற்புறுத்துகிறாரேயென்று இசைந்தேன். என் நண்பருக்காக அவர் சக்திக்கேற்றபடி, சில புதுப் பாட்டுகளைக் கட்டிக் கொடுத்தேன்.
இந் நாடகமானது சென்னையில் முதல் முறை 1896 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி, மஹாசிவராத்திரி தினம் ஆடப்பட்டது. காயார் சி. தேசிகாசாரியார் ரத்னாங்கியாக மிகவும் நன்றாக நடித்தார். இவருக்காகவென்று கடைசியில் சாரங்கதரன் மடிந்ததும் அவன் உடல் மீது விழுந்து புலம்புவதாக ரத்னாங்கிக்கு வசனம் எழுதிக் கொடுத்தேன். இவருக்குச் சங்கீத ஞானம் கொஞ்சமுமில்லாதபடியால் ஒரு பாட்டும் பாடவில்லை; அப்படியிருந்தும் தன் வசனங்களை நன்றாய் நடித்து சபையோரையெல்லாம் மகிழ்வித்தார். கொஞ்சம் ஸ்தூல சரீரமுடையவராயிருந்தும், ஸ்திரீ வேஷம் இவருக்கு மிகவும் பொருந்தியதாயிருந்தது. முக அபிநயத்தில் ஸ்திரீ வேஷம் தரிப்பதில் இவர் மிகவும் கெட்டிக்காரரென்றே சொல்ல வேண்டும். சோக பாகத்தில், தத்ரூபமாய் நடித்து, முதல் வகுப்பில் இவர் ஆட்டத்தைப் பார்க்க வேண்டுமென்று வந்து உட்கார்ந்திருந்த இவரது தந்தை தாயாரைக் கண்ணீர் விடும்படி செய்தார். இவ்வளவு நன்றாய் நடித்தும், ஏதோ காரணத்தினால் எங்கள் சபையில் பிறகு இவர் இரண்டொரு முறை தவிர ஸ்திரீ வேஷம் பூண்டதாக எனக்கு ஞாபகமில்லை. இது எங்கள் சபையின் குறையென்றே நான் கூற வேண்டும்.
துரைசாமி அய்யங்காரும் ராஜகணபதி முதலியாரும் வழக்கம்போல் நன்றாய் நடித்து, சபையோருக்கு விடா நகைப்பை விளைத்தனர்.
அ. கிருஷ்ணசாமி ஐயர் சித்ராங்கியாக மிகவும் விமரிசையாக நடித்தார். இவரது பாட்டுகள் சபையோரையெல்லாம் மிகவும் களிக்கச் செய்தன். சித்ராங்கியின் அறைக்குள் சாரங்கதரன் புகுந்தவுடன், சித்ராங்கியாக இவர் ‘வாரும்! வாரும்!’ என்கிற பல்லவியுடன் கூடிய பாட்டு ஒன்றைப் பாடியது சித்ராங்கியை வெறுக்க வேண்டிய சாரங்கதரனையும் சந்தோஷிக்கச் செய்தது என்றுதான் கூற வேண்டும். இவர் இள வயதில் சோக பாகங்களாடுவதில் இவருக்கு இணையில்லை யென்றே கூற வேண்டும். அப்பொழுது நல்ல வாலிபத்திலிருந் தமையால், குரலும் கம்பீரமாயும் இனிமையாயுமிருந்தது. இவர் சித்ராங்கியாகக் கடைசிக் காட்சிகளில் நடித்ததும், மிகவும் அற்புதமாயிருந்தது.
எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு சுமந்திரனாக நடித்தது ஒன்றும் தவறாக இல்லாவிட்டாலும், வந்திருந்தவர் வந்திருந்தவர்களில் பெரும்பாலர் நன்றாயிருந்ததெனக் கூறியபோதிலும், என் மனத்திற்கு மாத்திரம் திருப்திகரமாயில்லை. ஸ்திரீவேஷம் தரிப்பதற்குப் பொருத்தமுடையவர்கள் ஆண் வேடம் தரிக்கலா காது என்பது என் கொள்கை. இக்கொள்கை அப்பொழுது மிருந்தது இப்பொழுதும் எனக்கிருந்தது. இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், ஸ்திரீ வேடம் தரித்து சில முறை அரங்கத்தின்மீது ஆடிய பிறகு, ஆண் வேடம் தரித்தால், ஸ்திரீகளுக்குரிய அபிநயமானது அவர்கள் அறியாத படி வந்து விடுகிறது. ஆண் வேடம் சாதாரணமாகப் பூணுபவர்கள், எப்பொழுதாவது ஸ்திரீ வேடம் தரித்தால் ஆடவர்களுக்குரிய அபிநயம் கலந்து விடுகிறது. இதற்காக, முதலிலேயே நாடக மேடையின் மீதேற விரும்பும் ஒவ்வொரு ஆக்டரும் தனக்கு ஸ்திரீ வேடம் சரியானதா, அல்லது ஆண் வேடமே சரியானதாவென்று நன்றாய் ஆராய்ந்து மற்றவர்களுடைய அபிப்பிராயத்தையும் கேட்டுத் தீர்மானித்து அந்தத் தீர்மானத்தினின்றும் மாறாதிருப்பதே நலமாம் என அப்பொழுதும் எண்ணினேன். நாடக மேடை. அனுபவம் ஏறக்குறைய நாற்பது வருடங்கள் ஆகியும் இப்பொழுதும் எண்ணுகிறேன். இதற்கு உதாரணமாக எனது பழைய நண்பராகிய அ. கிருஷ்ணசாமி ஐயரையே எடுத்துக் கூறுவேன். இவர் ஸ்திரீ வேஷத்துக்குத்தான் உரித்தானவர் என்பது என் தீர்மானம். அவரும் அப்படியே ஒப்புக் கொள்வாரென்பதற்குத் தடையில்லை. இவர் சற்றேறக்குறைய முப்பத்தைந்து வருடங்களாக நாடக மேடையில் பெயர் எடுத்ததெல்லாம் ஸ்திரீ வேஷங்களி லேயே. லீலாவதியாகவோ, பத்மாவதியாகவோ, வரூதினி யாகவோ, சந்திரமதியாகவோ, சபலை யாகவோ, கௌரீ மணியாகவோ, சௌமாலினியாகவோ, சத்யபாமையாகவோ, கைகேயியாகவோ, இன்னும் இத்தகைய ஸ்திரீவேடங்களில் இவருக்கிணையில்லையென்றே சொல்ல வேண்டும். ஆயினும் இவர் இரண்டொரு முறை ஆண் வேடம் தரித்து, சாருதத்தனாகவும், நந்தனாகவும் நடித்தபொழுது, அநேகர் அவ்வளவு பொருத்தமாகவில்லை யென்றே சொன்னார்கள். அதுதான் எனது அபிப்பிராயமும். இந்த ஆண் வேடங்களில் இவர் நடிக்கும்பொழுது இவருமறியாதபடி ஸ்திரீகளின் அபிநயம் வந்து விடுகிறது என்பது என் அபிப்பிராயம். மற்றவர்களும் அப்படியே கூறியிருக்கின்றனர்.
எங்கள் சபையில் பல வருடங்களாகப் பெயர் பெற்ற எனது நண்பராகிய இவரைப்பற்றிக் குறையாகக் கூறுகிறேன் என்று இதை வாசிப்பவர்கள் எண்ணாதிருப்பார்களாக. அவரிடம் எனக்கு மிகுந்த நன்கு மதிப்புண்டென்பதை அவரும் அறிவார், மற்றவர்களும் அறிவார்கள். ஆயினும் அவர் ஆண் வேடமே எப்பொழுதும் பூணாதிருந்தால் நலமாயிருக்கும் என்பது என் அபிப்பிராயம். இதை அவரே ஒப்புக்கொள்வாரென்பது திண்ணம்.
இது காரணம்பற்றியே எனதுயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலு சாரங்கதர நாடகத்தில் சிலமுறை சுமந்திரனாக நடித்த போதிலும், இதற்குப் பிறகு, அவரது ஆயுள் பரியந்தம் ஆண் வேடமேதரித்திலர். எனக்கு ஞாபகம் இருக்கிற வரையில், “ஆண் வேடம் எப்படி ஆடுகிறாய், நாங்கள் பார்க்க வேண்டும்” என்று எங்கள் சபையோர் சிலர் கேட்க அதற்கிணங்கி, இதற்கப்புறம் ஒரு முறைதான், “பேயல்ல பெண்மணியே’ என்னும் எனது நாடகத்தின் இடைக் காட்சியில், பின் பாட்டுக்காரனாக வந்தாரென நினைக்கிறேன்.
இச் சாரங்கதர நாடகத்தில், 1904ஆம் வருஷத்திற்குப் பிறகு, கிருஷ்ணசாமி ஐயருக்குப் பதிலாக, என் ஆருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவே சித்ராங்கியாக எங்கள் சபையில் நடித்து வந்தார். இச் சித்திராங்கி வேஷத்தையாடிய பலரை நான் பார்த்திருக்கிறேன். எல்லோரையும்விட. சி. ரங்கவடிவேலுவே, மிகுவும் மெச்சத்தக்கபடி நடித்தார் என்பது என் ஆய்ந்த அபிப்பிராயம். சாதாரணமாக, கேவலம் சிற்றின்பப் பிரியையாக நடித்துக் காட்டுகிறார்கள்; இவர் ஒருவர் தான் அச்சித்ராங்கியை மேம்பட்ட குணமுடைய ஸ்திரீயாக எடுத்துக் காட்டியுள்ளார். நான் முன்பே கூறியிருக்கிறபடி, சாரங்கதரன் மீது பழி சுமத்திய குற்றமொன்று தவிர, நான் எழுதியிருக்கிறபடி, சித்ராங்கி வேறு ஒரு குற்றமுமுடையவளல்ல; நாடக ஆசிரிய னாகிய என் அபிப்பிராயப்படி, சித்ராங்கியின் நற்குணங்களை யெல்லாம் சபையோர் கண்டு அறியும்படி, நடித்துக் காட்டியவர் இவரே. இந்நாடகத்தில் இவர் சித்ராங்கியாக வருகிறார் என்று கேள்விப்பட்டால், இந்நாடகத்திற்கு வசூல் எப்பொழுதும் அதிகமாக வரும். இது சென்னையில் மாத்திரமன்று, வேறு இடங்களிற்போய் சுகுண. விலாச சபையார் நாடகமாடும் பொழுதெல்லாம் அப்படியே. இவர் உயிருடன் இருந்தவரையில், எங்கள் சபை வெளியூருக்குப் போனபோதெல்லாம், மனோகரன், லீலாவதி, சுலோசனா முதலிய எங்கள் முக்கியமான நாடகங்களுடன் இதுவும் ஒன்றாக எப்பொழுதும் ஆடப்பட்டதென்றே சொல்ல வேண்டும்.
இவர், மேற்சொன்னபடி நாடகாபிமானிகளின் மனத்தைக் கவர்ந்ததற்கு, என்ன காரணங்கள் உள்ளன என்று எனக்குத் தெரிந்த வரையில் இங்குச் சற்று எழுதுகிறேன். இவர் 1895ஆம் வருஷமுதல், 1923ஆம் வருஷம் வரையில் சற்றேறக்குறைய 28 வருடங்கள், எங்கள் சபையில் முக்கியமான ஸ்திரீ வேடம் தரித்து வந்தனர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இந்த இருபத்தெட்டு வருடங்களிலும் எந்தப் பாகம் தனக்குக் கொடுக்கப்பட்ட போதிலும், அதை முதலில் நன்றாக மனனம் செய்து விடுவார். ஒத்திகைகளில், “இந்தப் பாகம் எனக்கு நன்றாய்த் தெரியும், நான் நாடக தினத்தில் ஆடி விடுகிறேன்” என்று சிலர் சொல்வதுபோல் கூறாமல் ஒன்று தவறாது மணிப் பிரகாரம் எல்லா ஒத்திகைகளுக்கும் வந்து நடத்துவார். ஏதாவது நூதனமான பாகம் இவருக்கு நான் கொடுத்தால், அந்தப் பாத்திரத்தை எப்படி நடிப்பது என்கிற விஷயம் தன் மனத்தில் நன்றாய் ஊன்றுகிறவரையில் என்னை சும்மா விட மாட்டார். ஒரு முறைக்குப் பன்முறை அதை நடத்திக் காட்டும்படி வற்புறுத்துவார்; சொல்லிக் கொடுப்பதில் நான் தளர்ச்சியடைந்தாலும் அடைவேனேயொழியக் கற்றுக் கொள்ளுவதில் அவர்தளர்ச்சியடையமாட்டார். பிறகுதான் எடுத்துக்கொண்ட பாத்திரத்திற்குத் தக்கபடி பாட்டுகளை, என்னைக் கொண்டாவது, இதரர்களைக் கொண்டாவது கட்டிக் கொடுக்கச்செய்வார்; அப்பாட்டுகளெல்லாம் சந்தர்ப்பத்திற்குச் சரியாயிருக்கின்றனவா என்று என்னிடமிருந்து தெரிந்து கொண்டு, பிறகு சங்கீதம் சரியாயிருக்கிறதாவென, சங்கீதப் பயிற்சியில் தேர்ந்த எங்கள் சபை அங்கத்தினரைக் கொண்டு, சிட்சை சொல்லிக் கொள்வார். வேஷம் பூணுவதில் சிறிய விஷயங்களையும் கவனித்து, மிக விமரிசையாக வேஷம் தரிப்பார். கை கால்களுக்கும் வர்ணம் பூசிக்கொண்டு நகங்களுக்கும் தீட்டவேண்டிய வர்ணத்தைத் தீட்டுவார். இச் சந்தர்ப்பத்தில் நாடக மேடைமீது வரவிரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு ஒரு விஷயம் அறிவிக்க விரும்புகிறேன். சாதாரணமாக ஆக்டர்கள் முகத்தில் மாத்திரம் வர்ணத்தைப் பூசிக்கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறேன். மறதியினாலோ, அல்லது சோம்பலினாலோ கைகால்களுக்கு வர்ணம் தீட்டுவதில்லை சிலர். அது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு எவ்வளவு அருவருப்பைத் தருகின்றது என்பது, வெளியிலிருந்து கண்ணால் கண்டவர்களுக்குத்தான் தெரியும். கை கால்களுக்கு வர்ணம் தீட்டுவதிலும், அதனுடன் நின்றால் போதாது; நகங்களுக்கும் கொஞ்சம் சிவப்பு வர்ணம் தீட்டாவிட்டால், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஒருவித வியாதி பிடித்த அவயவங்கள் போலத் தோன்றும். இது சிறு விஷயமாயி ருந்தபோதிலும் இதை ஆக்டர்கள் கவனிப்பார்களாக.
ஆடையாபரணங்களை அணிவதிலும் எனது உயிர் நண்பர் மிகவும் ஜாக்கிரதையாயிருப்பார். சேலை கட்டுவதில் ஏதாவது கொஞ்சம் தப்பாகச் சுருங்கலாக இருந்த போதிலும், அவிழ்த்துத் திருப்பிக் கட்டுவார். ‘இதென்ன? அல்ப விஷயம்! இதை யார் கவனிக்கப் போகிறார்கள்’ என்று சும்மா இருந்து விடமாட்டார். எல்லா விஷயங்களிலும் இவர் இவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொண்டபடியால்தான், அவர் மேடையின் மீது தோன்றும் பொழுதெல்லாம், ஸ்திரீகள் உட்பட வந்திருப்பவர்களெல்லாம் சந்தோஷப்படும்படி இருந்தது. ஒரு முறை எங்கள் சபையின் நாடகமொன்றில் நடந்த விருத்தாந்தத்தை இங்கு எழுதுகிறேன். காலஞ்சென்ற ராவ்பகதூர் அநந்தாசார்லு, சி.ஐ.இ. அவர்கள் ஒருமுறை தமிழ் நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பிய ஓர் ஆங்கில மாதை விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு அழைத்துக்கொண்டு வந்தார். பாதி நாடகம் நடந்த பிறகு அரங்கத்தில் வெகு விமரிசையாக நடித்துக்கொண்டிருந்த சி.ரங்கவடிவேலுவைப் பார்த்து இது யார் என்று கேட்க, அநந்தாசார்லு அவர்கள்; இவர் ஒரு ஹைகோர்ட்டு வக்கீல் என்று தெரிவித்தார். “ஆடவனா அது? நான் நம்பவில்லை” என்று சொல்லி, அநந்தாசார்லு இடைக் காலத்தில் (Interval) நேபத்யத்துக்குள் அம் மாது சிரோமணியை அழைத்து வந்து நேராக சி. ரங்கவடிவேலுவைக் காட்டியும், சந்தேகம் தெளியாதவராய், “இப்பெண் ஆண் பிள்ளையா!” என்று கேட்டார்கள்! அவரை முதன் முதல் அரங்கத்தில் பார்க்கும், அதற்கு முன் அறியாத பலர், அவர் பெண் பிள்ளையே என்று எண்ணிமருண்டது எனது நண்பர்கள் பலர் அறிந்த விஷயமே.
எனது நண்பர் தான் நடிக்க மிகவும் ஆவல் கொண்டிருந்த வேடங்களில் இந்த சித்ராங்கி யொன்று. இதைப்பற்றியே நான் என்றும் மறக்கமுடியாத துக்ககரமான நினைவு ஒன்று உண்டு.
எங்கள் சபையில் எனதாருயிர் நண்பர், கடைசியாக ஒத்திகை செய்தது இந்த சித்ராங்கி பாத்திரமேயாம். ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை சாரங்கதர நாடகம் நடத்துவதற்காக நான் ஒத்திகை நடத்த வேண்டி வந்தது. அச்சமயம் தனக்கு மிகவும் தலை நோயாயிருக்கிறதென எனது நண்பர் கூற, “ஆனால் நீ ஒத்திகை செய்ய வேண்டாம். உன் உடம்பை ஜாக்கிரதை யாகப் பார்த்துக்கொள்” என்று நான் சொல்லியும், என் வார்த்தையைக் கேளாது, தன் பாட்டுகளை யெல்லாம் பாடி ஒத்திகையை முடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார். போனதும் 102 டிக்ரி ஜுரம் வந்து விட்டது. ஒத்திகையினால் தான்ஜுரம் வந்ததென்று நான் சொல்லவேயில்லை. ஆயினும் அந்த ஒத்திகையினால் அது அதிகப்பட்டது என்பது என் அபிப்பிராயம். அதுதான் அவர்கடைசி முறை எங்கள் சபைக்கு வந்தது. அப்படியே படுக்கையாயிருந்து, காலவியோசமானார் ஒரு விதத்தில் எனது நண்பர் தன் ஆருயிரை எங்கள் சபைக்காகக் கொடுத்தார் என்றே நான் கூற வேண்டும். எனது நண்பனைப்பற்றி இவ்வளவு அதிகமாக நான் எழுதுவது, இதைப் படிப்பவர்களுக்கு ஓர் ஆச்சரியமாயிருக்கலாம். அப்படியிருந்தால் என்னை மன்னிக்கும்படிக் கேட்டுக் கொள்ளுகிறேன். 28 வருஷங்கள் என்னுடன், எங்கள் சபையின் அரங்கத்தில் நடித்த எனது நண்பனுக்கு நான் செய்ய வேண்டிய கைம்மாறில் நூற்றிலொரு பங்கையாவது, இவற்றையெல்லாம் எழுதி, செலுத்த முயல்கிறேன்.
பன்னிரண்டாம் அத்தியாயம்
1895ஆம் வருஷம் வரையில் தம்புச் செட்டித்தெருவில் விஜயரங்கம் மஹாராஜாவின் பெண்கள் பாடசாலையில் இருந்த எங்கள் சபையானது, அவ்வருஷத்தின் முடிவில் சில மாதங்கள் முத்தியாலுப்பேட்டை பள்ளிக்கூடத்தில் இருந்து பிறகு தம்புச்செட்டி தெருவிலேயே, தற்காலம் ஒ. கந்தசாமி செட்டியார் இருக்கும் வீட்டிற்கு மாற்றப்பட்டது. இந்த வீட்டின் மெத்தையில் ஒரு பாகம் வாடகைக்கு நாங்கள் எடுத்துக் கொண்டபடியால், தினம் சபையின் அங்கத்தினர் சபைக்கு வந்துபோக இடமுண்டாயிற்று. எங்கள் சபையின் வளர்ச்சியில் இதை இரண்டாவது பிரிவாகக் கொள்ளலாம். இந்தப் புது வீட்டில் எங்கள் சபை கிரஹப்பிரவேசசடங்கை என் தமயனார் ப. ஐயாசாமி முதலியார் எம்.எ.பி.எல். 1896ஆம் வருஷம் மார்ச்சு மாசம் 11ஆம் தேதி நடத்தி வைத்தார். இது முதல் சாயங்காலங்களில் சதுரங்க ஆட்டம், சீட்டாட்டம் முதலியன சபையில் அங்கத்தினருடைய சௌகர்யத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. அன்றியும் இதுவரையில் காரியதரிசியும் பொக்கிஷ தாரும் ஒருவரே இருந்ததை மாற்றி, காரியதரிசி வேறு பொக்கிதார் வேறாகப் பிரிக்கப்பட்டது. அன்றியும் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் சபைக்கு வேண்டிய நாற்காலிகள் முதலியன வாங்க ஆரம்பித்தோம். எங்கள் சபை மற்ற சபைகளைப்போல் அல்லாமல் இத்தனை வருஷம் வாழ்ந்து வந்ததற்கு முக்கியக் காரணம், நாங்கள் இவ்வாறு கையிருப்புக் கேற்றபடி செலவழித்து, “சிறுகக் கட்டிப் பெருக வாழ்” என்னும் பழமொழியினைக் கைப்பற்றி நடந்ததேயாம் என்று நான் உறுதியாய்க் கூறலாம். எங்கள் சபையைப் பார்த்து ஆரம்பிக்கப்பட்ட அநேகம் சபைகள் அழித்து போனதற்கு ஒரு முக்கியக் காரணம், அவைகளெல்லாம் வரவுக்கு மிஞ்சின செலவு செய்ததே என்று நான் நம்புகிறேன். எங்கள் சபை முதலில் ஆரம்பித்த பொழுது மாதாந்தரக் கட்டணம் 4 அணாவாக இருந்தது. இவ்வருஷம் முதல் 8 அணாவாக உயர்த்தினோம். சபையின் செலவு கொஞ்சம் அதிகமாகவே, வரும்படியையும் அதிகப்படுத்த வேண்டிய மார்க்கம் தேடினோம்.
மேற்சொன்ன ஏற்பாடுகளன்றி இவ்வருஷம் எங்கள் சபையார் பல புதிய விஷயங்களை ஆரம்பித்தனர். அவற்றுள் முக்கியமானது எங்கள் சபையின் ஆதாரணையிலும் செலவிலும் ‘இந்தியன் ஸ்டேஜ்’ என்ற பெயருடன் ஒரு மாதாந்திரப் பத்திரிகையைப் பிரசுரிக்க ஆரம்பித்ததே. இதற்கு, பத்திரிகைகளுக்கு எழுதுவதில் அப்பொழுதே தேர்ச்சியடைந்திருந்த எனது பால்ய நண்பராகிய வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காரைப் பத்திராதிபராக ஏற்படுத்தினோம். பத்திரிக்கையானது ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்கள் நன்றாய் நடந்தேறிய போதிலும், அதற்கு வேறு யாருடைய பரிபாலனமும் இல்லாதபடியால், சீக்கிரத்தில் நசித்துவிட்டது. அப்படி நசித்தது மிகவும் துக்ககரமான விஷயமே. சில வருஷங்களுக்குப் பிறகு மறுபடியும் உத்தாரணம் செய்தபோதிலும் மறுபடியும் சில மாதங்களிருந்து உயிர் நீத்தது. இந்த இரண்டு முறையும் இப் பத்திரிகையானது ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்டது. எனது நண்பருடைய பிரயத்தனமெல்லாம் முடிவில் பயன்படாமற் போனது, தென் இந்தியாவின் தௌர்ப்பாக்கியமே என்று நான் உறுதியாய்க் கூறுவேன். இந்தப் பத்திரிகை நடந்தபொழுது எங்கள் சபையைப்பற்றி நான் ஆங்கித்தில் எழுதிய சில வியாசங்கள் இப்பொழுது இந்த நாடக மேடை நினைவுகள் எழுதுவதற்கு எனக்கு மிகவும் உபயோகப்பட்டன.
அன்றியும் இவ்வருஷம் டிசம்பர்மாசம் முக்கோடி ஏகாதசி அன்று சாரங்கதரன் என்னும் நாடகத்தை எங்கள் சபையார் மறுபடி ஆடிய பொழுது, “ருக்மாங்கத நாடகத்தை”யே தோற்றக் காட்சிகளாகக் காட்டினோம். இதை ஆங்கிலத்தில் “டாப்ளோவைவாங்” (Tableau Vivantes) என்று சொல்வார்கள்; இதை மௌனக் காட்சி என்று கூறலாம். இதுதான் முதன் முதல் இத்தகைய காட்சிகள் தமிழ் நாடக மேடையில் காட்டப்பட்டது. இதை நாங்கள் ஆரம்பித்ததற்கு ஒரு வேடிக்கையான காரணம் உண்டு. சாதராணமாக, சாயங்காலங்களில் நானும் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்பொழுது, “என்ன சம்பந்தம், போட்ட நாடகங்களையே போட்டுக் கொண்டிருப்பதா? ஏதாவது புதியதாகச் செய்” என்று தூண்டினார். ‘அப்படியே ஆகட்டும்’ என்று சொல்லி, வீட்டிற்குப் போனதும் யோசனை செய்து பார்த்தேன். முக்கோடி ஏகாதசிக்கு சாரங்கதர நாடகத்துடன், ருக்மாங்கத சரித்திரத்தையும் நாடகமாக எழுதினால் நன்றாயிருக்கும் என்று முதலில் யோசித்தேன். ஆயினும் நாடக தேதிக்குள் அதை எழுதி முடித்து ஒத்திகை போடுவது அசாத்தியமென யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, நான் சில வருஷங்களுக்குமுன் ஆங்கிலேயர்கள் தோற்றக் காட்சிகளாகக் சில கதைகளைக் காட்டியது ஞாபகம் வந்தது. உடனே ருக்மாங்கத சரித்திரத்தை அப்படி தோற்றக் காட்சிகளாகக் கஷ்டமின்றிக் காட்டலாமே! என்று யோசித்தேன். மறுநாள் எனது நண்பருடன் கலந்து பேசினபொழுது அவரும் நன்றென ஆமோதித்தார். “தோற்றக் காட்சி அல்லது மௌனக்காட்சி” என்றால் இன்னதென எனது இளைய நண்பர்கள் சிலருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆகவே அதைச் சற்று விவரித்து எழுதுகிறேன். ஒரு கதையை அப்படிக் காட்டுவதென்றால், அக்கதையின் முக்கியமான காட்சிகளை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு காட்சியிலும் வரவேண்டிய ஆக்டர்களை, அக்காட்சிக்கேற்றபடி, முக அவயவ அபிநயங்களுடன் பதுமைகள் போல் அசையாமலிருக்கும்படி குறைந்தபட்சம் இரண்டு நிமிஷமாவது நிறுத்திவைப்பதுதான்.இதைப்படிக்கும் எனது நண்பர்கள் இதில் என்ன கஷ்டம், மிகவும் சுலபம்தானே என்று எண்ணிவிடலாம்.
ஏதாவது ஒரு நாடகத்தில் ஒரு காட்சியை எடுத்துக் கொண்டு அக்காட்சியில் வரவேண்டிய ஒரு நாடகப் பாத்திரமாகத் தங்களைப் பாவித்து அக்காட்சியில் அப்பாத்திரம் என்ன முகப்பார்வையுடன், என்ன அங்க அபிநயத்துடன் நிற்க வேண்டுமென்பதை மனத்திற்கொண்டு, அப்படியே இரண்டு நிமிஷம்வரை அசையாது, மாறாது நின்று பார்த்தால் அப்பொழுதுதான் இதன் கஷ்டம் தெரியும். எங்கள் சபையின் ஆக்டர்களை முதன் முறை இவ்வாறு நிறுத்திவைக்க எனது பால்ய நண்பரும் நானும் பட்ட கஷ்டம் எங்களுக்குத் தெரியும். ருக்மாங்கத சரித்திரத்தை இப்படித் தோற்றக் காட்சிகளாக நடிக்க எங்கள் ஆக்டர்களுக்கு நாங்கள் ஒத்திகை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அப்பு என்னும் எங்கள் சபை வேலையாள், மறு நாள் என்னிடம் மெல்ல வந்து, இப்படித்தோற்றக்காட்சிகள் மேடையின்மீது காட்டும் பொழுது, மேடையின் முன்புறமாக ஒரு கொசுவலையை விட்டுக்காட்டினால், படங்கள் கண்ணாடியிலிருப்பதுபோல் ஜனங்களுக்குத் தெரியும் என்று சொன்னான். உடனே அவன் சொன்னது நல்ல யுக்தி என்று எனக்குத் தோன்றியது. பிறகு நான் இதை ஸ்ரீனிவாச ஐயங்காருக்குச் சொல்ல அவரும் மிகுந்த சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டார். அப்பு சொன்னபடியே ஒரு கொசு வலையை அரங்கத்தின் முன்பாக விட்டு, நாங்கள் இந்த ருக்மாங்கத சரித்திரத்தைத் தோற்றக் காட்சிகளாகக் காட்டிய பொழுது வந்திருந்தவர்களெல்லாம் மிகவும் நன்றாயிருந்ததென மெச்சினார்கள். ஆயினும் இது புதியதாயிருந்தபடியால், அநேகர், பொம்மைகளுக்கு வேஷந்தரித்து, இப்படிக் காட்டுகிறார்களா என்னவென்று வினவினர். அரங்கத்திற்கு உள்ளே வந்து பார்த்த பிறகுதான் பொம்மைகள் அல்ல, ஆக்டர்கள் தான் அவ்விதம் நிற்கின்றனர் என்பதை அறிந்தனர். இதைப் பற்றிய இன்னொரு வேடிக்கை எனக்கு ஞாபகம் வருகிறது. அன்றைத் தினம் நாடகங்களுக்காக, சில தினங்களுக்கு முன்னதாகவே எங்கள் வழக்கம் போல், சுவர்களில் நோடீசுகளை ஒட்டியபொழுது, அவற்றுள் “சாரங்கதரா (in Tamil) ருக்மாங்கதா (in Tableau)” என்று அச்சிட்டிருந்தோம். அதைக் கண்ட ஒருவர் ஸ்ரீனிவாச ஐயங்காரை “சாரங்கதரா நாடகத்தை தமிழில் நடிக்கப்போகிறீர்கள், சரிதான்; ருக்மாங்கத நாடகத்தை எந்தப் பாஷையில் நடிக்கப்போகிறீர்கள்?” என்று வினவினார்! Tablean என்பது ஒரு பாஷை என்று எண்ணிக் கொண்டார்! இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், அப்படிக் கேட்டவர், கவர்ன்மெண்டு இலாகாவில், ஆங்கிலத்திலிருந்து தமிழில் கவர்ன்மெண்ட் பிரசுரங்களை மொழிபெயர்க்க வேண்டிய உத்யோகஸ்தர்!
மேலும் இந்த 1896ஆம் வருஷம் ஸ்தாபிக்கப்பட்ட எங்கள் சபையின் தெலுங்குப்பிரிவு, “அமித்ரமித்ரா” என்னும் தெலுங்கு நாடகத்தை நடத்தியது. முன் வருஷத்தில் நடத்திய தெலுங்கு நாடகத்தின் பெயர், “ராஜஹம்சா”. இந்த இரண்டு தெலுங்கு நாடகங்களும், எங்கள் சபைக்கு அப்பொழுது காரியதரிசியாயிருந்த முத்துக்குமாரசாமி செட்டியார் எழுதியவை. தெலுங்குப் பிரிவு ஒன்றை சபையில் ஸ்தாபித்த பின் தெலுங்கு அங்கத்தினர் பலர் சேர்ந்தனர். முதல் தெலுங்கு நாடகமாகிய ராஜஹம்சா என்னும் நாடகத்தைப் பற்றி விசேஷமாகக் கவனிக்கத்தக்கது எனக்கு அவ்வளவாக ஞாபகமில்லை. ஒன்றுமாத்திரம் ஞாபகமிருக்கிறது. இந்த நாடகத்தின் ஒத்திகைக ளெல்லாம் பூரணமாகும் பொழுது கே. ஸ்ரீநீவாசன் என்பவர் ஒருவர் அங்கத்தினராகச் சேர்ந்தார்; இவர் தெலுங்கா; கம்பீரமான உருவமும், கொஞ்சம் சங்கீத ஞானமும் உடைய வராயிருந்தார். இவருக்கு ஏதாவது பாத்திரம் கொடுக்க வேண்டுமென்று விரும்பி, இவருக்காக நாடக ஆசிரியராகிய ஊ. முத்துக் குமாரசாமி - செட்டியார், “பாரதிபிரசாத்” என்கிற பாத்திரத்தைச் சிருஷ்டித்துக் காட்சிக்கும் காட்சிக்கும் இடையே இவரைப் பாடிக்கொண்டு போகும்படிச் செய்தார். அது முதல் நாடகத்திற்குச்சம்பந்தமில்லாத ஒருவன் நாடகமேடையின் மீது தோற்றுவானாயின், “இவன் என்ன பாரதி பிரசாத்தா?” என்று ஏளனம் செய்வோம். இந்த கே. ஸ்ரீனிவாசன் ‘அமித்ரமித்ரா’ என்னும் இவ்வருஷத்திய நாடகத்தில் கதாநாயகனாகத் தோன்றி மிகவும் நன்றாய் நடித்தார். இவரிடமிருந்த முக்கியான நாடக மேடைக்கு அதி அவசியமானகுணம் ஒன்று என்னவென்றால், ஒரு பாட்டைப் பாடும்பொழுது அதன் வார்த்தைகள் எல்லாம் சபையோர் தெளிவாகக் கேட்டு அர்த்தம் அறியும்படி, ஸ்பஷ்டமாகப் பாடுவார் என்பதே.
இது ஓர் அரிய குணம் என்று எண்ணுகிறேன். சாதாரணமாக ஆக்டர்கள் மேடையின்மீது பாடும்பொழுது, பல்லவி, அது பல்லவி, சரணம், விருத்தம் முதலியவைகளில் சங்கீதத்தை விஸ்தரித்து சாஹித்யத்தைக் கேட்பவர்கள் அறியாதபடி பாடுவது வழக்கமாயிருந்தது. இப்பொழுதும் பெரும்பாலும் வழக்கமாயிருக்கின்றது. இது பெரும் தவறென எண்ணுகிறேன். சங்கீதத்தை மாத்திரம் கேட்க வேண்டுமென்றால் சாதாரணக் கச்சேரி சங்கீதமே போய்க் கேட்க வேண்டும். இதனால் நாடக மேடையில் சங்கீதமே கூடா தென்று நான் சொல்ல வரவில்லை. என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால், நாடக மேடையில் சாஹித்தியத்திற்கே பிரதான இடத்தைக் கொடுத்து, சாஹித்யம் பலரும் அறியும்படியாகப் பாட வேண்டுமென்பதே; ராக பாவத்தைக் காட்டவேண்டியது வெகு முக்கியமே; அதை விட்டு, ராக ஆலாபனை செய்ய ஆரம்பித்து, அந்த ஆலாபனையில் பாடும் பாட்டின் வார்த்தைகள் எங்கோ மறைந்து போகும்படிச் செய்வது நாடகத்திற்கு ஒழுங்கல்ல; முக்கியமாக நாடகமாடும் பொழுது நாடகப் பாத்திரம் கூறும் வசனங்களுக்கோ பாடும் பாட்டிற்கோ தக்கபடி முக அபிநயம் அமைந்திருக்க வேண்டும்; அப்படிச்சரியாக அமைந்திருக்கிறதா என்று சபையோர் பார்த்து ஆனந்தப்பட, நாடகப் பாத்திரத்தின் வாயினின்றும் வரும் வார்த்தைகளை அவர்கள் நன்றாகக் கேட்க வேண்டும். அப்படி ஸ்பஷ்டமாக அவர்கள் செவியில் வார்த்தைகள் கேட்கா விட்டால் என்ன பிரயோஜனம்?
நான் மேலே குறித்தபடி பாட்டுகளை ஸ்பஷ்டமாகப் பாடி சபையோரைக் களிக்கச் செய்தவர் இந்த கே. ஸ்ரீநிவாசன் என்பவரே. இவருக்குச் சங்கீதத்தில் மற்றும் சிலரைப்போல அவ்வளவு பாண்டித்ய மில்லாவிட்டாலும், இவ்வாறு ஒழுங்காய்ப் பாடியதனால் இவர் சங்கீதமானது சபையோரால் மிகவும் சிலாகிக்கப்பட்டது.
இந்த 1896ஆம் வருஷம் எங்கள் சபையார் முதல் முதல் ஆங்கிலத்திலும் நாடகமாட ஆரம்பித்தனர். இவ்வருஷம் மே 2ஆம் தேதி உலகெங்கும் பெயர்பெற்ற ஷேக்ஸ்பியர் மஹாநாடகக் கவி எழுதிய “ஜூலியஸ் சீசர் “ (Julius Caeser) என்னும் நாடகத்தில் சில காட்சிகளும், “ஜெயசந்திரா'” என்னும் ஒரு சிறு தெலுங்கு நாடகமும், “லீலாவதி சுலோசனா” நாடகத்தில் சில காட்சிகளும் ஒன்றாய் நடித்தோம். “ஜூலியஸ் சீசர்” என்னும் நாடகத்தில், மற்றவர்களெல்லாம் தங்களால் முடியாது என்று மறுத்தபடியால், நான் கதாநாயகனான புரூடஸ் (Brutus) என்பவரின் மனைவியாகிய போர்ஷியா (Portia) வேஷம் பூண்டேன். இதுதான் ஆங்கிலத்தில் முதன் முறை ஸ்திரீவேஷம் தரித்தது; இதுவே கடைசி முறையுமாகும். நான் ஸ்திரீவேஷம் தரிக்கவேண்டுமென்று இச்சை கொண்டு இதைத் தரித்தவனன்று; வேறொருவரும் அப்பாத்திரத்தை எடுத்துக் கொள்ள முடியாதென்று கைவிட்டபடியால் நான் இதைப் பூணும்படி நேர்ந்தது. அன்றியும் அச்சமயம் எனக்கு ஒருவித இருமல் வியாதியிருந்தது. அதற்காக என் மார்பெல்லாம் அக்னிப் பிளாஸ்திரியிட்டுக் கொப்பளித் திருந்தது; அதன் பேரில் பஞ்சை வைத்துக்கட்டி, என் ஆடையைப் பூணவேண்டியவனாயிருந்தேன். இந்தச் சங்கடத்துடன் நடித்தது எனக்குத் திருப்திகரமாயில்லை ; எனது நண்பர்கள் நான் நடித்தது நன்றாயிருந்ததெனக் கூறிய போதிலும், அதை முகஸ்துதியாகக் கொண்டேனேயொழிய வாஸ்தவமாக ஏற்கவில்லை. என்னுடன் இந்த ஆங்கில நாடகத்தில் கதாநாயகனாக நடித்தது காலஞ்சென்ற பூண்டி ரங்கநாத முதலியாருடைய மூன்றாவது குமாரனாகிய கிருஷ்ணசாமி என்னும் சிறுவன். அவன் மிகவும் நன்றாய் நடித்ததாக எல்லோரும் புகழ்ந்தனர். என்னுடைய அபிப் பிராயமும் அப்படியே. ஆங்கிலத்தில் பேசுவதில், வெள்ளைக் காரர்களைப்போல் உச்சரிப்புடையவர் என்று பூண்டி ரங்கநாத முதலியார் பெயர்பெற்றிருந்தார். அந்தக் குணத்தை அவரது பிள்ளைகளுள் கிருஷ்ணசாமி வஹித்திருந்தான். இந்தப் பிள்ளைக்கு அப்பொழுது சுமார் 17 அல்லது 18 வயது இருக்கும்; பூ. ரங்கநாத முதலியாரது பிள்ளைகளுள் எல்லாம் இவன்தான் மிகுந்த புத்திசாலி; பச்சையப்பன் கலாசாலையில் தன் வகுப்புகளில் முதலாக இருந்து தனது உபாத்தியாயர்களுடைய நன்மதிப்பைப் பெற்றவன். இப்படிப்பட்ட நற்குணமும் நன்னடக்கையும் உடைய வாலிபன், இது நடந்த சில மாதங்களுக்குள், காலகதியடைந்தான். அதுவும் அவன் மடிந்த தினம், எங்கள் சபையோர் வருஷாந்திர கொண்டாட்டம் கொண்டாடும் நாள்! கருணையங் கடவுளின் இச்சை அவ்வாறு இருந்தது! பேதை மாந்தர்களாகிய நாம் இதற்கு என்ன சொல்வது? ஆங்கிலத்தில், ஸ்வாமியானவர் இவ்வுலகில் யார்மீது பிரியம் அதிகமாக வைக்கிறாரோ, அவர்களைத் தன்னிடம் சீக்கிரத்தில் அழைத்துக்கொள்ளுகிறார் என்று ஒரு வாக்கியமுண்டு. அதன்படி இங்கு நடந்தது போலும்.
1896ஆம் வருஷம் எங்கள் சபையின் சரித்திரத்தில் ஒரு முக்கியமான வருஷம் என்று இன்னொரு விதத்திலும் சொல்லவேண்டும். இவ்வருஷந்தான் முதல் முதல் எங்கள் சபையின் தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் எங்கள் சபை ஏற்படுத்தப்பட்டதால் அந்த மாதம் இக்கொண்டாட்டத்தை ஆரம்பித்தோம். இவ்வருஷம் ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் சத்திரத்தின் மேல்மாடியில், காலை முதல் அங்கத்தினரெல்லாம் சேர்ந்து, சிற்றுண்டி, உணவு முதலியன வெல்லாம் அருந்தி, சாயங்காலம் விக்டோரியா பப்ளிக் ஹாலில் கூட்டம் வைத்துக் கொண்டோம். இந்த முதல் கூட்டத்தில் அக்கிராசனம் வகித்தவர் காலஞ்சென்ற வித்யா வினோதி ராவ்பகதூர் பி. அநந்தாச்சார்லு C.I.E. அவர்கள். இவ்வருஷம் முதல் தற்காலம் வரையில், இந்த வருஷாந்தரக் கொண்டாட்டங்கள் நிறைவேறி வருகின்றன. இவைகளைப் பற்றி சவிஸ்தாரமாய்ப் பிறகு நான் எழுத வேண்டி வரும்.
இந்த வருஷத்தில்தான் நான் “மனோரமா” அல்லது “இரண்டு நண்பர்கள்” என்னும் ஒரு புதிய நாடகத்தை எழுதி முடித்தேன். இது நான் எழுதியிருக்கும் நாடகங்களில் ஒரு முக்கியமான நாடகமாகையால் இதைப்பற்றிக் கொஞ்சம் விவரமாய் எழுத விரும்புகிறேன்.
இந்த நாடகத்திற்கு “மனோரமா” என்று ஒரு பெயர் வைத்தும், அப்பெயர் தற்காலம் வழங்காது, “இரண்டு நண்பர்கள்” என்னும் மற்றொரு பெயரே வழங்கி வருகிறது. இந்நாடகத்தை எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலுக் கென்றே முக்கியமாக எழுதினேன். அவர் நடித்த கதாநாயகியாகிய “மனோரமா” என்னும் பெயரையே நாடகத்திற்கும் வைத்தேன். தான் கதாநாயகியாக நடிக்க வேண்டு மென்று அவர் என்னைக் கேட்டுக் கொள்ள, நாடகத்தில் நடிக்கும் அவருடைய சக்திக்கேற்றபடி இந்நாடகத்தை எழுதலானேன். மனோரமா என்னும் நாடகப் பாத்திரம் அவருக் கென்றே எழுதப்பட்டது என்பதை என் நண்பர்கள் அனைவரும் அறிவார்கள். எனது நண்பர் தென் இந்திய மேடையின் மீது நடித்துப் பெயர் பெற்ற நாடகப் பாத்திரங்களுக்குள் இது ஒரு முக்கியமானது.
இந்நாடகத்தை நான் எழுதியபொழுது ஒவ்வொரு காட்சியாக நான் எழுதி முடித்ததும், எனது நண்பர் அதை வாங்கிக் கொண்டு போய்ப் படித்து வருவது வழக்கம்; அப்படி வாசித்துக்கொண்டு வந்தவர், கடைசிக் காட்சியை எப்படி முடிக்கப் போகிறீர்கள்? என்று என்னை வினவினார். அதற்கு நான் இந்நாடகம் சோகரசமாகத்தான் முடிய வேண்டும், அப்படித்தான் முடிக்கப் போகிறேன் என்று கூறினேன்.
அதற்கிசையாது, அதை எப்படியாவது மங்களகரமாய் முடிக்க வேண்டுமென்று மன்றாடி, கதாநாயகனான சுந்தராதித்யன் இழைத்த பிழைக்காக அவன் கடைசியில் மரணமடைய வேண்டியதே என்று நான் எவ்வளவோ எடுத்துக்கூறியும் கேளாமற் போகவே, அவரது வேண்டுகோளுக்கிசைந்து மங்களகரமாய் முடித்தேன். இந்நாடகக் கதை, இதைப் படிக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்குமென நம்பி அதை வரையாது விடுத்து, எப்படி மங்களகரமாய் முடித்தேன் என்பதை மாத்திரம் இங்கு எழுதுகிறேன். கடைசிக் காட்சியில் ஜெய பாலன் சுந்தராதித்யனைக் கொல்ல வாளை ஓங்கும் பொழுது, அவன்மீது பழிவாங்க வேண்டுமென்று அவனைத் தேடிக் கொண்டிருந்த சூரசேனன் அவனைக் கொல்கிறான்; மனோரமாவும் சுந்தராதித்யனும் தப்பிப் பிழைத்து மணம் செய்து கொள்கின்றனர். இப்படித்தான் 1896ஆம் வருஷம் நாங்கள் இந்நாடகத்தை ஆடியபொழுதும், பிறகு பலதரம், எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு “மனோரமா"வின் பாத்திரத்தைப் பூண்டபோதும் ஆடி முடித்தோம். இவ்வாறு இந்நாடகத்தை முடித்தது. தவறென்று எனது நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், மேலே நான் தெரிவித்த இந்தியன் ஸ்டேஜ் என்னும் பத்திரிகையில் வெளியிட்டார். அவர் எடுத்துக்காட்டிய குற்றம் நான் ஒப்புக்கொள்ள வேண்டியதே என்று கருதினவனாய், இந்நாடகத்தை நான் அச்சிட்ட பொழுது சோககரமாகவே முடித்தேன். அதாவது, ஜெயபாலன் சுந்தராதித்யனைக் கொல்ல ஓங்கிய கத்தியை, தன் காதலனைக் காப்பாற்றவேண்டி மனோரமா தன் மார்பிற்றாங்கித் தடுத்து, தன் உயிர் இழக்கிறாள். பிறகே ஜெயபாலனை சூரசேனன் கொல்கிறான். அதன்மீது மனோரமா இறந்த துயர் ஆற்றாது, சுந்தராதித்யன் நித்யானந்தனைக் கொண்டு தன்னுயிரைப் போக்கிக் கொள்கிறான். இவ்வாறு சோககரமாய் நாடகத்தை முடித்து அச்சிட்ட பிறகு, இந்நாடகத்தில் தான் ஆடமாட்டேன் என்று கூறி எனதாருயிர் நண்பர், தான் சாகுமளவும் இந்நாடகத்தை வெறுத்து, மனோரமா பாத்திரத்தை ஆடுவதை விட்டனர். இதுதான் இந்நாடகம் எங்கள் சபையோரால் பல ஆண்டுகளாக ஆடப்படாததற்குக் காரணம். பிறகு என்னாருயிர் நண்பர் இவ்வுலகை விட்டு மேலுலகத்திற்குச் சென்ற பிறகுதான், இப்போதைக்கு நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக, எனது நண்பர் சத்யமூர்த்தி ஐயர், எங்கள் சபைக்குத் தமிழ்க் கண்டக்டராய் வந்த பொழுது, இந்நாடகம் ஆடப்பட்டது. சி. ரங்கவடிவேலு நாடக மேடை மீது உயிர் துறக்கப் பயந்தவரன்று; பிறகு நான் எழுதிய ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் மிகச் சிறந்த நாடகமாகிய “ஹாம்லெட்” என்னும் நாடகத்தின் தமிழ் அமைப்பாகிய “அமலாதித்யன்” என்னும் நாடகத்தில், அபலையாக நடித்த பொழுது, நாடகத்தில் மரித்ததுமன்றி, அரங்கத்தின் பேரில் பாடையின் மீது தன்னை வளர்த்திச் சமாதியில் புதைக்கப்படவும் இசைந்திருக்கிறார். ஆயினும் இந்நாடகத்தில் மாத்திரம் சோககரமாய் முடித்தால் ஆடமாட்டேன் என்று ஆட்சேபித்தார். இதற்குக் காரணம், முதல் முதல் தான் கதாநாயகியாகத் தோன்றும் பொழுது கதை மங்களகரமாய் முடிய வேண்டுமென்று விரும்பினார்போலும். இது என் ஊகையேயாம். இதனுண்மையை மேலுலகில் நான் எனதா ருயிர் நண்பனை அடைந்த பிறகுதான், நான் அறியக்கூடும்! அவர் இவ்வுலகில் இருந்த பொழுது, இந்த மர்மத்தைப் பற்றி நானும் வற்புறுத்திக் கேட்டவனன்று, அவரும் எனக்குச் சொன்னவரன்று.
இந்த “இரண்டு நண்பர்கள்” எனும் நாடகமானது இது வரையில் என்னிடமுள்ள குறிப்பின்படி, என் அனுமதியின் மீது, 29 தரம் ஆடப்பட்டுள்ளது. இது நான் எழுதியுள்ள நாடகங்களுள் முக்கியமானதொன்றாகப் பலரால் அங்கீகரிக்கப்பட்டும், மற்ற நாடகங்களைப் போல் அதிக முறை ஆடப்படாததற்குக் காரணம், இது மேடையில் நடிப்பதற்குக் கடினமான தென்பதேயாம். முக்கியமாக, கதாநாயகனாகிய சுந்திராதித்யன் பாகம் நடிப்பதற்கு எளிதல்ல; இவன் நாடகத்தின் கடைசிக் காட்சிகளில் பித்தம் பிடித்தவனாகிறான்; இந்தக் காட்சிகளை நடிக்க நான் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல; சென்னையில் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப்போய் பைத்தியக்காரர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று கவனித்தேன்; பிறகு வாஸ்தவமாகப் பித்தம் பிடித்தவர்கள் எவர்களேனும் அகஸ்மாத்தாய் என் கண்ணெதிர்ப்பட்டால் அவர்களைப் பின் தொடர்ந்து அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தையெல்லாம் கற்றுணர்ந்தேன்; இவ்வாறு இரண்டு மாசங்கள் நான் பிரயத்தனப்பட்ட பிறகுதான், அரங்கத்தின் மீது அக்காட்சிகளை நடிக்க எனக்குத் தைரியமுண்டாயிற்று. எனக்குத் தெரிந்த வரையில் எனது நண்பராகிய தென் இந்திய ரெயில்வே அசிஸ்டென்ட் டிராபிக் சூபரின்டெண்டாகிய எப்.ஜி. நடேச ஐயர் ஒருவர்தான் இதை, எனக்குப் பின் நடிக்க முயன்றிருக்கின்றார். எங்கள் சபையில் இப்பாத்திரத்தை வேறொருவரும் இது வரையில் நடித்ததில்லை; இக்காரணம் பற்றியே, நாடகமாடுவதையே ஜீவனமாகக் கொண்டும் நடிக்கும் நாடகக் கம்பெனியார்களும், பால நாடக சபையார்களும் இந்த நாடகத்தின் அருகிற் போவதில்லையென நம்புகிறேன்.
இந்நாடகமானது எங்கள் சபையோரால் 1896ஆம் வருஷம் ஆகஸ்டு மாசம் 8ஆம் தேதி முதன் முதல் ஆடப்பட்டது. அச்சமயம் மேலே குறித்தபடி சி. ரங்கவடி வேலு மனோரமாவாகவும், நான் சுந்தராதித்யனாகவும் நடித்தோம். அ. கிருஷ்ணசாமி ஐயர் சத்யவதி வேடம் பூண்டார். காலஞ்சென்ற எம். வை: ரங்கசாமி ஐயங்கார் சுகுமாரனாக நடித்தார். அதுவரையில் ஸ்திரீவேஷம் பூண்டு கொண்டிருந்த ஜெயராம் நாயகர், ஜெயதேவனாக ஆண் வேஷம் பூண்டனர். ஹாஸ்யத்திற் கிடங்கொடுக்கும் பாகங்களாகிய நித்யானந்தன், சூரசேனன், குருநாதன் பாகங்கள் முறையே, ராஜகணபதி முதலியார், துரைசாமி ஐயங்கார், ஷண்முகம் பிள்ளை இவர்கள் மூவரால் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இனி அன்றைத் தினம் இந்நாடகத்தில் நடித்த முக்கியமான ஆக்டர்களைப்பற்றிக் கொஞ்சம் எழுதுகிறேன். இந்நாடகத்தில் தான் என்னாருயிர் நண்பர் முதல் முதல் பெரும்புகழ் பெற்றார் என்று கூற வேண்டும். இவர் எடுத்துக்கொண்ட மனோரமா எனும் நாடகப் பாத்திரம் நடிப்பதற்குக் கடினமானது; அநேக ரசபாவங்கள் அமைந்தது; அவற்றையெல்லாம் உண்மையில் உணர்ந்து நடிப்பது சுலபமல்ல. இப்படிப்பட்ட பாத்திரத்தில் பெயர் பெற்று, சபையோரையெல்லாம் சந்தோஷிக்கச் செய்தது எனது நண்பருடைய பாக்கியமாம். இது முதல் ஏறக்குறைய இருபத்தேழு வருஷங்கள் எங்கள் சபையில் நான் எழுதிய தமிழ் நாடகங்களில் இவர் கதாநாயகியாக நடித்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.
சத்யவதியாக நடித்த கிருஷ்ணசாமி ஐயரும் மிகவும் நன்றாக நடித்தார். இப்பாத்திரம் சில நாட்களிலேயே வந்த போதிலும் சரியாக நடிப்பது சுலபமல்ல நான் எனது நாடகங்களில் வரைந்துள்ள ஸ்திரீ பாகங்களில் இது ஒரு முக்கியமான பாத்திரமாம். ஹாஸ்ய பாகத்திற்காக எழுதிய நித்யானந்தன், சூரசேனன், குருநாதன் ஆகிய மூன்று பாத்திரங்களும் வந்திருந்தவர்களுக்கு இடைவிடா நகைப்பை உண்டு பண்ணின. இந்நாடகத்தில்தான் முதன் முதல், எனது நண்பராகிய, பிறகு எங்கள் சபையின் முக்கியமான ஆண் வேடமும் ஸ்திரீவேடமும் தரித்த பெருமை வாய்ந்த, ஸ்ரீநிவாச ராகவாச்சாரி நடித்தார். இவர் அக்காலம் ஒரு சிறு பிள்ளையாயிருந்தார். அன்றியும் இப்பொழுது போல் அல்லாமல் மிகுந்த மெலிந்த தேகமுடையவராக இருந்தார். இவருக்கு இந்நாடகத்தில் வரும் இரண்டு தோழிகளின் பாகமாகிய கமலினி, விமலினி கொடுத்திருந்தேன். இவர் அன்று இந்நாடகத்தில் நடித்ததைக் கண்டவர்கள், இவர் இனிமேல் சங்கீத சாஹித்யங்களில் வல்லவராகி, கதா நாயகனாகவும், கதா நாயகியாகவும் பல நாடகங்களில் நடிப்பார் என்று ஒருவரும் எண்ணியிருக்க முடியாது; தெய்வகடாட்சத்தினால் அவ்வாறே நடந்தது. இவர் தற்காலமும் முக்கியமான ஆண் வேடங்கள் பூணும் ஸ்திதியிலிருப்பது எங்கள் சபை செய்த பாக்கியமே. ஆண் வேடங்களில் எம்.வை. ரங்கசாமி ஐயங்கார் சுகுமாரனாக நடித்துப் பாடியது மிகவும் சிலாகிக்கப்பட்டது. எனது நண்பர் ஜெயராம் நாயகர் ஜெயதேவனாக நடித்ததைப்பற்றி அநேகர் அவருடைய பழைய ஸ்திரீ வேஷத்திற்குரிய பாவங்கள் அவரை விட்டகலவில்லை யென்று கூறினார்கள். நான் இதற்கு முன் கூறியபடி, ஸ்திரி வேடம் தரிப்பவர்கள் ஆண்வேடம் தரிக்கலாகாது என்பதற்கு இது ஒரு நிதர்சனமாகும். நான் சுந்தராதித்யனாக நடித்ததில், முக்கியமாகப் பைத்தியக்காரனாக நடித்தது மிகவும் நன்றாயிருந்ததெனப் பகுத்தறியுஞ் சக்தியுள்ள பல நண்பர்கள் கூறினர்.
இந்நாடகத்தை அன்று நாங்கள் நடித்த பொழுது நேரிட்ட ஒரு சிறு விபத்தை எழுத விரும்புகிறேன். ஒரு காட்சியில் சுந்தராதித்யன் தன்சைனியங்களுக்கு உற்சாகம் உண்டாக்கும் பொருட்டு, வீரம் விளைக்கும்படியான சில வார்த்தைகளைப் பேசுகிறான். இந்தக் காட்சியில் நடிக்கும் பொழுது அப்பாத்திரத்தைப் பூண்ட நான், நான்கு ராணுவ வீரர்கள் தோள்மேல் நின்று அம்மொழிகளைப் பேசினேன். அவ்வாறு பேசும்பொழுது கூர்மையான வாஸ்தவமான கத்தியை நான் வீசுங்கால், என்னைத் தூக்கிக்கொண்டிருந்தவர்களுள் ஒரு வராகிய ரங்கவடிவேலுவின் தமயனாகிய சி.கே. ரங்கநாதம் என்பவருடைய தலையில் நன்றாய்க் காயப்படுத்தி ரத்தம் பெருகச் செய்தேன். இதை நான் வேண்டுமென்று செய்தவனல்ல என்று இதை வாசிக்கும் எனது நேயர்களுக்கு நான் தெரிவிக்க வேண்டியதில்லை. நன்றாக நடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் கையில் பிடித்திருக்கும் கத்தியானது யார் மீதாவது பட்டுக் காயப்படுத்துமே என்னும் கவனமில்லாமற் போயிற்று. காட்சி முடிந்து நான் கீழே இறங்கிய பின்தான், எனது நண்பர் ரத்தம் துளித்துக் கொண்டிருந்த காயத்தை காட்டி, என் அஜாக்கிரதையாலுண்டான விபத்தைத் தெரிவித்தார்! அதுவரையில் தன் நோயையும் பாராது என்னைத் தாங்கிக்கொண்டிருந்தார்! காயம் பட்டதே என்று, நோயைச் சகியாது தான் இருந்தவிடத்தை விட்டு அகன்றிருப்பாராயின், நான் கீழே விழுந்துதானிருக்கவேண்டும்! இப்பொழுதும் எப்பொழுதாவது நான் நாடக மேடையில் அஜாக்கிரதையா யிருப்பதைப் பற்றிப் பேச்சு வந்தால், “இரண்டு நண்பர்கள் நாடகத்தில் கத்தியால் என்னைத் தலையில் காயப்படுத்திய ஆசாமியல்லவா நீ!” என்று ஏளனம் செய்வார். பிறகு அநேக முறை என் கையிற் பிடித்த கத்தியால் நாடகமாடும்பொழுது பலருக்குக் காயம் உண்டு பண்ணியிருக்கிறேன். அதைப்பற்றிப் பிறகு நான் சவிஸ்தார மாய் ஆங்காங்கு எழுத வேண்டி வரும். இதற்கெல்லாம் இன்றைத் தினம்தான் “பிள்ளையார் குட்டு” ஆரம்பம். இந்நாடகமானது இரண்டாம் முறை எங்கள் சபையோரால், பெங்களூரில் ஆடப்பட்ட பொழுது, முன்பு நடந்ததைக் கவனித்தவனாய், இக்காட்சியில் கையில் மரக் கத்தியொன்றுடன் பேசினேன். அப்பொழுதும் கோபவேசத்தால் அதை வீசும்பொழுது, ராணுவ வீரனாக நடித்த ஒரு ஆக்டருக்கு அதனால் கொஞ்சம் காயப்படுத்தினேன். அதன் பிறகு இந்நாடகத்தை ஆடும்பொழுதெல்லாம் இக்காட்சியை அடியுடன் ஆடுவதையே விட்டேன்!
இந்நாடகம் எங்கள் சபையில் 1900ஆம் வருஷம் வரையில் சில சமயங்களில் ஆடப்பட்டது. அதற்கப்புறம் மேலே நான் குறித்த காரணம்பற்றி எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு இதை ஆட விரும்பவில்லை. அக்காரணத்தினால் 1900ஆம் வருஷம் முதல் 1927ஆம் வருஷம் வரையில் இந்நாடகம் எங்கள் சபையில் ஆடப்படவில்லை. அவ்வருஷத்தில் எனது நண்பர் சத்தியமூர்த்தி ஐயர் எங்கள் சபையில் தமிழ் கண்டக்டராக வந்த பொழுது, ‘இது நல்ல நாடகமாயிருக்கிறதே! இதை ஏன் நடிக்காது விட்டீர்கள்?’ என்று கூறி இதை எடுத்துக்கொண்டார். அச்சமயம், தற்காலம் நான் கதா நாயகனாக நடிக்கும்போதெல்லாம் கதாநாயகியாக நடிக்கும் எனதுயிர் நண்பர் கா. நாகரத்தினம் ஐயர் மனோரமா வேடம் பூண்டார். சி. ரங்கவடிவேலுக்கப்புறம் இவர்தான் அவ்வேடம் பூணத்தக்கவர் என்று சபையோரால் மதிக்கப்பட்டது. இதைப்பற்றி விவரமாய்ப் பிறகு எழுத வேண்டி வரும்.
இந்த “இரண்டு நண்பர்”களைப் பற்றிய இன்னொரு முக்கியமான சங்கதி உண்டு. 1891ஆம் வருஷம் எங்கள் சபை ஸ்தாபிக்கப்பட்டது முதல் 1929ஆம் வருஷம் வரையில் அதாவது 38 வருஷமாக வேறெந்தச் சபையிலும் நான் நடித்தவனன்று; அந்த 1929ஆம் வருஷம் நானும் எனதுயிர். நண்பர் நாகரத்தினமும் மதுரை டிராமாடிக் கிளப்பில், இதை முதல் முதல் நடித்தோம்; அப்போது நாங்கள் ஆடிய இரண்டு நாடகங்களில் இது ஒன்றாகும். இதைப் பற்றியும், மதுரை மீனாட்சியின் கிருபையால், அங்கு எனக்குக் கிடைத்த ஆக்டர் நண்பர்களைப்பற்றியும் பிறகு எழுதுவேன்.
பதின்மூன்றாம் அத்தியாயம்
1897ஆம் வருஷத்தில் ‘பித்தம் பிடித்த வீரன்’ என்கிற நாடகத்தை எழுதினேன். இதைப் பிறகு நான் அச்சிட்ட பொழுது ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்னும் பெயருடன் வெளிப்படுத்தினேன். இதை ஏறக்குறைய ஒரு வாரத்தில் எழுதி முடித்தேன் என்று ஞாபகமிருக்கிறது. அப்படி அவசரப்பட்டு எழுதி முடித்ததற்கு ஒரு காரணமுண்டு. அச்சமயம் சென்னை ராஜதானியில் கருப்பு அல்லது க்ஷாமம் உண்டாகி எளிய ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். அவர்கள் தௌர்ப்பாக்கியஸ்திதியை நிவர்த்திப்பதற்காக க்ஷாம நிவாரண நிதி என்னும் ஒரு பண்டு ஏற்படுத்தப்பட்டது. அதற்கு என் தமயனாருடைய மாமனாராகிய திவான்பஹதூர் பா. ராஜரத்தின முதலியார் ஒரு கௌரவக் காரியதரிசியாயிருந்தார். அவர் அந்தப் பண்டுக்காக ஒரு நாடகம் நடத்தி அதன் வரும்படியை அந்தப் பண்டுக்குச் சபையோர் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அப்படியே ஒப்புக்கொண்டு சீக்கிரத்தில் ஒரு நாடகமாட வேண்டுமென்று எங்கள் சபை நிர்வாக சபையாரால் தீர்மானிக்கப்பட்டது. புதிய நாடகமாயிருந்தால்தான் அதிகப்பணம் வசூலாகுமென்று கூறி, நான் புதிய நாடகம் ஒன்று எழுத ஒப்புக் கொண்டேன். அப்படி எழுதின நாடகம்தான் இந்த “முற்பகற் செய்யின் பிற்பகல் விளையும்” எனும் நாடகம்.
இந்த நாடகத்தின் கதை எனக்கே பிடிக்கவில்லை யென்றால் மற்றவர்களுக்கு எப்படியிருக்கும்? தந்தையே வெறுக்கும்படியான குமாரன் எவ்வளவு புத்திசாலியாயிருக்க வேண்டும்? இந்நாடகத்திலுள்ள பல குற்றங்களின்மத்தியில் ஒரு சிறு குணம் மாத்திரம் உண்டு. அதாவது, கதாநாயகன்பைத்தியம் பிடித்துத் திரிவதாக எழுதிய காட்சிகள் நன்றாயிருந்தன வென்பதாம். ‘இரண்டு நண்பர்கள்’ என்னும் நாடகத்தில் நான் பைத்தியக்காரனாய் நடித்தது நன்றாயிருந்தது என்று எனது நண்பர்கள் கூறவே, அத்தகைய காட்சிகள் இதில் சேர்த்து எழுதினேன். எனது நாடகங்களை யெல்லாம் மொத்தமாக வாங்க வேண்டுமென்று யாராவது என்னிடம் வந்து கேட்டால், இதைத் தவிர மற்ற நாடகங்களை வாங்குகள், என்று நான் சொல்வது வழக்கம். இதை வாசிக்கும் எனது நண்பர்களில் யாராவது, நான் எழுதிய நாடகங்களிலெல்லாம் எது கீழ்ப்பட்டது என்று அறிய வேண்டுமென்றால், இதை வாசிக்கலாம். ஒரு நாடகக் கர்த்தா முழு மனவெழுச்சியுடன் எழுதுவதை விட்டு, ஏதோ அக்கறைக்காக, ஒன்றை அவசரப்பட்டு எழுதி முடிப்பதன் கெடுதி இதுதான். ஆயினும் இந்த அனுபவமும், முடிவில் இன்னது செய்யக்கூடாது என்னும் புத்திமதியை எனக்குப் புகட்டியதல்லவா? தற்காலத்தில் இவ்வுலகிலுள்ள தனவந்தர்களுள் எல்லாம் மேம்பட்டவராகிய போர்டு (Ford) என்னும் அமெரிக்கா தேசத்தில் வாழும் சீமான், ஏதாவது ஒரு காரியத்தில் நாம் தவறினால், அதைத் தோல்வியாக நாம் கொள்ளலாகாது; அதைப் பிறகு நாம் வெற்றி பெறுவதற்கு அனுகுணமான அனுபவமாகக்கொள்ள வேண்டுமென்று ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருக்கிறார். நாடகமெழுத விரும்பும் எனது நண்பர்கள் இதைக் கொஞ்சம் கவனிப்பார்களாக. ஏதாவது நாடகமொன்றை எழுதுங்கால், எழுதும் நமக்கே அது எழுதுங்கால் திருப்திகரகமாயில்லாவிட்டால், அதை எழுதி முடிக்காதிருப்பார்களாக. இந்த அனுபவத்தின் பிறகு, என்னை எழுதும்படி என் மனோ உற்சாகமானது உந்தினாலன்றி ஒன்றையும் எழுதுவதில்லை என்று தீர்மானித்து, அதன்படி இந்த முப்பத்தைந்து வருடங்களாக நடந்து வந்திருக்கிறேன். ஏதாவதொரு நாடகத்தை எழுதிக் கொண்டு வரும்பொழுது, இவ்வுற்சாகம் குன்றி, மனத்தளர்ச்சி அடைந்தால், உடனே நான் எழுதும் பென்சிலையும் காகிதத்தையும் மேஜையின்மீது வைத்துவிட்டு எழுந்து விடுவேன். பிறகு, சில மணி நேரமோ, சில தினங்களோ, மாதங்களோ, வருஷங்களோ சென்று அந்த உற்சாகம் திரும்பி வந்த பிறகுதான், நான் எழுத ஆரம்பித்ததை எழுதி முடிப்பேன். இதற்கு ஓர் உதாரணமாக, ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் ஹாம்லெட் எனும் நாடகத்தின் தமிழ் அமைப்பாகிய “அமலாதித்யன்” எனும் நாடகத்தை எழுதுவதற்கு எனக்குச் சுமார் ஏழு வருடங்கள் பிடித்ததைக் கூறுவேன்.
இந்த நாடகமானது எங்கள் சபையோரால் ஒருவிதத்தில் ஒத்திகையேயின்றி நடத்தப்பட்டதென்று சொல்லலாம்; இதற்கு ஒரு முழு ஒத்திகையாவது நடத்தியதாக எனக்கு ஞாபமில்லை. ஒத்திகையேயில்லாமல் நாடகத்தை நடத்தியது சரியென்று சொல்லவில்லை; அப்படிச் செய்தது தவறுதான். நடந்த உண்மையை எழுத வேண்டுமென்று இதை வரையலானேன். இவர்கள் சபையிலேயே இம்மாதிரி நடந்ததே நாம் ஏன் அம்மாதிரி செய்யலாகாது என்று, மற்றவர்கள் இதை உதாரணமாகக் கொள்ளாதிருக்குமாறு வற்புறுத்த விரும்புகிறேன்.
இந்நாடகம் விக்டோரியா பப்ளிக் ஹாலில் இவ்வருஷம் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி ஆடப்பட்டது. இதுதான் தர்ம கைங்கரியமாக நாங்கள் ஆடிய நாடகங்களில் முதலானது. அக்காரணம்பற்றி ஹால் நிரம்ப ஏராளமான ஜனங்கள் வந்திருந்தனர். எங்கள் செலவெல்லாம் போக ரூ.214-4-8, க்ஷாம நிவாரண நிதிக்குக் கொடுத்தோம். நாடகமானது சென்னைகார்ப்பொரேஷன் அக்கிராசனாதிபதியாகிய சர்ஜார்ஜ் மூர் (Sir George Moore) என்பவரின் முன்னிலையிலும் ஆதரவிலும் நடத்தப்பட்டது. இந்நாடகம் ஆரம்பித்த பொழுது நடந்த ஒரு விந்தையை இனி எழுதுகிறேன்.
எங்கள்சபையில், இதுவரையில், மற்ற நாடகக் கம்பெனிகளிலும் சபைகளிலும் நடப்பது போலல்லாமல், நாடகம் இத்தனை மணிக்கு ஆரம்பமாகும் என்று குறித்தபடி ஆரம்பிப்பது வழக்கம். சுகுண விலாச சபையில் குறித்த காலப்படி எதுவும் ஆரம்பிக்கப்படும் என்னும் பெயரைப் பெற்றிருந்தோம். இன்றைத் தினம் என்ன காரணம் பற்றியோ, முதல் காட்சியில் வரவேண்டியவர்களாகிய, ஸ்திரீவேடம் பூண வேண்டிய அ. கிருஷ்ணசாமி ஐயரும் சி. ரங்கவடிவேலும், ஆரம்ப காலத்திற்குப் பதினைந்து நிமிஷந்தான் இருந்த போதிலும், தலை டோபாவும் கட்டிக்கொள்ளாதிருந்தார்கள்! அவர்கள் ஸ்திரீவேஷம் முற்றிலும் பூணுவதற்குக் குறைந்த பட்சம் அரை மணி நேரமாகும் என்பதைக் கண்டேன்; ஒரு நிமிஷம் இன்னது செய்வதென்று தெரியாது திகைத்தேன்; உடனே ஒரு தீர்மானத்திற்கு வந்து, அவர்களிருவரையும் கூடிய சீக்கிரத்தில் வேஷம் தரிக்கும்படிச் சொல்லிவிட்டு, என் நண்பர்களாகிய ராஜகணபதி முதலியாரையும் துரைசாமி ஐயங்காரையும் அழைத்தது, நான் மேடையின் பேரில் போய் நாடகத்தை ஆரம்பிக்கிறேன், நீங்கள் இன்னின்ன மாதிரி கேளுங்கள், அதற்கு நான் இன்னின்னபடி பதில் உரைக்கிறேன் என்று கூறிவிட்டுப் பிள்ளையார் பாட்டு ஆனவுடன், குறித்த மணிப்பிரகாரம் திரையைத் தூர்க்கச்சொல்லிவிட்டு, அரங்கத்தின் மீது சென்று, கதையை ஒட்டிய தனிமொழி ஒன்றை ஆரம்பித்தவனாய், பிறகு மேற்சொன்ன இரண்டு ஆக்டர்களும் வர, அவர்களுடன் நாடகத்தின் கதை சம்பந்தமான சம்பாஷணை செய்து காலத்தைப் போக்கிக் கொண்டிருந்தேன். பிறகு கிருஷ்ணசாமி ஐயரும் ரங்கவடிவேலும் பக்கப்படுதாவண்டை வந்து நாங்கள் சித்தமாயிருப்பதாகத் தெரிவித்தவுடன், நாங்கள் மேடையை விட்டகன்றோம். உடனே அவர்கள் பிரவேசித்து, நாடகத்தில் நான் எழுதிய கதையின்படி ஆரம்பம் செய்தார்கள். அரங்கத்தின் மீது கால்மணி நேரம் வரையில் நடந்ததெல்லாம் நான் நாடகத்தில் எழுதிய பாகம் அல்ல, அந்தக்ஷணம் கற்பனை செய்தது என்பதை, நாடகம் பார்க்க வந்தவர்கள் அறிந்திலர்! அச்சமயம் இந்நாடகமானது அச்சிடாதிருந்தபடியால் இந்தக் கதை சாத்தியமாயிருந்தது; அச்சிட்டு, யாராவது படித்திருந்தால், நடந்த சூழ்ச்சி வெளியாயிருக்கும்! அக்காலத்தில் எப்படியாவது குறித்த மணிப்பிரகாரம் நாடகத்தை ஆரம்பஞ் செய்ய வேண்டுமென்று அவ்வளவு கஷ்டப்பட்டோம். இப் பொழுதும் அப்பெயர் கெடாதபடி எங்கள் சபையாரும், மற்ற சபையோர்களும் எல்லா நாடகங்களிலும் விளம்பரத்தில் குறித்த மணிப்பிரகாரம் ஆரம்பஞ் செய்வாரென வேண்டி இதை எழுதலானேன்.
இந் நாடகத்தின் இடையில் பஞ்சத்தினால் வருந்தும் ஜனங்களின் கஷ்டங்களை மௌனக்காட்சிகளாக (Tableau Vivantes) காட்டியது நன்றாயிருந்ததென்று மெச்சப்பட்டது. மேற்கூறியவைகளைவிட வேறு கவனிக்கத்தக்க விஷயங்கள் இந்நாடகத்தைப்பற்றி எனக்கொன்றும் ஞாபகமில்லை.
இந்நாடகமானது எங்கள் சபையோரால் மறுமுறை ஆடப் படவேயில்லை. அன்றியும் இதுவரையில் ஐந்து முறைதான், மற்றவர்களால் ஆடப்பட்டிருக்கிறது. இதுதான் நான் எழுதிய நாடகங்களுக்குள் மிகவும் குறைவாக ஆடப்பட்ட நாடகம்.
இந்த 1897ஆம் வருஷத்தில் தெலுங்கில் எங்கள் சபையார் அரிச்சந்திர நாடகத்தை ஆடினார்கள். பல்லாரி வக்கீல் ராகவாசார்லு அவர்கள் எங்கள் சபையில் தெலுங்கு பாஷையில் ஆடத்தொடங்குவதற்கு முன், தெலுங்கில் எங்கள் சபையார் ஆடிய நாடகங்களுக்குள் எல்லாம் இதுவே மிகச் சிறந்ததென நான் உறுதியாய்க் கூறக்கூடும். இந்நாடகமானது எங்கள் சபைக் காரியதரிசியாயிருந்த ஊ. முத்துக்குமாரசாமி செட்டியாரால் எழுதப்பட்டது. நாடக மேடையில் நாடகக் கம்பெனிகள் இக்கதையை ரசாபாசமாக நடத்துவது போலில்லாமல், தற்கால நாகரீகத்திற்கேற்றபடி ஒழுங்காய் எழுதியிருந்தார். இந்நாடகமானது மிகவும் சோபித்ததற்கு ஒரு முக்கியமான காரணம், கதாநாயகனும் கதா நாயகியும் தக்க ஆக்டர்களால் நடிக்கப்பட்டதே.
முன்பே நான் எனது நண்பர்களுக்கு எடுத்துக் கூறியுள்ள கே. சீனிவாசன் என்பவர் ஹரிச்சந்திரனாக மிகவும் நன்றாய் நடித்தார். இவர் உருவம் மிகவும் கம்பீரமானது; குரலும் கம்பீரமானது; மேடையில் நடிப்பதும் மிகவும் கம்பீரமாயிருக்கும்; இத்தகைய குணம் வாய்ந்தவர்ஹரிச்சந்திரனாக நடித்த பொழுது தக்க பெயர் பெற்றது ஆச்சரியமன்று. இவர் சங்கீதத்தில், மற்ற அரிச்சந்திரர்களைப்போல் அத்தனை பாட்டுகள் பாடா விட்டாலும், பாடியவரையில் மிகவும் ஸ்பஷ்டமாயும் திருத்தமாயும் பாடுவார். இந்நாடகத்தில் இவருக்கு சமானமாக அ. கிருஷ்ணசாமி ஐயர், சந்திரமதியாக நடித்தார். இந்நண்பர் ஆடிய பாத்திரங்களுள் சந்திரமதியானது ஒரு மிகச் சிறந்ததென்றே கூற வேண்டும். தமிழ் பாஷையிலும் தெலுங்கு பாஷையிலும் கதாநாயகியாக நடித்துப் பெயர் பெற்றவர் இவர் ஒருவரே. இவர் தெலுங்கு பாஷையில் பேசும் பொழுது தமிழ் உச்சரிப்பு ஒன்றும் வராது; தமிழில் பேசுங்கால் தெலுங்கு சப்தம் கொஞ்சமும் கலக்காது. இவருடைய சங்கீதமானது நான் முன்பே குறித்தபடி முதல் தரமானது. எங்கள் சபையில் ஸ்திரீ வேஷம் தரிப்பவர்களுக்குள் இவருடைய சங்கீதத்தைவிட மேலானதை நான் கேட்டதில்லை. இனி கேட்கவும் போகிறதில்லையென நம்புகிறேன். நாடக மேடையில் நின்று இவர் பாடும்கால், அவருக்குள்ள ஒரு பெரும் அருமையான குணத்தை இங்கெடுத்துக் கூற விரும்புகிறேன். சாதாரணமாக நூற்றில் தொண்ணுற்றொன்பது பெயர் மேடையில் பாடும் பொழுது, வசனத்தை நிறுத்தி, சற்றுத் தாமதித்து, ஸ்ருதியுடன் தங்கள் குரல் கலக்கிறதா என்று பார்த்துக் கொண்டு, பிறகு ஆரம்பிப்பது வழக்கம். இவர் ஒருவர்தான், நான் அறிந்த வரையில், பேசிக்கொண்டேயிருக்கும் பொழுது, சற்றும் தாமதிக்காமலும் தொண்டையைக் கனைத்துக் கொள்ளாமலும், பக்கவாத்தியக்காரர்கள் ஆரம்பிக்கிறார்களா என்று கவனிக்காமலும், நடித்துக் கொண்டிருக்கும் மனோபாவத்தைக் கொஞ்சமேனும் குறைக்காமலும், உடனே சங்கீதத்தை ஆரம்பிப்பவர்; எங்கு வசனம் முடிகிறது, எங்கு சங்கீதம் ஆரம்பிக்கிறது என்று கேட்பவர் சந்தேகிக்கும்படியாக அவ்வளவு துரிதமாய் ஆரம்பிப்பார். தற்காலத்தில் பெயர் பெற்ற பாடகர்கள் என்று நாடக மேடையில் வரும் சில ஆக்டர்கள், தாங்கள் பேசிக்கொண்டிருக்கும் பேச்சை நிறுத்தி விட்டு, தொண்டையைக் கனைத்துக்கொண்டு, மேடையின் பேரில் இருக்கும் ஹார்மோனியம் வாசிக்கும் பக்க வாத்தியக்காரனிடம் போய் நின்றுகொண்டு, உம் என்று குரல் எழுப்பி, நடிக்க வேண்டிய பாவம் கொஞ்சமும் முகத்தில் இல்லாதவர்களாகிப் பாட ஆரம்பிப்பதைக் கண்டவர்கள், எனது நண்பராகிய அ. கிருஷ்ணசாமி ஐயர் அக்காலங்களில் மேடையில் பாடும் திறத்தைக் கண்டிருப்பார்களாயின், அதன் அருமை அவர்களுக்கு விளங்கியிருக்கும். இவருக்கு, தற்காலம் என்னைப் போல் வயதாகியும் தேகம் தளர்ந்த போதிலும், குரலின் இனிமையும் பாடும் சக்தியும் குன்றவில்லை யென்றே நான் கூற வேண்டும். கடுகு செத்தாலும் காரம் போகாதல்லவா? (என் நண்பர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்திருப்பாராக!) இவர் இச் சந்திரமதி வேஷத்தைப் பன்முறை எங்கள் சபையில் பூண்டிருக்கின்றனர். அம்முறைகளிலெல்லாம், ஸ்மசானத்தில் இவர் சந்திரமதியாகப் புலம்பும் காட்சிகள் வரும்தோறும், கண்ணீர் விடாதார் ஒருவருமில்லையென்றே சொல்ல வேண்டும். இந்நாடகத்தை முதல் முறை எங்கள் சபையார் நடித்தபொழுது, வந்திருந்த ஜனங்களெல்லாம் மிகவும் நன்றாயிருக்கிறதெனப் புகழ்ந்தபடியால், மறுவாரமே இதை மறுபடியும் ஆடினோம். எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில் முதல் நாடகத்திற்கு வந்ததைவிட இரண்டாம் தரம் அதிக ஜனங்கள் வந்திருந்தனர்; இது இந்நாடகத்தை ஆடின பெருமைக்கு ஒரு அத்தாட்சியாகும். இந்நாடகமானது, கே. ஸ்ரீனிவாசன் என்பவர் எங்கள் சபையைவிட்டு நீங்கிய வரையில் பன்முறை நடிக்கப்பட்ட போதிலும், அதன் பிறகு, அவ்வளவாக நடிக்கப்படவில்லை. தமிழ் பாஷையில் நடிக்கப்பட்டதைப் பற்றிப் பிறகு எழுதுகிறேன்.
இதே வருஷம் நான் தமிழில் எழுதிய “சத்ருஜித்” என்னும் நாடகம் நடிக்கப்பட்டது. இதைப்பற்றி நான் சற்று விவரமாய் எழுத வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் “குருட்டுப் பேராசை” (Blind Ambition) என்கிற மற்றொரு பெயர் கொடுத்தேன்; பேராசையால் ஒருவனுடைய கண்கள் மழுங்கிப் போகின்றன என்பது இதன் அர்த்தம்; மேலும் கதாநாயகன், அரசனாக வேண்டும் என்னும் பேராசையால், தன் சொந்த மனைவி மக்களைத் துறந்து, அரச குமாரியை மணந்து, பிறகு தன் இரு கண்களையும் இழந்து அந்தகனாகினான் என்பதையும் ஒரு விதத்தில் ருசிக்கும்படி, இப் பெயரை இந் நாடகத்திற்குத் தந்தேன்.
இந்நாடகத்தை நான் எழுதியதற்குக் காரணம் அடியிற் கண்டவாறு:
இவ் வருஷம் சென்னைக்கு, பம்பாயிலிருந்து ஒரு பாரசீக நாடகக் கம்பெனியர் வந்து, எஸ்பிளநேடில் (Esplanade) சில வருஷங்களுக்கு முன் நாடகக் கொட்டகை இருந்த இடத்தில், ஒரு பெரிய கொட்டகை போட்டு, அதில் இடைவிடாது மூன்று மாத காலம், ஹிந்துஸ்தானி பாஷையில் நாடகங்களை ஆடினார்கள். இந்த மூன்று மாதமும் ஏறக்குறைய ஒரு நாள் தவறாது ஆயிரக்கணக்கான ஜனங்கள் இவர்களது நாடகங்களைப் பார்த்து வந்தனர். அநேக தினங்களில் டிக்கட்டுகள் அகம் படாமற் போயின. சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமை களிலும் காலையிலேயே டிக்கட்டுகள் வாங்காவிட்டால், நாடகம் பார்க்க முடியாதிருந்தது. இத்தனைக்கும் இவர்கள் நாடகமாடிய பாஷை இந்துஸ்தானி; சென்னையிலுள்ள பெரும்பாலர்க்கு இப்பாஷையே அர்த்தமாகாதது; இருந்தும், அது வரையில் நாடகங்களைப் பார்க்க விருப்பமில்லாதவர்கள் உட்பட, சென்னையில் ஆண் பெண் எல்லோருடைய மனத்தையும் கவர்ந்ததற்குக்காரணமென்னவென்று கண்டறிய வேண்டுமென்று, நானும் இவர்களது முக்கியமான நாடகங்க்ளை யெல்லாம் போய்ப் பார்த்தேன். இதற்குக் காரணங்கள் பல உண்டெனக் கண்டறிந்தேன். இப்பாரசீக நாடகக் கம்பெனியார் சென்னையில் நாடகாபிமானிகள் மனத்தில் ஒரு பெரும் குழப்பத்தையும் உற்சாகத்தையும் உண்டு பண்ணினதுமன்றி, தென் இந்திய மேடைக்கே பல சீர்திருத்தங்கள் உண்டு பண்ணினர். ஆதலின், இவர்களால் தென்னிந்திய மேடை அடைந்த சீர்திருத்தங்களைப் பற்றிச் சற்று விவரமாய் எழுதுகிறேன்.
முதலாவது, இவர்கள் குறித்த மணிப் பிரகாரம் நாடகங்களைத் தவறாமல் ஆரம்பிப்பார்கள். இன்னின்ன நாடகங்களுக்கு இத்தனை மணி என்று ஏற்படுத்தி அதன் பிரகாரம் முடிப்பார்கள். அன்றியும் ஒவ்வொரு நாடகத்திற்கும் இரண்டோ மூன்றோ அவகாசங்கள் (Intervals) என்று ஏற்படுத்தி அதன் பிரகாரம் கொடுக்கும் அவகாசங்களன்றி, காட்சிக்கும் காட்சிக்கும் இடையில் வேறு அவகாசமே கிடையாது. இவர்கள் சென்னைக்கு வருவதற்கு முன்பாக, எல்லா நாடகச் சபைகளிலும் கம்பெனிகளிலும் (எங்கள் சபை உட்பட), ஒவ்வொரு காட்சிக்கும் பிறகு அவகாசம் கொடுப்பது வழக்கம். இப்படிச் செய்வதனால் நாடகத்தை முடிக்கும் காலம் நீடிக்கும். அன்றியும் மிகுந்த ரசமான பாகங்கள் வரும்பொழுது, காட்சிக்குக் காட்சி நீடித்த அவகாசத்தைக் கொடுப்பதனால், அந்த ரசத்திற்குக் குறை உண்டாகிறது. இக்குற்றத்தைப் போக்க வழிகாட்டியவர்கள் இப்பாரசீக நாடகக் கம்பெனியாரே. இவர்கள் சென்னைக்கு வந்து போனபிறகு, இவர்களைப் பார்த்து சில நாடகக் கம்பெனியார் இதன்படி நடக்க முயன்றனர்; எனினும், இக்குறை தென் இந்திய நாடக மேடையை விட்டு இன்னும் அகலவில்லை. எங்கள் சபையிலும் சில நாடகங்களில் இவ்வாறு அதிக அவகாசமின்றி நடத்தியபோதிலும், ஏனைய நாடகங்களில் பழையபடிதான் நடந்து வருகிறது. இதைக் கவனித்து இனியாவது எங்கள் சபையோரும் ஏனையோரும் இதனைப் பரிஹரிப்பார்களாக. இதைச் செய்வது கடினமல்ல; நாடகம் எழுதும் பொழுதே, நாடகக் கர்த்தா இதன்மீது ஒரு கண்ணுடையவனாய், அரங்க மேடையில் அதிக ஏற்பாடுகள் செய்ய வேண்டிய ஒரு காட்சிக்குப் பின், வெறும் திரையுடன் நடத்த வேண்டிய காட்சியொன்று எழுதி, இவ்வாறு மாற்றிமாற்றி எழுதிக்கொண்டு போனால், இது சுலபமாய் முடியும்; அன்றியும் கண்டக்டர்கள் பெரிய நாடகங்களை ஆடுவதற்காகச் சுருக்கும் பொழுது இதைக் கவனித்துச் சுருக்கினால், நலமாயிருக்கும்.
இரண்டாவது, இப் பராசீகக் கம்பெனியார், நாடகக் காட்சி ளைத் தக்கபடி காட்டுவதில் சிறப்புற்றிருந்தனர். ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றபடி அரங்கத்தை ஏற்படுத்துவார்கள். இதற்கு முன்பாக இருந்த, சகுனிராஜன் துரியோதனராஜனிடம் அந்த ரங்கமாய்ப் பேசும் காட்சியில், ஒரு தெருப் படுதாவை விட்டு, அந்தத் தெருவின் மத்தியில், துரியோதனனுக்கும் சகுனி ராஜனுக்கும் இரண்டு பென்ட்வுட் (Bentwood) நாற்காலிகள் போட்டிருக்கும்படியான ஆபாசங்கள் எல்லாம் இவர்களிடம் கிடையா. ஒரு பூந்தோட்டமோ, அரசியின் அந்தப்புரமோ, கடுங்கானகமோ, யுத்தக்களமோ காட்டுங்கால், அவ்வவற்றிற்கேற்றபடி, ஏராளமான பொருள் செலவழித்து தக்கபடி ஏற்பாடு செய்வார்கள். இவர்களுக்குப் பிறகுதான், தென் இந்திய மேடையில் இவ்வாறு செய்ய வேண்டியது உசிதம் என்பது, நாடகக் கம்பெனிகளுக்கும் சபைகளுக்கும், மனத்தில் உதித்தது என்றே நான் சொல்ல வேண்டும். ஆயினும் இத்தனைவருஷங்களாகியும், இவ்விஷயத்தில் நூற்றுக்கு ஐந்து பாகம்தான் சீர்திருத்தப்பட்டதென்றும், இன்னும் 95 பாகம் சீர்திருத்த வேண்டுமென்பதும் என் திடமான அபிப்பிராயம். இப் பாரசீகக் கம்பெனியாரின் காட்சி ஏற்பாடுகளை (Scenic arrangements) பார்ப்பதற்கே பாதிப்பெயர்டிக்கட்டுகள் வாங்கிக்கொண்டு போனார்கள் என்று நான் சொல்ல வேண்டும். அன்றியும் இக்காட்சி ஏற்பாடுகளில், பக்கத் திரைகளும் (side wings) மேல் தொங்கட்டங்களும் (Flies) காட்சிக்காக விடப்பட்டிருக்கும். முக்கியமான திரைக்கு ஒத்திருக்க வேண்டும் என்னும் விஷயம், தென் இந்திய மேடையானது இவர்களிடமிருந்துதான் கற்றது. இதற்கு முன் அரங்கத்தின் மத்தியில் அடர்ந்த காட்டுப் படுதா விட்டிருக்கும் பக்கங்களில் மஹா ராஜாவின் தர்பாருக்குரிய இரண்டு தூண்கள் நிற்கும். மேலே வெல்வெட் (Velvet) ஜாலர்கள் விட்டிருக்கும்! அல்லது இந்திரன் கொலுவிற்காக, அரங்கத்தில் தர்பார் திரை விட்டிருக்கும். பக்கங்களில் மரங்களின் பக்கப் படுதாக்கள் இருக்கும். மேலே காட்டு ஜாலர் விட்டிருக்கும்! இப்படிப்பட்ட ஆபாசங்கள் தவறென்றும், அவற்றை நிவர்த்திக்கும் மார்க்கம் இப்படியென்றும் காட்டினவர்கள் இப்பாரசீகக் கம்பெனியாரே. இவர்களுக்குப் பிறகுதான், ஒவ்வொரு படுதாவிற்கும் ஏற்றபடி, பக்கப் படுதாக்களும் ஜாலர்களும் இருக்க வேண்டுமென்று தென் இந்திய மேடை அறிந்தது; ஆயினும் இன்னும் இதை முற்றிலும் அறியவில்லையென்றே நான் கூற வேண்டும்; ஏனெனில், இப்படிப்பட்ட ஆபாசங்கள் இன்னும் அநேக நாடக மேடைகளில் தற்காலத்திலும் காணலாம்.
மூன்றாவது, இம்மாதிரியான சீர்திருத்தம் நாடகப் பாத்திரங்களின் உடைகளிலும் இப்பாரசீகக் கம்பெனியார் செய்தனர். எந்தெந்த நாடகப் பாத்திரம் எப்படி எப்படி உடை தரிக்க வேண்டுமோ அதன்படி தரிக்கச் செய்வதில் மிகவும் கண்டிதமாயிருந்தனர். எவ்வளவு சிறந்த ஆக்டராயிருந்த போதிலும், அவன் வறிஞனாய் வரவேண்டியிருந்தால், கிழிந்த பிச்சைக்காரனுடையையே தரிப்பான்; ஸ்திரீ வேஷங்களிலும் அப்படியே. தற்காலத்தில் ஹரிச்சந்திரனாக ஸ்மாசனக் காட்சியில் வரவேண்டிய ஆக்டர்கள் விலையுயர்ந்த சம்கி (Chamki) உடுப்புகளையும், கம்பளத்திற்குப் பதிலாக சரிகைச் சால்வையும், காக்கும் மூங்கில் தடிக்குப் பதிலாக வெள்ளித்தடி யும் பூண்டு வருகின்றனரே, அம்மாதிரியான ஆபாசங்கள் அவர்களிடமில்லை . இப்பாரசீகக் கம்பெனியார் இந்தச் சீர்திருத்தம் கற்பித்தும் தென் இந்திய மேடையில், மேற்சொன்னபடியான ஆபாசங்கள் இன்னும் பரவி நிற்பது, வியசனிக்கத்தக்க விஷயம்.
இப்பாரசீகக் கம்பெனி தென் இந்தியாவுக்குக் கற்பித்த இன்னொரு விஷயம், மாறும்படியான காட்சிகளே (Transformation scenes). அரங்கத்தில் திடீரென்று ஒரு காட்சி மற்றொரு காட்சியாக மாறுவதேயாம்; ஒரு தர்பார் கானகமாகவோ, அல்லது ஒரு காடு ஒரு பூஞ்சோலையாகவோ, இப்படி ஒரு காட்சி மற்றொரு காட்சியாக க்ஷணநேரத்தில் மாறும்படியான சூட்சுமம் இவர்களிடமிருந்துதான் முதன் முதல் தென் இந்திய மேடையானது கற்றுக் கொண்டது என்று சொல்ல வேண்டும்.
இவர்களிடமிருந்து நாம் கற்றது இன்னொன்று ஆங்கிலேய பாலெட் (Ballet) என்று செல்லப்பட்ட பத்துப் பன்னிரண்டு சிறுவர்களோ சிறுமிகளோ நாடகமேடையில் நடனமாடுவதாம். கடைசியாக இவர்கள் செய்த இன்னொரு புது வழக்கம் என்னவெனில் பக்க வாத்தியக்காரர்களை (Orchestra) நாடகமேடையில் பக்கப் படுதாவின் பக்கம் வைக்காமல், அரங்கத்திற்கெதிரில் சபையோர் முன்பாக வைத்ததேயாம். நாடக மேடைக்குள்ளிருந்தால் சாதாரணமாகப் பக்க வாத்திய மானது வெளியில் நன்றாய்க் கேட்பதில்லை. இப்படி வெளியிலிருக்கும்பொழுது சபையோருக்குப் பக்க வாத்தியம் நன்றாய்க் கேட்கும்படியானதாயது. இப்புது வழக்கத்தைச் சில கம்பெனியார் கைப்பற்றியபோதிலும், சிலர் பழைய மாமூலையே அனுசரிக்கின்றனர். இவ்விரண்டு வழக்கங்களையும் விட்டு ஆர்மோனியப் பெட்டியை மேடையின்மீது அரங்கத்திலேயே இப்பொழுது பல நாடகக் கம்பெனிகளில் வைப்பது எல்லாவிதத்திலும் ஆபாசமாம். இதைப்பற்றிப் பிறகு நான் கொஞ்சம் எழுத வேண்டி வரும்.
மேற்சொன்ன சீர்திருத்தங்களை உடையவர்களாயிருந்த படியாலும், பழைய கதைகளை விட்டு சற்றேறக்குறைய புது நாடகங்களையே இவர்கள் ஆடியபடியாலும், இக்கம்பெனி யின் ஆக்டர்களெல்லாம் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு ஒத்து உழைத்தபடியாலும், ஏறக்குறைய எல்லா ஆக்டர்களும் பாட்டிலும் நடிப்பதிலும் சாமர்த்திய முடையவர்களாயிருந்த படியாலும், இவர்கள் சென்னையில் நாடகாபிமானிகளையெல்லாம் சந்தோஷிப்பித்து ஏரளமான பொருள் சம்பாதித்தது ஆச்சரியமன்று.
இக்கம்பெனியினால் ஆடப்பட்ட எல்லா நாடகங்களையும், ஒன்றும் விடாது ஒரு முறையாவது பார்த்தேன்; சிலவற்றை இரண்டு மூன்று முறை பார்த்தேன். இதனால் இவர்கள் நாடகமாடும் ஒழுங்குகளெல்லாம் என் மனத்தில் நன்றாய்க் குடிகொள்ளவே, இவர்கள் நடிக்கும் நாடகம்போல் ஒன்றை எழுத வேண்டுமென்று உந்தப்பட்வனாய் “சத்ருஜித்” அல்லது பிளைண்ட் ஆம்பிஷன் (Blind Ambition) என்னும் நாடகத்தை இவ்வருஷம் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் எழுதி முடித்தேன். இந்நாடகமானது எங்கள் சபையோரால் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி ஆடப்பட்டது.
இந்நாடகத்தில் வீடு தீப்பற்றியெரியும் காட்சி, சிறைச் சாலையை உடைத்துக்கொண்டு வெளியே போகும் காட்சி, ப்ரவாகமாக ஓடும் ஆற்றில் நீந்திச் செல்லும் காட்சி, தூக்குமரக் காட்சி, மண்டபம் உடைந்து விழும் காட்சி முதலிய காட்சிகளை நிரப்பி எழுதினேன். இதற்குத் தகுந்த ஏற்பாடுகளையும் அப்புவைக் கொண்டு செய்து வைத்தேன். ஒத்திகைகளையெல்லாம் நடத்தி நாடகதினமானது ஒரு வாரமோபத்து நாளோ இருக்கும் சமயத்தில் நடந்த ஒரு விந்தையைக் கூறுகிறேன். சில தினங்களாக இந்நாடகத்தை ஒத்திகை செய்யும் பொழுது ஆக்டர்கள் ஒருவாறாக ஒத்திகை சரியாக நடத்தவில்லை. இதற்குக் காரணம் என்னவென்று நான் மெல்ல ரகசியமாய் விசாரித்த பொழுது, ஆக்டர்களில் பெரும்பாலார் என் மீது அதிருப்தியுடையவர்களாய், தாங்கள் எடுத்துக் கொண்ட பாகங்களை ஒருநாள் எல்லோரும் திருப்பிக் கொடுக்கப் போகிறதாக நிச்சயித்திருப்பதாக அறிந்தேன்! இதையறிந்தவுடன் இவர்கள் என்மீது எதற்காக வெறுப்புற்றிருக்கின்றனர் என்று அவர்களைக் கேட்டு, அக்காரணங்களை நீக்கி அவர்களைச் சமாதானம் செய்ய வேண்டியது என் கடமையன்றோ ? அப்படிச் செய்யாமல், என் யௌவனத்தின் கொழுப்பில் (அப்பொழுது எனக்குச் சரியாக வயது 24) “ஆஹா! அப்படியா செய்யத் தீர்மானித்திருக்கிறார்கள்! நானும் ஒரு கை பார்த்து விடுகிறேன்!” என்று பிடிவாதம் கொண்டவனாய், யார் யார் வேண்டாமென்று விடப் போகிறார்கள் என்று என் மனத்திற்பட்டதோ அவர்களுடைய பாத்திரங்களுக்கு வேறு ஆக்கடர்களை ரகசியமாகச் சித்தம் செய்து வைத்திருந்தேன். நாடகம் போடுவதற்குக்குறிக்கப்பட்ட நாளுக்கு ஒரு வாரமோ பத்து நாளோ முன்னதாக ஒரு தினம், இந்த ஆக்டர்களெல்லாம் ஒவ்வொருவராக என்னிடம் வந்து, ஏதோ ஒவ்வொரு சாக்கைச் சொல்லி, தங்களால் இந்த நாடகத்தில் ஆட முடியாதென்று தங்கள் பாகங்களை என்னிடம் திருப்பிக் கொடுத்தனர். ஏன் இப்படிச் செய்கிறாய் என்று ஒருவனையும் கேளாது, புன்னகையுடன் அவர்கள் பாகங்களை வாங்கிக் கொண்டு, சபையின் நோட்டீசுகள் ஒட்டும் பலகையிலிருந்த அவர்கள் பெயரை ஒவ்வொன்றாய் அடித்து, முன்பே நான் நியமித்திருந்த இதர ஆக்டர்களின் பெயரை எழுதிக் கொண்டே வந்தேன்! இவ்வாறு செய்வான் என்று அவர்கள் கொஞ்சமும் எதிர்ப்பார்த்தவர்களல்ல. ஆகவே என் செய்கையானது அவர்களுக்கு என் மீது முன்பைவிட அதிகக்கோபத்தையுண்டு பண்ணியது போலும். பிறகு இரண்டு மூன்று நாள் புதிய ஆக்டர்களுடன், ஒன்றும் நடவாதது போல், பழையபடி ஒத்திகைகளை நடத்தி வந்தேன். நாம் எல்லாம் கைவிட்டால் இவன் எப்படி நாடகத்தை நடத்துவான் என்று எண்ணியிருந்தவர்கள், தாங்கள் இன்றியே நாடகம் நடை பெறும் போலிருக்கின்றதேயென்று பயந்தவர்களாய், கடைசியாக ஒரு யுக்தி செய்து பார்த்தார்கள். நாடகத்திற்கு இன்னும் நாலைந்து நாள்தான் இருக்க, ஒரு நாள் நான் கையில் வைத்துக்கொண்டு ஒத்திகை நடத்தும், என் கையழுத்துப் புஸ்தகம் காணாமற் போயிற்று! அக்காலத்தில் இந்நாடகமானது அச்சிடப்படவில்லை; என் கையெழுத்துப் புஸ்தகம் ஒன்றுதான் இருந்தது. இதைப்பார்த்து ஆக்டர்களெல்லாம் தங்கள் தங்கள் பாகங்களை எழுதிக்கொண்டனர். என்னுடைய சொந்த பாகத்தை இதினின்றும் நான் படித்துக் கொண்டிருந்தேன். இது காணாமற் போனால் நான் ஒத்திகைகளை எப்படி நடத்துவது? நாடகதினம் நாடகத்தை எப்படி நடத்துவது? நான் செய்த தப்பிதத்திற்கு முதல் பிராயச்சித்தம் உடனே கிடைத்தது. புஸ்தகம் காணாமற் போகவே இடி விழுந்தவன் போல் ஆனேன்! யாரைக் கேட்டபோதிலும், புஸ்தகம் என்னவாயிற் றென்று தங்களுக்குத் தெரியாதென்று சொன்னார்கள். என் மீது வெருப்புக் கொண்டவர்களுள் ஒருவன்தான் இதைச் செய்திருக்க வேண்டுமென்று என் மனத்தில் திடமாய்ப் பட்டபோதிலும், நான் யாரிடம் போய் நீதான் செய்திருக்க வேண்டுமென்று கேட்பது? நான் மனத்தில் அடங்காக் கோபமும் துயரமும் கொண்டேனாயினும், வெளிக்கு அதைக் காட்டாமல், “சரிதான், அப்புஸ்தகம் காணாமற் போனாலென்ன? ஒன்றும் கெட்டுப் போகவில்லை” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டேன். அன்றிரவெல்லாம் ஏறக்குறைய நான் தூங்கவேயில்லை யென்றே சொல்ல வேண்டும்! என்னிடமுள்ள என்ன குற்றங்களினால், எனது நண்பர்கள், மேலே கூறியபடி என்னைக் கைவிடச் செய்தேனோ, அதற்கு இரண்டாவது பிராயச்சித்தம் அன்றிரவு அனுபவித்தேன். என் நாடக புஸ்தகத்தைத் திருடினவனைக் கண்டு பிடித்துப் பழி வாங்குவது.அப்புறமிருக்கட்டும். இப்பொழுது நாகடத்தை எப்படி நடத்துவது என்பதுதான் எனக்குப் பெருங் கவலையைத் தந்தது. கடைசியில் ஒன்றும் தோன்றாதவனாய், எல்லாம் வல்ல கடவுள்மீது பாரத்தைச் சுமத்தினவனாய்க் கொஞ்சம் தெளிவடைந்தவனாய், என் காலைக் கடனை முடித்து, பிறகு கடவுளைத் தொழுதுவிட்டு நான் இப்பொழுது உட்கார்ந்து கொண்டு எந்த மேஜையின் மீது இந்நாடக மேடை விளைவுகளை எழுதுகிறேனோ, அதே மேஜையின் அருகில் உட்கார்ந்து, நான் எழுதிய நாடகத்தை மறுபடியும் எழுதவாரம்பித்தேன்! அப்பொழுது எனக்கு நல்ல ஞாபகசக்தி இருந்தகாலம்; அன்றியும் பன்முறை இந்நாடகத்தை ஒத்திகை நடத்தியிருந்தபடியால், ஏறக்குறைய எல்லா வசனமும் எனக்கு ஞாபகமிருந்தது. இரண்டு மணி சாவகாசத்தில் இரண்டு மூன்று காட்சிகளை இவ்வாறு எழுதி முடித்துக்கொண்டிருந்தேன்; அப்பொழுது எதிர்ப்பட்சம் சார்ந்த என் நண்பர்களில் ஒருவர் (இவர்தான் என் கையெழுத்துப் புஸ்தகத்தை அபகரித்தவர் என்று இதை வாசிக்கும் நண்பர்கள் இனி அறிவார்கள்); மெல்ல என்னிடம் வந்து உட்கார்ந்து, “என்ன செய்கிறாய் சம்பந்தம்?” என்று கேட்டார்; எனக்கு இவர்மீது கொஞ்சம் சந்தேகம் இருந்தபோதிலும், அதை வெளிக்குக் காட்டாமல், “ஒன்றுமில்லை, காணாமற்போன நாடகத்தை மறுபடியும் எழுதிக்கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று காட்சிகள் எழுதியாயது; மற்றவைகளையும் இன்று சாயங்காலத்திற்கு முன் எழுதி முடித்து விடுவேன்!” என்று பதில் கூறிவிட்டு எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு கொஞ்ச நேரம் ஏதோ மற்ற விஷயங்ளைப் பற்றிப் பேசிவிட்டு, இவர் சென்றனர். அன்று சாயங்காலம் நான் சபைக்குப் போகுமுன், எங்கள் சபை பில் கலெக்டர், தான் சாலை வீதியில் போய்க் கொண்டிருந்த பொழுது அகஸ்மாத்தாய் எனது நாகடக் காகிதங்கள் அவனுக்குக் காணப்பட்டதாகக் கூறி அக் காகிதங்களை என்னிடம் கொடுத்தான்! இவன் சொன்னது நம்பத்தக்கதா இல்லையா என்று சற்றும் யோசியாதவனாய், அம்மட்டும் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டவனாய், இறைவனின் அருளைப் போற்றிவிட்டு, வழக்கம் போல் ஒத்திகை நடத்தினேன். இதற்குப் பிறகு சுமார் ஆறுமாதம் பொறுத்துத் தான் . நடந்த உண்மையை அப் பில் கலெக்டரிமிருந்து அறிந்தேன். அவனை அழைத்து அந்தரங்கமாய், ‘நடந்த உண்மையைச் சொல், இதனால் உனக்கு ஒரு கெடுதியும் வராதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று நான் வாக்களித்த பின்தான், அவன் என் காகிதங்களை அபகரித்தவர் இன்னாரென்றும் அவர் மறுநாள் என்னிடம் வந்து நான் எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, இனித் தங்கள் ஜபம் சாயாது என்று கண்டவராய்த் தன்னை அழைத்து, தன் பெயரை வெளியிடக் கூடாதென்று கட்டளையிட்டு, அக்காகிதங்கள் அகஸ்மாத்தாய் சாலைத் தெருவில் தனக்குக் கிடைத்ததாகச் சொல்லி என்னிடம் கொடுக்கும்படிச் செய்ததாக ஒப்புக் கொண்டான். நான் அவனுக்குக் கொடுத்த வாக்கின்படி அந் நண்பரை'ஏன் இப்படிச்செய்தாய்?’ என்று அவர் உயிருள்ளளவும் கேட்கவில்லை . அவர் மடிந்து போன பிறகும், இன்றளவில் இவ்விருத்தாந்தத்தை என் நண்பர்களுக்குப் பன்முறை கூறிய போதிலும், அவர் பெயரை மாத்திரம் வெளியிட்டவனன்று; ஆகவே இந் நாடக மேடை நினைவுகளிலும் அவரது பெயரை வெளியிடாததற்காக இதை வாசிக்கும் எனது நண்பர்கள் என்னை மன்னிப்பார்களாக.
நான் சில வருஷங்கள் நியாதிபதியாயிருந்திருக்கிறேன். ஆகவே இவ்விஷயத்தில் யார் யார்மீது என்ன குற்றம் என்று தீர்மானிக்க விரும்புகிறேன். இவ்விஷயத்தைக் குறித்து நிஷ்பட்சமாக யோசிக்குமிடத்து, முதலாவது என்மீது குற்றம் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனெனில், எனது நண்பர்களுள் பலர் என்னை வெறுக்கும்படியாக என்னிடம் ஏதாவது தப்பிதம் இருந்திருக்க வேண்டும். அக்காலத்தில் நான் என்ன குற்றஞ் செய்திருக்கக்கூடும் என்று யோசித்துப் பார்க்குமிடத்து, எனது ஆக்டர்களை நான் ஒத்திகைகளில் அதிகமாகக் கஷ்டப்படுத்தியிருக்க வேண்டுமெனத் தோற்றுகிறது; அவர்கள் மீதெல்லாம் அடிக்கடி அதிகக் கோபங் கொள்வது அக்காலத்தில் எனக்கு சுபாவமாக இருந்தது; ஒத்திகைக்கு வராவிட்டால் கோபங்கொள்வேன்; நாழிகை பொறுத்து வந்தால் கோபித்துக் கொள்வேன்; பாடம் சரியாகப் படிக்காவிட்டால் கோபித்துக் கொள்வேன்; எந்தச் சிறிய பிழைக்கும் அதிகக் கோபங்கொள்வேன். அப்பிழைகளையெல்லாம் பொறுக்க வேண்டுமென்பதல்ல; பிழைகளை எடுத்துக் காட்டுவதில் சாந்தமாயும் நியாயமாயும் காட்டலாமல்லவா? அந்த நற்குணம் என்னிடம் அப்பொழுது சிறிதும் இல்லாதிருந்தது. இதனால் எனது நண்பர்கள் பலருக்கு நான் மனவருத்தம் உண்டுபண்ணியிருக்க வேண்டுமென்பது திண்ணம்; இரண்டாவது, இந்த மேற்சொன்ன குற்றத்தை நான் ஒப்புக்கொண்டபோதிலும் எனது நண்பர்கள் அதை எனக்கு வெளிப்படையாய்க் கூறி, எனக்குப் புத்திமதி கூறாது, நாகடத்தில் ஒருங்கு சேர்ந்து நாங்கள் ஆடமாட்டோம் என்று கூறியது அவர்கள் மீது குற்றமாம்; அப்படிச் செய்திருப்பார்களாயின் நான் என் குற்றத்தை ஒப்புக்கொண்டு, அவர்கள் மன்னிப்பைக் கேட்டிருப்பேன் என்று நினைக்கிறேன்; மூன்றாவது, எனது நண்பர்கள் அப்படி மாட்டோம் என்று தங்கள் பாகங்களை என்னிடம் கொடுத்த பொழுது, நான் அவர்களை ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டிருக்க வேண்டும். இது என் குற்றமாம்; அவர்களாகக் காரணம் கூறாமலிருக்கும்பொழுது நாம் ஏன் அவர்களைக் கேட்க வேண்டும் என்ற மனோபாவம் எனக்கு வந்திருக்கக் கூடாது. நான்காவது, அப்படி நான் கேளாமற் போனதிலும், சபையின் நன்மையைக் கருதாது, என் நாடகக் காகிதங்களை அபகரித்தது அவர்கள் தவறாகும்.
இனி இந்த சத்ருஜித் நாடகம் முதன் முறை நடிக்கப் பட்டதைப்பற்றிக் கொஞ்சம் எழுதுகிறேன். இந்நாடகத்தில் முக்கிய ஸ்திரீ பாகங்கள் இரண்டாம். இந்திரசேனை, சதீமணி. இந்திரசேனையின் பாகம் அ. கிருஷ்ணசாமி ஐயருக்கு முதலில் கொடுத்திருந்தது. அவர் வேண்டாமென்று திருப்பிவிடவே, சாது கணபதி பந்துலு அவர்களுக்குக் கொடுத்தேன்; இவர் பாடாவிட்டாலும், தன் வசனத்தை நன்றாய் நடித்தார். இரண்டாவது ஸ்திரீ பாகமாகிய சதீமணியின் வேஷத்தில் எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு மிகவும் நன்றாய் நடித்தார் என்று அனைவரும் சொல்லக் கேட்டேன். சோக பாகத்தில் இவருக்கு நன்றாய் நடிக்கும் சக்தியுண்டென்பதை இந்நாடகத்தில்தான் கண்டேன். ஹாஸ்ய பாகத்தில் ச. ராஜகணபதி முதலியார் கஜவதனனாக மிகவும் நன்றாய் நடித்தார். இந்தப் பாத்திரம் இவருக்கென்றே எழுதப்பட்டதென்பதை, கஜவ தனன் என்கிற பெயர் அப்பாத்திரத்திற்கிட்டதனாலேயே எனது நண்பர்கள் அறிவார்கள். இவருடன் கூட வரும் விசாகதத்தன், விதேகதத்தன் பாத்திரங்கள் முதலில் எம். துரைசாமி ஐயங்காருக்கும், ஷண்முகப்பிள்ளைக்கும் கொடுத்திருந்தது. அவர்கள் வேண்டாமென்று திருப்பிவிடவே, ஒன்றை குப்புசாமி முதலியார் என்பவருக்குக் கொடுத்தேன். மற்றொன்றிற்குத் தகுந்த ஆசாமி யாரும் கிடைக்காது நான் திகைத்துக் கொண்டிருக்கும் தருவாயில், நாடகமேடையில் அதிகப் பயிற்சியில்லாதிருந்த போதிலும், எனது தமயனார் ப. ஆறுமுக முதலியார், “நீ பயப்படவேண்டாம். அதை நான் எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறி, எனக்குக் கைகொடுத்துத் தூக்கினார். “தம்பி யுள்ளவன் படைக்கஞ்சான்” என்னும் பழமொழியொன்றுண்டு; என் அளவில் இப்படிப்பட்ட “அண்ணன் உள்ளவன் எதற்கும் அஞ்சான்” என்று மாற்ற வேண்டும் அப்பழைய மொழியை! அந்தப் பாகத்தை எடுத்துக்கொண்டு, தனக்கு ஞாபகசக்தி கொஞ்சம் குறைவாயிருந்தபோதிலும், கஷ்டப்பட்டுப் படித்து, நாடக தினத்தில் நன்றாய் நடித்தார் என்றே நான் கூற வேண்டும். இதுவரையில் தமிழ் மேடையின்மீதே ஏறியறியாத ஆங்கிலத்தில் பிரபல ஆக்டர் என்று பெயர் பெற்ற எம். சுந்தரேசையர் பி.ஏ., இந்நாடத்தில் முதற் காட்சியில் போஜேந்திரனாக நடித்தார். அன்றியும் பிற்காலம் எங்கள் சபையில் பல பாத்திரங்கள் பூண்டு, பெயர் எடுத்த ரங்கவடிவேலுவின் மைத்துனராகிய தாமோதர முதலியார் வீராந்தகனாக இந்நாடகத்தில் எங்கள் சபையில் முதல் முதல் நடித்தார். இந்தப் பாகம் முதலில் வேறொருவருக்குக் கொடுத்திருந்தது; அவர் வேண்டாம் என்று திருப்பிவிட்ட பொழுது, ரங்கவடிவேலுவின் வேண்டுகோளின்படி இதை இவருக்குக் கொடுத்தேன். இவர் பிறகு பல நாடகங்களில் நடித்துப் பெயர் பெற்றதையும், அநேகவிதத்தில் எங்கள் சபைக்கு உதவியதையும் பற்றிப் பிறகு எழுத வேண்டியவனாய் இருக்கிறேன். நந்தபாலன் வேஷம் ஜெயராம் நாயகர் வேண்டாம் என்று மறுக்கவே டி. கே. ஸ்ரீனிவாசாச்சாரி என்னும் புதிய ஆக்டருக்குக் கொடுத்தேன். இவர் இதற்கு முன் எனக்கு ஞாபமிருக்கிறபடி எங்கள் சபையில் தெலுங்கிலேயே ஆக்டு செய்தவர். ஆயினும் இரண்டு மூன்று தினங்களுக்குள் தன் பாகத்தைப் படித்து எல்லாம் கற்றுக்கொண்டு, தமிழில் நன்றாக நடித்தது மெச்சத்தக்கதே. மற்றொரு ஆக்டராகிய ரங்கமணி நாயுடு என்பவர் தனநாதன் வேஷத்தை மேற்சொன்ன காரணத்தால் கடைசி வாரத்தில் எடுத்துக்கொண்டு நடித்தார். சத்ருஜித் வேஷம் நான் பூண்டு கண் குருடான பிற்கு நடித்த காட்சிகள் நன்றாயிருந்ததெனச் சென்னார்கள் என்று நினைக்கிறேன். இந்நாடகம் நடிக்கப்பட்டபொழுது நடந்த ஒரு விருத்தாந்தம் எனக்கு முக்கியமாக ஞாபகமிருக்கிறது. கடைசி காட்சிகள் ஒன்றில் கதாநாயகனான சத்ருஜித் தூக்கிலிடப்படுகிறான். தூக்கிலிடப்பட்டு மரணா வஸ்தையிலிருக்கும் தருணத்தில், அவனது மைத்துனன் தூரத்திலிருந்து ஓர் அம்பையெய்து தூக்குக் கயிற்றை அறுக்க சத்ருஜித் பிழைக்கின்றான். இக் காட்சிக்காக தூக்கு மரம் ஒன்று சித்தம் செய்தோம். இக்காட்சியை ஆரம்பிக்குமுன், தூக்குப் பலகையைத் தட்டவேண்டி, சேவகர்கள் வேஷம் பூண்டிருந்த ஒவ்வொருவரையும் கேட்டும்,ஒவ்வொருவரும் அது செய்வது பாபம், நாங்கள் செய்யமாட்டோம் என்று மறுத்தார்கள்! இன்னது செய்வதென்று அறியாது நான் திகைத்து நிற்க, தூக்கு மரத்தை ஏற்பாடு செய்த எங்கள் வேலையாளாகிய அப்பு தான் செய்வதாக ஒப்புக்கொண்டான். காட்சி மேடையின் பேரில் நடிக்கும் பொழுது அப்படியே செய்தான். தூக்குக் கயிறு என் கழுத்தை வாஸ்தவத்தில் நெருக்காமலிருக்கவும், என் உடலின் பளுவைத் தாங்குவதற்கும், தீயில் காய்ச்சிக் கருக்கப்பட்ட பித்தளைக் கம்பிகள் இரண்டு என் தோள்களில் கட்டி மேலே கோர்த்திருந்தது. என் காலின் கீழிருந்த பலகையை அப்பு தட்டியவுடன், என் உடல் கீழே விழ, நான் மரணாவஸ்தையிருப்பதுபோல கால்களை உதறிக் கொண்டிருக்கும் பொழுது, நாடகம் பார்க்க வந்தவர்களுக்குள் வாஸ்தவத்தில் ஏதோ விபத்து நேரிட்டதென ஒரு பெரிய ஆரவாரம் உண்டாக, எங்கள் சபையில் ஓர் அங்கத்தினராயிருந்த, ஹாலில் உட்கார்ந்திருந்த டாக்டர் ராமாராவ் என்பவர் ஓடிவந்து, மேடையின் மீது குதித்தேறி, என் உடம்பை அப்படியே தாங்கிக் கொண்டார்! புஷ்பவர்மன் வேஷம் பூண்டு, அம்பினை எய்து என்னைக் காப்பாற்ற வேண்டிய எனது நண்பர் ரங்கசாமி ஐயங்கார், அம்பெய்வதை விட்டு, தானும் ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டார்!
மேடையிலிருந்த எனது ஆக்டர்களெல்லாம் ஏதோ கெடுதி நேரிட்டதென என்னைச் சூழ்ந்தனர்! உடனே எங்கள் கண்டக்டர் திருமலைப்பிள்ளை டிராப் படுதாவை விட்டுவிட்டு அவரும் ஓடி வந்தார். என்னடா இதெல்லாம் என்று கண் விழித்துப் பார்த்தேன்! (அக்காட்சியில் நான் அந்தகனாக நடிக்க வேண்டியிருந்ததை, இதை வாசிக்கும் எனது நண்பர்கள் கவனிப்பார்களாக!) அப்பொழுது என் மார்பின்மீது ரத்தம் துளித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். இதற்குக் காரணம் என் உடலைத் தாங்குவதற்காகக் கட்டியிருந்த பித்தளைக் கம்பிகளில் ஒன்று என் காதிலணிந்திருந்த கடுக்கனில் மாட்டிக் கொண்டு இழுக்க, என் காது சிறிது அறுந்ததென்பதைக் கண்டேன். இத்தனை வருஷங்களாகியும் அந்த வடுவிற் சிறிது என் இடது காதை விட்டகலவில்லை .
இந்த சத்ருஜித் நாடகமானது எங்கள் சபையோரால் இன்னும் ஒருமுறைதான் ஆடப்பட்டது. அப்படி ஆடியது 1898 டிசம்பர் மாதம் 25ஆம் தேதி. அச்சமயம், அ. கிருஷ்ண சாமி ஐயர் இந்திரசேனையாக நடித்தார். நித்யாநந்தன் பாகம் ஆர். ஸ்ரீனிவாசராவ் என்பவரால் எடுத்துக் கொள்ளப்பட்டது. கிருஷ்ணசாமி ஐயர், வழக்கம்போல் மிகவும் நன்றாய் நடித்துப் பாடினார். சென்ற 34 வருஷங்களாக இந்நாடகம் எங்கள் சபையோரால் ஆடப்படாததற்கு, இதுதான் காரணம் என்று சொல்ல முடியவில்லை. நான் கண்டக்டராயிருந்த வரையில் ஆடாததற்குக் காரணம் எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு இதை ஆட மறுபடியும் பிரியப்படாததேயாம். இதர கம்பெனிகளாலும் சபைகளாலும் இது சுமார் பதினாறு தடவைதான் இதுவரையில் ஆடப்பட்டது. இதற்கு ஒரு காரணம், இந்நாடகமானது ஆடுவதற்குக் கொஞ்சம் கடினமானது என்பதாயிருக்கலாம். ஆயினும் கூடியவரை, கவர்ன்மென்ட் ஆபீசர்கள் பார்டி, சென்ற வருஷம் இதை மிகவும் விமரிசையாக நடத்தி இருக்கின்றனர். இவ்வருஷம் இதை எங்கள் சபையில் ஆட வேண்டுமென்று எங்கள் தமிழ்க் கண்டக்டர் தெரிவித்திருக்கிறார்; மதுரை டிராமாடிக் கிளப்பாரும் இதை இவ் வருஷம் ஆடினர். அச்சமயம் எனதுயிர் நண்பர் நாகரத்தினமும் நானும் முக்கிய பாகங்களை அங்குச் சென்று எடுத்துக்கொண்டோம்.
1897ஆம் வருஷம் டிசம்பர் மாசம் எங்கள் சபை மறு படியும் பெங்களூருக்குப் போய் 3 நாடகங்கள் ஆடியது. 35 அங்கத்தினர் இங்கிருந்து டிசம்பர் மாசம் 24ஆம் தேதி புறப்பட்டுப்போய், 1898ஆம் வருஷம் ஜனவரி மாசம் 2 ஆம் தேதி திரும்பி வந்தோம். இம்முறை தெலுங்கு நாடகம் ஒன்றும் ஆட வேண்டுமென்று தெலுங்கு ஆக்டர்களையும் அழைத்துக் கொண்டு போக ஏற்பாடு செய்தபடியால்,
முதன்முறை பெங்களூருக்குப் போவதற்கு வந்த ஆட்சேபணை மாதிரி ஒன்றும் வராமற் போயிற்று. என்ன காரணம் பற்றியோ ஆரம்பமுதல் இந்தத் தடவை எங்கள் சபை பெங்களூருக்குப் போவதனால் நஷ்டம் உண்டாகும் என்று என் மனத்திற் பட்டது. அதன்பேரில் இரண்டு தமிழ் நாடகங்களும் ஒரு தெலுங்கு நாடகமும் போட வேண்டுமென்று தீர்மானித்த படியால், முடிவில் ஏதாவது நஷ்டம் நேரிட்டால், அந்த நஷ்டத்தில் இரண்டு பாகம் தமிழ் கண்டக்டரும் ஒரு பாகம் தெலுங்கு கண்டக்டரும் பொறுக்க வேண்டுமென்றும் சபைக்கு ஒரு நஷ்டமும் கூடாதென்றும் தீர்மானித்தோம் (லாபம் வந்தால் சபைக்குச் சேர வேண்டியதே). என் மனத்திற் பட்டபடியே முடிவில் இம்முறை மொத்தம் சுமார் ரூபாய் 300 நஷ்டமுண்டாக அதில் நான் 200 ரூபாயும் தெலுங்கு கண்டக்டராகிய எதிராஜலு செட்டியார் 100 ரூபாயுமாக ஏற்றுக் கொண்டோம். ஆரம்பத்திலேயே இம்முறை நஷ்ட மடைவோம் என்று என் புத்தியிற்பட்டதற்கு நான் தக்க காரணம் சொல்ல அசக்தனாயிருக்கிறேன்; ஒரு காரணம்தான் எனக்குத் தோன்றுகிறது. என்னுடைய காரியங்களிலும், முக்கியமாக சபையின் காரியங்களிலும், அவைகளுக்கு ஏதாவது இடையூறுகள் வந்தால்தான், முடிவில் சரியாக முடிகிறது என்பது என் அனுபவமாயிருந்தது (இப்பொழுதும் இருக்கிறது). ஆகவே ஓர் ஆட்சேபனையு மில்லாமல், இம்முறை பெங்களூருக்குப் போவது தீர்மானிக்கப்படவே, எனக்கு அந்தச் சந்தேகம் உதித்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. இப்பொழுதும் ஏதாவது ஒரு காரியத்தை நான் மேற்கொண்டால் அதற்கு ஆட்சேபணைகளும் இடையூறு களும் நேரிடுங்கால், அவைகள் எனக்கு நாம் மேற்கொண்ட காரியம் முடிவில் சரியாக முடியும் என்னும் உற்சாகத்தை உண்டு பண்ணுகின்றன.
என் சந்தேகத்திற்குத் தக்கபடி இம்முறை பெங்களூருக்குப் போனபோது, ஆரம்பமுதல் எல்லாம் கோணலாய்ப் போயிற்று. முதலில், முன்பு நாங்கள் ஆடிய கப்பன் (Cubbon)நாடக சாலை எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு மூலையில் ‘எல்கின் ஹால்’ என்கிற ஒரு பழைய கட்டடம் கிடைத்தது. மூன்று நாடகங்களிலும் ஒன்றிலாவது சரியாகப் பணம் வசூலாக வில்லை. ஆக்டர்களுக்குள்ளும் தெலுங்கு தமிழ் என்னும்
விவாதத்தினாலோ, வேறு என்ன காரணத்தினாலோ ஒற்றுமை என்பதில்லாமற் போயிற்று. இங்கு ஆடிய தமிழ் நாடகங்கள் “இரண்டு நண்பர்"களும், “ரத்னாவளி” யுமாம். ரத்னாவளி நாடகத்தைப் பெங்களூரில் முதலில் ஆட வேண்டுமென்று விரைவில் எழுதி முடித்தேன். இம்முறை என்னாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு எங்களுடன் வந்தபடியால், அவர் அவ்விரண்டு நாடகங்களிலும் முக்கிய ஸ்திரீவேஷம் தரித்தார். அ. கிருஷ்ணசாமி ஐயர் மற்றொரு ஸ்கிரீ வேடம் பூண்டனர். இவ்விரண்டு நாடகங்களிலும்; தெலுங்கு நாடகத்தில் இவரும் கே. ஸ்ரீனிவாசனும் சந்திரமதியாகவும் ஹரிச்சந்திரனாகவும் நடித்தனர். எங்கள் சபையிலிருந்து முக்கிய ஆக்டர்கள் அனைவரும் நடித்தோம். நாடகங்கள் என்னமோ நன்றாய்த் தானிருந்தன என்று வந்தவர்கள் எல்லாம் கூறினர். நானும் அப்படித்தான் நினைத்தேன்; வரும்படி மாத்திரம் வரவில்லை. இதற்கு முக்கியக் காரணம் சரியான நாடக சாலையில் நாங்கள் நடத்தாதபடியினால் என்றும் கூறுவதற்கில்லை. மூன்று நாடகங்களையும் முடித்துக்கொண்டு பட்டணம் திரும்பும் பொழுது இனி பெங்களூரில் சபையுடன் கால் எடுத்து வைப்பதில்லை என்று தீர்மானித்துக்கொண்டேன். அத் தீர்மானத்தினின்றும் பிறழாது இருந்தேனாயின் சபைக்கு மிகவும் நலமாயிருந்திருக்கும். ஏனெனில் அதனின்றும் மாறி, மூன்றாம் முறை, மறுபடி பெங்களூருக்குப் போனோம். அதனால் சபைக்குப் பெரும் நஷ்டமுண்டாயிற்று. இந்தக் கதையைப் பிறகு எழுதுகிறேன்.
இங்கு நாங்கள் முதன்முறை ஆடிய நாடகமாகிய ‘ரத்னாவளி'யைப்பற்றி நான் கொஞ்சம் எழுத வேண்டும். இந்நாடகம் ஸ்ரீஹர்ஷன் என்பவரால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது; நான் தமிழில் அமைத்ததற்குச் சில வருஷங்களுக்கு முன் இது இங்கிலீஷில் மொழி பெயர்க்கப் பட்டிருந்தது. நான் தமிழில் அமைத்ததற்குச் சில வருஷங் களுக்கு முன்பாக, எனது நண்பர் கா. சரவணமுத்துப்பிள்ளை பி.ஏ. என்னும் யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர், வேறொரு நாடகச் சபைக்காக இதைத் தமிழில் மொழி பெயர்த்தனர். இதை அச்சபையார் ஆடியபொழுது, நான் போய்ப் பார்த்தேன். நாடக விளம்பரத்தில், ‘பாப்ரவ்யன்’ என்று ஒரு நாடகப் பாத்திரத்தின் பெயர் போட்டிருந்தது. “இது யார் இது?
பப்பரவாயன்?” என்று என் பக்கத்திலுட்கார்ந்து கொண்டிருந்த என் நண்பர்களிடம் ஏளனம் செய்தேன். இந்தப் பாப்ரவ்யன் பாத்திரம் நாடகத்தில் ஒரு காட்சியிலோ இரண்டு காட்சியிலோ தான் வருகிறது. நான் இந்நாடகத்தைத் தமிழில் அமைத்த பொழுது, இவனைப் பப்பரவாயனாக்கி, இவனுக்கு ஒரு தம்பி டமாரவாயனையும் கொடுத்து, இவர்களிருவரையும், ஹாஸ்யத்திற்காக நாடக ஆரம்ப முதல் கடைசி வரைக்கும் வரும்படியாகச் செய்தேன். நான் எழுதியபடி இந்நாடகத்தை எங்கள் சபையோர் பிறகு பன்முறை ஆடியிருக்கிறார்கள். அன்றியும் இதர சபைகள் இதை அநேகம் முறை ஆடியிருக் கின்றன. பால நாடகக் கம்பெனிகளில் பெரும்பாலும் இதை ஆடாதது கிடையாது. இப்படிப் பன்முறை இது நடிக்கப்படும் பொழுதெல்லாம், இந்தப் பப்பரவாயன் டமாரவாயன் பாத்திரங்கள் விடா நகைப்பையுண்டு பண்ணுகின்றன என்பதற்குச் சந்தேகமில்லை. இவ்விரண்டு பாத்திரங்களை இவ்வாறு எழுதியதுமன்றி, பழைய நாடகக் கதையிலில்லாத சில காட்சிகளையும் புதிதாய் ஏற்படுத்தி எழுதியுள்ளேன். இந்நாடகமானது ஒருமுறை பிரசிடென்ஸிகாலேஜில் (Presidency College) மாணவர்கள் ஆடியபொழுது, அங்கு வந்திருந்த சில சமஸ்கிருத வித்வான்கள், “நீங்கள் புதிதாய் எழுதிய காட்சிகள், நாடகக் கதைக்கும், நாடகப் பாத்திரங்களின் குணாதிசயங் களுக்கும் பொறுத்தமாயிருப்பதுதான் சிலாக்கியம்” என்று கூறினார்கள். அவர்கள் வார்த்தையை வெறும் முகமனாகக் கொள்ள எனக்கு நியாயமில்லை. இவ்வாறு நான் புதிதாக கை சரக்காய்ச் சேர்த்த காட்சிகளுள் ஒரு காட்சி எழுதினதற்கு ஒரு வினோதமான காரணம் உண்டு. அதை, இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு நான் தெரிவிக்க வேண்டியது அவசியம். நான் இது வரையில் ஆறு வருஷகாலமாக எங்கள் சபையின் தமிழ் நாடகங்களிலெல்லாம் ஆண் வேடமே பூண்டு நடித்து வந்தேன். “தமிழ் நாடகத்தில் நீ ஸ்திரீ வேஷம் தரித்ததை நாங்கள் பார்க்கவேயில்லை; ஏதாவது ஒரு நாடகத்தில் ஸ்திரீ வேஷம் நீதரிக்கவேண்டும்” என்று என் நண்பர்கள் பன்முறை கேட்டிருந்தனர். எனக்கும் இவ் விஷயத்தில் ஓர் அற்ப ஆசை இருந்தது; ஒரு முறை தமிழ் நாடகத்தில் ஸ்திரீ வேஷம் தரித்து எப்படி இருக்கிறதென்று பார்க்க வேண்டுமென்று ஏதாவது சமயம் கிடைக்குமாவென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன். ரத்னாவளி, நாடகத்தை நான் தமிழில் அமைத்துக் கொண்டு
வரும்போது, சிறைச்சாலைக் காட்சியில், வத்சராஜன், பெண் வேடம் பூண்டு வந்து தன் காதலியை, வாசவதத்தை அறியாதபடி சந்திப்பதாக ஒரு காட்சி எழுதினேன். இது சம்ஸ்கிருத கிரந்தத்தில் கிடையாது. அக்காட்சி வரும்பொழுது, ஜெயராம் நாயகர் எனக்கு அருகிலிருந்து ஸ்திரீ வேஷம் தரிப்பித்தார். என் உருவை நான் கண்ணாடியிற் பார்த்த பொழுது இவ்வளவு அசங்கியமாயிருக்கிறோமா என்று எனக்கே நகைப்பு வந்தது. ஆகவே மேடையினமீது நான் தோன்றிய பொழுது வந்திருந்த ஜனங்கள் நகைத்தது மிகவும் பொருத்தமானதென எண்ணினேன். ஸ்திரீ வேடம் நமக்குப் பொருத்தமானது அல்ல என்று நான் நன்றாயறிந்தபோதிலும், இந்த நாடகத்தில் நான் வத்சராஜன் வேடம் பூணும்பொழு தெல்லாம், அவ்வேஷம் தரிக்க நேரிட்டது.
இந்நாடகத்தை நான் எழுதியதில் ஒரு விசேஷம் உண்டு. இதற்கு முன் நான் எழுதிய நாடகங்களிலெல்லாம் வசன நடை மிகவும் சுலபமாயும், ஸ்தரீ பாலர்கள் படித்தபோதிலும் அர்த்தமாகும்படியானதாயும் எழுதி வந்தேன். (இப்பொழுதும் இந்த ஏற்பாட்டை விடவில்லை நான்.) அதன் பேரில் சிலர், தமிழ் வித்வான்களைப்போல் கடின நடையில் எழுதத் தெரியாது போலும் என்று என்னை ஏளனம் செய்ததாகக் கேள்விப்பட்டேன். அப்படியும் எனக்கு எழுதத் தெரியும் என்று அவர்களுக்கு நிரூபிப்பதற்காக, எதுகை, மோனை அமைத்து, பல இடங்களில் செய்யுள் நடையைப்போலவே இருக்கும்படியாகக் கடினமான பதங்களுடன், இந்நாடகத்தில் சில காட்சிகளை எழுதினேன்; இதை வாசிப்பவர்கள் இந்நாட கத்தில் யௌகந்தராயணன் வசனங்களைப் பார்ப்பார்களாக. நாடகமானது சம்ஸ்கிருதத்தில் திருயச் காவ்யம் என்று சொல்லப்பட்டிருக்கிறது; அதாவது படிக்கத்தக்க விஷயமல்ல, பார்க்கத்தக்க விஷயம் என்பதாம்; அப்படிப் பார்க்கும் பொழுது, பார்ப்பவர்களுக்கு அர்த்தமாகாதபடி, தன் பாண் டித்யத்தைக் காட்ட, கடுந்தமிழில் எழுதுவதில் என்ன பிரயோஜனம்? ஆகவே அனைவரும் கேட்டு எளிதில் அர்த்தம் செய்து கொள்ளக்கூடிய நடையிலேயே எழுதுவது தகுதி என்பது எனது சித்தாந்தம். ஆகவே இந்நாடகத்தில் இவ்வாறு எழுதியது, என்னை ஏளனஞ் செய்தவர்களுடைய எண்ணத்தை மாற்றும் பொருட்டன்றி, வேறு காரணத்தாலன்று.
இந்த 1897ஆம் வருஷம், சென்னை ராஜதானியில் எங்கள் சபையைப்போன்ற அநேக சபைகள் அதுவரையில் ஏற்பட்டிருந்தபடியால், அவைகளின் அங்கத்தினரையெல்லாம் ஒருங்கு சேர்த்து, ஒரு கூட்டம் கூடி, தென் இந்திய நாடக மேடையை எப்படி முன்னுக்குக் கொண்டு வருவது என்பதைப் பற்றி ஆலோசிக்க வேண்டுமென்று தீர்மானித்து, அங்ஙனமே விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஒரு கூட்டம் கூட்டினோம்.
அதற்கு, வெளியூரிலிருந்து சபைகளின் பிரதிநிதிகள் ஒருவரும் வராவிட்டாலும், சென்னையிலுள்ள எல்லாச் சபைகளும் பிரதிநிதிகளை அனுப்பின. அக் கூட்டத்திற்கு ஆர்.எஸ். லெப்பர் என்பவர் அக்கிராசனாதிபதியாக இருந்தார். தென் இந்திய நாடக மேடையிலுள்ள பல குற்றங்களை எடுத்துப் பேசி, அவைகளைத் திருத்துவதற்கு மார்க்கங்கள் இன்னவென்று பல ஆலோசனைகள் செய்த போதிலும், அவைகளெல்லாம் இம்மாதிரியான கூட்டங்களின் பெரும் பான்மை வழக்கப்படி, ஆலோசனைகளாகவே நின்று விட்டன! நமது நாட்டை இத்தகைய குற்றம் எப்பொழுது விட்டொழியுமோ, அறிகிலேன்.
பதினான்காம் அத்தியாயம்
மறு வருஷமாகிய 1898இல் இந்தியா தேச முழுவதையும் பீடித்த பிளேக் (Plague) பண்டுக்காக இரண்டு நாடகங்கள் நடத்தியதுமன்றி, எங்கள் சபையில் டிசம்பர் மாதம் ஐந்து நாடகங்களை நடத்தினோம். இதுதான் கிறிஸ்ட்மஸ் விடுமுறையில் எங்கள் சபையார் நாடகங்களை மொத்தமாக நடத்த ஆரம்பித்தது. இவ்வருஷம் தெலுங்கில் அரிச்சந்திர நாடகத்தையும், தமிழில் சத்ருஜித், லீலாவதி-சுலோசனா, மனோஹரா, கள்வர் தலைவன் என்னும் நாடகங்களையும் நடத்தினோம்; ஒன்றுவிட்டொரு நாள் வரிசையாக ஐந்து நாடகங்கள், இரவில் 9 மணி முதல் ஏறக்குறைய 2 மணி வரையில் ஆடுவதென்றால் கஷ்டமாகத்தானிருந்தது. ஆயினும் அக்காலம் எல்லா ஆக்டர்களும் நல்ல வாலிபத்தி லிருந்தபடியால் அந்தச் சிரமத்தை நாங்கள் கவனிக்கவில்லை.
இவ்வருஷம் நான் புதிய நாடகமொன்றும் எழுதவில்லை. அதற்கு முக்கியக் காரணம் நான் இவ்வருஷம் ஹைகோர்ட்டு வக்கீலாக ஆனதே என்று நினைக்கிறேன்; கோர்ட்டு விஷயங்களெல்லாம் புதிதாய்க் கவனிக்க வேண்டியிருந்தபடியால் எனக்கு நாடகம் எழுத அதிக சாவகாசமில்லாமற் போயிற்று.
இதற்கப்புறம் நான் எழுதிய நாடகம் “காலவ ரிஷி” என்பதாம். இந்த நாடகத்தை நான் 1899 ஆம் வருஷம் முதலில் ஆரம்பித்து, சீக்கிரம் எழுதி முடிக்க, இது எங்கள் சபையோரால் மார்ச்சு மாதம் ஆடப்பட்டது. நான் இப் புராணக் கதையை நாடக ரூபமாக எழுதியதற்கு ஒருவிதத்தில் காரண பூதமா யிருந்தவர் எனது நண்பர் ஸ்ரீமான் அ. கிருஷ்ணசாமி ஐயர் என்றே சொல்லவேண்டும். அவர் இக்கதையை ஒருவாறு எழுதி என்னிடம் கொண்டு வந்து காண்பித்தார். அதை நான் படித்துப் பார்த்து கதை நன்றாகத்தானிருந்தது; நாடகமாக எழுதியது அவ்வளவு நன்றாக இல்லை; நீ இந்நாடகத்தில் ஆடவேண்டுமென்று விருப்பமிருந்தால் சொல், நான் எனக்குத் தெரிந்த வரை ஒழுங்காக நாடக ரூபமாக எழுதித் தருகிறேன் என்று கூற, அவர் அதற்கு இசையவே, “காலவரிஷி’ என்று பெயரிட்டு இந்நாடகத்தை எழுதினேன். கிருஷ்ணசாமி ஐயர் விருப்பத்தின்படியே இதில் கதாநாயகியாகிய சந்தியாவளியின் பாகத்தை அவருக்குக் கொடுத்தேன். எம். சுந்தரேசய்யர் பி.ஏ. என்பவர் தமிழ் நாடகமொன்றில் தான் கதாநாயகனாக நடிக்க வேண்டுமென்று கேட்க, அவருக்கு சித்ரசேனன் பாத்திரம் கொடுத்தேன். அவருடைய தம்பி ராமநாத ஐயருக்கு சித்ரசேனனது மற்றொரு மனைவியாகிய ரத்னாவளியின் பாகம் கொடுக்கப்பட்டது. நான் நாரதர் வேடம் எடுத்துக்கொண்டேன். எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலுவுக்கு, அவருக்குத் தக்கபடி எழுதிய சுபத்திரையின் பாகம் கொடுத்தேன். அவர் என்னுடனன்றி மற்றொருவனுடனும் மேடையின்மீது நடிக்க முடியாது என்கிற தீர்மானம் கொண்டிருந்தபடியால், நான் இந்நாடகத்தில் கடைசி இரண்டு காட்சிகளில் அர்ஜுனனாக வரும்படி நேர்ந்தது. ஒரு நாடகத்தில் ஒருவன் இரண்டு பாத்திரங்கள் பூணுவது தவறெனத் தெரிந்து, இதற்குப் பிறகெல்லாம், இந்நாடகம் எங்கள் சபையில் நடிக்கப்பட்ட பொழுது நான் பன்முறை அர்ஜுனன் வேடம் ஒன்றையே பூண்டேன். ஸ்ரீ கிருஷ்ண வேஷம் கே. ஸ்ரீனிவாஸனுக்குக் கொடுக்கப்பட்டது.
நாடகம் நடிக்கப்பட்டபொழுது, எம் சுந்தரேச ஐயர் சித்திரசேனன் பாகத்தில் விமரிசையாகத்தான் நடித்தார். இவருக்கும் சங்கீதத்திற்கும் வெகுதூரம். ஆகவே இவர் ஒரு பாட்டும் பாடாவிட்டாலும் வசனத்தில் நன்றாய் நடித்தார். இவரை ஒத்திகை செய்வதில் எனக்கு நேரிட்ட முக்கியமான கஷ்டம் என்னவென்றால், இவருடைய ஆங்கிலேய உச்சரிப்பை மாற்ற நேரிட்டதே; இவர் அநேக வருஷங்களாகக் கிறிஸ்தவ கலாசாலையில், ஷேக்ஸ்பியர் மகாகவியின் நாடகங்களில் ஆங்கிலத்தில் நடித்துப் பழக்கப்பட்டவர்; அன்றியும் ஆங்கில பாஷையில் பேசுவதில் நிபுணர்; இவரது உச்சரிப் பெல்லாம் ஆங்கில பாஷைக்குரிய உச்சரிப்பாயிருக்கும். “கள்வர் தலைவன்” என்னும் நாடகம் இரண்டாம் முறை நாங்கள் போட்டபொழுது, இவருக்கு சௌரியகுமாரன் பாகம் கொடுத்திருந்தேன்; அதன் முதல் ஒத்திகையில் இவர் பேசவேண்டிய “பலாயனனுக்கு நாம் கொடுத்தது (மருந்து) போதுமா போதாதா?” என்னும் வார்த்தைகளை இவர் ஆங்கில உச்சரிப்புடன் வெள்ளைக்காரன் தமிழ் பேசுவது போல் பேசியதை, இப்பொழுது நினைத்துக்கொண்டாலும் எனக்கு நகைப்பு வருகிறது. இதை அவரைப்போல நான் சொல்லிக் காட்டும்பொழுதெல்லாம், எனது நண்பர்கள் நகைப்பார்கள். இந்த ஆங்கிலேய உச்சரிப்பை மாற்றுவதற்கு நான் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. ஆயினும் முடிவில் அதை முற்றிலும் ஒழித்தேன் என்றே நான் சொல்ல வேண்டும்.
சந்தியாவளியாக நடித்த அ. கிருஷ்ணசாமி ஐயர் மிகவும் நன்றாகப் பாடி நடித்தார் என்பதற்கு ஐயமில்லை. இதனால் இவருடன், இவரது சக்களத்தியாக வரவேண்டிய எம். ராமநாத ஐயருக்கு ஒரு பெருங் கஷ்டமாயிற்று. எல்லாக் காட்சிகளிலும் ஏறக்குறைய இருவரும் ஒன்றாய் வர வேண்டியிருந்தது; ஆகவே ஒத்திகை நடக்குங்கால், ஒரு காட்சியில், கிருஷ்ணசாமி ஐயர் பாடும் பொழுதெல்லாம் இவர் சும்மா நின்று கொண்டிருப்பதென்றால், இவருக்குக் கஷ்டமாயிருந்தது. இவர் மெல்ல என்னிடம் வந்து “என்ன சம்பந்தம், எனக்கு மிகவும் கஷ்டமாயிருக்கிறதே. கிருஷ்ணசாமி பாடும் பொழு தெல்லாம் நான் பக்கத்தில் மரம்போல் நின்று கொண்டிருந்தால், எல்லோரும் என்னைப் பார்த்து தகைக்கிறார்களே, இதற் கென்ன செய்வது?” என்று கேட்டார்.
அதன்மீது, அக்கஷ்டத்தை அறிந்தவனாய், மறு ஒத்திகையில் அந்தப் பாகம் வரும்பொழுது, நீ சோகத்தால் மூர்ச்சையானவள் போல் விழுந்துவிடு என்று சொல்லி, என் நாடக ஏட்டிலும் “ஹா” என்று கூவி மூர்ச்சையாகிறாள் என்று எழுதி வைத்தேன். இவ்விரகசியம் எப்படியோ வெளியாகி, நாடக தினத்தில், இக்காட்சியில் கிருஷ்ணசாமி ஐயர் பாட ஆரம்பித்தவுடன், ராமநாத ஐயர் மூர்ச்சையாகி விழுந்து விடவே, சபையோரெல்லாம் நகைக்க ஆரம்பித்தனர்! இதற்கடுத்தாற்போல் இந்நாடகமானது பன்முறை பிறகு நடிக்கப்பட்ட பொழுது, இந்த ரத்னாவளியின் பாகம் எடுத்துக்கொண்ட எனது நண்பர் எம். ராமகிருஷ்ண ஐயருக்கும் பாடத் தெரியாது. ஆகவே இவரும் இக்காட்சியில் மூர்ச்சை யாகும் பொழுதெல்லாம், பாடத் தெரியாதபடியால் மூர்ச்சையாகிவிட்டார் என்று சபையோர் ஏளனம் செய்வது வழக்கமாகிவிட்டது. இப்பொழுதும் ஏதாவது நாங்களெல்லாம் உட்கார்ந்து வேடிக்கையாய்ப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, “ஹா! மூர்ச்சையாகிறாள்” என்று எனது நண்பர்கள் ஏளனம் செய்வார்கள். இப்பொழுதும் யாராவது பாடத் தெரியாத ஸ்திரீ வேஷதாரி, எங்கள் சபை நாடகத்தில் வந்தால், என்ன, “ஹா! மூர்ச்சையாகிறாளோ?” என்று கேட்பார்கள் வேடிக்கையாக. எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு எங்கள் சபையில் சுமார் 28 வருஷங்கள் நடித்த பாத்திரங்களுக்குள் ஒரு முக்கியமான பாத்திரம்; இந்நாடகத்தில் அவர் சுபத்திரையாக வந்ததே. இந்த சுபத்திரையாக நடிப்பதில் அவருக்கு அதிகப் பிரீதியிருந்தது. சந்தியாவளியைப்போல் அவ்வளவு பெரிய பாகமுடைய பாத்திரமாயில்லாவிட்டாலும், நன்றாய் நடிப்பதற்கு அநேக இடங்கள் அமைந்திருந்தன. இவர் சுபத் திரையாக இந்நாடகத்தில் நடித்தபொழுதெல்லாம் வந்திருந்தவர் களுடைய மனத்தைக் கவர்ந்தனர் என்று நான் கூறுவது மிகையாகாது. இதில் நடிக்கும் பொழுது, ப்ரௌடா நாயகியாகிய ஒரு குல பத்தினி எப்படி வேஷம் பூண வேண்டுமோ, அதற்குத் தக்கபடி வேஷம் பூண்டு, மிகவும் ஒழுங்காய் நடிப்பார். முக்கியமாக சுபத்திரை தன் கணவனான அர்ஜுனனை வசப்படுத்த வேண்டி, வயிற்று நோயால் ஏதோ பாதைப்படுவதாக நடிக்கும் காட்சியில், இவருக்கு நிகர் ஒருவரும் இல்லையென்றே சொல்ல வேண்டும். இவருக்குப் பிற்காலம் இந்தக் காட்சியை சில ஆக்டர்கள் ரசாபாசப்படுத்
தியதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன். சற்றேறக்குறைய ரங்கவடிவேலுக்குச் சமானமாக, இக் காட்சியில் நடித்தது, கே. நாகரத்னம் ஐயர் ஒருவர்தான் என்பது என்னபிப்பிராயம்.
இந்நாடகமானது எங்கள் சபையோரால் பன்முறை பிறகு நடிக்கப்பட்டது. அங்ஙனம் நடிக்கப்பட்ட பொழுதெல்லாம் சித்திரசேனர் வேடம் டாக்டர் ஸ்ரீனிவாசராகவாச்சாரி பூண்டனர். முதல் சித்திரசேனனைப் போலல்லாது, இவருக்கு நன்றாய்ப் பாடத் தெரியுமாதலால், இப் பாத்திரத்தில் அநேகம் பாட்டுகளைப் பாடுவார். கிருஷ்ணசாமி ஐயருக்குப் பின் சந்தியாவளி வேடம் பூண்ட டி.சி. வடிவேலு நாயகரும் இந்நாடகத்தில் அதிகப்பாட்டுகள் பாடுவது வழக்கமாதல் பற்றி, இந்நாடகத்தை எங்கள் சபை அங்கத்தினர் “சங்கீத காலவர்” என்று பெயரிட்டழைப்பதுண்டு. சில சமயங்களில் இதில் எல்லா ஆக்டர்களும் சேர்ந்து சுமார் 50 பாட்டுகள் பாடியதுமுண்டு. ஆகவே, யாராவது சுகுண விலாச சபையில் பாட்டுக்குறைவு என்று சொல்வார் களாகில், “காலவ ரிஷி” நாடகத்திற்கு வந்து பாருங்கள், என்று நான் பதில் உரைப்பேன்.
இந்தக் “காலவ ரிஷி” நாடகமானது இதர சபையோர் களாலும், நாடகக் கம்பெனிகளாலும், முக்கியமாக, பாய்ஸ் கம்பெனிகளாலும் பன்முறை ஆடப்பட்டிருக்கிறது. நான் அறிந்தபடி இதுவரையில் 307 முறை ஆடப்பட்டிருக்கிறது. நான் அறியாதபடி எத்தனை முறை ஆடப்பட்டிருக்கிறதோ ஈசனுக்குத்தான் தெரியும்.
இந் நாடகமானது எங்கள் சபையில் வருஷத்திற்கு ஒரு முறையாவது சராசரியில் போடப்படும். கிறிஸ்ட்மஸ் விடுமுறையில் மொத்தமாகப் பத்து அல்லது பதினைந்து நாடகங்கள் போடும் பொழுதெல்லாம் இது ஒன்றாய் இருக்கும்; அன்றியும் நாங்கள் வெளியூருக்குப் போய் நாடகம் ஆடிய பொழுதெல்லாம், ஆடிய நாடகங்களில் இது ஒன்றாயிருந்தது. இதுவரையில் எங்கள் சபைக்கு அதிக பொருளைச் சேர்ப்பித்த நாடகங்களில் இது ஒரு முக்கியமானதாகும்.
1899ஆம் வருஷம் நான் “நற்குல தெய்வம்’ என்னும் ஒரு சிறு நாடகத்தை எழுதினேன். இவ்வருஷம் சபை பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஏதாவது புதியதாய் வேண்டு மென்று எனது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன்பேரில் இது எழுதப்பட்டது. கொஞ்ச நாளாக ராமாயணத்திலிருந்து சீதா
கல்யாணத்தை ஒரு நாடகமாக எழுத வேண்டுமென்று யோசித்துக் கொண்டிருந்த நான், அதை எழுதுவதிற் பிரயோஜனமில்லை; புருஷோத்தமனான, ஸ்ரீ ராமருடைய பாத்திரத்தை யாரால் சரியாக நடிக்க முடியும் என்று விட்டு விட்டேன். அந்நாள் முதல் இது வரையில் எனது நண்பர்களில் அநேகர் ராமாயணத்தை நாடக ரூபமாக எழுத வேண்டுமென்று பன்முறை கேட்டும், அவர்கள் வேண்டுகோளுக்கு நான் இசையாததற்கு இதுதான் காரணம். சீதா கல்யாணத்தை எழுதுவதைவிட, சீதா தேவியின்சுயம் வரக் காட்சியைப்போல வேறொரு சுயம்வரம் எழுதலாமெனத் தோன்றியது. அதன்பேரில், அதையே முக்கியமான காட்சியாக வைத்துக் கொண்டு, “நற்குல தெய்வம்” என்னும் நாடகத்தை எழுதி முடித்தேன். முதன் முறை இதை எங்கள் சபையார் நடித்தபொழுது இப்பொழுது இந்நாடகத்துடன் ஆடப்படும் இடைக் காட்சிகள் சேர்க்கப்படவில்லை. சபை தினக் கொண்டாட்டத்திற்காக அனைவரையும் வரவழைத்து, டிக்கட்டு இல்லாமல் ஆடிய நாடகமாகையால் சிறியதாயிருந்தாலும் தவறில்லை என்று அப்படியே ஆடினோம்.
பிறகு இதையே டிக்கட்டுகளுடைய நாடகமாக நடிக்க வேண்டுமென்று தீர்மானித்தபோது அவ்வளவு சிறியதாயிருந் தால் உதவாது, கொஞ்சம் பெரிதாக ஆக்க வேண்டுமென்று தீர்மானித்து, மூன்று இடைக் காட்சிகளும் இத்துடன் சேர்த்து ஆடினோம். இவ்விடைக் காட்சிகள், நான் அச்சிட்டிருக்கும் பிரஹசனங்களுள் “கண்டுபிடித்தல்” என்னும் பிரஹசனமாக அச்சிடப்பட்டிருக்கிறது. இச் சிறு நாடகம் அன்று ஆடப்பட்ட பொழுது, வித்யா வினோதி ராவ்பகதூர் பி. அனந்தாசார்லு இந் நாடகத்தைப்பற்றியும் எங்கள் சபையைப்பற்றியும் மிகவும் சிலாகித்துப் பேசினார். நாடகம் நன்றாயிருந்ததென்பதற்கு அத்தாட்சியாக, வந்திருந்தவர்களில் பலர் சபையில் அங்கத்தினராகச் சீக்கிரம் சேர்ந்தனர். இது எனது இளைய நண்பர்கள் கஷ்டமில்லாதபடி ஆடக்கூடிய நாடகம். பள்ளிக் கூட வருஷோற்சவங்களில் இதை எளிதில் ஆடலாமெனத் தோன்றுகிறது.
இவ் வருஷம் எங்கள் சபையின் நண்பர்களுள் சிலர் அ. கிருஷ்ணசாமி ஐயர், சி. ரங்கவடிவேலு, ராஜகணபதி முதலியார், எம். வை. ரங்கசாமி அய்யங்கார் முதலியவர்களுக்கும், எனக்கும் பொற் பதக்கங்கள் பரிசாக அளித்தனர். இதை
எனக்கும் எனது நண்பர்களுக்கும் ஒரு பெருமையாக எடுத்துக் கூற வரவில்லை; இதனால் நேரிட்ட ஒரு கெடுதியை உரைக்கவே இதை எழுதலானேன். மேற்சொன்னபடி சிலருக்கு இவ்வாறு பொற் பதக்கங்கள் அளிக்கப்படவே, மற்றவர்களுக்கு மனஸ்தாபமுண்டாகி, சபையில் கலகம் பிறந்து குழப்பமாய் முடிந்தது. ஆக்டர்களுக்குள் இப்படிப் பிறந்த மனஸ்தாபனத்தை அகற்ற நாங்கள் எல்லோரும் வெகுபாடு பட வேண்டியதாயிற்று. அதன் பிறகு, இனி நாடக மேடையில் எங்கள் சபையில் ஒரு ஆக்டருக்கும் யாரும் பரிசளிக்கலாகா தென்றும், அப்படி யாராவது அளிக்க முயன்றாலும் ஆக்டர்கள் பெறக்கூடாதென்றும் ஒரு நிபந்தனை செய்து கொண்ட பிறகே இந்த மனஸ்தாபம் அடங்கியது. ஆகவே ஜீவனோபாயமாக நாடகமாடுபவர்கள் இவ்வாறு பொற்பதக்கங்கள் பெறுவது தவறென்று நான் சொல்லவில்லை. அஃதன்றி வேடிக்கை யார்த்தமாக நாடக சபையின் அபிவிருத்திக்காக நடிக்கும் அமெடூர்ஸ் (amateurs) அரங்க மேடையில் பரிசு பெறுவது எப்பொழுதும் மற்ற ஆக்டர்களுக்கு மனஸ்தாபம் உண்டு பண்ணுமாதலால், இதை வாசிக்கும் நாடகமாடவிரும்பும் எனது இளைய நண்பர்கள் இதைக் கவனிப்பார்களாக. மேற்சொன்ன நிபந்தனையானது எங்கள் சபையில் இதுவரையில் மிகவும் ஜாக்கிரதையாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிபந்தனையை மேற்கொள்ளாது நடந்த அநேகம் சபைகள், இதனாலுண்டான மாச்சரியத்தினால் கலைந்து போனதை நான் அறிந்திருக்கிறேன்.
1900ஆம் வருஷம் எங்கள் சபையானது கொஞ்சம் நித்ரா வஸ்தையிலிருந்ததென்றே சொல்ல வேண்டும். லீலாவதிசுலோசனா, இரண்டு நண்பர்கள் என்னும் இரண்டு பழைய தமிழ் நாடகங்களை ஆடியதன்றிப் புதிதாய் ஒன்றும் ஆடவில்லை . தெலுங்கில் மாத்திரம், ஊ. முத்துக்குமாரசாமி செட்டியார் எழுதிய “சுபத்ரார்ஜுனா” என்னும் நாடகம் ஆடப்பட்டது. இப்படி உற்சாகக் குறைவுடன் இருந்ததன் பலன் என்னவென்றால் எங்கள் சபையின் வரும்படியும் குறைந்ததேயாம். இவ்வருஷம் ஜூன் மாதம் எங்கள் கையிருப்பு ரூ.51-9-7 தான். எந்த விஷயத்திலும் சிரத்தை குறைந்தால் வருவாயும் குறையும்.
இதன் பிறகு 1901ஆம் வருஷம் முதலில் நான் “மார்க்கண்டேயர்” என்னும் நாடகத்தை எழுதினேன். இதை
எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலுக்காக எழுதினேன். இச்சமயம் எங்கள் சபையில் பிடில் வாசித்துக்கொண்டிருந்தவர், சோமுராவ்; இந்தச் சோமு ராவ், சிறு வயதில் நாடகக் கம்பெனியில் ஆக்டராயிருந்து, மார்க்கண்டேயர் வேடத்திலும், குறத்தி வேடத்திலும் பெயர் பெற்றவர்; அக்காலத்திலெல்லாம் சோமுராவ் குறத்தியாகவோ, மார்க்கண்டேயராகவோ மேடைமீது வருகிறார் என்றால், ஜனங்கள் கூட்டம் கூட்டமாய் நாடகம் பார்க்கப் போவார்களாம்; இதைப்பற்றி என் தந்தை எனக்குச் சொல்லியிருந்தார்; இவர் பெயரை நாடக விளம்பரங்களில் “ஜகன்மோகனசபா ரஞ்சித சுகசாரீர சோமு ராவ்” என்று அச்சிடுவார்களாம்; குறத்தியாக வந்து, “சுந்தரமாய் சுகிர்த குற வஞ்சி வந்தாள்!” என்னும் பாட்டை, ஒரு மணி நேரம் பாடி நடிப்பாராம்; இப்படிப்பட்டவர் வயது மேலிட்டமையால் நாடகமாடுவதை விட்டு, பிடில் வாசிக்க எங்கள் சபைக்கு 1895ஆம் வருஷம் வந்து சேர்ந்தார். இவரை எங்கள் சபைக்குச் சிபாரிசு செய்தது சி. ரங்கவடிவேலு. அதுமுதல் எங்கள் சபையில் பக்க வாத்தியக்காரராகப் பிடில் வாசித்துக்கொண்டிருந்தார். சென்ற 1930ஆம் வருஷம்தான் முதுமை மேலிட்டபடியால் எங்கள் சபையை விட்டு விலகினார். இந்த 35 வருஷங்களாக விடாது எங்கள் சபையில் ஊழியஞ் செய்ததற்காக, இவருக்கு மாசம் பென்ஷன் கொடுத்து வருகிறோம். இந்த சோமு ராவ் எனதாருயிர் நண்பருக்கு மார்க்கண்டேயர் நாடகத்துப் பாட்டுகளை யெல்லாம் கற்பித்தார். அப்படிக் கற்ற எனது நண்பர், அந்த நாடகத்தை நான் எழுத, அதில் தான் மார்க்கண்டனாக நடிக்க இஷ்டமிருப்பதாகத் தெரிவிக்க, உடனே அதற்கிசைந்து அந்நாடகத்தை நான் விரைவில் எழுதி முடித்தேன். இந்நாடகம் இவ்வருஷம் சிவராத்திரி தினம் ஆடப்பட்டது. அ. கிருஷ்ணசாமி ஐயர் மருத்துவதியாகவும் சி. ரங்கவடிவேலு மார்க்கண்டனாகவும் மிகவும் நன்றாய் நடித்தார்கள். எனக்கு ஞாபகமிருக்கும் வரையில் நான் சித்ரகுப்தனாக நடித்தேன் என எண்ணுகிறேன்.
இம் மார்க்கண்டேயர் நாடகம் பிறகு எங்கள் சபையில் சில முறைதான் நடிக்கப்பட்டது. ஆயினும் இதர சபையோர்களால் பன்முறை நடிக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாகப் பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளின் சபைகளால்; இதற்குக் காரணம், இதில் ஸ்திரீ வேஷங்கள் அதிகமர்யில்லாதபடியால் என்று நினைக்கிறேன். இவ்வருஷம் நேரிட்ட ஒரு துக்ககரமான சம்பவம் என்னவென்றால், எனது பழைய நண்பரும் எங்கள் சபைக்குப் பல வருடங்களாகக் காரியதரிசியாகவுமிருந்த ஊ. முத்துக்குமாரசாமி செட்டியார் இறந்ததேயாம்.
பதினைந்தாம் அத்தியாயம்
இதற்கப்புறம் 1902ஆம் வருஷத்தில் ‘நான் விரும்பிய விதமே’ என்னும் நாடகத்தை எழுதினேன். இது ஷேக்ஸ்பியர் மகாகவி ஆங்கிலத்தில் ‘ஆஸ் யூ லைக் இட்’ (As you like it) என்னும் பெயர் வைத்து எழுதிய ஆங்கில நாடகத்தின் தமிழ் அமைப்பாம்
இம் மகா நாடகக் கவியின் ஆங்கில நாடகங்களுள் சிலவற்றைத் தமிழில் அமைத்ததில் இது முதலானதாகையால், இதைப் பற்றிக் கொஞ்சம் விஸ்தாரமாய் எழுத விரும்புகிறேன்.
ஒரு பாஷையிலிருந்து மற்றொரு பாஷைக்கு யாதானு மொரு விஷயத்தை மொழி பெயர்ப்பதென்றால் எளிதல்ல; அதிலும் திராவிட பாஷைக்கும் ஆங்கிலத்திற்கும் கொஞ்ச மேனும் சம்பந்தம் கிடையாது; மேலும் ஒவ்வொரு பாஷைக்கும் ஒரு விதமான நடை அல்லது போக்கு (Idiom) உண்டு; அதை மற்றொரு பாஷையின் நடையல்லது போக்குக்குத் திருப்புவதென்றால் கடினமாம். சாதாரண ஆங்கிலேய வசனத்தைத் தமிழில் மொழி பெயர்ப்ப தென்றாலே இவ்வளவு கஷ்டமாயிருக்க, உலகமெங்கும் பிரசித்திபெற்ற மகா நாடகக் கவியாகிய ஷேக்ஸ்பியருடைய நாடகங்களைத் தமிழில் எழுதுவதென்றால் மிகவும் அசாத்திய மான காரியம் என்பதை அறிந்துள்ளேன். அப்படியிருக்க, இக்கஷ்டமான வேலையில் கையிட்டுக் கொண்டதற்குக் காரணம் அடியில் வருமாறு:-
ஒரு நாள் எனது பால்ய நண்பராகிய வாமன்பாய் என்ப வரும் நானும் ஏதோ நாடக விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த பொழுது, “நாடக மேடையில் நீ எந்தப் பாத்திரம் நன்றாய் ஆடினாலும் ஆடலாம்; உன்னால் ஷேக்ஸ்பியரின்
ஹாம்லெட் என்னும் பாத்திரம் ஆட முடியாது” என்று கூறினார். “அப்படியா? நம்மால் ஆகாத தொன்றுமிருக்கிறதா? அதை எப்படியாவது ஆடித்தான் பார்க்க வேண்டும்” என்று என் மனத்திற்குள் தீர்மானித்தேன். இதை நான் வெளிப் படையாக என் நண்பருக்குச் சொல்லவில்லை. வீட்டிற்குப் போனவுடன் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் (Hamlet) நாடகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க வாசிக்க அதன்கஷ்டம் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புலப்பட ஆரம்பித்தது. நாடகத்தை முற்றிலும் ஒரு முறை படித்தபின், என்னடா இது, இதை எப்படி நாம் மொழிபெயர்ப்பது? எப்படி நடிப்பது? என்ன அசாத்தியமான காரியத்தில் கையிட்டுக் கொண்டோம் எனும் பயம் பிறந்தது. ஆயினும் “என்னால் முடியாது, நீ சொன்னது சரிதான்” என்று எனது நண்பரிடம் ஒப்புக் கொள்வதா என்னும் ரோஷத்தினால், எப்படியாவது முயற்சி செய்ய வேண்டுமென்று தீர்மானித்தேன். “தெய்வத்தாலாகா தெனினும் முயற்சி மெய் வருத்தக் கூலி தரும்” எனும் தெய்வப்புலமை திருவள்ளுவர் குறள் ஞாபகம் வந்தது. ஆகவே ஒருவாறு என் மனத்தைத் திடம் செய்துகொண்டு அந்நாடகத்தை மொழி பெயர்க்க ஆரம்பித்தேன். ஸ்ரீராம தூதனாகிய அனுமாருக்கு, அவருடைய சக்தியை அவருக்கு மற்றவர்கள் எடுத்துக் கூறினால்தான் அவரால் ஒரு காரியம் செய்து முடிக்க முடியும் என்று ஒரு பழங்கதை யுண்டு. அதுபோல் உன்னால் இது முடியாது என்று யாராவது கூறினால்தான், என்னால் முழுப்பிரயத்தனம் செய்ய முடியும்போலும். புத்தி, பராக்கிரமம் முதலிய மற்றெதிலும் இல்லாவிட்டாலும், பிடிவாதத்தில் ஹனுமாருடைய அம்சம், அணுவளவு என்னிடமிருக்கிறதென நினைக்கிறேன்.
இப்படி க்ஷாத்திரத்தின் பேரில் நான் எழுத ஆரம்பித்த நாடகமானது, பூர்த்தியாக ஆறு வருஷங்களுக்குமேல் பிடித்தது. முதற்காட்சியை மொழி பெயர்ப்பதற்கே சில மாதங்கள் பிடித்தன. பிறகு இரண்டாம் காட்சியில் காலதேவன் (Cladius) என்னும் அரசனுடைய பெரிய வசனமொன்றை மொழிபெயர்ப்பதில், ஒரு கஷ்டமான கட்டத்திற்கு வந்து, என் மனத்திற்குத் திருப்தியாகும்படி அதை எழுத முடியாமல் திகைத்தவனாய் நின்று விட்டேன். என்னுடைய ஏற்பாடென்ன வென்றால், ஏதாவது நாடகத்தை எழுதிக்கொண்டு வரும் போது, என் மனத்திற்கே திருப்தியாயிருந்தால்தான் மேலே
போவேன்; இல்லாவிட்டால் அவ்விடமே நின்றுவிடுவேன். பிறகு என் மனத்துக்குத் திருப்திகரமானபடி மேலே யோசனை போனால்தான், எழுத ஆரம்பிப்பேன். அப்படி நேரிடுவதற்கு, ஒரு நாளானாலும் சரி, ஒரு வாரமானாலும் சரி, ஒரு மாதமானாலும் சரி, ஒரு வருஷமானாலும் சரி எழுத ஆரம்பித்தது நிற்க வேண்டியதுதான். இப்படி ஷேக்ஸ்பியருடைய “ஹாம்லெட்” நாடகத்தை ஆரம்பித்து இரண்டாம் காட்சியில், நான் நின்றுவிட்ட விஷயத்தை எனது ஆருயிர் நண்பர் ரங்கவடிவேலு அறிந்து “இம்மாதிரி தடைப்பட்டால் இதை முற்றிலும் எழுதி முடிக்க எத்தனை யுகம் ஆகும்? வேறு ஏதாவது சுலபமான நாடகத்தை எடுத்துக் கொள்ளுகிறது தானே” என்று என்னைத் தூண்டினார். அவர் சொன்னது சரியென ஒப்புக்கொண்டு ஷேக்ஸ்பியர் நாடகங்களில், ஏறக்குறைய சுலபமான நாடகமாகிய “ஆஸ் யூ லைக் இட்” (As you like it) என்பதை எடுத்துக்கொண்டு அதைத் தமிழில் எழுத ஆரம்பித்தேன். இதுதான் இந்நாடகத்தை நான் எழுத ஆரம்பித்த கதை.
இது ஹாம்லெட்டைவிட எவ்வளவோ சுலபமான நாடகமானபோதிலும், நான் எழுதி முடிப்பதற்குச் சுமார் ஐந்து மாதங்களுக்கு மேற்பட்டது. இதற்கு “விரும்பிய விதமே” எனத் தமிழ்ப் பெயர் கொடுத்தேன். இதைப் பிறகு நான் அச்சிட்டு வெளியிட்டபோது, ஷேக்ஸ்பியர் எழுதிய நாகடத்தின் மொழி பெயர்ப்பு என்று கூறாது தமிழ் அமைப்பு என்று கூறியுள்ளது கவனிக்கத் தக்கது. இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள: ஒன்று, ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் நாடகங்கள் வேறெப் பாஷையிலும் சரியாக மொழி பெயர்ப்பது அசாத்தியமான காரியம் என்பது என் தீர்மானம்; இரண்டாவது, இதில் நாடகப் பாத்திரங்கள் பெயர்களையும், பட்டணங்கள், நதிகள் முதலியவைகளின் பெயர்களையும், தமிழ்ப் பெயர்களாக மாற்றி விட்டேன். இவ்வாறு நான் மாற்றியதற்கு நியாய மென்னவெனில், இதை நாடகமாக மேடையின் பேரில் நடிக்குங்கால், “ஓ ஆர்லாண் டோவே, ராசலிண்டே” என்று அழைத்தால், தமிழர்களுக்கு அர்த்தமாகாததுமன்றி அவ்வுச்சரிப்புகள் நகைப்புக்கிடமுண் டாக்கும் என்பதேயாம். அதற்காக முதலில் நாடகப் பாத்திரங்களின் பெயரையெல்லாம் தமிழ்ப் பெயர்களாகத் திருப்பினேன். கூடிய வரையில் அப் பெயர்களிலுள்ள மெய்
எழுத்துகளைக் கொண்டே தமிழ்ப் பெயர்களாக மாற்றினேன்; பிரடெரிக் என்பதை பிரதாபதீரனெனவும், ஆலிவ் என்பதை ஹலவீரன் எனவும், சீலியா என்பதை சுசீலா எனவும் இம்மாதிரியாக மாற்றிக்கொண்டு போனேன்; அன்றியும் அர்த்தப் பொருத்தமுமிருக்குமாறு, ஆர்லாண்டோ எனும் கதாநாயகனுடைய பெயரை, அமரசிம்ஹன் எனவும், ராசலிண்ட் என்கிற பெயரை ராஜீவாட்சி எனவும் மாற்றினேன். மற்றப் பெயர்களின் பொருத்தத்தை, நான் அச்சிட்டிருக்கும் இந்நாடகத்தில் எனது நண்பர்கள் பார்த்துக் கொள்வார்களாக.
இந் நாடகத்தை விக்டோரியா பப்ளிக் ஹாலின் அடமானத்தை மீட்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிற்காகச் சீக்கிரம் கொடுக்க வேண்டுமென்று எங்கள் நிர்வாக சபையார் தீர்மானித்தபடியால், நாடக முழுவதையும் மொழி பெயர்க்காது, ஆடவேண்டிய பாகங்களை மாத்திரம் முதலில் மொழி பெயர்த்தேன். அதன்பிறகு சில வருடங்கள் கழித்து இதைப் புஸ்தக ரூபமாக அச்சிட்டு வெளிப்படுத்திய சமயத்தில்தான், நாடக முழுவதையும் தமிழில் அமைத்தேன்.
அன்றியும் ஹைமன் (Hymen) என்கிற பாத்திரமானது தமிழ் நாட்டிற்கு உரித்தாயிராதபடியாலும், மேல் நாட்டாரும் அநேகம் கற்றறிந்தவர்கள், அப்பாத்திரம் இந்நாடகத்தில் ஷேக்ஸ்பியர் மஹா நாடகக்கவியால் எழுதப்படாது பிறகு இந்நாடகத்தில் நுழைக்கப்பட்டதென்று அபிப்பிராயப்படுகிற படியாலும், அதை என் தமிழ் அமைப்பில் நீக்கினேன். மேலும் ஷேக்ஸ்பியர் காலத்தில் சாதாரணமாக வழங்கிய சில வார்த்தை கள், தற்கால நாகரிகப்படி அசங்கியமாயிருக்குமென அவை களையும் மொழி பெயர்க்காது விட்டேன். இந்நாடகத்தை நாங்கள் ஆடியதைப் பற்றி எழுது முன், என் தமிழ் அமைப்பைப்பற்றி ஒன்று என் நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்; அதாவது, ஆங்கிலத்திலுள்ள ஒரு சொற்றொடரை எடுத்துக்கொண்டு அதற்கு, “ஈயடித்தான் கணக்குப் பிள்ளை” செய்தது போல், ஒவ்வொரு பதத்திற்கும் தமிழ் அர்த்தத்தை எழுதிக்கொண்டு போனால், அது சரியாக அர்த்தமுமாகாது, கிரந்த கர்த்தாவின் அபிப்பிராயத்தையும் சரியாக வெளிப்படுத்துவதாகாது என்று நம்பினவனாய், அர்த்த பாவத்தையே முக்கியமாகச் சரியாகத் தெரிவிக்க வேண்டும் என்னும் கோட்பாட்டைக் கொண்டு இந்நாட கத்தைத் தமிழில் அப்பொழுது எழுதினேன். அதற்குப் பிறகு
இதுவரையில் ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் நாடகங்களுள் இன்னும் நான்கைந்து தமிழில் அமைத்திருக்கிறேன்; அவை களிலும் மேற்சொன்ன கோட்பாடுகளை யெல்லாம் கவனித்திருக்கிறேன்.
இனி இந்நாடகத்தை நாங்கள் 1902 மார்ச்சு மாதம் எட்டாம் தேதி விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆடியதைப்பற்றி எழுதுகிறேன். இந் நாடகம் அன்றிரவு, ஐகோர்ட்டு ஜட்ஜாக யிருந்த பாடம் (Boddam) துரையவர்கள் ஆதரவில் நடத்தப் பட்டது. இந்நாடகத்திற்காகவென்று, புதிதாயின திரைக ளெல்லாம், ஒரு பாரசீக சித்திரக்காரரைக் கொண்டு எழுதி வைத்தோம்; சில நூதன உடைகளும் தயாரித்தோம். ஒத்திகைகள் எல்லாம் சரியாக நடந்து வந்தபடியால், நாடகமானது எல்லா விதத்திலும் மிகவும் நன்றாயிருந்ததென நான் சொல்ல வேண்டும். ஜனங்களும் ஏராளமாய் வந்திருந்தனர். மொத்த வரும்படியினின்றும் எங்கள் செலவு போக ரூபாய் 200 விக்டோரியா பப்ளிக் ஹால் அடமான மீட்சி பண்டுக்குக் கொடுத்தோம்.
அன்றிரவு இந்நாடகத்தில் முக்கிய ஸ்திரீ வேஷங்களாகிய சுசீலா ராஜீவாட்சி என்பவை கிருஷ்ணசாமி ஐயர், சி. ரங்கவடி வேலுவினால் பூணப்பட்டன. இவர்கள் இருவரும் ஒன்றாய்ப் பாடி நடித்தது சபையோரால் மிகவும் சிலாகிக்கப்பட்டது! அதற்கு முக்கியக் காரணம் அவர்களிருவரும் மேடையின்மீது மிகவும் அன்யோன்யமாய் ஒத்து உழைத்ததே; ஒருவருக் கொருவர் கொஞ்சமாவது மாச்சரியமின்றி, ஒருவருக்கொருவர் வேண்டிய உதவிகளையெல்லாம் செய்து கொண்டு, சந்தோஷ மாய், நாடக மேடையின்மீது ஆடிய இவர்களைப் போன்ற இரண்டு ஸ்திரீ வேஷதாரிகளை நான் இதுவரையில் கண்டதே யில்லை. இந்நாடகம் நன்றாயிருந்ததற்கும், இன்னும் இவர்க ளிருவரும் பல தடவைகளில் ஒன்றாய் நடித்த நாடகங்கள் நன்குயிருந்ததற்கும், இவர்களிருவரும் ஒற்றுமை யுடையவர் களாய் நடித்ததே முக்கியக் காரணம் என்று நான் நம்புகிறேன். அக்காலத்தில் எங்கள் சபை மற்ற சபைகளைவிடப் பெரும் பெயர் பெற்றதற்கு, ரூபத்திலும், சங்கீதத்திலும், நடிப்பதிலும் ஏறக்குறைய சமமான தேர்ச்சியுடைய இவ்விரண்டு ஆக்டர்களுமே முக்கியக் காரணர்களாயிருந்தார்கள் என்று நான் தடையின்றிச் சொல்ல வேண்டும். அக் காலத்திலெல்லாம், ஏதாவது எங்கள் சபையில் நாடகம் போட்டால் கிருஷ்ண
சாமியும் ரங்கவடிவேலுவும் வருகிறார்களா என்று கேட்டுக் கொண்டு வருவார்கள். அப்படிப்பட்ட கியாதியை இவர்களிரு வரும் பெற்றிருந்தனர். தற்காலத்திய ஆக்டர்களும் இவர் களைப்போல், ஒத்து உழைத்து சுயநன்மையைப் பாராமல் சபையின் பெயருக்காகக் கஷ்டப்பட்டு, எங்கள் சபையின் பெயரைக் காப்பாற்றுவார்களாக என்று எல்லாம் வல்ல கடவுளின் கிருபையைப் பிரார்த்திக்கின்றேன்!
பிறகு எங்கள் சபையில் பத்மாவதி வேடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற எஸ். பத்மனாபராவ் பத்மினியாக நன்றாய் நடித்தார். ஆண் வேடங்களில், ஹலவீரனாக எம். சுந்தரேச ஐயர் நடித்தார். இந்நாடகத்தில் ஒரு கஷ்டமான பாகம் (மிகவும் கஷ்டமான பாகம் என்றே நான் சொல்ல வேண்டும்) ஐகந்நாதன் என்பது. இதை ரங்கவடிவேலுவின் மைத்துன ராகிய தரமோதர முதலியாருக்குக் கொடுத்திருந்தேன். இதுதான் அவர் எங்கள் சபையில், முதல் முதல் ஒரு முக்கியமான வேடம் பூண்டது. இதற்கப்புறம் அநேகம் முக்கியப் பாத்திரங்களைப் பூண்டிருக்கின்றனர். இவருடைய சில அரிய குணங்களைப் பற்றி இங்கு நான் எழுத வேண்டியது என்கடமையாகும். இவர் கலாசாலைப் பரீட்சைகளில் தேறாதவராயினும் மிகுந்த புத்திக் கூர்மை வாய்ந்தவர்; அன்றியும் விடா முயற்சியுடையவர். ஏதாவது ஒரு காரியத்தை மேற்பூண்டால் தன்னாலியன்ற அளவு முயன்று அதை எப்படியாவது சாதிப்பார்; நாடக விஷயங்களிலும் அப்படியே. மற்றச் சபை விஷயங்களிலும் அப்படியே. ஏதாவது நாடகப் பாத்திரத்தை நான் அவருக்குக் கொடுத்தேனாயின், அதைப்பற்றி என்னிடமிருந்தாவது இதரர் களிடமிருந்தாவது தான் எவ்வளவு அறியக்கூடுமோ அவ்வளவு அறிந்து கொள்வார். எடுத்துக்கொண்ட நாடகப் பாத்திரத்திற் கேற்றபடி உடை தரிப்பதிலும், வேஷம் போட்டுக் கொள்வ திலும் இவருக்கு மேலானவர்கள் எங்கள் சபையில் இல்லை யென்றே சொல்ல வேண்டும். இந்த ஜகந்நாதன் பாகத்தில் இவர் எனக்குக் கொடுத்த கஷ்டம் எனக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட கஷ்டம் கொடுப்பார் இப்பொழுது இல்லையே என்பதுதான் என் வருத்தம்! ஏதாவது ஒரு காட்சியில் இப்படி நடிக்க வேண்டுமென்று நான் சொல்லுவேனாயின், அது தன் மனத்தில் நன்றாய்ப் படுகிறவரையில் என்னைத் திருப்பித் திருப்பி அதை நடித்துக்காட்டச் சொல்வார். அதனுடன்விடாது, பிறகு தான் அதை ஒத்திகை செய்து, தனக்கு நான் சொன்னபடி
வந்தது என்று திருப்தியாகிற வரையில், என்னை விடமாட்டார் அவர்; ஒத்திகை பார்ப்பதற்கு நான் சளைவேனே யொழிய, தான் ஒத்திகை செய்வதற்குச் சளையமாட்டார். இந்த “சோகை பிடித்த ஜகந்நாதன்” இந் நாடகத்தில் ஒருவிதமான நமுட்டுச் சிரிப்பு சிரிக்க வேண்டியிருக்கின்றது; அதை நான் பன்முறை கஷ்டப்பட்டே கற்றேன்; இதை நான் இவருக்குச் சொல்லிக் கொடுத்தேன்; இதைப் பன்முறை நாங்கள் ஒத்திகை செய்திருந்தோம்; இருந்தும் மனத்தில் திருப்தி யடையாதவராய் அக்காட்சியில் தான் வருவதற்கு முன் பக்கப் படுதா அருகில் நின்று கொண்டு “வாத்தியார், வாத்தியார், இன்னொரு தரம் அந்தச் சிரிப்பைக் காட்டுங்கள்” என்று கேட்டது இன்னும் எனக்கு ஞாபகமிருக்கின்றது. இதை எனக்குப் பெருமையாக இங்கு நான் எழுதவில்லை. எனது நண்பரது இடைவிடா ஊக்கத்திற்கு ஓர் உதாரணமாகக் கூறுகின்றேனே ஒழிய வேறொன்றில்லை. சாதாரணமாக சபைகளில் ஒரு முறை ஏதாவது சொல்லிக் கொடுக்குமுன், எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்று கூறுகிற ஆக்டர்கள் இதைக் கொஞ்சம் கவனிப்பார்களாக. இவர் ஜகந்நாதனாக நடித்து அன்றைத் தினம் பெரும் பெயர் பெற்றபிறகு இப் பாத்திரத்தருகில் யாரும் அண்டாததே, இவர் பெருமையை நிரூபிப்பதாகும்.
எங்கள் சபையில் இதற்குக் கொஞ்ச நாளுக்கு முன்புதான் சேர்ந்த தெலுங்கு ஆக்டராகிய வெங்டாசல ஐயர் அச்சுதன் வேடம் பூண்டார். இதுதான் இவர் முதல் முதல் எங்கள் சபையில் தமிழ் நாடகத்தில் வேஷம் பூண்டது. இவர் தன் மரணபர்யந்தம், எங்கள் சபையில் தமிழ் தெலுங்கு பாஷைகளில் நடித்ததுமன்றி, நாடகப் பாத்திரங்களுக்கு வேஷம் தரிப்பதில் மிகவும் உதவி புரிந்தவர்; முக்கியமாக இவ்வருஷ முதல் தன் ஆயுள் காலம் வரையில் எனக்கு வேஷம் தரித்தவர். ஆகையால் இவரைப்பற்றிக் கொஞ்சம் எழுதி, இவருக்கு நான் செலுத்த வேண்டிய கடனைக் கொஞ்சம் தீர்க்க முயலுகிறேன்.
இவரது முழுப்பெயர் வேதம் வெங்கடாசல ஐயர்; மஹா மஹோபாத்தியாயர் வேதம் வெங்கடராயலு சாஸ்திரியாருக்கு நெருங்கிய பந்து; தெலுங்கு பாஷையில் மிக்க பாண்டித்ய முடையவர். இவர் எங்கள் சபையைச் சேருமுன், ஜி.சி.வி. ஸ்ரீனிவாசாச்சாரியர் ஏற்படுத்திய மதராஸ் ஓரியண்டல் டிராமாடிக் சொசைடியில் சேர்ந்து, அதற்காக மிகவும்
உழைத்தவர். இரண்டொரு முறை அச்சபையார் நாடகங்களை நான் பார்க்கப் போனபொழுது; அங்கு நான் கண்ட நாடகப் பாத்திரங்களுக்கு முகத்தில் வர்ணம் தீட்டியிருந்தது மிகவும் நன்றாயிருந்ததென வியந்தவனாய், இது யார் செய்தது என்று விசாரிக்க, வெங்கடாசல ஐயர், இந்தச் சபையில் சேர்ந்தவர், இவர்தான் இச்சபையின் ஆக்டர்களுக்கெல்லாம் வேஷம் போடுவது என்பதை அறிந்தேன். எங்கள் சபையில் அப்பு போடும் வேஷத்தைவிட இது மிகவும் நன்றாயிருந்தமையால், எப்படியாவது இவரை எங்கள் சபையில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று பிரயத்தனப்பட்டேன். எனது பால்ய நண்பர் வி.வி.ஸ்ரீனிவாச ஐயங்கார் மூலமாக இவருடன் பரிச்சயம் செய்துகொண்டு, மெல்ல, எங்கள் சபையில் சேருகிறது தானே என்று பிரஸ்தாபித்தேன். இச்சமயத்தில் அவர்களுடைய சபையானது யாது காரணத்தினாலோ, க்ஷணதசையிலிருந்தது; அது பாதி, நான் கேட்டது பாதியாக இவர் எங்கள் சபையைச் சேர இசைந்தார்; வருபவர்சும்மா வராமல் அச்சபையில் முக்கிய ஆக்டர்களாயிருந்த ராமமூர்த்தி பந்துலு, எஸ். வெங்கடாசல சாஸ்திரி இருவரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்தார். அந்தச் சபையில் ஒரே பெயர் கொண்ட இவர்கள் இருவரும் ஆக்டர்களாயிருந்தபடியால் இவர்களைத் தனித் தனியாகக் குறிப்பிட, கறுப்பு நிறமுடைய இவருக்கு ‘நல் லையா’ என்றும்; சிவப்பு நிறமுடைய மற்றவருக்கு ‘எர்ரையா’ என்றும் பெயர் வழங்கியிருந்தது; எங்கள் சபைக்கு வந்த பிறகும் இவ்விருவருக்கும் அதே பெயர்கள் வழங்கலாயின. இவருடைய முக்கியமான பெருமை என்னவென்றால், எந்த வேஷம் வேண்டுமென்றாலும் தரிப்பார். முக்கியமாக ஹாஸ்ய பாகங்களிலேயே இவர் பெயர் பெற்ற போதிலும், சமயம் நேரிட்டால் அரசன் முதல் அனுமார்வரை எந்த வேடம் வேண்டுமென்றாலும் பூணுவார். அப்படிப் பூணுவதிலும், அந்தந்த வேஷத்திற்குத் தக்கபடி நடையுடை பாவனைகளை மேற்கொள்வதில் மிகவும் சமர்த்தர். ஒன்றுக்கொன்று வெகு தூரத்திலுள்ள அரசனாகவும், தோட்டியாகவும், பீமசேன னாகவும், விதூஷகனாகவும், வேசியாகவும், தாய்க் கிழவியாக வும், குறவனாகவும், கோபிகா ஸ்திரீயாகவும், இன்னும் இப்படிப்பட்ட பல வேடங்களில் தோன்றியிருக்கிறார் எங்கள் சபையில். இத்தகைய வேடங்கள் பூணுவதன்றி, மிகவும் துரிதமாக ஒரு வேடத்தினின்றும் மற்றொரு வேடத்திற்கு
மாற்றிக்கொள்வார். இவ்விஷயத்தில் இவரைவிட மேம்பட்ட வர்களை நான் தென் இந்தியாவில் கண்டதில்லை. சகுந்தலை நாகடத்தில் ஒரு முறை, தான் ஒரே இரவில் பதினொரு நாடகப் பாத்திரங்களாக மேடையில் தோன்றியதாக என்னிடம் ஒருமுறை கூறியுள்ளார். தான் ஒரு வேஷம் போட்டுக் கொண்டாலும் சரி, மற்றவர்களுக்கு ஒரு வேஷம் போடுவ தென்றாலும் சரி, அது இப்படியிருக்க வேண்டுமென்று நாடக தினத்திற்கு நான்கைந்து நாட்கள் முன்பாகவே யோசித்து, அதற்கு வேண்டிய சாமக்கிரியைகளை யெல்லாம் சேர்த்துக்கொண்டு, ஒரு சிறு விஷயமும் விடாது, மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டு அதற்குத் தக்கப்படி வேஷம் போடுவார். ஒருமுறை யானைக் காலையுடைய ஒரு பறையனாக வேஷம் போடவேண்டி, அதற்காக அவர் எடுத்துக்கொண்ட சிரமம் எனக்குத் தெரியும். மற்றொரு முறை நந்தனார் சரித்திரமாடிய பொழுது, அதில் வந்த பத்துப் பன்னிரண்டு பறையர்களுக்கும், ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பற வேஷம் போட்டனுப் பினார்! விசித்திரமான வேஷங்கள் போடுவதில் இவருக்கு மிகவும் பிரியம். குருடன், முடவன், குஷ்டரோகி, நோயாளி, கிழவன், கிழவி முதலிய வேடங்கள் புனைவதில் இவருக்கு நிகரானவர்களை நான் என் ஆயுளில் இதுவரையில் கண்ட தில்லை; இனியும் காணப்போகிறதில்லை என்பது என் துணிபு.
இவர்தான் முதல் முதல், எங்கள் சபையில், நான் முன்னே உரைத்தபடி அப்பு உபயோகித்த அரிதாரம், செந்தூரம், முதலிய பூர்விக வர்ணங்களை ஒழித்து, கிரீஸ் பெயின்ட் (Grease Paint), பேர்ல் கிரீம் (Pearl Cream), லிப்சால்வ் (Lipsalve), ஐபுரோ பென்சில் (Eyebrow Pencil) முதலிய நவநாகரிகமானவைகளை உபயோகத்திற்குக் கொண்டு வந்தவர். எங்கள் சபையிலும் இன்னும் இதர சபைகளிலும் கிரீன்ரூம் டைரக்டர்களாக வந்தவர்களெல்லாம், இவரிடமிருந்து கற்றுக் கொண்டவர்களே என்று சொல்வது கொஞ்சமேனும் அதிகரித்துக் கூறுவதாகாது. வர்ணம் தீட்டுவதிலும், வேஷம் போடுவதிலும் புதிது புதிதாய் ஏதாவது யுக்தி செய்துகொண்டே இருப்பார்; இவரது வாழ்நாட்களில் பெரும்பாகம் இச் சபைக்கே செலவிட்டனர் என்று கூறுவது மிகையாகாது. இவரிடமிருந்து ஒரு முக்கிய மான-சாதாரணமாகக் கிடைத்தற்கரிய குணம், என்னவென்றால், தான் கற்றதைத் தன்னிடம் அன்புள்ள தன் சிஷ்யர் களுக்குக் கள்ளம் கபடின்றிக் கற்பித்ததேயாம். இவருக்கு நான் முக்கியமான நன்றியறிதல் பாராட்ட வேண்டியவனாயிருக்கிறேன். என்ன காரணம் என்றால், என் இளமை நீங்கி, எனக்கு வயதாக ஆக, நரைதிரைகளை மறைத்து வர்ணம் எழுதி, நாடக மேடையின் பேரில் என்னை இள வயதுடையவனைப்போல் நடிக்கச் செய்தது இவரே. சாதாரண வேடங்களில் வருவதற்கே இவர் எனக்காக ஒரு மணி சாவகாசத்திற்குக் குறையாமல் கஷ்டம் எடுத்துக்கொள்வார். “வள்ளி மணம்” என்னும் நாடகத்தில் சுப்பிரமணியராக நான் ஆட வேண்டியிருந்தால் குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் என் ஒருத்தனுக்காகச் செலவழிப்பார்!
இவர் தமிழ்-தெலுங்கு நாடகங்களில் நடித்ததுமன்றி, மேற்சொன்னபடி ஆக்டர்களுக்கு வேஷம் போடுவதில் உதவியதுமன்றி, மற்றொருவிதத்திலும் எங்கள் சபைக்கு இவர் செய்த உதவிக்காக நாங்கள் இவருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். அதாவது, இவர் தெலுங்கு பாஷையில் எங்கள் சபைக்காக இயற்றிய நாடகங்களே; அவை “நந்தனார்”, “விதிலேக வயித்தியுடு”, “ராணிசம்யுக்தா”, “பாரிஜாத புஷ்பஹரணம்”, “மாம்ஜித்சிங்” முதலியனவாம். இவற்று ளெல்லாம் மிகச் சிறந்தது தெலுங்கு நந்தனாரே. கோபால கிருஷ்ண பாரதியார் தமிழில் மிக அழகாய் எழுதிய பாட்டுகளையெல்லாம் அப்படியே தெலுங்கில் மொழி பெயர்த்திருப்பது மிகவும் மெச்சத் தக்கதாம். இவ்வாறு பல வகையிலும் எங்கள் சபைக்கு உதவி புரிந்த இவரது படம் ஒன்றை இவர் காலகதியடைந்த பிறகு, எங்கள் சபையில் இவர் ஞாபகார்த்த மாக வைத்திருக்கிறோம். இத்தகைய குணம் வாய்ந்தவர் இந் நாடகத்தில் அச்சுதனாகிய விதூஷகனாக மிகவும் விமரிசையாக நடித்தது ஓர் ஆச்சரியமன்று.
இந்நாடகத்தில் என் பழைய சிநேகிதர் ராஜகணபதி முதலியார் லாவண்யன், நந்தக்கோனான், வில்லியன் எனும் மூன்று வேடங்கள் பூண்டனர். பி. கோபாலசாமி சாரளனாகவும், செல்வக்கோனானாகவும் நடித்தார். இந் நாடகத்தில் ஒரு முக்கியமான சிறப்பென்னவென்றால், ஒவ்வொரு ஆக்டரும் தான் மேற்கொண்ட பாத்திரத்திற்குத் தக்கபடி நடித்துப் பெயர் பெற்றதேயாம். இந் நாடகம் ஜனங்களுக்குத் திருப்தியைத் தந்து, இது சில வருடங்களுக்குள் பன்முறை நடிக்கப்பட்டதற்குக் காரணம், இவ்வாறு எல்லா ஆக்டர்களும் நன்றாய் நடித்ததேயெனக் கருதுகிறேன். சில நாடகங்களில் முக்கிய ஆக்டர்கள் மாத்திரம் நன்றாய் நடிப்பார்கள்; மற்ற ஆக்டர்களெல்லாம் ஒரு மாதிரியாயிருக்கும்; அப்படியல்லாது அயன் (Chief) பாத்திரங்கள் முதல் கடைசி ஆக்டர்கள் வரையில் எல்லோரும் நன்றாய் நடித்தால்தான் நாடகம் நன்றாய்ச் சோபிக்கும் என்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் கவனித்து, ஒருக்கால் தாங்கள் ஏதாவது சிறிய வேடங்களும் பூண வேண்டி வரினும், அவைகளிலும் ஜாக்கிரதையாக நடிப்பார்களாக. ஒரு சித்திரம் வரைபவன், ஒரு படத்தில் முக்கியமான உருவங்களை மாத்திரம் சரியாக வர்ணித்து, பக்கத்திலிருக்கும் மற்ற உருவங்களைச் சரியாக வர்ணிக்காவிட்டால் சித்திரம் மொத்தத்தில் அழகாயிருக்குமோ?
நான் இந் நாடகத்தில் அமரசிம்மனாக நடித்தேன். அவ்வாறு நடித்ததில் ஒரு சமாச்சாரம் இன்னும் எனக்கு முக்கியமாக நினைவிலிருக்கிறது. இந்நாடகத்தில் இரண்டாவது காட்சியில் சாரளனுடன் அமரசிம்மன் குஸ்தி பிடிக்க வேண்டியிருக்கிறது; இக் காட்சி நடந்த பிறகு, எனது சில நண்பர்கள் மேடைக்குள் வந்து, “சம்பந்தம்! குஸ்தி பிடிக்க எப்பொழுது கற்றுக்கொண்டாய்?” என்று கேட்டார்கள். என் சிறு பிராயத்தில், எனக்கும் என் அண்ணன்மார்களுக்கும் தேகப்பயிற்சிக்காக, எங்கள் தந்தை நன்னு மியாசாயபு என்கிற ஒரு மகம்மதிய வஸ்தாதைக் கொண்டு (வஸ்தாத் என்றால் உபாத்தியாயர் எனப் பொருள்படும்), தண்டால், பஸ்கி முதலியவைகளையும், கோல் வித்தை செய்யவும், குஸ்தி பிடிக்கவும் கற்பித்திருந்தார். அப்பொழுது எனக்கு மிகவும் சிறுவயதாயிருந்த போதிலும், என் அண்ணன்மார்களுடன் நானும் இவைகளை யெல்லாம் கற்று வந்தேன். அன்றியும் 1881ஆம் வருஷம் முதல் 1887 வரையில் பீபில்ஸ் பார்க்கில் நடந்த பார்க் பேர் (Park Fair) வேடிக்கைக்கு என் தகப்பனார் ஒரு காரியதரிசியாயிருந்தார்; அவருடன் இந்த வேடிக்கையில் குஸ்தி நடக்கும்தோறும், நான் போய்ப் பயில்வான்கள் குஸ்தி பிடிப்பதைக் கவனித்து வந்தேன். இதனால் குஸ்தி பிடிப்பதன் சூட்சுமங்களையெல்லாம் நன்றாயறிந்தவனானேன். இவ்வாறு நான் சிறுவயதில் கற்ற சிலம்ப வித்தையானது, எனக்கு 20 வருடத்திற்கப்புறம் பிரயோஜனப்பட்டது! இதை இங்கு நான் கூற வந்த காரணம் என்னவென்றால், நாடக மேடைமீது ஆட விரும்பும் ஒருவனுக்கு, எந்த வித்தையும் ஏதாவது ஒரு சமயம் பிரயோஜனப்படாமற் போகாதென்பதேயாம். “களவுங்கற்று மற என்னும் ஔவையின் வாக்கியம் ஆக்டர்களுக்கு மிகவும் உபயோகப்படும்.
இந் நாடகத்தை விட்டு அகலுமுன், இதை அன்று ஆடிய பொழுது, நான் புதிதாய் அறிந்த ஒன்று இங்கெடுத்தெழுதுகிறேன். இந்நாடகத்தில் ஐந்தாம் அங்கம் இரண்டாவது காட்சியில், ராஜீவாட்சி காதலைப் பற்றிச் சில வார்த்தைகள் கூறி வரும்போது மற்றவர்களெல்லாம் ஒவ்வொருவராக, “நானும் அப்படித் தானிருக்கிறேன்! நானும் அப்படித்தான் இருக்கிறேன்” என்று கூறிக்கொண்டு வருகிறார்கள். இந்தக் காட்சியை நான் மொழி பெயர்த்த பொழுது, “இக்காட்சியில் என்ன இருக்கிறது? இதையொரு காட்சியாக ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி எழுதினாரே!” என்று எண்ணினேன். பிறகு அன்றிரவு நாடக மேடையின்பேரில் அக்காட்சி ஆடப்பட்ட பொழுது, சபையோரெல்லாம் அதைப் பார்த்து சந்தோஷித்த பிறகே, அக் காட்சியின் அழகும் மகிமையும் தெரிந்தது. இந்த நாடகம் பன்முறை ஆடப்பட்ட பொழுதெல்லாம், இக் காட்சியானது ஜனங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடாமற் போனதில்லை. இதனால் நான் அறிந்தது, ஒரு நாடகத்தின் அழகும் பெருமையும் அதைப் படிக்கும்பொழுது முற்றிலும் தெரியாது; அதை மொழி பெயர்க்கும் போதுகூடத் தெரியாது; மேடையின்மீது அதை நடிக்கும்போதுதான் தெரியும், என்பதே.
இந் நாடகமானது எங்கள் சபையில் என் ஆருயிர் நண்பர் சி.ரங்கவடிவேலு ஜீவதிசையிலிருந்தபொழுது பன்முறை ஆடப்பட்ட போதிலும் அதற்கப்புறம் ஆடப்படவில்லை; அன்றியும் இதர சபைகளால் சில தடவைகளில்தான் ஆடப்பட்டது. இந்நாடகத்தின் ஒரு முக்கிய அம்சம் என்ன வென்றால், இது விக்டோரியா பப்ளிக் ஹால் முதலிய நாடகக் கட்டடங்களில் ஆடுவதைவிட, தோட்டங்களில் ஆடுவது மிகவும் சிலாக்கியமாம்; அவ்வாறு ஒரு முறை இதை நாங்கள் மயிலாப்பூர்கிளப்பின் தோட்டத்தில் ஆடியதைப்பற்றிப் பிறகு எழுதுகிறேன்.
இவ்வருஷம் எங்கள் சபையில் இன்னொன்று புதிதாய் ஆரம்பித்தோம். அதாவது பான்சி டிரஸ் என்டர்டெயின் மென்ட்! (Fancy Dress Entertainment). இதற்குச் சரியாகத் தமிழ் மொழி பெயர்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை; ஒரு விதத்தில் “ஒவ்வொருவரும் மனம்போல வேஷம் தரித்து வேடிக்கையாய்க்காலம் கழிப்பது” என்று இதன் அர்த்தத்தைத் தெரிவிப்பேன்.
இதை நான் ஆரம்பித்ததற்குக் காரணம், எனது பால்ய நண்பராகிய வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரே. நாங்கள் இருவரும் ஒருநாள் எங்கள் வழக்கம் போல் சபையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது “என்ன சம்பந்தம்! ‘ஜஷ்டை’ சும்மா இருக்கின்றாயே! ஏதாவது புதியதாய்ப் பண்ணு!” என்று சொன்னார். “அப்படியே ஆகட்டும்!” என்று சொல்லி, இதைப்பற்றி எடுத்துப் பேசினேன். ‘மிகவும் நல்லது!’ என்று ஒப்புக்கொண்டார்.
இதற்குச் சில தினங்களுக்கு முன், நான் சேர்ந்திருந்த மதுபான விலக்குச் சங்கம் ஒன்றிற்கு இருப்பிடம் ஏற்படுத்த வேண்டுமென்றும், ஏதாவது நாடகம் போட்டுக் கொஞ்சம் பணம் உதவ வேண்டுமென்றும் கேட்டிருந்தார்கள். இதை இரண்டையும் சேர்த்து ஒன்றாய் முடிக்கலாமெனத் தீர்மானித்து ஏற்பாடு செய்தேன்.
இவ்வருஷம் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி இது நடந்தது. ஏறக்குறைய 50 பெயர்களுக்குமேல் வேஷம் தரித்து வந்தனர்; சபையின் அங்கத்தினர் அல்லாதவர்களும் சிலர் வேடத்தில் வந்தனர். இரவு 9 மணிக்கு ஆரம்பித்துச்சுமார் 12 மணிவரையில் நடந்தது; மேடையின்மீது கொஞ்சம் சங்கீதமும், தோற்றக் காட்சிகளும் நடந்தன. தென் இந்தியாவில் இதுதான் இந்தியர்களுக்குள் முதல் முதல் இம்மாதிரியான கூட்டம் கூடியது. சாதாரணமாக ஆங்கிலேயர்களுக்குள் இவ்வழக்கம் உண்டு. அவர்கள் பால் (Ball) ஆட்டத்துடன் இதை வைத்துக் கொள்வார்கள். இதற்குப் பிறகு இம்மாதிரியான கூட்டங்கள் இரண்டொரு முறை நடந்த போதிலும் பிறகு இது விடப்பட்டது. எங்கள் சபையானது மறுபடியும் உத்தாரணம் செய்ய வேண்டிய விநோதங்களில் இது ஒன்றாகும்.
இந்த 1902ஆம் வருஷம், அவ்வருஷத்தில் காரியதரிசிகளில் ஒருவராகிய எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், எங்கள் சபையின் வருஷாந்திர அறிக்கையில் தெரிவித்தபடி, எங்கள் சபையின் சரிதையில், ஒரு முக்கியமான வருஷமாம். இவ்வருஷம் எங்கள் சபையானது பால்ய பருவம் நீங்கி யௌவனதிசையை அடைந்தது என்றே கூற வேண்டும். இது முதல் பல வருஷங்களாக ஈஸ்வரகிருபையால் அபிவிருத்தி அடைந்து கொண்டே வந்ததெனக் கூறுதல் மிகையாகாது. இவ்வருஷம் முதல் எங்கள் சபையின் அங்கத்தினரின் தொகையும், நடத்திய நாடகங்களின் தொகையும், சபைக்குப் பண வசூலும் அதிகரித்துக்கொண்டே வந்தது யாவரும் அறிந்த விஷயமே. இதற்கு முக்கியக் காரணம் சபைக்குக் காரியதரிசிகளாகிய எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் எனது தமயனார் ஆறுமுக முதலியாரும் எடுத்துக்கொண்ட இடைவிடா ஊக்கமே என்று நம்புகிறேன்.
1902ஆம் வருஷத்தில் நான் இன்னொரு தமிழ் நாடகம் எழுதினேன்; அதாவது “காதலர் கண்கள்” என்பதாம். ஆங்கிலத்தில் “தி ஐ ஆப் லவ் The Eye of Love என்று இதன் பெயர். இப்பெயர் கொண்ட ஒரு சிறு நாடகம், முதலில் ஜர்மன் பாஷையில் எழுதப்பட்டதாம்; அதன் ஆங்கில மொழி பெயர்ப்பை மியூசியம் (Museum) புஸ்தகசாலையில் நான் ஒரு முறை 1895ஆம் வருஷம் படித்தது ஞாபகமிருக்கிறது. இதைப் பற்றி நான் முன்பே குறித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்த ஆங்கில மொழி பெயர்ப்பு, சென்னை டிராமாடிக் சொசைடி (The Madas Dramatic Society) யாரால் ஆடப்பட்ட பொழுது நான் பார்த்தேன். இது இவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் ஆடிய ஒரு சிறு நாடகமாயிருந்த போதிலும், மிகவும் நன்றாயிருந்ததென என் மனத்திலும்பட்டது. இதைத் தமிழில் நாம் பெருக்கி மூன்று மணி நேரம் ஆடக்கூடிய நாடகமாக எழுத வேண்டுமென்று தீர்மானித்தேன்; ஆயினும் அத் தீர்மானத்தை நிறைவேற்ற அநேகக் காரணங்களால் இதுவரையில் முடியாமற் போயிற்று. இவ்வருஷம், சென்ற வருஷம் போல், சபை தினக் கொண்டாட்டத்திற்காக ஏதாவது புது நாடகம் போடவேண்டுமென்று எனது நண்பர்கள் வற்புறுத்த, இதைத் தமிழில் “காதலர் கண்கள்” என்று பெயரிட்டு விரைவில் எழுதி முடித்தேன். இந்நாடகத்தின் கதை, இதை வாசிக்கும் அநேகருக்குத் தெரிந்திருக்குமென நம்புகிறேன்; ஆகவே அதைப் பற்றி நான் எழுத வேண்டிய அவசியமில்லை; ராஜகுமாரனும், ராஜகுமாரியும் ஒருவரை யொருவர் ஏமாற்ற, வேலைக்காரனாகவும், வேலைக்காரியாகவும் வேடம் பூண்டது, அந்த ஜர்மன்கதையினின்றும் எடுக்கப்பட்டது. இந் நாடகம் ஆடும் பொழுதெல்லாம் பெரும் நகைப்பை விளைவிக்கும் கத்திச் சண்டைக் காட்சியின் அபிப்பிராயம். ஷெரிடன் (Sherden) என்பவர் ஆங்கிலத்தில் “தி ரைவ்ல்ஸ்” (The Rivals) என்று எழுதிய நாகடத்தினின்றும் எடுக்கப்பட்டது; மற்றக் கதையெல்லாம் என் சொந்த மனோபாவத்தைக் கொண்டு எழுதியது. இந்நாடகத்தில் மஹமதுஷா ஜுல்பிகர்கான் முதலிய சில பாத்திரங்கள் வருகின்றன. அவர்கள் ஹிந்துஸ்தானி பதங்களை உபயோகித்து கொச்சைச் தமிழுடன் பேச வேண்டியதற்கு, நான் 1898ஆம் வருஷம் வக்கீலான பிறகு, என் கட்சிக்காரர்களுடன் பேசுவதற்காக ஒரு மகமதிய உபாத்தியாயரை வைத்துக் கற்றுக் கொண்ட, ஹிந்துஸ்தானி மிகவும் உபயோகப்பட்டது. அன்றியும் கொல்ஹாபூர் சமஸ்தானத்தில் பழகிய சுதர்சனாசாரி என்பவர், ஹிந்துஸ்தானி நன்றாய்க் கற்றவர். நான் எழுதிய சில வாக்கியங்ளைத் திருத்திக் கொடுத்தார். நான் நாடகத்தை எழுதும்பொழுது, இவ்வாறு திருத்திக் கொடுக்கவே, அந்த ஹிந்துஸ்தானி வார்த்தைகளைச் சரியாகப் பேசவேறு ஆக்டர்கள் ஒருவரும் கிடைக்காதவனாய், அவரையே ஜுல்பிகர்கான் வேஷம் எடுத்துக் கொள்ளும்படி கேட்டேன். அவர் அதுவரையில் மேடையின்பேரில் ஏறினவரல்ல. ஆகவே தனக்கு வெட்கமாயிருக்கிறதென்று முதலில் மறுத்தார். பிறகு என் பலாத்காரத்தின்பேரில் ஆகட்டும் என்று ஒப்புக்கொண்டார். பிறகு ஒத்திகைகள் நடக்கும் பொழுதெல்லாம் “நீ படித்து விடு, நீ படித்து விடு” என்று தான் தப்பித்துக்கொண்டு, என்னையே ஆக்டு செய்யும்படி கேட்டுக் கொண்டு வந்தார். ஆயினும் ஒரு முறை உங்களுக்குக் கொடுத்த பாகத்தை மாற்றப் போகிறதில்லையென்று கூறி, கொஞ்சம் கொஞ்சமாக அவரை வழிக்குக் கொண்டு வந்தேன்.
நாடக ஆரம்பத்திற்கு முன்கூட, “சம்பந்தம், எனக்கு பயமாயிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டிருந்தார். “அதெல்லாம் உதவாது; நீங்கள் எப்படியும் இந்தப் பாத்திரத்தை மிகவும் நன்றாய் நடிப்பீர்கள். எனக்குக் கொஞ்சங்கூடச் சந்தேகமில்லை” என்று உற்சாகப்படுத்தி, “மேடைக்குப் போன பிறகு ஹாலில் வந்திருப்பவர்களைக் கவனியாதீர். உங்கள் பாகத்தின்மீதே கண்ணும் கருத்துமாய் இரும்” என்று சொல்லி அனுப்பினேன். அவரும் அவ்வாறே செய்து அந்தப் பாகத்தை மிகவும் நன்றாக நடித்தார். இந்த ஜுல்பிகர்கான் பாகத்தைப் பிறகு அநேகர் நடிக்கப் பார்த்திருக்கிறேன்; நானும் இரண்டொருமுறை நடித்திருக்கிறேன். இருந்தாலும், அது வரையிலும் நாடக மேடை யென்பது இன்னதென்றறியாத அந்த சுதர்சனாச் சாரி, அன்று நடித்தது போல இதுவரையில் யாரும் நடிக்கவில்லையென்று உறுதியாய்க்கூறுவேன். இதை நான் இவ்வளவு சவிஸ்தாரமாக எழுதியதற்கு ஒரு முக்கியக் காரணமுண்டு. அதாவது, நாடக மேடையில் தாம் நடிக்க வேண்டுமென்று விருப்பமுள்ளவர்கள், லஜ்ஜையைவிட்டு. ஊக்கமுடையவர்களாய் முயற்சி செய்வார்களாயின் எப்படியும் சாதிக்கலாம் என்பதை எனது நண்பர்கள் அறியும் பொருட்டேயாம். சொல்லிக் கொடுப்பவன் புதிதாய் வரும் ஆக்டரை, “இதென்ன இப்படி ஆபாசமாய் நடிக்கிறாயே,” என்று இகழாது, கொஞ்சம் கொஞ்சமாக உற்சாகப்படுத்திக் கொண்டு வருவாராயின் நலமாம் என்பது என் துணிபு. இதை நான் எப்பொழுதும் மறவாதவனாய், புதிய ஆக்டர்கள் என்னுடன் மேடையின் பேரில் யாராவது வந்தால், அப்போதைக்கப்போது அவர்களுக்கு சபையில் வந்திருப்பவர்கள் அறியாதபடி, ஏதோ பை பிளே (Bye-play) நடப்பது போல், அவர்களுக்குத் தைரியம் சொல்லி, உற்சாகப்படுத்துவது என் வழக்கம். இதனால் எனது புதிய நண்பர்கள் பயன்பெற்றதாகப் பன்முறை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாடகத்திற்கு கண்டக்டர்களாயிருப்பவர்களும், பழைய ஆக்டர்களும் இதைக் கொஞ்சம் கவனிப்பார்களாக. நான் பிரத்தியட்சமாய்ப் பார்த்திருக்கிறேன்; புதிய ஆக்டர்கள் ஏதாவது மேடையின்பேரில் நாடகம் நடிக்கும் பொழுது, தவறு இழைத்து விட்டால் “என்ன இப்படிச் செய்து விட்டாயே! உன்னால் எல்லாம் கெட்டுப் போய் விட்டதே!” என்று அவர்கள் மீது ‘சள்’ என்று வீழ்வதை; அதனால் முன்பே பயந்திருக்கும் ஆக்டர், இருக்கும் கொஞ்சம்தைரியமும் போய், பிறகு நாடகம் முடியும்வரையில், தன் பாகத்தை யெல்லாம் மறந்து ரசாபாசம் செய்ததைக் கண்ணாரக் கண்டிருக்கிறேன்! ஆகவே கண்டக்டர்கள் என் சொந்த அனுபவத்தை கொஞ்சம் கவனித்து நடக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். குற்றம் செய்வது யார்க்கும் சகஜமாம். அதிலும் புதிய ஆக்டர்கள் அதிகக் குற்றம் செய்யக்கூடும். அப்படிச் செய்தபோதிலும், நாடகம் நடக்கும் பொழுதே மேடையின்மீது பலர் அறிய அதைக் கண்டிக்காமல், நாடகம் முடிந்தவுடன், மெல்ல அவர்களை ஒருபுறமாக அழைத்துக் கொண்டு போய், இப்படிச் செய்வது சரியல்ல; இப்படிச் செய்ய வேண்டும் என்று நல்வார்த்தை கூறி அவர்களைத் திருப்புவதே நலமெனத் தோன்றுகிறது. மேற்சொன்ன சுதர்சனாச்சாரியார், சில வருஷங்களுக்கெல்லாம் எங்கள் சபையைவிட்டு நீங்கி ஹைதராபாதிற்குப் போய்விட்டார்; அவர் பிறகு என்னவாயினாரோ அறிகிலேன். (அவர் வெடிகுண்டினால் கொலையுண்டதாக ஒரு வதந்தியிருந்தது.) அவர் கடைசிவரையில், ‘என்னை நீ அடிக்கடி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்திரா விட்டால், நான் அன்று மேடையை விட்டு ஓடிப்போயிருப்பேன்’ என்று பன்முறை கூறியது இப்பொழுதும் எனக்கு ஞாபகம் வருகிறது.
இந் நாடகத்தில் வரும் இரண்டு ஸ்திரீ வேஷங்களாகிய தாராபாய், துளசிபாய் முறையே சி. ரங்கவடிவேலு, பத்மநாபராவ் இவர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. பத்மநாபராவ் இதுதான் முதல் முதல் அரங்கத்தில் ஸ்திரீவேஷம் தரித்து ஆக்டு செய்தது. இருந்தபோதிலும் துளசிபாயின் பாகத்தை மிகவும் நன்றாய் நடித்தார்.
ஆண் வேடங்களில், அவருக்கென்றே எழுதப்பட்ட மதால்சிங் பாத்திரத்தை என் நண்பர் எஸ். ராஜகணபதி முதலியார் மிகவும் நன்றாய் நடித்தார். அந்தப் பாத்திரத்திற்குப் பெயரும், மத்தளத்தைப்போல் “மெல்லிய” உடம்பை உடையவராயிருந்தபடியால் மதால்சிங் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்நாடகத்தில் ஒரு கஷ்டமான பாத்திரம் மதன்சிங் என்னும் தத்துவாயனே; அதை அ. நாராயணசாமிப் பிள்ளை அவர்கள் வெகு விந்தையாய் நடித்தது இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது. தத்துவாயனைப் போல் மேடையில் நடிப்பது எளிதல்ல. அதில் முக்கியமான கஷ்டமென்ன வென்றால், அளவுக்கு மிஞ்சித் தத்தினாலும் ஆபாசமாகும்; அளவுக்குக் குறைந்தாலும் சோபிக்காது. சரியாக எவ்வளவு இருக்கவேண்டுமோ சுபாவப்படி, அதன்படி தத்துதல் கடினமாம். நான் இதே நாடகத்தை மற்றவர்கள் எங்கள் சபையிலும் இதர சபைகளிலும் ஆடியதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் எல்லோரும், அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ தத்துகிறார்களே யொழிய, நாராயணசாமிப் பிள்ளையைப் போல் சுபாவத்திற்கிசைய தத்துவதைக் கண்டேனில்லை. தத்திப் பேசுவது சபையோர்க்கு நகைப்பை உண்டு பண்ணுகிறதேயென்று, ஒவ்வொரு வார்த்தைக்கும் அதிகமாகத் தத்தினால், ரசாபாசமாகிறது. இதை இப்பாத்திரத்தை நடிக்க விரும்புவோர் கவனிப்பார்களாக. காலஞ்சென்ற பிட்டாபுரம் ஜமீன்தார் (தற்காலத்திய ஜமீன்தாருடைய தந்தையென நினைக்கிறேன்), இந்நாடகத்தின்மீது மிகவும் பிரீதியுடையவராயிருந்தார். தன் தேக அசௌக்கியத்தையும் பாராது இதை நாங்கள் ஆடும்பொழுது தெல்லாம், வந்து பார்த்து வந்தார். வேறு நாடகங்கள் நாங்கள் ஆடும்பொழுது வந்தால், இந்நாடகத்தை மறுமுறை எப்பொழுது ஆடப் போகிறீர்கள் என்று பன்முறை கேட்டது எனக்கு ஞாபகம் இருக்கிறது.
இந் நாடகமானது இதுவரையில் என் அனுமதியின்மீது 180 முறைக்குமேல் ஆடப்பட்டிருக்கிறது. இதை நாடகாபிமானிகள் விரும்பும் ஒரு நாடகமெனவே நான் கூற வேண்டும். நகைப்பைத் தரும்படியான நாடகத்தை ஆட வேண்டும் என்று விரும்பும் சபைகள் இதை எடுத்துக் கொள்ளலாம்.
பதினாறாம் அத்தியாயம்
1903ஆம் வருஷத்தின் முன் பாகத்தில் “பேயலல பெண்மணியே” என்னும் நாடகத்தையும், பிற்பாதியில் “வாணீபுர வணிகன்” என்பதையும் எழுதி முடித்தேன்.
இப் “பேயல்ல பெண்மணியே” எனும் நாடகத்தின் கதையானது, “லா சோம்நாம்புலா” எனும் இத்தாலிய நாடகத்தின் இங்கிலீஷ் மொழி பெயர்ப்பினின்றும் எடுக்கப்பட்டது. இந்நாடகம் அவ்வளவு பிரபலமானதல்லவாதலால், இதன் கதையின் முக்கியாம்சத்தை இங்கெழுத விரும்புகிறேன். “சோம்நாம்புலிசம்” என்பது ஒரு நரம்பைச் சார்ந்த வியாதி. இதைத் தமிழில் தூக்கத்தில் எழுந்து உலாவும் வியாதி என்று சொல்லலாம். இக்கதையில் கதாநாயகி இவ் வியாதியால் பீடிக்கப்பட்டவளாய்த் தூக்கத்தில் தானறியாதபடி நடந்து சென்று, ஓர் அரசனுடைய படுக்கையறைக்குப் போகிறாள். இந்த உண்மையறியாது அவள் காதலன் அவளைத் துர்நடத்தையுடையவள் என்று வெறுக்கிறான்; பிறகு முடிவில் உண்மை வெளியாக, அவன் சந்தேகம் நிவர்த்தியாகி, அவளை மணக்கிறான். இந்த வியாதிக்குத் தமிழில் பெயர் கிடையாது; சாதாரணமாக இவ்வாறு யாராவது நடந்தால் பேய் பிடித்திருக்கிறது என்று சொல்வார்கள். ஆகவே இந்நாடகத்திற்குப் “பேயல்ல பெண்மணியே’ என்று பெயர் வைத்தேன். இந்நாடகத்தின் கதை மிகவும் சிறியதாயிருந்தபடியால், ஏறக்குறைய ஒரு நாடகம் மூன்று மணி நேரமாவது பிடிக்கா விட்டால் பணம் கொடுத்து அதைப் பார்க்க வரும் ஜனங்கள் அதிருப்தியடைவார்கள் என்று, தெருக்கூத்து ஆடுபவர்களுடைய கிளைக்கதை யொன்றையும் இதனுடன் சேர்த்து எழுதினேன். இவ்வாறு நான் செய்ததற்கு உலகெங்கும் பிரசித்தி பெற்ற ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் அனுமதியே இருக்கின்றது. அவர் “மிட் சம்மர் நைட்ஸ் ட்ரீம்” (Mid Summer Night's Dream) என்னும் ஒரு நாடகத்தில் ஆதன்ஸ் நகரத்தின் கூத்தாடிகளுடைய கதையையும் புனைந்து எழுதியிருக்கிறார்; அம்மாதியாகவே கதாநாயகனும் நாயகியும் வசித்திருந்த ஊரிலுள்ள தெருக் கூத்தாடிகள், அங்குள்ள காளி கோயிலின் உற்சவத்தில், அவ்வூர் வழக்கப்படி நாடகமாட ஒத்திகை நடத்தும் கதையை இந்நாடகத்தின் முக்கியக் கதையுடன் புனைந்து எழுதினேன். இந்நாடகத்தில் ஒரு விசேஷமென்ன வென்றால், ஒரு வேஷதாரிக்காவது சம்கி முதலிய விலையுயர்ந்த உடுப்புக் கிடையாது. சாதாரணமாக நாடக மென்றால், ராஜா வேஷம், ‘மந்திரி வேஷம்’ அரசி வேஷம் முதலியன இருக்கவேண்டுமென்பது நமது நாட்டிலுள்ளார் கொள்கையல்லவா? அம்மாதிரியான பாத்திரங்கள் ஒன்றுமின்றி, சாதாரண ஜனங்களின் நடவடிக்கையை நாடகமாக ஆடினால் நன்றாயிராது என்று பெரும்பாலும் அக்காலம் எண்ணப்பட்டது. இது தவரென்று நிரூபிப்பதற்காக இந்நாடகத்தில் வரும் பாத்திரங்களெல்லாம் பெரும்பாலும் சாதாரண ஜனங்களாகவே யமைத்து இந்நாடத்தை எழுதி முடித்தேன். இதில் ஓர் அரசன் மாத்திரம் வந்தபோதிலும், அவ்வரசனும் மாறு வேடத்தில் தேச சஞ்சாரம் செய்வதாக அமைத்து அப்பாத்திரத்தையும் சாதாரண உடையில் வரும்படி செய்தேன். இந்நாடகத்தை நாங்கள் ஒத்திகை செய்த பொழுது, இதைப் பார்த்த பல அங்கத்தினர், இது நன்றாயிருக்குமா எனச் சந்தேகித்தனர். நாடகத் தினத்தில் மேடையின் பேரில் இது ஆடப்பட்டு, வந்திருந்த சபையோர்கள் நன்றாயிருந்ததென அங்கீகரித்த பிறகுதான், அவர்கள் திருப்தியடைந்தனர். ஒருவிதத்தில் இதை ஜன் சமூக நாடகம் (Social Drama) என்றே நான் சொல்லவேண்டும். ஆயினும் இது தற்கால ஜனசமூகக் கதையன்று; பழைய காலத்திய கதையாகும். ஆயினும் இது நன்றாயிருக்கிறது என்று எல்லோரும் ஒப்புக் கொண்டதுதான், பிறகு என்னைத் தற்காலத்திய ஜன சமூக நாடகங்கள் (Present day Social Drama) எழுதும்படி உந்தியது.
இந்நாடகத்தில் கதாநாயகியின் பாகம் எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலு எடுத்துக் கொண்டார். இது இவர் ஆடிய வேடங்களிலெல்லாம் ஒரு கஷ்டமானது என்றே கூற வேண்டும். நித்திரையில் எழுந்து நடப்பவர் போல் நடிக்கும் பொழுது, கண்கள் திறந்து கொண்டேயிருக்க வேண்டும்; ஆயினும் அவைகளில் பார்க்கும் சத்தியில்லாதது போல் காட்ட வேண்டும்; நான் இம்மாதிரியான வியாதி பிடித்தவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனேயொழியப் பார்த்ததில்லை. ஆகவே இன்னது செய்வதென்று தோன்றாதவனாய், இவ்வியாதியைப் பற்றி ஆங்கில வைத்தியப் புஸ்தகங்களில் எழுதியிருப்பதை யெல்லாம் சற்றேறக்குறைய வாசித்து, ஒருவாறு இப்படித்தான் இருக்கவேண்டுமென்று தீர்மானித்து, அவருக்குக் கற்பித்தேன். இந் நாடகத்தில் அவர் நடித்தது மிகவும் நன்றாயிருந்ததெனப் பலர் புகழ்ந்ததே அவர் எடுத்துக் கொண்ட சிரமத்திற்குச் சரியான சன்மானமாகும் என எண்ணுகிறேன். அ. கிருஷ்ணசாமி ஐயர் பங்கஜாட்சியாக நடித்தார். எஸ் ராஜகணபதி முதலியார், ஹாஸ்ய பாகமாகிய சோமநாதன் வேடம் பூண்டார். ஆயினும் ரங்கவடிவேலு நடித்த கஷ்டமான பாகத்தையும், கிருஷ்ணசாமி ஐயரின் திவ்யமான சங்கீதத்தையும், ராஜ கணபதியின் ஹாஸ்யத்தையும் விட, இந்நாடகத்தில், வந்திருந்தவர்களுக்கு மிகுந்த ஆரவாரமான சங்தோஷத்தை உண்டுபண்ணியது தெருக் கூத்தாடிகளாக வந்த ஆக்டர்களே! இதற்கு ஒரு காரணம், சாதாரணமாக கிராமாந்தரங்களில் ஆடும் தெருக்கூத்துகளிலுள்ள ஆபாசங்களையெல்லாம் திரட்டி இதில் எழுதியதாயிருக்கலாம். இருந்தாலும் அதற்குத் தக்கபடி நடித்த ஆக்டர்களுடைய விமரிசையில்லாவிட்டால் இது அவ்வளவு சோபித்திராது என்பது என் துணிபு. இத் தெருக் கூத்தாடிக்களுக்குப் பெயர் வைத்தபொழுது நடித்த ஆக்டர்களின் பெயரையே சுருக்கி வைத்தேன். நாராயணன், ரெங்கன், குப்பன், சாமன், கோபாலன் என்ற பெயர்களை அப்பெயர் கொண்டவர் களுடைய அனுமதியைப் பெற்றே எழுதி வைத்தேன்; இது அவர்களுக்கும் நகைப்பாயிருந்தது; வந்து நாடகம் பார்த்தவர்களுக்கும் நகைப்பாயிருந்தது. இவர்களுக்குள் நாராயண சாமிப்பிள்ளை, தெருக்கூத்தாடி நாராயணனாக நடித்தது எல்லோருக்கும் இடைவிடா நகைப்பாயிருந்தது; இப்பொழுதும் இவருக்கு என்னைப்போல் 59 வயதுக்கு மேலாகியும், இந்தத் தெருக்கூத்து அர்ஜுனன் வேடத்தில் இவரைப் போல் நடிக்கத்தக்கவர்கள் இல்லையென்றே நான் சொல்ல வேண்டும். இவரைப்பற்றி நாராயணசாமிப் பிள்ளை என்று கூறினால், யாருக்காவது தெரியாவிட்டால், “யார் அது, தெருக் கூத்து அருச்சுனனா?” என்று கேட்பார்கள்.
இவ்வருஷம் நான் புதிதாய் எழுதிய மற்றொரு நாடகம் “வாணீபுர வணிகன்” என்பது. இது ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி ஆங்கிலத்தில் எழுதிய மர்ச்சென்ட் ஆப் வெனி (Merchant of Venice) என்பதன் தமிழ் அமைப்பாம். இது அந்நாடகக் கவி எழுதிய நாடகங்களில் ஒரு சிறந்ததாய், தற்காலத்தில் இங்கிலாந்திலும், ஜர்மனியிலும் பன்முறை ஆடப்படுகிறது. “ஆஸ் யூ லைக் இட்” டில் செய்தபடியே இதிலும் பெயர் களையும் ஊர்கள் முதலியவைகளையும் மாற்றி எழுதினேன். இந் நாடகம் இவ் வருஷம் அக்டோபர் மாதம் 3ஆம் தேதி விக்டோரியா பப்ளிக் ஹாலில் எங்கள் சபையோரால் ஆடப்பட்டது. இதில் முக்கியமான பாத்திரம் ஷாம்லால் (Shylock) ஆக இருந்தபோதிலும் எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு சரோஜினி வேடம் பூண்டபடியால், நான் பானுசேனன் வேடம் எடுத்துக் கொண்டேன். ஷாம்லாலின் பாகம் எம். சுந்தரேசையரால் மிகவும் நன்றாய் நடிக்கப்பட்ட தென்று சபிகர்கள் புகழ்ந்தனர். இதில் இவ்வருடம்தான் எங்கள் சபையை சேர்ந்த என் தமயனார் ஏகாம்பர முதலியார் வாணீபுர அரசனாக வேடம் பூண்டார். எங்கள் சபையில் இதுவே அவர் பூண்ட முதல் வேஷமும் கடைசி வேஷமுமாம். இந்நாடகத்தில் தான் அது வரையில் எங்கள் சபையில் சங்கீதத்தில் நல்ல பெயர் பெற்றிருந்த என் பழைய நண்பர் எம். வை. ரங்கசாமி ஐயங்கார் எங்கள் சபையில் கடைசி முறை, அருகபுரத்தரசனாகத் தோன்றினார். இவர் இதற்கப்புறம் கொஞ்ச நாளைக்குள் எங்கள் சபை செய்த தௌர்ப்பாக்கியத்தால் காலகதி அடைந்தனர். இதில், டபிள்யூ துரைசாமி ஐயங்கார் லீலாதரனாகவும், அ. கிருஷ்ணாசாமி ஐயர் ஜலஜாவாகவும் ஆக்டுசெய்தார்கள். ஹாஸ்ய பாகத்தில் ராஜகணபதி முதலியார் லாவண்ய கபீரனாகவும், ஆர். ஸ்ரீனிவாசராவ் என்பவர் கிழ கபீரனாகவும் வேடம் பூண்டு சபையோரைக் களிக்கச் செய்தனர். நீலகேசி வேடம், எஸ். பத்மனாபராவ் பூண்டனர். இந்த நீலகேசி எனும் பெயர் வைத்ததில் எனக்கு ஒரு சிறு சந்தோஷம். நாடகத்தை நான் எழுதியபொழுது ஆங்கிலத்தில் ‘நெரீசா’ என்று பெயர் இருக்க, என் மாமூல்படி அப்பெயரை ஒட்டி நீலகேசி என்று பெயரிட்டேன். பிறகு கொஞ்சநாள் பொறுத்து, நாடக மேடையில் இதை ஆட வேண்டி, இந் நாடகத்தைப் பற்றி ஆங்கிலத்தில் என்னென்ன ஆராய்ச்சிகளும், சர்ச்சைகளும் இருக்கின்றன என்று அங்ஙனம் படித்துக் கொண்டு வரும்பொழுது, “நெரீசா” என்னும் பதத்திற்கு நீலவர்ணமுடைய தலைமயிரை உடையவள் என்று அர்த்தம் கண்டேன். இந்த உண்மையை அறியாமலே, அப்பெயரை ‘நீலகேசி’ என்று அமைத்ததற்காகக் கொஞ்சம் சந்தோஷப்பட்டேன்.
இந்நாடகம் பிறகு எங்கள் சபையில் ஐந்தாறு முறைதான் ஆடப்பட்டது. எம். சுந்தரேச ஐயருக்குப் பிற்காலம் டாக்டர் டி. ஸ்ரீனிவாசராகவாச்சாரியார், ஷாம்லால் வேடத்தில் மிகவும் நல்ல பெயர் பெற்றனர். இந்த நாடகமானது இதர சபைகளால் அதிகமாக ஆடப்படவில்லை. என் குறிப்பின்படி இதுவரையில் என் அனுமதியின் மீது 18 தரம்தான் ஆடப்பட்டிருக்கிறது.
இவ் வருஷத்தில் எங்கள் சபையில் நடந்த இன்னொரு விசேஷம் என்னவென்றால், அ. கிருஷ்ணசாமி ஐயர் எழுதிய “வாசந்திகை என்னும் தமிழ் நாடகம் ஆடப்பட்டதேயாம். இதுவரையில், எங்கள் சபை ஸ்தாபித்தது முதல் தமிழில் நான் எழுதிய நாடகங்களே ஆடி வந்தார்கள். இவ்வருஷம் எனது நண்பர் - கிருஷ்ணசாமி ஐயர் அப்புதிய நாடகத்தை எழுதி முடித்தபடியால் அது ஆடப்பட்டது. அதில் நாடகாசிரியராகிய கிருஷ்ணசாமி ஐயர் கதாநாயகியாகிய வாசந்திகை வேடம் பூண்டனர். இந்நாடகத்தில் ரங்கவடிவேலு எடுத்துக் கொள்ளக்கூடிய ஸ்திரீ பாத்திரம் ஒன்றுமில்லாதிருந்தது; ஆகவே நாங்கள் இருவரும் இதில் ஆடவில்லை . எனதாருயிர் நண்பர் என்னுடனன்றி மற்றவர்களுடன் நாடக மேடையில் ஆடுவதில்லை என்று முதன் முதல் தீர்மானித்துத் தன் மரணபர்யந்தம் அத்தீர்மானித்தினின்றும் தவறினவர் அன்று! இதைப்பற்றி நான் பிறகு எழுத வேண்டி வரும்.
இவ் வருஷமானது எங்கள் சபையின் சரித்திரத்தில் இன்னொரு விதத்தில் முக்கியமானதாயிருந்தது இது வரையில் வருஷா வருஷம் வரவிற்கும் செலவிற்கும் சரியாகப் போய்க்
கொண்டிருந்தது. உதாரணமாக 1902 ஜுன் மாசம் 30ஆம் தேதிவரையில், வரவில் செலவு போக, கையிருப்பு மிகுதிப் பணம் ரூபாய் 1-15-8 தானிருந்தது! இவ்வருஷம் டிசம்பர் மாதம் நான்கு நாடகங்கள் நடித்து செலவு போக ரூபாய் 354-2-11 கையிருப்பு நின்றது. பிறகு இதில் ரூபாய் 250 புரசைவாக்கம் பண்டில் வைத்தோம். இவ்வருஷம் முதல்தான் எங்கள் சபைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்க்கத் தலைப்பட்டோம். இவ்வருஷம் என் ஆருயிர் நண்பர் சி.ரங்கவடிவேலு பொக்கிஷதாராக இருந்தார். அவரது கைராசி நன்றாயிருந்தது போலும்!
எனக்கு ஞாபகமிருக்கிறபடி இவ்வருஷம் இன்னொரு விசேஷம் நடந்தது. இவ்வருஷம்தான் எங்கள் சபையின் இருப்பிடமானது, தம்புச்செட்டித் தெருவிலிருந்து விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு மாற்றப்பட்டது. இதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன்பாக, விக்டோரியா பப்ளிக்ஹாலில், தற்காலம் பட்சணம் தயாரிக்குமிடமானது எங்களுக்கு வாடகைக்குக் கிடைத்தது. அதில் எங்கள் படுதாக்கள் முதலிய சாமான்களை யெல்லாம் போட்டு வைத்தோம். சென்னையில் தம்புச் செட்டித் தெருவில் ஒரு மூலையில் இருப்பதை விட, விக்டோரியா பப்ளிக் ஹால் சென்னைக்கு மத்தியில் இருக்கிறது, டிராம் வண்டி சௌகர்யமுமிருக்கிறது. ஆகவே, அந்த இடத்திற்கு எங்கள் சபையை மாற்ற வேண்டுமென்று தீர்மானித்தோம்.
அங்கிருந்த எங்கள் சாமான்களை யெல்லாம் சிந்தாதரிப் பேட்டையில் ஓர் இடத்தை வாடகைக்கு அமைத்து, அதில் வைத்துவிட்டு, நாங்கள் விக்டோரியா பப்ளிக் ஹாலின் மேற்குப்பாகத்தில் குடி புகுந்தோம். பழைய கதையில் ஒட்டகமானது முதலில் மூக்குக்கு இடம் பெற்றதுபோல் இதைப்பெற்று, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வியாபித்து விக்டோரியா பப்ளிக் ஹாலின் கீழ்ப்பாகம் முழுவதையும் பெற்றோம். எப்படியெனில், இப்பொழுது எங்கள் சபையில் படுதாக்கள் வைத்திருக்கும் இடம் காலியாயிருக்கக் கண்டு விக்டோரியாஹால் அதிகாரிகளிடமிருந்து அதை வாடகைக்குப் பெற்று, எங்கள் சாமான்களை அதில் கொண்டு வைத்தோம், முதலில். பிறகு, 1911ஆம் வருஷம் விக்டோரியா ஹாலின் கீழ்ப்பாகத்தில் அதுவரையில் இருந்தசைக்கில் கிளப் (Cycle Club) உடைந்து போகவே, அதிகாரிகளிடமிருந்து அதையும் குடிக் கூலிக்கு வாங்கிக் கொண்டோம். இவ்வாறு “சிறுகக்கட்டி பெருக வாழ்” என்னும் பழமொழியின்படி கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் சபையை விருத்தி செய்தோம். இவ்வாறு வரவுக்குத் தக்கபடி செலவு செய்துகொண்டு, வரவு அதிகமாக ஆக செலவையும் அதிகப்படுத்திக் கொண்டு வந்தபடியால் தான், இதர சபைகள் அழிந்ததுபோல் அழியாமல் எங்கள் சபை நீடித்திருக்கின்றது என்று உறுதியாய் நம்புகிறேன். இச் சந்தர்ப்பத்தில் என் அருமைத் தந்தையார் எங்களுக்குக் கூறிய ஒரு புத்திமதி எனக்கு ஞாபகம் வருகிறது. அதாவது ஒருவனுக்கு நூறு ரூபாய் மாதம் வரும்படியிருந்தால். அதில் 99 ரூபாய் 15 அணா பதினொருபை, அவன் செலவழிப்பானாயினும் அவன் சுகியாவான்; நூறு ரூபாய்க்குமேல் ஒரு தம்பிடி அதிகமாகச் செலவழித்து அவன் கடன்காரனாவானாகில், அவன் துக்கத்திற்கிடங் கொடுப்பவனே என்று பன்முறை எங்களுக்குக் கூறியுள்ளார். அதைக் கடைப்பிடித்து நாங்கள் இதுவரையில் எங்கள் சபையைப் பாதுகாத்து வந்திருக்கிறோம். இனிமேலும் எங்கள் சபையார் இப்புத்திமதிப்படி நடப்பார்களாக. வரவுக்கு மிஞ்சி செலவு செய்ய விரும்பும் எனது இளைய நண்பர்கள் இதைக் கொஞ்சம் முக்கியமாகக் கவனிப்பார்களாக!
பதினேழாம் அத்தியாயம்
1904ஆம் வருஷம் எங்கள் சபையார் சாரங்கதரா நாடகத்தை மறுமுறை நடத்தி, அதில் வந்த வரும்படியில் செலவு போக சென்னைபுரி அன்னதான சமாஜத்தாருக்கு ரூபாய் 250 கொடுத்தார்கள். இந்த மூலதனத்தைக் கொண்டு வருஷா வருஷம் ஒரு தினம் அன்னதான சமாஜத்தார் நூறு ஏழைகளுக்குச் சபையின் பேரால் அன்னமளிக்கின்றார். இந்த விஷயம், எங்கள் சபை அங்கத்தினருக்கே அநேகம் பெயருக்குத் தெரியாதாகையால், இதை இங்கு எடுத்தெழுதலானேன்.
இந்த 1904ஆம் வருஷம் நடந்த இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எங்கள் சபையார் மைலாப்பூர் கிளப் தோட்டத்தில், ‘விரும்பிய விதமே’ என்னும் எனது நாடகத்தை நடத்தியதேயாம். இது அனேக விதத்தில் ஒரு முக்கியமான சம்பவமாகையால் இதைப்பற்றிச் சற்று விவரமாய் எழுத வேண்டியவனாயிருக்கிறேன்.
இந்நாடகம் இவ் வருஷம் டிசம்பர் மாசம் 27ஆம் தேதி நடத்தப்பட்டது. இதன் வரும்படியை மைலாப்பூரில் முன்பு கட்டியிருந்த ரானடே ஹால் (Ranade Hall) என்னும் கட்டடத்திற்காகக் கொடுத்தோம். இச்சமயம் ரானடே புஸ்தக சாலைக்குக் காரியதரிசியாக, வக்கீலாயிருந்து பிறகு சப் ஜட்ஜாகிய பாலசுப்பிரமணிய ஐயர் என்பவர் இருந்தார். இவர் அக்கட்டடத்தைப் பூர்த்தி செய்வதற்குப் பணம் கொஞ்சம் போதாமையாயிருந்தபடியால், எங்கள் சபை அதற்காக ஒரு நாடகம் மைலாப்பூரில் நடத்தி, வரும்படியைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். நாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவே, அவர் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்தார். நாங்கள் தீர்மானித்த நாடகமாகிய “விரும்பிய விதமே” என்பதை ஒரு தோட்டத்தில் போட்டால் நன்றாயிருக்குமெனக் கூறினேன். இதற்கு முன்பாக “லார்ட் வென்லாக்” (Lord Wenlock) சென்னை கவர்னராக இருந்த பொழுது, ஒருமுறை, கவர்ன்மெண்ட் ஹவுஸ் தோட்டத்தில், ஆங்கிலத்தில் இந்நாடகம் நடிக்கப்பெற்றதை நான் பார்த்திருந்தேன். அது மிகவும் நன்றாயிருந்ததெனக் கண்டறிந்தவனாய் இந்நாடத்தைத் தமிழில் மொழி பெயர்த்துத் தோட்டத்தில் நடித்தால் நன்றாயிருக்குமென்றே இதைத்தமிழில் எழுதினேன்.
இக்கதையின் முதல் அங்கம் தவிர மற்ற நான்கு அங்கங்களும் ஒரு காட்டிலே நடந்தேறுகின்றன; முதல் அங்கத்தின் காட்சிகளையும் ஒரு தோட்டத்தில் நடத்திக் காட்டலாம். ஆகவே, பாலசுப்பிரமணிய ஐயர், மைலாப்பூர் கிளப்பின் பின்பக்கமிருக்கும் ஒரு சிறு தோட்டத்தில் இதற்காக இரண்டு பெரிய மரங்களின் மத்தியில் சிறு மேடை எழுப்பிதக்க ஏற்பாடு செய்தார். தென்புறத்தில் ஒரு குகையிலிருந்து ஒரு வழி வருவது போலும் ஏற்பாடு செய்தார். வேஷதாரிகள் வேஷம் பூண, அதற்குப் பின்புறமாகத் தென்னங்கீற்றுகளினால், ஒரு சிறு விடுதி ஏற்படுத்தினார். பனிக்காலமாகையால் நாடகம் பார்க்க வரும் ஜனங்களின் சௌகர்யத்திற்காக எதிரில் ஒரு பெரிய. பந்தலைப் போட்டு வைத்தார். இவ்வாறு நாடகம் நடத்துவதற்காக எல்லா சௌகர்யங்களையும் செய்து விட்டு, நாடகத்திற்காக ஒரு தினம் குறித்து டிக்கட்டுகளையும் ஏராளமாகத் தனக்குத் தெரிந்தவர்களுக்குள் விற்றனர். எல்லாம் சித்தமான பிறகு, தெய்வானுகூலமில்லாமற் போயிற்று! இந்நாடகத்தில் ஒரு முக்கிய ஸ்திரீவேஷம் தரிக்க வேண்டிய சி. ரங்கவடிவேலுவின் தாயார், இதற்கு முன் கொஞ்ச காலமாகப் பாரிச வாயுவினால் பீடிக்கப்பட்டிருந்தார்கள்; மரணகாலம் கிட்டியது. வைத்தியர்கள் அவர்களது நிர்யணகாலம் இன்றோ நாளையோ என்று கைவிட்டனர். எப்படியாவது நாடகத்தினம் தள்ளிவிடுமென்று கோரி ஆக்டர்களெல்லாம் சித்தமாயிருந்தோம். எனதாருயிர் நண்பர் தன் மனோவருத்தத்தையும் பாராமல், சபையின் பெயருக்காகத் தான் ராஜீவாட்சியின் (Rosalind) பாகத்தை ஆட ஒப்புக்கொண்டார். நாடக மேடையில் விளக்குகளும் ஏற்றி ஆக்டர்களெல்லாம் வேஷம் போட்டுக் கொள்ளுமுன், ராத்திரி நாடகமாகையால் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வேஷம் தரிக்க வேண்டுமென்று சித்தம் செய்து கொண்டிருக்கும் தருவாயில், ரங்கவடிவேலுவின் தாயார் மரணமடைந்ததாகச் செய்தி வந்தது! அப்பொழுது எங்கள் மனநிலைமை எப்படியிருந்திருக்க வேண்டுமென்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் தாங்களே ஊகித்துக் கொள்வார்களாக! அரங்கத்திற்காக ஏற்றிய விளக்குகளை யெல்லாம் மெல்ல அணைத்துவிடச் சொல்லி விட்டு சித்தம் செய்திருந்த உணவையும் உட்கொள்ளாது, தலை சாய்த்தவண்ணம் மௌனமாய் எங்கள் வீடுகளுக்குப் போய்ச் சேர்ந்தோம். இதுவரையில் எங்கள் சபையில் இம்மாதிரியாக ஏற்படுத்திய நாடகமானது நடவாமற் போனதில்லை . இதற்குப் பிறகு இரண்டொரு முறை நாடகத் தேதியானது சில அசந்தர்ப்பங்களால் மாற்றி வைக்கப்பட்ட போதிலும், எல்லாம் சித்தம் செய்த பிறகு, க்ஷவரம் செய்து கொண்டு வேஷம் தரிக்க சித்தமாயிருந்தவர்கள், இப்படிப்பட்ட காரணத்தினால் நாடக மாடாது கலைந்ததில்லை. எங்கள் சபையிலும் மற்றெந்தச் சபையிலும் இப்படிப்பட்ட துக்ககரமான காரணத்தினால் எப்பொழுதும் எந்த நாடகமும் தள்ளி வைக்கப்படாமல் இருக்குமாறு எல்லாம் வல்ல கடவுளின் கருணையைப் பிரார்த்திக்கிறேன். எனக்கு முக்கியமாக, எனது நண்பரின் தாயார் இறந்ததுகூட அத்தனை வருத்தத்தைத் தரவில்லை; அன்று அந்நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்று எதிர் பார்த்திருந்த ஸ்திரீ புருஷர்களுக்கு இன்று நாடகம் இல்லை, வீட்டிற்குப் போங்கள் என்று எந்த முகத்துடன் சொல்வது? என்றே அதிகத் துக்கப்பட்டேன். எனது நண்பராகிய பாலசுப்பிரமணிய ஐயரும், “நாடகம் இன்று இல்லாமற்
போனாற்போகிறது. இன்னொரு நாளைக்குப் பிறகு வைத்துக் கொள்வோம். வரும் ஜனங்களுக்கெல்லாம் இன்று நாடகம் கிடையாது; என்று எப்படிச் சொல்லியனுப்பப் போகிறேன்” என்றே துயரப்பட்டார். ஆங்கிலத்தில் “மனிதன் ஒருவிதமாக ஆரம்பிக்கிறான், தெய்வம் ஒருவிதமாக முடித்து வைக்கிறது” என்று ஒரு பழமொழி உண்டு. அதை நினைத்து ஒரு விதமாக என் மனத்தைத் தேற்றிக்கொண்டு, கரைந்த மனத்தினனாய், மைலாப்பூரை விட்டு, சிந்தாதரிப்பேட்டைக்கு என் நண் பருக்குத் தேறுதல் சொல்ல அன்றிரவு சென்றேன்.
பிறகு அவரது தாயாருக்குச் சடங்குகளெல்லாம் கழிந்த பின், சில தினங்கள் பொறுத்து, அவரது மனத்தைத் தேற்றின வனாய், மெல்ல அவரிடம், நாம் ஒப்புக்கொண்ட நாடகத்தை எப்படியாவது ஆடித்தான் தீர வேண்டுமென்று சொல்ல, அவரும் அதற்கிசைய, இரண்டாம் முறை ஒரு நாள் குறித்துக்கொண்டு, இம்முறை தெய்வச கடாட்சத்தினால் நிர்விக்கினமாய் இந்நாடகத்தை நடத்தி முடித்தோம்.
அன்று நடந்த நாடகம் நன்றாயிருந்ததா இல்லையா வென்பதற்குக் கீழக்கண்ட சமாச்சாரத்தை எடுத்துக் கூறுகிறேன். அதைக் கொண்டே இதை வாசிக்கும் எனது நண்பர்கள் ஊகித்தறியலாம்.
இச்சமயம் ஹைகோர்ட்டில் பிரபலமான வக்கீலாயிருந்தவர்களுள், ஏறக்குறைய முதலாயிருந்தவர் என்று வி. கிருஷ்ணசாமி ஐயரைச் சொல்லலாம். இவர், வக்கீல்கள் சபையில் சில இளைய வக்கீல்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, பாலசுப்பிரமணிய ஐயர் எங்கள் சபையார் ரானடே புஸ்தக சாலைக்காக ஒரு நாடகம் நடத்தப் போகிறதாகத் தெரிவித்து, அதற்காக ஒரு டிக்கட்டு வாங்கும்படியாக வி. கிருஷ்ணசாமி ஐயரைக் கேட்டனராம். நல்ல விஷயமாக இருக்கிறதேயென்று கிருஷ்ணசாமி ஐயர் ஒப்புக்கொண்டு ஒரு டிக்கட்டையோ இரண்டு டிக்கட்டையோ வாங்கிக்கொண்டு என்ன நாடகம் நடக்கப் போகிறதெனக் கேட்க, ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில் எழுதிய “ஆஸ் யூ லைக் இட்” என்னும் நாடகத்தைத் தமிழில் நடத்தப் போகிறார்கள் என்று இவர் பதில் உரைக்க, “ஷேக்ஸ்பியர்நாடகத்தைத் தமிழில் நடத்துவதாவது! வாட் நான்சென்ஸ்! (What nonsense!) ஷேக்ஸ்பியரைக் கொல்வதை நான் பார்க்க இஷ்டமில்லை” என்று மிகவும் கோபத்துடன் மொழிந்தனராம்.
அதன்மீது பாலசுப்பிரமணிய ஐயர், அவரைச் சாந்தப்படுத்தி, “அப்படி ஒன்றும் ஆபாசமாயிராது. கொஞ்சம் நேரமாவது வந்து பாருங்கள். உங்கள் மனத்திற்குப் பிடித்தால் இருங்கள், இல்லாவிட்டால் நீங்கள் வீட்டிற்குப் போய் விடுங்கள். மைலாப்பூரில் ரானடே புஸ்தக சாலைக்காக, இச்சபையார், உதவி செய்ய முன் வந்திருக்கும்பொழுது, நாம் அவ்வளவாவது அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டாமா?” என்று வற்புறுத்தவே, மனமில்லாமலிருந்தும் அவரது வேண்டுகோளுக்கிசைந்து, கொஞ்ச நேரந்தானிருக்கக் கூடும் என்று விடை பகர்ந்தனராம். பிறகு அவருடனிருந்த இளைய வக்கீல்களும், அவர் எண்ணியது போல எண்ணிய வர்களாய், நாமும் போய்ப் பார்ப்போம் என்று தீர்மானித்துக் கொண்டார்களாம். அப்படித்தீர்மானித்துக் கொண்டவர்களுள் ஒருவர் கே. எஸ். ராமஸ்வாமி சாஸ்திரியார் என்பவர்; இப்பொழுது இவர் டிஸ்டிரிக்ட் ஜட்ஜாக வேலை பார்க்கிறார்; இவர்தான் இங்கு வக்கீல் அசோசியேஷனில்மேல் நடந்த விருத்தாந்தத்தைத் தஞ்சாவூரில் “தென் இந்திய - நாடக மேடை”யைப்பற்றி நான் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு உபன்யாசம் செய்தபொழுது, அக்கிராசனாதிபதியா யிருந்து, இதையெல்லாம் விவரமாய்ப் பலர் அறிய எடுத்துரைத்தார்; இவர் மூலமாகத்தான் நான் இதை அறிந்தேன்.
இவர்களெல்லாம் தங்கள் தீர்மானப்படி, ம-ள-ள-ஸ்ரீ வி. கிருஷ்ணசாமி ஐயருடன், நாடகம் ஆரம்பமாகும் சமயத்தில் வந்திருந்து முதலில் உட்கார்ந்திருந்தனர். நாடகம் நடக்க நடக்க, அதை வெறுப்பதைவிட்டு, “விரும்பிய விதமே” என்று நான் அதற்குப் பெயர் வைத்ததற்கிசைய, விரும்பத் தொடங்கினார் களாம். நாடகமானது ஏறக்குறைய நான்கு மணி நேரத்துக்கு மேல் நடந்தபோதிலும் உட்கார்ந்த இடம் விட்டுப் பெயராது கடைசிவரையில் இருந்தனர். ஆங்கிலத்தில், “பரிகசிக்கக் கோயிலுக்கு போய், பரமனைத் தொழ நின்றார்கள்” என்று பொருள்படும்படியான ஒரு பழமொழியுண்டு. அதுபோல, இவர்கள் “புரை (குற்றம்) கூற வந்தவர்கள், புகழ நின்றார்கள்” என்று கூறலாம்; இவர்களுள் ஒருவர் எனக்கு நேராகக் கூறிய வார்த்தைகளையே இங்கு எழுதியுள்ளேன். இனி கொஞ்சம் நிமிஷம்தான் இருப்பேன் என்று கூறிய வி. கிருஷ்ணசாமி ஐயர் செய்ததைக் கூறுகிறேன். இவர் நான்கு மணிக்குமேல் இடம்
பெயராது நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்து, நாடகம் முடிந்தவுடன், நாங்கள் வேஷங்களைக் கலைத்துக் கொண்டிருக்குமிடத்திற்கு வந்து, இந்நாடகத்தை எழுதியது யார் என்று விசாரித்த பாலசுப்பிரமணிய ஐயர், என்னை , “இவர்தான் சம்பந்தம்” என்று தெரிவிக்க, என்னை அதிகமாகப் புகழ்ந்து பேசினார். அன்றியும் அன்று நாடகத்தில் நடித்த முக்கியமான ஆக்டர்களையெல்லாம் இன்னார் இன்னாரென்று தெரிந்துகொண்டு, அவர்களாடியது மிகவும் நன்றாய் இருந்ததெனக் கொண்டாடினார். இதனுடன் நிற்காமல், “என்ன மிஸ்டர் சம்பந்தம், மழை வரும் போலிருக் கிறதே, இந்த மழையில் நீங்கள் எல்லாம் எப்படி வீடு போய்ச் சேருவது? என் வீட்டில் இன்றிரவு தங்கி நாளைக் காலை போகலாம்” என்று சொல்லி, நாங்கள் எல்லாம் வேஷம் கலைத்த பிறகு, எங்கள் எல்லோரையும் மைலாப்பூர்கிளப்புக்கு எதிரிலிருக்கும் தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய், எங்களுக் கெல்லாம் பால் சோடா முதலியன தாகத்திற்குக் கொடுத்து அனைவருக்கும் படுக்கைகள் ஏற்படுத்தி உறங்கச் செய்து விட்டு, மறுநாள் காலை எங்களை யெல்லாம் தந்தசுத்தி செய்துகொள்ளச் செய்து அனைவருக்கும் காபி கொடுத்து, வண்டியில்லாத சில ஆக்டர்களுக்குத் தன் வண்டியையும் கொடுத்து, எங்களை வீட்டிற்கனுப்பினார். அன்று முதல் வயதிலும், செல்வத்திலும், புத்தியிலும் எல்லாவிதத்திலும் என்னைவிட மேம்பட்டவராயிருந்தபோதிலும், தன் மரணபர்யந்தம் வரை என்னைத் தன் நண்பனாகவே பாவித்து வந்தார். “முகநக நட்பது நட்பு அன்று நெஞ்சத்தக நட்பது நட்பு” என்று தெய்வப்புலமை திருவள்ளுவர் கூறிய உண்மையை இவர்பால் நன்கு அறிந்தேன். இதனுடன் நிற்காமல், சீக்கிரம் எங்கள் சபையின், அங்கத்தினராகி சீக்கிரத்தில் எங்கள் சபையின் பிரசிடென்ட் (President) ஆகவும் ஒப்புக்கொண்டு, தன் மரணபர்யந்தம் எங்கள் சபைக்குப் பலவிதங்களிலும் உதவிபுரிந்துள்ளார். அதன் விவரங்கள் ஆங்காங்கு இனி எடுத்துரைப்பேன். ஆயினும் இங்கு ஒரு விஷயம் மாத்திரம் எடுத்துரைக்க விரும்புகிறேன். இவர் நமது தேசமும் எங்கள் சபையும் செய்த தௌர்ப்பாக்கியத்தால், சில வருஷங்களுக்குள் காலகதியடைந்தார் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே. அக்காலம் வரையில் எப்பொழுது எங்கள் சபையைப்பற்றிப் பேசும்படி நேரிட்டாலும், “எங்கள் சபை” “நம்முடைய சபை” என்று கூறியது தவிர “உங்கள் சபை” என்று அவர் வாயால் கூறியதை நான் ஒருக்காலும் கேட்டதில்லை, இவர் எங்கள் சபைக்குச் செய்த பேருதவிக்கெல்லாம். எங்கள் சபையார். இவர் தேக வியோகமானபின், இவரது ஞாபகச் சின்னமாக இவரது சிலை உருவை ஸ்தாபிக்க வேண்டுமென்று பாங்க்வேட்டிங் ஹாலில் பொதுஜனக் கூட்டம் சேர்ந்த பொழுது அன்று இதன் பொருட்டு 1000 ரூபாய் எங்கள் சபையார் கொடுக்க இசைந்து, உடனே கொடுத்துத் தங்கள் கடனை ஒருவாறு கழித்துக் கொண்டனர் என்று கூறலாம்! ஆயினும் இச்சீமான் எனக்குச் “செய்யாமற் செய்த” உதவிக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? தெய்வப் புலமை நாயனார், “செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் மாற்றலரிது” என்று கூறியதை நினைத்துக் கடனைத் தீர்க்க அசக்தனாயிருக்கிறேன் என்று ஒப்புக் கொள்வதன்றி வேறு ஒன்றும் செய்ய அசக்தனாயிருக்கிறேன்.
மேற்சொன்னபடி இவருக்கும் இன்னும் இதரமைலாப்பூர் வக்கீல்களுக்கும் அவ்வளவு சந்தோஷத்தை உண்டுபண்ணின ஆக்டர்களைப்பற்றி இனிக் கொஞ்சம் வரைகிறேன்.
முக்கியமாக சுசீலா வேஷம் தரித்த அ. கிருஷ்ணசாமி ஐயரும், ராஜீவாட்சி வேடம் தரித்த எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவும்தான் இவர்கள் மனத்தை மிகவும் திருப்தி செய்தனர் என்று நான் கூற வேண்டும். இவர்களிருவருடைய நடையுடை பாவனைகளும் வசனமும் சங்கீதமும் மிகவும் நன்றாயிருந்ததென இவர்கள் எல்லோரும் புகழ என் காதாறக் கேட்டேன். நாடக மேடை மீது பொறாமையின்றி ஒத்து நடித்த இவர்களைப் போன்று இரண்டு ஆக்டர்களை இன்னும் நான் காணப் போகிறேன். இவர்கள் பாடிய பாடல்களில் “ராஜராஜ” என்கிற ஒரு பாட்டு இன்னும் என் செவியில் தொனிக்கிறது. இவர்களிருவரும் இப்பாட்டை மேடையின்மீது பாடும் பொழு தெல்லாம், இதை மறுபடியும் பாடும்படி கேளாத சபைக் கூட்டத்தை நான் கண்டதில்லை. இதை ஒரு முறை எனது நண்பர் சி.பி. ராசாமி அய்யர் கிராமபோனில் எடுக்க முயன்றார். யாது காரணத்தினாலோ அது கைகூடாமற் போயிற்று. அது சங்கீதப் பிரியர்களின் துரதிர்ஷ்டமென்றே நான் கூற வேண்டும்.
இந்நாடத்தின் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால், இதில் நடித்த முக்கியமான வேஷதாரிகள் மட்டுமன்றி, எல்லா ஆக்டர்களும் தங்களுடைய பாகம் எவ்வளவு சிறிதாயிருந்த போதிலும், மிகவும் நன்றாய் நடித்ததேயாம். இதுவே இந்நாடகத்தின் பெரும் பெருமையாம். இம்மாதிரியாக எல்லா ஆக்டர்களும் நன்றாய் நடித்த நாடகங்கள் எங்கள் சபையில் சிலவேயென்றுதான் நான் கூற வேண்டும். எனது பழைய நண்பரான அ. வாமன்பாய் என்பவர் மறு நாள் எனக்குக் கூறியபடி, அன்றிரவு தோட்டத்தில் நடத்திய நாடகமாதலால் காட்சிக்கும் காட்சிக்கும் இடையில் காலம் போக்காமல் காட்சியின்மேற் காட்சியாய், மிகவும் அழகாய் நடந்ததென எல்லோரும் கூறனார்கள். ஆங்கிலத்தில் “The proof of the pudding is in the eating” என்று ஒரு பழமொழியுண்டு . அதைத் தமிழில் “அப்பம் நன்றாயிருக்கிற தென்பது அதைத் தின்பதனால் தெரியும்” என்று ஒருவாறு மொழிபெயர்க்கலாம். அதன்படி, இந்நாடகம் நன்றாயிருந்ததென்பதற்கு அத்தாட்சி யாக, அதுவரையில் எங்கள் சபையில் சேராதிருந்த அநேக மைலாப்பூர் வக்கீல்கள், உத்யோகஸ்தர்கள் முதலியோர் எங்கள் சபையைச் சேர்ந்ததைத்தான் கூற வேண்டும்.
இனி 1905ஆம் வருஷம் எங்கள் சபையில் நடந்த முக்கியமான விஷயங்களைப் பற்றி எழுதுகிறேன்.
இவ்வருஷம்தான் நாங்கள் முதல் முதல் ஷேக்ஸ்பியர் மஹா நாடகக் கவியின் பிறந்த நாளைக் கொண்டாடத் தொடங்கினோம். உலகெங்கும் பிரசித்திபெற்ற இந்த நாடகக் க்வியின் பிறந்த தினத்தை இங்கிலாந்து தேசத்தில், அவர் பிறந்த இடமாகிய ஸ்டிராட்போர்டு ஆன் ஆவன் (Stratford on Avon) என்கிற இடத்தில் கொண்டாடுவதை அறிந்தவர்களாய், அதை நாடகம் விருத்தியைக் கருதிய நாமும் கொண்டாட வேண்டுமென்று தீர்மானித்து, விக்டோரியா பப்ளிக் ஹாலை ஒரு வாரத்திற்கு வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். அந்த வாரத்தில் ஒரு நாள், அவர் எழுதிய ஒரு நாடகத்தின் தமிழமைப்பாகிய “வாணீபுரவணிகன்” என்பதைத் தமிழிலும், மற்றொரு நாள் “ஒதெல்லோ” எனும் சிறந்த நாடகத்தை அவர் எழுதியபடியே ஆங்கிலத்திலும், இன்னொரு நாள் “ஆல்ஸ் வெல் தட் என்ட்ஸ் வெல்” (All is well that ends well) என்னும் அவர் எழுதிய நாகடத்தைத் தெலுங்கிலும் நடத்தினோம்;
அன்றியும் இவ்வாரத்தின் கடைசி நாளின் கிராண்ட் ஷேக்ஸ் பியர் கார்னிவல் என்று ஒன்று ஏற்பாடு செய்தோம். இதற்குத் தமிழில் ‘ஷேக்ஸ்பியர் கொண்டாட்டப் பண்டிகை’ என்று ஒருவாறு கூறலாம். இதில் எங்கள் சபை ஆக்டர்களில் அநேகர் ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களிலுள்ள பாத்திரங்களின் வேடங்கள் தரித்து வந்தனர். சற்றேறக்குறைய அச்சமயத்தில் தான் எங்கள் சபையைச் சேர்ந்த ஸர். சி.பி. ராமசாமி ஐயர் அவர்கள், இச்சமயம் போர்ஷியாவாக வேடம் தரித்தது எனக்கு நன்றாக ஞாபாமிருக்கிறது; கொஞ்சநேரம் ஹாலில் இருந்து விட்டுப் பிறகு வேஷத்தைக் கலைத்துவிட்டனர்; இந்த ஒரு முறைதான் இப்பொழுது எங்கள் சபையின் அத்யட்சராயிருக்கும் இவர் எங்கள் சபையில் வேஷம் பூண்டது. நான் ஒதெல்லோ என்னும் நாடகத்தில் வரும் ஒரு பாத்திரமாகிய “இயாகோ” (lago) வேடம் தரித்தேன். எனது பால்ய நண்பரான வி.வி.ஸ்ரீனிவாச ஐயங்கார், “இந்திய நாடக மாது” எனும் ஸ்திரீ வேஷம் தரித்தார். அவரது கையில் ஷேக்ஸ்பியர், காளிதாசன், சம்பந்தம் என்னும் மூன்று பெயர்களும் வரைந்த ஒரு கேடயத்தைப் பிடித்திருந்தார். அவ்விரண்டு மகா நாடகக் கவிகளுக்கும், சிற்றறிவுடைய எனக்கும் அஜகஜாந்தரமாக வித்தியாசமிருந்தபோதிலும், நம்முடைய பெயரையும், அம் மாகான்களின் பெயருடன் சேர்த்துக் கூறும்படியான பாக்கி யத்தைப் பெற்றோமே என்று சந்தோஷித்தேன். என்னுடைய தமயனார் ஆறுமுக முதலியார், யாரும் பூண இச்சைப்படாத, அசங்கியமான காட்டு மனிதன் உருவையுடைய காலிபன் (Caliban) வேடம் பூண்டது வெகு விந்தையாயிருந்தது. இம்மாதிரியாக, ஏறக்குறைய நாற்பது ஐம்பது பெயர்கள் வேடம் பூண்டு வந்தனர். அன்றைத் தினக் கொண்டாட்டம் மிகவும் ‘விமரிசையாக இருந்ததென வந்திருந்தவர்கள் புகழ்ந்தனர். இம்மாதிரியாக இந்த வருஷம் வெகு சம்பிரமத் துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஷேக்ஸ்பியர் கொண்டாட்ட மானது, இந்த இருபத்தெட்டு வருடங்களாக நடந்து வருகிறது. மூன்று நாள் நாடகங்கள் ஆடா விட்டாலும், ஷேக்ஸ்பியர் மகாகவியின் ஒரு நாடகமாவது ஆடி வருகிறோம். அன்றியும் வருடா வருடம், ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களைப் பற்றியோ, அவரைப்பற்றியோ யாராவது ஓர் அங்கத்தினர், ஒரு உபன்யாசம் செய்து வருகிறார். 1931ஆம் வருடம் மாத்திரம் இக் கொண்டாட்டம் நடவாமல் போயிற்று என்று சொல்ல நான்
மிகவும் துக்கப்படுகிறேன். இனிமேலாவது எங்கள் சபையார் இதை ஒரு வருடமும் விடாது நடத்துவார்களெனப் பிரார்த்திக்கிறேன்.
சபையில் கௌரவம் வஹிக்க விரும்பும் இளைஞர்களான அங்கத்தினர் அதன் கஷ்டத்தையும் கொஞ்சம் மேற்கொள்ள இசைவார்களென நம்புகிறேன். கஷ்டப்படாமல் ஒரு காரியத்தையும் சாதிக்கமுடியாது என்பதை அவர்களுக்கு இதன் மூலமாக நினைப்பூட்டுகிறேன்.
இவ்வருஷம்தான் எங்கள் சபைக்குச் சொந்தமான ஒரு நாடக சாலையும் இருப்பிடமும் கட்ட வேண்டுமென்னும் யோசனை பிறந்ததெனக் கூற வேண்டும். இதற்கு முக்கியமான காரணம், அக்காலம் எங்கள் இருப்பிடமாகிய விக்டோரியா ஹாலின் மேற்குப் பக்கம், தற்காலம் சிற்றுண்டி தயாரிக்கும் அறையானது, எங்கள் ஒத்திகைகளுக்குப் போதுமான வசதியாயில்லாமையே. அன்றியும் இவ்வருஷத்தில் எங்கள் சபையின் அங்கத்தினர் அதிகரித்து 278 பெயர்களாகி விட்டனர். எங்கள் சபை 1891ஆம் வருஷம் ஆரம்பித்த பொழுது, ஏழு பெயர்கள்தான் அங்கத்தினராயிருந்த விஷயம் நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். ஆறு வருஷம் பொறுத்து நூறு அங்கத்தினர்களானார்கள். அந்த நூறாவது மெம்பராகிய வி. தாத தேசிகாச்சாரியார், பி.ஏ. பி. எல்., எங்கள் சபை தம்பு செட்டித் தெருவிலிருக்கும் பொழுது, தான் நூறாவது மெம்பரானதற்காக ஒரு சிறு விருந்து கொடுத்தார். அதன் பிறகு, எட்டு வருடம் பொறுத்து, இவ்வருஷம் (1905) ஆரம்பத்தில் இருநூறு மெம்பர்களானோம். இவ்வாறு இருநூறாவது மெம்பராகிய வி.வி. முத்துக்கிருஷ்ண ஐயர் பி.ஏ.பி.எல். இதற்காக ஒரு சிறு விருந்து கொடுத்தார். இவ் வருஷத்திய, நாங்கள் முதல் முதல் அச்சிட்ட விளம்பரத்தில் (Report) கூறியபடி, இவ்வருஷ முடிவுக்குள்ளாக 300ஆவது எண் கிட்டிவிடும் என்று ஒருவரும் நினைக்கவில்லை. இக்காலத்தில் எங்கள் சபையின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் மிகுந்த ஊக்கத்துடன் உழைத்தபடியாலும், நல்ல நாடகங்கள் தமிழிலும் தெலுங்கிலும் அடிக்கடி கொடுத்துக் கொண்டு வந்தபடியாலும் எங்கள் சபை அதிவிரைவாக விருத்தியடைந்த தென்பதற்குச் சந்தேகமில்லை.. இவ்வாறு அங்கத்தினர் அதிகமாகவே, ஏதாவது விசேஷ காலங்களில் இத்தனை பெயரும், 50 பெயர்கூட உட்காருவதற்கிடமில்லாத ஒரு சிறு
அறையில் அடைபடுவதென்றால் மிகவும் கஷ்டமாயிருந்தது. அன்றியும், சென்னைக்குப் பாரசீகக் கம்பெனியார் வந்த பிறகு, அவர்களைப்போல் நாமும் நாடகக் காட்சிகளைக் காட்ட வேண்டுமென்று விரும்பிப் படுதாக்கள் முதலியன தயார் செய்த நாங்கள், விக்டோரியா பப்ளிக் ஹாலின் மெத்தையின் மீதுள்ள நாடக மேடையில் அவர்களைப்போல் காட்சிகளைக் காட்டுவது அசாத்தியமெனக் கண்டறிந்தோம். அவர்கள் ஆடிய அரங்க மேடையானது விக்டோரியா மேடையைவிடக் குறைந்தபட்சம் ஆறு பங்காவது அதிகமானதாயிருக்கும். இவ்விரண்டு முக்கியக் காரணங்களால், எப்படியாவது நமது சபைக்கென்று விசாலமான நாடக மேடையும் இருப்பிடமும் இருக்க வேண்டுமெனக் கோரத் தலைப்பட்டோம். ஆகவே இதற்கென்று நாம் பொருள் சேகரிக்க வேண்டுமென்று தீர்மானித்து, இவ் வருஷம் முதல் எங்கள் வருஷாந்திர வரும்படியில் செலவு போக மிச்ச ரூபாயை ஒரு பண்டாகச் சேர்த்து வைக்கத் தலைப்பட்டோம். இதுதான் தற்காலம் ஒரு லட்சத்து இருபதினாயிரம் ரூபாய்க்கு மேற்பட்டிருக்கும் கட்டட பண்டின் (Building Fund) அங்குரார்பணமாகும். இதைப்பற்றி நான் பிறகு அதிகமாய் எழுத வேண்டி வரும்.
இவைகளெல்லாம் அன்றி, இவ் வருஷம்தான் எங்கள் சபையார் முதன் முதல் தசரா அல்லது நவராத்திரிக் கொண்டாட்டத்தை ஆரம்பித்தது. அன்று முதல் இந்த இருபத்தெட்டு வருடங்களாக நாங்கள் நடத்திவரும் இந்தசராக் கொண்டாட்டம் ஆரம்பமான விதம் கொஞ்சம் வேடிக்கையா யிருக்குமாதலால் , அதைச் சற்று விவரமாய் இங்கு எழுத இதை வாசிக்கும் எனது நண்பர்களின் அனுமதியைக் கேட்கிறேன்.
சில வருஷங்களாக சரஸ்வதி பூஜையை எங்கள் சபையில் கொண்டாடி வந்தோம். இவ்வருஷம் விநாயக சதுர்த்தி வர, என் தமயனார் மண்ணாற் சமைத்த ஒரு பெரிய பிள்ளையாரை வாங்கி வந்து, அதற்குப் பொன்மயமான கில்டு ரேக்குகளை யெல்லாம் ஒட்டி, பூஜைக்காக சபையில் வைத்தார். சாயங்காலம் ஆக்டர்களெல்லாம் ஒருங்கு கூடி அதற்குப் பூசை செய்தோம். பிள்ளையாருக்கு நிவேதனம் செய்து அவர் பெயரைச் சொல்லி நாங்கள் எல்லாம் அவல் கடலை சுண்டல் முதலியவற்றை யெல்லாம் புசித்தோம். மறுநாள் அதற்குப் புனர்பூசை செய்தபொழுது, ‘பிள்ளையார் அழகாயிருக்கிறதே, இதை சமுத்திரத்திற்குக் கொண்டு போய்த் தண்ணீரில் போட்டு
விடுவானேன்? இங்கேயே வைத்து வைக்கலாகாதா’ என்று எங்களுக்குள் பேசிக்கொண்டு சபையிலேயே ஒரு மூலையில் வைத்தோம். வெள்ளிக்கிழமைகளில் அதற்குக் கொஞ்சம் புஷ்பம் சாத்தி, கற்பூரம் கொளுத்தி வந்தோம். இப்படியிருக்க சீக்கிரத்தில் நவராத்திரி வர, சென்னையில் குஜராத்திப்பேட்டையிலும், இன்னும் சில வீடுகளிலும் கொலு வைக்கிறார்களே அம்மாதிரி நாமும் ஏன் இங்கு வைக்கக்கூடாது என்று யோசித்து, அப்படியே செய்ய வேண்டுமென்று தீர்மானித்து, நவராத்திரிக் கொலுவுக்காக ஏற்பாடு செய்தோம். அக்காலம் நாங்கள் ஏதாவது ஒன்று செய்ய வேண்டுமென்று தீர்மானித்தால் ஆரம்பித்த காரியத்திற்குக் குறையினைக் கூறாது எல்லோரும் குதூஹலத்துடன் கைகொடுத்து உதவும் காலமா யிருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டிலிருந்த அழகிய பொம்மைகள் முதலியவற்றைக் கொண்டுவந்து கொலுவுக்காகக் கொடுத்தனர். இவ்வாறு வேடிக்கையாக ஆரம்பித்த கொலுவானது வெகு மும்முரமாகிவிட்டது. ஓர் அம்மன் விக்ரஹத்தை நடுவில் ஸ்தாபித்து அதற்குப் பத்து நாட்களும் பூசை இயற்றினோம். இதற்கு ஆர். ஸ்ரீனிவாசராவ் என்னும் எங்கள் சபையைச் சார்ந்த ஒரு மகாராஷ்டிர பிராம் மணனை குருக்களாக ஏற்படுத்தினோம். தினம் அம்மனுக்கு ஒவ்வொரு வாகனமாக வைத்து திருவிழா கொண்டாடினோம். அதற்காக ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு உபயகாரரை ஏற்படுத்தினோம். ஒவ்வொரு உபயகாரரும் அன்றைத் தினம் பூஜைக்கு வேண்டிய புஷ்பம், நைவேத்யம் முதலிய செலவுக்காக ஒன்றிரண்டு ரூபாய் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
கோயில் உற்சவங்களில் உபயகாரர் போட்டி போட்டுக் கொண்டு செலவழிப்பதுபோல் நாங்களும் போட்டி போட்டுக் கொண்டு செலவழிக்க ஆரம்பித்தோம்! இவ்வாறு தசராக் கொண்டாட்டம் மும்முரமாய் நடக்கவே, முதல் நாள் பத்துப் பதினைந்து ஆக்டர்கள் மாத்திரம் கூடியிருக்க, வரவர எல்லா மெம்பர்களும் சாயங்காலங்களில் சேரத் தொடங்கிவிட, இடம் போதாமல், விக்டோரியா ஹாலின் தென்புறமிருந்த மைதானத்தில் ஒரு கூடாரம் அடித்து, அங்கே சிற்றுண்டி முதலியன அருந்த ஆரம்பித்தோம்! தசராவின் கடைசி நாட்களில் இந்தக் கூடாரமும் எங்களுக்குப் போதுமானதா யில்லாமற் போயிற்று. இவ்வருஷத்திய அறிக்கையில் எங்கள் சபைக்காரியதரிசிகளில் ஒருவராகியிருந்த எனது பால்ய நண்பர்
வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் குறப்பிட்டபடி, இவ்வருஷம் தொடங்கிய தசராக் கொண்டாட்டமானது வர வர வளர்ந்தோங்கி, சென்ற இருபத்தெட்டு வருடங்களாகச் சபையின் கொண்டாட்டங்களில் ஒரு முக்கியமானதாகி விட்டது. இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த கதையை இனி எழுதுகிறேன். மறுவருஷம் கூடாரம் போதாதென்று ஒரு பெருங்கொட்டகை போட்டோம். இரண்டொரு வருஷங்களுக்குப் பிறகு இதுவும் போதாதபடி இருந்தமையால், விக்டோரியா பப்ளிக் ஹாலில் மேல் மாடியைப் பத்து நாளைக்கு வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். பிறகு எங்கள் சபை ஹாலின் கீழ்ப் பாகத்தைக் குடிக்கூலிக்கு எடுத்துக் கொண்டபொழுது, விக்டோரியா பப்ளிக் ஹாலின்மேல் மாடியையும் கீழ்ப் பாகத்தையும் உயோகிக்கலானோம்! இவ்வாறாக ஆரம்பத்தில் பத்துப் பதினைந்து பெயர்களுடன் ஆரம்பித்த கொண்டாட்டத்தில் பிறகு நாநூறு ஐந்நூறு பெயர்கள் சேர நேர்ந்தது.
இரண்டாம் பாகம் முற்றிற்று
நாடக மேடை
நினைவுகள்
மூன்றாம் பாகம்
முதல் வருஷம் தசராக் கொண்டாட்டத்தில் தினம் பூஜை ஆனவுடன், பிரசாதம் சாப்பிடுமுன், ஆக்டர்களில் பாடத் தெரிந்தவர்களெல்லாம் கொஞ்சம் பாட ஆரம்பித்தோம். இரண்டாவது வருஷம் கொட்டகை போட்டபின், அங்கு ஏதாவது நாடகக் காட்சிகள் நடத்தலாமேயென்று, இரண்டொரு நாள் எங்கள் நாடகங்களிருந்து சில காட்சிகளை ஆடினோம். பிறகு விக்டோரியா ஹால் மேல் மாடியை வாடகைக்கு எடுத்துக் கொண்டபின், ஒன்பது அல்லது பத்துத் தினங்களும் நாடகங்கள் ஆட ஆரம்பித்தோம். முதலில் தினச் செலவு அதிகமானால் 5 ரூபாயாயிருந்தது. பிறகு குறைந்தபட்சம் 50 ரூபாய் ஆகிவிட்டது! இவ்வாறு செலவு அதிகமாகவே, ஒருவாராக இதை மேற்கொள்வது கடினமென்று, அங்கத்தினரைக் கூட்டங்களாகப் பகிர்ந்து கொடுத்தோம். இவ்வாறு தற்காலம் வக்கீல்கள் தினமென்றும், ஆரிய மஹா வைசியர்கள் தினமென்றும், பேரி செட்டிகள் தினம் என்றும், வர்த்தகர்கள் தினமென்றும், மைலாப்பூர் அங்கத்தினர்கள் தினமென்றும் பலவிதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் இத்தகைய கூட்டத்தாருள் இடைவிடாது நாளது வரையில் நடத்தி வந்தவர்கள் ஆரிய மகா வைசியர்களே. இக் கொண்டாட்டத்தின் இரண்டாம் வருஷம் முதல், ஸ்திரீகளுக்குப் பிரத்யேகமாக ஒரு தினம் ஏற்படுத்தினோம். அன்று சி.பி. ராமஸ்வாமி ஐயர் செலவையெல்லாம் மேற்கொண்டார்; முதலில் 20 அல்லது 30 ஸ்திரீகள் வர ஆரம்பித்துப் பிறகு நூற்றுக்கணக்காகி, ஒரு வருஷம் ஆயிரம் ஸ்திரீகளுக்கு மேல் வந்தார்கள் என்று சொல்வது மிகையாகாது. முதல் வருடங்களில் 20 அல்லது முப்பது ரூபாய் செலவழித்தவர் பிறகு நூறுக்கு மேலாகி, சில வருஷங்களில் 500, 600 ரூபாய் செலவழித்தது எனக்குத் தெரியும். ஒரு வருஷம் விக்டோரியா ஹாலில் இடம் போதாமல், சவுத் இந்தியன் அத்லெடிக் அசோசியேஷனில் இத் தினக் கொண்டாட்டத்தை வைத்துக் கொண்டபோது, இவர் 700 ரூபாய் இந்த ஒரு தினத்திற்காகச் செலவழித்தார். அப்பொழுது என்னை அழைத்து, “சம்பந்தம், வருகிற வருடம் முதல், செலவானது நூறு எண்களுக்குமேல் போகாமலிருக்கும்படி பார்த்துக் கொள்” என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னது எனக்கு ஞாபகமாயிருக்கிறது. சென்னையில் அநேகம் செல்வந்தர்களைப் பார்த்திருக்கிறேன். ஆயினும் அவர்களுள் சத் விஷயங்களில் முகங்கோணாது சந்தோஷமாய் ஏராளமாய்ச் செலவழிக்கும் இவரைப் போன்றவர்கள் மிகவும் சிலரே எனக் கூற வேண்டும். இவர் ஸ்ரீமான் சேஷகிரி ஐயருக்குப் பிற்காலம் எங்கள் சபையில் அத்யட்சர் ஆனவரையில், தசராக் கொண்டாட்டத்தில் இத் தினக் கொண்டாட்டத்தை மிகவும் விமரிசையாக நடத்தி வந்தார். அதன் பிறகு இந்நாள்வரை, அத்யட்சகர் தினத்தை நடத்தி வருகிறார்.
மேற்சொன்னபடி தசராவில் ஸ்திரீகளுக்கு ஒரு நாள் ஏற்படுத்திய பொழுது, நியாயப் பிரகாரம் குழந்தைகளுக்கும் ஒரு நாள் ஏற்படுத்த வேண்டியதாயிற்று. “குழந்தைகள் தினத்தில்” அங்கத்தினர் வீட்டிலுள்ள குழந்தைகளையெல்லாம் வரவழைத்து, அவர்களுள் பாடத் தெரிந்தவர்களையெல்லாம் பாடச் சொல்லி, ரெசிடேஷன் (Recitation) ஒப்புவிக்கத் தெரிந்தவர்களை யெல்லாம் ஒப்புவிக்கச் சொல்லி, அவர்களுக்கெல்லாம் பரிசுகள் கொடுத்து, பிறகு எல்லாக் குழந்தைகளுக்கும் (50, 60 வயதுடைய குழந்தை கள் உட்பட) சிற்றுண்டியளித்து, ஏதாவது இரண்டொரு ஹாஸ்யக் காட்சிகள் ஆடி அவர்களைக் களிக்கச் செய்து, அவர்களை எல்லாம் தத்தம் இல்லங்களுக்கு அனுப்புவது வழக்கமாயிற்று. இத் தினக் கொண்டாட்டத்தில் சில சமயங்களில் 500, 600 சிறு குழந்தைகள் ஒருங்கு கூடியிருக்கும் காட்சியை நான் பன்முறை கண்டிருக்கிறேன். அச் சமயங்களில் அத்தனைக் குழந்தைகளும் முகமலர்ச்சியோடு வேடிக்கையாய் இரண்டு மூன்று மணி சாவகாசம் ஒருங்கே கழிப்பதைக் கண்டு சந்தோஷப்படாத மனிதனை நான் ஒரு முறையாவது கண்டேன் இல்லை! இவ்வாறு சிறு குழந்தைகளை வருஷத்தில் ஒரு தினமாவது ஒருங்கே சேர்த்துச் சந்தோஷிக்கச் செய்வது எங்கள் சபை செய்த பாக்கியம் என்று கருதுகிறேன்.
இவ்வாறு இவ்வருஷம் தொடங்கிய தசராக் கொண்டாட் டமானது இதுவரையில் ஈஸ்வர கிருபையால் தடைப்படாது நடந்து வருகிறது.
இவ்வருஷம் எங்கள் சபையில் ஆரம்பித்த இன்னொரு புதிய விஷயம் என்னவென்றால், நாடகக் கவிகளைப் பற்றியும் சிறந்த நாடகங்களைப் பற்றியும் கற்றறிந்த பெரியோர்களைக் கொண்டு உபன்யாசங்கள் செய்யும்படி செய்ததே. இவ்வருஷம் காலஞ்சென்ற பண்டிட் சதாவதானம் T. E. ஸ்ரீனிவாஸாச்சாரியார் அவர்கள் “நாடகம் நடிக்கும் லட்சணங்கள்” என்பதைப்பற்றி ஒரு உபன்யாசம் செய்தார். ஆர்தர் டேவிஸ் என்பவர் ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி ஆங்கிலத்தில் எழுதிய “ஹாம்லெட்” என்னும் சிறந்த நாடகத்தைத் தக்க அபிநயத்துடன் படித்துக் காட்டினார். இவ்வாறு அவர் படித்துக் காட்டியது முக்கியமாக எனது வேண்டுகோளுக்கிணங்கியாம். நான் அவரைக் கேட்டதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அதாவது அந்நாடகத்தை நான் தமிழில் அமைத்து முடித்து எங்கள் சபையில் அதை ஆட வேண்டுமென்று இச்சை கொண்டதேயாம்.
இனி அந்த “அமலாதித்யன்” நாடகத்தைப்பற்றிக் கொஞ்சம் விரிவாக எழுத விரும்புகிறேன். அதற்கு முக்கியமான காரணம், இந்நாடகத்தை நான் எழுதியுள்ள நாடகங்களிலெல்லாம் சிறந்தது என்று பெரும்பாலார் கூறுவதே யாம்; அன்றியும், நான் மேடையின் மீது நடித்த பாத்திரங்களில் எல்லாம்; இந்த நாடகத்தில் அமலாதித்யனாக நடித்தது மிகவும் சிலாகிக்கத்தக்கதென்று எனது நண்பர்கள் அநேகர் கூறக் கேட்டிருக்கிறேன். அன்றியும் எழுதுவதற்கும் நடிப்பதற்கும் இந்நாடகத்திற்காக நான் எடுத்துக் கொண்ட சிரமம், மற்றெந்த நாடகத்திற்கும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆகவே இதைப்பற்றிப் பல விவரங்களை இங்கு எழுத என் நண்பர்களுடைய உத்தரவைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஷேக்ஸ்பியர் என்பவர் நாடகக் கவிகளுக்குள் எல்லாம் மிகச் சிறந்தவர் என்று உலகத்தோரில் யாவராலும் ஒப்புக்கொள்ளப் படுகிறது. அவர் எழுதிய சுமார் 42 நாடகங்களுக்குள் ‘ஹாம்லெட்’ என்பதுதான் மிகச் சிறந்தது என்று கற்றறிந்தோரால் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. அன்றியும் ஐரோப்பாக் கண்டத்திலுள்ள எல்லாப் பாஷைகளிலும் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று கூறுவது மிகையாகாது. ஆசியாக் கண்டத்திலுள்ள ஜப்பான் முதலிய தேசத்து பாஷைகளிலும் மொழிபெயர்க் கப்பட்டிருக்கிறதாக அறிகிறேன். அன்றியும் இங்கிலாந்து தேசத்தில் இந்நாடகத்தின் கதாநாயகனாகிய ‘ஹாம்லெட்’ என்னும் பாத்திரத்தை ஆட இச்சை கொள்ளாத நடிகர் கிடையாதென்றே சொல்லலாம். என்னைக் கேட்குமிடத்து, இதைப் படிக்கும் எவனும் தன்னிடம் கொஞ்சமாவது நாடகமாட வேண்டுமென்னும் இச்சையுடையவனாயின், இவ்வேஷம் தரிக்க வேண்டுமென்று விரும்பாதவன் இவ்வுலகிலேயே இல்லையென்று கூறுவேன். மாடம் சாரா பெர்ன் ஹார்ட் (Madame Sarah Bernhart) என்னும் பிரெஞ்சு தேசத்திய ஸ்திரீ, தான் ஆண் வேடம் பூண்டு, தன் 50ஆம் வயதில் இந்த வேடத்தைத் தரிக்கப் பிரியப்பட்டு, அவ்வண்ணமே நடித்தாள் என்றால், இதைப்பற்றி நான் அதிகமாகக் கூற வேண்டிய நிமித்தமில்லை என்று நினைக்கிறேன். நாடக மேடை ஏறியிராத, இதை வாசிக்கும் சில நண்பர்கள், இப் பாத்திரத்தில் என்ன அவ்வளவு ஆக்டர்களுடைய மனத்தைக் கவரும்படியான சூட்சுமம் இருக்கிறதெனக் கேட்கக்கூடும். நானும் இதைப்பற்றிப் பன்முறை ஆராய்ந்து பார்த்திருக்கிறேன். இப் பாத்திரத்தில் ஒரு நடிகன் தன் முழு சாமர்த்தியத்தையும் காட்டப் போதுமான இடங்கள் ததும்பியிருக்கின்றனவென்பதுதான் இதற்கு முக்கியக் காரணம் என்னும் தீர்மானத்திற்கு வந்தேன். ஒவ்வொரு நாடகமும் கதாநாயகன் ஒன்றிரண்டு ரசங்களை முக்கியமாகக் காட்ட இடங்கொடுக்கும். சில நாடகங்களில் ஹாஸ்ய ரசத்தைக் காட்டலாம்; சில நாடகங்களில் கருணா ரசத்தைக் காட்டலாம்; சிலவற்றுள் சிருங்கார ரசத்தைக் காட்டலாம். இன்னும் இப்படியே மற்ற நாடகங்கள் மற்ற ரசங்களை நடித்துக் காட்ட இடங்கொடுக்கும். இந்த ஒரு நாடகப் பாத்திரத்தில்தான் எல்லா ரசங்களையும் எடுத்துக் காட்டச் சிறந்த இடங்கள் உண்டு. சுருக்கிச் சொல்லுமிடத்து இந்தப் பாத்திரத்தைத் திருப்திகரமாய் ஆடத்தக்கவன் எந்தப் பாத்திரத்தையும் நன்றாயாடுவான் என்பதற்கையமில்லை; ஆகவே இப் பாத்திரத்தைச் சபையோர் மெச்சும்படியாக நடிப்பது மிகவும் கடினமென்று எனது நண்பர்கள் அறிவார்களாக. அதனால்தான் இப்பாத்திரத்தில் பெயர் எடுக்க வேண்டுமென்று ஒவ்வொரு நடிகனும் விரும்புவது போலும்! அன்றியும் ஷேக்ஸ்பியர் காலம் முதல் இங்கிலாந்து தேசத்தில், பிரபல ஆக்டர் என்ற பெயர் பெற்ற ஒவ்வொரு நடிகனும் இதை நடித்திருக்கிறான். பூர்வகாலத்தில் எட்மண்ட் கீன் (Kean), கெம்பில் (Kemble) முதலிய பிரசித்தி பெற்ற ஆக்டர்களும், தற்காலத்தில் சர்ஹென்றி இர்விங், சர் பிர்போம் டிரி (Sir Beerbohm Tree), சர் போர்ப்ஸ் ராபர்ட்ச ன் (Sir Forbes Robertson), சர் பென்சன் (Sir Benson) முதலிய ஆக்டர்களும் இதில் பிரசித்தி பெற்றிருக்கின்றனர். அமெரிக்க தேசத்தில் எட்வின் பூத் (Edwin Booth) என்பவர் இப் பாத்திரத்தில் மிகவும் கியாதி பெற்றிருந்தார். ஆகவே எல்லா ஆக்டர்களும் இதை ஆட விரும்புவது ஓர் ஆச்சரியமன்று. இந்த ஆசை எனக்கும் கொஞ்சம் இருந்ததென நான் ஒப்புக்கொள்ள வேண்டியதே. ‘போதாக் குறைக்கு பொன்னியம்மன் குறை’ என்றவாறு எனது நண்பர் வாமன்பாய் என்பவர், இப்பாத்திரம் உன்னால் சரியாக ஆட முடியாதென்று கூறியது, என்னை எப்படியாவது இந் நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து, இப் பாத்திரத்தை நான் ஆட வேண்டுமென்று உந்தியதென்கிற விஷயத்தை எனது நண்பர்களுக்கு முன்னமே தெரிவித்திருக்கிறேன். இவ்வாறு உந்தப்பட்டவனாய், ‘ஹாம்லெட்’ என்னும் பெயருக்கு ஒப்ப, அமலாதித்யன் என்று பெயர் வைத்து இச் சிறந்த நாடகத்தைத் தமிழில், ஆறு வருடங்களுக்கு முன்பாக எழுத ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாகக் கஷ்டப்பட்டு இந்த ஆறு வருடங்களாக எழுதி ஒருவாறு முடித்தேன். முடித்த பிறகு, எனது பால்ய நண்பராகிய வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரிடம் இதைக் கொண்டுபோய், நாள் தோறும் அவருக்குச் சவகாசமிருக்கும் பொழுதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துக் காட்டி அவர் சொல்லும் படியான திருத்தங்களையெல்லாம் குறித்துக்கொண்டு வந்தேன். இப்படி ஏறக்குறைய ஆறு மாதம் கழிந்தது. சில சமயங்களில், கஷ்டமான பாகங்கள் வரும்பொழுது ஒரு நாளைக்கு நான்கைந்து வரிக்கு மேல் போகாது; சில சமயங்களில் ஒரு பக்கம் இரண்டு பக்கம் முடிந்து போம். ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் எழுதிய ஒரு வாக்கியமோ வரியோ, இவைகளைப் படித்து, பிறகு அதன் தமிழ் அமைப்பை நான் கூறுவேன்; எனது நண்பர், ஆங்கிலத்தில் அம் மகா நாடகக் கவி எழுதிய ஒவ்வொரு பதத்தின் அர்த்தமும் சரியாகத் தமிழில் அமைந்திருக்கிறதா என்று ஆழ்ந்தாராய்வார்; கொஞ்சமாவது தன் மனத்திற்குத் திருப்திகரமாயில்லாவிட்டால், “ஜெஷ்டை! அதென்னடா அது? சரியாயில்லை யென்றால்! இன்னொரு தரம் படி” என்று மறுபடியும் படிக்கச் சொல்வார். இவ்வாறு ஒவ்வொரு வாக்கியத்தையும் படித்துப் படித்துத் திருத்தித் திருத்தி, தன் மனத்திற்குத் திருப்திகரமாகிற வரையில் விடமாட்டார். முதலிலேயே ஏதாவது நான் சரியாக எழுதி விட்டிருந்தால், உடனே எனக்கு இரண்டு மார்க்குகள் கொடுப்பார்! இதற்கு நான் அர்த்தம் கூறாவிட்டால் இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு இது வெளிப்படையாகாது. பால்ய சிநேகிதர்களான எங்களுக்குள் அநேக வருஷங்களாக, ஏதாவது நன்றாகச் செய்தாலும் சொன்னாலும், ஒருவருக்கொருவர் மார்க்குகள் (Marks) கொடுத்துக் கொள்வது வழக்கம். இரண்டு மார்க்குகள்தானா, என்று எனது நண்பர்கள் பரிஹசிக்க வேண்டாம். எங்களுடைய நியமனப்படி இரண்டு மார்க்குகள்தான் அதிகப்படி (Maximum); இதைப் பெறுவது மிகவும் கடினம். சாதாரணமாக ஒரு மார்க் அரைமார்க்தான் வரும்! மேற்சொன்னபடி என் பால்ய நண்பருக்கு ஏறக்குறைய ஆறு மாசம் கஷ்டம் கொடுத்து, இந்நாடகத்தை எழுதி முடித்தேன். தன் அலுவல்களையும் கவனிக்காது, சிரமத்தையும் கவனிக்காது எனக்காக இவ்வளவு கஷ்டமெடுத்துக் கொண்டு, எனக்கு ஆசிரியர் ஸ்தானத்திலிருந்து இந்நாடகத்தைப் பூர்த்தி செய்ய உதவிய என் நண்பருக்கு நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? அவரிடம் போய் “இதற்காக உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யக் கூடும்?” என்று கேட்க மிகவும் அஞ்சுகிறேன். ஏனெனில், நான் அப்படி அவரைக் கேட்பேனாயின் “இந்தக் கேள்வி கேட்டதற்காக, உனக்கு மைனஸ் 200 மார்க் (minus 200 marks) கொடுக்கிறேன்!” என்று சொல்லி விடுவார்! அந்த மைனஸ் 200 மார்க்கை நான் எப்படிக் கழிப்பது? ஆகவே பேசாமலிருக்கிறேன். இதை வாசிக்கும் எனது நண்பர்கள் “பயன் றூக்கார் செய்த வுதவி, நயன்றூக்கினன்மை கடலிற் பெரிது” என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவர் கூறியதை ஞாபகப்படுத்திக் கொள்வார்களாக.
நான் எழுதிய இந்நாடகத்தை எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாசய்யங்கார் திருத்தச் செய்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. நான் சிறு வயது முதல், தமிழில் கொஞ்சம் கெட்டிக்காரனா யிருந்தேன் என்று எண்ணுவதற்கு இடமுண்டு. எனது நண்பரோ நான்காம் வகுப்பில் தமிழை விட்டு சம்ஸ்கிருதம் படிக்கத் தொடங்கினார். அப்படியிருந்தும் நாங்களிருவரும் பழைய மெட்ரிக் குலேஷன் (Matriculation) வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை பரீட்சையில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பதில் என்னைவிட அதிக மார்க் (mark) வாங்கினார். அப்பொழுது எனக்கு அவர் மீதிருந்த பொறாமை கொஞ்சமல்ல. தமிழனாய்ப் பிறந்து, தமிழில் கெட்டிக்காரனெனப் பெயர் பெற்ற என்னைவிட இந்தப் பிராமணப்பிள்ளை, தமிழைவிட்டு சம்ஸ்கிருதம் படித்தவன், தமிழ் மொழிபெயர்ப்பில் என்னைவிட அதிக மார்க் வாங்குவதா! என்று என் மனத்திலுதித்த பொறாமையானது அளவிடத்தக்கதன்று. இன்னும் அந்தப் பொறாமை என்னை முற்றிலும் அகலவில்லை யென்றே கூற வேண்டும். அவர் என்னைவிடப் பிரபலமான வக்கீல் எனப் பெயர் பெற்றார். அதற்குச் சந்தோஷப்பட்டேன்; நான் ஸ்மால் காஸ் கோர்ட்டு ஜட்ஜானபோது அவர் ஹைகோர்ட் ஜட்ஜானார், அதற்கும் சந்தோஷப்பட்டேன்; இதிலெல்லாம் சந்தோஷப்பட்டவன், என்னைவிடத் தமிழ் மொழி பெயர்ப்பில் அவர் கெட்டிக் காரராயிருக்கிறாரென நினைக்கும் பொழுதெல்லாம், அந்தப் பழைய பொறாமை என் மனத்தில், “இருக்கிறேன்”என்கிறது! “தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்தழிக, கற்றவெல்லாம், எற்றேயிவர்க்கு நாம் என்று” எனப் பெரியார் கூறிய உண்மை யைக் கடைப்பிடித்து அவரைப் போல் நாமும் இதில் விற்பன்னனாக வேண்டுமென்று விரும்புகிறேனேயொழிய, இப்பொறாமை எனக்கு வேறொரு கெடுதியையும் செய்ய வில்லை. இக் காரணத்தினால்தான் நான் மிகவும் கஷ்டப் பட்டு எழுதிய இந்த “அமலாதித்யன்” என்னும் நாடகத்தை, அவர் பார்வையிட்டுத் திருத்தச்செய்தேன். இந்த நாடகத்தைப் படிப்பவர்கள், இது நன்றாய்த் தமிழில் அமைக்கப்பட்டிருக்கின்றது என்று எனக்கு (Mark) கொடுக்க விரும்பினால், முதலில் அதில் பாதியை, எனது பால்ய நண்பருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று உறுதியாய்க் கூறுவேன்.
மேற்சொன்னபடி என் நண்பரைக் கொண்டு இந்த நாடகத்தைச் சீர்திருத்திய பிறகு, துண்டுக் காகிதங்களில் இதை என் வழக்கப்படி பென்சிலினால் எழுதியிருந்ததை, ஒரு நோட் புஸ்தகத்தில் கடைசி முறை ஆங்கில நாடகத்துடன் ஒத்திட்டுப் பார்த்து இங்கியினால் எழுதி வைக்க வேண்டுமென்று தீர்மானித்து, சென்னையிலிருந்தால், இதற்கு ஏதாவது அடிக்கடி தடங்கலுண்டாகுமென்று, கோர்ட் விடுமுறைக் காலமானதால் திருவையாற்றுக்குப் போய்ச் சேர்ந்தேன். அத்தருணம் என் தமயனார் ப. அய்யாசாமி முதலியார் அங்கு டிஸ்டிரிக்ட் முன்சீப் (District Munsiff) ஆக விருந்தார்.
அவரிடம், நான் அங்கு வந்த காரணம் இன்னதென்றும், நான் இந்த நாடகத்தை எழுதி முடித்தாகிறவரையில், என்னை அங்குள்ள சிநேகிதர்கள் ஒருவரும் வந்து பார்க்கும்படி விடலாகாதென்றும், வாக்கு வாங்கிக்கொண்டு, அவரும் அதன்படியே செய்ய, மூன்று வாரத்தில், ஒரு மூச்சாய், தூங்குகிற வேளை - சாப்பிடுகிற வேளை தவிர இதே வேலையில் உட்கார்ந்து, ஒவ்வொரு வரியாகக் கடைசி முறை ஒத்திட்டுப் பார்த்து எழுதி முடித்தேன். எழுதி முடித்தவுடன் முதுகின் மீதிருந்த ஒரு பெரும் பாரம் நீங்கினவன்போல் சந்தோஷப்பட்டேன்.
இவ்வாறு எழுதி முடித்தவுடன் என் மனத்தில் ஒரு சிறு பயம் குடிகொண்டது. “சத்ருஜித்”நாடகத்தின் காகிதங்கள் காணாமற் போனபடி இது காணாமற் போனால் என்ன செய்கிறது என்று பயந்தவனாய், என் பென்சில் பிரதியை, என் பெட்டியில் வைத்துக் கொண்டு, நான் இங்கியில் எழுதிய பிரதியை, திருவையாற்றிலிருந்து சென்னைக்கு என் பேருக்கு ரிஜிஸ்டர் செய்து அங்கிருந்து அனுப்பி விட்டு, நான் பென்சில் பிரதியுடன் பட்டணம் வந்து சேர்ந்தேன்! நான் தனியாக ரெயிலேறி வந்தமையால், ஒன்று காணாமற் போனாலும், மற்றொன்றாவது நிற்கும் என்று இம்மாதிரிச் செய்தேன். ஒரு முறை பணம் பறி கொடுத்தவன் இரண்டு முடிப்புப் போடுவானன்றோ!
இவ்வாறு எழுதி முடித்தானவுடன், எங்கள் சபையின் நிர்வாக சபையார் இதைச் சபையில் ஆட வேண்டுமென்று தீர்மானித்தனர்; அப்பொழுது அவர்களிடம் நான், “ஒத்திகை களெல்லாம் என் மனத்துக்குத் திருப்திகரமாக ஆகிறவரையில் இந்நாடகத்தைப் பகிரங்கமாக ஆடேன்; அன்றியும், இந்நாடகம் முடிகிறவரையில், வேறெந்த நாடகமும் ஆட மாட்டேன்” என்று கூறிவிட்டேன். இது நடந்தது இவ்வருஷம் ஜூலை மாதம் என்று நினைக்கிறேன். உடனே ஒத்திகைகள் தொடங்கி ஆறு மாதம் இடைவிடாது ஒத்திகை நடத்தினேன். எனது மற்றெல்லா நாடகங்களை விட, இந்த நாடகத்திற்குத்தான் நான் அதிக ஒத்திகைகள் நடத்தினேன் என்று நிச்சயமாய்க் கூறக்கூடும். நான் ஒத்திகைகள் நடத்தும் விதத்தை, நாடக சபைகளில் கண்டக்டர்களாக இருப்பவர்களும் இருக்க விரும்புவோர்களும், அறிய இச்சைப்படுவாரென நம்பி இதைப் பற்றிச் சற்று விவரமாய் இங்கு எழுதுகிறேன்.
ஒரு நாடகத்தை ஆட வேண்டுமென்று தீர்மானித்தவுடன், முதலில் அதை எனது ஆக்டர்களையெல்லாம் ஒருங்கு சேர்த்து அவர்களுக்குப் படித்துக் காட்டுவேன். இதற்கு முன்பாகவே, அந் நாடகத்தைப்பற்றியும் அதன் குணா குணங்களைப்பற்றியும் எழுதியிருக்கும் புத்தகங்கள் ஏதேனும் உண்டேல், அவைகளையெல்லாம் படித்து முடிப்பேன். பிறகு என்னுடைய நாடகமாயிருந்தால் நான் எழுதும்பொழுதாவது, மற்றவர்கள் நாடகமாயிருந்தால், நான் அதைப் படிக்கும்போதாவது, நான் இன்ன ஆக்டருக்கு இன்ன வேஷம் தகுந்ததாயிருக்கும் என்று தீர்மானித்தபடி, அவர்களுக்கு நாடகப் பாத்திரங்களைப் பகிர்ந்து கொடுப்பேன். இதன் மீது ஒவ்வொரு ஆக்டராக, தனிமையில் எடுத்துக் கொண்டு, அவரது பாகத்தை நிதானமாய்ப் படித்துக்காட்டி, அதன் நுட்பங்களையெல்லாம் சொல்லிக் கொண்டு போவேன். பிறகு அவர்களுக்குத் தங்கள் தங்கள் பாகத்தைக் குருட்டுப் பாடம் செய்து கொள்ளும்படி சொல்வேன். இச் சமயம், “உங்கள் வசனங்களை மாத்திரம் குருட்டுப் பாடம் செய்து விடுங்கள்; இன்னமாதிரி அரங்கத்தில் நடிக்க வேண்டுமென்று தீர்மானம் செய்து விடாதீர்கள்!” என்று அவர்களுக்குச் சொல்லி வைப்பேன். இதற்கொரு முக்கியமான காரணம் உண்டு. ஆக்டர்களில் எல்லோரும் தேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள்; சில புத்திமான்கள் இப்படித்தான் நடிக்க வேண்டும் இந்தப் பாத்திரத்தை என்று சரியாகத் தீர்மானிக்கக் கூடும். மற்றவர்கள் தங்கள் பாத்திரத்தைப் படிக்கும்பொழுது, இதை இப்படி நடிக்க வேண்டுமென்று தவறாகத் தீர்மானித்து விட்டார்களோ, பிறகு அவர்களைச் சரியான வழிக்குத் திருப்புதல் மிகவும் கடினம் என்பது என் அனுபவம். சரியாக ஒருவனை நேர்வழியில் அழைத்துக் கொண்டு போவது சுலபம்; அவன் கோணல் வழியில் போனபின், திருப்பிச் சரியான வழிக்குக் கொண்டு வருவது மிகவும் கஷ்டம். ஆகவே அவர்கள் பாகத்தைக் குருட்டுப் பாடம் செய்தானவுடன் அவர்களுடன் கலந்து பேசி இனி இப்படி ஆக்டு செய்ய வேண்டுமென்று நான் அவர்களுக்கு நடித்துக் காட்டும் வரையில், அவர்களாகத் தீர்மானிக்கவிடுவதில்லை. இவ்விஷயத்தில் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று நான் பிடிவாதம் செய்வதில்லை என்று நினைக்கிறேன். புத்திமான்களான என் நண்பர்கள், நான் சொல்லிக் கொடுத்தை விட்டு இப்படி நடித்தால் நலமாயிருக்குமல்லவா, என்று ஏதாவது விசேஷமாகச் சொல்வார்களானால்; சரியானால், அதை ஒப்புக்கொண்டு, பிறகுதான் இப் பாத்திரத்தை இவ்வாறு நடிக்க வேண்டுமென்று தீர்மானிப்பேன். நான் எழுதிய நாடகங்களிலும், எனது ஆக்டர் நண்பர்கள் பலர், நான் முதலில் சொன்னதைவிட, மேலாக நடிக்கும் மார்க்கங்களை எனக்குக் காட்டியுள்ளனர். அதை நான் மிகுந்த சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர்களுடன் கலந்து பேசி இன்னவாறு நடிக்க வேண்டு மென்று தீர்மானித்த பிறகு, அவர்களை ஒவ்வொருவராக, தங்கள் பாகங்களை என்முன் நடித்துக் காட்டச் சொல்வேன். இப்படிச் செய்வதனால் ஒரு முக்கியமான அனுகூலமுண்டு. அநேக ஆக்டர்கள் கூச்சமுடையவர்களா யிருப்பார்கள்; பலர் எதிரில், அவர்கள் நடிப்பது சரியாகவில்லை வேறுவிதமாய் நடிக்க வேண்டுமென்று எடுத்துக் கூறினால், அவர்கள் மனத்தில் மிகவும் உறுத்தலாம். தனித்தனியாக எடுத்துக் கொண்டு, அவர்களை எவ்வளவு திருத்திய போதிலும், இம்மாதிரியாகக் கஷ்டப்படமாட்டார்கள். அன்றியும் புது ஆக்டர்கள், மிகவும் லஜ்ஜையுள்ளவர்களாயிருப்பார்கள். அவர்களைத் தனியாக ஒத்திகை செய்யும்படி செய்தால், அந்த லஜ்ஜை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடும். இவ் விஷயத்தில் என்னாருயிர் நண்பரான சி. ரங்கவடிவேலு, எனக்கு மிகவும் கஷ்டம் கொடுப்பவராயிருந்தார். சாதாரண ஒத்திகைகளில், தன் பாகத்தைச் சும்மா படித்துக்கொண்டு போவாரேயொழிய நடித்துக் காட்டமாட்டார். கடைசி ஒத்திகைகளிலும், என் கட்டாயத்தின் பேரில்தான் சரியானபடி நடிப்பார். இதற்கு முக்கியக் காரணம் அவர் மிகவும் கூச்சமுடையவராக இருந் ததேயாம். ஆயினும் தாமோதர முதலியாரைப்போல், அவரிடமும் ஒரு நற்குணமுண்டு. அதாவது, தனக்கு ஏதாவது ஒரு விஷயம் நன்றாய் மனத்தில் உறுத்துகிற வரையில், என்னை அதைப் பன்முறை நடித்துக் காட்டும் படி தொந்தரவு செய்வார். இந்த அமலாதித்திய நாடகத்தில் அவர் எடுத்துக் கொண்ட அபலை (Ophelia) வேஷத்தில், அவர் வரும் கடைசிக் காட்சியில் பைத்தியக்காரியாக நடிக்க வேண்டியிருந்ததை, தனக்குச் சரியாக வருமளவும் நான் எத்தனை முறை அவருக்கு, அதை அவரது வீட்டின் மேல்மாடியில் நடித்துக் காட்டினேன் என்பது, என்னால் கணக்குச் சொல்ல முடியாது.
மேற்சொன்னபடி தனித்தனியாக ஒவ்வொரு ஆக்டரையும் தேர்ச்சி செய்த பிறகுதான், எல்லா ஆக்டர்களையும் ஒருங்கு சேர்த்து, மொத்த ஒத்திகைகள் ஆரம்பிப்பேன். இம்மாதிரியாக மொத்தமாய் ஆக்டர்கள் கூடி நடிக்கும் பொழுதுதான், அவரவர்கள் செய்ய வேண்டிய பை பிளே (By Play) என்ன என்பதைச் சொல்லிக் கொடுப்பேன். நாடக மேடையின்மீதேறி நாடகமாடியிராத இதை வாசிக்கும் சில நண்பர்களுக்கு இது இன்னதெனத் தெரியாதிருக்கலாம். ஆகவே இதைப்பற்றிச் சற்று விவரமாக எழுத வேண்டியவனாயிருக்கிறேன். பை பிளே என்றால், அரங்கத்தில், ஒரு நடன் ஏதாவது பேசிக் கொண்டிருக்கும் பொழுது, மற்றவர்கள் தாங்கள் பேச வேண்டிய வசனம் ஒன்றுமில்லா விட்டாலும், தாங்கள் செய்ய வேண்டிய காரியம், காட்டவேண்டிய முகக்குறிப்பு முதலியவைகளாம். இதற்கு என் நாடகமொன்றிலிருந்து ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுகிறேன். மனோகரன் நாடகத்தில் முதல் அங்கம் நான்காம் காட்சியில், மனோஹரன் மடிந்ததாக நம்பி, பத்மாவதியும் விஜயாளும் தீப் புகத் தீர்மானித்துப் புறப்படுகிறார்கள்; அச்சமயம் மனோஹரன் திடீரென்று ராஜப்பிரியனுடன் அரங்கத்தில் தோன்றுகிறான்; புஸ்தகத்தில் விஜயாளும் பத்மாவதியும் விரைந்து போய் மனோஹரனை ஆலிங்கனம் செய்து கொள்ளுகிறார்கள் என்று எழுதியிருக்கிறது; மேடையின் மீதிருக்கும் மற்ற ஆக்டர்களெல்லாம் என்ன செய்ய வேண்டும்? இச் சந்தர்ப்பத்தில், அநேகக் கம்பெனிகள் . இதை ஆடும் பொழுது, மற்ற ஆக்டர்களெல்லாம், அசைவற்று நின்று கொண்டிருப்பதை, நான் பன்முறை பார்த்திருக்கிறேன். நம்முடைய பாகம் வரவில்லையே, அதுவரையில் நாம் சும்மாதான் இருக்கவேண்டும் என்பது அவர்களுடைய தாத்பரியம் போலும்; ஆகவே, அவர்கள் நான் வேடிக்கையாய் எனது ஆக்டர்களுக்குக் கூறுவது போல “அவல் மென்று கொண்டு” இருப்பார்கள்! கொஞ்சம் யோசித்துப் பார்ப்பார்களாயின், ஒவ்வொரு ஆக்டரும் இன்னின்னது செய்ய வேண்டுமென்று அவர்களுக்கே புலப்படும். முதலில் பௌத்தாயனன் தான் செய்த சூழ்ச்சி யெல்லாம் கெட்டு, தன்னுயிருக்கே ஹானி வந்ததே என்று பயந்து மெல்ல நழுவப் பார்க்கவேண்டும்; ராஜப்பிரியர், ஆதிமுதல் இந்தக் கபட சன்னியாசியின்மீது சந்தேகங் கொண்டவர்; மனோஹரன் முதலிய மற்றவர்களையும் கவனியாது ஓடிப்போய் பௌத்தாயனனைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்; மனோஹரனைத் தன் சொந்த மகன் போல் பாவித்து வந்த சத்தியசீலர், அளவிலாச் சந்தோஷம் கொண்டவராய் மனோஹரனிடம் நெருங்க வேண்டும்; பணிப்பெண்ணாகிய நீலவேணி, வசந்தசேனை செய்த சூதெல்லாம் பயன்படாமற் போயிற்றே என்று மகிழ வேண்டும். இவ்வாறு மற்ற ஆக்டர்களெல்லாம் செய்வ துடன், அவரவர்களுடைய மனோபாவத்திற்குச் தக்கபடி, முகக்குறிப்பு முதலிய அபிநயத்தைக் காட்ட வேண்டும். இப்படிச் செய்வதைவிட்டு, இந்நான்கு ஆக்டர்களும், “அவல் மென்று” கொண்டிருந்தால், இக்காட்சி என்னமாய் நன்றாயிருக்கும் என்பதை எனது நண்பர்களே கவனிப்பார்களாக.
இம்மாதிரியான பை பிளே ஒவ்வொரு ஆக்டருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியது அதி அவசியமாம். இது சரியாக இல்லாவிட்டால் எந்த நாகடமும் சோபிக்காது. அரங்கத்தில் ஒரு ஆக்டர் நன்றாய் நடித்துக்கொண்டிருக்கும் பொழுது, அவனுடன் இருக்கும் மற்ற ஆக்டர்கள், அதற்குத் தக்கபடி, “பை பிளே” காட்டாதபடியால், அந்த ஆக்டர் நன்றாய் நடித்ததெல்லாம், சபையோர் மனத்தில் உறுத்தாததை நான் பன்முறை கண்டிருக்கிறேன். இக் குற்றம் முக்கியமாக நாடகமாடுவதையே ஜீவனமாக உடைய நாடகக் கம்பெனி களில் நான் கண்டிருக்கிறேன். தென் இந்திய நாடக மேடை சீர்பட வேண்டுமானால், இவர்கள் இந்த ‘பை பிளே’யை முக்கியமாகக் கவனிக்க வேண்டுமென்பது திண்ணம்.
இம் மாதிரியாக, இந்த “அமலாதித்யன்” என்னும் நாடகத்தில் எனது ஆக்டர்களுக்கு நான் “பை பிளே” சொல்லி கொடுத்ததற்கு ஓர் உதாரணத்தை மாத்திரம் இங்கெழுதுகிறேன். இந் நாடகத்தில் மூன்றாம் அங்கம் இரண்டாம் காட்சியில் அமலாதித்யன் தன் தந்தை மடிந்த விதத்தைப்போல் ஒரு நாடகத்தை வேஷதாரிகள் நடிக்கச் செய்ய, அதில் தூங்குகிற அரசன் காதில், அவனது சகோதரன் விஷம் விடுவதுபோல் நடிக்கப்படும் பொழுது இதைக் கண்டு, நான் செய்த கொடுங்கொலையை அமலாதித்யன் அறிந்துகொண்டான் எனத்தெரிந்தவனாய்ப் பயந்தெழுந்து, காலதேவன் அரங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப் போகிறான். இது நடக்கும்பொழுது ஆட்கள் உட்பட அரங்கத்தின்மீது 11 நாடகப் பாத்திரங்கள் இருக்கின்றன. ஒரு நாள் விக்டோரியா பப்ளிக் ஹால் மேல் மாடியில், இக்காட்சியை ஒத்திகை செய்தேன். எனது நண்பர்களாகிய வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், அ. வாமன்பாய், இன்னும் இரண்டொரு பெயர்களை ஹாலில் மத்தியில் உட்கார வைத்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னேன். முதலில் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் படிப்பதும், என் முகக்குறிப்பும் ஏற்றபடி இருக்கிறதா என்று அவர்களைப் பார்க்கச் சொல்லிவிட்டு, பிறகு நானும் அரங்கமேடையை விட்டு விலகி அவர்களுடன் சேர்ந்து கொண்டு, இந்தச் சந்தர்ப்பத்தில் மற்ற ஒவ்வொரு ஆக்டரும் எப்படி நடிக்க வேண்டுமென்று சொல்லி, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆக்டராகக் கவனித்து சரியாயிருக்கிறதா என்று பார்த்து வந்தோம். இந்த ஒரு சந்தர்ப்பத்தைப் பதினொரு முறை நடிக்கச் சொல்லி, சீர்திருத்தினோம். பதினொரு முறை இவ்வாறு நடித்தவுடன் காலதேவனாக நடித்த எனது நண்பர் எம். சுந்தரேசன் என்பவர், “சம்பந்தம்! இனி என்னால் இதை நடிக்க முடியாது. எனக்கு இளைப்பாயிருக்கிறது. என்னை மன்னிக்க வேண்டும்!” என்று சொல்லி சோபாவின் மீது சாய்ந்து விட்டார். என்னுடைய ஆக்டர்கள் அக்காலம், நான் அவர்களை எவ்வளவு கஷ்டப்படுத்திய போதிலும், உடன்பட்டு, மனம் கோணாது, கற்று வந்ததைப்பற்றி எனக்குண்டான மன மகிழ்ச்சியை, இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்களுக்குக் கூறும் பொருட்டே இதை எழுதலானேன். தற்காலம் சில கண்டக்டர்கள், ஆக்டர்களை ஒத்திகைக்கு வரும்படி அழைத்தால், “எல்லாம் என் பாடம் எனக்கு நன்றாய் வரும், நான் மேடையின் மீது ஆடி விடுகிறேன். எனக்கு ஒத்திகை வேண்டாம்” என்று போய்விடுவதைப் பன்முறை பார்த்திருக்கிறேன். இதைப் படித்தாவது, என் இளைய நண்பர்கள் அவ்வாறு செய்யாம லிருக்க மாட்டார்களா என்று கோரினவனாயும் இதை இங்கு எழுதலானேன்.
இந்த ஒத்திகைகள் இவ்வாறு நடக்கும் பொழுதும், அதற்கு முன்பாகவும், இந்த “ஹாம்லெட்” நாடகத்தைப் பற்றிச் சென்னையிலுள்ள புஸ்தகசாலைகளில் என்னென்ன அச்சிட்ட புஸ்தகங்களிருந்தனவோ ஏறக்குறைய அவைகளையெல்லாம் படித்தேன்; முக்கியமாக நான் பூண மேற்கொண்ட அமலாதித்யன் பாத்திரத்தைப் பற்றி என்னென்ன ஆராய்ச்சிகள் (Criticism) கிடைத்தனவோ அவைகளை யெல்லாம் வாசித்தேன்; அதன்றியும் பிரபலமான ஆங்கில ஆக்டர்கள் இதை எப்படி எப்படி நடித்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் வாசித்து, ஒரு நோட் புஸ்தகத்தில் குறித்துக்கொண்டேன். இந்தப் பாத்திரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்களும், ஆடினவர்களும் இரண்டு பிரிவாயிருக்கின்றனர். ஒரு பிரிவர், அமலாதித்யன் (ஹாம்லெட்) வாஸ்தவத்தில் பித்தம் பிடித்தவனானான் என்று மதிக்கின்றனர்; மற்றொரு பிரிவார், அவனுக்குப் பித்தம் பிடிக்கவில்லை , பித்தம் பிடித்தவன் போல் நடித்தான் என்று சில சமயங்களில் கூறுவார்கள். இதில் எது சரி, எது தவறு என்கிற விவாதத்தைப்பற்றி எழுதியிருப்பதை யெல்லாம் சேர்த்தால் ஒரு சிறு புஸ்தக சாலையாகும்! ஆராய்ச்சியுடன் நிற்க விரும்புவோர் பாடு சுலபம்; இதை நடிப்பவர்பாடு கஷ்டம். ஏனெனில், ஆராய்ச்சி செய்பவர்கள், ‘கோமுட்டி சாட்சியாக’ இரண்டு பக்கத்திலும் கொஞ்சம் நியாயமிருக்கின்றது என்று கூறிவிட்டுச் சும்மா இருந்து விடலாம்; மேடையின்பேரில் நடிப்பவன் ஏதாவது ஒரு பட்சத்தை ஒப்புக்கொண்டு, அதன்படி நடித்தாக வேண்டும். ஆதலால் எனக்குக் கிடைக்கக்கூடிய ஆராய்ச்சிகளையெல்லாம் படித்தான பிறகு நான் ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டியதாயிற்று. நான் கடைசியில் வந்த தீர்மானத்திற்குக் காரணங்கள் எல்லாம் கூறப்புகில் அது ஒரு பெரிய வியாசம் ஆகும். ஆகவே அதை விட்டு என் தீர்மானத்தை மாத்திரம் இங் கெழுதுகிறேன். தன் தந்தையின் அகால மரணத் தினாலும் தன் தாய் விரைவில் மறு விவாகம் புரிந்ததாலும், மிகவும் மனங்கலங்கினவனான அமலாதித்யன், தனது தந்தையின் அருவத்தின் மூலமாக, அவர் தம்பியினால் கொலை செய்யப்பட்டதை அறிந்தவுடன், தலைமீது இடி விழுந்ததுபோல, மண்டை கலங்கினவனானான்; உடனே அவன் உயிர்த் தோழனான ஹரிஹரனுடன் பேசுங்காலையில் அவன் இன்னது சொல்கிறோம் இன்னது சொல்ல வில்லை என்பதையே சற்றும் அறியாதபடி, மூளை கலங்கியே பேசத் தொடங்கினான்; ஆயினும் அவனுக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை . பிறகு ஒருவாறு நிதானம் கொண்டவனாய், தான் பைத்தியக்காரனைப்போல், நடந்ததையே, தனக்கொரு உதவியாகக் கொண்டு தன் சிற்றபனாகிய அரசன் தன்மீது சங்தேகங் கொள்ளாதிருக்கும்படி, தான் பழிவாங்கத்தக்க சமயம் வாய்க்கும் வரையில், பைத்தியக் காரனைப் போல் நடித்து வந்தான் என்பது என் தீர்மானம். இதை மனத்தில் வைத்துக்கொண்டே இப் பாத்திரத்தை நான் நடித்தேன்.
அன்றியும் இப் பாத்திரத்தை நடிப்பதில் எனக்கு இன்னொரு கஷ்டம் நேர்ந்தது. இந்தப் பாத்திரத்தை மேடையில் நடித்தபொழுது, எட்மண்ட்கீன் (Kean) என்பவர் இவ்வாறு நடித்தார்; கெம்பில் (Kemble) என்பவர் இவ்வாறு நடித்தார்; சர் ஹென்ரி இர்விங் (Sir Henry Irving) என்பவர் இவ்வாறு நடித்தார்; பார்பேன் (Burbage) என்பவர் நடித்தது இவ்விதம்; சர்பீர்போம் டிரீ (Sir Beerbohm Tree) நடித்தது இவ்விதம்; அமெரிக்கதேசத்து ஆக்ட்ராகிய பூத் (Booth) என்பவர் நடித்த மாதிரி இது; சர் போர்ப்ஸ் ராபர்ட்சன் (Sir Forbes Robertson) நடித்தது இம்மாதிரி; சர் பிராங்க் பென்சன் (Sir Frank Benson) இம்மாதிரி நடித்தார்; இன்னும் மற்ற பிரபல ஆக்டர்கள் இப்படி இப்படி நடித்தார்கள் என்பதை எல்லாம் வாசித்தபொழுது, எனக்கு, இதில் எதை ஏற்றுக்கொள்வது, எதைத் தள்ளிவிடுவது என்கிற ஒரு பெரிய சங்கையுண்டாயிற்று. இவற்றையெல்லாம் படித்து, என் மூளையும் கொஞ்சம் சிதறிப்போயிற்று என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டும். இத் தருவாயில் இன்னது செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றபொழுது, எனது நண்பர், நமது நாட்டின் நன்மைக்காகக் காங்கிரஸ் மகாசபையில் பல வருஷங்கள் உழைத்த, எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் என்பவர், ஒரு சந்தர்ப்பத்தில், கல்வியின் பயனைப்பற்றிக் கூறிய சில வார்த்தைகள் எனக்கு ஞாபகம் வந்தது; அவர் சொன்ன தாவது, “கல்வியின் முழுப்பயனையும் பெற வேண்டுமென்றால், நாம் கற்ற பல விவரங்களையும் மறந்து அவற்றின் சாரம் மாத்திரம் நமது மனத்தில் நம்மையும் அறியாதபடி, நாம் தங்கச் செய்ய வேண்டும்!” என்பதாம். இதையே நான் ஒரு பற்றுக்கோடாகக் கொண்டு, பிரபல ஆக்டர்கள் நடித்த விதத்தில் நான் படிக்க விரும்பியதையெல்லாம் படித்தான பிறகு, ஒரு வாரம் இந்த நாடகத்தைப் பற்றி ஒன்றுமே எண்ணாது, மற்ற வேடிக்கை வினோதங்களில் என் மனத்தைச் செலுத்தி, நான் படித்த விவரங்களை யெல்லாம் மறக்க முயன்று, ஒருவாறு அப்படியே சாதித்தேன். பிறகு கடற்கரையோரம் தனியாகச் சென்று, அமலாதித்யன் பாத்திரம் இன்னின்ன காட்சிகளில் இப்படி இப்படி நடித்தால் சரியாகுமென்று தீர்மானித்தேன். இதன் பிறகுதான் எனது பாத்திரத்தை ஒத்திகை செய்ய ஆரம்பித்தேன்.
இவ்வாறு என் கவனத்தையெல்லாம் இந் நாடகத்தின் மீதே செலுத்தியபடியால் இவ்வருஷம் கடைசிவரையில் ஏறக்குறைய 8 மாதத்திற்கு வேறொரு தமிழ் நாடகமும் என்னால் கொடுக்க முடியாமற் போயிற்று. அதற்காக நிர்வாக சபையார் என்மீது குறை கூறியும் எழுதினர். என்ன நேர்ந்த போதிலும் என் தீர்மானத்தினின்றும் மாறமாட்டேன் என்று ஒரே பிடிவாதமாய் உட்கார்ந்தேன்.
மேற்சொன்னபடி ஒத்திகைகளெல்லாம் சரியாக நடத்தி இந் நாடகத்திற்கென்று வேண்டிய திரைகள், உடுப்புகள் எல்லாம் தயார் செய்தான பிறகு, 1906 ஜனவரி மாதத்தில் ஒரு தேதி குறித்தோம். இந்நாடகத்தை ஆடுவதற்கு இதற்குத் திடீரென்று ஓர் இடையூறு நேர்ந்து, தெய்வாதீனத்தால், என் தீர்மானத்தினின்றும் பிறழவேண்டி வந்தது. ஒரு நாள் சாயங்காலம் என் கடைசி ஒத்திகைகள் ஒன்றை நான் நடத்திக் கொண்டிருக்கும்பொழுது, எனது பால்ய நண்பர், என்னிடம் வந்து, “கொஞ்சம் ஒத்திகையை நிறுத்து; ஒரு முக்கியமான சமாச்சாரம் சொல்ல வந்திருக்கிறேன்!“ என்றார். அப்படியே நிறுத்தி, என்னவென்று விசாரிக்க அவர் பின்வருமாறு தெரிவித்தார்: “சர் சுப்பிரமணிய ஐயர் (ஹைகோர்ட்டு ஜட்ஜ்) என்னை அவசரமாகக் கூப்பிட்டனுப்பினார். என்னவென்று போய்க் கேட்டேன். அவர் அத்யட்சராயிருக்கும் லார்ட் ஆம்டில் என்டர்டெயின்மெண்ட் (Lord Ampthil Entertainment) கமிட்டியில் கவர்னருக்குக் கொடுக்கப் போகிற என்டர்டெயின்மெண்டில் சுகுண விலாச சபை சில காட்சிகள் நடிக்க வேண்டுமென்று கேட்டார். இந்தச் சந்தர்ப்பத்தை நாம் கைவிடலாகாது. நமது சபைக்கு நல்ல பெயருண்டாகும்; நீ என்ன சொல்லுகிறாய்?” என்றார்.
அதற்கு நான் அதெல்லாம் முடியாது; இந்த அமலாதித்ய நாடகத்தைப் பிரித்துக் கொஞ்சம் காட்சிகளாக ஆட முடியாது. இந்த நாடகம் ஆடியாகிற வரையில் வேறெந்த நாடகமும் ஆடமாட்டேன் என்று தீர்மானித்துவிட்டேன். அந்தத் தீர்மானத்தினின்றும் மாற மாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லிப் பார்த்தேன். எனது நண்பர், “முரட்டுத்தனம் பண்ணாதே! நான் சொல்வதைக் கேள்!” என்று எவ்வளவோ நியாயங்களெடுத்துக் கூறிப் பார்த்தார். என்னுடனிருந்த ஆக்டர்களும் வேண்டினர். எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவும், “நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்” என்று மன்றாடினார்; கவர்னர் முன்னிலையில் நாடகம் நடத்துவதென்றால் எல்லோருக்கும் ஆசைதானே! அன்றியும் கவர்னர் முன்னிலையில் எங்கள் சபை அதுவரையில் ஆடியதில்லை. இவ்வாறு எல்லோரும் கேட்டும், நான் ஒரே பிடியாய், ‘மாட்டேன்!’ என்று கூறிவிட்டேன். “இந்த மக்கு ஒரு பிடிவாதம், மாறமாட்டான்!” என்று சொல்லி மனங் கசிந்து, ஒத்திகையிடத்தை விட்டு வெளியே போய்விட்டார். நான் என் ஒத்திகையை மறுபடி ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கும் சமயத்தில் கொஞ்சம் காலம் கழித்து மறுபடியும் வந்து சேர்ந்தார்! ஒரு காட்சி ஒத்திகை முடித்து சற்றுச் சிரம பரிஹாரம் கொள்ளும் சமயம் பார்த்து, “சம்பந்தம்! நான் சொல்வதைக் கேள்! குறுக்கே ஒன்றும் பேசாதே! நான் சொல்லியானதும், உனக்கு இஷ்டமில்லாவிட்டால், நான் உன்னைப் பலவந்தம் செய்யவில்லை” என்று மெல்ல ஆரம்பித்தார். இந்த முரட்டுக் குதிரையை அடக்கி ஆள அவர் ஒருவருக்குத்தான் வழி தெரியும். “என்ன, சீக்கிரம் சொல்!"என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு கேட்டேன். “நான் பதில் கொண்டு வருவதாகச் சொல்லி வரவே, அவர்கள் எல்லாம் மீட்டிங் கலை யாதிருந்தார்கள்; நான் போய், ‘எங்கள் சபையில் ஒரு பிடிவாதக்கார மக்கு ஒருவன் இருக்கிறான்; அவன் முடியாதென்கிறான்; நான் இப்படிச் சொல்லவில்லை; ஆயினும் நான் சொன்னதன் தாத்பர்யம் அது!’ - என்று சொல்ல, ‘ஏன்? என்ன ஆட்சேபணை?’ என்று கேட்டார், சர். சுப்பிரமணிய ஐயர்; அதன்மீது நான் வாஸ்தவத்தைச் சொல்ல வேண்டியதாயிற்று - ‘எங்கள் சபையில் தமிழ் கண்டக்டர், தமிழில் ஹாம்லெட் நாடகத்தை ஒத்திகை செய்து கொண்டிருக்கிறான். அவன் அந்த நாடகம் ஆடப்படுகிற வரையில் வேறு எந்த நாடகத்தையும் எடுத்துக்கொள்ளமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறான் என்று தெரிவித்தேன். யார் அப்படிப் பிடிவாதம் செய்வதென்று அவர் கேட்க, உன் பெயரைச் சொன்னேன். அதன் மீது அவர் ‘எந்த சம்பந்தம்? மிஸ்டர் விஜயரங்கம்’S பிள்ளையா?’ என்று கேட்டார். ‘ஆம்’ என்றேன். அப்படியா? எனக்குச் சம்பந்தத்தைத் தெரியும். (அவரும் என் தந்தையும் அத்யந்த சினேகிதர்களாகவிருந்தவர்கள்; என்னையும் அவர் பன்முறை பார்த்திருக்கிறார்.) ‘நீ சம்பந்தத்தினிடம் போய், அவன் எங்களுடைய என்டர்டெயின்மெண்டில் ஏதாவது நாடகத்தில் சில காட்சிகள் ஆடினால், அவனது ‘ஹாம்லெட்’ நாடகத்திற்கு பேட்ரனேஜ் (Patronage) நான் கொடுப்பதாகச் சொல், எப்படியாவது ஒப்புக்கொள்ளச் சொல்’ என்று சொல்லியனுப்பியிருக்கிறார்கள். அவர்களெல்லாம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆம்! என்று சொல் பிறகு மற்ற சமாச்சாரங்களையெல்லாம் அப்புறம் தீர்மானித்துக் கொள்ளலாம்?” என்று கூறினார். இந்தத் தர்மசங்கடத்திற்கு நான் என்ன செய்வது? ஒரு பக்கம் எனது ஆக்டர்களெல்லாம் கவர்னர் முன்னிலையில் ஆட வேண்டுமென்று தங்களுக்கு இச்சையிருப்பதைத் தெரிவித்துக்கொள்கின்றனர். மற்றொரு பக்கம், என் தந்தையின் அத்யந்த நண்பராகிய சர். சுப்பிரமணிய அய்யர், ஹைகோர்ட்டு ஜட்ஜ் கேட்டனுப்பியிருக்கிறார். அன்றியும் பச்சையப்பன் கலாசாலையின் வருடாந்திரக் கொண்டாட்டங்களில் இரண்டொரு முறை, நான் புஸ்தகப் பரிசு பெற்றபோது இவர் எனக்கு என் தந்தை முன்னிலையில், சந்தோஷ வார்த்தைகள் கூறியிருக்கிறார்; முக்கியமாக, என் அமலாதித்ய நாடகத்திற்குத்தான் வருவதாகச் சொல்லியனுப்பியிருக்கிறார், என்று இவைகளையெல்லாம் யோசித்துச் சரிதான் என்று ஒப்புக்கொண்டேன். இத்தனை வருடங்கள் பொறுத்து இதைப்பற்றி யோசித்துப் பார்க்கும்பொழுது அந்தக் கடைசி காரணம்தான் முக்கியமாக என்னை ஒப்புக்கொள்ளச் செய்தது என்று நினைக்கிறேன். உடனே எனது நண்பர், இதைத் தெரிவிக்க, அந்த மீட்டிங் நடக்கு மிடத்திற்குப் போய்விட்டார். எனது ஆக்டர்களெல்லாம் மிகவும் சந்தோஷப்பட்டனர். எனக்கும், ஒரு விதத்தில் நமது தீர்மானத்தினின்றும் தவறுகிறோமேயென்று இருந்த போதிலும் நமது சபைக்கு இவ்வளவு பெருமையடைகிறதே என்ற சந்தோஷம்தான்.
இங்கு, பெரிய கதையில் கிளைக்கதை வருகிறதுபோல், அமலாதித்யன் நாடகம் ஆடிய கதையைச் சொல்ல வந்தவன், இடையில், கவர்னர் முன்னிலையில் நாங்கள் ஆடிய காட்சிகளைப்பற்றி எழுத வேண்டியவனாயிருக்கிறேன்.
போன எனது நண்பர் ஸ்ரீனிவாச ஐயங்கார், “நான் சீக்கிரம் திரும்பி வருகிறேன்” என்று கூறிவிட்டுப் போனபடியால், நாங்கள் அன்றைய ஒத்திகையை முடித்து விட்டு உட்கார்ந்து கொண்டிருந்தோம். அவர் வந்தவுடன், “அவர்கள் மிகவும் சந்தோஷமாய் ஒப்புக்கொண்டார்கள். பிறகு என்ன ஆடுவது என்கிற பேச்சு வந்த பொழுது, உனது அபிப்பிராயம் என்னவென்று என்னைக் கேட்டார்கள். அதற்கு நான், நீங்கள் சொல்லுகிறபடி ஒருமணி நேரத்தில் முடிய வேண்டுமென்றால், முழு நாடகம் ஒன்றும் போட முடியாது. ஒரு சோககரமான காட்சியும் ஒரு ஹாஸ்யமான காட்சியும்தான் ஆடமுடியும் என்றேன். அதற்கு அங்கிருந்த பாடம் துரையவர்கள் (Boddam J) உங்கள் சபையார் இரண்டு காட்சிகள் ஆடட்டும், அதில் எது சோககரமானது, எது ஹாஸ்யகரமானது என்று நாங்கள் தீர்மானிக்கிறோம் என்றார். (பகிடியாய்ப் பேசிய இவரது அபிப்பிராயம் என்னவென்றால், நீங்கள் ஹாஸ்யம் என்று நினைக்கும் காட்சி எங்களுக்குத் துக்கத்தை விளைவிக்கலாம்; சோக ரசம் என்று நீங்கள் நினைப்பது, எங்களை நகைக்கச் செய்யலாம்! என்பதாம்.) நாம் என்ன ஆட வேண்டுமென்பதை இப்பொழுதே சொல்லுங்கள்! நாளை அவர்களுக்குத் தெரிவிப்பதாகச் சொல்லி வந்திருக்கிறேன்” என்றார். பிறகு நாங்கள் எல்லோரும் ஆலோசித்து ‘விரும்பிய விதமே’ என்னும் எனது நாடகத்தினின்றும், குஸ்தி பிடிக்கும் காட்சியில் அநேக ஆக்டர்களுக்குப் பாகம் இருக்கிறது என்று அதை ஒன்றாக ஏற்படுத்தினோம். சோககரமான காட்சி தகுந்ததாக அகப்படவில்லை. அன்றியும், சந்தோஷகரமான காலத்தில், சோகரசம் கூடாதென்று யோசித்து, கவர்னருக்குக் கொடுக்கும் கூட்டத்தில் அநேகம் ஆங்கிலர்கள் வருவார்கள். அவர்களுக்குத் தெரிந்த கதையாயிருக்க வேண்டுமென்று தீர்மானித்து ‘சகுந்தலை’ நாடகத்தில் முக்கியமான காட்சிகளை தோற்றக்காட்சிகளாக (Tableau Vivantes) காட்டுவோம் என்று தீர்மானித்தோம்.
அதன்படியே இவ்வருஷம் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதியில், சவுத் இந்தியன் அத்லெடிக் அசோசியேஷன் (South indian Athletic Association) மைதானத்தில் லார்ட் ஆம்டில் அவர்களுக்கு நடந்த உபசரணைக் கூட்டத்தில், மேற்சொன்ன காட்சிகளை நடத்தினோம். காட்சிகள் முடிந்த உடன் அங்கு நடந்த ஒரு வேடிக்கையைக் கூறுகிறேன். காட்சிகள் நடிக்கப்படும்பொழுது, கவர்னர் அவர்கள் ஸ்திரீ வேடம் பூண்ட ஆக்டர்கள் (அ. கிருஷ்ணசாமி ஐயரும், ரங்கவடிவேலுவும்) ஸ்திரீகளே என்று எண்ணி, இப்பெண்கள் நடிப்பது நன்றாயிருக்கிறதென மெச்சினாராம். அதன் பேரில் பக்கத்திலிருந்தவர்கள், இவர்கள் ஸ்திரீகள் அல்ல, ஆடவர்; பெண் வேடம் தரித்திருக்கின்றனர் என்று கூறவே, அவர் நகைத்து, ஆனால் அவர்களைத்தான் பார்க்க வேண்டுமென்று சொல்ல, காலஞ்சென்ற ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் அவர்கள், என்னிடம் வந்து “அப்பன், அந்தப் பெண்டுகளை கவர்னர் பார்க்க வேண்டுமாம். கொஞ்சம் அனுப்பு” என்று நடந்ததைக் கூறி நகைப்புடன் கேட்டார். பிறகு அவர்களுடைய வேஷத்துடன் அவர்களிரு வரையும் கவர்னர் அருகில் அழைத்துக்கொண்டு போய், அவர்களை இன்னாரெனத் தெரிவித்தார்.
இவ்வாறு நாங்கள் கவர்னர் எதிரில் நடித்ததன் பலன் என்னவென்றால், சுகுண விலாச சபையின் புகழ் பரவி, விரைவில் சென்னையிலுள்ள கனவான்களில் அநேகர் எங்கள் சபையைச் சேர்ந்ததேயாம்; இவ்வொரு வருஷத்தில் 153 அங்கத்தினர் சேர்ந்தனர். இது முதல் பல வருஷங்கள் வரையில், சென்னையில் கவர்னருக்கோ, ராஜப்பிரதி நிதிக்கோ (Viceroy) அல்லது யாராவது சென்னைக்கு வந்த பெரிய மனிதருக்கோ, உபசரணைக் கூட்டங்கள் நடந்தால் சுகுண விலாச சபையார் ஏதாவது காட்சிகள் நடத்த வேண்டுமென்று கேட்கப்பட்டோம். அடிக்கடி எல்லோரும் இம்மாதிரியாகக் கேட்கிறார்கள். இது என்ன பெரிய கஷ்டமாயிருக்கிறதென, பிறகு சபையின் பொதுஜனக் கூட்டத்தின் (General Body) உத்தரவின்றி இம்மாதிரியான கூட்டங்களில் சபையார் ஆடக் கூடாதென்றும் ஒரு தீர்மானம் செய்யப்பட்டது!
இனி இக் கிளைக் கதையை இதனுடன் முடித்து, மூலக் கதைக்குப் போகிறேன். இந்த “அமலாதித்யன்” நாடகத்திற்கு ஒத்திகைகள் மிகவும் கண்டிப்பாய் நடத்தியதுமன்றி இதற்காக வென்று புதிய படுதாக்களும், உடுப்புகளும் சித்தம் செய்தோம்; ஒரு நாள் எல்லா உடுப்புகளுடன் மேடையின்மீது ஒத்திகையும் போட்டுப் பார்த்தோம்.
இந்த நாடகமானது 1906ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆடப்பட்டது. விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆடப்பட்டது என்கிற மேற்கண்ட வாக்கியத்தை நான் எழுதும் பொழுது, அதைப்பற்றிய ஒரு வேடிக்கையான சமாச்சாரம் எனக்கு ஞாபகம் வருகிறது. இதை எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எனக்குத் தெரிவித்தபடி இங்கு எழுதுகிறேன்.
அவர் இந் நாடகத்திற்கு முந்திய தினம், சாயங்காலம் என்னிடம் வந்து, “சம்பந்தம்! ஒரு சமாச்சாரம் கேட்டாயா? இன்று மத்தியானம், கோர்ட்டில் நடந்தது தெரியாதே உனக்கு? பத்தரை மணிக்கு, சர் சுப்பிரமணிய ஐயர், தன் அறைக்குக் கையில் தடியைப் பிடித்துக்கொண்டு, பட்! பட்! என்று போய்க் கொண்டிருந்தவர், என்னைப் பார்த்து சற்று நின்று ‘ஸ்ரீனிவாச ஐயங்கார், நாளைக்கு நாடகம் என்று சொன்னீர்களே, அது எங்கே? மெமோரியல் ஹாலில்தானே நடக்கப் போகிறது?’ என்று கேட்டார். எனக்கு அடங்காச் சிரிப்பு வந்தது. ஆயினும் அதை அடக்கிக்கொண்டு, மெமோரியல் ஹாலில் அல்ல, விக்டோரியா பப்ளிக் ஹாலில் என்று தெரிவித்து, விக்டோரியா பப்ளிக் ஹால் பீபில்ஸ் பார்க்கில் இன்ன இடத்திலிருக்கிற தென்பதையும் தெரிவித்தேன்! இல்லாவிட்டால் இந்தக் கிழவனார், நாளைக்கு மெமோரியல் ஹாலுக்குப் போய் அங்கு ஒன்றுமில்லாததைக் ஒன்றுமில்லாததைக் கண்டு, வீட்டுக்குத் திரும்பிப் போயிருப்பார்!” என்று நகைத்துக் கொண்டே தெரிவித்தார்.
இனி மறுநாள் நடந்த இந் நாடகத்தைப்பற்றி எனக்கு ஞாபகம் இருக்கிற சமாச்சாரங்களை என் நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.
அன்று நாடகம் நடந்ததில் எனக்கு முக்கியமாக ஞாபமிருக்கிற விஷயம் என்னவென்றால், இது எப்படி முடியுமோ என்று என் மனத்தில் பெரும் பயம் குடி கொண்டிருந்ததே! ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியியற்றிய நாடகங்களிலெல்லாம் சிறந்த இந்நாடகத்தை, நான் தமிழில் மொழி பெயர்த்தது, எப்படி இருக்கிறதெனச் சபையார் நினைக்கிறார்களோ என்று முதல் பயம்; இரண்டாவது, ஹாம்லெட் (அமலாதித்யன்) வேடத்தில் மிகவும் கீர்த்தி பெற்ற ஆக்டர்களும் சூட்சும புத்தியுடைய அறிவாளிகளை முற்றிலும் திருப்தி செய்விக்கவில்லையே? நாம் எப்படிக் கற்றறிந்தவர்கள் கூடிய இச்சபையாரைத் திருப்தி செய்விக்கப்போகிறோம் என்கிற பயம்; மூன்றாவதாக, எனது நண்பர் ரங்கவடிவேலு முதலிய ஆக்டர்களெல்லாம், சரியாக நடிப்பார்களோ இல்லையோ என்கிற பயம்; இவ்வாறு பலவிதமான பீதியினால் கலக்கப்பட்டிருந்தேன் என்பது திண்ணம். நான் பி.ஏ., பி.எல் பரிட்சைக்குப் போனபோதுகூட அவ்வளவு பயப்படவில்லை.
இப் பயமானது கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டகன்றது. அன்றிரவு ஈசன் அருளால் விக்டோரியா பப்ளிக் ஹால் முழுதும் இடமில்லாது நிரம்பியிருந்தது. நான் பேசத் தொடங்கியது முதல் சந்தடியற்றிருந்ததென நான் கூற வேண்டும். நான் நேராகச் சபையோரைப் பார்ப்பதில்லை என்று எனது நண்பர்களுக்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். ஆயினும், நான் மேடையிலிருக்கும் பொழுது, என் வார்த்தைகளை எப்படி அவர்கள் கவனிக்கிறார்களென்று அறியும் சக்தி சிறிது எனக்குண்டென நினைக்கிறேன். முதல் காட்சியில், என் கடைசி வார்த்தைகளைப் பேசிவிட்டு நான் அரங்கத்தினின்று போக, திரை விடப்பட வே, கரகோஷம். செய்தனர். ஆகவே நன்றாயிராமல் போகாது என்று என் மனத்தைத் தைரியம் செய்து கொண்டேன். எனது இரண்டாம் காட்சி, அமலாதித்யன் தன் தந்தையின் உருவத்தைச் சந்திக்கும் காட்சியாகும். அக்காட்சி மிகவும் அழகாக ஜோடித்திருந்ததனாலோ அல்லது அமலாதித்ய னுடைய தந்தையின் அருவமாக நடித்த எம். சுந்தரேச ஐயர் மிகவும் நன்றாய் நடித்ததனாலோ, அல்லது நான் நன்றாய் நடித்ததனாலோ, ஜனங்கள் அதை மிகவும் நன்றாயிருந்த தெனக் கொண்டாடினர் என்று அறிந்தேன். ஆயினும் எனது மூன்றாவது காட்சி அவ்வளவாக எனக்குத் திருப்திகரமாயில்லை . முதலில், அக்காட்சியில் “பதங்கள், பதங்கள், பதங்கள்!” என்று ஒரு சந்தர்ப்பத்தில் நான் கூற வேண்டியிருக்கிறது. அதை ஒரு நூதனமானபடி நடிக்க வேண்டுமென்று தீர்மானித்திருந்து நடிக்க, சபையில் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த சர். சுப்பிரமணிய ஐயரோ அல்லது வி.கிருஷ்ணசாமி ஐயரோ நன்றாயிருந்ததெனக் குறிக்கும் பொருட்டு குட் குட் (Good Good) என்று சொன்னது என் செவியிற்பட, எனக்கிருந்த பயமெல்லாம் பெரும் பாலும் போனவனாகி, உற்சாகத்துடன் நடிக்க ஆரம்பித்தேன். அது முதல், நாடகம் முடியும் வரையில் எனது முக்கியமான பாகங்கள் வரும்பொழுதெல்லாம் சபையோர் கரகோஷம் செய்தனர்!
இதை வாசிக்கும் எனது நண்பர்கள், இதை நான் ஏதோ தற்புகழ்ச்சியாகக் கூறுகிறேன் என்று எண்ணக்கூடாது. நடந்த விருந்தாந்தத்தையெல்லாம் உண்மையாக எழுத வேண்டும் என்று தீர்மானம் பண்ணியிருப்பதால் இதை இங்கு எழுதலானேன். அன்றியும் ஆக்டர்களுக்குத் தக்க புத்திமான்கள் ஏதாவது கொஞ்சம் உற்சாகப்படுத்தினால், அவர்களுக்கு அது அவர்களுடைய பயத்தைப் போக்கி எவ்வளவு நன்றாய் நடிக்கச் செய்யக்கூடுமென்பதைப் பலருக்கும் அறிவிக்கும் பொருட்டாம். இதைக் கருதியே, என்னுடன் மேடையில் புதிய ஆக்டர்கள் யாராவது, முதன் முதல் நடிக்கத் தொடங்கினால் அவர்கள் என்ன தப்பு செய்தபோதிலும், பெரிதல்ல, சுமாராயிருக்கிறது, என்று சொல்லி அவர்களைத் தட்டிக் கொடுப்பது வழக்கம். இந்தச் சூட்சுமத்தை அறியாத எனது நண்பர்களில் சிலர் “சம்பந்தம் என்ன எல்லோரையும் புகழ்ந்து விடுகிறான்!” என்று தவறாக எண்ணியிருப்பார்கள். இதற்கு முக்கியக் காரணம், அரங்கப் பீதியடைந்திருக்கும் ஆக்டர்களுக்குச் சிறிது உற்சாகமானது, எவ்வளவு பயன்படுகிறது என்று நான் சுயானு பவத்திற் கண்டதன் பலனை மற்றவர்கள் பெறும் பொருட்டே என்பதை, என்மீது குறை கூறுபவர்கள் அறிவார்களாக.
அதற்கப்புறம் நான் வருகிற காட்சிதான், இந் நாடகத்தில் ஆக்டர்களுக்கு “வியாச கட்டம்” போன்றது. இதில்தான், “இருப்பதோ இறப்பதோ” (To be or not to be) என்கிற மிகவும் கடினமான அமலாதித்யன் தனிமொழி (Soliloquy) வருகிறது; அன்றியும் இதில்தான் அமலாதித்யன் அபலையைச் சந்திக்கிறான். இந்நாடகத்தில் முதன் முதல் இதற்குக் கன்யாமாடக் காட்சி (Nunnery Scene) என்று இங்கிலீஷ்காரர் பெயரிட்டிருக்கின்றனர். இது நடிப்பது மிகவும் கடினம் என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது; இதைத் தெய்வானுகூலத்தினால் சபையோருக்கு மிகவும் திருப்திகரமாய் நடித்தேன் என எண்ணுகிறேன்; ஆயினும் இக்காட்சியில் நான் அபலையை விட்டுப் பிரியும் பொழுது சபையோர் செய்த பெரும் கரகோஷமானது, பாதி எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடி வேலு அபலையாக நன்றாய் நடித்ததற்காக என்று உறுதியாய் நம்புகிறேன். இக்காட்சியானவுடன், மறு காட்சி, “நாடகத்துள் நாடகம்” (Play within a play) என்பதான படியால், அதற்காக, அரங்கத்தின் மத்தியில் சிறு அரங்க மொன்றை ஏற்படுத்தும்பொருட்டு, ஐந்து நிமிஷம் இடைக் காலம் (Interval) கொடுக்கப்பட்டது. அந்த இடைக்காலத்தில் அதுவரையில் வெளியிலிருந்து நாடகம் என்னமாகப் போகின்றது என்ற கவனித்துக் கொண்டிருந்த எனது நண்பர்களுட் பலர் வேஷம் தரிக்கும் நேபத்யத்திற்கு (Green Room) வந்து, என்னைப் புகழ்ந்து கூறினர். மற்றவர்கள் கூறிய வார்த்தைகளைவிட, “உன்னால் இந்த ஹாம்லெட் வேஷம் சரியாக ஆக்டு செய்ய முடியாதென்று கூறிய, எனது நண்பர் ஆ. வாமன்பாய் கூறியதுதான் எனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தந்தது. அவர் என்னைப் புகழ்ந்துரைத்த வார்த்தைகளை நான் இங்குக் கூறவில்லை. கடைசியில் அவர் கூறியது மாத்திரம் எழுதுகிறேன்; அவர் ஆங்கிலத்தில் கூறிய வார்த்தைகளின் மொழி பெயர்ப்பு, “சம்பந்தம்! என் தொப்பியைக் கழற்றி உன்னை வணங்குகிறேன்! நீ ஜெயித்தாய்! நான் தோற்றேன் என்று ஒப்புக்கொள்கிறேன்!” என்பதாம். இவ்வார்த்தைகள் அவர் என்னுடன் போட்ட பந்தயத்தைப் பொறுத்தனவாம் என்பதை என் நண்பர்கள் கவனிப்பார்களாக.
எனது நண்பர் இவ்வாறு கூறிவிட்டு, “இனியும் இரண்டு மூன்று கட்டங்கள் இருக்கின்றன. ஜாக்கிரதையாயிரு” என்று புத்தி சொல்லிவிட்டு வெளியே போனார்.
இப்பொழுதுதான் என் பயமெல்லாம் நீங்கி மிகவும் திருப்தியடைந்தேன் என்று நான் கூற வேண்டும். எனது நண்பர்கள் என்னை இவ்வாறு புகழ்ந்ததனாலோ அல்லது சபையோரெல்லாம், எனது முக்கியமான வார்த்தைகளுக் கெல்லாம் கரகோஷம் செய்ததனாலோ, நாம் இந் நாடகத்திற்காக எடுத்துக்கொண்ட சிரமம் கடவுள் கிருபையால் வியர்த்தமாகவில்லை என்று உந்தப்பட்டவனாய், பிறகு வந்த, நாடகத்துள் நாடகக் காட்சியிலும், அமலாதித்யன் தன் தாயாருடன் பேசுங் காட்சியிலும் எனது முழு உற்சாகத்துடன் நடித்தேன். முக்கியமாக இரண்டாம் முறை இந் நாடகத்தில் அமலாதித்யனுக்கு அருவம் தோன்றும் இந்த இரண்டாவது காட்சியில், நான் அருவம் மறையும்பொழுது ஆச்சரியமும் பயமும் குறிக்கும் மலர்ந்த என் கண்களால், அதைப் பின்தொடர்ந்தது - சபையை மிகவும் களிக்கச் செய்தது. சாதாரணமாக இங்கிலாந்திலுள்ள ஆக்டர்கள் செய்வதில்லை. முதல் முதல், அமெரிக்கா தேசத்து ஆக்டராகிய எட்வின் பூத் (Booth) என்பவர்தான் இதை ஆரம்பித்தவர்; இதை நான் ஒரு புஸ்தகத்தில் வாசித்து, இப்படித்தானிருக்க வேண்டுமென்று மனத்தில் தீர்மானித்து, நடித்தேன். இக்காட்சி முடிந்தவுடன், நாங்கள் இரண்டாம் இடைக்காலம் கொடுத்தபொழுது ஆர்தர் டேவிஸ் (Arthur Davies) என்பவர், நேபத்யத்தின் பின் வந்து, இதைப்பற்றி வியந்து பேசி, “இதை எங்கிருந்து கற்றாய்?” என வினவ, நான் “அமெரிக்கா தேசத்து ஆக்டர் எட்வின்பூத் இவ்வாறு செய்ததாகப் படித்தேன். ஆகவே அவரிடமிருந்து நான் கற்றதாகக் கூற வேண்டு”மென்று விடை கொடுத்தேன்.
இவ்வாறு நான் எல்லோராலும் புகழப்பட்டது எனக்கு ஒரு கெடுதியைப் பயந்தது. நான் அளவிற்கு மிஞ்சிய சந்தோஷத்தை அடைந்தேன் என்று நினைக்கிறேன்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷயமாகுமல்லவா? இதை என் அருகிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த என் நண்பர் வாமன்பாய், “சம்பந்தம்! ஜாக்கிரதையாயிரு, வருகிற ஸ்மசானக்காட்சியில் நீ மிகவும் அமைதியுடையவனாயிருக்க வேண்டும்!” என்று எச்சரிக்கை செய்தார். அவர் இவ்வாறு எச்சரிக்கை செய்தும் பயன்படாமற் போயிற்று. மேற்சொன்ன காரணத்தினால் அக்காட்சியில் சாந்தத்துடன் நடிக்காது அதைக் கெடுத்து வைத்தேன் என்று எண்ணுகிறேன்.
தவறிழைத்தால் அதற்குப் பிராயச்சித்தம் வேண்டாமா? ஆயினும் அக்காட்சி ஆனவுடன், நான் செய்த தப்பிதத்தை அறிந்தவனாய், என் புத்தியை ஸ்திரப்படுத்திக்கொண்டு மனத்தைத் திருப்பி, கடைசிக் காட்சியில் சரியாக நடித்தேன் என நம்புகிறேன். நான் இந்நாடகத்தில் நடித்ததைப் பற்றி இவ்வளவு விவரமாய் எழுதுவதற்குக் காரணம், எனது கற்றறிந்த நண்பர்கள் நான் நடித்த நாடகங்களுக்கெல்லாம் இதுதான் மிகச் சிறந்தது என்று கூறுவதேயாம். ஒருவிதத்தில் எனக்கும் அப்படித்தான் கொஞ்சம் தோற்றுகிறது.
இனி மற்ற ஆக்டர்களைப்பற்றி எழுதுகிறேன். எம். சுந்தரேச ஐயர், இந்நாடகத்தில் இரண்டு வேஷங்கள் பூண்டனர்; காலதேவனாகவும், அருவமாகவும்; அருவத்தின் பாகம் வேறொருவருக்குக் கொடுத்திருந்தது; ஒத்திகைகளில் அந்த ஆக்டர் நன்றாய் நடிக்காமையால், பிறகு சுந்தரேச ஐயருக்கு மாற்றப்பட்டது. இவர் இந்த இரண்டு வேஷங்களிலும் மிகவும் நன்றாய் நடித்தார். இதுதான் எங்கள் சபையில் இவர் கடைசி முறை நடித்தது. சில மாதங்கள் பொறுத்துத் தனது முப்பத்தைந்தாம் ஆண்டில் இவர் தேகவியோகமானார். இது எங்கள் சபைக்குப் பெரும் தௌர்ப்பாக்கியம் என்று சொல்ல வேண்டும். ஆங்கிலத்தில் இவர் “ஒதெல்லோ” முதலிய நாடகப் பாத்திரங்களை ஆடுவதில் மிகவும் கியாதி பெற்றிருந்தார். தமிழிலும் காலதேவன் முதலிய பாத்திரங்களில் நல்ல பெயர் பெற்றார். இவரது ஞாபகச் சின்னமாக இவரது படமொன்று எங்கள் சபையில் வைக்கப்பட்டிருக்கிறது.
அ. கிருஷ்ணசாமி அய்யர் கௌரீமணியாகச் சபையோர் மெச்சும்படி நடித்தார் என்பதற்கையமில்லை. இவர் சங்கீதத்தில் மிகுந்த வல்லமைசாலியாயிருந்தும்; இந்நாடகத் தில் இவர் பாடுவதற்கு, ஒரே பாட்டுதான் இருந்தது. இதற்குக் காரணம் முக்கியமாக ஷேக்ஸ்பியர் நாடகங்களில், சங்கீதத்தை நான் குறைக்க வேண்டுமென்று தீர்மானித்ததே; இருந்தும் அந்த ஒரு பாட்டை மிகவும் நன்றாய்ப் பாடிச் சபையோரின் கரகோஷத்தைப் பெற்றனர்.
முன்பே நான் குறித்தபடி எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு, அபலை வேஷம் பூண்டனர். நான் கற்பித்தபடி ஒன்றையும் விடாது, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சரியாக நடித்துச் சபையோரின் நன்மதிப்பைப் பெற்றார். முக்கியமாக அபலை பைத்தியக்காரியாக வரும் காட்சியில், வெள்ளை வஸ்திரம் உடுத்தி, பைத்தியத்தில் பாடும் பாட்டுகளைப் பாடி, வந்திருந்தவர்கள் மனத்தைக் கவர்ந்தனர். இவர் இக்காட்சியில் நடித்ததைப் பார்த்து, ஸ்பிளென்டிட் (Splendid), மாக்னிபிசென்ட் (Magnificent) என்று கூறி, சர். சுப்பிரமணிய அய்யர் அவர்கள் தாரை தாரையாகக் கண்ணீர் விடுத்ததாக அவரருகிலிருந்தவர்கள் என்னிடம் கூறினர். அபலையின் சவத்தைச் சமாதியில் புதைக்கும் காட்சியில், வந்திருந்த மாது சிரோமணிகள் அநேகர் கண்ணீர் விட்டனர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். எனதுயிர் நண்பர் நடித்த அநேக ஸ்திரீ பாத்திரங்களில், இந்த அபலையாக நடித்தது ஒரு மிகச் சிறந்தது என்பதற்குச் சந்தேகமில்லை. இவர் இந்த வேடத்தில் நடித்தபடி எழுதிய படமொன்று, இன்னும் சிந்தாதரிப்பேட்டையில் இவரது வீட்டில் இருக்கிறது. என்னைப்போல் இவரும் இந் நாடகத்தில் எப்படி நடிக்கப் போகிறோமோ என்று பயந்து கொண்டிருந்தவர், கடைசியில் பைத்தியக்காரக் காட்சியில் மிகவும் நன்றாக நடித்ததாக எங்கள் சபையார் புகழ மிகவும் சந்தோஷப்பட்டார் என்பது எனக்கு ஞாபகமிருக்கிறது. இதை எழுதும்பொழுது, இவர் எனது துர் அதிர்ஷ்டத்தால் சிறுவயதில் மரித்த பொழுது நேர்ந்த ஒரு சந்தர்ப்பத்தைப் பற்றி இத்தனை வருஷம் சென்றும், அது எனக்கு அடங்காத் துக்கம் விளைவிப்ப தாயினும், இங்கு எழுத வேண்டியவனாயிருக்கிறேன். இவர் இந் நாடகத்தில் அபலையாக நடித்த பொழுது எப்படி நாடக மேடையில் புஷ்பத்தால் அலங்கரிக்கப்பட்டுச் சமாதிக்குக் கொண்டு போனார்களோ, அதே மாதிரியாக, இவர் மரித்தபொழுதும் புஷ்பப் பல்லக்கில் அலங்காரம் செய்து ஸ்மாசனத்திற்குக் கொண்டு போனோம்! இதைப்பற்றி அதே மாதிரியாக இருந்ததென எனது நண்பர் ராவ்பஹதூர் கிருஷ்ணராவ் பான்ஸ்லே , ஹிந்துப் பத்திரிகையில் எழுதினார். மேடையில் லீலாதரனாக நடித்து சவத்துடன் சென்றது போல், இவரது மைத்துனர் தாமோதர முதலியார், இச்சமயமும் உடன் சென்றனர். ஒரு வித்தியாசம் மாத்திரம் இருந்தது; நாடகமேடையில் அமலாதித்யனாக நடித்த நான் ஒரு புறமாய் நின்றுகொண்டு அபலையைப் பாடைமீது கொண்டு வரும் பொழுது, இதெல்லாம் நாடகம்தானே என்று மனத்தைத் தேற்றிக் கொண்டிருந்தேன், அச்சமயம்; இச்சமயம், நாடகமாய் நடித்தது வாஸ்வதமாய் முடிந்ததே என்று, இதை எழுதும் பொழுது நான் அழுவது போல், அழுது கொண்டு அமலாதித்யனாக நடித்த சம்பந்தம் பாடையின் பக்கத்தில் சென்றான்!
தாமோதர முதலியார் லீலாதரனாக நடித்தார். இவருக்கு இந்த வேஷம் முதலில் நான் கொடுத்தபொழுது, இதைச் சரியாக நடிப்பாரோ என்னவோ என்று சந்தேகப்பட்டேன். ஆயினும், ஒத்திகைகளில் மிகவும் கஷ்டப்பட்டுக் கற்று நாடக தினத்தில் நான் எண்ணியதற்கு மேலாக நடித்தார். இவரும் நானும் இந்நாடகத்தில் நடித்ததைப்பற்றி ஒரு சமாச்சாரம் எனக்கு முக்கியமாக நினைவிற்கு வருகிறது. கடைசிக் காட்சியில் நாங்களிருவரும், ரேபியர் (Rapier) என்னும் கத்திகளைக் கையில் கொண்டு சண்டை போட வேண்டியிருக்கிறது. இதற்காக ஒத்திகைகளில் பன்முறை, அவர் இப்படி என்னைக் குத்த, நான் இப்படித் தடுக்க வேண்டும்; நான் அவரை இப்படிக் குத்த, அவர் இன்னபடித் தடுக்க வேண்டும் என்று கத்தி வரிசிகளையெல்லாம் பழகி வைத்தோம். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் சிறு வயதில் பீபில்ஸ் பார்க் பேரில் (Fair) 1885-86-87 ஆம் வருஷங்களில் பார்த்திருந்த பென்சிங் (Fencing) மிகவும் உபயோகப்பட்டது. பென்சிங் என்றால், தற்காலத்திய கோல்யுத்தம் அல்ல; கூர்மையான இரும்புக் கம்பிகள் போன்று மெல்லிய கத்திகளைக் கையிற் பிடித்து யுத்தம் செய்வதாம். என் முரட்டுத்தனத்தை அறிந்த முதலியார் அவர்கள், “வாத்தியார், நீங்கள் ஜாக்கிரதையாயிருங்கள். உங்களை மறந்து எங்கேயாவது என்னைக் குத்திவிடப் போகிறீர்கள்!” என்று, அப்போதைக்கப்போது எச்சரிக்கை செய்திருந்தும், இந்நாடகம் நடந்த இம்முறையோ அல்லது ஷேக்ஸ்பியர் கொண்டாட்டத்திற்காக இதை இரண்டு மாதம் பொறுத்து மறுபடியும் ஆடியபொழுதோ, இக் கடைசிக் காட்சியில், இவரை என் கையிலிருந்த ரேபியர் (Rapier) கத்தியால் பலமாய்க் குத்திவிட்டேன். தெய்வாதீனத்தால் அந்தக் குத்து, அவர் அணிந்திருந்த பெல்ட்டில் (Belt) பட்டது; குத்திய வேகத்தினால் பெல்ட்டில் பட்டபொழுது என் கத்தி, அப்படியே “ட” ஆனா மாதிரி வளைந்து விட்டது! அந்த பெல்ட் தடுத்திராவிட்டால், அவரது வயிற்றில் பிரவேசித் திருக்கு மென்பதற்குச் சந்தேகமில்லை ; நாடகம் விபரீதமாய் முடிந்திருக்கும்! ஈசன் கருணையானது இவ் ஆபத்தினின்றும் என்னைக் காத்தது.
சாராயம் குடிப்பவன், அது தவறு என்று நன்றாய் அறிந்திருந்தும், அந்த வெறி வரும் பொழுது, அதை யெல்லாம் மறந்து குடிப்பது போல்; இது தவறு, நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று எவ்வளவோ தீர்மானித்திருந்தும், மேடையின் மீது நடிக்கும் பொழுது இந்தத் தீர்மானங்கள் எல்லாம் எங்கேயோ பறந்தோடிப் போய், என்னை மறந்தவனாகிறேன். இதற்கு இன்னொரு உதாரணம், இதே அமலாதித்யன் நாடகத்தில் நேர்ந்திருக் கிறது. இந்நாடகம் இன்னொரு முறை நாங்கள் நடித்த பொழுது, டாக்டர் ஸ்ரீநிவாச ராகவாச்சாரியார் காலதேவனாக நடித்தார். நாடகத்தின் கடைசிக் காட்சியில் அமலாதித்யன் காலதேவன் சூதினால் தன் மரணம் கிட்டியதெனக் கண்டறிந்தவன், காலதேவன் தன்னைக் கொல்வதற்காகச் சித்தம் செய்துவைத்திருந்த விஷக் குப்பியை எடுத்து, அதில் மகாராணி குடித்து மிகுதியாயிருந்த பானத்தை, காலதேவன் குடிக்கும்படி செய்கிறான்; இதை நான் நடிக்கும்பொழுது, டாக்டர் ஸ்ரீனிவாசராகவாச்சாரி உதடு கிழிந்து இரத்தம் பெருகும்படியாக அழுத்தி விட்டேன்! இன்றும் ஏதாவது பேச்சு வரும்பொழுது, என் நண்பராகிய டாக்டர் இதைப் பற்றி என்னை ஏளனம் செய்வார். எனது பழைய நண்பராகிய ச. ராஜகணபதி முதலியார் பாலநேசர் வேடம் பூண்டு அதற்கேற்றபடி நடித்தார். இவர் சாதாரணமாக ஹாஸ்ய பாகங்கள் நடிப்பவர், இதை நன்றாய் நடித்தது விசேஷமே.
ஹரிஹரனாக நடித்தது ம. ஆனந்தவேலு முதலியார் என்பவர், இவர்தான் அமலாதித்யனாக நடிக்க வேண்டு மென்று இச்சை கொண்டார். இதை அறிந்த நான் முன்பு ஹரிஹரனாக நடியுங்கள், சரியாகயிருந்தால் அப்புறம் பார்ப்போம் என்று சொல்லி. இப் பாத்திரத்தைக் கொடுத்தேன். இவரால் அமலாதித்யன் பாகம் நடிக்க முடியா தென்பது என் எண்ணம். இவரிடம் இருந்த ஒரு குறை என்னவென்றால், இவரது முகமானது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரேமாதிரியாயிருக்கும். ரச பாவங்கள் மாறும்பொழுது இவர் முக பாவம் மாறாது! இதற்கு ஓர் உதாரணம் கூறுகிறேன். அமலாதித்யன் தன் தந்தையின் அருவத்தைச் சந்திக்கும்பொழுது அவரது தோழனாகிய ஹரிஹரனும் கூட இருக்கிறான். அருவம் தோன்றிய உடன் இருவரும் பீதி யடைந்த முகத்தை உடையவர்களாய்க் காட்ட வேண்டும்; இதற்காக அக் காட்சியை ஒத்திகை செய்யும் பொழுது பன்முறை, இவ்வாறு பயந்தவராய்க் கண் விழித்துக் காட்ட வேண்டும் என்று சொல்லிப் பார்த்தேன். அவர் முகமானது இந்த பாவத்தைக் காட்டச் சக்தியற்றதாயிருந்தது. நான் பன்முறை கேட்டும், “இதோ, பயந்தவன் போல் நடிக்கிறேனே என்று சொல்லுவதே ஒழிய முகத்தில் ஒரு பயச் சின்னமுமிராது! கண்கள் விழித்துக்காட்டுவதைவிட்டு, சற்றே சுருக்கிக்கொள்வார்! இப்படிப்பட்டவர் அமலாதித்யனாக நடிப்பதென்றால், நான் அதற்கிசைவதெப்படி? இதை இங்கு நான் எடுத்து எழுதியது, இவர்மீது குற்றம் கூறும்படியல்ல; ஆயினும் ஒவ்வொருவனும், ஏதாவது நாடகப் பாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பினால் அதற்குத் தக்கபடி நடிக்க நமக்குச் சக்தியிருக்கிறதா என்று முதலில் யோசித்தே பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை, இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறியும் பொருட்டே, இதை இங்கு எழுதலானேன். மற்றவர்கள் குறையினை எடுத்துக் கூறுவ தென்றால், அவர்களும் மற்றவர்களும் இனி அம்மாதிரியான தவறிழைக்கா வண்ணம் எடுத்துக் கூற வேண்டுமேயொழிய, வேறெக் காரணத்தினாலும் கூறக் கூடாதென்னும் நியமமுடையவனாயிருத்தல் நலமெனத் தோன்றுகிறது.
ராஜகாந்தன், கிரிதரன் பாத்திரங்கள் பி. கோபாலசாமி முதலியாரும் சி. பாலசுந்தர முதலியாரும் எடுத்துக்கொண்டனர்.
இந்நாடகத்தில் ஹாஸ்ய பாகம் அவ்வளவாக இல்லாமல் போனாலும் வே. வெங்கடாசல ஐயர், நாடகத்தில் நாடக அரசனாகவும்; வடிவேலு நாயகர், நாடக அரசியாகவும் நடித்தது சபையோருக்குக் களிப்பைத் தந்தது. இக்காட்சியில் ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி, அவர் காலத்தில் வேஷதாரிகள் நாடக மேடையில், பேச்சிலும் நடிப்பதிலும் இழைத்த குற்றங்களை யெல்லாம் எடுத்துக் காட்டியுள்ளார்; அதற்கேற்ப, எனது இந் நாடகத் தமிழ் அமைப்பில், எனது காலத்திய, ஜீவனத்திற்காக நாடகமாடும் வேஷதாரி களுடைய குற்றம் குறைகளையெல்லாம், இவ்விரண்டு ஆக்டர்களைக் கொண்டு எடுத்துக் காட்டியுள்ளேன். வே. வெங்கடாசல ஐயர் நாடக அரசனாய் நடித்ததுமன்றி, இந் நாடகத்தின் கடைசி அங்கத்தில் வெட்டியானாகவும், மிகவும் நன்றாய் நடித்தார்.
இந்நாடகம் ஒன்பது மணிக்கு ஆரம்பித்து சற்றேறக் குறைய 5 மணி நேரத்திற்குமேல் பிடித்தது, முற்றுப்பெற. இதற்குப் பிறகு இதை ஆடும்பொழுது மிகவும் நீடித்திருக்கிறது என்று சில பாகங்களாகக் குறைத்தேன்.
நாடகத்திற்கு அத்யட்சராக விஜயம் செய்த சா. சுப்பிரமணிய ஐயர் என்பவர் ஒன்பது மணிக்கெல்லாம் வந்தவர், தனக்கு வயதானபடியாலும், நித்திரையின்றி அதிக காலம் இரவில் கழித்தால் தன் உடம்பிற்கு ஒத்துக்கொள்வதில்லை யென்றும் சொல்லி, எங்கள் சபை பிரசிடென்டாகிய வி. கிருஷ்ணசாமி ஐயரிடம், “ஓர் அரைமணி நேரம் பார்த்து விட்டுப்போவேன்! என்னை மன்னிக்க வேண்டும்” என்று சொன்னாராம். அதற்குக் கிருஷ்ணசாமி ஐயர், உங்கள் இஷ்டப்படி செய்யலாமென்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னாராம். பிறகு நாடகம் ஆரம்பித்த பிறகு ஒரு மணிநேரம் ஆகியும். சர். சுப்பிரமணிய ஐயர் இடம் விட்டுப் பெயராது மேடையின் மீதே கண்ணாயிருப்பதைக் கண்டவராய், கிருஷ்ணசாமி ஐயர் அவரைப் பார்த்து ஒருமுறைக்கு இரண்டு முறை, “ஐயர்வாள் சீக்கிரம் போக வேண்டுமென்று சொன்னாற் போலிருக்கிறது” என்று ஞாபகப்படுத்தினாராம்; அதற்கு சர். சுப்பிரமணிய ஐயர், “அதெல்லாம் உதவாது கிருஷ்ணசாமி ஐயர், கடைசி வரையில் பார்த்துவிட்டுத்தான் போக வேண்டும்!” என்று சொன்னாராம். இதையெல்லாம் அருகிருந்த ஒருவர் எனக்கு அன்றிரவே தெரிவித்தார்.
இவ்வாறு அரைமணி நேரத்துக்கு மேல் இருக்க முடியாதென்று தெரிவித்தவர், 5 மணிக்கு மேல் இருந்ததுமன்றி நாடகம் முடிந்தவுடன், தானாக, தன்னை யொருவரும் கேளாமலிருக்கும் பொழுதே, சபையோர் அறிய, கால் மணி சாவகாசத்திற்கு மேல், நாடகத்தையும் நாடகத்தில் நடித்தவர்களையும் புகழ்ந்து பேசினார். என்னைப்பற்றியும் கொஞ்சம் புகழ்ந்தார் என்பது என் ஞாபகம். முக்கியமாக, எங்கள் சபை இம் மஹானால் புகழப்பட்டதே என்று சந்தோஷப்பட்டேன். நான் அன்றிரவு வீட்டிற்குப்போய், “தெய்வத் தாலாகா தெனினும் முயற்சி மெய்வருந்தக் கூலி தரும்!” என்னும் திருக்குறளை நினைத்துக்கொண்டு மிகுந்த சந்தோஷத்துடன் உறங்கினேன்.
மறுநாள் காலை, டாக்கர் தோட்டத்தில் (Taukers gardens) சூணாம்பெட்டு ஜமீன்தார் முத்துக்குமாரசாமி முதலியார் அவர்கள் சர். வி. சி. தேசிகாச்சாரியாருக்கு ஒரு விருந்தளித்தனர். அதற்கு நானும் வரவழைக்கப்பட்டுப் போக, அங்கு என்னைப் பார்த்தவர்கள் அநேகர் முன்னாள் நடந்த நாடகத்தைப் பற்றியும் எங்கள் சபையைப் பற்றியும் மிகவும் கொண்டாடிப் பேசினர். நான் ஆடியதையும் புகழ்ந்தனர் என்பது என் ஞாபகம். முக்கியமாக சர். வி.சி. தேசிகாச்சாரியார் கூறிய வார்த்தைகள் என் ஞாபகத்திற்கு வருகின்றன. “என்ன சம்பந்த முதலியார்! நேற்று ராத்திரி, சுகுண விலாச சபை நாடகம் மிகவும் நன்றாயிருந்ததாமே! காலை மணி அய்யர் அவர்களைப் பார்த்தேன். அவர் நேற்றிரவு தான் பார்த்த நாடகத்தைப்பற்றி அரை மணி சாவகாசம் பேசினார். உங்களை மிகவும் புகழ்ந்தார். என்ன சார்! இர்விங் கிர்விங் (Sir Henry Irving) என்று சொல்லு கிறார்கள்; அவர் கூட இம்மாதிரியாக நடிப்பார்களோ என்று எனக்குச் சந்தேகமாயிருக்கிறது!” என்று ஆங்கிலத்தில் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். இதை இங்கு எழுதுவதற்காக என் நண்பர்கள் என்னை மன்னிப்பார்களாக. ஆயினும் தற்புகழ்ச்சியாக இதை வெளியிட்டேன் என்று எண்ணாதிருப்பார்களாக. சர். ஹென்றி இர்விங்குடன், ஒப்பிட்டுக் கூறும்படியான அவ்வளவு பெருமை எனக்கு இல்லை என்பதை உறுதியாய் நம்புகிறேன். இவ்விடம் இதை எழுதியதற்குக் காரணம், எங்கள் சுகுண விலாச சபை நடத்திய நாடகத்தை, சிறந்த கல்விமான்களும், புத்திமான்களும் கொண்டாடினார்கள் என்று கூறும் பொருட்டேயாம்.
சர். சுப்பிரமணிய ஐயர் இவ்வாறு புகழ்வதுடன் நில்லாது, இன்னொரு காரியமும் செய்தார். அதைப்பற்றி அக்காலத்தில் மறுபடியும் எங்கள் சபை பிரசுரம் செய்த “தமிழ் நாடக மேடை” (Indian Stage) என்னும் மாதாந்திரப் பத்திரிகையில் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் “ஒரு பெரும் தயாளமான கொடை” என்கிற தலைப் பெயர் வைத்து எழுதியுள்ளார். தான் பார்த்த அமலாதித்யன் நாடகத்தை மெச்சி, எங்கள் சபையை வாழ்த்தி, அதற்கு நன்கொடையாக ரூபாய் 250க்கு செக்கை அனுப்பினார் மறுதினம்! அக் கடிதம் இன்னும் எங்கள் சபையோரால் போற்றப்பட்டுப் பாதுகாத்து வரப்பட்டிருக்கிறது. இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்களுக்கு எப்பொழுதாவது சாவகாசமிருந்தால் எங்கள் சபைக்கு வந்து காரியதரிசியிடமிருந்து உத்தரவு பெற்று, இக் கடிதத்தைக் கண்ணுறும்படி வேண்டுவேன். எங்கள் சபையைப் பற்றி இப் பெரியார் புகழ்ந்ததை அவர்கள் அறிய வேண்டுமென்று நான் இதைக் கேட்கவில்லை; அக் கடிதத்தின் கடைசியில் போஸ்ட் ஸ்கிரிப்டாக (Post Script) இப் பெரியார் எழுதியதை அவர்கள் கவனிக்கும் பொருட்டே நான் கேட்பது. கடிதத்தை யெல்லாம் எழுதி முடித்த பிறகு கடைசியில், “நான் இந்த ரூபாய் கொடுத்ததை, மற்றவர்கள் அறிய வேண்டியதில்லை!” என்று பொருட்பட ஆங்கிலத்தில் அவர் எழுதியுள்ளதை அவர்கள் கவனிக்கும் பொருட்டே. “வலது கை செய்யும் தானத்தை இடது கையறியலாகாது!” என்னும் பழமொழியை உண்மை மொழியாக இப் பெரியார்பால் அவர்கள் கண்டு களிக்க வேண்டுமென்பதே என் வேண்டுகோள்.
என் பால்ய நண்பரும், இந்நாடகத்தை நான் எழுதுவதில் எனக்கு நான் முன்புரைத்தபடி மிகவும் உதவி செய்த வருமான வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், மறுநாள் என்னைச் சந்தித்த பொழுது, “நீ இந் நாடகத்தில், நன்றாய் நடிப்பாய் என்பதைப்பற்றி நான் எப்பொழுதும் சந்தேகப்பட்ட வனன்று; ஆயினும், இவ்வளவு நன்றாய் நடிப்பாயென்று, நான் நினைக்கவில்லை” என்றார். எனக்கு மார்க்கும் (Mark) அதிகமாய்க் கொடுத்தார் என்று நினைக்கிறேன். எவ்வளவு என்பது எனக்கு ஞாபகமில்லை .
இந்த “அமலாதித்ய நாடக”மானது, எஸ்.பி.சி.ஏ. என்று சொல்லப்பட்ட, பிராணிகளுக்கு ஹிம்சையில்லாமல் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சபையாரின் உதவிக் காகக் கொடுக்கப்பட்டது. இதற்கு மொத்த வசூல் 685 ரூபாய் வந்தது. அதில் எங்கள் செலவு போக மிகுந்த தொகை, ரூபாய் 261-4-6 அந்தச் சபையாருக்குக் கொடுக்கப்பட்டது.
இந்த நாடகத்தைப் பலவிதத்தில் எங்கள் சபையின் ஒரு முக்கியமான நாடகமென எண்ண வேண்டியிருக்கிறது. இதனால் எங்கள் சபைக்குப் பெரும்புகழ் கிடைத்த தென்பதற்குச் சந்தேகமில்லை. இதற்கு முன்பு 15 வருடங்களாக நடத்தி வந்த நாடகங்களைப் பார்க்கிலும் இதற்குத்தான் அதிகப் பணம் வசூலாயது. அன்றியும் நாளது வரையில் கணக்கிட்ட போதிலும், இந் நாடகத்தில்தான் எங்கள் சபைக்கு அதிகப் பணம் வசூலாயிருக்கிறது; கொழும்பில் நாங்கள் இந் நாடகம் ஆடியபொழுது ரூபாய் 1792 வசூலானது; இதற்கு அதிகமாக இன்னும் எந்த நாடகத்திலும் எங்களுக்கு வசூலாகவில்லை. அன்றியும் இதுவரையில் எங்கள் சபை ஆடிய நாடகங்களிலெல்லாம், இதுதான் மிகச் சிறந்தது என்று என் பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதியிருக்கிறார். மேலும் எங்கள் சபையில் நூறாவது நாடகமாக இது 1908ஆம் வருஷம் ஆடப்பட்டது. கடைசியாக, இதுவரையில் எங்கள் சபை ஆடிய நாடகங்களைப் பார்க்கிலும் இதில்தான் அரங்கத்தின் காட்சிகளை ஏற்படுத்துவதில், அதிகச் சிரமம் எடுத்துக் கொண்டோம். இதற்காக இவ்வருஷத்திய சபை அறிக்கை (Report) யில் எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலுவுக்கு, அவர் எடுத்துக் கொண்ட சிரமத்திற்காக, சபையார் வந்தனம் அளித்தனர். இந்த அமலாதித்ய நாடகமானது, இதுவரையில் எங்கள் சபையோரால் 12 முறைதான் ஆடப்பட்டிருக்கிறது. இதை ஆடுவது கஷ்டமானபடியால் இதை அடிக்கடி ஆடுவதில்லை. அக்காரணம் பற்றியே இதர சபையார் இந்நாடகத்தை அதிமாய் ஆடினதில்லை; மற்றவர்கள் இதை இதுவரையில் ஒன்பது தரம்தான் ஆடியிருக்கிறார்கள்.
இவ் வருஷம் ஷேக்ஸ்பியர் கொண்டாட்டத்திற்காக இந் நாடகம் எங்களால் மறுபடியும் ஆடப்பட்டது. இம்முறை இந் நாடகம் ஆடினதைப்பற்றி ஒரு முக்கியமான விஷயம் எனக்கு ஞாபகம் வருகிறது. இதற்கு முன்பாக எனக்குக் கொஞ்சம் உடம்பு அசௌகர்யமாயிருந்ததனாலோ அல்லது எக்காரணத்தினாலோ என் மனம் இந்நாடகத்தின்மீதில்லை. நான் இதை இம்முறை நடித்தது எனக்கே திருப்திகரமாயில்லை; வந்திருந்தவர்களில் அநேகர் நன்றாயிருந்ததெனக் கூறியபோதிலும், எனது கற்றறிந்த நண்பர்களிற் பலர்; நான் முன்பு நடித்தது போலில்லை என்றே கூறினார்கள். முக்கியமாக எனது நண்பர் அ. வாமன்பாய் என்பவர், நான் இம்முறை ஆடியது தனக்குத் திருப்திகரமாயில்லை என்று கூறி என்னைச் சந்தித்து, “என்ன காரணம்?” என்று கேட்டார். அதற்கு நான், இதை ஆடியபோது என் தேகத்திலும் உற்சாகமில்லை; ஏதோ காரணத்தினால் என் மனத்திலும் உற்சாகமில்லை என்று ஒப்புக் கொண்டேன். அதன்மீதவர், “இம் மாதிரியான முக்கியமான பாத்திரங்களாடும் பொழுது, இதை ஆடுவதில் நாம் சரியாக ஆடுவோம் என்று உன் மனத்தில் திடமாய்த் தோன்றாவிட்டால், ஆடாதே!” என்று புத்திமதி கூறினார். அவர் கூறியதை ஒப்புக்கொண்டு, அமலாதித்யன் முதலிய கஷ்டமான நாடகங்களில், என் மனத்தில் பூர்ண வகையும் திடமும் இல்லாவிட்டால் ஆடாது தவிர்த்து வந்திருக்கிறேன். இதை வாசிக்கும் என் இளைய நண்பர்களும் கடினமான நாடகங்களில் ஆட வேண்டி வந்தால், தங்கள் முழு மனத்துடனும், உற்சாகத்துடனும் ஆட, ஏதாவது தடையேற்பட்டால் அவற்றை ஆடாதிருப் பார்களாக. அச்சமயத்தில் இதற்கு நிதர்சனம் இம்முறை ஆடிய இந்நாடகத்திலிருந்தே எடுத்துக் கூறக் கூடும். அமலாதித்யன் தன் தந்தையின் அருவத்தை முதன்முறை சந்திக்கும் காட்சியில், முதன் முறை ஆடியபொழுது, அந்த பயத்தை மனத்தில் வகித்தவனாய் உடம்பெல்லாம் வியர்த்தது; இம்முறை, மேற்சொன்னபடி, அந்தக் கஷ்டம் எடுத்துக்கொள்ள அசக்தனாகி, அதைச் சபையோர் கவனிக்கப் போகிறார்களா என்று எண்ணினவனாய், முகத்தைச் சற்றே திருப்பிக்கொண்டு, நான் பேச வேண்டிய வார்த்தைகளைப் பேசினேன். பலன்? உடனே ஹாலிலிருந்து இந் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கற்றறிந்த எனது நண்பர்கள் இதைக் கண்டுபிடித்து விட்டனர்; முன்புபோலில்லை! ஏதோ குறையிருக்கிறது; என்று அவர்கள் மனத்தில் பட்டுவிட்டது. இவ்விதமாக அநேக விஷயங்களில், நமது குறை மற்றவர்களுக்குத் தெரியாது என்று எண்ணி, நமது மனத்தை நாமே மோசம் செய்து கொள்ளுகிறோம்.
இவ்வருஷம் (1906) எங்கள் சபை நீலகிரிக்குப் போய், உதகமண்டலத்தில் 3 நாடகங்கள் ஆடியது. 1897 இல் பெங்களூருக்குப் போய், நஷ்டமடைந்து வந்தபிறகு, இந்த ஒன்பது வருடங்களாக, வெளியே போகிற எண்ணத்தை விட்டோம். இனி வெளியிற் போவதில்லை என்று தீர்மானித்தோம் என்றே சொல்ல வேண்டும். அத்தீர்மானத் தினின்னும் இவ்வருஷம் மாறியதற்கு ஒரு காரணமுண்டு. எங்கள் சபையில் தெலுங்கு ஆக்டராகச் சேர்ந்த பி. ராம மூர்த்தி பந்துலு நீலகிரிக்கு ஓவர்சியராக மாற்றப்பட்டார்; மற்ற இரண்டு ஆக்டர்களாகிய அ.கிருஷ்ணசாமி ஐயரும், சி. பாலசுந்தர முதலியாரும் கவர்ன்மெண்டு செக்ரடரியேட் (Secretariat) ஆபீசில் இருந்தபடியால், கோடைக் காலத்தில் அந்த ஆபீசுடன், நீலகிரிக்குப் போக நேர்ந்தது; உதகமண்டலத்தில் ஒரு சிறு நாடக சாலையுமிருந்தது; இந்த ஹேதுக்களெல்லாம் இவ்வருஷம் ஒருங்கு சேரவே, அவ்விடமிருந்து எங்கள் சபை அங்கத்தினராகிய மேற் சொன்ன மூவர்களும், சபையானது, அவ்விடம் வந்து நாடகமாடினால் நன்றாயிருக்கும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் நாங்கள் செய்கிறோம். நஷ்டம் வராமற்படி பார்த்துக் கொள்ளுகிறோம் என்று எழுதினார் கள். எங்கள் சபை ஆக்டர்களுக்கும் (நான் உட்பட) நீலகிரிக்குப் போக வேண்டும் என்னும் ஆசை பிறந்தது. எங்கள் சபையின் நிர்வாக சபையாரும் ஒப்புக் கொண்டனர்.
அதன் பேரில் உதகமண்டலம் போய் மூன்று நாடகங்கள் கொடுக்க வேண்டும் என்றும்; அங்கு போகிறவர்களெல்லாம் ஆக்டர்கள் உட்பட ரெயில் சார்ஜ் தாங்களே போட்டுக் கொள்ளவேண்டும் என்றும் தீர்மானித்தோம்; ரெயில்வேக்காரர்கள், முன்பு இரண்டுமுறை போலவே எங்கள் சபைக்கு, இரண்டாவது வகுப்பில், பாதி சார்ஜில் போய் வரலாமென்று அனுமதி கொடுத்தனர். அதன்பேரில் சென்னையிலிருந்து மே மாதம் 24ஆம் தேதி புறப்பட்டுப் போய், அவ்விடம் இரண்டு தமிழ் நாடகங்களும் ஒரு தெலுங்கு நாடகமும் கொடுத்து ஜூன் மாதம் இரண்டாம் தேதி வரை அவ்விடமிருந்து, 3ஆம் தேதி புறப்பட்டுப் பட்டணம் வந்து சேர்ந்தோம். இப்படிப் போய் வந்தவர்கள் ஆக்டர்களல்லாதார் உட்பட 31 பெயர். இதைப்பற்றி எனக்கு ஞாபகம் இருக்கும் சில முக்கிய விஷயங்களை இனி எழுதுகிறேன்.
இதைப்பற்றி நான் இப்பொழுது எழுதும்பொழுது, அநேக வருஷங்களுக்கு முன்னால் நான் குறிப்பிட்டிருக்கும் எங்கள் சபை நடத்தி வந்த “இந்திய நாடக மேடை” (Indian Stage) என்னும் பத்திரிகையில் நான் ஆங்கிலத்தில் எழுதிய விவரங்கள் எனக்கு மிகவும் உபயோகப்படுகின்றன. அவ்வியாசங்களை நான் பாதுகாத்து வைத்தது எனக்குப் பெரும் உதவியாயிற்று.
இம்முறை நாங்கள் வெளியூருக்குப் போகத் தீர்மானித்ததற்குக் கொஞ்சம் ஆட்சேபணை இருந்தது. முக்கியமாக எங்கள் சபையின் அங்கத்தினர் ஒருவர் ஆட்சேபணை செய்தார் என்பது என் ஞாபகம்; அவர் ஆட்சேபணை செய்தது எனக்குச் சந்தோஷத்தைத் தந்தது, இரண்டு முக்கியக் காரணங்களினால்; முதலாவது, நான் சபையின் சார்பாக ஆரம்பிக்கும் அதன் விஷயங்களி லெல்லாம், ஆட்சேபணை யாதேனும் இருந்தால்தான் சரியாக ஈடேறும் என்பதை முன்பே தெரிவித்திருக்கிறேன். இரண்டாவதாக, முக்கியமாக இந்த அங்கத்தினர் ஆட்சேபித்தால்தான், எதுவும் மிகவும் நன்றாய் முடியும் என்பது என் அனுபவம். அவர்மீது குற்றங்கூறவில்லை நான் அவர் வந்த ராசி அது!
நாங்கள் சென்னையை விட்டு உதகமண்டலம் போகும் பொழுது, எங்களில் பெரும்பாலர் மலை ரெயிலில் அதுவரையில் போயறியாதவர்களாயிருந்தபடியால், அந்தப் பிரயாணம், எங்களுக்கு மிகவும் களிப்பைத் தந்தது. உதகமண்டலம் அல்லது ‘ஒத்தியில்’ (Ooty) எங்கள் சபை நண்பர்கள் எங்களுக்காகத் தக்க ஏற்பாடுகளெல்லாம் செய்திருந்தனர். ஆயினும் முதலிலேயே எங்களுக்கு ஒரு பெருங்கஷ்டம் நேரிட்டது. போன மறுநாள், ‘விரும்பிய விதமே’ என்னும் நாடகம் வைத்துக் கொண்டோம். அன்று சாயங்காலம் 71
மணி வரையில் எங்கள் உடுப்புகள் வந்து சேரவில்லை! நாடக உடுப்புகள் இல்லாமல் எப்படி நாங்கள் நாடகமாடுவது? நந்தனாரைப்போன்ற நாடகமாயிருந்தால் ஆடிவிடலாம்; ஷேக்ஸ்பியர் நாடகத்தைத் தக்க உடைகளில்லாமல் எப்படி நடிப்பது? நாடக சாலையில் எல்லா ஏற்பாடுகளும் செய்தாயது. முன்னாலே நாங்கள் அனுப்பிய திரைகளும் கட்டியாயது. உடைகள் மாத்திரம் இல்லை! இந்தக் கஷ்டத்தில் இன்னது செய்வதென்றறியாது திகைத்து நிற்கையில், அனுப்பிய எங்கள் உடுப்புப் பெட்டிகள் 71
மணிக்கு வந்து சேர்ந்தன! அதன்மீது, துரிதப்பட்டு, இந்நாடகத்துக்கு வேண்டிய அத்தனை ஆக்டர்களும் ஒரு மணி சாவகாசத்திற்குள்ளாகச் சித்தமானோம்! சாதாரணமாக எங்களுக்கு இதற்கு நான்கு மணி சாவகாசம் வேண்டும். விளம்பரங்களில் குறித்தபடி சரியாக ஒன்பது மணிக்கு நாடகத்தை ஆரம்பித்து விட்டோம். நாங்கள் ஆடிய நாடகக் கொட்டகைக்கு ஆர்மரி ஹால் (Armoury Hall) என்று பெயர். அது அவ்வளவாகப் பெரிய இடம் அன்று; நாடகம் பார்க்க வந்த ஜனத் தொகை அதிகமாயும் இல்லை; கொஞ்சமாகவும் இல்லை; இது எங்கள் சபையின் குற்றமல்ல. எனது நண்பர் ராமமூர்த்தி பந்துலு, விளம்பரங்கள் மூலமாக ‘ஒத்தி’வாசிகளுக்கு எவ்வளவு தெரியப்படுத்தக்கூடுமோ அவ்வளவு தெரியப்படுத்தினார். ஆயினும் அவ்விடம் தமிழ் அறிந்தவர்கள் அவ்வளவு அதிகமில்லாதபடியால், நாடகம் பார்க்க வந்த ஜனத்தொகை அதிகமாயில்லை. இச்சந்தர்ப்பத்தில் எனது நண்பர் ராமமூர்த்தி பந்துலு செய்த ஒரு யுக்தியை இங்கு எனது நண்பர்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.
‘ஒத்தி’ (Ooty) என்பது ஒரு சிறிய ஊர். அதில் அக்காலம் வாரத்துக்கு ஒரு முறைதான் சந்தை’ கூடுவதுண்டு.
அங்கிருப்பவர்கள், வாரத்திற்குத் தங்களுக்கு வேண்டிய காய்கறிகளை மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்வார்கள், எனது நண்பர், எங்கள் சபை அங்கு போயிறங்கின தினத்தில் காலையில், அச் சந்தைக்குப் போய் அதிகாலையிலேயே, அங்கு கடைகளிலிருந்த வாழை இலைகளை யெல்லாம், எங்களுக்கு ஒரு வாரத்திற்கு ஆகும்படி வாங்கிவிட்டார்! பிறகு அச் சந்தையில் வாழை இலை வாங்க வந்தவர்களுக்கெல்லாம் ஒருவருக்காவது, ஒரு வாழையிலை யாவது கிடைக்காமற் போச்சுது! வாழை இலைக்காகக் கேட்பவர்களுக்கெல்லாம், கடைக்காரர்கள், பட்டணத்திலிருந்து ஏதோ ஒரு சபை வந்திருக்கிறதாம். அதற்காக, சந்தையிலுள்ள வாழை இலைகளையெல்லாம் வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள் என்று பதில் உரைத்தனர். அச்சமயம் ஒத்தியில் தங்கள் பரிவாரங்களுடன் வந்திருந்த இரண்டொரு மஹாராஜாக்கள் வீட்டிற்குக்கூட வாழை இலை இல்லாமற் போயிற்று! இந்த யுக்தியின் மூலமாக, எல்லோரும், யாரடா இந்தச் சபை? என்று கேட்க நேரிட்டு, எங்கள் சபை ஒத்திக்கு வந்த சமாச்சாரம் நன்றாய்ப் பரவியது!
நாங்கள் ஆடிய முதல் நாடகத்தைப்பற்றி இங்கெழுதத்தக்க விசேஷம் ஒன்றும் அவ்வளவாக எனக்கு ஞாபகமில்லை. வழக்கம்போல் இந்நாடகத்தில் அ. கிருஷ்ணசாமி ஐயரும், சி. ரங்கவடிவேலுவும் நல்ல பெயர் எடுத்தனர் என்பது தவிர வேறொன்றும் என் நினைவுக்கு வரவில்லை. இந்நாடகம் ஆடி முடிந்ததும், நாங்கள் அதுவரையில் தங்கியிருந்த ஒரு நண்பருடைய பங்களா, எங்களுக்குச் சௌகர்யக் குறைவாயிருந்தபடியால், விஜயநகரம் மகா ராஜாவின் பெரிய பங்களா அச்சமயம் காலியா யிருந்தபடியால் அதை ஐந்து நாளைக்கு 200 ரூபாய்க்கு, வாடகை பேசிக்கொண்டு, அங்கு போய்ச் சேர்ந்தோம்.
நாங்கள் இங்காடிய இரண்டாவது நாடகம் தெலுங்கில் “வரூதினி” என்பதாம். இந்நாடகத்தை எழுதியவர் எனது நண்பர் ராமமூர்த்தி பந்துலு. இதில் முக்கியமான கதாநாயகனாக அவர் மிகவும் நன்றாய் நடிப்பார். இந்நாடகமானது, சில வருஷங்களாக சென்னையில் அடிக்கடி போடுவதுண்டு. எங்கள் சபையார், இதைப் பற்றி, சற்று விகடமாய்ப் பேசும்போது எனது நண்பர் ராமகிருஷ்ண ஐயர், “வருஷா வருஷம் சிராத்தம் வருவது போல் இது வந்து கொண்டிருக்கிறதே!” என்று வேடிக்கையாய்ச் சொல்வார். இந்த நாடகத்தை எப்படியாவது இவ்விடம் நடத்த வேண்டுமென்று இச்சை கொண்டவராய், இவர், ஒத்தியில் தெலுங்கு தெரிந்தவர்கள் அநேகம் பெயர் இருக்கின்றனர், தெலுங்கு நாகடமும் போடலாம் என்று வற்புறுத்தினார். எனக்கு மாத்திரம் சந்தேகமாயிருந்த போதிலும் இவ்வளவு தூரம் சொல்லுகிறாரே பார்ப்போம் என்று ஆட்சேபிக்காது விட்டேன். இந்நாடகம் இங்கு ஆடிய பொழுது நாடகம் நன்றாயிருந்தது; ஜனங்கள்தானில்லை! முன்னால் கொடுத்த தமிழ் நாடகத்திற்கு வந்ததில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லை! என்ன செய்வது? கொண்டபின் குலம் பேசி என்ன பிரயோஜனம்? ராமமூர்த்தி பந்துலுவின் மீதும் நான் குறை கூறுவதற்கில்லை. நானும் அந்தக் கிரந்த கர்த்தாவாயிருந்தால் அப்படியே செய்திருப்பேனோ என்னவோ? ஆங்கிலத்திலே “The wish is father to the thought” என்று ஒரு பழமொழியுண்டு. அதைத் தமிழில், “விருப்பமானது, எண்ணத்திற்குத் தந்தையாயிருந்தது” என்று ஒருவாறு கூறலாம். பந்துலு அவர்களின் செய்கையும் அவ்வாறு இருந்தது போலும்!
இந்தத் தெலுங்கு நாடகத்தினால் எங்கள் சபாவுக்கு நேரிட்ட நஷ்டத்தை யெல்லாம், இவ்விடத்தில் நாங்கள் கொடுத்த கடைசித் தமிழ் நாடகமாகிய “சாரங்கதரன்” சரிப்படுத்திவிட்டது. சாரங்கதரன் நாடகமாடிய தினம் சாயங்காலம் மழை பெய்ய ஆரம்பித்து ஏறக்குறைய இருட்டும் வரையில் பெரும் மழை பெய்தது. ஒத்தியில் மழை பெய்வதை அனுபவித்தவர்கள் அன்றிரவு எப்படி இருந்திருக்க வேண்டுமென்று அறிவார்கள். மழை ஆரம்பித்தால் தாரை தாரையாகக் கொட்டும். விஜயநகரம் மகாராஜாவின் பங்களாவிலிருந்து நாடகசாலைக்கு வர ஏறக்குறைய இரண்டு மைல் நாங்கள் நடந்து வர வேண்டியிருந்தது; வரும் வழியில் ஆக்டர்களாகிய நாங்கள் முழங்காலளவு ஜலத்தில் நடந்து வரவேண்டி வந்தது, சில இடங்களில். முந்திய நாடகமே நஷ்டத்தில் முடிந்ததே, இதுவும் நஷ்டத்தில் முடிந்தால் என்ன செய்வது என்று மனத்தில் துயரத்துடனே நாடக சாலைக்குப் போய்ச் சேர்ந்தோம். ஸ்வாமி இருக்கிறாரென்று என் மனத்தை நான் தைரியம் செய்துகொண்டு, வேஷம் பூண ஆரம்பித்தேன். கருணைக் கடவுளின் கிருபையால் 8 மணிக்கெல்லாம் மழை நின்று விட்டது. மழை நின்றதும், வெளியில் வந்து பார்த்தால், எங்கும் ஒருவித மூடு பனி சூழ்ந்திருந்தது. இதென்ன இப்படியிருக்கிறதே என்று நான் பயந்தபொழுது, எனது நண்பர் சி. பாலசுந்தர முதலியார் “நீங்கள் பயப்படாதீர்கள் வாத்தியார், இனி மழை வராது. அன்றியும் ஒத்திவாசிகளெல்லாம், இம்மாதிரியான மூடு பனிக்கு அஞ்சமாட்டார்கள்! இப்பனியில் நடப்பதுதான் இங்குள்ள வர்களுக்கு ஒரு வினோதமாகும்!” என்று தைரியம் சொன்னார். இவர் சொன்னதற்கேற்ப, மழை நின்ற ஒரு மணி அவகாசத்திற்கெல்லாம், நாகடசாலை ஜனங்களால் நிரம்பிவிட்டது! அந்த நாடகசாலை எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு டிக்கட்டுகள் விற்றுப் பிறகு வருபவர்களுக்கு இடம் இல்லாமல், நிறுத்தி விட்டோம். இச்சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு சிறு விஷயம் ஞாபகம் வருகிறது. நாடகம் ஆரம்பிக்க அரை மணி நேரம் இருக்கும் பொழுது, டிக்கட்டுகள் விற்கும் இடத்தில், எனது நண்பர் சபையின் பொக்கிஷதாரராகிய வி. ரங்கசாமி ஐயங்கார், யாருடனோ உரத்த சப்தமாய்ச் சச்சரவிட்டுக் கொண்டிருந்தார். அவர் ரகசியம் பேசினாலே பக்கத்து வீட்டிற்குக் கேட்கும்! சண்டை போட ஆரம்பித்தால்! வேஷம் போட்டுக்கொண்டிருந்த நான் பாதி வேஷத்துடன் அவ்வறைக்குப் போய்க் கேட்க, நடந்த செய்தியைத் தெரிவித்தார்; அவருடன் வாதாடிக் கொண்டிருந்த மனிதன், அரைமணி நேரத்துக்கு முன் ஒரு எட்டு அணா டிக்கட்டு கேட்டானாம்; ‘எட்டணா வகுப்பில் இடமில்லை! இனி எட்டணா டிக்கட்டு விற்க முடியாது!’ என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். அந்த மனிதன் ஒரு மைல் தூரம் திரும்பிப் போய்த் தனக்குத் தெரிந்தவர்களிட மிருந்து, இன்னொரு எட்டணா வாங்கிக்கொண்டு வந்து ஒரு ரூபாய் டிக்கட்டு கேட்டானாம்; இதற்குள்ளாக ஒரு ரூபாய் வகுப்பும் நிரம்பிவிட்டது. “ஆகவே, நான் என்ன செய்வது? ஒரு ரூபாய் டிக்கட்டு இல்லை. இனி இரண்டு ரூபாய் டிக்கட்டுதான் இருக்கிறது என்று நான் சொன்னால், இவன் என்னோடு சண்டை போடுகிறான். இவன் ஒரு மைல் தூரம் நடந்து போய் வந்து ஒரு ரூபாய் கொண்டு வந்தால் எனக்கென்ன? நான் என்ன செய்யக்கூடும்? ‘நீங்கள்தானே ஒரு ரூபாய் கொண்டு வந்தால் டிக்கட்டு தருகிறேன் என்று சொன்னீர்கள்?’ என்று என்னுடன் சண்டை பிடிக்கிறான். நான் என்ன செய்வது இப்பொழுது?’ என்று என்னிடம் தன் மெல்லிய குரலுடன் தெரிவித்தார். ‘ஐயோ பாவம்! அம் மனிதன் (அவன் யாரோ எனக்குத் தெரியாது) இந்நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்று ஒரு மைல் தூரம் நடந்து போய் வந்திருக்கிறானே! ஒரு ரூபாய் கொண்டு வர!’ என்று எண்ணினவனாய், “அந்த மிகுதி ரூபாயை நான் கொடுக்கிறேன்! என் கணக்கில் போட்டுக்கொள்!” என்று சொல்லி, அம்மனிதனுக்கு இரண்டு ரூபாய் டிக்கட்டைக் கொடுக்கச் செய்தேன். இதை நான் எழுதியது, எங்கள் பொக்கிஷதாரர், எவ்வளவு கண்டிப்பானவர் என்று மற்றவர்கள் அறியும் பொருட்டும், அன்றியும், என்றும் சுயநலத்தையே நாடும் என் ஜன்மத்தில்கூடக் கோடைக் காலத்தில் எப்போதவது மழை நீர் துளிப்பது போல், இம்மாதிரியான அற்ப விஷயங்களிலாவது கொஞ்சம் மற்றவர்களுக்கு நம்மாலியன்ற அளவு உதவி செய்ய வேண்டும் என்னும் குணம் சிறிது இருக்கிறதுபோல எனக்குத் தோன்றுகிறதென, என் இளைய நண்பர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ளும் பொருட்டே! இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்கள், இம்மாதிரியான சந்தர்ப்பங்கள், தங்களுக்கு நேருமானால், மற்றவர்களுக்கு உதவி செய்து, அதனால் பெரும் மனோசந்துஷ்டியை அடைவார்களாக!
இந் நாடகத்தில் முதற்காட்சியில் மதுரகவி மரத்தின் கிளையினின்றும் கீழே விழுந்தது முதல், கடைசி வரைக்கும் ஒவ்வொரு முக்கியமான சந்தர்ப்பமும் வந்திருந்த சபையோரால், கிரஹிக்கப்பட்டு அவர்களுக்குச் சந்தோஷத்தைத் தந்தது. நான் எழுதியுள்ள ஒவ்வொரு நாடகத்திலும், இன்னின்ன இடத்தில் ஜனங்கள் கரகோஷம் செய்வார்கள், இன்னின்ன இடத்தில் நகைப்பார்கள், இன்னின்ன இடத்தில் துக்கப்படுவார்கள், இன்னின்ன இடத்தில் நிசப்தமாய்க் கவனிப்பார்கள் என்று அனுபவத்தினால் எனக்கு ஒரு கணக்குண்டு. இதன் பிரகாரம் யோசிக்குமிடத்து இந் நாடகம் ஜனங்களை மிகவும் திருப்தி செய்ததென்றே நான் கூற வேண்டும். மேற்சொன்ன சந்தர்ப்பங்களில் சபையோர், நான் எண்ணியபடி செய்யாவிட்டால், ஆக்டர்கள் சரியாக நடிக்காமலாவதிருக்க வேண்டும் அல்லது நாடகம் பார்க்க வந்திருப்பவர்கள் அவ்வளவாக நாடக ரசிகர்களாக இல்லாமலிருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம். இம்முறை எனது நண்பர்கள் ஆ. கிருஷ்ணசாமி ஐயர் ரத்னாங்கியாகவும், சி. ரங்கவடிவேலு சித்ராங்கியாகவும் சென்னையில் நடித்ததைவிட அதிக விமரிசையாக நடித்தனர் என்றே கூற வேண்டும். எந்தச் சபையிலும், அதை அறிந்து அனுபவிக்கத்தக்க ரசிகர்கள் எதிரில் இருக்கிறார்கள் என்று பட்டால், அந்தக் கலைஞனுக்கு உற்சாகம் உண்டாகி, தன் முழு சாமர்த்தியத்தையும் தன்னையும் அறியாதபடி சில சமயங்களில் காட்டுகிறான்; எதிரிலிருப்பவர்கள் மண்டு களாகி மௌனமாயிருந்தால், எப்படிப்பட்டவனுக்கும் உற்சாகம் சிறிது குறைந்துதான் தீரும். இவ்வாறு வெகு விமரிசையாய் நடத்தப்பட்ட இன்றிரவு நாடகத்தில், ஒரு சந்தர்ப்பம் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. இதை அன்றிரவே எனது நண்பர் ரங்கசாமி ஐயங்கார் என்னிடம் வந்து தெரிவித்தார். அன்று பந்தோபஸ்துக்காக வந்திருந்த போலீஸ்காரன் ஒருவன், அவர் உத்தரவு பெற்று ஒருபுறமாக வந்து, சுவரின் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தவன், சாரங்கதரன் தன் அன்னையைவிட்டுப் பிரிந்து கொலைக் களம் கொண்டு போகப்படும் காட்சியில், கிருஷ்ணசாமி ஐயரும் நானும், மேடையின்மீது நடித்துக் கொண்டிருந்த பொழுது, கண்ணீர் தாரை தாரையாக விட்டழ ஆரம்பித் தானாம். எனது நண்பர் ரங்கசாமி ஐயங்கார், அவன்மீது பரிதாபங் கொண்டவராய் அவனைத் தேற்றுமாறு, ஏனடா அப்பா அழுகிறாய்? இதெல்லாம் நாடகங்தானே!” என்று கூற, அந்தக் கான்ஸ்ட பில் “இருங்க சார்! இருங்க சார்! என்னை அலட்டாதீர்கள்! என்ன நன்றாயிருக்கிறது!” என்று பதில் உரைத்து, காட்சியின் கடைசிவரையில் அழுது கொண்டே இருந்தானாம். காட்சியை கண்டு கண்ணீர் விட்டழும் சுகத்தினின்றும் அவன் கலைக்கப்பட இஷ்டப்படவில்லை!
ஒத்தியில் (Ooty) நாங்கள் ஆடிய நாடகத்தைப்பற்றி இன்னொரு விஷயம் எழுத விரும்புகிறேன். இங்கு ஒவ்வோர் இரவும் சுமார் 5 மணிநேரம் நாடகமாடியும் கொஞ்சமாவது எங்களுக்கு வியர்க்கவில்லை; சிரமம் என்பதே தோன்றவில்லை; ஆரம்பத்தில் எவ்வளவு உற்சாகத்துடன் இருந்தோமோ அவ்வளவு உற்சாகத்துடன் இருந்தோம். நாடக முடிவில் “கல்லார்க்கும் கற்றவர்க்கும” பாடும் பொழுது இதற்கு முக்கியக் காரணம் இவ்விடம் உஷ்ணம் என்பது சிறிதுமின்றி, குளிர்ச்சியாயிருந்ததே என்பதற்குச் சந்தேகமில்லை. இக்காரணம்தான் போலும், இங்கிலாந்து முதலிய தேசங்களில், ஆக்டர்கள் வருஷம் முழுவதும், ஒரு நாள்கூட விடாது இரவில் நாடகமாடுவதற்கு இடங்கொடுப்பது. அவர்கள், நமது தேசத்துக்கு வந்து, திருநெல்வேலி போன்ற ஜில்லாவில், மே - ஜூன் மாதத்தில் இரண்டு இராத்திரி ஒன்றாய் நடித்தால் நாம் இங்கு படும் கஷ்டம் அவர்களுக்குத் தெரியும்.
கடைசி தினம் சாரங்கதர நாடகம் ஆடினவுடன் நாடகசாலையில் வெந்நீர் கிடைக்காமல், ஆக்டர்களெல்லாம் அங்கிருந்து நாங்கள் தங்கியிருந்த பங்களாவிற்கு எங்கள் வேஷத்துடன், ஒவ்வொருவரும் ஒரு போர்வையைப் போர்த்துக்கொண்டு, நிலவு வெளிச்சத்தில் வேடிக்கையாய்ச் சந்தோஷமாய்ப் பேசிக் கொண்டு நடந்து சென்றோம். இவ்வாறு அன்று நாங்கள் சந்தோஷமுள்ள மனமுடையவர் களாயிருந்ததற்கு முக்கியக் காரணம், சபைக்கு நஷ்டமில்லாத படி, தெலுங்கு நாடகத்தினாலுண்டான நஷ்டத்தையும் நீக்கிச் செலவுக்கும் வரவுக்கும் சரியாகப் போகும்படி அன்று நல்ல தொகை வசூலானதுதான் என்பதற்குச் சந்தேகமில்லை.
மறுநாள் காலை எங்கள் சபைக்குப் பிரசிடெண்டாயிருந்த வி. கிருஷ்ணசாமி ஐயர், நாங்களிருந்த பங்களாவிற்கு வந்தார். இவர் இச்சமயம் ஒத்தியில் இருந்தும், முதல் இரண்டு நாடகங்களுக்கு ஏதோ அசந்தர்ப்பத்தால் வர முடியாமற் போயிற்று. கடைசி நாடகத்திற்கு வந்திருந்தார். தான் முன்னாளிரவு பார்த்த நாடகத்தைப்பற்றிச் சிலாகித்துக் கூற வேண்டிய இடங்களில் சிலாகித்துக் கூறி, குறையாயிருந்த இடங்களிற் குறைகளை எடுத்துக் கூறினார். இவரது சுபாவம் குறைகளை மறைக்காது, எதற்கும் அஞ்சாது எடுத்துக் கூறும் சுபாவம் என்பதை இவரைத் தெரிந்த அனைவரும் அறிவார்கள். குறையாகக் கூறிய ஒரு விஷயம் எனக்கு ஞாபகமிருக்கிறது. சாரங்கதர நாடகத்தில் நான் எழுதியபடி, சித்ராங்கியானவள், சாரங்கதரன் தன் அறைக்கு வரப் போகிறான் என்று அறிந்தவுடன், அங்கிருந்த கண்ணாடியின் எதிராகப்போய் நின்று, தன் அலங்காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு, “நான் அழகாயிருக் கிறோனா?” என்று தன்னைத் தானே கேட்டுக்கொள்ளுகிறாள். “இவ்வாறு ஒரு ஸ்திரீயும் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள மாட்டாள், இது தவறு!” என்று வி. கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் வாதித்தார். நான் இதற்கு எத்தனையோ எனக்குத் தோன்றிய நியாயங்களை எடுத்துக் கூறியும், தான் சொன்னதுதான் சரியென்று பிடிவாதமாகச் சொன்னார். அதன்மீது சர் வால்டர் ஸ்காட் (Sir Walter Scott) என்னும் கிரந்த கர்த்தா கெனில்வொர்த் (Kenilworth) என்னும் நவீனத்தில் (Novel) கதாநாயகி, இவ்வாறு சொன்னதாக எழுதியிருக்கிறார் என்று எடுத்துக் கூறினேன். அதன் பேரில் கொஞ்சம் யோசித்துவிட்டு, “நீ சொல்வது சரிதான்!” என்று ஒப்புக்கொண்டார்.
இதை நான் இங்கு எழுதியதன் காரணம், அவருடன் வாதாடி வென்றேன் என்னும் கர்வத்தினாலன்று. சிறந்த புத்திமானாயிருந்தும், உன்னத பதவியை வஹித்தவராயிருந்தும், தான் கூறியது தவறு என்று பட்டவுடன், அதை ஒப்புக்கொள்ளும்படியான சிறந்த குணம் இவரிடமிருந்தது என்பதை எனது இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே இதை இங்கு எடுத்தெழுதலுற்றேன். அதுவரையில் நாம் கூறியதை எப்படியாவது ஸ்தாபிக்கவேண்டும் என்னும் பிடிவாத குணமுடையவனாயிருந்த நான், இதன் பிறகு, இப் பெரியாருடைய இச் சிறந்த குணத்தைக் கடைப்பிடித்து நடக்கத் தீர்மானித்து, அது முதல் இதுவரையில், அதன்படி நடக்க முயன்று வருகிறேன் என்பதை என்னுடன் நெருக்கமாய்ப் பழகிய நண்பர்கள் அறிவார்களென நினைக்கிறேன். இதனால் நான் மிகவும் பயனடைந்தேன். ஆகவே இதை வாசிக்கும் என் இளைய நண்பர்களும் இதைக் கைப்பற்றி நடப்பார்களாக என்று கருதி இதை எழுதலானேன்.
எல்லாம் பேசி முடித்தான பிறகு, அவர் எங்களிடம் விடை பெற்றுத் தான் இருந்த வீட்டிற்குப் போகப் புறப்பட்ட பொழுது, பங்களாவின் கேட் (Gate) வரையில் அவரை வழி விட்டு வர அவருடன் நான் போனபொழுது, தெலுங்கு நாடகத்தினால் சபைக்கு அதிக நஷ்டம் உண்டானதென்பதைக் கேட்டறிந்த அவர், மொத்தத்தில் எப்படியிருக்குமென என்னைக் கேட்க, “எல்லாம் சரியாகி விடும்; நேற்று வந்த தொகையானது அந்த நஷ்டத்தை யெல்லாம் அடைத்துவிடும். ஒரு முப்பது நாற்பது ரூபாய்தான் குறையும் போலிருக்கிறது. அது ஒரு பெரிதல்ல” என்று பதில் உரைத்தேன். அவர் ஒன்றும் பேசாது புறப்பட்டுப் போய்விட்டார். அவர் போன ஒரு மணி நேரத்திற்கெல்லாம் அவரிடமிருந்து எங்கள் சபைக் காரியதரிசிக்கு ஒரு நிரூபம் வந்தது. அதில் ஒரு 50 ரூபாய்க்கு ஒரு செக்கை வைத்து “சபைக்கு நேரிட்ட நஷ்டத்தை அடைக்க” என்று ஆங்கிலத்தில் ஒரு துணுக்கு எழுதியிருந்தது. “தினைத்துணை நன்றி செய்யினும், பனைத் துணையாகக் கொள்வர் பயன் தெரிவார்” என்ற திருக் குறளின்படி, அந்நன்றியை நாங்கள் அனை வரும் மிகவும் பாராட்டினோம். அவர் அனுப்பிய ரூபாய் 50, அவருக்கு ஒரு பெரிதல்ல; எங்கள் சபைக்கும் அது ஒன்றும் அதிகமில்லை ; அவர் அதை உதவிய விதமும், அதன் பின் இருந்த ஹிருதயமும் எங்களைப் பூரிக்கச் செய்தது.
அவரைப்பற்றி இன்னொரு விஷயம் இங்கு எழுத வேண்டியவனாயிருக்கிறேன். இதை வாசிக்கும் எனது நண்பர்கள், அவரை ஏதோ முகஸ்துதி செய்கிறேன் என்று எண்ணாதிருக்கும்படி வேண்டுகிறேன். அனேகம் வருடங்களுக்கு முன் இறந்தவரை இப்பொழுது முகஸ்துதி செய்து நான் அடையப்போகிற பலன் என்ன? ஆயினும் அப்பெரியாருடைய அரிய பெரிய குணங்களுக்கு ஈடுபட்ட மனத்தினனாய் அவருக்கு நான் செலுத்த வேண்டிய கடமையைக் கொஞ்சம் கழிக்க முயலுகிறேன்.
காலையில் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது தான் இருக்குமிடத்தில் எங்களையெல்லாம் சாயங்காலம் டீ (Tea) சாப்பிட அழைத்தார். நாங்கள் அப்படி அழைத்ததற்காக அவருக்கு வந்தனம் செய்து,"நாங்கள் வருவதற்கில்லை ; எங்களையெல்லாம் இன்று சாயங்காலம் செக்ரடேரியட் ஆபீசில் இருக்கும் எங்கள் சினேகிதர்கள் டீ (Tea) சாப்பிடச் சாயங்காலம் அழைத்திருக்கிறார்கள்; அங்கு போவதாக ஒப்புக்கொண்டோம்.’ என்று பதில் உரைக்க, “நமது சபையை யெல்லாம் அவர்கள் வரும்படிக் கேட்டிருந்தால், நீ எனக்கேன் தெரிவிக்கவில்லை? அப்படித் தெரிவிக்காதது தவறு! நான் சபையின் பிரெசிடென்ட் என்பதை மறந்தீர்கள் போலும்!” என்று சிரித்துக்கொண்டே, எங்கள் மீது கோபித்து மொழிந்து, அன்று சாயங்காலம் பார்ட்டி (Party) க்குத் தானும் வருவதாகத் தெரிவித்து, “நீங்கள் எல்லாம் அங்கு வருமுன் நான் அங்கு போய்ச் சேரப் போகிறேன். அப்பொழுதுதான் உங்களுக்கெல்லாம் புத்தி வரும்!” என்று சொல்லி, அப்படியே அங்கு வந்து சேர்ந்தார். வந்ததுமன்றி, எல்லோருடனும் வேடிக்கையாய்ப் பேசிக்கொண்டிருந்து விட்டு, எங்களுக்கு விருந்தளித்த செக்ரடேரியேட் நண்பர்களுக்கு எங்கள் சபையின் சார்பாக வந்தனம் அளித்தார். நான் எப்பொழுதாவது, என் இளைய நண்பர்களுடன் இம்மாதிரிக் கலக்க வேண்டி வந்தால், நான் மூத்தவன், அவர்களைவிட அந்தஸ்துடையவன், அவர்களுடன் சரிசமானமாகக் கலப்பதா என்னும் துர் எண்ணம் எனக்குத் தோன்றினால், இப்பெரியார் நடத்தை என்னும் பெருந்தடி கொண்டு, அதன் மண்டையில் அது தலை யெடுக்கவொட்டாமல் போடுவது வழக்கம்; பெரியோருடன் நாம் பழகுவதனால், நாம் பெறும் முக்கியமான நலம், இத்தகைய புத்திமதிகளை அவர்கள் சொல்லாமற் சொல்வதேயாம்.
அன்று சாயங்காலம், ஒத்தியில் எங்கள் நண்பர்கள் எங்களுக்கு, அவர்களுடைய டெனிஸ் கோர்ட்டில் (Tennis court) கதிரவன் குடதிசையில் மூழ்குமுன் தன் ஒள்ளிய கிரணங்களால், மலைப் பிரதேசமெங்கும் அழகுறச் செய்யும் சாயங்காலத்தில் கொடுத்த சிற்றுண்டி உபசரணையும், நாங்கள் இரண்டு மணி நேரம் வேடிக்கையாய்ப் பேசிக் காலங்கழித்ததும், முடிவில் வி. கிருஷ்ணசாமி ஐயர், எங்கள் சபையின் சார்பாகப் பேசிய வார்த்தைகளும், என் மனத்தில் இன்னும் குடிகொண்டிருக்கின்றன. இந்த வி. கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் ‘கடின சித்தமுடையவர்’ என்று சிலர் கூறக் கேட்டிருக்கின்றேன். அக்கடினமான வார்த்தைகளுக்குப் பின் இருந்த வெண்ணெயைப் போல் இளகிய சுத்தமான ஹிருதயத்தை அவர்கள் அறியவில்லை போலும்!
எங்கள் சபை ஒத்திக்குப் போயிருந்த கதையை முடிக்கு முன், அன்றிரவு நடந்த ஒரு சிறு கதையைக் கூறுகிறேன். அன்றிரவு நாங்கள் எல்லாம் போஜனங் கொள்வதற்கு வெகு நாழிகையாய் விட்டது. நாங்கள் உடனே புறப்பட்டு மாட்டு வண்டிகளில் ஏறி (அக்காலத்தில் மோட்டார் வண்டிகள் அதிகமாய்க் கிடையாது) மேட்டுப்பாளையம் வரையில் வந்து ரெயில் ஏற வேண்டியவர்களாயிருந்தோம். அதற்காக 16 வண்டிகளோ அதிகமோ, உத்தரவு செய்திருந்தோம். எங்களையும் எங்கள் சாமான்களையும் கொண்டு போக, நாழிகையாய் விட்டது. சீக்கிரம் புறப்பட வேண்டுமென்று, வண்டிகளைக் கட்டச் சொன்னால், அத்தனை வண்டிக்காரர்களும், (எந்த மதுவிலக்குச் சங்கத்திலும் அங்கத் தினராய்ச் சேராதவர்களானபடியினால்) நன்றாய்க் குடித்து விட்டு, படுக்கையை விட்டெழுந்திருக்கவில்லை. நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்! அதட்டிப் பார்த்தோம்! ஒன்றும் பயன்படவில்லை! இதென்ன கஷ்டகாலம் என்று நாங்கள் எல்லோரும் திகைத்து நிற்கையில், எங்கள் பிரயாண ஏற்பாடுகளை யெல்லாம் பார்த்து வந்த எனது நண்பர் பி.எஸ். தமோதர முதலியார், ஒரு யுக்தி செய்தார்; அவர் சாதாரணமாக ஆங்கில உடையே அப்பொழுது அணிவது வழக்கம்; அதன் பேரில், வெள்ளைக்காரர்கள் அணியும் ஒரு தொப்பியை மாட்டிக்கொண்டு, கையில் ஒரு சவுக்கை (Riding whip) எடுத்துக் கொண்டு, அந்த வண்டிக்காரர்கள் உறங்கிக்கொண்டிருக்குமிடம் போய், வெள்ளைக்காரர்கள் பேசுவது போல் தன் குரலை மாற்றி, “ஏ! கள்தைங்கோ ! எள்ந்தி கீரைங்களா இல்லியா?” என்று கூவித் தன் சவுக்கினால் இரண்டு மூன்று பெயர் முதுகில் வைத்தார் நன்றாக! உடனே அடிபட்டவர்களெல்லாம் தங்கள் முதுகையும், கண்ணையும் துடைத்துக்கொண்டு, விரைவில் எழுந்து, ‘அரேரேரே! தொர்ரே ஒச்சினார்ரா!’ (துரை வந்து விட்டாரடா!) என்று கூவிக் கொண்டு மற்றவர்களையும் எழுப்பி ஐந்து நிமிஷத்திற்குள், மாடுகளை யெல்லாம் வண்டிகளில் பூட்டி நிறுத்தி விட்டார்கள்! அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்பதினுண் மையும், வெள்ளைக்காரத் தொப்பிக்கு இவ்வளவு மகிமை இருக்கிறதென்பதையும் அன்று கண்டேன்!
இன்னொரு சிறுகதை! மறுநாட் காலை எங்கள் 16 வண்டிகளும் வரிசையாக மேட்டுப்பாளையம் வரும் பொழுது அங்கிருந்த நாட்டுப்புறத்தார், ‘இது யாரடா இத்தனை வண்டிகளில் வருகிறது!’ என்று வியந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன், “இது யாரடா இத்தனை வண்டிகளில் வருவது?” என்று கேட்டான். அதன்மீது, எனது நண்பர் சி. ரங்கவடிவேலுடன் ஒரு வண்டியில் உறங்கிக்கொண்டிருந்த நான், இக் கேள்விக்கு என்ன பதில் கிடைக்கிறது கேட்போம் என்று, தலையை நிமிர்த்திக் கேட்டேன். அக் கேள்விக்கு மற்றொருவன், “யாரோ, மகாராஜாவின் அரண்மனையைச் சேர்ந்தவர்களாயிருக்க வேண்டும்!” என்று பதில் உரைத்தான். உடனே என் மனமெனும் தர்மாமிடர் (Thermometer) மூன்று டிகிரி (degree) மேலே போச்சுது! உடனே பக்கத்திலிருந்த இன்னொருவன், “இல்லையடா! இவர்கள் யாரோ கூத்தாடிகள்!” என்று சொன்னான். உடனே என் தர்மாமிடர், பத்து டிகிரி, திடீரென்று இறங்கி விட்டது.
இந்த 1906ஆம் வருஷத்தில்தான் எங்கள் சபையார் சாயங்காலத்தில் நாடகமாடுவதை ஆரம்பித்தனர். இதற்கு முன்பெல்லாம், இரவில் 9 மணிக்கு ஆரம்பித்து, மறு நாட்காலை சுமார் இரண்டு மணிவரையில் ஆடுவது வழக்கமாயிருந்தது. இராத்திரி ஆடுவதனால் ஆக்டர்களுக்கும் கஷ்டம்; நாடகம் பார்க்க வரும் ஜனங்களுக்கும் கஷ்டமாயிருந்தது. ஆக்டர்கள் 9 மணிக்கு நாடகம் ஆரம்பிக்க வேண்டுமென்றால், 5 மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு வேஷம் பூண ஆரம்பித்து, 9 மணிக்கு மேல் 4 அல்லது 5 மணி சாவகாசம் மேடையின் மீது ஆடிவிட்டு, பிறகு வேஷத்தைக் களைய ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ள வேண்டிவந்தது. அன்றியும் 3 மணிக்கு வீட்டிற்குப்போனால் சரியாகக் தூக்கம் வருவதில்லை . இப்படி விழிப்பதனால், மறுநாள் எல்லாம் உடம்பு மிகவும் ஓய்ச்சலாயிருக்கும்; நாடகம் பார்க்க வருபவர்களுக்கு இவ்வளவு கஷ்டமில்லா விட்டாலும், அவர்களும் இரவில் நித்திரை நீக்கவேண்டி யவர்களாயிருக்கிறார்கள்; இரண்டு மணி வரையில் நாடகம் பார்த்து விட்டு வீட்டிற்குப் போனால் அவர்களுக்கும் உடனே தூக்கம் வருவது கடினம். இத்தகைய கஷ்டங்களை யெல்லாம் கருதி இதற்கு ஏதாவது யுக்தி செய்ய வேண்டுமென்று ஸ்ரீனிவாச ஐயங்காரும் நானும் பலமுறை யோசித்ததுண்டு. இரவு இரண்டு மூன்று மணி வரையில் நடக்கும் நாடகங்களைக் குறுக்கி ஒருமணிக்கெல்லாம் முடிக்கும்படி பிரயத்தனம் செய்து பார்த்தோம்; அதிலும் பயன்படவில்லை; சாயங்காலங்களில், இங்கிலாந்து முதலிய தேசங்களில் மேடினீ (Matinee) நாடகங்கள் நடைபெறுவ தாகக் கேள்விப்பட்டிருந்தோம்; ஆயினும் அதன்படி இந்தியாவில் வைத்துக் கொண்டால், ஜனங்கள் வருவார்களோ என்பது பெரும் சந்தேகமாயிருந்தது. இப்படியிருக்கும் தருவாயில், பாரசீகக் கம்பெனியார் ஞாயிற்றுக் கிழமைகளில் சாயங்காலத்தில் சில நாடகங்கள் ஆடினார்கள். அதற்குச் சாதாரணமாக ஜனங்கள் வரத் தலைப்பட்டதைக் கண்டோம். அவர்களுக்குச் சாயங்காலங்களில் வரும் ஜனங்கள், நமக்கு ஏன் வரக்கூடாது என்று தைரியமடைந்த வர்களாய், இவ்வருஷம் ஒரு நாடகம் சாயங்காலத்தில் ஆடிப் பார்ப்போம் என்று யோசித்தோம். இதை நாங்கள் எங்கள் நிர்வாக சபையில் முதலில் பிரேரேபணை செய்த பொழுது, அவர்களில் பெரும் பாலோர் ஆட்சேபித்தனர். மெல்ல அவர்களுடன் பேசி, ஒரு முறை முயன்று பார்ப்போம், சரிவராவிட்டால் விட்டு விடுவோம் என்று சொல்லி, இவ்வருஷம் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி எனது “காதலர் கண்கள்” என்னும் நாடகத்தை, 6 மணி முதல் 9 மணி வரையில் ஆடுவதாகப் பிரசுரம் செய்து அப்படியே நடத்தினோம். இப் புது வழக்கம் நாடகபிமானிகளுக்கு முதலில் ஏதோ ஒரு மாதிரியாகத் தோன்றியபோதிலும், வந்தவர்களெல்லாம் இதனாலுண்டான சவுகரியத்தைக் கண்டு, இதுவே நல்ல மாதிரி என்று ஒப்புக்கொண்டனர். முன்பு ஆட்சேபித்த ஆக்டர்களும், இதனால், தங்களுக் குண்டான சிரமக் குறைவை அனுபவித்தவர்களாய், இப்புதிய வழக்கத்திற்கு இணங்கினர். இம்மாதிரி நாங்கள் இரண்டு மூன்று நாடகங்கள் சாயங்காலத்தில் நடத்தின பிறகு இராக்காலத்தில் வரும் ஜனங்களைவிட சாயங்கால நாடகங்களுக்கு ஜனங்கள் அதிகமாய் வர ஆரம்பித்தனர்! இதற்கு முக்கியக் காரண்ம், எங்கள் சபையின் நாடகங்களுக்கு வருபவர்கள் கற்றறிந்த உத்யோகஸ்தர்கள் முதலியோரே. பகலெல்லாம் வேலை செய்து விட்டு, இராத்திரி ஒன்பது பத்து மணிக்கு மேல் தெருக்கூத்துப் பார்க்கப் போய் அக்கூத்தை விடிய விடியக் காணும் பாமர ஜனங்களல்ல. ஆகவே, உத்தியோகஸ்தர்கள் முதலியோர், சாயங்கால ஆட்டத்தை ஒன்பது மணி வரையில் பார்த்துவிட்டு, வீட்டிற்குப் போய் 10 மணிக்கெல்லாம் சாப்பிட்டு விட்டு, உறங்குவதனாலுண்டான சௌகர்யத்தை அறிந்தவர்கள், பிறகு இராத்திரி நாடகங்களென்றால் வெறுக்க ஆரம்பித்தனர். இதன் பிறகு சீக்கிரத்தில் நாங்கள் இரவு நாடகமென்பதையே அடியுடன் விட்டு, இத்தனை வருஷ காலமாக, சாயங்காலத்தில்தான் ஆடி வருகிறோம். இதற்காக முக்கோடி ஏகாதசி அல்லது சிவராத்திரியில் நாடகம் வைத்துக்கொண்டால் மாத்திரம், இராத்திரியில் இப்பொழுது நாடகமாடுகிறோம். சென்னையிலுள்ள கற்றறிந்த நாடகாபி மானிகளுக்கு இவ்வழக்கத்தை நாங்கள் சகஜப்படுத்திய போதிலும், வெளியூர்களில் நாங்கள் போய் ஆடும்பொழுது, இந்த ஜபம் அங்கு சாயவில்லை! அங்கெல்லாம், “சாயங் காலத்தில் நாடகமாடுவதாவது! நாடகம் என்றால் இராத்திரியில்தான் ஆடவேண்டும்!” என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். அவர்களும் மெல்ல மெல்ல, நாளாவர்த்தத்தில் இவ்வழியைக் கடைப்பிடிப்பார்களென்று நம்புகிறேன்.
இவ்வருஷம் நான் “சபாபதி” என்னும் ஒரு சிறு நாடகத்தை எழுதினேன். இதை நான் எழுத நேர்ந்த விதம் என் நண்பர்களுக்குக் கொஞ்சம் நகைப்பை உண்டாக்கு மாதலால், அதை இங்கெழுதுகிறேன். எனது பால்ய நண்பருக்கு, “சபாபதி” என்று கோச்மான் இருந்தான். அவனை அவர் கூப்பிடும் போதெல்லாம், “சபாபதி” என்று அந்த ப என்னும் அட்சரத்தை அதிகமாய்த் தொனித்துக் கூப்பிடுவார். “சபாபதி” என்று, அவரை ஏளனம் செய்யும் பொருட்டு, நானும் அவரைப்போல் “சப்பாபதி” என்று கூப்பிடுவேன். நான் இவ்வாறு அழைக்கும் போதெல்லாம், அவர் வீட்டிலிருப்பவர்களெல்லாம், குழந்தைகள் வேலைக் காரர்கள் உட்பட, நகைப்பார்கள்; எனது நண்பரும் சிரிப்பார். ஆகட்டும், இப்பெயர் வைத்து ஒரு நாடகம். எழுதுகிறேன் பார், என்று சொல்லி சபாபதி என்ற ஒரு வேலைக் காரனுடைய நாடகத்தை எழுதத் தலைப்பட்டேன். அன்றியும் எனது நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரிடம் நரசிம்மன் என்ற ஒரு ஐயங்கார் பிள்ளை வேலையாளாக இருந்தான். அவன் வாஸ்தவத்தில் கொஞ்சம் புத்திசாலியாக இருந்த போதிலும், மேற்பார்வைக்கு மட்டியைப் போல் தோற்றுவான். (இவன் இன்னும் உயிருடன் இருக்கிறானென நம்புகிறேன். அவனைப் பற்றி இவ்வாறு நான் எழுதுவதற்காக அவன் மன்னிப்பைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.) நானும் எனது நண்பரும் சீவரம் முதலிய ஊர்களுக்குப் போகும் போதெல்லாம் இவனை அவர். அழைத்துக் கொண்டு வருவார். இவனது செய்கைகள் எங்களுக்குப் பன்முறை நகைப்பை விளைவித்திருக்கிறது. இவனது செய்கைகள்தான், நான் எழுதிய சபாபதி நாடகத்தில், வேலைக்கார சபாபதியின் பாத்திரத்திற்கு அஸ்திவாரமாயது. அன்றியும் செர்வான்டிஸ் (Cervantes) என்னும் ஸ்பெயின் தேசத்து ஆசிரியர் எழுதிய டான் குவிக்சோட் (Don Quixote) என்னும் கதையில், கதாநாயகனுக்கு சான்கோ பான்சா (Sancho Panza) என்னும் விகடனான ஒரு வேஷக்காரனைப் பற்றி இதை வாசிக்கும் எனது நண்பர்களில் பலர் படித்திருக்கலாம்.
இதுபோலவே ஓர் ஆங்கில நவீனத்தில் ஹான்டி ஆன்டி என்னும் மூடவேலையாளைப் பற்றியும் எனது நண்பர்கள் படித்திருக்கலாம். இவைகளையெல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து, “சபாபதி” வேலையாளைச் சிருஷ்டித்தேன். மேலும், நகைப்பு உண்டாக்கத்தக்க, வேலைக்காரர்கள் செய்யும் தப்பிதங்களை யெல்லாம் கவனித்து, இந்தச் ‘சபாபதி’யின் தலையில் சுமத்தினேன். இவ்வாறே படிப்பில்லாத வாலிபர்கள் செய்யும் குற்றங்களையும் குறும்புகளையும் சேர்த்து சபாபதி முதலியாரை உண்டாக்கினேன். சில முதலியார் பிள்ளைகள் சரியாகப் படிக்காதபடி, தங்கள் வீட்டில் தாய் தந்தையர்களை ஏமாற்றும் விதத்தையும் கவனித்து, இதையெல்லாம் சேர்த்து, ‘சபாபதி’ என்னும் ஒரு சிறு பிரஹசனமாக (Farce) எழுதினேன். இதைப்பற்றி நான் இவ்வளவு விவரமாக எழுதுவதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், இந்தப் பிரஹசனத்தை வரவேற்று எனது நண்பர்களில் அநேகர், ‘இந்தச் சபாபதியை எங்கே பிடித்தாய்?’ என்று என்னைப் பன்முறை கேட்டிருக்கின்றனர். அன்றியும் இச்சிறு நாடகத்தைப் பார்த்துச் சிரித்தவர்களெல்லாம், யாராவது வேலைக்காரன் தவறிழைத்தால் இவன் என்ன சபாபதியோ என்றும், இங்கிலீஷ் பேசுவதில் யாராவது தவறாகப் பேசினால், இவர் என்ன சபாபதி முதலியாரோ என்றும் கேட்பது சகஜமாய்விட்டது. தமிழ்நாட்டில், கற்றறிந்த இல்லங்களில் சபாபதியை அறியாதார் இல்லையென்று நான் ஒருவாறு கூறலாம். இதுதான் நான் முதன் முதல் எழுதிய பிரஹசனம். இது எல்லோருக்கும் விடா நகைப்பைத் தந்து, களிக்கச் செய்தமையால், சபாபதி இரண்டாம் பாகமென்றும், சபாபதி மூன்றாம் பாகமென்றும் பிறகு எழுதினேன். தற்காலம் நான்காம் பாகமென்றும் அச்சிட்டிருக்கிறேன். இந்தச் சபாபதி, ஒரு சிறு பிரஹசனமாயிருந்த போதிலும், 120 முறைக்குமேல், என் அனுமதியின்மீது ஆடப்பட்டிருக்கிறது; என் அனுமதியினின்றியும் சில முறை ஆட்டப்பட்டிருக்க வேண்டுமென்பதற்குச் சந்தேகமில்லை.
இந்தச் சபாபதி நாடகத்தில் வேலைக்கார சபாபதியின் பாகத்தை எனது பழைய நண்பர் தாமோதர முதலியார்தான் இந்திய நாடக மேடையை விட்டு நீங்குமளவும், மிகவும் விமரிசையாக ஆடி வந்தார். இந்தப் பாகத்தை ஆடுவதில் முக்கியமான . கஷ்டம் என்னவென்றால், முகத்தில் கொஞ்சமாவது புத்தியிருப்பதாகப் பிறர் அறியக் கூடாததேயாம்; கொஞ்சமாவது புத்தியுடையவன்போல் நடித்தாலும் இப்பாத்திரம் ரசாபாசமாகும். தாமோதர முதலியாருக்குப் பிறகு நண்பர் சி. பாலசுந்தர முதலியார் இதை நன்றாக நடித்து வந்தார். சபாபதி முதலியாரின் பாகத்தை அநேக வருஷங்களாக நான் நடித்து வருகிறேன். நான் எனது சிற்றறிவைக்கொண்டு சிருஷ்டித்த அநேக பாத்திரங்களில், மனோஹரனைப் போல் சபாபதி பாத்திரமும் நெடுநாள் ஜீவித்திருக்குமென நினைக்கிறேன்.
பதினெட்டாவது அத்தியாயம்
1907ஆம் வருஷத்தின் முதலில், இலங்கையிலிருந்து ஹானரபில், பி. ராமநாதம் என்பவர் சென்னைக்கு வர அவரது வரவேற்கையாக விக்டோரியா ஹாலில், ‘அமலாதித்யன்’ நாடகத்திலிருந்து சில காட்சிகளும், ‘விரும்பிய விதமே’ என்பதினின்றும் சில காட்சிகளும், சகுந்தலை நாடகத்தைத் தோற்றக் காட்சிகளாகவும் ஆடினோம். தமிழில் மிகுந்த விற்பத்தியுடைய அச்சீமான் நாடகத்தின் முடிவில், மேடையின் பேரில் வந்து, ஆக்டர்களையெல்லாம் மிகவும் புகழ்ந்து, எங்கள் சபையை இலங்கைக்கு வரும்படியாகக் கோரினார்.
அன்றியும் இவ்வருஷ முதலில் சென்னையின் பழைய கவர்னராகிய லார்ட் வென்லாக் என்பவர், சென்னைக்கு மறுபடியும் வர, சென்னைவாசிகள் ராவ்பகதூர் அனந்தாச் சார்லு தோட்டத்தில் அவருக்கு ஒரு உபசார விருந்தளிக்க, அச்சமயம் அக்கமிட்டியார் வேண்டுகோளின்படி எங்கள் சபையார், ‘விரும்பிய விதமே’ நாடகத்திலிருந்து சில காட்சிகளையாடி, நந்தனார் சரித்திரத்தைத் தோற்றக் காட்சிகளாகக் காட்டினோம். நாடக முடிவில், எங்கள் சபையின் பேட்ரன் (Patron) ஆகவிருந்த சர். சுப்பிரமணிய ஐயர் அவர்கள், ஆக்டர்களாகிய எங்களையெல்லாம் இன்னின்னாரென லார்ட் வென்லாக்குக்குத் தெரியப்படுத்தினார். அச்சமயம் என்னைப் பற்றியும், ஷேக்ஸ்பியர் நாடகங்களை நான் தமிழில் அமைத்ததைப் பற்றியும் அவரிடம் புகழ்ந்து பேசினார். அப்போது லார்ட் வென்லாக் குடன் நான் சம்பாஷித்தபொழுது நடந்த ஒரு சிறு விஷயம் எனக்கு ஞாபகமிருக்கிறது; எங்கள் சபையைப் பற்றிப் பலவிஷயங்கள் கேட்டு வரும்பொழுது, முடிவில், ‘உங்கள் சபையில் எத்தனை அங்கத்தினர் இருக்கிறார்கள்?’ என்று (இங்கிலீஷில்) கேட்டார். அதற்கு நான் ‘முன்னூறு பெயரிருக்கிறோம்!’ என்று பதில் சொல்ல; ஒரு நாடக சபைக்கு இத்தனை அங்கத்தினரா?’ என்று ஆச்சர்யப் பட்டவராய், “முன்னூறு மெம்பர்களா? முன்னூறு மெம்பர்களா?’ என்று பன்னிக் கேட்டார். சில வருஷங்களுக்குப் பின் எங்கள் சபையில் 2100 மெம்பர்களிலிருந்தபொழுது, அதை அறிந்திருப்பாராயின் இவர் என்ன சொல்லியிருப்பாரோ?
இவ்வருஷக் கடைசியில், சென்னைக்கு அச்சமயம் விஜயம் செய்த மைசூர் மகாராஜா அவர்கள் முன்னிலையில் எங்கள் சபையார், தெலுங்கில் ஹரிச்சந்திர நாடகத்தை நடத்தினார்கள்.
இவ்வருஷம் நான் ஒரு நூதன நாடகமும் எழுதியதாக ஞாபகமில்லை . ஆயினும் எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் ‘சபலை’ என்னும் ஒரு நாடகத்தை எழுதினார். இது ஆங்கிலத்தில் ஹென்ரி உட் (Henry Wood) துரைசானி அவர்கள் ஈஸ்ட்லின் (East Lynne) என்னும் பெயர் வைத்து எழுதிய நவீனத்தின் தமிழ் நாடக அமைப்பாகும். இது எங்கள் சபையோரால் இவ்வருஷம் ஆடப்பட்டது. கிரந்தகர்த்தாவாகிய கிருஷ்ணசாமி ஐயர், நாடகத் தலைவியாகிய சபலை வேடம் பூண்டு, மிகவும் நன்றாய் நடித்தார். இது ஒரு துக்ககரமான நாடகம்; இதில் வந்திருந்தவர்களின் மனத்தையெல்லாம் உருக்கும்படி மிகவும் விமரிசையாக நடித்தார். இவர் நடித்திருக்கும் பெண் வேடங்களில் இது ஒரு முக்கியமானதாகும். இம்முறை இந் நாடகத்தில், எனதாருயிர் நண்பரும் சி. ரங்கவடிவேலுவும், நானும் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆயினும் இதே நாடகம் பிறகு ஆடியபொழுது, ரங்கவடிவேலு, வேலைக்காரியாகிய விஜயையாக நடித்திருக்கிறார். நானும் பன்முறை இந்நாடகத்தில் சுவர்ணகிரி ஜமீன்தாராக நடித்திருக்கிறேன்.
இவ் வருஷக் கடைசியில் எங்கள் சபையின் மற்றொரு அங்கத்தினராகிய சரசலோசன செட்டியார் என்பவர் எழுதிய “சரசாங்கி” என்னும் நாடகமும் ஆடப்பட்டது. இது ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி ஆங்கிலத்தில் எழுதிய சிம்பலின் (Cymbeline) என்னும் நாடகத்தைத் தழுவித் தமிழில் எழுதப்பட்டது. இந்நூலாசிரியர் கதையைக் கொஞ்சம் மாற்றியும் எழுதியுள்ளார்; இவர் தமிழ் நன்றாகப் படித்தவர்; கவனம் செய்யும் சக்தியும் இவருக்குண்டு. இவர் இரண்டொரு வருஷத்திற்குள்ளாக மிகவும் சிறு வயதில் மரித்தது எல்லோருக்கும் விசனிக்கத்தக்க விஷயம். 1908ஆம் வருஷத்தில், சென்ற வருஷம் அ. கிருஷ்ண சாமி ஐயர் தமிழ் சப் கண்டக்டராகயிருந்தது மாறி, சி. ரங்கவடிவேலு தமிழ் சப் கண்டக்டராக நியமிக்கப்பட்டார். இவ்வருஷத்தில் நடந்தேறிய பல விஷயங்களை நான் குறிக்க வேண்டியவனாயிருக்கிறேன்.
இவ் வருஷம் எங்கள் சபையின் நூறாவது நாடகம் நடத்தப்பட்டது. இந்த நூறாவது நாடகம் நடத்த 17 வருஷங்கள் பிடித்தன. நூறாவது நாடகமாக ‘அமலாதித்யன்’ நாடகத்தை நடத்தினோம். அதனால் வந்த மொத்த வரும்படி 652 ரூபாயை விக்டோரியா பப்ளிக் ஹால் என்கிற பெயரை உடைய இடத்தில் விக்டோரியா மகாராணியின் படமில்லாதிருந்த குறையைத் தீர்க்கச் செலவழித்து அப் படத்தை ஹாலில் ஸ்தாபித்தோம். இவ் வருஷம் என்னால் எழுதப்பட்ட இரண்டு புதிய தமிழ் நாடகங்கள் ஆடப்பட்டன. முதலாவது ‘சிம்ஹௗ நாதன்’ என்பதாம். இது ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி ஆங்கிலத்தில் சிம்பலின் எனும் பெயர் வைத்து எழுதிய நாடகத்தின் தமிழ் அமைப்பாம். இதற்கு முன் வருஷம் இக் கதையை “சரசாங்கி” என்னும் பெயர் வைத்து நாடக ரூபமாய் எழுதினதை எங்கள் சபையார் ஆடினபொழுது, ஷேக்ஸ்பியர் மகாகவி எழுதியதை மிகவும் மாற்றி எழுதியது என் மனத்திற்குப் பிடிக்கவில்லை. சாதாரணக் கதைகளை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி நாடக ரூபமாய் எழுதி விடலாம்; பெரியோர்கள் கையாண்ட கதைகளை அவ்வாறு மாற்றுவது உசிதமன்று என்பது என் துணிபு. என்னாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவும், அக்கதையில் தான் கதாநாயகியின் பாகத்தை ஆட விரும்புவதாகத் தெரிவிக்கவே, சரிதான் என்று ஒப்புக்கொண்டு இதை விரைவில் எழுதி முடித்தேன். இந்நாடகமானது இவ்வருஷம் எங்கள் சபையோரால் ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதி ஆடப்பட்டது. இதில் எனதாருயிர் நண்பர், கதாநாயகியாகிய மோகினி (Imogen) வேடம் பூண்டனர். அதன்பேரில் மோகினியின் கணவனாகிய பாசதாமன் (Posthumus) வேடம் நான் பூண நேரிட்டது. இப் பாசதாமன் பாத்திரம் முக்கியமானதா யில்லாவிட்டாலும், எனது நண்பர் மற்றெவருடனும் நாடக மேடையில் ஆடமாட்டேன் என்கிற கொள்கையுடைய இதை நான் எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இக்கொள்கையினின்றும் எனதாருயிர் நண்பர் எங்கள் சபையைச் சேர்ந்த 1895ஆம் வருடம் முதல் 1923ஆம் வருஷம் அவர் தேகவியோகமான வரையில் மாறவில்லை என்று எனது நண்பர்கள் அனைவரும் அறிந்த விஷயமே. இந்நாடகத்தில் மோகினியின் சகோதரர்களாக, கிரிதரன், ஆர்வராகன் என்னும் இரண்டு பாத்திரங்கள் எங்கள் சபையைப் புதிதாய்ச் சேர்ந்த டி.சி.வடிவேலு நாயகரும், ம. ராமகிருஷ்ண ஐயரும் எடுத்துக்கொண்டு மிகவும் நன்றாய் நடித்தார்கள். இவர்களிருவரையும் பற்றி இங்குச் சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன். இவர்கள் இருவரும் பால்ய சினேகிதர்கள். இருவரும் இதற்கு முன்பாக ஏதோ ஒரு சபையில் கொஞ்சம் ஆடிப் பழகினவர்கள். இருவரும் எங்கள் சபையில் ஒன்றாய்ச் சேர்ந்தார்கள். தற்காலம் ராமகிருஷ்ண ஐயர் சற்றுப் பருமனாக இருந்தபோதிலும், அக்காலத்தில் வடிவேலு நாயகரைப் போலவே ஒல்லியாயிருந்தார். இவர்களிருவரும் ஏறக்குறைய ரங்கவடிவேலுவின் உயரமிருந்தபடியால், இம்மூவரும், அண்ணன், தம்பி, தங்கையாக நடித்தது அழகாயிருந்தது. இவர்களிருவரும் இந்த ஆண் வேடங்களில் நன்றாய் நடித்த போதிலும் இவர்கள் ஸ்திரீவேடங்களுக்கே ஏற்றவர்கள் என்று கண்டவனாய், பெரும்பாலும் இவர்களுக்கு ஸ்திரீ வேடமே கொடுத்து வந்தேன். இவர்களிருரிடமும் சில முக்கியமான நற்குணங்கள் இருந்தன. இருவரும் எந்த வேஷத்தை எடுத்துக்கொள்ளச் சொன்ன போதிலும், மனம் கோணாது எடுத்துக்கொள்வார்கள்; அதுதான் வேண்டும், இதுதான் வேண்டும் என்று கண்டக்டர்களுக்குச் சிரமம் கொடுப்பதில்லை; இருவர்களும் தங்கள் பாடங்களைச் சரியாகச் சடுதியில் படித்து விடுவார்கள்; இருவருக்கும் நல்ல ஞாபகசக்தியுண்டு; நாடக மேடையின்மீது கைசரக்கு அதிகமாக உபயோகிக்க மாட்டார்கள்; இது ஆக்டர்களுக் குரிய ஒரு முக்கியமான குணமாம். அன்றியும் இவ்விருவர் களும், ஒத்திகைகளுக்குச் சரியாக வந்து தங்கள் பாடங்களை ஒப்புவிப்பார்கள். இத்தனைப் பொருத்தங்கள் இவ்விரு வருக்கும் இருந்த போதிலும், சில - வித்தியாசங்களும் இருந்தன. அவற்றுள் முக்கியமானது, வடிவேலு நாயகர் நன்றாய்ப் பாடுவார்; ராமகிருஷ்ண ஐயருக்கும் சங்கீதத்திற்கும், எயிரோபிளேனி (aeroplane) னாலும் ஒரு நாளில் கடக்கக் கூடாத தூரம்! ராமகிருஷ்ண ஐயர் சிவப்பாயிருப்பார்; வடிவேலு நாயகர் கருநிறமுடையவர். கருநிறமுடையவராயினும், ஸ்திரீ வேஷம் தரித்தால் அழகாய்த் தோற்றுவார்.
வடிவேலு நாயகர், அ. கிருஷ்ணசாமி ஐயர் கொஞ்சம் வயோதிகரான பிறகு, அவர் ஆடிவந்த பாகங்களில் அநேகம் ஆடியிருக்கிறார். லீலாவதி, சந்தியாவளி, சௌமாலினி, ரத்னாங்கி முதலிய முக்கியமான ஸ்திரீ வேடங்களில், அவருக்குப் பிறகு, மிகவும் நன்றாய் நடித்துப் பெயரெடுத்திருக்கிறார். தற்காலம் லீலாவதி வேஷத்தில் இவருக்கு நிகரில்லையென்றே நான் கூறவேண்டும். கிருஷ்ணசாமி ஐயரைப்போல் அவ்வளவு திவ்யமான சாரீரமுடையவராயில்லா விட்டாலும், குறைவில்லாச் சாதகத்தினால் தன் குரலைச் சரிப்படுத்தி, சபையோர் மெச்சும்படியாகப் பாடுபவர். மேற்குறித்த நாடகப் பாத்திரங்களன்றி, எனது மனோஹரன் நாடகத்தில் இவருக்குச் சமானமாக வசந்தசேனையாக யாரும் நடித்ததிலர் என்று நான் உறுதியாய்க்கூறக் கூடும். அன்றியும் சோக பாகங்களில், கிருஷ்ணசாமி ஐயருக்குப் பிறகு, இவர்தான் தற்காலம் சிறந்த ஆக்டர் என்று சொல்ல வேண்டும். தற்காலம் ஹரிச்சந்திர நாடகம் எங்கள் சபையில் போடும்போதெல்லாம் இவர்தான் சந்திரமதியாக வெகு விமரிசையாக நடித்து வருகிறார். அன்றியும் கிருஷ்ணசாமி ஐயரைப் போல் தெலுங்கு நாடகங்களிலும் சிலவற்றுள் இவர் முக்கிய ஸ்திரீ வேஷம் பூண்டிருக்கிறார். மேலும் இவரிடமுள்ள இன்னொரு முக்கியமான சிறப்பு. என்னவென்றால், அழகிய ராஜஸ் திரீகள் வேடம் பூணுவதை விட்டுச் சாதாரண ஸ்திரீகளின் வேஷம் பூணுவதிலும் இவர் மிகவும் சமர்த்தர். சிறுத் தொண்டர் நாடகத்தில் சந்தன நங்கையாகவும், புத்த சரித்திரத்தில் கிருசகௌதமியாகவும், சபாபதியில் சபாபதி முதலியாரின் தாயாராகவும், இன்னும் இப்படிப்பட்ட பல வேடங்களில் பெயர் பெற்றிருக்கிறார். எந்த வேடத்தில் வந்தாலும் சரிகைப் புடவையும், ரவை அட்டிகையும் கட்டிக்கொள்ள வேண்டுமென்று விரும்பும் சில ஆக்டர்களைப் போலல்லாமல், அந்தந்த வேஷத்திற்குத் தக்கபடியே ஆடையாபரணங்களை அணிவார். தெற்கத்திய ஸ்திரீயாக வந்தாலும், இடைச்சியாக வந்தாலும் தாய்க்கிழ வியாக வந்தாலும், கிறிஸ்தவப் பெண்ணாக வந்தாலும் தத்ரூபமாயிருக்கும்.
இவர் தமிழ் நன்றாய்க் கற்றுணர்ந்தவர்; தமிழில் வள்ளி மணம் என்கிற ஒரு நாடகத்தையும் எழுதியிருக்கிறார். அது எங்கள் சபையோரால் ஒரு முறை ஆடவும் பட்டிருக்கிறது. அன்றியும் தமிழ்ப் பாட்டுகள் எழுதுவதில் மிகவும் வல்லமை வாய்ந்தவர். தனக்கு வேண்டிய வர்ணமெட்டுகளிலெல்லாம் தானாகப் பாட்டுகள் கட்டிக்கொள்வார்; பிறருக்கும் கட்டிக் கொடுப்பார்.
இவரது நண்பராகிய ராமகிருஷ்ண ஐயர் சில சமயங்களில் வசந்தசேனை, ரத்னாவளி முதலிய உயர்குல ஸ்திரீ வேடங்கள் தரித்தபோதிலும், இவர் முக்கியமாக நாடக மேடையில் பெயர் பெற்றது “சில்லர” வேஷங்கள் என்று சொல்லப்பட்ட தாழ்குலத்து ஸ்திரீ வேடங்களிலேயாம். வடிவேலு நாயகரைப் போலவே இவரும் இப்படிப்பட்ட வேஷங்கள் தரிக்கும்பொழுது, அவ் வேஷங்களுக்குத் தக்கபடியே ஆடை ஆபரணங்கள் அணிவார். இவர் வண்ணாத்தியாக வேடம் பூண்டால், அச்சம் வண்ணாத்தியைப் போலவே நடிப்பார்; ஆதிதிராவிட ஸ்திரீயாக வேடம் பூண்டால் எல்லோரும் ஆதி திராவிட மாதுதான் என்று சொல்வார்கள்; குயத்தியாக வேடம் பூண்டால், வாஸ்தவமாகிய ஸ்திரீகளுக்கும் இவருக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினமாம். எந்த வேடம் பூண்டாலும் அதற்கிசைய நடிப்பதுதான் மேன்மை - என்று அர்த்தம் கொள்ளும்படியாக ஒரு ஆங்கிலக் கவி எழுதியிருக்கிறார். அதற்கிசைய நடிப்பவர் இவராவர். ‘பொன் விலங்குகள்’ என்னும் எனது நாடகத்தில் மங்கைத் தாயாகவும், இடைச்சுவர் இருபுறமும் என்னும் தமிழ் நாடகத்தில் அம்மாயி என்னும் வேலைக்காரியாகவும் இவர் நடித்தது சபையோரால் மெச்சப்பட்டதை நான் மறக்கற்பாலதன்று. இவ்வாறு தாழ்குல ஸ்திரீகள் வேஷங்களில் பெயர் பெற்றதும், அரிச்சந்திர விலாசத்தில் காலகண்டியாகவோ அல்லது நந்தனார் சரித்திரத்தில் வேதியர் மனைவியாகவேர், பிராம்மண ஸ்திரீயாக வரும் பொழுது அசல் பிராமண ஸ்திரீயைப்போலவே இருப்பார். இது நாடக மேடையில் ஒரு மிகவும் மெச்சத்தக்க குணமாம்.
இவரைப்பற்றி இன்னொரு விஷயம் இங்கு எழுத விரும்புகிறேன். இவர் என்னிடம், “என்ன வாத்தியார்! எப்பொழுது பார்த்தாலும், மங்கைத்தாய் வேஷமும், அலமேலு வேஷமும்தான் எனக்குக் கொடுக்கிறீர்கள்? பெரிய நாடகப் பாத்திரமாக நடிக்கவேண்டுமென்று எனக்கு ஒரு விருப்பமிருக்கிறது. ஏதாவது ஒன்றைக் கொடுத்து, என்னைப் பாருங்கள்!” என்று பன்முறை கேட்டிருந்தார். அதன்மீது ஒரு முறை மனோஹரன் நாடகம் எங்கள் சபையார் ஆடத் தீர்மானித்திருந்தபொழுது இவருக்குப் பத்மாவதி பாத்திரம் கொடுத்தேன். மற்ற ஆக்டர்களெல்லாம் இவரால் பத்மாவதி சரியாக ஆட முடியாதென்று கூறினர்; ஆயினும் பார்ப்போம் என்று, என்னாலியன்ற அளவு அவருக்கு அப்பாத்திரத்தை இப்படி இப்படி ஆட வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தேன்; அவரும் மிகுந்த சிரத்தையெடுத்துக் கொண்டு கற்று வந்தார். இவருக்கோ கிருஷ்ணசாமி ஐயரைப் போல் பாடத் தெரியாது; பத்மநாபராவைப் போல் கம்பீரமான உருவமும் கிடையாது; மிகவும் குட்டையாக உருவம் உடையவர். இப்படி இருந்தும் நாடக தினம், பத்மாவதியாக நடித்தபொழுது முன்பு ஏளனம் செய்த அநேகர், இவ்வளவு நன்றாக நடிப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை என்று ஒப்புக்கொண்டனர். எனக்கும் இவர் என்னுடன் நடித்தது திருப்திகரமாயிருந்தது. இதை இவ்விடம் ஏன் எடுத்துக் கூறுகிறேன் என்றால், நம்மால் அசாத்தியமான காரியமான போதிலும், மனமார முயற்சி செய்தால் அதன் பலன் நமக்குக் கிட்டாமற் போகாது என்பதுதாம்; இதைப்பற்றித் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் கூறியதை எனது நண்பர்கள் கவனிப்பார்களாக.
அன்றியும் இவ்வருஷம் நாங்கள் நடத்திய இந்தச் சிம்ஹௗநாதன் நாடகத்தில் எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில், டி. வி. கோபாலசாமி முதலியார் என்பார் முதன் முறை வேடம் தரித்தனர். இவர் தற்காலம் சென்னை கவர்ன்மெண்ட் மந்திரிகளில் ஒருவராயிருக்கும் ஹானரபில் ராஜன் என்பவரின் மாமனார்; எனக்கு இது முதல் தன் ஆயுசுபர்யந்தம் அத்யந்த நண்பராயிருந்தவர். இவர் தான் நாடக மேடையில் வர வேண்டுமென்று இச்சையிருப்பதாக எனக்குத் தெரிவிக்க, அவர் உருவத்திற்குத் தக்க வேடம் கொடுக்க வேண்டுமென்று யோசித்தவனாய், மோகினி, ஆர்வராகன், கிரிதரன், இவர்களுடைய வளர்ப்புத் தந்தை யாகிய பாலராயன் (Balarius) பாத்திரம் இவருக்குக் கொடுத்தேன். இவர் எங்கள் நாடக மேடையில் வருவது இதுதான் முதல் முறையாயிருந்த போதிலும், கொஞ்சமும் கூச்சமின்றி மிகவும் நன்றாய் நடித்தார். இவரிடமிருந்த மற்ற அரிய குணங்களுடன், நாடக மேடையைச் சேர்ந்த ஓர் அரிய குணம் என்னவென்றால், தனக்குரிய பாடத்தில், தானும் ஒரு எழுத்து விட மாட்டார்; தன்னுடன் வரும் இதர நாடகப் பாத்திரங்களும் ஓர் எழுத்து விட்டுவிடச் சம்மதியார்; ஒத்திகைகளில் தன்னுடன் வரும் யாராவது ஆக்டர், எதை விட்டபோதிலும், அதை அவருக்கு ஞாபகப்படுத்தி, அவர் அதைச் சரியாக ஒப்புவிக்கும் வரையில் விட மாட்டார்! இவ்வாறு தன் பாடத்தைப் படிப்பதுமன்றித் தன்னுடன் வரும் மற்ற ஆக்டர்களின் பாடத்தையும் படித்து வைப்பார்! இவர் எங்கள் சபையில், இது முதல் பன்முறை வேடங்கள் தரித்து ஆடியிருக்கின்றனர். இவருக்கு ‘பிஸ்தாக் கொட்டை சாமியார்’ என்று எங்கள் சபையில் பெயர் வந்ததற்குக் காரணம் பிறகு எழுதுகிறேன்.
இவர், படித்தவர்கள் அநேகரைக் கொள்ளை கொள்ளும் நீர் வியாதியால், நடுவயதில் அகால மரணமடைந்தார். இவர் மரணத்தினால் எங்கள் சபை ஒரு நல்ல ஆக்டரையும், நான் எனது அத்யந்த நண்பர்களில் ஒருவரையும் இழந்தேன். எங்கள் நட்பைப்பற்றி ஒரு சிறு விஷயம் இங்கெழுத அனுமதி கேட்கிறேன். இவரை நான் அறிவதன் முன்னர், சிற்றுண்டிக்காவது, விருந்திற்காவது எங்கு சென்ற போதிலும், நானும் எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடி வேலுவும் ஒன்றாய் உட்கார்ந்து உண்போம். இவரைத் தெரிந்த பிறகு, நாங்கள் மூவரும் ஒன்றாய்ச் சேர்ந்துண் பவர்களானோம். எந்தப் பார்ட்டிக்காவது விருந்துக்காவது போனபோதிலும், நாங்கள் எங்கிருக்கிறோமென்று அவர் எங்களைத் தேடி வந்து எங்களுடன் உட்காருவார்; நாங்களும் அவர் எங்கிருக்கிறார் என்று தேடி அவரிடம் செல்வோம். இத்தகைய நண்பனைச் சில வருடங்களுக்குள் இழந்தது எனது பூர்வபாபவி பாகம் என்றே கருதுகிறேன்.
இந் நாடகத்தில் டாக்டர் டி. ஸ்ரீவாசராகவாச்சாரி ஈயாகாமன் (lachimo) வேடம் பூண்டனர். இவர் 12 வருடங்களுக்கு முன் இரண்டு நண்பர்கள் எனும் நாடகத்தில் கமலினி வேஷம் தரித்த பிறகு, இடைக் காலத்தில் எங்கள் சபையைவிட்டு நீங்கியிருந்து, மறுபடியும் இச் சமயம் வந்து சேர்ந்தார். இந் நாடகத்தில் நடித்த மற்ற ஆக்டர்களைப்பற்றி நான் இங்கெழுதத்தக்க விசேஷம் எனக்கொன்றும் ஞாபகமில்லை .
இந் நாடகமானது, இச்சமயம், சீக்கிரம் ஆடவேண்டுமென்று ஒருவாறு அவசரத்தில் எழுதி முடிக்கப்பட்டது. பிறகு சாவகாசமாக முற்றிலும் திருத்தி எழுதி 1914ஆம் வருஷம்தான் இதை அச்சிட்டேன். அச்சிடும் பொழுது, ஷேக்ஸ்பியர் காலத்தில் அநுசிதமாக மதிக்கப் படாவிட்டாலும், தற்காலம் அவ்வாறு மதிக்கப்படும் என்று நான் எண்ணிய சில வாக்கியங்களை மாற்றியுள்ளேன். அன்றியும் இதில் 5ஆம் அங்கத்தில், பாசதாமனது காட்சியில், அம் மகா நாடகக் கவி எழுதாது மற்றவர்களால் கோர்க்கப்பட்டது என்று அறிஞர்களால் மதிக்கப்படும் பாகத்தையெல்லாம், நான் அச்சிட்டிருக்கும் புஸ்தகத்தில் அகற்றியுள்ளேன்.
அந்நாடகமானது, எங்கள் சபையால் இரண்டு மூன்று முறைதான் ஆடப்பட்டது; இலங்கை சுபோத விலாச சபையாரால் நான்கைந்து முறை ஆடப்பட்டிருக்கிறது; மற்றச் சபையார் இதை எக்காரணத்தினாலோ அதிகமாக ஆடவில்லை .
இந்தச் சிம்ஹளநாதன் அன்றி, இவ்வருஷம் எங்கள் சபையார் நடித்த எனது மற்றொரு நாடகம் “வேதாள உலகம்” என்பதாம். இந்நாடகத்தை இதற்கு ஒரு வருஷத்திற்கு முன்பாகவே நான் எழுதி முடித்தபோதிலும் இவ்வருஷம்தான் எங்கள் சபையோரால் ஆடப்பட்டது. இவ்வாறு இந்நாடகம் ஒரு வருஷமாய் ஆடாமல் நின்றதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. இந்நாடகத்தில் கதாநாயகன் ராஜஸிம்ஹன் எனும் அரசகுமாரனாயினும், அவனைவிட முக்கியமான பாத்திரம் ‘தத்தன்’ என்னும் அவனுடைய தோழனுடையதாம். இதை இந்நாடகத்தை வாசித்திருக்கும் என் நண்பர்கள் நன்றாயறிவார்கள். ஒருவிதத்தில் இந்தத் தத்தனையே கதாநாயகனெனவும் கூறலாம். அவ்வளவு முக்கியமான பாத்திரம் அது; இதை எனது நண்பர் எஸ். ராஜகணபதி முதலியாருக்கென்றே எழுதினேன். நான் இதை எழுதி முடித்து, அவர் தன் பாகத்தை யெல்லாம் எழுதிக்கொண்டவுடன், (அப்பொழுது இந்நாடகம் அச்சிடப்படவில்லை) அவருடைய ஆபீசுக்காரர்கள் அவரை திடீரென்று ரங்கூனுக்கு மாற்றி விட்டார்கள். அதன் பேரில் அவர் திரும்பிப் பட்டணம் வந்து சேர்ந்து இந்நாடகத்தில் நடிக்கும் வரையில், வேறு மற்றவர்களைக் கொண்டு இந்நாடகத்தை நடிப்பதில்லை என்று தீர்மானித்தவனாய், ஒரு வருஷ காலத்துக்குமேல் அவர் வரவை எதிர்பார்த்து, இதை ஆடாது விட்டுவைத்தேன், இவ்வாறு அவருக்காக இதை நிறுத்தி வைத்ததற்காக என்னைக் கடிந்து கொண்ட எனது நண்பர்களும், அவர் திரும்பி வந்து இவ்வருஷம் இந்நாடகத்தில் தத்தனாக நடித்ததைக் கண்ட பிறகு, நான் செய்தது சரியென ஒப்புக்கொண்டனர். அவ்வளவு நன்றாக நடித்தார் அவர். இந்நாடகமானது, அதே சபையாரால் (பால நாடக சபைகள் உள்பட) பன்முறை ஆடப்பட்டிருப்பதாலும், நான் எழுதிய நாடகங்களைப் படிப்பவர்களால் அதிகமாகக் கொண்டாடப்பட்டிருப்பதாலும், இந்நாடகக் கதையைப் பற்றிச் சில விஷயங்கள் இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
இந்த நாடகக் கதை என் மனத்தில் உதிக்குமுன், இதன் பெயர், ‘வேதாள உலகம்’என்பது என் மனத்தில் உதித்தது! சாதாரணமாக, ஒரு நாடகத்தை எழுதி முடித்த பிறகுதான் அதற்கு என்ன ஏற்ற பெயர் வைக்கலாம் என்று பெரும்பாலும் நாடகாசிரியர்கள் யோசிப்பது வழக்கமாம். இதிலோ பெயரை முன்பு தீர்மானித்து, அப்பெயருக் கேற்றபடி, நாடகக் கதையை எழுதலானேன்! இப்பெயர் என் மனத்தில் உதித்ததற்கு ஒரு விநோதமான காரணம் உண்டு. இதற்கு முன்னால் சென்னைக்கு ஒரு புதிய பாரசீகக் கம்பெனியார் வந்து, ஹிந்துஸ்தானி பாஷையில் பல நாடகங்களை ஆடியதைப்பற்றி எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். அவர்கள் முதன் முதல் ஆடிய நாடகத்திற்கு “பஹாரி பரிஸ்தான்” (Bhari Paristan) என்று பெயர். எப்படி எங்கள் சுகுண விலாச சபையார், மற்ற ஊர்களுக்குப் போகும் பொழுதெல்லாம்,“லீலாவதி-சுலோசனை”யை முதல் நாடகமாகப் பல வருஷங்கள் நடத்தி வந்தார்களோ அப்படியே இப்பாரசீகக் கம்பெனியார், எந்த ஊரில் போய் ஆட ஆரம்பித்த போதிலும், இந்த “பஹாரி பரிஸ்தான்” என்பதையே தங்கள் முதல் நாடகமாக ஆடுவதாக வழக்கமுடையவராயிருந்தனர்.
இவர்கள் முதன்முறை இதை ஆடியபொழுது நான் போய்ப் பார்க்கவில்லை. இரண்டாம் முறை ஆடியபொழுது இதைப்போய்ப் பார்த்தேன். இதில் முக்கியமாக வினோதமாக ஜோடிக்கப்பட்ட காட்சிகள் பல இருந்தனவேயொழிய, ஆக்ட் செய்வதில் அத்தனை விசேஷமாக இல்லை என்று என் புத்தியிற் பட்டபோதிலும், ஒரு காட்சி மாத்திரம் என் மனத்தில் நன்றாய் வேர் கொண்டது. அதாவது, கதா நாயகனான ஒரு வாலிப ராஜகுமாரன், தன் தோழனுடன் காட்டில் உழன்றபொழுது, ஒரு குளிகையைப் பெற்று, அங்கு தோன்றிய ஒரு குகைக்கெதிரில் போய் அக் குளிகையைக் காண்பிக்க, அக்குகை வெடித்து, தான் நெடுநாளாகப் பார்க்க வேண்டுமென்று விரும்பியிருந்த பரிஸ்தான், அல்லது பரிகள் உலகம் என்பதைக் காண்கிறான். பரிஸ்தான் என்பதற்குப் பரிகள் அல்லது அப்சரக் கன்னிகைகள் வசிக்கும் உலகம் என்று பொருள் கூறலாம். இக்காட்சியை அமைத்துத் தமிழில் ஒரு நாடகம் நாம் எழுதவேண்டும் என்று மனத்திற்பட்டது. உடனே, மந்திரத்தைச் சரியாக உச்சரிக்கக் குகை வெடித்து ராஜ குமாரனை அப்சரக் கன்னிகைகள் அப்சரலோகத்துக் அழைத்துக் கொண்டு போவது போலவும், அக்குகை மூடிக் கொள்ள மந்திரத்தைச் சரியாக உச்சரிக்காது தவறாகச் சொல்ல, அவன் தோழனை, குகை வெடித்து வந்த வேதாளங்கள் தூக்கிக்கொண்டு போவதுபோலவும் எழுதினால் மிகவும் வேடிக்கையாயிருக்குமென்று என் புத்தியிற்பட்டது. உடனே நான் எழுதப் போகிற நாடகத்திற்கு “வேதாள உலகம்” என்று பெயர் வைத்தால் நலமாயிருக்கு மெனத் தீர்மானித்தேன். இவ்வாறு நாடகத்தின் பெயரை முன்பு தீர்மானித்து, பிறகு அதற்கேற்றபடி நாடகக் கதையைக் கோர்த்துக் கொண்டேன். அரண்மனையில் ரகசியமாய் வைத்திருந்த ஒரு சித்திரப் படத்தைக் கண்டு கதாநாயகியின்மீது ராஜகுமாரன் காதல் கொண்டதற்கு அஸ்திவாரமாயிருந்தது, நான் சிறு வயதில் படித்த தக்காணத்துப் பூர்வ கதைகளுள் ஒன்றாம். தத்தனுடைய பாத்திரம் என் மனத்தில் உதித்ததற்கு, ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி எழுதிய பால்ஸ்டாப் (Falstaff) பாத்திரமென்று ஒருவாறு கூறலாம். ஆயினும் உருவத்திலும், அகட விடகத்திலும் அந்த பால்ஸ்டாப்பை தத்தர் ஒத்திருந்தபோதிலும், இந் நாடகத்தின் முதற்காட்சி, ஷேக்ஸ்பியர் நான்காம் ஹென்ரி (Henry IV) என்னும் நாடகத்தில் எழுதியுள்ள ஒரு காட்சியை ஒத்திருந்தபோதிலும், பிறகு வரும் காட்சிகளில் அவரெழுதியுள்ள நாடகத்திற்கும் நான் எழுதியுள்ள நாடகத்திற்கும் சிறிதும் சம்பந்தமில்லை . மேலுக்கு விகடனாகத் தோன்றிய போதிலும், இத் தத்தனிடம், அவனது நண்பனாகிய ராஜகுமாரன்மேல் அவன் பொருட்டுத் தன் உயிரையும் கொடுக்கத் துணியும் படியான பேரன்புண்டு என்பதை, இதை வாசிப்பவர்கள் கவனிப்பார்களாக. நான் எனது சிற்றறிவைக் கொண்டு நிர்மித்த நாடகப் பாத்திரங்களுக்குள் இந்தத் தத்தன் பாத்திரம் ஒரு முக்கியமானது என்று நினைக்கிறேன். இந்நாடகமானது நடிக்கப்படும்பொழுது பார்த்த அல்லது இதை வாசித்துப் பார்த்த, அநேகம் ஆக்டர்கள், தாங்களும் இந்தத் தத்தன் வேடம் பூண வேண்டுமென்று விரும்பி எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள். இதுதான், நான் எழுதியுள்ள எல்லா நாடகங்களைப் பார்க்கிலும் மற்ற அநேக சபையார்களால் இந்நாடகம் அதிகமாக ஆடப்பட்டதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. ஹாஸ்ய பாகத்தில் நான் எழுதியவற்றுள் இது மிகச் சிறந்தது என்று எனது நண்பர்கள் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.
இந்தத் தத்தன் பாகம், அவருக்கென்றே எழுதப்பட்டபடியால் எனது நண்பர் எஸ். ராஜகணபதி முதலியார் இதில் எளிதில் பெரும் பெயர் பெற்றார். இவருக்குப் பிறகு இப்பாத்திரத்தில் பெயர் பெற்றவர் எனது நண்பர் எம். துரைசாமி ஐயங்காரே. இந்தப் பாத்திரத்தை எங்கள், சபையில் ஆக்ட் செய்த மற்ற ஆக்டர்கள், தாமோதர முதலியார், கே. வரதாசாரியார் முதலியோர். இன்னும் நான் மேலே குறித்தபடி இதர சபைகளில் அநேகர் இதை நடித்ததைப் பார்த்திருக்கிறேன். இதை நடிக்க விரும்பும் என் இளைய நண்பர்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். இந்தப் பாகத்தை நடிக்க விரும்புவோர் எஸ். ராஜகணபதி முதலியாரைப் போல் பெரும் உடலை உடையவராயிருத்தல் வேண்டும்; அல்லது அப்படி இயற்கையில் இல்லாவிட்டால் செயற்கையினாலாவது பெருத்த உடலை உடையவராகத் தோன்றவேண்டும். எங்கள் சபையில் எம். துரைசாமி ஐயங்கார் இதை நடித்தபொழுது, அவர் தேகம் அதிக ஸ்தூலமாயில்லாதபடியால், அவருக்குச் சற்று ஸ்தூல தேகமுடையவராய் நாடக மேடையில் தோன்றும் படியாக, பஞ்சு வைத்து மெத்தையைப் போன்ற உள்ளே தரிக்கும்படியான சட்டை, நிஜார் எல்லாம் தைத்து அதன்மீது தொப்பைக்காக ஓர் ஏற்பாடு செய்து, அதன்மீது அவர் அணிய வேண்டிய உடையை அணியச் செய்தோம். மெல்லிய தேகமுடையவர்கள் இவ்வாறு செய்தாலொழிய இப்பாத்திரத்தை ஆடுவது ரசாபாசமாம். இதற்கோர் உதாரணத்தை என் கண்ணாரக் கண்டேன். ஒரு சபையார் (அவர்களின் பெயரை இங்கெழுத எனக்கிஷ்டமில்லை) இந்நாடகத்தை நடித்த பொழுது, என்னை வரும்படியாகக் கேட்டிருந்தனர்; அதன்படி நான் போய்ப் பார்க்க, முதல் காட்சியானவுடன்; என் பக்கத்திலிருந்த நண்பரை, இந்தக் காட்சியில் ஆடியவர்களில் ‘யார் தத்தன், யார் ராஜசிம்ஹன்?’ என்று வேடிக்கையாக் கேட்டேன்; ஏனெனில் தத்தன் இருக்கவேண்டியதைபோல் ராஜசிம்ஹன் வேஷம் பூண்டவர், மிகவும் பெருத்த சரீரமும் வயிரும் உடையவராயிருந்தார்; தத்தன் வேடம் பூண்டவர், உடலில் எலும்புகளெல்லாம் வெளியில் தோன்றக்கூடிய ஸ்திதியிலிருந்தார்! இந்நாடகத்தை ஆட விரும்பும் ஆக்டர்கள் இதை முக்கியமாகக் கவனிப்பார்களாக. அன்றியும் ஸ்தூல தேகமில்லாதவர் இந்தத் தத்தன் வேடம் பூணுவதென்றால், வயிற்றிற்கு மாத்திரம் தொப்பைப்யை போல், துணியைக் கட்டிக் கொண்டு வருவதைக் கண்டிருக்கிறேன். இதைப் பார்க்கும் பொழுது சூனாவயறு என்னும் வியாதியையுடைவன் போல் தோன்றுகிறது; ஆகவே மெல்லிய தேகமுடையவர்கள் இப்பாத்திரத்தை ஆட விரும்பினால், உடல் முழுவதும் பெருத்திருப்பது போல் காட்டும்படியான (எம். துரைசாமி ஐயங்கார் செய்தபடி) ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்நாடகமானது இதுவரையில் என் அனுமதியின்மீது, என்னிடமுள்ள கணக்கின்படி 257 முறை ஆடப்பட்டிருக்கிறது.இந்த நாடகத்தை ஆடுவது அவ்வளவு கஷ்டமில்லை. ஆகவே புதிதாய் நியமிக்கப்பட்ட சபைகள் இதை எளிதில் ஆடலாம். இதை நடிக்கக் கற்பதும் கஷ்டமல்ல. எழுதியுள்ள வார்த்தைகளைச் சரியாகச் சொன்னாலே போதுமானது. நகைப்பை உண்டாக்கத்தக்க பல சந்தர்ப்பங்கள் இதில் இருப்பதால், எளிதில் சபையோரைச் சந்தோஷப்படச் செய்யக்கூடும். இந்நாடகத்தில் சில இடங்களில், ஜனங்கள் கைகொட்டிச் சிரிக்கும்பொழுது எனது நண்பர் தாமோதர முதலியார், ‘இந்தக் கரகோஷம் உங்களுடையது என்று நினைத்து விடாதீர்கள். இது வேறொருவருக்குச் சார்ந்தது’ என்று வேடிக்கையாகச் சொல்லுவார்.
இந்நாடகத்தில், மூன்றாம் அங்கத்தில் மூன்றாம் காட்சியை நடிக்கும் பொழுது அநேகம் சபையோர்கள் ஒரு தப்பிதம் செய்கிறார்கள். அன்றியும் அநேகம் பேர்கள் இதை எப்படி நடிப்பது என்று கேட்டிருக்கிறார்கள். ஆகவே இதைப்பற்றி இங்குத் தெளிவாய் எழுதுகிறேன். இக்காட்சியில், இரண்டு குகைகள் இருக்கின்றன. வலது புறம் குகையில் ராஜ குமாரன் அடைப்பட்டிருக்கிறான்; இடது புறம் குகையில் தத்தன் அடைக்கப்பட்டிருக்கிறான். மோகன வல்லியை மோசம் செய்யும் பொருட்டு, ராஜீவாட்சி, குகைக்குத் தன் முதுகைக் காட்டி நின்று, வலதுபுறம் குகையில் ராஜகுமாரனிருப்பதாகவும், இடது புறம் குகையில் தத்தனிருப்பதாகவும் சொல்லுகிறாள். இவளுக்கு எதிராக நிற்கும் மோகனவல்லிக்கு வலது புறம், ராஜகுமாரிக்கு இடதுபுறமாகும். அவளது இடது புறம், இவளுக்கு வலது புறமாகும். ஆகவே இக்காட்சியில் இவர்கள் இருவரும் பேசும்பொழுது, ராஜீவாட்சி குகைக்குத் தன் முதுகைக் காட்டி நிற்க வேண்டும்; மோகனவல்லி, சபையோருக்குச் சற்று முதுகைக் காட்டி நிற்க வேண்டும். இப்படிச் செய்யாவிட்டால் சபையோருக்கு இந்தச் சூட்சமம் அர்த்தமாகாது. இவ் வருஷம் எங்கள் சபைக்கு ஒரு புஸ்தகசாலை (Library) ஏற்படுத்தினோம்; நான். அதுவரையில் சேகரித்து வைத்த தமிழ் நாடகப் புஸ்தகங்களையெல்லாம் கொடுத்து, மற்ற அங்கத்தினர்களிடமிருந்தும், இலவசமாக, அநேக நாடக புஸ்தகங்களைச் சேர்த்து, ஒரு சிறு புஸ்தகசாலையாக்கி, இவ் வருஷம் தசராக் கொண்டாட்டத்தின் கடைசியில் விஜயதசமியன்று, இதை வி. கிருஷ்ணசாமி ஐயரைக் கொண்டு திறந்து வைத்தோம். அப்பொழுது 180 புஸ்தகங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்காலம் 1670 புஸ்தகங்கள் அடங்கியதாயிருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்னும் நான்கு திராவிட பாஷைகளிலுமுள்ள நாடகங்களை யெல்லாம் இதில் சேர்த்து வைக்கவேண்டுமென்பது எங்கள் கருத்து. இதை வாசிக்கும் எனது நண்பர்களிடம் அப்படிப்பட்ட புஸ்தகங்களிருக்கு மாயின், அவற்றை அவர்கள் இப் புஸ்தக சபைக்கு உதவுவார்களானால், எங்கள் சபை அவர்களுக்கு நன்றி பாராட்டும்.
அன்றியும் இவ் வருஷம் எங்கள் சபையின் அங்கத்தினர் 500 பெயர் ஆனார்கள். 500ஆவது அங்கத்தினர் ஹைகோர்ட்டில் அட்வகேட் ஜெனரலாயிருந்த, எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்கள். அவர் எங்கள் சபையின் வழக்கப்படி, இவ் வருஷம் நவம்பர் மாசம் 15ஆம் தேதி ஒரு பெரும் விருந்தளித்தார். அதில் சபையின் சரித்திரத்தைச் சார்ந்த துணுக்குகளை (Tit-bits) யெல்லாம் சேர்த்து ஒரு காட்சியாகக் காட்டினேன். சபை ஆரம்பித்து, 17 வருஷங்கள் பொறுத்துத்தான் 500 அங்கத்தினர் களானோம்.
மேற்கூறிய இரண்டு நாடகங்களன்றி, நான் இவ் வருஷம் தசராவின் முதல் நாள் ஆட வேண்டியதற்காக, “காமோத்யானம்” (The Garden of Love) என்கிற ஒரு சிறு நாடிகையை எழுதினேன். அதை இன்னும் நான் அச்சிடவில்லை . இவ் வருஷம் அதையும், நான் பிறகு எழுதியுள்ள இன்னும் சில சிறு காட்சிகளையும் சேர்த்து, “விடுதிப் புஷ்பங்கள்” என்று பெயர் வைத்து அச்சிடலா மென்றிருக்கிறேன். அன்றியும் ‘சபாபதி முதலியார், ஒரு வருடம் பொறுத்து’ என்று ஒரு காட்சி தசராவுக்காக எழுதினேன். இதையும் சென்ற வருஷம் நடத்திய ‘சபாபதி காட்சியையும் சேர்த்து “சபாபதி” முதல் பாகம் என்று அச்சிட்டிருக்கிறேன்.
பத்தொன்பதாம் அத்தியாயம்
இனி 1909ஆம் வருஷத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி எழுதுகிறேன்.
இவ் வருஷம் எங்கள் சபை அங்கத்தினராயிருந்த பி.எஸ். துரைசாமி ஐயங்காரால் எழுதப்பட்ட ‘ஜ்வலிதா - ரமணன்’ என்னும் தமிழ் நாடகம் ஆடப்பட்டது. இது ஷேக்ஸ்பியர் மகாகவி எழுதிய, “ரோமியோ - ஜூலியட்” (Romeo-Juliet) என்னும் நாடகத்தின் மொழி பெயர்ப்பாம். இவர் இதற்கப்புறம் யுத்த லோலன், பிரஹ்லாதன், வள்ளித் திருமணம் முதலிய நாடகங்களைத் தமிழில் எழுதியிருக்கிறார். இவர் நாடகங்களை எழுதுவதுமன்றி, அவைகளில் நடிக்கும் திறமையும் வாய்ந்தவர். அப்படியிருந்தும் தனது நாடகத்தில் என்னைக் கதாநாயகனான ரமணன் (Romeo) பாத்திரத்தை எடுத்துக் கொள்ளும்படிக் கேட்க, நானும் இசைந்தேன். அதன் பேரில் ஜ்வலிதை (Juliet) பாத்திரம் எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவுக்கே கொடுக்கப்பட்டது. இந் நாடகம் நாங்கள் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடித்த பொழுது, முக்கியமான ஒரு சமாச்சாரம்தான் எனக்கு ஞாபகமிருக்கிறது. சாதாரணமாக நான் மேடையின் மீது தோன்றும்பொழுது, ஏதாவது மிகுந்த முக்கியமான சந்தர்ப்பங்களில்தான் சபையோர் கரகோஷம் செய்வார்கள்; இந்நாடகத்தில் நான் முதற் காட்சியில் தோன்றியவுடன் கரகோஷம் செய்யவே, ‘இதென்ன விந்தை! இப்படி எப்பொழுதும் நடந்ததில்லையே! இதற்குக் காரணம் என்ன’ வென்று எனது நண்பர்களைக் கேட்க அவர்கள், “இதுவரையில் மற்றவர்களுடைய நாடகங்களில் ஆடுவதில்லை யென்று தீர்மானித்த நீ, இதில் அத் தீர்மானத்தினின்றும் பிறழும்படி நேரிட்டதே எனக் கை கொட்டினோம்!” என்று தெரிவித்தார்கள். இந்தத் தர்மசங்கட சந்தர்ப்பத்திற்கு நான் என்ன சொல்வது? நான் அவ்வாறு மற்றவர்களுடைய நாடகங்களில் ஆடக்கூடாது என்று எப்பொழுதும் தீர்மானம் செய்துகொண்டவனல்லன். எனதுயிர் நண்பர் என்னுடனன்றி மற்றவர்களுடன் நாடக மேடையில் ஆடுவதற்குத் தனக்கு இஷ்டமில்லை என்று எனக்குத் தெரிவித்த பிறகு, நானும் அவருடனன்றி மற்றவர்களுடன் அரங்கில் ஆடுவதில்லையென்று தீர்மானித்ததன்றி வேறொன்றும் கிடையாது. ஆகவே, இதற்குமுன் எங்கள் சபையோரால் ஆடப்பட்ட மற்றவர்கள் எழுதிய இரண்டொரு நாடகங்களில், நாங்களிருவரும் ஒன்றாய் ஆடக்கூடிய தக்க பாத்திரங்கள் கிடைக்காமையால், அப்படிச் செய்யவில்லை. இதுதான் உண்மை . இது இப்படியிருக்க, நான் இதரர்களு டைய நாடகங்களில் ஆடக்கூடாது என்கிற கொள்கை உடையவனாயிருந்தேன் என்று வீண் அபவாதம் மற்றவர்களுடைய மனத்தில் இருந்தால் இதற்கு நான் என் செய்வது? இதற்குப் பிறகு நானும் என்னுயிர் நண்பரும் மற்ற நூலாசிரியர்கள் எழுதிய நாகடங்களில் பலவற்றை ஆடியிருக்கிறோம். உலகில் இத்தகைய தவறான எண்ணங்கள் உண்டாவதைத் தடுக்க யாரால் முடியும்?
இவ் வருஷம் நடந்த மற்றொரு கவனிக்கத்தக்க விஷயம் என்ன வென்றால், எங்கள் சபையார் ராஜப்பிரதிநிதி (Viceroy) லார்ட் மின்டோ (Lord Minto) சென்னைக்கு விஜயம் செய்த பொழுது, காஸ்மாபாலிடன் கிளப்பில், அவருக்குப் பெரும் விருந் தொன்று அளித்தகாலையில், அவர் முன்னிலையில் நடித்ததேயாம். இராஜப்பிரதிநிதிக்கு மேற்சொன்ன கிளப்பார் உபசரணை செய்ய வேண்டு மென்று தீர்மானித்தவுடன் எங்கள் குடும்ப சிநேகிதராகிய காலஞ்சென்ற பிட்டி. தியாகராய செட்டியார் அவர்கள் என்னை அழைத்து “சுகுண விலாச சபையார் ஒரு மணி நேரத்திற்கு ஏதாவது காட்சிகள் ஆட வேண்டும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் நீ செய்துவிடு” என்று சொன்னார். ‘ஆகட்டும்’ என்று ஒப்புக் கொண்டு அநேகம் ஆக்டர்கள் வரக்கூடியதாகிய ‘மனோஹரன்’ நாடகத்தில் முதல் - அங்கம் நான்காவது காட்சியை ஆடத் தீர்மானித்தோம். அன்றியும் ஹரிச்சந்திர நாடகத்திலிருந்து சில தோற்றக் காட்சிகளைக் காட்ட வேண்டும் என்று நிச்சயித்தோம். எல்லாம் தீர்மானித்தான பிறகு, நாடகத்திற்கு இரண்டு நாள் முன்னதாக பிட்டி. தியாகராய செட்டியார் என்னை அவசரமாகக் கூப்பிட்டனுப்பினார்; என்னவென்று போய்க் கேட்க “ரங்கவடிவேலுக்கு நாட்டியம் ஆடத் தெரியுமாமே, எப்படியாவது அதையும் காண்பிக்கவேண்டும்” என்று வற்புறுத்தினார். காட்சியின் மத்தியில் அது வர இடமில்லையே என்று நான் எவ்வளவு ஆட்சேபித்தும், “அதெல்லாம் உதவாது. எப்படியாவது அதை நீ ஏற்பாடு செய்துதான் தீரவேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தார். அதன்பேரில் சபைக்கு வந்து எனதுயிர் நண்பனுடன் கலந்து பேசியபொழுது, அவரும் அவர்களுக்கெதிரில் ஆட வேண்டுமென்று இச்சை கொண்டிருப்பதை அறிந்தேன். அதன்மீது, சரியென்று ஒப்புக்கொண்டு, நான் எழுதிய நாடகத்திலில்லாத ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் காட்சியின் முடிவில் அவரை நாட்டியம் செய்யும்படி ஏற்பாடு செய்தேன். ஏறக்குறைய ஆறு மாதம் எனதுயிர் நண்பர் கற்றுக்கொண்டு, இரண்டொரு முறை சபையில் ஆடியதைப் பார்த்தவர்களெல்லாம் மெச்சியது, எப்படியோ பிட்டி. தியாகராய செட்டியார் செவிக்கு எட்டி, இவ்வாறு அவர் பலாத்காரம் செய்யும்படி நேரிட்டது போலும்.
அன்றைத் தினம் காட்சியின் கடைசியில் எனதுயிர் நண்பர் நாட்டியம் ஆடியது எல்லோருடைய மனத்தையும் கவர்ந்ததெனச் சொல்வது அதிகமாகாது. இவருக்கு முன் ஆமெடுர் (Amateur) நாடக மேடையில் இப் பரத சாஸ்திரம் கற்றவர்கள் இல்லையென்றே சொல்லவேண்டும். ஆடவன் ஸ்திரீ வேஷம் பூணுவதே கடினம்; அதுவும் ஸ்திரீயைப் போல் நர்த்தனம் செய்வதென்றால் அதிலும் கடினம்; எனதுயிர் நண்பர் இக்கலையைக் கற்க ஆரம்பித்தபோது, சில மாதங்கள், தான் தக்க தேர்ச்சியடையும் வரையில், எனக்குக்கூடத் தெரியாதபடி ரகசியமாய் வைத்திருந்தார். பிறகு தக்கபடி கற்றபின் என்னை மாத்திரம் தனியாக வரவழைத்து, ஆடிக் காண்பித்தார். நான் மிகவும் நன்றாயிருக்கிறதென . ஒப்புக்கொண்ட பின்புதான் எங்கள் சபையில் ஆட ஆரம்பித்தார். இவருக்குப் பிறகு, எனது நண்பர்களில் அனேகர் இக்கடினமான பரத சாஸ்திரத்தைக் கற்று ஆடியதை நான் பார்த்திருக்கிறேன். ஆயினும் என் உள்ளத்து உண்மை உணர்ச்சியை நான் உரைக்க வேண்டின், அவரைப்போல், விநயத்துடன் அழகுற ஆடும்படியானவர்களைக் கண்டிலன் என்றே கூற வேண்டும். இச்சபையில் இவருக்குச் சற்று அருகில் வந்தவர், கே. நாகரத்தினம் ஐயரே என்பது என் துணிபு. நாட்டியம் ஆடுவதென்றால் அதற்குரிய அங்கலட்சணங்களெல்லாம் அமைந்திருக்க வேண்டும்; தேகம் அதி ஸ்தூலமாயுமிருக்கக்கூடாது, அதிக மெலிவடைந்துமிருக்கலாகாது; அதிக உயரமாயும் இருக்கலாகாது; அதிகக் குட்டையாயு மிருக்கலாகாது; முகத்தில் மிகுந்த சௌந்தர்யமிருக்க வேண்டும்; ஹஸ்தங்கள் பிடிப்பதில் அழகுறச் செய்ய வேண்டும்; பாதங்களினால் தாளம் போடும் போது துமுக்குவது போலிருக்கலாகாது; இவைகளெல்லாம் ஒருங்கு சேர்வது கடினம் போலும்.
எனதுயிர் நண்பர் அன்று ஆடியதைக் கண்ட அநேகர் கவர்னர் ஜெனரலுக்காக, அதைச் சீக்கிரம் முடிக்க வேண்டி வந்தது. அதை இன்னும் சவிஸ்தாரமாகக் காண வேண்டு மென்று கேட்டுக்கொள்ள, தியாகராய செட்டியார், மறு நாளும் கிளப்பில் ஏற்படுத்திய அரங்கத்தில், இதைப் பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தினார். அதன் பேரில், “மாதர் மகாஜன சபா” என்று ஒரு சிறு காட்சியை ஏற்படுத்தி, அதில் சி. ரங்கவடிவேலு மறுநாளும் நர்த்தனம் செய்யும்படி, ஏற்படுத்தினோம். அதனுடன்கூட “சபாபதி”யிலிருந்து ஒரு காட்சியும் ஆடினோம்.
முன்னால் இங்கு நான் மனோஹரனாக நடித்த பொழுது நேரிட்ட ஓர் அசந்தர்ப்பத்தை எழுத விரும்புகிறேன். இக் காட்சியில் நான் விரைந்து வரவேண்டியிருக்கிறது. அப்படி விரைந்து வரும்பொழுது, நான் அணிந்திருந்த பீதாம்பரத்தின் மூல கச்சம் அவிழ்ந்து விட்டது. அதை அறிந்தவனாய் ஒரு கரத்தால் கீழே அவிழ்ந்து விழாமலிருக்க அதைப் பிடித்துக்கொண்டு, அங்கிருந்த ஆசனத்தில் பத்மாவதிக்கும் விஜயாளுக்கும் இடையில் உட்கார்ந்து கொண்டேன். பிறகு நான் விஜயாளுடன் எழுந்திருந்து பேச வேண்டிய வார்த்தைகளை எல்லாம் அவ்விடமே உட்கார்ந்து பேசி முடித்தேன். இதைக் கண்டு கோபித்து எனதுயிர் நண்பர் “இதென்ன அங்கிருந்தே பேசுகிறீர்களே!” என்று மெல்லக் கேட்டார். ‘பிறகு அதற்குப் பதில் சொல்லுகிறேன், காட்சி முடியட்டும்’ என்று சமாதானம் சொல்லிக் காட்சியெல்லாம் ஆடி முடிந்தவுடன், நான் உட்கார்ந்தே பேசியதன் காரணத்தை அவருக்கும், என்னுடன் நடித்த மற்றவர்களுக்கும் எடுத்துக் கூற எல்லோரும் நகைத்தனர். இதை நான் இங்கெடுத்தெழுதியதற்கு ஒரு முக்கியக் காரணமுண்டு. இம் மாதிரியான அசந்தர்ப்பங்கள் சில முறை நாடக மேடையில் நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஒரு முறை எங்கள் சபையிலேயே ஒரு ஆக்டருடைய ஆடையவ்வளவும் நெகிழ்ந்து கீழே விழுந்து விட்டது! தெய்வாதீனமாக, அவர் உள்ளே சிறு நிஜார் ஒன்று அணிந்திருந்தார்! ஆகவே ஆக்டர்களெல்லாம் இதைக் கவனித்து, வேகமாக ஏதாவது நடிக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் இருந்தால் அச்சந்தர்ப்பங்களில் தாங்கள் அணிந்திருக்கும் ஆடை அலங்கோல மாகாதபடி, முன்பே அதைச் சரிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது அதி அவசியம். அது முதல் இது வரையில் நான் மனோஹரன் முதலிய வேஷங்கள் தரிக்கும் போதெல்லாம், நாடகம் ஆரம்பத்திற்கு முன், கீழே விழுந்தோ ஓடியோ ஆடை அலங்கோலமாகப் போகத்தக்க சந்தர்ப்பமிருந்தால், அதைத் திரைக்குப் பின் நடித்துப் பார்த்து, நான் அணியும் உடை நெகிழாமலிருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது வழக்கமாய் விட்டது; எனது இளய நண்பர்கள் இதைக் கொஞ்சம் கவனிப்பார்களென்றே இதை எழுதலானேன்.
இனி 1910ஆம் வருஷம் எங்கள் சபையில் நிகழ்ந்த முக்கியக் காரியங்களை யெழுதுகிறேன். இவ்வருஷம் எங்கள் சபையோரால் விக்டோரியா பப்ளிக் ஹாலுக்குக் கொடுக்கப்பட்ட, காலஞ் சென்ற மாட்சிமை தங்கிய விக்டோரியா மகாராணியின் படமானது சென்னை கவர்னர், சர் ஆர்தர்லாலி (Sir Arthur Lawley) என்பவரால் திறக்கப்பட்டது. அச்சமயம் வேதம் வெங்கடாசல ஐயரவர்கள் எழுதிய ராணியின் சொப்பனம் என்னும் ஒரு சிறு நாடிகை ஆடப்பட்டது; சில தோற்றக் காட்சிகளையும் காட்டினோம். கவர்னர் அவர்கள் சபையை மிகவும் சிலாகித்துப் பேசினார்.
இவ்வருஷம் சபையின் ஆரம்ப முதல் கண்டக்டராயிருந்த வி. திருமலைப்பிள்ளையவர்கள், வயது மேலிருந்தபடியால் அவ் வேலையைக் கவனிக்கக்கூடாமற் போகவே, பொதுவாகக் கண்டக்டர் என்கிற பெயரை மாற்றி, தமிழ் கண்டக்டர், தெலுங்கு கண்டக்டர் என்று இரு பிரிவாக்கப்பட்டது. அதன்பேரில் பொதுச் சபைக் கூட்டத்தில் என்னை தமிழ் கண்டக்டராக நியமித்தார்கள்.
இவ்வருஷம் ஷேக்ஸ்பியர் கொண்டாட்டத்திற்காக விக்டோரியா பப்ளிக் ஹாலுக்குப் பின்புறம் இருக்கும், நாங்கள் டென்னிஸ் விளையாடும் இடத்தில், ஒரு சிறு மேடை ஏற்படுத்தி, அதில் ஷேக்ஸ்பியர் மஹா நாடகக் கவியின் நாடகங்களினின்றும், என்னால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட சில காட்சிகளை ஆடினோம்.
இவ்வருஷம் எங்கள் சபையின் சரித்திரத்தில் நடந்த முக்கியமான நிகழ்ச்சி யென்னவென்றால், இதுவரையில் விக்டோரியா பப்ளிக் ஹாலில், மேற்குப்புறமுள்ள ஒரு சிறு அறையில் இருந்த நாங்கள், விக்டோரியா ஹாலின் கீழ்ப்பாகம் முழுவதும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு, இப்பொழுது இருக்கும் இடத்திற்கு நாங்கள் குடி புகுந்ததேயாம். இவ் வருஷம் செப்டம்பர் மாதம் வரையில் அவ்விடம் மர்க்கென்டைல் அண்டு மெரீன் கிளப் (Mercantile & Marine Club) என்று ஒரு கிளப் இருந்தது; அந்த கிளப் க்ஷணித்துப் போய், அவர்களிருந்த இடத்தை ஒழித்து விட்டனர். அதன் பேரில் விக்டோரியா பப்ளிக் ஹால் டிரஸ்டிகளின் அனுமதியின் பேரில், அவ்விடத்தை மாதம் ஒன்றுக்கு ரூபாய் 125 வாடகைக்குப் பேசிக்கொண்டு குடி புகுந்தோம். இப்படி நாங்கள் அவ்விடம் போகப்போகிறோம் என்கிற சங்கதியைக் கேள்வியுற்ற காலஞ்சென்ற சர். வி. சி. தேசிகாச்சாரியார் அவர்கள் என்னை அழைத்து, “என்ன சம்பந்த முதலியார், இது வரையில் அவ்விடமிருந்த” அநேக கிளப்புகள் முன்னுக்கு வரவில்லையே! உங்கள் சபை இதுவரையில் விருத்தியடைந்து கொண்டே வந்திருக்கிறதே, நீங்கள் அவ்விடம் போனால் எப்படியிருக்குமோ?” என்று சொன்னார். அவர் எங்கள் சபையின் நன்மையையே கோரி இவ்வாறு எச்சரித்தார் என்பதற்கு ஐயமில்லை. அதன்மீது நான், “எக்காரியத்தை நான் தொடங்கினாலும், ஸ்வாமியின் பாரம் என்று அவர்மீது பாரத்தைச் சுமத்தி ஆரம்பிக்கிறேன். அவர் எங்கள் சபையைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன்” என்று விடை பகர்ந்தேன். ஆயினும் நாங்கள் இவ்வாறு இடம் பெயர்ந்தது இடையூறுகள் இன்றியன்று; பல ஆட்சேபங்கள் நேரிட்டன. முக்கியமாக, இங்குச் செல்வதென்றால் 125 ரூபாய் மாதம் வாடகை கொடுக்க வேண்டுமே என்பதாம். இதுவரையில் கேவலம் நாடக சபையாயிருந்ததை, ஒரு கிளப்பாக ஆக்க வேண்டியிருந்த படியால் பில்லியர்ட்ஸ் (Billiards) முதலிய ஆட்டங் களுக்குரிய செலவையும் ஏற்க வேண்டி வந்தபடியால், இதுவரையில், அங்கத்தினருக்கு மாதச் சந்தாக் கட்டணம் 8 அணாவாகவிருத்ததை ஒரு ரூபாயாக அதிகப்படுத்த வேண்டியதாயிற்று. இதற்காகச் சபையின் பொது ஜனக் கூட்டம் கூடி, அவர்கள் சம்மதத்தைப் பெற வேண்டியதாயிருந்தது. இதற்குப் பலர் ஆட்சேபித்தனர். இவர்களுடைய ஆட்சேபணையையெல்லாம் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் நானுமாக, மெல்லச் சமாதானப்படுத்தினோம். ஆயினும், அச் சமயம் ஆட்சேபித்தவர்களுள் ஒருவராகிய, பி.எஸ். துரைசாமி ஐயங்கார் அவர்கள் கூறிய வார்த்தை மாத்திரம் எனக்கு மனத்தில் மிகவும் உறுத்தியது. அதை இங்கு நான் எழுதக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் அன்றைத் தினம் பொதுக்கூட்டத்தில் கூறிய வார்த்தைகளாவது: “இதுவரை யில் நாடக சபையாயிருந்த இதை ஒரு கிளப்பாக மாற்றுவீர்களானால், பிறகு, வெறுங்கிளப்பாக மாறிவிடுமேயொழிய, நாடக சபை என்கிற பெயர் அழிந்துவிடும். இப்பொழுதே சொன்னேன்!” என்பதேயாம். இதை எனது பழைய நண்பர்களும் நானும் இந்த இருபத்தொரு வருடங்களாகக் கவனித்து அப்படிக் கெடுதி ஒன்றும் நேரிடா வண்ணம், எங்கள் - சபையைக் காத்து வந்தோம். இனிச் சபையின் பாரத்தைத் தோள் மீது ஏற்றுக்கொண்ட எங்கள் சபையின் இளைய அங்கத்தினரும், அப்படியே சுகுண விலாச சபை, முக்கியமாக நாடக சபையென்னும் பெயர் அழியாது நீடூழிக் காலம் காப்பார்களாக!
இவ்வாறு சபையை ஒரு கிளப்பாக மாற்ற வேண்டிய தற்காக, பில்லியர்ட் டேபில் முதலிய செலவுகளன்றி, மின்சார விளக்குகள் போடுவதற்காகவும், நாற்காலிகள் முதலிய சாமான்கள் வாங்குவதற்காகவும், அதிகச் செலவு பிடித்தபோதிலும், இவ்வருஷம் எங்கள் சபைக்கு 191 அங்கத்தினர் புதிதாகச் சேர்ந்தபடியால் சபைக்குப் பொருள் நஷ்டமின்றிச் சமாளித்தோம். மாதாந்தரக் கட்டணத்தை அதிகப்படுத்தினால் எங்கள் அங்கத்தினர் குறைந்து போவார்களோ என்று நான் பயந்திருந்ததற்கு, இதுவரையில் எந்த வருஷமும் இல்லாதபடி, அதிகமாகப் புதிய அங்கத்தினர்கள் சேர்ந்தனர்! இது எங்கள் சபையின் அதிர்ஷ்ட மென்றேனும், தெய்வ கடாட்சமென்றேனும் அவரவர்கள் இஷ்டப்படி எண்ணிக்கொள்ளலாம். இது முதல் எல்லா விஷயங்களிலும் சபையானது அபிவிருத்தியடைய ஆரம்பித்தது என்றே கூறவேண்டும். ஒரு டென்னிஸ் கோர்ட்டாயிருந்ததை, இரண்டாக்கி, பிறகு மூன்றும் ஆக்கினோம். இது முதல் வருஷத்திற்கு இருபத்தைந்து முப்பது நாடகங்கள் கொடுக்கத் தலைப்பட்டோம். இது முதல் சபா தினக் கொண்டாட்டமும், தசராக் கொண்டாட்ட மும் மிகவும் பலப்பட்டன; சபை தினக் கொண்டாட்டத்தைச் சார்ந்த வனபோஜனத்திற்கு (Picnic) இவ்வருஷம் 200 பெயர் வந்திருந்தனர். தசராக் கொண்டாட்டத்தில், விக்டோரியா ஹால் கீழ்ப்பக்கம் முழுவதும் சிற்றுண்டிக்காக ஏற்படுத்தி, மேல் மாடியில் நாடகங்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகவே எல்லாவற்றையும் யோசித்துப் பார்க்குமிடத்து, இவ்வருஷம், எங்கள் சபையின் சரித்திரத்தில் மிகவும் முக்கியமானதென்றே கருதல் வேண்டும்.
இவ்வருஷம் நான் எழுதிய புதிய நாடகம் “பொன் விலங்குகள்” என்பதாம். இதுதான் நான் முதல் முதல் எழுதிய சோஷல் நாடகம் (Social drama). சோஷல் டிராமா என்பதைச் சரியாகத் தமிழ்ப்படுத்த அசக்தனாயிருக்கிறேன்; ஒருவாறு ஜன சமூக நாடகம் அல்லது பொதுஜன நாடகம் என்று கூறலாம்; ஆயினும் அவ்விரண்டு பதங்களும் எனக்குத் திருப்திகரமாயில்லை. இதை வாசிக்கும் நண்பர் யாராவது இந்தச் சோஷல் என்கிற பதத்திற்குச் சரியான தமிழ்ப் பதம் கூறுவார்களாயின் அவர்களுக்கு நன்றியறிதலுடையவனாயிருப்பேன். இத்தகைய நாடகங்கள், ராஜாக்கள் தேவதைகள் முதலியவர்களைப்பற்றிக் கூறாது, பொது ஜனங்கள் அல்லது தற்கால ஜனங்களைப் பற்றிக் கூறுவதாகும். இதை நான் எழுத நேரிட்ட காரணம் அடியில் வருமாறு: சென்ற வருஷத்தில் கடைசியில், எங்கள் சபையார் தற்காலத் தமிழ் நாடக மேடையில், இப்படிப்பட்ட நாடகங் களில்லாத குறையைத் தீர்க்கவேண்டுமென்று தீர்மானித்து, இத்தகைய நாடகங்களுள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, தமிழ் நாடகத்திற்கு ஒரு பொன் பதக்கமும் (Medel), தெலுங்கு நாடகத்திற்கு ஒரு பொன் பதக்கமும் அளிப்பதாக விளம்பரம் செய்தனர். அதற்காகச் சில நிபந்தனைகளும் ஏற்படுத்தினர். அவையாவன: கதை புதிதாக இருக்கவேண்டும்; தற்காலத் திய ஜனசமூகத்தைச் சேர்ந்ததாயிருக்க வேண்டும்; நாடகாசிரியன் பரிசோதகர்கள் தீர்மானிக்கும் வரையில் தன் பெயரை வெளியிடக் கூடாது; மற்றவர்கள் உதவியைக் கொண்டு எழுதலாகாது. தானாக எழுதியதாயிருக்க வேண்டும் என்பவுையாம். சபையிலுள்ள அங்கத்தினர் மாத்திரமின்றி, மற்றவர்களும் இதற்குப் பிரயத்தனப்படலாம் என்றும் தெரிவித்தனர். அதன் மீதுதான் இப் ‘பொன் விலங்குகள்’ என்னும் நாடகத்தை எழுதியனுப்பினேன்.
எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில் இதனுடன் மொத்தம் 11 நாடகங்கள் அனுப்பப்பட்டன. இவைகளையெல்லாம் பரீட்சித்து எதற்குப் பரிசு கொடுக்கவேண்டு மென்று தீர்மானிப்பதற்காக, காலஞ்சென்ற பச்சையப்பன் கலாசாலையில் தமிழ் வித்வானாக இருந்த, தி. செல்வகேசவராய முதலியார் எம்.ஏ.ஒன்று; திவான் பகதூர் மாசிலாமணிப் பிள்ளை அவர்கள் இரண்டு; திவான்பகதூர் எம்.எஸ். பவாநந்தம் பிள்ளை அவர்கள் மூன்று; இவர்களை ஏற்படுத்தினார்கள். இம் மூவரும், அப் பதினோரு நாடகங்களையும் பரிசோதித்துப் பார்த்து, “பொன் விலங்குகள்” என்னும் நாடகத்திற்குத்தான் பரிசளிக்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள். அவர்கள் தீர்மானித்த பிறகுதான், இதை எழுதினவன் நான் என்று, அவர்கள் உட்பட, எல்லோருக்கும் தெரிவிக்கப்பட்டது; இம்மாதிரியே தெலுங்கில், வே. வெங்கடேச சாஸ்திரியார் எழுதிய, “உபயப்பிரஷ்டம்” என்னும் தெலுங்கு நாடகத்திற்கு, தெலுங்குப் பரிசு கொடுக்கப்பட்டது.
இப் “பொன் விலங்குகள்” என்னும் நாடகத்தின் கதையைப் பற்றி நான் எழுத வேண்டிய அவசியமில்லை; என் நண்பர்கள் பெரும்பாலும் இதைப் படித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், இதில் பாட்டென்பதே கிடையாது. கதா நாயகியாகிய பங்கஜவல்லி, சங்கீதமாகப் பாடும் ஒரு விருத்தம் தவிர, சாதாரணமாக நாடகங்களில் பாடும் பாட்டுகள் ஒன்றேனும் கிடையாது. இதனால், இதை மேடையில் நடித்தால் ஜனங்களுக்குச் சந்தோஷத்தையுண்டு பண்ணுமோ என்று எங்கள் அங்கத்தினர் பலர் ஐயமுற்றனர். ஆயினும் இவ்வருஷம் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இதை ஆடினபொழுது, அந்த ஐயமெல்லாம் நீங்கியது. விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஜனங்கள் நிறைந்திருந்தனர். எனக்கு ஞாபகமிருக்கிறபடி சற்றேறக்குறைய நானூறு ரூபாய் வசூலாயிற்று; வசூல் அதிகமானது பெரிதல்ல, வந்தவர்கள் எல்லாம் நன்றாயிருக்கிறதெனக் கூறினதுதான் எனக்கு முக்கியம். இதைப்பற்றி நானும் கொஞ்சம் பயந்து கொண்டுதானிருந்தேன்; ஏனெனில், தொன்றுதொட்டு இந்நாட்டில் நாடகம் என்றால், பாட்டுகளில்லாமல் கிடையாது. பூர்வகாலத்தில் நாடகம் முழுவதும், வெறும் பாட்டுகளாகவே இருந்ததென்பதற்கையமில்லை; பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வசனங்கள் நுழைந்தபோதிலும்; பெரும்பாலும் தற்காலத்திய நாடகங்களும் பாட்டு மயமாயிருக்கின்றனவென்பது எல்லோரும் அறிந்த விஷயமே. சங்கீதமல்லாத நாடகமென்றால் சந்திரனில்லாத வானம் என்று எங்கு வெறுக்கிறார்களோ என்று நானும் பயந்தவனே. ஆயினும் அன்றைத் தினம் வந்திருந்த திரளான ஜனங்கள், ஆதிமுதல் அந்தம் வரையில் ஆங்காங்கு கரகோஷத்துடன் நாடகக் கதையைக் கவனித்து வந்தது எனக்கு அப் பயத்தைப் போக்கி, தென் இந்தியாவிலும், ஐரோப்பாக் கண்டத்திலிருப்பது போல், இத்தகைய நாடகங்களுக்கு இடமுண்டு என்று எண்ணும்படி செய்தது. இந்த ஊக்கத்தைக் கொண்டுதான், பிறகு நான், ‘விஜயரங்கம்’, ‘தாசிப்பெண்’, ‘உண்மையான சகோதரன்’ முதலிய ஜனசமூக நாடகங்களை இயற்றியுள்ளேன். ஆயினும் நாடகம் என்றால் சங்கீதம் அதற்கு இன்றியமையாதது என்னும் எண்ணம், நமது தென் இந்தியாவில் அற்றுப் போய் விட்டது என்று நான் சொல்லவில்லை. அநேக நூற்றாண்டுகளாய் வேரூன்றிய எண்ணத்தை அத்தனை எளிதில் மாற்ற எவருக்கும் ஆற்றல் கிடையாது என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டியவனே. பாமர ஜனங்கள் இன்னும் நாடகம் பார்க்கப் போனால், சங்கீதத்தையே கவனிக்கின்றனர் என்பது திண்ணம். இருந்த போதிலும், கற்றறிந்தவர்கள், எந்த நாடகத்திற்கும் சங்கீதம் இருந்துதான் தீரவேண்டும் என்னும் கொள்கையினின்றும் சிறிது மாறியிருக்கின்றனர் என்று உறுதியாய்க் கூறலாம். இவ்விஷயத்தில், இதை வாசிக்கும் நாடகப் பிரியர்களாகிய எனது நண்பர்கள் கவனிக்க வேண்டியதொன்றுண்டு. ஐரோப்பா முதலிய கண்டங்களில் நாடகங்களில் சங்கீத மென்பதில்லாமற் போகவில்லை. ஆயினும் அவ்விட மெல்லாம் நாடகங்கள், முக்கியமாக இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன; டிராமா பிராபர் (Drama proper), ஆபெரா (Opera) என்று இருவகை. முதற் சொல்லப்பட்டதில் சங்கீதமே கிடையாது; இரண்டாவது பிரிவில் சங்கீதம் முற்பட்டதாம்; வசனங்கள் இங்கும் அங்குமாக, ஏதோ கொஞ்சம் இருக்கும். நம்முடைய தேசத்திலும் நாடகங்கள் இவ்வாறு பிரிக்கப்பட வேண்டுமென்பது என்னுடைய கருத்து. புராண சம்பந்தமான ‘நந்தனார் சரித்திரம்,’ ‘ராமதாஸ் சரித்திரம்,’ ‘அரிச்சந்திர நாடகம்’ முதலிய நாடகங்களில் சங்கீதத்திற்கு வேண்டிய அளவு இடங்களிருக்கலாம். ஆயினும் தற்காலத்திய ஜன சமூக நாடகங்களில் சங்கீதமே இல்லாமலிருக்க வேண்டும் என்பதுதான் என் துணிபு. இந்த எண்ணமானது ஈடேற, இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும். இருந்த போதிலும், எனதாயுளில் இது ஆரம்பிக்கப்பட்டதே என்று ஈசனைப் போற்றுகிறேன்.
இந் நாடகத்தை எங்கள் சபையார் நடித்தபொழுது எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு பங்கஜவல்லியாகிய கதா நாயகியாக மிகவும் நன்றாக நடித்தார். நான் கதாநாயகனான ராமச்சந்திரன் வேடம் பூண்டேன். நான் ராமச்சந்திரனாக நடித்தபொழுது நேரிட்ட ஒரு சந்தர்ப்பத்தை எனது நண்பர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ராமச்சந்திரனாகிய கதாநாயகன் ஒரு வைத்தியன். அவன் க்ஷயத்திற்காக ஒரு மருந்தைக்கண்டு பிடித்திருந்தான். அதை அவன். சிறு வயதில் மணந்து பிறகு மரணமடைந்ததாக நினைத்திருந்த அவனது மனைவி பங்கஜவல்லி, அப்பிரிவாற்றாமையே முக்கியக் காரணமாக நேரிட்ட க்ஷயரோகத்தினால் பீடிக்கப்பட்டபொழுது, பங்கஜவல்லிக்கு அம் மருந்தைக் கொடுத்துச் சிகிச்சை செய்கிறான் என்பது கதையின் ஒரு பாகம். இதை நான் மேடையின்மீது தக்கபடி நடித்துக் காட்ட வேண்டி, வைத்தியப் பரீட்சையில் தேறி வைத்தியர்களாயிருக்கும் எனது சில நண்பர்களிடம் சென்று, க்ஷயரோகம் பிடித்த ஒரு நோயாளியை - அதிலும் ஒரு பால்ய ஸ்திரீயை - எப்படிப் பரிசோதிப்பது? நாடியை எப்படிப் பார்ப்பது? ஹிருதயத்தை எப்படிக் கவனிப்பது? ஸ்வாசாசயத்தை எப்படிப் பரீட்சிப்பது? முதலிய எல்லா விவரங்களையும் நன்கு கற்றேன். பிறகு மேடையின்மீது அந்தக் காட்சி வந்தபொழுது, அதன்படியே, வைத்தியனாக நோயாளியைப் பரிசோதித்தேன். நாம் எல்லாம் சரியாகச் செய்துவிட்டோம் என்று கொஞ்சம் கர்வப்பட்டேன் என்றே நான் சொல்ல வேண்டும். ஏனெனில், வந்திருந்தவர்க ளெல்லாம் இக்காட்சியானது மிகவும் நன்றாக நடிக்கப்பட்ட தெனக்கரகோஷம் செய்தனரன்றோ ? ஆயினும், ஒரு தப்பிதம் செய்தேன் என்பதை நாடக முடிவிற் கண்டேன். அக்காலத்தில், எங்கள் சபையார் தமிழ் நாடகங்கள் போடும் போதெல்லாம் ஏறக்குறைய தவறாமல் எல்லாவற்றிற்கும் வந்திருந்த காலஞ்சென்ற டாக்டர் நாயர் என்பவர் (இவர் இங்கிலாந்து தேசம் போய் எம்.டி. பட்டம் பெற்ற பிரபல வைத்தியர் என்பதை இதை வாசிப்பவர்களுக்கு நான் கூற வேண்டியதில்லை) நாடகம் முடிந்தவுடன், மேடைக்குள் வந்து -ரங்கவடிவேலுவையும் என்னையும் ஏதோ கொஞ்சம் சிலாகித்துப் பேசிவிட்டு, “ஆயினும் சம்பந்தம்! ஒரு தப்பிதம் செய்தாய்!” என்றார்.
என்னவென்று நான் வினவ, “எந்த வைத்தியனாவது தர்மா மிடரை (Thermometer-ஜுரம் பார்க்கும் கருவி) நோயாளியின் நாவில் வைத்து, பிறகு அதனை எடுத்துக் கழுவாமல், அதன் உறையில் போட்டதைப் பார்த்திருக்கிறாயா? சாதாரண நோயாளியாயிருந்தாலே பெரும் தப்பிதமாம். அதிலும் க்ஷயரோகத்தினால் பீடிக்கப்பட்ட நோயாளி!” என்று பதில் உரைத்தார். நாங்களிருவரும் சம்பாஷித்தது ஆங்கிலத்தில்; இங்கு அதைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். அதன்மீது வைத்தியர்கள் முறைப்படி மிகவும் நன்றாய் ஆடிவிட்டோம் என்கிற கர்வம் அடங்கினவனாய், தலை வணங்கி என் தப்பிதத்தை ஒப்புக்கொண்டு, அது முதல் இந் நாடகத்தில் நான் நடிக்கும் பொழுதெல்லாம் இந்தத் தப்பிதம் செய்யாதபடி நடந்து வருகிறேன். நாடக மேடையில் நடிக்க வேண்டும் என்று விரும்பும் என் இளைய நண்பர்களுக்கு இதனால் நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், ஏதாவது வேடம் பூண்டால், அதற்குரிய விஷயங்கள் எவ்வளவு அற்பமானதா யிருந்தபோதிலும், கவனிக்க வேண்டுமென்பதே. இது ஒரு சிறு விஷயம், இதை யார் கவனிக்கப் போகிறார்கள்? என்று கருதலாகாது. அதை அறிந்த ஒரு புத்திமான் சபையில் வந்திருக்கலாம்; அவன் கண்ணுக்கு அக்குற்றம் எப்படியும் வெளிப்படையாகும்.
இந் நாடகத்தில் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், சாமிநாதனாக நடித்தார். அதை அவருக்கென்றே எழுதினேன். ஆயினும் அதை நடிப்பது அவருக்குக் கஷ்டமாயிருந்தது. இதற்குக் காரணம், அவர் ஞாபகசக்தி கொஞ்சம் குறைவாகயிருந்ததேயன்றி வேறொன்றுமில்லை. பள்ளிக்கூடத்தில் வாசிக்கும் பொழுதே அவருக்கு எதையாவது குருட்டுப்பாடம் செய்வதென்றால் கஷ்டமாயிருந்தது. நடு வயதில் தமிழில் குருட்டுப் பாடம் செய்வதென்றால் அவருக்குப் பகீரதப் பிரயத்னம்தான்! அன்றியும் தமிழ் நாடக மேடையையேறி அறியாதவர் இதுவரையில்; ஆகவே மிகவும் கூச்சப்பட்டார். ஆயினும் நாடக தினம், மிகவும் நன்றாக நடித்தார். இதன் பிறகு இரண்டொருமுறை ஆங்கிலத்தில் இவர் நடித்தபோதிலும் இவர் தமிழ் நாடகத்தில் நடித்தது இதுதான் முதன் முறையும் கடைசி முறையுமாம். இவருக்குத் தெய்வ கடாட்சத்தினால் சென்ற வருஷம் ஷஷ்டி பூர்த்தியும் ஆகிவிட்டது. இனி இவர் நாடக மேடையில் தோன்றுவது மிகவும் அபூர்வமாம். மறுபடியும் இவர் நாட்க மேடை ஏறுவாராயின், எங்கள் சபையும் நானும் செய்த பெரும்பாக்கியமெனக் கொள்வேன். இவரிடம் நாடக மேடையைப் பற்றிய ஒரு பெருங்குணம் உண்டு. இவர் தானாக மேடையில் நடிக்க யாது காரணத்தினாலோ அவ்வளவு சக்தியில்லாதவராயிருந்த போதிலும், மற்றவர்களுக்கு இப்படி இப்படி நடிக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுப்பதில் சிறந்த சக்தி வாய்ந்தவர். நாற்பது வருடங்களாக நான் நாடக மேடையில் பழகனவனாயினும், இப்போதும் ஏதாவது புதிதாக நடிப்பதென்றால், அவருடைய புத்திமதிகளைக் கேட்பேன். ‘அமலாதித்யன்’ ‘புத்தர்’ முதலிய கடினமான நாடகப் பாத்திரங்களை நான் ஒத்திகை செய்தபோதெல்லாம், இவர் முன்பாக நடித்துக் காட்டி, இவரது அபிப்பிராயங்களைக் கேட்டு, என்னைத் திருத்திக்கொண்டிருக்கிறேன். இவரை மற்ற ஆக்டர்கள் ஆஸ்ரயித்து இவரது புத்திமதிகளால் அபிவிருத்தி அடையாதது அவர்களுடைய துர்அதிர்ஷ்டம் என்றே நான் சொல்வேன். இவருக்கு நாடகக் கம்பெனியிலும் மற்றக் கம்பெனிகளிலும் உள்ள ஆசையினால், இவரை அண்டிக் கேட்டவர்களுக்கு, எப்பொழுதும் உதவாமற் போனதில்லை. ஆற்றில் ஜலம் ஏராளமாகவும் நிர்மலமாகவும் ஓடும்பொழுது அதை வாரி அருந்தாமற் போனால் யார் தவறு? ஆறு தானாகக் கேட்குமோ, என்னிடமுள்ள ஜலத்தை நீங்கள் ஏன் அருந்தவில்லையென்று?
இவரிடம் இன்னொரு விசேஷமுண்டு. இவருக்குச் சங்கீதம் என்பது கொஞ்சமும் தெரியாது; சங்கீத ஞானம் சற்றுமில்லை; அதாவது ராகங்களைப் பகுத்தறியுஞ் சக்தி கொஞ்சமுமில்லை; ஆயினும் நாடக மேடையில் நடிகர்கள், இப்படி இப்படிப் பாடினால் நன்றாயிருக்குமென்று மிகுந்த புத்தி சாதுர்யமாகச் சொல்லிக் கொடுக்கும் திறமை வாய்ந்தவர்; சங்கீதத்தில் நிபுணர்களுக்கும் இவர் யுக்தி சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஓர் உதாரணத்தை இங்கெடுத் தெழுதுகிறேன்; நந்தனார் சரித்திரத்தில், எனது நண்பர் டாக்டர் ஸ்ரீனிவாச ராகவாச்சாரியார், நந்தனாக நடிப்பதில் எனக்கு நிகரில்லையென்று பெயர் பெற்றிருக்கிறார்; இவர் சங்கீதத்தில் மிகவும் பழகித் தேர்ச்சி பெற்றவர்; ராகக்கியானத் திலும் தாளக்கியானத்திலும் எங்கள் சபையில் எல்லோரையும் விடச் சிறந்தவர் என்றே கூற வேண்டும். இப்படியிருந்தும், நந்தனார் சரித்திர நாடகத்தில், “பிறவிப்பிணி தீர மருந்தொன்றுண்டு பேரின்பமன்றுளே” என்னும் பாட்டின் சரணத்தை ஒரு விதமாகப் பாடும் பொழுது, ஓரிடத்தில் நாடகத்தைப் பார்க்க வந்தவர்களெல்லாம் கரகோஷம் செய்யாத காலமில்லை; ஆயினும் அதை இப்படிப் பாவித்துப் பாட வேண்டுமென்று இவருக்குச் சொல்லிக் கொடுத்தது, எனது பால்ய நண்பரான வி.வி.ஸ்ரீனிவாச ஐயங்காரே. அன்றியும் ஒரு ராகமாவது இப்படிப் பாட வேண்டுமென்று தெரியாவிட்டாலும், ஏதாவது பாடினால், இந்தச் சந்தர்ப்பத்திற்கு இது தகுதியானதன்று, இது தகுதி, என்று சொல்வதில் இவருக்கு இணையானவர்களை நான் கண்டதில்லையென்றே கூறவேண்டும். சிறு வயது முதல் நல்ல சங்கீதத்தைக் கேட்டுக் கேட்டு, சங்கீதச் செவிச் செல்வம் பெரிதும் உடையார். நான் புத்த சரித்திரத்தை நாடக ரூபமாக ஆட ஒத்திகை நடத்தினபோது, அதிலுள்ள பாட்டுகளையெல்லாம் இவருக்குப் பாடிக் காட்டச் செய்து, இவர் சிலவற்றைத் திருத்திக் கொடுக்கப் பெரும்பயனை அடைந்தேன். ஏதாவது சங்கீதம் தனக்குத் திருப்திகரமாயில்லாவிட்டால், “இதென்ன, ஜஷ்டை! நன்றாயில்லை. வேறு ஏதாவது பாடச்சொல்” என்று சொல்வார். அவர் கூறுவது சரியாகத்தானிருக்கும். இவருடைய சங்கீதத்தைப் பற்றி, இதையெழுதும் பொழுது ஒரு சிறு விருத்தாந்தம் எனக்கு ஞாபகம் வருகிறது.
ஒருமுறை நானும் இவருமாகத் திருச்சானூருக்கு ஒரு நண்பருடைய குமாரத்தியின் கலியாணத்திற்காகப் போயிருந்தோம். ஒரு நாள் இரவு, சாப்பிட்டுவிட்டு நாங்கள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தபொழுது, “சம்பந்தம், எனக்கு ராகங்கள் கொஞ்சம் சொல்லிக்கொடு!” என்றார். ஆகட்டும் என்று இசைந்து, அன்று சாயங்காலம் கச்சேரியில் வீணை தனம் வாசித்த சஹானா ராகம், இப்படிப்பட்டதென்று விஸ்தரித்து, என்னாலியன்ற அளவு அதைப் பாடிக் காண்பித்தேன். அதன் முக்கியமான மூர்ச்சையின்னதென்று சொல்லி, அந்த ராகத்தில் எனக்குத் தெரிந்த இரண்டொரு விருத்தங்களையும் பாடிக் காண்பித்தேன்.
பிறகு மறுநாள் நாங்கள் துயில் நீத்து எழுந்தவுடன் கலியாண வீட்டில் நலங்கிற்காகக் குழந்தைகள் பாட, அதை சஹானாராகத்தில் நாதஸ்வரக்காரன் வாசித்தான். உடனே எனது நண்பர், “சம்பந்தம், இதென்ன ராகம்?” என்று கேட்டார்! அதன் பேரில் என்னையுமறியாதபடி எனக்கு அடங்காச் சிரிப்புண்டாக, சிரித்து ஓய்ந்தபின் “இராத்திரி யெல்லாம் ராமாயணம் கேட்டு விட்டு, ராமனுக்குச் சீதை என்ன வேண்டுமென்று கேட்பது போல, இரவெல்லாம் உனக்கு சஹானா ராகத்தைச் சொல்லிக் கொடுத்தேன்! இப்பொழுது இதென்ன ராகமென்று கேட்கிறாயா?” என்று கூறி, ‘ராகத்திற்கும் உனக்கும் ரொம்பா தூரம். இப் பிரயத் தனத்தை விட்டுவிடு’ என்றேன். இது நடந்து அனேகம் வருஷங்களாயின; இருந்தும் இப்பொழுது இதை நான் எழுதும்பொழுது, எனக்கு அடங்காச் சிரிப்பு வருகிறது!
இவ்வாறு ஒரு ராகமும் தெரியாதவர் நாடக மேடை சங்கீதத்தைப் பற்றி எவ்விதம் ஆக்டர்களுக்குப் புத்திமதி கூறத்தக்கவராயிருக்கக்கூடும் என்று இதை வாசிக்கும் சிலர் சந்தேகிக்கக் கூடும். அவர்களுக்கெல்லாம், ‘இப்படிப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் தட்டினால் அவரிடம் சென்று சில நேரம் சம்பாஷித்துப் பாருங்கள் பிறகு அவரது அரிய குணத்தை நன்றாய் அறிவீர்கள்’ என்று நான் பதில் உரைக்கக்கூடும். ஏதோ எனது பால்ய நண்பரை நான் புகழ்கிறேன் என்று நீங்கள் கருதலாகாது. புகழும் பொழுது, “நண்பனைக் காணாவிடத்தும்” என்று பெரியோர்கள் கூறியிருக்கின்றனர். ஆயினும் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரை என் நண்பனாகப் பாவித்தது மன்றி, என் குருவாகவும் பாவிக்கின்றபடியால் அவரை நான் இவ்வாறு புகழ்வது தவறாகாது. நான் மேற்குறித்த பாட்டில், குருவை அவர் முன்னிலையிலும் அவர் இல்லாவிடத்தும் புகழலாம் என்றிருப்பதை, இதை வாசிப்பவர்கள் கவனிப்பார்களாக.
இப் “பொன் விலங்குகள்” என்னும் நாடகத்தில், மற் றொரு முக்கியமான பாத்திரம் பங்கஜவல்லியின் அத்தையாகிய விதவை. காலஞ்சென்ற கா. ச. தேசிகாச்சாரியார் பி.ஏ., பி.எல். இவ்வேடம் பூண்டு மிகவும் நன்றாக நடித்தார். நாடக மேடையின்மீது, அநேகம் “விதவை”களைப் பார்த்திருக்கிறேன். ஆயினும் இவர் அன்று நடித்ததைப் போல் அவ்வளவு நன்றாக நடித்தவர்களை இதுவரையில் கண்டிலன். இந்தத் தேசிகாச்சாரியார் பிறகு எங்கள் சபையில் வேஷம் தரிக்காதது எங்கள் சபை செய்த தௌர்ப் பாக்கியமென்றே சொல்ல வேண்டும். இவரைச் சாதாரணமாக ஒரு பாத்திரம் எடுத்துக் கொள்ளச் செய்வது மிகவும் கடினம்; எடுத்துக்கொண்டாரோ, அப்பாத்திரத்திற்கு ஏற்ற படி மிகவும் சாதுர்யமாக நடிக்கும் குணம் வாய்ந்திருந்தார். இப் பொன் விலங்குகள் என்னும் நாடகத்தில் “பிஸ்தாக் கொட்டை ஸ்வாமிகள்” என்று ஒரு பாத்திரமுண்டு. அது நான் எழுதிய ஹாஸ்ய பாகங்களில் அதி முக்கியமானது. நகைப்பை யுண்டுபண்ணும் பாத்திரங்களுள், “சபாபதிக்கு”ப் பிறகு இதைத்தான் எடுத்துக் கூறவேண்டும். இந்தப் பாத்திரத்தைக் காலஞ்சென்ற எனது நண்பர் டி.வி. கோபால்சாமி முதலியார் எடுத்துக்கொண்டார். அவர் மேடையின் மீது தோன்றியது முதல் கடைசி வரைக்கும் ஜனங்களுக்கு இடைவிடா நகைப்பையுண்டாக்கினார் என்பதற்கு ஐயமில்லை. இவர் இப் பாத்திரத்தை நன்றாக நடித்தமையால் இவருக்கு “பிஸ்தாக் கொட்டைச் சாமியார்” என்றே பெயர் வைத்து விட்டார்கள். இவரைப் பார்த்த அனைவரும், ஒருமுறை இவரே என்னிடம் அடியிற் கண்டிருக்கும் கதையைச் சொல்லியிருக்கிறார். இந்நாடகம் நடித்த சில நாட்கள் பொறுத்து, தென் இந்திய இரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் (தஞ்சாவூரோ என்னவோ, நன்றாய் எனக்கு ஞாபகமில்லை ), இவர் இந்நாடகத்தில் பிஸ்தாக் கொட்டைச் சாமியாராக நடித்ததைப் பார்த்திருந்த, ஹைகோர்ட் ஜட்ஜாயிருந்த கனம் சதாசிவ ஐயரவர்கள், இவரைத் தூரத்தில் பார்த்து, “வாருங்களையா பிஸ்தாக் கொட்டை ஸ்வாமிகளே!” என்று உறக்கக் கூப்பிட, ஸ்டேஷனில் அருகிலிருந்தவர்களெல்லாம் கொல்லென நகைத்தார்களாம்; தனக்கு வெட்கமாயிருந்த போதிலும், ஒருவிதத்தில் சந்தோஷப்பட்டதாயும் எனக்குத் தெரிவித்தார். பிறகு இவரது மரண பர்யந்தம் இவருக்கு இப்பெயரே வழங்கலாயிற்று. யாராவது கோபாலசாமி முதலியார் என்றால், “என்ன, பிஸ்தாக்கொட்டை ஸ்வாமிகளா?” என்பார்கள்.
நான் அதற்குத் தக்க பாத்திரனாக அல்லாவிட்டாலும், என்னிடம் மிகவும் பிரீதி வைத்திருந்த கனம் சதாசிவ ஐயர் அவர்கள், ‘இந்தப் பிஸ்தாக்கொட்டைச் சாமியார் என்கிற பாத்திரத்தை எங்கு பிடித்தீர்?’ என்று ஒருமுறை கேட்ட ஞாபகமிருக்கின்றது. ஆகவே, இப்பாத்திரத்தை அப் பெயருடன் நிர்மாணம் செய்த விவரத்தை இங்கு எழுதுகிறேன்.
1894ஆம் வருஷம் புதுச்சேரியிலிருந்த தனவந்தரான கூனிச்சம்பட்டு லட்சுமணசாமி செட்டியார் என்பவர் தன் குடும்பத்தார் பலருடன் காசி யாத்திரைக்குச் சென்றார். அப்பொழுது அவருக்கு அத்யந்த சிநேகிதராயிருந்த என் தகப்பனாரையும் உடன் அழைத்துச் சென்றார்; என் தகப்பனாருடன் என் தமயனார் ப. ஐயாசாமி முதலியாரும் சென்றார். யாத்திரையாக இப்படிப் புறப்பட்டவர்கள், சிப்பந்திகளுட்பட, ஏறக்குறைய நூறு பெயர் இருந்தனர். இவர்களுள் புதுச்சேரியிலிருந்து ஒரு ஸ்வாமியாரும் இருந்தனர். இத்தனை பெயரும் யாத்திரை செய்வதற்காகச் செட்டியார் அவர்கள் ஒரு பெரிய செலூன் (Saloon) வண்டியும் இதர வண்டிகளையும் சேர்த்து ஒரு ஸ்பெஷல் வண்டி (Special Train) ஆக ஏராளமான திரவியம் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தார். யாத்திரை செய்து கொண்டு போகும் பொழுது, காலையில் இஷ்டமான இடத்தில், இந்த ஸ்பெஷல் வண்டி நிறுத்தப்படும். எல்லோரும் இறங்கி ஸ்நானம் எல்லாம் செய்து, பிறகுதான் சமையலுக்கு ஏற்பாடு செய்வார்களாம். சமையலாக நாழிகையாகும். ஆயினும் இந்த ஸ்வாமியாருக்கு மாத்திரம் யாத்திரைக்குச் செட்டியாருடன் சென்ற சில வயோதிகர்களான விதவைகள் ஒரு பெரிய புட்டியில் பிஸ்தாக் கொட்டைகளை நறுக்கிக் கல்கண்டுடன் கலந்து வைத்திருப்பார்களாம். மற்றவர்களெல்லாம் பசியுடன் காத்திருக்க நம்முடைய ஸ்வாமியார் மாத்திரம், காலையில் பல் விளக்கியவுடன் இந்தப் பிஸ்தாக் கொட்டையையும் கல்கண்டையும் சாப்பிட்டுவிட்டு, ஹாய் என்று இருப்பாராம். இரண்டொரு நாள் காலையில் பட்டினியால் கஷ்டப்பட்ட என் தமயனார் பசியாற்றாது மூன்றாவது! தினம், மெல்ல ஸ்வாமியார் அறியாதபடி அவருக்கென்று வைத்திருந்த புட்டியினின்றும் கொஞ்சம் பிஸ்தாக்கொட்டையையும் கல்கண்டையும் எடுத்துச் சாப்பிட்டுவிட்டாராம்.
இவ்வாறு இரண்டு மூன்று நாட்கள் நடைபெற, ஸ்வாமியார் அவர்கள் தினம் தனக்குக் காலையில் சேரவேண்டிய பிஸ்தாக் கொட்டை கல்கண்டு குறைவதைக் கண்டு, என் தகப்பனாரிடம் போய் முறையிட்டனராம். அதன்பேரில், வேடிக்கையான ஒருவிதக் குறும்பு வாய்ந்த என் தகப்பனார், (தற்காலம் எனக்கிருக்கும் சிறு குறும்பு, அவரிடமிருந்து நான் பிதுரார்ச்சிதமாகப் பெற்றேன் என்று நினைக்கிறேன்) என் தமயனை அழைத்து, சிரித்துக் கொண்டே, “ஐயா சாமி, நீதான் இதைச் செய்திருக்க வேண்டும். இனி முன்பு போல் செய்யாதே! எடுத்தால் சாமியாருக்குத் தெரியும்படியாக அவ்வளவு எடுத்துவிடாதே ஒரே விசையில்! கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சாப்பிடு!” என்று காய்தா செய்தாராம்! இதையெல்லாம் என் தமயனார் எனக்குக் கடித மூலமாகத் தெரிவித்தார். அக்கடிதங்கள், என் பழைய கட்டுகளில் இன்னும் எங்கோ இருக்க வேண்டும் என நினைக்கிறேன். பிறகு என் தமயனுக்கு நான் நிருபம் எழுதும் பொழுதெல்லாம், “உங்கள் பிஸ்தாக் கொட்டைச் சாமியார் எப்படியிருக்கிறார்?” என்று கேட்பேன். இந்த யாத்திரை முடிவு பெறும் வரையில், இதுதான் பிஸ்தாக் கொட்டை ஸ்வாமிகள் எனும் பாத்திரம் என் மனத்தில் உதித்ததற்கு அங்குரார்ப்பணம். இந்த ஸ்வாமியார் மிகவும் ஸ்தூல தேகமுடையவராகவிருந்தாராம். இராதா பிறகு! தினம் காலையில் பிஸ்தாக் கொட்டையும் கல்கண்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தால்! ஆயினும் இவர் வாஸ்தவத்தில் ஒரு மஹானாயிருக்கலாம்! இவரைப்பற்றி எனக்கு வேறொன்றும் தெரியாது. என் அனுபவத்தில் ஸ்வாமியார் என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கும் பலர்களுக்குள் நூறில் ஒருவர்தான் வாஸ்தவமான சன்னியாசியாக இருப்பார்; மற்றவர்களெல்லாம் வயிறு வளர்க்க வேஷம் போடுபவர்களே. இப்படிப்பட்டவர்கள் பேதைகளை ஏமாற்றி ஜீவித்து வருவதை நமது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்றே, இந்த “பிஸ்தாக் கொட்டைச் சாமியாரை” ஒரு நாடகப் பாத்திரமாக இந்நாடகத்தில் எழுதலானேன்.
இந்தப் பிஸ்தாக் கொட்டைச் சாமியாருடைய இரண்டு சிஷ்யர்கள் வேடம், பாலசுந்தர முதலியாரும் நாராயணசாமிப் பிள்ளையும் பூண்டு, சபையோரைக் களிக்கச் செய்தனர்.
இந்நாடகத்தில் வயோதிகனான தமிழ் உபாத்தியாயர் பாத்திரம் ஒன்று வருகிறது; அதற்கு நான் சென்ன கேசவராய முதலியார் என்று பெயர் வைத்தேன். இப்பெயர் வைத்தபொழுது நான் ஒருவரையும் குறிப்பிட்டுச் செய்தவனன்று. ஆயினும் இதற்குப் பல வருஷம் கழித்து, என் சம்பந்தி முறையை வகித்த பச்சையப்பன் கலாசாலைத் தமிழ் வித்வானாயிருந்த செல்வகேசவராய முதலியார், ஒருநாள் என்னுடன் வேடிக்கையாய்ப் பேசிக்கொண்டிருந்த பொழுது, “என் பெயரை என் அனுமதியின்றி உங்கள் நாடகத்தில் உபயோகித்திருக்கக் கூடாது” என்று சொன்னார். அப்பொழுது “ஐயோ! அப்படி யொன்றுமில்லை. உங்கள் பெயரை உபயோகிக்க வேண்டுமென்று செய்தவனன்று. ஏதோ தமிழ் உபாத்தியாயருக்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமேயென்று அப்பெயர் வைத்தேன். இது அகஸ்மாத்தாய் நேரிட்டது” என்று சொல்லி அவர் மன்னிப்பைக் கேட்டேன். இதில் வேடிக்கையென்ன வென்றால், இப்பொன் விலங்குகள் என்னும் நாடகம்தான் மற்ற நாடகங்களைவிட மேலானது என்று இதற்குப் பரிசு கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்த பரீட்சகர்களுக்குள் இவர் ஒருவராய் இருந்தார்! நாடகப் பாத்திரங்களுக்குப் பெயர் வைத்திருப்பதிலும் நாடக ஆசிரியர்கள் ஜாக்கிரதை யாயிருக்க வேண்டியிருக்கிறது!
இப்பொன் விலங்குகள் நாடகத்தில், டி.சி.வடிவேலு நாயகர், மிஸ் ரோஸ் கமலா என்னும் கிறிஸ்தவப் பெண்ணாகவும், பி.ஏகாம்பர ஐயர், பி.ஏ; பி.எல்; ராமச்சந்திரனுடைய தந்தையாகவும் மிகவும் விமரிசையாக நடித்தார்கள்.
இந்நாடகமானது என் குறிப்பின்படி இதுவரையில் 35 முறைதான் ஆடப்பட்டிருக்கிறது. நாடகக் கம்பெனிகள் இதைச் சாதாரணமாக ஆடுவதில்லை. அதற்கு முக்கியக் காரணம் இதில் சங்கீதத்திற்கு இடமில்லாமையேயென்று நினைக்கிறேன். ஒரு முறை வேலு நாயர் இதைத் தன் கம்பெனியைக் கொண்டு சென்னை ராயல் தியேடேரில் ஆடினார். அப்பொழுது என்னை வரவழைக்க, நான் போயிருந்தேன். நாடகத்தை வேலு நாயர் நன்றாய் நடத்திய போதிலும், வந்திருந்த ஜனங்களுக்கு இது சந்துஷ்டியை அளிக்கவில்லை யென்பது என் அபிப்பிராயம். இரண்டுமணி நேரம் நாடகம் நடந்த பிறகு, காலெரி (Gallery) யிலிருந்த ஒருவன் எழுந்திருந்து “என்ன ஐயா? இந்த நாடகத்தில் பாட்டே இல்லையா?” என்று உரக்கக் கேட்டான்! சங்கீதத்தையே விரும்பும் நாடகாபிமானிகளுக்கு இந்நாடகம் பிரயோஜனப்படாது என்பது திண்ணம். மதுரையில் கிங் ஜார்ஜ் அமேடூர் டிராமாடிக் அசோசியேஷன் (King George Amateur Dramatic Association) என்னும் சபையார் சில வருஷங்களுக்கு முன் இதை மிகவும் நன்றாய் நடித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அச்சமயம், ராமச்சந்திரனாகவும் சாமிநாதனாகவும் நடித்த எனது நண்பர்கள் ராவ்சாஹெப் மாணிக்கவாசகம் பிள்ளை, வைகுண்டம் ஐயர் இருவரையும் நான் நேரிற் கண்டானந்திக்கக் கொடுத்து வைக்கவில்லை. சங்கீதம் பாடத் தகுந்த அங்கத்தினர் அதிகமாயில்லாத சபைகள் இந்நாடகத்தை எளிதில் ஆடலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்த 1910ஆம் வருஷம் எங்கள் சபையார் நடத்திய இன்னொரு முக்கியமான நாடகம் “ஹரிச்சந்திரன்” என்பதாம். இதற்கு முன்பாக அநேக ஹரிச்சந்திர நாடகங்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன. இது மிகவும் புராதானமான நாடகம் என்பதற்குச் சந்தேகமில்லை . நமது தேசத்தில் ஹரிச்சந்திரன் கூத்து ஆடப்படாத கிராமங்களில்லையென்றே கூறலாம். ஒருவிதத்தில் இதற்கு முன் அச்சிடப்பட்ட ஹரிச்சந்திர நாடகங்களுள் பிரபலமானது, “சத்ய பாஷா ஹரிச்சந்திரன்” என்று பெயர் வைத்துப் பெங்களூரில் வசித்த அப்பாவு பிள்ளை இயற்றியதுதான். இவரது புஸ்தகத்தில், பழைய பாட்டுகளையெல்லாம் நீக்கி, புதிய மெட்டுகளுடன் அச்சிட்டிருந்தார். இதுதான் நாற்பது ஐம்பது வருடங்களுக்குமுன் நாடகக் கம்பெனிகளால் ஆடப்பட்டு வந்தது. இதை ஆடுவதில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆக்டர் சுப்பராயச் ‘சாரி என்றொருவர் இருந்தார் என்று நான் முன்பே எழுதியிருக்கிறேன். இப்படிப்பட்ட பழைய கதையை, எனது நண்பர் திவான் பகதூர் சரவண பவாநந்தம் பிள்ளை அவர்கள் நூதன வழியில் கதையை அமைத்து எழுதினார். சாதாரணமாக இக்கதையை நாடக ரூபமாக எழுதுகிறவர்கள் ஹரிச்சந்திரனை நோக்கி, நட்சத்திரேசன் முதலியோர் ஏதாவது ஒரு பொய் சொல்லிவிடு போதும், என்று சொன்னதாகவே எழுதியிருக்கின்றனர். எனது நண்பர், “பொய்சொல் என்று ஒருவனைக் கேட்டால் பொய் சொல்லிவிடுவானா?” இது அவ்வளவு ஒழுங்காகவில்லை. ஹரிச்சந்திரன், தானாகப் பொய்புகலும்படியான பல கஷ்டங்களுக்குட்படுத்தி, அவைகள் ஒன்றினாலும் அவன் மனங்கலங்காது, சத்தியத்தையே பேசி வந்ததாகக் கதையை ஏற்படுத்தி மிகவும் சாதுர்யமாக எழுதியிருக்கிறார்.
இந்த அழகிய நூதன அமைப்பை , அவர் எழுதிய புஸ்தகத்தை வாசித்தால்தான் தெரியும். ஆயினும் தமிழ்க் கல்வியில் மிகவும் தேர்ச்சி பெற்று, தமிழுக்கே பல வருடங்கள் உழைத்து வந்த இந் நண்பர் இயற்றிய இந்த ஹரிச்சந்திர நாகடத்தில் என் மனத்திற்கு ஒரு குறை தோன்றுகிறது. அதாவது இந்நாடகம் மிகவும் பெரியதாயிருக்கின்ற தென்பதே. இவர் முதலில் இந்நாடகத்தை வெளியிடு முன் ப்ரூப் காபி (Proof Copy) எனக்குக் காட்டியபடி ஏறக்குறைய எழுநூறு அச்சிட்ட பக்கங்கள் அடங்கியதாயிருந்தது! எனது நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் நானுமாக, ஆசிரியரிடம் இது மிகவும் நீளமாயிருக்கிறது, இதைக் குறுக்க வேண்டும் என்று தெரிவித்தோம். இதற்கு உதாரணமாக, சந்திரமதியை, காசிராஜன் தன் மகவைக் கொன்றதாக விசாரணை செய்த காட்சி மாத்திரம், அச்சிட்ட 60 பக்கங் களுக்கு மேலிருந்தது! தற்காலத்திய செஷன்ஸ் கோர்ட்டு விசாரணை மாதிரி தற்சாட்சி விமரிசை, எதிர் விமரிசை, மறு விமரிசை முதலியவைகளுடன் எழுதியிருந்தது! இதையெல்லாம் மாற்ற வேண்டுமென்று நாங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், எங்கள் வேண்டுகோளுக்குக்கிசைந்து பிள்ளை அவர்கள் நாடகத்தை ஏறக்குறைய முன்னூற்று முப்பது பக்கங்களாகக் குறுக்கினார். இதை எங்கள் சபை ஆடின போது, இதில் மூன்றிலொரு பாகமாகக் குறுக்கி ஆடினோம். அப்படிக் குறுக்கியும், ஏறக்குறைய நான்கரை, ஐந்து மணி நேரம் பிடித்தது!
பல வருஷங்களாகக் கஷ்டப்பட்டு எழுதிய இந் நாடகத்தை ஆசிரியர் அச்சிட்டு வெளியாக்கியவுடன், எங்கள் சபையார் இதை ஆடவேண்டுமென்று தீர்மானித்தனர். ஆயினும் முதலில் எடுக்கும் பொழுதே ஒரு கஷ்டம் வந்தது. தெலுங்கில் ஹரிச்சந்திரனாக நடித்த கே. ஸ்ரீனிவாசன் என்பவர், எங்கள் சபையை விட்டகன்று நெல்லூர் போய்ச் சேர்ந்து விட்டார். தமிழில் அக்காலம் ஹரிச்சந்திரன் வேடம் பூணத் தகுந்தவர்கள் ஒருவருமில்லாதிருந்தது; என்னால் ஹரிச்சந்திரன் வேடம் பூண முடியாது என்று கூறிவிட்டேன். இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களுண்டு. முதலாவது ஹரிச்சந்திரன் வேடம் பூணத்தக்க திடமான காத்திரம் எனக்கில்லை. இரண்டாவது, எனக்கு அரிச்சந்திரன் பாட வேண்டிய பாட்டுகளை யெல்லாம் பாடும்படியான சங்கீத ஞானமில்லை. இவ்வாறு ஹரிச்சந்திரனாயாட எனக்குச் சாமர்த்தியமில்லை என்று மறுக்கவே, எனதாருயிர் நண்பராகிய சி.ரங்கவடிவேலுக்கு மிகவும் வருத்தமுண்டாயிற்று. அவர் அநேக வருஷங்களாக இந் நாடகத்தில் சந்திரமதியாக ஆட வேண்டுமென்று விருப்பமுற்றிருந்தார். என்னை இந்நாடகத்தை யெழுதும்படியாகப் பன்முறை கேட்டும், என்னால் முடியாதென்று மறுத்து வந்தேன்; பிறகு இந்தச் சந்தர்ப்பம் வாய்க்கவே, தன் பொருட்டாவது நான் இந்த ஹரிச்சந்திரன் வேடம் பூணவேண்டுமென்று வற்புறுத்தினார். எங்கள் சபை நிர்வாக சபையாரும் என்னை ஆடும்படிக் கேட்டனர். நூலாசிரியராகிய பவாநந்தம் பிள்ளை அவர்களும் என்னைக் கேட்டனர். இவர்கள் எல்லாம் என்னை வேண்டிக் கொண்டனர் என்று பெருமையாக இதை இங்கு நான் எடுத்து எழுதவில்லை. வாஸ்தவத்தில் சரியாக அப் பாத்திரத்தையாடச் சக்தி அற்றவனாயினும் அதை ஆட நான் ஒப்புக்கொண்டத்தற்குக் காரணத்தைக் கூறினேனே யொழிய வேறன்று. கடைசியில் நிர்வாக சபையில், இவ்விஷயம் தீர்மானத்திற்கு வந்தபொழுது, “எனக்கு ஹரிச்சந்திரனாயாட இஷ்டமில்லை. அந்தப் பாத்திரத்தைச் சரியாக நடிப்பதற்கு எனக்குத் திறமையில்லை; ஆயினும் எனது நண்பர் ரங்கவடிவேலு சந்திரமதி யாக நடிப்பதற்கு இடங்கொடுக்க வேண்டுமென்றே, நான் அரிச்சந்திரனாக நடிக்க ஏற்றக் கொள்ளுகிறேன்” என்று வெளிப்படையாகச் சொல்லி, பிறகே இப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டேன். நான் இதை இங்கு எடுத்து எழுதியதற்கு முக்கியக் காரணம், நாடக மேடையில் பெயர்பெற வேண்டுமென்று விரும்பும் எனது நண்பர்கள் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளும்படி கேட்கப்பட்டால், அப்பாத்திரத்திற்கு நாம் தகுந்தவர்கள்தானா, அதை நம்மால் நடிக்கத் திறமையுண்டா, நமக்குப் பொறுத்தமாயிருக்குமா என்று யோசித்தே பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கவனிக்கும் பொருட்டே.
இந்நாடகம் ஒத்திகை செய்த பொழுது நடந்த ஒரு சிறு சமாச்சாரத்தை இனி எழுதுகிறேன். எனக்கோ பாடத் தெரியாது; ஆகையால் இந்த அரிச்சந்திரனாக நடிப்பதில் வசனத்தைக் கொண்டே நான் சபையோரைத் திருப்தி செய்ய வேண்டியவனாயிருக்கிறேன் என்று யோசித்து, இப் பாத்திரத்தை நடிப்பதில் ஆங்காங்கு உருக்கமான பாகங்களிலெல்லாம் இப்படி இப்படி நடிக்க வேண்டுமென்று யோசித்துத் தீர்மானித்து, கஷ்டப்பட்டு ஒத்திகை செய்து வந்தேன். சந்திரமதியையும், தேவதாசனையும் அடிமையாகக் கொண்ட காலகண்ட ஐயர் வசம் அவர்களை ஹரிச்சந்திரன் ஒப்புவிக்கும் சமயத்தில், கண்களில் நீர் தாரைதாரையாக வரும்படி ஒத்திகையில் ஒரு நாள் நடித்தேன். அத்தினம் எனது ஆக்டர்கள் நாடகாசிரியர் உள்படப் பல அங்கத்தினர், ஒத்திகை செய்யும் அறையில் குழுமியிருந்தனர். பார்த்தவர்களெல்லாம் இது நன்றாயிருக்கிறதென மெச்சினர். ஆயினும் இவர்களே, நாடக தினம் இக்காட்சியை காண அபின், என்னிடம் வந்து, அன்று ஒத்திகையில் நீங்கள் ஆக்டு செய்தது போல் அவ்வளவு உருக்கமாயில்லை என்று கூறினர். நான் யோசித்துப் பார்க்குமிடத்து, ஒத்திகையில் நடித்தது போலத்தான் மேடையின் மீதும் நடித்ததாக எனக்குத் தோன்றியது. அப்படியிருக்க இவர்கள் மனத்தில் ஏன் இப்படிப் பட்டது என்று ஆலோசித்துப் பார்குமிடத்து, நாட மேடையைச் சார்ந்த ஓர் உண்மை எனக்கு வெளியானது. அதாவது, ஜனங்கள், ஒரு ஆக்டர் இன்ன சந்தர்ப்பத்தில் இப்படி நடிக்கப் போகிறான் என்று அறியாதிருக்கும் பொழுது, அந்த ஆக்டர் புதுவிதமாய் நடித்தால், அது அவர்களுக்கு ஆச்சரியமாகத் தோன்றி, அவர்கள் மனத்தில் நன்றாய் உறுத்தி, அவர்கள் மனத்தைக் கவர்கிறது; அதையே மறுபடியும் பார்க்கும் பொழுது, இவன் இந்த சந்தர்பத்தில் இப்படி நடிக்கப்போகிறான் என்று அறிந்தவர்களாதலால், அது அவர்களுக்குச் சாதாரணமாகப் போய்விடுகிறது; இது காரணம் பற்றியே, இங்கிலாந்து முதலிய தேசங்களில், ஆக்டர்கள் ஒத்திகை செய்யும் பொழுது, நாடகாசிரியன், பக்க வாத்தியக்காரர்கள் தவிர மற்றவர்கள் ஒருவரையும் சாதாரணமாகப் பார்க்க விடுவதில்லை.
இதற்குக் காரணம், நான் முன்னே கூறியது என்பதை என் சுயானுபவத்தில் கண்டேன். ஆகவே சாதாரணமாக, ஒத்திகைகள் நடத்தும் பொழுது, உடனிருக்க வேண்டிய ஆக்டர்கள் தவிர மற்றவர்களைப் பார்க்க விடுவது அவ்வளவு நல்லதல்ல. அன்றியும் அப்படி ஆக்டர்களல்லா தாரை ஒத்திகைகளைப் பார்க்க விடுவதில் இன்னொரு கஷ்டம் இருக்கிறது. சில ஆக்டர்கள் கூச்சமுடையவர்களாயிருப்பார்கள்; தாங்கள் அறியாதவர்கள் எதிரில் ஒத்திகை நடத்த நாணப்படுவார்கள்; அன்றியும், அவர்கள் ஏதாவது தவறாக நடித்தால், அந்நியர்கள் எதிரில், கண்டக்டர்கள் அவர்களது தப்பை எடுத்துக்காட்ட மனம் ஒப்பார்கள்; மேலும் ஒத்திகைகளில் ஏதாவது தவறு நடந்தால், இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆக்டர்கள் அல்லாதார், நாடக தினம் வெளியில் உட்கார்ந்து அந்த இடம் வரும் பொழுது, இந்த இடத்தில் இப்படித் தப்பு நடக்கப் போகிறதென்று, அவ்விடம் வருமுன்னமே பேச ஆரம்பிக்கின்றனர். இவைகளையெல்லாம் கருதுமிடத்து, ஆக்டர்களைத் தவிர மற்வர்களை ஒத்திகைகளைப் பார்க்க விடுவது உசிதம் அல்லவென்று எனக்குத் தோன்றுகிறது. இது பற்றியே சில காலம் கழித்து, கண்டக்டர்கள் ஒத்திகை நடத்தும் பொழுது, ஒத்திகை அறையினின்றும் அந்நியரை வெளிப்படுத்தலாம் என்று ஒரு சட்டம் ஏற்படுத்தினேன் எங்கள் சபையில். இதை இதர நாடக சபைகளும் கவனிக்குமாறே இதைப் பற்றி இங்கு விரிவாய் எழுதலானேன்.
இந்த ஹரிச்சந்திரன் நாடகத்தை விக்டோரியா பப்ளிக் ஹாலில் எங்கள் சபையார் நடத்தியபொழுது, ஹாலில் இடமில்லாமல் டிக்கட்டுகள் விற்பதை நிறுத்தும்படி நேரிட்டது. ஆகவே, இதைச் சீக்கிரத்தில் மறுபடியும் இன்னொரு முறை இவ்வருஷமே ஆடினோம். இரண்டு முறையும் நல்ல தொகை வசூலாயிற்று. நான் ஹரிச்சந்திரனாக நடித்தது நன்றாயிருந்ததென என் முன் எல்லோரும் கூறிய போதிலும், அவர்கள் மனத்தில் நான் பாடவில்லை என்னும் குற்றம் இருந்தது என்பதற்குச் சிறிதும் ஐயமில்லை . எனதாருயிர் நண்பர், சி.ரங்கவடிவேலு பற்றி, மிகவும் நன்றாய்ப் பாடி நடித்ததாக எல்லோரும் புகழ்ந்தனர். ஆயினும் இப்பாத்திரத்தில் அ. கிருஷ்ணசாமி ஐயரைப் போல் அவ்வளவு நன்றாய் நடிக்கவில்லை என்பது என் துணிபு. ஆயினும் ரங்கவடி வேலு சந்திரமதியாக நடித்ததில், ஹரிச்சந்திரனை விட்டுப் பிரியும் கட்டத்திலும் காலகண்டர் வீட்டில் பணிவிடை செய்யும் கட்டத்திலும் மிகவும் நன்றாய் நடித்தார் என்பது என் அபிப்பிராயம்; முக்கியமாக மேற்சொன்ன இரண்டாவது கட்டத்தில் ஓர் உயர்குலத்து ஸ்திரீ துர் அதிர்ஷ்டத்தினால் துடைப்பத்தைக் கொண்டு ஒரு வீட்டின் முற்றத்தைப் பெருக்கும்படியான இழிதொழில் புரியும்படி நேரிட்ட பொழுது இப்படித்தான் நடிக்கவேண்டுமென்பதை இவரிடம் நான் கண்டேன். இக்காட்சியில் ரங்கவடிவேலு நடித்தது எல்லோருடைய மனத்தையும் உருகச் செய்தது என்பதற்கு ஐயமன்று. இந்நாடகத்தில் நாங்கள் இருவரும் ஐந்தாறு முறை நடித்திருக்கிறோம். இலங்கைக்குச் சென்று கொழும்பில் ஒரு முறை இதை நாங்களிருவரும் நடித்தபொழுது ரூபாய் 1400க்கு மேல் வசூலாயிற்று. தற்காலம் இந்நாடகத்தை எங்கள் சபையார் நடிக்கும் பொழுது டாக்டர் ஸ்ரீனிவாசராகவாச்சாரியாராவது எஸ். ராகவாச்சாரியாராவது ஹரிச்சந்திரனாக நடிக்கின்றனர். சந்திரமதி வேடம் டி.சி.வடிவேலு நாயகர் பூணுகின்றனர். தெலுங்கில் ஹரிச்சந்திரனாக நடித்த கே. ஸ்ரீனிவாசனுக்குப் பிறகு, பாட்டில் ஸ்ரீனிவாச ராகவாச்சாரியாரை எடுத்துக் கூறுவேன். ஆயினும் இப்பொழுது எங்கள் சபையார் நடிக்கும் ஹரிச்சந்திர நாடகம், திவான் பஹதூர் பவாநந்தம் பிள்ளை அவர்கள் எழுதியதன்று. சில பாகம் வி.வி.தேவநாத ஐயங்கார் எழுதியது; சில பாகம் பவாநந்தம் பிள்ளை அவர்கள் எழுதியது; சில பாகம் நான் அச்சிட்டிருக்கும் பிரதியிலிருந்து எடுத்தது; இவைகளையெல்லாம் சேர்த்து ஆடப்பட்டு வருகிறது. இவ்வாறு கலப்படமாய் ஆடுவது உசிதமல்லவென்பது என் அபிப்பிராயம்.
மேலே நானும் ஹரிச்சந்திர நாடகம் ஒன்று தமிழில் அச்சிட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறேன். அது எழுதப் பட்டது அடியில் வருமாறு: இதற்குச் சில வருஷங்களுக்கு முன் சென்னையில் பள்ளிக்கூடத்தில் வாசிக்கும் சிறுவர்கள் ஒரு நாடக கிளப்பாகச் சேர்ந்து, சில ஆங்கில நாடகங்களை வருஷந்தோறும் நடத்தி வந்தனர். அதன் பெயர் ‘மதராஸ் ஸ்டூடன்ட்ஸ் டிராமாடிக் கிளப்’ (Madras Students Dramatic Club) என்று எனக்கு ஞாபகம். அவர்கள் ஆங்கிலத்தில் நாடகம் ஒன்று நடத்திய பொழுது என்னை அழைத்திருந்தார்கள். அதற்குப் போயிருந்தபொழுது, நான் இந்த ஆங்கிலக் கதைகள் நடத்துவதை விட்டு, நமது தேசத்துக் கதைகளை நடத்தக் கூடாதா என்று கேட்டேன். தென்னாலி ராமன் தகப்பனார் சிரார்த்தத்தைப் பற்றிய கதையொன்று முன்னமே இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன்; அதன்படி, நானிவர்களை இப்படிக் கேட்கவே, “நீங்கள் அப்படிப்பட்ட நாடகத்தை எங்களுக்கு இங்கிலீஷில் எழுதித் தாருங்கள”” என்று அச் சபையார் கேட்டனர். அவர்கள் வேண்டுகோளுக்கிரங்கி ஹரிச்சந்திரன் கதையை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்தேன். அதை அச்சிட்டும் வெளிப்படுத்தினேன். அதை அப்பால்ய சபையார் ஆடிய பொழுது, வந்திருந்தவர்கள் நன்றாயிருந்ததென மெச்சினர். அது பன்முறை சென்னையிலும் நெல்லூர் முதலிய வெளி ஜில்லாக்களிலும் ஆடப்பட்டது. அச்சிட்ட அப் புத்தகத்தின் இரண்டு பதிப்புகளும் செலவழிந்து போய், இன்னும் அப்புஸ்தகம் வேண்டுமென்று அடிக்கடிக் காகிதங்கள் வருகின்றன. இப்படி இது கொஞ்சம் பிரபலமாகவே, மற்றொரு சபையார் திவான் பகதூர் பவாநந்தம் பிள்ளை அவர்கள் அச்சிட்டிருக்கும் புஸ்தகம் மிகப் பெரியதாயிருக்கிறது; ஓரிரவிற்குள் ஆடத் தகுந்தபடி, ஆங்கிலத்தில் நீங்கள் அச்சிட்டிருக்கும் ஹரிச்சந்திர நாடகத்தைத் தமிழில் மொழி பெயர்த்துத் தாருங்கள் என்று கேட்டனர். அதன் பேரில், அதை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டுக் கொடுத்தேன். இது நான்கைந்து முறைதான் ஆடப்பட்டிருக்கிறது. சென்ற வருஷம் ட்ரேட்ஸ் ஸ்டாப் கிளப் (Trades Staff Club) அங்கத்தினர் இதை மிகவும் விமரிசையாக நடித்தனர். நான் பார்த்த சந்திரமதிகளுக்குள் இச்சபையைச் சார்ந்த சந்திரமதி வேஷதாரியே, எங்கள் சபை கிருஷ்ணசாமி ஐயருக்குப் பிறகு, நன்றாய் நடித்தவர் என்பது என் அபிப்பிராயம்.
இந்த ஹரிச்சந்திர நாடகத்தை ஒரு முறை எங்கள் சபையார் நடத்திய பொழுது, ஷ துரைசாமி ஐயங்காரும், வடிவேலு நாயகரும் ஹரிச்சந்திரனாகவும் சந்திரமதியாகவும் நடிக்க, எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலுவும் நானும் காலகண்டியாகவும் காலகண்ட ஐயராகவும் நடித்தோம்.
இந்த ஹரிச்சந்திர நாடகத்தை விட்டகலுமுன் இன்னொரு விஷயத்தைக் குறித்து எழுத விரும்புகிறேன். ஒரு முறை வெளியூரில் இதை எங்கள் சபையார் நடித்த பொழுது, ஸ்ரீனிவாச ராகவாச்சாரியும் வடிவேலு நாயகரும் ஹரிச்சந்திரனும் சந்திரமதியுமாக நடிக்க, நான், அவர்கள் காட்டில் கஷ்டப்படும்பொழுது, அவர்களைப் பயமுறுத்தும் பூதமாக நடித்தேன்; பூதத்திற்கேற்றபடி முகத்தை விகாரமாகச் செய்து கொண்டு, கறுப்பு ஆடை அணிந் தேன்; நான் பேசவேண்டியதெல்லாம், “பூ!” என்னும் ஒரு கூச்சலே! இதை நான் இங்கெடுத்து எழுதவேண்டிய காரணம், நாடகமாடுவதென்றால் ஒரு சபையின் அங்கத்தினன் எந்த வேஷமும் தரிக்கச் சித்தமாயிருக்க வேண்டுமென்பதை என் இளைய நண்பர்கள் அறிய வேண்டியே; நாம் அயன் ராஜபார்ட் ஆக்டராயிற்றே, ஆகவே வேறு சின்ன வேஷங்கள் தரிக்கலாகாது என்று எண்ணலாகாது; அன்றியும் இந்நாடகத்தில் கதாநாயகனாக நடித்தோமே, ஆகவே அதே நாடகத்தில் ஓர் அற்ப வேஷம் தரிக்கலாமா என்று யோசிக்கலாகாது. எந்த வேஷத்தை எடுத்துக் கொள்ளும்படி நேர்ந்த போதிலும் அதற்குத் தக்கபடி நடித்தல்தான் ஆக்டருக்குரிய நற்குணம் அதுவும் முக்கியமாக இதை ஜீவனோபாயமாகக் கொள்ளாது வினோதமாக கொள்ளும் ஆமெடூர் (Amateur) ஆக்டர்களுக்கு.
இந்த வருஷம் தசராக் கொண்டாட்டத்தில் தமிழ் தெலுங்கு நாடகங்களுடன், ஒரு மலையாள நாடகமும் ஒரு சிறு ஹிந்துஸ்தானி நாடகமும் ஆடினோம். இச்சமயம் மலையாளி அங்கத்தினர் பலர் இருந்தபடியால், அவர்களையெல்லாம் சேர்த்து ‘கல்யாணிக் குட்டி’ என்னும் மலையாள நாடகத்திலிருந்து சில காட்சிகள் ஆடினோம். அதில் நான் “கேலு” எனும் நாயர் வேலைக்காரன் வேஷம் பூண்டேன். சில மஹம்மதிய மெம்பர்கள் இருந்தபடியால், ஷேக்ஸ்பியர் எழுதிய “நடுவேனிற் கனவு” (Mid summer Nights’ Dream) என்னும் நாடகத்திலிருந்து ஒரு காட்சியை ஹிந்துஸ்தானியில் மொழி பெயர்த்து, அதை ஆடினோம். அதிலும் எனக்கு ஒரு பாத்திரம் கொடுக்கப்பட்டது. இந்துஸ்தானி பாஷை பேச நான் கற்றுக்கொண்டபடியால், இதில் ஆடுவது எனக்கு எளிதாயிருந்தது. பெரிய நாடகங்களில் முக்கியமான கதாநாயகன் பாகத்தை ஆடுவதில் எவ்வளவு சந்தோஷமாயிருந்ததோ, அவ்வளவு சந்தோஷ மிருந்தது, வேறு பாஷைகளில் இப்படிப்பட்ட சிறிய பாகங்களை எடுத்துக்கொள்வதிலும்; ஒருவிதத்தில் அதைவிட அதிக சந்தோஷமிருந்ததென்றே நான் கூற வேண்டும்; ஏனெனில் பெரிய பாகங்கள் ஆடும்பொழுது எப்படியிருக் குமோ என்னும் பயமிருந்தது; இச் சிறிய பாகங்கள் ஆடும்பொழுது கவலையேயில்லை.
20ஆவது அத்தியாயம்
இனி 1911ஆம் வருஷத்திய நிகழ்ச்சிகளைப்பற்றி எழுதுகிறேன். இவ்வருஷம் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளுள், எங்கள் சபை கொழும்பு நகரம் சென்று நாடகங்களாடியது ஒன்றாகும்; இது ஒரு பெருங் கதையாகையால் சற்று விவரமாய் எழுத வேண்டியிருக்கிறது.
இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு முறை எனதாருயிர் நண்பராகிய ரங்கவடிவேலுவும் நானும், திவான் பஹதூர் மாசிலாமணிப் பிள்ளையுடனும், இன்னும் சில சிநேகிதர்களுடனும் இலங்கைத் தீவிற்குப் போயிருந்தோம். அது வேறு கதையாம். எனது நாடக மேடை நினைவுகளைப்பற்றிய - அதில் நேரிட்ட சந்தர்ப்பத்தை மாத்திரம் இங்கு எடுத்து எழுதுகிறேன். அப் பிரயாணத்தில் கொழும்பு நகரத்தை நாங்கள் சுற்றிப்பார்த்து வந்தபொழுது, எங்களை யெல்லாம் அழைத்துக் கொண்டு போய் ஊரிலுள்ள முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் காட்டிக்கொண்டு வந்த ஒரு நண்பர், ஓரிடத்தில், ‘இங்கே பப்ளிக் ஹால் (Public Hall) இருக்கிறது. இதைப் பார்க்க விரும்புகிறீர்களா?’ என்று கேட்டார். அவர் கொழும்பு நகரத்தாரின் வழக்கப்படி, ஹால் என்கிற பதத்தை, சற்று தவறாக உச்சரிக்க நாங்கள் எல்லாம் நகைத்து, அதை அவசியம் பார்க்க வேண்டுமென்று கூறினோம். உள்ளே நுழைந்தவுடன் அது ஒரு நாடக சாலையாக அமைக்கப் பட்டது என்பதைக் கண்டோம். பிறகு ரங்கவடிவேலுவும் நானும் உள்ளே சென்று எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்று தீர்மானித்து, எங்கள் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு அக் கட்டிடம் முழுவதும் பார்த்தோம். அந் நாடக சாலை சிறிதாயிருந்தபோதிலும் (சுமார் 500 பேருக்கு மேற்கொள்ளாது) அது மிகவும் அழகாய்க் கட்டப்பட்டிருந்தது. உள்ளே எல்லாம் பலவித வர்ணங்களுடைய மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன; நாடக மேடையானது மிகவும் உயரமாக அமைக்கப்பட்டு, அங்கிருந்து பேசினால் ஹால் முழுவதும் எளிதில் கேட்கும்படியான தன்மை வாய்ந்ததாயிருந்தது. நம்முடைய பட்டணத்தில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் எவ்வளவு கத்தினாலும் பாதி ஹாலுக்குமேல் கேட்கவில்லையே, இங்கு எவ்வளவு சௌகர்யமாயிருக்கிறதென எங்களுக்குள் பேசிக் கொண்டோம். அன்றியும் நாடகமாடும் மேடை (Stage)சென்னையிலுள்ளதைவிட, இரு மடங்கு விசாலமானதாயிருந்தது. அன்றியும் அதற்குப் பின்னால் நேபத்யம் (வேஷம் தரிக்கும் இடம்) நாடக மேடையைவிட விசாலாமானதாய், நிலைக்கண்ணாடிகள் முதலியன வைக்கப்பட்டு மிகவும் அழகாயிருந்தது. இதை யெல்லாம் பார்த்து, எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு, ‘இங்கே நாம் நாடகங்கள் ஆடினால் எவ்வளவு நன்றாயிருக்கும்!’ என்று கூற, அதற்கு, ‘நானும் அப்படித்தான் நினைக்கிறேன்!’ என்று வேடிக்கையாகப் பதில் உரைத்து, அவ்விடத்தை விட்டகலுமுன், அங்கிருந்த ஹால்மேல் விசாரணைத் தலைவரை, வேடிக்கையாக, ‘இங்கே யாராவது தமிழ் நாடகங்கள் அல்லது இந்திய நாடகங்கள் போடுகிறார்களா?’ என்று கேட்க, ‘அவ்வதிகாரி, ‘அதிகமாயில்லை. எப்பொழுதாவது ஒரு சமயம் போடுவதுண்டு!’ என்று பதில் உரைத்தார். அதன் மீது, ‘அவர்களுக்கு என்ன வரும்படி சாதாரணமாக வரும்?’ என்று வினவ, அவர் ‘சாதாரணமாக அறுபது எழுபதுவரைக்கும் வரும்’ என்றார். அறுபது எழுபது ரூபாய் ஒரு நாடகத்திற்கு வரும்படி வந்தால், நாம் இங்கு நாடகம் ஆடினாற் போல்தான் என்று மனத்தில் நினைத்துக் கொண்டு, ‘வெள்ளைக்காரக் கம்பெனிகள் ஆடினால் அவர்களுக்கு என்ன வரும்படி வரும்?’ என்று கேட்க அதற்கவர், ‘அவர்களுக்கு நூற்றிருபது, நூற்றைம்பது வரும்!’ என்றார்; வெள்ளைக்காரர்களுக்கு நூற்றைம்பது ரூபாய் வந்தால் எப்படிச் செலவு கட்டி வரும், இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறதென நினைத்துக்கொண்டு வெளியில் வந்தபின், எங்களை அழைத்துக்கொண்டு போனவரைப் பார்த்து இது என்ன சமாச்சாரம் என்று கேட்க, அவர் “இது உங்களுக்குத் தெரியாதா? இங்கெல்லாம் பத்து ரூபாய் நோட்டுகள்தான் சாதாரணமாக வழங்குகிறது. ஆகவே, 60 என்றால் அறுநூறு ரூபாய் என்று அர்த்தம்; எழுபது என்றால் எழுநூறு ரூபாய் என்று அர்த்தம்; நூறு என்றால் நூறு பத்து ரூபாய் நோட்டுகளாகக் கணக்குச் செய்து கொள்ள வேண்டும்!” என்றார். ஆனால் சரிதான் என்று அதனுடன் அதை விட்டோம். அச்சமயம் நானாவது எனது நண்பராவது, எங்கள் சபை இவ்விடம் வந்து நாடகங்கள் ஆடக் கூடும் என்று கனவிலும் நினைத்தவர்களல்ல. அச்சமயம் தூத்துக்குடியிலிருந்து, கப்பல் மூலமாகக் கொழும்பு வந்து சேர, ஓர் இரவெல்லாம் நாங்கள் பட்ட கஷ்டத்தை நினைத்துக்கொண்டு, இது எங்கள் சபைக்குச் சாத்தியமான காரியமல்லவென்று கைவிட்டோம். இதற்கப்புறம் இரண்டு வருஷங்கள் வரையிலும் இதைப்பற்றி ஒருபோதும் நினைத்தவர்களல்ல.
பிறகு இவ்வருஷம் (அதாவது 1911) ஏப்ரல் மாதத்திலோ என்னவோ, ஒரு நாள் எங்கள் சபை நிர்வாக சபைக் கூட்டத்தில், எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், தன் வழக்கப்படி, “என்ன சம்பந்தம்! நம்முடைய சபை ஏதாவது புதியதாய்ச் செய்யவேண்டும். வெறுமையாகப் போட்ட நாடகங்களையே போட்டுக் கொண்டிருப் பதில் என்ன பிரயோஜனம்?” என்று சொன்னார். அதன் மீது அவருக்குப் பதில் சொல்ல வேண்டுமென்று விரும்பினவனாக, வேடிக்கையாக, ‘இந்த வருஷம் நமது சபை சிங்களத்துக்குப் போய் நாடகமாட வேண்டும்!” என்று சிரித் துக்கொண்டே பிரேரேபித்தேன். உடனே ரங்கவடிவேலு தான் ஆமோதிப்பதாகச் சொல்ல, அங்கிருந்தவர்களெல்லாம், ஸ்ரீநிவாச ஐயங்கர் உட்பட, மிகவும் நல்லது என்று குதூஹலத்துடன் ஒப்புக் கொண்டனர்! நான் இதைப்பற்றிப் பிரேரேபித்தபோது வேடிக்கைக்காகச் சொன்னேனேயொழிய, கொஞ்சமாவது இது சாத்தியமான காரியம் என்று நினைத்துச் சொன்னவனே அன்று. அதன்பேரில், நான் வேடிக்கைக்காகச் சொன்னேன், இது அசாத்தியமான காரியம் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும், அனை வரும், “அதெல்லாம் உதவாது, நீதானே சொன்னாய். ஆகவே அதை எப்படியாவது நீதான் நிறைவேற்ற வேண்டும்!” என்று கூறி, அவ்வாறே, நிர்வாக சபைக் கூட்டத்தில் தீர்மானித்து விட்டார்கள்! சரி, யோசிக்கலாம் என்று சொல்லிவிட்டு, அன்றிரவு வீட்டிற்குப் போனவுடன், இதென்ன வேடிக்கையாகக் கூறப்போய், விபரீதமாக முடிந்ததே என்று யோசித்தவனாய் என்னாலியன்ற அளவு பிரயத்தனப்படுகிறேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டபடியால், நாம் பிரயத்தனப்பட்டுப் பார்ப்போம் என்று தீர்மானித்து, கொழும்பில் முன்முறை நாங்கள் போயிருந்த போது தங்கியிருந்த வீட்டுக்காரராகிய மிஸ்டர் துரைசாமி என்பவருக்கு இதைப்பற்றி ஒரு நிருபம் எழுதினேன். எழுதியபோது என் தாத்பர்யம் என்னவென்றால், உங்கள் சபை இங்கு வருவது சௌகர்யமாயிராது, சபைக்கு நஷ்ட முண்டாகும் என்று பதில் எழுதிவிடுவார். அதைக் கமிட்டி யாருக்குக் காண்பித்து, என்னாலியன்ற அளவு முயன்று பார்த்தேன், என்மீது பழியில்லை என்று கூறிவிடலாம் என்பதே. எனது கொழும்பு நண்பர் என்ன செய்தார் என்றால், நான் நினைத்ததற்கு மாறாக, “உங்கள் சபை சந்தோஷமாக இங்கு வரலாம்; உங்களுக்கு ஒன்றும் நஷ்டம் வராது!” என்று உடனே பதில் அனுப்பினார்! அதற்குமேல் நான் என்ன செய்வது? ‘இதென்னடா கஷ்டமாக முடிந்ததே!’ என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது, ‘கொழும்பிலிருந்து பதில் வந்ததா?’ என்று விசாரித்துக் கொண்டிருந்த ரங்கவடிவேலு, அதைப் படித்துப் பார்த்துவிட்டு “எப்படியாவது நம்முடைய சபை அங்கே போக வேண்டும்” என்று வற்புறுத்தினார். அவர் இப்பிரயாணத்தின் மீது மிகவும் மனம் வைத்திருக்கிறார் என்று அறிந்து அதன் பலவிதமான கஷ்டங்களை எண்ணிய வனாய், அவைகளை யெல்லாம் அவருக்கு நான் எடுத் துரைக்க, அவர் அவற்றை யெல்லாம் கேளாதவராய், “இதையெல்லாம் என்னிடம் சொல்லுவானேன்? உங்களுக்கு மனம் இல்லை என்று சொல்லிவிடுங்கள். நீங்கள் மனம் வைத்தால் இது எப்படியும் முடியும் என்று எனக்குத் தெரியும்!” என்று பதில் உரைத்தார். இதன் பேரில் நான் வாயெடுக்க வகையில்லாதவனானேன். என்னை ஏதாவது ஒரு காரியம் செய்யும்படி உந்த வேண்டுமென்றால், எனதுயிர் நண்பர், இந்த மார்க்கத்தை நன்றாகக் கற்றிருந்தார். அன்றியும், இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு ஹனுமாருடைய குணத்தில் ஒரு சிறு குணம் எனக்குண்டெனத் தெரிவித்திருக்கின்றேன்! ‘சரி, இனிப் பேச்சில்லை ! அப்படியே ஆகட்டும்!’ என்று கூறிச் சபை எப்படியாவது கொழும்பிற்குப் போய்த்தான் தீர வேண்டுமென்று தீர்மானித்து, ‘நீ ஒன்றும் பயப்படவேண்டாம்!’ என்று எனதுயிர் நண்பரிடம் கூறி எல்லாம் வல்ல இறைவன் மீது பாரத்தைச் சுமத்தி, ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தேன்.
மேற்சொன்னபடி ஆரம்பித்த நாள் முதல் கொழும்புக்குப் போய் நாங்கள் முதல் நாடகம் கொடுத்த ராத்திரி வரையில் ஒரு நாளாவது என் வழக்கப்படி நித்திரை செய்யவில்லை என்று கூறுவேனாயின் அது பொய்யாகாது. நான் அந்த ஒரு மாதம் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. ஆயினும் அவ்வளவு கஷ்டப்பட்டோமேயென்று நான் துக்கப்படவில்லை. அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துக் கொண்ட காரியத்தை ஸ்வாமியின் கிருபையால் பூர்த்தி செய்தோமேயென்று சந்தோஷப் படுகிறேன். எனக்கு நேரிட்ட கஷ்டங்களில் சிலவற்றை இங்கெடுத்து எழுதுகிறேன்.
முதலில், பிள்ளையார் குட்டாக, எனது தெலுங்கு நண்பர்களில் ஒருவர், தமிழில் மாத்திரம் நாடகம் நடத்தப் போகிறார்கள் தெலுங்கிலில்லை என்கிற காரணத்தினாலோ, அல்லது வேறு எக்காரணத்தினாலோ சில தெலுங்கு ஆக்டர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ‘சபை கொழும்பிற்குப் போகக்கூடாது!’ என்று ஆட்சேபித்து, அதற்காகச் சபைப் பொதுக்கூட்டத்தில் இதைத் தீர்மானிக்க வேண்டுமென்று ஒரு மஹஜர் (Mahajzar) தயார் செய்ய ஆரம்பித்தார். அவர்களுடனெல்லாம், மெல்லப் பேசி அவர்களுக்குச் சமாதானம் சொல்லிவிட்டு, கடைசியாக இதற்கெல்லாம் தலைவனாக இருந்த அவரையே நேரிற் கண்டு அவரது ஆட்சேபணைகளுக்கெல்லாம் சமாதானம் சொன்னேன். கடைசியாக அவர் வேறு நியாயம் எடுத்துக் கூற வகையறியாமல், “நீ சத்தியமூர்த்தியையும் உன்னுடன் அழைத்துக்கொண்டு போகிறதாகக் கேள்விப்பட்டேன். அவன் இப்பொழுதுதான் ஆக்டு செய்யக் கற்றுக்கொள்ளுகிறான். அவனை அழைத்துக்கொண்டு போவதில்லை என்று வாக்குக் கொடுப்பாயின், எங்கள் ஆட்சேபணையை மீட்டுக் கொள்ளுகிறோம்!” என்று கூறினார். அதன்மீது எனக்குக் கோபம் வந்து, ‘நான் சத்தியமூர்த்தியை அழைத்துக் கொண்டு தான் போவேன். நான் ஒருமுறை கூறிய மொழியினின்றும் தவறேன். வருவது வரட்டும், உம்மாலானதை, நீர் பாரும்!’ என்று பதில் கூறிவிட்டு விலகி வந்தேன். அதன்பேரில், ஏது, நம்முடைய ஜபம் சாயாது போலிருக்கிறது! என்று, அந்த ஆட்சேபணையை விட்டார். இந்நண்பர் இன்னும் உயிருடன் இருக்கிறபடியால் இவர் பெயரை இங்கு நான் எழுத எனக்கிஷ்டமில்லை .
பிறகு அங்கு போய் வருவதற்கு ஆக்டர்களைச் சேர்க்கவேண்டிதாயிற்று. எங்கள் நிர்வாக சபையார் அவ்விடம் 5 நாடகங்களாவது கொடுத்தால்தான் செலவு கட்டிப்போகும் என்று தீர்மானித்தார்கள். அப்படித் தீர்மானிக்கப்பட்ட நாடகங்கள் : ‘லீலாவதி சுலோசனை, மனோஹரன், காலவ ரிஷி, அமலாதித்யன், சாரங்கதரன்’; காலவ ரிஷி தவிர, மற்ற நான்கும் பெரிய நாடகங்களே. அவ்விடத்திற்குப் போனால் நம்முடைய முக்கியமான நாடகங்களை ஆடிக் காண்பிக்க வேண்டுமென்பது எங்கள் கருத்து. இந்த ஐந்து நாடகங்களுக்கும் வேண்டிய ஆக்டர்களை ஒவ்வொருவராகச் சேர்க்க வேண்டியதாயிற்று; வக்கீல்களாகிய சிலருக்குத்தான் கோடைகால விடுமுறை இருந்தது. மற்றவர்கள் உத்தியோகத்திலிருந்தவர்களுக்கென்ன செய்வது? ஒவ்வொருவராக அவர்களை வர வழைத்து அவர்களை யெல்லாம் வரும்படி சொல்ல வேண்டியதாயிற்று; அதிலும், தற்காலம் எங்கள் சபை வெளியூருக்குப் போவதென்றால் ‘சபையாரே ஆக்டர்களுடைய செலவையெல்லாம் ஏற்றுக்கொள்வது போல் அப்பொழுது இல்லை. ஆக்டர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் செலவைத் தாங்களே ஏற்க வேண்டியதாயிருந்தது. இலங்கைக்கு வர விரும்பும் ஒவ்வொருவரும் ரூபாய் 50 கொடுக்க வேண்டுமெனத் தீர்மானித்தோம். இவ்வாறு ஒவ்வொரு ஆக்டரையும் 50 ரூபாய் கொடுத்து எங்களுடன் வரும்படி செய்ய வேண்டியதாயிற்று. எனக்கு ஞாபகமிருக்கிறவரையில் ஒரு ஆக்டரைத்தான் சபையின் செலவில் அழைத்துக்கொண்டு போனோம்; மற்றவர்கள் எல்லாம் தங்கள் பணத்தைக் கொடுத்தே வந்தார்கள். பணம் கொடுப்பதன்றிப் பல ஆக்டர்கள், தங்கள் ஆபீசிலிருந்து விடுமுறை பெற்று வர வேண்டியதாயிற்று. இதற்கு முன் இரண்டு மூன்று முறை எங்கள் சபை வெளியூருக்குப் போனபோது ஐந்தாறு நாள்தான் பிடித்தது; இம்முறை குறைந்த பட்சம் இரண்டு வாரம் விடுமுறை பெற வேண்டியதாயிற்று. ஒவ்வொரு முக்கியமான ஆக்டருக்கும் யார் மூலமாகப் போனால் லீவு கிடைக்கும் என்று யோசனை செய்து, அவர்களைப் பிடித்து அவர்களுக்கு விடுமுறை வாங்கிக் கொடுத்தேன். சாதாரணமாக ஆபீசுகளில் லீவு கொடுப்பதே கடினம்; அதிலும் கொழும்புக்குப் போய் நாடகமாடுவதற்கு லீவு வேண்டுமென்று கேட்பது எளிதா என்று இதை வாசிக்கும் நண்பர்களே யோசித்துப் பார்க்கலாம். எங்கள் சபையில் முக்கியமான ஆக்டர்களில் ஒருவராகிய அ. கிருஷ்ணசாமி ஐயர் யாது காரணத்தினாலோ வர முடியாமற் போயிற்று. ஆகவே, பத்மாவதி வேஷத்திற்காக முக்கியமாக எஸ். பத்மநாபராவை அழைத்துக் கொண்டு போக வேண்டியது அவசியமாயிற்று. அவர் “நாடகமாடு வதற்காக வெளியூருக்குப் போவதற்காக லீவு கேட்ப தென்றால், என்னால் முடியாது. என் ஆபீசரிடம் நீங்கள் சொல்லி எனக்கு லீவு வாங்கிக் கொடுத்தால் வருகிறேன்” என்று சொல்லி விட்டார். அதன்பேரில் அவரது ஆபீசரிடம் போய், ‘பத்மநாபராவ் இல்லாவிட்டால் எங்கள் சபை கொழும்புக்குப் போவதே நின்று விடும்!’ என்று சொல்லி, நயமாகப் பேசி, இரண்டு வாரம் அவருக்கு லீவு வாங்கிக் கொடுத்தேன். சில ஆக்டர்களுடைய தகப்பன்மார்கள் அவ்வளவு தூரம் போவதென்றால் ஆட்சேபணை செய்வதாக அறிந்து, அவர்களிடமெல்லாம் போய், “இதில் ஒன்றும் அபாயமில்லை, நாங்கள் எல்லாம் போகவில்லையா?” என்று நியாயங்கள் எடுத்துக் கூறி, அவர்களை யெல்லாம் சம்மதிக்கும்படிச் செய்ய வேண்டியதாயிற்று.
இதிலெல்லாம் பெரிய கஷ்டம் என்ன வென்றால், பிராம்மணர்களாயிருந்த சில ஆக்டர்கள் “தூத்துக்குடியி லிருந்து கொழும்புக்கு ஒரு ராத்திரியெல்லாம் சமுத்திரத்தின் மீது போக வேண்டியதாயிருக்கிறது. அதற்கு எங்கள். பந்துக்கள் ஒப்பமாட்டார்கள்; பிறகு எங்களை ஜாதிப்பிரஷ்டம் செய்து விடுவார்கள், நாங்கள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். இந்தச் சங்கடத்திற்கு என்ன செய்வது?” என்று ஆட்சேபித்தார்கள். அவர்களுக்கெல்லாம், ‘சமுத்திரத்தின் மீதிருக்கும்போது நீங்கள் ஒன்றும், தாகத்திற்குக்கூடப் புசிக்க வேண்டியதில்லை. ஒரு ராத்திரியில் போய்ச் சேர்ந்து விடுவோம்!’ என்று சொல்லி, அவர்களுடைய தகப்பன்மார் முதலிய பெரியோர்களைப் பார்த்து அவர்களை யெல்லாம் இசையும்படிச் செய்ய வேண்டியதாயிற்று. இவைகளை யெல்லாம் ஒருவாறு செய்து முடித்த பிறகு, எங்களுடன் சமையலுக்காகப் பிராம்மண சமையல்காரர்களை அழைத்தால் ஒருவரும் வரமுடியாதென்று சொல்லி விட்டார்கள்! “பிராம்மணர்கள் சமுத்திரத்தைத் தாண்டலாகாது; அதிலும் நாங்கள் சமையல் வேலை செய்பவர்கள், எங்களை ஜாதிப் பிரஷ்டம் செய்து விடுவார்கள்; பிறகு எங்கள் ஜீவனமே போய் விடும்!” என்று வாஸ்தமாகச் சொன்னார்கள். இப்பொழுது சிலோன், ரங்கூன், சீமைக்குப் பிராம்மணர்கள் போய் வருவது சகஜமாய் விட்டபோதிலும், அக் காலம் மிகவும் அரிதாயிருந்ததென்றே சொல்ல வேண்டும். எனக்குத் தெரிந்தவரை, பிராம்மணர்கள் சிலோனுக்குப் போய் வந்தது மிகவும் அரிதாம். எங்கள் சபை ஒரு முறை போய் வந்த பிறகு, அநேகம் சபைகள் போயிருக்கின்றன. நாங்கள் போய் வந்த சௌகர்யத்தைக் கண்டு மற்றவர்களும் போய் வருவது பிறகு சாதாரணமாய் விட்டது. ஆயினும் இவ்விஷயங்களிலெல்லாம், முதலில் கால் வைப்பவன் பாடுதான் கஷ்டம். அந்த வைஷ்ணவ பிராம்மணச் சமையற்காரர்களை வரவழைத்து, அவர்களுடன் பல நியாயங்கள் எடுத்துக் கூறியும் அவர்கள் இசையவில்லை . கடைசியாக, “வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் முதலியோர் எங்களுடன் வரப் போகிறார்கள்; அவர்களுக்கு என்ன கஷ்டம் வருகிறதோ, அதுதானே உங்களுக்கும் வரப் போகிறது? அவர்களுக் காகிறது உங்களுக்காகிறது; நீங்கள் பயப்பட வேண்டாம். அப்படி ஏதாவது வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம்!” என்று சொன்னதன் பேரில், அவர்கள் ஒருவாறு இசைந்தார்கள்.
பிறகு எங்கள் படுதாக்கள், உடுப்புகள் முதலியவற்றையெல்லாம், ரெயில் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் கொண்டு போக ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. நாங்கள் எடுத்துக் கொண்டு போன சாமான்கள், ஒரு வாகன் நிறைய இருந்ததென்றால், அவைகளை யெல்லாம் கட்டி ரெயில் மூலமாகவும் கப்பல் மூலமாகவும் கொண்டு போய்க் கொண்டு வர எவ்வளவு கஷ்டமாயிருக்க வேண்டுமென்று இதைப் படிக்கும் நண்பர்கள் தீர்மானித்துக் கொள்ளலாம். அன்றியும் சபையின் அங்கத்தினர் ரெயில் மூலமாகவும் கப்பல் மூலமாகவும் குறைந்த சார்ஜில் (அரை சார்ஜில்) போய்வர மேல் அதிகாரிகளுக்கு எழுதி உத்தரவு பெற வேண்டியிருந்தது; இதிலெல்லாம் எனது நண்பர் பி.எஸ். தாமோதர முதலியார் மிகவும் சிரமம் எடுத்துக்கொண்டு உதவினார். இவ்விஷயத்தில் இந்தப் பிரயாணத்திலும், பிறகு சபை போன அநேகம் பிரயாணங்களிலும் இவர் சபைக்காக எடுத்துக் கொண்ட சிரமமானது என்றும் மறக்கற்பாலதன்று. தற்காலம் உலக இன்பத்தைத் துறந்து சன்னியாசியாக வசித்து வரும் இவருக்கு என்றும் எங்கள் சபை நன்றியறிதலுடையதாயிருக்க வேண்டும். இவ்வேற்பாடுகள் எல்லாம் செய்த பொழுது இரவென்றும் பகலென்றும் பாராமலும் நித்திரையென்றும் பசியென்றும் பாராமலும் இவர் உழைத்தது ஈசனுக்குத்தான் நன்றாய்த் தெரியும்; எனக்குக் கொஞ்சம் தெரியும். இது ஒரு கஷ்டமா என்று கூறுவார்கள் சிலர்; இம்மாதிரியாக, ஒரு நாடக சபையை ஓர் ஊருக்கு அழைத்துக்கொண்டு போகவேண்டிய ஏற்பாடுகள் செய்து பார்த்தால் அப்பொழுதுதான் அவர்களுக்குத் தெரியும்.
இவைகளையெல்லாம் ஏற்பாடு செய்த பிறகு, முன்னதாகக் கொழும்புக்குப் போய், அங்கு நாங்கள் தங்கியிருப் பதற்கு வேண்டிய வசதி முதலியவற்றைப் பேசி வைப்பதற்கும், நாடக விளம்பரங்கள் முதலியவற்றைப் பிரசுரம் செய்வதற்கும் யாரையாவது உடனே அனுப்ப வேண்டுமென்று, எனது கொழும்பு நண்பர் எழுதினார். அதன்பேரில் எனதுயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவையும், யாழ்ப் பாணத்தில் பிறந்தவராகிய ஜெ.பி. ஷண்முகம் பிள்ளையையும், முன்னதாக அனுப்பி வைத்தேன். இவர்களிருவரும் முன்னதாகப் போய்ச் சேர்ந்து எங்களுக்கு இருப்பிடம் முதலியன வெல்லாம் ஏற்பாடு செய்து வைத்தனர். எனதுயிர் நண்பர் தினம் எனக்கு அங்கிருந்து காகிதம் எழுதிக்கொண்டிருந்தார். அக்காகிதங்களில் நமது நாடகங்களுக்கு வசூலாவது நமது செலவுக்குக் கட்டிவருமோ என்னமோ எனக்கு சந்தேகமாயிருக்கிறதெனப் பன்முறை தெரிவித்தனர். சென்னையிலிருந்த எனது நண்பர்களும், இப்பெரிய பிரயாணத்தை எடுத்துக்கொண்டோமே, சபைக்கு இதனால் பெரும் நஷ்டம் வந்தால் என்ன செய்கிறதென மிகவும் பயந்தனர். வாஸ்தவத்தில் எனக்கும் பயமாகத்தானிருந்தது. இப்படியிருக்கும் தருவாயில், நாங்கள் புறப்படுவதற்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன், ஒரு நாள் எனக்கு ஒரு தந்தி வந்தது. ‘ஐந்து நாடகங்களுக்கு 2500 ரூபாய்க்கு ஒருவர் கண்டிராக்ட் எடுத்துக் கொள்வதாகச் சொல்லுகிறார். அதை ஒப்புக் கொள்ளவா?’ என்று; நான் மிகவும் சந்தோஷப்பட்டவனாகி, எமது நிர்வாக சபை அங்கத்தினர்க்கு அதைக் காண்பித்துக் கேட்க, எல்லோரும் மிகவும் சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டனர். நாங்கள் வரவு செலவுக் கணக்குப் பார்த்ததில், நாடகம் ஒன்றிற்கு 500 ரூபாய் வந்தால், நஷ்டமின்றிச் சரியாகப் போகும் என்று கணக்கிட்டிருந்தோம். ஆகவே மேற்கண்டபடி ஒருவர் கண்டிராக்ட் எடுத்துக்கொண்டால் நமக்கு நஷ்டமேயிராது என்று குதூஹலத்துடன் சம்மதித் தோம். அதன்படியே இங்கிருந்து தந்தி கொடுத்து அந்த ஏற்பாட்டை ஒப்புக் கொண்டோம். நஷ்டம் வருமே என்கிற பயம் இதனால் அடியுடன் தீர்ந்தபோதிலும், மற்ற ஏற்பாடுகளெல்லாம் இரவு பகலாகச் செய்ய வேண்டியிருந்தது. அச்சமயம் எனது பால்ய நண்பர் வி.வி.. ஸ்ரீனிவாச ஐயங்கார் கோடைக்கானலுக்குத் தேக சௌக்கியத்திற்காகப் போயிருந்தார். அவருக்கு “நீ உடனே திரும்பிப் பட்டணம் வந்து சேராவிட்டால், எனக்குப் பைத்தியம் பிடித்துப்போம்!” என்று தந்தி கொடுத்து அவரை நான் வரவழைத்தது எனக்கு ஞாபகமிருக்கிறது.
பிறகு எல்லா ஏற்பாடுகளையும் முடித்துக்கொண்டு ஒரு புதன் கிழமை இங்கிருந்து புறப்பட்டோம். யாரோ, வியாழக்கிமை வார சூலை, ஆகவே வியாழக்கிழமை புறப்படக்கூடாதென்று சொன்னார்கள். இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லா விட்டாலும், யாராவது இது நல்லதல்ல வென்று ஏதாவது சொன்னால் அவர்கள் மனம் கோணாதபடி அவர்களிஷ்டப்படியே நடப்பது என் வழக்கம். சென்னையிலிருந்து தூத்துக்குடி போய்ச் சேர 24 மணி நேரம் பிடித்தது. ரெயில் பிரயாணத்தில் ஒரு கஷ்டமுமில்லை; ஆங்காங்கு சிநேகிதர்களுக்கு முன்னதாக எழுதி, உணவு முதலியவற்றை யெல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருந்தோம். தூத்துக்குடியிலிருந்து கப்பல் யாத்திரையில்தான் மிகவும் கஷ்டப்பட்டோம். என்னுடன் வந்த சுமார் 40 பெயர்களில் ஒருவராவது இதற்கு முன் சமுத்திரத்தின் மீது பிரயாணம் செய்ததில்லை. போதாக்குறைக்குத் தூத்துக்குடி ஆர்பரிலிருந்து, எங்களை ஏற்றிக் கொண்டு போக வேண்டிய கப்பலானது ஒரு மைலுக்கு அப்பால் தங்கியிருந்தது; அதைப் போய்ச் சேர ஸ்டீம்லான்ச்சில் போகவேண்டியிருந்தது; இதில் நாங்கள் இத்தனை பெயரும் எங்கள் சாமான்களுடன் ஏறிப் புறப்பட்டவுடன், அலைகள் மோத ஆரம்பிக்க, இந்த லான்ச்சானது மேலும் கீழுமாக ஆடத் தலைப்பட்டது. பயங்காளிகளாகயிருந்த சில அங்கத்தினரும், எங்களுடன் வந்த சில வேலைக்காரர்களும் அழத் தொடங்கினார்கள்! அவர்களுக்கெல்லாம் தைரியம் சொன்ன போதிலும் எனக்கும் பயமாகத்தானிருந்தது. அப்பொழுது நடந்த ஒரு சிறு சமாச்சாரத்தை இங்கெழுதுகிறேன். நான் கொஞ்ச நேரம் கண்களை மூடிக் கொண்டிருக்க, என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு நண்பர், நான் கண் விழித்தவுடன், ‘ஏன் கண்ணை மூடிக்கொண்டிருந்தீர்கள்?’ என்று கேட்க, “இத்தனை பேரும் என்னை நம்பி இப் பிராயணத்திற்கு உடன்பட்டிருக்கிறார்கள். இவர்களை யெல்லாம் இப் பிரயாணத்தை முடித்துக்கொண்டு, பத்திரமாய் அவரவர்கள் வீட்டிற்குக் கொண்டு போய்ச் சேர்ப்பிக்கும்படியாக, ஸ்வாமியைக் குறித்துப் பிரார்த்திக்கிறேன்” என்று உண்மையை உரைத்தேன்.
ஸ்டீம் லான்ச்சிலிருந்து கப்பலைப் போய்ச் சேர்ந்த வுடன், இந்தக் கஷ்டம் ஒழிந்தது என்று எல்லோரும் சந் தோஷித்தார்கள். ஆயினும் இனி வரப்போகிறதை அறிந்தவனாய், எல்லோரையும் ஜாக்கிரதையாயிருக்கும்படி எச்சரித்து விட்டு, என் படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்டேன். இதைக் கண்டு என்னைப் பயங்காளி என்று ஏளனம் செய்துவிட்டு, எல்லோரும் கப்பலின் மேல் பாரிசத்திலிருந்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். முதலில் ஒரு கஷ்டமுமில்லாவிட்டாலும், கப்பல் வேகமாய்ப் போக ஆரம்பித்தவுடன் கப்பல் மேலும் கீழுமாய் அலைக்கப்பட, ஏறக்குறைய ஒருவர் தவறாமல் வாந்தியெடுத்து கீழே அவரவர்களுடைய படுக்கைக்கு வந்தனர். எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் நான் ஒருவன்தான் வாந்தி எடுக்காதவன். இந்த வாந்திக்கு சீ சிக்னெஸ் என்று பெயர். இது சாதாரணமாக முதல் முறை கடல் யாத்திரை செய்பவர்களுக்கெல்லாம் காணுவதுண்டு. இதற்கு அநேகம் பெயர் அநேகம் சிகிச்சை சொல்லுகிறார்கள். எனக்குத் தெரிந்த வரையில், கடல் பிரயாணம் சகஜமாகிற வரையில், உணவை மிதமாக்கி, கப்பல் மிகவும் அதிகமாய் அசையும்பொழுது பேசாது படுக்கையில் படுத்துக்கொண்டிருப்பதுதான் தக்க சிகிச்சை. ஆயினும் இதை வாசிக்கும் எனது நண்பர்கள், இந்த வாந்திக்காகப் பயப்பட வேண்டியதில்லை. இப்படி வாந்தி யெடுத்து விட்டால், உடலிலிருக்கும் பித்த ஜலமெல்லாம் போய், உடம்பிற்கு ஆரோக்கியத்தையே தருகிறது. நான் மூன்று முறை தூத்துக்குடியிலிருந்து கொழும்பிற்குப் போயிருக்கிறேன். அம் முறைகளிலெல்லாம், அக் கப்பல் தலைவர்களைக் கேட்டதில், அவர்கள் எல்லோரும், ஆசியா கண்டத்தில் கப்பல் யாத்திரை செய்யும் பொழுது, சமுத்திரத்தை இவ்விடத்திற் கடப்பது மிகவும் கடினமானது; முக்கியமாக அரேபியன் சமுத்திரமும், வங்காளக் கடலும் கலக்கும் இடத்தில், கப்பலானது மிகவும் கலகப்படுகிறது என்று சொல்லியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு இம்முறை, கப்பலின் பங்கில் (படுக்கையறையில்) என்னுடன் படுத்திருந்தவர் ஒரு கோமுட்டிச் செட்டியார்; கோமுட்டிகளெல்லாம் பயங்காளிகள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆயினும் “முதலியார் ஜம்பம்!” என்று முதலியார்களைப் பற்றிச் சொல்வதுபோல், பயங்காளி கோமுட்டி என்று ஒரு வழக்கச் சொல் உண்டு. அந்தப் பழமொழிக்கு ஒத்த குணமுடையவர் என்னுடனிருந்த செட்டியார் (அவர் பெயரை இங்கு நான் வெளியிட இஷ்டமில்லை). அவர் கண்களில் நீர் ததும்ப, நீதான் எப்படியாவது என்னைக் காப்பாற்றி, என் பெண்சாதிப் பிள்ளைகளிடம் கொண்டு போய்ச் சேர்ப்பிக்கவேண்டும்!” என்று அழ ஆரம்பித்தார். அவருக்குச் சமாதானம் சொல்வது என் பாடு போதுமென்றாயிற்று. பிறகு “இரவு எவ்வளவு நீடித்திருந்தாலும் பொழுது விடிய வேண்டிய காலம் வந்துதான் தீர வேண்டும்!” என்னும் முதுமொழிக்கிசைய, அதிகாலையில் கொழும்புத் துறைமுகம் போய்ச் சேர்ந்தோம். கப்பல் ஆட்டம் நீங்கி, நிம்மதியடைந்தோம். கொழும்புத் துறைமுகத்தின் நிபந்தனைகளின் பிரகாரம், எங்கள் சாமான்களையெல்லாம் பரிசோதித்து, எங்களையும் வைத்தியர்கள் பரிசோதித்த பிறகுதான் நாங்கள் கப்பலைவிட்டு இழியவேண்டியதாயிற்று. இதற்குள்ளாக, எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும், கொழும்பில் பெரிய கனவானாயிருந்த - நான் முன்னே கூறியபடி எங்களைக் கொழும்பிற்கு வரும்படி அழைத்த சர். ராமநாதன் என்பவரின் மூத்த குமாரரான, ராஜேந்திரா என்பவரும் வந்து சேர்ந்தார்கள். அவரது உதவியினால் எங்கள் சாமான் பரீட்சையும், வைத்தியப் பரீட்சையும் சீக்கிரத்தில் முடிந்தது.
பிறகு கப்பலிலிருந்து போட்டுகளில் (படகுகள்) இழிந்து, பியர் போய்ச் சேர்ந்தோம். அங்குப் போய்ச் சேர்ந்தவுடன் நாங்கள் கப்பல் யாத்திரையில் பட்ட கஷ்டத்திற் கெல்லாம் பரிஹாரம் கிடைத்தது. யாழ்ப்பாணத்து வாசியாகிய, இலங்கைத்தீவில் மிகவும் மதிப்பைப் பெற்ற சர். கனக சபையவர்களை முன்னிட்டு, கொழும்பில் உள்ள நூற்றுக்கணக்கான பெரிய மனிதர்கள் நகைமுகத்துடன் எங்களை நல்வரவழைத்தனர். சர். கனகசபை, இந்தியாவிலிருந்து, தமிழராகிய நமது சகோதரர்கள் இலங்கைக்கு வருகிறார்கள்; முதன் முறை ஆதலால், அவர்களை நாம் துறைமுகம் சென்று நல்வரழைக்க வேண்டுமென்று, கொழும்பிலுள்ள பெரிய மனிதர்களுக்கெல்லாம் எழுதி, அவர்களை வரும்படி செய்தனராம். இச்சீமான் இப்பொழுது காலமாய் விட்டார். அப்படியிருந்தும், அன்று அவர் எங்கள் சபையோருக்குச் செய்த மரியாதையானது அவரை இன்னும் நான் மறவாதிருக்கும்படிச் செய்கிறது.
இவ்வாறு நாங்கள் எல்லாம் நல்வரவழைக்கப்படவே, ஸ்வாமியின் கருணையினால் ஆரம்பம் திருப்திகரமாயிருக்கிறது, முடிவுவரை இப்படியே இருக்க வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொண்டு, எனது நண்பர்களுடன், எங்களுக்கு ஏற்படுத்திய விடுதிக்குப் போய்ச் சேர்ந்தேன். போய்ச் சேர்ந்து எனது காலைக் கடனை முடித்துக்கொண்டு, தாகத்திற்குச் சாப்பிட்டவுடன், எனக்குக் கொழும்பில் நூதனமாய்க் கிடைத்த நண்பர்களில் ஒருவராகிய சதாசிவம் என்பவர், என்னை ஒரு பக்கமாக அழைத்துக்கொண்டு போய், “நீங்கள் உங்களுடைய ஐந்து நாடகங்களையும் 2500 ரூபாய்க்குக் கண்டிராக்டாக விட்டிருப்பதாகக் கேள்விப் படுகிறேன்; இதோ ஒருவர் அந்த ஐந்து நாடகங்களுக்கும் 3000 ரூபாய் தருவதாக, செக்குடன் வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார். என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். அதன் பேரில் காற்று நமக்கு அனுகூலமாய்த்தான் அடிக்கிறது என்று சந்தோஷப்பட்டவனாயினும், ஒரு முறை வாக்குக் கொடுத்தபின் அதனை மாற்றுவது நியாயமல்ல, முடியாதென்று அவருக்குப் பதில் உரைத்து, செக்குடன் வந்தவரை அனுப்பிவிடச் செய்தேன்.
பிறகு அன்று காலை
முதல், சபை கொழும்புவை விட்டுத் திரும்பிய வரையில், எங்களைப் பார்க்க அந் நகர வாசிகளில் அநேகர் ஒருவர் மாறி ஒருவராய் வந்து கொண்டிருந்தனர் என்று சொல்வேனாயின் அது பொய்யாகாது. சாப்பிடுகிற வேளை உறங்குகிற வேளை தவிர யாராவது வந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அன்று மத்தியானம், முன்னாள் இரவு தூங்காததற்காக, நானும் தூங்கி எனது ஆக்டர்களையும் தூங்கச் சொல்லிவிட்டு, பிறகு சாயங்காலத்திற்கு மேல், அங்குள்ள சிவன் கோயிலுக்குப் போய் ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு வந்தோம். இந்த வழக்கம் இப்பொழுதும் எங்களுக்குண்டு. யாதாமொரு ஊருக்குப் போனால், அன்று சாயங்காலம் நாடகமில்லா விட்டால் எல்லா ஆக்டர்களுமாக அங்குள்ள முக்கியமான கோயிலுக்கு, சிவன் கோயிலோ, விஷ்ணு கோயிலோ போய் தரிசித்துவிட்டு வருவோம். நான் அன்று கோயிலுக்குப் போனபோது சிவபெருமானுக்குச் செய்து கொண்ட பிரார்த்தனை என்னவென்றால், எப்படியாவது சிங்களவாசிகள் மனத்தை எங்கள் சபையார் திருப்தி செய்யும்படி செய்ய வேண்டுமென்பதே. இவ்வாறு நான் பிரார்த்தனை செய்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. இவ்விடத்தில் எங்களுக்குப் புதிதாய் ஏற்பட்ட சிநேகிதர்களுள் பலர், காலையில் என்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது, உங்கள் சபையைப் பற்றி நாங்கள் நிரம்பக் கேள்விப்பட்டிருக்கிறோம் என்று புகழ ஆரம்பித்தார்கள். அவர்களுள் ஒருவர் கூறிய வார்த்தைகளை மாத்திரம் இங்கு எழுதுகிறேன்; சதாசிவம் என்பவர், “சில வருஷங்களுக்குமுன், நாராயண சாமிப் பிள்ளை, (இவர் சுப்பராயாச்சாரி கம்பெனி உடைந்து போன பிறகு, பிரத்யேகமாக ஒரு கம்பெனி ஏற்படுத்திப் பல நாடகங்களை நடத்திக் கீர்த்தியும் பணமும் சம்பாதித்தவர். இவர் இலங்கைத் தீவில் பல நாடகங்கள் நடத்தி ஏராளமான பொருள் சம்பாதித்தவர்) உங்கள் சபையைப் பற்றிச் ‘சுகுண விலாச சபையார் ஏறிய நாடக மேடையின்பேரில் நாங்கள் ஏற ஏலாது!’ என்று புகழ்ந்திருக்கிறார்!” என்றார். இது போன்ற பல வார்த்தைகளைக் கேட்டபொழுது, ‘என்னடா இது’ இவர்கள் எல்லாம் நம்மைப்பற்றி மிகவும் அதிகமாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறதே! அவர்கள் எண்ணுவதற்குக் குறையாதபடி அவர்கள் மனத்தைத் திருப்தி செய்விக்க வேண்டுமே! என்னும் பீதி என்னைப் பற்றிக்கொண்டது.
மறு நாள் காலை நாடகசாலைக்கு, படுதாக்களெல்லாம் சரியாகக் கட்டியிருக்கின்றதா என்று, என் வழக்கம் போல் பார்க்கப் போனபோது, சைட் படுதாக்களும் மேல் ஜாலர்களும் கட்டச் சௌகர்யமில்லாதிருக்கிறதென்று, எங்கள் ஆள் சொன்னான். அதன் பேரில் என்ன செய்வது என்று கலங்கியவனாய், எனக்குத் தோன்றிய இரண்டொரு யுக்திகளைச் சொல்லிவிட்டு, அந்த ஆளிடம் உன்னாலானதைப் பார் என்று சொல்லிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்தேன். சாதாரணமாகவே, வேறு ஊருக்குப் போய் முதல் முதல் ஏதாவது நாடகமாடுவதென்றால், எனக்கு, எப்படி முடியுமோ என்கிற பயமுண்டு. இதனுடன் மேற்சொன்ன காரணங்களும் ஒன்றாய்க் கூடவே, என் பாடு கஷ்டமாகி விட்டது. இம்மனக் குழப்பத்தில் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு யார் வந்து என்னுடன் பேச வந்தாலும்"சிடு சிடு” என்று பேச ஆரம்பித்தேன்; இம்மாதிரியாக எனக்கிருக்கும் சமயங்களிலெல்லாம், எனதுயிர் நண்பர், “இப்பொழுது வாத்தியாரிடம் ஒருவரும் கிட்டப் போகாதீர்கள். அவருக்குப் பிசாசு பிடித்திருக்கிறது” என்று வேடிக்கையாய்ச் சொல்லுவார். கொஞ்ச நேரம் பொறுத்து, இதற்கெல்லாம் நாம் கவலைப்படுவானேன்? ஸ்வாமியிருக் கிறார் என்று அவர்மீது பாரத்தைச் சுமத்திவிட்டு, எழுந்திருந்து போய் எனது நண்பர்களுடன் கலந்து பேச ஆரம்பித்தேன். அவர்களெல்லாம், “பிசாசு விட்டுப் போய்விட்டதா? இனிப் பேசலாம்” என்று ஏளனம் செய்தார்கள். இப்படி நடப்பது எங்கள் சபை வெளியூருக்குப் போகும் போதெல்லாம் எனக்குச் சாதாரணமாகி விட்டது. இது தவறல்லவா என்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் என்னைக் கேட்க வேண்டியதில்லை. தவறென அறிந்தும் அதைத் தவிர்க்க அசக்தனாயிருக்கிறேன் என்றுதான் நான் பதில் உரைக்கக்கூடும்.
பிறகு, ராத்திரி நாடகமானபடியால், ஆக்டர்களெல்லாம் 5 மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு, வேஷம் தரிக்க அருகிலிருந்த நாடக சாலைக்கு நடந்து போனோம். பிறகு நாங்கள் எல்லாம் வேஷம் தரித்துக் கொண்டிருக்கும்பொழுது, அந்த நாடகசாலையின் பழக்கப்படி, நாடக ஆரம்பத்திற்கு ஒரு மணிக்குமுன், நாடக சாலையின் வெளிக் கதவுகளைத் திறக்க, ஒரே கும்பலாய் ஜனங்கள் நுழைய ஆரம்பித்தார்கள். இதை நான் பார்த்தறிந்தவனல்ல, கேட்டறிந்தேன். ஏதாவது நாடகத்தில் நான் ஆடுவதானால், நான் மேடையின்மீது வருகிற வரையில், ஜனங்கள் வந்திருக்கின்றார்களா? எத்தனை பெயர் வந்திருக்கின்றனர்? இவைகளை யெல்லாம் கவனிக்கக்கூடாது என்கிற ஒரு கோட்பாடுடையவன் நான்; இதைப்பற்றி என் நண்பர்களுக்கு முன்னமே தெரிவித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். பத்துப் பதினைந்து நிமிஷங்களுக்கெல்லாம் ரிசர்வ் பண்ணியிருந்த நாற்காலிகள் தவிர மற்ற இடமெல்லாம் நிரம்பிவிட்டது என்று இதே வேலை யாகப் பார்த்துக் கொண்டிருக்கும் வழக்கமுடைய சில நண்பர்கள் எனக்குத் தெரிவித்தனர். உடனே வெளியில் டிக்கட்டாபீசிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த, எங்கள் சபை பொக்கிஷதாராகிய வ. ரங்கசாமி ஐயங்கார் உள்ளே நான் வேடம் தரித்துக்கொண்டிருக்கும் இடம் வந்து, “சம்பந்தம்! சம்பந்தம்! பாவி! ஏமாந்து போனாயே? நாடகம் ஒன்றிற்கு ஐந்நூறு ரூபாய்க்கு கன்டிராக்டு விட்டு விட்டாயே! இன்றைக்கு மாத்திரம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்து விட்டானே!” என்று என்னை வைய ஆரம்பித்தார்! இதில் வேடிக்கை யென்னவென்றால், இந்த மெம்பர்தான், சென்னப் பட்டணத்தி லிருந்த பொழுது நாடகம் ஒன்றுக்கு ஐந்நூறு ரூபாய்க்கு கண்டிராக்ட் கேட்கிறார்கள் ஒப்புக்கொள்ளலாமா என்று ரங்கவடிவேலு தந்தி கொடுத்த பொழுது, “கட்டாயமாய் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சபைக்குப் பெரும் நஷ்டம் வரும்” என்று வற்புறுத்தினவர்! அன்றைத் தினம் ஆயிரத்து நானூற்றுச் சில்லரை ரூபாய்க்குமேல்வசூல் ஆயிற்று என்று கண்டிராக்டரே என்னிடம் ஒப்புக்கொண்டார். எனக்கிருந்த சந்தோஷமெல்லாம் சபைக்கு நஷ்டமில்லாமற் போனது மன்றி, கன்டிராக்டரும், இந்தச் சபை நாடகத்தைக் கன்டிராக்ட் எடுத்தோம்; நமக்கு இவ்வளவு நஷ்டமுண்டாயிற்று என்று துக்கிக்காதபடி அவரும் சந்தோஷப்படும்படி நேர்ந்ததே என்பதேயாம். இப்படி ஏராளமான ஜனங்கள் வருவார்களென்று இலங்கைத் தீவுவாசிகளான எங்களது புதிய நண்பர்களே, தாங்கள் நினைக்கவில்லை என்று ஒப்புக்கொண்டனர். இவ்விஷயத்தில் ஒரு சிறு கதை. அந்த நாடக சாலையை மொத்தத்தில் சில வருஷங்களுக்கு வாடகைக்கு வாங்கிக் கொண்டு நடத்தி வந்தவர் வார்விக் மேஜர் என்பவர்; பிறகு இவர் “சர்” பட்டம் பெற்றார். இவரிடம் போய் எனது உயிர் நண்பர் நாடகசாலையை 5 நாடகங்களுக்கு வாடகைக்குக் கேட்ட பொழுது “நான் சாதாரணமாகத் தினத்திற்கு நூறு ரூபாய்க்குக் குறைந்து விடுவதில்லை. ஆயினும் நீங்கள் வெளி ஊறார். உங்களுக்கு அதிகப் பணம் வசூலாகாது. ஆகவே தினம் ஒன்றிற்கு எழுபந்தைந்து ரூபாய்க்கு விடுகிறேன்” என்று சொல்லி, அப்பணத்தை முன்னதாகவே தங்களுக்குக் கட்டி விட வேண்டுமென்று நிர்ப்பந்தித்தாராம்; பிறகு இவர்களிட மிருந்து வசூலாவது கடினம் என்று எண்ணினார் போலும்! இவருக்குத் தமிழ் பாஷை தெரியாதிருந்த போதிலும், நாடகத்தின் கடைசி வரைக்கும் இருந்து மிகவும் நன்றாய் இருக்கிறதெனப் புகழ்ந்ததாகக் கேள்விப்பட்டேன். இவர் என்னைப்பற்றிச் சொன்ன சிறு சமாச்சாரத்தை இங்கு எழுது கிறேன். இவ்விடம் நாங்கள் முதல் நாடகமாக ஆடினது “லீலாவதி சுலோசனா.” இதில் நான் மூன்றாவது காட்சியில் தான் முதல் முதல் வருகிறேன். அதிலும் அக்காட்சியில் நான் செய்ய வேண்டியதெல்லாம் அரங்கத்தின் ஒருபுறமிருந்து மற்றொரு புறம் நடந்து போகவேண்டியவனே. அப்படி நடந்து சென்றதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த வார்விக் மேஜர் தன் பக்கத்திலிருந்த சதாசிவம் என்பவரைப் பார்த்து, “இது யார் இந்தச் சிறுவர்? நல்ல ஆக்டர்போல் தோன்றுகிறாரே” என்று கேட்டாராம். அதற்கு எனது நண்பர், “அவர்தான் சம்பந்தம்! உங்களுக்குத் தெரியாதா?” என்று பதில் உரைத்தனராம். இதை அந்த சதாசிவம் என்பவரே என்னிடம் மறுநாள் தெரிவித்தார். “அந்தச் சிறுவருக்கு, வயது 38 ஆகிறது என்றும் கூறியிருக்கக் கூடாதா?” என்று சொல்லி நான் சிரித்தேன்.
மேற்சொன்னபடி ஏராளமான ஜனங்கள் வந்திருக்கிறார்களே என்கிற சந்தோஷம் ஒரு புறம் இருக்க, இதில் மாத்திரம் என்ன பிரயோஜனம். இவர்களெல்லாம் திருப்திகரமாயிருக்கிறதெனச் சந்தோஷப் பட்டாலொழிய என்ன பிரயோஜனம் என்று எண்ணினவனாய், முதற் காட்சி ஆரம்பிக்கும் பொழுது, முதல் சைட் படுதா பின்னால் நின்றுகொண்டு சபையோரைப் பார்க்கா விட்டாலும், அவர்கள் நாடகத்தை எப்படி அங்கீகரிக்கிறார்கள் என்று மிகவும் கவனித்து வந்தேன். முதல் காட்சியின் ஆரம்பத்தில், மேடை மீது பத்மநாபராவ், ஸ்ரீனிவாசராகவாச்சாரி, ரங்கவடிவேலு, வடிவேலு, ராமகிருஷ்ணையர் ஆகிய இந்த ஐவரும் ஸ்திரீ வேஷத்தில் தோன்றுகின்றனர். அக்காலத்தில் இவ்வைந்து பெயரும் நல்ல யௌவனத்தில் இருந்தவர்கள். ஸ்திரீ வேஷத்திற்கு மிகவும் பொருத்தமுடையவர்கள்; முக்கியமாக வெங்கடாசல ஐயர் மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டு இவர்களுக்கெல்லாம் மிகவும் அழகாக வேஷம் போட்டிருந்தார். விநாயகர் ஸ்துதி, சரஸ்வதி துதி முடிந்து, டிராப் படுதா மேலே போனவுடன் இவ் வுருவங்களைக் கண்டதும், வந்திருந்த சபையோர் சந்தோஷப்பட்டனர் என்பதை, அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் மெல்லிய குரலுடன் பேசிக்கொண்ட சப்தத்தினால் கண்டறிந்தேன். அன்றியும் இன்னின்ன நாடகத்தில் இன்னின்ன சந்தர்ப்பத்தில் சபையோர்கள் சந்தோஷப்படவேண்டும் என்று எனக்கு ஒரு நியதியுண்டு. அவ்வண்ணமே, அம் முதற் காட்சியில் இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் சபையோர் தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்தது, எனக்கு சந்தோஷமுண்டாக்கியது. எனக்கு ஏதோ மிகுதியாயிருந்த கொஞ்சம் சந்தேகமும், முதற் காட்சியின் முடிவில், டிராப் படுதா இறங்கின பொழுது, வந்திருந்தவர்கள் அனைவரும் செய்த கரகோஷத்தினால், முற்றிலும் நிவர்த்தியாயது. மறுநாள் சர். ராமநாதனுடைய மூத்த குமாரர் ராஜேந்திராவுடன் நான் பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர் “நாடகத்தின் முதற் காட்சி முடிந்தவுடன், உங்கள் சபை இவ்வூரார் மனத்தைத் திருப்தி செய்வதைப் பற்றி எங்களுக்குச் சிறிதும் சந்தேகமில்லாமற் போயிற்று!” என்று எனக்குத் தெரிவித்தார்.
அன்றிரவு நடந்த நாடகத்தில் சங்கீதத்தில் லீலாவதியாக நடித்த ஸ்ரீனிவாசராகவாச்சாரியும், கமலாகரனாக நடித்த பாலசுந்தர முதலியாரும் நல்ல பெயர் பெற்றார்கள். ஸ்ரீனிவாசகராகவாச்சாரி அப்பொழுதுதான் கொஞ்சம் ஸ்தூல சரீரமுடையவராக ஆரம்பித்தார். ஆயினும் அவர் ஸ்திரீ வேஷத்தில் நடித்தது கொழும்புவாசிகளால் மெச்சப்பட்டது. ஆயினும் நாடகம் பார்க்க வந்தவர்களின் மனத்தையெல்லாம் கவர்ந்தவர் எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடி வேலுவே. கொழும்பு ஜலம் அவர் உடம்பிற்கு ஒப்புக் கொள்ளாததனாலேயோ அல்லது அச்சமயம் இலங்கைத் தீவில் மழைக்காலமாதலால் அம் மழையில் நனைந்ததனாலேயோ எக்காரணத்தினாலேயோ அவருக்குத் தொண்டை நன்றாய்க் கட்டிக்கொண்டது. நம்முடைய பூர்வீகக் கவிராயர்கள் வேடிக்கையாகக் கூறுவது போல், அவருக்குக் கம்மல் காதிலுமிருந்தது, தொண்டையிலுமிருந்தது. இதனால் அவர் ஒரு பாட்டும் பாட முடியாமற் போயிற்று. எவ் வளவோ இதற்குச் சிகிச்சை செய்து பார்த்தும் பாட முடியாமற் போயிற்று. இருந்தும் அவர் சுலோசனையாக நடித்தது எல்லோரையும் மிகவும் சந்தோஷிக்கச் செய்தது என்பதற்குத் தடையில்லை. அவர் “ரோஜாப்பூ காட்சி” என்று சொல்லப்படும் இந்நாடகத்தின் மத்தியில் வரும் ஒரு காட்சியில் நடித்தபொழுது, வந்திருந்தவர்கள் கரகோஷம் செய்தது இன்னும் என் செவியில் தொனிக்கிறது போலிருக்கிறது. இந்த ஓர் இடத்தில் மாத்திரமன்று; அவர் வந்த காட்சிகளில் முக்கியமான சந்தர்ப்பங்களிலெல்லாம் இடைவிடாது கரகோஷம் செய்தனர் என்று கூறுவது கொஞ்சமேனும் மிகையாகாது. ஒரு முறை சபையோரின் மனத்தைக் கவர்ந்துவிட்டால், அவர்களுக்கு இதுதான் சந்தோஷத்தைத் தரும், இது தராது என்பது கிடையாது போலும். இதற்கப்புறம் இங்கு இவர் நடித்த நான்கைந்து நாடகங்களில் புதுச் சேலைகளைத் தரித்துக் கொண்டு மேடையின் மீது தோன்றும் போதெல்லாம் கரகோஷம் செய்தது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. நான் ஏதோ எனது ஆருயிர் நண்பனை அதிகமாகப் புகழ்கின்றேன் என்று இதை வாசிக்கும் நண்பர்கள் நினைக்கலாகாது. அவர் கொழும்புவாசிகளின் மனத்தைக் கவர்ந்ததற்கு ஓர் உதாரணத்தை மாத்திரம் இச் சந்தர்ப்பத்தில் எடுத்து எழுதுகிறேன். அன்றைத் தினம் நாடகம் பார்க்க வந்தவர்களுள், இலங்கைத் தீவில் மிகவும் கியாதி பெற்றிருந்த ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர். பன்முறை விவாகம் புரியும்படி நிர்ப்பந்தித்துக் கொண்டிருந்த தன் தாயாரிடம் போய், “நான் சுலோசனாவைத்தான் கலியாணம் பண்ணிக்கொள்ளப் போகிறேன்!” என்று சொன்னாராம். இதை அவரது தங்கையாகிய ஒரு மாதாரசியே என்னிடம் பிறகு சொல்லக் கேட்டேன்.
ஹாஸ்ய பாகத்தில் எம். துரைசாமி ஐயங்கார் நன்றாக நடித்ததாகச் சொன்னார்கள். அவர் இந்நாடகத்தில் ‘அவசரப்படேல்’ காட்சியென்று வழங்கும் ஒரு காட்சியில் சாதாரணமாக மிகவும் நன்றாய் நடித்து எல்லோரையும் சிரிக்கச் செய்வார். இவர் இங்கு இக்காட்சியை நடித்த பிறகு சில தினங்கள் வரையில், இவரைக் கொழும்பு நேசர்கள் பார்த்தால் ‘அவசரப்படேல்’ என்று சொல்லிச் சிரிப்பார்கள்.
நானும் நன்றாக நடித்ததாக என்னிடம் சொன்னார்கள். அன்றிரவு நாடகம் முடிந்தவுடன் எங்களுடைய புதிய நண்பர்களெல்லாம், ஒருவர் பாக்கியில்லாமல், உள்ளே வந்து எங்களையெல்லாம் புகழ்ந்து சந்தோஷிக்கச் செய் தனர். இந்நாடகமானது, சர். ராமநாதனின் தாயாதியாகிய சர்.பி. அருணாசலம் என்பவரின் முன்னிலையில் நடந்தது. அவரும் அவருடன் விஜயம் செய்த ஒரு வெள்ளைக்காரச் சீமானும், சீமாட்டியும் நாடகம் நடித்ததைப்பற்றி மிகவும் புகழ்ந்து பேசியதாகக் கேள்விப்பட்டேன்.
அன்றிரவு நான் வேஷத்தைத் களைந்துவிட்டு, எங்களிருப்பிடம் போய் ஈஸ்வரனைத் துதித்துவிட்டு அதுவரையில் ஒரு மாசம் புரியாத சுக நித்திரை புரிந்தேன்.
மறுநாள் நாங்கள் கண் விழித்தது முதல், நாள் முழுவதும், எங்களை நாடக மேடையில் பார்த்த நண்பர்கள் ஓயாது எங்கள் இருப்பிடம் வந்தனர். இது நாங்கள் இலங்கையைவிட்டுத் திரும்பும் வரையில் நிகழ்ந்ததெனவே கூற வேண்டும். தினம் காலையிலும், மாலையிலும் எங்கள் ஆக்டர்களையெல்லாம், கொழும்பில் பார்க்க வேண்டிய இடங்களுக் கெல்லாம், மோட்டார் வண்டிகளில் அழைத்துக் கொண்டு போய் விடுவார்கள்; தினம் யார் வீட்டிலாவது விருந்துக்குச் சிலரை அழைத்துக்கொண்டு போவார்கள். அதிகமாக கூறுவதேன்? எங்களைத் தங்கள் விருந்தாளிகளாகப் பாவித்து, எங்கள் சௌகரியங்களை யெல்லாம், ஒன்றையும் மறவாமலும் விடாமலும், பார்த்து வந்தனர். எங்களுள் யாராவது ஒருவர் ஏதாவது ஒன்று இஷ்டப்படுவதாகச் சொல்லவேண்டியதுதான், அரை மணிக்குள் அது எங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்துவிடும். “விருந்தோம்பல்” என்பதைப்பற்றி நான் படித்திருக்கிறேன். அது இத்தகையது என்பதை இவர்களிடமிருந்து நான் பிரத்யட்சமாகக் கற்றேன். கொழும்பு நேசர்கள் எங்களுக்குச் செய்த உதவிகளில் இரண்டொன்றை இங்கு எடுத்தெழுதுகிறேன். இரண்டு மூன்று நாட்கள் கழித்து எனதுயிர் நண்பர் நாங்கள் இருந்த வீட்டில், நாற்பது பெயர் ஒன்றாய் இருப்பதென்றால், கொஞ்சம் அசௌகர்யமாயிருக்கிறதென்று ஏதோ பேச்சில் தெரிவித்தார். உடனே, அவரையும், இன்னும் மூன்று நான்கு பெயரையும் சர்.பி. ராமநாதன் வீட்டிற்கு, அவர் மூத்த குமாரனான மிஸ்டர் ராஜேந்திரா என்பவர் அழைத்துக்கொண்டு போய்விட்டார். என்னையும் வரும்படி அழைக்க, நானும் போய்விட்டால் இங்கிருப்பவர்களெல்லாம் ஏதாவது சொல்வார்கள், என்னை மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். ஒரு நாள் சாப்பாட்டு சமாச்சாரங்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வெங்கடாசல ஐயர், பட்டணத்திலிருந்து கொண்டுச் வந்த நெய் தீர்ந்து விட்டது.
கடைத்தெருவில் கிடைக்கும் நெய் நன்றாயில்லை யென்று அவர் தெரிவித்தார்; ஒரு மணி நேரத்திற்கெல்லாம், நாங்கள் கொழும்பில் இன்னும் இருக்கவேண்டிய நாட்களுக்கெல்லாம் வேண்டிய புத்துருக்கு நெய் வந்து சேர்ந்துவிட்டது! இதில் வேடிக்கை என்னவென்றால், அதை யார் அனுப்பியது என்பதை இதுவரையில் அறியேன்! அனுப்பித்தவர்களுக்கு நான் வந்தனம் செய்ய வேண்டுமே அதற்காவது சொல்லுங்கள் என்றாலும், ஒருவரும் சொல்ல மாட்டோம் என்று மறுத்துவிட்டார்கள். இதைப்பற்றி ஆங்கிலத்தில் சில வருஷங்களுக்குமுன் எங்கள் சபை நடத்தி வந்த இந்தியன் ஸ்டேஜ் என்னும் பத்திரிகையில், நான் எழுதிய ஒரு வாக்கியத்தை இங்குத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன். “இம்முறையும் இன்னும் எங்கள் சபை சிங்களத்திற்குப் போயிருந்த இரண்டு முறையும் எனக்கும் எனது சபை அங்கத்தினருக்கும் சிங்களவாசிகள் செய்த உதவிகளையெல்லாம் எடுத்துரைக்க அசக்தனாயிருக்கிறேன்; அன்றியும் அவைகளுக்காக, எனது இலங்கை நண்பர்களுக்குப் பிரதி செய்ய முடியாதவனாயிருக்கிறேன்; நான் மறுபடியும் அங்கு சென்று அவர்களையெல்லாம் காண முடியுமோ என்னவோ சந்தேகம். ஆகவே அவர்களெல்லாம் என்னிடமும், எனது சபை அங்கத்தினரிடமிருந்து பாராட்டிய அன்பிற்காகவும், நன்றிக்காகவும் எனது வந்தனத்தை - என் மனமார்ந்த வந்தனத்தை - இதன் மூலமாகச் செலுத்துகின்றேன்; இங்கெழுதி யுள்ளதை அங்குள்ள நண்பர்களுள் சிலராவது கண்ணுற்று, என் வந்தனத்தை அங்கீகரிப்பார்களாக; அவர்கள் செய்த பேருதவிக்கெல்லாம், நான் செய்யக்கூடிய கைம்மாறு வேறொன்றும் அறிகிலேன்.”
நாங்கள் இங்கு ஆடிய இரண்டாவது நாடகம் “மனோஹர.” இந்த நாடகத்தில் பத்மாவதியாக நடித்த பத்மநாபராவ் எல்லோராலும் மிகவும் சிலாகிக்கப்பட்டார். ரங்கவடிவேலு விஜயாளாக நடித்ததைப்பற்றிக் கேட்க வேண்டியதில்லை. ஒரு முறை அவர்மீது அன்பு கொண்ட பிறகு, ஜனங்கள் நாடக மேடையின்மீது அவர் ஏதாவது தவறு இழைத்தாலும் அதுவும் அற்புதமான நடிப்பு என்று எண்ணும்படியான மனோஸ்திதிக்கு வந்துவிட்டனர். இந்நாடகத்திற்கு வாராத சில நண்பர்கள் மறுநாள் எங்களிடம் வந்து, “இந்நாடகம் மிகவும் நன்றாகயிருந்ததாகக் கேள்விப்பட்டோம். இப்படிப்பட்ட சிறந்த நாடகத்தை ஏன் சனிக்கிழமையில் போடக்கூடாது? வாரத்தில் இடையிலுள்ள தினங்களில் போடும் நாடகங்கள் அவ்வளவு நன்றாயிராது என்று நாங்கள் வரவில்லை; அன்றியும் இரண்டு ராத்திரிகள் ஒருங்கே விழிப்பதென்றால் கஷ்டமாயிருந்தது; இந்நாடகத்தை மறுபடியும் எப்படியாவது போடுங்கள், நாங்கள் பார்க்கவேண்டும்” என்று வற்புறுத்தினர். இந்த மனோஹரன் நாடகம் நான் ஆடுவதில் எனக்குள்ள கஷ்டத்தை இதற்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். ஆகையால் அவர்களுக்கெல்லாம், இம்முறை முடியாது, ஈஸ்வரன் கிருபையால் இன்னொரு முறை இலங்கைக்கு நாங்கள் வந்தால் போடுகிறோம் என்று பதில் சொன்னேன்.
பிறகு மூன்றாவது நாடகமாக காலவ சரித்திரம் நடத்தினோம். அதில் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு முதற்காட்சியில் நர்த்தனம் செய்தது, முன்பிருந்ததைவிட நாடகாபிமானிகள் அவர்மீது அதிகப் பிரேமை கொள்ளச் செய்தது. இந் நாடகத்தில் வடிவேலு நாயக்கர், சந்தியாவளியாக நடித்தது பலரால் புகழப்பட்டது. ராமகிருஷ்ண அய்யர் இன்றும் வேடிக்கையாய்க் கூறினபடி, “காலவ நாடகம், வடிவேலு தினம்; மனோஹர நாடகம், பத்மநாபராவ் தினம்; சாரங்கதரா, ரங்கவடிவேலு தினம்; அமலாதித்யன், வாத்தியார் தினம்” என்று வேடிக்கையாக எங்களிடம் சொல்வது வழக்கம். இதற்கு அர்த்தம், இன்னின்ன ஆக்டர் இன்னின்ன நாடகங்களில் தன் முழு சாமர்த்தியத்தையும் காட்ட இடமுண்டு என்பதேயாம். வடிவேலு நாயக்கர், இந்நாடகத்திலும் இதற்கு முந்திய இரண்டு நாடகங்களிலும் ஸ்திரீ வேஷம் தரித்ததைக் கண்டவர்கள், இவர் இவ்வளவு கறுப்பாயிருக்கிறாரே, இவர் நாடக மேடைமீது இவ்வளவு சிவப்பாகவும் அழகாகவும் எப்படித் தோன்றுகிறார் என வினவ, இது அவருக்கு வேஷம் தரிப்பதன் சூட்சுமத்திலிருந்துதான் என்று நான் பதில் சொன்னேன். அதன் பேரில், அவ்விடத்திய சில ஆப்த நண்பர்கள், எங்களுக்கெல்லாம் வேஷம் தரிப்பதை அருகிலிருந்து பார்க்க வேண்டுமென்று உத்தரவு பெற்று, சாயங்காலம் நாங்கள் வேஷம் போட்டுக் கொள்ளும்பொழுது, முதலிலிருந்து கடைசி வரைக்குமிருந்து பார்த்தார்கள்.
முன்றாம் பாகம் முற்றிற்று
நாடக மேடை
நினைவுகள்
நான்காம் பாகம்
இந்த இரண்டு மூன்று நாடகங்களுக்குள், எங்கள் சபையின் பெயர் கொழும்புப் பட்டணம் எங்கும் பரவிப் போயிற்று. அதனால் எங்கள் சபையார், இரண்டு மூன்று பெயராகச் சேர்ந்து வெளியிற் போனால் அவர்களைத் திரும்பிப் பார்த்து, இவர்கள் இன்னாரெனப் பேசிக்கொள்ளாத தமிழர்கள் அவ்வூரில் கிடையாது என்று சொல்வது அதிகமாகாது. இதற்கோர் உதாரணத்தை இங்கெழுதுகிறேன். என் தமயனார் ஆறுமுக முதலியார், எங்கள் சபையின் காரியதரிசிகளில் ஒருவராக இருந்தபோதிலும், எங்களிடம் வேலையாட்கள் பலர் இருந்தபோதிலும், தினம் கடைக்குப் போய் காய்கறி பதார்த்தம் வாங்கி வருவதை மாத்திரம் தன்னுடைய வேலையாக மேற்கொள்வார். சாப்பாட்டில் ஆக்டர்களுக்குச் சகல சௌகர்யமும் இருக்கவேண்டு மென்பது அவரது கருத்துப் போலும். அவர் இவ்வழக்கப்படி ஒரு நாள் காலை கடைக்குப்போய்த் திரும்பி வந்ததும் ரிக்ஷா வண்டிக்காரனுக்கு அவனுக்குச் சேர வேண்டிய கூலியைக் கொடுக்க, அவன் அதற்குமேல் அதிகமாக வேண்டும் என்று சண்டையிட்டான். இதைத் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு போலீஸ்காரன் என் தமயனார் ஒன்றும் பிராது செய்யாமலிருக்கும்பொழுதே, அவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துக் கொண்டு போய் சார்ஜனா செய்து, மறுநாள் அவனை மாஜிஸ்ரேட் முன்பாக, “சுகுண விலாச சபை மெம்பர் ஒருவருடன் சச்சரவிட்டதற்காக 5 ரூபாய் அபராதம்” போட்டு வைத்தான். இப்படியே மறுநாள் அந்நாட்டுப் பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டது. தென் இந்தியாவில் நமது போலீஸ்காரரிடம், நாமாகப் போய்ப் பிராது செய்து கொண்டாலும் அவர்கள் பன்முறை கவனியாததை நான் பார்த்திருக்கிறேன்.
கற்றறிந்தவர்களை அன்றி, பாமர ஜனங்களுடைய மனத்தையும் எங்கள் சபை அங்குக் கவர்ந்ததென்பதற்கு மற்றோர் உதாரணம் கூறுகிறேன். ஒரு நாள் என் தமயனார் ஐஸ்கிரீம் வேண்டுமென்று கேட்ட சில ஆக்டர்களுக்கு அதை வாங்கிக்கொடுத்து, அதை விற்றவனுக்கு அவனுக்குச் சேர வேண்டிய ரூபாய் இரண்டை அவன் கையிற் கொடுக்க, அதற்கு அன்றைத்தினம் எங்கள் நாடகத்திற்கு வருவதற்காக இரண்டு ரூபாய் டிக்கட்டொன்றைக் கொடுங்கள் என்று அவன் வாங்கிக்கொண்டு போனான். ஐஸ்கிரீம் தெருவில் விற்பவன் இரண்டு ரூபாய் டிக்கட் வாங்கிக்கொண்டு நாடகம் பார்க்க இவ்வூரில் வந்தான்; சென்னையில் மாதம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்கும் சில பெரிய மனிதர்களிடம் போய் நான் ஏதாவது தர்ம விஷயமாக நாடகம் போடும்போது இரண்டு ரூபாய் டிக்கட்டு ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டால், அதற்குக் குறைந்த டிக்கட் இல்லையா என்று கேட்டிருக்கின்றனர்! இலங்கையில் ஒரு நாள் என்னைப் பார்க்க வேண்டுமென்று வந்த சாயபு ஒருவர், எங்கள் சபையைப் புகழ்ந்து விட்டு, அடியில் வருமாறு எனக்குத் தெரிவித்தார்: “நேற்றிரவு நாடகத்திற்கு நான் மூன்று ரூபாய் டிக்கட்டு நமக்குப் போதுமென்று நினைத்து மூன்று ரூபாய் டிக்கட்டொன்றை வாங்கிக்கொண்டு நாடக ஹாலுக்குள் பிரவேசித்து உட்காரப்போக, நான் உட்காரவேண்டிய நாற்காலியின் பக்கத்தில் என் கம்பெனியில் வேலை செய்யும் ஒரு வேலையாள் 3 ரூபாய் டிக்கட் வாங்கி உட்கார்ந்திருந்தான். இதைக் கண்டதும், பேசாது திரும்பிப்போய், இன்னும் இரண்டு ரூபாய் அதிகமாகக் கொடுத்து, ஐந்து ரூபாய் வகுப்பில் மாற்றிக்கொண்டேன்” என்றார். சென்னையை விடக் கொழும்பில் பணமானது அதிகமாகப் புழக்கத்தில் இருக்கிறது என்பதற்குத் தடையில்லை .
எங்களது நான்காவது நாடகமாகிய அமலாதித்யனை வெள்ளிக் கிழமையில் வைத்துக்கொண்டோம். இதற்குக் காரணம், அந்த நாடகத்திற்கு விஜயம் செய்வதாக ஒப்புக்கொண்ட சிலோன் கவர்னருடைய சௌகர்யமே. எங்கள் சிலோன் நண்பராகிய சர். கனகசபை, கவர்னரிடம் எங்கள் சபையைப்பற்றிப் புகழ்ந்து பேசி, எப்படியாவது ஒரு நாடகத்திற்கு அவர் விஜயம் செய்ய வேண்டுமென்று கேட்டதன்பேரில், கவர்னர், வெள்ளிக்கிழமைதான் தான் வருவதற்குச் சௌகர்யப்படும் என்று கூற அன்றைத் தினம், பாஷை தெரியாவிட்டாலும், கதையின் போக்கை எளிதில் அறியக்கூடும் என்று, ஷேக்ஸ்பியர் மகா நாடகக்கவி எழுதிய ஹாம்லெட் என்னும் நாடகத்தின் தமிழ் அமைப்பாகிய அமலாதித்யன் என்பதை வைத்துக்கொண்டோம். கவர்னர் எங்கள் சபை நாடகத்தைப் பார்க்க வருகிறார் என்று வெளியானவுடன், நாடகத் தினத்திற்கு இரண்டு தினம் முன்னதாகவே, நாடகசாலையிலுள்ள நாற்காலிகளெல்லாம் ரிசர்வ் ஆய்விட்டன.
இந்த அமலாதித்யன் நாடகம் நடந்த தினம் நான் சர்.பி.ராமநாதன் அவர்கள் வீட்டில் இருந்தேன். என்னுயிர் நண்பர் ரங்கவடிவேலுவை அங்கு அழைத்துக்கொண்டு போன பிறகு பன்முறை சர்.பி.ராமநாதனுடைய மூத்த குமாரர் என்னையும் அங்கு வந்திருக்கும்படி கேட்டார். நான் எனது மற்ற நண்பர்கள் ஏதாவது நினைத்துக் கொள்ளப்போகிறார்களேயென்று மறுத்து வந்தேன். அமலாதித்ய நாடக தினத்திற்கு முந்திய நாள் அவர் மறுபடியும் எனது நண்பர்கள் முன்னிலையில் அவர் கேட்க, அவர்களும், ‘எங்களுக்கு ஆட்சேபணையில்லை. நீ போய் வா’ என்று உத்தரவு கொடுத்தார்கள். அதன்மீது அங்குச் சென்றேன். அங்கு நான் போனது முதல், ஏறக்குறைய நான் இலங்கையை விட்டுத் திரும்பும் வரையில் சர்.பி. ராமநாதனுடைய இரண்டு குமாரர்களும் எனக்குச் செய்த உபசரணையை நான் இப்பொழுது, நினைத்துக் கொண்டாலும், அதற்கெல்லாம் நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் என்று வியக்கத்தக்கவனாயிருக்கிறேன். “அகனமர்ந்து செய்யாளுறையு முகனமர்ந்து நல் விருந்தோம்புவானில்” என்று பொய்யாப் புலமைத் திருவள்ளுவர் கூறிய வார்த்தைகள் இவ் வம்சத்தாரிடை மெய்யாகுமாக. காலை துயிலெழுந்தது முதல், இரவில் நித்திரைக்குப் போகுமளவும், எங்கள் சௌகர்யங்களை யெல்லாம், நாங்கள் வாய் திறந்து கூறா முன் செய்து வந்தனர். சுருக்கிச் சொல்லுமிடத்து, எங்கள் வீட்டு மருமகப்பிள்ளைக்கும் நான் இவ்வளவு மரியாதை செய்தறியேன். ஒரு சிறு உதாரணத்தையாவது இங்கெடுத்து எழுதா விட்டால், என் மனம் திருப்தியடையாது. நாடக தினங்களில் நாடகமானவுடன், நாங்கள் வேஷம் களையும் வரையும் காத்திருந்து, பிறகு எங்களைத் தங்கள் வண்டியில் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போவார்கள்; இதற்குச் சாதாரணமாக இரண்டு மூன்று மணியாகிவிடும்; ராத்திரியில் (அல்லது நான் காலையில் என்று கூறவேண்டுமா?) வீட்டில் எங்களுக்காக வெந்நீர் சித்தமாயிருக்கும். நாங்கள் ஸ்நானம் செய்த பிறகு, எங்களுக்காகப் பிரத்யேகமாகச் சித்தம் செய்யப்பட்டிருக்கும் உணவை (என் நண்பனுக்கு வேறு, எனக்கு வேறு உணவாக) எங்களுடன் உட்கார்ந்து புசித்துவிட்டுப் பிறகு எங்களுடன் உட்கார்ந்து பேசி விட்டு, எங்கள் படுக்கை அறைக்கு அழைத்துக்கொண்டு போய்ப் படுக்கையில் குழந்தைகளைப் படுக்க வைப்பது போல் படுக்க வைத்து, கொசுவலையை மூடிவிட்டு, விடிவிளக்கைச் சரிப்படுத்திவிட்டு, நாளைக்காலை உங்களுக்கு என்ன வேண்டுமென்று விசாரித்து, “குட்நைட், நன்றாய்த் தூங்குங்கள்” என்று சொல்லிவிட்டுப் போவார்கள்! நம்முடைய வீட்டிற்கு வரும் விருந்தினரை இவ்வாறு உபசரிக்க வேண்டுமென்பதை இவர்களிடமிருந்தும், கொழும்பில் ராக்வுட் வம்சத்தாரிடமும்தான் நான் சிறிது கற்றுக்கொண்டேன் என்பது திண்ணம்.
இவர்கள் வீட்டில் நாங்கள் இவ்வாறு தங்கியிருந்த போது, அமலாதித்ய நாடகத்தின் முந்திய தினம் இரவு சாப்பிட்டுவிட்டு நாங்கள் எல்லாம் பேசிக்கொண்டிருந்த பொழுது, “நாளை நாடகத்திற்கு உங்களுக்கு ஏதாவது வேண்டியிருக்கிறதா?” என்று சர்.பி. ராமநாதன் இரண்டாவது குமாரராகிய மாஹேசர் என்பவர் கேட்டார். அதன்மீது எனக்கொன்றும் வேண்டியதில்லை என்று நான் தெரிவித்தேன். ரங்கவடிவேலு, “எல்லாம் சரியாயிருக்கிறது. நாடகத்தில் நாலாவது அங்கத்தில் அபலையைத் தூக்கிக் கொண்டு போவதற்காக, பட்டணத்தில் செய்தபடி ஒரு பல்லக்கை இங்கே ஒரு கண்டிராக்டரைச் செய்யச் சொன்னேன். அது அசாத்தியம் என்று சொல்கிறான்,"என்று தெரிவித்தார். பட்டணத்தில் என்ன செய்தீர்களென்று கேட்டதன்பேரில், இன்னபடி செய்தோம் என்று அதை விளங்கச் சொன்னேன். ஏதோ தெரிந்து கொள்வதற்காகக் கேட்கின்றார் என்று நினைத்தேனே யொழிய, இவர் அவ்வாறு ஒரு பல்லக்கைச் செய்தனுப்பப் போகிறார் என்று கனவிலும் நினைத்தவனல்ல. இதைப்பற்றி மறுநாள் நடந்ததை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் கவனிப்பார் களாக. நாடக தினம், காலையில் என் வழக்கப்படி, நாடக சாலைக்குப் போய் ‘கேசு’விடம் திரைகளையெல்லாம் இப்படி இப்படிக் கட்ட வேண்டுமென்று சொல்லிவிட்டு, திரும்பி வந்து, சாப்பிட்டுவிட்டு, ‘அமலாதித்யன்’ நாடகத்தில் வழக்கப்படி என் பாடத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். இந்தச் சந்தர்ப்பத்தில் இவ் வழக்கத்தைப்பற்றி, நாடக மேடையில் புகழ் பெற விரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு உபயோககரமான ஒரு சமாச்சாரத்தை இங்கெழுத விரும்புகிறேன். இந்நாடகம் நான் எழுதியது முதல் பன்முறை ஒத்திகை செய்திருக்கிறேன். பன்முறை இந்நாடகத்தை ஆடியுமிருக்கிறேன். ஏறக்குறைய புஸ்தக முழுவதையும் குருட்டுப் பாடமாகவும் ஒப்புவிப்பேன்; இருந்தும், நாடக தினம் என் பாகத்தை மறுபடியும் நான் ஆதியோடந்தமாகப் படித்துத்தான் தீருவேன். இந்த ஒரு நாடகத்திற்கு மாத்திரமல்ல, நான் எழுதிய எல்லா நாடகங்களிலும் அப்படியே. மனோஹரன் நாடகம் ஏறக்குறைய 50 முறை நான் ஆடியிருக்கிறேன். இருந்தும் அதை ஆடுவ தென்றால் நாடக தினம் என் பாகத்தை, ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு நான் படித்துத்தான் ஆகவேண்டும். நான் ஆடவேண்டிய பாகம் எத்துணை சிறிதாயினும் சரி, நான்கு வரியாயினும் சரி, நான் தனியாகப் போய் அதை ஒரு முறை படித்தாக வேண்டும். சென்னையில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நான் நாடகமாடும் பொழுதெல்லாம், அன்றைத் தினத்திய பாகத்தை, விக்டோரியா ஹால் மேல்மாடியில், டவர் இருக்கிறதே, அங்கு போய் தனியாக உட்கார்ந்து படித்து விட்டுத்தான் வருவேன். அச் சமயங்களிலெல்லாம், யாராவது என்னைப் பார்க்கவேண்டுமென்று கீழே விசாரிப்பார் களானால், “உபாத்தியாயர் பாடம் படிக்கப் போயிருக்கிறார்! அவரை இப்பொழுது ஒருவரும் தொந்தரவு செய்யக் கூடாது” என்று எனது நண்பர்கள் ஏளனமாகச் சொல்வார்கள். நான் தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்துஸ்தானி பாஷைகளில் சில பாத்திரங்களை ஆடியிருக்கிறேன் என்பது என் நண்பர்கள் அறிந்த விஷயமே. அவைகளில் பெரும்பாலும் என் பாகம் மிகவும் சிறு பாகங்களாகவேயிருக்கும்; எவ்வளவு சிறிய பாகமாயிருந்தாலும் மேற்சொன்னபடி அதை ஒரு முறை ஏதோ காரணத்தினாலும் மறதியினாலும் அவ்வாறு செய்யாமற்போய் நான் நாடகமேடையில் தட்டுத் தடுமாறியது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது; இது திருநெல்வேலியில் நடந்ததென நினைக்கிறேன்; அப்பொழுது நாடக மேடையின் பேரில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது, என்ன நமது பாகம் தடுமாறுகிறது என்று யோசித்துப் பார்க்க, இன்று நாம் இதை வழக்கம்போல் படிக்கவில்லையல்லவா என்று ஞாபகம் வந்தது! இதை நான் இவ்வளவு விவரித்து எழுதியதற்குக் காரணம், இதனால் பெரும் அனுகூலமுண்டென்றும், இப்படிச் செய்யாவிட்டால் கஷ்டப்பட வேண்டு மென்பதையும் நாடக மேடையில் பெயர்பெற விரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு வற்புறுத்தும் பொருட்டே. தற்காலம் எங்கள் சபை உட்படச் சில சபைகளில் சில ஆக்டர்களைப் பார்த்திருக்கிறேன்; அவர்கள் தங்கள் பாடங்களை நன்றாய்ப் படிக்காமல் மேடையேறி விடுகிறார்கள்; சரியாகப் படிக்காததை மறைப்பதற்காக, ஒவ்வொரு சைட்படுதா பக்கத்திலும் ஒவ்வொரு ப்ராம்டர் (நாடகப் புஸ்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, மேடையின் மீதிருக்கும் நடிகன் ஏதாவது மறந்து போனால், அதை எடுத்து அவனுக்குச் சொல்ல வேண்டியவன்) ஏற்பாடு செய்து கொள்ளுகிறார்கள். இதென்ன இரண்டு பிராம்டர்கள்? என்று விசாரிக்குமளவில் இந்தப் பக்கம் நின்று பேசும்பொழுது இந்த பிராம்டர் அந்தப் பக்கம் நின்று பேசும் பொழுது அந்த பிராம்டர்! என்று பதில் உரைத்திருக்கிறார்கள். தங்கள் பாடங்களைச் சரியாகப் படியாததனால் அடிக்கடி பிராம்டர்களிருக்கும் பக்கம் இந்த ஆக்டர்கள் திரும்ப வேண்டி வருகிறது. இவர்கள் தாங்கள் மேடையின்மீது நடிக்க வேண்டிய காரியத்தைக் கவனியாது, பிராம்டரையே கவனிக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் தாங்கள் செய்யும் சூது, சபையோர்க்குத் தெரியாது என்று எண்ணுகிறார்கள் போலும்; அவர்களுள் யாராவது நாடக மேடையின் அனுபவம் கொஞ்சமேனும் உடையவர்களாயினும் இதை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள் என்பது நிச்சயம். இதற்கும் மேலாகச் சில ஆக்டர்கள், “நான் பேச வேண்டிய வார்த்தைகள் வரும் போதெல்லாம், நீ அப்படியே படித்துக் கொண்டு வா, நான் சொல்லிக்கொண்டு வருகிறேன்” என்று பிராம்டர்களுக்குச் சொல்வதை நான் காதாரக் கேட்டிருக்கிறேன்; இது பெரிய தவறாகும். ஒருவன் எப்படிப்பட்ட ஆக்டராயிருந்தபோதிலும், இவ்வாறு செய்வானாயின் அவனது ஆக்டு சோபிக்காது என்பதற்குச் சிறிதும் ஐயமில்லை. இவையெல்லாவற்றிற்கும் மேலாக இன்னும் சில ஆக்டர்கள், தாங்கள் பாடவேண்டிய பாட்டிற்குக்கூட பிரத்யேகமாக ஒரு பிராம்டரை ஏற்பாடு செய்து வைத்துக் கொள்ளுகிறார்கள்!
இவ்வாறு தங்கள் பாகத்தைச் சரியாகப் படியாது, பிராம்டர்களை நம்பி மேடைமீது ஏறும் ஆக்டர்களுக்கேற்படும் விபத்துகளில் இரண்டொன்றை இங்கெடுத்தெழுதுகிறேன். ஒருமுறை இப்படிப் பாடம் படிக்காத ஒரு ஆக்டர் த்யுமத்சேனனாக மேடையின்மீது நடித்துக் கொண்டிருந்தார். போதாக்குறைக்கு அந்தகனாகக் கண்களை மூடிக் கொண்டிருக்க வேண்டி வந்தது; பிராம்டர் ஒரு பக்கத்திலிருந்து படித்துக் கொண்டு வர, இவர் பாகத்தை யெல்லாம் பள்ளிக்கூடத்தில் பிள்ளை பாடம் ஒப்புவிப்பதுபோல் ஒப்பித்துக் கொண்டு வந்தார்; ஒரு சந்தர்ப்பத்தில் த்யுமத்சேனனை நோக்கி மற்றொரு நாடகப் பாத்திரம் சொல்ல வேண்டிய பாகத்தை, “த்யுமத்சேனா” என்று ஆரம்பித்து அப்பாத்திரத்திற்குப் பிராம்டர் பிராம்ட் செய்ய, தன் பாகத்தைச் சரியாகப் படியாததனால், அதுவும் தன் பாகம் என்று நினைத்துக் கொண்டு, த்யுமத்சேனனாகிய ஆக்டர், “த்யுமத்சேனா” என்று தன்னையே அழைத்துக் கொண்டு, பேச ஆரம்பித்தார்! பிராம்டாராயிருந்த எனது நண்பருக்குக் கோபம் பிறந்து, “அடே மடையா! (அவர் இதைவிடப் பலமாக வைதார். அவ்வார்த்தையை இங்கெழுதுவதற்கு எனக்கு இஷ்மில்லை) நீதானடா த்யுமத்சேனன்!” என்று உரக்கக் கோபித்துக் கொண்டார். இதையெல்லாம் பார்த்தும் கேட்டுக்கொண்டும் இருந்த சபையோர்கள் கொல் என நகைத்தனர்! இன்னொரு முறை ஷேக்ஸ்பியர் மஹா நாடகக் கவி எழுதிய ஜூலியஸ் சீசர் என்னும் நாடகம் நடிக்கப்பட்ட பொழுது, ஆன்டொனி என்னும் முக்கியமான பாத்திரம் பூண்டவர், தன் பாடத்தைச் சரியாகப் படிக்காமல், பிராம்டர் உதவியால் பேசிக்கொண்டு வந்தபொழுது, ஒரு காட்சியில் அவர் செய்ய வேண்டிய பெரிய உபன்னியாசத்தின் இடையில் அதைக் கேட்ட சில ஜனங்கள் சொல்ல வேண்டிய வார்த்தைகளைப் பிராம்டர் அவர்களுக்கு எடுத்துக் கொடுக்க, அதை அறியாதவராய், தன் உபன்யாசத்தில், அதைக் கேட்ட மாந்தர்கள் சொல்லவேண்டிய வார்த்தைகளையும் சேர்த்து உபன்யாசம் செய்துவிட்டார்! இதை விட்டகலுமுன் இன்னொரு கடைசி உதாரணத்தை எடுத்து எழுதிவிடுகிறேன். எங்கள் சபை வெளியூர் ஒன்றிற்குப் போய் நடித்துக் கொண்டிருந்தபொழுது, மேற்சொன்ன பிரிவைச் சார்ந்த ஒரு ஆக்டர் (அவர் பெயரை இங்கெடுத்தெழுத என் மனம் வரவில்லை) தான் பாட வேண்டிய பாட்டுகளைச் சரியாகப் படிக்காதவராய் அதற்காகப் பிரத்யேகமாக ஒரு பிராம்டரை ஏற்பாடு செய்து வைத்தார். அவர் எடுத்துக் கொடுத்த படியே, ஒரு பாட்டுதான் இருக்கிறது"என்று பதில் உரைத்தார். எனது நண்பர் தான் பாடிக்கொண்டு வந்தபாட்டுடன், “இன்னும் ஒரு பாட்டுதான் இருக்கிறது"என்று, அதையும் ஒரு அடியாகச் சேர்த்துப் பாடிவிட்டார்! இவர், ஜனங்கள் பாட்டின் போக்கில் இதைக் கவனித்திருக்க மாட்டார்கள் என்று எண்ணிய போதிலும், மறுநாள் சிலர் “என்ன உங்களுடைய ஆக்டர் இப்படி ஆபாசம் செய்தார்?” என்று கேட்டது எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது. ஆகவே, நாடக மேடை ஏற விருப்பங்கொண்டிருக்கும் எனது இளைய நண்பர்களையெல்லாம் இதனால் நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், முதலில் உங்கள் பாகங்களை நன்றாய்ப் படியுங்கள்; அப்படி எவ்வளவு நன்றாய்ப் படித்திருந்த போதிலும், நாடக தினம் மறுபடியும் ஒருமுறையாவது உங்கள் பாகத்தை மனனம் செய்யுங்கள், என்பதேயாம்.
இவ்வாறு பன்முறை ஒரு பாகத்தைத் திருப்பித் திருப்பிப் படிப்பதனால் இன்னொரு முக்கியமான சுகிர்தமுண்டு. நாம் நடிக்க வேண்டிய பாகத்தைப் பன்முறை திருப்பித்திருப்பிப் படிக்குங்கால், இன்னின்ன புதிய மாதிரிகளில் நடிக்கலாமென்று புதிய யோசனைகள் நமக்கு உதிக்கலாம். முக்கியமாக ஷேக்ஸ்பியர் முதலிய மஹா நாடகக் கவிகள் எழுதிய நாடகங்களைப் பன்முறை படிப்பதனால் இந்த அனுகூலத்தைப் பெற்றிருக்கிறேன். இதற்கு நியாய சாஸ்திர சாதகத்திலிருந்து ஓர் உதாரணத்தைக் கொடுக்கிறேன். நியாய சாஸ்திரத்தில் மிகுந்த புத்திமான் என்று பெயர் பெற்ற காலஞ்சென்ற வி. பாஷ்யம் ஐயங்கார் என்பவர், ஒரு நியாய புஸ்தகத்தில் ரீஸ்ஜூடிகேடா என்னும் ஒரு சட்டத்தை எத்தனையோ ஆயிரம் முறை படித்திருந்தபோதிலும், புதிதாக ஒரு வழக்கில் அதைப்பற்றிப் பேசவேண்டி வந்தால், மறுபடியும் அதைப் படிக்கச் சொல்லிக் கேட்பாராம். இதுவரையில் தோன்றாத புதிய யோசனை அதனின்றும் தோன்றுகிறதா என்று அறிவதற்காக! நாடக சபையிலும் நாடகப் பாத்திரங்களின் பாகங்களை இவ்வாறு ஆராய்ந்து பார்ப்பது அதிக அனுகூலத்தைத் தரும் என்பது என் கொள்கை.
மேற்சொன்னபடி அமலாதித்யன் பாகத்தை நான் படித்துக் கொண்டிருந்த பொழுது, எங்கள் சபையின் மற்ற அங்கத்தினர் தங்கியிருந்த இடமிருந்து, ஒரு கடிதம் எனக்கு வந்து சேர்ந்தது. அதைப் பிரித்துப் பார்க்கும் பொழுது அன்றைத்தினம் நாடகத்தில் என்னுடன் ஹரிஹரனாக நடிக்க வேண்டிய சத்தியமூர்த்தி ஐயருக்கு அதிக ஜுரமாயிருக்கிறது, அவர் இன்று ஆடமுடியாதென்று, எழுதியிருந்தது. நாடக ஆரம்பத்திற்கு ஆறு ஏழு மணிக்கு முன்னர் இச்செய்தி வந்து சேர்ந்தால் நான் என்ன செய்யக்கூடும்? அதுவும் ஹரிஹரன் பாகம் மிகச் சிறு பாகமல்ல; உடனே விரைவில் என் பாகத்தை முடித்துவிட்டு அந்த வீட்டிற்குப் போய் ராமகிருஷ்ண ஐயருக்கு அப்பாகத்தை ஒருமுறை படித்துக்காட்டி, எப்படியாவது அதைக் குருட்டுப்பாடம் செய்துவிடு என்று சொல்லிவிட்டு, நாடக சாலைக்குப் போய்ச் சேர்ந்தேன். எனது நண்பர் ராமகிருஷ்ண ஐயரும் அச் சிறிது நேரத்தில் பாடத்தை நன்றாய்ப் படித்து அன்றிரவு நன்றாக நடித்தார். என்னுடன் பழகிய எனது ஆக்டர்களிடமெல்லாம் இந்த நற்குணமிருந்தது; அதாவது, ஏதாவது ஆபத்தில் கை கொடுத்து உதவும்படியான குணம். இக்காலத்திய என் இளைய ஆக்டர்களும் இக் குணத்தை வழிபட்டு நடப் பார்களாக.
அன்றிரவு குறித்த மணிப்பிரகாரம் கவர்னர் அவர்கள் வரவே, நாங்களும் நாடகத்தை ஆரம்பித்தோம். நான் வரும் முதற் காட்சியில், என் தனி மொழிக்கு முன்பாக, நான் சில வார்த்தைகள்தான் பேசவேண்டியிருந்தது. என் தனி மொழியை ஆரம்பிப்பதற்காக என் முகத்தை ஜனங்கள் உட்கார்ந்திருக்குமிடமாகத் திருப்பியபொழுது, ஹாலில் இனி ஒருவருக்கும் இடமில்லாதபடி ஜனங்கள் நிறைந்திருந்ததைக் கண்டேன். பிறகு நான் விசாரித்ததில் உட்கார இடமில்லாமல் நிற்பதற்காகச் சில நாட்டுக்கோட்டைச் செட்டியார் 5 ரூபாய் விகிதம் கொடுத்ததாகக் கேள்விப்பட்டேன். அன்றைத் தினம் மொத்த வரும்படி ஆயிரத்து எழுநூற்றுத் தொண்ணூற்றிரண்டு ரூபாய் என்று பிறகு அறிந்தேன். இப் பணமானது கண்டிராக்டரைச் சேர்ந்ததாயினும், ‘நம்முடைய சபையின் நாடகத்தைப் பார்க்க இத்தனை திரளான சீமான்களும் சீமாட்டிகளும் வந்திருக்கிறார்களே யென்று எனக்குக் குதூஹலமுண்டாயிற்று. சாதாரணமாக என் தனி மொழிகளையெல்லாம் கொஞ்சம் மெல்லிய குரலுடன்தான் ஆரம்பிப்பது வழக்கம். அப்படி நான் அன்று ஆரம்பித்த பொழுது, ஹாலெங்கும் நிசப்தமாகி விட்டது. வர வர என் குரலை உயர்த்திக் கொண்டு போய் என் முதல் தனி மொழியை நான் முடித்தபொழுது, வந்திருந்தவர்களெல்லாம் கரகோஷம் செய்தனர். பிறகு நான் அறிந்தபடி கவர்னர் அவர்கள்தான் இதை முதலில் ஆரம்பித்தனராம். அன்றிரவு அமலாதித்யன் நடிக்க வேண்டிய முக்கியப் பாகங்களிலெல்லாம், ஒன்றும் விடாது கரகோஷம் செய்து வந்தனர். அம்மாதிரியான கரகோஷத்தை இதற்கு முன்னிலும் நான் பெற்றவனன்று; பிறகும் பெற்றவனன்று. இதையெல்லாம் எனக்குச் செய்த மரியாதையாகப் பாவியாது எங்கள் சபைக்குச் செய்ததாகக் கொண்டு உளம் பூரித்தேன். இந்நாடகத்தில் ஒரு முக்கியமான காட்சி, அமலாதித்யனும் அபலையும் சந்திக்கும் காட்சி; இதில்தான், “இருப்பதோ இறப்பதோ” என்று ஆரம்பிக்கும் ஒரு பெரிய தனி மொழியுண்டு. அத் தனிமொழியை ஆக்டு செய்வது மிகவும் கடினம் என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப் படுகிறது. அக் காட்சியில் எனதுயிர் நண்பர் சி.ரங்கவடிவேலுவும் நானும் நடித்தது மிகவும் கொண்டாடப்பட்டது. இக் காட்சியில் நான் நடித்ததைவிட என் நண்பர் நடித்ததைச் சபையோர் புகழ்ந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. ஆயினும் என்வரையில், இக்காட்சியைவிட, அமலாதித்யன் தன் தாயாருடன் பேசும் பிறகு வரும் காட்சியே, நடிப்பது மிகவும் கஷ்டமென என் அபிப்பிராயம். இக்காட்சியில், தனது அன்னைக்குத் தோற்றாது, அமலாதித்யன் கண்களுக்கு மாத்திரம் அவனது தந்தையின் அருவம் தோன்றும்பொழுது, அதை வெருண்ட கண்களுடன் பார்த்து, அது அரங்கத்தைக் கடந்து செல்லும்போது, மலர்ந்த என் கண்களால் அதை நான் பின்தொடர்ந்து போவது போல் நடிப்பது எப்பொழுதும் சாதாரணமாக ஜனங்களைத் திருப்திசெய்வது வழக்கம். இன்றைத் தினம் அக்காட்சியில் நடித்தபொழுது மிகுந்த கல்விமான்களும் பெரியோர்களும் நிறைந்த சபையாயிருக்கிறது. இவர்களில் சிலர் சீமையில் பெரிய ஆங்கில ஆக்டர்கள் இந்த ஹாம்லெட் பாத்திரத்தை ஆடுவதைப் பார்த்திருப்பார்கள்; அவர்களுக்கெல்லாம், நம்முடைய முழு சாமர்த்தியத்தைக் காட்ட வேண்டும் என்று விருப்பங்கொண்டவனாய், அந்தப் பாகம் வரும்பொழுது, நடிக்கும் என் முழுத் திறமையையும் கொண்டு நடித்தேன். அருவமானது அமலாதித்யன் கண்களுக்குத் தோன்றிய க்ஷண முதல், அது மறையும்வரையில், நான் நடித்ததையெல்லாம் நிசப்தமாய்க் கண்கொட்டாது கவனித்து வந்தார்கள் என்று, எனது நண்பர்கள் பிறகு சொல்லக் கேட்டேன். நான் அவர்களைப் பாராவிட்டாலும், என் மனத்தினுள், சபையிலுள்ளவர்களெல்லாம் நாம் நடிப்பதை ஏகாக்ர சிந்தையர்களாய்க் கவனிக்கிறார்களென்று அறியும் தன்மை எனக்குண்டென நம்புகிறேன். அவர்கள் கரகோஷம் செய்வதைவிட, இவ்வாறு அவர்களது மனத்தை யெல்லாம், வசீகரணம் செய்வதே ஒரு ஆக்டருக்குப் பெருமையென்பது என் அபிப்பிராயம். இக்காட்சியில் நான் நடிக்கும்பொழுது என்னுடன் நடிக்கும் ஆக்டர்களெல்லாம், சைட் படுதாவண்டை நின்று பார்ப்பது வழக்கம். அன்றைத் தினம் இக்காட்சி நடிக்கப்பட்டபொழுது, ஹாலின் மத்தியிலிருந்த ஒரு மனிதன், கூச்சலிட்டான்; பிறகு, அவர் குடித்திருந்ததாயும், நான் நடித்ததைப் பார்த்து ஏதோ பயந்ததாகவும் சொல்லக் கேட்டேன்; அம் மனிதன் இவ்வாறு கூச்சலிட்டவுடன், ஹாலில் என்னைக் கவனித்துக் கொண்டிருந்த அனைவரும் அவனிருக்குமிடம் திரும்பி, “உஸ்!”என்று அவனை அதட்டினார்கள். தாங்கள் வியந்து கொண்டிருந்ததைத் தடை செய்ததற்காக அவனை இவ்வாறு அதட்டியதே நான் ஆக்டு செய்ததற்கு அவர்கள் செய்த பெரிய மரியாதை என்று இன்றளவும் நான் நினைக்கிறேன். அக்காட்சியின் முடிவில் சபையோரெல்லாம் ஒரே கர கோஷம் செய்தனர். ஏறக்குறைய நாடக அந்தம்! வரையில் இருந்துவிட்டுப் போன கவர்னர் அவர்கள் நாடகம் மிகவும் நன்றாக இருந்ததாகப் புகழ்ந்தாராம்; அவர், ‘இன்று ஹாம்லெட்டாக நடித்தவர் எனக்கு சர். ஹென்றி இர்விங்கை நினைப்பூட்டுகிறார்’ என்று என்னைப் பற்றிக் கூறியது நான் என்றும் மறக்கற்பாலதன்று. சர் ஹென்றி இர்விங் என்னும் இங்கிலாந்து தேசத்திய மிகச்சிறந்த ஆக்டருடன் என் பெயரையும் ஒத்திட்டுச் சொன்னதே எனக்குப் பெரும் புகழாகக் கொள்ளுகிறேன். அன்றையத் தினம் நாடகத்தைப் பார்த்த டாக்டர் சின்னதம்பி என்பவர், சீமைக்குப் போய் சர் ஹென்றி இர்விங் ஹாம்லெட்டாக நடித்ததை நேரிற்கண்டவர்களுள் ஒருவர்; அவர் என்னிடம் வந்து, “என் வரைக்கும், அதைவிட நீ நடித்ததே மேலாகத் தோன்றுகிறது” என்று கூறினார். இதை நான் அவருக்கு என் மீதுள்ள பிரியத்தினாற் சொல்லப்பட்டதென்றே கொள்கிறேனே யொழிய, நான் ஏற்கத்தக்க புகழாகக் கொள்ளவில்லை.
அபலையின் ஸ்மசானக் காட்சி எல்லோராலும் புகழப்பட்டதென்று கேள்விப்பட்டேன். இதற்கு முக்கியமான காரணம், ஸ்மசானத்திற்குக் கொண்டுபோன பல்லக்கு மிகவும் ஒழுங்காய்ச் சிருங்காரிக்கப்பட்டதே. இந்தப் பல்லக்கு சிருங்காரிப்பதைப் பற்றி, சர். ராமநாதன் இரண்டாவது குமாரர் மாஹேசருக்கும், ரங்கவடிவேலுக்கும் எனக்கும் நடந்த சம்பாஷணையை முன்பே குறித்திருக்கிறேன். நாடகத் தினம் சாயங்காலம் ஆறு மணிக்கு, நாங்கள் எல்லாம் வேஷம் போட்டுக் கொள்வதற்கு ஆரம்பஞ்செய்து கொண்டிருந்தபொழுது, இந்தக் காட்சியில் உபயோகப்படுத்துவதற்காக, கண்டிராக்டர் செய்தனுப்பிய, பாடை வந்து சேர்ந்தது. இதைப் பார்த்ததும், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு கோபமடைந்து, “நான் இப்படியா செய்தனுப்பச் சொன்னேன்? இதில் நான் படுக்கவே மாட்டேன்! இந்தக் காட்சியை வேண்டுமென்றால் விட்டுவிடுங்கள்!"என்று கோபித்து மொழிந்தார். அவரை நான் சமாதானம் செய்து கொண்டிருக்கும்பொழுது, சிறிது நேரத்திற்கெல்லாம், எனது நண்பர் விரும்பியபடி அழகிய ஒரு பல்லக்கை நான்கு பெயர் தூக்கிக் கொண்டு நுழைந்தார்கள். அதைக் கண்டதும் எனது நண்பர் கோபமெல்லாம் மாறி மிகவும் சந்தோஷப்பட்டுக் கண்டிராக்டர் கொண்டு வந்ததை எடுத்து வெளியில் எறியும்படி உத்தரவு செய்தார். பிறகு நான், “இந்த அழகிய பல்லக்கு எங்கிருந்து வந்தது?” என்று விசாரித்ததில், அது வந்து சேர்ந்த விதம் பின் வருமாறு என்றறிந்தேன்:- முன்னாள் இரவு இப்பல்லக்கு இப்படி இருக்க வேண்டுமென்று எங்களிடமிருந்து கேட்டறிந்த மாஹேசர், மறுநாள் காலை முதல், நாங்கள் அறியாதபடி, அவர்களுடைய பெரிய தோட்டத்தின் ஒரு மூலையில், தன் வேலையாட்களைக் கொண்டு ஒன்றை மிகவும் சிரமப்பட்டுக் கட்டிவைத்தாராம். இதைச் சரியாக ஜோடிப்பதற்கு அன்று சாயங்காலம் வரைக்கும் பிடித்ததாம். இதில் ஒரு முக்கியமான சமாச்சாரம் என்னவென்றால், சாதாரணமாக எவர்களும் பிணத்தைத் தூக்கும்படியான பல்லக்கைக் காணவும் அருவருப்படைவார்கள்; அதுவும் அன்றைக்கு வெள்ளிக்கிழமை தினம்; தங்கள் வீட்டிலிருந்த பெண்டிர் ஆட்சேபணைகளையும் கவனியாது, இதைச் செய்து அனுப்பிய மாஹேசருக்கு’ நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? அந்தப் பல்லக்கில் படுக்கும்பொழுது, எனது நண்பருக்குச் சிரமமில்லாமலிருக்கும் படி, அதன்மீது பட்டு மெத்தைகளையும் பரப்பி அனுப்பினார்!
இத்தகைய அன்பினுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? இவ்வுலகத்தில் அநேகர் சுய நன்மையைப் பாராட்டுங் குணத்தைக் கண்டு என் மனம் வெறுப்படையும் பொழுதெல்லாம். அதற்கு மாறாக, சுய நன்மையைப் பாராதவர்கள் இவ்வுலகில் ஆயிரத்திலொருவராவது இருக் கிறார்கள் என்று இதை நினைத்து, என் மனத்தைத் தேற்றிக் கொள்வது என் வழக்கம். இதை நான் எழுதும்பொழுதும், அறுநூறு மைலுக்கப்பால் இருக்கும் இவர்கள் குடும்பத்தாருக்கு என் தலை வணங்குகிறேன். இதுதான் இவர்கள் செய்த உதவிக்கு நான் செய்யக்கூடிய கைம்மாறு. இதை வாசித்தாவது, எனது நண்பர்களில் யாராவது பிறருக்கு நன்மை செய்வதே பேதை மாந்தர்களின் முக்கியக் கடன் என எண்ணுவார்களானால், நானிவர்களுக்குச் செலுத்த வேண்டிய கடனைக் கொஞ்சம் தீர்த்தவனாவேன்.
அன்றையத் தினம் நாடகம் முடியக் காலை இரண்டு மணியாயிற்று! அதன் பிறகு, நாடகத்தைப் பார்க்க வந்தவர்களுள் எங்களைத் தெரிந்தவர்கள் ஒருவரும் பாக்கியின்றி, உள்ளே வந்து எங்களைக் கொண்டாடினார்கள் என்று கூறுவது அதிகமாகாது. எனக்கு மிகவும் இளைப்பாயிருந்த போதிலும் அவர்களுடன் சில வார்த்தைகளாவது பேச வேண்டியதாயிற்று. நானும் எனது நண்பரும் இந்தத் தர்ம சங்கடத்திலிருப்பதைக் கண்ட, எங்கள் நண்பர் ராஜேந்திரர், “இப்படி வருபவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால், பொழுது விடிந்து போம்!” என்று சொல்லி, ரங்கவடிவேலுவையும் என்னையும், பலாத்காரமாய்த் தன் வண்டியில் அழைத்துக்கொண்டு, வீடு போய்ச் சேர்ந்தார்.
அன்றைத் தினம் நான் உறங்குமுன் எங்கள் சபையின் நற்பெயரை இலங்கைத் தீபத்திலும் பரவச் செய்த இறைவனது பெருங்கருணையைப் போற்றிவிட்டு, பிறகு நிம்மிதியாய் உறங்கினேன்.
மறு நாள் சாரங்கதர நாடகம் நடத்தினோம். அதற்கு அத்தீபத்திலுள்ள சிங்களவர்களுக்குள் தலைமை வாய்ந்த பண்டாரநாயக் என்பவர் விஜயம் செய்தார். அவருடைய முழுப் பெயர், சர் சாலமன் டையஸ், பண்டார நாயக் மஹா முதலியார்! இப்பெயரிலுள்ள விசித்திரத்தை இதை வாசிக்கும் நண்பர்கள் கவனிப்பார்களாக. சர் என்பது துரைத்தனத்தார் அவருக்கு அளித்த பட்டப் பெயர்; சாலமன் என்பது ஹீப்ரு பதம்; டையஸ் என்பது போர்த்துக்கேய வார்த்தை; பண்டார நாயக் என்பது பாலி பாஷை வார்த்தைகள்; மஹா சமஸ் கிருதம்; முதலியார், தமிழ்ப் பதம்! மஹா முதலியார் என்பது சிலோன் கவர்ன்மெண்டார் கொடுக்கும் பட்டப் பெயர்;
சென்னையில் திவான் பகதூர் என்கிற மாதிரி, இவர் நாடகத்தைப் பார்த்துக் கெண்டிருந்தபொழுது நாடகத்தை மெச்சிவிட்டு; அருகிலிருந்த தனது நண்பராகிய டாக்டர் சின்னையா வென்பவரை; பத்மநாபராவ், ரங்கவடிவேலு இவர்களைப் பார்த்து இந்த ஸ்திரீகள் எந்த ஜாதியார் என்று கேட்க, அவர், இவர்கள் ஸ்திரீகளல்ல; ஆண் பிள்ளைகளேயென்று பதில் உரைத்தும், நம்பாது, “வாஸ்தவமா இவர்கள் ஸ்திரீகள்தான். இந்த உண்மையை இங்கு வெளியிட்டால் இவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிடப்போகிற தென இச் சபையார் அதை மறைத்துச் சொல்லுகிறார்கள் போலும்!” என்று பதில் உரைத்தனராம். இதை டாக்டர் சின்னையா என்பவரே என்னிடம் நேராக உரைத்தார். இவ்வாறு கூறினவருடைய சந்தேகம் நிவர்த்தியாகும் பொருட்டு, பத்மநாபராவ், ரங்கவடிவேலு முதலிய ஆக்டர்களையும் என்னையும் மறுநாள் அவர் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுபோய், இன்னின்னாரென அவருக்குத் தெரிவித்தார். அதன்மீது அனைவரும் கொஞ்ச நேரம் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்பிவிட்டோம்.
சாரங்கதர நாடகத்தில் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு நடித்தது எல்லோராலும் மிகவும் மெச்சப்பட்டது. மனோஹரன் நாடகத்தையும் இதையும் மறுமுறை பார்க்க வேண்டுமென்று பலர் கேட்டதற்கு நாங்கள் இணங்குவதற்கில்லாமற் போயிற்று. இந்தச் சாரங்கதர நாடகத்துடன் கண்டிராக்டாக ஏற்படுத்தப்பட்ட ஐந்து நாடகங்களும் முற்றுப்பெற்றன. ஏறக்குறைய ஒவ்வொரு நாடகத்திற்கும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலானபடியால், கண்டிராக்டருக்கு நல்ல லாபம் கிடைத்தது. அதற்காக எனது நண்பர்களில் சிலர் வெறுப்படைந்த போதிலும், எனக்குத் திருப்திகரமாகவேயிருந்தது. லாபம் வந்ததனால் சரியாகப் போய்விட்டது; நஷ்டம் வந்திருந்தால் கண்டிராக்டர்தானே அதைப் பொறுத்திருக்க வேண்டும்? மேற்சொன்னபடி ஐந்து நாடகங்களும் முடிந்த பிறகு எங்களையெல்லாம் நல்வரவேற்று, எங்கள் சௌகர்யத்திற்கெல்லாம், முதலில் எல்லா ஏற்பாடுகளையும் செய்த ஹானரபிள் கனகசபை யென்பவர் இன்னொரு நாடகம் நடத்தி, அதன் வரும்படியில் பாதியை, இலங்கைத் தீபத்திய கவர்னர் ஏற்படுத்திய, டூபர்குலோசிஸ் வியாதி நிவாரண பண்டுக்காகக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டதன்பேரில் அதற்கு இசைந்தோம். என்ன நாடகம் போடுவதென்கிற கேள்வி வந்தபோது, இதுவரையில் சோகரசமும் வீரரசமும் அமைந்த நாடகங்களை இங்கு ஆடியுள்ளோம்; ஹாஸ்ய ரஸமமைந்த நாடகம் ஒன்று ஆடினால் நன்றாயிருக்குமெனத் தீர்மானித்து, “காதலர் கண்கள்”என்பதை ஆடுவதாகத் தீர்மானித்தேன். அப்படியே அந்நாடகமாடுவதாக விளம்பரம் செய்த பிறகு, ஆக்டர்களெல்லாம் தங்கள் தங்கள் பாடங்களைப் படிப்பதற்காக அப்புஸ்தகத்தைக் கொடுக்க வேண்டுமென்று, என்னைக் கேட்க நான் என்னுடன் கொண்டுபோன சில புஸ்தகங்களைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவற்றுள் இப்புஸ்தகம் ஒன்றேனும் கிடைக்கவில்லை! என்ன செய்வது? ஒரு புஸ்தகமுமில்லாமல் ஆக்டர்கள் தங்கள் பாகங்களை எப்படிப் படிப்பது? எப்படி நாடக தினம் புராம்டு செய்வது என்று மனக்கவலையுற்று, எங்கள் சிங்கள நண்பர்களுடன் இக்கஷ்டத்தைத் தெரிவித்து, ‘கொழும்பில், யாராவது அப்புஸ்தகம் படிக்க வாங்கியிருக்கிறார்களா?’ என்று பார்த்து எப்படியாவது ஒரு புஸ்தகம் கொண்டு வாருங்கள் என்று சொல்ல, சீதையைத் தேடக் கிஷ்கிந்தைவாசிகள் நான்கு புறமும் போனது போல் அவர்களுள் சிலர் அப்பட்டணமெங்கும் சைக்கிளை போட்டுக் கொண்டு தேடிப் பார்த்தனர். மறுநாட்காலை ஒருவர் ஒரு புஸ்தகம் கிடைத்ததெனக் கொண்டு வந்தார். அப்பொழுது எனக்குண்டான சந்தோஷம் கொஞ்சமல்ல; ஆயினும் ஒரு புஸ்தகத்தை வைத்துக்கொண்டு, “ஊருக்கு ஒரு தேவடியாள் யாருக்கென்று ஆடுவாள்?” என்னும் பழமொழிபோல், அப் புஸ்தகத்தை யாருக்குக் கொடுப்பது நான்? அதன் மீது என்னுடைய ஆக்டர்களையெல்லாம் சுற்றிலும் உட்கார வைத்துக் கொண்டு, நாடகத்தைக் கடைசி வரையில் ஒரு முறை படித்துக் காட்டினேன்! அவ்வளவுதான் ஒத்திகை! அவர்களில் சிலர் இதை முன்பே ஆடியிருந்தபடியாலும், எல்லோரும் அதிசிரத்தை உடையவர்களாய் இருந்த போதிலும் நாடகமானது ஒரு குறையுமின்றி, மிகவும் நன்றாக நடந்தது. இவ்வாறு நடித்ததில் ஒரு விசேஷத்தை நான் குறிக்க வேண்டும். இந் நாடகத்தில் “வீர்சிங்” என்பது ஒரு முக்கியமான பாத்திரம். அதைச் சென்னையில் கோபாலசாமி முதலியார் என்பவர் சாதாரணமாக நடிப்பார். நாங்கள் புறப்படும் பொழுது இந்நாடகம் ஆடுவதாக யோசனையில்லாதபடியால், அவரை இலங்கைக்கு அழைத்துக் கொண்டு போகவில்லை. அதன்மீது திடீரென்று இந் நாடகத்தை வைத்துக்கொண்டபோது, எனது இளைய நண்பர் டி.சி.வடிவேலு, சாதாரணமாக அவர் ஸ்திரீவேடமே தரிப்பவராயினும், இந்த ஆண் வேடத்தை எடுத்துக் கொள்வதாகக் கூறியதுமன்றி, அப்பாகத்தை நன்றாய்ப் படித்து மிகவும் நன்றாய் நடித்தார். அப்படி நடித்ததற்காக நான் செய்த கைம்மாறு என்ன வென்றால், அவருடன் ஒரு காட்சியில் நான் வாள் யுத்தம் செய்ய வேண்டி வந்த பொழுது இவரது கையில் என் வாளால் நன்றாய்க் காயப்படுத்தினதே! அவர் இன்றைத்தினம் அகஸ்மாத்தாய் என் வீட்டிற்கு வந்து என்னுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, இந் நாடகத்தைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று நான் கூறியபொழுது, இதை எனக்கு ஞாபகப்படுத்தினார்.
இந்நாடகத்தின் வசூலில் செலவு போக, பாதிப் பணத்தை டூபர்குலோசிஸ் வியாதி நிவாரணநிதிக்குக் கொடுத்துவிட்டு, மிகுந்த பாதியை நாம் பட்டணம் கொண்டு போக வேண்டியதில்லை; இவ்வளவு அன்பும் ஆதரவுமுடன் நம்மை உபசரித்த சிங்கள சிநேகிதர்களுக்கே செலவழிக்க வேண்டுமென்று, அவர்களுக்கெல்லாம் ஒரு சிறு விருந்தளிக்க வேண்டுமென்று தீர்மானித்து, மறு நாள் அவர்களுக்கு அவ்விருந்தை ஏற்பாடு செய்து, எங்கள் நாகடத்திற்கு வந்திருந்த சீமாட்டிகளையும் சீமான்களையும் வரவழைத்தோம்.
மறுநாட் காலை விருந்தினர்க்கு உபசரணைக்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்யும் பொருட்டு பப்ளிக் ஹாலுக்குப் போய் அவைகளையெல்லாம் செய்து விட்டு, நாங்கள் கொழும்புக்கு வந்ததற்கு ஞாபகார்த்தமாக, எல்லோரும் உட்கார்ந்து ஒரு போட்டோ பிடித்துக்கொண்டு, சபை தங்கியிருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தேன். சேர்ந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் சென்னையிலிருந்து, சுமார் மூன்று வயதுடைய எனது இரண்டாவது பெண் மிகவும் அசௌக்கியமா யிருக்கிறதாயும், வைத்தியர்கள் டைபாய்ட், ந்யுமோனியா இரண்டுமே கலந்திருப்பதாகச் சந்தேகிப்பதாகவும் எனக்கு ஒரு தந்தி வந்தது! அதைப் பார்த்தும் இடி விழுந்தவன் போலானேன். சாதாரணமாக நான் பட்டணத்தை விட்டு வெளியிற்போனால் திரும்பி வருமளவும் என் மனைவி மக்களுக்குக் கடிதம் எழுதுவதில்லை; அவர்களையும் எழுதச் சொல்வதில்லை. “ஒரு சமாச்சாரமும் இல்லாவிட்டால் சுப சமாச்சாரம்தான்” என்னும் ஆங்கிலப் பழமொழியொன்றைக் கடைப்பிடித்து நடப்பவன் நான்; ஏதாவது மிகவும் முக்கியமான சமாச்சாரமாயிருந்தால்தான் எனக்கு எழுத வேண்டும் என்று என் மனைவிக்குச் சொல்லியிருந்தேன். ஆகவே, இம் மாதிரியான தந்தி வந்தவுடன் என் குழந்தை ஆபத்திலில்லாவிட்டால் எனக்குத் தந்தியனுப்பி யிருக்கமாட்டார்கள் என்று நினைக்க வேண்டியதாயிற்று.
நான் இன்னது செய்வதென்று தெரியாது திகைத்தேன்; ஒருபுறம் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தக் கொழும்புப் பிரயாணத்தைச் சந்தோஷகரமான முடிவிற்குக் கொண்டு வந்தபின், இன்று சாயங்காலம், எங்கள் சபையைக் கௌரவப்படுத்தின சீமாட்டிகளையும் சீமான்களையும் பார்க்காமலா போகிறது என்கிற எண்ணம்; மற்றொருபுறம் என் குழந்தை மரணாவஸ்தையிலிருக்கும் பொழுது, அதன் அருகிலில்லாமலிருப்பதா? அதற்கு ஏதாவது நேரிடுமாயின், என் மனைவிக்குத் தேறுதல் சொல்லாமலிருப்பதா? என்கிற எண்ணம். உடனே ஏகாந்தமான ஓரிடத்திற் போய் உட்கார்ந்து கொண்டு, என் கண்களை மூடிக்கொண்டு கருணையங்கடவுளைத் தியானித்தேன்; அப்பொழுது, கொழும்பில் என் கடமையைச் செய்தாயது, என் சுய நன்மையைப் பார்க்கலாகாது, பட்டணம், போய் நோயாய்க் கிடக்கும் என் குழுந்தையருகில் இருக்க வேண்டியதுதான் என் கடமை என்று எனக்குத் தோன்றியது. உடனே நான் பட்டணம் வருவதாகத் தந்தி கொடுத்துவிட்டு, எனக்குத் துணையாக வருவதாக இசைந்த எம். துரைசாமி ஐயங்காருடன் அன்று சாயங்காலம் கப்பலேறி, மறுநாட்காலை தூத்துக்குடி சேர்ந்து, ரெயிலேறி மறுநாள் சென்னை வந்து சேர்ந்தேன்.
கொழும்பை விட்டுப் புறப்பட்டது முதல் சென்னை வந்து சேரும்வரையில் என் மனத்தில் ஒரு பிரார்த்தனைதான் இருந்தது; அதாவது, எப்படியாவது ஈசன் கருணையினால் என் குழந்தையை உயிருடன் காணவேண்டுமன்பதுதான்! ஈசன் என் பிரார்த்தனைக்கிணங்க என் குழந்தையை உயிருடன் கண்டேன். இந்த விஷயமாக, நாடக மேடைக்குச் சம்பந்தமான சமாச்சாரமாக இல்லாவிட்டாலும், நேரிட்ட ஒரு சிறு சமாச்சாரத்தை இங்கு எழுத விரும்புகிறேன். நான் என் வீடு சேர்ந்து குழந்தையின் தேகஸ் திதியைப்பற்றி விசாரித்தபொழுது, என் குடும்ப வைத்தியர், வியாதி அதிகப்பட்டிருப்பதால் வீட்டிலுள்ளவர்கள் பார்த்துக் கொள்ள முடியாது; இரவும் பகலும் மணிப்பிரகாரம் ஔஷதம் முதலியன கொடுப்பதற்காக, நர்ஸ் இருக்க வேண்டியது அதி அவசியம் என்று ஏற்படுத்திய ஒரு ஆங்கில நர்ஸ், எனக்குக் கூறியதை இங்குத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன்; “என்ன ஆச்சரியம், மிஸ்டர் முதலியார்! குழந்தைக்கு விடாது ஐந்தாறு தினங்களாக 104, 105 டிக்ரி ஜ்வரம் இருந்து கொண்டிருந்தது; என்ன மருந்து கொடுத்தாலும் கொஞ்சமாவது இறங்கவேயில்லை; புத்தி மாறாட்டத்திலும் உங்களைப்பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தது. நீங்கள் திரும்பி வருவதாக வந்த தந்தியை அதற்குக் காட்டி, உங்கள் அப்பா சீக்கிரம் வருகிறார்கள் பயப்படாதே, என்று சொன்னேன்; அந்தக் காகிதத்தை வாங்கித் தன் தலையணையின்கீழ் வைத்துக் கொண்டு உறங்கி விட்டது. அந்த க்ஷணமுதல் படிப்படியாக ஜ்வரம் குறைந்து விட்டது. என்ன வேடிக்கையாய் யிருக்கிறது!” என்றாள். அந்த அம்மாளுக்கு வேடிக்கையாயிருந்திருக்கலாம். எனக்கு வாஸ்தவமாயிருந்தது. என் சுய நன்மையைப் பாராட்டி, நான் உடனே புறப்பட்டு வருவதாகத் தந்தி கொடுத்திராவிட்டால், என் குழந்தை இறந்திருக்குமென்று நான் உறுதியாக நம்புகிறேன். இன்றளவும் அந்த நம்பிக்கை மாறவில்லை. என் மனத்திற்குக் கஷ்டமாயிருந்தபோதிலும் என் கடமைப்படி நான் செய்தபடியால் கடவுள் அக் குழவியை எனக்குக் காப்பாற்றியருளினார் என்று முழு மனத்துடன் நம்புகிறேன். இதை வாசிக்கும் எனது நண்பர்களில் சிலர், ‘இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? காக்கை ஏறப் பனம்பழம் விழுந்த கதை போலிருக்கிறது’ என்று நகைக்கலாம். அவர்கள் அவ்வாறு எண்ணி நகைப்பது தவறு என்று நான் சொல்லமாட்டேன். ஆயினும், மேற்கூறிய என்னுடைய தீர்மானத்தினின்றும் நான் மாறமாட்டேன்!
இக் கிளைக்கதையை இதனுடன் விட்டு, இனிக் கொழும்பில் நடந்ததைப்பற்றி எழுதுகிறேன். இதைப்பற்றி எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவும், வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் எனக்கு எழுதிய கடிதங்கள் இன்னும் என்னிடம் இருக்கின்றன. அவர்கள் பப்ளிக் ஹாலுக்குப் போனது முதல், வந்தவர்களெல்லாம் ஒருவர் பாக்கியின்றி, ‘எங்கே மிஸ்டர் சம்பந்தம்?’ என்று வினவ, அவர்களுக்கு, நான் திடீரென்று பட்டணம் திரும்பிப் போகவேண்டி வந்த காரணத்தை அவர்கள் தெரிவிக்க, அனைவரும் வருத்தப்பட்டதாகத் தெரிவித்தனர். அன்றியும் இரண்டு நாள் பொறுத்து, என் குழந்தை அபாயத்தினின்றும் நீங்கியது என்று என் தந்தி போய்ச் சேருமளவும் பன்முறை பட்டணத்திலிருந்து ஏதாவது சேதி வந்ததா என்று பலர் கேட்டனுப்பியதாகச் சொன்னார்கள். இவ்வாறு என் குடும்ப சுகத்தைப்பற்றிக் கேட்டவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? அப்படி விசாரித்தவர்களில் நூற்றில் தொண்ணூற்றொன்பது பெயரை நான் பார்த்தவனுமன்று; ஏதோ நான் நாடக மேடையில் அவர்கள் மனத்தைச் சிறிது சந்தோஷிக்கச் செய்தது, அத்தனை பெயரையும் என்மீது அவ்வளவு ப்ரீதி கொள்ளும்படி செய்தது; நாடகமாடுவதிலும் கொஞ்சம் பலன் உண்டு என்று நான் நம்ப வேண்டியதாயிருக்கிறது.
மேற்குறித்த சந்தர்ப்பத்தினால், அக்குழந்தையைச் சில வருஷம் வரையில் “கொழும்பு குழந்தை” என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தேன். அன்றியும் இந்த அனுபவத்தை, நான் இப்போதைக்கு இரண்டு வருஷங்களுக்கு முன் எழுதிய “தாசிப்பெண்” என்னும் நாடகத்தில் கதாநாய கியாகிய மீனாட்சி மரணாவஸ்தையிலிருந்து தப்பிப்பிழைத்த காட்சியில் சற்று மாற்றி, உபயோகித்திருக்கிறேன். இக் குழந்தை பெரியவளாகி, விவாகமாகி, தெய்வக் கடாட்சத்தினால், ஒரு பெண் குழ்ந்தையைப் பெற்றிருக்கிறாள். அந்த என் பேத்திக்கு மீனாட்சி என்று பெயர் வைத்திருக்கிறேன்.
இரண்டு மூன்று தினங்கள் பொறுத்துக் கொழும்பிலிருந்து எனது நண்பர்கள் எல்லாம் சுகமாய்ப் பட்டணம் வந்து சேர்ந்தனர். அதன் பிறகு கொஞ்ச நாளைக்கெல்லாம், கொழும்பு நகரவாசிகள், எங்கள் சபைக்குச் செய்த மரியாதையாக வெள்ளி வேலை செய்யப்பட்ட, சுமார் 500 ரூபாய் பெறும்படியான, ஒரு யானையின் விக்ரஹத்தின் முதுகின் பேரில் வைக்கப்பட்ட கண்டி நகர வேலைப் பாடுள்ள கிண்ணமும், இலங்கைத் தீவுக்கு அறிகுறியாக ஒரு வெள்ளித் தென்னைமரமும், ஒரு பெரிய வெள்ளித் தட்டும் வந்து சேர்ந்தன.
நாங்கள் கொழும்பிலிருந்த பொழுது, அங்குள்ள சில பெரிய மனிதர்கள், என் ஆருயிர் நண்பர் சி.ரங்கவடிவேலு வுக்கும், எனக்கும் பொற்பதக்கமளிக்க வேண்டுமென்று இரண்டு பதக்கங்களைத் தயார் செய்தும் எங்கள் சபையின் சட்டங்களின்படி நாங்கள் அவைகளைப் பெறலாகாது என்று மறுத்தோம்; உங்களுக்கு விருப்பமானால் எங்கள் சபைக்குப் பொதுவாக மரியாதை செய்யலாமேயொழிய சபையின் அங்கத்தினர்க்குப் பிரத்யேகமாய் மரியாதை செய்யக்கூடாதென்று தெரிவித்தோம். இதை உத்தேசித்துத் தான் கொழும்பு நகரவாசிகள் மேற்கண்டபடி சபைக்கு மரியாதை செய்திருக்க வேண்டுமென்று எண்ண வேண்டிய தாயிருக்கிறது. இதற்குப் பிரதியாகக் கொழும்பு தமிழ்ச் சங்கத்தார் இவ்வருஷம் கடைசியில் சென்னைக்கு வந்த பொழுது, எங்கள் சபையார் அவர்களுக்கு அலங்கார வெள்ளிக்கேடயம் ஒன்று ஞாபகார்த்தமாக அளித்தனர்.
இவ்வாறு, பலர் அசாத்தியமான காரியம் என்று கூறிய இப்பெரும் வேலையை, சந்தோஷகரமாய் முடித்ததற்கு, என்னை ஒரு சிறு கருவியாகக் கொண்ட எம்பெருமான் பேரருளைப் போற்றி, இனிமேல் நடந்த கதைகளை என் அன்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.
இவ் வருஷக் கடைசியில் மாட்சிமை தங்கிய நமது ஐந்தாம் ஜார்ஜ் சக்ரவர்த்தி, மகுடம் புனைந்த கொண்டாட்டம் சென்னையில் நடந்தபொழுது, அக்கொண்டாட்டத்தின் கமிட்டி மெம்பர்கள் வேண்டுகோளின்படி ஜிம்கானா மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட பெரிய கொட்டகையில் இந்திய தேசச் சரித்திரத்தின் சில முக்கிய காட்சிகளைத் தோற்றக் காட்சிகளாகக் காண்பித்தோம்,
இவ்வருஷம் எங்கள் சபையின் தெலுங்குப் பிரிவினர் வேதம் வெங்கடாசல ஐயர் இயற்றிய “விதிலேக வைத்தியுடு” என்னும் நூதனத் தெலுங்கு நாடகத்தை நடத்தினார்கள். இது பிரான்சு தேசத்திய பிரபல நாடகக் கவியாகிய மாலியர் என்பவர் எழுதிய பிரஹசனமொன்றின் மொழி பெயர்ப்பாம். இதை நான் தமிழில் அமைக்கலா மென்றிருக்கிறேன், பரமேஸ்வரர் ஆயுள் கொடுப்பாராயின். இவ் வருஷத்திய தசராக் கொண்டாட்டத்தில் நடந்த ஒரு விசேஷத்தை இனி எழுதுகிறேன். தசராவில் ஏதாவது புதிதாய்ச் செய்ய வேண்டுமென்று வற்புறுத்திக் கொண்டிருந்த எனது பால்ய நண்பர் வி.வி.ஶ்ரீனிவாச ஐயங்காரின் வேண்டுகோளைத் தட்டக் கூடாது என்று எண்ணினவனாய், எங்கள் சபையிலுள்ள எட்டு ஸ்திரீ வேடம் தரிக்கும் ஆக்டர்களைக்கொண்டு, கோலாட்டம் போட்டு வைக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். அதற்காக ஒரு நட்டுவனையும் பிடித்து இரகசியமாகக் காலை வேளைகளில் ஒத்திகைகள் நடத்தி வந்தேன்; ஒத்திகைளெல்லாம் முடிந்தவுடன் இதைத் தசராவில் ஒரு நாள் போடுவதென்றால் அதற்கு ஒரு காரணம் வேண்டுமேயென்று யோசித்து “சபாபதி முதலியாரின்” தங்கை வயதடைந்த சடங்கிற்காக அவர் வீட்டில் கோலாட்டம் நடக்கப்போகிறதெனப் பெயர் வைத்துத் தசராவின் முதல் நாள் கொண்டாட்டத்தில் சபாபதி முதலியார் தனது நண்பர்களையெல்லாம் அழைப்பது போல, சபையின் அங்கத்தினர்க்கெல்லாம் பத்திரிகை கொடுக்கச் செய்தேன். ஆயினும் இதில் ஒரு கஷ்டம் வந்து சேர்ந்தது. சபையிலுள்ள ஸ்திரீ வேஷதாரிகளெல்லாம் கோலாட்டம் போடும் தாசிகளாக வேடம் பூண வேண்டி வந்தது. ருதுவடைந்த சபாபதி முதலியாரின் தங்கையாக உட்கார்ந்திருக்க வேறொருவரும் கிடைக்கவில்லை! வேடம் பூணக்கூடிய உருவமுடைய சிலரை அண்டிக் கேட்டபோது, அவர்கள் அந்தப் பெண் வேடம் பூணுவதென்றால் வெட்கமாயிருக்கிறதென மறுத்தனர். இந்தத் தர்ம சங்கடத்தினின்றும் தப்ப வேறு வகையில்லாதவனாய், அந்த வேடம் நானே பூணத் தீர்மானித்தேன். இது மற்றவர்களுக்குத் தெரிந்தால் ஏளனம் செய்வார்களென்று இச்செய்தியை இரகசியமாய் வைத்திருந்தேன். தசராவின் முதல் தினமும் இந்த வேடம் நான் பூணுவதை மற்றவர்கள் அறியக்கூடாதென்று நினைத்து, அன்றைத் தினம் நான் வெளியூருக்கு வியாஜ்ய சம்பந்தமாகப் போவதாக வெளியிட்டுவிட்டு, அன்றைத் தினம் மத்தியானம் ஒருவருமறியாதபடி விக்டோரியா ஹாலின் மேல் மாடிக்குப்போய், ஆக்டர்கள் தவிர மற்று யாரும் நேபத்தியத்திற்குள் வரக்கூடாதென்று விளம்பரம் போட்டுவிட்டேன். இம்முறை ரங்கவடிவேலுவும், ஜெயராம் நாயகரும் எனக்கு நன்றாகத்தான் பெண் வேஷம் போட்டு வைத்தார்கள். காட்சி ஆரம்பத்தில் முதலியார்கள் வீட்டின் வழக்கம்போல், கலியாணப் பெண்ணை மங்களப் பாட்டுடன் நாதஸ்வரம் வாசிக்க, சிருங்காரித்திருந்த வீட்டின் மத்தியில் கொண்டுபோய் உட்கார வைக்க வேண்டியிருந்தது; அப்பொழுது தலைகுனிந்து, வாயைத் திறவாமல், மேடையின் மீதிருந்த நாற்காலியின்பேரில், என் தாயாராக வேடம் பூண்ட ஒரு ஆக்டர் கொண்டுபோய் உட்கார வைத்தபொழுது, என்னை இன்னானென ஒருவரும் கண்டுபிடிக்க முடியவில்லை. நம்முடைய சூழ்ச்சி பலித்தது, நம்மை ஒருவரும் கண்டுபிடிக்கவில்லை என்று நான் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தபொழுது, இரண்டு நிமிஷத்திற்கெல்லாம், சபையிலுள்ள அனைவரும் கொல்லென்று நகைத்துக் கை கொட்டினர்! ஓகோ! நம்மைக் கண்டுபிடித்துவிட்டார்கள் என்று அறிந்தவனாய் அக்காட்சி முடியும் வரையில் என் தலையைத் தூக்கவில்லை நான்!
பிறகு நான் எப்படி இவர்களுக்குத் தெரிந்தது என்று விசாரித்ததில், என்னுடைய தமையனார் ஆறுமுக முதலியாரால் வெளியாயது என்று கண்டேன். காட்சியின் துவக்கத்தில் அவர், அப்பொழுது ஸ்மால்காஸ் கோர்ட்டு சீப் ஜட்ஜாயிருந்து, பிறகு ஐகோர்ட்டு ஜட்ஜான கிருஷ்ணன் என்பவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாராம். நான் மேடையின் மீது உட்கார்ந்தவுடன், இது யார் புதிய ஆக்டர் என்று எல்லோரும் வினவிக் கொண்டிருக்க, மிஸ்டர் கிருஷ்ணனும், சபையின் காரியதரிசியாயிருந்த என் தமையனாரை நோக்கி, இது யார் என்று கேட்க, அவர் மெல்ல அவரிடம், “இது சம்பந்தம்” என்று தெரிவித்தாராம். இதைக் கேட்டவுடன் மிஸ்டர் கிருஷ்ணன் “சம்பந்தமா!” என்று உரக்கச் சொல்லி நகைத்துவிட்டனராம். உடனே இந்தச் சமாச்சாரம் ஹால் எங்கும் பரவிவிட எனது நண்பர்களெல்லாம் கைகொட்டி நகைத்து விட்டனர் என்பதை அறிந்தேன்.
அன்றைத்தினம் கோலாட்டம் போட்டது மிகவும் நன்றாயிருந்ததெனச் சொல்லி, மறுபடியும் அதைப் போடும்படி சபையின் அங்கத்தினர்கள் கேட்டது எனக்கு ஞாபகமிருக்கிறது.
இவ்வருஷம் நடந்த நிகழ்ச்சிகளுள், மிகுந்த வியசனகரமான தொன்று, எங்கள் சபையின் அத்யட்சகராயிருந்த ஆனரபில் வி. கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் மரணமே. இந்த வருஷத்தின் ஆரம்பத்தில் அவர் ஹைகோர்ட் ஜட்ஜ் பதவியிலிருந்து, சென்னை கவர்னர் அவர்களுடைய கவுன்சில் மெம்பராக நியமிக்கப்பட்டார். அதைக் கொண்டாடும் பொருட்டு, ஜனவரி மாதம் 29ஆம் தேதி, சபையில் பெரும் மகிழ்ச்சி கொண்டாடி ஒரு விருந்து செய்தோம். ஒரு வருஷத்திற்குள்ளாகவே அவர் காலமாவார் என்று ஒருவரும் எண்ணவில்லை. ஆயினும் தெய்வம் விதித்த விதி அப்படியிருந்தது. இவரது குணாதிசயங்களைப் பற்றி ஒரு சந்தர்ப்பத்தை இங்கு எழுத விரும்புகிறேன். இவ் வருஷம் சென்னை கவர்னர், தனது ஐந்து வருட ஆளுகை முடிந்து சீமைக்குத் திரும்பிப் போக வேண்டிய சமயம் வந்தபொழுது, சென்னையில் சில தனவான்கள் அவருக்கு உபசரணையாக ஒரு விருந்து செய்ய வேண்டுமென்று தீர்மானித்தனர். மற்றும் சிலர் அங்ஙனம் செய்யக்கூடா தென்று ஆட்சேபித்தனர். இவ்வாறு சென்னையில் இதைப்பற்றி இரண்டு கட்சிகள் ஏற்படவே, எங்கள் சபையாரைக் கவர்னரது உபசரணை விருந்தில் ஏதாவது நாடகமாட வேண்டுமென்று ஒரு திறத்தார் கேட்க, அதைப்பற்றி இரண்டு கட்சிகள் இருக்கும் பொழுது, சபையார் இதில் கையிட்டுக் கொள்ளக் கூடாதென்று தீர்மானித்தோம். பிறகு வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த உபசரணை ஐலண்டு கிரௌண்டில் நடக்க, எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும் நானும் வரவழைக்கப்பட்டுப் போயிருந்தபொழுது, ஒரு மூலையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்குக் கொட்டகையில் வி. கிருஷ்ணசாமி ஐயர் வந்தவுடன், தூரத்திலிருந்த நாங்கள் நமஸ்காரம் செய்வதைக் கண்டவராய், உடனே நாங்கள் இருந்த இடம் விரைந்துவந்து எங்கள் கையைக் குலுக்கிவிட்டு, என் காதில் மெல்ல “நம்முடைய சபை செய்தது மிகவும் சரி!” என்று ரகசியமாய்ச் சொல்லிவிட்டுப் போனார்! நாங்கள் இவர் எங்கள் சபையின் அத்யட்சகராயிருந்தும், கவர்னா கவுன்சில் மெம்பராயிருந்தும், கவர்னருக்குச் செய்த உபசரணையில், எங்கள் சபை சேரக் கூடாது என்று தீர்மானித் ததைப்பற்றி எங்கு கோபித்துக் கொள்ளுகிறாரோ என்று பயந்திருந்தோம். இதை அறிந்தவராய், அப் பயம் நீங்கும்படி அச்சமயம் எங்களிடம் இதை வந்து தெரிவித்துப் போனது நான் என்றும் மறக்கற்பாலதன்று.
என்னிடம் மிகுந்த அன்பு பாராட்டிய இச்சீமானை விட்டு அகலுமுன் இவரைப்பற்றிய இன்னொரு சிறு கதையை எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன். ஒரு முறை தெலுங்கு நாடகமொன்று நடந்து கொண்டிருந்தது - பிரஹ்லாத நாடகமென்று நினைக்கிறேன் - அதில் பிரமாவினுடைய பாத்திரம் பெரிய தொப்பையை உடைய ஒரு ஆக்டருக்குக் கொடுத்திருந்தனர். அவரைக் கண்டதும், கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் இப் பாகத்தை இப்படிப்பட்ட வருக்குக் கொடுக்கக் கூடாதென்று கண்டித்தவராய் “எங்கே சம்பந்தம்? கூப்பிட்டு வாருங்கள்” என்று, அரங்கத்திற்குள்ளே இருந்த என்னை அழைத்தனர். நான் என்ன சமாச்சாரமோ என்று அவர் அருகிற் போய் நிற்க, “இந்த பிரமா வேஷம் பெரும் குடத்தைப்போல் தொப்பையையுடைய இந்த ஆக்டருக்கு உன்னை யார் கொடுக்கச் சொன்னது?” என்று கேட்டார். “இது தெலுங்கு நாடகம், இதில் நான் ஒன்றும் பிரவேசிப்பதற்கில்லை” என்று நான் பதில் சொல்ல, “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீதான் எனக்கு உத்தரவாதம், இம்மாதிரியான தவறுகள் நடக்காதபடி நீ பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கண்டிப்பாய்ப் பதில் உரைத்தார். இதன் பேரில் நான் என்ன சொல்லக்கூடும்!
கிருஷ்ணசாமி ஐயர் கூறிய வார்த்தைகளினின்றும், தென்னிந்திய நாடக மேடை அபிவித்தியடைய வேண்டுமென்று விரும்புவோரெல்லாம் அறிந்து கொள்ள வேண்டியது ஒன்றிருக்கிறது - அதாவது நாடகப் பாத்திரங்களை ஆக்டர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும் பொழுது, ஒவ்வொரு ஆக்டரும் நடிக்கவேண்டிய பாத்திரத்திற்குத் தக்க ரூபம் முதலியன உடையவனாயிருக்கிறானா என்ற பார்த்துக் கொள்ள வேண்டியதாம். இது தமிழ் நாடக அபிவிருத்திக்கு ஒரு முக்கியமான விஷயமாதலால் இதைப்பற்றிச் சற்று விவரிக்க விரும்புகிறேன். நான் கண்ணாரக் கண்ட சில ஆபாசங்களை இங்கெழுதுகிறேன். ஒரு நாடகக் கம்பெனியார் ஆடிய நாடகத்தில் ஒருவன் மன்மதனாக வேடம் பூண்டான்; முகத்தை நோக்குமளவில் அவனுக்கு ஹனுமார் வேஷம்தான் தக்கது என்று தோன்றும்படியிருந்தது; அதன் மீது அந்தக் கம்பெனியின் சூத்ரகாரை இவனுக்கு ஏன் இந்த வேஷம் கொடுத்தீர்களென்று கேட்க, இவன் மிகவும் நன்றாய்ப் பாடுவான் சார், என்று பதில் தெரிவித்தார்.
இன்னொரு சமயம் ஒரு நாடகக் கம்பெனி எனது மனோஹரன் நாடகத்தை நடத்தியபொழுது, விஜயாள் வேஷம் பூண்ட பெண், ஒன்றறைக் கண்ணுடையவளாயிருந்தாள்! இதைச் சாதாரண ஜனங்கள் “டப்ஸா கண்” என்று சொல்வார்கள். (தமிழ் வித்வான்கள் இப்பதத்தை நான் உபயோகித்ததற்காக மன்னிப்பார்களாக) இப்படிப் பட்ட கண்ணையுடைய ஆக்டெரஸ் மேடையின் மீதிருந்து “பிராணநாதா” என்ற அழைக்கும் அநேக சமயங்களில் மனோஹரனைப் பார்த்து அழைக்கிறாளா அல்லது ராஜப் பிரியனைப் பார்த்து அழைக்கிறாளா அல்லது சபையிலிருக்கும் யாரையாவது பார்த்து அழைக்கிறாளா என்று சந்தேகிக்க இடங்கொடுத்தது! இன்னொரு கம்பெனியில் நான் பார்த்த “விஜயாள்” பத்மாவதியைப் பார்க்கிலும் மூன்று பங்கு பெருத்த உடலையுடையவளாயிருந்தாள்! நான் சாதாரணமாகப் பரிஹாசமாக எழுத வேண்டுமென்று எழுதவில்லை. நான் கண்ட வாஸ்தவத்தை உண்மையில் எழுதவேண்டுமென்றே எழுதுகிறேன்; இவள் நடக்கும் பொழுது ஆப்பிரிக்கா தேசத்திலுள்ள ஹிப்பப்போடமஸ் நடப்பது போலிருந்தது! இப்படிப்பட்டவளுக்கு ஏன் இந்த விஜயாள் வேஷம் கொடுக்கப்பட்டது என்று விசாரிக்குமளவில் இவள்தான் இந்நாடக. கம்பெனியில் “அயன் ஸ்திரீ பார்ட்க்” ஆகவே இவளுக்கு இந்தப் பாத்திரம் கொடுக்கப்பட்டது என்று பதில் உரைக்கப்பட்டது. இதனால் நாடக மேடை ஏற விரும்பும் எனது நண்பர்களுக்கு நான் தெரிவிக்க விரும்புவது யாதெனில், நாம் என்ன வேடம் வேண்டு மென்றாலும் எடுத்துக் கொள்ளலாம் என்கிற சுதந்திரம் நம்மில் யாருக்காவது இருந்தபோதிலும், நமக்கு ஏற்ற பாத்திரத்தையே எடுத்துக் கொள்ள வேண்டுமேயொழிய, சரீரத்தைக் கருதியோ, சாரீரத்தைக் கருதியோ நமக்கு ஏற்றதாயிராத பாத்திரத்தை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாதென்பதேயாம். முன்பே நான் ஹரிச்சந்திரனாக நடித்தது தவறு என்று எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கின்றேன். ஒரு தெலுங்குப் பழமொழி இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு ஞாபகம் வருகிறது; அதைத் தமிழில் “என் வீட்டிற்கு நானே பெரியவன்; பூனைக்குப் போட்டா பெரிய நாமம்” என்று மொழி பெயர்க்கலாம். இந்தப் பழமொழிக் கிணங்க, நான் பீமசேனன் வேடம் தரித்தால் எப்படியிருக்கும்! ஆகவே, இவ் விஷயத்தை எனது நண்பர்களாகிய ஆக்டர்களும் கண்டக்டர்களும் நன்கு கவனிப்பார்களாக.
இந்த 1911ஆம் ஆண்டின் முடிவில், நான் மேற்சொன்னபடி ஹானரபில் வி. கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் நமது தேசம் செய்த துர்ப்பாக்கியத்தால் காலகதியடைந்த பொழுது, எங்கள் சபையில் ஒரு பொதுக் கூட்டம் கூடி, சபையின் துக்கத்தைத் தெரிவித்தது மன்றி, ஐயர் அவர்களுடைய படம் ஒன்றைச் சபையில் வைக்க வேண்டு மென்றும் தீர்மானித்தோம். சீக்கிரத்தில் 500 ரூபாய் செலவழித்து அவரது முழு உருவப்படமொன்று சபையில் வைத்தோம். அன்றியும் அவர் ஞாபகார்தத்திற்காக அவரது சிலா உருவம் ஒன்று வைப்பதற்காக ஒரு பண்டு சென்னையில் ஏற்படுத்தியபொழுது, அதற்குல் சபையின் பணத்திலிருந்து 1000 ரூபாய் கொடுத்தோம். என்ன செய்தும், அவர் எங்கள் சபைக்குச் செய்த உதவிக்காக, ஆயிரத்திலொரு பங்குகூட எங்கள் சபையின் கடனை அடைத்தவர்களாகோம் என்பது என் நிச்சயமான எண்ணம். அவர் மாத்திரம் சில வருஷங்கள் உயிரோடிருந்திருப்பா ராயின், சுகுண விலாச சபை இருப்பதற்கோர் கட்டடமும், நாடகமாடுவதற்கோர் புதிய நாடக சாலையும், என்றோ பெற்றிருக்கும்!
21 ஆவது அத்தியாயம்
1912ஆம் வருஷம், எனக்கு ஞாபகம் இருக்கிற வரையில் எங்கள் சபை இருநூறாவது நாடகமாக, நான் எழுதிய “விரும்பிய விதமே” என்னும் நாடகத்தை ஆடியதைத் தவிர, வேறு விசேஷமொன்றுமில்லை.
1913ஆம் வருஷத்தில் எங்கள் சபையில் நேரிட்ட முக்கிய சம்பவம், நாங்கள் மறுபடியும் இலங்கைக்குப் போன தேயாம். இரண்டு வருடங்களுக்கு முன் அத்தீவுக்குப் போனபொழுது, கொழும்பில் நாங்கள் நாடகமாடினதைப் பார்க்க, யாழ்ப்பாணத்திலிருந்து ஜனங்கள் வந்தனர். அவர்களில் சிலர், தங்கள் ஊருக்கு வரும்படி சபையை அழைத்தனர். அம்முறை முடியாது பிறகு ஒரு முறை இலங்கைக்கு வந்தால், யாழ்ப்பாணம் வருகிறோம் என்று சொல்லியிருந்தோம். அன்றியும் கொழும்பில் எங்கள் நாடகங்கள் எல்லாம் முடிந்தவுடன், அவ்விடத்திய நண்பர்கள், எங்களை மறுவருஷமே வரும்படியாகக் கேட்டனர்; அது சாத்தியமல்ல, இரண்டு வருடங்கள் கழித்து வரக்கூடும் என்று சொல்லியிருந்தோம். நான் அதன்படி இவ் வருஷம் இலங்கைக்குப் போகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு நாள் (ஏப்ரல் மாதத்தில் என்று நினைக்கிறேன்) திடீரென்று கொழும்பு நாடகசாலை முழுதும் வாடகைக்குப் பெற்றிருந்த வாரிக் மேஜர் என்பவர், சபைக்கு வந்து என்னைக் கண்டார். இவர்தான் முந்திய முறை நாங்கள் இவருடைய நாடக சாலையைக் குடிக்கூலிக்குக் கேட்ட பொழுது, இச்சபையாருக்கு என்ன வரும்படி வரப்போகிறது, இங்குத் தமிழில் நாடகம் நடத்தினால் என்று சந்தேகித்து, 5 தினங்களின் குடிக்கூலியை முன்னதாகவே பெற்றுக் கொண்டவர். ஆயினும் இதை அவர்மீது குறையாகக் கூற வில்லை. நான் அவருடைய ஸ்தானத்தில் இருந்திருப்பேனாயின் அப்படித்தான் நானும் செய்திருப்பேன் என்று நினைக்கிறேன். இங்கு நான் சொல்ல வந்த முக்கியமான அம்சம் என்னவென்றால், எங்கள் சபையின் நாடகங்களைப் பாராமுன் அவ்வாறு சந்தேகித்தவர், தனது நாடக அரங்கத்தில் நாங்கள் நாடகங்கள் போட்டபொழுது பார்க்க வந்த பெரும் ஜனக் கூட்டங்களைக் கண்டவராய், தானாக இவ்வருஷம் சென்னைக்கு வந்து, எங்கள் சபையைக் கொழும்புக்கு அழைத்தார்.
அவர், நீங்கள் வேறொருவருக்கும் கண்டிராக்டராக உங்கள் நாடகங்களைக் கொடுக்க வேண்டியதில்லை. நானே எடுத்துக் கொள்ளுகிறேன். கொழும்பு துறைமுகத்தில் நீங்கள் வந்து சேர்ந்தது முதல், மறுபடியும் அங்கிருந்து சென்னைக்குத் திரும்பி வருகிற வரையில் நாடகங்களுக்கு வேண்டிய உங்கள் செலவையெல்லாம் நான் கொடுத்து விடுகிறேன். அன்றியும் நாடகங்களுக்கு வரும் மொத்த வரும்படியில், நூற்றிற்கு அறுபது விகிதம் உங்களுக்குக் கொடுக்கிறேன். மிகுதி நாற்பது விகிதம், நாடக அரங்கம் குடிக் கூலிக்காகவும், மற்றுமுள்ள செலவிற்காகவும் நான் எடுத்துக் கொள்ளுகிறேன்” என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் பழம் நழுவிப் பாலில் விழுந்ததெனச் சந்தோஷமுடன் ஒப்புக்கொண்டு, எங்கள் சபையின் நிர்வாக சபையாரையும் ஒப்புக்கொள்ளச் செய்தேன். உடனே புறப்படுவதற்கு ஏற்பாடுகளெல்லாம் செய்து, இங்கிருந்து மே மாதம் 28ஆம் தேதி ஆக்டர்களும் ஆக்டர்களல்லாதாருமாக 43 பெயர் புறப்பட்டோம். ஒரு முறை போய் வந்தபடியால் இம்முறை ஏற்பாடுகள் செய்வது சுலபமாயிருந்தது. இம்முறை எப்படியாவது யாழ்ப்பாணத்திற்கும் போக வேண்டுமென்று தீர்மானித்தோம். கொழும்பில் வருகிறபடி யாழ்ப்பாணத்தில் வசூலாகுமோ என்னவோ என்று சந்தேகப்பட்டோம். அன்றியும் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கமே கிடையாது, கொட்டகையொன்று புதிதாய்ப் போட வேண்டுமென்று அறிந்தோம். இந்தக் கஷ்டங்களையெல்லாம் யோசித்து, யாழ்ப்பாணத்தார் ஒருவர், யாழ்ப்பாணத்தில் நடத்தும் நாடகங்களின் செலவை யெல்லாம் தான் மேற்கொண்டு, எங்கள் ரெயில் செலவுக்கும் சாப்பாட்டுச் செலவிற்கும் மொத்தமாக ஐந்நூறு ரூபாய் கொடுப்பதாகச் சொல்லவே, அங்கு போவதனால் நஷ்டமில்லாமற் போனால் போதும் என்று தீர்மானித்து, அப்படியே ஒப்புக்கொண்டோம்.
இம் முறையும் இலங்கைக்கு தூத்துக்குடி வரையில் ரெயில் மார்க்கமாய்ப் போய், அங்கிருந்து ஸ்டீமர் ஏறிக் கொழும்பு போய்ச் சேர்ந்தோம். கொழும்பில், லீலாவதி-சுலோசனா, விரும்பியவிதமே, மனோஹரன், ஹரிச்சந்திரன், நற்குல தெய்வம் என்னும் ஐந்து நாடகங்களை நடத்தினோம். இவைகளைப்பற்றி நான் எனது நண்பர்களுக்கு அதிகமாய் எழுத வேண்டிய நிமித்தியமில்லை. முதன்முறை நடைபெற்றதைவிட, இம்முறை நாடகங்கள் மிகவும் அழகாய் நடைபெற்றன. முதன்முறையைவிட, ஜனங்களும் அதிகமாய் வந்தனர். எங்கள் சபையின் பங்கு வரும்படியில், எங்கள் செலவெல்லாம் போக 1500 ரூபாய்க்கு மேல் மிகுந்தது. இத்தொகையை இதற்கு முந்திய வருஷம் ஸ்தாபித்த ‘கட்டட பண்டிற்கு’ச் சேர்த்தோம். இம்முறை நாங்கள் தங்கியிருப்பதற்கு வாரிக்மேஜர் என்பவர் தகுந்த வசதியெல்லாம் ஏற்பாடு செய்திருந்தார். முதன் முறை நாங்கள் இங்குப் போனபோது எப்படிப் பரிவுடன் கொழும்புவாசிகள் எங்களுக்கு உபசரணை செய்தனர் என்பதை முன்பே தெரிவித்திருக்கிறேன். இம்முறை எங்களை நன்றறிந்தமையால் அதைவிடப் பதின்மடங்கு அதிகமாய் உபசரித்தனர் என்றே நான் சொல்லவேண்டும். காலையில் எழுந்தால், பழங்களோ, திண்பண்டங்களோ ராக்வுட் குடும்பத்தார் முதலிய நண்பர்களிடமிருந்து ஓயாது வந்துகொண்டிருக்கும்; எங்களைப் பார்க்க இரவில் நாங்கள் தூங்குகிறவரையில் சிநேகிதர்கள் வந்து கொண்டேயிருப்பார்கள். நானும் எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலுவும், இரண்டு வேளை ஒன்றாய் சபை தங்கியிருந்த வீட்டில் போஜனம் கொண்டோம் என்பதில்லை; காலையில் ஒருவர் வீட்டில் விருந்து, சாயங்காலம் ஒருவர் வீட்டில் பலஹாரம், இராத்திரி ஒருவர் வீட்டில் விருந்து! சில நாட்களில் சாயங்காலம் டீ, இரண்டு மூன்று இடத்தில் சாப்பிட வேண்டிய தாயிற்று. இதை நான் ஏதோ அதிகப்படுத்திச் சொல்கிறே னென்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் எண்ணாதிருக்கும் படி வேண்டுகிறேன். வாஸ்தவத்தில் ஒரு நாள் எங்களிருவரையும், சாயங்கால டீக்காக மூன்று இடங்களிலும், அன்றிரவு போஜனத்திற்காக இரண்டு இடங்களிலும் அழைத் திருந்தனர்! நாங்கள் என்ன செய்வது? மிகுந்த பரிவுடன் அழைத்தவர்களுக்கு, வர மாட்டோம் என்று சொல்ல வாயெழவில்லை. ஆயினும், எப்படி இத்தனை இடங்களில் அவர்கள் செய்த விருந்தைச் சாப்பிடுவது? ஏதோ உடம்பு அசௌக்கியமாயிருப்பதாகச் சொல்லி, ஒவ்வோர் இடத்திலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டோம்! இதன் பலன் என்னவென்றால் வாஸ்தவமாகவே, நான் நோயில் விழுந்தேன்! இதன் விவரம் பிறகு எழுதுகிறேன்.
அதற்கு முன், கொழும்பில் நாங்கள் நாடகமாடிய விஷயமாக இரண்டொரு வினோத சமாச்சாரங்களை எழுதுகிறேன். இம்முறை நாங்கள் இலங்கைக்குப் போனபோது, எனது பால்ய சினேகிதரும் என்னுடன் பிரஸிடென்ஸி காலேஜில் படித்தவருமான கே.ஆர். சீதாராமய்யர் பி.ஏ.பி.எல். வந்திருந்தார். அச்சமயம் அவர் போலீஸ் உத்தியோகத்திலிருந்தார். எம். சுந்தரேச ஐயருக்குப் பிறகு இவர் ஆங்கிலத்தில் முக்கியமான பாகங்களை யெல்லாம் எங்கள் சபையில் ஆக்டு செய்து கொண்டிருந்தார். ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி எழுதிய ஒதெல்லோ முதலிய பாத்திரங்கள் ஆடுவதில் மிகவும் சமர்த்தர். கம்பீரமான ஆகிருதியையும் உடையவர். இவரை முதல் நாள் மேடையின்மீது பார்த்தது முதல், கொழும்பு நாடகப்பிரியர்கள் இவருக்கு “சாண்டோ” என்று பெயர் வைத்தார்கள்! நாடகசாலை திறக்குமுன் உள்ளே நுழைவதற்காக ஏராளமான ஜனங்கள் வெளியிற் கூடிக் கூச்சலிடுவார்கள்; அப்போது இவரை அனுப்பினால், இவர் போய், ‘கூச்சலிடக்கூடாது’ என்று இவரது கம்பீரமான குரலுடன் சொன்னால், உடனே அடங்கி விடுவார்கள். உள்ளே வந்த பிறகும், நாடகம் ஆரம்பமாவதற்கு முன், காலரியில் ஜனங்கள் வழக்கம்போல் கூச்சலிட்டுக் கொண்டிருப்பார்கள்; கூச்சல் அதிகமாய்ப்போனால் இவரை உள்ளிருந்து நான் அனுப்புவேன். இவரைக் கண்டதும் ‘கப்சிப்’ என்று அடங்கி விடுவார்கள்.
இவரது முதுகு திரும்பினால் “சாண்டோ! சாண்டோ!” என்று கத்துவார்கள்! திரும்பி அவர்களைப் பார்த்தாலோ, நிசப்தமாய்ப் போய்விடும்! இவர் இரண்டு மூன்று நாடகங்களில் மேடையின்மீது தோன்றியபொழுது, காலரியில் இருந்தவர்களெல்லாம், மிகுந்த குதூஹலத்துடன் இவரை வரவேற்றனர்.
இம்முறை கூடுமான வரையில் முதன் முறை வந்த பொழுது ஆடிய நாடகங்களை ஆடாது புதிய நாடகங்களை ஆட வேண்டுமென்று நாங்கள் தீர்மானித்தபோதிலும், கொழும்பு நேயர்கள், மனோஹரன் நாடகத்தை மாத்திரம் மறுபடியும் கட்டாயமாய் ஆட வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். அதன்படியே இதை இங்கு மூன்றாவது நாடகமாக வைத்துக்கொண்டோம். அதில் விஜயாளாக நடித்த எனதாருயிர் நண்பர் எல்லோருடைய மனத்தையும் கண்களையும் கவர்ந்தார் என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை . மறுநாள் சாயங்காலம் எங்களுடன் வந்திருந்த சூரிய நாராயணய்யா என்னும் ஒரு மெம்பர், தன் சிநேகிதர்கள் சிலருடன், சாயங்காலம் கொழும்பில் ஏதோ சாமான்கள் வாங்குவதற்காகக் கடைத் தெருவிற்குப் போயிருந்தனர். அச்சமயம் ஏதோ கொஞ்சம் மழை பெய்ய, ஒரு ஷாப்பருகில் அவர் சிநேகிதர்களுடன் தங்க, சிற்றுண்டி விற்கும் அந்த ஷாப்புக்காரன், அவர்களையெல்லாம் மிகவும் பரிவுடன் உள்ளே வரவழைத்து, அவர்களுக்கு வேண்டிய காபி, டீ, கேக்குகள், ஐஸ்கிரீம் முதலியனவெல்லாம் கொடுக்க, எல்லாம் சாப்பிட்டானவுடன், சூரியநாராயண ஐயர், தாங்கள் சாப்பிட்டதற்காக ரூபாய் கொடுக்க, அதை வாங்கமாட்டேன் என்று மறுத்தார் அந்த ஷாப்புக்காரர்! “ஏன் ரூபாய் வாங்கமாட்டேன் என்று சொல்லுகிறீர்” என்று வினவ, அதற்கு அவர் “நீங்கள்தானே ரங்கவடிவேலு முதலியார். நேற்று பப்ளிக் ஹாலில் நாடகமாடியது? நீங்கள் இவ்வளவு தூரம் வந்து எங்கள் மனத்தையெல்லாம் திருப்தி செய்ததற்காக நான் இவ்வளவாவது உங்களுக்கு மரியாதை செய்ய வேண்டாமா?” என்று பதில் உரைத்தனராம்! இதை எனது நண்பர் தற்காலம் அட்வொகேட்டாயிருக்கும் சூரியநாராயணய்யாவே, நேரில் தெரிவித்தார். இதைச் சொல்லி, “நான் என்ன செய்வது மிஸ்டர் சம்பந்தம்? நான் எவ்வளவு சொல்லியும் அந்த ஷாப்காரர் நான்தான் ரங்கவடி வேலு என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். நானல்ல வென்று எவ்வளவு சொன்னபோதிலும் ஏதோ வெட்கத் தினால்தான் அவ்வாறு கூறுகின்றேன் என்று எண்ணுகிறார்! சரி, ரங்கவடிவேலுவினால் எங்களுக்கெல்லாம் காசு செலவில் லாமலே லன்ச் (சிற்றுண்டி) கிடைத்தது” என்று நகைத்தார்.
இவ்விடத்தில் ஏற்பாட்டின்படி ஐந்து நாடகங்களையும் முடித்துக் கொண்டு, மறுநாள் காலை யாழ்ப்பாணம் பிரயாணம் புறப்படவேண்டியிருக்க, அதற்கு முந்திய தினம், வழக்கம்போல் இரண்டு மூன்று விருந்துகள் சாப்பிட்டேன். நான் அன்றிரவு நித்திரைக்குப் போகும் பொழுது எனக்கொரு மாதிரியாயிருந்தது. அதைக் கவனியாது நித்திரை போனவன், இரவு இரண்டு மணிசுமாருக்கு விழித்துக்கொள்ள, உடம்பில் ஜ்வரம் இருப்பதைக் கண்டேன். அதிகமாய்ப் புசித்ததன் பலனை அனுபவிக்கிறோம். சரிதான், இந்த ஜுரத்துடன் யாழ்ப்பாணம் போய் எப்படி நாடகமாடப் போகிறோம் என்னும் பெருங்கவலை என்னுட் புகுந்தது. காலை எழுந்தவுடன் வைத்தியரிடம் மருந்து வாங்கிக் கொள்ளவும் நேரமில்லாமற் போயிற்று; உடனே ரெயில் ஏற வேண்டி வந்தது. வரவர ஜுரம் அதிகரித்து, அன்று பகலெல்லாம் ரெயிலில் ஒன்றும் புசியாது படுத்திருந்தேன். இந்தத் புத்தி முன்பேயிருந்து, முன்னாள் இரவு லங்ஙணம் போட்டிருந்தேனாயின், நலமாயிருந்திருக்கும். குதிரை களவுபோன பிறகு லாயத்தை மூடியது போல், ஜுரம் வந்த பிறகு ஜாக்கிரதையாயிருந்து என்ன பலன்? சாயங்காலம் இருட்டியவுடன் எங்கள் ரெயில் யாழ்ப்பாணம் போய்ச் சேர, ஸ்டேஷனில் யாழ்ப்பாணத்துப் பெரிய மனிதர்கள் எங்கள் சபையோரை வரவேற்க வந்திருந்தனர். நான் வண்டியைவிட்டு இறங்கியதுதான் எனக்கு ஞாபகமிருக்கிறது; நான் உடனே மூர்ச்சையானதாகப் பிறகு எனது நண்பர்கள் எனக்குத் தெரிவித்தனர். அதன்பேரில் என்னைத் தனியாக ஒரு வண்டியில் வளர்த்தி எனது பால்ய நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காருக்காகப் பிரத்யேகமாய் ஏற்படுத்தியிருந்த விடுதிக்கு அனுப்பினார்களாம். அங்குப் போன பிறகுதான் எனக்கு மூர்ச்சை நன்றாய்த் தெளிந்தது; அப்பொழுது என் தேக ஸ்திதியைப் பற்றி எனக்கு ஒரு கவலையுமில்லை; நாம் இப்படி ஜ்வரத்துடன் இருந்தால் இவ்விடத்தில் நாடகங்கள் எப்படி ஆடுவது என்பதே பெருங் கவலையாயிருந்தது. உடனே எனது நண்பர்கள் அவ்விடத்திய சிறந்த வைத்தியர் ஒருவரை வரவழைத்து என்னைப் பரிசோதித்தவுடன் அவரை நான் ஒரு கேள்வி தான் கேட்டேன். “டாக்டர்! நாளைத்தினம் நான் நாடகமாட முடியுமா?” என்று. அவர் முகத்தைச் சுளித்துக்கொண்டு, “நாடகமா ஆட வேண்டும்? நான் உத்தரவு கொடுக்கும் வரையில் இந்தப் படுக்கையை விட்டு எழுந்திருக்காதே!” என்று கண்டிப்பாய்ப் பதில் உரைத்தார். இனிப் பயனில்லை என்று ஈஸ்வரனைத் தியானித்துவிட்டு உறங்கினேன். நான் உறங்குங்கால் நடந்த சமாச்சாரத்தை, மறுநாள் எனது நண்பர்களிடமிருந்து கேட்டறிந்தபடி இங்கு எழுதுகிறேன்.
சபை அங்கத்தினர் இருப்பதற்காக கண்டிராக்டரால் ஏற்படுத்தப்பட்ட வசதியானது, மிகவும் சிறியதாயும் மிகவும் அசௌகர்யமானதாயும் இருந்ததாம்; வெளிக்குப் போவதற்குக்கூடப் பிரத்யேகமான இடமில்லாதிருந்ததாம்; அதன்பேரில் எனது நண்பர்களாகிய ஆக்டர்களெல்லாம் ஒருங்குகூடி, “சம்பந்தத்திற்கோ உடம்பு மிகவும் அசௌக்கியமாயிருக்கிறது; நாம் இருப்பதற்குக்கூட வீடு சரியாயில்லை; இப்படிப்பட்ட கண்டிராக்டர் நமக்கு மற்ற சௌகர்யங்களையெல்லாம் சரியாகப் பார்ப்பான் என்பது மிகவும் சந்தேகமான விஷயம்; ஆகவே, ஆட்டங்களை நிறுத்திவிட்டு, கண்டிராக்டர் கொடுத்த தொகையை அவனுக்கு வாபஸ் செய்து விட்டு, நாளை ஒரு நாள் தங்கி, மறுநாள் நாம் திரும்பிப் போவோம்” என்று தீர்மானித்தாார்களாம். இப்படித் தீர்மானிப்பதற்கு முதன்மையாயிருந்த எனது நண்பர் சத்யமூர்த்தி ஐயர் அவர்கள், உடனே சபையின் நிர்வாக சபை மெம்பர்களுக்கு, மேற்கண்ட விஷயங்களை யெல்லாம் எழுதி, மற்றவர்களைக் கையொப்பமிடச் செய்து அனுப்பினாராம். அது சபையின் வைஸ் பிரஸிடெண்டாக இருந்த வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு வந்து சேர, அதன்பேரில் அவர், “நீங்கள் சொல்வதென்னமோ வாஸ்தவம்தான். ஆயினும், நான் அவசரப்பட்டு ஒன்றுஞ் செய்யலாகாது. சம்பந்தத்திற்கு 102 டிக்ரிக்கு மேல் ஜ்வரம் இருக்கிறது; இப்பொழுதுதான் மறுபடியும் டாக்டர் வந்து போனார். அவன் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவனது தூக்கத்தை இப்பொழுது கலைப்பது சரியல்ல. பொழுது விடிந்தவுடன் நாளை எல்லாவற்றையும் சாவகாசமாய்த் தீர்மானிப்போம்” என்று அக் காகிதத்தின் மீது பதில் எழுதித் தெரிவித்தார். (இக்காகிதம் இன்னும் எங்கள் சபையில் இருக்க வேண்டும்.)
மறுநாள் காலையில் விழித்தவுடன் நிர்வாக சபையின் சப்கமிட்டி மெம்பர்களெல்லாம் என் படுக்கையைச்சுற்றி உட்கார்ந்திருந்தனர்! நான் என்ன சமாச்சாரம் என்று விசாரிக்க, மேலே குறித்த சமாச்சாரங்களை யெல்லாம் எனக்குத் தெரிவித்தனர். அதன்மீது நானும் எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்து, என் அசௌக்கியத்தையும் கருதி, அப்படியே செய்யலாமென்று ஒப்புக்கொண்டேன். உடனே இரண்டொரு மணி நேரத்திற்கெல்லாம், சுகுண விலாச சபையார் இங்கே நாடகமாடப்போகிறதில்லையாம்; அவர்களுக்குத் தக்கபடி மரியாதை செய்யவில்லையென்று, அவர்கள் கோபங்கொண்டு பட்டணம் திரும்பிப் போகிறார்களாம் என்று வதந்தி பரவிவிட்டது. இவ்வதந்தி, அச்சமயம் யாழ்ப்பாணத்தில் டிஸ்டிரிக்ட் ஜட்ஜாயிருந்த மிஸ்டர் பின்டோ என்பவருக்கும் எட்டியது. இவர் என்னுடன் நான்கு வருஷம் பிரசிடென்சி காலேஜில் ஒன்றாய்ப் படித்தவர். இந்நான்கு வருஷங்களும் நாங்கள் மிகுந்த சினேகிதர்களாய் இருந்தோம். பிறகு அவர் சென்னையை விட்டுச் சிலோன் சிவில் சர்வீஸ் பரீட்சையில் தேறினவராய், இலங்கையில் உத்யோகத்தில் அமர்ந்தார். தெய்வாதீனத்தால் நாங்கள் யாழ்ப்பாணத்திற்குப் போனபோது அங்கு ஜட்ஜ் வேலையிலிருந்தார். இவரை விட்டுப் பிரிந்து 20 வருடங்களுக்கு மேலாயிற்று. இவர் என்னை மறவாதவராய், நான் யாழ்ப்பாணம் வந்திருக்கும் சமாச்சாரத்தையும் சுகுண விலாச சபையார் நாடகமாடாது திரும்பிப் போக வேண்டுமென்று தீர்மானித்ததையும் அறிந்தவராய், காலையில் கோர்ட்டுக்குப் போனவர், உடனே ஒரு மணி நேரம் கோர்ட்டு வேலையை நிறுத்தி வைத்து, தன் அறைக்குள் போய், கோர்ட்டிலுள்ள அட்வொகேட்டுகளையெல்லாம் வரவழைத்தனராம். அவர்களில் ஒருவர் எனக்குப் பிறகு, நேராகக் கூறிய சமாச்சாரத்தை இங்கு எழுதுகிறேன். அவர்களை நோக்கி, “நடந்த சமாச்சாரம் எல்லாம் நான் கேள்விப்பட்டேன். எனது நண்பர் மிஸ்டர் பி. சம்பந்தம் மிகவும் அசௌக்கியமாக இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அக்காரணத்தினால் சுகுண விலாச சபையார், நாடகங்கள் ஆடாது நிறுத்துவதனால் நிறுத்தட்டும்; அதற்கு நாம் தடை சொல்லக்கூடாது. ஆயினும் அந்தச் சபையார், யாழ்ப்பாணத்தாராகிய நாம் அவர்களுக்குத் தக்கபடி மரியாதை செய்யவில்லையென்று கோபத்துடன் திரும்பிப் போகாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு என்ன முயற்சி செய்ய வேண்டுமோ, அதைச் செய்யவேண்டியது உங்கள் கடமை. அதற்காக என்ன செலவானாலும் சரி; நான் பொறுப்பாயிருக்கிறேன்” என்று சொல்லி, ஆயிரம் ரூபாய்க்கு ஒரு செக்கை எழுதி அவர்களிடம் கொடுத்தாராம். அதன் பேரில் அவர்களெல்லாம், ரூபாய் ஒன்றும் வேண்டியதில்லை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லி அந்தச் செக்கைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, உடனே சபையார் தங்கியிருந்த சிறு வீட்டண்டை வந்து, வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் முதலியவர்களை வரவழைத்து, “நீங்கள் ஆட்டம் ஆடாமற் போனாற் போகிறது, நீங்கள் எத்தனை தினம் இங்கு இருப்பதாக முன்பு தீர்மானித்தீர்களோ, அத்தனை நாள் இவ்வூரில் எங்கள் விருந்தினர்களாயிருந்து, பிறகுதான் போக வேண்டும். உங்களுக்குத் தக்கபடி உபசரணை செய்யவில்லையென்று சொன்னால், அது யாழ்ப்பாணவாசிகளாகிய எங்களுக்குப் பெருத்த அவமானமாகும். கண்டிராக்டர் கிடக்கட்டும்; உங்களுக்கு என்னென்ன சௌகர்யங்கள் வேண்டுமோ சொல்லுங்கள்; அவற்றையெல்லாம் நாங்கள் ஏற்பாடு செய்யக் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்ற தெரிவித்தார்களாம். இவ்வாறு அவர்களெல்லாம் மிகவும் வற்புறுத்தவே, எனது நண்பர்கள் அதற்கிசைந்து, “எங்களுக்கு வேறொன்றும் வேண்டிய தில்லை; முக்கியமாக நாங்கள் தங்கியிருப்பதற்கு ஒரு சௌகர்யமான வீடு வேண்டும்” என்று சொல்ல, “இந்தப் பட்டணத்தில் காலியாயிருக்கும் வீடுகளில் உங்களுக்கு எது வேண்டுமோ பார்த்துச் சொல்லுங்கள்; அதை உங்களுக்கு ஏற்பாடு செய்கிறோம்” என்று தெரிவித்தார்களாம். அதன் பேரில் சபையார், “நீங்கள் பார்த்து ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்ல, அந்தத் தெருவிலேயே காலியாயிருந்த ஒரு பெரிய வீட்டை உடனே ஏற்பாடு செய்து, சபையார் அங்குத் தங்கியிருப்பதற்கு வேண்டிய சௌகர்யங்களை யெல்லாம் அமைத்து, வேறொன்றும் வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் அந்த வீடு நிரம்ப, நாற்காலிகள், மேஜைகள், சோபாக்கள் போட்டு, பால், தயிர், நெய், பதார்த்தங்களால் நிரப்பிவிட்டார்களாம்! இதைப்பற்றி இரண்டு நாள் கழித்து எனக்கு உடம்பு கொஞ்சம் சௌக்கியமானவுடன் நான் இவ்விடம் போய்ப் பார்த்தபொழுது, கண்டதைப் பிறகு எழுதுகிறேன்.
இவைகளையெல்லாம் செய்ததுமன்றி, எனக்கு வைத்தியம் செய்து கொண்டிருந்த வைத்தியருடன், யாழ்ப்பாணத்தில் சிறந்த பெரிய வைத்தியரையும் அழைத்துக்கொண்டு, மத்தியானம் சுமார் இரண்டு மணிக்குமேல் என்னை வந்து கண்டனர். அந்த இரண்டு வைத்தியர்களும் என்னைப் பரிசோதித்துப் பார்த்து, ஜ்வரம் கொஞ்சம் குறைவதாகக் கண்டு, நாளைக்குச் சரியாகப் போய்விடும் என்று சொன்னார்கள். இதுதான் சாக்கென்று, “ஆனால் நாளை இரவு நான் நாடகம் ஆட முடியுமா?” என்று ஆவலுடன் கேட்டேன். அதற்கு எனது முதல் வைத்தியர், “எல்லாம் நாளைத் தினம் காலை வந்து பார்த்துச் சொல்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே பதில் உரைத்தார். பிறகு சாயங்காலத் திற்கெல்லாம், நான் கணக்குப் பிரகாரம் சாப்பிட்டுக்கொண்டு வந்த மருந்தினாலோ, என்ன காரணத்தினாலோ, ஜ்வரம் என்னை விட்டு, ஏறக்குறைய என் தேக உஷ்ணம் நார்மல் ஸ்திதிக்கு வரவே, அதைக் கண்ட எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு, மெல்ல என்னிடம் வந்து, “நாளைத்தினம், ஒரு சிறிய நாடகம் வைத்துக்கொள்ளலாமே? லீலாவதி- சுலோசனா முதலிய பெரிய நாடகங்கள் ஆடுவதென்றால் உங்களால் முடியாது, ‘காலவ ரிஷி’ சிறிய நாடகம், அதில் உங்களுக்குக் கடைசி இரண்டு காட்சிகளில் தானே வேலையிருக்கிறது. என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்க எனது நண்பர் இவ்விடம் நாடகமாட வேண்டுமென்று மிகவும் ஆவல் கொண்டிருக்கிறார் என்று கண்டவனாய், அதற்கிசைந்து, வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், எனது தமைய னார் ஆறுமுக முதலியார் முதலியவர்களை அழைத்து, “நாளை இரவு ‘காலவ ரிஷி’ வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினேன். அவர்களும், எனக்கு உடம்பு சௌக்கிய மாகி வருவதைக் கேட்டு, சந்தோஷப்பட்டவர்களாகி, குதூகலத்துடன் “அப்படியே செய்யலாம்” என்று சொல்லி, அதற்காக உடனே ஏற்பாடு செய்யும்படி கண்டிராக்ட ருக்குத் தெரிவித்தார்கள்.
மறுநாட்காலை என் வைத்தியர் என்னிடம் வந்து பரிசோதித்துப் பார்த்து ஜ்வரம் விட்டு விட்டது; ஆயினும் மிகவும் பலனவீமாயிருக்கிறது; ஆகவே நீ நாடகம் ஆடக்கூடாது” என்றார்! அதன் பேரில், அவரிடம் நான் நாடகம் ஆடாவிட்டால், நாடகமே நின்றுவிடும். ஆகவே, எப்படியாவது எனக்குக் கொஞ்சம் உத்தரவு கொடுங்கள்; நான் என்ன மருந்து வேண்டுமென்றாலும் சாப்பிடுகிறேன் என்று மன்றாடினேன். அதன்மீது அவர் “நான் சொல்லுகிற நிபந்தனைகளுக்கெல்லாம் உட்பட்டால் உனக்கு உத்தரவு கொடுக்கிறேன்” என்றார். நீங்கள் என்ன செய்யச் சொன்னாலும் செய்கிறேன். எனக்கு உத்தரவு மாத்திரம் கொடுத்தால் போதுமெனக் கூற, “உன் பாகம் பன்னிரண்டு மணிக்குத்தான் வருமென்கிறாயே, ஆகவே, பதினோறு மணிவரையில் இங்குதானிருக்க வேண்டும்; அது வரையில் மருந்து மணிப்பிரகாரம் சாப்பிட்டுக்கொண்டு வரவேண்டும்; பதினோரு மணிக்கு உன் படுக்கையுடன் நாடக சாலைக்குக் கொண்டு போகச் செய்ய வேண்டும்; உன் உடம்பைக் கொஞ்சமேனும் அலட்டிக் கொள்ளக் கூடாது” என்று சொன்னார். எல்லாவற்றிற்கும் அப்படியே ஆகட்டும் என்று தலை அசைத்தேன். எதற்கும் நான் சாயங்காலம் வந்து பார்த்துவிட்டுப் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார். வைத்தியர் இவ்வாறு உத்தரவு கொடுத்த பிறகு தான், யாழ்ப்பாணம் வந்தபிறகு முதல் முதல் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு முகத்தில் சந்தோஷக்குறி தோன்றியது! யாழ்ப்பாணத்தில் எப்படியாவது தான் நாடகம் ஆடிக் கொழும்பில் பெயரெடுத்தது போல் இங்கும் எடுக்க வேண்டுமென்று அவ்வளவு ஆசை கொண்டிருந்தார் அவர்!
அன்றைத் தினம் சாயங்காலம் எங்கள் சபையின் வழக்கம்போல் ஐந்து மணிக்கெல்லாம் ஆக்டர்களெல்லாம் சாப்பிட்டு விட்டு, வேடம் பூணுவதற்காக நாடகக் கொட்டகைக்குப் போய்விட்டனர். என்னடா கஷ்டம்! நாம் மாத்திரம் இங்கு தனியாக ஜெயிலில் அடைப்பட்டிருப்பதுபோல இருக்கி வேண்டி வந்ததே என்று மூக்கால் அழுதுகொண்டிருந்தேன். ஆறு, ஏழு, எட்டு மணிவரை பொறுத்துப் பார்த்தேன். அப்புறம் என்னால் பொறுக்க முடியாது, மெல்ல ஒரு ஆளை கண்டிராக்டர் வீட்டிற்கனுப்பி, எனக்கு நன்றாய் முழுவதும் மூடப்பட்ட ஒரு கோச்சு வண்டியைக் கொண்டுவரச் சொல்லி, அதில் ஏறிக்கொண்டு இரகசியமாய் நாடகக் கொட்டகையின் பின்பக்கமாக, எனது நண்பர்கள் வேஷம் பூணும் அறைக்குப் போய்ச் சேர்ந்தேன். நான் உள்ளே பிரவேசித்தவுடன் எனது நண்பர்களெல்லாம், நான் வந்து விட்டேனென்று சந்தோஷத்தினால் ஆரவாரித்தனர். இந்த சப்தம் வெளியிற் கேட்க, நாடகம் பார்ப்பதற்காக அங்கு உட்கார்ந்திருந்த என் வைத்தியர் “எதற்காக இக் கூச்சல்?” என்று கேட்டறிந்தவராய், உள்ளே விரைந்து வந்து என்னைப் பார்த்து மிகுந்த கோபத்துடன், “உன்னை யார் இதற்குள்ளாக வரச்சொன்னது?” என்று கேட்டார். நான் “டாக்டர், என் மீது கோபம் கொள்ளாதீர்கள்! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். பிறகு என்மீது கோபம் கொள்ளவேண்டுமென்று உங்களுக்குத் தோன்றினால் அப்படியே செய்யுங்கள். எனது நண்பர்களெல்லாம் இங்கிருக்கும் போது, என்னால் வீட்டிலடைபட்டிருக்க முடியவில்லை; இந்த ஏக்கத்துடன் அங்கு இன்னும் இரண்டு மூன்று மணி நேரம் தங்கியிருந்தேனாயின், இதனாலேயே, போன ஜ்வரம் திரும்பி வரும் போலிருந்தது; ஆகவே, மெல்ல, முற்றிலும் மூடிய வண்டியொன்றில் ஏறி வந்துவிட்டேன்! என்னை மன்னியுங்கள்!” என்று பதில் சொன்னேன்.
அவர் என்னை மறுபடியும் பரிசோதித்துப் பார்த்து, “ஜ்வரம் எல்லாம் ஒன்றும் இல்லை ; ஆயினும் மிகவும் பலஹீனமாயிருக்கிறது; உன்னுடைய நன்மைக்காகத்தான் சொல்லுகிறேன்; ஒருவேளை மறுபடியும் உனக்கு ஜ்வரம் வந்தால், இன்னும் இரண்டு நாடகங்களில் நீ எப்படி ஆடக்கூடும்? நாங்களும் உன் ஆட்டத்தைப் பார்க்க முடியாதே; அதற்காகத்தான் சொன்னேன்; இப்பொழுதாவது நான் சொல்லுகிறபடி கேள். இந்த சோபாவின்மீது படுத்துக்கொள். உன் பாகம் வருகிறவரையில் அதை விட்டு எழுந்திருக்காதே; உன் வைத்தியர் உத்தரவை நீ மீறலாகாது” என்று சொல்லி விட்டுப் போனார்.
அவர் வெளியே போனதும், அந்த சோபாவை சைட் படுதா பக்கமாகக் கொண்டுபோய்ப் போடச்சொல்லி, மேடையில் நடப்பதையெல்லாம் பார்க்க வேண்டி அங்கு போய்ப் படுத்துக் கொண்டேன். அப்படி நான் படுத்தபடியே, அம்பட்டன் எனக்கு முக க்ஷவரம் செய்ய, பிறகு என் நண்பர் வெங்கடாசல ஐயர் அப்படியே எனக்கு முகத்தில் வர்ணம் தீட்டி, வேஷம் போட்டு வைத்தார்! இன்னும் ஈஸ்வரன் கிருபையால், நான் வேஷம் பூணத்தக்க காலம் சில வருஷங்கள்தான் இருக்கிறதென நினைக்கிறேன்; அது முடிவு பெறும் வரையில் இப்படிப்பட்ட சம்பவம் எனக்கு நேரிடாதிருக்குமென ஈசனைப் பிரார்த்திக்கிறேன். யாழ்ப்பாணத்தில், கொழும்புவிலிருந்து போல் ஜனங்கள் ஏராளமாக வருவது அசாத்தியம் என்பது போய், நான் நாடகசாலைக்குப் போய்ச் சேருமுன்னமே கொழும்பு டவுன் ஹாலைப் பார்க்கிலும் இரண்டு பங்கு பெரிதாய் நிர்மாணிக்கப்பட்ட அக்கொட்டகை நிரம்பியிருந்தது! அன்றைத்தினம் வசூல் 1000 ரூபாய்க்கு மேலாகியது என்று கேள்விப்பட்டேன். உட்கார இடமில்லாமல் அனேகர் பணம் கொடுத்தும் நின்று கொண்டிருந்தனர். இவ்வண்ணம் ஏராளமான ஜனங்கள் நாங்கள் ஆடுவதைப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று அறிந்ததும் எனது நண்பர்கள் மிகவும் குதூஹலத்துடன் வெகு விமரிசையாக அந்நாடகத்தை நடித்தனர். சாதாரணமாக, இதையே ஜீவனமாகக் கொண்டு நாடகமாடும் ஆக்டர்களைத் தவிர்த்து, வினோதத்திற்காக ஆடும் அமெடூர்கள், நாடக வரும்படியைப்பற்றிக் கவனிக்க வேண்டிய நிமித்தியமில்லை. இதை நான் எனது நண்பர்களுக்குப் பன்முறை வற்புறுத்தியிருக்கிறேன். ஆயினும் எவ்வளவு கற்றறிந்தவர்களா யிருந்தபோதிலும், சபை நிறைய ஜனங்கள் கூடியிருக்கும்போது ஆக்டு செய் வது ஒருவிதம்தான்; ஜனங்களேயில்லாமல், பத்துப் பதினைந்து பெயர் உட்கார்ந்திருக்கும்பொழுது அவர்களுக்கு எதிரில் ஆக்டு செய்வது ஒருவிதம்தான். இம்மாதிரி புத்திமான்கள் வித்தியாசப்படுத்தக் கூடாது வாஸ்தவம்தான்; ஆயினும் மனித சுபாவத்தை யாரால் மாற்ற முடியும்?
நாடகமானது மிகவும் அழகாய் நடிக்கப்பட்டபோதிலும், அந்நாடக மேடையைப் போல் ஆபாசமான நாடக மேடையை நான் இதுவரையிலும் பார்த்ததுமில்லை; இனியும் பார்க்கப்போகிறது மில்லை யென்று நம்புகிறேன்! அதைச் சற்றிங்கு விவரிக்கின்றேன். இந்நாடகத்தில் முதற் காட்சி இந்திரன் சபையாகும். அதில் எனதுயிர் நண்பர் சி.ரங்கவடிவேலு, அப்சர ஸ்திரீயாக நாட்டியமாட வேண்டியிருந்தது. அரங்கத்தில் பரப்பப்பட்ட மாம்பலகைகள் ஒழுங்காய்க்கூட இல்லை; ஒன்றின் மேலொன்றாய் வைத்துக் கட்டப்பட்டிருந்தது! இதைக் கண்டு அவர், ‘இம்மேடை யின் மீது நான் எப்படி நடனம் செய்வது?’ என்று ஆட்சேபிக்க, அதன் மீது வைக்கோலைக் கொண்டுவந்து பரப்பி, அதன்பேரில் கோணிகளைப் பரப்பிவைத்தார் கண்டிராக்டர்! இதன்மேல் நின்று எனது நண்பர், தடுக்கிக் கீழே விழாமல், அன்றிரவு, கால்மணி சாவகாஸத்திற்கு மேல் எப்படி நர்த்தனம் செய்தனர் என்பது இன்றளவும் எனக்கு ஆச்சரியமா யிருக்கிறது. அன்றியும் அரங்கத்தில் வெளிச்சம் போதாமலிருந்தது; இன்னும் இப்படிப்பட்ட பல கஷ்டங்களிலிருந்தன; இருந்த போதிலும் நாடகமென்னவோ நன்றாய் நடிக்கப்பட்டு, வந்திருந்தவர்களுடைய மனத்தையெல்லாம் கவர்ந்ததென நான் சொல்ல வேண்டும். மற்ற பக்க உதவி எவ்வளவு ஆபாசமாயிருந்தாலும், நடிப்பவர்கள் முழுமனத்துடனும் குதூஹலத்துடனும் சரியாக நடித்ததால், அக்குறைகளையெல்லாம் மறக்கடித்து, சபையோரைக் களிக்கச் செய்யும் என்பதனுண்மையை இம்மேடையில்தான் கண்டேன்.
சுமார் பன்னிரண்டு மணிக்கு மேல் நான் நடிக்க வேண்டிய இரண்டு கடைசிக் காட்சிகள் வந்தன. முதல் முதல் ஏதாவது புதிய நாடகத்தில் ஆடுவதென்றாலும், அல்லது முதன் முதல் ஒரு புதிய ஊரில் ஆடுவதென்றாலும் எனக்குக் கொஞ்சம் பயமுண்டு என்று எனது நண்பர்களுக்கு நான் முன்பே தெரிவித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நான் வர வேண்டிய காட்சி வந்தவுடன், மேற்சொன்ன பயத்தினாலும், ஜ்வரம் கண்டிருந்த தேகத்தின் பலஹீனத்னாலும், என் மார்பு படபடவென்று துடிக்க ஆரம்பித்தது; அதை மெல்லச் சமாளித்துக் கொண்டு இந் நாடகத்தில் ஆடும்படியாக இவ்வளவாவது கருணை புரிந்தாரே ஈசன் என்று அவரை மனத்திற்குள் போற்றிவிட்டு, என் பாகத்தை ஆரம்பித்தேன். நான் அரங்கத்தில் தோன்றுமுன், உள்ளிருந்து, சுபத்திரை அறியும்படியாக, அர்ஜுனனாகிய என் குரலைக் காட்ட வேண்டியிருக்கிறது. என் வழக்கப்படி, "அப்படியா சமாச்சாரம்! இதை ஏன் எனக்கு முன்பே தெரிவிக்கவில்லை?” என்று அப்பொழுதிருந்த தேகஸ்திதி யில் என்னாலியன்றவளவு உரக்கக் கூச்சலிட்டேன். அந்தச் சப்தத்தைக் கேட்டவுடன் சபையிலிருந்த கூச்சல் அடங்கிவிட்டது. நான் அரங்கத்தில் தோன்றியது முதல், அந்த இரண்டு காட்சிகளிலும் நடித்தது ஏதோ எனக்குக் கனவு கண்டது போலிருக்கிறது. முதற் காட்சியில் நான் நின்று கொண்டே பேச வேண்டும்; ஆயினும் அரங்கத்தில் தோன்றிய உடன் என் கால்கள் தள்ளாட ஆரம்பித்தன! வைத்தியர் என் உடம்பின் பலஹீனத்தைப் பற்றிக் கூறியதனுண்மையை அப்பொழுதுதான் அறிந்தேன்! உடனே சுபத்திரையின் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு, கடைசி வரையில் நான் பேச வேண்டியதையெல்லாம் உட்கார்ந்து கொண்டே பேசினேன்! இது தவறுதான். ஆயினும் நிற்க தேக சக்தியில்லாதவன் வேறு என்ன செய்யக்கூடும்?
இந் நாடகத்தில் அர்ஜுனன் வேஷம் ஆடுவதில் ஒரு முக்கியமான கட்டம் உண்டு; அதாவது சுபத்திரை தன்னை வசப்படுத்த வயிற்று நோயால் வருந்துவதுபோல் பாசாங்கு செய்தாள் என்று அர்ஜுனன் அறிந்தவுடன், அவள் பக்கம் திரும்பி, “சுபத்திரை!” என்று ஒரு வார்த்தை கூறுகிறான். இந்த வார்த்தையை வெறும் கோபத்துடனும் சொல்லக் கூடாது; வெறுங் காதலுடனும் சொல்லக்கூடாது; வெறும் வருத்தத்துடனும் சொல்லக்கூடாது. சுபத்திரை தன்னை மோசம் செய்தாளே என்னும் கோபம் கொஞ்சம் இருக்க வேண்டியதுதான்; அவ்வாறு தன்னை மோசம் செய்தவள் தன்னாருயிர்க் காதலி யென்பதையும் மறக்கக்கூடாது. எப்படியிருந்தபோதிலும் இதனால் பிறகு ஸ்ரீகிருஷ்ண பகவானுடன் போர் புரிய நேரிடுமே என்னும் துக்கத்தையும் காட்ட வேண்டும். இந்த மூன்று ரசங்களையும் அந்த ஒரு பதத்தை உச்சரிப்பதில் அடக்கி நடிக்கவேண்டும். நான் இதை எழுதியபோது இந்த ரஸப்பூர்த்தியை அறிந்தவனன்று; ஏதோ அப்படி எழுத வேண்டுமென்று தோன்றி எழுதி விட்டேன். முதன் முறை இந்நாடகத்தை சென்னையில் நான் - நடித்தபொழுது, “சுபத்திரை!” என்று நான் திரும்பி அவளைப் பார்த்தபொழுது, சபையார் கரகோஷம் செய்து சந்தோஷித்தபொழுதே, அதன் மஹிமையை அறிந்தேன்! சில்பி ஒருவன் ஏதோ தன் மனம் போனபடி ஏதோ சிலையைச் செதுக்கி விடுகிறான்; மற்றவர்கள் அதைப் பார்த்து, அதிலுள்ள ஒரு விசித்திரமான வேலையைக் கண்டு சந்தோஷிக்கும் போதுதான், அவனுக்கும் அதன் அழகு தெரிகிறது! இந்த அர்ஜுன வேடம் நான் பன்முறை பூண்டு, பல நாடக மேடைகளின்மீது ஆடியிருக்கிறேன்; இது நான் முன்பே கூறியபடி சிறிய பாகம், அர்ஜுனன் அரங்கத்தில் தோன்றும் காலம் முதல் 10 நிமிஷத்திற்கெல்லாம் நாடகம் முடிந்து போகிறது. ஆயினும் இந்த ஒரு பதத்தைச் சரியாக நடிப்பதற்காக, இவ்வளவு வயதாகியும், இந்த வேடம் பூண விரும்புகிறேன்.
இதை ஒரு ‘கட்டம்’ என்று நான் கூறியதற்குக் காரணம், இவ்வேடம் பூணும் ஒவ்வொரு ஆக்டரும் இக்காட்சியில் இப்பதத்தைச் சரியாகச் சொல்லுகிறானா இல்லையா என்று பார்க்க வேண்டியிருப்பதனால்தான். இதைச் சரியாகச் சொல்லிச் சபையோரின் மனத்தைச் சந்தோஷப்படுத்தினால் ஆச்சுது; இல்லாவிட்டால், இப்பாத்திரத்தை அந்த வேஷதாரி கொலை செய்தான் என்றே கூற வேண்டும். இதைப்பற்றி நான் இவ்வளவு விரிவாக எழுதியதற்குக் காரணம், இந்நாடகமானது மிகவும் அதிகமாக ஆமெடூர் சபைகளினாலும், நாடகக் கம்பெனிகளினாலும் பன்முறை ஆடப்பட்டு, இந்த இடத்தில் அந்த வேஷதாரி ரசாபாசம் செய்ததை நான் பன்முறை கண்டு வருந்தியிருக்கிறேன்; ஆகவே, இனி மேலாவது எனது இந்த நாடகத்தில் அர்ஜுனன் வேஷந்தரிக்க விரும்புவோர் இதைக் கவனித்து இந்தக் கட்டத்தில் தக்கபடி நடிப்பார்களாக.
நாடகம் முடிந்த க்ஷணமே, என் டாக்டர் உள்ளே வந்து உடனே என்னைக் கம்பளிப் போர்வை ஒன்றைப் போர்த்துக்கொள்ளச் சொல்லி, ‘வீட்டிற்குப் போய் வேஷத்தைக் கழுவிப் படுத்துக்கொள்; இங்கே வெந்நீர் கிடையாது!’ என்று சொல்லி, நான் வந்த வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டார். என் சொந்த பந்துக்களும் எனக்காக அவ்வளவு அன்பு பாராட்டுவார்களோ என்னவோ?
நான் வீட்டிற்கு வந்து கொஞ்ச நேரம் இளைப்பாறி விட்டு, வெந்நீர் கொண்டுவரச் சொல்லி, என் முகத்திலிருந்த வர்ணத்தைக் கழுவிக் கொண்டிருந்தபொழுது, நடந்த ஒரு சிறு வேடிக்கையை இங்கு எழுதுகிறேன். நோயுடன் இருந்த எனக்கு, வேண்டிய வேலைகளைச் செய்துகொண்டு என் பக்கத்திலேயே இருக்கும்படி எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், பத்துப் பன்னிரண்டு வயதுள்ள ஒரு யாழ்ப்பாணத்துப் பையனை ஏற்பாடு செய்திருந்தார். அவன் நான் வந்தது முதல் படுத்த படுக்கையாய் ஜ்வரத்திலிருந்ததைக் கண்டவன்; நான் முகத்திலிருந்த வர்ணத்தைக் கழுவிக் கொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்ட வனாய், “எசமாங்கூட வேஷமா பொட்டுச்சி!” என்று, தன் கண் விழிமலரக் கேட்டான்! படுக்கையை விட்டு எழுந்திராத இந்த ஆசாமி எப்படி நாடகத்தில் ஆடினான் என்று ஆச்சரியப்பட்டான் என்பது திண்ணம். இவன் ஆச்சரியப்பட்டதுமன்றி, அந்நாடகத்தில் வந்திருந்தவர்களிற் பலர், (என்னை நேராக அறிந்த சிலர் தவிர) நான் ஆடவில்லை யென்று நினைத்தனர்களாம். அதற்கு ஒரு திருஷ்டாந்தம் இங்கு எழுதுகிறேன்.
அதைப்பற்றி எழுது முன், ஒரு சிறு விஷயத்தை இங்குக் குறிக்க விரும்புகிறேன். நான் எழுதி வரும் இந்த “நாடக மேடை நினைவுகள்” வாரந்தோறும் படித்து வரும் எனது சில நண்பர்கள், ‘அநேக வருடங்களுக்கு முன் நடந்த இந்தச் சமாச்சாரங்களெல்லாம் உனக்கு எப்படி ஞாபகமிருக்கிறது?’ என என்னை வினவுகிறார்கள். அவர்களுக்கு விடை கொடுக்க விரும்புகிறேன். முதலாவது, மனிதனுக்கு நாற்பது வயதுக்குமேல் ஞாபக சக்தி குறைந்து வருகிறதென்பது உன்மையாயினும், அநேக வருடங்களுக்கு முன் நடந்த சங்கதிகளெல்லாம் ஞாபகமிருக்கும்; சற்று முன்பாக நடந்தது தான் மறந்து போகிறது; இது சகஜம். இரண்டாவது, ஒரு மனிதனுடைய ஞாபகத்தில் சில விஷயங்கள் என்றும் மறக்காதபடி பதிந்து போகின்றன. எனது நாடக மேடை அனுபவங்கள் என் மனத்தில் நன்றாய் மறக்கக் கூடாதபடி பதிந்து போய்விட்டன என்பதற்கு ஐயமில்லை. மூன்றாவது காரணம் எங்கள் சுகுண விலாச சபையை ஸ்தாபித்த நாள் முதல் அதைச் சார்ந்த எல்லாக் காகிதங்களையும் பத்திரமாக அடக்கம் செய்து வைத்திருக்கிறேன். அது இப்பொழுது, அநேக விருத்தாந்தங்களின் தேதி முதலியவற்றைக் குறிப்பதற்கு மிகவும் உபயோகப்பட்டு வருகிறது. நான்காவது, இவைகளைப் பற்றி, நான் எழுதிக்கொண்டு வரும் பொழுது, இந்த விருத்தாந்தங்களையெல்லாம் இப்பொழுது நான் மறுபடியும் அனுபவிப்பது போலிருக்கின்றதெனக்கு; மறந்துபோன சில விஷயங்கள் புதிதாய் ஞாபகத்திற்கு வருகின்றன. இதற்கு ஓர் உதாரணமாக அந்த யாழ்ப்பாணத்துப் பையன் என்னைக் கேட்ட கேள்வி ஞாபகத்திலில்லை; அன்று நாடக மேடையை விட்டு வீட்டிற்குப் போன சமாச்சாரத்தை எழுதும்பொழுதுதான் புதிதாய் ஞாபகம் வந்தது!
‘காலவ ரிஷி’ ஆடிய மறுநாள் வேறொன்றும் நாடகம் வைத்துக்கொள்ளவில்லை. சாதாரணமாக வெளியூர்களில் ஒன்று விட்டொருநாள்தான் நாடகம் வைத்துக்கொள்வது எங்கள் சபை வழக்கமாகையால், மறுநாள் எங்களுக்கு விடுமுறையாயிருந்தது. சபையின் அங்கத்தினரையெல்லாம் எங்கள் யாழ்ப்பாணத்துப் புதிய நண்பர்கள் ஏதோ ஓர் இடத்திற்கு வனபோஜன விருந்துக்காக அழைத்துக்கொண்டு போய்விட்டனர். எனதுயிர் நண்பர் மாத்திரம் என்னைப் பார்த்துக் கொள்வதற்காக, என்னுடன் தங்கியிருந்தனர். அன்று காலை சுமார் 9 மணிக்கு என்னைக் காண என் பழைய சிநேகிதர் மிஸ்டர் பின்டோ வந்து சேர்ந்தார். அவரை நான் கடைசியில் பார்த்து, சுமார் 20 வருடங்களாயினவென்பதை முன்பே குறித்திருக்கிறேன். இத்தனைக் காலம் பொறுத்து, நாங்கள் இருவரும் சந்திக்கவே, எங்களுக்குப் பரஸ்பரம் உண்டான சந்தோஷம் கொஞ்சம் அல்ல; இதை இப்படிப்பட்டது என்று சொல்ல நான் அசக்தனாயிருக்கிறேன்; இதை வாசிக்கும் நண்பர்கள் யாராவது, சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் ஒருவருடன் மிகவும் அன்யோன்யமாயிருந்து, பிறகு அந்த நண்பனை விட்டுப் பிரிந்து, 20 வருடங்கள் பாராதிருந்து பிறகு அகஸ்மாத்தாய் வேறொரு தேசத்தில் அவரைப் பார்க்கும்படி நேரிடுமாயின், அப்படிப் பட்டவர்களுக்குத்தான் எங்கள் மனோசந்துஷ்டி இப்படிப்பட்ட தென்று தோன்றும்.
ஒன்பது மணிக்குப் பேச ஆரம்பித்தவர்கள், காலங்கழி வதையும் கவனியாமல், சுமார் பதினோருமணி வரையில் பேசிக்கொண்டிருந்தோம், நாங்கள் கலாசாலையை விட்டுப் பிரிந்தது முதல், ஒவ்வொருவருக்கும் நேர்ந்த விஷயங்களையெல்லாம் பற்றி! அவர் அப்பொழுது சொன்ன முக்கியமான விஷயம் ஒன்று எனக்கு இன்னும் நன்றாய் ஞாபகமிருக் கிறது. “சம்பந்தம்! நீ பூண்டிருந்த வேஷத்தில், நீ நாடக மேடைக்கு வந்த பிறகும், கொஞ்சநேரம் உன் முக ஜாடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை; ஆயினும், நீ மேடைக்கு வருமுன், ஏதோ பேசினாயே? அக்குரலைக் கேட்டவுடன், உன் பழைய ஞாபகம் வந்து, இன்னானெனக் கண்டு பிடித்து விட்டேன்! ஞாபகமிருக்கிறதா? நாம் கலாசாலையில் வாசித்த பொழுது உன் தமிழ் உபாத்தியாயர், தமிழ் வசனப் பாடங்களை யெல்லாம் உன்னைத்தான் உரக்கப் படிக்கச் சொல்வார்; அவருடைய மெல்லிய குரலும், உன்னுடைய கம்பீரமான குரலும் நான் மறக்கவில்லை; ஆகவே, உன் குரலைக் கேட்டவுடன் உன்னைக் கண்டுபிடித்து விட்டேன்” என்று சொல்லி நகைத்தார். பைபிளில் கிறிஸ்தவர்கள் சாதாரணமாக உச்சரிக்காத ஒரு பேர்வழி, என்ன வேடம் பூண்டாலும் பிளவையுடைய தன் காலை மாத்திரம் மறைக்க முடியாது என்று ஒரு கதை உண்டு; அம்மாதிரியாக, நான் எந்த வேஷம் பூண்டாலும் என்னை அறிந்த நண்பர்கள், என் குரலினால் என்னை எப்படியாவது கண்டுபிடித்து விடுகிறார்கள்!
அன்றைத் தினம் சாயங்காலம் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு என்னுடன் பேசிக்கொண்டிருந்பொழுது, “உங்களுக்கு உடம்புதான் கொஞ்சம் சுமாராக இருக்கிறதே; எந்நேரமும் படுக்கையிலேயே படுத்திருந்தால் நல்லதல்ல; கொஞ்சம் உலாவினால் நல்லது; நாங்கள் எல்லாம் தங்கியிருக்கும் புதிய வீடு, அருகாமையில்தானிருக்கிறது. அங்கே நடந்து போவோம் வாருங்கள்” என்று சொல்ல, அதற்கு நானிசைந்தேன்.
ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டு, அங்கு மெல்ல நான் அவருடன் நடந்துபோக, வீதியில் புறப்பட்டவுடன் யாரோ இரண்டு யாழ்ப்பாணத்துவாசிகள் எங்களைப் பின் தொடர்ந்தனர்; இதை யாரோ வீதியிற் போகிறவர்கள் என்று நாங்கள் அவ்வளவாகக் கவனிக்கவில்லை; பிறகு சபை தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த பொழுது, அவர்களும் எங்களுடன் நுழையவே, இவர்கள் யாரென்று திரும்பிப் பார்க்க, அவர்களுள் ஒருவன் மெல்ல எங்கள் அருகில் வந்து, “ஐயா எங்களை மன்னிக்க வேண்டும். உங்களை ஒரு கேள்வி கேட்கலாமோ? என்று நயத்துடன் கேட்க, “சுகமாய்க் கேட்கலாம” என்று நாங்கள் பதில் உரைத்தோம். அதன்மீது அவன் “நீங்கள் சுகுண விலாச சபையைச் சார்ந்தவர்கள்தானே? நேற்றைத் தினம் இரவு நாடகத்தில், இதோ என்னுடன் வந்த எனது நண்பர், ‘சம்பந்த முதலியார் ஆடவில்லை யென்கிறார்; நான் ஆடினார்,’ என்று சொல்லுகிறேன்; எங்களில் யார் கூறுவது சரியென்று நீங்கள் தீர்மானிக்க வேண்டும்” என்றான். அதன்மீது நான் “நீங்கள் கூறினதுதான் சரி” என்று சொல்ல, அம்மனிதன் போகுமுன் இரண்டு மூன்று முறை என்னை உற்று உற்றுப் பார்த்து விட்டுப் போகப் புறப்பட, எனது நண்பர் சி. ரங்கவடிவேலு நகைத்து விட்டார். அதன் பேரில், “நான்தான் சம்பந்தம்” என்று சொன்னேன். அதற்கு அம்மனிதன் “மிகவும் சந்தோஷம்; நானும் அப்படித்தான் சந்தேகித்தேன்; ஆயினும், எப்படி நேராகக் கேட்பது என்று சங்கோசப்பட்டேன். மன்னிக்கவேண்டும்” என்று சொல்லி விடைபெற்றுப் போனான்.
மறுநாள், “சாரங்கதர நாடகம்” வைத்துக் கொண்டோம். சித்ராங்கியாக நடிப்பதில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு, வந்திருந்தவர்களின் மனத்தையெல்லாம் கவர்ந்தனர் என்று நான் இங்கு எழுத வேண்டியதில்லை. நாடக மேடைக்குக் கோணியை எடுத்துவிட்டு ஒரு ஜமக்காளம் போட்டார்கள். வெளிச்சங்களும் முதல் நாளிருந்ததைவிட நன்றாக அமைக்கப்பட்டன. கொட்டகையில் இடமில்லாதபடி நிறைந்திருந்த ஜனங்கள், ஆதி முதல் அந்தம் வரையில் நாடகத்தைப் பார்த்துச் சந்தோஷித்தனர் என்று சொல்வது அதிகமாகாது. சித்ராங்கியின் பாத்திரத்திற்குப் பிறகு, சுந்தரகன் மதுரகவி வேடங்கள் சபையோரை மிகவும் சந்தோஷிக்கச் செய்தன. நானும், முதல் நாடகத்தில் நமக்குள்ள கொஞ்சம் திறமையைக் காட்ட முடியாமற் போயிற்றே என்று? இந்நாடகத்திலாவது சுத்தமான தமிழ் பாஷைக்கு ஓர் அடைக்கல ஸ்தானமாக நிற்கும் யாழ்ப்பாணத்தில் அதைக் காட்ட வேண்டுமென்று விரும்பினவனாய், நன்றாய் நடிக்க முயன்றேன். ஆயினும், புறாவிடுகிற காட்சியில், முற்றிலும் நின்று கொண்டே பேச வேண்டியவன், பலஹீனத்தினால் நிற்க முடியாமல், ஒரு நாற்காலியை மேடை மீது போடச்சொல்லி, அதில் உட்கார்ந்து கொண்டே பேசவேண்டியதாயிற்று. அப்பொழுது இப்படி நேர்ந்ததே என்று நான் என் மனத்திற்குள் பட்ட வருத்தம் கொஞ்சம் அல்ல. இதை வாசிக்கும் எனது நண்பர்களாகிய ஆக்டர்கள், நாடக மேடையில் தாங்கள் நடிக்க வேண்டும் என்னும் எண்ணம் தங்களை விட்டு அகலும் வரையில், முக்கியமாகத் தங்கள் தேகத்தை நோய் நொடி வராதபடி காப்பாற்றிக் கொள்வார்களாக. ஒருவன் எவ்வளவுதான் கெட்டிகாரனான ஆக்டராயிருந்த போதிலும், உடம்பு அசௌக்கியமாயிருந்தால் அவனால் என்ன செய்யக்கூடும்?
உடனே மறுநாள், ராத்திரி நாடகம் வைத்துக் கொள்ள முடியாதென்று சொல்லி, சாயங்காலம் 51
மணிக்கு ஆரம்பித்து 81
மணிக்குள்ளாக முடிக்கத்தக்க சிறு நாடக மாகிய “நற்குல தெய்வம்” என்பதை வைத்துக்கொண்டோம். இது ஒரு சிறு நாடகமாகையாலும், இதில் எனக்கு அதிக பாகமில்லாத படியாலும், அதிகக் கஷ்டமில்லாமல் இதில ஆடி முடித்தேன். நாடகம் ஆனதும், எங்கள் சபை மங்களம் பாடுமுன் அரங்கத்தின் முன் வந்து நான் யாழ்ப்பாணத்துவாசிகள் எங்கள் சபைக்குச் செய்த எல்லா உதவிக்காகவும் எங்கள் சபையின் வந்தனத்தைச் செலுத்திவிட்டு, வீடு போய்ச் சேர்ந்து, யாழ்ப்பாணத்தில் அடியெடுத்து வைத்தபோது, நாம் இங்கு ஒரு நாடகமாவது ஆடப்போகிறோமா என்று திகிலடைந்த நான், மூன்று நாடகங்களை யாழ்ப்பாணர்கள் மனமகிழ முடிக்கச் செய்த ஈசன் பேரருளைப் போற்றிவிட்டு உறங்கினேன்.
மறுநாள் காலை, நாடகமாடிய இளைப்பினால் அயர்ந்து நித்திரை செய்து, கொஞ்சம் நேரம் பொறுத்துக் கண் விழித்த நான், என் படுக்கையைச் சுற்றில் யாழ்ப்பாணத்துப் பெரிய மனிதர்கள் நான்கைந்து பெயரும், வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், ரங்கவடிவேலு முதலிய சபையின் நிர்வாக சபை அங்கத்தினரும் உட்டார்ந்திருக்கக் கண்டேன். நான் அதிகமாகத் தூங்கினதற்கு அவர்கள் மன்னிப்பைக் கேட்டுவிட்டு, ‘என்ன விசேஷம்?’ என்று நான் அவர்களை வினவ, யாழ்ப்பாணவாசிகளில் ஒருவர் (அவர் முத்துக்குமரு முதலியார் என்று நினைக்கிறேன்) “நாங்கள் எல்லாம் உங்களுக்குக் கொஞ்சம் கஷ்டம் கொடுக்க வந்திருக்கிறோம். யாழ்ப்பாணத்துக் கலாசாலைக்காகவும் யாழ்ப்பாணத்துத் தேகப்பயிற்சி சபைக்காகவும், சுகுண விலாச சபை ஒரு நாடகம் போட்டு, அதன் வரும்படியை உதவ வேண்டுமென்று உங்கள் சபையாரைக் காலை கேட்டோம். அவர்களெல்லாம் நீங்கள் சம்மதித்தால் வேறு ஆட்சேபணையில்லையென்று சொல்லுகிறார்கள். ஆகவே, உங்களால் தானிருக்கிறது. நீங்கள் ஆம் என்றால் நிறைவேறிவிடும்; என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். அதன்பேரில், ‘இதென்னடா இது; கஷ்டமெல்லாம் தீர்ந்தது என்றிருந்தோமே, இது ஒன்று இப்பொழுது வந்து முளைத்ததே!’ என்று எண்ணினவனாய், என்றைக்கு நாடகம் போடுகிறது என்று கேட்க, இன்று சாயங்காலம் என்று பதில் உரைத்தார்கள்; அப்பொழுது ஏறக்குறைய எட்டரை அல்லது ஒன்பது மணியிருக்கும்; இன்றிரவு நாடகம் வைத்துக் கொண்டால், சாயங்காலத்திற்குள்ளாக எப்படி நாடக விளம்பரம் முதலியன வெளியாவது, ஜனங்களுக்கெல்லாம் எப்படித் தெரிவது? என்று ஆட்சேபித்துப் பார்த்தேன். (வாஸ்வத்தில் என் தேக ஸ்திதியைக் கருதினவனாய், எப்படியாவது இதனின்றும் தப்பித்துக் கொள்ள வேண்டு மென்பதே என் கருத்தாயிருந்தது.) அதற்கு அவர்கள் “அந்தச் சமாச்சாரங்களைப் பற்றி உங்களுக்குக் கவலையேன்? அதையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அது எங்கள் பொறுப்பு. அவற்றைப்பற்றி உங்களுக்குக் கவலை வேண்டாம். நாடகமாடுவதாக நீங்கள் சம்மதியுங்கள்!” என்று வற்புறுத்தினார்கள். அதன்பேரில் இவ்வளவு பலவந்திக்கிறார்களே நமது நண்பர்கள் என்று சற்று இணங்கினவனாய், என்ன நாடகம் போடுவது என்று கேட்டேன். அதன் பேரில் “‘லீலாவதி - சுலோசனா’ உங்கள் சபை நாடகங்களில் ஒரு மிகச் சிறந்தது என்று கேள்விப் பட்டிருக்கிறோம்; அதில் உங்களுக்கு மனோஹரன் நாடகத்தைப் போல் அதிகச் சிரமமில்லையென்று கேள்விப்படுகிறோம். ஆகவே அதைப் போடச் சம்மதிக்க வேண்டும். உங்கள் சபையின் மற்ற ஆக்டர்களெல்லாம் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஒருவர்தான் பாக்கி. நீங்கள் சம்மதித்தால் உடனே ஏற்பாடு செய்து விடுகிறோம்” என்று சொன்னார்கள்.
நான் மெல்ல என் தலையைத் திருப்பி ரங்கவடிவேலு வைப் பார்த்தேன். என்னுயிர் நண்பனது புன்னகையினால் தனக்கு இது மிகவும் விருப்பமென்றும், இந்நாடகத்தைப் போடலாமென்று யுத்தி சொல்லிக் கொடுத்தது தான் தானென்றும் கண்டேன். அதன்மீது இதென்னடா தர்ம சங்கட மாய் வந்திருக்கிறது என்று சற்று. யோசித்து, “நான் ஒரு வார்த்தை சொல்லுகிறேன். அதற்காக நீங்கள் எல்லோரும் மன்னிக்க வேண்டும்; என்னுடைய பழைய வைத்தியரை வரவழையுங்கள். அவர் என் ஹிருதயத்தைப் பரீட்சித்துப் பார்த்து, இன்றிரவு நான் அத்தனை பெரிய நாடகமொன்றில் நடிக்கலாம் என்று பயமில்லாமல் சொல்வாராயின், எனக்கு ஆட்சேபணையில்லை” என்று கூறினேன். அதன் பேரில், அவர்கள் ஒரு வைத்தியருக்கு இரண்டு வைத்தியர்களாகத் தருவிக்கிறோம் என்று சொல்லி, உடனே வண்டியனுப்பி என் பழைய வைத்தியரையும், இன்னும் அந்த ஊரில் ஹிருதய பரீட்சையில் மிகச் சிறந்தவரெனப் பெயர் பெற்ற மற்றொருவரையும், சில நிமிஷங்களுக்குள் வரவழைத்தார்கள். அவர்களிருவரும், எனது சபை அங்கத்தினராகிய டாக்டர் ஸ்ரீனிவாசராகவாச் சாரியும் மூவருமாகக் கூடி என் ஹிருதயத்தைப் பரிசோதித்துப் பார்த்து, கொஞ்சம்பலஹீனமாகத்தானிருக்கிறது; இருந்தபோதிலும், இன்றிரவு நாடகம் நடிக்கலாம், அபாயமொன்றுமில்லை என்று தீர்மானம் சொன்னார்கள். இப்படியாவது தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்த்த இம் மார்க்கமும் அடைபட்டுப் போகவே, சரிதான் என்று ஒப்புக்கொண்டேன். ஆயினும், ஒரு வார்த்தை கூறினேன். “எல்லாம் சரிதான். இந்த கண்டிராக்டர், எங்கள் சபை நான்கு ஆட்டங்கள் ஆட வேண்டுமென்று ஒப்பந்தம் செய்து கொண்டார்; எனது தேகஸ்திதியைக் கருதி மூன்று நாடகங்கள் ஆடினால் போதும் என்று இசைந்தார். இப்பொழுது அந்த ஆள், இதற்கு ஒரு ஆட்சேபணையும் செய்யாமல் பாருங்கள்” என்று சொன்னேன். அதை யெல்லாம் நாங்கள் சரிப்படுத்தி விடுகிறோம், நீங்கள் இசைந்தது போதுமென்று சொல்லி விட்டு, அவர்கள் அனைவரும் நாடகத்திற்காக வேண்டிய விளம்பரங்களைச் செய்ய உடனே மிகுந்த குதூகலத்துடன் புறப்பட்டுப் போயினர். அப்பொழுது சுமார் 11 மணி ஆகிவிட்டது. இன்னும் சாயங்காலத்திற்குள்ளாக நாடகத்தைப் பற்றி இவர்கள் என்ன அச்சிட்டு விளம்பரம் செய்யக்கூடும் என்று ஆச்சரியப்பட்டேன். பிறகு, நான் அறிந்தபடி அவர்கள் செய்த நாடக விளம்பரம் எல்லாம், தபால் ஆபீசுக்குப் போய், பத்து மைலுக்குள் உள்ள ஊர்களுக்கெல்லாம், “இன்றிரவு சுகுண விலாச சபையார் ‘லீலாவதி-சுலோசனா’ ஆடப் போகிறார்கள்” என்று அறிவித்த தேயாம்! ஆயினும், அன்றிரவு நாடக வருமானத் தொகை 1700 ரூபாய்க்குமேல்!
நான் சந்தேகித்தபடியே இவர்கள் போய்க் கண்டிராக்டரை உத்திரவு கேட்க அம்மனிதன், சபையார் நான்காவது ஆட்டம் ஆட முடியுமானால் அப்பணம் தனக்குச் சேரவேண்டுமேயொழிய, மற்று யாருக்கும் சேரக்கூடாது என்று ஆட்சேபித்தானாம். அதன் பேரில் இவர்கள் அவனோடு பேரம் செய்து அவனுக்கு முன்னூறு ரூபாய் கொடுப்பதாயும், மிகுதிப் பணம் யாழ்ப்பாணத்துக் கலாசாலைக்கும். தேகப்பயிற்சி சங்கத்திற்கும் சேர வேண்டும் என்று தீர்மானித்தார்களாம். பிறகு ஏதாவது கோர்ட்டு வியாஜ்யமாய் முடிந்தால் என்ன செய்வதென்று, கண்டிராக்டர் கைப்பட இந்நாடகம் நடக்கலாம் என்று எழுதிக் கொடுத்தாலொழிய நான் இருந்த வீட்டை விட்டுப் புறப்படமாட்டேன் என்று பிடிவாதாய் உட்கார்ந்தேன். அதன் பேரில் சாயங்காலம் ஆறு மணிக்கு அப்படிப்பட்ட கடிதம் கிடைக்கவே, அப்புறம்தான் நாடகக் கொட்டகைக்கு நான் புறப்பட்டேன். நான் ஏதோ கொஞ்சம் கஞ்சி சாப்பிட்டுவிட்டு ஏழு மணிக்கு நாடகக் கொட்டகைக்குப் போனால், அதற்குள்ளாகக் கொட்டகை முழுவதும் ஜனங்களால் நிரம்பியிருந்தது! கொட்டகையின் வெளியே சில கிராமங்களில் ஏதாவது உத்ஸவம் நடந்தால் நூற்றுக் கணக்கான கட்டை வண்டிகள் அவிழ்த்து விடப்பட்டிருக்குமே, அப்படியிருந்தது. நாடகக் கொட்டகைக்குள்ளே அதற்குமேல் நின்று பார்ப்பதற்காக அநேகம் பேர் ரூபாய் 5 விகிதம் கொடுத்ததாக அறிந்தேன். யாழ்ப்பாணத்துவாசிகள் சபைக்கு அன்று செய்த கௌரவமானது என்றும் மறக்கற்பாலதன்று.
நாடகம் 9 மணிக்கு ஆரம்பித்தபோது, கொட்டகைக்குள் ‘எள்ளு போட்டால் கீழே விழாது’ என்னும் பழமொழிக் கிசைய, ஜனங்கள் நிறைந்திருந்தனர். நாடக ஆரம்பம் முதல் கடைசிவரை, மிகவும் கவனமாய் நாடகத்தைக் கவனித்து வந்தனர். எனது ஆக்டர்களுக்கு முன்னதாகவே, யாழ்ப்பாண வாசிகள் தமிழில் தேர்ந்தவர்கள். ஆகவே, சரியாகப் பாடம் படித்து வையுங்கள், ஏதாவது “கைசரக்குப் போட்டீர்களானால் கண்டுபிடித்து விடுவார்கள்” என்று சொல்லியிருந்தேன்; அதன்படியே அவர்களும் தங்கள் தங்கள் பாடங்களைச் சரியாகப் படித்து அன்றிரவு வெகு விமரிசையாய் நடித்தார்கள். நாடகம் முடிவதற்குக் காலை 21
மணியான போதிலும் ஒருவரும் கொட்டகையை விட்டு அகலவில்லை. நாடகத்தின் கடைசிக்காட்சிக்கு முன்பாக, எனது நண்பர், யாழ்ப்பாணத்து ஜட்ஜ் மிஸ்டர் பின்டோ என்பவர் (இப்பொழுது இவர் பெயரை மிஸ்டர் சிரேஷ்டா என்று மாற்றிக் கொண்டார்), மேடையின் பேரில் வந்து சபையைச் சிலாகித்துப் பேசி, யாழ்ப்பாணத்து வாசிகள் தரப்பில் எங்கள் சபைக்கு ஞாபகார்த்தமாக சுமார் 400 ரூபாய் பெறும்படியான வெள்ளித் தட்டு’ சந்தனக்கிண்ணம், பன்னீர்சொம்பு கொடுத்தார் (இவைகள் இன்னும் எங்கள் சபையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன). இன்னும் இரண்டொரு பெரிய மனிதர்களும் சபையின் நாடகங்களைப்பற்றிப் புகழ்ந்து பேசினர் என்பது என் ஞாபகம்.
யாழ்ப்பாணத்தில் எங்கள் சபையார் ஆடிய நாடகங்கள் யாழ்ப்பாணவாசிகளின் மனத்தை எவ்வாறு கவர்ந்ததென்பதற்கு, அச்சமயம், ஒரு சிங்களத்து வர்த்தமானப் பத்திரிகையில் எழுதிய ஒரு வியாசத்தினின்றும் சில பாகங்களை இங்குத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன். சாதாரணமாகப் பத்திரிகைகளில் ஒரு நாடகத்தைப்பற்றி, நாடகமாடுபவர்களின் நண்பர்கள் எவ்வளவு அதிகப்படுத்தி எழுதுகிறார்கள் என்பதை நான் அறிந்துள்ளேன். அன்றியும் சிலர் தாங்கள் நடித்ததைப்பற்றித் தாங்களே பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவதும் எனக்குத் தெரியும். ஆயினும் இப்பொழுது நான் மொழி பெயர்க்கப் போகிற விஷயங்களைஎழுதியவர் பெயரும் எனக்குத் தெரியாது. இப்பத்திரிகையும் சில நாட்கள் பொறுத்து எனக்கு அகஸ்மாத்தாய்க் கிடைத்தது; யாழ்ப்பாணத்தில் நல்லூர் என்னும் கிராமத்திலிருப்பவராகத் தன்னை இவ்வியாசத்தில் வெளியிட்டிருக்கிறார். இவர் எங்கள் சபையின் நாடகங்களைப்பற்றி எழுதிய சில பாகங்களைக் கீழே தெரிவிக்கிறேன்.
“(யாழ்ப்பாணத்து) மைதானத்தில் யாழ்ப்பாணம் முழுவதும் திரண்டுபோய்ச் சேர்ந்தது என்று வாஸ்தவமாய்க் கூற வேண்டும்.” இச்சபையின் ஆக்டர்கள் எங்கள் மனத்தைக் கவர்ந்தது மிகுந்த ஆச்சரியகரமான விஷயம். “யாழ்ப்பாணத்தார் மிஸ்டர் சம்பந்தத்தின் பெயரை மறந்து போகலாம். ஒருக்கால் அவரது குரலின் பிரதித் தொனி, மழுங்கிப் போகலாம்; அவர் உருவத்தைச் சுற்றியிருக்கும் தெய்வீகம் பொருந்திய காந்தி மறைந்து போகலாம். காலம் என்பதே அற்றுப் போகும் வரையில், அவர் தமிழ் பாஷையிலுள்ள அழகினையும் பெருமையையும் பூமியில் புதைந்து கிடந்த நிதியை வெளிப்படுத்தியது போல், அவர் வெளிப்படுத்தியது அழியாது நிற்கும்!”
பிறகு நான் நான்கு நாடகங்களிலும் நடித்ததைப்பற்றி ஏதோ புகழ்ந்து கூறியுள்ளார். அதை இங்கு எழுத எனக்கிஷ்டமில்லை. ஆயினும் அவர் எனதுயிர் நண்பனான சி. ரங்கவடிவேலுவைப்பற்றி எழுதியதை மாத்திரம் இங்கு மொழி பெயர்க்க, இதை வாசிக்கும் எனது நண்பர்களின் அனுமதியைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
“எல்லா ஆக்டர்களைவிட முதன்மை மிஸ்டர் ரங்கவடி வேலுக்குக் கொடுக்க வேண்டும். இந்நாடகங்களிலெல்லாம் இவர் முக்கியமான ஸ்திரீ பாகம் தரித்து, சபையோரின் மனத்தையெல்லாம் மிகவும் கவர்ந்தனர். இவர் ஊர்வசி வேடம் பூண்டு என்ன அழகாயும் அருமையாகவும் நடனம் செய்தார்! யவ்வன அழகிய அதரமுடையவர்! அவர் புன்னகை புரியும் போது நம்முடைய மனத்தையெல்லாம் எவ்வாறு கவருகிறார்! அழகிய சாரியணிந்து பெண் கோலத்துடன், சித்ராங்கியாகவும், சுலோசனையாகவும், சாரங்கதரனுடனும் ஸ்ரீதத்தனுடனும் அவர் பேசுங்கால் இவர் வாஸ்தவத்தில் ஸ்திரீ ஜன்மம் எடுத்தவரே என்று யார்தான் எண்ணமாட்டார்கள்! அவரது அபிநயங்களெல்லாம் எவ்வளவு பொருத்தமானதாயிருக்கின்றன! சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி தன் மனோபாவங்களைக் காட்டுகிறார்! வாஸ்தவமாய் இவர் எல்லாருடைய மதியையும் மயங்கச் செய்தார் என்பது திண்ணம்! இவரை நாடகமேடையிற் பார்த்த பிறகு, மாத்யு ஆர்னால்டு என்பவர், தன் சிறுவயதில், எடின்பரோ நாடக சாலையில் ஒரு முறை ராஷில் என்னும் நடிக சிரோன்மணியைப் பார்த்துவிட்டு, அவளை இரண்டு மாதம் வரையில் பாரிஸ் நகரத்தில் பின் தொடர்ந்தார் என்று கேள்விப்படுவது ஓர் ஆச்சரியமாகாது!”
இவர் இந்த வியாசத்தை அடியிற்கண்ட வார்த்தைகளுடன் பூர்த்தி செய்கிறார். “இவ்வழகிய நாடக சபையார், நம்முடைய மனத்தையெல்லாம் கவர்ந்துவிட்டு, நம்மைவிட்டுச் சென்னை போய்ச் சேர்ந்துவிட்டனர். போகும் போது நமக்கு நன்கொடையாக என்ன அளித்துச் சென்றனர்? இவர்கள் அரங்கத்தின்மீது ஆடியதனால் நாம் அறிந்த புத்திமதி என்ன? அவர்கள் போன பிறகு, மைதானத்தின் பக்கம் நான் போய் அவர்கள் ஆடிய நாடகக் கொட்டகையிருந்த இடத்தைப் பார்க்குங்கால், என் மனத்தின்கண் இரண்டு உருவங்கள் தோன்றுகின்றன. ஒன்று-மிகுந்த அழகுடைய முகச் சன்னங்கள் உடையதும், கருமேகம் போன்ற கேசம் நிறைந்ததும், பட்டுப் புடைவை அணிந்து பல விலையுயர்ந்த ஆபரணங்களணிந்ததாம்! - மற்றொன்று சௌம்யமாயிருந்தபோதிலும் திடசித்தத்தைக் குறிக்கின்ற முகத்தையுடையது. சி.ரங்கவடிவேலு, ப. சம்பந்தன் ஆகிய இவர்களுடைய இனிய குரலானது எனக்கு என்ன சொல்லுகிறதென்றால் “நாடக மேடையானது எல்லாவற்றையும் வெல்லும் சக்தியுடையது; யாழ்ப்பாணத்தில் உடனே ஒரு நாடக சபையை ஏற்படுத்துங்கள் என்பதேயாம்.”
பிறகு மறுநாள் காலையில் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் நானும் கொழும்புக்குப் புறப்பட்டோம். சபையின் மற்ற அங்கத்தினர் அன்று யாழ்ப்பாணததில் தங்கியிருந்து மறுநாள் புறப்பட்டு வருவதாகச் சொன்னார்கள். என் உடம்பு அசௌகர்யத்தைப்பற்றி நான ஒரு நாள் முன்னதாகப் புறப்பட்டு, கொழும்பில் ஒரு நாள் தங்கி, பிறகு எல்லோருடனும் பட்டணம் போக வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. நாங்கள் ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டபொழுது, எங்களுடைய யாழ்ப்பாணத்துப் புதிய நண்பர்களெல்லாம் அங்கு வந்து எங்களைக் கௌரவப்படுத்தி அனுப்பினார்கள்.
அன்று சாயங்காலம் கொழும்பு வந்து சேர்ந்து, மிஸஸ் திருநாவுக்கரசு அம்மாள் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தோம். எங்களைத் தனது அதிதிகளாக வரவழைத்து, அந்த அம்மையார் என்னை அன்றிரவு முதலில் பார்த்த பொழுது, “மிஸ்டர் சம்பந்தத்தின் அருவத்தைப் பார்ப்பது போலிருந்தது, எனக்கு” என்று சொன்னார்கள். அவ்வளவு மெலிவடைந்து முகம் வெளுத்திருக்க வேண்டும் நான்! ஆயினும் தேக பலம் குன்றியிருந்தபோதிலும் மனத்தில் மாத்திரம் எடுத்த காரியத்தை எப்படியாவது ஈசன் கருணையினால் முடித்திட்டோமே என்னும் சந்துஷ்டி குடிகொண்டிருந்தது.
இந்தத் திருநாவுக்கரசு அம்மாள், மிஸ்டர் ராக்வுட் என்னும் பிரபல வைத்தியரின் மூத்த மகள். ஆங்கிலம், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய மூன்று பாஷைகளிலும் மிகுந்த விற்பன்னமுடையவர்கள்; சாதாரணமாகவே கற்றறிந்த மாதர்களையுடைய இந்த இலங்கைத் தீபத்தில், இவர்கள் எல்லோராலும் மிகுந்த கல்வி செறிந்தவர்களாக மதிக்கப்பட்டவர்கள்; இவர்கள் இரண்டு நாள் தன் வீட்டில் என்னைத் தங்கச் செய்து, நோயாளியாகிய எனக்குச் செய்த உபசரணை என் மரண பர்யந்தம் மறக்கற்பாலதன்று. என் அன்னையைப் போல என்னை ஆதரித்த இவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? என் மனமார்ந்த வந்தனத்தை இங்கு நான் எழுதி வைப்பது தவிர்த்து வேறொன்றும் செய்ய அசக்தனாயிருக்கிறேன்.
இம்மாது சிரோமணி இம்முறை நான் இலங்கைக்கு வந்த பின் பரிசயமான பிறகு, நான் அப்போதைக்கப்போது அச்சிடும் புஸ்தகங்களையெல்லாம் தவறாது இவர்களுக்கு அனுப்புவது என் வழக்கம். அவற்றையெல்லாம் படித்து, அவைகளைப்பற்றி அப்போதைக்கப்போது இவர்கள் மதிப்புரை எழுதி எனக்கு அனுப்புவார்கள். எனக்கு எழுதியனுப்பும் எல்லோருடைய மதிப்புரையைவிட, இவர் மதிப்புரைக்கே நான் அதிக கௌரவம் பாராட்டுகிறேன்; ஏனெனில், மற்றவர்களைப் போலல்லாது ஏதாவது குற்றம் குறையிருந்தால் எனக்கு அவற்றை உடனே எடுத்துக்காட்டும் அபூர்வமான சிறந்த குணம், திருநாவுக்கரசு என்னும் சரியான பெயர் பெற்ற இம்மாதரசியிடம் உண்டு.
இம்முறை இலங்கைக்குச் சபை போய் வந்ததன் பலனாக, ரூபாய் 1500 கட்டட பண்டுக்குச் சேர்க்கப்பட்டது. அன்றியும் அதன் நேர்பலனாகக் கொழும்பில், சுபோத் விலாச சபையென்ற நாடக சபையொன்று ஸ்தாபிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலும் பிறகு ஒரு நாடக சபை ஏற்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். கொழும்பு சபை பல நாடகங்கள் ஆடி இன்னும் ஜீவித்திருக்கிறதென அறிவேன்; யாழ்ப்பாணத்து சபையைப் பற்றி நான் கேள்விப்பட்டு சில வருஷங்களாயது.
22ஆவது அத்தியாயம்
1913ஆம் வருஷம் எங்கள் சபையின் வர்த்தமானத்தில் குறிக்க வேண்டியது எனக்கு ஞாபகமிருக்கிற வரையில், இரண்டு விஷயங்களே; ஒன்று சீமையிலிருந்து வந்த ராயல் கமிஷனுக்கு ஆனரபில் பி.எஸ். சிவஸ்வாமி ஐயர் தன் வீட்டில் ஒரு விருந்தளித்தபொழுது, அவரது வேண்டு கோளின்படி, அச்சமயம் எங்கள் சபையார் “இந்திய தேசத்தின் சரித்திரம்” பல தோற்றக் காட்சிகளாகக் காட்டியது; மற்றொன்று-காலஞ்சென்ற வி. கிருஷ்ணசாமி ஐயருடைய உருவப்படத்தை, சென்னை கவர்னர் லார்ட் பென்ட் லென்ட் திறந்து வைத்தது.
இவ் வருஷம் நான் இரண்டு சிறு நாடகங்களைப் புதிதாய் எழுதினேன். ஒன்று, ‘கோனேரி அரசகுமாரன்’ என்பது; மற்றொன்று, ‘சிறுத்தொண்டர் சரித்திரம்.’ கோனேரி அரசகுமாரன் என்பது, ஷேக்ஸ்பியர் மகாகவி ஆங்கிலத்தில் எழுதிய ‘நான்காம் ஹென்றி’ என்னும் நாடகத்திலிருந்து ஒரு சிறு பாகத்தை எடுத்து, ஹாஸ்ய ரூபமாக எழுதியதாம். சிறுத்தொண்டரின் கதை யாவருக்கும் தெரிந்ததே. ஒரு நாள் நானிருக்கும் ஆச்சாரப்பன் வீதியில் ஏதோ சிறுவர்களுடைய நாடக சபையொன்று, என்னைத் தங்கள் வருஷாந்தரக் கொண்டாட்டத்திற்கு அக்கிராசனம் வகிக்கும்படியாகக் கேட்டுக்கொண்டது. அப்பொழுது அப்பிள்ளைகள், இக் கதையை ஒருவாறு நடித்தனர்; கதை நன்றாயிருக்கிறதென என் மனத்தில் தோன்றியது; அதன் பேரில் மறுநாள் இதை நான் நாடக ரூபமாக எழுத ஆரம்பித்து, இதன் முக்கியமான இரண்டு காட்சிகளையும் இரண்டு நாட்களில் எழுதி முடித்தேன். உடனே எங்கள் சபையின் தசராக் கொண்டாட்டம் வரவே, அதன் முதல் நாள் நான் முன்னே சொன்ன “கோனேரி அரசகுமாரன்” நாடகத்தை ஆடி, இந்தச் சிறுத்தொண்டர் சரித்திரத்தை ஸ்திரீகளுக்கென்று ஏற்படுத்திய தினம் ஆடினோம்.
இச்சிறுத்தொண்டர் நாடகமானது நான் எழுதிய பல நாடகங்களுள் மிகச் சிறியதாயினும், அதன்மீது எனக்கு மிகவும் பிரியம் உண்டு. இதுவே ஒரு சிறிய நாடகம். இதிலும், சிறுத்தொண்டர் இரண்டு காட்சிகளில்தான் வருகிறார். இருந்தும், பெரிய நாடகப் பாத்திரங்களாகிய அமலாதித்யன், மனோஹரன், ஸ்ரீதத்தன், சுந்தராதித்யன் முதலியவற்றை நடிப்பதைவிட, இச் சிறுத்தொண்டர் நாடகம் நடிப்பதில் எனக்குச் சந்தோஷமதிகமாயுண்டு. என்னிடத்தில் வேறெந்த நற்குணமில்லாவிட்டாலும் பக்தி என்பது மாத்திரம் கொஞ்சம் இருக்கிறதென எண்ணுகிறேன். ஆகவே பக்தி ரசமமைந்த இச்சிறு நாடகத்தில் நடிப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது போலும்.
மேற்சொன்னபடி தசராவில் ஸ்திரீகள் தினத்தன்று இதை முதன் முதல் நடித்தபொழுது, எங்கள் சபையின் சட்டங்களின் பிரகாரம், அங்கத்தினராயிருந்தபோதிலும், ஆண் மக்கள் இந்நாடகத்தைப் பார்க்க முடியாமலிருந்தது. ஐகோர்ட்டு ஜட்ஜ் ஹானர்பில் சதாசிவ ஐயர் மாத்திரம் எங்கள் உத்தரவைப் பெற்று, விக்டோரியா பப்ளிக் ஹாலில், அரங்கத்தின் மீதிருந்து பார்த்தார். நான் இந்தச் சிறுநாடகத்தை முடித்துத் திரும்பியவுடன், பக்கப்படுதாவிலிருந்து பார்த்துக் கொண்டு ஆசீர்வாதம் செய்து மிகவும் புகழ்ந்தார்! இதை நான் இங்குத் தற்புகழ்ச்சியாக எடுத்து எழுதவில்லை. அச்சீமானது பேரன் எனது நண்பர்கள் அறியும் பொருட்டே இங்கு எழுதினேன். புகழ்ந்தது மன்றி, “இதென்ன சம்பந்தம்? இப்படிப்பட்ட பக்தி ரசமமைந்த நாடகத்தை ஆண் மக்களாகிய அங்கத்தினர் பார்க்க இடமில்லாமற் போயிற்றே. இதை மறுதினம் நாங்களெல்லாம் பார்க்க ஆடவேண்டு” மென்று கூறி, காரியதரிசிகளிடம் பேசி, மறுநாள் வேறு ஏதோ நாடகம் வைத்திருந்ததை மாற்றி இதையே போடச் செய்தார்!
மறுநாள் எனது நண்பர்களெல்லாம் இதைப் பார்த்த பொழுது, மிகவும் நன்றாயிருக்கிறது, இதைக் கொஞ்சம் பெரியதாக எழுதி, அங்கத்தினர் மாத்திரமின்றி, அயலாரும் பார்க்கும்படியாக, பிரவேசக் கட்டணமுடைய நாடகமாக ஆட வேண்டுமென்று வற்புறுத்தினர். பிறகு அதனுடன் ஒரு ஹாஸ்ய ரசமமைந்த இடைக்காட்சியும், இன்னும் இரண்டு சிறு காட்சிகளும் சேர்த்து எழுதி அச்சிட்டேன். இதில் வெண்காட்டு நங்கையாக நடித்த எனதுயிர் நண்பர், சாதாரணமாக விலையுயர்ந்த சரிகைச் சேலைகளையும் ரவையிழைத்த நகைகளையுமே அணிய விரும்புபவர்; குரநாட்டுச் சேலையொன்றை அணிந்து, தன் கூந்தலைச் சொருகிக் கொண்டையாகப் போட்டுக் கொண்டு தோன்றியது, எனக்கு இப்பொழுதும் பிரத்யட்சமாகப் பார்ப்பதுபோல் என் மனத்தின்கண் தோன்றுகிறது. இதை இங்கெடுத்து எழுதியதற்கு இன்னொரு முக்கியக்காரணமுண்டு. அதாவது அந்நாடகப் பாத்திரம் எப்படி உடை தரிக்க வேண்டுமென்பதை என் இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே. சில சபைகளில் இப்பாத்திரத்தைப் பூணும் ஆக்டர், விலையுயர்ந்த சம்கி புடைவையைக் கட்டிக் கொண்டு, ரவைசெட் நகைகளெல்லாம் அணிந்து கொண்டு, பிச்சாடாவாவது பின்னலாவது போட்டுக் கொண்டு தோன்றுவதைப் பார்த்திருக்கிறேன். அது முற்றிலும் தவறாகும். வெண்காட்டு நங்கை தெற்கத்திய ஸ்திரீ; தன் பொருளையெல்லாம் அடியார்க்கு அமுதளிப்பதில் செலவிட்ட ஒரு பக்தருடைய மனைவி. அதற்கேற்றபடி நடையுடை பாவனைகள் இருக்க வேண்டும் என்பது திண்ணம். அன்றியும் முக்கியமாக சேலை தரிப்பதிலும் ‘சென்னப் பட்டணத்து’ பாஷன்போல் தரிக்காமல், தெற்கத்திய மாது சிரோமணிகள் தரிப்பது போல் தரிக்க வேண்டும்.
1914ஆம் வருஷம், சுகுண விலாச சபை மிகவும் விருத்தியடைந்த வருஷங்களிலொன்று. இவ் வருஷத்தில் எங்கள் சபை திருச்சிராப்பள்ளி, கும்பகோணம் என்னும் இரண்டு இடங்களுக்குப் போய் நாடகங்கள் ஆடியது. திருச்சிராப்பள்ளியில் 5 நாடகங்கள் தமிழில் ஆடினோம். இவ்விடத்தில் எங்களுக்கு வேண்டிய சௌகரியங்கள் எல்லாம் தற்காலம் அசிஸ்டென்ட் டிராபிக் இன்ஸ்பெக்டரா யிருக்கும் எப்.ஜி. நடேச ஐயர் செய்தார். ஆயினும் நாங்கள் ஆடிய நாடகங்களுக்கு ஜனக்கூட்டம் அதிகமில்லை. இவ்வூரில் ஒரு பக்கமாக இருந்த ரெயில்வே இன்ஸ்டிட்யூட் நாடக சபையில் நாங்கள் ஆடியது ஒரு வேளை ஒரு காரணமாயிருக்கலாம். ஆயினும் அது ஒரு முக்கியக் காரணமென்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். இவ்விடத்தில் நாங்கள் நடத்திய மூன்றாவது நாடகமாகிய காலவ ரிஷி நாடகத்தின் ஆரம்பத்தில் நேரிட்ட ஒரு சமாச்சாரம் இப்பொழுதும் நினைத்துக் கொண்டால் எனக்கு நகைப்பைத் தருகிறது. இரவு 9 மணிக்கோ 9½ மணிக்கோ நாங்கள் குறிப்பிட்டபடி நாடகத்தை ஆரம்பம் செய்தோம். டிராப் படுதா மேலே போனவுடன், ஹாலில் பார்க்க, சரியாகப் பன்னிரண்டு பெயர்தான் உட்கார்ந்திருந்தார்கள்!
இதை நான் கவனித்தவனன்று; நான் இந்திரன் வேடம் பூண்டு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தேன். என் அருகில் நின்று கொண்டிருந்த சித்திரசேனன் வேடம் பூண்ட எனது நண்பர் டாக்டர் டி. சீனிவாச ராகவாச்சாரி இதைக் கவனித்து, ஆடிக்கொண்டிருந்த அப்சர ஸ்திரீகளுடைய நடனத்திற்குத் தாளம் தட்டிக் கொண்டிருக்க வேண்டியவர், என் பக்கமாகத் திரும்பி, சபையோர் அறியாதபடி “என்ன வாத்தியார்! ஹாலில் வந்திருப்பவர்களைவிட, மேடையின்மீது நாம் அதிகப் பெயர்கள் இருக்கிறோமே!” என்று சொல்லி நகைத்துவிட்டார்! அவர் கூறியதென்னமோ வாஸ்தவம்தான். ஏனெனில், இந்திரன் கொலுவில் திக்பாலர்கள், ரிஷிகள் முதலியோரை யெல்லாம் கணக்கிட்டால் நாங்கள் 15 பெயர் இருந்தோம். “ஸ்! நமக்கென்ன இதனால்? நம்முடைய கடமை நாடகத்தை நன்றாய் நடத்தவேண்டியது. ஹாலில் ஜனங்கள் வந்திருக்கிறார்களா இல்லையா என்று நாம் கவனிக்கக்கூடாது” என்று கோபித்து மொழிந்ததை, இன்றும் எப்பொழுதாவது நாங்கள் வேடிக்கையாகச் சாப்பிட்டு விட்டுக் காலங்கழிக்கும் சமயங்களில், என்னைப் போல முகத்தைச் சுளித்து, அவ்வார்த்தைகளைக் கூறிக் காட்டுவார்.
கடைசி இரண்டு நாடகங்களுக்கும் ‘காலவரிஷி’யைவிட ஜனங்கள் அதிகமாக வந்தனர். இருந்தும் திருச்சிராப்பள்ளி வரையில், வரவு செலவுக் கணக்குப் பார்த்த பொழுது, சபைக்குக் கொஞ்சம் நஷ்டத்திலேயேயிருந்தது. ஆகவே, இவ்விடத்தைவிட்டு கும்பகோணத்திற்குப் புறப்பட்ட பொழுது, திருச்சிராப்பள்ளியிலே இப்படியிருந்ததே, இதைவிடச் சின்ன ஊராகிய கும்பகோணத்தில் எப்படியிருக்கப் போகிறது என்னும் மனவருத்தத்துடன்தான் புறப்பட்டோம்.
போஜனத்துக்குமேல் மத்தியான ரெயிலில் புறப்பட்டு சாயங்காலம் கும்பகோணம் வந்து சேர்ந்தோம். ஸ்டேஷனி லிருந்து எங்கள் விடுதிக்குப் போகும் வழியில், நாடகக் கொட்டகை வாயிலில் அச்சமயம் கும்பகோணம் சப் ஜட்ஜாயிருந்த எனது பழைய நண்பர் பாலசுப்பிரமணிய ஐயரைக் கண்டோம்; அவர் அச்சமயம், நாங்கள் முன்னதாகவே திருச்சிராப்பள்ளியிலிருந்து இவ்விடம் அனுப்பிய படுதாக்கள் முதலியவற்றை ஆட்கள் இறக்குவதை மேல்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் புன்சிரிப்புடன் எங்களுக்கெல்லாம் நல்வரவு கூறியதை நான் ஒரு நற்சகுனமாகக் கொண்டேன். இந்த பாலசுப்பிரமணிய ஐயர் அவர்கள் மயிலாப்பூரில் எங்கள் சபை “விரும்பிய விதமே” என்னும் நாடகம் போட்டது முதல் எனக்கு அத்யந்த நண்பராயிருந்தவர். எங்கள் சபையின் பாக்கியத்தால் இச்சமயம் இவர் இவ்விடம் சப் ஜட்ஜாயிருக்கும்படி நேர்ந்தது. இவர் நாங்கள் கும்பகோணத்திற்கு வந்தது முதல் அதைவிட்டுப் பட்டணம் புறப்பட்ட வரையில், கோர்ட் வேளை தவிர, மற்றக் காலமெல்லாம் எங்களுடனேயே கழித்தார் என்று கூறுவது மிகையாகாது.
ஊரில் பெரிய உத்தியோகஸ்தராகிய இவர் எங்கள் சபை விஷயமாக இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்ளவே, ஊரிலுள்ள மற்றவர்களெல்லாம் எங்கள் சபையை மிகவும் மதிக்க ஆரம்பித்தனர். இதன் பலன் என்னவென்றால், இவ்விடம் எங்கள் முதல் நாடகமாகிய “மனோஹரன்” ஆரம்பிப்பதற்கு ஒன்றரை மணி சாவகாசத்திற்கு முன்பாக, கொட்டகையில் நாங்கள் விற்பதற்காக அச்சிட்டிருந்த டிக்கட்டுகளெல்லாம் ஆய்விட்டன! அதன் பேரில் எங்கள் சபை காரியதரிசியாக இருந்த எனது தமயனார் ஆறுமுக முதலியார், டிக்கட்டுகளில்லாமல், கையில் ரூபாயை வாங்கிக் கொண்டு கொட்டகையில் காலி இடங்களில் எத்தனை பெயரை நிற்கவிட முடியுமோ, அத்தனை பெயரை உள்ளே விட்டார்! கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அதுகூட முடியாமல், கொட்டகை நிரம்பிவிட்டபடியால் அதையும் நிறுத்த வேண்டி வந்தது. இதை யெல்லாம் அறிந்த எங்களுக்குத் திருச்சிராப்பள்ளியில் பட்ட வருத்தமெல்லாம் பறந்து போய் அதிக சந்தோஷம் உண்டாச்சுது. இவ்வாறு குதூஹலத்துடனிருந்த நாங்கள், மிகவும் நன்றாய் நடித்தோம் என்று நான் கூறவே வேண்டியதில்லை. ஆயினும் ஒரு சமாச்சாரம், மேற்சொன்னபடி கொட்டகையில் நிற்க இடமில்லாமல் ஜனங்கள் நிறைந்திருந்த போதிலும், நாங்கள் எல்லாம் மிகவும் நன்றாய் நடித்த போதிலும், நாடக ஆரம்ப முதல் கடைசி வரையில் ஒரு கரகோஷமாவது என் செவியிற்படவில்லை! இதற்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என்று யோசித்துக் கொண்டிருந்த நான், நாடகம் முடிந்தவுடன், ஆக்டர்களுடன் அருகாமையிலிருந்த எங்கள் விடுதிக்குத் திரும்பிப் போகும் பொழுது, எங்கள் பந்தோபஸ்துக்காக நான்கு கான்ஸ்டபிள்களோடு எங்களோடு வந்த டெபுடி சூபரின்டென்டென்ட் ஆப் போலீஸ் அவர்களை, நாடகக் கொட்டகை முழுதும் நிரம்பியிருந்த ஜனங்களெல்லாம் சும்மாயிருந்தார்களே, என்ன காரணம் என்று மெல்லக் கேட்க, அவர் “யாருக்காக சும்மா இருந்தார்கள்? எவனாவது கைதட்டிக் கேலி செய்திருந்தால், உடனே அப்படியே அவனை ஸ்டேஷனுக்கு இழுத்துக்கொண்டு போய் விடும்படி, அங்கங்கே கான்ஸ்டபிள்களை நிறுத்திவைத்தேன்!” என்று பதில் உரைத்தார். அப்பொழுதுதான் எனக்குக் காரணம் வெளியாயது. இவ்வூர் வழக்கம் என்ன வென்றால், நாடகத்தில் ஏதாவது நன்றாகயில்லாவிட்டால் கைதட்டிக் கேலி செய்வதாம்! கரகோஷம் செய்வது, நன்றாயிருக்கிறதென உற்சாகப்படுத்துவது என்பதை அறிந்திலர் அச்சமயம்! சில வருஷங்களுக்குப் பிறகு இதெல்லாம் மாறிவிட்டது.
இரவில் போலீஸ் பந்தோபஸ்துடன் நாங்கள் வீட்டிற்குச் செல்வதைக் கண்ட ஜனங்கள், இதனின்றும் இன்னொரு தவறான ஊகை கொண்டனர். எனதுயிர் நண்பர் ரங்கவடி வேலு முதலிய ஆக்டர்கள் அணிந்திருந்த நகைகளெல்லாம் மிகவும் விலையுயர்ந்தன, இந்நகைகளின் பந்தோபஸ்துக் காக போலீஸ் கான்ஸ்டபிள்கள் கூடப்போகிறார்கள் என்று பேசத் தொடங்கினர். என்னுடன் இதைப்பற்றிப் பேசிய இரண்டொருவருக்கு அந்நகைகளெல்லாம், வெள்ளைக் கற்களாலும் பித்தளையினாலும் ஆனவை என்று நான் கூறியபோதிலும், இப்படிச் சொன்னால்தான் அவற்றை யாரும் களவாடமாட்டார்கள் என்னும் காரணத்தினால் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று மறுத்தனர்! இந்தத் தர்ம சங்கடத்திற்கு நான் என்ன செய்வது? உலக வழக்க மீதாகும்! பணக்காரன் பித்தளையை அணிந்திருந்தால் அது பொன்னாக மதிக்கப்படுகிறது; ஏழை வாஸ்தவமாகப் பொன்னை அணிந்திருந்தாலும் அது பித்தளை என மதிக்கப்படுகிறது!
எங்கள் முதல் நாடகமானது இந்தச் சிறு ஊரில் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணினதென்றே சொல்லவேண்டும்; பாலசுப்பிரமணிய ஐயர் எனக்குத் தெரிவித்தபடி, ஊரில் எங்கே போனாலும் சுகுண விலாச சபை பேச்சாகவிருந்தது எனக்கு முக்கியமாக திருப்தியைத் தந்தது. கற்றறிந்தவர்கள் எங்கள் சபையின் நாடகத்தைப் புகழ்ந்ததன்று; சாதாரண ஜனங்கள், அதாவது கடைசி வகுப்பு டிக்கட்டு வாங்கிக் கொண்டு வந்து பார்த்த ஜனங்கள்கூடச் சந்தோஷப்பட்டனர் என்பதேயாம். இதை நான் அறிந்த விதத்தை இங்கு எழுதுகிறேன். எந்த ஊருக்குச் சென்றாலும் நாடகமானவுடன் மறுநாள் எங்கள் சபை ஸ்டேஜ் அசிஸ்டெண்டாகிய கேசு (கேசவ முதலியார்) அந்த ஊரிலுள்ள பிரபலமான காப்பி ஹோட்டல்களுக்கெல்லாம் மெல்லப் போய்ச் சுற்றிவிட்டு வருவான். அங்கு ஜனங்கள் சபையைப்பற்றி ஏதாவது பேசிக்கொண்டிருந்தால் அதை யெல்லாம் எனக்குத் தெரிவிப்பான்; இந்தப் “பரதேசித் தபால்” மூலமாகச் சாதாரண ஜனங்களின் அபிப்பிராயத்தை நான் அறிவது வழக்கம். இதன்படி கேசு மறுநாள் எனக்குத் தெரிவித்ததாவது: “காபி ஹோட்டல்களில் சபைப் பேச்சு தவிர வேறு பேச்சு கிடையாது! இரண்டாவது நாடகத்திற்கும் நீங்கள் அதிக டிக்கட்டுகள் அச்சடிக்க வேண்டியதுதான். நாயினா கண்ணுவைப் பற்றியும் (நாயினாகண்ணு என்பது ரங்கவடி வேலுவின் வீட்டுச் செல்லப் பெயர்) பத்மநாபராவைப் பற்றியும் பேசாத பெயர்களில்லை” என்பதேயாம். என்னுடைய ஆக்டிங்கைப்பற்றிப் புகழ்ந்ததாகவும், ஆயினும் இவர் ஏன் பாடுகிறதில்லை என்று அநேகம் பெயர் கேட்டதாயும் தெரிவித்தான். அன்றியும், சில சாப்பாட்டு ஹோட்டல்களில், இனி சுகுண விலாச சபை நாடக தினங்களில் இரவில் ஏழு மணிக்கெல்லாம் சாப்பாடு போட்டாய்விட வேண்டியது என்று ஏற்பாடு செய்துகொண்ட தாகவும் தெரிவித்தான்.
இவ்வூரில் நாங்கள் நடத்திய இரண்டாவது நாடகம் லீலாவதி- சுலோசனா; அதற்காக அ. கிருஷ்ணசாமி ஐயரை, சென்னையிலிருந்து லீலாவதி வேஷத்திற்காக வரவழைத்தோம். டிக்கட்டுகள் அதிகமாக அச்சிட்டு, எல்லா ஏற்பாடுகள் செய்தும், நாடக ஆரம்பத்திற்கு அரைமணி முன்னதாக, டிக்கட்டுகள் போதாமற்போயின; கொட்டகையிலும் நிற்க இடமில்லாமற் போயிற்று. இந்நாடகத்தில் கிருஷ்ணசாமி ஐயருடைய பாட்டும், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவின் ஆக்டும் மிகவும் கொண்டாடப்பட்டன.
இங்கு நடத்திய கடைசி நாடகம் “சாரங்கதரன்.” நாடக தினத்தின் காலையிலேயே சிலர் முப்பது நாற்பது டிக்கட்டுகள் வாங்க ஆரம்பித்தனர். இதற்குக் காரணம் என்னவென்று பிறகுதான் அறிந்தேன். முதல் இரண்டு நாடகங்களுக்குக் டிக்கட்டுகள் ஆய்விட்ட படியால் காலையிலே இவைகளை வாங்கி, பிறகு சாயங்காலம் அவைகளை ஒன்றுக்கு இரண்டு விலையாக விற்று லாபம் சம்பாதித்தார்களாம்! சாயங்காலம் எங்கள் வழக்கம்போல் ரங்கவடிவேலும் நானும் 5½ மணிக்கு நாடகக் கொட்டகைக்குப் போக, டிக்கட்டு ஆபீசுக்கு எதிரில் வழக்கம்போல் மேளம் வாசிக்கும் வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங்களை உறையில் போட்டுக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இதற்குக் காரணம் என்னவென்று என் தமயனார் ஆறுமுக முதலியாரை வினவ, அவர் “டிக்கட்டுகளெல்லாம் விற்றாயது; இனி மேளம் வாசித்துக் கொண்டிருந்தால் வந்து கேட்பவர்களுக்கு யார் பதில் சொல்வது? அதற்காக மேளத்தை நிறுத்திவிட்டேன்” என்று விடை பகர்ந்தனர்.
இந்த சந்தோஷ சமாச்சாரத்தைக் கேள்விப்பட்ட என்னாருயிர் நண்பர் ரங்கவடிவேலு, அன்றைத்தினம் நடித்தது போல் ‘சித்ராங்கி’யாக, முன்னும் நடித்ததில்லை; பிறகும் நடிக்கவில்லை. ‘ராத்திரியெல்லாம் அப்படியே பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கிறதே’ என்று வந்திருந்த ஒரு மாது சிரோமணி கூறினார்களாம். எனது நண்பர் பாலசுப்பிரமணிய ஐயர் நாடகம் முடிந்தவுடன், உள்ளே வந்து ‘என்ன முதலியார், நாடகமெல்லாம் முடிந்துவிட்டதே!’ என்று முகவாட்டத்துடன் கூறியது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது.
இவ்வூரிலுள்ள பெரிய மனிதர்களெல்லாம் எங்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்தனர். அதில் எங்கள் சபைக்குப் பரிசாக சித்திர வேலை செய்யப்பட்ட ஒரு ஷீல்ட் கொடுத்தார்கள். இதை இன்றும் சபையின் தமிழ் ஒத்திகை அறையில் காணலாம். இத்தனைக் குதூஹலத்துடன் எங்கள் சபையை ஆதரித்த கும்பகோணவாசிகளுக்கு, நாங்கள் மறுநாள் பிரதி விருந்து கொடுத்தோம். அப்போது ‘சபாபதி’ நாடகத்தை ஆடினோம். அது ஆடி முடிவதற்குள் நேரமாகி விட்டபடியால், நாங்கள் புறப்பட எண்ணியிருந்த ரெயில் போய்விட்டது. அதன்பேரில் இவ்வூரில் இன்னொரு நாள் தங்கி வரவேண்டியதாயிற்று. இதற்காக நாங்கள் ஒருவரும் துக்கப்படவில்லை. காலஞ்சென்ற பாலகிருஷ்ண உடையார் தன் விடுதியில் எங்களுக்கு அன்றைத்தினம் விருந்து அளித்தார். அன்று சாயங்காலம் எங்கள் நண்பர்களிடமெல்லாமிருந்து விடைபெற்றுக் கொண்டு ரெயிலேறிப் பட்டணம் போகப் புறப்பட்டோம். பாலசுப்பிரமணிய ஐயர், கடைசி வரையில் எங்களுடனிருந்து ரெயில் ஸ்டேஷனுக்கு வந்து எங்களைப் பிரயாணப்படுத்தினார். இவர் எங்கள் சபைக்குச் செய்த பேருதவி என்றும் மறக்கற்பாலதன்று! மற்றவர்கள் மறந்தாலும் என்னால் மறக்க முடியாது.
கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு வரும்பொழுது, ஒரு தேசத்தின் மீது படையெடுத்து, வென்று திரும்பும் வெற்றியினால் எவ்வளவு மனோசந்துஷ்டியிருக்குமோ, அவ்வளவு மனோ சந்துஷ்டியுடையவனாயிருந்தேன் சர்வேஸ்வரன் கிருபையால்.
இந்த இரண்டு ஊர்களுக்கும் எங்கள் சபை சென்று நாடகமாடியதற்கு இன்னொரு பலன் கிடைத்தது. பெங்களூருக்குப் போய்வந்த பிறகு எப்படி அவ்விடம் ஒரு நாடக சபை ஏற்படுத்தப்பட்டதோ, கொழும்புக்குப் போய் வந்த பிறகு கொழும்பில் சுபோத விலாச சபையென்னும் நாடக சபை எப்படி அங்கு ஸ்தாபிக்கப்பட்டதோ, அம்மாதிரியாகவே, திருச்சிராப்பள்ளியில் “ரசிக ரஞ்சனி சபை” என்றும், கும்பகோணத்தில் “வாணி விலாச சபை” யென்றும் ஸ்தாபிக்கப்பட்டன. இவ்விரண்டு சபைகளும் நாளது வரையில் வளர்ந்து வருகின்றன.
இந்த 1914ஆம் வருஷம் ஐரோப்பிய மஹாயுத்தம் ஆரம் பித்த விஷயம் எல்லோரும் அறிந்ததே. அதன் பொருட்டுச் சென்னையில் வார் ரிலீப் பண்டு ஏற்படுத்திய பொழுது, அதற்காக எங்கள் சபையார் ரூபாய் 1000 நன்கொடையாகக் கொடுத்தனர். அன்றியும் பெல்ஜியம் தேசத்து உதவி பண்டுக்காக, தசராக் கொண்டாட்டத்தில், பத்து நாளும் யாசகம் செய்து, சுமார் ரூபாய் 250 அனுப்பினோம்.
மேலும் இவ்வருஷத்தின் கடைசியில் “தென் இந்தியா ஆர்ட்ஸ் (கலைகள்) எக்சிபிஷன்” ஒன்று சபையில் நடத்தினோம். அதற்கு மாட்சிமை தங்கிய கவர்னர் அவர்கள் ஒரு தினம் வந்திருந்தார்; மிகவும் நன்றாயிருக்கிறதெனப் புகழ்ந்து பேசினார்.
இவ் வருஷத்தின் கடைசியில் கிறிஸ்ட்மஸ் விடுமுறையில் மொத்தமாக நாற்பது நாட்களுக்கு விக்டோரியா பப்ளிக் ஹால் மேல் மாடியை வாடகைக்கு வாங்கிக்கொண்டு தமிழிலும் தெலுங்கிலும் அநேக நாடகங்கள் நடத்தினோம். அதன் மூலமாக செலவு போக, லாபத்தில் ரூ.1500, கட்டட பண்டுக்குச் சேர்த்தோம்.
இவ்வருஷம் நான் புதியதாக, “ரஜபுத்ர வீரன்” என்னும் ஒரு சிறு நாடகத்தை எழுதினேன். இதை எழுதும்படி நேரிட்ட காரணம் வருமாறு: கணம் பி.ஆர்.சுந்தர ஐயர் காலமான பிறகு, அவருக்குப் பதிலாக ஹைகோர்ட் ஜட்ஜாகிய டி.வி. சேஷகிரி ஐயர் அவர்கள் எங்கள் சபைக்கு பிரசிடென்ட் ஆனார். சேஷகிரி ஐயர் அவர்கள் தசராக் கொண்டாட்டத்தின் கடைசி நாள் செலவையெல்லாம் ஒப்புக்கொண்டு, இவ்வருஷ முதல் தன் மரணகாலம் வரையில், அதை நடத்தி வந்தார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அத்தினம்தான் அவர் பிறந்த தினம். இக் கொண்டாட்டத்திற்காக, தன்னுடைய சினேகிதர்களாகிய ஐகோர்ட் ஜட்ஜுக்களை யெல்லாம் வரவழைக்கப் போகிறதாகக் கூறி, என்னை அவர்களுக்காக ஒரு புதிய நாடகம் நடத்தவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். நான் உடனே யோசித்து, பட்டணமெங்கும் ஐரோப்பாவில் நடக்கும் பெரும் யுத்தத்தைப்பற்றியே பேச்சாயிருப்பதால், யுத்த வீரர்களைப்பற்றிய கதையாயிருக்க வேண்டும் என்று தீர்மானித்து, டாட் என்பவர் ராஜஸ்தானத்துச் சரிதையில் எழுதியிருக்கும் சில சந்தர்ப்பங்களை ஒருங்கு சேர்த்து, ‘ரஜபுத்ரவீரன்’ என்னும் இந்நாடகத்தை விரைவில் எழுதி முடித்தேன். ஆயினும் இது உண்மையில் நடந்த சரித்திரமன்று. இந்நாடகத்தில் நேரிட்டதாயினும், ஏக காலத்தில் ஒன்றாய் இவைகள் சம்பவித்தவைகள் அல்ல; கதாநாயகனான ரணவீர்சிங் என் மனத்தால் நிர்மாணிக்கப் பட்ட பாத்திரமே. இந்நாடகத்தின் கடைசிக் காட்சியை நாடக தினத்தின் காலைதான் எழுதி முடித்தேன். ஆயினும் எனது ஆக்டர்களெல்லாம் நன்றாகப் படித்துத் தங்கள் பாத்திரங்களை மிகவும் அருமையாக நடித்தனர். நான் ரணவீர்சிங்காகவும், ரங்கவடிவேலு என் மனைவியாகிய சந்திராபாயாகவும் நடித்தோம். ஆயினும் வயோதிகத்தினால் கண் குருடாகிய ஜனாவாலாபாய் என்னும் ரணவீர்சிங்கின் தாயார் வேடம் பூண்ட எனது நண்பர் பத்மநாபராவ் ஆக்டு செய்ததுதான் எல்லோருடைய மனத்தையும் கவர்ந்தது. அன்றைத்தினம் வந்திருந்த பல ஹைகோர்ட்டு ஜட்ஜுகளும், நாடகத்தை மிகவும் புகழ்ந்ததாக சேஷகிரி ஐயர் எனக்குத் தெரிவித்தார். அக்காலம் “நியூ இந்தியா” என்னும் தினப் பத்திரிகையைப் பிரசுரம் செய்து வந்த பெசண்ட் அம்மை, இந்நாடகத்தைப் பார்த்து, மறுநாள் இதைப் பற்றிப் புகழ்ந்து பேசியதுமன்றி, இந்திய தேசத்தில் தற்காலம் மழுங்கிப் போயிருக்கும் ஜனங்களின் வீர உற்சாகத்தை அபிவிருத்தி செய்ய, இந்நாடகமானது இந்தியா தேச முழுவதும் ஆங்காங்கு ஆடவேண்டுமென்று எழுதினார்கள். இந்நாடகத்தில் ஒரு காட்சி, முக்கியமாக மிகவும் ரசமாயிருந்ததென எல்லோரும் புகழ்ந்தனர்; அது ரஜபுத்ர வீரர்களுடைய பத்தினிகளெல்லாம் மஞ்சள் வஸ்திரம் தரித்து, அக்னியை வலம் வந்து அதில் பாய்ந்து மரித்த ‘ஜோஹர்’ என்னும் சடங்குக் காட்சியேயாம். ராணாவின் மனைவி, சிதையை மூட்டக் கடைசியில் கற்பூரத் தட்டையேந்தி முன்பு செல்ல, பிறகு எல்லா ரஜபுத்ர ஸ்திரீகளும் வர, அவர்கள் பின்னால், சிறுமிகளும், குழந்தைகளும் மஞ்சள் வஸ்திரமணிந்து சென்றனர். இந்தக் காட்சியை மத்யானம் நான் ஒத்திகை செய்த பொழுது, நான் எழுதிய பொழுது தோன்றாத ஒரு யோசனை எனக்குத் தோன்றியது. அதன்படி அக்குழந்தைகள் இரண்டின் கையில், அவர்கள் அருமையாய் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு மரப்பொம்மைகளை, அவைகளுக்கும் மஞ்சள் வஸ்திரம் தரித்து, தீயில் மூழ்கக் கொண்டு போகச் செய்தேன். நாடகமானது அன்று சாயங்காலம் நடிக்கப்பட்டபொழுது, இவ்வாறு சிறு குழந்தைகள் தங்கள் பொம்மைகளையும் கையிலேந்தித் தீப் புக அரங்கத்தைக் கடந்து சென்றதைக் கண்டபொழுது, தன் அருமைக் குழந்தை அதன் பொம்மையையும் கையிற் கொண்டு தீப் புகப் போனதைக் கண்ட தகப்பன் மனம் எவ்வாறு பதறியிருக்கும் என்று நினைத்தேன்; உடனே என்னையுமறியாதபடி எனக்குக் கண்ணீர் ஆறாகப் பெருகியது! நாடகத்தில் ஏதோ நான் நடித்ததாக இதை வந்தவர்கள் எண்ணினர். இதை நான் இங்கு எடுத்து எழுதியதற்கு ஒரு முக்கிய காரணம், இந்தக் காட்சியை ஆக்டு செய்யும் ஆக்டர்களும் அல்லது இம்மாதிரியான சோககரமான காட்சிகளை நடிக்கும் ஆக்டர்களும், நடிக்க வேண்டிய கதையின் சந்தர்ப்பத்தை மனத்தில் நன்றாய்க் கொள்வார்களானால், கண்ணீர் அவர்களுக்குத் தானாகப் பெருகும்; அழ வேண்டிய சந்தர்ப்பங்களில், கண்ணுக்குக் கற்பூரத்தூள் முதலியன போட்டுக் கொள்ள வேண்டிய தில்லை; அல்லது இன்னும் சில ஆக்டர்கள் செய்கிறபடி, ஸ்பிரிட் கம் தடவிக்கொள்ள வேண்டியதில்லை!
நாடக மேடை நினைவுகள் இதை முதன் முறை நடித்தபொழுது பல்லாரி ராகவாச்சார்லு என்னும் சிறந்த தெலுங்கு ஆக்டர் மஹம்மதிய அரசனாகிய பஹதூர்ஷா வேடந் தரித்தார். அவர் நான் தமிழில் எழுதிய வார்த்தைகளையெல்லாம் ஹிந்துஸ்தானியில் மொழி பெயர்த்துப் பேசினார். இவர் கடைசி காட்சியில் மிகுந்த புத்தி சாதுர்யமாய் நடித்த ஒரு விஷயத்தை, நாடகத்தை நான் அச்சிட்டபொழுது, அதையும் சேர்த்து அச்சிட்டேன். கதாநாயகனான ரணவீர்சிங், மகம்மதிய வீரர்களால் கொல்லப்பட்ட பிறகு, இவனது வீரத்தை யறிந்த பஹ்தூர்ஷா, தன் வீரர்களைக் கொண்டு மடிந்த ரஜபுத்ர வீரனது சவத்தை எடுக்கச் சொல்லி, அதைத் தானே பின்தொடருகிற தருவாயில், தான் மேலே அணிந்திருந்த விலையுயர்ந்த போர்வையை அச்சவத்திற்குப் பெருமையாக அதன் மீது போர்த்தியதாக நடித்துக் காட்டினார் எனது நண்பராகிய ராகவாச்சார்லு. இது மிகவும் நன்றாயிருக்கிறதென, அவரது அனுமதியைப் பெற்று அச்சிடுங்கால் இதையும் சேர்த்து எழுதினேன். புத்தி சாதுர்யமுடைய சிறந்த ஆக்டர்கள், கிரந்த கர்த்தாக்களுக்கும் பல அருமையான விஷயங்களைக் கற்பிக்கின்றனர்!
1915ஆம் வருஷமும் எங்கள் சபையின் சரித்திரத்தில் ஒரு முக்கியமானதெனக் கூற வேண்டும். இவ்வருஷத்தில் மாத்திரம் 363 புதிய அங்கத்தினர் சபையைச் சேர்ந்தனர். இதுவரையில் இத்தனை பெயர் ஒரே வருஷத்தில் சபையைச் சேர்ந்ததில்லை. இனிமேலும் அப்படி நடப்பது மிகவும் கடினம் என்றே எண்ணுகிறேன்.
இவ் வருஷம், முன்பே இருந்த தமிழ் தெலுங்குப் பிரிவுகளுடன் எங்கள் சபைக்கு ஒரு இங்கிலீஷ் பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு என் நண்பரான கே.ஆர். சீதாராம ஐயரைக் கண்டக்டராக ஏற்படுத்தினார்கள். இவர் என்னுடன் கலாசாலையில் படித்தவர். பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். ஆங்கிலத்தில் ரெசிடேஷன் ஒப்புவிப்பதில் மிகவும் நிபுணர். ஆங்கிலத்தில் நாடகம் நடிப்பதிலும் மிகவும் கெட்டிக்காரர். இவரது ஆங்கில உச்சரிப்பு இங்கிலீஷ்காரர்களும் மெச்சும்படியாக அவ்வளவு சுத்தமாயிருக்கும். ஷேக்ஸ்பியர் நாடகங்களில், ஒதெல்லோ நாடகப் பாத்திரத்தையாடுவதில் பெரும் கீர்த்தி பெற்றார். எம். சுந்தரேச ஐயரைவிட, இதில் சில பாகங்களில் அதிக விமரிசையாய் நடித்தார். தமிழ் நாடகங்களிலும் சிலவற்றுள் நடித்தார். எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதியுள்ள எட்டு ஒன்பது சிறு ஆங்கில நாடகங்களிலெல்லாம் முக்கியமான பாத்திரங்களை இவர்தான் நடித்தார். அவைகளெல்லாம் இவருக்கென்றே எழுதப்பட்டனபோல், அவைகளிலெல்லாம் அவ்வளவு சாதுர்யமாக நடித்தார். எனது பால்ய நண்பர்களிலொருவ ராகிய இவரைப்பற்றி எழுத வேண்டியபோதும், இறந்த காலத்தில் எழுத வேண்டியதாயிருக்கிறது; நிகழ் காலத்தில் எழுதுவதற்கில்லாதது என் துர்ப்பாக்கியங்களிலொன்றாம்.
இவ்வருஷம் எங்கள் சபையின் முன்னூறாவது நாடகம் நடத்தப்பட்டது. இதற்காக “சவுத் இந்தியன் ஆத்லெடிக் அசோசியேஷன்” மைதானத்தில் ஒரு பெரிய கொட்டகை போட்டு, அதில் “காதலர் கண்கள்” நாடகத்தையும், “நன்றி மறவா வறிஞர்கள்” என்னும் ஒரு ஹாஸ்யத்தையும் நடத்தினோம். இதற்கு கவர்னர் லார்ட் பென்ட்லென்ட் விஜயஞ் செய்தார். இந்நாடகத்தின் வரும்படி ரூபாய் 302-13-5, “சென்னை ஆஸ்பத்திரி கப்பல்” பண்டுக்கு நன்கொடையாகக் கொடுத்தோம். இதன்றி பத்து மாதங்களுக்கு, மாதம் 100 ரூபாய் விகிதம் அந்தக் கப்பல் செலவுக்காக அனுப்பினோம். ஐரோப்பிய யுத்தத்திற்கு இந்தியாவிலிருந்து பல பெரிய ராஜாக்கள் முதலியோர் செய்த உதவியுடன், எங்கள் சபையும் ஸ்ரீராமர் சேது பந்தனம் செய்ததற்கு, அணிப்பிள்ளைகளும் உதவியது போல், தன்னாலியன்றளவு உதவி செய்தது.
அன்றியும் ஹைகோர்ட்டு பிரதம ஜட்ஜ் சர் ஜான் வாலிஸ் மனைவியார் சேப்பாக்கத்தில் ஏற்படுத்திய கொண்டாட்டத்திற்காக, இவ்வருஷம் “சபாபதி”யின் பாகமொன்றை, ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினேன். இதை “சபாபதி நான்காம் பாகம்” என்று இப்பொழுதுதான் அச்சடித்து வெளிப்படுத்தியிருக்கிறேன். ஒரு சிறு நாடகமாயிருந்தபோதிலும், ஆங்கிலமும் தமிழும் கலந்திருந்தபோதிலும், இதைப் பார்த்தவர்கள் இது நன்றாயிருக்கிறதெனப் புகழ்ந்தார்கள். அதற்கு அத்தாட்சியாக, இந்நாடகமானது அச்சிடப்பட்டு முன்னரே, அநேகம் தடவைகளில் என் ஏட்டுப் பிரதியைக் கொண்டு, அநேக சபையார்களும் சங்கத்தார்களும் இதை ஆடியதை எடுத்துக் கூறுவேன்.
அன்றியும், இவ்வருஷம் சென்னை கவர்னர் அவர்கள் பார்க்கும்படி பாங்க் வெடிங் ஹாலில் யுத்த பண்டுக்காக ஏற்படுத்திய வினோதக் காட்சியில், என்னுடைய ‘சபாபதி’ நாடகத்தின் ஒரு பாகமும், “பிரமேளா” எனும் தெலுங்கு நாடகத்திலிருந்து ஒரு காட்சியும் ஆடப்பட்டது.
இவ்வருஷம் எங்கள் சபை திருநெல்வேலிக்குப் போய் எட்டு நாடகங்கள் அங்கே நடத்தியது. இவ்வூருக்குப் போனபோது, பாளையங்கோட்டை பாலத்தருகிலுள்ள எட்டையாபுரம் ராஜா அவர்களுடைய பங்களாவில் தங்கியிருந்தோம். இங்கிருந்து நாடகத் தினங்களிலெல்லாம் இரண்டு மைல் கடந்து திருநெல்வேலி - டவுனுக்கு வரவேண்டியிருந்தது. இருந்தும் எட்டையாபுரம் ஜமீன்தார் அவர்களுடைய சிறிய தகப்பனார் (பிறகு இவர் பட்டத்துக்கு வந்தார்), எங்களுடன் இருந்து எங்களுடைய சௌகர்யங்களை யெல்லாம் மிகவும் கவனித்து வந்தார். இவர், எங்கள் சபையின் நாடகங்களில் அவ்வளவு அபிமானமுடையவராயிருந்தார். எங்கள் சபையின் அங்கத்தினராகவும் சேர்ந்தார். நாங்கள் ஒத்திகை செய்யும் பொழுதெல்லாம் எங்களுடனேயேயிருப்பார். சாப்பிடுகிற வேளை தூங்குகிற வேளை தவிர, மற்றக் காலமெல்லாம் எங்களுடனேயே கழிப்பார். ‘மனோஹரன்’ நாடகக் கதையைப்பற்றி எந்நேரமும் நான் லஜ்ஜைப்படும்படி, என் முன்னிலையிலேயே அதிகமாகப் புகழ்ந்து பேசுவார்; அந்நாடகத்தில் அவருக்கு அவ்வளவு பிரீதி.
இவ்விடத்தில் முதல் மூன்று நாடகங்கள் செம்மையாக நடந்தன. கூட்டமும் அதிகமாக வந்தது. நான்காவது நாடகம் ‘லீலாவதி சுலோசனா’ வைத்துக்கொண்டோம். மறுநாள் நாடகம் என்றிருக்க, முந்திய தினம் நாங்கள் எல்லாம் சாப்பிட்டுவிட்டு வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்த பொழுது, திடீரென கோடைக் காலத்தில் இடி விழுந்தாற் போல், சென்னையிலிருந்து, எனது ஆருயிர் நண்பர் ரங்கவடி வேலுவுக்கு அவர் தங்கை மரணாவஸ்தையிலிருப்பதாகத் தந்தி வந்தது! இன்னது செய்வதென்று தோன்றாதவனாய்த் திகைத்துப் போனேன். ஆயினும் யாவும் அவன் பாரம் என்று, பரமேஸ்வரன் பேரில் பாரத்தைச் சுமத்தி என் மனத்தை ஒருவாறு தேற்றிக் கொண்டு, நாம் செய்ய வேண்டிய கடமையை முதலில் செய்வோம். பிறகு மற்ற விஷயங்களைப்பற்றி யோசிப்போம் என்று தீர்மானித்தவனாய், உடனே ரங்கவடிவேலுவைப் பிரயாணப்படுத்தி சென்னைக்கு அனுப்பிவிட்டு, எங்கள் பங்களாவிற்கு வந்து சேர்ந்து, எனது ஆக்டர்களையெல்லாம் வரவழைத்து, நாங்கள் இரண்டு பெயரும் ஆக்டு செய்யாவிட்டாலும், அதன் பொருட்டு நாடகம் நின்று விடலாகாதென்று சொல்லி, என் பாகத்தை டாக்டர் ஸ்ரீனிவாசராகவாச்சாரிக்குக் கொடுத்து, ரங்கவடிவேலுவின் பாகத்தை எம். ராமகிருஷ்ண ஐயருக்குக் கொடுத்து அவர்களைப் படிக்கச் செய்தேன். அவர்களும் தங்களாலியன்ற அளவு செய்வதாக ஒப்புக்கொண்டு, கஷ்டப்பட்டு தங்கள் பாடங்களைப் படித்து, மறுநாள் நடித்தார்கள். இதைப்பற்றி நான் சற்று விவரமாய் இங்கு எழுதியதற்கு அநேகம் காரணங்களுண்டு; முதலாவது, என் அனுபவத்தில் அநேக சபைகளில், ஒரு நாடகம் நடத்துவதாக விளம்பரம் செய்த பிறகு, “ஒரு ஆக்டர் வரவில்லை, அரை ஆக்டர் வரவில்லை” என்று போக்கைச் சொல்லி, நாடகத்தை நிறுத்தியிருக்கிறதைப் பார்த்திருக்கிறேன். அப்படிச் செய்தல் தவறு என்பது என் துணிபு. எந்த ஆக்டர் வர அசந்தர்ப்பப்பட்டாலும் ஒருமுறை தீர்மானித்தபின், அந்நாடகத்தை ஆடியே தீருவது ஒழுங்காகும். லீலாவதி சுலோசனா ஒரு பெரிய நாடகம்; அதில் ஸ்ரீதத்தன் வேடமும், சுலோசனையின் வேடமும் மிகவும் முக்கியமானவை என்பதை அந்நாடகத்தை வாசித்தவர்களும் படித்தவர்களும் நன்றாய் அறிவார்கள்; அப்படியிருக்க 24 மணி நேரத்திற்குள்ளாக, அவ்விரண்டு ஆக்டர்களைத் தயார் செய்யச் சாத்தியமானபோது, மற்ற நாடகங்களிலும் யாராவது ஆக்டர்கள் வராமற் போனால், மற்றவர்களைக் கொண்டு கண்டக்டர்கள் ஏன் நடத்தக் கூடாது? இரண்டாவது, எனது நண்பர்களாகிய ஸ்ரீனிவாச ராகவாச்சாரியும் எம். ராமகிருஷ்ண ஐயரும், அவ்வளவு குறுகிய காலத்தில் அவ்விரண்டு பாத்திரங்களையும் படித்து நடிக்கச் செய்ததற்கு முக்கியமான அநுகூலமாயிருந்தது, அவர்களிருவரும் - நானும் ரங்கவடிவேலும் அப்பாத்திரங்களைப் பன்முறை மேடையின்மீது நடித்த போதெல்லாம், அருகிலிருந்து எங்களை அவர்கள் கவனித்து வந்ததேயாம் என்பதற்குத் தடையில்லை. இவ்வாறு அவ்விருவர்களும் கவனித்து வந்ததன் பயனாகத் திடீரென்று அப்பாத்திரங்களை அவர்கள் நடிக்க வேண்டி வந்தபொழுது, தைரியமாய் அப்பாத்திரங்களை அவர்கள் எளிதிற் கற்று நடிக்கச் செய்தது. இதனால் இதை வாசிக்கும் - நாடக மேடையில் பெயர் பெறவேண்டும் என்று விரும்பும் எனது இளைய நண்பர்கள் அறிய வேண்டியதென்னவென்றால், மற்றவர்கள் நடிக்கும்பொழுது, நாம் அவர்களைக் கவனிப்பதனால் மிகவும் லாபமுண்டென்பதேயாம். மூன்றாவது, நாம் நடிப்பதற்கில்லையென்று அன்றைத்தினம் நாடகத்தை நான் எளிதில் நிறுத்தியிருக்கக்கூடும். எப்படியாவது நாடகம் தடைபடலாகாது என்று நான் வற்புறுத்தியிராவிட்டால், நாடகம் நடந்திராது வாஸ்தவமே. ஆயினும் அப்படி என் சுய நன்மையைப் பாராட்டி நான் நிறுத்தியிருந்தால் என்னவாயிருக்கும்? சபைக்குப் பெயர் நஷ்டமும் பண நஷ்டமும் உண்டாயிருக்கும். அன்றைத்தினம் ஆயிரம் ரூபாய்க்குமேல் வசூலானது வந்திராது; அன்றியும் அக்கம் பக்கத்திலிருந்து அநேக ஜனங்கள் வந்திருந்தவர்களெல்லாம், அன்று நாடகமில்லை யென்று அறிந்து திரும்பிப் போயிருப்பார்களானால், மற்றொரு நாள் நாடகம் என்று பிரசுரம் செய்தால், அன்றைத்தினம் போல் இன்றும் நிறுத்திவிடுகிறார்களோ என்னவோ என்று மனஞ்சலித்து வராமலிருந்தாலுமிருப்பார்கள்; எங்கள் சபையின் நற்பெயரும் கெட்டிருக்கும். சுகுண விலாச சபையார் ஒரு முறை நாடகம் என்று பிரசுரம் செய்தபின், என்ன இடையூறுகள் வந்தபோதிலும், என்ன மழை இடியாயிருந்தபோதிலும், எப்படியும் ஆடித்தான் தீர்ப்பார்கள் என்கிற பெயர் நிலைத்திராது. ஆகவே இவ்விஷயத்தை நாடகக் கம்பெனித் தலைவர்களும் நாடக சபை கண்டக்டர்களும் சற்றே கவனிப்பார்களாக.
அன்றையத் தினம் நாடக ஆரம்பத்திற்குமுன், வேஷம் தரிக்கும் இடத்தில் எந்நேரமும் எனக்கு ரங்கவடிவேலுவின் ஞாபகமே வந்துகொண்டிருந்தபடியால், ஜனங்கள் உட்காருமிடத்திற் போயிருந்தால், கொஞ்சம் இந்த வருத்தத்தை மறந்திருக்க முடியுமென்று எண்ணினவனாய் அங்குப் போனேன். வெளியிற் போனவுடன் எனக்கு மற்றொரு சங்கடம் நேர்ந்தது. அங்கு நாடகத்தைப் பார்க்க வருபவர்களுக்கெல்லாம், இவர் இன்று நாடகமாடவில்லையா என்று கேட்க ஆரம்பித்தனர். உலையிலிருந்து எரியில் வீழ்வது போல் இதென்ன பெருங் கஷ்டமாய் முடிந்ததென வெண்ணி, திரும்பி நாட மேடைக்குள்ளே போய்ச் சேர்ந்தேன். அன்றைத்தினம் அ. கிருஷ்ணசாமி ஐயர் லீலாவதியாக நன்றாய் நடித்த போதிலும், அநேகர் எனதுயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு சுலோசனையாக நடிக்க வில்லையே யென்று குறை கூறியதாகக் கேள்விப்பட்டேன். புதிதாய் நாடகப் பாத்திரங்கள் எடுத்துக்கொண்ட ஸ்ரீனிவாசராக வாச்சாரிக்கும், எம். ராமகிருஷ்ண ஐயருக்கும், அவர்கள் பாகத்தைச் புராம்ட் செய்வதில் கவனத்தைச் செலுத்தினவனாய், ரங்கவடிவேலு இல்லாத குறையை மறந்திருந்தேன். நாடகம் பூர்த்தியானவுடன், எப்படியாவது சபையின் பெயர் கெடாமல், மற்றவர்களைக் கொண்டு நாடகத்தைப் பூர்த்தி செய்து வைத்தோமேயென்று சந்தோஷப்பட்டேன். இருந்தபோதிலும் இதைத்தான் ஒருவாறு முடித்தோம், இன்னும் நடத்தவேண்டிய இரண்டு மூன்று நாடகங்களுக்கு ரங்கவடிவேலு இல்லாமல் என் செய்வது என்னும் திகில் என் மனத்தில் குடிகொண்டது.
மறுநாள் எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் எழுதிய “பீஷ்மர் ஜனனம்” என்னும் நாடகத்தை நடத்தினோம். இதில் ரங்கவடிவேலுவுக்குப் பாத்திரம் ஒன்றுமில்லாத படியால், கஷ்டமில்லாமற் போயிற்று. ஆயினும் இந்நாடகத்திற்கு ஜனங்களே வரவில்லை. முப்பது நாற்பது ரூபாய்தான் வசூலாயது! ரங்கவடிவேலு இல்லாத குறையின் அளவை அப்பொழுதுதான் எங்கள் சபையோரும் நானும் அறிந்தோம். இன்றைத்தினம் நாடக ஆரம்பத்தில், திருச்சிராப் பள்ளியில் காலவ ரிஷி நாடகமாடும் ஆக்டர்களெல்லாம் தளர்ந்த மனமுடையவர்களாய், நான் என்ன சொல்லியும் கேளாமல், ஒன்று பாதியாக நாடகத்தை ஆடி முடித்தனர். போதாக்குறைக்கு அன்று இரவு நெல்வேலியப்பர் கோயிலில் ஐந்தாம் நாள் ரிஷபவாகன உற்சவம்; கோயில் அதிகாரிகளில் சிலர் எங்களுக்குத் தெரிந்தவர்களாயிருந்த படியால் ஓரிடத்தில் சுவாமியை நிறுத்தி வைத்து, தரிசனத்திற்காக எங்களை யெல்லாம் வரும்படி சொல்லியனுப்பினர். இதைக் கேட்டவுடன் சாதாரணமாக மூன்றரை நான்கு மணி நேரம் பிடிக்கும் நாடகத்தை 2 மணி நேரத்திற்குள் முடித்துவிட்டார்கள்; எனக்கு நகைப்பையும் வருத்தத்தையும் உண்டு பண்ணின ஒரு சமாச்சாரத்தை இங்கெழுதுகிறேன். தாசராஜனுடைய மகளாகிய பரிமளகந்தியை சந்தனு மணக்கும் காட்சியானது, சாதாரணமாகக் குறைந்த பட்சம் பத்து நிமிஷமாகும். இதை தாசராஜனாக வேஷம் பூண்ட எம். துரைசாமி ஐயங்கார் ஒரு நிமிஷத்தில் முடித்துவிட்டார் ஓ! காட்சி ஆரம்பித்தவுடன், தாசராஜன் ஒரு சேவகனைப் பார்த்து, “அடே பூமாலையைக் கொண்டுவாடா” என்று கட்டளையிட்டு, அதை வாங்கித் தன் மகள் கையில் கொடுத்துச் சந்தனு கழுத்திற் போடச் செய்து, காட்சியை முடித்துவிட்டார்! படுதா இறங்கியவுடன் “இது, என்ன துரைசாமி, இப்படிச் செய்தாயே!” என்று கேட்க, “எல்லாம் இவ்வளவு போதும் வந்திருக்கும் ஜனங்களுக்கு” என்று பதில் கூறினார். அதைக் கேட்டபோது, எனக்கு நகைப்பு அதிகமாயிருந்ததோ துக்கம் அதிகமாயிருந்ததோ சொல்ல அசக்தனாயிருந்தேன்! உடனே ஆக்டர்களெல்லாம் வேஷங்களைக் களைந்துவிட்டு, மாட வீதிக்குப்போய் ஸ்வாமி தரிசனம் செய்தோம். அப்பொழுது என் வழக்கப்படி நெல்வேலியப்பரை ஸ்தோத்திரஞ் செய்துவிட்டு, முடிவில், “என் அப்பா, எங்கள் சபையின் பெயர் இவ்வாறு கெடாவண்ணம் கடாட்சித்தருள வேண்டும் எப்படியாவது” என்று பிரார்த்தித்தேன்.
மறுநாள் காலையில் நான் துயில் நீத்து எழுந்தவுடன் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு சென்னையிலிருந்து மறுபடியும் திருநெல்வேலிக்கு வருவதாகத் தந்தி வந்தது. இதற்கு முன்பாக ரங்கவடிவேலு இல்லாத்தால் நேர்ந்த கஷ்டங்களையெல்லாம் எடுத்து எழுதி என் தமயனார் ஆறுமுக முதலியாருக்கு, எப்படியாவது ரங்கவடிவேலுவின் சகோதரிக்குச் சஞ்சயனம் முடிந்ததும், மறுபடி திருநெல்வேலிக்கு வரும்படியாகப் பிரயத்தனம் செய்து பாருங்கள் என்று ஒரு நிருபம் அனுப்பியிருந்தேன். அதன்மீது அவர், தன் மாமனாராகிய திவான்பஹதூர் ராஜரத்தின முதலியார் மூலமாக, ரங்கவடிவேலுவின் நெருங்கின பந்துக்களுக்குச் சொல்லி, நடந்தது நடந்து விட்டது அதற்காக வருத்தப் பட்டுக்கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம்? ரங்கவடி வேலு போகாததால் ஒரு சபையின் காரியங் கெட்டுப்போய் விடலாகாது. இதில் தவறொன்மில்லை, சஞ்சயனம் ஆனவுடன் ரங்கவடிவேலு மறுபடி திருநெல்வேலிக்குப் போகலாம் என்று சொன்னாராம். அதன்மீது தனது பந்துக்களும் ஒப்புக்கொள்ள, ரங்கவடிவேலு மறுநாள் நெல்வேலிக்குப் போவதாகத் தந்தி கொடுத்தார்.
இங்ஙனம் நேர்ந்தது தெய்வாதீனம், தெய்வ கடாட்சம் என்று நினைக்கிறேன்; நெல்வேலியப்பர் என் பிரார்த்தனைக் கிணங்கி இவ்வாறு செய்தார் என்று நான் உறுதியாய் நம்புகிறேன். இதை வாசிக்கும் நண்பர்களில், யாராவது நாஸ்திகர்களாயிருந்தால் அவர்கள் இதைப்பற்றி “என்ன மூட புத்தியுடையவனாயிருக்கிறான் இவன்” என்று நகைக்கலாம். அப்படிச் செய்வார்களாயின், அவர்கள் மீது நான் குறை கூறமாட்டேன். ஆயினும், என் தீர்மானத்தை நான் விடமாட்டேன்! ஜகதீசனைக் குறித்துப் பிரார்த்திக்கும் விஷயத்தில், டெனிசன் என்னும் பெயர்பெற்ற ஆங்கிலக் கவி, இவ்வுலகமானது கனவிலும் கருதாத பல விஷயங்கள் பிரார்த்தனையினால் முடிவு பெறுகின்றன என்று எழுதியிருக்கிறார். அதை உறுதியாய் நம்புவோர்களில் நான் ஒருவன்.
ரங்கவடிவேலு திருநெல்வேலி வந்து சேருமுன் மற்றொரு நாடகம் நடத்தினோம். அதாவது ‘நற்குல தெய்வம்’ என்பதேயாம். இதற்கும் வரும்படி மிகவும் குறைவாகவிருந்தது. “ரங்கவடிவேலு இல்லாத குறைதானோ இப்படி ஜனங்கள் வராதது?” என்று சந்தேகித்த சிலருடைய சந்தேகமும் இந்த இரண்டாவது நாடகத்தினால் அறவே நீங்கியது.
எனதுயிர் நண்பர் வந்து சேர்ந்த பின், “வேதாள உலகம்” என்னும் நாடகத்தை வைத்துக் கொண்டோம். அதற்கு ஜனங்கள் அதிகமாய் வந்திருந்தனர். பண வசூலும் அதிகமாயிருந்தது; நாடகமும் நன்றாய் இருந்ததெனப் புகழ்ந்தனர். சிலர் இந்நாடகத்தை மறுபடியும் இவ்விடம் ஆடவேண்டுமென்றும் கேட்டனர். ஆயினும் இதைவிட “லீலாவதி-சுலோசனா” நாடகத்தில் ரங்கவடிவேலு சுலோசனையாக நடிப்பதைப் பார்க்க வேண்டுமென்று, அதிக நாடக அபிமானிகள் விரும்புகின்றனர் என்பதைக் கேட்டறிந்தவர்களாய், எங்கள் நிர்வாக சபைக் கமிட்டியார் அதையே மறு சனிக்கிழமை போட வேண்டுமென்று தீர்மானித்தனர். இதனிடையில், பதினொரு நாடகங்களுக்கு ஏழு நாடகங்கள் நடத்திய எங்கள் ஆக்டர்களுக்குச் சிரமபரிஹாரமாகவும், ரங்கவடிவேலு தன் துயரத்தைச் சற்று மறந்திருக்கக் கூடுமென்றும் யோசித்து எங்கள் சபை ஆக்டர்களை யெல்லாம், குற்றாலத்திற்கு அழைத்துக் கொண்டு போக ஏற்பாடு செய்தேன். அவ்வாறே திருக்குற்றாலம் சென்று, அங்கு நீர் விழும் அருவியில் எல்லோரும் பன்முறை ஸ்நானம் செய்து, கோயிலுக்குப் போய் ஸ்வாமி தரிசனம் செய்து, அங்கு மலைக்காட்சிகளை யெல்லாம் சுற்றிப்பார்த்து இரண்டு தினம் கழித்தோம். நாடக தினம் சாயங்காலம்தான் திருநெல்வேலி வந்து சேர்ந்தோம். அன்றிரவு, ஒரு வாரத்துக்கு முன் தான் ஆடிய நாடகமாயிருந்தபோதிலும், மறுபடியும் நாடகக் கொட்டகை நிரம்ப ஜனங்கள் வந்திருந்தனர்; சற்றேறக்குறைய 800 ரூபாய் வசூலாயது. வந்திருந்தவர்களெல்லாம் நாடகத்தை மிகவும் மெச்சினர்.
மறுநாள் திருநெல்வேலி வாசிகள் எங்கள் சபையாருக்கு ஒரு விருந்தளித்தனர். பிறகு சென்னபட்டணம் வந்து சேர்ந்தோம். இம்முறை திருநெல்வேலியில் நாடகமாடினதன் வரும்படியில் செலவுபோக நிகரம் ரூபாய் 673-3-7. எங்கள் கட்டட பண்டுக்குச் சேர்த்தோம். இதன்றி நாங்கள் இங்கு நாடகம் நடத்தியதன் பலனாக எங்கள் சபையைப் போன்ற ஒரு சபை இங்கும் சீக்கிரம் ஸ்தாபிக்கப்பட்டது. இதற்கு எங்கள் சபையின் பெயரை ஒட்டி சற்குண விலாச சபை என்றே பெயர் வைத்தனர். இதன் முக்கிய ஆக்டர் ஸ்ரீமான் சுப்பராயலு நாயுடுவின் விடாமுயற்சியினாலும் ஊக்கத்தினாலும், அச்சபை இன்றளவும் வளர்ந்தோங்கி வருகிறது; இச் சபையார் பெரும்பாலும் நான் எழுதிய நாடகங்களையே ஆடி வருகின்றனர்.
இவ்வருஷம் எங்கள் சபையானது மொத்தத்தில் 50 நாடகங்கள் ஆடியது; இதற்கு முந்தியும் இத்தனை நாடகங்கள் ஒரே வருஷத்தில் ஆடியதில்லை; இதற்குப் பிந்தி ஒரு வருஷந்தான் இந்த எண் மீறப்பட்டது. தமிழில் மாத்திரம் 31 நாடகங்கள் ஆடினோம். இதை வாசிக்கும் எமது சபை அங்கத்தினருட் சிலர், தற்காலம் இரண்டு மூன்று நாடகங்கள் கொடுப்பதே கஷ்டமாயிருக்கிறதே யென்று, கொஞ்சம் பொறாமை கொள்ளக்கூடும். டிசம்பர் மாத விடுமுறையில், எங்களுக்கு விக்டோரியா பப்ளிக் ஹால் மேல் மாடி கிடைக்காதபடியால், நாங்களிருக்கும் கீழ் ஹாலிலேயே, ஒரு அரங்கம் ஏற்படுத்தி, அதில் 10 நாடகங்கள் ஆடினோம். இந்தச் சிறிய அரங்கத்தில் முக்கோடி ஏகாதசியன்று “காதலர் கண்கள்” என்னும் நாடகத்தை நடத்தினோம். இதைப்பற்றிய சிறு கதையொன்றுண்டு. முக்கோடி ஏகாதசியன்று என்ன நாடகம் போடுவது என்று எங்கள் நிர்வாக சபையில் பேச்சு வந்தபொழுது, எனது நண்பர் சத்யமூர்த்தி ஐயர் அவர்கள் “எந்த நாடகமாவது சம்பந்தம் போடட்டும். சாரங்கதரா நாடகம் மாத்திரம் வேண்டாம்” என்று சொன்னார். “அப்படியே ஆகட்டும்” என்று தலையசைத்து, சாரங்கதர நாடகத்தைவிடச் சிருங்கார ரசமதிகமாயுள்ள “காதலர் கண்கள்” என்னும் நாடகத்தைப் போட்டேன்! அக்காலம் எனக்கு நாற்பத்திரண்டு வயதாகியும் பால்யக் குறும்பு என்னை முற்றிலும் விட்டகலவில்லை போலும்!
எங்கள் சபையின் அங்கத்தினரெல்லாம் வந்தாலே இடம் போதாத இச்சிறிய அரங்கசாலையில், எப்படி நமக்குப் பணம் வசூலாகும் என்று பலர் சந்தேகித்தனர்; ஆயினும், இங்கு நடத்திய நாடகங்களில் செலவுபோக ரூபாய் 500 கட்டிட பண்டுக்குச் சேர்த்தோம். நாடகங்கள் எங்கு ஆடினாலும் என்ன, ஜனங்களை ஆகர்ஷிக்கும் சக்தி ஆக்டர்களிடம் இருக்கையில், எங்கும் வந்து சேர்வார்கள்; பழுத்த பழங்கள் நிறைந்திருக்கும் மரத்திற்குப் பட்சிகள் தாமாகப் போய்ச் சேருகின்றன.
1916ஆம் வருஷம் எங்கள் சபையின் சரித்திரத்தில் ஒரு முக்கியமான வருஷமாம். ஏனெனில், இவ்வருஷம் சபை ஆரம்பித்து 25 வருஷங்கள் பூர்த்தியானபடியால், சபையின் “சில்வர் ஜூபிலி” கொண்டாட்டம் நடைபெற்றது. இக்கொண்டாட்டத்தை இந்தியன் ஆத்லடிக் அசோசியேஷன் மைதானத்தில் ஒரு பெருங்கொட்டகையில் நடத்தினோம். மாட்சிமை தங்கிய சென்னைக் கவர்னர் அக்கிராசனாதிபதியாக விஜயம் செய்தார். சென்னையிலுள்ள சீமான்களையும் சீமாட்டிகளையும் வரவழைத்தோம். சபையின் “முற்கால நிலை, தற்கால நிலை, பிற்கால நிலை” என்பதைப் பற்றி ஒரு வியாசம் எழுதி, அதை நான் வாசித்தேன். பிறகு, தெலுங்கு இங்கிலீஷ் தமிழ் நாடகங்களில், சில காட்சிகளை ஆடினோம்.
இவ்வருஷம் எங்கள் சபையின் பிரசிடெண்டாகவிருந்த டி.வி. சேஷகிரி ஐயர் அவர்கள் ஐகோர்ட்டு ஜட்ஜாக நியமிக்கப்பட்டபடியால் அவருக்குச் சபையில் ஒரு விருந்தளித்தோம். அவர் அதற்காக சபையோருக்கு வந்தனம் அளித்த பொழுது கூறிய ஒரு வேடிக்கையான சமாச்சாரத்தை இங்கெடுத்தெழுத விரும்புகிறேன். “யாருக்காவது ஹைகோர்ட்டு ஜட்ஜாக வேண்டுமென்று விருப்பமிருந்தால், அவர்களை சுகுண விலாச சபையைச் சேரும்படி நான் கேட்பேன். காலஞ்சென்ற பி. கிருஷ்ணசாமி ஐயர் சபையின் அங்கத்தினரானார்; உடனே ஹைகோர்ட்டு ஜட்ஜானார். பிறகு பி.ஆர். சுந்தர ஐயர், சபையைச் சேர்ந்தார்; உடனே ஹைகோர்ட் ஜட்ஜானார். குமாரசாமி சாஸ்திரியாரும் கே. ஸ்ரீனிவாச ஐயங்காரும் அப்படியே! அவருக்குப் பிறகு நான் வந்தேன்; எனக்கும் இப்பதவி கிடைத்தது! ஆகவே உங்களுள் யாருக்காவது உயர்ந்த உத்யோகம் வேண்டுமென்றால், சுகுண விலாச சபையைச் சேருங்கள்!” என்று வேடிக்கையாய்க் கூறினார். அவர் கூறியது ஒருவிதத்தில் உண்மையே; பிறகு ஹைகோர்ட்டு ஜட்ஜுகளாகிய, கனம் சி.கிருஷ்ணன், வெங்கடசுப்பராவ், ராமேசம், மாசிலாமணிப் பிள்ளை முதலியோரும் ஒருக்கால் சுகுணவிலாச சபையின் அங்கத்தினராயிருந்தவர்களே!
இவ்வருஷம் மாட்சிமை தங்கிய சக்கரவர்த்தியின் பிறப்பு நாள் கொண்டாட்டத்தில், கௌரவப் பட்டம் அளிக்கும்பொழுது, எனக்கு ராவ் சாஹிப் என்கிற பட்டம் கொடுக்கப்பட்டது. இது போன்ற பட்டங்களைப் பெற அநேகர் பெரும் பிரயத்தனப்படுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆயினும் நான் இதன்பொருட்டு ஒரு பிரயத்தனமும் எடுத்துக் கொள்ளவில்லையென்பதை நம்பும்படி என் நண்பர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். கெஜட்டில் இந்த விளம்பரம் வந்தபொழுது நான் கொழும்பில் நாடகமாடிக் கொண்டிருந்தேன். இதில் எனக்கு அதிகத் திருப்தியைத் தந்தது என்னவெனில், எனது பந்துக்களுக்கும் நண்பர்களுக்கும் இது சந்தோஷத்தைத் தந்ததேயாம். அன்றியும் இதை எங்கள் சபைக்குச் செய்த ஒரு கௌரவமாகக் கொண்டேன். எனக்கு இப்பட்டம் கொடுத்தைப்பற்றி, மதராஸ் டைம்ஸ் என்னும் அக்காலம் பிரசுரிக்கப்பட்டுவந்த தினசரிப் பத்திரிகையில் அதன் பத்திராதிபராகிய கிளின்பார்லோ என்பவர், நான் தமிழ் நாடகத்திற்காக எடுத்துக்கொண்ட சிரமத்தைப்பற்றி ஏதோ (நான் எண்ணுகிறபடி அதிகமாய்) புகழ்ந்து பேசி, எனக்குப் பட்டம் கொடுத்தது, தமிழ் நாடகத்திற்கே ஒரு கௌரவமாகும் என்று கூறி, கடைசியில் “தற்காலம் இங்கிலாந்தில் வருஷா வருஷம் கௌரவப் பட்டங்கள் கொடுக்கும்பொழுதெல்லாம், சிறந்த நாடகமாடுபவர்களுக்கும், ‘சர்’ என்கிற பட்டம் கொடுப்பது வழக்கமாயிருக்கிறது. இந்தியா தேசத்திலும் இவ்வாறு வழக்கம் ஆரம்பித்தது சிலாகிக்கக்தக்கதே” என்று எழுதியுள்ளார். அவர் ஆங்கிலத்தில் எழுதியதை நான் தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். இவர் மாத்திரமன்று; இதைப் பற்றி எழுதிய ஒவ்வொரு பத்திராதிபரும் நான் சுகுண விலாச சபைக்காக உழைத்ததைப்பற்றிப் புகழ்ந்தெழுதினார்கள். இப்பட்டத்தின் சன்னதை எனக்குச் சென்னைக் கலெக்டர் அவர்கள் தர்பாரில் கொடுத்தபொழுது, சுகுண விலாச சபைக்காகவும் தமிழ் நாடகத்திற்காகவும் நான் உழைத்ததைப்பற்றி எடுத்துப் பேசியதுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. எனக்குத் தெரிந்தவரை இந்தியாவில் நாடக சம்பந்தமாக ஒருவருக்குப் பட்டப் பெயர் கொடுத்தது இதுதான் முதன்முறை என்று எண்ணுகிறேன்.
இவ்வருஷம் சபையின் 25ஆம் ஆண்டு நிறைவேறிய கொண்டாட்டத்திற்கேற்றபடி 52 நாடகங்கள் ஆடினோம். இதில் இரண்டு நாடகங்கள், எங்கள் சபைக்காகப் பல வருஷங்களாக உழைத்து வந்த அ. கிருஷ்ணசாமி ஐயர் உதவிக்காக ஆடி, அவற்றின் வரும்படியாகிய ரூபா 863-12-0 அவருக்குக் கொடுத்தோம். மேற்கண்ட 52 நாடகங்களுள், 22 வெளியூர்களில் ஆடப்பட்டன. அவற்றைப் பற்றி சற்று விவரமாய் எழுத வேண்டியவனாயிருக்கிறேன்.
ஈஸ்டர் விடுமுறையாகிய ஆறு நாட்களில் நெல்லூருக்குப் போனோம். தெலுங்கு கண்டக்டராகிய டி. வெங்கடரமண ஐயர் சபையின் தெலுங்குப் பிரிவு இவ்வருஷம் தெலுங்குப் பிரதேசமாகிய நெல்லூருக்கும் போக வேண்டுமென்று ஏற்பாடு செய்தார். நான் ஒருவேளை இதற்கு ஏதாவது ஆட்சேபணை செய்வேன் என்று நினைத்தாரோ என்னவோ; அவர் என்னை இதைப்பற்றிக் கேட்டபொழுது, சுகமாய்ப் போய் வாருங்கள் என்று விடை கொடுத்தேன். அதன் பேரில் நெல்லூரில் நான்கு நாடகங்கள் கொடுக்க வேண்டுமென்று சபையில் தீர்மானிக்கப்பட்டது. அதன்மீது நெல்லூர்வாசிகளுக்குச் சபை அங்கு வருவதைப்பற்றி எழுதிய பொழுது அவர்களில் அநேகர் ரங்கவடிவேலுவையும் என்னையும் பார்க்க வேண்டுமென்று விருப்பமிருப்பதாகவும், அதன் பொருட்டுத் தமிழ் நாடகம் ஒன்றும் அங்கு ஆடவேண்டுமென்றும் தெரிவித்தார்கள். அப்படிப்பட்ட காகிதங்கள் சிலவற்றை நான் நேரில் பார்த்தேன். எங்கள் நிர்வாக சபையார், இதை யோசித்து, தமிழ் நாடகமொன்றும் இருக்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள். ஆகவே முடிவில், நான்கு தெலுங்கு நாடகங்களும், ஒரு தமிழ் நாடகமும் ஆடவேண்டுமென்று நிச்சயிக்கப்பட்டது. எனக்கு மாத்திரம் ஆரம்பமுதல் இப்பிரயாணத்தினால் சபைக்கு நஷ்டம் நேரிடுமென்றே தோன்றியது. ஆயினும் அதை வெளியிடுவேனாயின், சபையின் தெலுங்குப் பிரிவின்மீது ஏதோ விருப்பமில்லாதபடியால் இவன் இப்படிச் சொல்கிறான் என்று நினைக்கிறார்களோ என்று, சும்மா... இருந்துவிட்டேன். நெல்லூருக்குப் போவதைப் பற்றிச் சபையில் முதலில் பேச்சு வந்தபொழுதே, எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு “நாமும் போய் ஒரு தமிழ் நாடகமாடலாமே” என்று கேட்டார். அதற்கு நான் “நாமாக இதில் தலை நுழைத் துக்கொள்வது அழகல்ல. அன்றியும், இப்பிரயாணத்தினால் சபைக்கு நஷ்டம் வரும் என்று எனக்குள் ஏதோ சொல்கிறது. வேண்டாம், இதைப்பற்றிப் பிரஸ்தாபம்கூடச் செய்யாதே” என்று தடுத்தேன். அதன்பேரில் அவரும் சும்மா இருந்துவிட்டார். பிறகு அகஸ்மாத்தாக மேற்சொன்னபடி ஒரு தமிழ் நாடகமும் போட வேண்டுமென்று தீர்மானிக்கப் பட்டபொழுது, என்னுயிர் நண்பருக்கு மிகவும் சந்தோஷம்; எனக்கு மாத்திரம், இதனால் தெலுங்குப் பிரிவினர்க்கு மனஸ்தாபம் உண்டாகி எப்படி முடியுமோ என்று நிம்மதி இல்லாமலிருந்தது.
நெல்லூரில், எங்கள் சபை பிரசிடென்ட் சேஷகிரி ஐயர் அவர்கள் தமயனார் பங்களாவில் தங்கினோம். அவ்வூரில் லட்சுமிநரசா ரெட்டியார் டவுன் ஹாலில் நாடகங்கள் நடத்தினோம். முதல் நாடகம் “வரூதினி” என்பது. இது எனது நண்பர் ராமமூர்த்தி பந்துலுவால் தெலுங்கில் எழுதப்பட்டது; மனு சரித்திரக் கதையிலிருந்து எடுக்கப்பட்டது. சென்னையில் எங்கள் சபையார் இதைப் பன்முறை ஆடியிருக்கின்றனர்.
சென்னையில் இதை ஆடும்பொழுதெல்லாம் நல்ல வசூலாவது வழக்கம். இதில் எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் மிகவும் நன்றாக வரூதினியாக நடிப்பார். கதாநாயகனாக நாடகாசிரியனாகிய ராமமூர்த்தி பந்துலு நடிப்பது வழக்கம்; அவர் மதுரைக்குப் போய் விட்டபடியால், அவருக்குப் பதிலாக எனது நண்பர் டாக்டர் டி. ஸ்ரீனிவாச ராகவாச்சாரியார் நெல்லூரில் நடித்தார். இது நெல்லூர் வாசிகளுக்குப் பிடிக்கவில்லை போலும். முதலில் நாடகம் பார்க்க வந்த ஜனங்கள் மிகவும் குறைவாயிருந்தது; இரண்டாவது வந்தவர்களில் அநேகர் என்னிடம் நன்றாயில்லை யென்று தெரிவித்தார்கள். இதற்குக் காரணம் என்னவென்று நான் விசாரித்ததில், ஸ்ரீனிவாச ராகவாச்சாரி ஆக்டு செய்வது நன்றாயிருந்த போதிலும், அவரது தெலுங்கு உச்சரிப்பு சரியாக இல்லை என்று பலர் கூறினர். என்னிடம் இவர்கள் கூறுவது வாஸ்தவம் என்று நான் ஒருவிதத்தில் ஒப்புக் கொள்ளவேண்டியவனாயிருந்தேன். சென்னையிலும் தெலுங்கு நாடகங்களில், தமிழர்கள் ஏதாவது பாத்திரங்களை எடுத்துக்கொண்டு நடிக்கும்போதெல்லாம். அவர்கள் ஆக்டு செய்வது எவ்வளவு நன்றாயிருந்தபோதிலும், தெலுங்கு பாஷை பேசுவது சரியாயில்லை என்று தெலுங்கு அபிமானிகள் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.
இவ்வூரில் இரண்டாவது நாடகமாக தெலுங்கில் “நந்தனார்” ஆடப்பட்டது. இதற்காக வேண்டி எம். துரைசாமி ஐயங்காரை, வேதியர் வேஷத்திற்காக வரவழைத்தோம். தெலுங்கில் “நந்தனார்” சென்னையில் ஆடும் பொழுதெல்லாம், ஜனக்கூட்டம் அதிகமாய் வருவது வழக்கம். ஆகவே இங்கும் அப்படி இருக்குமென எண்ணி தெலுங்கு கண்டக்டராகிய வெங்கட்ரமண ஐயர், இதைத் தேர்ந்தெடுத்தார். இங்கு நாடகமாடிய பொழுது எனக்கு ஞாபகமிருக்கிறபடி சுமார் 50 ரூபாய்தான் வசூலாயது! இதைக் கண்ட துரைசாமி ஐயங்கார் தான் பட்டணத்திலிருந்து வந்துபோகக் கொடுத்த ரெயில் சார்ஜுகூட ஆகாது போலிருக்கிறதே என்று துக்கப்பட்டார். அன்று டிக்கட்டுகள் வாங்க வந்த ஒரு தெலுங்கு மனிதர், நாடக விளம்பரத்தை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு அதில் “நந்தனார் சரித்திரமு” என்று அச்சிட்டிருப்பதைக் கண்டு “நந்தனார் ஏமிரா? நந்தனார்!” என்று நான் கேட்கும் படியாகக் கூறினார். பிறகு நான் விசாரித்ததில் சுத்த தெலுங்கில் நந்துடு என்று இருக்க வேண்டும் என்றும், நந்தனார் என்பது தமிழுக்குரிய தொடர் என்றும் சொன்னார்கள். ஆந்திர தேசத்தில் தங்கள் தேச பாஷையின்மீது அவ்வளவு அபிமானமுண்டு அத் தேசத்தாருக்கு; இது நான் தவறு என்று சொல்லமாட்டேன்.
இவ்விடம் மூன்றாவது நாடகம் “விஜயநகர ராஜ்யத்தின் அழிவு” என்பதை வைத்துக் கொண்டார் எங்கள் தெலுங்கு கண்டக்டர். இது கோலாசலம் ஸ்ரீனிவாசராவ் என்பவரால் எழுதப்பட்ட ஒரு மிகச் சிறந்த நாடகம். எனது நண்பர் பல்லாரி ராகவாச்சார்லு இதில் “பதான் ருஷ்தம்” என்னும் வேடம் தரிக்கும் போதெல்லாம், சென்னையில் தெலுங்கர்கள் ஒருவர் பாக்கியில்லாமல் வந்து பார்ப்பார்கள். தற்காலம் ஆந்திர நாடகங்கள் ஆடுவதில் இவரைவிடக் கீர்த்தி பெற்றவர்கள் இல்லை என்னும்படி அவ்வளவு பிரசித்தி வாய்ந்தவர். இவருக்கு இணையான தெலுங்கு ஆக்டரை நான் கண்டதேயில்லை. இனி என் ஆயுளில் காணப்போகிறதுமில்லையென்றே நினைக்கிறேன். எந்த வேஷம் தரித்தாலும், அந்தப் பாத்திரத்திற்கேற்றபடி சரியாக வேஷம் பூண்டு, அதை இப்படி நடிக்க வேண்டுமென்று முன்னதாகவே தீர்க்காலோசனை செய்து, மிகவும் விமரிசையாக நடிப்பார். இவர் ஆடும் அநேக நாடகங்களில் இந்த ருஷ்தம் என்னும் பாத்திரமானது ஒரு மிகச் சிறந்ததென்பது என்னுடைய கொள்கை மாத்திரமல்ல, எல்லாத் தெலுங்கர்களுடைய கொள்கையுமாம். அன்றியும் இவர் தெலுங்கு நாட்டில் பிறந்து வளர்ந்து, “ஆந்திர நாடகப் பிதாமகன்” என்னும் பட்டப் பெயர் பெற்ற காலஞ்சென்ற கிருஷ்ணமாச்சாரியார் அவர்களுடைய நெருங்கிய பந்து. இப்படிப்பட்டவர் வந்து தெலுங்கர்கள் அதிகமாக வருவார்கள் என்று எங்கள் கண்டக்டர் நம்பியிருந்தார். இந்த நாடகத்திற்கும் முதல் தெலுங்கு நாகடத்தைவிடக் குறைவாக ஜனங்கள் வந்தார்கள்! ஜனங்கள் வராமற் போனாற் போகிறது; நாடகமாடியது நன்றாயிருந்ததென ஒருவனாவது சொல்ல வேண்டுமே! அதுவும் இல்லை. நாடக ஆரம்ப முதல் கடைசிவரை ஒரு கரகோஷமாவது கிடையாது! பாதி நாடகம் ஆடினபிறகு, எனது நண்பர் ராகவாச்சார்லு உள்ளே வேஷம் தரிக்கும் அறையில் நானிருக்குமிடம் வந்து ஆங்கிலத்தில் “சம்பந்தம், இனி இந்த ஊரில் நான் நாடகமே ஆடமாட்டேன்! ஒரு ரசிகனாவது கிடையாதா? எல்லாம் முண்டங்களாயிருக் கின்றனரே! இதற்காக என்னைப் பல்லாரியிலிருந்து ஏன் வரவழைத்தீர்கள்?” என்று கோபத்துடனும் வருத்தத்துடனும் கூறினார். பிறகு நான் அவரைச் சமாதனப்படுத்தி, “அவர்கள் சந்தோஷிக்காமற் போனாற் போகிறது; நாங்கள் எல்லாம் பார்த்து சந்தோஷிக்கிறோம், நீ வா” என்று சொல்லி அவரை மிகுதி பாகத்தையும் ஆக்டு செய்யும்படி செய்தேன். பிறகு, ஸ்ரீனிவாச ராகவாச்சாரி, துரைசாமி ஐயங்கார் முதலியோர்க்குத்தான், இவர்கள் தமிழர்கள் - தெலுங்கு சரியாக உச்சரிக்க முடியவில்லை என்று கூறினார்கள். ராகவாச்சார்லு தெலுங்கராயிற்றே, இவரிடம் என்ன குறை என்று விசாரித்ததன் பேரில் இன்னொரு விஷயம் வெளியாயிற்று. இவ்வூரில் இதற்கு முன்பாகவே ஒரு தெலுங்கு நாடக சபையிருந்ததாம். அதன் அங்கத்தினரில் சிலர், எங்கள் சபையின் தெலுங்கு நாடகங்களுக்கு அவ்வூரார் யாரும் போகக்கூடாது என்று கட்டுப்பாடு செய்ததாகக் கேள்விப்பட்டேன். “அரச மரத்தைப் பிடித்த சனி, அதன் கீழிருந்த பிள்ளையாரையும் பிடித்தது" என்பதற்கிலக்காக, எங்கள் சபை தெலுங்குப் பிரிவைப் பிடித்த சனி, ராகவாச்சார்லுவையும் பிடித்தது.
நான்காவது நாடகம் ‘புத்திமதி’ என்பதை வைத்துக் கொண்டோம். இது சிறுத்தொண்டர் கதையைப் போன்றதாம்; இந்நாடகமானது சாயங்காலத்தில் ஆடப்பட்டது. “நல்ல நாளிலேயே நாழிப்பால், கன்று செத்தால்?"என்னும் பழமொழிக்கிணங்க, இரவு நாடகத்திற்கே ஜனக்கூட்டம் வரவில்லையென்றால், சாயங்கால நாடகத்திற்கு என்ன வரப்போகிறது?
இவ்விடம் நாங்கள் கடைசியாக ஆடிய நாடகம் “லீலாவதிசுலோசனா” எனும் எனது தமிழ் நாடகம். தெலுங்கு நாடகங்களின் கதியே இப்படியிருந்ததே, தமிழ் நாடகத்திற்கு யார் வரப் போகிறார்களென்று நான் வாஸ்தவமாய்ப் பயந்திருந்தேன். ஆயினும் இந்நாடகத்திற்கு ஏராளமான ஜனங்கள் வந்திருந்தனர். அன்றியும் ஆரம்பமுதல் கடைசி வரை நாடகம் நன்றாயிருக்கிறதெனப் புகழ்ந்தனர்! தெலுங்கு நாடகங்கள் எல்லாவற்றையும் விட, இந்தத் தெலுங்கு தேசத்தில் தமிழ் நாடகத்திற்கு வசூல் அதிகமாக வந்தது! நெல்லூரில் ஒரு தமிழ் நாடகமாடலாமா என்கிற கேள்வி, எங்கள் நிர்வாக சபை முன்பாக வந்தபொழுது, தெலுங்கு அங்கத்தினர் அதற்கு ஆட்சேபணை செய்தனர். அப்படி ஆட்சேபணை செய்தவர்களுக்குப் புத்திமதியாக எல்லாம் வல்ல இறைவன் இவ்வாறு செய்து வைத்தார்போலும்!
இங்கு, நெல்லூர் புரொக்ரெசிவ் யூனியன் என்னும் சபையார், எங்கள் சபைக்கு ஒரு விருந்தளித்தனர். மறுநாள் புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தோம். இந்த நெல்லூர்ப் பிரயாணத்தில், எங்கள் சபைக்குண்டான நஷ்டம் ரூபாய் 535-1-3. இதன் பிறகு எங்கள் சபையின் தெலுங்குப் பிரிவினர், எந்த ஊருக்கும் தாங்களாகப் போக வேண்டுமென்று பிரயத்தனப்படவில்லை. எங்கள் சபை நெல்லூர்ப் பிரயாணம் போய் வந்ததில், நான் அறிந்து கொண்ட இரண்டு புத்திமதிகள் என்னவென்றால்; ஒன்று, எந்த நாடகத்தையாவது ஆட வேண்டுமென்றால், கூடுமானவரையில் நாடக மெழுதப்பட்டுள்ள பாஷையையே தாய் பாஷையாக உடையவர்களைக் கொண்டே அதை நடத்த வேண்டுமென்பது; இரண்டாவது, ஏதாவது ஒரு விஷயம் ஒருவரால் பிரேரேபிக்கப்பட்டால், அதற்கு நியாயமின்றி, பொறாமையினால் ஏதாவது நாம் ஆட்சேபணை செய்தால், அதன் பலனை நாம் அனுபவிக்க வேண்டுமென்பதாம்.
பிறகு இவ்வருஷம் கோடைக்கால விடுமுறையில் மறுபடியும் இலங்கைக்குப் போகவேண்டுமென்று தீர்மானித்தோம். இரண்டாம் முறை இலங்கைக்கு நாங்கள் போய்த்திரும்பும் பொழுது, அங்குள்ள எமது நண்பர்கள் மறுமுறை எப்பொழுது இங்கு வருவீர்கள் என்று கேட்டதற்கு இரண்டு வருஷம் கழித்து வருகிறோம் என்று சொல்லியிருந்தோம். அதன்படியே அங்கு போகத் தீர்மானித்து, வாரிக் மேஜர் என்பவருக்கு, முன் மாதிரியே அவர் ஏற்பாடுகளை யெல்லாம் ஒப்புக்கொள்ள முடியுமா என்று எழுத, அவர் “அப்படியே ஆகட்டும். மிகவும் சந்தோஷம்” என்று ஒப்புக்கொண்டு தந்தி கொடுத்தார். அதன்பேரில் மனத்தில் ஒரு கவலையுமில்லாமல் ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தோம். இம்முறை இலங்கைக்குப் போகும் வழியில் மதுரையில் தங்கி, அங்கு நான்கு நாடகங்கள் ஆட வேண்டுமென்று முதலில் தீர்மானித்தோம். ஏதோ சில காரணங்களால் யாழ்ப்பாணம் போக முடியாமற் போயிற்று. அதற்குப் பதிலாகத் திரும்பி வரும்பொழுது கும்பகோணத்தில் சில நாடகங்கள் ஆடினோம். இதுதான் எங்கள் சபை எடுத்துக் கொண்ட வெளியூர்ப் பிரயாணங்களில் மிகவும் நீடித்தது. சென்னையிலிருந்து புறப்பட்டுத் திரும்பி வர சுமார் 45 நாட்கள் பிடித்தன. இப்பிரயாணத்தில் மொத்தத்தில் 17 நாடகங்கள் ஆடினோம். தற்காலத்தில் வெளியூருக்குப் போய் இரண்டொரு நாடகங்கள் ஆடுவதென்றால் பிரமாதமென்று நினைக்கும் எனது இளைய நண்பர்கள் இதைக் கொஞ்சம் கவனிப்பார்களாக. உற்சாகமிருந்தால் எதையும் முடித்து வைக்கும் என்பது என் கருத்து.
மதுரையில் ஆடிய நான்கு நாடகங்களுக்கும் ஜனங்கள் ஏராளமாய் வந்திருந்தனர். நான்காவது நாடகத்தின் முடிவில், ஹானரபில் கே. ராம ஐயங்கார், மதுரைவாசிகள் சார்பாக அவ்விடம் நாடகங்களாடினதற்காகச் சபையைப் புகழ்ந்து வந்தனம் அளித்தனர். எனது நண்பர்கள் கே. வைகுண்டம் ஐயரும், பி. ராமமூர்த்தி பந்துலுவும் சபையோருக்கு விருந்து அளித்தனர். எட்டையபுர ஜமீன்தார் அவர்கள் தன்னுடைய பெரிய வீடு ஒன்றை நாங்கள் தங்கியிருப்பதற்காகக் கொடுத்தார். இவ்விடத்தில் நாடகங்கள் ஆடினதில் எனக்கு இரண்டு மூன்று சமாச்சாரங்கள்தான் நன்றாய் ஞாபகமிருக்கின்றன. கடைசி நாடகமாகிய லீலாவதி - சுலோசனா நடத்திய தினம் மறுநாள், மதுரையை விட்டுப் போக வேண்டியிருக்குமே, ஆகவே, இன்று போய் மீனாட்சி சுந்தரேஸ்வராளைத் தரிசித்து விடைபெற்றுப் போக வேண்டுமென்று யோசனை பிறந்தது. இதன்பேரில் சாயங்காலம் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு, நாடகக் கொட்டகைக்கு ஆக்டர்களெல்லாம் புறப்பட, நான் மாத்திரம், ‘நீங்கள் போங்கள் நான் கோயிலுக்குப் போய் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு, கோயிலுக்குப் போனேன். கோயிலில் தரிசனம் செய்து கொண்டு திரும்புவதற்குள் கொஞ்சம் இருண்டுவிட்டது. அதன் பேரில், கொட்டகைக்குப் போக வழி தெரியாதவனாய், ஏறக்குறைய ஒரு மணி நேரம் தெருத் தெருவாய் சுற்றிக்கொண்டிருந்தேன்! எந்தெந்தத் தெருக்களில் அலைந்தேனோ மீனாட்சிக்குத்தான் தெரியும்! நாழியாய் விட்டதே, நம்மைக் காணோமென்று கொட்டகையில் தேடுவார்களே, காலம் பொறுத்துச் சென்றால் வேஷம் தரிக்க நாழிகையாகுமே, என்ன செய்வது என்று மிகக் கலங்கினேன். சென்னையில் நான் பிறந்து வளர்ந்து இத்தனை வருஷம் பழகிய போதிலும், இன்றைக்கும் சில தெருக்கள் தவிர மற்றத் தெருக்களில் கொண்டு போய்விட்டால், இராக்காலத்தில் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு, ஏதாவது தெரிந்த தெரு வருகிற வரையில் போய், பிறகு தான் வீட்டுக்குப் போக முடியும்! இதை நான் ஒரு பெருமையாகச் சொல்லவில்லை; இது பெரும் தப்பிதம்; இது நான் வெட்கப்படவேண்டிய விஷயமேயொழிய வேறன்று; சென்னையிலே இப்படியிருக்க, புது ஊராகிய மதுரையில் நான் வழி அறிவது அசாத்தியமாயிருந்தது. புது ஊரில், நாடகக் கொட்டகைக்கு வழியெப்படியென்று கேட்பதென்றால் மிகவும் வெட்கமாயிருந்தது. எங்கு சுற்றி வந்தாலும் கோயிலுக்குக் கொண்டு போய் விட்டது! இதென்னடா கஷ்டம் என்று நான் கலங்கிக் கொண்டிருக்கையில், தெய்வா தீனத்தால், யாரோ ஒரு பெரிய மனிதர் (அவர் இன்னாரென்று எனக்கு இன்றளவும் தெரியாது) ஒரு மோட்டார் வண்டியில் வந்து, என்னைப் பார்த்து அதை நிறுத்தி, “எங்கே நடந்து போகிறீர்கள்?” என்று கேட்டார். அதன் பேரில், எனது வெட்கத்தையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி, அவரிடம் நாடகக் கொட்டகைக்குப் போக வழி தெரியாது தடுமாறிக் கொண்டிருக்கிறேன் என்று உண்மையை உரைத்தேன். அதன் பேரில் அவர் நகைத்து, ‘வாருங்கள் என்னுடன்’ என்று சொல்லி, என்னைத் தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு என்னை நாங்கள் நாடகமாடிய மீனாட்சி நாடக சாலைக்குக் கொண்டுபோய்விட்டார். போகிறவழியில், என்னுடன் அவர் பேசிய வார்த்தைகளால், அவர் என்னை நாடகமாடும் பொழுது, ஒவ்வொரு தினமும் மேடையின்மீது பார்த்தவர் என்பதை அறிந்தேன். அவர் என்னை நன்றாயறிந்தவராய்த் தோன்றியபோது, ‘நீங்கள் யார்?’ என்று அவரை நான் கேட்க வெட்கப்பட்டேன். நாடக சாலையண்டை நான் இறங்குவதன்முன் அவருக்கு நான் அவர் செய்த உதவிக்காக வந்தனம் அளிக்க, இதை ஒரு பொருட்டாக வந்தனம் அளிக்க வேண்டுமா என்று சிரித்துவிட்டு, இராத்திரி உங்களை மேடையின்பேரில் காண்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார். மறுபடி நான் மதுரைக்குப் பன்முறை போனபோதிலும், அவரை என் துர்அதிர்ஷ்டத்தால் மறுபடி சந்திக்க நேரிடாமலிருக்கிறது.
இவ்விடத்தில் இரண்டாவது நினைவு என்னவென்றால், “லீலாவதி-சுலோசனா” நாடகத்தில் நான் ஸ்ரீதத்தனாகக் “கைவளை” காட்சியின் ஆரம்பத்தில் நடித்துக் கொண்டு வரும்பொழுது, ஸ்ரீதத்தன் தகப்பனார் அவனை மணம் செய்து கொள்ளும்படியாகச் சொல்லும் பொழுது, மூர்ச்சையாக வேண்டியிருக்கிறது; இக்காட்சியை எனது நண்பர் ஸ்ரீநிவாசராகவாச்சாரியுடன் பன்முறை ஆடியிருக்கிறேன்; நான் மூர்ச்சையாகும் போதெல்லாம் என் பக்கலில் பின்னால் நின்று கொண்டிருந்து, தன் கரங்களில் என்னைத் தாங்கிக் கொள்வார்; அன்றைத்தினமும் அவர் பின்னால் இருக்கிறாரென நினைத்து மூர்ச்சையானதுபோல் நடிக்க, அவர் ஏதோ காரணத்தினால் வேறொரு இடத்தில் நின்று கொண்டு ஏதோ வேறு கவனமாய் இருக்க, ‘படால்’ என்று கீழே விழுந்தேன். விழுந்த வேகத்தில் காலிலும் தோளிலும் இரண்டு இடங்களில் நன்றாய் காயம்பட்டு, ரத்தம் பெருக ஆரம்பித்தது. நான் எனது சந்யாசிச் சட்டையின் கீழாகப் பனியனும், காலுக்கு சாக்ஸும் போட்டுக் கொண்டிருந்தபடியால், ரத்தம் பெருகியது அவ்வளவாக வெளியில் தெரியவில்லை. நான் விழுந்தபொழுது, அங்கு மேடையின் பேரில் வைத்திருந்த தோட்டச் சட்டம் ஒன்றில், என் தலை படாமல், ஒரு மயிரிழை தவறியது. உடம்பில் பட்ட காயம் தலையில் பட்டிருந்தால் பெரும் ஆபத்தாய் முடிந்திருக்குமென்று எண்ணுகிறேன். இந்த ஆபத்தினின்றும் மீனாட்சி சுந்தரேஸ்வராள் காப்பாற்றினார்கள் என்னை, என்று சந்தோஷப்பட்டேன். உடனே எனது நண்பர் ஓடிவந்து தான் செய்த தப்பிதத்தை அறிந்தவராய், என்னைக் கை கொடுத்துத் தூக்கும் பொழுது, ‘வாத்தியார் என்னை மன்னிக்க வேண்டும்’ என்று வேண்டினார் மெல்லிய குரலுடன். நானும் அதே குரலில் ஹாலில் வந்திருப்பவர்கள் அறியாதபடி, ‘அது போனாற் போகிறது. உன் பாடத்தைப் பார்’ என்று சொல்லிவிட்டு, மறு காட்சியில் நான் ராஜ குமாரன் உடையில் வரவேண்டியிருந்தபடியால், என் சந்யாசி உடையைக் கழற்றும் பொழுதுதான், எனக்குப் பட்ட காயங்களைப் பார்த்தேன். உடனே அந்தக் காயங்களைக் கட்டிக்கொண்டு, பிறகு மற்றக் காட்சிகளை நடத்தினேன்.
இவ்விடத்தில் நடந்தவற்றுள் மூன்றாவதாக ஞாபகமிருக்கும் விஷயம், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவின் நர்த்தனமானது, மதுரை நாடகப் பிரியர்களுக்கு விளைத்த உற்சாகமே. மூன்றாவது நாடகமாகிய “காலவ ரிஷி”யில் ஊர்வசியாக அவர் நர்த்தனம் செய்த பொழுது அதைப் பார்த்தவர்கள் பெருமகிழ்ச்சி யடைந்தார்கள் என்று சொல்வது அதிகமாகாது. நர்த்தனம் முடிந்தவுடன், “இன்னும் கொஞ்சம் நர்த்தனம் செய்யவேண்டும்” என்று கரகோஷம் செய்து தெரிவித்தனர். அதன்பேரில், தனக்கு மிகவும் இளைப்பாயிருப்பதாகவும் தன்னால் இனி முடியாதென்றும் எனது நண்பர் எனக்குத் தெரிவிக்க, நான் அவரை மன்னிக்கும்படி வெளியில் உள்ளவர்களுக்குச் சொல்லி அனுப்பினேன். அதன்பேரில் வருகிற கடைசி நாடகத்திலாவது மறுபடியும் ரங்கவடிவேலு நாட்டியத்தைப் பார்க்க வேண்டுமென்று சொல்லியனுப்பினார்கள். அன்றியும் இதைப்பற்றிக் கேள்விப்பட்ட சிலர், மறுநாள் என்னிடம் வந்து, “எப்படியாவது லீலாவதி - சுலோசனா நாடகத்தில் ரங்கவடிவேலுவை, நர்த்தனம் செய்யச் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். “இந்த நாடகத்தில் நர்த்தனம் செய்வதற்கு இடமில்லையே”யென்று நான் கூறியும், கேளாதவர்களாய் வற்புறுத்தவே, “இந்நாடகம் முடிந்ததும் பிரத்யேகமாக நர்த்தனம் செய்யச் சொல்லுகிறேன்”என்று அவர்களுக்குச் சமாதானம் சொல்லி, அங்ஙனமே நாடகம் முடிந்ததும், இரவு இரண்டு மணிக்குமேல் ஆனபோதிலும் ரங்கவடிவேலுவை நாட்டியம் ஆடச் செய்தேன்.
மதுரையில் எனது நண்பர் நர்த்தனம் செய்ததைப் பார்த்த சிலர் இத்தனை வருடங்களாகியும், அதைப்பற்றிச் சிலாகித்துப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். எனதுயிர் நண்பர் நாட்டியமானது ஜனங்களின் மனத்தை இவ்வளவு கவர்ந்ததற்குக் காரணம் என்னவென்று யோசிக்குமிடத்து, இதுதான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. கடினமான நாட்டிய வித்தையை ஒருவன் கற்ற போதிலும், அதை ஆடி, பார்ப்பவர்களின் மனத்தைச் சந்தோஷிப்பிப்பதற்கு அதற்கு ஏற்றதான உருவம் இருக்கவேண்டும். அதிக ஸ்தூல தேகமும் உதவாது; அதிக மெல்லிய தேகமும் உதவாது; அதிக ஸ்தூல தேகமுடையவர்கள் ஆடுவதைப் பார்த்திருக்கிறேன். அப்பொழுது, ஆப்பிரிக்கா தேசத்திலுள்ள ஹிப்பப்டோமஸ் ஆடுவதுபோல் என் மனத்திற்குப் பட்டுள்ளது. மிகவும் மெலிந்த எலும்புகளெல்லாம் வெளியில் தெரிந்து கொண்டிருப்பவர்கள் ஆடுவதைப் பார்க்கும் பொழுது, எலும்புக்கூடு நர்த்தனம் செய்வதுபோல் தோன்றுகிறது. அன்றியும் ஆடுபவர் மிகவும் குட்டையாயு மிருக்கலாகாது; நெட்டையாயுமிருக்காலாது. மிகவும் குட்டையாயிருப்பவர்கள் ஆடுவதை யானைக் குட்டி ஆடுவதற்குச் சமானமாகச் சொல்லலாம். மிகவும் நெட்டையாயிருப்பவர்கள் ஆடுவதை ஒட்டகம் ஆடுவதற்கு ஒப்பிடலாம். இக் குறைகளெல்லாமின்றி, சரியான உயரமுடையவர்கள் இந்நாட்டிய சாஸ்திரத்தைப் பயின்றபோதிலும், அவர்களுக்கு ஜகன பாகம் கொஞ்சம் பெருத்திருக்கவேண்டும்; இது ஸ்திரீகளுக்குரிய கலை; பெண்டிருக்கு சுபாவத்தில் ஜகனமானது பெருத்திருக்கு மென்பது அனைவரும் அறிந்த விஷயமே. இவ்வங்கப் பூர்த்தியில்லாத சிலர் ஆடிவரும்போது பின்புறம் திரும்புங்கால் சப்பையாகத் தோன்றுவதை நான் பார்த்திருக்கிறேன். இதற்காகச் சிலர் நர்த்தனம் செய்யும்பொழுது சிறு குல்டு துணிகளை வைத்துக் கட்டிக்கொண்டு ஆடுவதை நான் பார்த்திருக்கிறேன்! மேற்கூறிய குறைகளெல்லாமின்றி, நர்த்தனஞ்செய்வதற்குத் தக்க உருவம் எனதுயிர் நண்பரிடம் சுபாவமாகப் பொருந்தி யிருந்தமையாற்றான், அவரது நர்த்தனம் சென்னை ராஜதானியில் நாங்கள் போயிருந்த இடங்களிலெல்லாம் சிலாகிக்கப்பட்டதென்று நான் நம்புகிறேன். அன்றியும் இவ்வரிய கலையில் பெயர் பெற வேண்டுமென்று விரும்புவோர் கவனிக்கவேண்டியது இன்னொன்றுண்டு. அதாவது நர்த்தனம் செய்யுங்கால் பாதவின்யாசங்கள் மிகவும் மிருதுவாயும் அழகாயுமிருக்க வேண்டும். பாரசீக நாடகத்தில் பேய்கள் கூத்து ஆடுவது போல் அரங்கத்தில் “தும்தும்"என்று துமுக்கலாகாது. இக்குறைகளை யெல்லாம் நான் எடுத்துக் கூறியதன் முக்கியக் காரணம், நாளுக்கு நாள் க்ஷிணித்து வரும் இக்கலையைக் கற்க விரும்பும் எனது இளைய நண்பர்கள், மேற்சொன்ன குற்றங்களையெல்லாம் களைந்து, இவ்வரிய சாஸ்திரத்தை ஆதரிப்பார்கள் என்பதேயாம்.
மதுரையில் எங்கள் நாடகங்களை முடித்துக்கொண்டு புறப்படும்பொழுது, மறுபடியும் இவ்வூருக்கு வந்து நாம் நாடகமாடக் கொடுத்து வைத்திருக்கிறோமோ என்னவோ என்னும் கவலையுடன் நான் புறப்பட்டேன். அக் கவலையை நீக்கி, மறுபடியும் இந்த மதுரை மாநகரிலேயே எங்கள் சபையாருடன் நாடகங்கள் ஆடும்படியும், அன்றியும், இந்நகரத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மதுரை டிராமாடிக் கிளப்புக்காக, பன்முறை இவ்விடம் வந்து நாடகமாடும்படியான பாக்கியம், எனக்களித்த, நான் வழிபடுதெய்வங்களாகிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்களுக்கு, நான் அவர்கள் பாதங்களைத் தினம் மறவாது துதித்தலன்றி, வேறென்ன கைம்மாறு செய்யக்கூடும்?
நாங்கள் மதுரையை விட்டுப் புறப்படக் குறித்த தினத்திற்கு முந்தியநாள் இலங்காத் தீவில், நாங்கள் போகவேண்டிய ரெயில் பாதையானது பெரும் மழையினால் உடைந்து சேதப்பட்டதாகவும், ரெயில் அம் மார்க்கத்தில் வழக்கம் போல் போக இன்னும் சில தினம் பிடிக்குமென்றும் பத்திரிகைகள் மூலமாகக் கண்டோம்! இந்த தெய்வாதீனத்தால் நேரிட்ட கஷ்டத்திற்கு என்ன செய்வதென்று யோசித்து, எப்படியும் எடுத்துக்கொண்ட பிரயாணத்தைக் கைவிடலாகாதென்று தீர்மானித்து, மண்டபத்தில் அப்பாதை செப்பனிடப்படுகிற வரையில் தங்கிப் பிறகு இலங்கைக்குப் போகவேண்டுமென்று தீர்மானித்தோம். இவ்வாறு சமுத்திர மணல் தவிர வேறெதுவும் கிடைக்காத இச்சிற்றூரில் நான்கு நாள் தங்க வேண்டியிருந்தது. நான்காவது தினம் ரெயில் பாதை செப்பனிடப்பட்டு ரெயில் வழக்கம்போல் போகிறதெனச் சேதி வரவே, உடனே புறப்பட்டு தனுஷ்கோடிவரையில் புதிதாய் ஏற்படுத்தப்பட்ட ரெயில் மார்க்கமாகப் போய் அங்கிருந்து சிறிய ஸ்டீமர் ஏறி, இரண்டு அல்லது இரண்டரை மணி சாவகாசத்திற்குள்ளாகத் தலைமன்னார் என்னும் இலங்கைத் தீவிலுள்ள ரெயில்வே ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தோம்.
கொழும்பு ஸ்டேஷன் போய்ச் சேர்ந்ததும், முகத்தில் நகையுடன் எங்களை வரவேற்ற எங்கள் பழைய நண்பர்களின் நல்வார்த்தைகளால், வழியில் நாங்கள் பட்ட கஷ்டங்களையெல்லாம் க்ஷணத்தில் மறந்தோம்.
இம்முறை, எங்களுடன் முதலிரண்டு முறை வருவதற்குத் தடைப்பட்ட எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் வந்தார். இம்முறை இங்கு எட்டு நாடகங்கள் நடத்தினோம். அவற்றுள் ஒன்று, யாழ்ப்பாணத்து ஸ்திரீகள் சங்கத்தின் சார்பாகக் கொடுத்து அதன் வரும்படியை அச்சங்கத்தாருக்குக் கொடுத்தோம். இம்முறை தினம் யாராவது ஒருவர் வீட்டில் விருந்து நடந்ததென்றே சொல்ல வேண்டும். டாக்டர் ஜான்ராக்வுட் என்பவரும், கொழும்பில் பெரிய அட்வகேட்டாயிருந்த ஜெயவர்த்தன் என்பவரும், திருநாவுக்கரசு அம்மாளும், மூத்த தம்பி என்பவரும் எங்கள் சபைக்குப் பெரும் விருந்தளித்தனர். அன்றியும் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும் நானும் தினம் காலை மாலைகளில் எங்காவது சிற்றுண்டிக்கோ அல்லது போசனத்திற்கோ அழைக்கப்பட்டோம். ஆயினும், ஒரு முறை பட்டது போதுமென்று இம்முறை மிகவும் ஜாக்கிரதையாக இருந்து, நோயில் விழாதபடி என் உடம்பைக் காப்பாற்றிக் கொண்டேன்.
இங்கு நடந்த நாடக தினங்களில், ஏறக்குறைய தினம் மழை பெய்தபோதிலும், நல்ல வசூலாயிற்று. முன்தினம் போலவே வாரிக் மேஜர் என்பவர் எங்கள் சௌகரியத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.
இவ்விடத்தில் நடந்த நாடகங்களைப்பற்றி இங்கு எழுதத்தக்க விசேஷங்கள் ஒன்றும் எனக்கு ஞாபகம் வரவில்லை. எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயருடைய சங்கீதம் மிகவும் மெச்சப்பட்டது. ஆயினும் ஆக்டிங் விஷயத்தில் ரங்கவடிவேலுக்கிருந்த புகழ் கொஞ்சமேனும் குன்றவில்லை.
இங்கு நானிருந்தபொழுதுதான், எனக்கு சக்ரவர்த்தியின் பிறந்த தினம் கொடுக்கும் கௌரவ பட்ட ஜாபிதாவில், “ராவ்சாஹெப்” என்கிற பட்டம் கொடுத்ததாக, சென்னையிலிருந்து வந்த தந்தி மூலமாகத் தெரிந்தது. இதை நான் ஒரு பொருட்டாகப் பாராட்டாவிட்டாலும், இந்த சமாச்சாரம் எங்கள் சபையின் அங்கத்தினர் மூலமாகக் கொழும்பிலுள்ள நாடாகாபிமானிகளுக்கெல்லாம் தெரிந்துவிட்டது. அதன் பேரில், இங்கு நாங்கள் நடத்திய “சபாபதி” என்னும் நாடகத்தில் ஒரு காட்சியில், எனது நண்பர் ராகவாச்சாரியார், நாடகத்தின் நடுவில் கதையோடு ஒட்டி ஏதோ கூறுவது போல், இதை வெளியிட்டார். உடனே ஹாலில் வந்திருந்தவர்களெல்லாம் இரண்டு நிமிஷம் வரையில் இடைவிடாது கரகோஷம் செய்தனர். அப்பொழுதுதான் சிங்களவாசிகளின் மனத்தை எனது நாடகங்களினால் நான் திருப்தி செய்ததன் திறத்தைக் கண்டேன். ஆயினும் இதை எங்கள் சபைக்கு அவர்கள் செய்த கௌரவமென்றே கொண்டேன்.
இங்கு நாடகங்களை முடித்துக் கொண்டு, சில காரணங்களால் யாழ்ப்பாணம் போக வேண்டுமென்றிருந்த ஏற்பாடு முடியாமற்போகவே, அதற்குப் பதிலாகச் சென்னைக்குத் திரும்பிப் போகும்போது கும்பகோணத்தில் தங்கி 5 நாடகங்கள் ஆட வேண்டுமென்று தீர்மானித்தோம். அதன்மீது எங்கள் சிங்கள நண்பர்களிடமிருந்து பிரிய மனமில்லாதவராய், விடைபெற்று, வந்த வழியாகவே இந்தியாவுக்குத் திரும்பினோம். மறுபடியும் நான் இலங்கைத் தீவிற்குப் போவேனோ என்னவோ சந்தேகம். இம்முறை போய் பதினைந்து வருடங்களாய் விட்டன; எனக்கும் வயதாகிவிட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில், நான் இங்கெழுதுவதன் மூலமாக, எங்கள் சபைக்கும் முக்கியமாக எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுக்கும் எனக்கும், எமது இலங்கை நேசர்கள் செய்த பேருதவிக்கும், அவர்கள் பாராட்டிய பேரன்பிற்கும், கைம்மாறாக என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன். இங்கெழுதப்பட்டது எமது இலங்கை நேசர்களின் நேத்திரத்திற்படுமாயின், இதையே எனது கைம்மாறாகக் கொள்வார்களாக! நான் நடமாடும் சிற்றுலகில், சுய நன்மையைப் பாராட்டும் மனிதர்களின் செய்கைகள் என் மனத்தில் புண்படுத்தும் போதெல்லாம், எனது இலங்கை நண்பர்களை நினைத்து, சுய நன்மையைப் பாராட்டாத ஜனங்கள் சிலரேனும் இவ்வுலகில் இருக்கின்றனர் என்றெண்ணிச் சந்தோஷித்து, என் மனத்தைத் தேற்றிக் கொள்ளுவது தற்காலம் எனக்கு வழக்கமாய் விட்டது.
இனி, கும்பகோணத்தில் இரண்டாம் முறை நாங்கள் நாடகமாடிய கதையை எழுதுகிறேன். இம்முறை நாங்கள் நாடகமாடியது பழைய இடத்திலன்று; புதிதாகக் கட்டப்பட்ட வேறொரு நாடக சாலையில். இது பழைய நாடக சாலையைப் போல் இவ்வூரின் மத்தியில் இல்லாது ஒரு புறமாகக் கட்டப்பட்டது. இக்காரணத்தினாலோ வேறெக் காரணத்தினாலோ முதன்முறை இங்கு நாடகமாடியபோது வந்த ஜனக்கூட்டம் இம்முறை வரவில்லை. போதாக்குறைக்கு முன்பு எங்கள் சௌகர்யங்களை எல்லாம் மிகவும் சிரத்தையுடன் கவனித்த பாலசுப்பிரமணிய ஐயர் அவர்கள் இவ்வூரில் இல்லை இப்பொழுது. ஆயினும் இங்கு நாடகமாடியதால் எங்கள் சபைக்கு நஷ்டம் நேரிடவில்லை. வரவுக்கும் செலவிற்கும் சரியாய்ப் போய்விட்டது. இவ்விடம், எங்கள் சபையைப்போல ஸ்தாபிக்கப்பட்ட வாணி விலாச சபையாரும், லட்சுமிவராஹ ஐயங்கார் அவர்களும், அநந்தாச்சாரியார் அவர்களும், எங்களுக்கு நல்ல விருந்தளித்தனர். ஐந்து நாடகங்களை இங்கு முடித்துக்கொண்டு சென்னைக்குப் போய்ச் சேர்ந்தோம். இதுதான் எங்கள் சபை வெளியூர்களில் நெடுநாள் கழித்த பிரயாணம். சென்னையை விட்டு ஏறக்குறைய 45 நாட்கள் வெளியூரிலிருந்தோம்; 17 நாடகங்கள் ஆடினோம்; பெரும்பாலும் அவைகளெல்லாம் இரவு நாடகங்களாயிருந்த படியால் மிகவும் சிரமமாயிருந்தது. இருந்தபோதிலும் எனக்கும் மற்ற ஆக்டர்களுக்கும் தேகத்தில் ஒரு குறையுமின்றி, இந்நாடகங்களை யெல்லாம் பூர்த்தி செய்து கொண்டு, பரமேஸ்வரன் அருளால் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். இதில் ஒரு சிறிய வேடிக்கை. 45 நாட்கள் கண்டக்டராகவும், நாடகங்களில் கதாநாயகனாகவும் இரவு பகலாகக் கஷ்டப்பட்டு, நாடகங்களையெல்லாம் முடித்துக் கொண்டு, திரும்பி வந்தவுடன், சென்னையிலிருந்து சபையின் காரியதரிசி எழுதிய கடிதம் ஒன்றிற்கு ஏன் உடனே பதில் எழுதவில்லை என்று ஓர் அங்கத்தினருடைய பிரேரேபணையினால், என் மீது குற்றங் கூறினர் சிலர்! அந்த மெம்பரின் பெயரை இங்கு எழுத எனக்கு இஷ்டமில்லை. அவர் மீது குற்றமில்லை. “பெற்ற வட்கே தெரியும் அந்த வருத்தம், பிள்ளை பெறாப் பேதை அறிவார்களோ?” இந்தச் சந்தர்ப்பத்தில் தாயுமான ஸ்வாமிகள் பேதை என்னும் பதத்தை உபயோகித்துள்ளது கவனிக்கத்தக்கது. சபையின் வெளிப் பிரயாணத்தில் செலவு போக, லாபம் 2638-8-6 கிடைத்தது. இதனின்றும் நெல்லூர்ப் பிரயாணத்தில் நான் முன்பு கூறியபடி நேர்ந்த நஷ்டமாகிய 535-13-3 கழித்து, மிகுதி நிகர லாபம் 2102-9-3 எங்கள் சபையின் கட்டட பண்டுக்குச் சேர்த்தோம்.
இவ் வருஷம் டிசம்பர் விடுமுறையில், 45 நாட்களுக்கு விக்டோரியா பப்ளிக் ஹால் மேல்மாடியை வாடகைக்கு அமர்த்தி, சாயங்காலங்களில் நாடகமாடி வந்தோம். பல தினங்களில் ஜனங்கள் உட்கார இடமில்லாமல், டிக்கட்டுகள் விற்பதை நிறுத்த வேண்டியிருந்தது. இந்நாடகங்களினால் செலவு போக 3088 ரூபாய் லாபம் கிடைத்தது. அதில் ரூபாய் 3000 கட்டட பண்டுக்குச் சேர்த்தோம். ஆகவே, பல விதத்திலும் எங்கள் சபை ஸ்தாபித்து 25 ஆண்டுகள் பூர்த்தியாகிய இவ்வருஷம், சபையானது மிகவும் உன்னத ஸ்திதியை அடைந்தது என்றே கூற வேண்டும்.
இவ்வருஷம் இந் நாடக மேடை நினைவுகளில் நான் குறிக்க வேண்டிய, என்னைப் பற்றிய நிகழ்ச்சி ஒன்று உண்டு. அதாவது சபை ஆரம்பித்தது முதல் இந்த இருபத் தைந்து வருடங்களும் (ஒரு வருஷம் தவிர) சபையின் தமிழ் நாடகங்களைச் சூத்திரதாரனாகப் பார்த்து வந்த நான், இவ்வருஷம் அவ்வேலையினின்றும் விலகிக் கொண்டேன். சபையின் ஆரம்பத்தில் வி. திருமலைப் பிள்ளை அவர்கள் கண்டக்டராகவிருந்தபோதிலும், அவர் வேலையெல்லாம் நான் பார்த்து வந்தேன் என்பது எங்கள் சபையோர் அனைவரும் அறிந்த விஷயமே. இந்த இருபத்தைந்து வருஷங்களில் கடைசி சில வருஷங்களில், வருஷாந்திரம் எங்கள் சபையில் கண்டக்டர் வேலைக்கொருவரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில், எனக்குப் போட்டியாகச் சிலர் நின்றனர். அச்சமயங்களிலெல்லாம் சபையின் பொதுஜனக் கூட்டமானது என்னையே தேர்ந்தெடுத்தது. அச்சமயங்களிளெல்லாம் எனது நண்பர்களிற் பலர், “சம்பந்தம், நீ ஏன் இவ்வாறு வருஷா வருஷம் கஷ்டப்படுகிறாய்? உனக்கோ வயதாகி வருகிறது. இச்சுமையை இளையவர்கள் தோள் மேல் சுமத்திவிட்டு ஆயுமென்றிருக்கிறதுதானே?” என்று என் நலத்தைக் கோரிக் கூறியிருக்கின்றனர். அப்போது அவர்களுக்கெல்லாம் “நான் இன்னும் சபைக்குக் கண்டக்டராகச் சில வருஷங்கள் உழைக்க வேண்டுமென்று எண்ணியிருக்கிறேன். இத்தனை வருஷம் உழைப்பது என்று ஒரு நிச்சயம் வைத்திருக்கிறேன். அதுவரையில் கண்டக்டர் வேலைக்கு வருஷா வருஷம் நின்றுதான் தீருவேன். அதற்குள்ளாக, சபையின் பொது ஜனக் கூட்டத்தார், தாங்களாக என்னை விலக்கி விட்டால் நலமாயிற்று” என்று பதில் கூறியுள்ளேன். என்னை நீக்கி மற்றவர்களைக் கண்டக்டராக நியமிக்க வேண்டுமென்று பிரயத்தனப்பட்டு, முனிசிபல் எலக்ஷனிலும் சட்டசபை எலக்ஷனிலும் வோட் சம்பாதிப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் என்று பெயர் பெற்ற எனது நண்பர்களிற் சிலர், அங்கத்தினருடைய வீடு வீடாய்ப் போய்ப் பிரயத்தனப்பட்டனர், அச்சமயங்களிலெல்லாம் நான் கண்டக்டர் வேலைக்கு நிற்கப் போகிறேன் என்பதை அறிவித்ததன்றி, ஒருவரையும் தங்கள் வோட் எனக்குக் கொடுக்கும்படி நான் கேட்டவனன்று. இதற்குச் சில முக்கியக் காரணங்களுண்டு. முதலாவது, இம்மாதிரியான தேர்ந்தெடுத்தல்களிலெல்லாம் அவர்களாகப் பார்த்து என்னை நியமிக்க வேண்டுமே யொழிய, நாம் போய் அவர்களைப் பலவந்திக்க, அதனால் அவர்கள் வோட் கொடுப்பார்களானால், அதில் என்ன மகிமை? அப்படிச் செய்வது தவறு என்பது என்னுடைய கோட்பாடுகளி லொன்று. இரண்டாவது, நான் எந்த மனிதனையும், எனக்காக ஒன்றைக் கொடு என்று யாசிக்கக்கூடாது என்கிற நியமமுடையேன்; இக்காரணம் பற்றியே, அநேக வருஷங்களில் என்னுடைய நண்பர்கள் என்னை, முனிசிபல் கார்ப்பரேஷன், லெஜிஸ்லேடிவ் கவுன்சில் முதலிய சபைகளுக்கு நிற்கும்படிக் கேட்டும், நான் வேண்டாமென்று மறுத்திருக்கிறேன். எனக்கேதாவது வேண்டியிருந்தால், என்னைப் படைத்த ஈசனை வேண்டுவேனே யொழிய அவர் படைத்த மக்களை யாசியேன். மூன்றாவது காரணம், இவ் விஷயங்களிலெல்லாம் ஈசன் விதித்தபடியாகின்றது, நம்முடைய பிரயத்தனத்தில் ஒன்றும் பயனில்லையென்பது என் தீர்மானமான எண்ணம்.
நான் முன்னால் தீர்மானித்தபடி, சபை ஆரம்பித்து இருபத்தைந்து வருஷங்கள் வரை கண்டக்டராகச் சபைக்கு உழைத்தேன். அந்த இருபத்தைந்து வருடங்களும் கழிந்தவுடன், ‘நாம் உழைத்தது போதும். இனி மற்றவர்கள் உழைக்க வேண்டியது நியாயம், அவர்களும் இவ்வேலையில் பயிற்சியடைய வேண்டியது; அப்பொழுது தான் அவர்களுக்கும் இதன் கஷ்ட நஷ்டங்களும், அருமை பெருமையும் தெரியும்’ என்று தீர்மானித்து, இவ்வேலை மறு வருஷத் தேர்ந்தெடுத்தல் வந்தபோது, நிற்காமல் விலகிக் கொண்டேன். இனிமேல் இந்த வேலைக்கு நான் நிற்கப் போகிறதில்லை யென்பதை எனது நண்பர்களுக்கும் தெரிவித்து, நான் கண்டக்டராக நடத்திய கடைசி நாடகம் முடிந்ததும், மேடையின் பேரில் அவர்களையெல்லாம் ஒருங்கு சேர்த்து, ‘இத்தனை வருடங்களாக நான் கண்டக்டராக இருந்தபோதெல்லாம் உங்களில் அநேகரைக் கஷ்டப்படுத்தியிருக்கக்கூடும். தெரிந்தும் தெரியாமலும் உங்களுக்கு அபராதமிழைத்திருக்கக்கூடும்; அவற்றை யெல்லாம் மன்னியுங்கள்"என்று பிரார்த்தித்து, இத்தனை வருடங்களாக என்னுடன் ஒத்து உழைத்து, சபையின் கீர்த்தியைக் காப்பாற்றியதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த வந்தனத்தையளித்து, அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன். என்னுடன் இதுகாறும் உழைத்த ஆக்டர்களும் நான் கூறியதை அங்கீகரித்து, சபையின் முதல் அங்கத்தினராகிய ஜெயராம் நாயகர் மூலமாக, எனக்கு மரியாதை செய்தனர். ஆயினும் அச்சமயம் எனது நண்பர்களுக்கு நான் வாக்களித்தபடி நான் இந்த வேலையினின்றும் விலகியபோதிலும், இன்றுவரை, சபையின் ஆக்டர்களுக்காவது, கண்டக்டர்களுக்காவது, என்னாற் செய்யக்கூடிய உதவி ஏதாவது இருந்தால் அதைச் செய்து வருகிறேன்.
மேற்சொன்னபடி நான் விலகிவிட்ட பிறகு துரைசாமி ஐயங்கார், கண்டக்டராகச் சபையோரால் நியமிக்கப்பட்டார், இவ்வருஷம்.
இவ் வருஷம் நான் புதிதாய் எழுதிய நாடகம் ‘விஜய ரங்கம்’ என்பதாம். இதைப்பற்றி நான் சற்று விவரமாய் எழுத வேண்டியது அவசியம். இருபத்தைந்தாம் ஆண்டு பூர்த்திக் கொண்டாட்டத்தின் சம்பந்தமாக எங்கள் சபையார், தமிழிலும் தெலுங்கிலும் புதிதாய் எழுதப்படுகிற சிறந்த ஜனசமூக நாடகங்களுக்குத் தங்கப் பதக்கங்கள் அளிப்பதாக விளம்பரம் செய்தனர். இப் பரீட்சைக்கு நாடகங்கள் அனுப்புவோர் தங்கள் சொந்தப் பெயரை வெளியிடக் கூடாதென்றும், மாறு பெயர் வைத்தனுப்ப வேண்டுமென்றும் நிர்ணயஞ் செய்திருந்தனர். நாடகக் கர்த்தா தன் சுயமான பெயரை வெளியிட்டால், பரிசோதகர்கள், அவன் மீதுள்ள பட்சபாதத்தினால் அவனுக்கு ஒருவேளை பரிசளிக்கக்கூடுமென்று, இந்தக் கட்டுப்பாடு செய்தனர். யாரைக் குறித்து இந்த நிபந்தனை முக்கியமாக ஏற்படுத்தப் பட்டதென்று இதை வாசிக்கும் என் நண்பர்கள் எளிதில் ஊகித்துக் கொள்ளலாம். இப் பரீட்சையில் “டெஸ்டி காடோ”என்கிற பெயரை வைத்து இந்த “விஜயரங்கம்"என்னும் நாடகத்தை எழுதியனுப்பினேன். டெஸ்டிகாடோ, என்கிற பதத்திற்கு, “பிதுரார்ஜிதத்தி லிருந்து விலக்கப் பட்டடவன்” என்று ஒருவாறு பொருள் கூறலாம். இம் மாறுபெயர் சர் வால்டர் ஸ்காட் என்னும் பிரபல இங்கிலீஷ் ஆசிரியர் எழுதிய ‘ஐவான் ஹோ’ என்னும் கதையில், கதாநாயகனான ‘ஐவான் ஹோ’ பூண்ட மாறுபெயராம். சிறு வயதில், இக்கதையைப் பன்முறை படித்து நான் மிகவும் மகிழ்ந்திருக்கிறேன். ஆகவே, இப்பெயரையே என் மாறுபெயராக வைத்து என் புதிய நாடகத்தை அனுப்பினேன். இதை எழுதச் சற்றேறக்குறைய எனக்கு நான்கு ஐந்து மாதங்கள் பிடித்தன. கடைசியில் எப்படி நாடகத்தை முடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்துவிட்டு, நாடகத்தை அனுப்ப வேண்டிய காலத்திற்கு ஒருவாரம் வரையில், காலஹரணம் செய்து கொண்டிருந்து விட்டேன். பிறகு ஏழு நாட்களுக்குள் நாடகத்தைப் பூர்த்தி செய்து, (என் வழக்கப்படி பென்சிலினால் எழுதிய காட்சிகளையெல்லாம்) இங்கியில் எழுதி அனுப்ப வேண்டுமேயென்று அவசரப்பட்டு, ஒரு வகையாக முடித்து நானாக இங்கியில் பிரதி செய்து அனுப்பினேன். இந்த அற்ப விஷயத்தை ஒரு பொருட்டாக இங்கு எடுத்தெழுதியதற்கு ஒரு காரணமுண்டு. நான் அச்சிடும் புஸ்தகங்களிலெல்லாம் ஒரு பிரதி, கொழும்பில் வசிக்கும் கற்றறிந்த மாது சிரோமணியாகிய திருநாவுக்கரசு அம்மாளுக்கு அனுப்பும் வழக்கப்படி, இப் புஸ்தகம் அச்சிட்டவுடன் ஒன்றையனுப்ப, அவர்கள் நாடகத்திலுள்ள சாராம்சங்களை எடுத்துக் கூறி, கடைசியில், “நீர் நாடகத்தைக் கடைசியில் முடித்தது எனக்கு அவ்வளவு திருப்திகரமாயில்லை . ராஜேஸ்வரியும் ரங்கநாதமும் ... கடைசியில் சந்திக்கும் காட்சி ஏதோ நீர் அவசரப்பட்டு எழுதியது போல் எனக்குத் தோன்றுகிறது”என்று, நான், ‘யார், இதை அறியப் போகிறார்கள்?’ என்று இருந்த மர்மத்தை வெளியிட்டனர். ஆகவே, கிரந்த கர்த்தாக்கள் “நம்முடைய மனத்திலிருப்பது மற்றவர்களுக்கு என்ன தெரியப் போகிறது?” என்று இறுமாந்திருக்கலாகாது! என்பதை யறிந்தேன். ஆகவே, கிரந்த கர்த்தாக்கள் இதைச் சற்றுக் கவனிப்பார்களாக; அவசரப்பட்டு எதையும் எழுதாதிருப்பார்களாக. இந்தச் சந்தர்ப்பத்தில் என்னிடமுள்ள ஒரு கெட்ட குணத்தை எழுதுகிறேனிங்கு. நான் எழுதும் புஸ்தகங்களில் என்ன குற்றங்களை நானே கண்டாலும், அல்லது பிறர் எனக்கு எடுத்துக் காட்டினாலும் அவற்றையெல்லாம், அப்புஸ்தகம் அச்சிடுமுன் மாற்றி விடுவேன்; ஒரு முறை அச்சிட்டபின், “அச்சாசிரியர் பிழை”எனக் கூறப்பட்ட எழுத்துப் பிழைகள் தவிர, மற்றவைகளை மாற்றுவதில்லை என்னும் ஒரு மூடப் பிடிவாதம் என்னிடம் உண்டு இன்றளவும். இது என்னை விட்டு முற்றிலும் அகல வில்லை என்று நினைக்கிறேன். ஆகவே இந்த “விஜயரங்கம்” என்னும் நாடகத்தில் கடைசிக் காட்சியின் முன் காட்சியைச் சற்று மாற்றி எழுதினால் நன்றாயிருக்கும் என்று எனக்குப் புத்தியில் நன்றாய்ப் பட்டபோதிலும், அங்ஙனம் செய்யாதிருக்கிறேன்.
இந்தப் பரீட்சைக்கு 15 தமிழ் நாடகங்கள் அனுப்பப்பட்டன. இவைகளுள் எது சிறந்ததெனத் தேர்ந்தெடுக்க, ம-ள-ள-ஸ்ரீ செல்வகேசவராய முதலியார் அவர்கள், எம்.ஏ., திவான்பஹதூர் பவாநந்தம் பிள்ளை அவர்கள், பி.ஆர். கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் மூவரும் கமிட்டியாக ஏற்படுத்தப்பட்டனர். இவர்கள் இப்பதினைந்து நாடகங் களையும் பரிசோதித்துப் பார்த்து, “விஜயரங்கம்” என்னும் எனது நாடகத்திற்குத்தான் பொற்பதக்கமளிக்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள். அவர்களுடைய தீர்மானம் கைக் கெட்டியபிறகே, எங்கள் நிர்வாக சபையார், ஒவ்வொரு மாறு பெயரும் இன்னாருடையது என்று சீல் வைத்து அனுப்பப் பட்டவைகளைப் பிரித்துப் பார்த்து, ‘விஜயரங்கம்’ என்னும் நாடகம் என்னால் அனுப்பப்பட்டது என்று கண்டனர்.
இந்த விஜயரங்கம் என்னும் நாடகத்தைப்பற்றி எனது நண்பர்களுக்குச் சில விஷயங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இது நான் எழுதியுள்ள நாடகங்களுக்குள் ஒரு சிறந்த நாடகம் என்பது என் கருத்து. இதைத் தற்புகழ்ச்சியாக எனது நண்பர்கள் எண்ணலாகாது. ஒரு கிரந்த கர்த்தா எழுதியுள்ள புஸ்தகங்களில் அவன் மனத்திற்கே பிடித்ததாகச் சில எப்படியும் இருந்துதான் தீர வேண்டும். நான் எழுதியுள்ள நாடகங்களில் என் மனத்திற்கே அதிகத் திருப்தியைச் சில கொடுத்திருக்கின்றன. அவற்றுள் “விஜயரங்கம்” ஒன்றாகும். நான் எழுதியுள்ள நாடகங்களுள் பலவற்றை நான் இரண்டாம் முறைகூடப் படிப்பதில்லை. இந்த விஜயரங்கத்தைப் பன்முறை நான் படித்தும், இப்பொழுது எனக்கு அவகாசமிருக்கும்பொழுதெல்லாம் மற்றொரு முறை படிக்க என் மனம் நாடுகின்றது.
இந்த நாடகத்தின் கதையை நான் மனத்தில் கோர்த்த பொழுது, இந்நாடகத்தின் கதாநாயகனுக்கும், இந்நாடகத்திற்கும், என் தகப்பனாருடைய பெயரை வைக்கவேண்டு மென்று தீர்மானித்து அப்பெயரை வைத்தேன். இப்படி வைத்ததற்குக் காரணம், என் தகப்பனார் மீது எனக்கு இந்நாளளவும் இருக்கும் பேரன்பே; இது நான் சாமளவும் குறையாதிருக்க வேண்டுமென்பது என் பிரார்த்தனை. என் தகப்பனாருடைய ஜீவிய சரித்திரத்திற்கும் இக்கதைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. சிலர் இந்நாடகத்தில் என் அனுபவத்தைப் பெரும்பாலும் எழுதியிருப்பதாக எண்ணுகிறார்கள்; என்னிடம் நேராகவும் சொல்லியிருக்கிறார்கள்; அது தவறாகும். ஏதோ ஒன்றிரண்டு சிறு சந்தர்ப்பங்களை என் அனுபவத்தினின்றும் இதில் எழுதியிருக்கலாம். அவற்றுள் ஒன்று எனக்கு முக்கியமாக ஞாபகமிருக்கிறது. என்னுடைய பிள்ளை வரதன் ஏழெட்டு வயதுக் குழந்தையாயிருக்கும்பொழுது, ஏதோ துஷ்டத்தனம் செய்தான் என்று அவன் கன்னத்தில் ஒரு முறை நான் ‘பளீர்’ என்று அடிக்க, அவன் அப்படியே துடித்துப் போனான். கன்னத்தில் அடித்தால் இவ்வளவு நோயுண்டாகிறதா என்று சந்தேகித்தவனாய், நான் என் வீட்டின் மேல் மாடிக்குச் சென்று, ஒருவருமில்லாத சமயம் பார்த்து என் கன்னத்தில் நானே ‘பளீர்’ என்று அடித்துக்கொண்டு பார்த்தேன். உடனே எனக்குண்டான நோயினால், கன்னத்தில் அடிப்பதனால் இவ்வளவு கஷ்டமுண்டாகிறதென அறிந்தேன்! நான் கன்னத்தில் அடிபட்டதில்லை. சுயமாக இதை அனுபவித்த பிறகு, சிறு பிள்ளைகளைக் கன்னத்தில் அடிக்கக்கூடா தென்பதை அறிந்தேன்! இந்த அனுபவத்தை, கதாநாய கனான விஜயரங்கம் சுயமாக அறிந்ததாக எழுதியுள்ளேன். இம்மாதிரியான இரண்டொரு சந்தர்ப்பங்கள் என்னையுமறியாதபடி இக்கதையில் வந்திருக்கலாம். என்னுடைய சொந்த அனுபவங்களையெல்லாம் இக்கதையில் எழுதியிருக்கிறேன் என்று எண்ணுவது முற்றிலும் தவறாகும். அப்படி வாஸ்தவமாயிருந்தால், நான் அப்படிச் செய்திருக்கிறேன் என்று இங்கு எழுதத் தடையில்லை. விஜயரங்கத்தினிடத்தில், வெட்கப்படத்தக்க குணம் ஒன்றும் கிடையாது. ஆயினும் எனது நண்பர்களுட்சிலர், இவ்வாறு ஏன் எண்ணவேண்டும் என்று யோசித்துப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த வரையில், கதாநாயகனான விஜயரங்கத்தை ஒரு நாடக ஆசிரியனாக நான் வர்ணித்ததும், இந்நாடகத்தில் சில காட்சிகள் நாடக மேடையிலே நடக்கிறதாக நான் எழுதியுள்ளதும், மற்றவர்களை இவ்வாறு எண்ணும்படி செய்திருக்கலாம் எனத் தோன்றுகிறதெனக்கு. அன்றியும் உலகத்தைப் பற்றிய என்னுடைய சில அபிப்பிராயங்களை, கதாநாயகன் அபிப்பிராயங்களாக நான் எழுதியிருப்பது அவ்வாறு எனது நண்பர்களுட் சிலர் சந்தேகிக்கும்படி இடங்கொடுத்திருக்கலாம். மேற்கூறிய சில ஒற்றுமைகள் நீங்க, இந்நாடகத்தை முழுவதும், என்ன மனத்தால் நிர்மாணிக்கப்பட்டது என்பதை எனது நண்பர்கள் நம்பும்படிக் கேட்பேன்.
இந் நாடகத்தில் சில காட்சிகள் - முக்கியமாக, விஜயரங்கம் திருமெஞ்ஞான முதலியார் வீட்டில் வேலையாளாக இருந்து நீங்கும் காட்சியும், விஜயரங்கம் ராஜேஸ்வரியுடன் சம்பாஷிக்கும் காட்சியும், விஜயரங்கம் தன் மனைவியிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சியும் - நான் எழுதியவற்றுள் மிகச் சிறந்தன என்பது என் அபிப்பிராயம். இந்நாடகத்தை வாசித்த எனது நண்பர்கள் பலருடைய அபிப்பிராயமும் அதுவே. இந்நாடகத்தைப் பற்றி நான் பெற்ற நன்மதிப்புக் கடிதங்களைப்போல் மற்றெந்த நாடகத்திற்கும் பெற்றேனில்லை.
இந்நாடகமானது மறு வருஷம் எங்கள் சபையோரால் ஆடப்பட்டது. அப்போது எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு, மங்கையர்க்கரசியாக நடித்தார். நான் விஜயரங்கம் பிள்ளையாக நடித்தேன். சத்யமூர்த்தி ஐயர் ரங்கநாதம் ஆகவும், சுந்தரவரத ஐயங்கார் ராஜேஸ்வரியாகவும் நடித்தார்கள். புதிய நாடகமாயிருந்தபடியாலும் பொற்பதக்க மளிக்கப்பட்ட நாடகமானதனாலும், எங்கள் சபையின் அங்கத்தினர் ஏறக்குறைய எல்லோரும் வந்திருந்தனர். அன்றியும் வெளியார் வந்ததனால் பண வசூலும் அதிகமாயிருந்தது.
இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்தபடியால் வந்தவர்களுக்கெல்லாம் விக்டோரியா பப்ளிக் ஹாலில் இடம் இல்லாமற் போக, நாடக மேடையின் மீது பிடிக்கக்கூடிய வரையில் எங்கள் சபையின் அங்கத்தினருக்கு இடங்கொடுக்கும்படி நேர்ந்தது. நாடகமானது நன்றாய் நடிக்கப்பட்டது என்பது வந்தவர்களுடைய அபிப்பிராயம்; என்னுடைய அபிப்பிராயமும் அப்படியே.
இந்நாடகத்தில் நன்றாய் நடித்தவர்களுள் முதல் பரிசு கொடுப்பதென்றால், விஜயரங்கம் பிள்ளையின் குமாரனாகிய சாமிநாதனாக நடித்த வி.வி. ராமதுரைக்குத்தான் அதைக் கொடுப்பேன். ராமதுரை எனது பால்ய நண்பராசிய வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காருடைய பிள்ளை; சாமிநாதன் வேஷத்திற்குச் சிறு பிள்ளையாகவும் இருக்கவேண்டும், நன்றாய் நடிக்கும் திறமை வாய்ந்தவனாயுமிருக்க வேண்டுமே என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் போது, ஒரு நாள் எனது நண்பர் குமாரனாகிய ராமதுரையைச் சந்தித்தேன். உடனே இப்பிள்ளை சாமிநாதன் வேடத்திற்குத் தக்கவனாயிருப்பான் என்று என் மனத்தில் உதிக்க, ராமதுரையை இந்த வேஷம் “நீ எடுத்துக்கொள்கிறாயா?” என்று கேட்க, ராமதுரையும் ஒப்புக்கொள்ள, அதன்மீது வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் அனுமதியைப் பெற்று, ராமதுரைக்கு ஒத்திகை நடத்தி வந்தேன். நான் சொன்ன சூட்சுமமான விஷயங்களையெல்லாம் மிகவும் எளிதில் கிரஹித்து, நாடக தினம் எல்லோரும் (அவரது தகப்பனார் உட்பட) மெச்சும்படியாக மிகவும் நன்றாய் நடித்தான். அக்காலம் சிறுவனாய் நடித்த ராமதுரை, இப்பொழுது பெரியவனாகி, வக்கீலாகி, தகப்பனாருமாகிவிட்டான். காலம் எவ்வளவு விரைந்து செல்கிறது! இந்நாடகத்தைப் பிறகு எங்கள் சபையில் நடத்தியபோதெல்லாம் எனது நண்பர் கே. நாகரத்தினம் ஐயருடைய குழந்தை ‘மணி’ நன்றாய் நடித்தான். ஏறக்குறைய ராமதுரையைப் போலவே நடித்தான் என்று நான் சொல்ல வேண்டும். இந்த “சாமிநாதன்” பாகம் இந்நாடகத்தில் ஒரு முக்கியமானது. இதைச் சரியாக நடிக்காவிட்டால் நாடகமே நன்றாயிராது என்பது என் துணிபு. ஆகவே, இதை நடிப்பதற்கு ராமதுரை, மணி ஆகிய இரண்டு பால ஆக்டர்கள் கிடைத்தது நான் செய்த அதிர்ஷ்டமே.
ராமதுரைக்குப் பிறகு நன்றாய் நடித்த ஆக்டர், ஒரு சிறு நாய்க்குட்டியே! இந்நாடகத்தை வாசித்தவர்கள் இதில் ஒரு சிறு நாய்க்குட்டி வருகிறது என்பதை நன்றாய் அறிவார்கள். இதற்காக, எனது நண்பர் துரைசாமி ஐயங்காரிடமிருந்து ஒரு சிறிய நாய்க் குட்டியை வரவழைத்து, அதை எங்கள சபையில் இரண்டு வாரம் வைத்திருந்து ராமதுரையின் கையினால் அதற்குப் பால் குடிக்கச் செய்து அதை “ஒத்திகை” செய்து பழக்கி வந்தேன்! அவன் கூப்பிடாமலே அவனைப் பின்தொடரச் செய்தேன். நாடக தினத்தில் அது அப்படியே செய்ய, சபையில் வந்திருந்தவர்கள் அதிகக் கரகோஷம் செய்தனர். இந் நாடகத்தைப் பிறகு நடிக்கும் போதெல்லாம் இதற்காக ஒரு சரியான நாய்க்குட்டியை வாங்கிப் பழக்க வேண்டி வந்தது.
எனதுயிர் நண்பர் ஆயுட் காலத்தில் மிகவும் அருமையாய் நடித்த வேடங்களில், இந்நாடகத்தின் கதாநாயகியாகிய மங்கையர்க்கரசியின் வேடம் ஒரு முக்கியமானதாம். இவருக்குப் பிறகு எனது நண்பர் கே. நாகரத்தினம் ஐயர், இந்த வேடத்தை ஏறக்குறைய அவரைப் போலவே மிகவும் விமரிசையாகப் பன்முறை நடித்திருக்கின்றனர்.
இந்நாடகத்தில் எனது நண்பராகிய டி. சுந்தரவரத ஐயங்கார், நடிப்பதற்கு மிகவும் கஷ்டமான “ராஜேஸ்வரி” யாக மிகவும் நன்றாய் நடித்துச் சபையோரைத் திர்ப்தி செய்தனர்.
இவர் யாழ்ப்பாணத்து ஸ்திரீயைப்போல் ஆடை ஆபரணங்கள் அணிந்து தோன்றியது எல்லோராலும் மெச்சப் பட்டது. இவருக்குப் பாடும் சக்தியில்லாவிட்டாலும், இப்படிப்பட்ட ஸ்திரீ பாகங்களை நடிப்பதில் மிகவும் சமர்த்தர் என்றே நான் கூற வேண்டும். இவர் இதன்பிறகு மிகவும் சில தடவைகளில்தான் ஸ்திரீ வேடம் பூண்டு எங்கள் சபையில் நடித்திருக்கின்றனர். தற்காலம் இவர் ஸ்திரீ வேடம் பூணாதது எங்கள் சபையின் துர்ப்பாக்கியமென்றே சொல்ல வேண்டும்.
இந்நாடகம் முதன்முறை நடத்தப்பட்டபொழுது, எனது பால்ய நண்பர்களுள் ஒருவராகிய கே. ஆர். சீதாராமய்யர் திருமெஞ்ஞான முதலியாராக நடித்தார். அவரது இளங் குமாரத்தியாக அப்பொழுது சுமார் 9 வயதுடையவளாயிருந்த என் குமாரத்தி, சி.சௌ. தர்மாம்பாள் நடித்தாள். இதுதான் எங்கள் சபை தோன்றி முதன் முறை எங்கள் நாடக மேடையின் பேரில் பெண்பால் ஆடியது. இதைக் கொண்டாட வேண்டுமென்று கூறி, எங்கள் சபை பிரசி
டென்டாகிய ஆனரபில் டி.வி. சேஷகிரி ஐயர் அவர்கள், ஒரு பெரிய புஷ்பச் செண்டை வரவழைத்து ஹானரபிள் ஜஸ்டிஸ் சி. கிருஷ்ணன் மூலமாக, என் பெண்ணுக்குக் கொடுக்கச் செய்தார். பிறகு சில தடவைகளில் இந்நாடகம் எங்களால் ஆடப்பட்டபொழுது என் பெண் பெரியவளாகி விடவே, எனது நண்பர் கே. நாகரத்தினம் ஐயர் சகோதரியின் பெண் பத்மா இந்த வேடம் தரித்திருக்கிறது.
இந்த நாடகத்தில் தோன்றிய மற்றொரு பாத்திரத்தைப் பற்றிக் கொஞ்சம் எழுத விரும்புகிறேன்; அதாவது ஒரு நாட்டுக்கோட்டைச் செட்டியாரின் பாகம். இதைக் காலஞ் சென்ற எனது நண்பர் சோமசுந்தரம் பிள்ளை பி.ஏ., பி.எல். அவர்கள் தத்ரூபமாய் நடித்தார். சுபாவத்திலேயே இவரது தலை மொட்டையாயிருக்கும்; நிறம் கருப்பாயிருக்கும்; ஆகவே உருவம் நாட்டுக்கோட்டைச் செடடியார் வேடத்திற்கு மிகவும் தகுதியாயிருந்தது; அன்றியும் இவர் பல நாள் நாட்டுக்கோட்டைச் செட்டிகளுடன் பழகியதால், அவர்களைப் போலவே பேசுவார். இதையறிந்த நான், இவருக்கென்றே நாட்டுக்கோட்டைச் செட்டியார் பாத்திரம் எழுதினேன் இந்த நாடகத்தில். இவர் அன்று இப்பாத்திரத்தில் நடித்தது எல்லோருக்கும் இடைவிடா நகைப்பைத் தந்தது. இதற்கப்பாலும் இந்நாடகத்தில் இவ்வேடம் தரித்தவர்களுக்குள் தற்காலம் மதுரையில் இருக்கும் டாக்டர் வரதராஜ ஐயரே சிறந்தவர் என்று கூற வேண்டும்.
இந் நாடகமானது எனது நாடகங்களுக்குள் நடிப்பதற்குக் கஷ்டமானது; இது காரணம் பற்றியே நாடகக் கம்பெனிகளும், இதர சபைகளும் இதை அதிகமாய் ஆடியதில்லை.
இந்த 1919ஆம் ஆண்டில், எங்கள் சபை தசராக் கொண்டாட்டத்தில் ஒரு விசேஷமென்னவென்றால், சி.பி. ராமசாமி ஐயர் அவர்கள் நடத்தி வரும், “ஸ்திரீகள் தினம்.” விக்டோரியா பப்ளிக் ஹாலில் வரும் ஸ்திரீகளுக்கெல்லாம் இடமிராதென்று சவுத் இந்தியன் அத்லெடிக் அசோசி யேஷன் மைதானத்தில் ஒரு பெருங் கொட்டகையில் வைத்துக் கொண்டோம். சுமார் 1000 ஸ்திரீகளுக்குக் குறைவில்லாமல் வந்திருந்தனர்.
இவ் வருஷம் நிகழ்ந்த இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி என்னவென்றால், எங்கள் சபையின் கட்டட பண்டுக்காகப் பொருள் சேர்க்கும் பொருட்டு, நாடகசாலையும் இருப்பிடமும் கட்ட மற்ற ஏற்பாடுகள் செய்யும் பொருட்டும் ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. அதற்கு என்னைக் காரியதரிசியாக நியமித்தார்கள். உடனே எங்கள் சபை அங்கத்தினர்க்கெல்லாம் எழுதிப் பொருள் சேகரிக்க ஆரம்பித்தேன். இவ்வருஷம் எங்கள் சபையின் அங்கத் தினர் சுமார் 8000 ரூபாய் வரைக்கும் கையொப்பமிட்டனர். அதில் பெரும்பாலும் வசூலிக்கப்பட்டது. இவ்வருஷத்தின் கடைசியில் எங்கள் கட்டட பண்டுத் தொகை 19628-4-6 ஆகியது. நான் இதற்காகக் கொஞ்சம் கொஞ்சமாகப் பொருள் சேர்த்த கதையை, பிறகு ஒரு சமயம் எழுதலா மென்றிருக்கிறேன்.
23 ஆவது அத்தியாயம்
இனி, 1917ஆம் ஆண்டில் எங்கள் சபையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைப்பற்றி எழுதுகிறேன்.
இவ்வருஷத்தில் சென்னைக்கு வெளியில் நாங்கள் ஆடிய நாடகங்கள் உட்பட, 53 நாடகங்களாடினோம். இதுதான் நாளது வரையில் எங்கள் சபையார் ஒரு வருஷத்தில் ஆடிய அதிக மொத்தமான நாடகங்கள். இவ்வருஷம் எங்கள் சபையின் நானூறாவது நாடகமாக ஆந்திர நாடகப் பிதாமகர் கிருஷ்ணமாச்சார்லு எழுதிய ‘பிரஹ்லாதா’ என்னும் நாடகத்தை நடத்தினோம். நான் இவ் வருஷம் புதிதாய் எழுதிய நாடகம் “ஊர்வசியின் சாபம்” என்பதாம். இக் கதை மஹாபாரதத்தினின்றும் எடுக்கப் பட்டது; ஊர்வசியானவள் அர்ஜுனன் தனக்கு இணங்கா ததற்காக அவனைப் பேடியாகும்படிச் சபித்த கதையாம். இதை நான் நாடக ரூபமாக அமைத்ததற்கு முக்கிய காரணம் பின் வருமாறு: எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு நாட்டியஞ் செய்யக் கற்றுக் கொண்ட பிறகு, அடிக்கடி அவரை, சந்தர்ப்பமில்லா இடங்களில்கூட நடிக்கும்படிப்
பலர் வேண்டினர். ‘காலவ ரிஷி’ நாடகத்தில் தவிர, மற்ற நாடகங்களின் இடையில் அவர் நடிக்க வேண்டிய சந்தர்ப்பம் வேறொன்றுமில்லாதிருந்தது. இதை நிவர்த்திக்கும் பொருட்டு, அவர் நாடகத்தின் ஒரு பாகமாகவே நடிக்க வேண்டிய ஒரு கதையை நாடகமாக எழுத வேண்டுமெனத் தீர்மானித்து, இந்த ஊர்வசியின் சாபம் எனும் நாடகத்தை எழுதலானேன். இதில் ஒரு முக்கியக் காட்சி, இந்திரன் சபையில் ஊர்வசியானவள், இந்திரன் மகனான அர்ஜுனன் மனத்தைக் கவர, தன் முழுத் திறமையும் கொண்டு நடிக் கிறாள். இது எனதுயிர் நண்பர் தனது நர்த்தனக் கலையை, நன்கெடுத்துக் காட்ட மிகவும் சௌகரியமாயிருந்தது. இந்த ஒரு காட்சியை மாத்திரம் சில காலத்திற்கு முன் எழுதியிருந்தேன். அதனுடன், அர்ஜுனன் தவம் புரியும் காட்சியையும், பிறகு ஊர்வசியை வெறுக்கும் காட்சி முதலானது சேர்த்து ஒரு நாடகமாக எழுதி முடித்தேன். அதை முடித்தபோது ஒரு நாள் ஆடக்கூடிய நாடகத்திற்கு மிகவும் சிறிதாயிருந்தபடியாலும், இதில் ஹாஸ்ய ரசம் இல்லாதிருந்த படியாலும், அதற்காகத் துரியோதனன் அர்ஜுனன் தவத்தைக் கெடுக்க விரும்பி, தன் சாரணர்களை அனுப்பியதாக, மூன்று இடைக் காட்சிகளைச் சேர்த்து நாடகத்தைப் பூர்த்தி செய்தேன்.
எனதுயிர் நண்பர் ஊர்வசியாக நடித்தபடியால், இந்நாடகத்தில் நான் அர்ஜுனன் வேடம் பூண்டேன். இந் நாடகம் எங்கள் சபையோரால் இவ் வருஷம் ஜூலை மாதம் 29ஆம் தேதி நடிக்கப்பட்டது. மிகவும் நன்றாயிருக்கிற தென எங்கள் சபை அங்கத்தினரே மெச்சி, இரண்டு மூன்று வாரத்திற்குள் மறுபடியும் ஆடவேண்டுமென்று நிர்ப்பந்தித்தனர். இதற்கு முக்கியக் காரணம், ரங்கவடிவேலு தன் நர்த்தனத்தில் புதிதாய்க் கற்றுக் கொண்ட சில அபிநயங்களும் அர்ஜுனனுக்கு, பரமசிவன்- பார்வதி சமேதராய்க் காட்சி கொடுக்கும் காட்சியுமே என்று நம்புகிறேன். அர்ஜுனனை மல்யுத்தத்தில் தோற்கடித்த பிறகு, பார்வதியின் வேண்டுகோளுக்கிரங்கி, பரமசிவன் காட்சி கொடுத்த பொழுது; பிரமா, விஷ்ணு , சுப்பிரமணியர், விநாயகர், தேவேந்திரன் முதலியோரும் தங்கள் வாஹனங்களின் மீதூர்ந்து, ஆகாயத்தில் அவனுக்குக் காட்சி கொடுத்துத் தங்கள் தங்கள் ஆயுதங்களையும் அவனுக்கு அளித்ததாகப்
பாரதக் கதையிருப்பதால், இக் காட்சியில் அத் தேவர்களெல்லாம் பரமேஸ்வரனைப் புடை சூழ்ந்திருப்பது போல் காட்சியை நிர்மாணிக்கச் செய்து, அதற்குரிய தேவதுந்துபி கோஷம் முதலியனவும் தக்கபடி ஏற்பாடு செய்தது, வந்திருந்தவர்களுடைய மனத்தையெல்லாம் கவர்ந்ததென் பதற்குத் தடையில்லை. ரங்கவடிவேலுவின் நடனத்தைப் பார்ப்பதற்கும், இக்காட்சியைக் காணவுமே பலர் இந் நாடகத்திற்கு வந்தனர் என்று கூற வேண்டும். இந் நாடகம் பிறகு பன்முறை சென்னையிலும், வெளியூர்களிலும் எங்கள் சபையோரால் ஆடப்பட்டது.
இந் நாடகம் நடிப்பதற்குக் கொஞ்சம் கஷ்டமான தனால் இதர சபைகள் இதை அதிகமாக ஆடுவதில்லை . ஊர்வசி வேடம் பூண்டு நர்த்தனஞ் செய்யத்தக்க ஆட்களையுடைய சபைகள்தான் இதை எடுத்துக் கொள்ளக்கூடும்.
இந் நாடகத்திற்காக நான் எழுதிய மூன்று இடைக் காட்சிகள், நான் எழுதியிருக்கும் ஹாஸ்யரசம் பொருந்திய காட்சிகளுள் சிறந்தனவென்று நான் நினைக்கிறேன். இவைகள் தனியாகப் பன்முறை ஆடப்பட்டிருக்கின்றன.
இவ் வருஷம், எங்கள் சபையில் சம்ஸ்கிருத நாடகப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அதற்குக் காலஞ்சென்ற டி. எஸ். நாராயண சாஸ்திரியாரைக் கண்டக்டராக ஏற்படுத்தினோம்; இவர் சம்ஸ்கிருதத்தில் மிகுந்த பாண்டித்யமுடையவர்; சம்ஸ்கிருதத்தில் “மத்தியம வியா யோகம்” என்னும் நாடகத்தை எழுதியவர்; தமிழிலும் கற்றவர். “போஜ சரித்திரம்” என்னும் நாடகத்தை எழுதினார். இப்போஜ சரித்திர நாடகமானது, அவரது காலத்தில் எங்கள் சபையில் ஆடப்படாது, அவர் காலமான பிறகு ஆடப் பட்டது, ஒரு பெருங்குறையென நான் மதிக்கிறேன். இவர் நடுவயதிலேயே காலகதியடைந்தது எங்கள் சபையின் சம்ஸ்கிருதப் பிரிவு செய்த தௌர்ப்பாக்கியமாகும்.
எங்கள் சபையானது இவ் வருஷம் வெளியூருக்கு இரண்டு முறை சென்றது; முதன் முறை பெங்களூருக்கும் இரண்டாம் முறை மாயவரத்திற்கும்; பெங்களூரில் 6 நாடகங்களும், மாயவரத்தில் 7 நாடகங்களும் ஆடினோம். இம் முறை பெங்களூருக்குப் போனது எங்கள்
சபை அவ்வூருக்கு மூன்றாம் முறை சென்றதாகும். பெங்களூருக்குப் போகலாகம் என்கிற விஷயம் பிரேரேபிக்கப் பட்டவுடன், நான் , “அதில் பிரயோஜனமில்லை; சபைக்கு நஷ்டம் ஏற்படும்” என்று ஆட்சேபித்தேன். “சூடுண்ட பூனை அடுப்பங்கரை ஏறாது” என்னும் பழமொழிக்கிலக்காக, இரண்டு முறை அங்குப் போய் வந்த அனுபவத்தைக் கொண்டு, வேண்டாம் என்று தடுத்தேன். அதன் பேரில், அங்கு போக வேண்டுமென்று விரும்பிய எங்கள் சபையின் ஆக்டர்களிற் சிலர், என்னுடன் பேசுவதில் பிரயோஜன மில்லை யென்று கண்டவராய், எனதுயிர் நண்பர் ரங்க வடிவேலுவிடம் போய் அவர் மனத்தைக் கலைத்தனர். அதன்பேரில் எனது நண்பர் என்னிடம் வந்து, “எப்படியாவது சபை இவ்வருஷம் பெங்களூருக்குப் போக வேண்டும். நீங்கள் ஆட்சேபம் செய்யக் கூடாது” என்று தன்னாலியன்ற அளவு வாதித்துப் பார்த்தனர்; அவர் வாதித்தது ஒன்றும் பலிக்காமற் போகவே, கடைசியில், “எனக்குப் போகவேண்டுமென்று மிகவும் இஷ்டமாயிருக்கிறது. அதற்காக நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று கேட்டார். அவர் கூறிய வேறு நியாயங்களுக்கெல்லாம் பதில் கூறி வந்தேன்; இந்தக் கடைசி நியாயத்திற்கு நான் என்ன பதில் சொல்வது? மனோகரன் விஜயாளுக்குக் கூறியபடி, “என்னை வெல்வதற்கு இந்தப் பாணம் ஒன்று வைத்துக் கொண்டிருக்கிறாயே!” என்று கூறி, “நிர்வாக சபையில் இதைப்பற்றி அபிப்பிராயம் தேர்ந்தெடுக்கப் படும் பொழுது நான் இதற்கு மாறாக என் வோட் கொடுக்கவில்லை. ஆயினும் என் மனத்திலிருப்பதை மாத்திரம் கூறி விடுவேன்” என்று சொன்னேன். அதன் படியே நிர்வாக சபைக் கூட்டத்தில் இந்தப் பிரஸ்தாபம் வந்தபோது, பெங்களூருக்குப் போவதனால் எங்கள் சபைக்கு நஷ்டம்தான் கிடைக்கும் என்பதற்கு என் நியாயங்களை யெல்லாம் எடுத்துக் கூறி, கடைசியில், “இந்தப் பாரம் உங்கள் தலைமீது” என்று ஸ்பஷ்டமாய்ச் சொன்னேன். மற்றவர்களெல்லாம், “அம்மாதிரி ஒன்றும் நேரிடாது; நாம் பயப்பட வேண்டியதில்லை” என்று கூறினவர்களாய்ப் பெங்களூருக்குப் போக வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அப்படியே அங்கு போனதனால் சபைக்குச் சுமார் 800 ரூபாய்க்குமேல் நஷ்டம் உண்டாச்
சுது. நான் சொன்னபடியே நடந்ததெனச் சந்தோஷப்பட வில்லை. நான் எண்ணியபடி நேராது, சபைக்கு லாபம் வந்திருக்குமாயின், அதிக சந்தோஷப்பட்டிருப்பேன். நான் முக்கியமாக வருத்தப்பட்டதெல்லாம், என் அனுபவத்தைக் கொண்டு நான் சபையின் நன்மைக்காகக் கூறியதை சபை யோர் கவனியாது, பிறகு கஷ்டப்பட்டார்களே என்பது தான்.
இந்த பெங்களூர்ப் பிரயாணத்தில் ஆரம்பமுதல் எல்லாம் விக்கினமாகவே யிருந்தது. தமிழில் அங்கு நாடகங்களாட வேண்டுமென்று ஆரம்பித்தவுடன், தமிழரின் தாயாதிகளான தெலுங்கர், நாங்களும் அங்கு ஒரு நாடகமாட வேண்டுமென்று ஆரம்பித்தனர்! நம்முடைய கடமையை நாம் செய்துவிட்டோம்; இனி அவர்கள் பாடென்று நான் சும்மா இருந்துவிட்டேன். நான் எண்ணியபடியே, அங்கு நாங்கள் ஆடிய ‘பிரஹ்லாதா” என்னும் தெலுங்கு நாடகத்திற்குப் பல்லாரியிலிருந்து தெலுங்கில் பிரபல ஆக்டராகிய எனது நண்பர் ராகவாச்சார்லு வந்து ஆடியும், செலவு அதிகமும் வசூல் கொஞ்சமுமாய் முடிந்தது! தமிழ் நாடகங்களுக்கும், நான் நினைத்தபடியே சரியான வசூலாக வில்லை. பணம் வசூலாகாமற் போனால் போகிறது, ஜனங்களாவது வந்து பார்க்கவேண்டுமே, அதுவும் இல்லை. ‘பட்டபின்தான் ஒரு ஜாதியார்க்குத் தெரியும்’ என்று ஒரு பழமொழியுண்டு. அதன்படி பெங்களூரில் இம்மாதிரி கஷ்டப்பட்ட பின்தான், சம்பந்தம் கூறியது சரியென அவர் களுக்குத் தோன்றியது. இங்கு நடந்த நாடகங்களில், ஒன்றைப் பற்றி நான் சில விஷயங்கள் இங்கு எழுத விரும்புகிறேன். அதாவது, “அமலாதித்யன்” என்னும் நாடகத்தைப்பற்றி.
பெங்களூரில் என்னென்ன நாடகங்கள் ஆடுவது என்கிற பேச்சு வந்த பொழுது, “அமலாதித்யன்” நாடகத்தையும் அங்கு ஆடவேண்டுமென்று சிலர் பிரேரேபித்தார்கள்; அது அவ்விடத்தில் ரமிக்காது, அவ்விடத்திலுள்ள வர்களெல்லாம் புராணக் கதைகள் முதலியன விரும்புவார்களே யொழிய, ஷேக்ஸ்பியர் நாடகங்களின் மொழி பெயர்ப்பு அங்கு ருசிக்காது என்று என் எண்ணத்தைக் கூறி ஆட்சேபித்தேன். அதன்மீது அவ்விடத்திய கன்னட நாடக சபையார்கள் சிலருக்கு எங்கள் சபையார் எழுதிக்
கேட்க, அவர்கள் ‘அமலாதித்யன்’ கட்டாயமாய்ப் போட வேண்டும். இவ்விடத்திலிருப்பவர்கள் அதைத்தான் பார்க்க மிகவும் விரும்புகிறார்கள் என்று பதில் எழுதியனுப்பினார்கள். அதன்பேரில் மறுபடியும் இவ்விஷயம் எங்கள் நிர்வாக சபையில் தீர்மானத்திற்கு வந்ததன் பேரில் எனது நண்பர்கள், அக்கடிதத்தைக் காட்டி, “பார்த்தாயா, நீ கூறியது தவறு. அங்குள்ளவர்களெல்லாம் இந்நாடகத்தைத் தான் முக்கியமாகப் பார்க்க விரும்புகிறார்கள் என்று பதில் வந்திருக்கிறது. ஆகவே அதை முக்கியமாகப் பெங்களூரில் ஆடவேண்டும்” என்று கூறினார்கள். “இதை முற்றிலும் நம்பாதீர்கள்; இதற்கு அர்த்தமென்ன வென்றால், இக் கடிதம் உங்களுக் கெழுதியிருக்கும் கற்றவர்களாகிய இவர்களுடைய அபிப்பிராயம் அந் நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்றிருக்கலாம். இதைப் பெங்களூர் ஜனங் களின் பொது அபிப்பிராயமாக நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது” என்று ஆட்சேபித்தேன். என் ஆட்சே பணை யானது செவிடன் காதில் ஊதிய சங்கநாதமாயிற்று. பிறகு அமலாதித்யன் நாடகமும் பெங்களூரில் ஆட வேண்டு மென்று தீர்மானிக்கப்பட்டது. இந்நாடகம் நடத்தப்பட்ட பொழுது, நான் எண்ணியபடியே பெங்களூரில் ஆங்கிலம் கற்றறிந்த சிலர் தவிர, மற்றப் பொது ஜனங்கள் அதிகமாக வரவில்லை. பிறகுதான் என்னை ஆட்சேபித்த எனது நண்பர்கள், நான் எண்ணியது சரியென ஒப்புக்கொண் டனர். பிறகு இவ்வாறு எழுதியனுப்பிய பெங்களூர் சபை அங்கத்தினருடன் நான் கலந்து பேசி, ‘ஏன் இப்படி எழுதியனுப்பினீர்கள்?’ என்று மெல்ல விசாரித்தபொழுது, அவர்கள் பல்லாரி ராகவாச்சார்லுவிடமிருந்து இந்த அமலாத்த்யன் பாத்திரத்தை நான் மிகவும் நன்றாக ஆடுவதற்காகக் கேள்விப்பட்டதாயும், ஆகவே, அவர்கள் அதைப் பார்க்க வேண்டுமென்று மிகவும் விரும்பினதாயும், அதற்காக அவ்வாறு எங்கள் சபைக்கு எழுதியனுப்பிய தாகவும் ஒப்புக்கொண்டனர்.
இங்கு நடத்திய இந்நாடகத்தில் இன்னொரு விசேஷ மென்னவென்றால், நான் நாடகமாட ஆரம்பித்தது முதல் செய்திராத பெரும். பிழையொன்றை இழைத்தேன்! ஈதாகும் அது:- ஐயங்கார் அன்றைத் தினம் வழக்கப்படி, இந் நாடகத்தில், நாடகத்துள் நாடகமாடிய காட்சியில்,
ராஜவேஷதாரியாக வரவேண்டியிருந்தது. நாடக ஆரம்ப முதல், “இந்த மூரி சித்தப்பாக்களுக்கு (பெங்களூர் ஜனங்களுக்கு அவர் வைத்த பெயராகும் இது) நாம் இவ்வளவு கஷ்டப்படுவானேன்? இந்த ரசிகர்களுக்கு எப்படியாடினாலும் ஒன்றுதான்!’ என்று ஏளனம் செய்து கொண்டிருந்தவர், வேண்டுமென்று அலங்கோலமாய் வேடம் தரித்தார். இதை வாசிக்கும் எனது நண்பர்கள், சில கிராமாந்தரங்களில், சில ஏழைகள், இரண்டு மூன்று குரல்களுக்கு, அரிச்சந்திரன், சந்திரமதி முதலிய வேஷங்கள் தரித்து, அவைகளை ஆடவைத்து, வயிறு வளர்ப்பதைப் பார்த்திருக்கக்கூடும். அந்த அரிச்சந்திரன் குரங்கை ஒரு நாய் மீது ஏற்றி, ஊர்வலம் வருவான் குரங்காட்டி. அந்த அரிச்சந்திரன் குரங்கைப்போலவே வேஷம் தரித்துக் கொண்டார் துரைசாமி ஐயங்கார்! இந்த சமாச்சாரம் இவர் வரவேண்டிய காட்சி ஆரம்பமாவதற்குச் சற்று முன்புதான் எனக்குத் தெரிந்தது. “என்ன துரைசாமி! இது என்ன இப்படி வேஷம் தரித்துக் கொண்டாயே!” என்று நான் கேட்டதற்கு, “ஆமாம், உனக்கொன்றும் தெரியாது. நீ இவ்வளவு கஷ்டப்பட்டு ஆக்டு செய்தாயே, என்ன பிரயோஜனம்? இந்த மூரி சித்தப்பாக்கள் ஏதாவது சந்தோஷப்பட்டார்களா? நான் மேடையின்மீது வந்தவுடன் எவ்வளவு சந்தோஷப்படப் போகிறார்கள் பார்!” என்று சொன்னார். நான் என்ன செய்வது? அந்த அலங் கோலத்தைக் களைந்து தக்கபடி வேடம் பூணச்செய்ய அவகாசமில்லை! சரி, ஆகிறது ஆகிறதென்று சொல்லி விட்டு, அக்காட்சியில் ஆட அரங்கத்திற்கு நான் போய்விட்டேன். இக்காட்சி சோககரமான இந்நாடகத்தில் மிகவும் முக்கியமான ஒரு காட்சி. இதில் தன் சிற்றப்பன் தன் தந்தையைக் கொன்றதாகச் சந்தேகப்படும் அமலாதித்யன், அதன் உண்மையை அறியும்பொருட்டு, தன் தந்தையின் அருவத்தின் மூலமாய்த் தெரிந்தபடி, அவர் கொல்லப்பட்ட விதத்தைப்போல் ஒரு நாடகம் தனது சிற்றப்பன் எதிரில் ஆடிக்காட்டி, அவன் முகக்குறிப்பைக் கொண்டு அறிகிறான். இது அமலாதித்யன் வேடம் பூணும் ஒவ்வொருவனும் மிகவும் ஜாக்கிரதையாக நடிக்க வேண்டிய காட்சி. இக்காட்சியில் நான் செய்த ஆபாசத்தை இனிக் கூறுகிறேன். அமலாதித்யன் சிற்றப்பன் எதிரில்
மேற்சொன்ன நாடகம் நடிக்கப்படும் வரையில், சரியாக நடித்து வந்தேன்; அந்த நாடகம் ஆரம்பமானதும், எனது நண்பர் துரைசாமி ஐயங்கார், மேற்சொன்னபடி வேஷம் தரித்து அரங்கத்தினுள்ளிருக்கும் சிறு அரங்கத்தில் குரங்குகள் குதிப்பதுபோல் குதித்துத் தோன்றியவுடன், எல்லோரும் நகைக்க ஆரம்பித்தனர். எனக்கும் நகைப்பு வந்துவிட்டது. என்ன அடக்கியும் முடியாமற் போயிற்று. போதாக்குறைக்கு அவர் ஆடிய ஆட்டத்தில், அவர் தலை மீது அணிந்திருந்த கிரீடமானது கீழே விழுந்து விட்டது! உடனே நாடகசாலையெங்கும் ஒரே நகைப்பின் ஆரவாரம் உண்டாச்சுது! நானும் விலாப்புடை நோகச் சிரிக்க ஆரம்பித்து விட்டேன். நான் அமலாதித்யன் என்பதை மறந்து என் சிரிப்பை அடக்க முடியாதபடி அரங்கத்தின்மீது புரண்டேன் என்றே சொல்ல வேண்டும். அக்காட்சி முழுதும் ஆபாசமானது என்று நான் என் நண்பர்களுக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை. இத்தகைய தவறு இதற்கு முன்பு நான் செய்ததில்லை; பிறகும் செய்ததில்லையென்று நிச்சயமாகக் கூறக்கூடும். கற்றறிந்த சிலர் தவிர, நாடகம் பார்க்க வந்திருந்த பாமர ஜனங்களில் பெரும்பாலார், இப்படித்தான் இக் காட்சியில் நடிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டார்களோ என்னவோ! உலகெங்கும் பிரசித்திபெற்ற ஹாம்லெட் என்னும் நாடகத்தில் தான் சிருஷ்டித்த கதாநாயகன் வேடம் பூண்ட ஒருவன், அந்நாடகத்தின் முக்கியமான காட்சியில், இவ்வாறு ஆபாசம் செய்தான் என்று மேலுலகத்திலிருக்கும் ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி என்னை வாழ்த்தியிருக்க மாட்டார் என்பது நிச்சயம். ஆயினும், நான் அப்படி ஆபாசம் செய்ததற்குக் காரணத்தையறிவாராயின், என்னை மன்னிப்பார் என்று நம்புகிறேன்!
பெங்களூரிலிருந்து பட்டணம் திரும்பி வந்து, ஒரு வாரத்திற்கெல்லாம் மாயவரம் புறப்பட்டுப் போனோம். இவ்விடத்தில் ஏழு தமிழ் நாடகங்கள் ஆடினோம். தெலுங்கு நாடகம் இங்கும் ஆட வேண்டுமென்று தெலுங்குப் பிரிவினர் அம்மட்டும் கூறாதிருந்தனர். மாயவரம் சிறிய ஊராயிருந்தபோதிலும் முதல் நாடகம் முதல் சுமாராக ஜனங்கள் வந்தனர். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், முதலில் நாங்கள் தீர்மானித்தபடி நடத்திய ஆறு
நாடகங்களிலும், முதல் நாடகத்தைவிட இரண்டாவது நாடகத்திலும், இரண்டாவது நாடகத்தைவிட மூன்றாவது நாடகத்திலும் இவ்வாறு படிப்படியாக ஜனங்கள் அதிகமாய் வர ஆரம்பித்தனர். இதை நான் மாயவரவாசிகள் எங்கள் சபைக்குச் செய்த நன் மதிப்பாகக் கொள்கிறேன். இந்த ஆறு நாடகங்களிலும் எங்கள் செலவு போக சபைக்குக் கொஞ்சம் லாபமே கிடைத்தது. இந்த ஆறு நாடகங்களைப் பற்றி எனது நண்பர்களுக்கு நான் தெரிவிக்க வேண்டிய முக்கியமான விஷயம் எனக்கு ஒன்றும் ஞாபகமில்லை. கடைசியாக, ஏழாவது நாடகமாக வைத்துக்கொண்ட நந்தனார் நாடகத்தைப் பற்றி மாத்திரம் கொஞ்சம் எழுத வேண்டியவனாயிருக்கிறேன்.
இந்த நந்தனார் நாடகத்தில் ஒரு முக்கிய வேடம் பூண்ட எனது நண்பர்களிலொருவர் (அவர் பெயரை இங்கு எழுத எனக்கிஷ்டமில்லை) “அந்த நாடகத்திற்குத்தான் அதிக வரும்படி வரும்” என்று கொஞ்சம் வீம்பு பேசிக்கொண்டிருந்தார். முதன் முறை இங்கு இந் நாடகம் ஆடிய பொழுது, மற்ற நாடகங்களைவிட இதற்குக் குறைவாக ஜனங்கள் வந்தனர். அதன்பேரில் சிலர் அவரை ஏளனம் செய்ய, அம்முறை ஜனங்கள் வராததற்கு ஏதோ போக்குகள் சொல்லி, மறுமுறை மாத்திரம் ஆடுவதானால், சுற்றுப்பக்கங்களிலுள்ள எல்லா மிராசுதாரர்களும் தான் ஆடுவதைப் பார்க்கக் கட்டாயமாய் வருவார்கள்; இந் நாடகம் இவ்வளவு நன்றாய் நடிக்கப்படும் என்று அவர்களுக்குத் தெரியாமற் போயிற்று; இப்பொழுது அவர்களில் சிலர் ஒரு முறை இதைப் பார்த்திருப்பதால், இரண்டாம் முறை எல்லோரையும் அழைத்துக்கொண்டு வருவார்கள்” என்று கூறினார். அதன் பேரில் எங்கள் நிர்வாக சபைக் கூட்டத்தில், இன்னொரு நாடகமிங்கு ஆடலாமா என்ற பேச்சு வந்தபொழுது, நந்தனாரை மறுபடியும் ஆடவேண்டும் என்று வற்புறுத்தினார். எனக்கு மாத்திரம் மிகவும் சந்தேகமாயிருந்தது; இருந்தபோதிலும், இதற்கு ஆட்சேபித்தால் இந் நாடகத்தில் இவனுக்கு முக்கியமான பாத்திரம் ஒன்றுமில்லையென்று ஆட்சேபிக் கிறான் என்று எங்கு மற்றவர்கள் எண்ணிக் கொள்ளுகிறார் களோ என்று பயந்தவனாய் ஆட்சேபியாது விட்டேன். எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு மாத்திரம் மற்றவர்கள்
தவறாக எண்ணிக்கொள்ளுவார்களே என்று அஞ்சாது, தன் மனத்தில் தோன்றிய ஆட்சேபணையை வெளியிட்டார். அவர் செய்ததுதான் நியாயம், நான் செய்தது தவறு என்று நான் ஸ்பஷ்டமாய் ஒப்புக்கொள்ள வேண்டியவனே; எப்படிப்பட்ட விஷயத்திலும், நமது மனத்திற்கு எது நியாயமென்று தோன்றுகிறதோ, அதை மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்களே என்று அஞ்சாது, வெளியிட வேண்டியதுதான் கிரமம் என்னும் புத்தி அப்பொழுது எனக்கில்லாமற் போயிற்று. முடிவில் எங்கள் நிர்வாக சபையார், பிரேரேபித்தவர் இவ்வளவு சொல்கிறாரே என்று அவர் வார்த்தையை நம்பி இந் நாடகத்தை மறுமுறை இவ்விடம் நடத்த வேண்டுமென்று தீர்மானம் செய்தனர். அதற்காக உடனே வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்தோம். அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களுக்கெல்லாம் அவர் வேண்டியபடி நாடகப் பத்திரிகைகள் அனுப்பி னோம். நாடகத்தை சாயங்காலத்தில் வைத்துக்கொண்டால் அதிக ஜனங்கள் வருவார்கள் என்று அவர் கூறியபடி சாயங்காலத்திலேயே வைத்துக்கொண்டோம். இவை அனைத்தும் செய்தும், அன்று சாயந்திரம் 5 மணிக்குச் சிறிது முன் பிள்ளையார் பாட்டை, எங்கள் வழக்கப்படி பாடி முடிந்தவுடன், என் வழக்கத்திற்கு விரோதமாக, டிராப் படுதாவை கொஞ்சம் நீக்கிப் பார்க்க, நாடக சாலையில் நாடகத்தைப் பார்க்க இரண்டு பெயர் உட்கார்ந்திருந்தனர்! இதை மற்ற ஆக்டர்களும் அறிந்தவர்களாய், எங்கள் சபையின் சட்டத்திற்கு விரோதமானாற் போகிறது, எப்படியாவது ஜனங்கள் வந்தாற் போதுமென்று சொல்லி, குறித்த மணிக்கு அரை மணி பொறுத்து நாடகத்தை ஆரம்பித்தும் அதிகம் பயன்படவில்லை. சிலர்தான் நாடகம் பார்க்க வந்தனர். எங்கள் சபையின் நாடகங்களுக்குள் ஒரு சிறந்ததான இந் நாடகத்திற்கு, இம்மாதிரியாக மிகவும் குறைந்த வசூலானது இதுவரையில் எப்பொழுதுமில்லை; அதன் பிறகும் நாளதுவரையில் இல்லை. தெலுங்கு தேசமாகிய நெல்லூரில் இந்நாடகத்திற்கு வசூலானதைவிட, இன்று குறைவாயிருந்தது. மயூர்நாதர், தற்புகழ்ச்சியாக வீம்பு பேசிய எனது நண்பருக்கு புத்தி வர வேண்டும் என்று இவ்வாறு செய்து வைத்தனர் போலும். அந்நாள் முதல் இந்நாள் வரை அந் நண்பர் தான் ஆடும் நாடகங்களைப்
பற்றி அதிகமாய்ப் புகழ்ந்து பேசியதை நான் கேட்ட தில்லை. நான் இதை, நாம் ஆடும் நாடகத்தைப்பற்றி நாமே புகழ்ந்து பேசிக்கொள்ளக் கூடாது என்னும் புத்திமதியாகக் கொண்டேன்.
மேற் சொன்னபடி இரண்டாம் முறை நந்தனார் சரித்திரத்தை இவ்விடம் ஆடியதனால், அதுவரையில் வந்த கொஞ்ச லாபமும் போய்விட்டது. மாயவரத்தில் நடந்த நாடகங்களினால், நாங்கள் எடுத்துக் கொண்ட சிரமத்திற்கு லாபமாய் முடிந்தது. ஆயினும் மாயவரத்திலும் நாங்கள் போய் வந்த பிறகு எங்கள் சபையைப் போன்ற சபையொன்று ஸ்தாபிக்கப்பட்டது ஒரு லாபமாகக் கொள்ள வேண்டும்.
இவ் வருஷம் எனது தமயனார் ப. ஆறுமுக முதலியாரின் உருவப்படம் எங்கள் சபையில் திறந்து வைக்கப்பட்டது. அன்றியும் இவ்வருஷம் எங்கள் சபையின் தெலுங்குப் பிரிவினர் வெங்கடாசல ஐயர் எழுதிய “விதி லேக வயித்தியுடு” என்னும் தெலுங்கு நாடகத்தை ஆடினர். இது “மாலியர்” என்னும் பிரஞ்சு நாடகாசிரியர் எழுதிய ஒரு நாடகத்தின் மொழி பெயர்ப்பாகும்.
இனி எங்கள் சபையில் 1918ஆம் வருஷம் நடந்த நிகழ்ச்சிகளைப்பற்றி எழுதுகிறேன்.
இவ் வருஷ ஆரம்பத்தில் எங்கள் சபையில் கன்னடப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. ஆகவே, இது முதல் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், கன்னடம் ஆகிய ஐந்து பிரிவுகளும் நாடகங்களாடத் தலைப்பட்டன. இவ்வருஷம் எங்கள் சபையின் இரண்டு முக்கிய ஆக்டர் களாகிய டி.எஸ். நாராயண சாஸ்திரியார் பி. ஏ. பி. எல்., எம். துரைசாமி ஐயங்கார் இருவரும் காலகதியடைந்தனர்; இச் சம்பவத்தினால் என்னுடைய அன்யோன்ய நண்பர் களில் இருவரை நான் இழந்தேன். முன் கூறிய நாராயண சாஸ்திரியார் சம்ஸ்கிருத பாஷையில் மிகவும் பாண்டித்ய முடையவர். “சங்கரருடைய காலம்” என்னும் அரிய பெரிய கிரந்தத்தை ஆரம்பித்து அதை முடிக்காமலே தேக வியோகமானது, அப் பாஷாபிமானிகளெல்லாம் துக்கப்பட வேண்டிய விஷயமே. இவருக்கு நாடகங்கள் எழுது
வதிலும், நாடகங்களாடுவதிலும் மிகவும் பிரீதி. இவர் எழுதியுள்ள இரண்டு நாடகங்களைப்பற்றி. முன்பே நான் எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். சுகுண விலாச சபை ஸ்தாபித்த நான்கைந்து வருடங்களுக் கெல்லாம் எங்கள் சபையைச் சேர்ந்த போதிலும், ஏதோ காரணத்தினால், எங்களை விட்டு விலகி, “வித்வன் மனோரஞ்சனி” என்னும் நாடகச் சபையை ஸ்தாபித்தார். சில வருஷங்கள் அச் சபையானது நாடகங்களை நடத்திய போதிலும்; அது சீக்கிரத்தில் நசித்து விட்டது. அதை மறுபடியும் இரண்டொரு சமயம் உத்தாரணம் பண்ணிப் பார்த்தார். ஆயினும் அது பயன்படாமற் போச்சுது. இவர் நாடக மேடையின்மீது தரித்த வேடங்களுக்குள் எல்லாம் ‘பிரதாபருத்ரீயம்’ என்னும் தெலுங்கு நாடகத்தில், யௌகந்தரராகத் தோன்றியதுதான் மிகவும் நன்றாயிருந்த தென்பது என் அபிப்பிராயம்.
இவ்வருஷம் கிறிஸ்ட்மஸ் விடுமுறையில் எங்கள் சபையார் 22 நாடகங்கள் ஆடியது கவனிக்கத்தக்க விஷயம். இத்தனை நாடகங்களை தினம் ஒன்றாக ஆடியது சிலாகிக்கத் தக்கதாயிருந்தபோதிலும், ஆக்டர்களுக்கு அது மிகவும் சிரமத்தைத் தந்தது என்பதற்குச் சந்தேகமில்லை. இவற்றுள் பெரும்பாலும் தமிழ் நாடகங்களாயிருந்தபடியால், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுக்கும், எனக்கும் மிகவும் கஷ்டமாகத்தானிருந்தது. இவைகளெல்லாம் இரவில் 9 மணிக்குமேல் ஆடவேண்டிய நாடகங்களாயிருந் ததால், இவற்றை ஆடுவதே அசாத்தியமாயிருந்திருக்கும்; சாயங் காலத்தில் ஐந்து மணிக்கு ஆரம்பித்து 9 மணிக் குள்ளாக முடித்தபடியால், அவ்வளவு கஷ்டமில்லாம லிருந்தது.
இவ்வருஷம், சென்ற நான்கு வருடங்களாக உலக முழுவதையும் கலக்கிக் கொண்டிருந்த ஐரோப்பிய யுத்தமானது தெய்வகடாட்சத்தினால் முற்றுப்பெற்றபடியால், எங்கள் சபையில் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி ஏறக்குறைய 1000 பெயர்ருக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கினோம். சபையில் அன்று சாயங்காலம் ஒரு பொதுக் கூட்டம் கூடி மகிழ்ச்சி கொண்டாடினோம்.
எங்கள் சபையோர் இவ்வருஷம் நடத்திய நாடகங்களில் குறிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரே
சகுந்தலா நாடகமானது, சம்ஸ்கிருதத்திலும், தெலுங்கிலும், கன்னடத்திலும், தமிழிலும் நடத்தப்பட்டதேயாம். ஐயாயிரம் மைலுக்கப்பாலிருந்த ‘கட்டெ’ எனும் ஜர்மன் நாடகாசிரியராலும் இதற்கிணையில்லை எனப் புகழப்பட்ட காளிதாச மஹா நாடகக் கவி எழுதிய ‘சகுந்தலா’ என்னும் நாடகமானது, இவ்வாறு எல்லாப் பாஷைகளிலும் ஆடும்படியான மதிப்பைப் பெற்றது ஓர் ஆச்சரியமன்று. தமிழில் ஆடப்பட்ட சகுந்தலா நாடகம், எனது நண்பர் திவான்பஹாதூர் எஸ். பவாநந்தம் பிள்ளை அவர்களால் அச்சிடப்பட்டது. ஹரிச்சந்திர நாடகத்திற் போலல்லாமல், இவர் இந்நாடகத்தில், காளிதாசன் எழுதியபடியே அமைத்திருக்கிறார். இதில் எனதுயிர் நண்பர் சகுந்தலை யாகவும், நான் துஷ்யந்தனாகவும் நடித்தோம். நான் துஷ்யந்தனாக நடித்தபோது பல்லவி, அனுபல்லவி களடங்கிய பாட்டுகளைப் பாடாமற் போனபோதிலும், பல விருத்தங்களைப் பாடினேன். இதற்குக் காரணம் எனக்குத்தாள ஞானம் பூஜ்யம் என்பதை முன்பே அறிவித்திருக்கிறேன்.
1919ஆம் வருஷத்தில் முக்கியமாகக் குறிக்க வேண்டிய விஷயங்கள் அதிகமாயில்லை. இவ்வருஷம் தமிழிலும் தெலுங்கிலும் சிறந்த நாடகங்களுக்குப் பொற்பதக்கம் அளித்ததுபோல், கன்னட பாஷையில் நாடகங்கள் வர வழைக்கப்பட்டு, பூனாவிலிருக்கும் பெர்கூசன் கலாசாலை என். கே. ஹம்பிஹோலி என்பவருக்கு “கஜார்” என்னும் அவர் அனுப்பிய நாடகத்திற்காகப் பொற்பதக்கம் அளிக்கப்பட்டது. சம்ஸ்கிருத பாஷையில் ஒரே நாடகம் வந்தது. அது பொற்பதக்கம் பெறும்படியான அவ்வளவு நன்றாக இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது. இவ் வருடமும் கிறிஸ்ட்மஸ் விடுமுறையில் விக்டோரியா ஹால் மாடி எங்களுக்குக் கிடைக்காதபடியால், கீழேயே ஒரு சிறிய அரங்கத்தை ஏற்படுத்தி அதில் பத்து நாடகங்கள் ஆடினோம்.
இவ்வருஷம் எங்கள் சபையில் தமிழில் புதிதாய் ஆடிய நாடகம் பி. எஸ். துரைசாமி ஐயங்கார் எழுதிய “வள்ளித் திருமணம்” எனும் நாடகமாகும். அந்நாடகத்தில் அதன் ஆசிரியராகிய பி.எஸ். துரைசாமி ஐயங்காரே, சுப்பிர
மணியராக நடிக்கும்படி ஏற்பாடாயிருந்தது. நாடகத் தினம் மத்தியானம் இரண்டு மணிக்கு அவர் 104 டிகிரி ஜுரமாயிருக்கிறது; இன்று ஆடச் சொன்னால் ஆடுகிறேன். வேறு ஏற்பாடு செய்ய முடியுமானால் நலமாயிருக்கும்” என்று சொன்னார். அதன்மீது அவரை அந்தத் திசையில் ஆடச்சொல்வது குரூரமாகுமென எண்ணி, உடனே எனது நண்பர் ச. ராகவாச்சாரியாருக்கு டெலிபோன் செய்து அவரை எடுத்துக்கொள்ளும்படி செய்தேன். அவரும் ஒப்புக்கொண்டு இரண்டு மூன்று மணிக்குள் அந்தப் பாத்திரத்தின் பாகத்தைப் படித்து மேடையின்மீது நடித்து எங்கள் சபையின் பெயரைக் காப்பாற்றினார். இவருடைய அபாரமான ஞாபக சக்தி மிகவும் மெச்சத்தக்கது.
மறு வருஷமாகிய 1920ஆம் ஆண்டு எங்கள் சபையின் சரிதையில் ஒரு முக்கியமான வருஷமாகும். அதற்கு அநேகக் காரணங்கள் உண்டு. முதலாவது இவ்வருடம் எங்கள் சபையின் 500ஆவது நாடகம் பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி நடத்தப்பட்டது. அன்று, சென்னை கவர்னர் லார்டு வில்லிங்டன் அவர்களும் அவரது மனைவியார் லேடி வில்லிங்டனும் விஜயம் செய்தனர். அவர்களெதிரில் மனோஹரன் நாடகத்திலிருந்து தமிழில் சில காட்சிகளும், ராமராஜு எனும் தெலுங்கு நாடகத்திலிருந்து சில காட்சிகளும், ஆங்கிலத்தில் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதிய சர்ஜன் ஜெனரல்ஸ் பிரிஸ்கிரிப்ஷன் எனும் சிறு நாடகமும் நடத்தப்பட்டன. அச்சமயம் இன்னின்ன பாஷையில் இத்தனை நாடகங்கள் நடத்தப்பட்டன, இன்னின்ன தர்மங்கள் சபையோரால் செய்யப்பட்டன, சபையின் அங்கத்தினர் இத்தனை பெயர், சபை இன்னின்ன ஊர்களுக்குப் போய் நாடகமாடியிருக்கிறது, இன்னின்ன மஹாராஜாக்கள் கவர்னர்கள் முன்னிலையில் நாடகமாடியிருக்கிறது முதலிய குறிப்புகளடங்கிய ஒரு சிறு பத்திரிகை வந்தவர்களுக்கெல்லாம் கொடுக்கப்பட்டது.
இவ் வருஷம் எங்கள் சபையானது, லிடரெரி அண்டு சைன்டிபிக் சொஸைடீஸ் ஆக்டின்படி ரெஜிஸ்டர் செய்யப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டு, பிறகு அவ்வாறே ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம், கட்டட பண்டைப் பாதுகாப்பதற்கும், சபை
யானது நாடக சாலையையும் இருப்பிடத்தையும் நிர் மாணிப்பதற்கு நிலம் முதலிய விக்கிரயம் வாங்குதவற்கும், இப்படிச் செய்தல் அதிஅவசியமெனக் கருதப்பட்டதேயாம்.
இவ் வருஷமானது எங்கள் சபைக்கு ஒரு முக்கியமான வருஷம் என்று நான் முன்னே கூறியதற்கு மற்றாரு காரணம், இவ்வாண்டில் எங்கள் சபையானது சேலம், கோயமுத்தூர் இரண்டு இடங்களுக்கும் போய் நாடகங்களாடி நற்பெயர் பெற்றதாம். ஆக்டர்களெல்லாம் மே மாதம் 27ஆம் தேதி புறப்பட்டுப் போய் ஜூன் மாதம் 23ஆம் தேதி சென்னை வந்து சேர்ந்தோம். முன் வருஷம் பெங்களூருக்குப் போய் நஷ்டமடைந்தபடியால், இம் முறை அப்படிப்பட்ட கஷ்டம் நேராதிருக்க வேண்டு மென்று, சபையின் பொதுக் கூட்டத்தில் நாடகத்தின் வரும்படியைக் கண்டிராக்டாக விட வேண்டுமென்று ஆலோசிக்கப்பட்டு, எங்கள் அங்கத்தினரின் ஒருவராகிய டி.சி. வடிவேலு நாயகர் என்பவர், எல்லாச் செலவும் போக, சபைக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகக் கூற, அது ஒப்புக் கொள்ளப்பட்டது. இவ்வாறு எங்கள் சபை கண்டிராக்டாக நாடகமாடுவது உசிதமாக எனக்குத் தோன்றாவிட்டாலும், வடிவேலு நாயக்கர் எங்கள் சபையின் அங்கத்தினராயிருந் படியாலும், அவர்மீது எனக்கு எங்கள் சபையின் ஆக்டர்களின் சௌகர்யங்களையெல்லாம் சரியாகக் கவனிப்பார் என்று பூர்ண நம்பிக்கையிருந்தபடியாலும், ஏதாவது லாபம் கிடைத்தால் அவருக்குத்தானே சேரப்போகிறது என்கிற எண்ணத்தினாலும் இதற்கு நான் இசைந்தேன். இவ்வருஷம் தமிழ் கண்டக்டராயிருந்த எனது நண்பர் ச. ராகவாச்சாரியார், வெளியூர்களுக்கு வருவது முடியாமையாயிருந்தபடியால், நிர்வாக சபையார் என்னை இவ்வெளியூர் நாடகங்களுக்குக் “கண்டக்டர் இன்சார்ஜ்” ஆக நியமித்தனர்.
எங்கள் சபையானது வெளியூர்களுக்குப் போய் நாடக மாடியதில், சேலம் கோயமுத்தூரில் ஆடிய நாடகங்கள்தான் எங்கள் சபைக்கு மிகுந்த கீர்த்தியையும், சந்தோஷத்தையும் கொடுத்தபடியால், இதைப்பற்றிச் சற்று விரிவாக எழுதப் போகிறேன். முதலில், மற்ற ஊர்களுக்குப் போகும் போதெல்லாம், எப்படி முடியுமோ சபைக்கு லாபம்
வருமோ நஷ்டம் வருமோ என்றிருந்த சந்தேகம், இம்முறை இல்லாதிருந்தது. சென்னையை விட்டுப் புறப்படு முன்னமே எங்கள் சபையின் இரும்புப் பெட்டியில் ரூபாய் 1000 வந்து சேர்ந்துவிட்டது. ஆகவே, பணத்தைப்பற்றி எங்களுக்குக் கவலையென்பதில்லாமற் போயிற்று. சேலம் கோயமுத்தூர் நாடகங்களைப் பற்றி நான் நினைக்கும் போதெல்லாம், இன்னும் என் மனத்தில் சந்துஷ்டியுண்டா வதற்கு இரண்டாவது காரணம், எனது நண்பர் வடிவேலு நாயக்கர் இந்த இரண்டு ஊர்களிலும் எங்களுக்கு வேண்டிய சௌகர்யங்களை யெல்லாம் மிகவும் சிரத்தையோடும் விமரிசையோடும் செய்ததே. இவர் வெளியூர்களில் கன்னையா கம்பெனி நாடகங்களாடும்போது பன்முறை சென்று பழக்கப்பட்டிருந்தபடியால், முன்னதாக விளம்பரம் செய்வதிலும், துண்டுப் பத்திரிகைகள் முதலியன அக்கம்பக்கங்களில் பிரசுரம் செய்வதிலும், இன்னும் நாடகங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளனைத்தும் செய்வதிலும் மிகவும் பாண்டித்ய மடைந்திருந்தார். அது எங்களுக்கு மிகவும் உபயோகப்பட்டது. இம்முறை இவ்விரண்டு ஊர்களிலும், நாங்கள் போய்ச் சேர்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே நாடகாபிமானிகள் ஒருவரும் பாக்கியில்லாதபடி எங்கள் சபை வருவதைப்பற்றியும் இன்னின்ன நாடகங்கள் போடப்போகிறார்கள் என்பதைப் பற்றியும் அறியும்படி, எங்கு பார்த்தாலும், சுவரில் ஒட்டும் பெரிய நோட்டீஸ்களை ஒட்டி ஏற்பாடு செய்தனர். அன்றியும் கைத்துண்டு நோட்டீஸ்கள் ஏராளமாக அச்சிட்டு வீட்டுக்கு வீடு கொடுக்கும்படி ஏற்பாடு செய்தனர். அன்றியும் நாடகத் தினத்தில் அக்கம் பக்கங்களிலுள்ள கிராமாந்தரங்களிலெல்லாம், மோட்டார் பஸ் மூலமாக நோட்டீஸ்கள் பரவச் செய்தனர். இதன் பலனாக, நாங்கள் இவ்விரண்டு ஊர்களிலும் நடத்திய நாடகங்களுக்கு ஏறக்குறைய ஒவ்வொரு தினமும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலாயிற்று என்பதற்குச் சந்தேகமில்லை. கொழும்பு, யாழ்ப்பாணத்தில் கூட இம்மாதிரியான வரும்படி வந்ததில்லை. அவ்விடங்களிலெல்லாம் முக்கியமாக சனிக்கிழமை நாடகங்களுக்குத்தான் அதிக வரும்படி வரும். மற்ற செவ்வாய் வியாழன் நாடகங்களுக்குக் கொஞ்சம் குறைவாக வரும். சேலம் கோயமுத்தூர் நாடகங்களில், தினம்
அதிக வரும்படி வந்தது எனக்கும் சந்தோ, நத்தைத் தந்தது; எங்கள் சபையோருக்கும் சந்தோஷத்தைத் தந்திருக்க வேண்டும். இவ்விரண்டு ஊர்களிலும் செலவைக் கருதாது எங்கள் சௌகர்யத்தையே கருதி, ஏராளமாகச் செலவு செய்தும், எங்களுக்கெல்லம் இரண்டாவது வகுப்பு ரெயில் செலவு கொட்டகைச் செலவு முதலியன அதிகமாக ஆகியும் எங்கள் சபைக்கு 1000 ரூபாய் கொடுத்தும், எல்லாச் செலவும் போக, நிகரமாக 3500 ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்ததாக அவரே என்னிடம் ஒப்புக்கொண்டிருக் கிறார். அவர் எங்களுக்காக எடுத்துக் கொண்ட கஷ்டத்திற் காக இன்னும் அவருக்கு அதிக லாபம் கிடைத்திருக்கலாகாதா என்று எண்ணினோமேயொழிய, இவ்வளவு லாபம் கிடைத்ததே என்று எங்கள் ஆக்டர்களில் ஒருவரும் பொறாமைப்படவில்லை.
இனி சேலத்தில் நிகழ்ந்த வரலாறுகளை எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில் எனது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன். எனது ஆக்டர்களுடன் சேலத்திற்கு அதிகாலையில் போய்ச் சேர்ந்தது, ரெயில் ஸ்டேஷனிலிருந்து, நாங்களெல்லாம் எங்கள் விடுதியாகிய சேலம் காலேஜ் ஹாஸ்டலுக்குப் போய்ச் சேர்ந்தது, சென்னையில் சாதாரணமாகக் கிடைப்பதைவிட, அங்கு நாங்கள் காலையில் சாப்பிட்ட பட்சணம் நன்றாயிருந்தது. நாங்கள் போய்ச் சேர்ந்த தினம் மழை பெய்தது; மழை நின்றவுடன், நானும் எனதாருயிர் நண்பரும் அவ்வூரிலிருக்கும், கன்னிகா பரமேஸ்வரி கோயிலுக்குப் போனது, நாங்கள் எங்களை ஒருவரும் இங்கு கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று எண்ணியிருக்க, அக்கோயில் அதிகாரிகள் எங்களை சுகுண விலாச சபையைச் சேர்தந்தவர்களென்று எப்படியோ கண்டறிந்து எங்களுக்கு மரியாதை செய்தது, ஒருநாள் இரவு நாடகமானவுடன், நாங்களெல்லாம் உட்கார்ந்து நிலாச் சாப்பாடு சாப்பிட்டது, பனைமரத்தொட்டி என்னும் ஊருக்குப் போனது, இம்மாதிரியான எத்தனையோ விஷயங்கள் நேற்று நடந்ததுபோல் என் நினைவிற்கு வருகின்றன! அன்றியும் இவ்வூரிலுள்ள பெரிய மனிதர் களெல்லாம் எங்கள் சபையோரை மிகவும் அன்புடன் வரவேற்று உபசரித்தனர். கொழும்புவிலும் யாழ்ப்பாணத்திலும் எப்படி எங்கள்மீது அன்பு பாராட்டினரோ அப்படி
இவ்விடமும் பாராட்டினார்கள். இவ்வூரிலுள்ள கற்றறிந்த பெரிய மனிதர்கள் மாத்திரம் அல்ல, எங்கள் நாடகங்களைக் கண்டு களித்த சாதாரண ஜனங்களும் எங்கள் ஆக்டர்கள் மீது பிரியத்தைக் காட்டினர். இதற்கு ஓர் உதாரணத்தைப் பிறகு எழுதுகிறேன்.
இது நடந்து இப்போது 14 வருடங்களாகிறது. இருந்தும், இவ்வருஷம் இரண்டு முறை (முதன்முறை மதுவிலக்குக் பிரசார சம்பந்தமாக சென்னை பப்ளிசிடி கமிட்டி அக்கிராசனாதிபதியாகவும், இரண்டாம் முறை கோஆபரேடிவ் சொசைட்டிகளின் டிபுடி ரிஜிஸ்டிராராகவும் எனதுயிர் நண்பர் கே. நாகரத்தின ஐயர் அவர்களைப் பார்ப் பதற்கும்) நான் போயிருந்தபொழுது, எங்கள் சபையின் நாடகங்களைப் பார்த்த பல பெரிய மனிதர்கள், ‘மறுபடியும் எப்பொழுது உங்கள் சபையுடன் வரப் போகிறீர்கள்’ என்று கேட்டனர்; நானும் முதன்முமுறை சபையுடன் வந்தபோது பார்த்துச் சந்தோஷித்த கோயில் முதலிய இடங்களுக்கெல்லாம் மறுபடியும் போய்ப் பார்த்துச் சந்தோஷப்பட்டேன். ஆயினும் அம்முறை பார்த்தபொழுது என் பக்கலிலிருந்து அவைகளையெல்லாம் அனுபவித்த எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு என்னுடன் இல்லையே என்னும் துக்கம் அதிகமாயிருந்தது.
இருந்தபோதிலும், அவருக்குப் பதிலாக நாகரத்தினம் ஐயராகிய மற்றொரு நண்பனையாவது பரமேஸ்வரன் தன் கருணையினால் என் பக்கலிலிருக்கும் படி அருளினரே என்று கொஞ்சம் என் மனத்தைத் தேற்றிக்கொண்டேன்.
இந்த சேலம் பிரயாணத்தில், எங்களுக்குக் கஷ்டங்கள் நேரிடாமற் போகவில்லை . அநேக விஷயங்களில் ஆரம்பத்தில் ஏதாவது கஷ்டம் நேரிட்டால்தான், பிறகு அவை முடிவில் சுகமாய் முடிவது என்னளவில் அனுபவம் என்பதை, இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். இந்த சேலம் கோயமுத்தூர் பிராயணத்திலும் அங்ஙனமே நேர்ந்தது. இப்பிராயணத்தைப் பற்றி எங்கள் நிர்வாக சபையில் தீர்மானமாவுடன் தெலுங்குப் பிரிவினர்கள் தாங்களும் இவ்விடங்களில் நாடகங்கள் ஆட வேண்டும் என்று வாதிக்க ஆரம்பித்தனர். இவ்விடங்களில் தமிழ் நாடகங்கள்தான் சபைக்கு லாபம்
உண்டாக்கும், தெலுங்கு பிரயோஜனமில்லை என்று நான் எவ்வளவு வற்புறுத்தியும் கேளாமற் போயினர். சரி, ஆனால் உங்களிஷ்டம் என்று விட்டு விட்டேன். ஆயினும் வெளியூர் நடவடிக்கைகளைப் பற்றி அதிக அனுபோக முடைய வடிவேலு நாயக்கர் தான் கண்டிராக்டராக ஒப்புக் கொண்டது தமிழ் நாடகங்களுக்கேயென்றும், தெலுங்கு நாடகங்களின் பொறுப்பை ஒப்புக் கொள்ளமாட்டேன் என்றும் கண்டிப்பாய்ச் சொல்லி விட்டார். அதன் பேரில் சபையின் செலவிலேயே இரண்டு தெலுங்கு நாடகங்கள் கோயமுத்தூரில் மாத்திரம் ஆட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு ஆரம்பத்திலேயே இந்த ஆட்சேபணை வந்தது ஒருவிதத்தில் எனக்குச் சந்தோஷத் தையே தந்தது. ஏனெனில் என் கோட்பாட்டின் பிரகாரம், இந்தப் பிரயாணம் மிகவும் சந்தோஷகரமாய் முடிவு பெறுமெனத் தீர்மானித்தேன். இந்த இரண்டு தெலுங்கு நாடகங்களைப்பற்றிக் கோயமுத்தூர் சமாச்சாரம் வரும் பொழுது எழுதுகிறேன்.
சேலத்திற்கு ரெயிலேறிப் புறப்படும் சாயங்காலம் இன்னொரு கஷ்டம் நேரிட்டது. அங்கு ஆடத் தீர்மானித்த முதல் நாடகமாகிய ‘மனோஹரன்’ எனும் நாடகத்தில் முக்கிய ஸ்திரீ பாகமாகிய பத்மாவதி வேடம் தரிக்க வேண்டிய பத்மநாபராவ், ரெயில் ஸ்டேஷனுக்கு வந்து தான் எங்களுடன் சேலத்திற்கு வர முடியாதென்று தெரிவித் தார். அவர்மீது குற்றமில்லை. அவரும் அறியாதபடி ஏதோ அசந்தர்ப்பம் நேரிட்டது. இரண்டு நாட்கள் முன்னதாகத் தெரிந்திருந்தாலும் வேறு யாரையாவது ஏற்பாடு செய்யலாம். இப்போழுது என்ன செய்வது என்று யோசித்தவனாய், ஸ்வாமி இருக்கிறார் பார்த்துக்கொள்வோம் என்று புறப்பட்டுப் போனேன். சேலம் போய்ச் சேர்ந்ததும் எனக்கு ஒரு யோசனை பிறந்தது. எம். தேசிகாச்சாரியார் என்னும் வேறொரு ஆக்டரை, அன்று சாயங்கால ரயிலில் கட்டாயமாய்ப் புறப்பட்டு வரும்படி தந்தி அனுப்பினேன். தெய்வாதீனமாய் அவர் அப்படியே புறப்பட்டு நாடகத் தினம் காலை வந்து சேர்ந்தார். அவருக்கு ஒருமுறை பத்மாவதியின் பாகத்தைப் படித்துக் காட்டி உங்களாலானது பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரும் வெகு சிரத்தையோடு, வேறொன்றையும் கவனிக்காமல்,
அந்தப் பாகத்தைக் குருட்டுப்பாடம் செய்து அன்றிரவு மிகவும் நன்றாக நடித்தார். அவ்வாறு சமயத்திற்குக் கைகொடுக்கும் ஆக்டர்கள் பலர் எனக்கு உதவியாக இருந்தபடியால், அக்காலங்களிளெல்லாம் நான் எடுத்த காரியத்தை விடாமல் பூர்த்தி செய்யும்படியான சக்தி இறைவன் அருளால் எனக்கு இருந்தது. தற்காலத்தில் அநேக சபைகளில் ஒரு நாடகத்தில் ஒரு முக்கிய ஆக்டருக்கு ஏதாவது அசந்தர்ப்பம் நேரிட்டால், அந்நாடகத்தையே விட்டுவிடும்படி நேரிட்டிருக்கிறதைப் பன்முறை பார்த்திருக்கிறேன். கூடுமானவரையில், சந்தர்ப்பங்கள் வாய்க்கும் பொழுது, எந்தப் பாத்திரத்தையும், க்ஷணத்தில் எடுத்துக் கொள்ளும்படியான ஆக்டர்களை உடைத்தாயிருப்பது ஒரு சபை செய்த பாக்கியமெனவே கருத வேண்டும்.
நாங்கள் சேலத்தில் நாடகம் ஆடிய நாடக சாலைக்கு அப்பொழுது சேலம் எலெக்ட்ரிக் தியேடர் என்று பெயர் இருந்தது. இந் நாடகசாலை எங்களுக்கு மிகவும் சௌகர்யமாக, நாங்கள் இறங்கியிருந்த பெரிய கட்டிடத்திற்கு எதிரிலேயே இருந்தது. எங்கள் வழக்கப்படி நாடகத் தினம் சாயங்காலம் 5 மணிக்கெல்லாம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, நாடக சாலைக்குப் போய் வேஷம் தரித்துக்கொண்டோம். நாடகம் ஆரம்பமாவதற்கு அரைமணிக்கு முன்பாகவே நாடக சாலை நிரம்பிப்போன விஷயம் அங்கு வந்தவர்களின் கூச்சலினால் அறிந்து சந்தோஷப்பட்டேன். எனக்கு முக்கியமாகவிருந்த சந்தோஷம் என்னவென்றால், நம்மை நம்பி வடிவேலு நாயகர், அதிகப் பணம் செலவழித்திருக்கிறார். ஒருவேளை வசூல் அதிகமாயாகாது அவருக்கு நஷ்டம் வந்தால் என்ன செய்வது என்கிற என் சந்தேகம் நிவர்த்தியானதேயாம். இந்தச் சந்தோஷத்துடன் நாடகத்தை ஆரம்பம் செய்ததும், எனது வார்த்தைகளில் சிலவற்றை நான் பேசியதும், நாடக சாலைகளிலிருந்த விளக்குகள் எல்லாம் ஒரே விசையாக அவிந்துபோய்விட்டன! இரண்டு மூன்று நிமிஷங்கள் நாடகசாலை முழுவதும் ஒரே இருட்டாக விருந்தது. அம்மட்டும் நாடகம் பார்க்க வந்த ஏராளமான ஸ்திரீ புருஷர்கள், பயமின்றித் தங்கள் இடங்களிலேயே பேசாதிருந்தனர். ஏதாவது கொஞ்சம் காபராவாகியிருந்த போதிலும் கஷ்டமாய் முடிந்திருக்கும். உடனே வெளியிலிருந்து ஒரு வாஷிங்டன் விளக்கை மேடையின் மீது
கொண்டு வந்து வைக்கும்படி ஏற்பாடு செய்தார் வடிவேலு நாயக்கர். இதென்னடா, ஆரம்பத்திலேயே இந்த அசகுனம் என்று என் பக்கலிலிருந்த சில ஆக்டர்கள் வருத்தப் பட்டனர். ஸ்வாமியிருக்கிறார் இதற்கெல்லாம், பயப்படாதீர்கள் என்று சொல்லி, தேற்றிக் கொண்டே யிருக்கும் பொழுது தெய்வாதீனத்தால் எலெக்டிரிக் விளக்குகளெல்லாம் மறுபடி எரிய ஆரம்பித்தன. ஈஸ்வரன் கருணையென்று நினைத்து நாடகத்தை நடத்திக் கொண்டு போனோம். இதை முக்கியமாக இங்கு எழுதியதற்கு ஒரு காரணமுண்டு. மின்சார விளக்குகளை உடைய நாடக சாலைகளிலெல்லாம் இம்மாதிரியான இக்கட்டுகள் அடிக்கடி சம்பவிக்கலாம். வாஷிங்டன் லைட் முதலிய விளக்குகளை உடைய சாலைகளில், ஒன்று திடீரென்று அணைந்து போனாலும் மற்றவை எல்லாம் எரியும். இந்த எலெக்டிரிக் விளக்குகளுள்ள நாடக சாலைகளில், ஒன்று போனால் எல்லாம் அடியோடு அவிந்து போகும். ஆகவே, நாடகத்திற்கு இடைஞ்சல் இல்லாதபடியும், அத் தருணங்களில் ஜனங்கள் பயப்படாமலிருக்கும்படியும், எலெக்டிரிக் விளக்குகளுள்ள நாடக சாலையில் ஆடும்பொழுதெல்லாம் கையோடு இரண்டு வாஷிங்டன் விளக்குகள் வைத்திருப்பது அதி அவசியம் என்று நாடகமாட விரும்பும் எனது இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே இதை எழுதலானேன். மேற்சொன்ன சம்பவம் நேர்ந்த பிறகு எங்கள் சபை எங்கு நாடகமாடினாலும், இரண்டொரு வாஷிங்டன் விளக்குகள் கையிருப்பாக இல்லாமல் ஆடுவதில்லை சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆடும்பொழுதும் இம்மாதிரி யான கஷ்டம் நேர்ந்திருக்கிறது. வெளியூர்களில் கேட் பானேன்? ஆகவே மேற்சொன்னபடி முன் ஜாக்கிரதையாக இருப்பது அதி அவசியமாகும்.
இவ்விடத்தில் நாங்கள் ஆடிய முதல் மூன்று நாடகங்களாகிய மனோஹரன், சாரங்கதரன், லீலாவதி சுலோசனா நாடகங்களுக்கு நல்ல வசூலாயிற்று; நாடகங்கள் நன்றா யிருந்தனவென்று சேலம் நாடகாபிமானிகள் புகழ்ந்தனர். இந்த மூன்று நாடகங்களிலும் மிக்க நல்ல பெயர் எடுத்தவர் எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலுவே. இவ்வாறு நான் கூறியது அவரிடத்திலிருந்த என் சிநேக வாஞ்சையா லன்று; இது வாஸ்தவம் என்று ஒரு சிறு விஷயத்தைக்
கொண்டு நிரூபிக்க விரும்புகிறேன். நான்காவது நாடக மாகிய நந்தனார் நாடகத்திற்கு விளம்பரங்கள் அச்சிட வேண்டி வந்தபொழுது, வடிவேலு நாயகர் என்னிடம் வந்து, “ரங்கவடிவேலுவுக்கு நந்தனார் நாடகத்தில் ஒரு பாகமுமில்லை. அவர் பெயர் நோடீஸ்களில் இருந்தால் தான் வசூலதிகமாக ஆகும் என்று எல்லோரும் இங்கு சொல்கிறார்கள். எப்படியாவது அவரை நந்தனார் நாடகத்தில் ஏதாவது பாத்திரமாக வரச் சொல்லுங்கள்” என்று வற்புறுத்தினர். இதென்னடா தர்மசங்கடம் என்று, ரங்கவடிவேலுவுடன் கலந்து பேசி, ரங்கவடிவேலுவை நர்த்தனம் செய்ய ஏற்பாடு செய்து, அதற்காகக் கதையைக் கொஞ்சம் மாற்றி, வேதியர் வீட்டில் அவர் பெண் ருதுவானதற்காக ஏதோ கச்சேரி வைப்பதாக ஏற்பாடு செய்து, அதில் நடனமாதாக ஆடுவதாக ரங்கவடிவேலுவின் பெயரை நோட்டீசுகளில் அச்சிடும்படி உத்தரவு கொடுத்தேன். வடிவேலு நாயகரும் குதூஹலத்துடன் உடன்பட்டு அவ்வாறே அச்சிட்டார்.
மேற்சொன்ன நந்தனார் நாடகத்தில் முடிவில் சேலம் நகரவாசிகளில் இரண்டு மூன்று பெயர், எங்கள் சபையைப் பற்றிப் புகழ்ந்து பேசிவிட்டு இன்னும் இரண்டொரு நாடகங்கள் அங்கு ஆட வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். நான் அவர்களுக்குத் திரும்பி வந்தனம் அளித்தபொழுது அதைப்பற்றி யோசிக்கிறோம் என்று சொன்னேன். மறுநாள் காலை, எல்லா விஷயங்களிலும் யோசித்துப் பார்த்தபொழுது இங்கு நடந்த நான்கு நாடகங் களும் இரவு நாடகங்களானபடியால் ஆக்டர்களெல்லாம் மிகவும் களைப்புற்றிருக்கிறார்கள். ஆகவே ஆடமுடியா தென்று எங்கள் கமிட்டியாருக்குச் சொன்னேன்; ஆயினும் மற்ற ஆக்டர்களெல்லாம் இன்னொரு நாடகமாவது போட வேண்டுமென்று உத்தேசம் கொண்டனர். அதன் பேரில் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு என்னிடம் வந்து அதற் கெப்படியாவது இசைய வேண்டுமென்று வற்புறுத்தினார். அதன் மீது திருஉளச்சீட்டுப் போட்டுப் பார்ப்போம். அதன்படி நடப்போம், என்று சொல்லி சமாதானம் செய்து, அங்ஙனமே செய்து பார்த்ததில், “வேண்டாம்” என்று வந்தது! அதன்பேரில் வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டது. பிறகு நாங்கள் மறுநாள் புறப்பட்டுக் கோயமுத்
தூருக்குப் போக ரெயிலேறும் பொழுது, அந்த கலாட்டாவில் பலர் ஸ்டேஷனுக்கு வந்து எங்கள் வழியை மறித்து இன்னொரு நாடகம் போடுவதாகச் சொல்லிவிட்டு, போடாமல் போவது நியாயமா? என்று பகிரங்கமாகக் கேட்டனர்! அவர்களையெல்லாம் சமாதானப்படுத்துவது எனக்குப் பெருங்கஷ்டமாயிற்று! என்ன நியாயங்கள் கூறியும் அவர்கள் திருப்தியடையவில்லை; எங்கள் மீது குறை கூறி வருத்தத்துடனேதான் திரும்பிப் போயினர். அவர்கள் அவ்வளவு அன்போடு கேட்கிறார்களே, அவர்கள் வேண்டு கோளுக்கிசையாது போகிறோமேயென்று நான் மிக வருத்தப்பட்டேன். ஆயினும் ஆராய்ந்து ஒரு காரியத்தைத் தீர்மானித்த பிறகு, அதனின்றும் மாறலாகாது என்கிற என் கோட்பாட்டின்படி நடக்க வேண்டியதாயிற்று; அநேக ஊர்களுக்கு எங்கள் சபை போயிருந்தபொழுது அங்குள்ள பெரிய மனிதர்கள், இன்னும் இரண்டொரு நாடகம் போடலாகாதா என்று கேட்டிருக்கின்றனர்; ஆயினும் இந்த ஊர் ஒன்றில்தான் பேர் ஊர் தெரியாத பொதுஜனங்கள் இப்படி எங்களை வற்புறுத்தியது; ஆகவே எங்கள் ஆக்டர்களெல்லாம், சேலத்தை விட்டுப் புறப்பட்டபொழுது, பிரிய மனம் இன்றியே பிரிந்தோம் என்று கூறுவது அதிகமாகாது.
இவ்வூரிலுள்ள பெரிய மனிதர்கள், எங்கள் சபைக்கு ஒரு நாள் விருந்து நடத்தியதுடன் எங்களுக்கு வந்தனோபசாரப் பத்திரம் ஒன்றும் அளித்தனர். அது இன்னும் எங்கள் சபையில் தமிழ் ஒத்திகை அறையில் மாட்டப்பட்டிருக்கிறது.
சேலத்தை விட்டுக் கோயமுத்தூருக்குப் போனபோது, சேலத்தில் எல்லாம் மிகவும் சந்தோஷமாய் முடிந்ததே, இங்கு எப்படியிருக்குமோ என்னும் சந்தேகத்துடன்தான் போய்ச் சேர்ந்தோம். ஆயினும் இப் பயம் இங்கு எங்கள் முதல் நாடகமாகிய ‘லீலாவதி சுலோசனா’ ஆரம்பிப்பதற்கு ஒரு மணிக்கு முன்னதாகவே, அறவே நீங்கியது.
இந்த முதல் நாடகத்திற்கு முந்திய தினம் - வெள்ளிக்கிழமை என்று நினைக்கிறேன். என் வழக்கப்படி, எங்கள் ஆக்டர்களை யெல்லாம், கோயமுத்தூருக்கு அருகிலுள்ள மேலைச் சிதம்பரம் என்று சொல்லப்பட்ட பேரூர் என்னும் கிராமத்திற்கு ஸ்வாமி தரிசனத்திற்காக அழைத்துச் சென்றேன். அங்கு நான் ஓர் ஆபத்தினின்றும் ஈசன்
கருணையினால் தப்பினேன் என்று நம்புகிறேன். கோயிலுக்குப் போகுமுன் கை கால்களைக் கழுவிக்கொண்டு அநுஷ்டானம் செய்வதற்காக அங்கருகிலுள்ள ஒரு சிற்றாறுக்கு எல்லோரும் போனோம். அவ்விடம் ஒரு பாறையில் பக்கப்படி வழியாக இறங்கி, அற்பசங்கைக்காக உட்கார்ந்தேன். நான் எழுந்திருக்கும் பொழுது திரும்பிப் பார்க்க என் காலுக்கு ஓர் அடிக்குள்ளாக ஒரு பெரிய நல்லபாம்பு இருக்கக் கண்டேன்! தெய்வாதீனத்தால் அதன் வாயில் ஒரு தவளையைப் பற்றிக்கொண்டிருந்தது. இல்லாவிடில் அதனால் நான் கடிக்கப்பட்டிருப்பேன் என்று நிச்சயமாய் நம்புகிறேன். உடனே நான் எனது நண்பர்களைக் கூவியழைக்க அவர்கள் ஓடி வந்தனர்; நாங்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, அத் தவளையைக் கவ்விக்கொண்டே, அப் படிக்கட்டிலுள்ள ஒரு பொந்தில் அது நுழைந்தது. குறைந்த பட்சம் ஆறடி யிருக்கும் அதன் நீளம். எனது நண்பர்களெல்லாம் இப் பாம்பு உன்னைக் கடித்து நீ இறந்திருந்தால் என்னாவது என்று கலங்கினார்; அம்மட்டும் அந்த ஹானி நேரிடாமல் தப்பினாயே என்று சந்தோஷப்படாதவர் ஒருவருமில்லை.
என் நண்பர்களுக்கு என்மீதில் உண்மையிலுள்ள அன்பு அப்பொழுதுதான் எனக்கு முற்றிலும் வெளியாயது. “கேட்டினு முண்டோர் உறுதி, கிளைஞரை நீட்டியளப்ப தோர் கோல்” என்னும் தெய்வப் புலமை திருவள்ளுவர் குறள் எனக்கு நினைவிற்கு வந்தது. உடனே பேரூர் அம்பலம் சென்றபொழுது, பாம்பணிநாதன் பாதத்தினைப் பணிந்து, எங்கள் சபைக்காக இன்னும் சில வருடங்கள் உழைக்க வேண்டி என்னைக் காத்த அவரது பெருங் கருணையைத் துதித்தேன்.
நான்காம் பாகம் முற்றிற்று
நாடக மேடை
நினைவுகள்
ஐந்தாம் பாகம்
கோயம்புத்தூரில் நாங்கள் நாடகங்களாடிய சாலை, மிஸ்டர் வின்சென்ட் என்பவரால் கட்டப்பட்டது. இதை விடப் பெரிய நாடக சாலைகளைப் பார்த்திருக்கிறேன்; இதைவிட அழகிய நாடக சாலைகளைப் பார்த்திருக்கிறேன்; ஆயினும் இதைப்போன்ற ஆக்டர்களுக்குச் சௌகர்யமான நாடக சாலையை நான் பார்த்ததில்லை. அரங்கத்திலிருந்து மெல்லப் பேசினாலும், ஹால் முழுவதும் ஸ்பஷ்டமாய்க் கேட்கும்படி கட்டப்பட்டது; அரங்கத்தின் பின்பாகம் வேஷம் தரிப்பதற்காக இரண்டு மூன்று பெரிய விசாலமான அறைகள் இருந்தன; அன்றியும் மற்ற நாடகசாலைகளிலில்லாத இவ்விடமிருந்த புதுமையென்னவெனில், மற்ற நாடக சாலைகளில் ஆக்டர்கள் நாடகம் ஆரம்பித்த பிறகு, ஏதாவது பாட்டுகளின் சுருதிகளை மாற்ற வேண்டியிருந்த போதிலும், அல்லது ஏதாவது பாட்டை விடவேண்டியிருந்த போதிலும், பக்க வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியனுப்ப வேண்டியிருந்தால், மேடைக்கு வெளியே ஓர் ஆள் அனுப்பி அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இங்கு அக்கஷ்மில்லாது, நேபத்யத்திலிருந்து அவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு அரங்கத்தின்கீழ் சுரங்கம் மாதிரி ஒரு வழியாக ஹாலில் உட்கார்ந்திருப்பவர்கள் ஒருவருமறியாத படி, சென்று அவர்ளுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் இன்னொரு பிரயோஜனமும் உண்டு. மற்ற நாடகசாலைகளிலெல்லாம், வேடம் தரித்த ஒரு ஆக்டர், தனக்கு வேலையில்லாத ஒரு காட்சியில், வெளியிற் போய் அக்காட்சி எவ்வாறு நடக்கிறதெனப் பார்க்க சாத்தியமில்லை; இந்த நாடக சபையில் இது சாத்தியமாயிருந்தது. தரித்த வேஷத்துடன் இந்தச் சுரங்க வழியாக, பக்க வாத்தியக்காரர்களிருக்குமிடம் போய் உட்கார்ந்திருந்து பார்த்துவிட்டு, ஹாலில் வந்திருப்பவர்கள் ஒருவரும் அறியாதபடி, திரும்பி வரச் சாத்தியமாயிருந்தது. இந்தக் சூழ்ச்சியை அறிந்தவுடன் எங்கள் ஆக்டர்களெல்லாம் ஒவ்வொருவராக இந்த வழியாகப் போய் உட்கார்ந்து பார்த்து களித்து வந்தார்கள்; நானும் அங்ஙனமே செய்தேன். மற்ற நாடக சாலைகளிலும் இம்மாதிரியான ஏற்பாடு இருக்குமாயின் மிகவும் சௌகர்யமாயிருக்கும். சீமை முதலிய இடங்களில் இப்படிப்பட்ட ஏற்பாடுகள் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். தென் இந்தியாவில் இதை இந்த நாடக சாலையில்தான் கண்டேன். இந் நாடக சாலையை இவ்வளவு சௌகர்யமாக அமைத்த அதன் புரொப்ரைட்டர் வின்சென்ட் என்பவர் இங்கு வந்தாடும் சபைகளுக்கெல்லாம் கூடிய சௌகர்யங்களை எப்பொழுதும் செய்து வருவதாகக் கேள்விப்பட்டேன். எங்களுக்கும் அப்படியே தானாக வேண்டிய சௌகர்யங்களை யெல்லாம் மனமுவந்து செய்து வந்தார். அவர் ஒருக் கால் இதை வாசிப்பாராயின், நான் இங்கெழுதியதையே என் மனமுவந்த வந்தனமாகக் கொள்வாராக! இவ்வூரில் எங்கள் முதல் நாடகமாகிய “லீலாவதி சுலோசனா” நாடக தினம், நாடகக் கொட்டகைக்குப் போவதற்காக எல்லா ஆக்டர்களையும் அழைத்துக் கொண்டு நான் புறப்பட்டபொழுது நடந்த ஒரு சிறு விஷயத்தை இங்குக் குறிக்க விரும்புகிறேன். எந்தக் காரியத்தை நான் ஆரம்பிப்பதாயினும் விக்னேஸ்வரரைத் தியானம் செய்துவிட்டு ஆரம்பிப்பது சிறு வயது முதல் என் வழக்கம். அப்படியே என் மனத்தில் தியானம் செய்துவிட்டு, எனது ஆக்டர்களை அழைத்துக்கொண்டு புறப்பட, நான் நாங்கள் குடியிருந்த வீட்டின் படிக்கட்டை விட்டு இறங்கியவுடன், யாரோ தெருவில் போய்க் கொண்டிருந்தவன் பலமாகத் தும்மினான். உடனே என் பின்னால் நின்று கொண்டிருந்த எனது நண்பர் ராம கிருஷ்ண ஐயர், “வாத்தியார்! எவனோ தும்முகிறான், இப்பொழுது புறப்படாதீர்கள்!” என்று தடுத்தார். இன்னும் சிலரும் அப்படியே சொன்னார்கள். உடனே திருஞான சம்பந்த ஸ்வாமிகள் கோளறு திருப்பதிகம் பாடின சந்தர்ப்பத்தை நினைத்துக்கொண்டு, ஸ்வாமியிருக்கிறார் புறப்படுங்கள் என்று சொல்லி, நிற்காது நாடக சாலைக்குச் சென்றேன். அந்த நாடக சாலையில் நாடகமானது நன்றாயிராது, ஜனங்கள் அதிகமாய் வராது, ஏதாவது கெடுதியாய் முடிந்திருந்தால், “தும்பினபொழுது புறப்பட்டதனால்தான் இங்ஙனம் நேர்ந்தது. எங்கள் வார்த்தையைக் கேளாமற் போனீரே” என்று என்னை வைதிருப்பார்கள் எனது நண்பர்கள். அன்றைத் தினம் நாடகமானது நன்றாய் ஒரு விக்கினமுமின்றி ஆடப்பட்டது; அன்றியும் நாடகம் ஆரம்பமாவதற்கு ஒரு மணிக்கு முன்பாகக் கொட்டகையில் ஒரு ரூபாய் வகுப்பினர்க்கே இடமில்லையாம். 8 அணா காலரி வகுப்பினரை நெருங்கி உட்காரச் செய்து, வெளியிலிருந்து சில பெஞ்சுகளைக் கொண்டு வந்து போட்டு ஏற்பாடு செய்தார் நாடக சாலை புரொப்ரைட்டர். நான் இதை இங்கு எழுதியதற்கு முக்கியக் காரணம் தெய்வத்தை நம்பி எக் காரியத்தையும் ஆரம்பிப்பவர்கள், இம்மாதிரியான சகுனங்களுக்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை என்பதே.
இவ்வூரில் இரண்டு தெலுங்கு நாடகங்கள் ஆடப்பட்டன; இவைகளுக்காகப் பல்லாரியிலிருந்து தெலுங்கு நாடகமாடுவதில் மிகவும் பிரசித்திபெற்றிருக்கும் எனது நண்பர் ராகவாச்சார்லுவை வரவழைத்திருந்தோம். ஆயினும் அவைகளுக்குத் தமிழ் நாடகங்களுக்கு வந்த ஜனங்களில் மூன்றிலொருபங்குகூட வரவில்லை. இதனால் நான் தெலுங்கு நாடகங்களைப்பற்றி ஏதோ இழிவாகக் கூறுகிறேன் என்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் எண்ணக்கூடாது; நான் என் கண் கொண்டு பார்த்த இந்திய ஆக்டர்களுக்குள், எனது நண்பர் ராகவாச்சார்லுவுக்குச் சமானமானவர்கள் இல்லையென்று நான் உறுதியாய்க் கூறக்கூடும்; அன்றியும் அவர் ஆடும் அநேக நாடகங்களில் “ராமராஜு” அல்லது “விஜயநகர சமஸ்தானத்தின் அழிவு” என்னும் நாடகமானது ஒரு மிகச் சிறந்தது என்று எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டியது. அப்படியிருந்தும் அவர் இங்கு முக்கிய வேடம் தரித்த மேற்கண்ட நாடகத்திற்கும் நள சரித்திரத்திற்கும், ஜனங்கள் வராதது (நெல்லூரிலிருந்தது போல) ஜனங்கள் குற்றமல்ல; முக்கியமான தமிழ் நாடாகிய கோயமுத்தூரில் தெலுங்கு நாடகமாடிய எங்கள் சபையோரின் குற்றங்களே. இவ்விரண்டு தெலுங்கு நாடகங்களினால் எங்கள் பைக்கு ரூ 160-10-6 நஷ்டம் நேரிட்டது. தமிழ் நாடகங்களின் கண்டிராக்டினால் கிடைத்த ஆயிரம் ரூபாய் லாபத்தினின்றும் அந்நஷ்டத்தைக் கழிக்க வேண்டி வந்தது. “பிச்சை எடுத்ததாம் பெருமாள், அத்தைப் பிடுங்கியதாம் அனுமார்” என்னும் பழமொழியை எனது நண்பர்களிற் சிலர் எனக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நினைப்பூட்டினர்.
நாங்கள் இங்காடிய மற்றிரண்டு தமிழ் நாடகங்களாகிய மனோஹரன், காலவரிஷி என்பவற்றிற்கு முதல் நாடகத்தில் வந்தது போலவே வெகு ஜனங்கள் வந்திருந்து, நாடக சாலையில் இடம் போதாமற் போயிற்று. நாடக சாலை புரொப்ரைட்டர் வின்ஸென்ட் என்பவர், சாதாரணமாக, நாடக ஆரம்பத்திற்கு ஒரு மணிக்கு முன்தான் நாடகசாலையின் கதவுகளைத் திறக்கிற வழக்கமாம். இந்தத் தமிழ் நாடகங்களுக்கெல்லாம் இரண்டு மணி காலத்திற்கு முன்பே ஜனங்கள் வெளியில் சேர்ந்து கோஷம் செய்து கொண்டிருக்கின்றனர் என்று அறிந்தவராய், அந்த வழக்கத்தையும் மாற்றி ஏழு ஏழரை மணிக்கெல்லாம் கதவுகளைத் திறந்து விட்டார்! நந்தனார் சரித்திர நாடகத்திலும் சேலத்தில் செய்த யுக்தியின்படி, இங்கும் எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலுவை நர்த்தனம் செய்யச் சொல்லி, அவர் பெயரை நாடக விளம்பரங்களில் அச்சடித்தோம். ஏதோ என் சிநேகிதனை நான் அதிகமாய்ப் புகழ்கிறேன் என்று எனது நண்பர்கள் எண்ணாதிருக்கும்படி இங்கு நடந்த ஒரு சிறு விருத்தாந்தத்தை எழுதுகிறேன்.
இவ்வூரில் கடைசியாட்டமாக வைத்துக்கொண்டது எனது நண்பர் டி.சி. வடிவேலு நாயகர் எழுதிய “வள்ளியின் கலியாணம்” அதில் நாடகாசிரியராகிய வடிவேலுவே வள்ளியாகவும் டாக்டர் ஸ்ரீனிவாச ராகவாச்சாரி, சுப்பிர மணியராகவும் நடிக்க வேண்டுமென்று ஏற்பாடாயிருந்தது. நோட்டீஸ் முதலியனவெல்லாம் அச்சிட்டுமாயது. இந் நாடகத்தை ஆடவேண்டுமென்று எங்கள் நிர்வாக சபையில் தீர்மானித்ததற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், எல்லாம் சம்பந்தத்தின் நாடகங்களாக இருக்கக் கூடாது, மற்றவர்களுடைய நாடகங்களையும் ஆட வேண்டும் என்பதுடன்; எல்லாத் தமிழ் நாடகங்களிலும் சம்பந்தமும் ரங்கவடிவேலுவும் பிரதானமான பாத்திரங்களை எடுத்துக் கொள்ளலாகாது, மற்றவர்களுக்கும் அயன்பார்ட் என்னும் பிரதான பாத்திரங்களைக் கொடுக்க வேண்டும் என்று, எனது நண்பர்களில் ஒருவர் நிர்வாக சபையின் கூட்டத்தில் பிரேரேபித்தார். அதன் பேரில் அவர் கூறுவது நியாமென்று நானும் எனது நண்பர் ரங்கவடிவேலுவும் ஒப்புக்கொண்டோம். இத்தனை விவாதத்தின் பேரில் தீர்மானிக்கப்பட்ட நாடகம் இந்த ‘வள்ளி கலியாணம்.’ நந்தனார் நாடகம் முடிந்தவுடன், மறுநாள் காலை எனது நண்பர் வடிவேலு நாயகர் என்னிடம் வந்து “வாத்தியார், ஒரு சின்ன வேண்டுகோள். இந்தக் கடைசி நாடகத்தை மாற்றிவிடலாமென்றிருக்கிறேன். இங்குள்ளவர்களெல்லாம் ரங்கவடி வேலுவும் நீங்களும் ஆடினால்தான் நல்ல வசூலாகுமென்கிறார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது; ஆகவே, அந்த வள்ளி கலியாணத்திற்குப் பதிலாக, உங்கள் ‘சாரங்கதரா’ நாடகத்தை வைத்துக்கொள்ளலாம்; அதில் நீங்களும் ரங்கவடிவேலுவும் ஆட வேண்டும்” என்று வற்புறுத்தினார். அதன் பேரில் நான் ரங்கவடிவேலுவுடன் கலந்து பேசி, “அப்பா, எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபமில்லை. ஆயினும் இதை மாற்றுவதில், நாங்கள் சம்பந்தப் பட்டிருப்பதால், நாங்கள் ஒன்றும் பேசமாட்டோம். நீ மற்றக் கமிட்டி மெம்பர்களை யெல்லாம் கேட்டு, அவர்களை எல்லாம் சம்மதிக்கச் செய்தால் ஆட்சேபமில்லை” என்று சொன்னேன். அதன்பேரில் மற்றக் கமிட்டி மெம்பர்களையெல்லாம் கேட்டு அவர்களுடைய சம்மதியைப் பெற்று, கடைசி நாடகத்தை, “வள்ளியின் கலியாணத்தி” லிருந்து “சாரங்கதரா” நாடகத்திற்கு மாற்றினார். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், முற்கூறிய நாடகம் தான் இயற்றியது, அதில் தனக்கு முக்கிய ஸ்திரீ பார்ட் இருந்தது; இருந்தும் அதைவிட்டு, தனக்கு முக்கியமான பாகமில்லாத, ரங்கவடிவேலுவிற்கும் எனக்கும் முக்கிய பாகங்களுடைத்தாயிருந்த பிற்கூறிய நாடகத்தை வைக்கும்படி இவரே பிரயாசை எடுத்துக்கொண்டதேயாம். இவர் இவ்வாறு செய்தது, ஒரு விதத்தில் தன் சுய நன்மைக்காக இருந்தபோதிலும், எங்கள் சபையின் பொது நன்மைக்காகவுமிருந்தது என்பதற்கையமில்லை. அவரும், மற்றெல்லோரும் எண்ணியபடியே, “சாரங்கதரா” நாடகத்திற்கு மிகவும் அதிகமாக ஜனங்கள் வந்து, ஏராளமான பணம் வசூலாயிற்று. எட்டு எட்டரை மணிக்கெல்லாம் கடைசி வகுப்புக்கு டிக்கட்டுகள் விற்பதை நிறுத்தி ஒரு ரூபாய் டிக்கட்டுகளே விற்றதாக எனக்கு ஞாபகம். இங்கு நடத்திய எல்லா நாடகங்களையும் விட இதற்குத்தான் அதிக டிக்கட்டுகள் விற்கப்பட்டன. அன்றியும் இந்நாடகமும் ஆரம்பமுதல் கடைசி வரையில் மிகவும் நன்றாய் நடிக்கப்பட்டதென்பது என் அபிப்பிராயம். இந்நாடகத்திலுள்ள ஒவ்வொரு முக்கியமான கட்டத்தையும் சபையோர்கள் மிகவும் சந்தோஷத்துடன் அனுபவித்துக் கரகோஷம் செய்து ஆக்டர்களைத் திருப்தி செய்தனர். நாடகம் முடிந்தவுடன் அதைப் பார்க்க வந்த அநேக பெரிய மனிதர்கள் எங்களிடம் வந்து, நாடகத்தைப்பற்றித் தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்து, எங்கள் சபை இங்கு நாடகம் நடத்துவது இதனுடன் முடிந்துவிட்டதே என்று தங்களுடைய வருத்தத்தையும் தெரிவித்தனர். எங்களுடைய ஆக்டர்களும் (நான் உள்பட) இன்னும் நாடக சபையில் ஆடுவதற்கில்லையே யென்று வருத்தப்பட்டோம்!
இவ்வூரில் நாங்களிருந்த பொழுது, அக்ரிகல்ச்சரல் காலேஜ் தலைவர்; ஸ்ரீமான் தாதலிங்க முதலியார் அவர்களும், சி. வெங்கட ராகவாச்சாரியார் அவர்களும், (பிறகு திவான் பகதூர் பட்டம் பெற்ற) சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் அவர்களும் எங்கள் சபையோருக்குச் செய்த விருந்தும் உபசரணையும் என்றும் மறக்கற்பாலதன்று. இம்முறை சேலம் கோயமுத்தூர் பிரயாணம் மாதிரியாக இனி எப்பொழுதும் வரப்போகிறதில்லை என்று இதைப்பற்றி இன்றும் புகழ்ந்து பேசுவது வழக்கம். நானும் அங்ஙனமே எண்ணுகிறேன். இதற்கு முன் செய்த பிரயாணங்களிலெல்லாம் ஏதாவது ஒரு குறை வந்து கொண்டிருந்தது. இந்தச் சேலம்- கோயமுத்தூர் பிரயாணத்தில்தான் ஆதி முதல் அந்தம் வரை ஒரு குறையுமின்றி எல்லாம் மிகவும் சந்தோஷமாய் முடிந்தது. ஆகவே, எல்லாம் சுலபமாய் முடிந்து கோயமுத்தூரை விட்டுச் சென்னைப் பட்டணம் புறப்பட்ட தினம், எப்படி முடியுமோ என்றிருந்த பாரம் நீங்கினவனாய், “காற்றின் மீது கொஞ்சம் நடந்தேன்” என்று ஒப்புக்கொள்ள வேண்டியதே.
எங்கள் சபைக்குச் சொந்தமாக, ஒரு நாடக சாலையும் இருப்பிடமும் கட்டுவற்காகத் தக்க இடம் வேண்டிப் பல வருஷங்களாகப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்ததற்கு இவ் வருஷம் சென்னை கவர்னர் லார்ட் வில்லிங்டன், அவர்கள் தன் கவுன்சில் மந்திரிகளுடன் ஆலோசித்து எங்கள் சபைக்கு எங்கள் வேண்டுகோளுக்கிணங்கி, நேபியர் பார்க்கில் ஒரு இடம் கொடுக்க இசைந்ததாக, சந்தோஷமான சமாச்சாரம் கிடைத்தது. இதற்காக நான் எடுத்துக் கொண்ட பிரயத்தனமும், பிறகு எங்கள் பிரசிடெண்டாகிய டி. வி. சேஷகிரி ஐயர் அவர்கள் அங்குக் கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் போட்டதும், முடிவில் இந்த இடத்தை கவர்ன்மெண்டாருக்கே நாங்கள் திருப்பிக் கொடுத்த கதையும் பிறகு எழுத வேண்டி வரும்.
இவ் வருஷம், அநேக நாட்களாக எங்கள் சபைக்காக உழைத்து வந்த வெ. வெங்கடாசல ஐயர் அவர்களுக்கு உபகாரமாக ‘மனோஹரா’ என்னும் நாடகத்தை நடத்தி, செலவுபோக மிகுதிப் பணமாகிய ரூபாய் 446-3-0 ஐ அவருக்குதவினோம். இந்த நாடகம் நடத்தியதில் ஒரு விசேஷமுண்டு. விக்டோரியா பப்ளிக் ஹாலின் மேல் மாடியில் இந்நாடகம் நடத்தினால் எங்கள் சபையின் அங்கத்தினர்களுக்கும், வருகிற மற்றவர்களுக்கும் இடம் போதாதென்று கருதினவர்களாய் பீபில்ஸ் பார்க்கின் வடகிழக்கில் கட்டியிருக்கும் ராயல் தியேடர் என்னும் நாடக சாலையில் இதை நடத்தினோம். இதுதான் முதல் முறை எங்கள் சபை சென்னையில் விக்டோரியா பப்ளிக் ஹாலை விட்டு, நாடகக் கம்பெனிகள் ஆடும் நாடக சாலையில் நாடகம் நடத்தியது. மேற் சொன்னபடி மற்ற நாடக சாலைகளில் நாம் ஆடுவது நமது சபையின் அந்தஸ்திற்கு ஏற்றதன்று என்று சிலர் ஆட்சேபித்தனர். வெளியூர்களுக்குப் போயிருந்த பொழுது, நாடகக் கொட்டகைகளில் நமது சபை நாடகங்களை நடத்தவில்லையா? அன்றியும், நாம் அங்குப் போய் ஆடுவதனால் அந்த நாடக சாலைக்குக் கொஞ்சம் கௌரவம் அதிகமாகுமேயொழிய, நம்முடைய அந்தஸ்து இழிபடாது என்று பதில் உரைத்து, அந்தக் கொட்டகையிலேயே ஆடினோம். நாங்கள் எண்ணியபடியே, கடைசி வகுப்பாகிய காலெரிக்குத் தவிர மற்ற வகுப்புகளுக்கெல்லாம் ஜனங்கள் ஏராளமாய் வந்தனர். எனக்கு இக்கொட்டகையில் ஆடுவதென்றால், சிறிது கூச்சமாகத்தானிருந்தது. சாதாரணமாக விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடகமாடினால், கற்றறிந்தவர்கள்தான் வருவார்கள்; இவ்விடங்களிலெல்லாம் நாடகம் பார்க்க வரும் ஜனங்கள் பெரும்பாலும் பாமர ஜனங்களே; ஆகவே, எங்கள் சபையின் நாடகம் இவர்களுக்கு எப்படி ருசிக்குமோ என்று சந்தேகப்பட்டேன்; அன்றியும் இந்த மாதிரியான நாடகக் கொட்டகைகளுக்கு வரும் ஜனங்களெல்லாம், சங்கீதத்தையே முக்கியமாக விரும்புவார்கள்; நானோ ‘மனோஹரா’ நாடகத்தில் ஒரு பாட்டும் பாடுவதில்லை. ஆகவே, இந்நாடகத்தை, “காலரி ஸ்வாமிகள்” என்று ஆங்கித்தில் கூறப்பட்ட பாமர ஜனங்கள் எப்படி ஏற்பார்களோ என்று சம்சயப்பட்டேன். ஆயினும் அன்று நாடகம் நடத்திய பிறகு அந்தச் சந்தேகமெல்லாம் அறவே நீங்கியது. எவ்விதம் ஆடியபோதிலும் ஆடுபவர்களிடம் தக்க திறமையிருந்தால் சோபிக்காமற் போகாது என்பதை நேராகக் கண்டேன். இதன் பிறகு இவ்விடத்தில் பன்முறை எங்கள் சபையார் நாளது வரை நாடகங்கள் நடத்தியிருக்கின்றனர்; இந்நாடகம் நடத்தியபொழுது, இக்கொட்டகையில் ஸ்ரீமான் கன்னையா என்பவர், கொட்டகைக்காரரிடமிருந்து வாடகைக்கு வாங்கிக் கொண்டு, தமது நாடகக் கம்பெனியின் நாடகங்களை நடத்திக்கொண்டிருந்தார். எங்கள் சபையார் மேற்சொன்னபடி தர்ம கைங்கர்யமாக அக்கொட்டகையில் நாடகம் நடத்த வேண்டுமென்று கேட்டபொழுது, மிகவும் சந்தோஷத்துடன் தான் போட்டுக் கொண்டிருந்த நாடகங்களையும் நிறுத்தி, இலவசமாக எங்களுக்கு அக்கொட்டகையை விட்டார். அன்றியும் நாடக தினம், தன் கம்பெனியின் படுதாக்கள், திரைகள் எல்லாம் எது வேண்டினும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் தயாள குணத்துடன் உதவினார். இம்மாதிரி இவர் உதவியது இம்முறை மாத்திரம் அன்று இதற்கப்புறம் பன்முறை எங்கள் சபைக்குத் தனது கொட்டகையையும் படுத்தாக்கள் உடுப்புகள் முதலியவையும் கொடுத்து உதவியிருந்தார்.
சாதாரணமாக ஒரு நாடகக் கம்பெனியார், மற்ற நாடகக் கம்பெனிகள் மீதாவது, நாடக சபைகள் மீதாவது பொறாமை கொள்வதுதான் உலக வழக்கமாயிருக்கிறது; அதற்கு மாறாக, நாடகமாடுவதையே தன் ஜீவனாதாரமாகக் கொண்ட இவர், எங்கள் சபையின்மீது இவ்வளவு அன்பு பாராட்டியது மிகவும் புகழத்தக்கதே. அந்த அன்பைப் பலவிதங்களில் நிரூபித்துள்ளார். ஒரு முறை எங்கள் சபை திருநெல்வேலிக்குப் போனபோது, அதற்குச் சற்று முன்பாக அவ்வூரில் நாடகமாடிக்கொண்டிருந்த இவர், தன் கடைசி நாடகத்தின் முடிவில் அவ்வூர் ஜனங்களுக்கு வந்தனமளித்தபோது, மேடையிலிருந்து, “நீங்கள் தமிழ் நாடகங்கள் எப்படிச் சரியாக நடக்க வேண்டுமென்று தெரிந்து கொள்ள விருப்பமுடையவர்களானால், வருகிற வாரம் சுகுண விலாச சபையார் இங்கு வந்து நாடகங்கள் நடத்தப் போகிறார்கள். அவற்றைப் போய்ப் பார்த்து ஆனந்தியுங்கள்” என்று கூறியதாக நான் அறிந்தேன். இதை வாசிக்கும் எனது நண்பர்கள், இவர் செய்ததையும் நெல்லூரில் எங்கள் தெலுங்கு நாடகங்களைப் பார்க்கக் கூடாதென்று முயற்சி செய்த அங்குள்ள ஒரு சபையின் செய்கையையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்களாக! அன்றியும் எங்கள் சபைக்கு ஏதாவது சாமான்கள் வேண்டியிருந்தால், கொஞ்சமும் மனத்தில் அசூயை இல்லாமல் இவர் கொடுத்துதவியது நான் என்றும் மறக்கற்பாலதன்று. அப்படிப்பட்ட பல உபகாரச் செய்கைகளுள் ஒன்றை மாத்திரம் இங்கெடுத் தெழுதுகிறேன். சென்ற 1930ஆம் வருஷம் எங்கள் சபை “கொடையாளி கர்ணன்” என்னும் எனது நாடகத்தைப் போட்டபொழுது அதற்காக இரண்டு ரதங்கள் செய்ய வேண்டியிருந்தது; எங்கள் சபையின் நிர்வாக சபையார் இதற்காக ஏதோ ஒரு தொகை கொடுத்தார்கள்; அதற்கு மேல் இரு மடங்கு தன் பொருளைச் செலவழித்து அர்ஜுனனுக்கும், கர்ணனுக்கும் உபயோகப்படத்தக்க இரண்டு அழகிய ரதங்களை, தானாகத் தன் ஆட்களைக் கொண்டு செய்வித்து உதவினார்! அன்றியும் நான் கர்ணன் வேடம் பூணப் போகிறேன் என்று அறிந்தவராய்த் தானாகத் தன் செலவில் பொன் முலாம் பூசிய கவசமும், குண்டலங்களும் செய்தனுப்பினார்! நான் ஒருவரையும் ஒன்றையும் கேட்பதில்லை என்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறிவார்களென நம்புகிறேன். இவராக இதைச் செய்து அனுப்பியதுமன்றி, இதற்காக நான் என்ன பணம் கொடுக்க வேண்டுமென்று விசாரித்தபொழுது, “தமிழ் நாடகத்திற்காக இவ்வளவு உழைக்கும் முதலியாருக்கு, நான் இவ்வளவாவது செய்யலாகாதா’ என்று கூறி, அதன் விலையைப் பெற மாட்டேன் என்று மறுத்தார். அச் சமயம் என் மனத்தில் உதித்ததை நான் இங்கு எழுதுகிறேன். “கர்ணனுக்கப்புறம் கொடையில்லை” என்னும் பழமொழி தவறு; கர்ணனுக்கப்புறமும் கலியுகத்திலும் சில கொடையாளிகள் இருக்கின்றனர்” என்று எண்ணினேன். அந்தக் கவசத்தின் விலையைப் பற்றி நான் அதிகமாகப் பாராட்டவில்லை; அதையளித்த மனத்தையும், அதைக் கொடுத்த விதத்தையுமே அதிகமாக மதிக்கிறேன். இவரது அசூயை இல்லாத தயாள குணத்தை நினைக்கும் பொழுது, ஒரு முறை எங்கள் சபையின் நாடகத்திற்காக, சுவர்களில் ஒட்டிய பிளேகார்ட்ஸ் நாடக விளம்பரங்களை எல்லாம் கிழித்தெரியும்படிச் சில சிறுவர்களுக்குத் துட்டு கொடுத்து, அவ்வேலையைச் செய்யும்படி செய்த, மற்றொரு நாடக சபையின் காரியதரிசியின் “குணமும்” எனக்கு நினைவு வருகிறது! இதில் எது மேம்பட்டது, எது தாழ்ந்தது என்று நான் இங்கெழுத வேண்டிய நிமித்தமில்லை. சென்னை ராஜதானி முழுவதும் கன்னையா என்ற பெயர், அவர் இறந்தும், பல வருடங்கள் போற்றப்படும் என்பதற்கு ஐயமில்லை; மேற்குறித்தபடி நடந்த சபையின் பெயர், அடியுடன் நசித்துப் போயிற்று. அப்பெயரை நான் இங்கு எழுதினாலும், இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரியாததாகும். ஆகவே, “அறத்தாறு இதுவென வேண்டா"’ என்ற திருவள்ளுவர் வாக்கியத்துடன் இவ்விஷயத்தை முடிக்கிறேன்.
மறு வருஷமாகிய 1921ஆம் வருஷத்தில் ஒரு துக்ககரமான விஷயமும் பல சந்தோஷகரமான விஷயங்களும் நேர்ந்தன. துக்ககரமான சமாச்சாரத்தை முன்பு எழுதியிருக்கிறேன். இவ்வருஷம் என் பூர்வ கர்ம வசத்தால், என் அருமைத் தமயன் ஆறுமுக முதலியாரை இழந்தேன். ஒரு நாள் காலை, நான் துங்கிக்கொண்டிருந்த பொழுது என் குமாரன் என்னை அவசரமாக எழுப்பி, சிந்தாதரிபேட்டையிலிருந்து, என் தமயனார் இறந்து போனதாகக் கடிதம் வந்ததைக் காண்பித்தான்! அதற்கு முந்திய தினம் அவர் தன் வழக்கம்போல் எங்கள் சபைக்கு வர, அவருடன் நானும் இன்னும் சில நண்பர்களும் சீட்டாடியது நன்றாய் எனக்கு ஞாப்கமிருக்கிறது. அப்பொழுது அவருக்கு உடம்பு ஒன்றுமில்லை. தன் வழக்கம் போல்தான் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். 12 மணி நேரத்திற்குள்ளாக அவருக்கு மிருத்யு நேரிடுமென்று நான் கனவிலும் நினைத்தவனல்ல. அப்படியிருக்க, மறுநாள் அவர் காலமாய் விட்டார் என்ற செய்தி வந்தவுடன் என் மன நிலைமை எத்தன்மையதாயிருக்க வேண்டுமென்று என் நண்பர்கள் யோசித்துக்கொள்ளலாம். அதைப்பற்றி இங்கு எழுதி என் நண்பர்களுக்கும் கொஞ்சம் துக்கம் விளைவிக்க எனக்கு மனமில்லை. ஆங்கிலக் கவியொருவர், “நகைத்திடுவாயின் நீ - உலகம் நகைத்திடும் உன்னுடன்; அழுதிடுவாயின் நீ -அழவேண்டும் தனியே” என்று எழுதியுள்ளார்.
அவர் திடீரென்று மடிந்ததற்கு ஏதோ ரத்தக்குழாய் உடைந்தது காரணமென்று விசாரித்தறிந்தேன். அவரது புத்திரன் பதினைந்து பதினாறு வயதுடையவன்; எங்கள் குலத்தில் மிகுந்த புத்திசாலியாகப் படித்துக் கொண்டிருந்தவன் விஷ ஜ்வரத்தினால் இறந்தது முதல் அவர் பழைய ஆறுமுக முதலியாராகவே இல்லை. மேலுக்கு மாத்திரம் முன்போல் எல்லோருடனும் பேசிக்கொண்டு தன் வேலையைச் செய்து வந்தபோதிலும், அவர் இருதயமானது அப்பெரும் துக்கத்தினால் குன்றியது என்பதை நான் நன்றாய் அறிவேன். இங்ஙனம் அவரது ஏக புத்திரன் அவருக்கு முன்பாகச் சென்றமையால் நானே அவருக்கு தீக்கடனையும் நீர்க்கடனையும் செலுத்த வேண்டியதாயிற்று. எங்கள் சபையின் தசராக் கொண்டாட்டத்திற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்தான் மேற்சொன்ன விபத்து நேரிட்டபடியால், இவ் வருஷம் தசராக் கொண்டாட்டத்தில் நானும் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும், ஒரு பாகமும் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் திடீரென்று மடிந்த விதத்தைக் கேட்டு மனமுருகாத சபை அங்கத்தினர் ஒருவருமில்லையென்றே நினைக்கிறேன்.
இனி, இதை மறக்க முயன்று இவ்வருஷம் நடந்த சந்தோஷகரமான சமாச்சாரங்களை எடுத்து எழுதுகிறேன்.
இவ்வருஷம் எங்கள் சபையின் அங்கத்தினர் தொகை 2000 க்கு மேற்பட்டது. டிசம்பர் மாதம் 31ஆம் தேதி 2105 அங்கத்தினர் இருந்தனர்; 1459 சென்னைவாசிகள், 308 வெளியூர்வாசிகள், 334 ஸ்திரீகள் இதில் அடங்கி இருந்தனர். இத்தொகையானது இதுவரையில் அதிகப்படவில்லை. இவ்வருஷம் முதல் குறைந்து கொண்டே வந்ததே யொழிய அதிகப்படவில்லை ; ஆறுமுக முதலியாருடன் எங்கள் சபையின் லட்சுமி ஒரு கரத்தை இழந்தனள் போலும். இரண்டாயிரம் அங்கத்தினர் சேர்ந்தவுடன், அந்த இரண்டாயிரமாவது அங்கத்தினராகச் சேர்ந்த ஏ. ஆறுமுக முதலியார் என்பவர் இவ் வருஷம் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி, சபைக்கு ஒரு சாயங்கால விருந்தளித்தார்.
இவ்வருஷம் எங்கள் சபையில் புதிதாய் ஆடப்பட்ட தமிழ் நாடகங்கள், அ. சுப்பிரமணிய பாரதியார் எழுதிய மாருதி விஜயம் என்னும் நாடகமும், திவான் பஹதூர் எஸ். பாவநந்தம் பிள்ளை அவர்கள் எழுதிய “பாதுகா பட்டாபிஷேகமுமாம்.” இவற்றுள் முந்திய நாடகமாகிய மாருதி விஜயத்தில், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு சீதையாக நடித்தபடியால், நான் ஸ்ரீராமனாக நடிக்க வேண்டி வந்தது."நடிக்க வேண்டி வந்தது” என்று யோசித்தே இங்கு வரைந்தேன். ஏனெனில், ரங்கவடிவேலு தான் சீதையாக நடிக்க வேண்டுமென்று விரும்பி, அந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டிராவிட்டால், நான் ஸ்ரீராமனுடைய பாகத்தின் அருகிலும் போயிருக்க மாட்டேன் என்பது திண்ணம். இதற்கு முன்பாகப் பல வருடங்களாக ரங்கவடிவேலு உட்பட எனது பல சினேகிதர்கள, என்னை ஸ்ரீமத் ராமாயணத்தை முற்றிலுமாவது அல்லது சில முக்கியப் பாகங்களையாவது, நாடக ரூபமாக எழுத வேண்டுமென்று நிர்ப்பந்தித்தும், நான் மறுத்து வந்தேன். இதற்கு முக்கியக் காரணம், வால்மீகி எழுதிய அவர் திவ்ய சரித்திரத்தைத் தினம் படித்துத் தொழுது வருவதிலிருந்து ஸ்ரீராமருடைய பாகத்தை ஒருவராலும் சரியாக மேடையின் பேரில் ஆட முடியாதென்பது என் துணிபு என்று முன்பே எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கின்றேனென நினைக்கிறேன். இக்காரணம் பற்றி, ராமாயணத்தின் அருகிற் போகமாட்டேன் என்று மறுத்துக் கொண்டுவர, எனதுயிர் நண்பர் “நீங்கள் எழுதாவிட்டால் போகிறது. சுப்பிரமணிய பாரதியார் எழுதியிருக்கிறார் மாருதி விஜயம் என்னும் ராமாயணக் கதையை நாடக ரூபமாக, அதில் நான் சீதையாக நடிக்க விரும்புகிறேன். அதற்காக நீங்கள் ஸ்ரீராமராக நடிக்கவேண்டும்” என்று தொந்தரவு செய்ய, மனமில்லாத போதிலும் இசைந்தேன். இதில் இரண்டு காட்சிகளில்தான் எனக்குப் பாகமுண்டு; அவ்விரண்டு காட்சிகளிலும் கூட நான் நன்றாய் நடிக்கவில்லை என்பது நிச்சயம். உலகத்தவர்க்கு ஓர் உத்தம புருஷனை வர்ணிக்க வேண்டுமென்று வால்மீகி முனிவர் வர்ணித்துள்ள ஸ்ரீராமபிரானைப்போல நாம் எங்கு நடிக்கப் போகிறோம் என்னும் அச்சம் என் மனத்தில் பூரணமாய்க் குடி கொண்டிருக்க, நான் அந்தப் பாத்திரத்துக்குத் தக்கபடி நடிக்க அசக்தனாயிருந்தேன். இந் நாடகமானது மறுபடியும் எங்கள் சபையில் இதுவரையில் என்னாலும் நடிக்கப்பட வில்லை; மற்றெவராலும்கூட நடிக்கப்படவில்லை.
இவ் வருஷம் நான் புதிதாய் எழுதிய நாடகம் “வள்ளி மணம்” என்பதாம். இது எங்கள் சபையின் நாடகங்களுள் ஒரு முக்கிய நாடகமாக மதிக்கப்படுவதனாலும், இந் நாடகத்தினால் எங்கள் சபைக்கு எப்பொழுது ஆடிய போதிலும் நல்ல வரும்படி வருவதனாலும் இதைப்பற்றிச் சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன்.
இதற்குச் சில வருஷங்களுக்கு முன்பாகச் சென்னையில் இந்த வள்ளியின் கதையானது, பல நாடகக் கம்பெனிகளால் ஆடப்பட்டுப் பிரபலமாகி வந்தது. இதைப் பன்முறை பார்த்த எனது ஆருயிர் நண்பர், தனக்காக இக் கதையை நான் நாடக ரூபமாக எழுதித் தர வேண்டும் என்று வற்புறுத்தினார். இவர் சாதாரணமாக நான் ஏதாவது ஒரு நாடகத்தை எழுதி முடித்தால், அது ஆடப்பட்டவுடன், “பிறகு எனக்கு என்ன புதிய நாடகம் எழுதித் தரப் போகிறீர்கள்?” என்று என்னைக் கேட்டுக் கொண்டிருப்பார். இதற்காக நான் அவர்மீது குற்றம் கூறுவதில்லை. அவர் என்னை அப்படித் தொந்தரவு செய்து வந்ததற்காக, நான் இப்பொழுது நினைத்துப் பார்க்கும்பொழுது, பெரும் நன்றி பாராட்ட வேண்டியவனாயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஏனெனில், நான் சாதாரணமாக, சோம்பேறிக் குணமுடையவனென்றே நினைக்கிறேன். இப்படி அவர் என்னை அடிக்கடி இடைவிடாது தொந்தரவு செய்துகொண்டு வந்தபடியினால்தான் 1895ஆம் வருஷம் முதல் 1913ஆம் வருஷம் வரையில் நான் எழுதிய நாடகங்களுள் பெரும்பாலானவற்றை எழுதி முடித்தேன் என்று உறுதியாய் நம்புகிறேன்; இத் தூண்டுகோலில்லாவிடின் அவற்றுள் நான்கில் ஒரு பங்குகூட எழுதி முடித்திருக்க மாட்டேன் என்பது என் தீர்மானமான எண்ணம். 1924ஆம் வருடம் முதல் இந்த வேலையை எனது தற்கால உயிர் நண்பர் கே. நாகரத்தினம் ஐயர் எடுத்துக் கொண்டிருக்கிறார்! இதைப்பற்றிப் பிறகு எழுத வேண்டி வரும்.
மேற்சொன்னபடி ரங்கவடிவேலு என்னை வற்புறுத்தியபோது, ஸ்ரீ சுப்பிரமணியர் பாத்திரத்தை என்னால் ஆட முடியாது; அதைச் சரியாக ஆட என்னிடம் சக்தியில்லை; ஸ்ரீராமர் பாத்திரத்தை ஆடாததற்கு என்ன ஆட்சேபணை இருந்ததோ, அந்த ஆட்சேபணை இதற்கும் இருக்கின்றது எனத் தெரிவித்தேன். அப்போது இதற்குள்ளாக வக்கீல் பரீட்சையில் தேறி, என்னுடன் ஜுனியர் ஆக வக்கீல் வேலை பார்த்து வந்த இவர், வக்கீல்களின் நியாயப் பிரகாரம், “எப்படி ஸ்ரீராமர் வேடம் ஒருமுறை பூண்டிரோ அம்மாதிரியாகவே சுப்பிரமணியர் வேடமும் எனக்காக ஒருமுறை பூணும்” என்று வாதித்தார். இந்த வாதுக்கு வகை சொல்ல அறியாது ஒருவாறு ‘ஆகட்டும்’ என்று இசைந்தேன். அதன்பேரில், இதற்கு முன்பாக ஒருமுறை எங்கள் சபையில் ஆடப்பட்ட பி.எஸ். துரைசாமி ஐயங்கார் எழுதிய “வள்ளித் திருமணம்” என்னும் நாடகத்தை எடுத்துக்கொண்டு, அதில் முன் பாகத்தையும், கடைசிப் பாகத்தையும் அப்படியே வைத்துக்கொண்டு, அந் நாடக ஆசிரியர் அனுமதியின்மீது, இடையிலுள்ள சுப்பிரமணியர் வரும்படியான முக்கியமான மூன்று காட்சிகளை மாத்திரம் என் மனம் சென்றபடி, புதிதாய் எழுதி முடித்தேன். இவைகளை நான் எழுதியவுடன் படித்துப் பார்த்து, மிகவும் நன்றாயிருக்கிறதென மகிழ்ந்து, உடனே நாடகத்தை ஆட வேண்டுமென்று விரும்பினார். நாடகத்தின் இம் மூன்று காட்சிகளையும் எழுதி முடித்தவுடன் இன்னொரு கஷ்டம் ஆரம்பித்தது. முதலிலேயே எனதுயிர் நண்பரிடம் நான் இந் நாடகத்தில் பாட மாட்டேன் என்று சொல்லியிருந்தேன். அப்பொழுதெல்லாம் சும்மா இருந்துவிட்டு, நான் எழுதியானவுடன் அதெல்லாம் உதவாது, நீங்கள் எப்படியும் இந் நாடகத்தில் பாடித்தான் ஆக வேண்டும் இல்லாவிட்டால் எனக்குக் கஷ்டமாயிருக்கும்; நீங்கள் பாடாவிட்டால் தர்க்கப் பாட்டுகளாகிய சுப்பிரமணியருடன் பாட வேண்டிய என் பாட்டுகளை நான் விட்டு விட வேண்டி வரும்” என்று நிர்ப்பந்திக்க ஆரம்பித்தார். என்னால் தாளத்துடன் பாட முடியாது, பிறகு அவமானத்திற்கிடமாகும் என்று நான் எவ்வளவோ சொல்லியும் ஒரே பிடிவாதம் பிடித்தார். வேறெந்த நியாயமும் பயன்படாமற் போகவே, கடைசியில் “நீங்கள் மனம் வைத்தால் எப்படியும் சாதிப்பீர்கள். என் பொருட்டு அவ்வளவு கஷ்டம் எடுத்துக்கொள்ளக் கூடாதா?” என்று கேட்டார். இந்த நியாயத்திற்கு நான் என்ன பதில் உரைப்பது? உடனே பதில் ஒன்றும் சொல்லாமலிருந்து விட்டு, வீட்டுக்குப் போனதும் இவ்வளவு சொல்லும் பொழுது, நாம் முயன்றுதான் பார்ப்போமே என்று தீர்மானித்து, அவர் அறியாதபடி ஏகாந்தமாய் தினம் கஷ்டப்பட்டு நான்கு பாடல்கள் மாத்திரம் தாளத்துடன் சரியாகப் பாடக் கற்றுக் கொண்டேன். இதனுடன் நான்கைந்து விருத்தங்களையும் ராகத்துடன் பாடக் கற்றேன். பிறகு ஒரு நாள் இந் நாடகத்திற்கு ஒத்திகை செய்தபொழுது அவர் பாடியானவுடன் திடீரென்று நானும் தாளத்துடன் என் பாட்டுகளைப் பாட ஆரம்பித்தேன்! அதைக் கேட்டுவிட்டு அவர் கூறிய பதில் இன்னும் என் மனத்தில் குடிகொண்டிருக்கிறது. “திருடு! தாளம் வராது என்று சொல்லிவிட்டு, இப்பொழுது, என்னமாக வந்தது?
எல்லாம் நீங்கள் மனம் வைத்தால் செய்து முடிப்பீர்கள். இனிமேல் எப்பொழுதாவது என்னிடம் தாளத்துடன் பாட்டு வராது என்று சொல்லுங்கள்! உங்களுக்கு பைன் போடுகிறேன்!” என்று சிரித்துக்கொண்டு கூறின உருவம், என் மனத்தைவிட்டு இன்னுமகலவில்லை! எனது பால்ய நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச அய்யங்காரும் நானும் ஒருவருக்கொருவர் பைன் போட்டுக்கொள்கிற வழக்கம்போல, இவரும் நானும் ஏதாவது தப்பு செய்தால் பைன் போட்டுக் கொள்வோம். ஆயினும் இதில் ஒரு வித்தியாசம். வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் நானும் பைன் போட்டுக் கொண்டால் அதையெல்லாம் ஒரு உண்டியிற் போட்டு ஏதாவது தர்மத்திற்கு உபயோகிப்போம்; எனக்கு ரங்கவடிவேலு பைன் போட்டால் நான் அதை அவருக்குக் கொடுத்துவிட வேண்டும். அன்றியும், அவருக்கு நான் பைன் போட்டாலும் அவருக்கு, அதை நானே கொடுத்துவிட வேண்டும்! இதென்ன நியாயம் என்று கேட்டால், “நீங்கள் எழுதியிருக்கிறீர்களே, இரண்டு நண்பர்கள் என்னும் நாடகத்தில்! இது பெண்கள் நியாயம்!” என்று கூறுவார். என்னுடன் இப்படி வேடிக்கையாகப் பேசும்போதெல்லாம் தன்னை ஒரு பெண்ணாகவே பாவிப்பார்.
இந்த வள்ளி மணம் என்னும் ஒரு நாடகத்தில்தான் ஏதோ கொஞ்சம் தாளத்தை ஒட்டி நான் பாடியது. முதன் முதல் பகிரங்கமாக நாடக மேடையில் நின்று தாளத்துடன் எனது பாடல்களைப் பாடியபோது, எனது நண்பர்கள் எல்லாம், “ஓகோ! வாத்தியார்கூடத் தாளத்துடன் பாடக் கற்றுக்கொண்டோரே!” என்று கைகொட்டி நகைத்தனர்! இந் நாடகத்தில் முதல் முறை நான் நடித்தபொழுது, ஆரம்பித்த ஒரு வழக்கத்தை, இன்னும் அந் நாடகம் நடிக்கும்பொழுதெல்லாம் விட்டவனன்று. சுப்பிரமணியர் வேடம் பூண்டவுடன், கையில் அவரது வேலாயுதத்தை எடுக்குமுன், அதை அரங்கத்தின் கோயிலில் வைக்க வேண்டிய அவரது சிலை உருவத்தின் கையில் வைத்து, பூஜித்து, அதை நாடகத்தில் ஏந்தும்படியான சக்தி எனக்குத் தந்தருள வேண்டுமென்று பிரார்த்தித்தே பிறகு கையிலெடுப்பேன்.
இந்த வள்ளி நாடகமானது அடிக்கடி அனேக சபைகளிலும் கம்பெனிகளிலும் ஆடப்படுகின்றமையால், இதில் வரும் கதாநாயகனான சுப்பிரமணியர் வேடத்தைப் பற்றிச் சற்று விரிவாக எழுத விரும்புகிறேன். நான் பார்த்தபடி அநேகம் முறை, முக்கியமாக நாடகக் கம்பெனிகளில், இவ் வேஷம் தரிப்பவர்கள், சுப்பிரமணியர் தன் சுய ரூபத்துடன் முதற் காட்சியில் தோன்றும்போது, சம்கி சொக்காய்களையும், நிஜார்களையும் அணிந்து அதன் பேரில் பூட்ஸ் அல்லது ஸ்லிப்பர்ஸ் போட்டுக் கொண்டு, தலையில் ஒரு சரிகைத் தொப்பியைப் போட்டுக்கொண்டு வருகிறார்கள். இப்படி வருவதன் தவறு பாமர ஜனங்களுக்குத் தோன்றாவிட்டாலும், நல்லறிவு கொஞ்சமேனும் உடையவர்களுக்கு இது அருவருப்பை உண்டு பண்ணுகிறது என்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. பூர்வகாலத்தில் ஜனங்கள் என்னென்ன உடையை அணிந்தார்கள் நமது தேசத்தில், என்று கண்டுபிடிப்பது சாலவும் கஷ்டமாயினும்; இந்தியர்கள் தெய்வங்களாக வணங்கும் சுப்பிரமணியர், ராமர் முதலியோர் இப்படி இப்படி உடைகளை அணிந்திருந்தார்கள் என்று சிறிது ஆராய்ச்சி செய்தபோதிலும் கண்டுபிடித்து விடலாம். அன்றியும் புராதனமாயுள்ள கோயில்களின் சிலையுருவங்களைக் கொண்டு சந்தேகமின்றி நிர்ணயித்து விடலாம். சங்க நூல்களில் முழங்கால் வரையில் அணியும் கால் சட்டைக்கு ஒரு பெயரே இருக்கின்றது வட்டுடையென்று; அதை அணிவதற்கு ஏதாவது அசந்தர்ப்பமாயிருந்தால் பட்டுப் பீதாம்பரங்களை அழகாக அணியலாம். இவை இரண்டில் சுப்பிரமணியர் என்றும் இளமை மாறாதவர் என்று கூறப்பட்டிருக்கிறபடியாலும், தமிழில் அவருக்கு முருகன் (முருகு - இளமை) என்கிற பெயர் இருப்பதாலும், முழங்கால் வரையில் சட்டையணிவதே தகுமென்பது என் அபிப்பிராயம். அன்றியும் தலையில் அவர் கிரீடமணிய வேண்டியது அவசியம். தற்காலத்திய சம்கி குல்லாய்களை அணிவது மிகவும் ஆபாசமாம்.
பிறகு இரண்டாவது காட்சியில் அவர் வேடுவனாய் வரும்பொழுது, மான் தோல் அல்லது புலித்தோல் அல்லது ஏதாவது விலங்கின் தோலணிந்து, கிரீடத்தை நீக்கி, வேடர் முடியுடனும், ஆபரணங்களை யெல்லாம் கழற்றிவிட்டுக் கை வில்லுடன் தோன்றுவதே நியாயமாகும். அநேக கம்பெனிகளில் சுப்பிரமணியர், முன்பிருந்த கோலத்துடனே, கையில் வில்லை மாத்திரம் எடுத்துக்கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறேன். அக் கோலத்தில் அவரை சாட்சாத் சுப்பிரமணியர் என்று அறியாத வள்ளி மிகவும் புத்தியற்றவளாய் இருக்க வேண்டும்!
அன்றியும் தற்காலத் தென் இந்திய நாடக மேடையில் இந் நாடகம் நடிக்கப்படும்பொழுது சாதாரணமாக நடக்கும் மற்றொரு பெருத்த ஆபாசத்தை இங்குக் கண்டித்தெழுத விரும்புகிறேன். சுப்பிரமணியர் வேடம் பூண்டவன், அரங்கத்தில் முதலில் தோற்றும் பொழுது, “ஜெய ஜெய கோகுல பால!” அல்லது “நின்னெவரனி” முதலிய கிருதிகளைப் பாடிக்கொண்டு வருவதும் மிகவும் தவறாகும். இக் கிருதிகளைப் பற்றி நான் குற்றமாகக் கூறவில்லை. அக்கிருதிகளை எத்தனை முறை கேட்டாலும் இன்னும் பன்முறை கேட்க விரும்புகிறேன். ஆயினும் சுப்பிரமணியர் வேஷதாரி, அவைகளைப் பாடுவது தவறாகும். அப் பாட்டுகளை அந்த வேஷதாரியிடமிருந்து கேட்க ஜனங்கள் விரும்பினால், காட்சிகளுக்கு இடையிலுள்ள அவகாசத்தில், அந்த வேஷதாரியை, தனியாகத் திரையின் முன்பு வரவழைத்துப் பாடக் கேட்கட்டும். சுப்பிரமணியராக அரங்கத்தில் ஆக்டு செய்து கொண்டிருக்கும் பொழுது இத்தகைய கிருதிகளையெல்லாம் பாடுவது மிகுந்த ரசாபாசமாம் என்பது என் நிச்சயம். தற்காலத்திய நாடக மேடைகளில் நடக்கும் சங்கீத ஆபாசங்களைப் பற்றிப் பிறகு விரிவாக எழுதலாமென்றிருக்கின்றேன்.
இந்த வள்ளி மணம் என்னும் நான் எழுதிய நாடகமானது முதன் முறை நடிக்கப்பட்டபோது, சபையோரால் மிகவும் சந்தோஷத்துடன் ஏற்கப்பட்டது. நான் சீக்கிரத்தில் மற்றக் காட்சிகளையும் என் மனத்திற்கு யுக்தமென்று தோன்றியபடி எழுதி முடித்து இப் புத்தகத்தை மறுவருடம் அச்சிட்டேன். இந் நாடகமானது பன்முறை எங்கள் சபையில் ஆடப்பட்டிருக்கிறது. இது ஆடப்படும் பொழுதெல்லாம் நல்ல பணம் வசூலாகியிருக்கிறது. எங்கள் சபைக்குப் பணத்தைக் கொண்டு வந்த நாடகங்களில் இது ஒரு முக்கியமானதாம். மனோஹரன், லீலாவதி- சுலோசனா நாடகங்களுக்குப் பின்பாக இதையே கூற வேண்டும். இது ஒன்பது வருடங்களுக்கு முன்புதான் அச்சிட்ட நாடகமாயினும், இதுவரையில் 50 முறைக்கு மேல் ஆடப்பட்டிருக்கிறது. எனது இந் நாடகமானது, நாடகக் கம்பெனிகளால் ஆடப்படுவதில்லை. இதற்கு முக்கியக் காரணம், இக் கதையை அநேக நாடகக் கம்பெனிகளில், பாட்டுகளை மாத்திரம் கற்றுக்கொண்டு வசனம் வாய்க்கு வந்தபடி பேசிக்கொள்ளும் வழக்கமாயிருக்கலாமெனத் தோன்றுகிறது. அன்றியும் பாய்ஸ் கம்பெனிகளில், அவர்களுக்கு வேண்டிய வசனங்களை யாரையாவது கொண்டு எழுதி வைத்துக் கொள்ளுகிறார்கள். இப்படிச் செய்வதனால், நான் எழுதியபடி நடிப்பதென்று என் உத்தரவைப் பெற்று, எனக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் கட்ட வேண்டிய கஷ்டம் அவர்களுக்கு இல்லாதிருப்பதால் அவர்கள் மீது நான் குறை கூறுவதற்கில்லை.
நான் இப்பொழுது நடிக்க விரும்பும் பாத்திரங்களுள் இந்த வள்ளி மணத்தில் வரும் சுப்பிரமணியர் வேடம் ஒன்றாகும். எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலுவுக்கப்புறம் இந் நாடகத்தில் எனதுயிர் நண்பர் கே. நாகரத்தினம் ஐயர் வள்ளியின் வேடத்தில் மிகவும் நன்றாய் நடித்து வருகிறார்.
இவ் வருஷம் கோடைக்கால விடுமுறையில் எங்கள் சபையானது காரைக்குடிக்கும், நாகப்பட்டினத்திற்கும் போய் வந்தது. மே மாதம் 25ஆம் தேதி புறப்பட்டுப் போய், ஜுன் மாதம் 27ஆம் தேதி திரும்பி வந்தோம். இடையில் காரைக்குடியில் ஏழு நாடகங்களும் நாகப்பட்டினத்தில் நான்கு நாடகங்களும் ஆடினோம். இவ்விரண்டு இடங்களிலும் நாங்கள் ஆடிய நாடகங்கள் மிகவும் சிலாகிக்கப்பட்டனவென்றே சொல்ல வேண்டும். அன்றியும் நல்ல தொகையும் வசூலாயிற்று. இந் நாடகங்களில் வந்த மொத்த வரும்படி 9250 - 12 - 6; செலவு 5710 - 14 - 0 போக, மிகுந்த லாபம் 3539 - 14 - 6 ரூபாய், சபையின் கட்டிட பண்டுக்குச் சேர்க்கப்பட்டது. இவ்வருஷத்திய தமிழ் கண்டக்டராகிய வி. வி. தேவநாத ஐயங்கார், எங்களுடன் வருவதற்கில்லாமற் போனபடியால், நான் இந் நாடகங்களுக்குக் கண்டக்டராக நியமிக்கப் பட்டு, அவ்வூர்களில் இந் நாடகங்களை நடத்தினேன்.
செட்டி நாட்டிற்கு எங்கள் சபை போய் அங்கு காரைக்குடியில் நாடகம் ஆட வேண்டுமென்று எங்களை உற்சாகப்படுத்தியவர், நாட்டுக்கோட்டைச் செட்டியார் வகுப்பைச் சேர்ந்த, எனது நண்பராகிய எம். ஆர். எம். ராமசாமி செட்டியாரே. அவரும், கே. எம். ஏ. ஆர். வி. பெத்தாச்சி செட்டியாரும் காரைக்குடியில் எங்களுக்காகச் செய்த உபசாரங்களும், நாடகங்களுக்காக எங்கள் பொருட்டு எடுத்துக்கொண்ட கஷ்டமும் செப்பத்தரமல்ல. தற்போது சென்னையிலிருந்து காரைக்குடிக்கு நேராக ரெயில் போகிறது. 1921ஆம் வருஷம் அப்படிப்பட்ட சௌகர்யம் கிடையாது. நாங்கள் சென்னையிலிருந்து புறப்பட்டுத் திருச்சிராப்பள்ளி போய்ச் சேர்ந்து, அங்கிருந்து ஐம்பது மைலோ அறுபது மைலோ மோட்டார் வண்டிகளில் புதுக்கோட்டை வழியாக, காரைக்குடிக்கும் போகவேண்டி வந்தது. திருச்சிராப்பள்ளியிலிருந்து காரைக்குடிக்கு இவ்வாறு போக, ராமசாமி செட்டியார் அவர்கள், எங்களுக்கெல்லாம் பல மோட்டர் வண்டிகளை ஏற்பாடு செய்திருந்தார். காரைக்குடிக்குப் போய்ச் சேர்ந்த தினம் நேர்ந்த ஒரு சங்கடத்தை இனி தெரிவிக்கிறேன், நாங்கள் ஐந்தாறு மோட்டார் வண்டிகளில் போனபோது, எல்லா வண்டிகளும் நெருக்கமாய்ச் சென்றால், முன் வண்டியின் வேகத்தினால் கிளம்பும் புழுதி, பின்னிருக்கும் வண்டிக்குக் கஷ்டத்தை விளைக்குமென்று, ஒவ்வொரு வண்டிக்கும் இடையில் கொஞ்ச தூரம் விட்டு, ஓட்டச் சொன்னோம். நாங்கள் போன பாதை அவ்வளவு நன்றாக செப்பனிடாதபடியால், அதிவேகமாய்ப் போவதற்கில்லாமற் போயிற்று. அன்றியும் இடையில் புதுக்கோட்டையில் தங்கி, சாயங்காலம் டீ சாப்பிட்டுவிட்டுப் போக வேண்டுமென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்படியே புதுக்கோட்டையில் ம-ள-ௗ - ஸ்ரீ பி. வி. ரகுநாத அய்யர் பி.ஏ. பி.எல்., அவர்கள் வீட்டில் தங்கிப் போனோம். இவ்விடம் அவர் வீட்டில் இல்லாதபோதிலும் அவரது வயோதிகரான தாயார் எங்களுக்கு மிகவும் உபசரணை செய்தார்கள். இங்கு சற்றுத் தாமதித்துப் போனபடியால், இருட்ட ஆரம்பித்துவிட்டது. எப்படியாவது விளக்கேற்றுமுன் காரைக்குடி போய்ச் சேர வேண்டுமென்று நான் துரிதப்பட்டவனாய், எங்கள் மோட்டார் வண்டியை முன்பு விடச் சொன்னேன். நான் இருந்த வண்டியில் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும் ராமசாமி செட்டியாரும் இன்னும் யாரோ ஒரு அங்கத்தினரும் இருந்தனர். எங்களுக்குப் பின்னால் வந்த வண்டி ஒன்றில் என் குமாரன் வரதராஜனும் இன்னும் சில ஆக்டர்களும் இருந்தனர். பள்ளத்தூர் போகிறவரையில் ஏறக்குறைய எல்லா வண்டிகளும் ஒருங்கு சேர்ந்து போயின. பிறகு அவ்விடமிருந்து காரைக்குடிக்குப் போக, எல்லா மோட்டார் வண்டி ஓட்டுகிறவர்களுக்கும் வழி தெரியுமென்று எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு எங்கள் வண்டியை வேகமாய் விடும்படிக் கூற, அப்படியே எங்கள் டிரைவர் வேகமாய் விட, காரைக்குடிக்குச் சுமார் ஏழு மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். என் குமாரன் ஏறிய வண்டியும் இன்னொரு வண்டியும் தவிர மற்றக் கார்களெல்லாம் வந்து சேர்ந்தன. ஏழரை மணிக்கெல்லாம் சாப்பாடு தயாராகி இலை போட்டிருந்தார்கள். அவர்களும் வந்தவுடன் எல்லோரும் ஒன்றாய்ச் சாப்பிடலாம் என்று சொன்னோம். எட்டாயிற்று, ஒன்பதாயிற்று, பத்தாயிற்று, பதினொன்றாயிற்று - அந்த இரண்டு கார்களும் வந்து சேரவில்லை! மற்றவர்களை எல்லாம், “நீங்கள் சாப்பிடுங்கள்; அவர்களுடன் நான் சாப்பிடுகிறேன்” என்று சொல்லியும் அனைவரும், அவர்களெல்லாம் வாராமல் சாப்பிட மாட்டோம் என்று மறுத்து விட்டார்கள். எல்லோரும் கவலையுடனும் பசியுடனும் அந்த இரண்டு கார்களின் வரவை எதிர்பார்த் திருந்தோம். போதாக்குறைக்குப் பள்ளத்தூர் வழியாக வந்த வேறு இரண்டு மோட்டார் வண்டிகளில் வந்த மனுஷ்யர்களை விசாரித்ததில், வழியில் எங்களவர்கள் ஏறியிருந்த வண்டிகளைச் சந்திக்கவில்லையென்று கூறினார்கள். எனக்கு மாத்திரம் அல்ல; எல்லோருக்குமே இதனால் கவலை அதிகமாயிற்று. ஒருபுறம், என் புதல்வன் கதி என்னவாயிற்றோ என்கிற பயம்; மற்றொருபுறம், மற்ற ஆக்டர்களுக்கு என்ன ஆபத்து நேர்ந்ததோ என்ற வருத்தம்; பன்னிரண்டு மணிவரையில் தைரியமாய்ப் பொறுத்தேன். அதற்கு மேல் பொறுக்க முடியாமல் முக வாட்டத்துடன் உட்கார்ந்து என் கைகண்ட ஔஷதம் நாடினேன் - எல்லோரும் சவுக்கியமாய் வந்து சேர வேண்டுமென்று பிரார்த்தித்தேன்! ‘கடந்த ஞானியரும் கடப்பரோ மக்கள் மேற் காதல்’ என்றார் பெரியார் ஒருவர். அவர்களுக்கே அப்படியிருக்க, கேவலம் இல்லறத்தில் உழலும் என்போன்ற பேதையர்க்குச் சொல்வானேன்!
பிறகு பன்னிரண்டு மணிக்கு அந்த இரண்டு வண்டிகளும் சாவகாசமாய் வந்து சேர்ந்தன! என்னவென்று விசாரிக்குமளவில், என் குமாரன் ஏறி வந்த வண்டிக்கு ஏதோ தடங்கல் நேரிட, அதைச் சரிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, பாதையை விட்டுப் பள்ளத்தூரில் மோட்டார் வண்டிகள் ரிப்பேர் செய்பவன் வீட்டிற்குப் போய் அதைச் சரிப்படுத்திக்கொண்டு வர இவ்வளவு நேரமாகியதென்றும், அவ் வண்டியைத் தனியாக விட்டு வர மனமில்லாமல், மற்றொரு வண்டியையும் நிறுத்த வேண்டி வந்ததென்றும் தெரிவித்தார்கள். அதன் பிறகு அன்றிரவு ஏறக்குறைய ஒரு மணிக்கு எல்லோரும் ஆறிப்போன உணவை உண்டோம்.
மறுநாள் வெள்ளிக்கிழமை நாங்கள் எல்லோரும் அங்கு ஒரு மைலுக்கப்பாலுள்ள நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களால் கட்டப்பட்ட அழகிய கோயில் ஒன்றுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்தோம். அங்கு நாங்கள் எங்கள் வழக்கப்படி நடத்திய முதல் நாடகம் ‘லீலாவதி - சுலோசனா.’ அன்று சாயங்காலம் நாங்கள் எல்லோரும் வேஷம் தரிக்க ஆரம்பித்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு பெரிய கூடையில், ஏறக்குறைய ஐந்தடி நீளமுள்ள, ஓர் ஆள் தூக்க முடியாத, இரண்டு ரோஜாமாலைகள் கொட்டகைக்கு வந்து சேர்ந்தன. இதென்ன விஷயம்? யாருக்காக இவை வந்தன என்று நான் மெல்ல விசாரித்தபொழுது, எங்களை இவ்வூருக்கு வரவழைத்த செட்டியார்கள், எனதாருயிர் நண்பர் ரங்கவடி வேலுவுக்கும் எனக்கும் போடுவதற்காக, இவைகளைத் தஞ்சாவூரிலிருந்து வரவழைத்ததாகக் கேள்விப்பட்டேன். “சுண்டைக்காய் காற்பணம் சுமைக் கூலி முக்காற் பணம்" என்றபடி மாலைகளின் செலவு ஒரு பக்கம் இருக்க, அவைகளைத் தஞ்சாவூரிலிருந்து கொண்டுவர மோட்டார் கார் செலவு அதைவிட அதிகம்; ஏறக்குறைய 45 ரூபாய் இதற்காகச் செலவு செய்ததாகத் தெரிந்தது. இருந்தும், மெல்ல அச் செட்டிமார்களுள் பிரதானமானவரிடம் போய், எங்கள் சபையின் கோட்பாடுகளுக்கு இது விரோதமானது. எங்களுக்குள் எல்லா ஆக்டர்களும் சமமாயிருக்க, நாங்கள் இருவர் மாத்திரம் மாலை மரியாதை பெறுவது நியாயமல்ல வென்று கூறிப் பார்த்தேன். அவர் அதற்கிசையாது, நாங்கள் உங்களுக்கு மரியாதை செய்ய வேண்டுமென்று விரும்புகிறோம். இதில் தவறென்னவென்று தர்க்கிக்க ஆரம்பித்தார். அதன் மீது அவர் பிடிவாதமாய்ப் பேசுகிறார் என்று கண்டவனாய், எனது கடைசி நியாயமாக அப்படி எங்களை நிர்ப்பந்திப்பதால், மேடையின்பேரில் இதை வாங்க மாட்டோம் என்று மறுப்போம் என்று சொல்ல வேண்டியதாயிற்று. அதன்பேரில், நாங்கள் இவ்வளவு செலவு செய்து கஷ்டப்பட்டுக் கொண்டு வந்த ரோஜா மாலைகளை என்ன செய்வது என்று அவர் கேட்க, “அவைகளை மிகவும் நன்றாக உபயோகப்படுத்தும் மார்க்கம் நான் சொல்லுகிறேன். அவைகளை அப்படியே கோயிலுக்குக் கொண்டுபோய், ஸ்வாமி, அம்மனுக்குப் போட்டுவிடுங்கள்!” என்று பதில் சொன்னேன். அதன்மீது அவர், நான் சொன்னது நியாயம் என ஒப்புக்கொண்டு அப்படியே செய்தார். இந்தச் சிறிய விஷயத்தைப் பற்றி இங்கு நான் இவ்வளவு விவரமாய் எழுதியதற்கு ஒரு முக்கியக் காரணமுண்டு. ஆமெடூர் சபைகளில், முக்கிய ஆக்டர்களென்றும் முக்கியமல்லாத ஆக்டர்களென்றும் பிரிப்பது தவறு. எல்லோரையும் ஒரே சமமாகப் பாவிக்க வேண்டுமென்பது ஒருபக்கமிருக்கட்டும்; இம்மாதிரி ரோஜா மாலைகளை ஆக்டர்களுக்கு (அவர்கள் எவ்வளவு சிறந்த ஆக்டர்களாயிருந்த போதிலும்) மேடையின் பேரில் போடுவது யுக்தமல்லவென்பது என் அபிப்பிராயம். சாதாரணமாக எல்லா நாடகக் கம்பெனிகளிலும் இது வழக்கமாயிருக்கிறது தற்காலம்; அயன் ராஜபார்ட், அயன் ஸ்திரீபார்ட் என்று சொல்லப்பட்ட முக்கியமான ஆக்டர்கள் மேடையின் மீது தோன்றியவுடன், அவர்கள் எந்த வேஷத்திலிருந்தபோதிலும், என்ன சந்தர்ப்பத்தில் தோன்றிய போதிலும், சபையிலிருந்து அவர்களுக்கு வேண்டியவர்கள், அவர்களைக் கௌரவப்படுத்த வேண்டி ரோஜா முதலிய மலர்களால் ஆகிய மாலைகளைக் கொண்டு போய் அவர்கள் பாட்டையோ, பேச்சையே நிறுத்திப் போடுகிறார்கள். இது பெரும் தவறென்று எனக்குத் தோன்றுகிறது. ஹரிச்சந்திர நாடகத்தில் மயான காண்டம் நடக்கும்; அதில் ஹரிச்சந்திரன் தோட்டியாகத் தோன்றியவுடன் ரோஜா மாலை ஒன்று சரிகைகளுடன் அவன் கழுத்தில் கொண்டுபோய்ப் போடுவது! அல்லது சந்திரமதி தன் ஒரே மகனை இழந்ததற்காக அழுதுகொண்டு வரும் பொழுது மேற்கண்டபடி ஒரு மாலையை அவள் கழுத்தில் போடுவது; இவை எவ்வளவு ரசாபாசமாக இருக்கிறதென இதைப் படிக்கும் எனது நண்பர்களே கவனிப்பார்களாக. மாலை மரியாதை யாராவது ஆக்டர்களுக்குச் செய்ய வேண்டுமென்று விரும்பினால், நாடகக் கடைசியில் செய்வதே தகுதியாம்; அல்லது அதுவரையில் காத்திருக்க முடியாத சந்தர்ப்பமாயிருந்தால், ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் இடையில் ஆக்டர்களை டிராப் படுதாவுக்கு முன்பாக வரவழைத்து, அந்த மரியாதையைச் செய்யலாம். இதையொட்டியே காரைக்குடியில் நாடகங்கள் ஆடினபொழுது, கடைசி நாடகம் ஆனவுடன், எங்கள் சபையிலுள்ள எல்லா ஆக்டர்களையும் அரங்கத்தில் நிற்கச் செய்து, அவர்கள் மனம் கோணாதபடி எல்லோர்க்கும் மாலை மரியாதை செய்ய ஒப்புக்கொண்டேன்.
இங்கு எங்கள் சபை நாடகங்கள் நடத்தியபொழுது எனக்கு விந்தையாகத் தோன்றிய இன்னொரு விஷயத்தை எடுத்தெழுதுகிறேன். இவ்வூரில் இந்த நாடகசாலை வழக்கமென்னவென்றால், ரிசர்வ் வகுப்புக்கு, ரிசர்வ் செய்யும் பெரிய மனிதர்கள் தங்கள் தங்கள் நாற்காலிகளை அனுப்ப வேண்டியதாம்; அதன்படியே எல்லோரும் சாய்வான போல்டிங் நாற்காலிகளை அனுப்பியிருந்தனர் போலும். முதல் நாடகமாகிய, ‘லீலாவதி-சுலோசனா'வில் நான் மூன்றாவது காட்சியில் முதன் முறை மேடையில் தோன்றி, அரங்கத்தைக் கடந்து சென்றபோது ஹாலில் பார்க்க, ரிசர்வ்ட் வகுப்பிலிருந்தவர்களெல்லாம் ஏதோ படுத்துக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தது போல் தோன்றியது! இதென்ன விஷயம் என்று பிறகு நான் விசாரித்த பொழுதுதான் மேற்சொன்ன உண்மை எனக்கு வெளியாகியது. இந்தச் சாய்வு நாற்காலிகள் அதிக இடத்தை அடைத்துக் கொள்வதுமன்றி, மேடையின் மீதிருந்து பார்ப்பவர்களுக்கு அவற்றிலுள்ளவர்கள் ஏதோ நாடகத்தைக் கவனியாது தூங்குவது போல் தோன்றுகிறபடியால், இவ்வழக்கத்தை விட்டு, நேராக உட்காரும் பெரிய நாற்காலிகளை இவ்விடத்திலுள்ள பெரிய மனிதர்கள் உபயோகிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். இங்கு வந்த பெரிய மனிதர்கள் எங்கள் சபையின் நாடகங்களை மிகவும் நன்றாய்க் கவனித்து வந்தவர்கள் என்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. அதற்கிரண்டொரு உதாரணங்கள் இங்கு எழுதுகிறேன். ‘லீலாவதி-சுலோசனா’ நாடகத்தில், சுலோசனா வேடம் தரித்த ரங்கவடிவேலு, ஸ்ரீதத்தனைக் கைவளை சீனில் க்ஷணநேரம் பார்த்த பார்வையை மெச்சி, ஹாலில் உட்கார்ந்திருந்த ஒரு பெரிய மனிதர் தன்னையுமறியாதபடி “சுட்டுவிட்டாளையா கண்ணால்!” என்று உரக்கக் கூவினார். இது சபையிலுள்ளவர்களுக்கும், எனக்கும் ஆனந்தத்தை விளைவித்தது. இதை இங்கு நான் எடுத்து எழுதியதற்கு இன்னொரு காரணமுண்டு. இக்காட்சியை நடத்தும் பொழுது அநேக நாடக சபைகளும், கம்பெனிகளும் ரசாபாசமாக்குகின்றனர். சுலோசனை ஸ்ரீதத்தனை ஒரு க்ஷணநேரம்தான் தன் கடைக்கண்ணால் பார்க்கவேண்டியது. அதை விட்டு அதிக நேரம் பார்த்தால் தவறாகும். ஆந்தை விழிப்பது போல் அறுபது விநாடி விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தால், அதைவிட ரசாபாசம் வேறு கிடையாது. இது ஒரு முக்கியமான கட்டம். சபையோர்களுக்கெல்லாம் இதனால் சந்தோஷத்தை உண்டு பண்ணலாம் என்றெண்ணி, அதிக நாழிகை பார்ப்பது, கற்புடைய ஸ்திரீயாகிய சுலோசனைக்கடுக்காது. அன்றியும் இந்தக் கட்டத்தில், ஸ்ரீதத்த வேஷதாரி செய்யும் ஒரு குற்றத்தினையும் எடுத்தெழுதுகிறேன். அந்த க்ஷணத்தில் சுலோசனையின் கண்களைத் தன் கண்கள் கொண்டு சந்தித்தவன், உடனே தன் பார்வையை மீட்டுக்கொண்டு தலை குனிந்தவனாய், சற்று அசைவற்று, பிறகு ஒருமுறை சுலோசனை போன பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு, பிறகு தன் நண்பனாகிய கமலாகரனிருக்குமிடம் நாட வேண்டும். நான் இந் நாடகத்தை இதுவரையில் 50 முறைக்குமேல் ஆடிய பொழுதெல்லாம் இம்மாதிரியாகத்தான் நடித்திருக்கிறேன். இதை விட்டு, பட்டிக்காட்டான் ஒருவன் மதுரை மீனாட்சி கோயில் கிழக்குக் கோபுரத்தை கண்கள் பிதுங்க வாயைத் திறந்து கொண்டு அரை நாழிகை பார்ப்பதுபோல், சுலோசனையைப் பார்த்துக்கொண்டிருப்பது பெரும் தவறாகும். இம்மாதிரிப் பல கம்பெனிகளில் ஸ்ரீதத்தனாக நடித்த ஆக்டர்கள் நடித்ததை நான் பார்த்து விசனப்பட்டிருக்கிறேன். ஒருமுறை ஒரு ஆக்டர் இப்படி ஏறெடுத்துப் பார்ப்பது போதாதென்று, சுலோசனை விரைந்து போனவுடன், அங்கிருந்த ஒரு நாற்காலியின் பேரில் ஏறி, அவள் போன திசையை உற்றுப் பார்ப்பதை நான் என் கண்ணாரக் கண்டிருக்கிறேன். ஸ்ரீதத்தனை நான் சிருஷ்டித்த பொழுது அவனை இவ்வளவு மடையனாக்க முடியும் என்று கனவிலும் நினைத்தவனன்று. இனியாவது ஸ்ரீதத்த வேஷதாரிகள் இம்மாதிரியாக ரசாபாசம் செய்யாதிருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.
இவ்விடத்தில் நாங்கள் ஆடிய இரண்டாவது நாடகமாகிய ‘மனோஹரன்’ நாடகத்தில் நான் மனோஹரனாக நடித்த பொழுது நேர்ந்த ஒரு சங்கதியை எழுதுகிறேன். இந்நாடகத்தில் இரண்டாவது காட்சியில் மனோஹரன் வசந்தசேனை தன் தாயாரை வைததற்காகக் கோபித்து அவளை வெட்டப்போகும் தருவாயில், அவன் தந்தையாகிய புருஷோத்தமன் தடுக்க, அவன் கரத்தினின்றும் திமிறிக் கொள்ளும் பொழுது, “உமது பத்தினியின் மானத்தை நீர் காப்பாற்றாவிட்டால், என் தாயாரின் மானத்தை நான் காப்பாற்றுகிறேன்” என்று கூறி அவ் வசந்தசேனையின் சென்னியைச் சேதிக்கப் போகிறான். அவ்வார்த்தைகளை நான் கூறி நடித்தபொழுது எல்லோரும் நிசப்பதமாயிருக்க, ஒரு செட்டியார் மாத்திரம் ‘பேஷ்’ என்று உரத்த சப்தமாகக் கூறினார். நான் அரங்கத்தில் நடித்த பல தருணங்களில் ஆயிரக்கணக்கான நபர்கள் அதை மெச்சிக் கரகோஷம் செய்திருக்கின்றனர். ஆயினும் அவர் அச்சமயம் கூறிய அவ்வொரு வார்த்தையானது அவைகளெல்லாவற்றையும்விட எனக்கு அதிக உற்சாகத்தைத் தந்தது.
ஆயிரம் பேர் சாதாரண ஜனங்கள் புகழ்வதைவிட, ரசிகன் ஒருவனுடைய புகழ்ச்சியே மேலாக மதிக்கப்படும் என்பதற்கு இதை ஓர் உதாரணமாக இங்கு என் அனுபவத்தில் எழுதினேன்.
இங்கு மனோஹரா நாடகத்தை நடத்தியதில் ஒரு விசேஷம் உண்டு. நாடக தினம் காலை, இந்நாடகத்தில் முக்கிய ஸ்திரீ பாகமாகிய பத்மாவதி தேவி வேடம் தரிக்கவேண்டிய எம். தேசிகாச்சாரியார் என்பவருக்கு 105 டிகிரி ஜுரம் வந்துவிட்டது. அவருக்குப் பித்தம் அதிகப் பட்டு, வாய்க்கு வந்தபடியெல்லாம் ஸ்மரணை தப்பிப் பேச ஆரம்பித்துவிட்டார்! இந்த ஸ்திதியிலிருக்கும் ஆக்டரை இரவில் பத்மாவதி வேடம் பூணச் செய்வது எப்படி என்று மனங் கலங்கியவனாய் யோசித்துக் கொண்டிருக்கும் தருணத்தில், சாயங்காலம் 4 மணிக்கு, பிறகு நடக்க வேண்டிய நாடகங்களில் ஆடுவதற்காக, தற்காலம் என்னுடன் ஸ்திரீ வேடம் பூண்டாடும் எனது பிரிய நண்பர் கே.நாகரத்தினம் ஐயர் அகஸ்மாத்தாய் வந்து சேர்ந்தார். வந்தவுடன் தேசிகாச்சாரியார் இருக்கும் நிலைமையை அவருக்குக் கூறி, எப்படியாவது ஆபத்தில் உதவ வேண்டுமென்று சொல்லி, அவருக்குப் பத்மாவதியின் பாகத்தை ஒருமுறை படித்துக் காண்பித்தேன். அவரும் ‘ஆகட்டும்.’ என்று இசைந்து அப்பொழுதிருந்த இரண்டொரு மணி சாவகாசத்திற்குள்ளாக அத்தனை பெரிய பாகத்தை சற்றறேக்குறைய குருட்டுப் பாடம் செய்துவிட்டு, அன்றிரவு, பத்மாவதியாக மிகவும் நன்றாய் நடித்து எங்கள் சபையின் பெயரைக் காப்பாற்றினார். இவர் இங்ஙனம் கைகொடுத்திராவிட்டால், அன்று நாடத்தை நிறுத்தியாக வேண்டியிருக்கும் அல்லது ஆபாசமாகவாவது முடிந்திருக்கும். இவரைப் பற்றிப் பிறகு நான் அதிகமாக எழுத வேண்டி வரும்.
இந்த மனோஹரா நாடகம் நடந்தபொழுது, தற்காலம் ராஜா என்கிற பட்டப் பெயரைப் பெற்று, தமிழ் பாஷையின் அபிவிருத்திக்காகவே முக்கியமாக, “அண்ணாமலை யுனிவர்சிடி” என்கிற கல்விச் சங்கத்தைச் சிதம்பரத்தில் ஏற்படுத்தி, தமிழுக்கும் தமிழர்க்கும் பல உதவிகள் செய்து வரும் வள்ளலாகிய சா.ம.ம.அ. அண்ணாமலை செட்டியார் அவர்கள் தன் ஊராகிய கானாடுகாத்தானிலிருந்து வந்திருந்தார். அவர் இவ்வாறு எங்கள் சபையை உற்சாகப்படுத்தியதுமன்றி, சபையோரெல்லாம், ஒருநாள் சாயங்காலம் தனது வீட்டிற்கு வரவழைத்துப் பெரும் விருந்து செய்து வைத்தார். செட்டிமார்கள் செய்யும் உபசாரமும் விருந்தும் இத்தன்மையது என்று அறிய விரும்பினால், அதை நேரில் அனுபவித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். அது செப்பத் தரமல்ல. சாயங்காலச் சிற்றுண்டியாக எங்கள் ஒவ்வொருவர் இலையிலும் படைத்திருந்த பலஹாரத்தை ஒன்பது பெயர் சாப்பிட்டு மிகுதியாயிருக்கும்! இதைவிடப் பெரிய விருந்தை நானும் எனது சபை நண்பர்களும், திருவாங்கூர் போயிருந்த பொழுது மஹாராஜாவின் அரண்மனையில்தான் ஒருமுறை சாப்பிட்டிருக்கிறோம். (அதைப் பற்றிப் பிறகு நான் அவ்வூருக்குச் சபை போயிருந்த பொழுது நடந்த சங்கதிகளை எழுதுங்கால் தெரிவிக்கிறேன்.)
எனது வள்ளி நாடகமானது இங்காடப்பட்ட பொழுது, அது நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களுள் பலருடைய குல தெய்வத்தின் கதையாகையால், அவர்களால் மிகவும் ஆதரிக்கப்பட்டது. ஆயினும் அந்நாடகம் கொஞ்சம் சிறிதாயிருந்தது. சீக்கிரம் முடிந்து விட்டது என்று சிலர் கூறினர். இதன் பொருட்டு, மறு நாடக தினம் மார்க்கண்டேயர் நாடகமாடியபொழுது ஊர்வசியின் சாபத்தினின்றும் இரண்டு மூன்று முக்கியக் காட்சிகளையும் ஆட வேண்டி வந்தது.
இவ்வூரில் நாங்கள் நடத்திய கடைசி ஆட்டத்தின் முடிவில் இவ்வூராரால் எங்கள் சபை மெச்சப்பட்டு ஒரு வந்தனோபசாரப் பத்திரம் அளிக்கப்பட்டது. இவ்வூரை விட்டு நாங்கள் நாகப்பட்டணம் போவதற்குள் கொத்த மங்கலம் கா. மா. ஆ. ரா. லா. பெத்தாச்சி செட்டியார், தேனிப்பட்டி சொக்கலிங்கச் செட்டியார், மா. ரா.மா. ராமசாமி செட்டியார் முதலியோர் எங்களுக்கு விருந்துகள் அளித்தனர்; அவர்களனைவரும் எங்கள் சபைக்காகச் செய்த உதவியின் பொருட்டும், மரியாதையின் பொருட்டும் எங்கள் சபையும் நானும் மிகவும் நன்றியறிதலுடையவர்களா யிருக்கிறோம் என்பதை இதனால் தெரிவித்துக் கொள்கிறேன்.
காரைக்குடியை விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிந்து வண்டி மூலமாக, அறந்தாங்கி போய்ச் சேர்ந்து அங்கிருந்து மறுநாள் நாகப்பட்டணம் போய்ச் சேர்ந்தோம்.
இவ்விடத்தில் சர் அகமத் தம்பி மரக்காயர் மூத்த குமாரனான ஏ.கே.எம். மெர்ஹியதீன் மரக்காயர் எங்கள் சபைக்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்து வைத்திருந்தார்.
இவ்வூரில் நாங்கள் நாடகங்களாடிய நாடகசாலை கொஞ்சம் சிறியது; ஆயினும் மற்ற விஷயங்களிலெல்லாம் சௌகரியமாகத் தானிருந்தது. இங்கு நாங்கள் நடத்திய நான்கு நாடகங்களில் முதல் நாடகமாகிய மனோஹராவில் ஒரு பெரும் விபத்து நேரிடவிருந்தது. இரும்புச் சங்கிலிக் காட்சியில், நான் அவைகளை அறுத்துக்கொண்டு, புருஷோத்தம ராஜனை வெட்ட வாளை வீசியபொழுது, வாளின் பிடி மாத்திரம் என் கையில் நிற்க, கத்தி பாகமானது பிடுங்கிக் கொண்டு, சபையோர் மத்தியில் போய் வேகமாய் விழுந்தது. அன்றைத் தினம் போலீஸ் உத்தியோகஸ்தராயிருந்த ஒரு வெள்ளைக்காரருடைய மனைவி, தமிழ் நன்றாய்ப் பேச உணர்ந்த மாது, இந்த நாடகத்தைப் பார்க்க வந்து ஹாலில் உட்கார்ந்திருந்தார்கள்; அவர்கள் மடியில் போய் விழுந்தது! உடனே சபையில் பெரும் ஆரவாரம் உண்டாயிற்று. நான் அதைக் கவனிப்பதா, நான் நடிக்க வேண்டியதைக் கவனிப்பதா? “ஆகிறது ஆகிறது, ஸ்வாமி இருக்கிறார், பார்த்துக் கொள்வோம்” என்று எண்ணி, நான் நடிக்க வேண்டிய பாகத்தின்மீது கவனமுடையவனாய், அருகிலிருந்த ஒரு ஆக்டரின் மரக்கத்தியைப் பிடுங்கிக் கையில் வைத்துக்கொண்டு, அக்காட்சியில் நான் நடிக்க வேண்டிய என் பாகத்தை முடித்தேன். காட்சி முடிந்த பிறகு, டிராப் படுதா விட்டவுடன், வெளியில் வந்து மேடையின் மீதிருந்து, அந்த அம்மாளை விசாரித்து, தெய்வா தீனமாய் காயமொன்றும் படவில்லை என்று கண்ட பிறகே என் அச்சம் நீங்கியது! வேகமாய் விழுந்த கத்தி தெய்வ கடாட்சத்தினால் பக்கவாட்டில் விழுந்தது; செங்குத்தாக விழுந்திருக்குமாயின், அவர்களை நன்றாய்க் காயப்படுத்தியிருக்குமென்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. இது நடந்த பிறகு இந் நாடகத்தில் நான் நடிக்கும் போதெல்லாம், ஆரம்பத்திலேயே கத்தியானது பிடியை விட்டு வராமலிருக்கிறதா என்று இழுத்துப் பார்த்துக் கொள்ளுகிறது வழக்கம்.
இவ்விடத்திலும் மார்க்கண்டேயர் நாடகம் ஆடிய பொழுது, அந்நாடகம் கொஞ்சம் சிறிதாயிருந்தபடியால், ஊர்வசியின் சாபத்திலிருந்து இரண்டொரு முக்கியமான காட்சிகளைச் சேர்த்து எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும் நானும் ஆடினோம். கடைசி நாடகமாகிய வள்ளி மணமும் சீக்கிரம் முடிந்துவிட்டால் வந்திருக்கும் ஜனங்களுக்கு அதிருப்தியாயிருக்குமென்றெண்ணி, நான் எழுதிய “பேயல்ல பெண்மணியே” என்னும் நாடகத்தின் இடைக் காட்சிகளைச் சேர்த்து ஆடினோம். இது ஜனங்களுக்கு ரமிக்கவில்லை. “என்னடா இது, தெருக்கூத்து போல ஆடுகிறார்களே” என்று எண்ணினர். அதற்காக நாடகத்தின் கடைசியில், தெருக்கூத்துகளிலுள்ள ஆபாசங்களை எடுத்துக்காட்டவே அக்காட்சிகள் ஆடப்பட்டன என்று சபையோர்க்குத் தெரிவிக்க வேண்டி வந்தது.
இவ்வூரில் எங்கள் நாடகங்கள் நன்றாய் ஆதரிக்கப் பட்டன. ஜனங்களும் அதிகமாய் வந்திருந்தனர். ஆகவே இவ்வூரைவிட்டுப் பட்டணம் திரும்பியபொழுது சந்தோஷமாகத்தான் திரும்பினோம். நான் இவ்வூருக்கு, பிறகு இரண்டொரு முறை போயிருந்தபோது, விசாரித்ததில், நாங்கள் ஆடிய நாடகக் கொட்டகையில் ஏதோ “சினிமா” வந்து சேர்ந்ததாகக் கேள்விப்பட்டேன். வெளியூர்களில் நான் ஆடிய நாடகக் கொட்டகைகளை, மறுபடி சாதாரண காலத்தில் போய்ப் பார்ப்பதில் எனக்கு ஒரு திருப்தி; அந்தத் திருப்தியை இங்கு அடைவதற்கில்லாமற் போயிற்று.
இவ்வருஷம் எங்கள் சபையின் தெலுங்குப் பிரிவினர் தெலுங்கில் “ராமதாஸ்” என்னும் நாடகத்தை நடத்தினர். இந்நாடகம் எங்கள் சபைக் காரியதரிசிகளில் ஒருவராய் அச்சமயம் இருந்த எனது நண்பர் டி. வெங்கடரமணையா என்பவரால் எழுதப்பட்டது. இந்நாடகம் தெலுங்குப் பிரிவினர் எங்கள் சபையில் நடத்திய நல்ல நாடகங்களில் ஒன்றாகும். இந்நாடகத்தில் ஒரு காட்சியில் சீதாப் பிராட்டியாகவும், ஸ்ரீராமராகவும் வரும்படி, எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவையும் என்னையும் கேட்டுக் கொண்டார். அதற்கிசைந்து அவ்வாறே நடித்தோம். நாங்களிருவரும் வரும் காட்சி நாடகத்தின் கடைசியில் வருகிறது. 5½ மணிக்கு நாடகம் ஆரம்பித்தால், 8½ மணிக்கு எங்கள் காட்சி வரும். நாங்கள் ஆக்டு செய்யும் காட்சி முழுதும் 5 நிமிஷம்கூட இருக்காது. இதில் எனது நண்பருக்குப் பத்துப் பதினைந்து வரிகளும் இரண்டு பாட்டுகளும் உண்டு. எனக்குப் பத்து பதினைந்து வரிகள் இருக்கும். இதற்காக மத்தியானம் 1 மணிக்கு வேஷம் போட்டுக்கொள்ள ஆரம்பித்து, நான்கு மணி சாவகாசம் மற்றவர்களுக்குக் கஷ்டம் கொடுத்து, பிறகு வேஷம் போட்டுக் கொண்டானவுடன் மூன்று மணி நேரம் அக்காட்சி வரும் வரையில் காத்துக் கொண்டிருக்க வேண்டியது! நடிப்பது 5 நிமிஷமான போதிலும், வேஷம் போட்டுக் கொள்ளும் கஷ்டத்திற்குக் குறைவில்லை! வள்ளி மணத்தில், நான் சுப்பிரமணியர் வேடம் பூண்ட கஷ்டத்தை முன்பே வரைந்திருக்கிறேன். அதைப்போலவே சற்றேறக் குறைய இதில் ஸ்ரீராமர் வேடம் பூணுவதும் மிகவும் கஷ்டமேயாம். போதாக் குறைக்கு முகத்திலும் கைகால்களிலும் நீல வர்ணம் பூசிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நீலமேக ஸ்யாம ராம் ராமனாகத் தோன்ற வேண்டி, “அரை நாள் கூத்தாடுவதற்காக ஆறுமாசத்திய மீசையை அழித்துக் கொண்டானாம்” என்று பழமொழியுண்டு. அதுபோல, “நான்கு வரிகள் பேசுவதற்காக நான்கு மணி நேரம் வேடம் போட்டுக் கொண்டானாம்” என்று சொல்லலாம். இந்த வேஷம் போட்டுக் கொள்வது ஒரு கஷ்டமிருக்க, அதை நாடகமானவுடன் அழிப்பது மற்றொரு பெருங் கஷ்டமாம்! அதிலும் நீலவர்ணத்தைப் போக்க, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது போல், உடம்பெல்லாம் எண்ணெயிட்டு நன்றாகத் தேய்த்தும் பிறகு சோப் போட்டு கழுவினால் தான் அவ்வர்ணம் போகும்!
இந்த ராமதாஸ் நாடகத்தை எனதுயிர் நண்பர் அந்திமக் காலம் வரையில், எப்பொழுது எங்கள் சபை போட்ட போதிலும், மேற்சொன்னபடி அவரும் நானும், சீதையும் ராமருமாக அதில் நடித்து வந்தோம். அவருக்குப் பிற்காலம் இரண்டொரு முறை இந்நாடகம் ஆடியபொழுது கே. நாக ரத்தினம் ஐயர் என்னுடன் சீதையாக வந்திருக்கின்றனர்.
மேற்சொன்ன ராமதாஸ் நாடகமன்றி இவ்வருஷத்தில் எங்கள் சபை தெலுங்குப் பிரிவு ஆடிய, காலஞ்சென்ற கிருஷ்ணமாச்சார்லு எழுதிய, ‘பிரமேளா’ என்னும் நாடகத்திலும், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும் நானும் வேஷம் பூண்டு நடித்திருக்கிறோம். இவ்வாறு இரண்டு மூன்று தெலுங்கு நாடகங்களில் நாங்களிருவரும் ஒன்றாய் சேர்ந்து நடிக்கவே, ‘அடடா! தெலுங்கில்கூட இவர்களிரு வரும் ஒன்றாய்ச் சேர்ந்து நடிக்கிறார்கள்’ என்று எங்களுடைய நண்பர்கள் ஏளனம் செய்தனர். இவ்வாறு தெலுங்கில் நாங்களிருவரும் நடிப்பது வேடிக்கையாயிருந்த போதிலும், இதில் ஒரு குறையுண்டென எண்ணுகிறேன். நாங்கள் இருவரும் தமிழர்கள். இரண்டு பெயரும் எவ்வளவுதான் தெலுங்கு படிக்கத் தெரிந்தவர்களாயிருந்தபோதிலும், இருவரும் சமஸ்கிருதம் கற்றவர்களானபடியால், தெலுங்கு அட்சரங்களை உச்சரிப்பதில் கஷ்டமுடையவர்களா யில்லாதிருந்தபோதிலும், தெலுங்கில் பேசும் போது ஏதாவது குற்றங்கள் வந்துவிடும். ஆகவே, இதைப்பற்றி என் அபிப்பிராயம் என்னவென்றால், கூடுமானவரையில் அந்தந்தப் பாஷையைத் தாய் பாஷையாக உடையவர்களே அந்தந்தப் பாஷையில் நடிக்க வேண்டுமென்பதே. அப்படி ஏதாவது நடிக்க வேண்டி வந்தால் சிறுபாகங்களை எடுத்துக் கொள்ளலாமே யொழிய, பெரிய பாத்திரங்கள் எடுத்துக் கொண்டு நடிப்பது தவறேயாகும். எனது நண்பர்களில் ஒருவர் ஏறக்குறைய தெலுங்கில் நன்றாய்ப் பேசக்கூடியவர். ஒரு தெலுங்கு நாடகத்தில் ஒரு பெரிய பாகத்தை எடுத்துக் கொண்டு நடித்தபொழுது, ஏதோ ஒன்றிரண்டு எழுத்துகளைச் சரியாக உச்சரிக்கவில்லையென்று ஹாலில் வந்திருந்த சில ஆந்திராபிமானிகள் அவரை ஏளனம் செய்ததை என் காதாரக் கேட்டிருக்கிறேன். அப்படி ஏளனம் செய்தவர்கள் மீது நான் குறை கூறமாட்டேன். தமிழ் நாடகமொன்றில், ஒரு தெலுங்கன் அவன் எவ்வளவு தான் கெட்டிக்காரனான ஆக்டராக இருந்தபோதிலும், தமிழில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு தமிழ்ப் பதங்கள் உச்சரிப்பதில் ஏதாவது பிசகு செய்வானாயின், எனக்கு வெறுப்புண்டாகுமன்றோ? நம்முடைய அனுபவத்தைப் போல், மற்றவர்களுக்கும் இருக்குமென்பது நாம் கவனிக்கற்பாலது.
இவ்வருடம் நவம்பர் மாதம் 19ஆம் தேதி மலையாளத்தில் பெருமழையினால் உண்டான சேதத்தின் கஷ்டத்தை நிவர்த்திக்கும் பொருட்டு ஏற்படுத்திய பண்டின் பொருட்டு, “லீலாவதி-சுலோசனா” நாடகத்தை நடத்தினோம். இந் நாடகத்திற்கு மாட்சிமை தங்கிய கவர்னர் லார்ட் வில்லிங்டன் அவர்களும் அவரது மனைவியும் தமது ஆதரவை அளித்தனர். இந்நாடகத்திற்கு ரூபாய் 949 வந்தது. அதில் செலவு போக மிகுதி ரூபாய் 640-12-0 அந்த பண்டுக்கு அனுப்பினோம். விக்டோரியா ஹாலில் நாங்கள் ஆடிய நாடகங்களுள் இதுதான் எங்கள் சபைக்கு அதிகத் தொகையைக் கொணர்ந்தது.
எல்லா விஷயங்களையும் யோசிக்குமிடத்து இந்த 1921ஆம் வருஷம்தான் எங்கள் சபை மிகவும் உன்னத பதவி அடைந்திருந்தது என்று கூற வேண்டும்.
24ஆவது அத்தியாயம்
இனி 1922ஆம் ஆண்டின் நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறேன்.
இவ்வருஷம் எங்கள் சபையில் நூதனமாய் நடத்திய நாடகங்களில் குறிப்பிடத்தக்கன இரண்டாம்; முதலாவது, எனது நண்பர் ச. ராகவாச்சாரியார் தமிழில் மொழி பெயர்த்த “வேணி சம்ஹாரம்” என்பது. இதில் எனது ஆருயிர் நண்பர் ரங்கவடிவேலு, பானுமதியாய் வேஷம் பூண, நான் துரியோதனனாக நடித்தேன். நான் சம்ஸ்கிருதத்தில் அநேக நாடகங்களைப் படித்திருக்கிறேன்; அவற்றுளெல்லாம் எனக்கு மிகவும் அதிருப்தியைத் தந்தது இந்த வேணி சம்ஹார நாடகமே. இது காரணம் பற்றியே என்னைப் பலர்
24ஆவது அத்தியாயம்
இனி 1922ஆம் ஆண்டின் நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறேன்.
இவ்வருஷம் எங்கள் சபையில் நூதனமாய் நடத்திய நாடகங்களில் குறிப்பிடத்தக்கன இரண்டாம்; முதலாவது, எனது நண்பர் ச. ராகவாச்சாரியார் தமிழில் மொழி பெயர்த்த “வேணி சம்ஹாரம்” என்பது. இதில் எனது ஆருயிர் நண்பர் ரங்கவடிவேலு, பானுமதியாய் வேஷம் பூண, நான் துரியோதனனாக நடித்தேன். நான் சம்ஸ்கிருதத்தில் அநேக நாடகங்களைப் படித்திருக்கிறேன்; அவற்றுளெல்லாம் எனக்கு மிகவும் அதிருப்தியைத் தந்தது இந்த வேணி சம்ஹார நாடகமே. இது காரணம் பற்றியே என்னைப் பலர் இதை மொழிபெயர்க்கும்படியாகக் கேட்டும், நான் அவ்வாறு செய்யாது விட்டேன். இந் நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு, பிறகு ஒரு முறையோ இரண்டு முறையோதான் எங்கள் சபையில் ஆடப்பட்டது.
மற்றொரு நாடகம், “பிரதாப ருத்ரீயம்” என்னும் தெலுங்கு நாடகம். இதில் எனது ஆருயிர் நண்பர் ரங்கவடிவேலு நடனமாடும் மாதாக ஆடினார். நான் இந்நாடகத்தில் ஒரு மகம்மதிய சிப்பாயாகவும், பிறகு, டில்லி சுல்தான் மந்திரிகளில் ஒருவனாகவும் நடித்தேன். இந்தப் பிரதாபருத்ரீயம் என்னும் நாடகம் பிறகு பன்முறை எங்கள் சபையோரால் நடிக்கப்பட்டது; அப்படி நடிக்கப்படும் போதெல்லாம், நான் மேற்சொன்ன இரண்டு வேடங்களையும் தரித்திருக்கிறேன். முக்கியமான வேஷங்களைத் தரிப்பதில் எனக்கு ஒருவிதமான சந்தோஷமிருக்க, இப்படிப்பட்ட சில்லரை வேடங்கள் தரிப்பதிலும் மற்றொரு விதமான சந்தோஷமுண்டு. இந்நாடகத்தில், ச. ராகவாச் சாரியார், மந்திரி யௌகந்தரராக நடித்தது மிகவும் மெச்சத் தக்கதென்று முன்பே குறித்திருக்கிறேன். ஆயினும் இவரைவிடச் சபையோரின் மனத்தையெல்லாம் கவர்ந்தவர் இதில் வண்ணானாக நடித்த பி.வி. ராமானுஜம் செட்டியாரே. இந்த வண்ணான் வேடம் நடிப்பதற்கு மிகவும் கஷ்டமான வேஷமாம். இந்த வேஷத்தில் செட்டியார் தத்ரூபமாய் நடித்து ஆந்திர தேசத்தாரும் புகழும்படிப் பெயர் பெற்றிருக்கிறார். செட்டியார் அவர்கள், தெலுங்கு நாடகங்களில் ஹாஸ்ய பாகங்களை ஆடுவதில், தமிழில் எப்படி எம். துரைசாமி ஐயங்கார் பெயர் பெற்றிருந்தனரோ, அப்படியே பெயர் பெற்றிருக்கிறார்.
இவ்வருஷம் கோடைக்கால விடுமுறையில் எங்கள் சபை திருநெல்வேலி, திருவனந்தபுரம் என்னும் இரண்டு ஊர்களுக்குப் போய் நாடகங்கள் ஆடித் திரும்பி வந்தது. சென்னையை விட்டு மே மாதம் 29ஆம் தேதி புறப்பட்டு, திருநெல்வேலியில் ஆறு நாடகங்களை நடத்தி, பிறகு திருவனந்தபுரம் போய் அங்கு 10 நாடகங்கள் ஆடிப் பிறகு ஜுன் மாதம் 8ஆம் தேதி திரும்பி வந்தோம். இதுதான் எனதாருயிர் நண்பர் கடைசி முறை வெளியூர் என்னுடன் போய் வந்த பிரயாணமாகையால், இதைப்பற்றிச் சற்று விவரமாக எழுத விரும்புகிறேன்.
திருவனந்தபுரத்திற்குப் போகவேண்டுமென்று யார் முதலில் பிரேரேபணை செய்தார்களோ எனக்கு ஞாபகமில்லை. நான் செய்யவில்லை யென்பது நிச்சயம். ஏனெனில், இந்த வார்த்தை முதலில் எங்கள் நிர்வாக சபையார் முன்னிலையில் வந்தபோது, அவ்வளவு தூரம் செலவு செய்துகொண்டு போய் வருவதென்றால் சபைக்குக் கட்டி வருமா என்று நான் சந்தேகப்பட்டது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. அன்றியும் என்ன காரணத்தினாலோ, இதுவரையில், வெளியூருக்குச் சபை போவதென்றால் மிகவும் குதூகலத்துடன் ஆமோதித்த எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு, தனக்கு அங்கு போவது இஷ்டமில்லை யென்று எனக்குத் தெரிவித்தார். அவரது அபிப்பிராயம் இப்படியிருந்தபோதிலும், நிர்வாக சபையில் ஒருமுறை அங்கு போவது தீர்மானிக்கப்பட்ட பிறகு நாம் சபையுடன் போய்த்தான் தீரவேண்டுமென்று நான் அவரை வற்புறுத்தினேன். அதன் பேரில் என் வார்த்தைக்கிணங்கி ஒப்புக் கொண்டார். திருவனந்தபுரம் போகும் போது வழியில் திருநெல்வேலியிலும் சில நாடகங்கள் ஆடவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இச்சமயம் எனது நண்பர் ச. ராகவாச்சாரியார் தமிழ் கண்டக்டராயிருந்தார். அவர்தான் இவ்விரண்டு இடங்களுக்கும் வருவது அசாத்தியம், ஒருக்கால் தான் சில நாடகங்களுக்கு மாத்திரம் வந்து ஆக்டு செய்ய முடியும், வேறு யாரையாவது இந்தப் பிரயாணத்திற்குக் கண்டக்டர் இன்சார்ஜாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அதன்பேரில் சில ஆக்டர்கள் ரகசியமாய் எனது நண்பர் சத்தியமூர்த்தி ஐயரைக் கண்டக்டராக நியமிக்க வேண்டுமென்று பேசிக் கொண்டார்களாம். இதனை எப்டியோ அறிந்த எனதுயிர் நண்பர் என்னிடம் வந்து, “இப்படி இவர்களெல்லாம் தீர்மானித்திருக்கிறார்களாம், அவர்கள் போய்வரட்டும்; நாம் போகாது நின்று விடலாம்” என்று சொன்னார். அதன் பேரில் அவருக்கு நான் சமாதானம் சொல்லி, ‘அவர்கள் அப்படிச் செய்தபோதிலும், நாம் நம்முடைய கடமையைச் செய்ய வேண்டும். இந்தப் பிரயாணத்தில் வெளியூர்களில் ஏறக்குறைய ஒரு மாதத்தில் 15 நாடகங்களை ஆடுவதென்றால் மிகவும் சிரமமான காரியம்; எனக்கோ வயதாகிறது; இனி இக்கஷ்டம் என்னால் சுமக்க முடியாதென்று நானே வேண்டாம் என்று சொல்லலாமென்றிருந்தேன். மற்றவர்களுக்கும் வேறு கண்டக்டரை நியமித்துக்கொள்ள அபிப்பிராயம் இருந்தால் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. “வியாதிக்காரன் விரும்பிய ஔஷதமும் பாலே, வைத்தியன் கொடுத்த ஔஷதமும் பாலே” என்கிற பழமொழிப்படி, நான் விரும்பியதும் அவர்கள் விரும்பியதும் ஒன்றேயாயது மிகவும் நலமாயிற்று. எனக்கென்னவோ, இப் பிரயாணம் சபைக்கு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் கொண்டு வருமென்று மனத்திற்படுகிறது. ஆகவே, இதனால் வரும் “நற்பெயரோ கெட்ட பெயரோ அவர்கள் பொறுப்பாக இருக்கட்டும். வெளியூர்களுக்குப் போய் நாடகங்கள் ஆடி, கீர்த்தியும் லாபமும் பெற்று வருவதன் கஷ்டம் மற்றவர்களுக்கும் தெரிந்தால்தானே நல்லது” என்று நியாயங்கள் எடுத்துக் கூறி, அவர் மனத்தைத் திருப்பினேன். கடைசியில் உங்களுக்காக நான் ஒப்புக் கொள்கிறேன்; இதனால் பல கஷ்டங்கள் வருமென்று எனக்குத் தோன்றுகிறது என்று சொன்னார். அவர் வாக்கு எவ்வளவு தூரம் பலித்தது என்பதை இனி நான் எழுதப் போகிறதைப் படிப்பவர்கள் அறிவார்கள்.
சென்னையிலிருந்து சபை புறப்படுவதற்கு இரண்டு நாள் முன்பாக, திடீரென்று என் கழுத்தும் முகமும் வீங்கி ஜுரமுண்டாயிற்று. இதென்ன விபரீதம் என்றெண்ணி, உடனே என் குடும்ப வைத்தியரை வரவழைத்து எப்படியாவது என்னை சுவஸ்தப்படுத்தி இரண்டு தினங்களுக்குள், திருநெல்வேலி போகும்படிச் செய்ய வேண்டும் என்று வேண்டினேன். அவர் சந்தேகப்பட்டு, மேஜர் எல்விஸ் துரையை வரவழைத்து, அவருடன் கலந்து பேசிப் பிறகுதான் எனக்குப் பதில் உரைக்கக்கூடுமென்றார். அவர் என் வியாதி, தீராத மிகவும் அபாயகரமான வியாதியாகிய பிளட் பாய்சனிங் (blood poisoning) ஆக இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டதாகப் பிறகுதான் என்னிடம் தெரிவித்தார். என்ன செலவானாலும் பெரிதல்ல; அந்தப் பெரிய ஆங்கில வைத்தியரை வரவழையுங்கள் என்று சொன்னேன். அதன்பேரில் மேஜர் எல்விஸ் வந்து பார்த்து, இது அப்படிப்பட்ட அபாயகரமான வியாதியல்ல, மம்ப்ஸ் (Mumps) என்னும் வியாதி; இது நாலாநாள் சொஸ்தமாகும், சற்றும் பயப்பட வேண்டாம்; இது கொஞ்சம் தொத்துவியாதியானபடியால், நாலாவது தினம்தான் பட்டணம் விட்டுப் போகலாம் என்று சொல்லிவிட்டுப் போனார். அப்போது எனக்கு 104 டிகிரி ஜுரம் இருந்தது. உடனே என் தேகஸ்திதியை எழுதி டாக்டர்கள் இப்படிச் சொல்கிறார்கள் என்கிற விவரத்தை சபைக்குத் தெரிவித்தேன். உடனே சில அங்கத்தினர்கள் அன்றிரவு என்னை வந்து பார்த்தார்கள். அவர்களில் சிலர் நான் ஏதோ சாக்குச் சொல்லுகிறேன் என்று சந்தேகித்தனர் போலும். பிறகு உண்மையில் நான் மிகவும் அசௌக்கியமாயிருப்பதைக் கண்டறிந்தவர்களாய் என்ன செய்வது என்று என்னைக் கேட்டதற்கு, ‘என்னால் சபைக்குத் தடங்கல் ஒன்றும் வேண்டாம். உங்களுக்கு எது யுக்தமாயிருக்கிறதோ அப்படியே செய்யுங்கள்’ என்று சொன்னேன். அதன் பேரில் சத்தியமூர்த்தி ஐயர், முதல் நாடகமாக வைத்துக்கொண்ட லீலாவதி-சுலோசனாவை மாற்றி, ‘நீ வராத மார்க்கண்டேயர் நாடகம் வைத்துக் கொள்கிறோம்’ என்றார். ‘அப்படியே செய்யுங்கள்’ என்று பகர்ந்தேன். மறுநாள் நானும் ரங்கவடிவேலுவும் தவிர மற்றவர்களெல்லாம் புறப்பட்டுப் போயினர். அச்சமயம் ரங்கவடிவேலு திருக்கழுக்குன்றம் போயிருந்தார் ஏதோ காரணத்தினால். அங்கிருந்து செங்கல்பட்டுக்கு வந்து ரெயிலில் சபையோருடன் கலந்துகொண்டு திருநெல்வேலிக்குப் போகும்படியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் எங்கு வருத்தப்படப் போகிறாரோ என்று என் தேகஸ்திதியைப் பற்றி நான் அவருக்கு எழுதவில்லை . ஆகவே, தானும் திருநெல்வேலிக்குப் புறப்பட்டுப் போக, செங்கல்பட்டில் வந்து சபையோர் இருந்த ரிசர்வெட் காம்பார்ட்மெண்டில் ஏறின பிறகுதான், அவருக்கு என் தேகஸ்திதியும் நான் அந்த வண்டியில் இல்லாததும் தெரிந்தது. “இதைக் கேட்டவுடன், நான் இடி விழுந்தவன் போல் ஆனேன்! இன்னது செய்வது என்று தெரியாது திகைத்து நின்றேன்” என்று பிறகு அவர் எனக்குக் கூறிய வார்த்தைகளை இங்கு எழுதுகிறேன். பிறகு, ஏற்றிய தன் சாமான்களையெல்லாம் இறக்கி, மற்றவர்களை யெல்லாம் வழியனுப்பி விட்டு, தான் உடனே சென்னைக்கு வந்து அன்றிரவு என்னைக் கண்டார். கண்டதும் என் தேக ஸ்திதியைப் பார்த்துத் துக்கித்தார். “இதற்குத் தமிழில் புட்டாளம்மை என்று சொல்லுவார்கள். இரண்டு மூன்று நாட்களுக்குள் இது இறங்கிவிடும்; பிறகு நாம் திருநெல்வேலி போய்ச் சேரலாம்” என்று அவருக்குத் தைரியம் சொன்னேன். அப்படியே மூன்றாம் நாள் அம்மை இறங்கவே வைத்தியர் அனுமதி பெற்று, ஒரு பெட்டி நிரம்ப நான் சாப்பிட வேண்டிய மருந்து முதலியவைகளுடனும் ரங்கவடிவேலுடனும் புறப்பட்டுப் போனேன், திருநெல்வேலிக்கு. மூன்று நாட்களாக மெல்லின்ஸ்பூட் தவிர வேறு ஆகாரம் இல்லாமையால், மிகுந்த பலஹீனமான ஸ்திதியிலிருந்தேன். ரெயிலிலும் இந்த ஆகாரம்தான். ஸ்டேஷனிலிருந்து புறப்படும் பொழுது என்னைக் கண்ட சில சிநேகிதர்கள், “என்ன சம்பந்தம், இந்த ஸ்திதியிலா, நீ திருநெல்வேலிக்குப் போய் நாடகம் ஆடப்போகிறாய்!” என்று கேட்டார்கள். ‘ஸ்வாமியிருக்கிறார் என்னைக் காப்பாற்ற’ என்று நான் அவர்களுக்குத் தைரியம் சொல்ல வேண்டியதாயிற்று. இப்பொழுதாவது ரயில் கொஞ்சம் சீக்கிரமாகப் போகிறது. அப்பொழுது சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குப் போகச் சரியாக 24 மணிநேரம் பிடித்தது. என்னுடைய சுயநன்மையை மாத்திரம் நான் கவனித்திருப்பேனாயின், நான் அப்பிரயாணம் செய்தே இருக்க மாட்டேன். ஆயினும், எங்கள் சபைக்கு என்னால் ஒரு கஷ்டமும் நேரிடக் கூடாதென்றும், எல்லா ஏற்பாடுகளும் செய்த பிறகு நான் - நின்றுவிட்டால், ரங்கவடிவேலு தானும் போவதற்கில்லையேயென்று வருத்தப்படுவாரென்றும் கருதினவனாகி, என் தேக சிரமத்தைப் பாராமல் நான் பிரயாணம் செய்தேன். மறுநாள் சாயங்காலம் திருநெல்வேலி ஸ்டேஷனில் போய் நான் இறங்கிய பொழுது, எனக்கு முன்பாக அங்கு போய்ச் சேர்ந்தவர்களுள் டி. வெங்கடரமணய்யாவும், டி.எல். ராஜகோபால ஐயரும் மாத்திரம் ஸ்டேஷ்னுக்கு வந்திருந்தனர். மற்றவர்களெல்லாம் சௌக்கியமாக இருக்கிறார்களா என்று நான் வினவிய பொழுது, அவர்களுள் ஒருவர், ஸ்டேஷனுக்கு வந்து என்னை வரவேற்க விரும்பிய மற்ற ஆக்டர்களை அப்படிச் செய்யவேண்டியதில்லை யென்று தடுத்ததாக இரகசியமாகத் தெரிவித்தார். இதைக் கேட்டவுடன் எனக்குக் கோபம் வரவில்லை. கொஞ்சம் துக்கம்தான் வந்தது. அதுவும் என் பொருட்டல்ல - “அந்தோ! இவ்வுலகில் யார் தப்புச் செய்தாலும் அதற்குத் தக்க பிராயச்சித்தம் அனுபவிக்க வேண்டி வருமே. இதையறியாதிருக்கின்றனர் அநேகரே” என்றே எனக்குத் துயரம் தட்டியது. இம்மாதிரியான சந்தர்ப்பங்களிலெல்லாம், ஒரு மனிதனுடைய கடமையென்னவென்றால், தன்மீது ஏதாவது தவறிருக்கிறதா என்று ஆய்ந்து பார்க்க வேண்டியது முதலில்; பிறகு தன் மீது தவறில்லை என்று கண்டறிந்தால், அத் தவறு இழைத்தவர்மீது கோபங்கொள்ளாது, அவர் பொருட்டுத் துக்கப்படுவதே நற்குணமெனும் உண்மையை என்னுடைய பால்யத்தில் அறியாது 50ஆவது வயதில் கண்டேன்! இவ்வாறு என் மனத்தைக் கோபத்தினின்றும் திருப்பி, நல்வழிக்குக் கொண்டு வந்தது எனக்கு மிகவும் நன்மை அளித்திருக்கிறது; அந்நன்மையை இதை வாசிக்கும் என் இளைய நண்பர்களும் பெறுவார்களாக என விரும்பியே இதை இங்கு எழுதலானேன். இச்சந்தர்ப்பத்தில் தெய்வப் புலமை வாய்ந்த பொய்யாமொழிப் புலவராகிய திருவள்ளுவர் எழுதிய குறள் எனக்கு நினைவிற்கு வருகிறது. “இன்னாசெய்தாரை யொறுத்தல், அவர் நாண நன்னயஞ் செய்து விடல்” என்பதன் உண்மையை என் சிறு வயதிலேயே அறியாமற் போனது என் குற்றமாம். இக் குறளினடியில் பரிமேலழகர், “விடல்” என்கிற பதத்திற்கு மிகவும் அருமையாய் அர்த்தம் எழுதியிருக்கிறார். தமிழ்ப் பாஷையில் விருப்பமுள்ள இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அவ்வுரையைப் பார்த்து அறிந்து கொள்வார்களாக.
ஸ்டேஷனிலிருந்து அருகாமையிலிருந்த எட்டயபுரம் ஜமீன்தாருடையதான எங்கள் விடுதிக்குப் போனவுடன், சந்தோஷமாகக் கலந்து பேசி, அவர்களையெல்லாம் சீக்கிரம் வேடம் பூணுவதற்காக நாடக சாலைக்குப் போகும் படி தூண்டினேன். அப்பொழுது அவர்களுட் சிலர் ஏதோ ரகசியமாய்ப் பேசிக்கொண்டு, நீங்களிருவரும் (நானும் ரங்கவடிவேலுவும்) நாடகசாலைக்கு இன்று கொஞ்சம் வந்து போக வேண்டும் என்று வற்புறுத்தினர். எனக்கு அசௌக்கியமான உடம்புடன் பிரயாணம் செய்ததனால் மிகவும் இளைப்பாயிருக்கிறதெனச் சொல்லியும் அவர்கள் பலவந்திக்கவே, இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறதென, அவர்களுள் ஒருவரை ஒரு பக்கமாக அழைத்துக்கொண்டு போய் என்ன சமாச்சாரம் என்று மெல்ல விசாரிக்க, அவர் கீழ்வருமாறு தெரிவித்தார்: “இந்த ஊர் இரண்டு கட்சியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது, பிராமணாள் கட்சியென்றும் பிராமணர் அல்லாதார் கட்சியென்றும். இரண்டாவது கட்சியார், நீங்களெல்லாம் (என்னையும், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவையும் குறிப்பிட்டு) வருகிறீர்களென்று, கோயிலிலிருந்து யானை, வாத்தியம் முதலிய மரியாதைகளுடன் உங்களையெல்லாம் ஸ்டேஷனிலிருந்து ஊர்வலமாக அழைத்துப் போகவேண்டுமென்று ஏற்பாடு செய்திருந்தார்கள். கடைசி நிமிஷத்தில் நீங்கள் இருவரும் வரவில்லையென்று கண்டறிந்து அந்த ஏற்பாடுகளையெல்லாம் ரத்து செய்து விட்டனர். இப்பொழுதும், அநேகர் நீங்கள் ஏதோ சபையின்மீது மனஸ்தாபப்பட்டு இவ்வூருக்கே வரவில்லை யென்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். “அவர்கள் வராவிட்டால் நாங்கள் நாடகம் பார்ப்பதற்கு வரமாட்டோம்” என்று கட்டுப்பாடாயிருக்கிறார்களாம். ஆகவே, நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் என்பது இந் நகரவாசிகளுக்குத் தெரிய வேண்டும். அதற்காகத்தான் உங்களை இன்றிரவு எப்படியாவது கஷ்டத்தைப் பாராமல் கொஞ்ச நேரமாவது நாடக சாலைக்கு வந்து போகவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறோம்” என்று தெரிவித்தார். இதென்ன தர்மசங்கடமாயிருக்கிறது! நானாவது சபையின்மீது மனஸ் தாபப்படுவதாவது என்று எண்ணினவனாய், அப்படிப்பட்ட எண்ணத்தை நீக்க வேண்டியது என் கடமை என்று கருதி, என் தேக அசௌக்கியத்தையும் பாராமல், முற்றிலும் வாடாத முக வீக்கத்துடன், ஒரு சால்வையைப் போர்த்துக் கொண்டு நாடகசாலைக்குப் போய்ச் சேர்ந்தேன். என் நண்பருடன் காற்று அதிகமாய்ப் படாதபடி வேஷம் தரிக்கும் இடத்தில் நான் உட்கார்ந்திருக்க, “அது உதவாது, வெளியில் வந்து உட்கார வேண்டும்” என்று எனது நண்பர்கள் பலவந்திக்க, நாடக ஆரம்பத்திற்குச் சில நிமிஷங்களுக்கு முன், நானும் ரங்கவடிவேலுவும், ஹாலில் வந்து உட்கார்ந்திருந்து, அங்கு நாங்கள் கண்ட எங்கள் பழைய நண்பர்கள் சிலருடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுப் பிறகே எங்கள் ஜாகைக்குப் போனோம்.
நாங்கள் ஆடுவதற்கில்லாதபடியால், எங்கள் சபை சாதாரணமாக வைத்துக் கொள்ளும் முதல் நாடகமாகிய லீலாவதி-சுலோசனாவை மாற்றி, அன்று மார்க்கண்டேயர் நாடகம் வைத்துக் கொண்டார்கள். இந்த மார்க்கண்டேயர் நாடகத்திற்கு மிகவும் குறைந்த வரும்படி வந்தது. ஜனங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளைவிட ஜனங்களில்லா நாற்காலிகள் அதிகமாயிருந்தன.
இதற்கு இரண்டாம் நாள் லீலாவதி-சுலோசனா நாடகத்தில் எனதுயிர் நண்பரும் நானும் ஆடினோம். இந் நாடகத்திற்கு, மார்க்கண்டேயர் நாடகத்திற்கு வந்ததைவிட மூன்று நான்கு பங்கு அதிகமாக ஜனங்கள் வந்தனர். இங்கு நடத்திய மற்ற நாடகங்கள் வள்ளி, சாரங்கதரன், நந்தனார், மனோஹரன். இந் நாடகங்களில், எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு ஆடிய நாடகங்களின் வரும்படியையும், அவர் ஆடாத நாடகங்களின் வரும்படியையும் ஒத்துப் பார்க்குமிடத்து அவர் ஒருவரால் எங்கள் சபைக்கு மிகவும் அதிக வரும்படி வந்தது என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டியவனாயிருக்கிறேன். இதனால் எங்கள் சபையின் சில ஆக்டர்களுக்கு அவர் மீது கொஞ்சம் பொறாமை யுண்டாயிற்று என்று திருநெல்வேலியில் நேரிட்ட சில வியவஹாரங்களினால் ஊகிக்க வேண்டியவனாயிருக்கிறேன். அவைகளை இங்கு எழுதுவதனால், என்னுடைய சில நண்பர்களுக்கு வருத்தமுண்டாகுமேயொழிய இதைப் படிக்கும் எனது நண்பர்களுக்கு ஒரு பிரயோஜனமும் உண்டாகாதென நம்பி, அவைகளை இங்கு வரையாதொழித்தேன். இம்முறை திருநெல்வேலிக்குப் போயிருந்த பொழுது ஒருநாள் நாங்கள் எல்லோரும் திருச்செந்தூருக்குப் போய், சுப்பிரமணிய ஸ்வாமி தரிசனம் செய்து சந்தோஷமடைந்தது மிகவும் நன்றாய் என் மனத்தில் படிந்திருக்கிறது. அன்றியும் இவ்வூரிலிருந்தபொழுது எமது நண்பர்களாகிய கோமதிநாயகம் பிள்ளையவர்கள், கலியாணசுந்தரம் பிள்ளையவர்கள் பி.ஏ., பி.எல்., சாது கணபதி பந்துலு அவர்கள் பி.ஏ.,பி.எல்., சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் பி.ஏ., பி.எல்., ஆகியவர்கள் எங்களுக்கு விருந்தளித்ததை நன்றியறிதலுடன் இங்கு எழுதுகிறேன்.
இச்சமயம் திருவாங்கூர் மஹாராஜாவுக்கு என் நண்பர் மகா-ள-ள-ஸ்ரீ திவான்பஹதூர் டி. ராகவையா என்பவர் மந்திரியாக இருந்தார். இவர் அநேக வருஷங்களாக எங்கள் சபையின் அங்கத்தினராக இருந்தவர்; எங்கள் காரியதரிசிகளிலொருவராகிய டி. வெங்கடரமணய்யாவுக்கு பந்து; எனக்கு மிகவும் தெரிந்த நண்பர். இவருக்கு நாங்கள் முதலில் எழுதியபொழுது சபைக்கு வேண்டிய உதவியைச் செய்வதாக இவர் எங்களுக்குக் கூறிய உறுதிமொழியே, எங்கள் சபை இவ்வூருக்குப் போய் நாடகமாட வேண்டுமென்று எங்களை உந்தியது.
திருவனந்தபுரத்தில் நாங்கள் ஆட வேண்டிய நாடக சாலைக்குப் பக்கத்திலேயே எங்களுக்கு இருப்பிடம் கிடைத்தது; இது எங்களுக்கு மிகவும் சௌகர்யமாயிருந்தது. இவ்வூரில் நாங்கள் ஆடிய நாடகங்கள் மொத்தம் பத்தாம்; ஒன்பது மேற்குறித்த நாடகசாலையிலும், ஒன்று மகாராஜாவின் அரண்மனையிலும். இங்கு முதல் நாடகமாக “லீலாவதி-சுலோசனா” என்பதை எங்கள் வழக்கம்போல் ஆடினோம். அதற்கு நாங்கள் எண்ணிய அளவு அதிக வசூலாகாவிட்டாலும் நல்ல வசூலே ஆயிற்று. இரண்டாவது நாடகமாகிய மார்க்கண்டேயர் நாடகத்திற்கு மிகவும் குறைந்த வசூலாயிற்று. மூன்றாவது நாடகமாகிய, “மிருச்ச கடி” என்பதற்கு அதுகூட இல்லை . இந்த மிருச்சகடி சம்ஸ்கிருதத்திலாடப்பட்டது. சென்னையிலிருந்து புறப்படுவதற்கு முன்பே, சம்ஸ்கிருதத்தில் இவ்விடம் நாடகம் வைத்துக் கொண்டால், ஜனங்கள் அதிகமாக வருவது சாத்தியமல்லவே என்று நான் சந்தேகப்பட்டேன். ஆயினும் சம்ஸ்கிருத நாடகத்தை ஆட வேண்டுமென்று இச்சை கொண்ட சிலர், திருவனந்தபுரத்தில் எல்லோருக்கும் சம்ஸ்கிருதம் நன்றாய்த் தெரியும். ஆகவே, சென்னையை விட அங்கு அதிக ஜனங்கள் வருவார்கள் என்று கூறினார் கள். அவர்கள் கூறியது தவறாயிற்று; நான் எண்ணியதுதான் சரியாயிற்று என்று நிரூபிப்பதற்காக இதை நான் எழுதவில்லை. இப்படிப்பட்ட விஷயங்களிலெல்லாம் அனுபவம் இல்லாதவர்கள், அனுபவம் உள்ளவர்களுடைய அபிப்பிராயத்திற்குக் கொஞ்சம் கௌரவம் கொடுக்க வேண்டுமென்று என் இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே இதை எழுதலானேன்.
இதற்கடுத்த நாடகமாக ஹரிச்சந்திர நாடகம் ஆடப்பட்டது. இதற்கு வரும்படி மிகவும் குறைவாக வந்தது. இந்த நாடகத்தின் வரும்படியைப் பற்றி இவ்வளவு முக்கியமாக நான் குறிக்கவேண்டிய காரணம், இதை வாசிக்கும் எனது நண்பர்கள் சீக்கிரம் அறிவார்கள். இதற்கடுத்த நாடகம் “காலவ ரிஷி.” இந்நாடகத்திற்குச் சுமாராக வசூலாயிற்று. இங்கு குறிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், முதல் நாடகமாகிய, “லீலாவதி-சுலோசனா"வில் ஆடிய பிறகு எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு இதில்தான் ஆடினார். அதன்மீது எங்கள் நண்பர்களில் சிலர், ரங்கவடிவேலு ஆடினால்தான் வசூல் அதிகமாக ஆகிறார் போலிருக்கிறது என்று பேசத் தலைப்பட்டனர். இது மற்றவர்களுக்குத் திருப்திகரமாயில்லையென்று நான் நினைக்க வேண்டியவனாயிருக்கிறேன். அவ்வாறு நான் எண்ணியது சரியோ தப்போ என்று பின் வருவதைப் படித்து இதை வாசிக்கும் எனது நண்பர்கள் தீர்மானிக்கலாம். இதற்கப்புறம் நடத்திய நாடகங்கள் பீஷ்மப் பிரதிக்ஞையும் நந்தனாருமாம். இவைகளிரண்டிலும் எனதுயிர் நண்பர் ஒரு பாத்திரமும் எடுத்துக் கொள்ளவில்லை. பீஷ்மப் பிரதிக்ஞைக்கு இங்கு நடத்திய நாடகங்களுளெல்லாம் மிகவும் குறைந்த வசூலாயிற்று. எனக்கு ஞாபகமிருக்கிறபடி நாற்பது ரூபாயோ நாற்பத்திரண்டு ரூபாயோ வந்தது. அன்றியும், இந்நாடகத்தில் ஒருவரும் சரியாகத் தங்கள் பாடங்களைப் படிக்காதது மிகவும் ஆபாசமாயிருந்தது. எனதுயிர் நண்பர் ஜ்வரத்தினால் நாடகசாலைக்கு வராதிருக்கவே, நான் நாடகம் ஆரம்பமானவுடன் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு, அவரைக் கவனிக்க, எங்களிருப்பிடம் போய்ச் சேர்ந்தேன். நாடகம் முடிந்தவுடன், அந்நாடகாசிரியராகிய எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் என்னிடம் வந்து, தன்னுடைய நாடகமானது மிகவும் ஆபாசமாய் நடிக்கப்பட்டதென்று கண்ணீருடன் குறை கூறினார். இதை நான் இங்கு முக்கியமாகக் குறித்ததற்குக் காரணம் நாடகாசிரியர்கள், தங்கள் நாடகங்களை மற்றவர்கள் ஆட உத்தரவு கொடுக்கும் போது, அந்நாடகங்களைச் சரியாக நடத்தும்படி வற்புறுத்த வேண்டுமென்பதை என் இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே.
அடுத்த நாடகமாகிய நந்தன் சரித்திரத்திற்கும் வரும்படி குறைவாக வந்தது. இது சென்னையில் எப்பொழுது ஆடிய போதிலும் நல்ல வசூலைக் கொடுக்கும்படியான நாடகம். ஆகவே இதிலாவது சபைக்கு லாபம் கிடைக்குமென எண்ணியிருந்த எங்கள் கோரிக்கை கைகூடாமற் போயிற்று. இதன்பேரில் எங்கள் சபையின் நிர்வாக சபையாரில் சிலர், (அவர்கள் பெயரை இங்கு எழுதுவதற்கு எனக்கிஷ்டமில்லை) அரண்மனையில் மகாராஜாவின் கட்டளைப்படி ஆடவேண்டிய ஒரு நாடகத்தை சீக்கிரம் முடித்துக் கொண்டு, இங்கு ஆடத் தீர்மானிக்கப்பட்டிருந்த கடைசி இரண்டு நாடகங்களையும் விட்டுவிட்டு சென்னைக்குத் திரும்பிப் போக வேண்டும் என்று பிரேரேபித்தார்கள். இதையறிந்த எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு, அடங்காக் கோபமும் துயரமும் கொண்டவராய், “இவர்கள் வேண்டுமென்றே, என்மீதுள்ள பொறாமையினால் சொல்லுகிறார்கள். நான் இந்த நிர்வாக சபைக் கூட்டத்திற்கு வரமாட்டேன்!” என்று என்னிடம் கூறிவிட்டு, விலகிவிட்டார். அதன்பேரில் நான் ‘அவர்கள் அவ்வாறு பிரேரேபித்தால் பிரேரேபிக்கட்டும். நாம் சொல்ல வேண்டியதைச் சொல்லிப் பார்ப்போம்; நம்முடைய கடமையை நாம் செய்வோம்; பிறகு அவர்கள் அப்படித் தீர்மானித்தால் அவர்கள் பாடு” என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் ஒரே பிடிவாதமாய், “நான் வர மாட்டேன், நீங்கள் வேண்டுமென்றால் உங்கள் தொண்டையைக் கிழித்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஒன்றும் உங்கள் பேச்சைக் கேட்கப் போகிறதில்லை! போய் வாருங்கள்” என்று மனங்கசிந்து கூறினார். இதில் முக்கியமாக அவருக்குக் கோபத்தையும் துக்கத்தையும் விளைவித்தது என்னவென்றால், இப்படி விட்டுவிட வேண்டுமென்று யோசிக்கப்பட்ட இரண்டு நாடகங்கள் மனோஹரனும் வள்ளி மணமுமாம். இதில் இரண்டிலும் எங்களிருவருக்கும் முக்கியமான பாத்திரங்களிருந்தன. நான் உடனே இவ்வாறு யோசித்தேன். நான் இக்கடைசி இரண்டு நாடகங்களையும் இங்கு ஆட வேண்டுமென்பது எனது நண்பனது நன்மைக்காகவா? அல்லது எனது நன்மைக்காகவா? அல்லது இவ்விரண்டுமன்றி எங்கள் சபையின் நன்மைக்காகவா? முந்தியதாயிருந்தால் நான் மற்றவர்கள் சொல்லுகிறதை ஒப்புக்கொள்ள வேண்டும். பிந்தியதாயிருந்தால் என்னாலியன்ற அளவு அந்நாடகங்களைப் போடும்படி முயல வேண்டும். இந்த யோசனையில், அவ்விரண்டு நாடகங்களும் எப்படியும் சபைக்குப் பெயரையும் பணத்தையும் கொண்டு வரும் என்ற தீர்மானத்திற்கு வந்து, நிர்வாக சபையின் கடைசி இரண்டு ஆட்டங்களையும் நிறுத்தி விடுவதுதான் உசிதம் என்று பிரேரேபிக்கப்பட்டது. ஏறக்குறைய எல்லோரும் அதை ஆமோதித்தனர். அதன் பேரில் அவ்வாறு செய்யலாகாது, அந்த இரண்டு ஆட்டங்களுக்கும் நல்ல வசூலாகுமென்று எனக்குத் தோன்றுகிறதெனக் கூறியபோது, எதிர்க் கட்சியைச் சேர்ந்த எனது நண்பர்களில் ஒருவர், “ஆமாம்! முப்பது முப்பத்தைந்து ரூபாய் வரப்போகிறது ஒவ்வொரு ஆட்டத்திற்கும், அதற்காக எங்களையெல்லாம் இன்னும் நான்கைந்து நாட்கள் இங்கு இருக்கும்படிச் சொல்லுகிறாயா?” என்றார். அதன்மீது எனது நியாயங்களையெல்லாம் எடுத்துக் கூறி முடிவில் இவ்வாறு கூறினேன். “மற்ற நியாயங்களெல்லாம் இருக்கட்டும். இதைச் சற்று யோசித்துப் பாருங்கள். நாமோ அமெச்சூர்ஸ் வேடிக்கைக்காக நாடகமாடுபவர்கள். நாம் இந்த ஊரில் இன்னின்ன நாடங்கள் ஆடுவது என்று தீர்மானித்து விளம்பரம் செய்தபின், கடைசி இரண்டாட்டங்களையும் விட்டுவிட்டு ஊருக்குத் திரும்புவோமாயின், இவர்களுக்குப் பணம் வசூலாகவில்லை, பணம்தான் இவர்களுடைய முக்கியக் கருத்துப் போலும் என்று நம்மைப் பார்த்து நான்கு பெயர் நகைக்க இடமுண்டாகும். இது நம்முடைய சபையின் நற்பெருக்கு ஹீனமாகும். எனக்கென்னவோ இவ்விரண்டு நாடகங்களிலும் நல்ல வசூலாகுமென்று தோன்றுகிறது. அதற்குக் காரணத்தைக் கூறுகிறேன். நீங்கள் நான் சொல்வதைத் தவறாக எடுத்துக்கொண்டால், உங்கள் இஷ்டம், என் கடமையை நான் கழிக்கிறேன். நான் இங்கு வந்தது முதல், முதல் நாடகமானவுடன், ‘இன்னும் மற்ற எந்தெந்த நாடகங்களில் ரங்கவடிவேலு நடிக்கப் போகிறார்?’ என்று பலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள். ஆகவே, அவர் முக்கியப் பாத்திரமாக நடிக்கும் இவ்விரண்டு நாடகங்களுக்கும் ஏராளமான கூட்டம் வரும் என்று எனக்குள் ஏதோ சொல்கிறது. இப்பொழுது இம்மாதிரி ஏற்படுத்தப்பட்ட நாடகங்களை விடுவீர்களாயின், இன்னொருமுறை சென்னையிலிருந்து வெளியூருக்குப் போகவேண்டுமென்று பிரேரேபணை செய்வீர்களாகில், மற்ற ஆக்டர்கள் இம்மாதிரியாக நாம் வரும் நாடகங்களையும் விட்டு விட்டாலும் விடுவார்களல்லவா? ஆகவே நாம் கஷ்டம் எடுத்துக் கொண்டு வெளியூருக்கு இச்சபையுடன் போவதில் என்ன பிரயோசனம்? என்று யோசிக்கமாட்டார்களாவென்று ஆக்டர்களாகிய நீங்களே யோசித்துப் பாருங்கள். என் மனத்திலிருப்பதைப் பகிரங்கமாகச் சொன்னேன். பிறகு உங்களிஷ்டம். நான் கூறியது உங்களுக்கு சம்மதியானால் ஒப்புக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் எனக்கு விரோதமாகத் தீர்மானியுங்கள்” என்று கூறி முடித்தேன். அதன்பேரில், கடைசி இரண்டாட்டங்களையும் எப்படியாவது விட்டுவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த சிலர் தவிர, மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக என் பக்கம் திரும்பினார்கள். அப்படியிருந்தும், ஒரு தட்டினால் என்பட்சம் தீர்மானிக்கப்பட்டு, கடைசி இரண்டு ஆட்டங்களையும் ஆடிவிட்டுத் தான் பட்டணம் திரும்பிப் போக வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இதுவும் தெய்வத்தின் கருணை யென்று எண்ணினவனாய், இச் சமாச்சாரத்தை எனதுயிர் நண்பரிடம் போய்ச் சொல்லி அவரைச் சமாதானப் படுத்தினேன்.
பிறகு மறுநாள் ஜூலை மாதம் முதல் தேதி மஹாராஜாவின் அரண்மனையில் அவர் எதிரில், “காலவ ரிஷி” என்னும் நாடகத்தை ஆடினோம். அதைப்பற்றி விவரமாய்ப் பிறகு எழுதுகிறேன். முதலில் எங்கள் கடைசி இரண்டு நாடகங்கள் ஆடிய கோர்வையை முடிக்கிறேன்.
கடைசி இரண்டு நாடகங்களில் “மனோஹரன்” நாடகம் ஜூலை மாதம் மூன்றாம் தேதி வைக்கப்பட்டது. இதற்கு முந்திய நாள் எங்கள் சபையில் ஹார்மோனியம் வாசிக்கும் மாதவ ராவ் என்பவர் எங்களிடம் வந்து, இவ்வூரில் ஒருவர் இந்தக் கடைசி இரண்டாட்டங்களுக்கும் கண்டிராக்டாக 750 ரூபாய் கொடுக்கிறேன் என்கிறார்; ஒப்புக்கொள்கிறீர்களா என்றார். அதைக் கேட்டவுடன் மிகவும் சந்தோஷத்துடன் எனதுயிர் நண்பர் உடனே ஒப்புக்கொள்ளலாம் என்றார். நான் மாத்திரம் அதற்கு ஆட்சேபித்தேன். எங்கள் சபையின் காரியதரிசி உட்பட அநேகர், இதை ஒப்பக்கொள்ளலாமே, இதைவிட இவ்விரண்டாட்டங்களுக்கு அதிகமாகவா வரப்போகிறது என்று என்னிடம் வந்து வற்புறுத்தினர். நான் மாத்திரம் ஒரே பிடிவாதமாய் ஒப்பவில்லை. அதன்பேரில் மற்றவர்களெல்லாம், எனதுயிர் நண்பர் உட்பட, மெஜாரிடி ஆக இவ்வாறு தீர்மானிக்கப் போகிறார்களென்று பயந்தவனாய் சில வருடங்களுக்கு முன், சபையின் பொதுக்கூட்டத்தார் உத்தரவின்றி, சபை ஆட்டங்களைக் கண்டிராக்டாக விடக் கூடாதென்று தீர்மானிக்கப்பட்டதை எடுத்துக் கூறி மறுக்கவே, அவர்கள் அதன்பேரில் ஒன்றும் செய்வதற்கில்லாமல் போயிற்று. ஆயினும் என்னுயிர் நண்பர் உட்பட, எல்லோரும் “இந்தப் பிடிவாதத்திற்கென்ன செய்வது?” என்று என்னைக் கடிந்து மொழிந்தனர். ரங்கவடிவேலு என்னிடம் தனியாய் “இதென்ன இது! எப்படியிருக்குமோ? மழைகிழை வந்தால் என்னாகும்? ஒருவேளை இவ்விரண்டு நாடகங்களுக்கும் 750 ரூபாய் வசூலாகாவிட்டால் என்ன செய்வது? அப்பொழுது எல்லோரும் நம்மைப் பரிகாசம் செய்ய மாட்டார்களா? எனக்காகவாவது உங்கள் பிடிவாதத்தை விடுங்கள்” என்று மன்றாடினார். “உனக்காகத்தான் இவ்வாறு பிடிவாதம் பிடிக்கிறேன், இதனுண்மையைப் பிறகு நீயறிவாய்!” என்று நான் பதில் சொல்ல, அவர் என்மீது கோபித்துக் கொண்டு இரண்டு மூன்று மணிநேரம் என்னுடன் பேசவும் இல்லை! எது எப்படி ஆனாலும், என் தீர்மானத்தினின்றும் மாறுவதில்லை “கிண்டாய நம” என்று உட்கார்ந்தேன். நாடக தினம் எனதுயிர் நண்பர் எண்ணியபடி காலை முதல் பெரும் மழை தொடங்கி, கொட்டு கொட்டென்று கொட்டியது. அன்று ஒரு பகலுக்குள்ளாக, பிறகு நான் வர்த்தமானப் பத்திரிகைகள் மூலமாக அறிந்தபடி 91
அங்குலம் மழை பெய்தது! அந்த நகரவாசிகள் அநேகர் இம்மாதிரியான மழை இதுவரையில் பெய்ததில்லை என்று கூறினர். இந்த மழையின் கொடுமையை அறிய வேண்டுமென்றால், இப்படிக் கணக்கிட்டுப் பார்க்கலாம். இதை வாசிக்கும் எனது நண்பர்கள் கொஞ்ச நாளைக்கு முன்பாக நாகப்பட்டணத்தில் பெரும் மழை பொழிந்து, அதிக பொருட்சேதமும், ஆடு மாடு முதலிய கால்நடைச் சேதமும் நேரிட்டதாகப் பத்திரிகைகளில் படித்திருக்கலாம்; அப் பெரும் மழையிலும், 24 மணிக்கு 15 அங்குல மழை பெய்தததாம்; இந் நாடக தினம் திருவனந்தபுரத்தில் 12 மணிக்குள்ளாக 91
அங்குலம் மழை பெய்திருக்கிறது! என் ஜன்மத்தில் இம்மாதிரியான பெரும் மழை சென்னையில் பெய்ததில்லை. இவ்வாறு பெருமழை பெய்யவே என்னுடைய நண்பர்களெல்லாம் 750 ரூபாய்க்கு இரண்டு நாடகங்களையும் கண்டிராக்டாக விடாமற் போனோமே! இப்பொழுது இந்த லாபமும் போய்விட்டதே என்று வருத்தப்பட்டு என்னை நிந்திக்க ஆரம்பித்தனர். எனதாருயிர் நண்பர் வாய் திறந்து மற்றவர்களைப்போல் கூறாவிட்டாலும், என்னை உற்றுப் பார்க்கும் போதெல்லாம், தன் மனத்தில் என்னைக் கடிந்து கொண்டாரென்று நினைக்கிறேன். இந்தக் கடைசி இரண்டு நாடகங்களும் வேண்டாம் என்று கூறியவர்கள் எனக்குப் பின்னால், “என்னவோ அதிகமாக வசூலாகி விடுமென்று சம்பந்தம் சொன்னானே. இப்பொழுது என்ன சொல்லப் போகிறான், பார்ப்போம்!” என்று கூறியதாகக் கேள்விப்பட்டேன். இவற்றுளெல்லாம் என் மனத்தில் அதிகமாக உறுத்தியது, எனதுயிர் நண்பனின் முகவாட்டமே; அதன்மீது மனம் தாளாதவனாய் நான் அதுவரையில் செய்திராத காரியமொன்றைச் செய்தேன். அந்நாள் வரையில் நான் எழுதிய நாடகமோ, அல்லது நாங்கள் ஆடும் நாடகமோ ஆடும் தினம் வந்தால், ‘இன்று நாடகம் சரியாக ஆடப்பட வேண்டும், ஒன்றும் குறைவாக இருக்கலாகாது, எல்லோருடைய மனத்தையும் திருப்தி செய்யவேண்டும்” என்று பரமேஸ்வரனைக் குறித்துப் பிரார்த்திப்பது வழக்கம்; ஆயினும் பணம் வசூல் அதிகமாக ஆகவேண்டுமென்று பிரார்த்திப்பதில்லை. அவ்வாறு செய்யக்கூடாது என்னும் கோட்பாடு உடையவனாகிருந்தேன் (இப்பொழுதும் அதை உடையவனாயிருக்கிறேன்). அன்றைத் தினம் அதனின்றும் தவறினேன். அன்று போஜனமானவுடன் வழக்கம்போல், என் பாகத்தை ஒருமுறை படித்துவிட்டு, “எப்படியாவது இன்று நல்ல வசூலாக வேண்டும், ஏராளமான ஜனங்கள் வரவேண்டும்” என்று பரமேஸ்வரன் கருணையைப் பிரார்த்தித்தேன். பிறகு நமது பிரார்த்தனை ஈடேறுமோ என்னவோ என்னும் ஏக்கத்துடன் நாங்கள் குடியிருந்த வீட்டின் மேல் மாடியில் உலாவிக் கொண்டிருந்தபொழுது, கீழே இருக்கும் எனது நண்பர்களில் ஒருவர் யாரோ ஒரு கிழவன் உங்களைப் பார்க்க விரும்புகிறான் என்று தெரிவித்தார். வரச்சொல் என்று நான் விடை கொடுக்க,"ஒரு வயோதிகன் மேல் மாடிக்கு வர, அவனை என்ன வேண்டும் என்று நான் வினவ, உங்கள் நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது” என்று அவன் கூறினான். நான் இருந்த மனோஸ்திதியில் “யார் உன்னைப் பார்க்க வேண்டாம் என்றது?” என்று கடுகடுத்து மொழிந்தேன். அதன் பேரில் அவன் “என் கையில் காசில்லை . ஓர் அரை ரூபாய் டிக்கட்டு கொடுத்தீர்களானால், உங்களுக்கும் புண்ணியம் உண்டு” என்று விடைபகர்ந்தான். அதன்மீது மனமிரங்கியவனாய், எங்கள் காரியதரிசியிடம் சொல்லி, அவனுக்கு என் கணக்கில் அரை ரூபாய் டிக்கட்டு ஒன்று வாங்கிக் கொடுத்தேன். இதை ஒரு பெரிய விஷயமாக இங்கு எழுதுகிறானே என்று இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்கள் என்னை ஏளனம் செய்யாமலிருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இதை இங்கு எழுதியதற்கு இரண்டு முக்கியக் காரணங்களுண்டு. முதலாவது, இதைச் செய்தவுடன், அந்த வயோதிகனுடைய முகத்தில் தோன்றிய சந்தோஷம், என்னுடைய இருதயத்தில் இருந்த பெரும் பாரம் ஒன்றை நீக்கியது போல் எனக்கு உவகையைத் தந்தது. என்னுடைய குணாகுணங்களைப் பற்றி நிஷ்பட்சபாதமாய் நான் ஆராய்ந்து பார்க்குங்கால், என்னிடம் சுயநன்மையை நாடும் தீய குணம் பெரும்பாலும் குடிகொண்டிருந்தது (இன்னும் குடிகொண்டிருக்கிறது) என்றே நான் சொல்லவேண்டும். அங்ஙனமிருக்க, மேற்சொன்னபடி, பிரதி பிரயோஜனம் ஒன்றையும் நாடாது மற்றவர்களுக்கு நான் ஏதேனும் சிறிது உதவி செய்யும் பொழுதெல்லாம், என் இருதயத்தில் அதுவரையில் இல்லாத ஒரு குளிர்ச்சி உண்டாகி சந்தோஷப்பட்டிருக்கிறேன். என்னைப் போன்ற சுய நன்மையை நாடும் சிலர்; இதைப் படிப்பவர்களுள் இருந்தாலும் இருக்கலாம்; அவர்களுக்கு இந்த எனது அனுபவம் சிறிது பலனைத் தரக்கூடும் என்று எண்ணியவனாய் இதை எழுதலானேன். இரண்டாவது காரணம், அந்த வயோதிகன் போனவுடன் பெய்துகொண்டிருந்த மழை இன்னும் அதிகமாகப் பெய்ய ஆரம்பித்த போதிலும், என் மனத்தில் இன்றிரவு நாடகத்திற்கு நல்ல பணம் வசூலாகுமென்று திடீரென்று தோன்றியது. நான் செய்த அல்ப காரியத்திற்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று, எனது நண்பர்கள் என்னைக் கேட்கலாம்; இந்த இரண்டிற்கும் முடி போடுவது வெறும் பைத்தியம் என்று இதை வாசிக்கும் எனது நண்பர்களிற் சிலர் நகைக்கலாம். அப்படி நகைப்பவர்கள் மீது நான் குறை கூறமாட்டேன். அவர்கள், இவ்வாறு இவ்விரண்டிற்கும் ஏதோ சம்பந்தமிருக்கிறது என்று எண்ணுவதற்கு என்ன நியாயமுண்டு? என்று என்னைக் கேட்பார்களாயின், அவர்களுக்குத் தக்க பதில் உரைப்பதற்கு அசக்தனாயிருக்கிறேன். ஆயினும் இவ்விரண்டிற்கும் நான் காரணமறியாத சம்பந்தம் ஏதோ உண்டென்று உறுதியாய் நம்புகிறேன்.
அன்று சாயங்காலம் ஆறு மணிக்குக்கூட அப்படியே பெருமழை பெய்துகொண்டிருந்தது. அருகிலுள்ள நாடக சாலைக்கு நான் போய்ப் பார்த்தபொழுது, நாடகமேடையின் பக்கத்தில் ஆர்மோனியம் வைக்கும் இடத்தில் மழை ஜலம் தேக்கிடையாயிருந்தது. அதை வெளிப்படுத்த ஒரு வாய்க்கால் வெட்டி, அதன் மூலமாக அந்த ஜலத்தை ஒழித்தோம்! சுமார் 81
மணிக்குக் கொஞ்சம் மழை நின்றது. மழை நின்று விட்டதென்று நாங்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த பொழுது மறுபடியும் 1
மணி நேரத்திற்கெல்லாம் பெரும் மழை தொடங்கியது! ஆயினும் இந்த அரைமணி நேரத்திற்குள்ளாக கடைசி வகுப்பு தவிர, மற்ற வகுப்புகளெல்லாம் ஜனங்கள் நிரம்பி விட்டனர்! அன்றைத் தினம் நாடக ஆரம்பத்திற்கு முன் எங்கள் சபை வழக்கப்படி பிள்ளையார் பட்டைப் பாடும்பொழுது என் வேண்டுகோளுக்குக் கருணை கூர்ந்தனரே பகவான் என்று ஆனந்தக் கண்ணீருடன் அப் பாட்டைப் பாடினேன். அன்று எனக்கு ஞாபகமிருக்கிறபடி 850 ரூபாய்க்குமேல் வசூலாகியது. இதையறிந்த எனதுயிர் நண்பர் அன்று நடித்தது போல் என்றும் நடிக்கவில்லை யென்றே கூறுவேன். நானும் அன்று நடித்ததுபோல், சில சமயங்களில்தான் மிகுந்த குதூஹலத்துடன் நடித்திருக்கிறேன்.
நாடகம் முடிவதற்கு ஏறக்குறைய காலை 3.30 ஆச்சுது. வந்தவர்களில் ஒருவரும் அதுவரையில் தங்கள் இடத்தை விட்டுப் பெயர்ந்திலர். நாடக முடிவில் நடந்த ஒரு சிறு வேடிக்கை எனக்கு ஞாபகமிருக்கிறது. நாடகம் முடிந்தவுடன் அநேகர் எனக்குத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களுமாக வேஷம் தரிக்கும் இடத்திற்கு வந்து, எங்களைக் கொண்டாடிப் பேசினர். அதில் ஒருவர், “என்ன சார், முதலியார்வாள், நாடகம் முடிந்தபிறகுதான் நீங்கள் இந் நாடகத்தில் ஒரு பாட்டும் பாடவில்லையென்று கண்டறிந்தோம்! ஏன் நீங்கள் பாடுகிறதில்லை?” என்று கேட்டார். இதை நான் ஆக்டு செய்ததற்கு, ஒரு முக்கியமான புகழாகக் கொள்கிறேன். முதன்முறை இந் நாடகத்தில் நான் நடித்தபிறகு, இவ்வேடம் ஏறக்குறைய நாற்பது முறை நான் தரித்து ஆடும்பொழுதெல்லாம் ஒரு பாட்டும் பாடியதில்லை. அப்படியிருந்தும் இந்நாடகம் நன்றாக இல்லையென்று ஒருவராவது சொன்னதாக எனக்கு ஞாபகமில்லை. நாடகமாடுவதென்றால் பாட்டு இல்லாமல் உதவாது என்று அபிப்பிராயப்படுவோர் இதைச் சற்றுக் கவனிப்பாராக.
அன்று நாடகம் முடிந்து எங்கள் வேஷங்களைக் கலைத்தவுடன், ஏதோ கொஞ்சம் ஆகாரம் கொண்டுவிட்டு, உடனே மோட்டார் வண்டியில் எனதுயிர் நண்பரும் நானும் கன்னியாகுமரிக்குப் பிரயாணம் புறப்படும்படி நேரிட்டது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. சில தினங்களுக்கு . முன் எங்கள் சபையோர் கன்னியாகுமரிக்குப் போய் வந்தபொழுது, எனதுயிர் நண்பர் கொஞ்சம் ஜ்வரத்துடன் இருந்தார்; ஜ்வரமாயிருந்தும் மறுபடியும் தனக்குச் சமயம் வாய்க்குமோ என்னவோ எப்படியும் அவர்களுடன் போக வேண்டுமென்று நிர்ப்பந்தித்தார். அதன்பேரில், உன் உடம்பைப் பார்த்துக்கொள்; நான் உனக்கு உடம்பு சௌக்கியமானவுடன் எப்படியும் உன்னைக் கன்னியாகுமரிக்கு அழைத்துக்கொண்டு போய் அம்மன் தரிசனம் செய்து வைக்கிறேன் என்று வாக்குக் கொடுத்திருந்தேன்; கடைசி இரண்டு நாடகங்களும் ஆனவுடன் சென்னைக்குப் புறப்பட ஏற்பாடாயிருந்தபடியால், அந்த மறுநாளைத் தவிர, கன்னியாகுமரிக்கு நாங்கள் போக, எங்களுக்கு வேறு தினம் கிடைக்கவில்லை. ஆகவே, நாடகமாடிய சிரமத்தையும் கவனியாது, உடனே புறப்பட வேண்டியதாயிற்று. வழியெல்லாம் அம் மலைப் பிரதேசங்களின் தோற்றங்கள் அழகினையும் கவனியாது தூங்கிக்கொண்டே போனோம். எங்களை அழைத்துக்கொண்டு போன திருவனந்தபுரம் நண்பர், எங்களுக்கு வேண்டிய சௌகர்யங்களையெல்லாம் செய்திருந்தார். வழியில் ஓர் அழகிய குளத்தில் ஸ்நானம் செய்து கொண்டு, சுசீந்திரம் என்னும் திவ்ய ஸ்தலத்தைத் தரிசித்துக்கொண்டு, கன்னியாகுமரிக்குப் போய்ச் சேர, நடுப்பகலாய்விட்டது. அப்பொழுது கோயிலுக்குப் போனால், மத்யான பூஜையாகிக் கோயில் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன! நாங்கள் சாயங்காலமே திரும்பி வருவதாக எங்கள் சபை நண்பர்களுக்குத் தெரிவித்துவிட்டு வந்தோம். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்தும், அம்மன் தரிசனம் செய்யாமல் திரும்பிப் போவதா? சாயங்காலம் தரிசனம் செய்துகொண்டு, ராத்திரி போய்ச் சேர்வோம் என்று தீர்மானித்தோம். அன்று இந்திய லட்சுமியின் பாதத்திலுள்ள கன்னியாகுமரி முனையின் சமுத்திர கட்டத்தில் ஸ்நானம் செய்து போஜனம் கொண்டு, 12 மணி முதல் சாயங்காலம் ஆறு மணி வரையில் ஒரே தூக்கமாய்த் தூங்கினோம். பிறகு சாயங்காலம் கடற்கரையில் எங்கள் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு கோயிலுக்குப் போய் அம்மன் தரிசனம் செய்துகொண்டு திருவனந்தபுரம் போய்ச் சேரப் புறப்பட்டோம். இந்த கன்னியாகுமரி க்ஷேத்திரமும் சமுத்திரக் கட்டமும், இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அவசியம் பார்க்கவேண்டியவை; இவற்றின் அழகையும் மேன்மையையும் பற்றி ஈசுவரன் கிருபையால், எனக்குச் சந்தர்ப்பம் வாய்க்குமாயின், பிறகு எனது நண்பர்களுக்குத் தெரிவிக் கலாமென்றிருக்கிறேன். இவ்வூரைவிட்டுத் திருவனந்தபுரம் வரும்பொழுது, பாதி வழியில் எங்கள் மோட்டார் வண்டியின் டயர் (Tyre) வெடித்துப் போய்விட்டது திடீரென்று! வண்டிக்காரன் மிகுந்த புத்திசாலித்தனமாய் எவ்வளவோ அதை மராமத்து செய்து பார்த்தான்; பிரயோஜனப்படவில்லை. என்ன காரணத்தினாலோ, வேறு டயர் கொண்டுவரவில்லை! இரவு எட்டுமணியாகி விட்டது; பாதையில் ஜன சந்தடியும் அற்றுப்போய் விட்டது! என்ன செய்வது? நாங்கள் பட்ட துயரத்தைவிட எங்களை அழைத்துவந்த நண்பர், இவர்களுக்கு இவ்வளவு கஷ்டம் கொடுக்கிறோமே என்று அதிகத் துயரப்பட்டார். பிறகு வண்டியை வண்டிக்காரன் வசம் விட்டுவிட்டு, சுமார் இரண்டு மைல் நடந்து ஒரு குக்கிராமம் போய்ச் சேர்ந்தோம். அதன் பெயரும் எனக்கு ஞாபகமில்லை. இதற்குள் ஒன்பது மணியாகிவிட்டது. எங்களுக்குப் பசி அதிகமாய்விட்டது. அந்தச் சிறு கிராமத்திலிருந்த வீடுகளெல்லாம் மூடப்பட்டிருந்தன. பிறகு அங்கு ஒரு சத்திரத்திற்குப் போய் அச்சத்திரப் பிராமணனை, கதவைத் தட்டியெழுப்பி, ஏதாவது உணவு கிடைக்குமா என்று கேட்க, அப்பிராமணன், ‘ஐயோ! இப்பொழுது வந்தீர்களே! எல்லாம் சாப்பிட்டாய் விட்டதே! கடைகளும் மூடப்பட்டனவே! வேண்டு மென்றால் சாதம் வடித்துக் கொடுக்கிறேன். வீட்டில் கொஞ்சம் மோர் இருக்கிறது சாப்பிடுங்கள்” என்று சொன்னார். அவ்வளவாவது சொன்னாரே என்று அவரை வாழ்த்திப் பிறகு மோர் சாதம் சாப்பிட்டு அன்றிரவு அந்தச் சத்திரத்தின் மேல் மாடியில் கழித்தோம். காலை எழுந்து திருவனந்தபுரம் போகும் பஸ் வண்டி வரும், அதில் போகலாமென்று தீர்மானித்தோம். நாங்கள் திரும்பி வரவில்லையேயென்று எங்கள் சபை நண்பர்களெல்லாம் வருத்தப்படுவார்களேயென்று, எண்ணமிட்டுக்கொண்டே அன்றிரவு தூங்கினேன்.
மறுநாள் காலையிலெழுந்து திருவனந்தபுரம் போகும் பஸ் ஒன்றில் ஏறி, நாங்கள் குடியிருந்த வீட்டிற்குப் போய், முன்நாள் இரவு வராததற்குக் காரணத்தை என் நண்பர் களுக்குக் கூறினோம். அன்றிரவு வள்ளித் திருமணம் என்னும் நாடகத்தை ஆடினோம். கடைசி இரண்டு நாடகங்களையும் விட்டுவிட வேண்டுமென்று பிரயத்தனம் செய்த எனது நண்பரிற் சிலர், “மனோஹரன்” நாடகத்திற்குத்தான் ரூபாய் அதிகமாக வந்தது; அதற்குக் காரணம் மனோஹரன் நாடகம் மிகவும் பிரசித்தி பெற்றிருப்பதாம்; இந்த வள்ளி நாடகத்திற்கு என்ன வரப்போகிறது? பார்ப்போம், என்று என் காதில் விழும்படியாகப் பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கேட்டும், எல்லாம் ஈசுவரன் பாரம், நாம் இதற்குப் பதில் கூறுவானேன் என்று சும்மா இருந்துவிட்டேன். அன்றைத்தினம் மழை ஒன்றும் இல்லாதிருந்தது. இந்த நாடகத்திற்கு ஒரு மணிக்கு முன்பாக நான் வேஷம் போட்டுக் கொண்டிருந்த பொழுது, நாடக சபைக்குள் ஜனங்கள் சேரும் தொனியினால் அன்றைக்கும் அதிகமாக ஜனங்கள் வருகிறார்கள் என்பதை அறிந்தேன். ஆயினும், எனதாருயிர் நண்பருக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த எனது நண்பர்களில் ஒருவர் டிராப்படுதாவில் இதற்கென்று செய்து வைக்கப்பட்டிருந்த ஒரு துவாரத்தின் வழியாக நாடகசாலையில் வந்திருக்கும் ஜனங்களைப் பார்த்துவிட்டு, நாங்களிருவரும் (ரங்கவடிவேலுவும் நானும்) கேட்கும்படியாக, “ஒரு ஐம்பது ரூபாய் வசூலாயிராது; ஜனங்களின் கூச்சல் மாத்திரம் அதிகமாயிருக்கிறது!” என்று கூறினார். அதைக்கேட்டு, கொஞ்சம் புன்சிரிப்புடையவனாய் என் வேஷத்தின்மீது கவனமாயிருந்தேன். அதன் பேரில் ரங்கவடிவேலு என்னருகில் வந்து “என்ன! இவர் (அவர் பெயரைச் சொன்னார். அதை இங்கு எழுத என் மனம் இடங்கொடுக்கவில்லை) இப்படிச் சொல்லுகிறாரே! இன்றைக்கு நல்ல வரும்படி வருமா?” என்றார். அதற்கு “அவசரப்படாதே, நீ கேட்ட கேள்விக்குப் பதில், நாடகம் ஆரம்பமானவுடன் சொல்லுகிறேன். அதுவரையில் உன் தலையை நீட்டி ஹாலில் எத்தனை பெயர் வந்திருக்கிறர்கள் என்று எண்ண வேண்டாம்! நீ ஒன்றுக்கும் பயப்படாதே!"என்று பதில் உரைத்தேன். அன்றைத் தினம் நாடக ஆரம்பத்திற்கு முன் 750 ரூபாய்க்கு மேல் வசூலாகியது. இதைக் கேள்வியுற்ற எனதுயிர் நண்பர் என்னிடம் ஓடி வந்து சந்தோஷத்துடன், “எழுநூற்றைம்பது ரூபாய் வசூலாய் விட்டதாம்!” என்று கூறினார். அதற்கு நான், “இது ஒன்றும் எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை; இப்படி வசூலாகுமென்று முன்பே எனக்குத் தெரியும்; இதிருக்கட்டும்; இந்த சந்தோஷத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, நீ நன்றாய் வள்ளியின் பாகத்தை நடித்து வந்திருப்பவர்களின் மனத்தைத் திருப்தி செய்யும் விதத்தைப் பார்!” என்று சொல்லி அவரை முதற் காட்சியில் மேடையின் மீது அனுப்பினேன். அன்று எனதுயிர் நண்பர் மிகவும் குதூகலத்துடன் நடித்தனர் என்று நான் இங்கு எழுத வேண்டியதில்லை. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், அவர் நடிக்காத இங்கு எங்கள் சபை ஆடிய நாடகங்கள் ஐந்தின் வரும்படியைச் சேர்த்தாலும், அவர் ஆடிய இக் கடைசி நாடகங்களில் ஒவ்வொன்றிலும் வந்த வரும்படிக்கு ஈடாகவில்லை! இந்நிகழ்ச்சியால் நான் அறிந்த நீதி இரண்டாம். ஒன்று, ‘கடவுளை நம்பினவர்கள் கைவிடப்பட மாட்டார்கள்’ என்பதும்; இரண்டாவது, மற்றவர்கள் நமக்குக் கெடுதி நினைத்தாலும் நாம் அதை ஒரு பொருட்டாகப் பாவியாது பிரதி செய்யாது, மறந்துவிட வேண்டுமென்பதுமாம். இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்கள் இந்நீதிகளைக் கடைப்பிடித்து நடப்பார்களாயின், அவர்களுக்குப் பலன் உண்டாகும் என்று நம்பி, இதை இங்கு விவரமாய் எழுதலானேன்.
இனி, திருவாங்கூர் மகாராஜாவின் முன்னிலையில் எங்கள் சபையோர் ஆடிய நாடகத்தைப் பற்றி எழுதுகிறேன். எங்கள் சபை இவ்வூருக்கு வந்ததும் எங்கள் சபையின் அங்கத்தினரில் ஒருவரும், இவ்விடம் எங்கள் சபைக்கு மிகவும் உதவி புரிந்தவருமாகிய, திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவான்ஜி (மந்திரி) யாகவிருந்த திவான் பஹதூர் ராகவையாவின் மூலமாக, மஹாராஜா அவர்களுக்கு எங்கள் சபை அவரது முன்னிலையில் ஒரு நாடகம் ஆட விரும்புவதைத் தெரிவித்தோம். அதன் பேரில், அவர்கள் எங்கள் சபையைப் பற்றி எல்லாம் விசாரித்து, தமது அரண்மனையில் ஒரு நாடகம் ஆட வேண்டுமென்று ஆக்ஞாபித்தார். அதன்மீது என்ன நாடகம் ஆடுவதென்ற கேள்வி வந்தபொழுது, நாங்கள் ஆடக்கூடிய நாடகங்களின் கதைகளின் சுருக்கங்களை யெல்லாம் திவான் மூலமாக அனுப்ப, அவர், ‘காலவ ரிஷி’ சரித்திரம் புராணக் கதையாயிருப்பதால், அந்தப்புரத்து ஸ்திரீகளும் அறியக்கூடியதாயிருப்பதால், அதை ஆடவேண்டுமென்று தெரிவித்தார். அதை ஆடுவதாக ஒப்புக்கொண்டு தக்க ஏற்பாடுகளைச் செய்து அரண்மனையிலே ஒரு மண்டபத்தில் இதற்கு வேண்டிய திரைகளையெல்லாம் அனுப்பி, அரங்கமொன்று ஏற்படுத்தினோம். இங்கு இந்நாடகம் நடத்தியது கொஞ்சம் விந்தையானதால், அதைச் சற்று விவரமாக எழுத விரும்புகிறேன்.
அரண்மனையில், ‘காலவ ரிஷி’ ஆட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட பிறகு, அரண்மனையிலிருந்து இன்னின்னபடி நடக்கவேண்டும் என்று எங்களுக்குச் சில நிபந்தனைகள் சொல்லி அனுப்பப்பட்டன; 8 மணிக்கு ஆரம்பமாகி, நாடகம் 101
மணிக்குள்ளாக முடிய வேண்டுமென்றும், அரங்கத்தின் மீதிருக்கும் வெளிச்சங்கள் மஹாராஜா உட்கார்ந்திருக்குமிடத்தில் பிரகாசிக்கக் கூடாதென்றும், ஆக்டர்கள் மஹாராஜா உட்கார்ந்திருக்குமிடத்தை நேராகப் பார்க்கக் கூடாதென்றும், ஆக்டர்களும் பக்க வாத்தியக்காரர்களும் தவிர, மற்றொருவரும் அங்கு வரலாகாதென்றும், இம்மாதிரியான சில நிபந்தனைகள் சொல்லி அனுப்பப்பட்டன; அவைகளுக்கு ஒப்புக் கொண்டு அவ்வாறே ஏற்பாடுகள் செய்தோம். எட்டு மணிக்கெல்லாம் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறதே யென்று சாயங்காலம் 3 மணிக்கெல்லாம் அரண்மனைக்குப் போய் வேஷம் தரிக்க ஆரம்பித்தோம். ஆக்டர்கள் தவிர மற்றவர்கள் வரவேண்டியதில்லை என்று உத்தரவானதன் பேரில், எங்கள் சபையுடன் வந்த ஏறக்குறைய எல்லா அங்கத்தினரும் ஆக்டர்களாக மாறிவிட்டனர்! நாடகம் நடக்கும் பொழுது பக்கத்திலிருக்கும் யாரும் பார்க்கக் கூடாதென்று கேட்கப்பட்டபடியால், புராம்டர் வேண்டாமென்று தீர்மானித்து, ஆக்டர்களுடைய புஸ்தகங்களையெல்லாம் வீட்டில் கட்டிப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு வந்தோம். அன்றிரவு நாடக முழுவதும் கொஞ்சமேனும் புராம்டிங் இல்லாமலே நடந்தது! தற்காலம் சில நாடகங்கள் நடக்கும்பொழுது நான்கு பக்கம் நான்கு புராம்டர்களும், அவர்கள் மத்தியில் பாட்டுகளை ப்ராம்ட் பண்ணுவதற்குச் சிலரும், ஏற்பாடு செய்யும் ஆக்டர்களும் கண்டக்டர்களும் இதைக் கவனிப்பார்களாக.
8 மணிக்கு நாடகம் ஆரம்பிக்க வேண்டுமென்று சொல்லியனுப்பிய மஹாராஜா அவர்கள், 71
மணிக்கெல்லாம் போஜனம் முடித்தாயது; உடனே ஆரம்பிக்க முடியுமா? என்று கேட்டனுப்பினார்! நாங்கள் எல்லோரும் முன்பே ஆயத்தமாயிருந்தபடியால், ‘இன்னும் ஐந்து நிமிஷத்தில் ஆரம்பிக்கிறோம்’ என்று சொல்லியனுப்பி, பிள்ளையார் துதி, சரஸ்வதி துதியை உடனே பாடி, நாடகத்தை ஆரம்பித்தோம். இது மகாராஜா அவர்களுக்கு மிகவும் திருப்தியைக் கொடுத்ததென்று பிறகு கேள்விப்பட்டேன். முதல் காட்சியில் எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு, இந்திரன் சபையில் நர்த்தனம் செய்தது மிகவும் புகழப்பட்டதெனவும் அறிந்தேன். நர்த்தனம் செய்யும் பொழுது, சம்ஸ்கிருதத்தில் மஹாராஜாவின் மீது கட்டப்பட்ட ஒரு சுலோகத்தைப் பாடி நர்த்தனம் செய்தார். நாடக ஆரம்பத்தின் முன் எமது ஆக்டர்களெல்லாம், ஒரே ஒருவர் முன்னிலையில் நாடகமாடுவதென்றால், அது எப்படி இருக்கும் என்று கூச்சப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆயினும், இந்தச் சந்தேகம் டிராப் படுதா மேலே போனவுடன், நிவர்த்தியாகிவிட்டது. மஹாராஜா அவர்கள் ஒரு பக்கமாக உட்கார்ந்திருக்க, மற்றொரு புறம் அவரது இரண்டு மனைவியரும் பிள்ளைகள் முதலியோரும் உட்கார்ந்திருக்க, இரண்டு பக்கங்களிலும் பின்புறத்திலும், அரண்மனையிலிருந்த ஏறக்குறைய அனைவரும் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்! நாடகமானது ஒரு தடையுமின்றி, காட்சிக்குக் காட்சி இடைக்காலம் ஏதுமின்றிப் பரபரவென்று நடந்தேறியது. ஆக்டர்களனைவரும் மிகவும் நன்றாக நடித்தார்களென்றே சொல்ல வேண்டும். சாதாரணமாக நான்கு மணி நேரம் பிடிக்கும் இந்நாடகம் 21
மணி நேரத்திற்குள் முடிந்துவிட்டது! நாடகம் முடிந்ததும் நாங்கள் வழக்கப்படி சபை மங்களம் பாடி முடிந்தவுடன், மஹாராஜா அவர்கள் தன் ஆசனத்தை விட்டெழுந்து நின்று, ஆங்கிலத்தில், நாடகமானது மிகவும் நன்றாயிருந்ததென்றும் தாம் மிகவும் சந்தோஷப் பட்டதாகவும் கூறி, எங்கள் சபைக்கு வந்தனம் அளித்தனர். பிறகு திவான் அவர்கள், “மஹாராஜா அவர்கள் இம்மாதிரியாக ஒரு சபையையும் புகழ்ந்து வந்தனம் செய்ததில்லை. உங்கள் பாடு அதிர்ஷ்டம்தான்” என்று மறுநாள் என்னிடம் கூறினார். மஹாராஜாவின் மனத்தை இவ்வாறு சந்தோஷிக்கச் செய்தோமே என்று நான் மிகவும் சந்தோஷப் பட்டேன். மஹாராஜா அவர்களும், அவரது மனைவிகளும், நாடகத்தை நன்கு மதித்தனர் என்பதற்கு முக்கியமான அத்தாட்சி, மறுநாள் இன்னொரு நாள் நாடகம் ஆட முடியுமாவென்று எங்களைக் கேட்டனுப்பியதேயாம். நாங்கள் சீக்கிரம் திருவனந்தபுரத்தை விட்டுப் போகத் தீர்மானித்தபடியால், எங்களை மன்னிக்க வேண்டுமென்று சொல்லியனுப்ப வேண்டியதாயிற்று.
திருவனந்தபுரத்திலிருந்த பொழுது, மஹாராஜா அவர்கள் அரண்மனையிலேயே எங்களுக்கு ஒரு பெரும் விருந்தளித்தனர். இஃதன்றி திவான் பஹதூர் டி. ராகவையா அவர்களும் விஸ்வநாதக் கோனார் அவர்களும், வக்கீல் சங்கரசுப்பைய்யர் அவர்களும், டாக்டர் . ஆர். சங்கர சுப்பய்யர் அவர்களும் எங்கள் சபையோருக்கு விருந்தளித்தனர். இவர்களுக்கெல்லாம் என் வந்தனத்தை இதன் மூலமாகச் செலுத்துகிறேன். முக்கியமாகக் காலஞ்சென்ற திருவாங்கூர் மஹாராஜா இச்சமயம் எங்கள் சபையின் கட்டிட பண்டிற்கு ரூ.2500 அளித்து எங்கள் சபைக்குச் செய்த கௌரவத்தையும் உபகாரத்தையும் நான் என்றும் மறக்க முடியாது.
இம்முறை சென்னையை விட்டு வெளியூர்களுக்குப் போய் வந்ததனால், சபைக்கு மொத்த வரும்படியை விடச் செலவு அதிகம்; மொத்த நஷ்டம் 3,057-4-10 ஏற்பட்டது. நாங்கள் திருவனந்தபுரத்தில் கடைசி இரண்டு நாடகங்கள் ஆடாதிருந்தால், இந்த நஷ்டமானது, ஏறக்குறைய 5000 ரூபாயாயிருக்கும். இவ்வாறு சபைக்குப் பெரும் நஷ்டம் வந்ததன் பலன் என்னவென்றால், இது முதல் நான்கைந்து வருடங்கள் வரைக்கும் சபையானது வெளியே போய் நாடகமாடலாம் என்னும் பிரஸ்தாபமே இல்லாமற் போயிற்று.
இவ் வருஷம் எனது நண்பர் ச. ராகவாச்சாரியார் சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்த “வேணீ சம்ஹாரம்” எனும் நாடகம் முதன்முறை ஆடப்பட்டது. இதில் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு பானுமதியாக நடிக்க, நான் துரியோதனனாய் நடிக்க வேண்டி வந்தது. நான் இதுவரையில் ஆடிய அநேக நாடகப் பாத்திரங்களில், மனத்தில் திருப்தியில்லாமல் நடித்த வெகு சிலவாகிய வேடங்களில் இது ஒன்றாகும். ரங்கவடிவேலு பானுமதி வேடம் பூண்டமையால், நான் இவ் வேடத்தைத் தரித்தேனே யொழிய இல்லாவிடில் ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். சிறு வயதில் மஹாபாரதத்தை நான் தமிழில் படித்தது முதல், இந்தத் துரியோதனனை, நான் மிகவும் வெறுத்து வந்தேன். அப்படியிருக்க அவ்வேடத்தை நான் எவ்வாறு நன்றாய் ஆட முடியும்?
இவ் வருஷம் சில அங்கத்தினரின் பிரேரேபணையின்படிச் சபையில் சங்கீதக் கச்சேரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று யோசித்து, ஸ்ரீமான் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் அவர்கள் கச்சேரி ஒன்று ஏற்பாடு செய்தோம். இப் பிரயத்தனமானது பிறகு சரிவராது கைவிடப்பட்டது.
எங்கள் சபையின் சரித்திரத்தில் இவ்வருஷம் நடந்த நிகழ்ச்சிகளுள் முக்கியமானது, சென்னைக் கவர்ன்மெண்டார் மூலமாக எங்கள் சபைக்கு நேபியர் பார்க் என்னும் இடத்தில் 22 மனை 2,199 சதுர அடியுள்ள நிலம் எங்கள் நாடகசாலையும் இருப்பிடமும் கட்டக் கிடைத்ததேயாம். இவ்வருஷ முடிவில் கட்டட பண்டாக எங்களிடம் 66,683-14-7 இருந்தது.
1922ஆம் வருஷம் இன்னொரு புதுப் பிரயத்தனம் செய்து பார்த்தோம். “அசந்துஷ்டேத் விஜோ நஷ்ட: சந்துஷ்டஸ் சைவ பார்த்திவ:” என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் உண்டு; அதன் பொருள் “கிடைத்தது போதாது என்றிருக்கும் பிராமணனும், கிடைத்தது போதும் என்றிருக்கும் அரசனும், நஷ்டமடைவார்கள்” என்பதாம். ஆகவே, எனது பால்ய நண்பர் எப்பொழுதும் எனக்கு ஞாபகமூட்டுகிறபடி, எங்கள் சபையில் ஏதாவது புதிய பிரயத்தனம் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பது, எங்களிருவருடைய கொள்கை. அதன்படி இவ்வருஷம் முக்கோடி ஏகாதசி தினம், ஒரே நாளில் இரண்டு நாடகங்கள் போட்டுப் பார்த்தோம். சாயங்காலம் 51
மணி முதல் “வேதாள உலகம்” என்னும் தமிழ் நாடகமும், பிறகு 8½ மணி முதல் இரவு 21
மணி வரையில் ‘பிரஹ்லாதன்’ என்னும் தெலுங்கு நாடகமும். இதைப்பற்றி நான் எங்கள் நிர்வாக சபையில் முதலில் - பிரேரேபித்தபொழுது, சில தெலுங்கு அங்கத்தினர் சாயங்காலம் போடும் தமிழ் நாடகத்திற்கு ஒருவரும் வரமாட்டார்கள் என்று ஆட்சேபித்தனர். இரண்டு நாடகங்களுக்கும் நல்ல வசூலாயிற்று; தமிழ் நாடகத்திற்கு 333-4-0 ரூபாயும் தெலுங்கு நாடகத்திற்கு 760-12-0 ரூபாயும்; ஆகமொத்தம் ஒரே நாளில் சபைக்கு நாடக வாயிலாக 1,094-0-0 ரூபாய் வசூலாயிற்று. இதை அறிந்தபின் சாயங்கால நாடகத்திற்கு ஒன்றும் வராது என்று சொன்னவர்கள், கம்மென்று இருந்துவிட்டார்கள்; நானும் என் கோட்பாட்டின்படி, அவர்களை ‘நீங்கள் சொன்னீர்களே, என்னவாயிற்று?’ என்று கேட்காமலிருந்து விட்டேன். இதை இங்கு எடுத்து எழுதியதற்கு முக்கியக் காரணம், நாம் எதையும் பிரயத்தனம் செய்து பார்க்க வேண்டுமென்று என் இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே. இச் சந்தர்ப்பத்தில், உலகிலெல்லாம் மிகுந்த தனவந்தன் என்று பெயர்பெற்ற ஹென்றி போர்ட் என்பவர் ஒருமுறை கூறியது ஞாபகம் வருகிறது. “எந்தப் பிரயத்தினத்திலும் தோல்வி என்பது கிடையாது; ஒரு பிரயத்தனத்தில் நாம் கோருவது கைகூடாவிட்டால், அதையே பிறகு வெற்றியடைய நமக்கு அனுபவமாகக் கொள்ள வேண்டும்” என்பதாம்.
இவ்வருஷம் எங்கள் சபையானது மிகுந்த உன்னத ஸ்திதியையடைந்தது என்று ஒருவிதத்தில் சொல்ல வேண்டும். இவ் வருஷத்திய மொத்த வரும்படி ரூ.52,607-8-7; மொத்தச் செலவு ரூ.51,364-16-3. இத் தொகைகள் பிறகு எப்பொழுதும் கிட்டியதில்லை. டிசம்பர் விடுமுறையில் நடித்த நாடகங்களில் மாத்திரம் ஏறக்குறைய 6,000 ரூபாய் வரும்படி பெற்றோம். இவ்வருஷம் எங்கள் சபை 49 நாடகங்கள் நடித்தது.
25ஆவது அத்தியாயம்
இனி 1923ஆம் ஆண்டில் நடந்த விஷயங்களைப் பற்றி எழுதுகிறேன். நான் எந்த வருஷத்தை மறந்தாலும் இந்த வருஷத்தை மறக்க முடியாது. இவ்வருஷம் இருபத்தெட்டு வருடங்களாக என்னுடன் நாடக மேடையில் நடித்த எனதுயிர் நண்பர், என் பூர்வ பாபவசத்தால் என்னை விட்டு விண்ணுலகம் சென்றனர். இதைப்பற்றி நான் எழுதும்பொழுது ஆங்கிலத்தில் ஒரு கவி எழுதிய இரண்டடிகள் ஞாபகம் வருகின்றன. அவைகளின் தமிழ் அமைப்பு “நகைத்தையேல் உலகம் நகைத்திடும் உன்னுடன்; அழுதையேல், நீ தான் அழவேண்டும் தனியே!” என்பதாம். இவ்வுண்மையைக் கருதினவனாய், நினைக்குந்தோறும் அதி துக்கத்தை விளைக்கும் இவ் விஷயத்தைப்பற்றி மேல் ஒன்றும் எழுதாது விடுத்தேன்.
எனதுயிர் நண்பர் மடிந்ததைக் கேட்டு எங்கள் சபையில் மனமுருகாத அங்கத்தினர் ஒருவருமில்லை. அவரை மேடைமீது ஒருமுறை பார்த்தவர்களுள் கூட ஒருவராவது அவர் இறந்ததைப் பற்றி விசனப்படாதவர் இல்லையென்றே கூற வேண்டும். அவர் மடிந்த பிறகு மறுபடி சபைக்குப் போவதா என்றிருந்தேன். ஆயினும் போக வேண்டியதாயிற்று; புருஷனைப் பறிகொடுத்த கைம்பெண், தன் தாயார் வீட்டிற்குப் போகும் மனத்துடன் போய்ச் சேர்ந்தேன்! இனி நாடக மேடை ஏறுவதில்லை என்று உறுதியாய்த் தீர்மானித்தேன். அத் தீர்மானத்தினின்றும் மாற வேண்டி வந்த கதையைப் பிறகு எழுதுகிறேன்.
அவரது பிரேதத்தைச் சம்ஸ்காரம் செய்த தினம் எங்கள் சபை மூடப்பட்டது. சில தினங்களுக்குள் ஒரு பொதுக் கூட்டம் கூட்டப்பட்டுச் சபையோர்கள் அவர் இறந்ததனால் சபைக்கு நேரிட்ட துக்கத்தைத் தெரிவித்தனர். அன்று அவர் 28 வருஷ காலமாக சபையில் முக்கிய வேஷம் தரித்து நடித்ததைப் பற்றியும், சபையில் பொக்கிஷதாரராகவும் ஸ்டேஜ் டைரக்டராகவும், காரியதரிசியாகவும், கண்டக்டராகவும்; கடைசியில் வைஸ்பிரசிடெண்டுகளில் ஒருவராக வும் இருந்ததைப் பற்றியும் எனது பால்ய நண்பர் வி.வி சேஷகிரி ஐயர் முதலியோர் பேசினர். அச்சமயம் நான் வாயற்றுப்போய் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, கண்ணீர் விட்டுக் கொண்டிருந்ததுதான் எனக்கு இப்பொழுது ஞாபகமிருக்கிறது. சபையோர் இவர் ஞாபகச்சின்னமாக இவரது உருவப் படமொன்றைச் சபையில் வைக்க வேண்டுமென்று தீர்மானித்ததுடன், இவரது ஞாபகார்த்தமாக ஏதாவது செய்ய ஒரு பண்டு ஏற்படுத்த வேண்டுமென்றும் தீர்மானித்தனர். அப்பண்டிற்கு அநேகர் பணம் அனுப்பினர். கொழும்பு முதலிய தூர தேசத்திலிருந்தும் சிலர் பணம் அனுப்பினர். இந்தப் பண்டில் தற்காலம் சுமார் 1,000 ரூபாய் சேர்ந்திருக்கிறது. எங்கள் சபையார் இதை எப்படி உபயோகிப்பது என்று இன்னும் தீர்மானம் செய்யவில்லை.
இவர் உயிர் துறந்ததைக் கேட்ட எனது நண்பர் டாக்டர் ஸ்ரீனிவாசராகவாச்சாரியார் “ரங்கவடிவேலுவுடன் சபையின் லட்சுமியும் போய்விட்டாள்” என்று தனது பிரிவாற்றாமையைக் கூறினார். அவ் வாக்குப் பலித்தது போல் இவ்வருஷம் முதல் எங்கள் சபை கொஞ்சம் க்ஷீணித்துக் கொண்டே வருகிறதென நான் கூற வேண்டும். இவ் வாக்கியம் ‘எங்கள் சபையில் இருக்கும் சில இளைய அங்கத்தினருக்கும் திருப்திகரமாயில்லாதிருக்கலாம்.
இவ்வருஷம் ஷேக்ஸ்பியர் கொண்டாட்டமும் கொண்டாடவில்லை; எங்கள் சபையின் வருஷாந்தர மஹோற்சவமும் கொண்டாடப்படவில்லை; வெளியூருக்கும் எங்கள் சபை போகவில்லை.
இவ்வருஷத்தின் ஆரம்பத்தில் ஜனவரி மாதத்தில் மூன்று தினங்களில் சாயங்காலம், விக்டோரியா ஹால் மேல் மாடியில், ஆங்கிலேயர் ஏற்படுத்தும் பேன்சி பேட் (Fancy Fete) மாதிரி சபையின் கட்டட பண்டிற்காக ஏற்படுத்தினேன். அதன் மூலமாகச் செலவு போக ரூபாய் 485-11-9 கட்டட பண்டிற்குச் சேர்ந்தேன். இதில் எனது நண்பரும் நானும் வேடங்கள் தரித்தது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது.
எனதாருயிர் நண்பர் மரித்தபொழுது, இனி நாம் நாடக மேடையேறுவதில்லை; நாடகங்களும் எழுதுவதில்லை என்று தீர்மானித்தேன். அச் சமயம் யாராவது இத் தீர்மானத்தினின்றும் நீ மாறப் போகிறாய் என்று என்னிடம் கூறியிருப்பார்களாயின், அவர்களுக்குப் பித்தம் பிடித்திருக்கிறதெனச் சொல்லியிருப்பேன்; இருந்தும் ஒரு வருஷத்திற்குள்ளாக அத் தீர்மானத்தினின்றும் தவறினேன்! கேவலம் மனிதனுடைய மனோதிடமும் தீர்மானங்களும் இத்தகைத்தே! இது நாம் பெருமை பாராட்ட வேண்டியதற்கு நேர்விரோதமான விஷயமாயிருந்தபோதிலும், என்னுடைய நாடக மேடை அனுபவங்கள் யாவற்றையும் ஒன்றுவிடாமலும், ஒளியாமலும் எழுத நிச்சயித்திருக்கிறபடியால், இதையும் இங்கு எழுதுகிறேன்.
எனதாருயிர் நண்பர் ஞாபகம் கொஞ்ச நேரமாவது வராமலிருக்கும்படி, இடைவிடாது புஸ்தகங்களைப் படித்துப் பார்த்தேன். எனது சிநேகிதர்களுடன் சீட்டு, பில்லியர்ட்ஸ் முதலியன ஆடிப் பார்த்தேன்; கடற்கரைக்குச் சென்று உலாவிப் பார்த்தேன். என் மனத்திற்குத் தோன்றிய யுக்திகளை யெல்லாம் செய்து பார்த்தேன். எதிலும் கொஞ்சமேனும் பயன்படாமற் போயிற்று. உடம்பின் வெளியில் தைத்த முள்ளை எப்படியாவது பிடுங்கி எறியலாம்; இருதயத்தில் தைத்த முள்ளை எப்படிப் பிடுங்கி எறிவது? சாரங்கதரனைப் பற்றிச் சுமந்திரன் கூறியதாக நான் எழுதியது போல, நான் எங்குச் சென்றாலும் யாரைப் பார்த்தாலும் அவரது ஞாபகமே எனக்கு வந்து கொண்டிருந்தது. என் தகப்பனார் மடிந்தகாலை அத்துயரத்தை மறந்திருக்க வேண்டி மனோஹரன் நாடகத்தை எழுதிப் பூர்த்தி செய்தது போல, இச்சமயம் ஏதாவது எழுதலாமா என்று யோசனை பிறந்தது. அதன்மீது மஹா பாரதத்திலிருந்து பீஷ்மரது சரித்திரத்தை நாடக ரூபமாக எழுதலாமா என்று யோசித்து அதைத் தொடங்கினேன். இவ்வருஷம். இச் சந்தர்ப்பத்தில் என் சிறு வயதில் நான் கேட்ட ஒரு சிறுகதை ஞாபகம் வருகிறது. தீராத வியாதியால் பீடிக்கப்பட்ட ஓர் அரசன், தன் குடும்ப வைத்தியர் கொடுத்த மாத்திரைகளினால் ஒன்றும் குணமாகவில்லை என்று அவர்மீது கடிந்துகொள்ள, அந்த வைத்தியர் யுக்தி செய்து, குரங்கை நினைத்துக் கொள்ளாமல் இந்த மாத்திரையைப் புசித்தால் உங்களுக்கு உடம்பு சௌக்கியமாகும் என்று சொன்னாராம்; அதன் பிறகு அந்த அரசன் அம் மாத்திரையைப் புசிக்கக் கையிலெடுக்கும் போதெல்லாம், வைத்தியர் குரங்கை நினைத்துக் கொள்ளக்கூடாதென்று சொன்னாரல்லவா என்று ஞாபகம் வந்ததாம்! அம் மாதிரியாக இந்த பீஷ்ம சரித்திரத்தை நாடகமாக எழுத ஆரம்பிக்க உட்காரும் போதெல்லாம், எனதுயிர் நண்பர் ஞாபகம் வராமலிருக்கும்படி இதை எழுதத் தீர்மானித்தோமல்லவா என்கிற ஞாபகம் வரத் தலைப்பட்டது! அதன்பேரில் அவரைப்பற்றி மறக்க முயல்வதையும் விட்டேன்! அந் நாடகத்தில் முதல் அங்கம் முதற் காட்சி என்று ஆரம்பித்து சில வரிகள் எழுதி அப்படியே விட்டிருக்கும் காகிதம் என்னிடம் இன்னுமிருக்கிறது. இதை நான் எழுதி முடிப்பேனோ என்னவோ ஈசனுக்குத்தான் தெரியும். இதை வாசிக்கும் எனது நண்பர்கள் யாருக்காவது ஜோஸ்யம் தெரிந்தால், எனக்குத் தெரிவித்தால் நலமாயிருக்கும்.
பிறகு கொஞ்சகாலம் பொறுத்து கர்ணவதத்தை நாடகமாக எழுத ஆரம்பித்தேன். அதுவரையில் முப்பத்திரண்டு வருடங்களாக நாடகங்கள் எழுதிய கையானது சும்மா இருக்க முடியவில்லை! இதுதான் இனிமேல் நாடகங்கள் எழுதுவதில்லை என்று நான் தீர்மானித்த தீர்மானத்தின் முடிவாகும்! இனி நாடக மேடையேறுவதில்லை என்ற தீர்மானத்தின் முடிவைக் கூறுகிறேன்.
இவ் வருஷத்தின் ஆரம்பத்தில் சபையின் பொதுக் கூட்டத்தில் எனது நண்பராகிய துரைசாமி ஐயங்கார் தமிழ் கண்டக்டராக நியமிக்கப்பட்டார். அவர் ஏதோ காரணத்தினால், கிருஸ்த்துமஸ் விடுமுறையில் வழக்கப்படி பத்துப் பதினைந்து நாடகங்கள் ஆடவேண்டுமென்று தீர்மானித்து, ஹாலுக்குப் பணம் கட்டியபின், தமிழ் கண்டக்டர் வேலையை ராஜிநாமா கொடுத்தார். திடீரென்று அச் சமயம் வேறொருவரும் அந்த வேலையை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றார்கள். அச்சமயம் இத்தனை வருஷங்களாகப் பாடுபட்ட சபைக்கு நான் கைகொடுக்க வேண்டிய தாயிற்று. அதன்பேரில் நான் மறுபடியும் தமிழ் கண்டக்டராக இருக்க ஒப்புக்கொண்டேன். கண்டக்டராகத்தானே இருக்க ஒப்புக்கொண்டோம்; நாம் மேடைமீது நடிக்கப் போகிறதில்லையே என்று என் மனத்தைத் தேற்றிக் கொண்டேன். தமிழ் நாடகங்களுக்கெல்லாம் ஒத்திகை நடத்தினேன். அச்சமயம் அவற்றுள் முதல் தமிழ் நாடகமாகிய “பொன் விலங்குகள்” என்னும் எனது நாடகத்திற்கு ஒத்திகை நடத்திக் கொண்டு வந்தபொழுது, “பங்கஜவல்லி நாடகப் பாத்திரத்திற்கு, இந்தப் சந்தர்ப்பத்தில் ரங்கவடிவேலு இப்படி நடிப்பார்” என்று சொல்ல ஆரம்பித்தவன், என் பூர்வ ஞாபகமெல்லாம் வரவே வாய் குளறிக் கண்ணீர் ததும்ப, ஒத்திகையை நிறுத்த வேண்டியவனானேன். பிறகு என் மனத்தைத் தேற்றிக் கொண்டு ஒருவாறு ஒத்திகையை முடித்தேன். இச்சமயம் எங்கள் சபை ஆடிய மற்றொரு நாடகம் எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் இயற்றிய சபலை என்னும் நாடகம். இதில் நான் எப்பொழுதும் சுவர்ணகிரி ஜமீந்தார் வேஷம் தரிப்பது வழக்கம். இம்முறை அங்ஙனம் செய்ய முடியாதென்று அப் பாத்திரத்தை வேறொரு ஆக்டருக்குக் கொடுத்திருந்தேன். அவர் நாடக தினம் சமீபித்த பிறகு, ஏதோ காரணத்தினால் தன்னால் அதை ஆட முடியாதென்று திருப்பிக் கொடுத்துவிட்டார். வேறொரு ஆக்டரை நாடக தினத்துக்குள் தயார் செய்வது அசாத்தியமாயிருந்தது. அந்நாடகத்தையாவது விட வேண்டும், அல்லது நானாவது அந்த வேடம் தரிக்க வேண்டும் என்னும் தர்மசங்கடத்தில் நின்றேன்! இதுவரையில் நான் உழைத்து வந்த சபையின் நலத்தைக் கருதினவனாய், என் மனத்தை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு அந்தப் பாத்திரத்தை நான் மேடையின் பேரில் நடித்தேன். இப் பாத்திரம் ஒரே காட்சியில் வருவதாயினும் இதை நடிப்பது சுலபமல்ல; அந்த வேஷம் புனையும்பொழுது எனது மற்ற சிநேகிதர்கள் மத்தியில் ஏதோ பராக்காயிருந்துவிட்டேன்; பிறகு நான் வர வேண்டிய காட்சி ஆரம்பித்தவுடன் பக்கப் படுதாவின் அருகிலிருந்து மேடைக்கு நான் வரவேண்டிய காலத்தை எதிர்பார்த்து நின்றுகொண்டிருந்த பொழுது, என் இருதயத்திலிருந்த மாறாத வடு, “உதிரம் சொரிய ஆரம்பித்தது!” எனது உடம்பு நடுங்கியது, கால்கள் தள்ளாடின. பிறகு கண்மூடி, ஈசனைத் தியானித்தவனாய், மனத்தை தேற்றிக்கொண்டு, கண்ணீரை அடக்கி, இனி கால் வைப்பதில்லை என்று தீர்மானித்த அரங்கத்தின்மீது காலை வைத்து, என் பாகத்தை நடிக்க ஆரம்பித்தேன். நான் வாயைத் திறந்து முதலில் பேச வேண்டிய வார்த்தைகளைப் பேசுமுன் ஹாலில் வந்திருந்த ஏறக்குறைய அனைவரும் பெருங் கரகோஷம் செய்தனர். இனி சம்பந்தம் நாடக மேடை ஏறப் போகிறதில்லை என்று நினைத்திருந்த எனது நண்பர்கள், மறுபடியும் தெய்வாதீனத்தால் நாடக மேடை ஏறிவிட்டானே என்னும் சந்தோஷத்தினால், அவ்வாறு செய்தனர் என்று முகஸ்துதியால் என் ஆன்மாவை நானே திருப்தி செய்து கொண்டு அன்று நடித்தேன். என்ன காரணத்தினாலோ அன்று அவ்வேடத்தில் நான் நடித்தது போல் அப்பாத்திரத்தை அதற்கு முன்னும் நான் அவ்வளவு உருக்கமாக நடித்தததில்லை; பிறகும் நடித்ததில்லை. எனது பாகத்தை முடித்துக்கொண்டு அரங்கத்தை விட்டு நான் திரும்பிப் போகும்போதும், எங்கள் சபை அங்கத்தினரும் மற்றவரும் பெருங் கரகோஷம் செய்தனர். அம்மாதிரியான கரகோஷம் எங்கள் சபை அங்கத்தினரிடமிருந்து இதற்கு முன்பும் நான் பெற்றதில்லை; பிறகும் பெற்றதில்லை. அப்பொழுது என் மனத்தில் தோன்றிய எண்ணத்தை வெளிப்படையாய் இங்கு எழுதுகிறேன். “நம்முடைய இத்தனை நண்பர்கள், நாம் நடிப்பதை இன்னும் ஏதோ பார்க்க வேண்டுமென்று விரும்புகிறார்கள் போலிருக்கிறதே! நம்முடைய சுய இச்சையைக் கருதிச் சும்மா இருப்பதா? அல்லது நமக்கு எவ்வளவு மன வருத்தமிருப்பினும் இவர்கள் மனத்தைத் திருப்தி செய்வதா?” என்னும் கேள்வியேயாம்.
மறுதினம் சாயங்காலம் எங்கள் சபையோர் எனது பழைய நாடகமாகிய “லீலாவதி-சுலோசனா"வை நடத்தினார்கள். அதைப்பற்றிப் பிறகு எனது நண்பராகிய சுந்தரவரத அய்யங்கார், “எவ்வரி மான்ஸ் ரெவ்யு’ என்னும் பத்திரிகையில் ஆங்கிலத்தில் எழுதியதை இங்குத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன். இதுவரையில் இந் நாடகத்தில் சாதாரணமாக நடித்து வந்த இரண்டு முக்கிய ஆக்டர்கள், இன்று இல்லாமையானது குறிக்கப்பட்டது; அவர்களுள் ஒருவர் மீண்டும் திரும்பி வராத இடத்திற்குப் போய்ச் சேர்ந்துவிட்டார்! மற்றொருவர், தன் கடமைப்படி, அரங்கத்தின் மீதிருந்தார். ஆயினும் ஆக்டர்கள் ஆடும் இடத்திலில்லை; பக்கப் படுதாவின் பக்கத்தில், கண்டக்டராகத் தன் ஆயுளை எந்த வேலைக்காக அர்ப்பணம் செய்தாரோ, அந்த வேலையைப் பார்த்துக்கொண்டு!” இம்முறை நான் கண்டக்டராகப் புஸ்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, ஆக்டர்கள் மறந்து போகும் இடத்தில் அவர்கள் பாகங்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த பொழுது, இதற்கு முன்பாக திருநெல்வேலியில் இந்நாடகம் ஆடினபொழுது அனுபவித்த துயரத்தைவிட, நூறு பங்கு துயரம் அதிகமாய் அனுபவித்தேன்; திருநெல்வேலியில் மறுபடி எனதுயிர் நண்பரை இவ்வுலகில் சீக்கிரம் காண்பேன் என்னும் ஆறுதல் இருந்தது; இம்முறை அந்த ஆறுதலும், ஆசையும் அடியுடன் அற்றவனாயிருந்தேன்!
இம்முறை டிசம்பர் விடுமுறைக் காலத்தில் எங்கள் சபை எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு ஆடிய பாத்திரங்களுள்ள நாடகங்கள் ஆடுவதில் நேர்ந்த முக்கியமான கஷ்ட மென்னவென்றால், அப் பாத்திரங்களை எடுத்துக்கொள்ள மற்ற ஆக்டர்கள் பெரும்பாலும் அஞ்சினர் - அவர் நன்றாய் நடித்த பாகங்களை நாம் அவரைப்போல் நடிக்காவிட்டால், சபையோர் எல்லாம் அப்படியில்லை என்று குறை கூறுவார்களே யென்று; நாடகங்களைப் பார்க்க வந்த சபையோர்களும் அப்படியே சொல்லித் தீர்த்தனர். முன்பு கூறிய எனது நண்பர் சுந்தரவரத ஐயங்கார் மேற்சொன்ன பத்திரிகையில் “காலவ ரிஷி” என்னும் நாடகத்தைப் பற்றி எழுதியபொழுது அடியில் வருமாறு வரைந்தனர்: ‘இம் முறை சுபத்திரை வேடம் பூண்ட எம். ராமகிருஷ்ண ஐயர், தௌர்ப்பாக்கியத்தால் சிறு வயதிலேயே மரணமடைந்த சி. ரங்கவடிவேலு மிகவும் விமரிசையாய் இப் பாத்திரத்தை நடித்தபடி, தானும் முயன்று பார்க்க வேண்டியதாயிற்று; அன்று சபையில் வந்திருந்தவர்களுள் ஒருவராவது அவர் நடிப்பதற்கில்லாமல் போயிற்றே என்று வருந்தாமல் இல்லை!” என்று எழுதினர்.
1924ஆம் வருஷம் நடந்த எங்கள் சபையின் நிகழ்ச்சிகளுள், சில துக்ககரமானவை, சில சந்தோஷகரமானவை. இவ்வருஷம் எங்கள் சபையின் பேட்ரன் ஆக இருந்த சர். சுப்பிரமணிய ஐயர் காலமானார். அன்றியும் எனது பழைய நண்பரான டி.வி. கோபாலசாமி முதலியாரும் காலமாயினார். பிறகு எனது நாடகமாகிய “பொன் விலங்குகள்” என்பது நடிக்கப்படும் பொழுதெல்லாம், இவர் ‘பிஸ்தாக் கொட்டைச் சாமி"யாராக நடித்ததைப் பார்த்தவர்கள், அவரைப்பற்றி நினையாத சமயம் கிடையாது. சாரங்கதர நாடகத்தில், இவர் மதுரகவியாக நடித்ததும் மிகவும் மெச்சத்தக்கதாயிருந்தது. இவர் நடுவயதிலேயே மரித்ததனால் எங்கள் சபை ஒரு ஹாஸ்யப் பாத்திரம் ஆடும் ஆக்டரையும் நான் எனது அத்யந்த நண்பர்களுள் ஒருவரையும் இழந்தோம்.
இவ் வருஷம் ஏப்ரல் மாதம் சென்னை கவர்ன்மென்டார் என்னை ஸ்மால் காஸ் கோர்ட் ஜட்ஜாக நியமித்தனர். எனது நண்பராகிய சர். சி. பி. ராமசாமி ஐயர் என்னை அழைத்து, இவ்வேலையை ஒப்புக் கொள்ளும்படி கேட்ட பொழுது, நான் அதற்கிசைந்ததற்கு முக்கியக் காரணம்; வக்கீலாக வேலை பார்த்துக் கொண்டிருந்தால், எந்நேரமும் என்னுடன் ஜுனியர் வக்கீலாகப் பல வருஷங்கள் கோர்ட்டில் பழகிய எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவின் ஞாபகத்தை மறக்க முடியாது; ஜட்ஜாகப் போனால், கொஞ்சம் மறந்திருக்க முடியுமென்பதேயாம். நான் இந்த வேலையை ஒப்புக்கொண்டபொழுது, அனேக நண்பர்கள், இனி நான் நாடக மேடையில் தோன்ற மாட்டேன் என்று உறுதியாய் நம்பினார்கள்; என்னிடம் தங்களுடைய அந்த அபிப்பிராயத்தையும் தெரிவித்தார்கள். அவர்களுக்கு நான் அடியிற் கண்டபடி பதில் சொன்னேன்: “இதற்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. அப்படி ஏதாவது சம்பந்தமிருந்து இவ்விரண்டிலொன்றை நான் விட வேண்டியிருந்தால், நான் நாடக மேடையை விடமாட்டேன் என்று உறுதியாய் நம்புங்கள்” என்று கூறினேன். பிறகு ஒரு சமயம் என்னை சென்னையிலிருந்து வெளியூருக்கு டிஸ்டிரிக்ட் ஜட்ஜாக மாற்றுவதாக ஒரு வதந்தி பிறந்தபோது, ஒரு முக்கிய கவர்ன்மெண்ட உத்யோகஸ்தரிடம், அப்படிச் செய்வதனால், எனது ராஜிநாமாவைப் பெற்றுக்கொள்ள வேண்டி வரும் என்று தெரிவித்தது எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது. எனக்கு இந்த ஜட்ஜ் வேலை கிடைத்தபொழுது, என்னைப் பற்றிப் பத்திரிகைகளிலும் கூட்டங்களிலும், ஏதோ கொஞ்சம் புகழ்ந்து பேசியவர்களெல்லாம், நான் ஒரு நாடக ஆசிரியன் என்பதைப் பற்றிக் குறிப்பிடாதவர் இல்லை. இதுவே எனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தந்தது.
எங்கள் சபையார் இவ்வருஷம் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி எனக்கு ஒரு உபசார விருந்து செய்தனர். அன்று நடந்த மற்ற விஷயங்களைப் பற்றி எனக்கு இங்கு எழுத இஷ்டமில்லை. அப்பொழுது நடந்த ஒரு வேடிக்கையான சமாச்சாரத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன். விருந்தின் ஆரம்பத்தில், விக்டோரியா ஹாலில் வரவழைக்கப்பட்டவர்களெல்லாம் உட்கார்ந்த பிறகு, எங்கள் சபையின் வழக்கப்படி, ஸ்டேஜுக்குள்ளாக, விநாயகர் துதியை எனது ஆக்டர் நண்பர்கள் ஆரம்பித்தனர். உடனே ஹாலில் உட்கார்ந்திருந்த நான், ஸ்டேஜுக்கு உள்ளே விரைந்து சென்று கண்ணை மூடிக்கொண்டு, என் வழக்கம்போல் எனது நண்பர்களுடன் விநாயகர் துதி, சரஸ்வதி துதி பாடல்களைப் பாடினேன். பாடி முடிந்தவுடன், என் அருகிலிருந்த நண்பர்கள் சிரித்தபொழுதுதான், என்னைக் கௌரவப்படுத்த வேண்டி அந்தச் சபை கூட்டப்பட்டது என்பது எனக்கு ஞாபகம் வந்தது! வயது சென்ற ஒரு கோமுட்டிக்குக் கலியாண சடங்கிற்காக வாத்தியம் வாசிக்க ஆரம்பித்த பொழுது, அவன் “எனக்கா கலியாணம்?” என்று கேட்டதாக ஒரு வேடிக்கைக் கதையுண்டு; அக் கதையை நினைத்து நகைத்துக் கொண்டு வெட்கத்துடன் மறுபடி ஹாலில் போய், எனக்கு ஏற்படுத்தியிருந்த ஸ்தானத்தில் உட்கார்ந்தேன்! “பழக்கம் பொல்லாதது; பாறைமேற் கோழிசீர்க்கும்” என்னும் பழமொழிப்படி, அனேக வருடங்களாக அப் பாட்டுகளை எனது நண்பர்களுடன் கூடிச் சேர்ந்து பாடி வந்தபடியால், இப்பொழுதும் அப் பாட்டுகள் மேடையின் மீதோ அல்லது ஒத்திகை அறையிலோ ஆரம்பிக்கப்பட்டால், என்னையுமறியாத படி என்ன வேலையிலிருந்த போதிலும் அதை நிறுத்திவிட்டுப் பாடுமிடத்திற்கே போய் மற்றவர்களுடன் அப் பாட்டுகளைப் பாடுகிறேன். இதே மாதிரியாக எங்கள் சபையில் இந்த நாற்பத்தைந்து வருடங்களாகத் தமிழ் நாடகங்கள் ஆடும் பொழுதெல்லாம் நாடகம் முடிந்தவுடன் இராமலிங்க ஸ்வாமி பாடலில் “கல்லார்க்கும் கற்றவர்க்கும்” என்னும் திவ்யமான பாடலைப் பாடி மங்களம் பாடுவது வழக்கம்; இந்தப் பாட்டை யாராவது தெருவில் பாடும் பிச்சைக்காரன் பாடிக் கொண்டு போனாலும், உடனே எழுந்திருந்து கைகூப்பி வணங்குகிற வழக்கம் எனக்குச் சுபாவமாய்விட்டது.
மேற்சொன்ன உபசார விருந்தின் முடிவில் நான் என்னைக் கௌரவப்படுத்திய சபையோருக்கு வந்தனமளிக்க வேண்டிய சமயம் வந்தபொழுது, “நீங்கள் எனக்குச் செய்த உபசாரத்தால் என் மனம் சந்தோஷமடைந்திருக்கிறது. ஆயினும், என் மனம் பூரணமாகத் திருப்தி அடையவில்லை; என் மனத்தில் ஒரு குறையிருக்கிறது; அக்குறை தீர்ந்தால்தான் எனக்குப் பூரண உவகையுண்டாகும். அது என்னவெனில், எனக்கு ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜ் வேலையானதுபோல், எனது பால்ய நண்பராகிய வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு ஹைகோர்ட்டு ஜட்ஜ் வேலையாகி, அவருக்கு நாம் எல்லோரும் இதுபோன்ற விருந்து செய்ய வேண்டுமென்பதே” என்று கூறினேன் என் வேண்டுகோளுக்கிணங்கி, ஈசன் அருளியது போல் இரண்டு மூன்று மாதங்களுக்குள் அவருக்கு அப்படியே ஹைகோர்ட் ஜட்ஜ் வேலையாச்சுது! நான் கோரியபடியே, அவருக்கு எங்கள் சபையார் இவ்வருஷம் ஜூலை மாதம் 26ஆம் தேதி உபசார விருந்தளித்தனர்.
எங்களிருவருடைய நட்பைப்பற்றி, இதை வாசிக்கும் நண்பர்களுடைய அனுமதியின் மீது, ஒரு விந்தையான சமாச்சாரத்தை இங்கெழுத விரும்புகிறேன். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் 1882ஆம் வருஷம், முதல் முறை பச்சையப்பன் கலாசாலையின் கீழ்ப்பிரிவாகிய கோவிந்தப்ப நாயக்கர் பள்ளியில் சந்தித்தோம். அது முதல் மிகுந்த அன்யோன்ய ஸ்நேகிதர்களாகி, தெய்வ கடாட்சத்தால் ஐம்பது வருஷத்துக்கு மேல் கழித்தோம். இதைக் கொண்டாட வேண்டி, எங்கள் சபை ஆக்டர்களுக்குள் முக்கியமானவர்களையெல்லாம் வரவழைத்து, எனது பால்ய நண்பர் இதை நான் எழுதிய வருஷமாகிய 1932ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான் பிறந்த தேதியில் எனக்கு ஒரு சிறந்த விருந்தளித்தார். நாங்களிருவரும் மேற்சொன்னபடி பள்ளிக்கூடத்தில் ஒன்றாய்ப் படித்தோம். பிறகு லா காலேஜில் ஒன்றாய்ப் படித்தோம். லா பரீட்சையில் ஒன்றாய்த் தேறினோம். ஒரே வருஷத்தில் வக்கீல்களானோம். பிறகு ஒரே வருஷத்தில் மேற்சொன்னபடி ஜட்ஜுகளானோம்! இதைவிட இன்னும் விசேஷமான சமாச்சாரம் என்னவெனில், நாங்களிருவரும் ஒரே வருஷத்தில் ஜட்ஜ் வேலையினின்று விலகினோம்! 1928ஆம் வருஷம் எனக்கு 55 வயது பூர்த்தியானபடியால், கவர்ன்மெண்ட் சட்டப்படி விலகினேன். அவர் அதே வருடம் தனக்கு ஹைகோர்ட்டு ஜட்ஜ் வேலை இனி வேண்டாமென ராஜினாமா கொடுத்துவிட்டார்! அன்றியும் நாடக மேடையிலும் ஏறக்குறைய 45 வருடமாக ஒன்றாய் உழைத்து வருகிறோம். இவ்வாறு இவரது இணைபிரியா நட்பை இந்த 50 வருட காலமாக நான் பெற்றது என் முன்னோர்கள் செய்த பூஜா பலனேயென்று உறுதியாய் நம்புகிறேன். இவரை எனது நண்பனாகவும் குருவாகவும் ஆத்ம பந்துவாகவும் அடைந்து நான் பெற்ற பலனை என்னால் எடுத்துரைக்க இயலாது. அதைப்பற்றி நான் நினைக்கும்பொழுது மாணிக்கவாசக ஸ்வாமிகள் திருவாசகத்தில்,
“தந்ததுன்றன்னை கொண்ட தென்றன்னைச் சங்கராவார்
வார்கொலோ சதுரர்
அந்தமொன்றில்லா வானந்தம் பெற்றேனியாது நீபெற்ற
தென்றென் பால்?”
என்று திருவாய் மலர்ந்தருளியது எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.
ஈசன் தன் கருணையினால் இவ்வுலகில் எனக்களித்த நண்பர்களுள் இவரை முதலாகவும், காலஞ்சென்ற ரங்கவடிவேலுவை இரண்டாவதாகவும், தற்காலம் என்னுடன் நாடக மேடையில் நடித்து வரும் கே. நாகரத்தினம் ஐயரை மூன்றாவதாகவும் மதிக்கிறேன்.
இனி இக் கிளைக் கதையை விட்டு மூலக் கதைக்குப் போகிறேன். இந்த 1924ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி எனது தமிழ் ஆசிரியராகக் கொள்ளும் ம-ள-ள-ஸ்ரீ, மஹாமஹோபாத்யாயர் வே. சாமிநாத ஐயர் அவர்கள் எங்கள் சபையில், “நாடகத் தமிழ்” என்பதைப் பற்றி ஒரு உபன்யாசம் செய்தார். இவர் அன்று எடுத்துக் கூறிய விஷயங்களை ஆதாரமாகக் கொண்டே சில வருடங்களுக்குப் பிறகு, சென்னை சர்வகலா சங்கத்தார் ஆதரவின்கீழ், நாடகத் தமிழைப்பற்றி மூன்று உபன்யாசங்கள் பச்சையப்பன் கலாசாலையில் நான் செய்தேன். இது அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இனி இவ் வருடம், நாடக மேடையின்மீது மறுபடியும் கதாநாயகன் வேடம் பூணுவதில்லை என்று தீர்மானித்த நான், அத்தீர்மானத்தினின்றும் வழுவி, மறுபடியும் முக்கிய வேடம் பூண்ட கதையை எழுதுகிறேன்.
இவ்வருஷம் நவம்பர் மாதம் 23ஆம் தேதி அதிவிருஷ்டியினால் தென் இந்தியாவின் சில பிரதேசங்களில் ஜனங்கள் அடைந்த மிகுந்த கஷ்டத்தை நிவாரணம் செய்வதற்காக ஏற்படுத்திய பண்டிற்காக எங்கள் சபையில் ஒரு நாடகம் நடத்தி, அதன் வரும்படியை அந்த பண்டிற்குக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்தோம். அதற்காக ஒரு தெலுங்கு நாடகம் நடத்த வேண்டுமென்றும், அதன் பொருட்டு பல்லாரியிலிருந்து எனது நண்பராகிய ராகவாச்சார்லு அவர்களை வரவழைக்க வேண்டுமென்றும் ஏற்பாடு செய்தோம். அந்நாடகத்தைச் சென்னை கவர்னர் அவர்கள் ஆதரவிலும் முன்னிலையிலும் நடத்த வேண்டுமென்று அவரைக் கேட்க அவரும் இசைந்தார். இவ்வாறு எல்லா ஏற்பாடுகளும் செய்தான பிறகு, திடீரென்று எட்டுப் பத்துத் தினங்களுக்கு முன்பாக பல்லாரியிலிருந்து ராகவாச்சார்லு அவர்கள்தான் அந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி சென்னைக்கு வந்து நாடகமாட ஏதோ அசந்தர்ப்பத்தினால் முடியாதென்று தெரிவித்தார். அந்த சமாச்சாரத்தைக் கேட்டவுடன் எங்கள் சபையின் அங்கத்தினர் மிகவும் மனங்கலங்கினர்; அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லையென்றே நான் சொல்ல வேண்டும். ராகவாச்சார்லுவின் மீது நான் குற்றங் கூறவில்லை. ஏதோ மிகுந்த அசந்தர்ப்பமாயிருந்தபடியால் தான் வருவதற்கில்லையென்று தெரிவித்திருக்கிறார்; ஆயினும் அவர் ஒருவர் வர முடியாதபடியால், நம்முடைய சபை ஏற்றுக்கொண்ட தர்ம கைங்கர்யத்தையே கைவிடவேண்டி யிருக்கிறதல்லவா என்று துக்கித்தேன். எனதாருயிர் நண்பர் உயிருடனிருந்தால், மறுநாளே வேண்டினும் ஏதாவது தமிழ் நாடகம் ஆடியிருக்கக் கூடுமல்லவா என்று வருத்தப்பட்டேன். “கிட்டாதாயின் வெட்டென மற” எனும் ஔவையாரின் வாக்கியம் ஞாபகம் வர, போனது போகட்டும், இப்பொழுது நமது சபையைக் கரையேற்றுவதெப்படி என்று பலவாறு யோசித்து, ஒரு வழியும் காணாதவனாய்க் கடைசியில் ஈசனைப் பிரார்த்தித்து, நீர் விட்டவழியாகிறது என்று உறங்கினேன். காலையில் எழுந்தவுடன், எனதாருயிர் நண்பர் போனவுடன், வேறொருவருடனும் நாடக மேடையில் நான் நடிப்பதில்லை என்ற தீர்மானித்தினின்றும் மாறித்தான் ஆகவேண்டும்; இவ்வாறு நாம் செய்வது என் சுய நன்மையைக் கருதிச் செய்யவில்லை; சபையின் பொது நன்மைக்காகத்தானே செய்கிறோம்; எனதுயிர் நண்பர், தானிருக்குமிடத்திலிருந்து இதைத் தவறாக எண்ணமாட்டார் என்று என் மனத்தில் தோன்றியது; உடனே இதுதான் ஜகதீசன் நமக்குக் காட்டிய வழி என்று உறுதியாய் நம்பினவனாய், அன்று சாயங்காலம் எங்கள் சபையின் நிர்வாக சபைக் கூட்டத்திற்குப் போய்ச் சேர்ந்தேன். அக்கூட்டத்தில் ராகவாச்சார்லு அவர்கள் வர முடியாதென்று தெரிவித்த விஷயத்தைக் காரியதரிசிகள் தெரிவிக்க, அப்படியாயின், வேறு தக்க நாடகம் நடிக்க நம்மால் ஏலாதென்று 23ஆம் தேதி நாடகத்தை நிறுத்தத்தான் வேண்டுமென்று தீர்மானிக்க ஆரம்பித்தார்கள்; அதன்பேரில் என் நாக் குழற காலையில் நான் செய்த தீர்மானத்தைத் தெரிவித்தேன். அதன்பேரில் அங்கிருந்த எனது நண்பர்களெல்லாம் மிகவும் சந்தோஷப்பட்டனரென்றே நான் உண்மையை எழுத வேண்டியவனாயிருக்கிறேன். அதன்பேரில் தமிழில் என்ன நாடகம் ஆடலாம் என்கிற பேச்சு வந்தவுடன், நமக்குப் பணம் அதிகமாய் வருகிற நாடகமாயிருக்க வேண்டும்; அன்றியும் கவர்னர் வரப்போகிறபடியால் அவர் எளிதில் அறியக்கூடிய நாடகமாயுமிருக்க வேண்டும், என்று கூறி, ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் பிரசித்தி பெற்ற நாடகமாகிய “ஹாம்லெட்” என்னும் நாடகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பாகிய “அமலாதித்யன்” என்பதை நடத்தலாமென்று தெரிவித்தேன். அதை எனது நண்பர்கள் குதூஹலத்துடன் ஒப்புக்கொண்டு, “அது சரிதான். இந்த நாடகத்தில் யார் அபலை வேஷம் போட்டுக்கொள்வது?"என்று கேட்டனர். இந்த அபலை வேஷத்தில் எனதுயிர் நண்பர் மிகவும் சிறந்த பெயர் பெற்றிருந்ததைப்பற்றி முன்பே நான் இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். ஆகவே காலையில் நான் இந் நாடகத்தை ஆட வேண்டுமென்கிற தீர்மானத்திற்கு வந்தவுடன், இதைப்பற்றி யோசித்து வைத்திருந்தேன். எங்கள் சபையில் ஸ்திரீ வேடம் தரிக்கும் ஒவ்வொரு ஆக்டரைப் பற்றியும் யோசித்துப் பார்த்து, இக்கஷ்டமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளத் தக்கவர்கள் யார் என்று ஆலோசித்து, கே. நாகரத்தினம் ஐயர்தான் இருப்பவர்களுக்குள் இதற்கு ஏற்றவர் என்கிற தீர்மானத்திற்கு வந்திருந்தேன். இவர் இதுவரையில் எங்கள் சபையில் ஸ்திரீ வேடம் பூண்டு நடித்தபொழுது, எல்லாப் புதிய ஆக்டர்களையும் கவனிப்பது போல் இவரையும் கவனித்திருந்தேன். ஸ்திரீ வேஷத்திற்குக் தக்க மிகுந்த ரூபலாவண்யமுடையவர்; சங்கீதத்திலும் நல்ல பயிற்சியுடையவர்; ராகமும் தாளமும் தவறாதபடி மனமுருகப் பாடுவார்; ஆக்டு செய்வதில் மாத்திரம் கொஞ்சம் போதாமலிருந்தது அச்சமயம்; அன்றியும் உரக்கப் பேசமாட்டார்; கடைசியிற் கண்ட இவ்விரண்டு குற்றங்களையும் நாம் சரிப்படுத்தி விடலாமென்கிற முடிவுக்கு வந்தேன். ஆகவே நிர்வாக சபை நண்பர்கள் யாருக்கு அபலை வேஷம் கொடுக்கப் போகிறாய் என்று என்னைக் கேட்டபோது ‘கே. நாகரத்தினம் ஐயருக்குக் கொடுக்கலா மென்றிருக்கிறேன், அவர் ஒப்புக்கொண்டால் என்று தெரிவித்தேன். அதன்பேரில் அப்பொழுது எங்கள் நிர்வாக சபையில் ஓர் அங்கத்தினராக இருந்த அவர் ‘அந்தப் பாத்திரத்தை எப்படி ஆக்டு செய்வது என்று நீங்கள் சொல்லிக் கொடுப்பதானால் எனக்கு ஆட்சேபணையில்லை’ யென்று ஒப்புக்கொண்டார். அதன்பேரில் எங்கள் நிர்வாக சபையார், 23ஆம் தேதி, அந்த நாடகத்தைப் போட வேண்டுமென்று தீர்மானித்து, கவர்னர் அவர்களுக்கும் தெரிவித்து எல்லா ஏற்பாடுகளும் செய்தனர். அந்நாடகத்தில் மற்ற ஆக்டர்களெல்லாம் பழைய ஆக்டர்கள். அவர்களுக்கு நான் புதிதாய் ஒன்றும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை யென்று தீர்மானித்து இடையிலிருந்த நான்கைந்து நாட்களும், கே. நாகரத்தினம் ஐயருக்கு அந்த அபலை வேடமாட ஒத்திகை செய்து வைத்தேன். முதலில் இதை, ரங்கவடிவேலுவைப் போல் அவ்வளவு விமரிசையாய் ஆக்டு செய்வாரோ என்னவோ என்று எனக்குச் சந்தேகமிருந்தபோதிலும், இரண்டு மூன்று ஒத்திகைகளுக்குப் பிறகு, சுமாராக நடிப்பார் என்கிற தீர்மானத்திற்கு வந்தேன். ஆனால் 23ஆம் தேதி இந்த நாடகமானது மேடையின் பேரில் நடிக்கப்பட்டபொழுது அதிக விமரிசையாய் நடித்து என்னையே ஆச்சரியப்படும்படி செய்தார் என்று நான் கூற வேண்டும். கவர்னர் அவர்கள் உட்பட வந்திருந்தவர்களெல்லாம், இவர் அபலையாக, பைத்தியக்காரிக் காட்சியில் நடித்ததை மிகவும் மெச்சினர். நான் சொல்லிக் கொடுத்ததைவிட மேலாகவும், ரங்கவடிவேலுவைவிட அதிக விமரிசையாகவும் இக்காட்சியில் நடித்தார். இதற்குமுன் எனதுயிர் நண்பர் இந்த அபலை வேடம் தரித்துப் பன்முறை நடித்ததைப் பார்த்திருந்த பல நண்பர்கள், இந்த வேடத்தில் ரங்கவடிவேலுவைவிட நாகரத்தினம் மிகவும் நன்றாக நடிக்கிறார் என்று பன்முறை கூறக் கேட்டிருக்கிறேன். என்னுடைய அபிப்பிராயமும் அதுவே. என்னுடன் ரங்கவடிவேலு இருபத்தெட்டு வருடங்களாக நடித்த வேடங்களிலெல்லாம், நாகரத்தினமய்யர் இந்த அபலை வேடத்தில் அவரைவிட மேலாக நடித்திருக்கிறார் என்று கூறுவது மிகையாகாது. அவர் இதற்குப் பிறகு இந்த எட்டு வருடங்களாக, ரங்கவடிவேலு நடித்த நாடகப் பாத்திரங்களுக்குள் பத்துப் பன்னிரண்டு, என்னுடன் ஆக்டு செய்திருக்கிறார் இதுவரையில்.
இந்த அமலாதித்யன் நாடக முடிவில் மாட்சிமை தங்கிய சென்னை கவர்னர் அவர்கள் நாடக மேடைக்குள் வந்து நாகரத்தினம் ஐயரையும் என்னையும் மிகவும் நன்றாக நடித்ததற்காகச் சற்றுப் புகழ்ந்து கொண்டாடினார். அவர் போன பிறகு, எங்கள் சபை பிரசிடென்டாகிய சேஷகிரி ஐயர் அவர்கள் ‘சம்பந்தம்! அம்மட்டும் இந்த நாடகத்தை சரியாக ஆடி முடித்தாயே! சந்தோஷம். எங்கு இடையில், ரங்கவடிவேலுவை நினைத்துக் கொண்டு, உன் பாகத்தைச் சரியாக ஆடாது விடுகிறாயோ என்று பயந்து கொண்டே இருந்தேன்’ என்று தெரிவித்தார்.
மேற்சொன்ன அமலாதித்ய நாடகத்தின் செலவு போக, ரூபாய் 300, அதிவிருஷ்டி நஷ்ட பண்டிற்கு அனுப்பினோம். இந்நாடகம் ஆடின மறுமாசம் எங்கள் சபையின் வழக்கப்படி டிசம்பர் மாதத்தில் பத்துப் பதினைந்து நாடகங்கள் ஆட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.
அந் நாடகங்களுக்குள் மூன்று நாடகங்களில் நான் முக்கியமான பாத்திரங்களை எடுத்துக் கொள்ளத் தீர்மானித்தேன்; அதாவது, ரத்னாவளியிலும், லீலாவதி-சுலோசனாவிலும், மனோகரனிலும். இந் நாடகங்களில் என்னுடன் நடிக்க வேண்டிய முக்கிய ஸ்திரீ பாகங்களை அச்சமயம் எங்கள் சபையில் ஸ்திரீ வேடங்களில் நன்றாய் நடிக்க வல்லமை வாய்ந்திருந்த, மூன்று முக்கிய ஆக்டர்களுக்குக் கொடுத்தேன். அதாவது ரத்னாவளியில் வாசவதத்தை வேடத்தை எனது நண்பர் ஈ. கிருஷ்ண ஐயர் பி.ஏ., பி.எல்.க்கும், விஜயன் வேடத்தை சாமிநாத ஐயருக்கும், சுலோசனை வேடத்தை கே. நாகரத்தின ஐயருக்கும்; இவ்வாறு நான் பகிர்ந்து கொடுத்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. இனி நாடக மேடையில் முக்கியமான பாத்திரங்களைப் பூணுவதில்லை என்கிற தீர்மானத்தினின்றும், குரங்கானது கிருத்திகை விரதம் அனுஷ்டித்ததுபோல், கொஞ்சம் கொஞ்சமாக மாறி மறுபடியும் ஆடும்படியாக ஆகிவிட்டது; இவர்கள் மூவரில் யார் என் மனத்திற்குத் திருப்திகரமாய் மேடையின் மீது நடிக்கிறார்கள் எனக் கண்டறிந்து, அவர்களுடனேயே இனி நடிக்க வேண்டும் என்பதேயாம். இப்பரீட்சையில் தேறினவர், இது முதல் தற்காலம் வரை என்னுடன் முக்கிய ஸ்திரீ வேடம் பூண்டு நடித்து வரும் எனது பிரிய நண்பர் கே. நாகரத்தினம் ஐயரே. இவர் சுலோசனையாக நடித்தது மிகவும் நன்றாயிருந்ததென சபையோரெல்லாம் புகழ்ந்தனர். எனக்கும் அப்படித் தானிருந்ததெனத் தோன்றியது; மற்ற இருவரும் நன்றாய் நடிக்கவில்லை என்று நான் சொல்லவில்லை; ஆயினும் இவர் நடித்தது மற்றிருவர் நடித்ததைவிட நன்றாயிருந்ததெனச் சொல்ல வேண்டியவனாயிருக்கிறேன்.
இவ்வருடம் “நமது நாடகங்களை அபிவிருத்தி செய்வது எப்படி” என்கிற விஷயத்தைப் பற்றி எங்கள் சபையில் நான் ஒரு உபன்யாசம் செய்தேன். அச்சமயம் எனது பால்ய நண்பராகிய வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் அக்கிராசனம் வகித்தார்.
26ஆவது அத்தியாயம்
இனி 1925ஆம் வருஷத்திய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறேன்.
இவ்வருஷம் எங்கள் சபையின் வைஸ் பிரஸிடெண்டுகளில் ஒருவராயிருந்த சி.பி. ராமஸ்வாமி ஐயருக்கு நைட் பட்டம் வந்ததற்காக, ஒரு விருந்து கொடுத்தோம். பிப்ரவரி மாதம் 20ஆம் தேதியிலும், ஏப்ரல் மாதம் 26ஆம் தேதியிலும், சபையின் அங்கத்தினரைக் கொண்டே இரண்டு சங்கீதக் கச்சேரிகள் ஏற்பாடு செய்து பார்த்தோம். அவை அத்தனை நன்றாக இல்லை என்பது என் எண்ணம். சபையோர்களுக்கு இது அவ்வளறாக ருசிக்காதபடியால் இவ் வழக்கத்தை விட்டோம்.
“தமிழ் நாடகமும் திருக்குறளும்'"என்ற விஷயத்தைப் பற்றி தமிழ் வித்துவான் எஸ். குப்புசாமி முதலியாரைக் கொண்டு ஒரு உபன்யாசம் செய்வித்தோம். இத்தகைய உபன்யாசங்கள் அங்கத்தினர் மனத்தை அவ்வளவாகக் கவரவில்லை என்பது என் தீர்மானம்.
இவ் வருஷம் சபாபதி மூன்றாம் பாகம் அல்லது “ஒரு ஒத்திகை” என்னும் சிறு நாடகத்தை, கோர்ட்டு விடுமுறைக் காலத்தில் எழுதி முடித்தேன். இச் சிறு நாடகத்தில், எனது நண்பர்களுக்கு நகைப்பை உண்டாக்கத்தக்க ஒரு விஷயமுண்டு; அதாவது இதன் நாடகப் பாத்திரங்களுக்குள், என்னையே ஒரு நாடகப் பாத்திரமாகச் சேர்த்து எழுதியுள்ளேன். இந்நூலை வாசித்திருக்கும் எனது நண்பர்கள், அந்நாடகப் பாத்திரங்களின் குறிப்பில் “சம்பந்த முதலியார்! ஒரு நாடகாசிரியர்” என்பதைப் பார்த்து நகைத்திருக்கலாம்! இது இவ்வருஷத்திய தசராவின் முதல் நாளில் நடிக்கப்பட்ட பொழுது, நான் சாதாரணமாக அணியும் தலைக் குட்டை, கோட்டு முதலியன அணிவித்து, ஒரு ஆக்டரை எனது நண்பர் வெங்கடாசல ஐயர், என்னைப்போலிருக்கும்படி முகத்தில் வர்ணம் முதலியன தீட்டி, மேடையின் மீது ஏற்றுவித்தார். இதைக் கண்டு சபையோர்களெல்லாம் மிகவும் சிரித்தபொழுது, அவர்களுள் ஒருவனாக உட்கார்ந்து நானும் சிரித்தேன். ஒரு நாடகாசிரியர் தன்னையே ஒரு நாடகப் பாத்திரமாக வைத்து ஒரு நாடகமெழுதியதாக இதுவரையில் நான் கேள்விப்பட்டதில்லை. அப்படியின்றி இதை வாசிக்கும் நண்பர்கள், அப்படிப்பட்ட உதாரணத்தை எனக்கெடுத்துக் கூறுவார்களாயின், என் அபிப்பிராயத்தைத் திருத்திக் கொள்ளத் தடையில்லை.
இவ்வருஷம் நடந்த மற்றொரு நிகழ்ச்சி என்னவெனில், ஸ்ரீ கிருஷ்ண விநோத சபையின் தலைவராகிய கன்னையா, எங்கள் சபையின் ஆதரவின்கீழ், ஒரு நாள் தனது “தசாவதாரம்” என்னும் நாடகத்தை நடத்தினார். இந் நாடகத்தைப் பற்றியும், கன்னையாவைப் பற்றியும் நாடகக் கம்பெனிகளைப் பற்றி என்னுடைய அபிப்பிராயத்தை எழுதும் பொழுது எழுதலாமென்றிருக்கிறேன்.
இவ் வருட ஆரம்பத்தில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியைப் பற்றி எழுத மறந்தேன்; அதாவது இவ் வருஷம் ஜனவரி மாதம் 31ஆம் தேதி, நேப்பியர் பார்க்கில், எங்கள் நாடக சாலையும் இருப்பிடமும் கட்ட அஸ்திவாரக் கல் எங்கள் சபையின் பிரசிடெண்டாகிய டி.வி. சேஷகிரி ஐயர் அவர்களால் போடப்பட்டதேயாம். இந்த வைபவமானது எல்லாம் மங்களமாய் முடிந்தபோதிலும், என் மனத்தில் மாத்திரம் என்னையுமறியாதபடி ஏதோ குறையாயிருந்தது. அக் கல்லானது சரியாக அமைக்கப்பட்ட பிறகு, எல்லோரும் தங்களிருப்பிடம் போகப் புறப்பட்டபொழுது, நானும் அதைப் பார்த்து விட்டுத் திரும்புங்கால், “இக் கட்டடம் முடிந்த பிறகு எத்தனை வருடங்களாவது பொறுத்து ஒரு நாள், ‘நெடு நிலை மாடம் கால்சாய்ந்துற்றுக் கழுதை மேய்பாழாயினுமாகும்’ என்கிற வாக்கியபடி, இது பாழாகி, இக் கல் பெயர்க்கப்பட்டு, அதனுள் நாம் இன்று வைத்த நவரத்தினங்கள், பொன் முதலிய நாணயங்கள் யார் கண்ணுக்காவது புலப்படுமல்லவா!” என்கிற யோசனையானது எக்காரணத்தினாலோ பிறந்தது அச்சமயம். சில வருடங்களுக்குள் அதைப் பெயர்த்து எடுத்துப் பார்க்கும் அபாக்கியம், எனக்கே கிட்டுமென நான் கனவிலும் நினைத்தவனன்று! இது நடந்த மூன்று வருடங்களுக்கெல்லாம், நேப்பியர் பார்க் நிலம் கட்டிடத்திற்குத் தக்கதன்று என்று நாங்கள் கண்டறிந்து, கவர்ன்மெண்டாருக்கு அதை மறுபடியும் திருப்பிக் கொடுக்க நேரிட்ட பொழுது, இரண்டொரு கொல்லர்களுடன் போய் அக் கல்லைப் பெயர்த்து எடுத்து, அதனுள் வைத்த பொருள்களையும், காகிதங்கள் முதலியவற்றையும், வாடிய மனத்துடன் எங்கள் சபைக்குக் கொண்டு வந்து சேர்த்தேன்! அப்பொழுது ஸ்காட்லண்டு தேசத்துக் கவியொருவர் எழுதிய இரண்டடிகள் என் நினைவிற்கு வந்தன. அதை இங்குத் தமிழில் ஒருவாறு மொழி பெயர்த்து எழுதுகிறேன். “மனிதர்களும் மற்றும் அற்பப் பிராணிகளும் மண்மீது செய்யும் பிரயத்தனங்கள் எத்தனை முறை மாறி அழிகின்றன!” என்பதேயாம்.
27ஆவது அத்தியாயம்
இதற்கு மறு வருடமாகிய 1926ஆம் ஆண்டில் எனது “புத்தாவதாரம்” எனும் நாடகமானது எங்கள் சபையில் நடிக்கப்பட்டது. இது நான் எழுதியவற்றுள்ளும் நடித்தவற்றுள்ளும் ஒரு முக்கியமான நாடகம் என்று நான் மதிக்கிறபடியால், இதைப்பற்றிச் சற்று விரிவாக எழுத வேண்டியவனாயிருக்கிறேன். 1908ஆம் ஆண்டில் நான் இலங்கைக்குப் போனது முதல், புத்தருடைய ஜீவித சரிதை என் மனத்தைக் கவர்ந்தது. அம்முறை அவர் பிறந்த தினமாகிய விசாக பௌர்ணமி அன்று, அவர் பிறந்த தினக் கொண்டாட்டத்தைக் கொழும்பிலுள்ள பௌத்த மதத்தினரெல்லாம் நடத்தியது என் மனத்தை மிகவும் கவர்ந்தது. அதன் பிறகு அம் மஹானுடைய சரித்திரத்தை நாடகமாக எழுத வேண்டுமென்று தீர்மானித்து, அவரது சரித்திர சம்பந்தமாக, எனக்குக் கிடைக்கக்கூடிய புஸ்தகங்களை யெல்லாம் படித்து வந்தேன். அதன் பிறகு மூன்று முறை இலங்கைக்கு எங்கள் சபை போனபோதெல்லாம், புத்தமதஸ்தர்களுடன் பேசி அநேக விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அங்குள்ள புத்தாலயங்களை யெல்லாம் தரிசித்து வந்தேன். பிறகே அக் கதையை நாடக ரூபமாக எழுத ஆரம்பித்தேன். அங்ஙனம் நாடக ரூபமாக எழுதியதில் எனக்கு நேரிட்ட கஷ்டமென்னவென்றால், அவரது சரித்திரத்தில் எந்தப் பாகங்களைச் சுருக்கி, நான்கு மணி நேரத்திற்குள் ஆடத்தக்க நாடகமாய் எழுதுவது என்பதேயாம். அதன்மீது அவரது சரித்திரத்தில் முக்கியமான அம்சங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு அவைகளை நாடகம் பார்க்கும் ஜனங்களை ரமிக்கத்தக்க வழியில் காட்சிகளாகப் பிரித்து என் சிற்றறிவிற்குத் தோன்றியபடி ஒருவாறு 1918ஆம் வருஷத்தில் எழுதி முடித்தேன். நான் எழுதிய நாடகங்களுக்குளெல்லாம் அமலாதித்யனுக்குப் பிறகு, இந்த புத்த அவதாரம் எனும் நாடகம்தான் எனக்கு மிகவும் சிரமம் கொடுத்தது. ஆயினும் அந்தச் சிரமத்தின் பலனைப் பெற்றேன் என்றே நான் கூறவேண்டும். இதனால் நான் அடைந்த முக்கியமான பலன் என்னவென்றால், அப்புஸ்தகத்தின் முகவுரையில், ஆங்கிலத்தில் நான் எழுதியபடி, இப்பெரியாரது சரித்திரத்தில் பல விஷயங்களை ஆராய்ந்தறிந்ததனால், அவை என் குணத்தையே மாற்றின என்று நான் கூறவேண்டும்; அதற்கு முன் என்னிடம் பரவியிருந்த கோபம், சுய நன்மையை நாடுந்தன்மை, பொறாமை, பேராசை முதலிய பல துர்க்குணங்களைப் பெரிதும் போக்க வழி கற்றேன். மேற்சொன்ன துர்க்குணங்கள் முதலாயின முற்றிலும் என்னை விட்டகன்றன என்று இங்கெழுத எனக்கு வல்லமையில்லை; ஆயினும் அவைகளெல்லாம் பெரும்பாலும் நீங்கின என்று உறுதியாய்க் கூறுவேன். இதைப்பற்றி இதை வாசிக்கும் எனது நண்பர்கள் யாருக்காவது சந்தேகமிருக்குமாயின் அவர்களை இது செய்யும்படி வேண்டுவேன். அதாவது “ஆசியாக் கண்டத்தின் ஜோதி” என்று ஸர் எட்வின் ஆர்னால்ட் என்பவர், அவரைப்பற்றிக் கூறிய சரித்திரத்தை முற்றிலும் படித்துவிட்டுப் பிறகு, அதனால் அவர்களுடைய மனமானது முன்பில்லாத தூய்மையையும் சாந்தியையும் கொஞ்சமாவது பெற்றதா இல்லையா என்று எனக்குச் சொல்லட்டும் என்பதேயாம்.
மேற்கண்ட வாக்கியத்தை எழுதுங்கால் புத்தரைப்பற்றி ஒரு நினைவு எனக்கு ஞாபகம் வருகிறது. ஸர் எட்வின் ஆர்னால்ட் என்பவர், மேற்சொன்னபடி அவர் சரித்திரத்தை, “ஆசியாக் கண்டத்து ஜோதி” என்று பெயரிட்டு அச்சிட்டபொழுது, சில இதர மதஸ்தர்கள், “ஆசியாக் கண்டத்தில், அவரைவிடப் பெரிய மஹான்கள் உதிக்கவில்லையா? இவரை மாத்திரம் ஆசியாக்கண்டது ஜோதி என்று புகழ்ந்து கூறியது சரியல்ல” என்று கடிந்துகொண்டார்களாம். இவ்விஷயத்தைப் பற்றி என் அபிப்பிராயத்தை வெளியிடும் வண்ணம் இப் புத்தாவதார நாடகத்திற்கு, ஆங்கிலத்தில் “லார்ட் புத்தா, ஆர் லைட் ஆப் தி யூனிவர்ஸ்” என்று பெயரிட்டேன். இம் மஹானுடைய பெருமையை, சில வாக்கியங்களில் எழுத விரும்புகிறேன். இவரது கோட்பாடுகளை, உலகில் ஐந்தில் ஒரு பங்கு ஜனங்கள் இப்பொழுதும் பின்பற்றி வருகின்றனர்; இவரது ஜனன பூமியாகிய இந்தியாவில் இவரது மதம் நிலைக்காவிட்டாலும் இத் தேசத்தின் முக்கிய மதமாகிய ஹிந்து மதத்தையே மிகவும் மாறச் செய்திருக்கிறது. “அஹிம்சையே பரம தர்மம்” என்பதைக் கடைப்பிடிக்கச் செய்து இவர் காலத்துக்கு முன் சாதாரணமாக மாம்சபட்சணம் செய்துகொண்டிருந்த பிராம்மணர்களையும் அதை விடும்படி செய்தது. இவரது அவதாரத்தை, மஹாவிஷ்ணுவின் அவதாரங்களிலொன்றாகச் சேர்த்துக் கொள்ளும்படி செய்தது. தற்காலம் மஹாத்மா காந்தி அவர்கள் மேற்பூண்டு ஒழுகும் அஹிம்சா தர்மமானது, புத்தரிடமிருந்து வந்ததேயாம் என்பதற்கு கொஞ்சமேனும் சந்தேகமில்லை. இதனுண்மையை அறிய வேண்டின் புத்தரது நூற்றுக்கணக்கான ஜாதகக் கதைகளைப் படித்தால் ஸ்பஷ்டமாகும். “நீ அச்சிட்டிருக்கும் புஸ்தகங்களுள், எதை வாங்கச் சொல்லுகிறாய்?” என்று என்னை யாராவது கேட்பார்களாயின், “இந்தப் புத்தாவதாரத்தை வாங்குங்கள்” என்பேன்.
இப் புத்தகத்தை நான் எழுதியபொழுது காட்சி காட்சியாக அப்போதைக்கப்போது வாசித்து வந்த எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலு யாது காரணம் பற்றியோ, அதில் தான் நடிக்க மனமில்லாததாக எனக்குத் தெரிவித்தார். நான் என்ன சொல்லியும் கேட்கவில்லை. அதன்பேரில் அச்சிடுமுன் நடிக்க வேண்டும் என்னும் என் வழக்கத்தையும் ஆசையையும் விட்டேன். அதன் பிறகு நான் அதை 1918ஆம் வருடம் அச்சிட்டேன். மேற்கூறிய படி, அவர் உயிருடன் இருந்தவரையில் அவர் மனங் கோணாதபடி அதில் நடிக்கும்படி நான் நிர்ப்பந்திக்கவில்லை. பிறகு 1925இல் இதைப்பற்றி எனது நண்பர் கே. நாகரத்தினம் ஐயருடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, அவர் தான் யசோதரையாக நடிக்க இஷ்டப்படுவதாகக் கூறினார். அதன்பேரில் எங்கள் நிர்வாக சபையில் இதை ஆடலாமெனப் பிரேரேபித்தேன். அச்சபையார் அப்படியே ஆட வேண்டுமெனத் தீர்மானித்தார்கள்; ஒன்றிரண்டு பெயர்கள் மாத்திரம் இந்நாடகம் மத விஷயமாயிருக்கிறதே யொழிய, நாடக மேடையில் ஜனங்களை ரமிக்கச் செய்யுமா என்று சந்தேகப்பட்டனர்; அவர்களுக்கு, “ஆடிப் பார்க்கலாம், பிறகு நீங்கள் கூறுவது சரியோ நான் கூறுவது சரியோ என்று தீர்மானிக்கலாம்” என்று பதில் உரைத்தேன். பிறகு 1925ஆம் வருஷம் ஒத்திகைகள் ஆரம்பித்து, டிசம்பர் விடுமுறை தவிர, சற்றேறக்குறைய ஆறு மாதங்கள் இடைவிடாது நடத்தினேன். என்னுடைய நண்பர்களாகிய ஆக்டர்களை நான் மிகவும் கசக்கியது, அலமாதித்யன் நாடகத்திற்குப் பிறகு இதில்தான். இதில் முக்கியமான கஷ்டம் ஒன்று என்னவென்றால், யசோதரை வேடம் பூண்ட நாகரத்தினத்திற்கு நர்த்தனம் செய்யக் கற்பிக்க வேண்டியிருந்தது. இன்னும் எட்டு ஸ்திரீ வேஷதாரிகளுக்கு, ஒன்றாய்ச் சேர்த்து, சித்தார்த்தன் (புத்தர்) முன்பாக நர்த்தனம் செய்யக் கற்பிக்க வேண்டியிருந்தது. இதற்காக அக்கலையில் வல்லவனாகிய ஓர் ஆசிரியனைக் கொண்டு, பல நாள் நர்த்தனம் செய்யக கற்பித்தேன். மூன்று மாதங்கள் இடைவிடாது ஒத்திகை செய்தானவுடன், நிர்வாக சபையார் 1925ஆம் வருஷம் டிசம்பர் மாதத்திலேயே இதை ஆட வேண்டுமென்று தீர்மானித்தனர். என் மனத்திற்குத் திருப்திகரமாயில்லை. இப்பொழுது வேண்டாம் என்று ஆட்சேபித்து அதை நிறுத்தி வைத்தேன். அச் சமயம் எனது நண்பர் திவான் பஹதூர் எஸ். பவாநந்தம் பிள்ளை அவர்கள் ஒரு முறை எனக்குக் கூறிய பழமொழி ஞாபகத்திற்கு வந்தது. அது, “அரைகுறையான வேலையை ஆசானுக்குக் காட்டலாகாது” என்பதேயாம்.
இச் சந்தர்ப்பத்தில்தான் நாகரத்தினம் ஐயர் நர்த்தனம் செய்யக் கற்றுக்கொண்டார். ரங்கவடிவேலுவுக்குப் பிறகு இவர்தான் எங்கள் சபையில் நர்த்தனம் செய்யக் கற்றுக் கொண்டது. இவர் இக் கலையைக் கற்கக் கொஞ்ச காலம் பிடித்தது; இவர் இதில் பூரண தேர்ச்சியடையும் வரையில், எனக்கு இந் நாடகத்தை ஆடுவதற்கிஷ்டமில்லை. புதிய நாடகங்களை சீக்கிரம் ஆட வேண்டுமென்று அவசரப்பட்டு ஒத்திகைகள் எல்லாம் நன்றாய் திருப்திகரமாக இல்லாத சமயத்தில், அவைகளை ஆடி சிலர் அவைகளைக் கெடுத்திருக்கின்றனர். ஒரு புதிய நாடகமானது முதன் முறை ஆடப்படும்பொழுது ஜனங்களுடைய மனத்தை ரமிக்கச் செய்யாவிட்டால், பிறகு அதைக் கொண்டு அவ்வாறு செய்வது மிகவும் கடினமாகும். இதை நாடகங்களை நடத்தும் கண்டக்டர்களும், புதிய நாடகங்களை எழுதும் நாடகக் கர்த்தாக்களும் கவனிப்பார்களாயின் நலமாயிருக்குமென எனக்குத் தோன்றுகிறது.
இந் நாடகத்திற்காக, நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டி வந்த இன்னொரு கஷ்டம் என்னவென்றால், இது சரித்திர சம்பந்தமான நாடகமாகையால், அக் காலத்திற்குத் தக்கபடி புதிய உடைகள், காட்சிகள் முதலியன சித்தம் செய்ய வேண்டி வந்தது. கௌதம புத்தர் இன்றைக்குச் சுமார் 2500 வருடங்களுக்கு முன் உயிர் வாழ்ந்ததாகச் சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் பெரும்பாலும் ஒப்புக் கொள்கின்றனர். அக் காலத்தில் ஸ்திரீ புருஷர்கள் எப்படி உடை தரித்தனர் அரண்மனைகள் முதலிய கட்டடங்கள் எப்படியிருந்தன; அக்காலத்து ஜனங்கள் உபயோகித்த பாத்திரங்கள், ஆயுதங்கள், ஆபரணங்கள் முதலியன எப்படியிருந்தன? இன்னும் இப்படிப்பட்ட அநேக விஷயங்களை ஆராய்ந் தறிந்து அதன்படி எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ய வேண்டி வந்தது. இதற்காகப் புஸ்தகங்களைக் கொண்டு நான் அறிந்தது போதாமல், சென்னை மியூஸியம் சென்று, அங்குள்ள அமராவதி சிற்பங்களையெல்லாம் பல நாள் சிரமப்பட்டுப் பரிசோதித்து வந்தேன்; அன்றியும், கன்னிமாரா புஸ்தகசாலையிலிருக்கும் அஜெந்தா படங்களைப் பார்த்து பல விஷயங்களை அறிந்தேன். அன்றியும் எங்கள் சபைக்கு அச்சமயம் படுதாக்களை எழுதி வந்த சித்திரம் வரைவோனை அழைத்துக் கொண்டுபோய், ஒவ்வொன்றாய்க் காட்டி, எனக்கு வேண்டிய திரைகள் முதலியவற்றிற்கெல்லாம், ஸ்கெட்ச் (sketch) எடுத்துக் கொள்ளச் செய்தேன். பிறகே அவனைக் கொண்டு இந் நாடகத்திற்கு வேண்டிய திரைகள் முதலியன வெல்லாம் எழுதி வைத்தேன். அக்காலத்திற்கு ஏற்றபடி ஆசனங்கள், ஆபரணங்கள், ஆலவட்டம் முதலிய சின்னங்கள், உடைகள் முதலியனவெல்லாம் புதியதாய்ச் சித்தம் செய்ய வேண்டியதாயிற்று இதற்கெல்லாம் சில மாதங்கள் பிடித்ததுமன்றி, பணமும் அதிகமாய்ப் பிடித்தது. இதற்கெல்லாம் நிர்வாக சபையார் யாதொரு ஆட்சேபணையுமின்றிப் பொருள் கொடுத்தது என் பாக்கியமே.
சாதாரணமாகத் தமிழ் நாடகமேடையிலும் ஆநெக்ரோனிசம்; (anachronism), அதாவது நாடக நிகழ்ச்சி காலத்திற்குப் பொருத்தமின்மை அதிகம் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. நானே இதைப்பற்றி இதற்கு முன்பாக எழுதியிருக்கிறேன். பாரதக் கதை நடிக்கும் பொழுது துரியோதனன் உட்கார, 1896ஆம் வருஷத்திய பென்ட்வுட் நாற்காலிகளை உபயோகிப்பது போன்ற ஆபாசங்களைக் கண்டித்து; எங்கள் சபையிலும் இதற்கு முன்பாகப் பல நாடகங்களில் இம் மாதிரியான ஆபாசங்கள் இல்லாமற் போகவில்லை; இனிமேலாவது இப்படிப்பட்ட ரசாபாசங்கள் கூடாதென்று தீர்மானித்து, இந் நாடகத்திற்காக மிகுந்த முயற்சி எடுத்துக்கொண்டோம். சுத்தோதனராஜன் சிம்மாசனத்தில் உட்கார்ந்தபொழுது, தன் பாதங்களை வைத்துக் கொள்ள எப்படிப்பட்ட சார்மணைகள் அக்காலத்தில் உப யோகப்பட்டன என்பதைக்கூட ஆராய்ந்து, அப்படிப் பட்டதைச் செய்து வைத்தோம். சற்றேறக்குறைய மேற் சொன்ன ஆநெக்ரோனிசம் இல்லாமல் நடத்திய நாடகம் எங்கள் சபையில் இதுதான் முதலானது என்று கூறக்கூடும்.
இந் நாடகம் நடத்துவதில் இன்னொரு கஷ்டம் எங்களுக்கு ஏற்பட்டது. கௌதமருடைய சிஷ்யர்களாகப் பலர் வரவேண்டியிருந்தது; அவர்களையெல்லாம் தலை மொட்டையடித்துக்கொள்ளச் சொல்ல முடியுமா? ஆகவே, தீர்க்காலோசனை செய்து, தலையில், ரோமம் அதிகமாக இல்லாதவர்களாகப் பார்த்து அவர்களுக்கெல்லாம், தலை மொட்டையாயிருந்தால் எப்படியிருக்குமோ அப்படித் தோன்றும்படியான தொப்பிகள் மாதிரி செய்து போட்டு பத்துப் பன்னிரண்டு சிஷ்யர்களைத் தயார் செய்ய வேண்டி வந்தது.
இந் நாடகத்தில் வேண்டிய பாட்டுகளுக்காக, கதை வடக்குப் பிரதேசத்தில் நடப்பதால், தக்க இந்துஸ்தானி வர்ண மெட்டுகளாகப் பிடித்து அம் மெட்டுகளில், காலஞ் சென்ற எனது நண்பராகிய ம. முருகேச முதலியாரைக் கொண்டு சாஹித்யங்கள் செய்து கொடுத்தேன். அன்றியும் இப் பாட்டுகளெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி இருக்கின்றனவா என்று எனது நண்பர்களாகிய வி.வி. ஸ்ரீநிவாச ஐயங்கார், டபிள்யூ துரைசாமி ஐயங்கார் முதலியோரைக் கொண்டு பரீட்சிக்கச் செய்து, அவர்கள் கூறிய சில குறிப்புகளின்படி சில பாட்டுக்களை மாற்றினேன்.
இந் நாடகத்திற்கென்றே திரைகள் முதலியனவெல்லாம் காலத்திற்குத் தக்கபடி புதிதாகத் தயார் செய்ததை முன்பே தெரிவித்திருக்கிறேன். ஒரு நாள் விக்டோரியா ஹால் மேடையின் மீதே முழு ஒத்திகை வைத்துக்கொண்டு, அத்திரைகள் முதலியன வெல்லாம் சரியாயிருக்கின்றனவா என்று போட்டுப் பார்த்தோம். எங்களுக்குத் தயார் செய்த புதிய உடைகளையும் அணிந்து பார்த்தோம். அன்றுதான் எங்களுக்கு ஒரு புது கஷ்டம் தேன்றியது! பௌத்த சன்யாசிகளுக்குத் துவர் (காவி) ஆடைகளை யெல்லாம் சித்தம் செய்தோம் தக்கபடி; ஆயினும் அவைகளை அணியும் விதம் எங்களுக்குத் தெரியவில்லை ! அதன்பேரில், எனது நண்பராகிய பாலசுந்தர முதலியார் சிரமம் எடுத்துக் கொண்டு, ஒரு பௌத்த சந்நியாசியிடம் போய் அதை எப்படி அணிவது என்று கற்றுக்கொண்டு வந்து மற்ற ஆக்டர்களுக்கெல்லாம் கற்பித்தார்! இந்நாடகத்திற்கு முன்பாக முழு ஒத்திகை வைத்துக் கொண்டிராவிட்டால், இக்குறையை நாடக தினம்தான் கண்டுபிடித்துத் திகைத்திருப்போம்! ஆகவே, ஒவ்வொரு புதிய நாடகத்திற்கும் டிரஸ் ரிஹர்சல் “உடுப்புடன் ஒத்திகை” பார்க்க வேண்டிய அதி அவசியம் என்பது என் முடிவான தீர்மானம். எங்கள் சபையின் ஆரம்பத்தில் சில வருஷங்கள் இவ்வாறு செய்து வந்தோம். பிறகு சோம்பேறித்தனத்தினாலோ அல்லது கர்வத்தினாலோ இந்த வழக்கத்தைச் சில வருடங்கள் விட்டிருந்தோம். இதன் பிறகு கட்டாயமாய் அப்படிச் செய்துதான் தீர வேண்டுமென்று எங்கள் சபையின் பொதுக்கூட்டத்தில் ஒரு சட்டம் ஏற்படுத்திக் கொண்டோம்.
இனி இந் நாடகத்தை முதன் முறை ஆடிய கதையை எழுதுகிறேன்.
இதைப் பகிரங்கமாக ஆட வேண்டுமென்று தீர்மானித்த பொழுது, எனது பால்ய நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், இவ்வளவு கஷ்டமெடுத்துக்கொண்டு சித்தம் செய்த நாடகத்தை, ஒரு வாரத்திற்குள் மூன்று நான்கு முறையாவது ஆடவேண்டும் என்று வற்புறுத்தினார்; அவர் இவ்வாறு கூறியபொழுது அது அவ்வளவு உசிதமாக எனக்குத் தோன்றவில்லை. நான் அதற்கு ஆட்சேபம் செய்ததும் எங்கள் நிர்வாக சபையார், மூன்று முறை போடவேண்டும் என்று தீர்மானித்தார்கள். இதுதான் முதல் முறை எங்கள் சபையானது, மதராஸ் டிராமாடிக் சொசைடியாரைப் போல் ஒரு நாடகத்தை எடுத்துக்கொண்டு ஒரு வாரத்திற்குள் அதை மூன்று நான்கு முறை ஆடத் தீர்மானித்தது. அங்ஙனமே இவ்வருடம், மூன்று முறை ஆடிய பிறகு எனது நண்பர் உத்தேசித்ததே சரி, நான் அதற்கு ஆட்சேபித்தது தவறு என்று கண்டேன். அவருடைய அபிப்பிராயத்தினின்றும் மாறுபட்டு, பிறகு அவர் கூறியதே சரியென்று நான் கண்ட பல விஷயங்களில் இது ஒன்றாம். இம்மாதிரி ஒரு நாடகத்தை எடுத்துக்கொண்டு, அதைப் பன்முறை ஆடுவதில் சில பெரும் நன்மை களுண்டு. அவற்றைப் பிறகு குறிக்கிறேன்.
இந்தப் “புத்தாவதாரம்” முதன்முறை ஆடியபொழுது மேன்மை தங்கிய சென்னை கவர்னர் அவர்கள் வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். அவரும் அதற்கிசைந்தார். முதன்முறை ஆடியபொழுது அறுபத்து நான்கோ அறுபத்தைந்தோ ஆக்டர்கள் மேடையின் பேரில் வரவேண்டி வந்தது. இத்தனை ஆக்டர்களுக்கும், வேஷம் தரித்தாக வேண்டு அத்தனை ஆக்டர்களையும் காலையிலேயே விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு வரும்படி செய்து, கடைசியாக மேடையின் மீது அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்களை யெல்லாம் சொல்லிக் கொடுத்து, பதினோரு மணிக்கெல்லாம் (என் செலவில்) அவர்களைப் போஜனம் செய்யச் சொல்லி உடனே வேஷம் பூண ஆரம்பம் செய்தேன். அவ்வளவு சீக்கிரம் ஆரம்பித்தும் வேஷங்களெல்லாம் சரியாக 51
மணிக்குத் தான் முடிந்தன. மேற்சொன்னபடி செய்திராது வழக்கம் போல் இரண்டு அல்லது மூன்று மணிக்கு ஆரம்பித்திருந்தால், நாடக ஆரம்பத்திற்கு ஏற்படுத்திய தவணை கடந்து இரண்டு மணிக்குப் பிறகே நாடகம் ஆரம்பித்திருப்போம்! கவர்னர் அவர்களும் சரியாக 51
மணிக்கெல்லாம் வர, உடனே மணிப்பிரகாரம் ஆரம்பித்தோம்.
நாடகம் மிகவும் நன்றாயிருந்ததென, கவர்னர் அவர்கள் உட்பட எல்லோரும் மெச்சினர். அதைப்பற்றி நான் இங்கு எழுதப் போகிறதில்லை. அதிலுள்ள குற்றங் குறைகளை மாத்திரம் எடுத்து எழுதுகிறேன். முதலில் ஐந்தரை மணிக்கு ஆரம்பித்த நாடகமானது பத்தரை மணிக்கு முடிந்தது! இது பெரும் தவறாகும். சாதாரணமாக ஒவ்வொரு புதிய நாடகத்தை நான் எடுத்துக் கொள்ளும் பொழுதும், கடைசி ஒத்திகைகளில், ஒவ்வொரு காட்சியும், இத்தனை நிமிஷம் பிடிக்கிறது என்று குறித்துக் கொண்டு போய், மொத்தத்தில் நாடகமானது இத்தனை மணி பிடிக்கும் என்று தீர்மானிப்பது வழக்கம். சில நாடகங்களை ஆக்டர்கள் வளர்த்தி விடுகிறார்களென்று, நான்கு மணி நேரத்திற்கு மேல் சாயங்கால ஆட்டங்கள் செல்லக் கூடாதென்று எங்கள் சபையில் ஒரு சட்டமும் ஏற்படுத்தினோம். இதைக் கடந்து இதற்கு மேல் ஒரு மணி சாவகாசம் பிடித்தது இந்நாடகம். கவர்னர் அவர்கள், பொறுமையுடன், நான்கு மணி நேரம் அதாவது இரவு 91
மணி வரையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு மேல் இருப்பது கஷ்டமாயிருக்கிறதென நாடகத்தைப் பற்றி ஏதோ புகழ்ச்சியாக, எங்கள் சபையின் பிரசிடெண்டவர்களிடம் சொல்லிவிட்டு விடை பெற்றுப் போனார். அதற்குக் கொஞ்சம் முன்பாக எங்கள் சபையின் வைஸ் பிரசிடெண் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரிடம் வேடிக்கையாக, “நாடகத்தின் முடிவைப் பார்ப்பதற்கு, நான் வீட்டிற்குப் போய் சாப்பிட்டுவிட்டு வரலாம் போலிருக்கிறதே” என்று சொன்னாராம்! இவ்வளவு நேரம் இந் நாடகத்தை நீடிக்கச் செய்தது பெரும் தவறாகும். இரண்டாம் முறை இந்நாடகத்தை ஆடியபொழுது குறைக்க வேண்டிய பாகங்களை யெல்லாம் குறைத்து 4 மணி நேரத்திற்குள் முடியும்படி செய்தேன். முதன் முறை இந்நாடகம் அவ்வளவு நீடித்ததற்குக் காரணம், காட்சிக்கும் காட்சிக்கும் இடையில் இண்டர்வெல் அதிகமானதேயாம். ஒவ்வொரு காட்சியும் இத்தனை நிமிஷம்தான் பிடிக்கும் என்று கணக்குப் போட்டவன், இந்த இண்டர்வெல்களை கவனிக்க மறந்தேன். இரண்டு மூன்று முறை உடனே ஆடியபடியால், முதன்முறை நேர்ந்த இக்குறையைத் தீர்த்துக் கொள்ள மிகவும் அனுகூலமாயிருந்தது.
இம்முறை இந் நாடகத்தை ஆடியதில் இன்னொரு முக்கியக் குறை என்னவென்றால், காட்சிகளுக்கு எல்லாம் தக்கபடி திரைகள் முதலியன ஏற்படுத்தியும், ஒவ்வொரு காட்சிக்கும் இன்னின்னபடி வெளிச்சம் இருக்க வேண்டுமென்று நாங்கள் ஏற்பாடு செய்யாமற் போனதே. இதைக் கண்டுபிடித்து எனக்கு அறிவித்தவர், மதறாஸ் டிராமாடிக் சொசைடியின் அங்கத்தினரும் எனது நண்பருமான மிஸ்டர் லெஸ்லி கோல்ஸ் என்பவரே. இவர் தனது சொசைடியிலிருந்து என் வேண்டுகோளின்படி எங்களுக்கு ஸ்டேஜ் லைட்களை உதவியிருந்தார். அவரையும் அவரது மனைவியாரையும் நாடகத்திற்கு வரும்படி இரண்டு டிக்கட்டுகள் வாங்கி அனுப்பியிருந்தேன். அவர்களிருவரும் வந்திருந்து நாடகம் பார்த்தனர். மறுதினம் மிஸ்டர் லெஸ்லி கோல்ஸ், எனக்குத் தான் பார்த்ததைப் பற்றி, ஏதோ சிலாக்கியமாக எழுதினார். அக் கடிதத்திலுள்ள ஒரு வாக்கியத்தை மாத்திரம் இங்கு மொழிபெயர்த்து எழுதுகிறேன். “நீர் நாடகத்தை எழுதி ஒத்திகை செய்து, முக்கிய பாகத்தை ஆக்டு செய்து, ஸ்டேஜ் மானேஜராக இருந்து, எல்லாக் காரியங்களையும் பார்த்துக்கொண்டு, இவ்வாறு பல காரிங்களையும் ஒருவனாக வகித்தது, எனக்கு மிகவும் ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் தருகிறது” என்று எழுதினார். அக் கடிதத்தில் கடைசியாக, “மற்றெல்லாம் மெச்சத்தக்கதா யிருந்தபோதிலும், ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் வெளிச்சம் ஏற்பாடு செய்தது மட்டும் எனக்குத் திருப்திகரமாயில்லை” என்று எங்கள் சபையில் அதுவரையிலிருந்த ஒரு முக்கியமான குறையை எடுத்துக் காட்டினார். இவ்விஷயம் மற்ற சபைகளுக்கும் நாடகக் கம்பெனிகளுக்கும் மிகவும் உபயோகப்படும் என்று எனக்குப் படுகிறபடியால், இதைப்பற்றிச் சற்று விவரமாக இங்கு எழுத அனுமதி கேட்கிறேன்.
எங்கள் சபை நாடகங்கள் ஆட ஆரம்பித்த பிறகு, அநேக வருஷங்கள் வரை எல்லாக் காட்சிகளுக்கும் ஒரே மாதிரியான வெளிச்சங்கள்தான் உபயோகித்து வந்தோம். தற்காலமும் அநேக சபைகளிலும், நாடகக் கம்பெனிகளிலும் அம்மாதிரி செய்து வருகிறார்கள். இதைப்பற்றிச் சற்று யோசித்துப் பார்த்தால், இது தவறு என்பது ஸ்பஷ்டமாகத் தெரியும். ஒரு காட்சி காலையிலிருக்கலாம்; மற்றொரு காட்சி நன்றாய் வெயிற்காயும் நடுப்பகலிலிருக்கலாம்; இன்னும் மற்றொரு காட்சி நடுநிசியிலிருக்கலாம்; இவைகளை நாடக மேடையின் மீது காட்டும் பொழுது, ஒரே வெளிச்சம் இருப்பது தவறல்லவா? அன்றியும் சில காட்சிகள் ஒரே காலத்தில் நடப்பனவாயினும், நடக்கும் இடம் வேறுபட்டிருக்கலாம். உதாரணமாக, காட்சி நடக்கும் காலம் நடுபகலாயிருக்கலாம்; ஆயினும் நடக்கும் இடம் வெவ்வேறாயிருக்கலாம்; ஒன்று வெட்டவெளியிலிருக்கலாம், மற்றொன்று இருண்ட குகையிலிருக்கலாம்; ஒன்று அரசனது கொலுவிலிருக்கலாம், மற்றொன்று அடர்ந்த காட்டிலிருக்கலாம்; இவைகளுக்கெல்லாம் ஒரே மாதிரியான வெளிச்சம் இருக்கச் செய்வது தவறல்லவா? ஆகவே ஒவ்வொரு காட்சிக்கும் வெளிச்சம் எப்படி இருக்க வேண்டுமென்று தீர்மானிக்கும்போது, முதலில் அது நடக்கும் காலத்தைக் கருதிப் பிறகு அது நடக்கும் இடத்தையும் கருதியே, இப்படிப்பட்ட வெளிச்சம் இருக்க வேண்டுமென ஏற்படுத்த வேண்டும். மற்ற விஷயங்களையும் கருத வேண்டும். இதற்கோர் உதாரணம் கூறுகிறேன்; ஒரு காட்சி பகல் பொழுதில் ஒரு தோட்டத்திலிருக்கலாம்; ஆயினும் அக்காட்சி நடக்கும் சமயத்தில் பெரும் மழை பொழிவதாக இருக்கலாம். பகலில் நடக்கிற காட்சியாயிற்றே என்று அதிக வெளிச்சத்தில் நடக்கும்படி செய்யலாமா? ஆகவே ஒரு நாடகத்தை நடிக்கும்பொழுது, ஒவ்வொரு காட்சிக்கும், இப்படிப்பட்ட வெளிச்சம் இருக்க வேண்டுமென்று பல சந்தர்ப்பங்களையும் யோசித்தே முடிவு செய்ய வேண்டும். இவ்வுண்மை நான் பல வருடங்கள் அறியாதிருந்தேன். முதல் முதல் என் சிற்றறிவிற்கு இது பட்டது, நான் ஒருமுறை மதராஸ் டிராமாடிக் சொசைடியார் நாடகம் ஒன்றைப் பார்த்தபொழுதே. அந்நாடகம் மூன்று காட்சிகள்தான் அடங்கியது. ஒரே இடத்தில் அம்மூன்று காட்சிகளும் நடந்தன; ஆயினும் ஒரு காட்சி காலையிலும், இரண்டாவது காட்சி பகலிலும், மூன்றாவது காட்சி இரவிலும் நடப்பதாக நாடகக் கர்த்தா எழுதியிருந்தார்; இதற்கேற்றபடி ஒவ்வொரு காட்சியிலும் வெளிச்சத்தை மாற்றினர்; காலையில் நடக்கும் காட்சிக்குக் கொஞ்சம் வெளிச்சம் இருந்தது; பகலில் நடக்கும் காட்சிக்கு அதிக வெளிச்சத்தை உபயோகித்தனர்; இரவில் நடக்கும் காட்சிக்கு வெளிச்சங்களையெல்லாம் மிகவும் குறைத்து, இரவில் விளக்குகள் ஏற்றி வைத்திருந்தால் எவ்வளவு வெளிச்சம் இருக்குமோ, அப்படியே காண்பித்தனர். இது மிகவும் சரியென என் மனத்திற்குப் பட்டது. இதன் பிறகுதான் இவைகளையெல்லாம் அச்சபையார்க்கு சாதாரணமாக ஏற்பாடு செய்யும் ஐரோப்பியக் கனவானாகிய மிஸ்டர் லெஸ்லி கோல்ஸ் என்பவரைப் பரிச்சயம் செய்துகொண்டு, அவரை இந்தப் “புத்தாவ தாரம்” என்னும் நாடகத்திற்கு வந்து பார்க்கச் செய்தேன். இவரிடமிருந்து இன்னின்ன காட்சிகளுக்கு இன்னின்ன மாதிரி வெளிச்சம் ஏற்படுத்த வேண்டுமென்னும் பல விஷயங்களைக் கற்றேன். மேலும் திருவனந்தபுரத்தில் தற்காலமிருக்கும் எமிலிஹாட்சி என்னும் துரைசானியார் சென்னைக்கு வந்திருந்தபொழுது, இது விஷயமாகப் பல நுட்பங்களை எனக்குக் கற்பித்தனர்; அவர்களிருவருக்கும் இதன் மூலமாக எனது மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன்.
இந் நாடகத்திற்குப் பிறகுதான் எங்கள் சபையில் காட்சிகளுக்குத் தக்கபடி வெளிச்சத்தை ஏற்பாடு செய்ய வேண்டுமென்கிற விஷயத்தைக் கொஞ்சம் கவனித்து வருகிறோம். இதை இதர நாடக சபையோர்களும், நாடகக் கம்பெனிக்காரர்களும் முக்கியமாகக் கவனிப்பார்களாக. இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா முதலிய பிரதேசங்களில் நாடகங்களில் இதற்காக ஏராளமான பணம் செலவு செய்து ஒவ்வொரு காட்சியிலும் இயற்கையில் எப்படியிருக்குமோ, அப்படிச் செய்து வருவதாகப் படித்திருக்கிறேன். அவர்களைப்போல் பணம் செலவழித்து ஏற்பாடு செய்ய ஏழைகளாகிய நமக்கு முடியாமற் போனாலும், கூடியவரையில் இதைக் கவனிக்க வேண்டுமென்பது என் அபிப்பிராயம். இந்தச் சமாச்சாரத்தை விட்டு அகலுமுன், நாடக மேடைகளில் ‘லைம் லைட்’ என்னும் அதிகப் பிரகாசமான வெளிச்சத்தை உபயோகிக்கும் விதத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். நாடக மேடை ஏறியிருக்கும் ஒவ்வொரு ஆக்டருக்கும் இது இன்னதென்று தெரியும்; ஆயினும் இதைப் படிக்கும் சிலருக்கு அது இன்னதென்று தெரியாதிருக்கக் கூடுமாகையால், அது இன்னதென்று இங்கு விவரிக்கிறேன்; அது ஒரு பெருஞ் ஜோதியைப் போன்ற வெளிச்சத்தை நாடக மேடையின் பேரிலாவது அல்லது அங்கிருக்கும் சில ஆக்டர்கள் மீதாவது, விழும்படி செய்யும் ஓர் ஏற்பாடாம். இது ஒரு வேடிக்கையாயிருக்கிறதென்று பல நாடக சபைகளிலும், கம்பெனிகளிலும், சமயமில்லாத சமயங்களிலும் உபயோகிப்பதை நான் பார்த்திருக்கிறேன். இது பெருந் தவறாகும். இதை நமது தமிழ் நாடக மேடையில் தேவதைகள் வரும்படியான காட்சிகளில்தான் உபயோகிக்க வேண்டுமென்பது என் அபிப்பிராயம். உதாரணமாக வள்ளித் திருமணத்தில் சுப்பிரமணியர் தன் சுயரூபத்துடன் வள்ளிக்குக் காட்சி கொடுக்கும் காட்சியிலும், ராமதாஸ் நாடகத்தில் ஸ்ரீராமர் முதலியோர் நவாப்புக்கும் ராமதாஸுக்கும் சுயரூபத்துடன் காட்சி கொடுக்கும்பொழுதும், சிறுத்தொண்டர் நாடகக் காட்சியில் பரமேஸ்வரன் பார்வதி சமேதராய் ரிஷப வாஹன ரூடராய், சிறுத்தொண்டருக்குக் காட்சி கொடுக்கும் சமயத்திலும் இந்த லைம் லைட்டை உபயோகிக்க வேண்டியது அவசியம் தான். “லீலாவதி-சுலோசனா” நாடகத்தில் ஸ்ரீதத்தனும் சுலோசனாவும் இரவில் கதளிக் கிரஹத்தில் பேசிக் கொண்டிருக்கும்பொழுது இதை ஏன் உபயோகிக்க வேண்டும்? இனியாவது கண்டக்டர்கள், ஆக்டர் விரும்புகிறார்களே என்று இதை உபயோகியாமல், சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி இந்த லைம் லைட்டை உபயோகிப் பார்களாக.
இதற்கு ஓர் உதாரணமாக இந்தப் “புத்தாவதாரம்” என்னும் நாடகத்தில் ஒரு முக்கியமான காட்சியையே எடுத்துக்கொள்கிறேன். இதில் ஒரு மிகவும் முக்கியமான காட்சி. கௌதம புத்தர் போதி விருட்சத்தின் அடியில் மெய்ஞ் ஞானத்தை அடையும் காட்சியாம்; இக்காட்சியின் ஆரம்பத்தில் களைத்த கௌதமர், சாயங்காலத்தில் சுஜாதையின் கரத்தினின்றும் உணவை உட்கொள்ளுகிறார். அச்சமயம் சாயங்கால வெயிலிருப்பதுபோல், மேடையில் வெளிச் சத்தைக் குறைத்துக் காட்ட வேண்டும். பிறகு புத்தர் போதி விருட்சத்தின் அடியிற் போய் தீர்மானத்துடன் உட்கார்ந்ததும், சந்திரன் எழுவதுபோல சந்திர வெளிச்சத்தைக் காட்ட வேண்டும். அதன் பிறகு மாரன் மங்கையர் அவரை மயக்க முயலும்போதும் நர்த்தனம் செய்யும் போதும் சந்திர ஒளியை அதிகப்படுத்திக் காட்டவேண்டும். பிறகு அவர்கள் ஜம்பம் சாயாமற் போனபின், சந்திரன் மேகங்களால் மறைவுறுவதுபோல், வெளிச்சத்தைக் கொஞ்சம் கொஞ்ச மாகக் குறைத்துக்கொண்டே போக வேண்டும். பிறகு குரோதம், மாச்சரியம், லோபம், அகங்காரம், அவித்யை, அவா முதலியன கோர ரூபங்களுடன் அவரை அதட்ட வரும்போது, ஏறக்குறைய இருண்டிருக்க வேண்டும். கடைசியாக அவைகள் மறைந்தவுடன் சில விநாடி வரைக்கும் நாடக மேடை முற்றிலும் இருள் சூழ்ந்தே இருக்க வேண்டும். திடீரென்று கௌதமருக்கு ஞானம் உதித்தது போல் அவர் நெற்றியின் மத்தியில் ஒரு வெளிச்சம் தோன்றவேண்டும். பிறகு அந்த ஞானம் பரவியது போல் முதலில் முகத்திலும் பிறகு உடல் முழுவதிலும் ஜோதி தோன்ற வேண்டும். இந்த ஒரு காட்சிக்கு வெளிச்சத்திற்கு இவ்வளவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது. மற்றவைகளையெல்லாம் சுலபமாக ஏற்பாடு செய்து பார்த்தோம், எங்கள் கடைசி ஒத்திகைகளில்; ஆயினும், கௌதமருடைய நெற்றியில் பிரகாசம் தோன்றும்படி செய்வது எங்ஙனம் என்று ஏக்கமுற்ற பொழுது, இதிலெல்லாம் மிகவும் புத்தி சாதுர்யமுடைய எனது நண்பர் தாமோதர முதலியார் அவர்கள் என் உதவிக்கு வந்தார். ஒரு மின்சார பாட்டரியை (battery) என் உடைக்குள் மறைத்து வைத்து அதன் கம்பியை என் தலையில் அணிந்திருந்த டோபாவுக்குள் கொண்டு போய், நெற்றிக்கெதிராகத் தொங்கும்படியாக, அதன் முனையில் ஒரு சிறு மின்சார பல்ப் (bulb) ஏற்பாடு செய்தார். மறைவாக இருந்த அந்த பாட்டரியை முடுக்கினால், அந்த வெளிச்சம் தோன்றும்படி ஏற்பாடு செய்தார். இக்காட்சி நடக்கும்பொழுது, எல்லாம் இருட்டியவுடன், இவ்விசையை நான் முடுக்க, என் நெற்றியில் இரு கண்களுக்கு மத்தியில் இந்த எலெக்டிரிடிக் வெளிச்சம் தோன்றிய போது, ஹாலிலுள்ள ஜனங்க ளெல்லாம் இதைக் கண்டு ஆச்சரியமும் சந்தோஷமுமுற்ற வராய்க் கரகோஷம் செய்தனர். அச்சமயம் அக் கரகோஷம் என்னைச் சார்ந்ததல்ல, எனது நண்பர் தமோதர முதலியார் புத்தி சாதுர்யத்தைச் சார்ந்ததென்று அவருக்கு அதை என் மனத்தில் அர்ப்பணம் செய்தேன். உடனே லைம் லைட்டைக் கொண்டு முதலில் முகத்திலும், பிறகு எனது உடல் முழுவதும் ஜோதியுண்டானதுபோல் செய்யப்பட்டது. இப் புத்தாவதார நாடகத்தில் இக் காட்சியானது மிகவும் நன்றாயிருந்ததென எல்லோரும் புகழ்ந்தது என் நினைவிற்கு வந்து, இப்பொழுதும் எனக்குச் சந்தோஷத்தைத் தருகிறது.
ஜனங்கள் இந்நாடகத்தில் பலரும் மெச்சிய மற்றொரு காட்சி, கௌதமர் முன்பாக நடன மாதர் நடனஞ் செய்யுங்கால், திடீரென்று பலகணியோரம் வைத்திருந்த யாழின் மூலமாகத் தேவர்கள் அவருக்கு அவர் இவ்வுலகில் அவதாரம் செய்த வேலையைக் கவனிக்கும்படி சங்கீதத்தின் மூலமாகத் தெரிவிக்கின்ற காட்சியாகும். இந்தக் காட்சிதான் ஒத்திகைகளில் எனக்கு மிகவும் கஷ்டத்தைக் கொடுத்தது. இக் காட்சியில் நடனமும் சரியாயிருக்க வேண்டும், சங்கீதமும் சரியாயிருக்க வேண்டும், ஆக்டிங்கும் சரியாயிருக்க வேண்டும். இம் மூன்றையும் தக்கபடி சரிப்படுத்த இக்காட்சியை எத்தனை முறை ஒத்திகை செய்து பார்த்தேன் என்று என்னால் கணக்கிட்டுச் சொல்ல முடியாது.
ஆயினும் எனக்கு நடிப்பதற்கு மிகவும் கஷ்டத்தைக் கொடுத்த காட்சி நான் கௌதமராக போதி விருட்சத்தின் அடியில் ஏறக்குறைய முக்கால் மணி நேரம் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டி வந்த காட்சியே! இந்த முக்கால் மணி நேரமும் மௌனமாய் அசையாதபடி உட்கார்ந்திருப்பதுதான் எனக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது. அதுவும் கண்களை மூடிக்கொண்டிருப்பதென்றாலும் ஒரு வகையாக இருந்து விடலாம்; நான் கண்களைத் திறந்து கொண்டிருக்க வேண்டி வந்தது! சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பது ஒரு கஷ்டமா என்று இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்கள் கேட்கலாம். பத்து நிமிஷம் அசையாது உட்கார்ந்து பாருங்கள்; பிறகு இந்தக் கேள்விக்கு நீங்களே பதில் சொல்லி விடுவீர்கள் என்று, அவர்களுக்கு நான் பதில் உரைப்பேன். நாடக மேடையின் பேரில் நான்கைந்து மணி சாவகாசம் நடிப்பதைவிட, நாற்பது நிமிஷம் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பது மிகவும் கடினமாம் என்பதற்குச் சந்தேகமேயில்லை . இவ்வாறு நான் “சும்மா” உட்கார்ந்து கொண்டிருந்ததில் மற்றொரு விபரீதமான கஷ்டமொன்று நேர்ந்தது. தான் எனது ஆசனத்தில் உட்கார்ந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் எனது துடையில் ஏதோ ஒரு பூச்சி (அந்த ஆசனத்திலிருந்த மூட்டைப் பூச்சியாயிருக்கலாம் என்று நினைக்கிறேன்) என்னைக் கடிக்க ஆரம்பித்தது! நான் அதை அகற்றுவ தென்றால் எனது கைகால்களை அசைக்க வேண்டும். அப்படிச் செய்வேனாயின் காட்சி கெட்டுப்போகும். இந்த தர்மசங்கடத்தில் அது கடிக்கும் தினவைப் பொறுத்துக் கொண்டேயிருந்தேன், அந்த முக்கால் மணி நேரமும்! இதை நினைத்துக்கொண்டால் இதைப் படிப்பவர்களுக்கு வருவது போல் எனக்கும் சிரிப்பு வருகிறது; ஆயினும் அப்பொழுது எனக்குச் சிரிப்பாயில்லை.
எனது நண்பர் இந் நாடகத்தில் யசோதையாக நடித்ததும், பாடியதும், மாயா யசோதையாக நர்த்தனம் செய்ததும் மிகவும் நன்றாயிருந்ததெனப் பலரும் மெச்சினர். இவருடைய சிறு குமாரன் ‘மணி’ என்பவன் ராகுலனாக அழகாய் நடித்தான்.
இந்நாடகத்தில் கௌதம புத்தராக நடிக்கும் ஆக்டருக்கு முக்கியக் கஷ்டம் என்னவென்றால் “ஹாம்லெட்” என்னும் நாடகத்தில், “ஹாம்லெட்”டின் பாகம்போல், இந்நாடகத் தில் முதற்காட்சி முதல் கடைசிக் காட்சி வரையில், இடையில் இளைப்பாறச் சாவகாசமின்றி, ஏறக்குறைய எல்லாக் காட்சிகளிலும் வர வேண்டுமென்பதே.
இந்நாடகத்தில் முதன் முறை நடித்தபொழுது எனக்கு நேர்ந்த ஒரு சிறு கஷ்டத்தை எடுத்து எழுதுகிறேன். கடைசிக் காட்சிக்கு முந்திய காட்சியில், நான் அரங்கத்தின் பேரில் நடந்து செல்லும்பொழுது காலில் பாதரட்சை ஒன்றுமில்லாதபடியால், அங்கு அகஸ்மாத்தாய்க் கிடந்த ஒரு பழைய இரும்பாணி, எனது உள்ளங்காலில் நன்றாய்க் குத்தி ரத்தம் வடிய ஆரம்பித்தது. சீக்கிரம் காட்சியை முடித்துக்கொண்டு, கிரீன் ரூமுக்குப் போய் ரத்தம் வருவதை நிறுத்தி, காயத்தின் மீது கொஞ்சம் சுண்ணாம்பைப் பூசி பிறகு நன்றாய்க் கட்டிவிட்டேன். நாடகம் முடிந்தவுடன் வர்ணத்தைக் கூடக் கழுவுவதன்முன் எனது நண்பர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, நேராக வைத்தியர் வீட்டிற்குப் போய் அதற்குச் சிகிச்சை செய்து கொண்டேன். இதை இங்கு நான் எடுத்து எழுதுவதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. நாடக மேடையில் ஆடும் ஆக்டர்களுக்கு அங்கிருக்கும் பழைய இரும்பு ஆணி முதலிய சாமான்களால் காயம் நேரிடக்கூடும்; அவைகள் பழையனவாகித் துருப்பிடித்திருந்தால், ஏதோ சிறு காயந்தானே என்று அசட்டை செய்யலாகாது; உடனே சுண்ணாம்பையிட்டு, ரத்தம் வராதபடி கட்டிவிட்டு, கூடிய சீக்கிரத்தில் வைத்தியரிடம் போய் அதற்குச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு பழைய குண்டூசியாயினும் அது துருவேறியிருந்தால், ஒரு சமயம், செப்டிக் (sceptic) விஷத்தை யுண்டுபண்ணக்கூடும். ஆகவே, “கொட்டினால் தேள், கொட்டா விட்டால் பிள்ளைப் பூச்சி” என்கிற பழமொழிக்கிணங்க, எதற்கும் முன் ஜாக்கிரதையாயிருப்பது நலம்; இதை எனது நாடக மேடை நண்பர்களுக்கு அறிவிப்பது எனது கடன் என இங்கு இதைப்பற்றி எழுதலானேன்.
இப் புத்தாவதாரமானது, உடனே இன்னும் இரண்டு முறை ஆடப்பட்டது. இவ்வாறு கூடிய சீக்கிரத்தில் மூன்று முறை ஆடிய பொழுதும் நல்ல பணம் வசூலாயது. இந்நாடகத்திற்கென்று செலவு செய்த தொகை யெல்லாம் ஏறக்குறைய இந்த மூன்று முறை ஆடியதினாலேயே எடுத்துவிட்டோம். அன்றியும் இரண்டாம் முறை மூன்றாம் முறை ஆடியபொழுது முதன் முறை ஆடியதிலிருந்த குறைகளையெல்லாம் நீக்க சமயம் வாய்த்தது; அன்றியும் முதல் நாள் வருவதற்கு அசந்தர்ப்பமாயிருந்த நாடகாபி மானிகள், இரண்டாவது தினமாவது மூன்றாவது தினமாவது வந்து பார்ப்பதற்குச் சௌகரியமாயிருந்தது. இதன் பிறகுதான் எனது பால்ய நண்பர், சென்னை டிராமாடிக் சொசைடியாரைப் போல் நமது முக்கியமான நாடகங்களை யெல்லாம் மூன்று நான்கு தினங்களில் ஆடவேண்டும் என்று வற்புறுத்தியதன் நியாயத்தைக் கண்டேன்.
இந் நாடகமானது இதற்கப்புறம் எங்கள் சபையோரால் சில முறைதான் ஆடப்பட்டிருக்கிறது. இதர சபைகளும் இரண்டு மூன்று விசைதான் இதை ஆடியிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், இதற்குத் தக்க திரைகள் உடுப்புகள் முதலியன சித்தம் செய்வது மேற்சொன்னபடி கடினமென்பது ஒன்றாயிருக்கலாம்; அன்றியும் தக்கபடி நடிப்பதற்கும் இது மிகவும் கஷ்டம் தரும் என்பதற்குச் சந்தேகமில்லை. இதர சபைகள் இந்நாடகத்தை நடித்ததில் நான் பார்த்த வரையில் “ட்ரேட்ஸ் ஸ்டாப் கிளப்” (Trades Staff Club) இந் நாடகத்தை நடித்தது மிகவும் நன்றாயிருந்த தென்பது என் அபிப்பிராயம். சில காட்சிகளின் ஒழுங்கில் அவர்கள் எங்கள் சபையைவிட மிகவும் புத்தி சாதுர்யமாகச் செய்தார்கள் என்று நான் கூற வேண்டும். இது எனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தந்தது. இதில் ஒரு சிறு வேடிக்கை என்னவென்றால் என் பெயர் கொண்ட ஒருவரே அங்கும் கௌதம புத்தராக நடித்தார்.
இந் நாடகக் கதையானது இரண்டு முறை சினிமாக் காட்சியில் சென்னையில் காட்டப்பட்டதைப் பார்த்தேன். ஆயினும் அவைகள் எனக்கு மிகவும் பொருத்தமாகத் தோன்றவில்லை. அச் சினிமாக் காட்சியிலும் - எங்கள் சபையிலும் இக் கதையைப் பார்த்த அநேகர், எங்கள் சபை நடித்ததே அதிக விமரிசையாக இருந்ததெனக் கூறியதை நான் கேட்டிருக்கிறேன்.
நான் தற்கால மும் நடிக்க விரும்பும் நாடகங்களில் இது ஒன்றாகும்.
இவ் வருஷத்தில் எங்கள் சபையின் அங்கத்தினருள் சில முக்கியமானவர்கள் மரித்தனர் என்று நான் துக்கத்துடன் எழுத வேண்டியவனாயிருக்கிறேன். முதலில் பல ஆண்டுகளாக எங்கள் சபைக்குப் பிரசிடெண்டாயிருந்து, அதற்காகப் பலவிதத்திலும் முயற்சி எடுத்துக் கொண்ட டி.வி. சேஷகிரி ஐயர் அவர்கள் காலகதியடைந்தனர். இவர் மரணமடைவதற்குச் சில தினங்களுக்கு முன் நான் இவரைப் போய்ப் பார்த்தபொழுது, “உன்னுடைய புத்தாவதாரம் எப்பொழுது வரப்போகின்றது?” என்று மிகவும் ஆவலுடன் கேட்டது எனக்கு நினைவிற்கு வருகிறது. என் துர் அதிர்ஷ்டத்தால் அதைப் பாராமலே அவர் பரலோகம் சென்றார். இவர் ஞாபகச்சின்னமாக ஏதாவது சபையில் ஏற்படுத்த வேண்டுமென்று சபையார் தீர்மானித்து, பணம் சேகரித்து, அவருடைய உருவப் படம் ஒன்றைச் சபையின் இருப்பிடத்தில் வைத்திருக்கின்றனர்.
அன்றியும் பல வருடங்களாக எங்கள் சபையில் கிரீன் ரூம் டைரெக்டராக உழைத்து வந்த என் பழைய நண்பராகிய வெங்கடாசல ஐயரும் இவ் வருஷம் சிவலோகப் பிராப்தியடைந்தார். இவர் பொருட்டும் ஒரு பொதுக் கூட்டம் கூடி, சபையின் துக்கத்தைத் தெரிவித்து, இவரது ஞாபகச் சின்னமாக இவரது உருவப் பட மொன்றைச் சபையில் வைக்க வேண்டுமென்று தீர்மானித்தோம். இப்பிரயத்தனமானது சீக்கிரம் முடிந்து, இவரது படம் ஒன்று எங்கள் சபையின் ஹாலை அலங்கரிக்கிறது.
மேலும், இவ் வருஷம் எங்கள் சபையில் சற்றேறக் குறைய ஆரம்ப முதல் அங்கத்தினராயிருந்த வி. எதிராஜுலு செட்டியார் வைகுண்டப் பிராப்தி அடைந்தார். இவர் எங்கள் சபையின் தெலுங்குப் பிரிவிற்காகப் பல ஆண்டுகள் கண்டக்டராயிருந்து அதை முன்னுக்குக் கொண்டு வந்தவர்; அதன் அபிவிருத்திக்காக அதிகப் பணமும் செல விட்டவர்; எங்கள் சபையில் கடைசியில் பல வருடங்கள் பொக்கிஷதாரராகவிருந்து, மிகவும் ஒழுங்காகக் கணக்குப் பார்த்தவர். இவரும் இவ்வருடம் இறந்தது எங்கள் சபையின் துர்அதிர்ஷ்ட வசமாம். கடைசியாக இவ் வருஷம் மரித்த எங்கள் சபையின் அங்கத்தினருள், என் மனைவியாகிய தனம்மாளையும் நான் குறிக்கவேண்டும். எங்கள் சபையில் ஸ்திரீகளை அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளத் தீர்மானித்த நாள் முதல், என் மனைவி அவர்களுள் ஒருத்தியாய்ச் சேர்ந்து, தன் ஆயுள் பரியந்தம் ஏறக்குறைய ஒரு நாடகமாவது தவறாமல் பார்த்து வந்தனள். சபையின் மற்றொரு லேடி மெம்பராகிய பண்டிதை விசாலாட்சி அம்மாள், என் மனைவியைப்பற்றி ஒரு முறை கூறியது எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது. அதாவது, “மற்ற லேடி மெம்பர்களெல்லாம், என் கணவன் அப்படி நடிக்கின்றார், என் தமயன் அப்படி நடிக்கிறார், என் தகப்பனார் அப்படி நடிக்கிறார் என்று சும்மா பேசிக்கொண்டிருக்கிறார்கள்; நீ ஒருத்திதான், உன் புருஷன் நடிப்பதைப் பற்றிப் புகழ்ந்து பேசாது மௌனமாயிருக்கின்றவள்!” என்று புகழ்ந்ததேயாம். முப்பத்தாறு வருடங்கள் என் இல்லறத் துணைவியாயிருந்த எனது பத்தினியை இவ்வருஷம் இழக்கும்படியாக ஈசன் எனக்கு விதித்தார். தனது பெண்ணுக்கும் பிள்ளைக்கும் கலியாணம் செய்து பார்த்துவிட்டு, பேத்தி ஒன்றையும் கண்டு கண் குளிர்ந்த பிறகு அதிகச் சிரமமில்லாமல், சுமங்கிலியாக, இறைவன் தன் பதம் சேர்த்துக் கொண்டது அவள் பாக்கியமென என் மனத்தை ஒருவாறு தேற்றிக் கொள்கிறேன்.
இவ் வருஷம் எங்கள் சபையின் பிரதம அங்கத்தினராயிருக்கும் த. ஜெயராம நாயகருடைய உருவப் படமும், அ. கிருஷ்ணசாமி ஐயருடைய உருவப் படமும் அவர்கள் எங்கள் சபைக்கு உழைத்ததற்கு ஒரு சிறு கைம்மாறாகத் திறந்து வைக்கப்பட்டன.
இவ் வருஷ நிகழ்ச்சிகளுள் முக்கியமானது, பல வருடங்களாகப் பிரயத்தனப்பட்டும் இதுவரையில் பூர்த்தியாகாமற் போன ‘பிரதாப ருத்ரீயம்’ என்னும் தெலுங்கு நாடகத்தை ஆடியதே. இது காலஞ் சென்ற வேதம் வெங்கட்ராயலு சாஸ்திரி அவர்கள் எழுதிய நாடகங்களுள் மிகச் சிறந்த தென்பது என் அபிப்பிராயம். இது ஆடுவதற்கும் ஒரு கஷ்டமான நாடகம். இதில் முக்கியமாக யௌகந்தரராகிய மந்திரி வேடமும், வண்ணான் வேடமும் மிகவும் கஷ்டமானவை. அவ்விரண்டு வேடங்களில், முறையே எனது நண்பர் ச. ராகவாச்சாரியாரும், பி.வி. ராமாநுஜம் செட்டியாரும் மிகவும் விமரிசையாய் நடித்தார்கள் என்பது என் தீர்மானம். எங்கள் சபைக்குக் கீர்த்தி கொண்டு வந்த தெலுங்கு நாடகங்களில் இது ஒரு முக்கியமானதாம். இதைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமென்று இது முதல் பன்முறை பிரயத்தனப்பட்டிருக்கிறேன். அதன் பொருட்டுக் காலஞ்சென்ற வே. வெங்கட்ராயலு சாஸ்திரி யாருடைய உத்தரவையும் பெற்றிருக்கிறேன். ஆயினும் இதுவரையில், இதைப் பூர்த்தி செய்யாதிருக்கிறேன். இறைவன் அருள் இருக்குமாயின், என் பெற்றோர் பாத கமலம் போய்ச் சேருமுன் இதைப் பூர்த்தி செய்யும்படி ஈசன் திருவுள்ளமிருக்குமாறு பிரார்த்திக்கிறேன்.
சாதாரணமாகத் தெலுங்கு நாடகங்களில் நான் ஆடுவதில்லை. எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுக்காக, ‘பிரமேளா’ என்னும் நாடகத்திலும் ‘ராமதாஸ்’ நாடகத்திலும் நானவருடன் ஆடியதைப் பற்றி என் நண்பர்களுக்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். இவ்வருடம் இப் பிரதாப ருத்ரீயம் என்னும் தெலுங்கு நாடகத்தில், தெலுங்கு கண்டக்டரின் இச்சைப்படி, நான் இந்த நாடகத்தில் இரண்டு வேடம் தரித்தேன். ஒன்று; மகம்மதிய சிப்பாயாகவும் மற்றொன்று மகம்மதிய மந்திரியாகவும் சிப்பாயாக நடித்ததில் ஒன்று மாத்திரம் எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. எனது பால்ய நண்பரில் ஒருவரான ராமதுரையும் நானும் பிரதாபருத்ர மஹாராஜாவை கைதியாகக் கொண்டு போகும் படகில் மகம்மதிய சிப்பாய்களாக, மேல் தட்டில் உட்கார்ந்து பீடி பிடித்ததுதான்! இந் நாடகம் நடிக்கும் பொழுதெல்லாம் வருஷா வருஷம் காஞ்சீபுரம் கருட சேர்வைக்குச் சிலர் பிரார்த்தனையாகப் போய் வருவது போல், நாங்களிருவரும் பீடி பிடித்து வருகிறோம்! இம்மாதிரியான சிறு வேஷங்கள் தரிப்பதில் எனக்குத் தற்காலம் மிகவும் சந்தோஷம்; பாடம் படிக்க வேண்டிய கஷ்டமில்லை; முகத்தில் வர்ணம் பூசிக் கொள்ள வேண்டிய கஷ்டமில்லை; வார்த்தைகளை மறப்பதற்கில்லை; சரியாக நடிக்கிறோமோ இல்லையோ என்னும் பீதியில்லை, கடைசியில் வேஷத்தைக் கலைப்பதிலும் கஷ்டமில்லை! இவ் வருஷத்திய புது நிகழ்ச்சிகளுள் எஸ்பிளநேட் தியேட்டரில், எங்கள் சபை ஒரு நாடகம் நடத்தியதாகும். ராயல் தியேட்டரைப் போல் அவ்வளவு சௌகர்யமாயில்லாவிட்டாலும் விக்டோரியா பப்ளிக் ஹாலைவிட, இது மிகவும் சௌகர்யமாகத்தானிருந்தது. அன்றியும் அரியக் குடி ராமாநுஜ ஐயங்கார் அவர்களாலும் முசிரி சுப்பிரமணிய ஐயர் அவர்களாலும் இரண்டு சங்கீதக் கச்சேரிகளை எங்கள் சபையில் ஏற்பாடு செய்து பார்த்தோம். இவ்விரண்டிலும் எங்கள் அங்கத்தினர் அவ்வளவாக சிரத்தை எடுத்துக் கொள்ளாதபடியால், இப்படிப்பட்ட கச்சேரிகளை வைப்பதை இதன் பிறகு விட்டோம்.
28ஆவது அத்தியாயம்
இனி 1927ஆம் வருஷத்திய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறேன்.
அவற்றுள் முக்கியமாகக் குறிக்க வேண்டியது எங்கள் சபையார் சென்னையைவிட்டு, மறுபடியும் வெளியூர்களுக்குப் போய் நாடகங்கள் நடத்தியதேயாம். 1922ஆம் வருஷம் கடைசியாக திருநெல்வேலி, திருவனந்தபுரம் போயிருந்ததைப்பற்றி நான் முன்பே எழுதியிருக்கிறேன். மறு வருடம் ரங்கூனுக்குப் போகலாமா என்கிற பேச்சு வந்து, அது தடைப்பட்டது. அவ்வருஷம் எனதுயிர் நண்பர் என்னையும், எங்கள் சபையையும் இவ்வுலகையும் விட்டுச் சென்றதும், இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அதன் பிறகு மூன்று நான்கு வருடங்களாக, வெளியூர்ப் பிரயாணம் என்கிற பேச்சே ஆரம்பிக்கப்படவில்லை. இவ் வருஷம் எனது நண்பர் எஸ். சத்தியமூர்த்தி ஐயர், தமிழ்க் கண்டக்டராகப் பொதுக் கூட்டத்தில் நியமிக்கப்பட்ட பிறகு, அவர் இவ் வருஷம் நமது சபை எங்காவது வெளியூருக்குப் போக வேண்டும் என்று பிரேரேபித்து தன் ஜனன பூமியாகிய புதுக்கோட்டைக்கும், மதுரைக்கும் போனால் நலமா சொன்னார். எனக்கு மாத்திரம் இந்தப் பிரயாணத்தினால் சபைக்கு லாபம் கிடைப்பது கஷ்டம் என்று மனத்தில் தோன்றியது. ஆயினும் முன்பு போல டி.சி. வடிவேலு நாயகர் கன்டிராக்டராக சபைக்கு 1,000 ரூபாய் கொடுக்க இசைந்திருக்கின்றார் என்று சத்தியமூர்த்தி ஐயர் கூறவே, நாம் இதைத் தடுப்பானேன், சபைக்கு ரூபாய் 1,000 வருவதற்குத் தடங்கலாக இருப்பானேன் என்று சும்மா இருந்துவிட்டேன். அதன் பேரில் சபையார், புதுக்கோட்டையில் நான்கு நாடகங்களும், மதுரையில் ஐந்து நாடகங்களும் ஆட வேண்டுமென்று தீர்மானித்தார்கள். அப்பொழுது புதுக்கோட்டைக்கு நேராக ரெயில் இல்லாதபடியால், தஞ்சாவூர் வழியாக, பஸ் ஏறிச் சென்றோம்.
புதுக்கோட்டையில் ஆடிய நான்கு நாடகங்களில் முதன் மூன்றாகிய, மனோஹரன், காலவ ரிஷி, லீலாவதிசுலோசனா நாடகங்களில் நானும், எனது புதிய நண்பர் கே. நாகரத்தினம் ஐயரும் ஆடினோம். அவர் கவர்ன்மெண்ட் உத்தியோகத்தில் அமர்ந்திருந்தபடியால் மூன்றாவது நாடகமானதும் சென்னைக்குத் திரும்பி வரவேண்டிய திருந்தது. கடைசி நாடகமாக ஹரிச்சந்திர நாடகத்தை வைத்துக்கொண்டோம். இதில் எனது நண்பர் டாக்டர் ஸ்ரீனிவாச ராகவாச்சாரியும், வடிவேலு நாயகரும் முக்கியப் பாகங்கள் எடுத்துக் கொண்டனர். பல காரணங்களால் இந்த நாடகங்களுக்கு எங்கள் கண்டக்டராகிய சத்தியமூர்த்தி ஐயர் எண்ணியபடி அவ்வளவு பணம் வசூலாகவில்லை. மதுரைக்குப் போனால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று ஆக்டர்களைத் தேற்றினார். இவ்விடம், கே. நாகராஜ ஐயர், வி. சா. கெ. ச. சோமசுந்தரம் செட்டியார், திவான்பஹதூர் முத்தையா செட்டியார் அவர்கள், எங்கள் சபையோருக்கு விருந்தளித்தனர்; அன்றியும் எங்கள் சபைக்கு ஒரு வந்தனோபசாரப் பத்திரமும் கொடுக்கப்பட்டது. இவ்விடம் மேற்சொன்ன நான்கு நாடகங்களையும் முடித்துக் கொண்டு, பஸ் மூலமாகத் திருச்சிராப்பள்ளிக்குப் போய் அங்கிருந்து ரெயிலேரி மதுரையை அடைந்தோம். அன்று காலை புதுக்கோட்டையை விட்டுப் புறப்படும் பொழுது எனக்கு உடம்பு சொஸ்தமில்லாதிருந்தது. அதற்கு முக்கியக் காரணம், அதற்கு முந்திய தினம் நான் மழையில் நனைந்ததே என்று நினைக்கிறேன். புதுக்கோட்டைக்கு வரும்பொழுதே எனது இடது காலில் ஒருவிதமான சிரங்கு இருந்தது; மழை நீரில் அப் புண்ணுடன் நடந்து வரவே, மறுநாட் காலை எனக்கும் கொஞ்சம் ஜ்வரம் போலிருந் தது. அதைக் கவனியாது, மற்றவர்களுடன் பஸ் ஏறிப் புறப்பட்டேன். சாயங்காலம் மதுரையில் ரெயிலிலிருந்து இறங்கும்பொழுது எனக்கு ஜ்வரம் ஆரம்பித்து விட்டது. என்னடா இது, யாழ்ப்பாணத்துக் கதை மறுபடியும் ஆகாதிருக்க வேண்டுமே யென்று, மீனாட்சி அம்மனைப் பிரார்த்தித்துக்கொண்டு இறங்கினேன். ரெயில் ஸ்டேஷனில், எங்களை வரவேற்பதற்காக எனது பழைய நண்பராகிய பி. ராமமூர்த்தி பந்துலு, மாணிக்கவாசகம் பிள்ளை முதலியோர் வந்திருந்தனர். எனக்கு உடம்பு அசௌக்கியமாயிருப்பதைத் தெரிவிக்கவே, எனது நண்பர்கள் என்னை உடனே, எங்களுக்கு ஏற்படுத்திய ஜாகையாகிய மதுரை கலாசாலை ஹாஸ்டலுக்குக் கொண்டுபோய் விட்டனர். அன்று சயங்காலம், பிறகு எனக்கு நண்பர்களான, மதுரை டிராமாடிக் கிளப் அங்கத்தினர் பலரை அதன் கண்டக்டராயிருந்த ராமமூர்த்தி பந்துலு அவர்கள் இன்னாரின்னாரென எனக்குத் தெரிவித்தார். அச்சமயம் பார்த்ததாக அவர்களுள் டாக்டர் சீதாராமன் என்பவர் ஒருவரை மாத்திரம் ஞாபகமிருக்கிறது. மற்றவர்களெல்லாம் எனக்கு ஞாபகமில்லாதது அப்பொழுது எனக் கிருந்த தேகஸ்திதி பற்றியிருக்கலாம். பிறகு உங்களுடன் சாவகாசமாய்ப் பேசுகிறேன் என்று அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பிவிட்டு, ஏதோ கொஞ்சம் கஞ்சி சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டேன். அன்று வெள்ளிக்கிழமை; ஏதாவது புதிய ஊருக்குப் போனால் வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்யாதிருப்பதில்லை நான்; ஆயினும் அன்று எனக்கு இருந்த தேக ஸ்திதியில் துவாதசாந்தஸ்தலம் என்று சொல்லப்படும் முக்கிய க்ஷேத்திரமாகிய மதுரைக்கு வந்தும் என் துர் அதிர்ஷ்டத்தால் அன்று நான் மீனாட்சி சுந்தரேஸ்வரர்களைத் தெரிசனம் செய்யக் கொடுத்து வைக்காமற் போயிற்று. நான் போவதற் கில்லாவிட்டாலும் எனது நண்பர் வடிவேலு நாயகரை அழைத்து, மற்ற எல்லா ஆக்டர்களையும் அழைத்துக்கொண்டு கோயிலுக்குப் போய் வரும்படி சொல்லி அனுப்பினேன். அவர்கள் போய்வந்து எனக்குக் குங்குமப் பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தனர். அதை அணிந்து, மானச பூஜையாக, எனது ஒன்பதாம் வயது முதல் செய்து வரும் வெள்ளிக்கிழமை பூஜையைச் செய்து முடித்து உறங்கினேன்.
மறுநாள் அதிகாலையில் விழித்ததும், எனக்கு ஜ்வரம் அதிகமாயிருப்பதைக் கண்டேன். உடனே வடிவேலு நாயக்கரை அழைத்து என் தேக ஸ்திதியைக் கூறி, “இன்று மனோஹரன் நாடகத்தை மாற்றி வேறு ஏதாவது நான் ஆடாத வேறொன்றை வைத்துக் கொள்ள முடியுமா?” என்று கேட்டேன். அவர் முகம் வாடி, “என்ன வாத்தியார், நோட்டீசுகளைக்கூட அனுப்பி விட்டேனே, ஆரம்பத் திலேயே தடங்கலானால் நான் என்ன செய்வது?” என்று துக்கப்பட்டார். அவர் புதுக்கோட்டையிலேயே நஷ்டப்பட்டதை அறிந்த நான், இங்கும் அவருக்கு நஷ்டம் வராத படி எப்படியாவது செய்யவேண்டுமென்று தீர்மானித்து, “என்னால் ஒன்றும் தடையில்லை. ஒரு வைத்தியர் யாரையாவது அழைத்துக் கொண்டு வா; அவர் இன்றிரவு என்னை மேடையின் பேரில் நடிக்கும்படியான சக்தி எனக்குக் கொடுப்பாராயின் நான் நடிக்க ஆட்சேபணையில்லை” என்று கூறினேன். அவர் உடனே “ஓடோடியும் போய்” ஒரு வைத்தியரை அழைத்து வந்தார். அவர் முழுப் பெயர் எனக்கு ஞாபகமில்லை. அவரை ‘மணி’ என்று மற்றவர்கள் அழைத்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. அந்த ‘மணி’ வைத்தியர் என்னைப் பரிசோதித்துப் பார்த்து, “இது ஒன்றும் கெட்ட ஜ்வரமல்ல; இதற்கு ஒரு பஸ்பம் அனுப்புகிறேன்; அதை உட்கொள்ளுங்கள், நீங்கள் இன்றிரவு நாடகமாடலாம்” என்று சொன்னார். அப் பொழுதுதான் என் மனம் கொஞ்சம் திருப்தி அடைந்தது; வடிவேலு நாயக்கர் முகமும் கொஞ்சம் மலர்ந்தது. அவர் கொடுத்த பஸ்பம், ஆங்கில வைத்திய மருந்தல்ல, ஹிந்துக்களுடைய ஆயுர்வேதத்திலடங்கிய ஏதோ ஒரு பஸ்பம். அது உடனே வெகு சீக்கிரத்தில் என் ஜ்வரத்தை இறக்கியது மன்றி, எனக்குக் கொஞ்சம் ஊக்கத்தையும் தந்தது. இதை இங்குச் சற்று விவரமாய் நான் எழுதுவதற்கு முக்கியக் காரணமுண்டு. இங்கிலீஷ் வைத்தியர்கள் யாராவது என்னை வந்து பார்த்திருப்பார்களாயின், கட்டாயமாகக் கொயினா மருந்து கொடுத்திருப்பார்களென்பது நிச்சயம். அந்தக் கொயினா ஜ்வரத்தைக் கண்டித்த போதிலும், எனக்கு மிகுந்த பலஹீனத்தை யுண்டுபண்ணியிருக்கும்; நான் அன்றிரவு நாடக மேடையில் நடித்திருக்க முடியா தென்று உறுதியாய் நம்புகிறேன். அவ்வாறு பலஹீனத்தை உண்டுபண்ணாது, ஜ்வரத்தைத் தணித்தது மன்றி எனக்கு ஊக்கத்தையும் கொடுத்தது போன்ற அநேகம் மருந்துகள், நம்து பூர்வீக வைத்திய சாஸ்திரங்களில் இருக்கின்றன. ஆயினும் அவற்றைச் சரியாகப் படிப்பாரும், சரியாக ஆதரிப்பாரும், அப்படிப்பட்ட மருந்துகளைச் சரியான முறைப்படி செய்வாருமின்றி, நமது ஆயுர்வேதம் க்ஷணதசையை அடைந்திருக்கின்றது என்பது என் தீர்மானமான எண்ணம். இதை எனது இந்திய நண்பர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது என் கடமை என எண்ணி எழுதலானேன். அந்த ஒளஷதத்தைக் கொடுத்து, என்னை அன்று நாடக மேடையின் பேரில் ஏறச் செய்த “மணி” வைத்தியருக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். அவர் என்னிடம் இந்த சிகிச்சைக்காகப் பணம் வாங்க மாட்டேன் என்று மறுத்தபடியால், அவருக்கு நான் பதிப்பித்துள்ள அவர் விரும்பிய சில நாடகங்களை காணிக்கையாக என் வந்தனத்துடன் பிறகு அனுப்பினேன். இங்கு நான் எழுதியதை ஒருக்கால் அவர் பார்க்கும்படி நேரிடின், அவர் அன்று எனக்குச் செய்த பேருபகாரத்தை இன்றளவும் நான் மறக்கவில்லை என்று சிறிது மகிழ்வாராக!
அன்றிரவு வைத்தியர் கட்டளைப்படி வெறும் மிளகு ரசம் சாதம் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, வேடம் பூண்டு மேடை ஏறினேன். “மனோஹரன்” நாடகமாடுவது கடினம் என்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் நன்றாயறிவார்கள் என்று நினைக்கிறேன். எனது இடது கால் சற்று வீங்கி, என் மேஜோடைப் போடுவதற்குக் கஷ்டமாயிருந்தது; ஜ்வரம் விட்டபோதிலும் பலஹீனம் அதிகமாயிருந்தது. மனத்தில் உற்சாகமிகுந்த போதிலும், தேகத்தில் வலுவில்லை. அப்படியிருந்தும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால், ஒருவிதமாக அந் நாடகத்தை ஆடி முடித்தேன்.
ஆயினும் நான் அன்றைத் தினம் நடித்தது எனக்குத் திருப்திகரமாயில்லை என்று நான் இங்கு எழுதாமலே எனது நண்பர்கள் அறிந்து கொள்ளக்கூடும். நாடகம் முடிந்ததும் வேஷத்துடனே எங்கள் ஜாகைக்குப் போய் வெந்நீர் கொண்டு வரச் சொல்லி, என் முகத்தை யெல்லாம் கழுவிக்கொண்டு இவ்வளவாவது பரமேஸ்வரன் கருணை கூர்ந்தாரே என்று அவரைத் துதித்துவிட்டு உறங்கினேன். இவ்விடம் இரண்டாவது நாடகம் செவ்வாய்க்கிழமை போட்டிருந்தபடியால், இடையில் எனக்கு இரண்டு நாள் சாவகாசமிருந்தது; இதற்குள் என் உடம்பும் சுவஸ்தமாய் விட்டது ஸ்வாமியின் கிருபையால். அந்த இரண்டாவது நாடகம் “காலவ ரிஷி”யானபடியால், எனக்கு ஒரு கஷ்டமுமில்லை; நான் முன்பே என் நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறபடி, நாடகத்தின் முடிவில் சுமார் 10 நிமிஷத்திற்குத்தான் எனக்கு வேலையிருக்கிறது. அந் நாடகத்தில் ஆட நாடகக் கொட்டகைக்குப் போகுமுன், கோயிலுக்குப் போய் மீனாட்சி சுந்தரேஸ்வரர்களைத் தரிசித்துவிட்டுப் பிறகு போனேன்.
இங்கு நான் ஆடிய மூன்றாவது நாடகம், “லீலாவதிசுலோசனா” இதற்காக நான் வீட்டை விட்டுப் புறப்படும் பொழுது, எனது மதுரை நண்பர்களில் ஒருவர், “மிஸ்டர் சம்பந்தம், முதல் நாடகத்தில்தான் உங்களுக்கு உடம்பு சௌக்கியமாகவில்லை; இரண்டாவது நாடகத்தில் உங்களுக்கு அதிகப் பாகமில்லை; இதிலாவது உங்களுடைய பழைய ஆக்டிங்கை நாங்கள் பார்க்கும்படி செய்ய வேண்டுமென்று கேட்டது எனக்கு ஞாபகமிருக்கிறது. இந் நாடகத்தில் நான் என் பழைய வழக்கப்படி நடித்து, எனது மித்திரர்களைச் சந்தோஷப்படுத்தினேன்” என்று நினைக்கிறேன்.
மேற்சொன்ன முதல் மூன்று நாடகங்களும் முடிந்தவுடன் எனது நண்பர் கே. நாகரத்தினம் சென்னைக்குத் திரும்பிவிட்டார். ஸ்திரீ வேடம் பூண்டு நடித்தவர்களுள், இவர் இங்கு நற்பெயரெடுத்தாரென்பது என் அபிப்பிராயம். எனது மதுரை நண்பர்களில் பலரும் அங்ஙனமே கூறினர். நான்காவது ஐந்தாவது நாடகங்கள் நந்தனார் சரித்திரமும் ஹரிச்சந்திர விலாசமுமாம். இதில் எனக்குப் பாகமில்லா விட்டாலும் எங்கள் கண்டக்டராகிய சத்தியமூர்த்தி ஐயர் கேட்டபடி, நந்தன் சரித்திரத்தில் ஒரு பறையனாகவும் ஹரிச்சந்திர விலாசத்தில் பூதமாகவும் வந்தேன். இந்தச் சிறு விஷயத்தை இங்கு எனது நண்பர்களுக்குத் தெரிவித்ததற்கு ஒரு காரணமுண்டு. அநேக ஆக்டர்கள் ஒரு முறை ஏதாவது முக்கியப் பாகத்தை நடித்த பிறகு சிறு பாத்திரங்கள் எடுத்துக் கொள்வதில்லை யென்று தீர்மானித்து விடுகின்றனர். அவ்வாறு சிறு பாகங்களை எடுத்துக்கொள்வது தங்கள் கௌரவத்திற்குக் குறைவு என்று நினைக்கின்றனர். அன்றியும் அரசன் வேஷம், ஸ்ரீராமர் வேஷம், சுப்பிரமணியர் வேஷம் முதலிய பெரிய வேஷங்களைத் தரித்தபின், பறையனாகவும் தோட்டியாகவும் வருவதா என்று சங்கோசப்படுகின்றனர். இவ்வாறு எண்ணுவது முற்றிலும் தவறு. ஒரு நாடக சபையைச் சேர்ந்தால், எந்த வேஷத்தை எடுத்துக்கொள்ள வேண்டி வந்தபோதிலும், சந்தோஷமாய் எடுத்துக் கொள்வதே முறைமை என்று எனது இளைய நண்பர்களுக்கு அறிவிக்க வேண்டுமென்பது என் கடன் என்றெண்ணி, பல வருடங்களாக எங்கள் சபையில் கதா நாயகனாக நடித்து வந்த நான், சிறு அற்ப பாகங்களைக் கொடுத்த போதிலும், வேண்டாம் என்று மறுக்காது ஆடி வருகிறேன். இக் காரணம் பற்றியே நந்தனார் சரித்திரத்தில் ஒரு பறையனாகவும், ஹரிச்சந்திர விலாசத்தில் பூதமாகவும் வந்தேன். பறையனாக வேடம் தரிப்பது ஒரு விதத்தில் சுலபமென்றெண்ணலாம். பூதமாய் வருவதற்காக முகத்தில் கருப்பு, வெண்மை , சிகப்பு முதலிய வர்ணங்களை அலங்கோலமாய்ப் பூசிக்கொண்டு, கோரைப் பற்கள் இரண்டு வைத்துக்கொண்டு, விகாரமான உடை தரித்து வரவேண்டும். அதையும் மனங் கூசாது உற்சாகத்துடன் பூண்டேன். இந்தப் பூதமாக வந்தபொழுது நான் மேடையின் பேரில் பேச வேண்டிய வார்த்தை ஒன்றுதான் - பூ என்று உரக்கக் கூவ வேண்டியதே! அதையும் செய்தேன். நாடகங்களில் சிறு பாகங்களை எடுத்துக் கொள்வதைப்பற்றிச் சில வருடங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஒரு சங்கதி ஞாபகத்திற்கு வருகிறது. அப்பொழுது காலவ ரிஷி ஆடப்பட்டது. அச்சமயம் வேறு ஆக்டர்களில்லாதபடியாலோ, அல்லது எங்கள் கண்டக்டர் என்னை எடுத்துக் கொள்ளும்படி கேட்டபடியாலோ, ஏதோ காரணத்தினால் திடீரென்று, இந் நாடகத்தில் சுபத்திரையின் அரண்மனை வேலைக்காரர்களில் ஒரு வனாக வரும்படி நேரிட்டது; அதில் நான் பேசவேண்டிய வரிகள் இரண்டே! அதற்காகத் தக்கபடி நான் வேஷம் பூண்டு, அந்த இரண்டடிகளையும் மேடையின்மீது நடித்த பொழுது சபையோர்கள் எனக்கு மனமுவந்து அளித்த கரகோஷம் இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது. அன்றியும் சென்ற வருஷம் எங்கள் சபையில் ‘லீலாவதிசுலோசனா’ நாடகமாடியபொழுது, முக்கியமான பாகங்களெல்லாம் எனது இளைய நண்பர்களுக்குக் கொடுக்கப்பட்டது (இது தவறு என்று கூறவில்லை ; இது மிகவும் நியாயமாம்). எங்கள் சபை தமிழ் கண்டக்டர் எனக்கு இரண்டு மூன்று வரிகள் பேசும்படியான வேஷமாகிய தந்தவக்கிரன் வேஷம் கொடுத்தார்! மிகவும் சந்தோஷத் துடன் ஏற்றுக்கொண்டு, நான் எழுதிய நாடகமாகிய இந்நாடகத்தில், சற்றேறக்குறைய 50 முறை நான் கதாநாயகனாக நடித்த இந் நாடகத்தில், மிகவும் சிறு பாகமாகிய இப் பாத்திரத்தைப் பூண்டேன். அந்தப் பாத்திரத்தின் பெயருக்கேற்றபடி, வக்கிரதந்தங்களை வைத்துக்கொண்டு, நான் நாடக மேடையில் வந்தபொழுது, எனது பால்ய நண்பராகிய வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் உட்பட, சபையோரெல்லாம் சந்தோஷித்துக் கரகோஷம் செய்தது மறக்கற்பாலதன்று. இனியாவது நாடக சபைகளின் அங்கத்தினர் பெரிய பாகம் சிறிய பாகம் என்று கவனிக்காது, எதைக் கொடுத்தபோதிலும் ஒப்புக்கொண்டு அதற்குத் தக்கபடி வேடம் பூண்டு நடிப்பார்களாக! இச் சந்தர்ப்பத்தில் ஒரு சிறந்த ஆங்கிலக் கவி எழுதிய இரண்டு வரிகள் என் ஞாபகத்திற்கு வருகின்றன. “ஏதேயாயினும் உன் பாகத்தினை ஏற்றபடி நடிப்பாயாக; பீடும் பெருமையும் அதனால் பெருகும்” என்பது அவ்வடிகளின் தாத்பர்யமாகும். மேலும் நாடகமாடுவதையே ஜீவனமாக உடையவர்கள், இதைப் பற்றிச் சண்டையிடச் சிறிது காரணமுண்டு; ஏனெனில், பெரிய பாகங்களை நடித்தால் தான் அவர்களுக்கு வரும்படி அதிகமாய் வரும். வருவாய் ஒன்றுமின்றி, நம்முடைய மன சந்துஷ்டிக்காகவும் நமது சபைக்காகவும், மேடையின்பேரில் நடிக்கும் ஆமெடூர்களா கிய நமக்கு எந்தப் பாகம் கொடுத்தாலென்ன? அதை நன்றாக நடிப்பதில்தான் நமக்குச் சந்தோஷமும் பெருமையும் என்பதை இதை வாசிக்கும் எனது சிறிய நண்பர்கள் கவனிப்பார்களாக.
எங்கள் சபை மதுரையிலிருந்தபோது எனது நண்பர்கள் வைகுண்டம் அய்யர் அவர்கள், ராமமூர்த்தி பந்துலு அவர்கள், டாக்டர் கோபால்சாமி ஐயங்கார் அவர்கள் முதலியோர் எங்களுக்கு விருந்தளித்தனர். பிறகு நான் அங்கத்தினனாகச் சேர்ந்த மதுரை டிராமாடிக் கிளப்பாரும் ஒரு நாள் சாயங்காலம் எங்களுக்கு டீ பார்ட்டி கொடுத்தனர்.
இங்கிருந்தபொழுது ஒரு நாள் சாயங்காலம் மேற்படி கிளப்பார் வேண்டுகோளின்படி, விக்டோரியா எட்வர்ட் ஹாலில் நாடக மேடையைப்பற்றி ஒரு உபன்யாசம் செய்தேன். அச்சமயம் நான் பேசியதில் ஒன்று மாத்திரம் மிகவும் நன்றாய் ஞாபகமிருக்கிறது. அச் சமயம் மதுரையில் இரண்டு நாடக சபைகளிருப்பதாகவும் அவைகளுக்குள் அவ்வளவாக ஒற்றுமை இல்லை யென்பதையும் அறிந்த வனாய், அந்த இரண்டு சபையாரும் ஒருங்கு சேர்ந்து ஒரே சபையாய் ஏகோபித்து உழைப்பார்களானால், மிகவும் நலமாயிருக்குமென்று கேட்டுக் கொண்டேன். இதன் பலன் என்னவென்றால், இரண்டு மூன்று வருடங்கள் பொறுத்து நான் மதுரைக்கு மறுபடியும் போனபோது, இரண்டாயிருந்த சபைகள் மூன்றாக மாறின; “ஒட்டக் கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என்றதுபோல் நமது வேண்டுகோளுக்கிணங்கி இரண்டாயிருந்தது மூன்றா யினாற் போலிருக்கிறது என்று பிறகு சும்மாயிருந்து விட்டேன்.
இவ் வருஷம் எங்கள் சபை இரண்டு மூன்று புதிய நாடகங்களை நடித்தது. அவைகளைப் பற்றிச் சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். முதலாவது “போஜ சரித்திரம்” ஆடப்பட்டது. இதன் ஆசிரியர் காலஞ்சென்ற எனது நண்பராகிய டி.எஸ். நாராயண சாஸ்திரியார். அவர் இந் நாடகத்தைத் தான் ஸ்தாபித்த வித்வன் மனோரஞ்சித சபையாரைக் கொண்டு இதற்கு முன் ஆடி வைத்தார். மறுபடி அவர் எங்கள் சபையை வந்து சேர்ந்த பிறகு பன்முறை எங்கள் சபை இதை ஆட வேண்டுமென்று பிரயத்தனப்பட்டார். ஏதோ காரணத்தினால் பலிக்காமற் போயிற்று. அவர் காலமான பிறகு பல கண்டக்டர்கள்; இதை ஆட முடியாது என்று கைவிட்ட இந்நாடகத்தை, இவ் வருஷத்திய தமிழ் கண்டக -ராகிய எஸ். சத்யமூர்த்தி ஐயர் எடுத்துக்கொண்டு, நடத்தி வைத்தார். என்னுடைய அபிப்பிராயத்தில் நாடகம் என்னவோ நல்ல நாடகம்தான்; ஆயினும் மிகவும் பெரிதானது. எங்கள் சபை நடித்தபோது இதில் பாதியை நீக்கி ஆடினார்கள். நாராயண சாஸ்திரி யாரின் குமாரர்களுள் ஒருவரான டி.வி. சுப்பிரமணிய ஐயர் என்பவர் கதாநாயகனாக நடித்தார். அவரது மற்றொரு குமாரன் காளிதாசன் வேடம் பூண்டு மிகவும் அழகாய்ப் பாடினார்.
இதன் பிறகு எனது நண்பர் சத்தியமூர்த்தி ஐயர், எனது பழைய நாடகங்களிலொன்றாகிய “இரண்டு நண்பர்கள்” என்பதை எடுத்துக் கொண்டார். இந் நாடகமானது இதற்கு முன்பாகச் சுமார் இருபது வருடங்களாக ஆடாமலிருக்கிறது. நாடகத்தைப் பற்றி எனது நண்பர்களுக்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு, இக் கதாநாயகியாகிய “மனோரமா” வேடம் பூண்ட போதெல்லாம் இது “காமெடி” - அதாவது சந்தோஷகரமாய் முடியும் நாடகமாக ஆடப்பட்டது. அதை நான் அச்சிட்ட பொழுது “டிராஜெடி” - அதாவது துக்ககரமாய் முடியும் நாடகமாக எழுதினேன். அதன்பேரில் ரங்கவடிவேலு அதில் தனக்கு ஆட இஷ்டமில்லையென்று அதை வெறுத்தார்; இதுதான் பிறகு சுமார் இருபது வருடங்கள் வரை இது ஆடப்படாமலிருந்ததற்குக் காரணம். “இது நல்ல நாடகமாயிருக்கிறதே. இவ்வருஷம் இதை நான் எடுத்துக் கொள்ளலாமென்றிருக்கிறேன். நீ என்ன சொல்கிறாய்?” என்று சத்தியமூர்த்தி ஐயர் என்னைக் கேட்டபோது, எனது புதிய நண்பராகிய கே. நாகரத்தினம் ஐயரை நான் கேட்க, அவர் இந் நாடகத்தை அச்சிட்டபடியே சோககரமான முடிவுடன் ஆடத் தனக்குச் சம்மதம் என்று கூற, அப்படியே ஆட நானும் இசைந்தேன். இவ்வருஷம் டிசம்பர் மாசம் இதை நாங்கள் மறுபடியும் ஆடினோம். நாகரத்தினம் ஐயர் மனோரமாவாக நடித்தது மிகவும் நன்றாயிருந்ததெனப் பலரும் மெச்சினர். இவர் தற்காலம் நடித்து வரும் முக்கிய நாடகப் பாத்திரங்களில் இந்த “மனோரமா” ஒன்றாகும். இதன் பிறகு சத்தியமூர்த்தி ஐயர், எனது பழைய நண்பராகிய அ. கிருஷ்ணசாமி ஐயர் எழுதிய “மீராபாய்” என்னும் நாடகத்தை எடுத்துக்கொண்டார். இந் நாடக மானது கவர்ன்மெண்ட் செக்ரடேரியேட் பார்ட்டியாரால் பன்முறை இதற்கு முன்பாக ஆடப்பட்டது. இதில் நான் “அக்பர்” சக்ரவர்த்தியாக நடித்தேன். நான் இவ் வேடம் பூண்டபோது இரண்டு முக்கிய விஷயங்களைக் கவனித்தேன்; முதலாவது, அக்பர் சக்ரவர்த்திக்கு ஒரு கன்னத்தில் ஒரு மருள் இருந்ததென அவரது ஜீவிய சரித்திரங்களால் அறிந்து, அவ் வேடம் பூணும்பொழுது அதைக் கவனித்து அப்படியே வேடம் பூண்டேன்; இரண்டாவது, அக்பர் சக்ரவர்த்தி பெரும்பாலும் சிம்மாசனத்தின் பேரில் உட்காராது, அங்கே சர்வேஸ்வரன் இருப்பதாக மதித்து, அதன் படியொன்றில் உட்கார்ந்த வழக்கமுண்டு என்பதை அறிந்து அதன்படி செய்தேன். இதற்கு முன்பாக அக்பர் வேடம் பூண்டவர்கள் இதைக் கவனிக்கவில்லை என்று பலர் கூறக் கேட்டுள்ளேன். இதை நான் எழுதியது நான் ஏதோ புதிதாய்க் கண்டுபிடித்து விட்டேன் என்று பெருமை பாராட்டவல்ல. இனி இவ் வேடம் பூணுபவர்கள் இவை இரண்டையும் கைப்பற்றி நடிப்பார்களாக என்று வேண்டும் பொருட்டே. கல்பிதமான நாடகங்களில் எப்படி வேடம் தரித்தாலும் ஒருவாறு பாதகமில்லை. சரித்திர சம்பந்தமாக நாடகங்கள் ஆடுவதென்றால், இவற்றை யெல்லாம் கவனித்தே ஆட வேண்டுமென்று எனது இளைய நண்பர்களுக்கு வற்புறுத்தும் பொருட்டே இதை எழுதலானேன்.
இவ்வருஷம் நாங்கள் புதிதாக நடத்திய இன்னொரு சிறு கதை, தசராக் கொண்டாட்டத்தில் முதல் நாளில் ஆடப்பட்டது. பூர்வ காலத்தில் (அதாவது கோவிந்தசாமி ராவ் மனமோஹன நாடக கம்பெனி நடத்திய காலத்தில்) சூத்திரதார் வருகிறது, விதூஷகன் வருகிறது, “வரமளித்துப் போகிறது", மோஹினிராஜன் மோஹினிராணி வருகிறது முதலியவற்றையெல்லாம் வைத்து மார்க்கண்டேய நாடகத்தில் சில காட்சிகளை, அக்காலத்திய நாடகக் கம்பெனியார் ஆடிய ஆபாசங்களுடன், வேடிக்கைக்காக. நடித்துக் காட்டினோம். இதில் நான் விதூஷகனாக நடித்தேன். அதற்காக முதல் காட்சியில் தலையில் வேப்பிலை கட்டிக்கொண்டு வந்தபொழுது, சபையோரெல்லாம் கொல்லென நகைத்ததை நினைத்துக் கொண்டால், இப்பொழுதும் எனக்குச் சிரிப்பு வருகிறது. இங்கு நானும், சூத்திரதாரராக வந்த எனது நண்பர் ராகவாச்சாரி யாரும் பேசியதை ஒரு சிறு காட்சியாக எழுதி, “விடுதிப் புஷ்பங்கள்” என்று பெயரிட்டு நான் அச்சிடக் கோரியிருக்கும் புஸ்தகத்தில் பதியலாம் என்று எண்ணியிருக்கிறேன்.
இவ் வருஷம் எங்கள் சபையார் நடத்திய தெலுங்கு நாடகங்களில், நான் எழுதிய “காலவ ரிஷி”யின் தெலுங்கு மொழி பெயர்ப்பு ஒன்றாகும். என் அனுமதி பெற்று எனது நண்பர் டி. வெங்கடரமண ஐயர் அவர்கள் இதைத் தெலுங்கில் மொழி பெயர்த்தார். அவர் தெலுங்கில் எழுதியதென்னவோ நன்றாகத்தானிருந்தது. ஆயினும் இதைத் தெலுங்கில் ஆடியபொழுது தமிழ் காலவ ரிஷியைப்போல் அவ்வளவு நன்றாக நாடகம் சோபிக்கவில்லை என்று பலர் கூறினர். என்னுடைய அபிப்பிராய மும் அப்படியே. இந்த எனது காலவ ரிஷி நாடகத்தை எனது நண்பர்களிலொருவர் சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அது அச்சிடப்பட்டதோ என்னவோ எனக்கு ஞாபகமில்லை. காலவ ரிஷியைத் தெலுங்கில் மொழி பெயர்த்த எனது நண்பர் வெங்கடரமண ஐயர் எனது “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்தையும் தெலுங்கில் மொழி பெயர்த்திருக்கின்றனர். எனது நாடகங்களை மொழி பெயர்ப்பதென்றால் எனது அனுமதியை முதலில் பெற வேண்டும் என்பதை அவ்வாறு செய்ய விரும்புவோர் கவனிப்பார்களாக.
இவ் வருஷம் சபை தொடங்கியது முதல் எண்ணூறு நாடகங்களாடி முடித்தோம். இதைச் சந்தோஷத்துடன் எங்கள் வருடாந்தர அறிக்கையில் குறித்தோம். அன்றியும் இவ் வருஷம் நாங்கள் ஆரம்பித்த புதிய வழக்கங்கள் இரண்டு; ஒன்று, “காளிதாஸன் தினம்” என்று ஒரு நாளைக் குறிப்பிட்டு, அத்தினம் சம்ஸ்கிருத்தில் அவரது நாடகங்களிலிருந்து இரண்டொரு காட்சிகள் நடத்தி, அம் மகாநாடகக் கவியைப்பற்றி ஒரு பிரசங்கம் செய்வித் தோம். ஷேக்ஸ்பியர் தினம் என்று எப்படிக் கொண்டாடினோமோ, அப்படியே இதையும் கொண்டாடினோம்; அன்றியும் இதேமாதிரியாக “கிருஷ்ணமாச்சார்லு தினம்” என்று ஆந்திர நாடகப் பிதாமகனாகிய அவரையும் கொண்டாடினோம். இத் தினங்களை மற்ற சபையாரும் கொண்டாடும்படியாக இதன் மூலமாக நான் கேட்டுக் கொள்ளுகிறேன்.
இவ் வருஷம் நான் புதிய நாடகம் ஒன்றும் எழுதவில்லை . ஆயினும் பல வருஷங்களுக்கு முன் நான் எழுதி முடித்து அச்சிட்டிருந்த ‘மகபதி’ என்னும் நாடகத்தை ஆட வேண்டுமென்று பிரயத்தனப்பட்டேன். இந்த மகபதி எனும் நாடகம் ஷேக்ஸ்பியர் மகாகவி ஆங்கிலத்தில் எழுதிய ‘மாக்பெத்’ என்னும் நாடகத்தின் தமிழ் அமைப்பாம்; இதை 1909ஆம்’ வருஷம் சென்னையில் மொழிபெயர்க்க ஆரம்பித்து, அவ்வருஷம் நான் கோடை விடுமுறையில் கொடைக்கானலுக்குப் போயிருந்தபொழுது அவ்விடம் பூர்த்தி செய்தேன். உடனே சீக்கிரத்தில் அச்சு வாகனத்தின் மீதும் ஏற்றினேன். ஆயினும் இம் மகபதி நாடகம் நாளது வரையில் ஆடப்படவில்லை . நான் எழுதி முடித்து ஆடப்படாத இரண்டு மூன்று நாடகங்களுக்குள் இது ஒன்றாகும். இது ஆடப்படாததற்கு அநேகர் காரணங்களுண்டு. முதற் காரணம் எனதுயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலு இதில் கதாநாயகியாக ஆடப் பிரியப்படாத தேயாம். இது ஷேக்ஸ்பியர் எழுதிய மிகுந்த சோகரசம் அமைந்த நாடகங்களில் ஒன்றாகும்; அன்றியும் கதா நாயகியாகிய மகபதியின் மனைவி அவர் வர்ணித்துள்ள துர்க் குணங்களமைந்த மாதர்களில் ஒரு முக்கியமானவள். எனதுயிர் நண்பர் துர்க்குணமுள்ள எந்த ஸ்திரீ பாத்திரத்தை யும் நாடக மேடையில் நடிப்பதற்கு இஷ்டப்பட்டிலர்; ஆகவே, மகபதியின் மனைவியாக நடிப்பதற்கு அவர் இசையவில்லை. ஆகவே கதாநாயகனான மகபதியின் வேடம் நான் பூணுவதற்கில்லாமல் போயிற்று; அன்றியும் அக்கஷ்டமான பாத்திரத்தை நடிக்கக்கூடிய இரண்டொரு ஆக்டர்களை நான் கேட்டபொழுது, நீங்கள் முதன் முறை நாடக மேடையின்மீது நடித்துக் காட்டுங்கள்; பிறகு நாங்கள் ஆடுவதைப் பற்றி யோசிக்கிறோம் என்று சொல்லி விட்டார்கள். மேற்சொன்ன காரணங்களினால், எனதுயிர் நண்பர் ஜீவாந்தராயிருந்தவரையில், இந்நாடகமானது ஆடப்படவில்லை. அதன் பிறகு இவ்வருடம் (1927) ‘கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது’ என்று பெரியார் கூறியபடி, காலஞ்சென்ற எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவுக்குப் பதிலாக பரமேஸ்வரன் தன் கருணையினாலெனக்குதவிய எனது புதிய நண்பராகிய கே. நாகரத்தினம் ஐயரை, இந்நாடகத்தில் நடிப்பதற்கு, ரங்கவடிவேலுக்கு இருந்தமாதிரி உனக்கேதாவது ஆட்சேபணை உண்டா என்று கேட்டபொழுது, தனக்கு அப்படிப்பட்ட ஆட்சேபணை, ஒன்றுமில்லை எனத் தெரிவிக்க, இந் நாடகத்தை எடுத்துக்கொண்டு ஒத்திகைகள் நடத்த ஆரம்பித்து, என் வழக்கப்படி இந்நாடகத்தைப் பற்றி ஆங்கிலத்திலுள்ள விமரிசைகள் எல்லாம் படித்து, நாகரத்தினம் ஐயருக்கு மகபதியின் மனைவியின் பாகத்தைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். ஆரம்பித்த சில தினங்களுக் கெல்லாம், திடீரென்று அவரைச் சென்னையிலிருந்து மதுரையம்பதிக்கு மாற்றிவிட்டார்கள் துரைத்தனத்தார். அதன்பேரில் ஆடுவதற்காக ஒத்திகைகள் ஆரம்பிக்கப் பட்ட இந்நாடகம் தடையுற்றது; நாளது வரையில் ஆடச் சாத்தியமில்லாமலிருக்கிறது. “எண்ணித் துணிவது ஏழை மனிதன் செயல்; முடித்து வைப்பது முக்கண்ணன் செயல்” என்றபடி இந்நாடகத்தை நாங்கள் ஆடும் படி அவர் எப்பொழுது திருவுளம் இசைவாரோ அறிகிலேன். நான் நாடக மேடையை விட்டகலுமுன் ஒரு முறையாவது இதை ஆடும்படியான பாக்கியம் எனக்குக் கொடுப்பாரெனப் பிரார்த்திப்பது தவிர, வேறொன்றும் செய்ய வகை அறியேன்.
இம் மகபதி நாடகத்தின் ஒத்திகைகள் ஆரம்பிக்குமுன், எங்கள் சபையின் கௌரவ அங்கத்தினராயிருந்த ஆர்தர் டேவிஸ் என்பவரைக் கொண்டு ஷேக்ஸ்பியர் நாடகமாகிய மாக்பெத் என்பதை, ரெசிடேஷனாகக் (Recitation) கொடுக்கச் செய்தேன். எனது நண்பராகிய இந்த ஆர்தர் டேவிஸ் என்பவரைப் பற்றி இங்குச் சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். அவர், சில வருடங்களுக்கு முன்பாக ஹைகோர்ட் ஜட்ஜாயிருந்த சர் டேவிஸ் என்பவரின் குமாரர். ஹைகோர்ட்டில் டெபுடி ரிஜிஸ்டராராயிருந்து பிறகு சட்ட கலாசாலையில் பிரின்சிபாலாக இருந்து, 55 வயதானவுடன் பென்ஷன் பெற்றுக்கொண்டு சீமைக்குப் போய்விட்டார். இவர் சென்னையிலிருந்த சுமார் 30 வருடங்களும், ஷேக்ஸ்பியர் நாடகங்களை எந்த சபையாராவது ஆட வேண்டுமென்றால், அவர்களுக்குத் தன்னாலியன்ற உதவி செய்து வந்தார். அவர்களுக்கு நாடகத்தை முதலில் படித்துக் காட்டி, பிறகு அதிலுள்ள பாத்திரங்களையெல்லாம் இப்படி நடிக்க வேண்டுமன்று மிகவும் பிரயாசை எடுத்துக்கொண்டு சொல்லிக் கொடுத்து வந்தார். இம்மாதிரியாக எங்கள் சபைக்கும், ஹாம்லெட், மர்சென்ட் ஆப் வெனிஸ் முதலிய நாடகங்களைப் படித்துக் காட்டியிருக்கிறார். இந்த மாக்பெத் என்னும் நாடகத்தையும் வெகு விமரிசையாகப் படித்துக் காட்டினார். இவரைப் பற்றிய ஒரு விசேஷம் என்னவென்றால், மற்றவர்களுக்கு இவர் மேற்சொன்னபடியே ஷேக்ஸ்பியர் நாடகங்களைக் கற்பித்த - போதிலும், இவர் தானாக நாடக மேடையில் எப்பொழுதும் ஏறியதில்லை. இவர் தமிழ் அவ்வளவாகத் தெரியாதவராய் இருந்த போதிலும், எங்கள் சபையின் தமிழ் நாடகங்களுக்கும் அப்போதைக்கப்போது வந்து ஏதாவது சொல்லிக் கொடுத்துக்கொண்டு வந்தார். இவர் எங்கள் சபைக்குச் செய்து வந்த உதவிக்கெல்லாம் இதன் மூலமாக, அவருக்கு என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன். இவரிடம் இருந்த ஒரு முக்கியமான குணத்தைப் பற்றி இங்கு எழுத விரும்புகிறேன். நான் அறிந்த பல ஆங்கிலேயர்கள் தாங்கள் ராஜாங்கம் செலுத்தும் ஆங்கில ஜாதியாரைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் இந்தியர்கள், ஆளப்பட்டவர்கள்; என்னும் வித்தியாசம் பாராட்டுவதைப் பன்முறை பார்த்திருக்கிறேன். அக் குற்றம் இவரிடம் ஒரு சிறிதும் இல்லை . இந்த நற்குணத்தை மற்ற ஆங்கிலேயர்களும் மேற்கொண்டு நடப்பார்களாயின்; இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் உள்ள விவாதங்கள் ஏறக்குறைய எல்லாம் நீங்கி, இரு ஜாதியாரும் ஒருமைப்பட்டு வாழ மார்க்கமுண்டாகும் என்று எண்ணுகிறேன்.
இவ் வருஷம் எங்கள் சபைக்கும், சவுத் இண்டியன் அத்லெடிக் அசோசியேஷனுக்கும், பிரசிடெண்டாகவிருந்த சர் சி.பி. ராமஸ்வாமி ஐயர் இவ்விரண்டு. சபைகளையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டுமென்று பிரயத்தனப்பட்டுப் பார்த்தார்; அப்பிரயத்தனம் சில காரணங்களால் பயன் பெறாமற் போயிற்று. இவ் வருடம், எங்கள் சபையின் அங்கத்தினருள் ஒருவராயிருந்த திவான் பகதூர் சர். பி. ராஜகோபாலாச்சாரி யார் அவர்கள் காலமானது குறிக்கத்தக்கதாம். இவர் வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்தது முதல் எங்கள் சபையைச் சேர்ந்திருந்தார். எங்கள் சடை தமிழ் நாடகங்கள் ஆடும் போதெல்லாம், இவரும் இவரது மனைவியாரும் தவறாமல் வருவது வழக்கம். இவர் எங்கள் சபையைப் பற்றி ஒரு முறை கூறிய ஒரு சமாச்சாரம் எனக்கு நினைவிற்கு வருகிறது. ஒருமுறை எங்கள் சபையின் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்து வியவஹாரங்களை நடத்தும் முறையைக் கண்டனர். சில நாட்களுக்கெல்லாம் சென்னையிலுள்ள பிரபல கிளப் ஒன்றின் பொதுக்கூட்டத்திற்கும் போயிருந்தார். அங்கு நடப்பதையும் பார்த்து, அதற்கு வந்திருந்த ஒருவரிடம், “நான் என் ஆயுளில் பல பொதுக்கூட்டங் களுக்குப் போயிருக்கிறேன்; ஆயினும் சுகுண விலாச சபையில் நடப்பது போல் விமரிசையாக வேறெங்கும் நடக்கக் கண்டேனில்லை” என்று கூறினாராம். இதை எனது நண்பர்களில் ஒருவர் உடனே எனக்குத் தெரிவித்தார். அன்றியும் இவர் பென்ஷன் வாங்கிக் கொண்ட பிறகு அநேக சபைகளிலிருந்து நீங்கிய போதிலும் சுகுண விலாச சபையை விட்டு மாத்திரம் நீங்கவில்லை, தன் ஆயுள் பரியந்தம்.
இவ் வருஷத்திய வருடாந்தரப் பொதுக்கூட்டத்தில் எங்கள் சபையார் என்னை சபைக்கு டிராமாடிக் டைரெக்டராக நியமித்தனர். இதைப் பற்றிச் சில விஷயங்கள் எழுத வேண்டியவனாயிருக்கிறேன். சபை ஆரம்பமானது முதல், எங்கள் சபையின் இரண்டாம் ஆண்டுக் கொண்டாட்டம் வரையிலும், (ஒரு வருடம் தவிர), அதன் பிறகு இரண்டு மூன்று வருடங்களும், நான் தமிழ் நாடகங்களுக்குக் கண்டக்டராயிருந்து நடத்தி வந்தேன் என்பது இதை வாசித்து வரும் எனது நண்பர்கள் அறிந்த விஷயமே. இச் சமயங்களிலெல்லாம், எங்கள் சபையின் ஆக்டர்கள் அனைவருக்கும் திருப்திகரமாய் நடந்துகொண்டு வந்தேன் என்று சொல்வது தவறாகும். என்னிடமிருந்த பிடிவாதம், முன் கோபம், பொறுமையின்மை முதலிய துர்க்குணங் களைப் பற்றி நான் முன்பே எழுதியிருக்கிறேன். இவை ஒருபுறம் இருக்கட்டும்; ஒரு சபையின் கண்டக்டராயிருப்பவன் அச் சபையிலுள்ள எல்லா ஆக்டர்களையும் திருப்தி செய்வது அசாத்தியம் என்பது என்னுடைய கொள்கை. இதற்கு முக்கியக் காரணம், ஒவ்வொரு சபையிலும், ஆக்டர் என்று மேடையின் பேரில் ஏறும் ஒவ்வொருவனும், ஒவ்வொரு நாடகத்திலும் தனக்கு முக்கியமான பாகம் வேண்டுமென்று இச்சிப்பதுதான் என்று நான் எண்ணுகிறேன். ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும்தான் பாகம் அதிகமாயிருக்கும்; அன்றியும் சில பாத்திரங்கள்தான் முக்கியமான வையாயிருக்கும். அப்படியிருக்க, ஒவ்வொரு நாடகத்திலும், எல்லா ஆக்டர்களுக்கும் கதாநாயகன் பாகமும், கதாநாயகி பாகமும் அல்லது மற்ற முக்கியப் பாத்திரங்களில் ஒன்றும் கொடுப்பதென்றால், யாருக்கும் சாத்தியமான காரியமல்ல. அதுவும் நான் கண்டக்டராயிருந்த வருஷங்களெல்லாம் எனதுயிர் நண்பருக்காகவும் எனக்காகவும் நான் பல நாடகங்களை எழுதி வந்தபொழுது, அவைகளில் முக்கியப் பாத்திரங்களை நாங்களிருவரும் எடுத்துக்கொண்டு வந்தபடியால், மற்ற ஆக்டர்களுக்கு முக்கியப் பாகங்கள் கிடைப்பது இன்னும் கஷ்டமாயிருந்தது; இதனுடன் நாங்களிருவரும் மற்றவர்களுடன் ஆக்டு செய்யாததால் அநேகருக்கு மன வருத்தம் இருந்தது; அப்படியிருந்தது தவறென்று நான் கூறவில்லை . அது மிகவும் சகஜம்தான். இதைப்பற்றி நான் எடுத்துக் கூற விரும்புவ தென்னவென்றால், மற்ற ஆக்டர் கள் நாங்களிருவரும் அவர்களுடன் ஆக்டு செய்யாததற்குக் காரணத்தை அறிந்திருப்பார்களாயின், எங்கள் மீது அவ்வளவு வருத்தப்பட மாட்டார்கள் என்பதேயாம். ஆக்டர்களுக்குண்டான இக்குறையைத் தீர்க்கும் பொருட்டு, எங்கள் சபையின் கமிட்டியாரும் பொதுக் கூட்டத்தாரும் அநேக யுக்திகள் செய்து பார்த்தனர். அவற்றுள் ஒன்று என்னவென்றால், இன்னின்ன நாடகங்கள் போட வேண்டும் என்பதையும், அவற்றுள் ஒவ்வொன்றிலும் இன்னின்ன பாத்திரங்கள் இன்னின்னாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க, ஒரு ஸ்பெஷல் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது; இதைக் கொஞ்ச காலம் பார்த்து, இதனாலும் அக் குறை தீராதபடியால், தமிழ், தெலுங்கு முதலிய ஒவ்வொரு பாஷைக்கும் ஒவ்வொரு கமிட்டி ஏற்படுத்திப் பார்த்தார்கள். 1916ஆம் வருஷம் நான் கண்டக்டர் வேலையிலிருந்து நீங்கினபிறகு, மற்ற கண்டக்டர்கள் வந்த பிறகும் இக்குறை தீராதபடியால், ஒரு வருஷம் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரை டிராமாடிக் டைரெக்டராக நியமித்தனர். 1921ஆம் வருஷம் நான் சபையின் டிரமாடிக் டைரெக்டராக நியமிக்கப்பட்டேன். இப் பிரயத்தனங்கள் எவையாலும் மேற்சொன்ன குறை தீர்ந்தபாடில்லை யென்றே நான் கூற வேண்டும். இக்குறைகளைத் தீர்க்க எங்கள் சபையார் நாளது வரையில் என்னென்னவோ சூழ்ச்சிகள் செய்து பார்க்கிறார்கள்; எதனாலும் பயனடையவில்லை. வியாதியொன்றிருக்க அதை அறியாது, ஔஷதங்கள் கொடுத்து என்ன பயனடையக்கூடும்? இதற்கு என் அபிப்பிராயப்படி எது தகுந்த சிகிச்சை என்பதைப் பற்றிப் பிறகு ஒரு சமயம் எழுதலாமென்றிருக்கிறேன்.
29ஆவது அத்தியாயம்
மறு வருஷமாகிய 1928ஆம் ஆண்டில் என்னைப் பற்றிய வரையில், நடந்த சம்பவங்களுள் ஒரு முக்கியமானதென்ன வென்றால், இவ்வருஷம் பிப்ரவரி மாதம் முதல் தேதி, எனக்கு ஐம்பத்தைந்து வயது பூர்த்தியாகி, அவ்வயதுக்கு மேல் கவர்ன்மென்ட் உத்தியோகத்தில் சாதாரணமாக ஒரு வரும் இருக்கக்கூடாது என்கிற சட்டத்தின்படி, நான் ஸ்மால் காஸ் கோர்ட்டு ஜட்ஜ் வேலையிலிருந்து விலக வேண்டி வந்ததேயாம். ஆக மொத்தம் சுமார் 4 வருடங்கள்தான் நான் ஜட்ஜ் வேலையிலிருந்தேன்; இதனிடையில் சில காலம் ஸ்மால் காஸ் கோர்ட்டு சீப் ஜட்ஜாகவும் சென்னை சீப் பிரசிடென்சி மாஜிஸ்டிரேட் ஆகவும் வேலை பார்த் தேன். நாடக மேடை நினைவுகளைப் பற்றி எழுதப் புகுந்தவன், இதை இங்கு எழுதுவானேன் என்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் இங்கொரு கேள்வி கேட்கலாம். அதற்குப் பதில் அடியில் வருமாறு: நான் ஜட்ஜ் வேலையிலிருந்து விலகியவுடன் எனது நண்பர்களிற் பலரும் வர்த்தமானப் பத்திரிகைகளின் ரிபோர்ட்டர்கள் சிலரும், இனிமேல் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று என்னைக் கேட்டார்கள். அப்பொழுது அவர்களுக்கெல்லாம், இனிமேல் நான் வக்கீலாக வேலை பார்க்கப் போகிறதில்லை; இனி ஈசன் எனக்களித்திருக்கும் ஓய்வுக் காலத்தை யெல்லாம் தமிழ் நாடகங்கள் எழுதுவதில் - அதிலும் தற்காலத்திய நாகரிகத்தைப் பற்றிய சோஷல் நாடகங்கள் எழுதுவதில் - கழிக்கப் போகிறேன் என்று விடை கூறினேன். நான் இருபத்தைந்து வருடங்கள் வக்கீலாக இருந்த பொழுது மனிதர்களுடைய குணாதிசயங்களைப் பற்றியும் நடவடிக்கைகளைப் பற்றியும் பல விஷயங்கள் அறிய ஹேதுவாயிருந்த போதிலும், ஜட்ஜாக இருந்த நான்கு வருடங்களில் இதற்குமுன் நான் அறியாத பல விஷயங்களைக் கற்றேன் என்றே நான் சொல்ல வேண்டும். இவையெல்லாம் தமிழ் நாடகங்கள் எழுது வதற்கு எனக்கு மிகவும் பயன்பட்டன என்பதற்குத் தடையில்லை. ஒரு நாடகாசிரியன் கற்க வேண்டிய சமாச்சாரங்கள் இந்த வேலையில்தான் உண்டு, இந்த வேலையில் இல்லையென்று சொல்ல இடமே கிடையாது. அன்றியும் இவ்வுண்மை நாடக மேடையில் ஆட விரும்புபவனுக்கு மிகவும் பொருத்தமானது என்பதற்கு ஐயமில்லை.
இனி மேற்சொன்ன தீர்மானத்தின்படி, நான் எழுதிய நாடகங்களைப் பற்றிச் சற்று விவரமாய் எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.
இவ்வருஷம் நான் ஆரம்பித்து எழுதி முடித்து, உடனே எங்கள் சபை ஆடிய நாடகம் “தாசிப்பெண்” என்பதாம். இந் நாடகத்தின் கதை என் மனத்தினால் நிர்மாணம் செய்யப்பட்டதேயாம். முக்கியப் பாத்திரங்களெல்லாம் என் மனோ சிருஷ்டியேயன்றி, நான் அறிந்த ஒருவரையும் குறிப்பிட்டதன்று. சில சிறு நாடகப் பாத்திரங்கள் மாத்திரம், எனது நண்பர்களுட் சிலருடைய குணாதிசயங்களை முன்னிட்டு எழுதியதாம். அப்படிச் செய்யும் பொழுதெல்லாம், அவர்களுடைய உத்தரவைப் பெற்றே அவ்வாறு செய்வது என் வழக்கம். உதாரணமாக, இத் தாசிப்பெண் என்னும் நாடகத்தில் வரும் “டப்பூஸ் நாயுடு” என்னும் பாத்திரமானது, காபி, தேத்தண்ணீர், சோடா முதலிய பானங்களை அபரிமிதமாய்ச் சாப்பிடும் எங்கள் சபையின் அங்கத்தினர் ஒருவரை முன்னிட்டு எழுதியதாகும்; இவ்வாறு செய்யப் போகிறேன் உங்கள் உத்தரவைப் பெற்றே பிறகு எழுதியுள்ளேன். இந்நாடகத்தை எழுதி முடிப்பதற்கு இரண்டு மூன்று மாதங்கள் பிடித்தன. என் வழக்கப்படி, நாடகக் கதையின் கோர்வையை முன்பு தீர்மானித்து, பிறகு காட்சிகளாகப் பிரித்துக் குறிப்பிட்டுக்கொண்டு எழுதி வரும் தருவாயில், ஏதாவது ஒரு கட்டம் வந்துவிடும், அதற்கப் புறம் எப்படி எழுதுவது என்று யோசிக்க வேண்டியவனாய் சரியான மார்க்கம் என் புத்திக்குத் தோன்றும் வரையில், ஒரு நாளோ இரண்டு நாளோ, ஒரு வாரமோ பிடித்தாலும், அது வரையில் ஒரு வார்த்தையும் எழுத மாட்டேன். இப்படிப்பட்ட இடைக்காலங்களில், சும்மா இருக்கப் பொறுக்காமல், எனது பால்ய நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காருடைய ஆங்கில நாடிகைகளை (சிறு நாடகம்) அவரது உத்தரவைப் பெற்று தமிழில் மொழி பெயர்த்து வந்தேன். இவ்வாறு ஒரு வருஷத்திற்குள்ளர்க “மனைவியால் மீண்டவன்”, “விச்சுவின் மனைவி”, “நோக்கத்தின் குறிப்பு”, “விபரீதமான முடிவு”, “இடைச்சுவர் இரு புறமும்”, “இரண்டு ஆத்மாக்கள்”, “என்ன நேர்ந்திடினும்”, “சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து”, “சுல்தான் பேட்டை சப்-அசிஸ்டென்ட் மாஜிஸ்ட்ரேட்”ஆகிய ஒன்பது நாடகங்களையும் மொழிபெயர்த்தேன். இவைகளைப் பற்றிப் பிறகு கொஞ்சம் எழுத வேண்டி வரும்.
இவைகளையெல்லாம் எழுதும் பொழுது ஈசன் அருளிய என் வாழ்நாட்களை நான் எவ்வாறு கழித்து வருகிறேன் என்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறிய விரும்புவார்களென்று எண்ணினவனாய், அதை எழுதுகிறேன். 1928ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் முதல் தேதி முதல், இதுவரையில், நான் சென்னையிலிருக்கும் போதெல்லாம் என் நாட்களைக் கழிக்கும் விதம் இதாகும்.
அதிகாலையில் எழுந்திருப்பது என்பது என் ஜன்மத்தில் கிடையாது; கும்பகர்ணனை ஸ்ரீராமபிரான் கொல்வதற்குள் அவரிடமிருந்து அவன், தனக்குப் பிரதிநிதியாக ஒவ்வொரு யுகத்திலும் ஒருவனிருக்கும்படி வரம் வேண்டியிருக்க வேண்டும்; அவ்வரத்தின்படி கலியுகத்தில் என்னை அக் கும்பகர்ணனுக்குப் பிரதிநிதியாகப் பகவான் ஏற்படுத்தினார் போலும். பால்யத்தில் பரீட்சைகளுக்குப் போகும் போதும் காலையில் எழுந்திருந்து படித்தவனன்று நான். காலையில் சாதாரணமாக ஏழு மணிக்குத்தான் எழுந்திருப்பது என் வழக்கம். எழுந்தவுடன் நான் வழிபடு கடவுளாகிய என் தாய் தந்தையாரைத் தொழுதுவிட்டு, தேகப்பயிற்சி சிறிது செய்து, என் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு எட்டு மணிக்கு என் மேஜையருகில் உட்காருவேன்; கால்மணி சாவகாசம் ஏதாவது சம்ஸ்கிருதம் படித்துவிட்டு பதினோரு மணிவரையில் தமிழ் நாடகங்கள் எழுதுவதில் காலம் கழிப்பேன். பதினோரு மணிக்கு 15 நிமிஷம் முன்பாக சன்பாத் (Sun bath) எடுத்துக்கொண்டு பிறகு 15 நிமிஷம் ஷாம்பு (shampoo) எடுத்துக் கொண்டு, ஸ்நாநம் செய்து பகல் பூஜையை முடித்து, உணவுகொள்ள, சரியாகப் பன்னிரண்டாகும். அதன் பேரில் கால் மணி சாவகாசம் ஏதாவது வர்த்தமானப் பத்திரிகை வாசித்து விட்டு, எனது நாடக சம்பந்தமாக அவற்றை ஆட விரும்பும் சபைகளுக்கு ஏதாவது காகிதங்கள் எழுத வேண்டியிருந்தால் அவற்றை எழுதி விட்டு, இரண்டு மணி வரையில் நான் அச்சிட வேண்டிய நாடகங்களை அச்சாபீசுக்கு அனுப்பப் பிழைகள் திருத்துவேன். இரண்டு மணிக்கு வண்டியேறி, என் நாடகங்களை அச்சிடும் இரண்டு அச்சாபீசுகளுக்கும் போய் புரூப்புகளை (proof) கொடுத்துவிட்டு, ஏதாவது சொல்ல வேண்டியவற்றைச் சொல்லிவிட்டு, சுகுண விலாச சபைக்குப் போய்ச் சேர்வேன். அங்கு சபைக் காரியங்களை ஏதாவது பார்ப்பதிலோ அல்லது ஒன்றும் இல்லாவிட்டால், ஆங்கிலப் பத்திரிகைகளைப் படிப்பதிலோ, சாயங்காலம் வரையில் போக்கி, வெயில் சற்று தாழ்ந்தவுடன் பீபில்ஸ் பார்க்கில் அரைமணி சாவகாசம் உலாவுவேன். இச்சமயம்தான் ஏதாவது புதிய நாடகங்களைப் பற்றி யோசிக்க வேண்டியிருந்தால் யோசிப்பேன். திரும்பி வந்ததும் எனது சபை நண்பர்களுடன் பேசியாவது சீட்டாடியாவது (பணமில்லாமல்! - ஏனெனில் எங்கள் சபையில் துட்டு வைத்து சீட்டாடக் கூடாது என்று ஒரு நிபந்தனை ஆரம்ப முதல் உண்டு) எட்டுமணி வரையில் காலம் கழிப்பேன். பிறகு வீட்டிற்குத் திரும்பி பதினைந்து நிமிஷம் தேகப் பயிற்சி செய்த பிறகு கைகால்களை சுத்தி செய்து ராத்திரி பூஜையை முடித்து, சாதாரணமாக ஒன்பது மணிக்கெல்லாம் நித்திரைக்குப் போவேன். மேற்கூறியதனால், பொழுது போவது கஷ்டமாயிருக்கிறதெனும் கஷ்டம் எனக்கில்லை என்பதை என் நண்பர்கள் அறியலாம். ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரத்துடன் இன்னும் ஐந்தாறு மணிகள் இருப்பினும், அவைகளிலும் செய்ய ஏதாவது வேலை எனக்குக் கிடைக்குமென நம்புகிறேன். செய்வதற்கொன்று மில்லையே என்கிற கவலை எனக்கு எப்பொழுதும் கிடையாது; நாம் செய்ய வேண்டுமெனத் தீர்மானித்திருக்கும் காரியங்களையெல்லாம் கடவுள் கிருபையால், நமக்கிருக்கும் ஆயுளுக்குள் செய்து முடிப்போமோ என்னும் கவலைதான் உண்டு. எனது நண்பர்களில் அநேகர், இப்பொழுது எப்படி உன் காலத்தைக் கழிக்கிறாய் என்று கேட்டதனால் இதைப்பற்றி இங்கு, சற்று விரிவாய் எழுதலானேன். அன்றியும் இன்னொரு காரணமுண்டு. அநேகர் தங்கள் வேலையிலிருந்து பென்ஷன் (Pension) வாங்கிக் கொண்ட பிறகு தாங்கள் செய்வதற்கொன்றுமின்றி, காலத்தைப் போக்க வகையறி யாராய்க் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நான் அறிவேன். நான் நாடகமெழுதுகிறது என்கிறதை ஒரு வேலையாக வைத்துக் கொண்டிருப்பது போல், அவர்களும் தங்கள் மனதுக்கிசைந்த யாதொரு வேலையை மேற்கொள்வார்களானால், அவர்களுக்கு அதனால் பெரும் பலன் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலத்தில் ஹாபி (Hobby) என்று ஒரு பதம் உண்டு . இதற்குச் சரியான தமிழ்ப் பதம் எனக்குக் கிடைக்கவில்லை ; ஒருவன் மனத்திற்கிசைந்த தொழில் என்று அதற்கு ஒருவாறு அர்த்தம் செய்யலாம். ஒவ்வொரு மனிதனும், தன் சிறு வயதிலேயே, தன் ஜீவனாதாரமான தொழிலைத் தவிர, வேறு ஏதாவது ஒரு வினோதமான வேலையைக் கற்று வருவானாயின், அவன் வயோதிகத்தில் அது மிகவும் பயன்படும் என்பதற்குத் தடையில்லை. நான் அறிந்தவர்களுள் அநேகர் பென்ஷன் வாங்கிக் கொண்டபிறகு, வேறொன்றும் செய்வதற் கிளப்புக்குப் போய்ச் சீட்டாடிக் காலம் கழித்துத் தமது ஆயுளைக் குறுக்கிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் நாடகங்கள் எழுதுதலாகிய என் ஹாபி (Hobby) என் பொழுதைப் போக்குவதற்கு அனுகுணமாயிருப்பது மன்றி, எனக்கு வருவாயையும் தருகிறது; தமிழ் பாஷைக்கு நான் செலுத்த வேண்டிய கடமையையும் செலுத்த மார்க்கமாகிறது.
இவ் வருஷம் நான் எழுதி முடித்த “தாசிப் பெண்” என்னும் நாடகம், இவ்வருடமே எங்கள் சபையில் ஆடப்பட்டது. அதில் தற்காலம் எனது அத்யந்த நண்பராயிருக்கும் கே. நாகரத்தினம் ஐயர், தாசிப் பெண்ணாக ரூபாவதி வேடம் பூண்டனர்; நான் சுப்பிரமணிய ஐயர் வேடம் பூண்டேன். இந்நாடகத்தில் தாசிப் பெண்ணாகிய ரூபாவதி பாடும் இரண்டு பாட்டுகள் தவிர வேறு சங்கீதமே கிடையாது. ஆயினும் இந் நாடகம் மிகவும் நன்றாயிருந்ததென மெச்சப்பட்டதுமன்றி, நல்ல வரும்படியும் வந்தது எங்கள் சபைக்கு. முதன் முறை ஆடியபொழுது சுமார் 400 ரூபாய் வரும்படி வந்தது. இதை நான் முக்கியமாக எடுத்து எழுதுவதற்குக் காரணம், அநேகர் புராணக் கதைகளாயிருந்தால்தான் வசூலாகும், சங்கீதம் அதிகமாயிருந்தால் தான் வசூலாகும் என்று நினைக்கிறார்களே, அது முற்றிலும் தவறு என்று நிரூபிப்பதற்கேயாம். இதை மறுமுறை எங்கள் சபையில் போட வேண்டுமென்று பிரேரேபிக்கப்பட்ட பொழுது, மேற் சொன்னபடி எண்ணங் கொண்ட எனது நண்பர்களில் ஒருவர், இந்நாடகத்தில் வசூலாகாதென்று போட்டி போட்டார்; அம்முறை டிசம்பர் மாதத்தில் நாங்கள் இதை ஆடியபொழுது, புராணக் கதையாயும், சங்கீதம் நிரம்பியுள்ளதுமான நந்தனார் சரித்திரத்தைவிட, இந் நாடகத்திற்கு வரும்படி அதிகமாய் வந்ததைக் கண்டு, மௌனமாய் இருந்துவிட்டார்.
இந் நாடகமானது, எங்கள் சபை இதை ஆடுமுன், நான் தற்காலம் வெளியூர் அங்கத்தினனாக (Mofussil member) இருக்கும் மதுரை டிராமாடிக் கிளப்பாரால் இவ் வருஷம் ஆடப்பட்டது. இந்நாடகத்தை, என் சொந்தக் கற்பனையில் நான் எழுதியவற்றுள், ஒரு முக்கியமானதாகக் கொள்கிறேன். இவ்வருடம் எனது பால்ய நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய நாடிகைகள் பலவற்றை மொழிபெயர்த்ததாக முன்பே தெரிவித்திருக்கிறேன். இந்த நாடிகைகளையெல்லாம் நான் மொழி பெயர்த்தபொழுது, எனக்குச் சந்தேகமாயிருக்கும் இடங்களிலெல்லாம் குறிப்பிட்டு, பிறகு அவற்றை எனது நண்பரிடம் கொண்டு போய், அவரது அபிப்பிராயத்தைக் கேட்டு, திருத்தின பிறகுதான், அவைகளை ஒவ்வொன்றாக அச்சிட்டேன். இப் புத்தகங்களுள் ஒன்றில் முகவுரையில் நான் எழுதிய படி, சில சமயங்களில், ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் ஆங்கில நாடகங்களை மொழி பெயர்ப்பதைவிட, இவரது நாடிகைகளை மொழி பெயர்ப்பது அதிக, கஷ்டத்தைத் தந்தது! இம் மொழி பெயர்ப்புகளுள் சில எங்கள் சபையாராலும் ஆடப்பட்டிருக்கின்றன; பள்ளிக் கூடத்தில் வாசிக்கும் சிறுவர்கள் சங்கங்களின் வருடாந்தரக் கொண்டாட்டங்களில், தமிழில் ஏதாவது சிறு நாடிகைகள் ஆட வேண்டுமென்று விரும்பினால், இவைகள் உபயோகப்படும் என்று நினைக்கிறேன். எனது நண்பர் எழுதியுள்ள “தாமுவை வழிக்குக் கொண்டு வந்தது", (Domestication of Damoo) “ஆடி ஆகும் வரையில் பொறுங்கள்” (Wait for the stroke) எனும் இரண்டை மாத்திரம் இன்னும் நான் மொழி பெயர்க்கவில்லை. காலம் வாய்த்தால் அவைகளையும் மொழிபெயர்த்து என் பால்ய நண்பருக்கு நான் செலுத்த வேண்டிய பெருங்கடனைக் கொஞ்சம் தீர்க்கலாமென்றிருக்கிறேன்.
இவ் வருஷம் ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதி எங்கள் சபையின் ஆதரவிலும் முன்னிலையிலும், குப்பி நாடகக் கம்பெனியார், வால்டாக்ஸ் ரோடு நாடக சாலையில், “ராஜபக்தி” என்னும் நாடகத்தைக் கன்னட பாஷையில் நடத்தினார்கள். இதற்காக எங்கள் சபையார் அக் கம்பெனியாருக்கு 150 ரூபாய் பெரும்படியான ஒரு வெள்ளிக் கோப்பையைப் பரிசாக அளித்தனர். இந் நாடகத்தைத்தான் பிறகு என் இளைய நண்பர் வி.சி. கோபாலரத்தினம் ஐயங்கார் தமிழில் மொழி பெயர்த்தனர்.
அன்றியும் இவ் வருஷம் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி ராயல் தியேட்டரில், எங்கள் சபையில் பல வருடங்களாக அங்கத்தினராயிருந்து, தெலுங்குப் பாஷையில் பன்முறை நாடகங்களில் நடித்து வந்த எள். வெங்கடாசல ஐயரடைய, “ராதா மாத மந்திரம்” என்னும் தர்ம கைங்கர்யத்திற்காக எனது “மனோஹரன்” நாடகம் ஆடப்பட்டது. அதன் பொருட்டு எனது தேக கஷ்டத்தையும் பாராமல், அந்நாடகத்தில் நான் மனோஹரனாக நடித்தேன். என் இள வயதில் இருந்த உற்சாகத்துடன் இப்பாத்திரத்தை நான் நடிப்பதற்கு ஏலாமற் போனபோதிலும், எனது பழைய நண்பருக்காக உழைப்பதற்குப் போதுமான தேக வலியை இன்னும் நமக்கு ஈசன் அருளியிருக்கிறாரே என்று சந்தோஷப்பட்டேன். செலவு போக இதில் வந்த லாபமாகிய ரூபாய் 383-4-0 அவருக்கு மேற்சொன்ன தர்ம கைங்கர்யத்திற்காகக் கொடுத்தோம். இந்த வெங்கடாசல சாஸ்திரியார், (இவருக்கு ஏர்ரையா என்று எங்கள் சபையில் பெயர் வழங்குகிறது) என்னைவிட வயதில் பல ஆண்டுகள் மூத்தவராயினும், இன்னும் எங்கள் சபைக்கு நன்றி மறவாமல், எப்பொழுது வேண்டிய போதிலும், நாடகப் பாத்திரங்களைத் தரித்து வருகிறார்.
இவ்வருஷம் எங்கள் சபையில் “நாடகமாடுபவர்க்கு உபயோகமான சில குறிப்புகள்” என்கிற விஷயத்தைப் பற்றி ஒரு உபன்யாசம் செய்தேன். இந் நாடக மேடை நினைவுகள் முடிந்தவுடன் அவகாசமிருக்குமாயின் அவைகளைப் பற்றி எழுதலாமென்றிருக்கிறேன். இவ்வருஷம் ஜார்ஜ் டவுனில், ஆர்ட்னென்ஸ் லைன்ஸ் (Ordnance lines) என்னும் இடத்தில் எங்கள் சபையின் நாடகசாலையும் இருப்பிடமும் கட்டுவதற்காக இடம் கிடைக்குமா என்று வெகு பிரயத்தனப்பட்டுப் பார்த்தோம்; பிரயோஜனம் இல்லாமற் போயிற்று; “வருந்தி அழைத்தாலும் வாராதவரா, பொருந்துவன போமினென்றாற் போகா!” ஈசன் கருணையினால் இப்பிரயத்தனம் எப்பொழுது கைகூடுமோ அறியேன்.
அன்றியும் இவ்வருஷம் எங்கள் சபையின் “சுவிநேர் புஸ்தகம்” (ஞாபகார்த்த புஸ்தகம்) ஒன்று பதிப்பித்தோம். அதில் எங்கள் சபை, சென்ற முப்பத்தேழு வருஷங்களாக நடத்திய விஷயங்களை வெளியிட்டது மன்றி, எங்கள் சபையின் முக்கிய அங்கத்தினர் ஆக்டர்கள் முதலியோருடைய உருவப் படங்களையும் அச்சிட்டோம். இப் புஸ்தகத்திற்கு எங்கள் சபையின் சுருக்கமான சரித்திர மொன்றை முகவுரையாக எழுதியுள்ளேன். இப் புஸ்தகம் கானரா அச்சு இயந்திர சாலையில் கே.எ. ஹெப்பார் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது.
30ஆவது அத்தியாயம்
மறு வருஷமாகிய 1929ஆம் ஆண்டில் நான் எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கத்தக்க விஷயங்கள் அதிகமில்லை . இவ் வருடம், சுமார் இருபத்தைந்து வருடங்களாக எங்கள் சபையின் குமாஸ்தாவாக இருந்த கிருஷ்ணசாமி ஐயர் நடுவயதிலேயே காலவியோகமானான். இவன் எங்கள் சபைக்கு மனமார உழைத்தவர்களுள் ஒரு முக்கியமானவன்; சபையின் பணம் முதலியவற்றை மிகவும் பொறுப்பாகப் பாதுகாத்தவன்; சபைக்காக இரவும் பகலும் பாடுபட்டவன்; இதற்கு நன்றியறிதலாக எங்கள் சபையார், இவனது மனைவிக்கு நாளது வரையில் மாசம் ஒன்றுக்கு 7 ரூபாய் பென்ஷனாகக் கொடுத்து வருகிறார்கள். இதற்கு முன்பாக இவனது குமாரத்தியின் கலியாண செலவுக்காக, ஒரு தமிழ் நாடகமாடி சுமார் 700 ரூபாய் வரையில் உதவினோம். எங்கள் சபை இதுவரையில் செய்த தர்மத்தில் இது ஒரு முக்கியமானதாம்.
அன்றியும் இவ்வருஷம், பல ஆண்டுகளாக எங்கள் சபையில் மிருதங்கம் அல்லது தபேலா வாசித்துக் கொண்டிருந்த வெங்கடேஸ்வரலு என்பவனும் காலமானான். இவனிடமிருந்த மெச்சத்தக்க குணம் என்னவென்றால், ஒரு நாடகத்தில் ஒரு ஆக்டர் ஒரு பாட்டைப் பாடினால் பிறகு எத்தனை வருடங் கழித்தாலும், இன்ன ஆட்டத்தில் நீங்கள் இன்ன மெட்டில் இந்தத் தாளத்தில் இந்தப் பாட்டைப் பாடினீர்கள் என்று மறவாது சொல்வான்! இது ஆக்டர்களுக்கும் கண்டக்டர்களுக்கும் மிகவும் சௌகர்யமாயிருந்தது. இவ்வருஷம் நான் புதிதாய் எழுதி முடித்த “சுபத்தி ரார்ஜுனா” என்னும் நாடகமானது எங்கள் சபையோரால் ஆடப்பட்டது. எனது அத்யந்த நண்பர், நான் முன்பே குறித்தபடி மதுரைக்கு மாற்றப்பட்டபடியால், அவரும் நானும் இதில் வேடம் தரிக்க ஏலாமற் போய்விட்டது. இந் நாடகத்தை சென்னையில் எனது மற்ற நண்பர்கள் ஆடினபொழுது, நான் மதுரைக்கு சைத்ரோற்சவம் பார்க்கப் போயிருந்தேன்.
நான் இப் பிரயாணத்திலிருந்து சென்னைக்குத் திரும்பி வருங்கால் ஸ்ரீரங்கத்தில் எனக்கு நேரிட்ட, எனது நாடக மேடை சம்பந்தமான நினைவொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. மதுரை உற்சவத்திற்கு என் குமாரத்திகள் இருவர்களையும் அழைத்துச் சென்றேன். பட்டணம் திரும்பி வரும் பொழுது அவர்கள் தாங்கள் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதனைத் தரிசிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். அதற்கிசைந்து, வரும் மார்க்கத்தில் திருச்சிராப்பள்ளியில் ஒரு நாள் தங்கி, அவர்களை அன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். கோயிலுக்குப் போய் கர்ப்பக் கிரஹத்தைத் அண்டினபொழுது, அன்று உற்சவம் ஆரம்பமாய் விட்டது. உற்சவ விக்கிரஹம் வெளியில் புறப்பட்டிருக்கும்பொழுது, மூல விக்ரஹத்திற்கு ஆராதனம் கிடையாது என்று மூலஸ்தான கோயில் தாளிடப்பட்டிருந்தது! “ஐயோ! இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தும், ஸ்ரீரங்கநாதர் தெரிசனம் நமக்குக் கிடைக்கவில்லையே” என்று எனது இரண்டு குமாரத்திகளும் துக்கப்பட்டனர். நான் ரங்கநாதரை இதற்குமுன் பலதரம் தரிசித்திருந்தபோதிலும், அவர்களுக்கு அப் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று வாடின முகமுடையவனாய், அவர்களை அழைத்துக்கொண்டு திரும்பி, முதல் கோபுரம் வரையில் வந்தேன். நாங்கள் கர்ப்பக்கிரஹத்தருகில் போனதையும், ஸ்வாமி தரிசனம் கிடைக்காமல் திரும் பினதையும் கவனித்த யாரோ ஒரு பிராமணர் (அவரது பெயரையும் பிறகுதான் அறிந்தேன்), எங்களைப் பின்தொடர்ந்து வந்து, என்னைப் பார்த்து “தாங்கள்தானா, சம்பந்த முதலியார்?” என்று கேட்டார். நாம் ஆம் என்று ஒப்புக் கொண்டு, ஏன் கேட்கிறீர்கள் என்று வினவ, “கொஞ்சம் பொறுங்கள், நீங்கள் இவ்வளவு தூரம் வந்து ஸ்வாமி தரிசனம் செய்யாமற் போவது சரியல்ல; நான் திரும்பி வருகிறவரையில் இங்கு இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று சொல்லி, எங்களை அங்கேயே இருக்கச் சொல்லி, தான் விரைந்து சென்று, யாரோ டிரஸ்டிகளுடைய உத்தரவைப் பெற்று, சாவி வாங்கிக்கொண்டு வந்து, எங்களையெல்லாம் மறுபடியும் கர்ப்பக் கிரஹத்திற்கு அழைத்துக் கொண்டுபோய், கதவைத் திறக்கச் சொல்லி அருகிலிருந்து, நன்றாய்த் தரிசனம் செய்விக்கச் செய்தார். இதுவும் ரங்கநாதன் அருள் என்று கருதினவனாய், நாங்கள் எல்லாம் தரிசனம் செய்துகொண்டு திரும்பும் பொழுது, ஏதோ ஏழைப் பிராமணர் நமக்காக இவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டரே என்று எண்ணினவனாய், அவர் கையில் ஒரு ரூபாயைக் கொடுக்க முயல, அவர் அதை வேண்டாம் என்று மறுத்தார்! அதன்மீது ஆச்சரியப்பட்டவனாய், “நான் கொடுப்பது குறைவாயிருக்கிறதெனத் தோன்றினால், சொல்லுங்கள் இன்னும் அதிகமாய்த் தருகிறேன்” என்று கூறி, என் பையை எடுக்க, “அப்படி அல்ல, உங்களிடம் பணத்தை ஆஸ்ரயித்து இதை நான் செய்தவனல்ல; உங்கள் நாடகங்களில் அநேகம் நான் படித்து சந்தோஷப்பட்டிருக்கிறேன். அதற்காக இதைச் செய்தேனேயொழிய வேறொன்றில்லை “ என்றார்! அதன்பேரில் நான், அப்படியிருந்த போதிலும், நீங்கள் மேற்கொண்ட சிரமத்திற்காக ஏதாவது நான் கைம்மாறு செய்ய வேண்டும் என்று வற்புறுத்த, “அப்படியாயின் எனக்குப் பணம் ஒன்றும் வேண்டாம், உங்கள் ஞாபகார்த்தமாக, உங்கள் புஸ்தகங்களிலொன்றை அனுப்புங்கள்” என்று சொன்னார். அதன்மீது அவர் வாசித்திருக்கும் நாடகங்கள் என்னென்னவென்று கேட்டறிந்து, அவர் வாசியாத, ஒன்றிற்கு இரண்டாக நாடகங்களை அவர் பெயரும் விலாசமும் கேட்டறிந்து குறிப்பிட்டுக்கொண்டு, பிறகு சென்னைக்கு வந்தவுடன் அனுப்பினேன். நான் தமிழ் நாடகத்திற்காக உழைத்தது பயன்படாமற் போகவில்லை. ஏதோ எம்பெருமான் அருளால் அதன் பலன் இந்த ஜன்மத்திலேயே எனக்குக் கொஞ்சம் கிடைத்ததே என்று, ரங்கத்திற்கு உழைத்ததற் காக, அரங்கநாதராகிய சபாபதி (மஹாவிஷ்ணுவுக்கும் பரமசிவத்திற்கும் ஒரு பொருள்படும்படியான இப்பெயர்கள் இருப்பது இங்கு கவனிக்கத்தக்கது), எனக்கு இன்னருள் பாலித்தார் என்று என் மனத்திடை வழுத்தினேன். இம் மாதிரியாக ஏதோ என் சிற்றறிவைக் கொண்டு தமிழில் சில நாடகங்கள் எழுதினதால், நான் பல இடங்களில், என்னை முன்பின் அறியாதவர்களால் பன்முறை கௌரவப்படுத்தப் பட்டிருக்கிறேன். தமிழில் நாடகங்கள் எழுதினால், நமக்கு ஒரு லாபமும் கிடைக்கவில்லையே என்று எப்பொழுதாவது ஏங்கும் ஸ்திதியிலிருக்கும் எனது இளைய நண்பர்கள், மேற்குறித்த நிகழ்ச்சியைக் கவனித்து, எவ்வளவு கஷ்டம் நேர்ந்தபோதிலும், தங்கள் ஊக்கம் குன்றாது உழைத்து வருவார்களென நம்பி இதை இங்கு எழுதலானேன்.
இவ்வருடம் கிறிஸ்ட்மஸ் (Christmas) விடுமுறையில் எங்கள் சபை நாடகங்களை நடத்தினபொழுது, எனது அத்யந்த நண்பர் கே. நாகரத்தினம் ஐயர் சென்னைக்கு வந்திருந்தபடியால், நாங்கள் இருவருமாக “தாசிபெண்”, “வள்ளி மணம்” என்னும் இரண்டு நாடகங்களிலும் ஆடினோம்.
ஐந்தாம் பாகம் முற்றிற்று
நாடக மேடை
நினைவுகள்
ஆறாம் பாகம்
1929ஆம் வருஷம் கடைசியில், நான் சுகுண விலாச சபை ஸ்தாபித்தது முதல் செய்யாத காரியம் ஒன்றைச் செய்தேன். அதாவது நான் மதுரை டிராமாடிக் கிளப்பில் நாடகமாடினேன்! இதற்குக் காரணம், நான் சற்று விவரமாய்த் தெரிவிக்க வேண்டியவனாயிருக்கிறேன். நான் முன்பே எனது நண்பர்களுக்குத் தெரிவித்தபடி, எனது அத்யந்த நண்பரான கே. நாகரத்தினம் ஐயர், உத்யோக சம்பந்தமாக மதுரைக்கு மாற்றப்பட்டார். அதன்பேரில் அவர் எங்கள் சபை நாடகங்களில் சென்னையில் நடிப்பது கஷ்டமாயிற்று; அவர் நடிக்கமாலிருக்கவே நானும் நடிப்பது அசாத்தியமாயிற்று. இதைப்பற்றி நான் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள் நாகரத்தினம் ஐயரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது; அதில் மதுரையில் இருக்கும் டிராமாடிக் கிளப்பார், தன்னையும் என்னையும் அவர்கள் கிளப் நடத்தும் நாடகங்களிரண்டில் ஆடும்படியாகக் கேட்கிறதாகவும், போய் வர என் ரெயில் செலவெல்லாம் அவர்கள் கொடுப்பார்களென்றும், இதற்கு எப்படியாவது நான் சம்மதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இதைப் பார்த்தவுடன் இன்ன பதில் அனுப்புவதென்று தெரியாமல் திகைத்தேன். ஒருபுறம் எனது அத்யந்த நண்பருடன் மறுபடியும் நாடக மேடையில் ஆட வேண்டுமென்னும் விருப்பம் மற்றொரு புறம் சுகுண விலாச சபையைத் தவிர மற்ற சபை யொன்றில் எப்படி நான் ஆடுவது? முன் பின் தெரியாத மற்ற ஆக்டர்களுடன் எப்படி நான் ஆடுவது? இது எங்கள் சபைக்கு விரோதமாமா? என்று பலவாறு கலக்கப்பட்டவனாய், என் சந்தேகங்களை யெல்லாம் எனது அத்யந்த நண்பருக்குத் தெரிவித்தேன். அதன் பேரில் அவர் “இன்னும் நீங்கள் எத்தனை வருடம் நாடக மேடையில் ஆடப் போகிறீர்கள்? நீங்கள் நாடக மேடையை விட்டு நீங்கினால் நானும் அதைவிட்டு நீங்கப் போகிறேன்; ஆகையால் என் பொருட்டாவது இதற்குச் சம்மதிக்க வேண்டும் என்று பதில் எழுதினார். இந்தக் கடைசி நியாயத்திற்குப் பதில் சொல்ல முடியாதவனாய், நான் அப்படியே ஆகட்டும் என்று சம்மதித்தேன். அதன்படி மதுரைக்குப் போய் ஆடுவதற்கு முன்பாக, எங்கள் சபையின் நிர்வாக சபையாருக்கு இதையெல்லாம் தெரிவித்து, மதுரை டிராமாடிக் கிளப்பில் நானும் எனது அத்யந்த நண்பரான நாகரத்தினம் ஐயரும் ஆட, உத்தரவைப் பெற்றே பிறகு மதுரைக்குப் போனேன். நான் இதற்கு உத்தரவைக் கேட்டபொழுது, நிர்வாக சபையார் உத்தரவைக் கொடுத்தபோதிலும், அரை மனத்துடனேயே கொடுத்தார்கள் என்பதை நான் அறிவேன். அவர்களிடம் நான் அங்கு சென்று நடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்திற்கு வந்த காரணத்தை ஸ்பஷ்டமாய் ஒன்றும் ஒளியாது தெரிவித்தேன். “எனக்கோ வயதாகிறது. நான் இன்னும் சில வருடங்கள்தான் நாடக மேடையில் ஆட முடியும் நான் நாடக மேடையை விட்டு நீங்கினால், தானும் அதன் பிறகு ஆடப் போகிறதில்லை என்று நாகரத்தினம் ஐயர் சொல்லுகிறார். ஆகவே அவர் இன்னும் எத்தனை முறை ஆட முடியுமோ அதற்கு நான் உதவ வேண்டியது என் கடமையாகும்; அன்றியும் இதனால், நமது சபைக்கு ஒன்றும் கெடுதியில்லை. சென்னையில் நாங்கள் வேறு சபையில் ஆடினால் தவறாகும்; வெளியூரில் ஆடினால் அதனால் குற்றமில்லை; அன்றியும் நமது சபையார், வெளியூர்களில் போய் ஆடுகிற வழக்கத்தை விட்டுவிட்டிருக்கின்றனர். ஆகவே வெளியூர்களில் நாங்கள் ஆடுவதனால் நமது சபைக்கு நஷ்டமில்லை. மேலும் தமிழ் நாடக மேடையை முன்னுக்குக் கொண்டு வர வேண்டுமென்பது நமது சபையின் முக்கியமான கொள்கைகளில் ஒன்றல்லவா? ஆகவே, நமது சபையைப் போன்ற மற்ற சபைகளுக்கு நம்மாலானதை உதவி செய்ய வேண்டியது நமது கடமைதானே” என்று அவர்களுக்குச் சமாதானம் சொன்னேன். என்ன சொல்லியும் அவர்களில் அநேகர் திருப்தி அடையவில்லை; உண்மையைக் கூறுமிடத்து, எனக்கும் கடைசி வரையில், இவ்வாறு நாம் மற்றொரு சபையில் நடிப்பது நியாயமா, தவறா என்கிற சங்கை பாதித்துக் கொண்டிருந்தது. தமிழ்ச் சங்கங்களிருந்த மதுரை மாநகர்மீதும், அங்கு திருக்கோயில் கொண்டிருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் மீதும் எனக்குள்ள ப்ரீதியை முன்பே - இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். ஆகவே கடைசியாக, நாம் இப்படிச் செய்வது நமது சுய நன்மைக்காக ஒன்றுமில்லை, தமிழ் நாடக மேடைக்கு நாம் செலுத்த வேண்டிய கடமைக்காகவும்தானே இப்படி செய்கிறோம்; ஆகவே மீனாட்சி சுந்தரேஸ்வரர் பாரம், என்று அவர்கள் தலையில் இதைச் சுமத்தி, மதுரைக்குப் புறப்பட்டு நாடக தினத்திற்கு நான் ஐந்து நாள் முன்பாகப் போய்ச் சேர்ந்தேன். மதுரை டிராமாடிக் கிளப்பார், இங்கு “காலவ ரிஷி", “இரண்டு நண்பர்கள்” என்னும் இரண்டு நாடகங்களையும் ஆட வேண்டுமென்று நாகரத்தினம் ஐயருடன் கலந்து பேசித் தீர்மானித்தார்கள்; அதற்கு நானும் சரிதான் என்று சம்மதித்தேன். மதுரைக்குப் போய்ச் சேருமளவும், புதிய ஆக்டர்களுடன் சேர்ந்து நடிக்கிறோமே, அவர்கள் எல்லாம் சரியாக நடிப்பார்களா? நம்முடன் ஒத்து உழைப்பார்களா? நாடகங்கள் சரியாக நடிக்கப்பட்டு ஜனங்களை சந்தோஷிக்கச் செய்யுமா? நாடகமாடுவதில் நானும் எனது நண்பர் கே. நாகரத்தினம் ஐயரும் இதுவரையில் எடுத்திருந்த சிறிது பெயர் கெடாமலிருக்குமா? நாடகங்களுக்குச் சரியாகப் பணம் வசூலாகுமா?’ என்கிற பல சந்தேகங்கள் என் மனத்தைப் பாதித்தன. முக்கியமாக அவற்றுள் கடைசியாக எழுதிய சந்தேகம்தான் என்னை மிகவும் வாட்டியது; இந் நாடகங்களினால் மதுரை டிராமாடிக் கிளப்பாருக்கு, நஷ்டம் நேரிட்டால், ஏதோ கொஞ்சம் பெயர் பெற்ற ஆக்டர்களென்று இவர்களை வரவழைத்தோமே, இவர்களால் நமக்கு நஷ்டம் நேரிட்டதே என்று அவர்களும் வருத்தப்படக் கூடாது; சென்னை யிலுள்ள எனது நண்பர்களும் இங்கிருந்து அவ்வளவு தூரம் போய் ஆக்டு செய்தார்களே என்ன பிரயோஜனம் என்றும் ஏளனம் செய்யக்கூடாது என்பதுதான் ஜகதீசனுக்கு என் முக்கியப் பிரார்த்தனையாயிருந்தது. மதுரை ஸ்டேஷனுக்கு நான் போய் இறங்கியவுடன், மா. சுப்பிரமணிய ஐயரை முன்னிட்டு என்னை வரவேற்ற புதிய நண்பர்களின் பிரீதியானது அந்தச் சந்தேகங்களில் கால்பங்கை நிவர்த்தி செய்தது; அன்று சாயங்காலம், டிராமாடிக் கிளப்பார் இருப்பிடமாகிய விக்டோரியா எட்வர்ட் ஹாலுக்குப் (Victoria Edward Hall) போய் நான் மற்ற ஆக்டர்களைச் சந்தித்த பொழுது, இன்னும் கால்பங்கு தீர்ந்தது; இவ்விடத்தில் நாங்கள் ஆடிய முதல் நாடகமாகிய “காலவ ரிஷி” நாடகத்திற்கு ஆரம்பத்தில் தெய்வ ஸ்தோத்திரம் செய்த வுடன், மற்றுமுள்ள அரைப் பங்கு சந்தேகமும் அறவே நீங்கியது.
நான்கு நாள் முன்னதாகப் போய்ச் சேர்ந்தபடியால், அந்த நான்கு தினமும், எனது புதிய நண்பர்களுடன் இரண்டு நாடகங்களுக்கும் ஒத்திகை நடத்தினேன். எனது புதிய நண்பர்களாகிய இந்த டிராமாடிக் கிளப் ஆக்டர்கள் மிகவும் உற்சாகத்துடன் ஒத்திகைகளுக்கு வந்து கற்று வந்தனர். நன்றாய் நடிக்க வேண்டுமென்னும் அவர்களுக்கிருந்த ஊக்கமானது, அவர்களுக்கு நன்றாய்க் கற்பிக்க வேண்டுமென்னும் உற்சாகத்தை எனக்குத் தந்தது. சுகுண விலாச சபை ஆரம்பித்தபொழுது என்ன உற்சாகத்துடன் ஒத்திகைகள் நடத்தினேனோ அத்தனை உற்சாகத்துடன் இங்கும் நடத்தினேன் என்றே சொல்ல வேண்டும் இந்த ஒத்திகைகளை நடத்திய இடமாகிய விக்டோரியா எட்வர்ட் ஹால் மேல் மாடியானது, மிகவும் விசாலமானதாயிருந்த போதிலும், ஒரு கஷ்டம் மாத்திரமிருந்தது. இக் கட்டடத்தின் கீழே சாயங்காலங்களில் ஒரு சினிமா நடந்தேறி வருகிறது; சினிமா ஆரம்பமாகு முன்னும், இடைக்காலங்களிலும் அதைப் பார்க்க வரும் பாமர ஜனங்கள், பெருங் கூச்சலிடு கின்றனர்; இதனால் நிம்மதியாக ஒத்திகை நடத்துவது கஷ்டமாயிருந்தது; தற்காலத்திலும் இக்கஷ்டம் இருக்கின்றது.
அக்காலம் இந்த கிளப்பில் கண்டக்டராயிருந்த ஸ்ரீமான் தாதாச்சாரியார் அவர்கள் அனுமதியின் பேரில், நான் அவருக்குப் பதிலாக ஒத்திகைகள் நடத்தினேன். முன் பின் தெரியாத புதிய ஆக்டர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதென்றால், முதலில் கொஞ்சம் சங்கோசமாயிருந்தபோதிலும், அவர்களுக்கு என்னிடமிருந்த பிரீதியானது, அதை சீக்கிரத்தில் ஒழித்து விட்டது. இரண்டொரு நாளுக்குள், என் பழைய நண்பர்களுடன் நான் குலாவுவது போல் அவர்களுடன் குலாவ ஆரம்பித்தேன். ஒத்திகைகளை யெல்லாம் முடித்த பொழுது, என் மனத்தில் திருப்தி அடைந்தபோதிலும் நாடகங்கள் எப்படியிருக்குமோ என்னும் பயம் மாத்திரம் என்னை விட்டகலவில்லை.
இவ்வருஷம் டிசம்பர் 18ஆம் தேதி இரவு 9-30 மணிக்கு மதுரை பெரிய தகரக் கொட்டகையில், “காலவ ரிஷி” என்னும் எனது நாடகம் ஆடப்பட்டது. இந்நாடகமானது, வேறொரு சபையில் நான் முதல் முதல் நடித்த நாடகமான படியாலும், இதன் பிறகு இச்சபையின் அங்கத்தினராகச் சேர்ந்து பல நாடகங்களை நான் இதுவரையில் நடித்திருக்கிற படியாலும், இந்த நாடகங்களைப் பற்றியும், இச்சபையின் ஆக்டர்களைப்பற்றியும், என் அபிப்பிராயத்தைச் சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன்.
நாடக ஆரம்பம் இரவு 9½ மணிக்கு என்று பிரசுரிக்கப் பட்டிருந்தபோதிலும், ஏறக்குறைய 9 மணிக்கெல்லாம், நாடகக் கொட்டகையில் ஏராளமான ஜனங்கள் வந்து சேர்ந்தனர். என் வழக்கப்படி நான் அவர்களை நேரிற் பார்க்காமற் போனபோதிலும், அவர்களுடைய ஆரவாரத் தால் இதை நான் உணர்ந்தேன். இந் நாடகத்தில், அர்ஜுனனாக வரும் நான், கடைசி இரண்டு காட்சிகளில்தான் ஆக்ட் செய்ய வேண்டியவனாயிருக்கிறேன். நான் மேடையின்மீது தோன்றிய பத்து அல்லது பதினைந்து நிமிஷங்களுக்கெல்லாம் நாடகமானது முற்றுப் பெறும்! ஆயினும் என் வழக்கத்தின்படி சாயங்காலம் ஐந்து மணிக்கெல்லாம் கொட்டகைக்குப் போய், வேடம் பூண்டேன். அன்று முதல் இன்று வரையில் மதுரையில் நான் இந்த கிளப்பில் நடிக்கும் பொழுதெல்லாம், எனக்கு வர்ணம் தீட்டியவர், இங்கு எனக்குப் புதிய நண்பராய் வாய்த்த பி.கிருஷ்ண சாமி சாஸ்திரியார், பி. ஏ., பி.எல்., அவர்களே. இவர் என்னைப்போல் ஏறக்குறைய வயோதிகராயிருந்த போதிலும், இச்சபைக்கு இவ் வருடம் காரியதரிசியாயிருந்த போதிலும், சாயங்காலம் ஆக்டர்கள் எல்லாம் வருவதன் முன்பே கொட்டகைக்குப் போய்ச் சேர்ந்து, சுமார் 5 மணி முதல் 9 மணி வரையில் தான் ஒருவராக எல்லா ஆக்டர்களுக்கும் வண்ணம் தீட்டுவார். தன்னிலும் வயோதிகனான என்னை யௌவனமுடைய “ஆணில் அழகனான அர்ஜுனனாக”த் தோன்றும்படியாக, இவர் எடுத்துக் கொண்ட கஷ்டம் கொஞ்சமல்ல; அன்று முதல் இன்று வரை சுமார் பத்து நாடகங்களுக்கு இவ்வாறு எனக்கு மிகவும் சிரமம் எடுத்துக் கொண்டு, வண்ணம் தீட்டிய சாஸ்திரியார் அவர்களுக்கு, இதன் மூலமாக என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துவது தவிர, வேறு கைம்மாறு செய்ய வகையறியேன். எனது நண்பர் நாகரத்தினம் ஐயர் மாத்திரம், ரங்கவடிவேலுவைப்போல் தானாக வேஷம் பூணக் கற்றுக்கெண்டிருக்கின்றனர். நாற்பத்தாறு வருடங்களாகத் தமிழ் நாடக மேடையில் ஆடி வந்தும், முகத்தில் வர்ணம் தீட்டிக்கொள்ள வகையறியாது, கல் பிள்ளையாரைப்போல் உட்கார்ந்து கொண்டு, மற்றவர்கள் எனக்கு வேஷம் பூணுவதில் எல்லா வேலையையும் செய்யும்படி செய்கிறதை நினைக்கும் பொழுது, எனக்கு மிகவும் வெட்கமாய்த்தானிருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் எனக்கு இயற்கையாயுள்ள சோம்பேறித்தனம்தான் என்று நினைக்கிறேன்.
எல்லா ஆக்டர்களும் சித்தமானவுடன், மணிப்பிரகாரம் நாடகத்தை ஆரம்பிக்க வேண்டுமென்று, ஒன்பது மணிக்கெல்லாம் விநாயகர் துதி ஆரம்பிக்க வேண்டுமென்று என் புதிய நண்பர்களிடம் தெரிவித்தேன். அப்பொழுது அவர்கள் பிள்ளையார் பாட்டு என்று எங்கள் கிளப்பில் வழக்கமில்லை; ராஜராஜேஸ்வரியான அம்பிகை தோத்திரத்தைத்தான் நாங்கள் ஆரம்பப் பாட்டாக பாடுவது வழக்கம் என்று தெரிவித்தனர். அதன் பேரில் எனது நண்பர் நாகரத்தினம் ஐயரை ஒரு புறமாக வரவழைத்து, இவர்களுக்கு வழக்கமில்லாமற் போனாற் போகிறது; நமது வழக்கப்படி, பிள்ளையார் பாட்டை நமது மனத்திற்குள்ளாவது பாடிவிட்டு ஆரம்பிப்போம் என்று சொல்லி அவ்வாறே செய்தோம். இச் சபையின் அங்கத்தினனாகச் சேர்ந்த பிறகு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் பொறுத்துத் தான் இவர்களைப் பிள்ளையார் பாடல் ஒன்று பாடும் வழக்கத்திற்குக் கொண்டு வந்தேன்.
மேற்சொன்னபடி ஸ்தோத்திரப் பாடல்களானதும், நான் எனது நாடக ஆடையை அணிய அரங்கத்தின் பின்புறம் செல்ல, முதற் காட்சியில் நர்த்தனம் செய்ய வேண்டியிருந்த கே. நாகரத்தினம் ஐயர் என்னிடம் வந்து, இங்கு புதிதா யிருக்கிறபடியால், நான் நர்த்தனம் செய்யும் பொழுது நீங்கள் பக்கப் படுதா (Side Wing) அருகிலிருந்தால் எனக்குத் தைரியமும் உற்சாகமும் கொடுக்கும் என்று கேட்டுக் கொள்ள, அவ்வாறே அங்கு போய் உட்கார்ந்தேன். உடனே நாடக ஆரம்பத்திற்காக, மணியடித்து டிராப் படுதாவைத் தூக்கினவுடன், முதல் பாட்டைப் பாட வேண்டிய இந்திரன் வேடம் புனைந்த ஆக்டர், அபஸ்வரமாகப் பாட ஆரம்பித்தார்! இதென்னடா ஆரம்பத்திலேயே இப்படியிருக்கிறது என்று கொஞ்சம் பயமுற்றேன். “முதல் கோணல் முற்றும் கோணல்” என்னும் பழமொழி யொன்றிருப்பினும், என் விஷயத்தில் முதலில் ஏதாவது கெடுதியிருந்தால்தான் பிறகு எல்லாம் சரியாக முடிகிற தென்பதை எண்ணினவனாய், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பாரம் என்று பொறுத்திருந்தேன். உடனே அக்காட்சியில் என அத்யந்த நண்பர் கே. நாகரத்தினம் ஐயர், நர்த்தனம் செய்யத் தொடங்கியது முதல், வந்திருந்த ஜனங்களெல்லாம் கரகோஷம் செய்து சந்தோஷிக்க ஆரம்பித்தனர். பிறகு சுபத்திரையாக வந்த கே.நாகரத்தினம் ஐயரும், இன்னும் மற்ற ஆக்டர்களும் மிகவும் நன்றாய் நடித்தனர் என்பது என் அபிப்பிராயம். இருந்தும் கடைசிக் காட்சிக்கு முன் காட்சியில் நான் அரங்கத்தில் பிரவேசிக்க வேண்டிய சமயம் வந்தபொழுது, என் உடலில் ஒரு விதமான பயம் தோன்றியது! “எட்டு வருஷத்து எருமைக் கடா!” என்று ஒரு பழமொழி உண்டு. அப்படிப்பட்ட கடாவின் வயது ஐந்து கொண்டதாகி, சுமார் நாற்பது வருஷம் அரங்கத்தில் ஆடிய பிறகும், நமக்கு இந்த அரங்கப் பீதியா என்று நகைத்தவனாய், மனத்தைத் தைரியம் செய்து கொண்டு, இப்படிப்பட்ட சமயங்களில் அதைப் போக்க நான் கைகண்ட ஒளஷதமாய் வைத்திருக்கும், “பிராணாயாமம்" (Deep breathing) என்பதை ஐந்தாறு முறை அப்யசித்து, அரங்கத்திற்குள் பிரவேசிக்க வேண்டியவனாயினேன். இதற்கு முக்கியக் காரணம், இத்தனை வருடங்களாகியும், ஏதாவது புதிய நாடகத்தில் முதன் முறை ஆடுவதென் றாலும் அல்லது புதிய ஆக்டர்களுடன் ஆடுவதென்றாலும், எப்படியிருக்குமோ என்னும் பீதி, என்னைவிட்டு இன்னும் அகலாதிருப்பதே.
நான் மேடையில் தோன்றியதும் நிசப்தமாய் எல் லோரும் - என்னைக் கவனிக்கிறார்கள் என்பதைக் கண்டவனாய், என்னாலியன்ற அளவு முயன்று நன்றாய் நடித்துச் சபையோரை சந்தோஷிப்பிக்கப் பார்த்தேன். நான் அன்று நடித்த அர்ஜுனன் பாகம் மிகவும் சிறியது. அதை, சரியாக நடிக்காது ரசாபாசம் செய்வது சுலபம்; அதில் பெயர் எடுப்பது கஷ்டம். இந்நாடகத்தில் அர்ஜுனன் தோன்றும் இரண்டு காட்சிகளில் முதற் காட்சியாகிய இதில், சுபத்திரை தன்னை வஞ்சித்துத் தன்னிடமிருந்து வரம் பெற்றாள் என்பதை அறிந்த அர்ஜுனன், தன் முகத்தைத் திருப்பி அவளைப் பார்த்து “சுபத்திரை!” என்று கூறுமிடம், இதை நடிக்கும் ஆக்டர்களுக்கு ஒரு கட்டம். இந்த கட்டத்தில் தவறுவானாயின் அந்த ஆக்டர் ஒழிந்தவனே இந்நாடகத்தில்; பல ஆக்டர்கள், இந்த ஒரு பதத்தைச் சரியாக ஆக்டு செய்யத் தெரியாது ரசாபாசஞ் செய்ததைப் பன்முறை நான் பார்த்திருக்கிறேன். இந்தக் கட்டம் வந்த பொழுது, கொட்டகையிலிருந்த ஜனங்களெல்லாம் ஒரே கரகோஷம் செய்தபொழுது, இந்தக் கட்டத்தில் நாம் தவறவில்லை என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன். இந்த ஒரு வார்த்தையைக் கூறுமிடத்து, ஸ்ரீ கிருஷ்ணனுடன் போர் புரிய வேண்டுமே என்ற பயமுமிருக்க வேண்டும்; அப்படிச் செய்தவள் தன் ஆருயிர்க் காதலியாகிய கண்ணன் தங்கை என்னும் பரிவும் இருக்க வேண்டும்! இம் மூன்று ரசங்களையும் ஒருங்கே முகத்திலும், வாய்ச் சொல்லிலும் காட்டுவதுதான் கடினம். இதை இந்த அர்ஜுனன் வேடம் பூணும் எனது இளைய நண்பர்கள் கவனிப்பார்களாக.
இனி அன்றைத் தினம் என்னுடன் அரங்கத்தின்மீது நடித்த எனது புதிய நண்பர்களைப் பற்றிக் கொஞ்சம் எழுதுகிறேன். “காலவ ரிஷி” என்னும் நாடகத்திற்குத் தெலுங்கில் “சித்திரசேனோ பாக்கியானம்” என்று பெயர். இதன் கதாநாயகன், சித்திரசேனனே. அன்று இச் சித்திரசேனன் வேடம் பூண்டவர் எனது புதிய நண்பர் மா. சுப்பிரமணிய ஐயர் என்பவர். இதற்கு முன்பாக நான் மதுரைக்கு வந்திருந்தபொழுது, இவர் என்னைக் கண்டு என்னுடன் சம்பாஷித்திருப்பதாக இவர் எனக்குத் தெரிவித்திருக்கிறார்; ஆயினும் அது நான் எவ்வளவு யோசித்துப் பார்த்தபோதிலும் என் நினைவிற்குக் கொஞ்சமேனும் வரவில்லை. நான் இம்முறை மதுரைக்கு வந்தபொழுது, ரெயில் வண்டியை விட்டிறங்கியது முதல், ஒருவருக்கொருவர் பரிச்சயமாகி, விரைவில் சிநேகிர்களாகி விட்டோம். மதுரையில் எனக்குக் கிடைத்துள்ள ஆப்த மித்திரர்களில் இவர் ஒரு முக்கியமானவர் என்றே நான் கூற வேண்டும். இவ்வளவு வெகு சீக்கிரம் நாங்கள் நண்பர்களாகி விட்டதற்குக் காரணம், எனக்கிருப்பது போல் இவருக்கு முள்ள “தமிழ் நாடகப் பைத்தியமே!” இவர் மதுரையில் பிரபலமான வக்கீலாயிருந்த, காலஞ் சென்ற மாது ஐயர் அவர்கள் இரண்டாவது குமாரர்; என்னைப்போல் இள வயது முதல் தமிழ் நாடக மேடையின் மீதுள்ள பிரீதியால், அதில் தன் காலத்தைப் பெரும்பாலும் கழித்தவர். இந்த மதுரை டிராமாடிக் கிளப்பைச் சேருமுன், இரண்டொரு நாடக சபைகளில் நடித்திருக்கிறார் எனப் பிறகு அறிந்தேன். இவரிடம் நான் கண்ட ஒரு முக்கியமான குணம் என்ன வென்றால், நாடகமேடையில் ஒருவன் என்னென்ன கற்கக் கூடுமோ அவ்வளவையும் கற்க வேண்டும் என்னும் ஊக்கமே. யாராவது ஒரு ஆக்டரிடமிருந்து ஏதாவது கற்கவேண்டுமென்றிருந்தால் ஐம்பதல்ல, நூறு மைலாவது, தன் மோட்டார் வண்டியிற் போய்க் கற்று வருவார். என்னிடமிருந்து இவர் கற்க வேண்டியது அதிகமில்லாவிட்டாலும், என்னைச் சந்திக்கும் போதெல்லாம் (இதன் பிறகு இதுவரையில் மதுரைக்கு ஏழெட்டு தரம் போயிருக்கிறேன்; அச் சமயங்களிலெல்லாம், ஒரு நாளாவது இவர் என்னைப் பாராத நாளில்லை), ஏதாவது என்னிடமிருந்து அறிய விரும்புவார். இப்படிப்பட்ட “சிஷ்யர்கள்” எனக்கு அதிகமாயிராதது ஒரு விதத்தில் நலமாம்; இல்லாவிட்டால், எனக்கு உண்ணுவதற்கும் உறங்குவதற்கும்கூட அவகாசமிராமல் போம்!
இவர், கம்பீரமான உருவத்தையும் தோற்றத்தையும் உடையவர்; கண்கள் விசாலமாயும் சற்றுப் பெருத்தும் இருக்கும்; இதனால் இவருக்கு ஒரு கஷ்டமுண்டு; “திருடனை ராஜ முழி முழிக்கச் சொன்னால் என்ன செய்வான்?” என்பதற்கு நேர் விரோதமாக, ராஜ விழியை யுடைய இவருக்கு, திருடனைப் போல் விழிப்பது கடினமாயிருக்கிறது. ஆக்டர்களுக்கிருக்க வேண்டிய முக்கியமான குணம் இவரிடம் ஒன்றுண்டு. ஏதாவது ஒன்றைச் சொல்லிக் கொடுப்பதென்றால், ஏறக்குறைய ஒரு முறைக்கு மேல் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை; எவ்வளவு கஷ்டமான பாகமாயிருந்த போதிலும், இரண்டாம் முறைக்குமேல் சொல்லவேண்டிய நிமித்தியதில்லை. சங்கீதத்தில், முக்கியமாக இந்துஸ்தானி சங்கீதத்தில் நல்ல ராக ஞானமுடையவர்; ஹார்மோனியம், தபேலா முதலிய பக்கவாத்தியங்களையும் வாசிக்கும் திறமுடையவர். இவர் இன்று சித்திரசேனனாக மிகவும் நன்றாய் நடித்தார் என்பது என் தீர்மானம். ஆயினும் மதுரைவாசிகள் இவரை அதிகமாக சிலாகிக்கவில்லை என்பது என் அபிப்பிராயம்; “உள்ளூர் மாடு உள்ளூரில் விலை போகாது” என்னும் காரணத்தினாலோ? நான் அறியேன். இவரிடம் இன்னொரு அரிய குணம் என்னவென்றால், இவர் இச்சபையில் சாதாரணமாக முக்கிய “ராஜபார்ட்” ஆக்டு செய்து வந்தபோதிலும், எந்த அற்ப வேஷத்தைக் கொடுத்தபோதிலும், எடுத்துக்கொண்டு, அதற்கிசைய வேஷம் தரித்து நடித்து வருவார்! இதைப்பற்றிப் பிறகு நான் எழுத வேண்டி வரும்.
அன்று கதா நாயகியாகிய, சித்திரசேனன் மனைவியரில் மூத்தவளாகிய சந்தியாவளி வேடம் பூண்டவர், எனது புதிய நண்பர்களில் ஒருவராகிய சோமநாத ஐயரே. நான் மதுரைக்குப் போய்ச் சேர்ந்தவுடன் இவரைப்பற்றிதான் முதலில் நான் விசாரித்தேன். “இரண்டு நண்பர்கள்” நாடகத்தில், என்னுடன் சத்யவதியாக, யார் நடிக்கப் போகிறதென எனது நண்பர் நாகரத்தினத்தைக் கேட்ட போது, இவர்தான் என்று சோமநாத ஐயரைத் தெரிவித்தார். “சத்யவதி” நான் சிருஷ்டித்த ஸ்திரீ பாத்திரங்களில் ஒரு முக்கியமானதாம்; அந்தப் பாகத்தை நடிப்பது சுலபமல்ல; அன்றியும் என்னுடன் நடிப்பவர்கள் சரியாக இல்லா விட்டால், என்னால் சரியாக நடிக்க முடியாது என்பதை, இந்த நாடக மேடை நினைவுகள் வாசித்து வரும் எனது நண்பர்கள் இது வரையில் நன்றாய் அறிந்திருப்பார்கள். ஆகவே இவரைப்பற்றி நான் முதலில் விசாரிக்க வேண்டிய தாயிற்று. இவர் உருவத்தில் என்னைவிடக் கொஞ்சம் பருமனாயிருந்தபோதிலும், முகத்தில் ஸ்திரீகளுக்குரிய களையையுடையவர்; நன்றாகப் பாடும் சக்தி வாய்ந்தவர்; அன்றியும் ஏதாவது சொல்லிக் கொடுத்தால் உடனே அதை கிரஹித்துக் கொள்ளம் சக்தி வாய்ந்தவர்; சுப்பிரமணிய ஐயரிடம் இருப்பதுபோல் இவரிடமும், நாடகக் கலையை நன்றாய்க் கற்க வேண்டுமென்னும் அவாவுண்டு, ஆகவே இவருக்கு நான் ஒத்திகை செய்வது சுலபமாயிருந்தது. இவர் ‘காலவ ரிஷி’யில் சந்தியாவளியாக நன்றாய்ப் பாடி நடித்தார் என்பது என் அபிப்பிராயம்.
இந் நாடகத்தில், ஸ்ரீ கிருஷ்ணனுடைய பாகம் ஒரு முக்கியமானதென்பதை அதை வாசித்த எனது நண்பர்கள் அனைவரும் அறிவார்கள். சாதாரணமாகவே ஸ்ரீ கிருஷ்ணன் வேஷம் பூணுதல் எளிதல்ல அதிலும் நான் எழுதியபடி ஆக்ட் செய்வது, இன்னும் கொஞ்சம் கஷ்டம். இந்த வேடத்தை எனது புதிய நண்பர்களில் ஒருவராகிய பஞ்நாத ஐயர் பி.ஏ., பி.எல்., எடுத்துக் கொண்டு நன்றாய் நடித்தார். இவருக்கு இம்முறை அப் பாத்திரத்தை, என் அபிப்பிராயப்படி நடிக்கும் விதம் கற்பிக்க எனக்கு அவகாசமில்லாமற் போயிற்று. பிறகு இச் சபையார் எனது “சுபத்திரார்ஜுனா” என்னும் நாடகத்தை ஆடிய சமயம், இவருக்கு எனக்குத் தெரிந்தவரை ஸ்ரீ கிருஷ்ணனுடைய பாத்திரத்தை இவ்வாறு நடிக்க வேண்டுமென்று நான் கற்பிக்க, மிகவும் நன்றாக நடித்தார் என்பது, என்னுடைய அபிப்பிராயம் மாத்திர மன்று, எல்லோருடைய அபிப்பிராயமுமாம். ஸ்ரீ கிருஷ்ண பாத்திரத்தை அநேகர், அநேக சபைகளில் நடிக்க நான் பார்த்திருக்கிறேன். அநேக நாடகக் கம்பெனிகளிலும் பார்த்திருக்கிறேன்; ஆயினும் எனது நண்பராகிய அ. பஞ்சநாத ஐயரைப்போல் அக் கஷ்டமான பாத்திரத்தை மிகவும் பொருத்தமாக நடித்ததை, நான் பார்த்ததில்லை யென்றே சொல்ல வேண்டும். இந்த வேடத்திற்குத் தக்க உருவமும் குரலும், சங்கீத ஞானமும் நடிக்கும் திறமும் எல்லாம் இவரிடம் இயற்கையாய் அமைந்திருக்கின்றன.
இன்று இந் நாடகத்தில் நாரதராக வந்தது டாக்டர் பி.சி. சீதாராம் அய்யர்; இவருக்கு இவ்வேடம் பலவிதத்திலும் பொருந்தியதாயிருந்தது. நாரதர் உருவம் சற்றுக் குறுகிய தாயிருக்க வேண்டுமென்று எப்பொழுதும் நான் எண்ணினவன்; இதற்கிசைந்தபடி எனது புதிய நண்பராகிய சீதாராம அய்யர் என்னைவிட சற்றுக் குட்டையானவர். இவர் சங்கீதத்தில் நல்ல ஞானமுடையவர். தனியாகக் கச்சேரி பண்ணும்படியான சக்தியும் உடையவர்; ஆயினும் இவர் நாடக மேடைமீது வரும்பொழுது, இவரது பாட்டுகள் இவரது சங்கீதத் திறமைக்கேற்றபடி அவ்வளவு சோபிப்பதில்லை என்பது எனது அபிப்பிராயம்; எனது மதுரை நண்பர்களில் பலரும் இப்படியே அபிப்பிராயப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம், இவர் நாடக மேடையில் பாடும் பொழுது, சங்கீதத்தின்மீதே மனத்தைச் செலுத்தி பாட்டிற்குத் தக்கபடி நடிக்க வேண்டும் என்பதை அவ்வளவாகக் கவனிப்பதில்லை யென்பதாயிருக்கலா மென என் புத்திக்குப் படுகிறது; இதை என் நண்பராகிய இவர் கொஞ்சம் கவனிப்பாராயின், நாடக மேடையில் நல்ல பெயர் பெறுவார் என்பது என் அபிப்பிராயம்.
இந் நாடகத்தில் ஹாஸ்ய பாகத்திற்காக நான் எழுதி வைத்த ‘மண்டு’, ‘கமண்டு’ என்னும் இரு பாத்திரங்களும் சற்றுக் குண்டாக இருக்க வேண்டுமென்பது என் எண்ணம்; அதற்கிசைந்தபடி இச் சபையாரால் இந் நாடகத்தை நடத்தியபொழுது, இந்த இரண்டு பாத்திரங்களுக்கும் மெலிவடைந்தவர்களாயிராத் இருவர் கிடைத்தது எனக்கே திருப்தியையும் நகைப்பையும் தந்தது.
ரத்னாவளி வேடம், வக்கீலாகிய வெங்கடாச்சாரியார் * எடுத்துக் கொண்டார். இவர் இந்நாடகத்திற்கு வருவதற்காக, நாச்சியார் கோயிலிலிருந்து வந்து சேர்ந்தார். இவர் கர்நாடக சதுர் ஆடுவதில் வல்லமை வாய்ந்தவர். ‘ரத்னாவளி’ பாத்திரத்தில் யாரும் பெயர் எடுப்பது கடினம் என்பதைப்பற்றி முன்பே நான் எழுதியிருக்கிறேன்.
இன்று மேனகை வேடம் பூண்டவர் கணபதி சுப்பிரமணிய ஐயர்; சிவபெருமானது திருக்குமாரர்கள் இருவருடைய பெயரையும் ஒன்றாகச் சேர்த்துத் தன் பெயராகவுடைய இவர், ஸ்திரீ வேஷத்திற்கு மிகவும் பொருத்தமான உருவமுடையவர்; ஆயினும் உரக்கப் பேசம் சக்தியும் பாடும் சக்தியும் இல்லாமையால், இவர் இன்று அவ்வளவாக சோபிக்கவில்லை என்பது என் அபிப்பிராயம். மேற்குறித்த குறைகளையும் நீக்கி உரக்கப் பேசச் செய்து, சங்கீதமும் கொஞ்சம் கற்பாராயின் இவர் நாடக மேடையில் நல்ல பெயர் எடுக்கக்கூடும்.
இந் நாடகம் சிறியதாயிருந்தபடியால், ஏறக்குறைய இரவு ஒன்றரை மணிக்கெல்லாம் முடிந்து விட்டது. நாடகம் முடிந்தவுடன் என் வழக்கம்போல், என் வேஷத்தைக் களைந்து விட்டு, சற்று நேரம் சிரமபரிகாரமாக மேடையின் மீது உட்கார்ந்து, என் புதிய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபொழுது, நாடகம் எப்படியிருந்தது என்று வந்திருந்தவர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள் என்ற கேட்க, அவர்களில் சிலர், “எல்லாம் நன்றாய்த்தான் இருந்தது, ஆயினும், உங்களுடைய பாகம் என்ன அவ்வளவு சிறியதா யிருந்ததே” என்று கேட்டனர். “அதற்கு நான் என்ன செய்வது? இதற்கெல்லாம் வட்டியுடன், நாளைய நன்றை ஆட்டமாகிய “இரண்டு நண்பர்களில்” முதல் முதல் கடைசிவரை ஆக்டு செய்து தீர்த்து விடுகிறேன்” என்று வேடிக்கையாய்ப் பதில் உரைத்தது எனக்கு ஞாபகமிருக்கிறது.
இனி இவ்வருஷம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி இங்கு நடந்த, “இரண்டு நண்பர்களை”ப்பற்றி எழுதுகிறேன். இந் நாடகம் மேடையில் ஆடுவதற்கு அதிகக் கஷ்டமானது என்பதை எனது நண்பர்கள் முன்பே அறிந்திருக்கிறார்கள் என நம்புகிறேன். அப்படியிருந்தும் இதை இச் சபையார், ஆதி முதல் அந்தம் வரை, ஏராளமாய் வந்திருந்த சபையோர் மெச்சும்படியாக நடித்தது, மிகவும் மெச்சத்தக்கதே. தேசாபிமானியாகிய ஹைகோர்ட் வக்கீல் வைத்தியநாத ஐயர் பி.ஏ., பி.எல்., அவர்கள் இதைப்பற்றி மறுநாள் - என்னிடம் மிகவும் புகழ்ந்து பேசியது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது; நான் நடித்ததைப்பற்றியும் ஏதோ சிலாகித்துக் கூறினார். முதல் நாடகத்தில் நமக்கு அதிக பாகம் ஒன்றுமில்லையே, இதில் எப்படியாவது சபையோரைச் சந்தோஷிக்கச் செய்ய வேண்டுமென்று, நான் என்னால் இயன்ற அளவு பிரயத்தனப்பட்டேன். கடைசிக்காட்சிகளில் நான் பைத்தியக்காரனாக நடித்தது, எனக்கே கொஞ்சம் திருப்தியைத் தந்தது. சென்னையில் சுகுண விலாச சபையில் கடைசியாக இரண்டொரு முறை நடித்ததைவிட, இச்சமயம் நன்றாக நடித்தேன் என்பது என் அபிப்பிராயம். ஆயினும் வந்திருந்தவர்களுடைய மனத்தையெல்லாம் கவர்ந்தவர் என் அத்யந்த நண்பரான கே. நாகரகத்தினம் ஐயரே. இவர் மனோரமாவாக நடித்தது, மிகுந்த திருப்திகரமாயிருந்ததென எல்லோரும் ஒப்புக்கொண்டனர். இவர் தற்காலம் நடித்து வரும் பாத்திரங்களில் இது ஒரு முக்கியமானதென்பதற்குச் சந்தேகமில்லை. என்னுடன் சத்யவதியாக நடித்த சோமநாத ஐயர், நான் அவருக்குக் கற்பித்தபடி ஒன்றும் தவறாமல் நன்றாக நடித்தார். இவர் தேகாப்பியாசஞ் செய்து, சற்றுப் பருமனாயிருக்கும் தன் உருவத்தை மாத்திரம் கொஞ்சம் சரிப்படுத்திக் கொள்வாராயின், தென் இந்திய நாடக மேடையில் இவர் நற்பெயரெடுக்கலாம் என்பதற்கு ஐயமின்று. சுகுமாரனாக இன்று நடித்த மா. சுப்பிமணிய ஐயர், ஒத்திகைகளில் நடித்ததைவிட மிகவும் நன்றாய் நடித்தார். இதற்குக் காரணம் என்னவென்று பிறகு நான் வினவிய பொழுது; “உங்களுடன் நடிப்பதென்றால் எனக்கு ஒருவிதமான “குஷி” பிறந்து விட்டது. அதனால் தான் அப்படி நடித்தேன்” என்று விடை பகர்ந்தார். இதில் கொஞ்சம் முகஸ்துதியிருந்த போதிலும், கொஞ்சம் வாஸ்தவமுமிருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது; நாடக முழுவதிலும், ஏறக்குறைய எல்லாக் காட்சிகளிலும் என்னுடன் நடிக்கவேண்டி வந்த இவர், நன்றாய் நடிக்கும் போதெல்லாம் சபையோர் அறியாதபடி, “குட் குட்” (நல்லது நல்லது) என்று இவரை நான் உற்சாகப்படுத்திக் கொண்டு வந்தேன். நாடக மேடையில் நெடுநாள் பழகிய ஆக்டர்கள், மற்றவர்களை இவ்வாறு உற்சாகப்படுத்துவது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. இந்நாடகத்தில் கடைசிக் காட்சிகளில் நான் பித்தம் பிடித்தவனாக நடித்த காட்சிகளில், எனக்குப் பிற்காலம் இந்தப் பாத்திரத்தை நீங்கள் நடிக்க வேண்டி வரும். ஆகவே, பைத்தியக்காரனாக நடிப்பதை, சற்றுக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூற, அவரும் மிகவும் கவனத்துடன் அதைப் பார்த்து வந்தார். நான் நாடக மேடையில் நடித்த பல பாத்திரங்களில் பெரும்பாலான வற்றை நன்றாய் நடிக்கக் கூடியவர்கள், என் அபிப்பிராயத்தில், இரண்டு மூன்று பெயர்கள் தானிருக்கின்றனர், அவர்களில் இவர் ஒருவராம்; இந் நாடகமாடிய பிறகு, பல நாள் இவருக்கு நான் கடிதம் எழுதும் போதெல்லாம் “என் பிரியமுள்ள சுகுமாரனுக்கு” என்றே இவருக்கு எழுதுவது வழக்கமாயிருந்தது.
ஒரு சிறு பாகமாயிருந்த போதிலும், நடிப்பதற்குக் கஷ்டமான நித்யானந்தன் பாகத்தை, ரங்க அய்யங்கார் என்பவர் நன்றாக நடித்தார். எனது பழைய நண்பராகிய எஸ். ராஜகணபதி முதலியாருக்குப் பிறகு இவர்தான் இப் பாத்திரத்தை வெகு விமரிசையாக நடித்தார் என்பது என் அபிப்பிராயம்; என்ன காரணத்தினாலோ, இவர் இதே நாடகத்தை மறுமுறை இச் சபையார் ஆடியபோது, இவர் இவ் வேஷத்தில் நன்றாய்ச் சோபிக்கவில்லை.
இந் நாடகத்தில் இன்னொரு கஷ்டமான வேடம், குரு நாதன் என்பதாம். இவன் ஒருவிதமான பித்துப் பிடித்தவன். இதை டாக்டர் நாராயண ஐயர், எல்.எம்.எஸ்., பி.எஸ்.சி. என்பவருக்குக் கொடுத்திருந்தது. இவர் இதை நன்றாய் நடிக்கமாட்டார் என்று அவரது மதுரை நேசர்கள் கூறினார்களாம். அதன்மீது பயந்தவராய், இதைப்பற்றி கே. நாகரத்தினம் ஐயரிடம் நான் மதுரை போய்ச் சேருமுன் தெரிவிக்க, அவர் நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம், என்று ஆறுதல் கூறினாராம்; இதையெல்லாம் எனது அத்யந்த நண்பர், நான் மதுரைக்குப் போய்ச் சேர்ந்ததும் என்னிடம் கூறி, “நீங்கள் அவரைச் சரிப்படுத்திவிடுவீர்கள் என்று நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன். ஆகவே எப்படியாவது அவரை நன்றாய் நடிக்கச் செய்வது உங்கள் பாரம்” என்று என்னிடம் கூறினார். அதன் பேரில், இவரை காலைகளில், தனியாக நான் இறங்கியிருந்த நாகரத்தினம் ஐயர் வீட்டிற்கு வரச்சொல்லி, இப் பாத்திரத்தை நடிக்கும் விதத்தைச் சொல்லிக் கொடுத்தேன். நாடக தினம் “இவர் இவ்வளவு நன்றாக நடிக்க எங்ஙனம் கற்றார்?” என்று முன்பு இவரால் இப் பாத்திரம் சரியாக ஆட முடியாது என்று கூறினவர்கள் சொன்னதே, நான் எடுத்துக் கொண்ட கொஞ்சம் சிரமத்திற்குத் தக்க பரிசாகும். இதற்குப் பிறகு இந்த நாராயண ஐயர் மதுரைவாசிகளுள் எனது நெருங்கிய நண்பர்களுள் ஒருவரானார்.
இந்த நாடகத்தில் மிகவும் சிறிதான ஒரு பாகம், “ஜீமுத வாஹனன்” என்னும் மிருகங்களைப் பயிற்றுவிக்கும் ஒருவனுடையதே. இப் பாத்திரத்தை ஹைகோர்ட் வக்கீல் எம். ஈஸ்ர அய்யருக்குக் கொடுத்திருந்தது. இந்தப் பாகத்தில் பேச வேண்டிய வார்த்தைகள் பத்து வரிக்கு அதிகமிராது. ஆயினும் அவைகளைத் தக்கபடி பேசி இப் பாத்திரத்தை வெகு விமரிசையாய் நடித்தார். இதைப்பற்றி நான் இங்கு குறிப்பிடுவதற்கு ஒரு காரணமுண்டு. இவர் உருவத்தில், ஸ்ரீமீனாட்சியம்மன் திருக்கலியாணத்தில், வைகையாற்றை உண்ட சிவ பக்தனுக்குச் சமானமாயிருப்பார்; தேக காந்தியிலும் சிவப்புக்கு நேர் விரோதமான வர்ணமுடையவர். இவரை வெளியிற் பார்ப்பவர்கள், இவராவது மேடையின் பேரில் ஏறுவதாவது என்று சாதாரணமாய் நினைப்பார்கள். அவ்வண்ணமிருந்தும், இவர் ஜீமுதவாஹனனாக நடித்துப் பெயர் பெற்றதற்குக் காரணம், இவரை இப் பாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்ததும், அதை நன்றாய் நடிக்க வேண்டுமென்று இவருக்கிருந்த உற்சாகமுமேயாம். எனது அபிப்பிராயம், எந்த மனிதனும் நாடக மேடையில் ஏதாவது ஒரு பாத்திரத்தை நன்றாய் நடிக்கக்கூடும்; ஆனால் அதைக் கண்டெடுத்து அம் மனிதனுக்குக் கொடுப்பதுதான் கடினம். டாக்டர் சீதாராமய்யர் இந் நாடகத்தில் சூர சேனனாக நடித்தது சுமாராக இருந்தது, அ. பஞ்சநாத ஐயா பி.ஏ., பி.எல்., ஜெயதேவனாக நடித்தார்; இவர் நன்றாய்ப் பாடி நடித்தபோதிலும் இவருக்கு அப் பாத்திரம் பொருத்தமானதன்று என்பது என் அபிப்பிராயம். மற்றப் பாத்திரங்களைப்பற்றி நான் இங்கு எழுதக் கூடியது எனக்கொன்றும் ஞாபகமில்லை.
இந் நாடகம் நான் எழுதியவற்றுள் பெரிய நாடகமாகையால், இது முடிவு பெற ஏறக்குறைய மூன்று மணியாயிற்று. பிறகு எங்கள் வேஷங்கள் களைந்துவிட்டு ஆக்டர்களெல்லாம் சந்தோஷமாய் மேடையின்மீது உட்கார்ந்துகொண்டு நான்கு மணி வரையில் பேசிக் கொண்டிருந்தோம்.
இந்த இரண்டு நாடகங்களின் செலவு போக, இந்த கிளப் கட்டட பண்டுக்கு, நல்ல மொத்தம் மிகுதியாகும் என்று இந்தச் சபையின் காரியதரிசிகளில் ஒருவராகிய எஸ். வைத்தியநாத ஐயர் எனக்குத் தெரிவித்த பிறகுதான், என் மனம் பூரண உவகை பெற்றது. அதன் பேரில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரைத் துதித்துவிட்டு, அன்று இரவு (அல்லது காலை என்று சொல்ல வேண்டுமோ?) நான் உறங்கினேன்.
மறுநாள் சாயங்காலம் இந்தச் சபையின் கண்டக்டராகிய டி.வி.எஸ். தாதாச்சாரியார் பி.ஏ., பி.எல்., ஒரு ஈவனிங் பார்டி (Evening Party) கொடுத்தார். அதில் ஏதோ எங்களிருவர்களைப் பற்றி உபசார வார்த்தைகளாகச் சொன்னபோது, நான் பதிலுக்குச் சில வார்த்தைகள் சொல்ல வேண்டி வந்தது. அப்பொழுது நான் பேசிய சில வார்த்தைகள் என் ஞாபகத்திலிருக்கின்றன: “நான் எங்கள் சுகுண விலாச சபையின்றி வேறு சபையில் நடித்தது, அச் சபை ஸ்தாபிக்கப்பட்ட 1891ஆம் வருஷம் முதல், இதுதான் முதன்முறை. நான் இம்முறை மதுரைக்குப் புறப்பட்ட பொழுது, பட்டணத்து நண்பர்களை யெல்லாம் விட்டு அங்குப் போகிறோமே என்னும் மன வருத்தத்துடன் வந்தேன்; ஆயினும் இங்கு எனக்கு நீங்கள் செய்த உபசரணையினால், திரும்பி நான் போகும்பொழுது, நமது மதுரை நண்பர்களாகிய, உங்களைவிட்டுப் போகிறோமே என்னும் வருத்தத்துடன் போகிறேன்” என்று என் உள்ளத்தில் அச் சமயம் வாஸ்தவமாய்ப் பட்டதைத் தெரிவித்தேன், மறுநாள் இரவு ஒரு விருந்து நடந்தது. அச்சமயம் எனது மதுரை நண்பர்கள், மறுபடி நீங்கள் எப்பொழுது வந்து ஆக்ட்டு செய்வது என்று கேட்டார்கள்; எனக்கு ஞாபகம். இருக்கிறபடி, அச்சமயம் நான் எனது அத்யந்த நண்பருடன் கலந்து யோசனை செய்து, “இனிமேல் நாங்களிருவரும் அந்நியர்களாக உங்கள் சபையில் நடிப்பது நியாயமல்ல; எங்களிருவர்களையும் உங்கள் சபை அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று. சொன்னேன். உடனே, கொஞ்சமும் தாமதிக்காமல் இச் சபை காரியதரிசிகளிலொருவராகிய எஸ். வைத்தியநாத ஐயர் எங்களிருவருடைய கையொப்பங்களையும் அதன் பொருட்டு வாங்கிக் கொண்டார். இவரை இதற்கு முன்பே சென்னையில் இருந்த பொழுது தெரியும்; இவரது தந்தை யாகிய சௌந்தரராஜ ஐயர் எனது நெருங்கிய நண்பர்; ஆகவே இவரைப் பார்த்து “ஏனையா, எனக்குத்தான் சுகுண விலாச சபையில் கோமுட்டி என்று பெயர்; இந்த சபைக்கு நீங்கள் ஒரு கோமுட்டியாயிருக்கிறாற் போல் இருக்கிறதே!” என்று நகைத்துக்கொண்டு சொன்னேன். இச்சபையின் காரியங்களைத் தன் சொந்தக் காரியம்போல் அத்தனைப் பரிவுடன் இவர் பார்த்து வருகிறார் என்பது இச்சபையின் அங்கத்தினரெல்லாம் அறிந்த விஷயமே. இதன் பொருட்டு இவருக்கு “தம்முடு” (தம்பி) என்றே பெயர் வைத்தேன். இது கோமுட்டிகள் சாதாரணமாக உபயோகிக்கும் ஒரு பதம்; இச்சபையின் வரவை அதிகப்படுத்துவதிலும், செலவைக் குறைப்பதிலும் இவர் அசல் கோமுட்டியே; இவ்வாறு எழுதுவதற்காக இவர் என்மீது கோபங் கொள்ளமாட்டார் என்று உறுதியாய் நம்பியே இதை இங்கு எழுதலானேன்.
இச் சபையானது, எனது மதுரை நண்பர்கள் எனக்குத் தெரிவித்தபடி 1925ஆம் வருடம் ஸ்தாபிக்கப்பட்டதாம். ஆரம்பித்த இரண்டொரு வருடத்திற்குள் ஆக்டர்களுக்குள் ஏதோ காரணத்தினால் கலகம் பிறந்து, சில முக்கிய ஆக்டர்கள் இதை விட்டு விலகினராம்; அதன் பேரில் இச்சபையில் மிகுந்த ஊக்கமுள்ள, மேற்சொன்ன வைத்திய நாத ஐயர், டி.வி.எஸ். தாதாச்சாரியார், கிருஷ்ணசாமி சாஸ்திரிகள் முதலியோர், சென்னையிலிருந்து இங்கு வந்து சேர்ந்த, எங்கள் சபை மெம்பராகிய பி. ராமமூர்த்தி பந்துலுவின் உதவியை நாடி, எம். சுப்பிரமணிய ஐயர், பஞ்சநாத ஐயர், டாக்டர் சீதாராமய்யர், சோமநாதய்யர் முதலிய புதிய ஆக்டர்களைச் சேர்த்து, சபை அழியாதபடி ஸ்தாபித்தனராம். 1927ஆம் வருஷம் எங்கள் சுகுண விலாச சபை மதுரைக்குப் போனபோது, இச் சபையார் எங்கள் சபைக்கு விருந்தளித்ததைப்பற்றி முன்பே தெரிவித்திருக்கிறேன்; அச்சமயம், இச் சபையில் நான் ஒரு ஆக்டு செய்வேன் என்று கனவிலும் நினைத்தவனல்ல; அப்படிச் செய்வேன் என்று யாராவது சொல்லியிருந்தால், அது முடியாத காரியம் என்று பந்தயம் போட்டிருப்பேன். பின்னால் நடக்கப் போகிறதைப் பற்றி, முன்னால் பேதை மாந்தரால் என்ன உறுதியாய்க் கூற முடியும்?
இவ்வாறு நான் வேறொரு சபையில் நடித்து பிறகு மெம்பராகச் சேர்ந்ததற்கு ஒரு முக்கியக் காரணம், எனது அத்யந்த நண்பர் கே. நாகரத்தினம் ஐயர், மதுரைக்கு உத்யோக வழியில் மாற்றப்பட்டதென்பதற்குச் சிறிதும் சந்தேகமில்லை. அவர் மதுரைக்குப் போயிராவிட்டால், இந்தச் சபையில் நடிப்பதைப்பற்றிக் கனவிலும் நினைத்திருக்க மாட்டேன். நாகரத்தினம் ஐயர் ஒரு நாள் மதுரைக்குத் தன்னை மாற்றி விட்டார்கள் என்று எனக்குத் தெரிவித்த பொழுது, எனது அத்யந்த நண்பராகிய அவரை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே என்று நான் வருத்தப்பட்டது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. ஆயினும் அப்படி அவரை மதுரைக்கு மாற்றியிராவிட்டால், நான் பன்முறை மதுரைக்குப் போய் நாடகமாடவும், அங்குப் பல புதிய நண்பர்களைப் பெறவும் இல்லாமற் போயிருக்குமல்லவா? ஆகவே ஜகதீசன் நமக்கு ஏதாவது துக்கத்தை அனுப்பினால், அதுவும் ஏதோ நமது நன்மைக்காக இருக்கலாம் என்று நமது மனத்தை தைரியம் செய்துகொண்டு பொறுப்பதே நலம். எனது முதிர் வயதில் நான் கண்ட இவ்வுண்மையை எனது இளைய நண்பர்கள் முன்னமே அறிந்து எப்பொழுதும் சந்தோஷத்துடன் வாழ்வார்களாக!
இம் மதுரை சபையார், சற்றேறக்குறைய, சுகுண விலாச சபையின் கோட்பாடுகளையே பற்றி நடந்து வருகின்றனர்; சுகுண விலாச சபையின் முக்கியக் கருத்துகளில் ஒன்று, திராவிட நாடகங்களை அபிவிருத்தி செய்வதாம்; ஆகவே இத்தகைய சபைகளின் மூலமாகவும் அதை அபிவித்தி செய்வது நமது கடமையாகும் என்று என் மனத்தைத் திருப்தி செய்து கொண்டேன்.
இரண்டாவது நாடகம் இங்கு முடிந்த பிறகு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் “படியளந்த” உற்சவம் என்பதைப் பார்க்க விருப்பமுள்ளவனாய், இரண்டு மூன்று தினங்கள் இவ்விடம் தாமதிக்க வேண்டி வந்தது; இந்த இரண்டு மூன்று தினங்களும், எனது புதிய நண்பர்கள் வீட்டில் விருந்து சாப்பிடுவதற்கே எனக்குச் சரியாயிருந்தது. இடையில் ஒரு தினம், எனது நண்பர்களுடன் கள்ளழகர் எனும் சௌந்தரராஜப் பெருமாள் கோயிலுக்குப் போயிருந்தேன். அச் சமயம் அதன் தர்மகர்த்தர் என்னை மிகவும் உபசரணையுடன் வரவேற்று, கோயிலிலுள்ள விசேஷங்களையெல்லாம் காண்பித்து, ஸ்வாமி தரிசனம் செய்வித்தார். இவர் மதுரை டிராமாடிக் கிளப் அங்கத்தினருள் ஒருவர்; இவ்வாறு இவர் எனது சௌகர்யங்களை யெல்லாம் கவனித்து, ஸ்வாமி தரிசனம் செய்து வைத்ததும், இன்னும் இதைப் போன்ற பல ஸ்தலங்களில் எனது நண்பர்கள் எனக்குதவியதும், நான் ஏதோ தமிழ் நாடக மேடைக்காக உழைத்ததன் பலனே என்று நான் உறுதியாய் நம்புகிறேன். பிறகு, பிரிய மனமில்லாதவனாய் எனது புதிய நண்பர்களை விட்டுப் பிரிந்து சென்னை வந்து சேர்ந்தேன். வந்தவுடன் டிசம்பர் மாதத்திய நாடகங்களில், “தாசிப் பெண், வள்ளி” என்னும் இரண்டு நாடகங்களில், நானும் நாகரத்தினம் ஐயரும் நடித்தோம்.
31 ஆவது அத்தியாயம்
1930ஆம் வருஷத்தின் ஆரம்பத்தில் நான் புதியதாய் எழுதி அச்சிட்ட “கொடையாளி கர்ணன்” எனும் நாடகத்தை ஒத்திகை செய்து, மார்ச் மாதத்தில் இரண்டு முறை அதை ஆடினோம். இந் நாடகமானது, பல வருடங்களுக்குமுன், எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு இறந்தவுடன் ஆரம்பிக்கப்பட்டது. அச்சமயம் இனி நாடக மேடையின்மீது வேறொருவருடனும் நான் நடிப்பதில்லை என்று தீர்மானித்தபடியால், இந் நாடகத்தையும், “சகதேவன் சூழ்ச்சி” என்னும் நாடகத்தையும் எழுத ஆரம்பித்தேன். அப்பொழுது ஆரம்பித்தபோதிலும், நான் ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜாயிருந்த காலத்தில் அவைகளைப் பூர்த்தி செய்ய அவகாசமில்லாமற் போயிற்று; 1928ஆம் வருடம் நான் அவ் வேலையை விட்டு நீங்கின பிறகு, அவைகளிரண்டையும் பூர்த்தி செய்து, அவ் வருடத்தின் கடைசியில் அச்சிட்டேன்.
நான் சிறு வயதில் மகாபாரதத்தைப் படித்தது முதல், பரம தயாளுவான கர்ணனுடைய நற்குணங்கள் என்
31 ஆவது அத்தியாயம்
1930ஆம் வருஷத்தின் ஆரம்பத்தில் நான் புதியதாய் எழுதி அச்சிட்ட “கொடையாளி கர்ணன்” எனும் நாடகத்தை ஒத்திகை செய்து, மார்ச் மாதத்தில் இரண்டு முறை அதை ஆடினோம். இந் நாடகமானது, பல வருடங்களுக்குமுன், எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு இறந்தவுடன் ஆரம்பிக்கப்பட்டது. அச்சமயம் இனி நாடக மேடையின்மீது வேறொருவருடனும் நான் நடிப்பதில்லை என்று தீர்மானித்தபடியால், இந் நாடகத்தையும், “சகதேவன் சூழ்ச்சி” என்னும் நாடகத்தையும் எழுத ஆரம்பித்தேன். அப்பொழுது ஆரம்பித்தபோதிலும், நான் ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜாயிருந்த காலத்தில் அவைகளைப் பூர்த்தி செய்ய அவகாசமில்லாமற் போயிற்று; 1928ஆம் வருடம் நான் அவ் வேலையை விட்டு நீங்கின பிறகு, அவைகளிரண்டையும் பூர்த்தி செய்து, அவ் வருடத்தின் கடைசியில் அச்சிட்டேன்.
நான் சிறு வயதில் மகாபாரதத்தைப் படித்தது முதல், பரம தயாளுவான கர்ணனுடைய நற்குணங்கள் என் மனத்தைக் கவர்ந்தன. ஆகவே நான் ஒரு சிறிய நாடக ஆசிரியனானபிறகு, இந்தப் பாரத வீரனைப்பற்றி ஒரு நாடகம் எழுத வேண்டும் என்னும் அபேட்சை அதிகமிருந்தது. அந்த அபேட்சையை நிறைவேற்ற இத்தனைக் காலம் பிடித்தது. இந் நாடகத்தில் கர்ணனுடைய ஜீவிய சரித்திரத் தில் சில முக்கியமான அம்சங்களை விட்டுவிட்டதாக, எனது நண்பர்களில் சிலர் குறை கூறியுள்ளார். அவர்களுக்கு என் பதில் அடியில் வருமாறாம்: கர்ணன் மடிந்தவுடன் கர்ணனைக் கொன்றோமே என்று அர்ஜுனன் கர்வப்பட்ட தாகவும், அதை அடக்க ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியானவர், “அர்ஜுனா, கர்ணனைக் கொன்றது நீ மாத்திரமல்ல; வேதியர் ஒருவர், பரசுராமர், தேவேந்திரன், குந்தி, சல்லியன், நான், நீ ஆகிய ஏழு பெயர்!” என்றனர் என்பதை; என் கதையின் அஸ்திவாரமாக எடுத்துக்கொண்டு, அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கர்ணனது தயாளத்துவமே அவனது மரணத்திற்கு உடந்தையாயிருந்தது என்பதை நிரூபிக்க - இந்தச் சந்தர்ப்பங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு ஒரு நாடகமாக்கி எழுதினேன்; ஆகவே, மற்றும் சில விஷயங்கள் கர்ணனுடைய சரிதையில் குறிக்கத் தக்கனவாயினும், அவைகள் இந் நாடகத்தில் எழுதாது விடுத்தேன்.
இந் நாடகத்தை எங்கள் சபையார் நடித்தபொழுது, காலஞ் சென்ற கன்னையா. எங்களுக்குச் செய்த உதவியை, நான் எழுதாமல் விடுவது, செய்ந்நன்றி மறந்த குற்றத்திற்குள்ளாக்கும் என்னை; ஆகவே அதைப்பற்றி இங்கு எழுதுகிறேன்.
இச்சமயம் அவர் தன் “பகவத் கீதை” நாடகத்திற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்; அப்பொழுது, நான் கர்ணனைப் பற்றி எழுதிய இந் நாடகத்தைப் பற்றிக் கேள்விப்பட, அக் கதையின் விவரங்களைக் கேட்டறிந்து, தன்னால் இதற்கு என்ன உதவி செய்யக்கூடும் என்று கேட்டனுப்பினார். அப்பொழுது, எங்கள் சபையார் இந் நாடகத்திற்காக, கர்ணார்ஜுன யுத்தத்தின்போது உபயோகப்பட இரண்டு ரதங்கள் செய்ய வேண்டுமென்று தீர்மானித்து, அதற்காக ரூபாய் 200 எடுத்து வைத்திருந்தார்கள். இந்த இரண்டு ரதங்கள் உங்கள் மூலமாகச் செய்து கொடுக்க வேண்டுமென்று நாங்கள் கேட்க, இந்த இருநூறு ரூபாயையும் வாங்கிக் கொண்டு, அதற்கு மேல் அதற்கு இருமடங்கு, தன் கையை விட்டுச் செலவழித்து எங்கள் சபைக்கு இரண்டு ரதங்களைச் செய்து கொடுத்தார். அவற்றுள் அர்ஜுனனது ரதமானது, கர்ணன் நாகாஸ்திரப் பிரயோகம் செய்யும்போது, தேர்த்தட்டு, ஸ்ரீ கிருஷ்ணன் சூழ்ச்சியினால் இறங்கும்படி, தந்திரமான விசையையுடையதாய்ச் செய்யப்பட்டது; இவையன்றி யுத்தத்திற்கு வேண்டிய அம்புகளும், நாகாஸ்திரமும் முதற் காட்சிக்கு வேண்டிய பசுவும் அதன் கன்றும் எல்லாம் செய்து கொடுத்தார். இவைகளெல்லாம் அன்றி, நான் கர்ணனாக அணிய வேண்டிய கவச குண்டலங்களை, பொன் கில்டு உடையதாய்ச் செய்து கொடுத்தார். அன்றியும் நாங்கள் இந் நாடகத்திற்குக் கடைசி ஒத்திகை செய்த பொழுது, அருகிலிருந்து, இவைகளை யெல்லாம் எப்படி உப யோகிக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தார். இத் தகைய உதவி புரிந்த இத்தயாள குணமுடையவர்க்கு, எங்கள் சபையும் நானும் செய்யக்கூடிய கைம்மாறு என்னுளது? சாதாரணமாக ஆமெடூர் (amateur) சபைகளிலுள்ளவர்களே ஒருவருக்கொருவர் உதவிபுரிவதைக் காண்பது, கார்த்திகைப் பிறையைக் காண்பது போலாம்; நாடகமாடுவதைத் தன் ஜீவனோபாயமாகக் கொண்ட இவர், எங்கள் சபையின்மீது கொஞ்சமும் மாச்சரியமின்றி, இவ்வாறு உதவி செய்தது மிகவும் மெச்சத் தக்கதாம்.
இந் நாடகமாடிய இரண்டு முறையும், எனது அன்னையாக அதாவது குந்திதேவியாக, என் பழைய நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் நடித்தார். என்னைப் போல் இவருக்கு வயது அதிகமாக ஆகியும் இவர் மிகவும் நன்றாய் நடித்துப் பாடினார் என்பது வந்திருந்தவர்கள் எல்லோருடைய அபிப்பிராயம். வயதானபடியால் பாடும் பொழுது கொஞ்சம் சிரமப்பட்டுப் பாடினாலும், குரலில் பழைய இனிமை இன்னும் போகவில்லை. “கடுகு இறந்தாலும் காரம் போகாதல்லவா?”
இக் “கொடையாளி கர்ணன்” என்னும் நாடகம், இரண்டு வருடங்களுக்கு முன் நான் அச்சிட்டதாயிருந்த போதிலும், இதர சபைகளால் பதினேழு பதினெட்டு முறை ஆடப்பட்டிருக்கிறது; இதில் ஒரு ஸ்திரீ பாத்திரம் இருக்கிற படியால், ஸ்திரீ ஆக்டர்கள் அதிகமாயுடைத்தாயிராத சபைகளில் இதை எளிதில் ஆடலாம்.
இக் கர்ணனது நாடகத்தை எழுதி முடித்தவுடன், “சகதேவன் சூழ்ச்சி” என்கிற ஒரு சிறு நாடகத்தையும் எழுதினேன். இந் நாடகத்தில் ஒரு விசேஷமென்ன வென்றால், இதில் ஸ்திரீ பாத்திரமே கிடையாது! பள்ளிக்கூடங்களில் வாசிக்கும் மாணவர்கள் இதை எளிதில் ஆடலாம் என்பது என் கருத்து. மஹாபாரதத்தில் சகதேவன், பீமன், அர்ஜுனன் முதலிய பாத்திரங்களுக்கு முன்பாக அவ்வளவாகப் பிரகாசிப்பதில்லை ; ஆயினும் அவன் சிறந்த புத்திசாலி, மிகவும் பக்திமான் என்கிறதை விளக்க, அவன் தன் சூழ்ச்சியினால், ஸ்ரீகிருஷ்ணபகவானுடைய சூதை யறிந்து, அவரைத் தன் பக்தி வலையால் பிணைத்து, அவரிடமிருந்து தங்கள் ஐவரை மாத்திரம் பாரத யுத்தத்தில் எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று வரம் பெறுகிறான். இதையே இந் நாடகக் கதையாக வைத்து எழுதி உள்ளேன்.
இவ்வருஷம் ஜூலை மாதம் 19ஆம் தேதி எங்கள் சபையார் எனது “சுபத்திரார்ஜுனா” என்னும் நாடகத்தை மறுமுறை ஆடினார்கள். இதற்கு முக்கியக் காரணம் முதன் முறை இது எங்கள் சபையோரால் ஆடப்பட்டபோது, நானும் நாகரத்தின ஐயரும் மதுரையிலிருந்தபடியால், நாங்கள் முக்கியப் பாத்திரங்களை எடுத்துக் கொள்ள ஏலாமற் போனதே; எங்கள் சபையார் நாங்களிருவரும் இந் நாடகத்தில் அர்ஜுனனாகவும் சுபத்திரையாகவும் நடிப்பதைக் காண வேண்டுமென்று இந் நாடகத்தை மறுபடியும் வைத்துக் கொண்டார்கள். நாங்கள் ஆடியபோது முதன் முறை யாதோ காரணத்தினால் ஆடாமல் விட்டுப் போன கடைசிக் காட்சிகள் இரண்டு மூன்றையும் சேர்த்து நாங்கள் இம்முறை ஆடினோம்.
மேற்சொன்ன நாடகங்களன்றி இவ்வருடம் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி, எனது “கள்வர் தலைவன்” என்னும் நாடகமானது, எங்கள் சபையின் தொள்ளாயிரத்து நாடகமாக ஆடப்பட்டது. இந்நாடகமானது இதற்கு முன் எங்கள் சபையோரால் 32 வருடங்களுக்கு முன்தான் ஆடப்பட்டது. நாடக மேடை நினைவுகள் இதை மறுபடி ஆடாததற்குக் காரணம், நான் முன்பே இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். இதை இவ்வருஷம் எனது நண்பர் எஸ். சத்யமூர்த்தி ஐயர் ஆட் ஹாக் (ad hoc) கண்டக்டராயிருந்து நடத்தலாமா என்று என்னைக் கேட்டனர். “அதற்கு ஒரு ஆட்சேபணையு மில்லை; இதை இதர சபைகள் பன்முறை நடித்திருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் ஒரு கெடுதியும் சம்பவிக்கவில்லை; என்னை மாத்திரம் அதில் ஆடும்படி கேளாதீர்” என்று சொல்லி அதற்குக் காரணத்தையும் அவருக்குத் தெரிவித்தேன். அதன் பேரில் அவர் இந் நாடகத்தை எடுத்துக் கொண்டு ஆக்டர்களைத் தயார் செய்து ஆடி வைத்தார்.
1930ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் ஈஸ்டர் (Easter) விடுமுறையில், இரண்டாம் முறை நாங்களிருவரும் மதுரையில், மதுரை டிராமாடிக் கிளப் அங்கத்தினராக இரண்டு நாடகங்களை நடத்தினோம். இதற்குள்ளாக எனது அத்யந்த நண்பர் நாகரத்தினம் ஐயர் மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டார். ஆகவே நாங்களிருவரும் அங்குப் போக வேண்டியதாயிருந்தது; இதற்காகத்தான் அவருக்கு விடுமுறைக் காலமாகிய ஈஸ்டர் சமயத்தில் நாடகங்களை நடத்த வேண்டி வந்தது. என்னை நான்கு ஐந்து தினங்களுக்கு முன்பாக மதுரைக்கு வரும்படி எனது மதுரை நண்பர்கள் கேட்டுக் கொண்டபடி, முன்னதாகவே நான் போய் இங்கு நடத்த வேண்டிய “மனோஹரன்", “லீலாவதி சுலோசனா” இரண்டு நாடகங்களுக்கும் ஒத்திகை பார்த்து வந்தேன். முதல் நாடக தினத்திற்கு ஒரு நாள் முன்பாக எனது நண்பர் நாகரத்தினம் வந்து சேர்ந்தார். இந்த இரண்டு நாடகங்களும் மிகவும் விமரிசையாக நடத்தப்பட்டன என்பது என் அபிப்பிராயம். முதல் இரண்டு நாடகங்களைவிட, இவ்விரண்டு நாடகங்களுக்கு வசூல் அதிகமாயிருந்தது. இந்த இரண்டு நாடகங்களிலும் நான் இரண்டொரு சமாச்சாரங்கள் தவிர இங்குக் குறிக்கத்தக்க விஷயங்கள் ஒன்றும் அதிகமாயில்லை. நாகரத்தினம் ஐயர் விஜயாளாக நடித்தது மிகவும் கொண்டாடப்பட்டது. இரண்டாவது நாடகத்தில் எனது மதுரை நண்பர் மா. சுப்பிரமணிய ஐயர் அவ்வூர் பட்டிக்காட்டானைப் போல, சாரங்கன் பாத்திரத்தில் வேடம் புனைந்தது மிகவும் மெச்சப்பட்டது. அன்றியும் சாரங்கனை ஸ்ரீதத்தன் அடித்துத் தள்ளும் காட்சியில், என் கையில் வைத்திருந்த யோக தண்டத்தினால், வாஸ்தவத்தில் நன்றாய்ப் புடைத்து விட்டேன், அவரது உடம்பில் தழும்பேறும்படியாக! இதைப் பற்றிப் பேச்சு வரும் போதெல்லாம் சுப்பிரமணிய ஐயர், என்னை ஏளனம் செய்வதை இன்னும் விட்டிலர்.
நானும் நாகரத்தின ஐயரும் அடிக்கடி வந்து நாடகமாடுவதென்றால் நன்றாயிராது; நீங்களாக ஏதாவது நாடகங்களை ஆடுங்கள் என்று நான் கேட்டுக் கொண்டதன் பேரில், மதுரை டிராமாடிக் கிளப்பார் எனது “சுபத்தி ரார்ஜுனா” நாடகத்தை எடுத்துக் கொண்டனர். ஆயினும் நான் அதில் ஆடாவிட்டாலும், ஆக்டர்களுக்கு ஒத்திகை செய்து வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். அதற்கிசைந்து நான் மதுரைக்கு “மது விலக்குப் பிரசார” சம்பந்தமாகப் போக வேண்டிய சமயத்தில், அந்த நாடகத்தை வைத்துக் கொள்ளச் செய்து, அந்தச் சமயத்தில் இந் நாடகத்தில் ஒத்திகைகளை நடத்தி, அருகிலிருந்து இந் நாடகத்தை அவர்களைக் கொண்டு நடிக்கச் செய்தேன். இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு நான் மதுவிலக்குச் சங்கம் ஒன்றைச் சேர்ந்திருப்பதை முன்பே தெரிவித் துள்ளேன். 1929ஆம் வருஷம் கவர்ன்மென்ட் மந்திரிகளில் ஒருவராயிருந்த எனது நண்பர் எஸ். முத்தையா முதலியார் அவர்கள், துரைத்தனத்தாரும் மது விலக்குப் பிரசாரம் நடத்த வேண்டுமென்று சட்ட சபையில் அங்கத்தினரை ஆமோதிக்கச்செய்து, அதற்காகக் கொஞ்சம் ரூபாயைப் பிரத்யேகமாக எடுத்து வைத்து, சென்னை ராஜதானியில் ஒவ்வொரு ஜில்லாவிலும் மதுவிலக்குப் பிரசாரக் கமிட்டிகளை ஏற்படுத்தி, இக் கமிட்டிகளுக்கெல்லாம் மேல் பார்வையாக சென்னையில் ஒரு சென்டிரல் (Central) கமிட்டி ஏற்படுத்தி, அதன் கிளையாக பப்ளிசிடி (Publicity) கமிட்டி என்று ஒன்றை ஏற்படுத்தினார். அப்பப்ளிசிடி கமிடிக்கு என்னை அக்கிராசனாதிபதியாக ஏற்படுத்தினார். இது விஷயமாக நான் சில ஜில்லாக்களைப் பார்த்து வர வேண்டி வந்தது. இக் காரியமாக இவ்வருஷம் ஜூன் மாசம் கும்பகோணத்திற்கும் மதுரைக்கும் போக வேண்டி வந்தது. இந்த சந்தர்ப்பத்தில்தான் மதுரையில் “சுபத்திரார்ஜுனா" நாடகத்தை நடத்தினேன். மேற்கண்ட மது விலக்குப் பிரசார விஷயத்தைப் பற்றி இவ்வளவு விவரமாய் எழுதியதற்கு இன்னொரு முக்கியக் காரணம் உண்டு. அதாவது இந்த மது விலக்குப் பிரசார கமிட்டியாரின் தூண்டுதலினால் நான் இவ்வருஷம் (1930) “உண்மையான சகோதரன்” என்ற நாடகத்தை எழுதி முடித்தேன். மது விலக்கு விஷயமாக எங்கள் கமிட்டியார் பல விஷயங்களை யோசித்து வந்த பொழுது, அதிலிருந்த எனது நண்பர்களில் அநேகர், “மதுவினால் உண்டாகும் தீமைகளைப் பற்றி நீங்கள் ஒரு நாடகம் எழுதி, அதை ஜில்லாக்கள் தோறும் ஆடி வைத்தால், நாம் எடுத்துக் கொண்ட காரியத்திற்கு மிகவும் அனுகுணமாயிருக்கும்” என்று வற்புறுத்தினர். அதன் பேரில் “உண்மையான சகோதரன்” என்னும் நாடகத்தின் கதையை யோசித்து, அதன் சாராம்சத்தை அவர்களுக்குத் தெரிவிக்க, அவர்கள் மிகவும் குதூஹலத்துடன் அதை எப்படியாவது கூடிய சீக்கிரத்தில் நாடகமாய் எழுதி முடிக்க வேண்டுமென்று வற்புறுத்தினர். அதன் பேரில் இவ் வருஷம் நான் பெங்களூருக்குப் போயிருந்தபொழுது, பெரும்பாலும் அதை எழுதி முடித்தேன். உடனே அச்சிட்டு, எங்கள் கமிட்டியார் அனுமதியின்மீது ஜில்லா கமிட்டிகள் ஒவ்வொன்றிற்கும் சில புஸ்தகங்களை அனுப்பினேன். அதன்பேரில் இவ்வருஷத்திற்குள்ளாக பத்துப் பன்னிரண்டு முறை ஜில்லாப் பிரசார கமிட்டிகளால் இந்நாடகம் ஆடப்பட்டது. நான் எழுதிய நாடகங்களில், சுகுண விலாச சபையார் ஆடு முன்பாக மற்றவர்கள் ஆடிய நாடகம் இது ஒன்றாகும். சாதாரணமாக ஏதாவது நாடகமொன்றை நான் எழுதினால், அதை எங்கள் சபையில் நடித்து, ஏதாவது சீர்திருத்த வேண்டியிருந்தால் அப்படிச் செய்த பிறகே, மற்றச் சபைகளுக்கு அதை ஆட நான் உத்தரவு கொடுப்பது வழக்கம். இவ்வழக்கத்தினின்றும் இந்நாடகத்தில் நான் மாற வேண்டி வந்தது. நான் எழுதிய நாடகங்களுள், தின வர்த்தமானப் பத்திரிகைகளால் மிகவும் கொண்டாடப்பட்ட நாடகங்களில் இது ஒன்றாகும். இந்த நாடகம் எழுதும் போது எனக்கு ஒரு வேடிக்கையான கஷ்டம் நேர்ந்தது. கதையை எழுதுவதில் கஷ்டப்பட வில்லை அதிகமாக; கதாநாயகனுக்குப் பெயர் கொடுப்பதில் தான் அதிகக் கஷ்டப்பட்டேன்! இதுவோ, தற்காலத்திய ஜனசமூக (Social) நாடகம். ஆகவே கதாநாயகன் தற்காலத்தில் மனிதனாய் இருக்க வேண்டி வந்தது; ஆகவே, அவனை பிராமணனோ, க்ஷத்திரியனோ, வைசியனோ, சூத்திரனோவாக ஆக்கவேண்டி வந்தது. சாதாரணமாக சூத்திர ஜாதியில் தான் மதுபானம் செய்யும் கொடிய பழக்கம் அதிகமாகயிருக்கிற தென்பதைக் கவனித்தவனாய், அவனை ஒரு சூத்திரனாக சிருஷ்டித்தேன். (மற்ற ஜாதியார் குடிப்பதில்லை என்று நான் சொல்ல வரவில்லை, எல்லா ஜாதியிலும் குடியர்களிருப்பதைப் பல வருங்களாக அறிந்துள்ளேன்; ஆயினும் சூத்திரர்களில்தான் இக் கெட்டபழக்கம் அதிகமாயுண்டு என்பது என் அனுபவத் தீர்மானம்) சூத்திரனாக்கிய பிறகு, அவனை முதலியாராக்குவதா? நாயுடுவாக்குவதா? பிள்ளையாக்குவதா? இன்னும் மற்றெந்தப் பிரிவினனாகச் செய்வது? என்னும் சங்கை பிறந்தது. எந்தப் பிரிவினனாக்கினாலும் அப் பிரிவினர் என்மீது குறை கூறுவார்கள். இந்தத் தர்ம சங்கடத்தினின்றும் தப்புவதற்கு மார்க்கமில்லை என்று யோசித்து கதாநாயகனை நாயுடுவாக்கினேன்; பலராம நாயுடு என்றும் பெயர் கொடுத்தேன். பலராமன் என்று பெயர் கொடுத்ததற்குக் காரணம், பாகவதத்தில் ஸ்ரீ கிருஷ்ணனுடைய தமயனாகிய பலராமர், மதுபானத்தில் மிகுந்த பிரீதியுள்ளவர் என்பதைக் கவனிக்கத்தக்கது. கதாநாயகனுடைய தம்பிக்கு கிருஷ்ணசாமி என்னும் பெயரையே கொடுத்துள்ளேன். அன்றியும் மற்ற வர்ணத்தாரும் பிரிவினரும் மனஸ்தாபமடையாதபடி, கதாநாயகனுடன் மதுபானம் செய்யும் நண்பர்களில், ஒருவனை ஐயராகவும், ஒருவனை முதலியாராகவும், ஒருவனைப் பிள்ளையாகவும் ஆக்கினேன். இவ்வளவு முயற்சியெடுத்துக் கொண்டும் நான் கோரிய எண்ணம் ஈடேறாமல் போயிற்று! நாடகம் எழுதி முடித்தவுடன், அச்சிடுவதற்கு முன்பாக, நான் ஒரு அங்கத்தினனாய்ச் சேர்ந்திருக்கும் ஹிந்து குட் டெம்பிளார்ஸ் லீக் (Hindu Good Templars’ League) என்னும் மதுவிலக்குச் சபையில், அதைப் படித்துக் காட்டினேன்; அதைக் கேட்ட நண்பர்களெல்லாம் மிகவும் நன்றாயிருக்கிற தென மெச்சினர். அவர்களுள் ஒருவர் மாத்திரம் (அவர் ஒரு நாயுடு என்பதை நான் இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு எடுத்துக் கூற வேண்டியது அவசியமில்லை), என்னை ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய், “எல்லாம் நன்றாய்த்தானிருக்கிறது பிரதர் (Brother) ஒன்று மாத்திரம்தான் எனக்குப் பிடிக்கவில்லை! இந் நாடகத்தின் ஹூரோவை நாயுடுவாக எழுதியதை மாற்றி வேறு ஜாதியானாக எழுதக் கூடாதா?” என்று ரகசியமாகக் கேட்டார். அதற்கு நான் “அப்படிச் செய்வதற்கு ஆட்சேபணை இல்லை; ஆனால் ஒரு கஷ்டம்தானிருக்கிறது. அதற்கு ஏதாவது வழி சொல்லுவீரானால, உடனே மாற்றி விடுகிறேன்; நாயுடு என்பதை மாற்றி ஐயராக்கினால், ஐயர்கள் கோபித்துக் கொள்வார்கள்; ஐயங்கார் ஆக்கினால், அவர்கள் கோபித்துக் கொள்வார்கள் முதலியாராக்கினால், எங்களவர்கள் கோபித்துக் கொள்வார்கள்; பிள்ளையாக்கினால், பிள்ளைமார் கோபித்துக் கொள்வார்கள்; எந்த ஜாதியானாக எழுதிய போதிலும், அச் சாதியார் உங்கள் நியாயப்பிரகாரம் மன வருத்தமடைவார்கள்! ஆகவே இதற்கு ஒரு வழி நீங்களே சொல்லுங்கள்” என்று கேட்டேன். அதன்மீது இந்த ஆட்சேபணைக்குத் தக்க பதிலுரைக்க வகையில்லாதவராய், அவர் வேறு வழியில்லை என்று ஒப்புக்கொண்டனர். இதை நான் அந்நாடகத்தின் முகவுரையில், என்மீது எச் சாதியாரும் கோபியாதபடி எழுதியுள்ளேன். இந்த ஜாதிபேதக் கலகமானது நமது நாட்டை விட்டு எப்பொழுது அகலுமோ அறியேன். நாடகமெழுதுவதிலும் இக் கலகம் பிறந்தால், பிறகு எதில்தான் இது நுழையாது? இந்த விஷம் நமது தேசத்தைவிட்டு எப்பொழுது போகுமோ, அப்பொழுது தான் நமது தேசம் ஐக்கியப்பட்டு, நாம் முன்னுக்கு வருவோம். அப்பொழுதுதான் நமக்குச் சுயராஜ்யம் கிடைத்தாலும் நிலைக்கும் என்பது என் துணிபு; இதை விஸ்தரித்து “பிராம்மணனும் சூத்திரனும்” என்கிற பெயரையுடைய ஒரு நூதன நாடகத்தைச் சென்ற இரண்டு வருடகாலமாக எழுதி வருகிறேன். அது இன்னும் பூர்த்தியாக வில்லை. இறைவன் இன்னருளால் அதைச் சீக்கிரம் பூர்த்தி செய்து அச்சிடலாமென்றிருக்கிறேன். அந்நாடகம் அச்சிட்டு வெளியானவுடன், இருதிறத்தாரும் என்னை வைவார்கள் என்பது திண்ணம். ஆயினும், ஒரு நூலாசிரியன், எவ்வளவு அற்பனாயிருந்தபோதிலும் பட்சபாதமன்றி, ஒருவருக்கும் பயப்படாது எழுத வேண்டியது அவன் கடமை எனக் கருதியவனாய், இருதிறத்தாரிடமுள்ள குற்றங்களை அஞ்சாது எடுத்துக் காட்டி, அவர்கள் ஐக்கியப்பட்டாலொழிய நமது நாடு முன்னுக்கு வர மார்க்கமில்லை என்பதை அந் நாடகத்தின் மூலமாக, தமிழ் உலகத்திற்குத் தெரிவிக்கலா மென்றிருக்கிறேன். எல்லாம் வல்ல ஈசன் அப் பிரயத்தனத்திற்குத் தன் இன் அருள் பாவிப்பாராக! (இதை எழுதியது பல வருடங்களுக்கு முன் என்பதை இதை வாசிப்பவர்கள் கவனிப்பார்களாக.)
இவ் வருஷம் செப்டம்பர் மாதம், எனது அத்யந்த நண்பர் கே. நாகரத்தினம் ஐயரும் நானும், மதுரை டிராமாடிக் கிளப்பார் வேண்டுகோளின்படி மறுபடியும் மதுரைக்குப் போய், “ஊர்வசியின் சாபம்", “வள்ளி மணம்” ஆகிய இரண்டு நாடகங்களையும் நடத்தினோம்.
இச் சமயம் மதுரையில் நாங்களிருவரும் ஆடியது மூன்றாம் முறையாகும். இங்கு “ஊர்வசியின் சாபம்” நடத்தியபொழுது நான் அனுபவித்த ஒரு வேடிக்கையான கஷ்டத்தை எழுத விரும்புகிறேன். இந் நாடகத்தைப் படித்தவர்கள், இதன் முதற் காட்சியில் அர்ஜுனன் மௌனமாய்த் தவஞ் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நன்கு அறிவார்கள். சாதாரணமாக இக்காட்சி இருபத்தைந்து அல்லது முப்பது நிமிஷம் பிடிக்கும்; அதுவரையில், இரு கைகளையும் தலைமேற் கூப்பிக்கொண்டு, விழித்த கண்ணினனாய், பஞ்சாக்கினி மத்தியில் தவமிருப்பதுபோல் இருந்து வழக்கப்பட்டிருக்கிறேன். இம்முறை இந்நாடகம் மதுரையில் நடிக்கப்பட்டபொழுது, சரியாக ஒன்றேகால் மணிநேரம் அங்ஙனம் அசையாமல் இருக்க வேண்டி வந்தது! ரம்பை, மேனகை, திலோத்தமை, ஊர்வசி ஆகிய அப்சர ஸ்திரீகள், தனியாகவும் ஒன்றாகவும் கூடி கானம் செய்தது மன்றி, ரம்பை வேஷம் பூண்ட எனது மதுரை நண்பர் கணபதி சுப்ரமணிய ஐயர், நர்த்தனம் வேறு செய்தார். இதெல்லாம் பார்ப்பதற்கும் கேட்பதற்கும், சபையோர்க்கு சந்தோஷத்தைத் தந்தபோதிலும், அர்ஜுன வேஷதாரியாகிய எனக்கு, சிரமத்தைத் தந்தது; இந்த ஒன்றேகால் மணி நேரம் கைகளை உயர்த்தி அஞ்சலி ஹஸ்தனாய் இருந்தபடியால், காட்சியின் முடிவில் என் கை விரல்கள் விரைத்துப் போயின! அவைகளை என், நண்பர் ஒருவரைக் கொண்டு உருவச் செய்த பிறகே என் சுவா தீனத்திற்கு வந்தன! ஆயினும் இக் கஷ்டத்தை அறிந்த சபையோர் இக் காட்சியின் முடிவில், ஆடிப் பாடிய அப்சரஸ் ஸ்திரீகளுக்கு ஒரு மடங்கு கர கோஷம் என்றால், “சும்மா இருக்கும் சன்யாசிக்கு இரட்டைப் படி” என்பது போல், சும்மா இருந்த அர்ஜுன சன்யாசிக்கு, இரு மடங்கு கர கோஷம் அளித்தனர். இந்நாடகத்தின் இடைக் காட்சிகளில், எனது மதுரை நண்பர்கள் பஞ்சநாத ஐயரும் டாக்டர் சீதாராம அய்யரும் மிகவும் விமரிசையாக நடித்தனர் என்பது எனது அபிப்பிராயம் மாத்திரம் அன்று, சபையோருடைய அபிப்பிராயமும் அப்படியே.
இங்கு நடத்திய “வள்ளி மணம்” என்னும் நாடகத்தில், சுப்பிரமணியராக வந்த நான், அதிகமாகப் பாடாத குறையினை, வள்ளியாக வந்த எனது அத்யந்த நண்பர் நாகரத்தினம் ஐயர்; தான் வேண்டிய மட்டும் பாடி, சபையோரை மறக்கச் செய்துவிட்டார். இந் நாடகத்தில் வள்ளியாக அவர் நடித்தது மிகவும் நன்றாயிருந்ததென, அன்று இந்த நாடகத்தைப் பார்க்க வந்திருந்த இதர சபை அங்கத்தினர் உட்பட எல்லலோரும் ஒப்புக்கொண்டனர்.
இந் நாடகத்தின் இடைக் காட்சியொன்றில், எனது மதுரை நண்பர் மா. சுப்பிரமணிய ஐயர், மதுரையில் சுண்டல் விற்கும் ஒருவனைப்போல், அச்சம் அப்படியே வேஷம் தரித்து வந்ததை இப்பொழுதும் நினைத்துக் கொண்டாலும் எனக்கு நகைப்பு வருகிறது. இந்த வேடத்திற்கு அசலாகிய அச் சுண்டல் விற்பவனை இதற்கு முன் நான் பார்த்ததில்லை ; பிறகு ஒரு சமயம் நான் மதுரைக்குப் போனபோது அகஸ்மாத்தாய் வடக்குச் சித்திரை வீதியில் அவனைக் கண்டபொழுது, ஆச்சரியத்துடன் திடுக்கிட்டு இரண்டு நிமிஷம் அவன் அருகில் நின்று கவனித்தேன். அப்பொழுதுதான் எனது நண்பர் அவனைப் போல் வேஷம் தரித்ததைக் கண்டு, சபையோர் கரகோஷம் செய்ததன் அர்த்தத்தைக் கண்டேன்! எனது பழைய நண்பர் காலஞ்சென்ற வேதம் வெங்கடாசல ஐயருக்குப் பிறகு, மதுரை நண்பர் சுப்பிரமணியரைப்போல், எந்த வேடம் தரித்தாலும் அதற்குத் தக்கபடி சிரமம் எடுத்துக் கொள்பவரைக் கண்டேனில்லை, நான்.
இந்த வள்ளி மணம் நாடகம் முடிந்த மறுநாள் நடந்த ஒரு விருத்தாந்தத்தை இங்கு எழுத விரும்புகிறேன். இந் நாடகத்தில் “முருகன்” என்கிற பெயருக்குத் தக்கபடி எனது நண்பர் கிருஷ்ணசாமி சாஸ்திரிகள், அப்பொழுது ஐம்பத்தெட்டு வயதாயிருக்கும் என்னை, பதினாறு வயதுடைய வாலிபனைப் போல் வேஷம் போட்டு வைத்தார். இந்த சூட்சுமம் அறியாத, இதற்கு முன் என்னைப் பார்த்திராத வக்கீல் ஒருவர், எனக்கு இன்ன வயது என்பதைக் கேட்டபோது அதை நம்பாதவராய், என்னைக் காண வேண்டுமென்று இச்சை கொண்டு, நாடகத்தின் மறுநாள், நான் அச் சமயம் தங்கியிருந்த எனது மதுரை நண்பர் டாக்டர் நாராயண ஐயர் வீட்டிற்கு அவரைக் காண வேண்டுமென்னும் ஒரு வியாஜ்யத்தை வைத்துக்கொண்டு வந்து சேர்ந்து, என்னை நேரில் பார்த்தார். அப்பொழுதுதான், என் வயதைப்பற்றி அவருக்கு மற்றவர்கள் சொன்னது உண்மையென வெளியாயிற்றாம். இதையெல்லாம், பிறகு நாங்களிருவரும் கலந்து வார்த்தை யாடிய பொழுது, அவரே எனக்குச் சொன்னார். நாடக மேடையில் க்ரீன் ரூம் (Green Room) உத்தியோகஸ்தர்களின் திறத்தை அவர் அப்பொழுதுதான் முதல் முதல் கண்டார்!
இவ் வருஷம் எங்கள் சபையார், எனது நண்பர் வி.சி. கோபாலரத்தினம் ஐயங்கார் எழுதிய “ராஜ பக்தி” என்னும் நாடகத்தை நவம்பர் மாதம் 16ஆம் தேதி, சென்னை ராயல் தியேட்டரில் நடித்தனர். மஹாராஷ்டிரா பாஷையிலும், கன்னட பாஷையிலும் எழுதியிருந்த இந் நாடகத்தை, மிகவும் கஷ்டப்பட்டு தமிழில் எனது நண்பர் மொழி பெயர்த்து, மிகவும் சிரமம் எடுத்துக்கொண்டு ஒத்திகைகள் நடத்தி, இதை நடத்தி வைத்தார். தானே காதநாயகனான “விக்ராந்தன்” வேடம் பூண்டு வெகு விமரிசையாக நடித்தார்; இப் பாத்திரத்தைச் சற்று வேறு விதமாய் நடிக்க வேண்டுமென்று என் அபிப்பிராயமாயிருந்த போதிலும், அவர் சபையோரையெல்லாம் சந்தோஷிக்கச் செய்தனர் என்பதற்கு ஐயமின்று. இந் நாடகம் முதன் முறை நடித்த போது எங்கள் சபைக்கு ஆயிரத்துச் சில்லரை ரூபாய்க்கு மேல் வசூலாயிற்று. இதை டிசம்பர் மாதம் நாடங்களில் ஒன்றாக மறுபடியும் முக்கோடி ஏகாதசியன்று ஆடினோம். அப்பொழுதும் ஏராளமாய் ஜனங்கள் வந்தனர்.
இவ்வருடத்தின் கடைசியில் கிறிஸ்ட்மஸ் (Christmas) விடுமுறையில் எனது நண்பர் நாகரத்தினம் ஐயர் சேலத்திலிருந்து சென்னைக்கு வர, நாங்களிருவரும் இரண்டு மூன்று நாடகங்களில் இங்கு நடித்தோம்.
இவ் வருஷத்திய நிகழ்ச்சிகளில் இன்னும் ஒன்றைத் தான் குறிக்க வேண்டியிருக்கிறது. எங்கள் சபையின் வழக்கப்படி ஏப்ரல் மாதம் ஷேக்ஸ்பியர் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கொண்டாட்ட தினம் சாயங்காலம் ஆரம்பத்திற்கு ஐந்து நிமிஷம் முன்னாகத் தான், அன்று ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியைப்பற்றி உபன்யாசம் செய்ய இசைந்தவர், தான் அவ்விதம் செய்ய ஏதோ காரணத்தினால் முடியாமையை எங்களுக்குச் சொல்லியனுப்பினார். “செல்லுஞ் செல்லாததற்குச் செட்டியாரைப் பிடி” என்பது போல், எனது பால்ய நண்பர் வி.வி.ஸ்ரீனிவாச ஐயங்கார் அந்த உபன்யாசம் செய்வதற்கு என்னைப் பிடித்தார். நான் சபையின் பெயர் கெடாதபடி அதற்கிசைந்து, ஷேக்ஸ்பியர் நடனாக நடித்ததைப்பற்றி, ஒரு சிறு உபன்யாசம் செய்ய வேண்டி வந்தது. சமயம் வந்தபொழுது சபைக்குக் கைகொடுக்க வேண்டிவனாய் இன்னும் வாழ்ந்து வருகிறேன், இறைவன் அருளால்.
32 ஆவது அத்தியாயம்
இனி 1931ஆம் வருஷத்திய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறேன்.
இவ் வருஷம் அக்டோபர் மாதம் நான் மதுரைக்குப் போயிருந்தேன்; எனது அத்யந்த நண்பர் கே. நாகரத்தினம் ஐயர், சேலத்திலிருந்து அங்கு வந்து சேர்ந்தார். அக்டோபர் மாதம் 3ஆம் தேதியிலும் 5ஆம் தேதியிலும் இரண்டு நண்பர்கள்", “சுபத்திரார்ஜுனா” என்னும் இரண்டு நாடகங்களிலும் நாங்கள் நடித்தோம். மதுரை டிராமாடிக் கிளப்பில் நாங்களிருவரும் நடித்தது இது நான்காம் முறையாகும். இரண்டு நண்பர்கள் நாடகத்தில் சற்றேறக் குறைய இரண்டு வருடங்களுக்கு முன் ஆடிய ஆக்டர்களே நடித்தோம்; ஆயினும் இம்முறை நான் சுந்தராதித்யனாக நடித்தது எனக்குத் திருப்திகரமாயில்லை ; இதற்கு முக்கியக் காரணம், எனது உடம்பில் ஒருவித சிரங்கும் கட்டியும் கண்டு அவற்றால் நான் பீடிக்கப்பட்டிருந்ததேயென நம்புகிறேன். வருகிறேன் என்று ஒப்புக்கொண்டபின், வராமற் போவது தவறென எண்ணி, நான் மதுரைக்குப் போய் நடித்தேனே யொழிய, என் தேக சௌகர்யத்தை மாத்திரம் கருதியிருப்பேனாயின், நான் போயிருக்க மாட்டேன். தினம் எனது நண்பர் டாக்டர் சீதாராம ஐயரிடம் போய் என் கட்டிகளுக்கெல்லாம் சிகிச்சை செய்து கொண்டு, பிறகே இவ்விரண்டு நாடகங்களிலும் நடிக்க வேண்டிய வனாயிருந்தேன். எப்படியாவது வாக்குத் தவறாதபடி இவ்விரண்டு நாடகங்களிலும் நடித்தாக வேண்டும் என்பதே என் பெருங்கவலையாயிருந்தது. இந்த ஸ்திதியில், மிகவும் கஷ்ட பாகமான சுந்தராதித்யன் பாத்திரத்தில் நான் நன்றாய் நடிக்காதது ஓர் ஆச்சரியமன்று. தேக சிரமம் அதிகமில்லாமல் நடிக்கக்கூடிய அர்ஜுனன் பாத்திரத்தை, ஏறக்குறைய திருப்திகரமாகவே நடித்து முடித்தேன். இதனால் இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்பும் விஷயமென்னவென்றால், நாடக மேடையில் பெயர் பெற விரும்பும் இளைய ஆக்டர்கள், கூடுமானவரை நல்ல தேக ஸ்திதியிலிருக்கும்போதுதான் நடிக்க வேண்டு மென்பதே; நாடகமாடுவதையே ஜீவனோபாயமாக உடையவர்களைவிட, ஆமெடூர் (Amateur) ஆக்டர்களாகிய நாம், இந்த சௌகர்யமுடையவர்களாயிருக்கிறோம் அவர்கள் தங்கள் பிழைப்பின் பொருட்டு, தேகம் என்ன அசௌக்கியமாயிருந்தபோதிலும் ஆக்டு செய்ய வேண்டியவர்களாயிருக்கிறார்கள். நமக்கு அந்தக் கட்டாயம் கிடையாது; ஆகவே, முக்கியமான பாத்திரங்களை - அதிலும் கஷ்டமான பாத்திரங்களை - நல்ல தேக ஸ்திதியிலிருக்கும்போதுதான் நாம் நடிக்க வேண்டும்.
இம் முறை நடித்த சுபத்திரார்ஜுனா நாடகமானது சபையோரால் மிகவும் சிலாகிக்கப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணனாக நடித்த எனது மதுரை நண்பர் பஞ்சநாத ஐயர், மிகவும் விமரிசையாக நடித்தார்; இப் பாகத்தில் இவருக்கு இணையில்லையென்பது என் தீர்மானமான அபிப்பிராயம். மதுபானப் பிரியராகிய பலராமர் பாத்திரமானது, மிகவும் ஒழுங்காய் எனது நண்பர் மா. சுப்பிரமணிய அய்யரால் நடிக்கப்பட்டது. எனது நண்பர் டாக்டர் நாராயண ஐயர் மேற்கொண்ட “லம்போதரன்” பாகம் சிறிதாயினும், அதை மிகவும் நன்றாய் நடித்து சபையோரைக் களிக்கச் செய்தார்; ஆயினும் லம்போதரன் என்னும் பெயருக்கிசைய இவருக்கு தொப்பை மாத்திரம் இல்லாமற் போச்சுது! மதுரையில் இம்முறை நடத்திய இரண்டு நாடகங்களும், இதற்கு முன் இரண்டு முறை நடத்திய நாடகங்களும் மதுரை மாசி வீதி நாடகக் கொட்டகையில் நடத்தப்பட்டன. இவ் வருஷம் எங்கள் சுகுண விலாச சபை, முதல் ஐந்தாறு மாதம் கொஞ்சம் நித்திரை போயிற்றென்றே சொல்ல வேண்டும். கடைசியில்தான் கொஞ்சம் விழித்துக் கொண்டது. டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நான் தமிழில் எழுதிய “சகுந்தலை” நாடகமானது ஆடப்பட்டது. இந் நாடகமானது 1929ஆம் வருடத்தில் என்னால் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்டது. இதைப்பற்றி எனது நண்பர்களுக்குச் சில சமாச்சாரங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
எனது நாடக மேடை நினைவுகளை ஆதி முதல் வாசித்துகொண்டு வரும் நண்பர்கள், நான் 1891ஆம் வருஷம் இந் நாடகத்தை, மானியர் வில்லியம்ஸ் (Monier Williams) என்பவர் காளிதாசரியற்றிய சம்ஸ்கிருத நாடகத்தை ஆங்கிலத்தில் மொழியெர்த்ததை, தமிழில் மொழி பெயர்க்க யத்தனித்தேன் என்பதைக் - கவனித்திருக்க கூடும். அச்சமயம் முதல் நான்கு அங்கங்களை மொழி பெயர்த்ததாக எனக்கு ஞாபகம்; ஏதோ சில காரணங்களால் அதைப் பூர்த்தி செய்யாது விட்டேன். அச் சமயம் சம்ஸ்கிருதத்தில் எனக்கு ஒரு எழுத்தும் தெரியாது. பிறகு நான் வக்கீலான பின், சுமார் 1904ஆம் வருடம், ஹிந்து சியலாஜிகல் ஹைஸ்கூலில் சம்ஸ்கிருத உபாத்தியாயராயிருந்த காலஞ் சென்ற அப்பாசாமி சாஸ்திரியாரை எனது சம்ஸ்கிருத உபாத்தியாயராக ஏற்படுத்தி, காலையில் தினம் கொஞ்சம் கொஞ்சமாக சம்ஸ்கிருத பாஷையைக் கற்க ஆரம்பித்தேன். என் வீட்டிலிருந்த சிறு குழந்தைகள் நகைக்கும்படி, சம்ஸ்கிருத எழுத்துகளை, பலகையில் எழுதிக் கற்க ஆரம்பித்தேன்! என் சம்ஸ்கிருத வாத்தியார், எனக்கு முதல் நாள் சொன்ன ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகத்தின் தாத்பர்யம் இப்பொழுதும் என் நினைவில் இருக்கிறது. அதாவது, காரியசாதன விஷயத்தில் மனிதர்கள் மூவகைப்படுவார்கள் அதமர்கள், ஒரு காரியத்தை ஆரம்பித்தவுடன், அதன் கஷ்டங்களைக் கண்டு பயந்தவர்களாய், முதலிலேயே கைவிடுவார்கள்; மத்திமர்கள், கொஞ்சதூரம் பிரயத்தனப் பட்டு, பிறகு அதை முடிக்க அசக்தர்களாய்க் கைவிடுவார்கள்; எவ்வளவு கஷ்டங்கள் நேரிட்டபோதிலும், அவைகளை ஒரு பொருட்டாகப் பாராட்டாமல், அவைகளை வென்று அக் காரியம் சித்திபெறும் வரையில், கைவிடாது நிர்வகிப்பவனே உத்தம புருஷனாவான் என்பதே. இதையே என் குருவின் போதனையாக் கொண்டு, பதினெட்டு வருடம், தினம் கொஞ்சம் கொஞ்சமாக, கஷ்டமான சம்ஸ்கிருத பாஷையைக் கற்றேன். பால பாடங்கள் ஒன்றிரண்டான பின், ஸ்ரீமத் ராமாயணத்தை எடுத்துக் கொண்டு முற்றிலும் படித்தேன்; அன்றியும் அதிலும் பெரிய கிரந்தமான வியாசபாரதத்தையும் இரண்டு பர்வங்கள் தவிர மற்றெல்லாவற்றையும் படித்தேன். பழைய காலத்து சாஸ்திரியாராகிய என் சம்ஸ்கிருத உபாத்தியாயர், ஆதியோடந்தமாக அக்கிரந்தத்தைப் படிக்கலாகாது என்னும் கொள்கை கொண்டிருந்தவர். அன்றியும் ஹிதோபதேசம், ரகுவம்சம், பர்த்ருஹரி சதகங்கள் முதலிய கிரந்தங்களையும் அவரிடம் படித்தேன்; நான் நாடகங்கள் எழுதுவதற்கு உபயோகமாகும்படி சகுந்தலை, நிக்ரமோவசி, மாளவிகாக்னி மித்ரம், வேணி சம்ஹாரம், மிருச்சகடிகம், உத்தரராம சரித்திரம், பிரபோத சந்திரோதயம், சங்கல்ப சூர்யோதயம் முதலிய நாடகங்களையும் அவரிடம் கற்றேன். மேகசந்தேசம், கிராடார்ஜுனியம் முதலிய காவியங்களையும் வாசித்தேன். அவராகத் தனக்கு வயது முதிர்ந்தபடியால் இனி உங்கள் வீட்டிற்கு வந்து பாடம் சொல்ல முடியாது என்று சொல்லுகிற வரையில் நான் அவரைக் கைவிடவில்லை ; அவர் காலகதியான பிறகும், தினம் கால்மணி சாவகாசமாவது ஏதாவது காலையில் சம்ஸ்கிருதம் படித்து வருகிறேன்
இப்பொழுதும். தற்காலம் நான் சம்ஸ்கிருதத்தில் பாண்டித்யமுடையவன் என்று சொல்லிக்கொள்ள அசக்தனாயிருந்தபோதிலும், சம்ஸ்கிருதம் கொஞ்சம் அறிவேன் என்றாவது சொல்லிக் கொள்ளக்கூடும். இவ்வாறு நான் கொஞ்சம் கற்றதனாலும் அடைந்த பலன் மாத்திரம் அதிகம். கிரீக் (Greek) பாஷையறியாத ஆங்கிலக் கவி கீட்ஸ் (Keats) என்பவர் முதன் முறை, கிரீக் பாஷையில் றோமர் ஆதிகவியொருவர் இயற்றிய சிறந்த கிரந்தமாகிய இலியட் (lliad) என்பதை சாப்மான் (Chapman) என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததைப் படித்த பிறகு, அதனால் தனக்குண்டான மனக்கிளர்ச்சியை, ஒரு கவியினால் மிகவும் அழகாய் விவரித்திருக்கின்றார். அதைப்போன்ற மனக்கிளர்ச்சியை, சம்ஸ்கிருதம் கற்று, அதிலுள்ள இதிகாச, புராண, நாடகக், காவியங்களில் சிலவற்றைப் படித்த பிறகு, நான் கொஞ்சம் அடைந்தேன் என்றே நான் சொல்ல வேண்டும். அன்றியும் ஒரு உபன்யாசத்தில் நான் கூறியபடி, சம்ஸ்கிருதம் படித்ததனால், தமிழில் எனக்குள்ள சிறு பாண்டித்யமும், அன்பும் அதிகமாய்ற்று என்றே நான் நிச்சயமாய்க் கூறக்கூடும். இவ்வாறு சம்ஸ்கிருத்தைக் கற்றுப் பயனடையும்படி என்னைத் தூண்டியவர், எனது பால்ய நண்பரான வி.வி.ஸ்ரீனிவாச ஐயங்காரே. நான் இவ் வயதில், எனது கோபத்தை ஏறக்குறைய எல்லாவிதத்திலும் அடக்கிய போதிலும், தமிழை தூஷிக்கும் சம்ஸ்கிருத வித்வான்களைக் கண்டாலும் அல்லது சம்ஸ்கிருதத்தைத் தூஷிக்கும் தமிழ் வித்வான்களைக் கண்டாலும் அக் கோபமானது அதிகமாக மூள்கிறது. நமது தேசத்திலுள்ள மற்றச் சச்சரவுகளுடன், இந்த “வடகலை", “தென்கலை” சச்சரவும் நம்மைப் பாழாக்க வேண்டுமா! இச் சச்சரவுகளெல்லாம் நீங்கி நமது தேசம் ஒருமைப்பட்டாலொழிய, நாம் முன்னேற்றமடைவது என்பது கனவிலும் கனவாம். இவ்விரண்டு பாஷைகளையும் பற்றி என் அபிப்பிராயம் என்ன வென்றால், இவ் விரண்டையும் ஒருவன் தன் தாய் தந்தையரைப் போல் போற்ற வேண்டுமென்பதே; ஒருவனுக்குத் தாய் உயர்ந்தவளா, தந்தை உயர்ந்தவனா என்று வாதாடுவதில் என்ன பிரயோஜனம்? இவ்விரு பாஷைகளில் ஒன்றைத் துவேஷிப்பவன், தன் தாய் தகப்பனார்களில் ஒருவரைத் துவேஷிக்கும் பாவத்திற்குள்ளாவான் என்பது என் அபிப்பிராயம்.
மேற்சொன்னபடி நான் சம்ஸ்கிருதம் கொஞ்சம் கற்றதற்குக் கைம்மாறாக அப்பாஷையிலுள்ள சில முக்கிய நாடகங்களை, தமிழ் உலகம் அறியும்பொருட்டு மொழி பெயர்த்து அச்சிட வேண்டுமென்று தீர்மானித்தே, சாகுந்தலம், விக்ரமோர்வசியம், மாளவிகாக்னிமித்ரம் என்னும் மூன்று சம்ஸ்கிருத நாடகங்களையும் என் சக்திக்கு இசைந்தவாறு மொழி பெயர்த் தேன். இவைகளை நான் அச்சிட்டபொழுது, முக்கியமாக இவைகள் தமிழ் நாடக சபைகளுக்கு உபயோகப்பட வேண்டும் என்னும் எண்ணமுடையவனாயிருந்தது பற்றி, அந் நாடகங்களில் சில காட்சிகளைக் குறுக்கி, சில வர்ணனை சுலோகங்களை (அவைகள் நாம் படிப்பதற்கு மிகவும் அழகாயும் ருசியாயுமிருந்தபோதிலும் நடிப்பபதற்கு அவசியமானவை அல்லவென்று) மொழி பெயர்க்காது விட்டுள்ளேன். இதற்காக சம்ஸ்கிருத அபிமானிகள் என்னை மன்னிப் பார்களாக.
பரமேஸ்வரன் எனக்கு ஆயுள் இன்னும் கொஞ்சம் கொடுப்பாராயின், உத்தரராம சரித்திரம், மாலதி மாதவம், மிருச்சகடிகம் முதலிய நாடகங்களையும், தமிழ் நாடக மேடைக் காக, மொழி பெயர்த்து அச்சிடலா மென்றிருக்கிறேன்.
இச் சந்தர்ப்பத்தில், நான் சம்ஸ்கிருத நாடகங்களில் எங்கள் சபையில் நடித்தது எனக்கு நினைவிற்கு வருகிறது. நான் ஏதோ கொஞ்சம் சம்ஸ்கிருதம் கற்று வருகிறேன் என்று அறிந்த காலஞ்சென்ற எனது நண்பரும், சம்ஸ்கிருத பாஷையில் மிகவும் அபிமானமும் பாண்டித்ய முடையவ ராகிய டி.எல். நாராயண சாஸ்திரியார், பி.ஏ., பி.எல்., தான் சம்ஸ்கிருத கண்டக்டரான பிறகு, என்னையும் சம்ஸ்கிருதத்தில் நடிக்கும்படி வற்புறுத்தி, வேணி சம்ஹார நாடகத்தில் எனக்கு சார்வாகன் என்னும் பாத்திரத்தை முதல் முதல் கொடுத்தார். “அரைத் துட்டில் கலியாணமாம், அதில் கொஞ்சம் வாண வேடிக்கையாம் என்னும் பழமொழிக்கிசைய, அந்தச் சிறு பாகத்தில், என்னை ஒரு ஸ்லோகமும் பாடும் படி செய்தார்! ஆயினும், இந்தப் பாகத்தை நடிப்பதில் நான் ஒரு கஷ்டப்பட்டேன்! (அக் கஷ்டம் இன்னும் என்னைவிட்டு அகலவில்லை) அதாவது சம்ஸ்கிருத பதங்களைச் சரியாக உச்சரிக்கக் கூடாமையே!
சம்ஸ்கிருதத்திலிருப்பது போல், ஒற்றெழுத்துகள் தமிழில் இல்லை. தமிழ் க என்னும் ஒரு அட்சரத்திற்கு சம்ஸ்கிருதத்தில் நான்கு இருக்கின்றன. அப்படியே த, ப, ச முதலிய எழுத்துகளுக்கும்; கேவலம் தமிழ் மாத்திரம் கற்றவன், இவ்வெழுத்துப் பேதங்களை சரியாக உச்சரிப்பது கொஞ்சம் கடினம். பிறந்தது முதல் தமிழில் பழகியபடி யால், இக் கஷ்டம் எனக்கும் இருந்தது. அன்றியும் ஒரு உபாத்தியாயரை வைத்துக்கொண்டு நான் சம்ஸ்கிருதம் கற்க ஆரம்பித்தபொழுது, முதலில் அவர் ஒரு புஸ்தகத்தை வைத்துக்கொண்டு படித்து அர்த்தம் சொல்லிக்கொண்டே போவார். நான் மற்றொரு புஸ்தகத்தை வைத்துக்கொண்டு அர்த்தம் தெரிந்து கொண்டே போவேன். இதனால் சம்ஸ்கிருத பதங்களை சரியாக உச்சரிக்கும் திறம் எனக்கு இல்லாமற் போயிற்று. நான் சம்ஸ்கிருத நாடகங்களில் நடிக்கவேண்டிப் பிரயத்தனபட்டபோது, இக் குறை வெளியாயிற்று. “செய்வன திருத்தச் செய்ய வேண்டும்” என்று கருதினவனாய், இக்குறையைக் கூடுமானவரையில் நீக்க வேண்டி, நானாக உரக்கப் படிக்க ஆரம்பித்தேன்; அப்படிப் படிக்கும்போது என் உச்சரிப்பில் ஏதாவது குற்றம் வந்தால் அதை என் உபாத்தியாயர் சரிப்படுத்திக்கொண்டு வருவார்; நாளடையில் இக் குற்றம் பெரிதும் நீங்கிய போதிலும், இப்பொழுதும் சம்ஸ்கிருதத்தில் ஏதாவது நடிப்பதென்றால், எங்கு தவறாக உச்சரிக்கின்றேனோ என்கிற பயம் இன்னும் முற்றிலும் நீங்கவில்லை. இக் குற்றத்தை நீக்கிக்கொள்ளும் பொருட்டும், அன்றியும் சம்ஸ்கிருத பாஷையில் எனக்குள்ள ஆர்வத்தினாலும், எங்கள் சபையில் சம்ஸ்கிருத நாடகங்கள் ஏதாவது ஆடும்பொழுதெல்லாம், சம்ஸ்கிருத கண்டர்கடர்களை நானாகக் கேட்டு, ஏதாவது சிறு பாகங்களை எடுத்துக் கொண்டு நடித்து வருகிறேன், இன்றளவும். இது போன்ற காரணத்தினால், எங்கள் சபையில் தெலுங்கு கன்னட நாடகங்கள் ஆடும்போதும், தெலுங்கு கன்னட கண்டக்டர்கள் ஏதாவது சிறு பாகங்கள் கொடுத்தால் அவைகளையும் எடுத்துக்கொண்டு, மேடையின்மீது ஆடி வருகிறேன்.
இவ் வருஷத்தின் கடைசியில் டிசம்பர் மாதத்திய நாடகங்களில், எனது அத்யந்த நண்பராகிய நாகரத்தினம் ஐயரும் நானும் “வள்ளி மணம்” என்னும் நாடகத்தில் முக்கியப் பாகங்களை எடுத்துக் கொண்டு நடித்தோம்.
33ஆவது அத்தியாயம்
இனி 1932ஆம் வருஷத்திய நிகழ்ச்சி பற்றி எழுதுகிறேன். இவ் வருஷ ஆரம்பத்தில் ஜனவரி மாதம் இரண்டாம் தேதி எங்கள் சபையார் “அமலாதித்யன்” (Hamlet) நாடகத்தை ஆட வேண்டுமென்று தீர்மானித்தனர். இதற்கு முக்கியக் காரணம் எனது நண்பராகிய திவான் பஹதூர் ஜெ. வெங்கடநாராயண நாயுடுகாருவின் தூண்டுதலேயாம். இது நடிப்பதற்கு மிகவும் கஷ்டமான நாடகம் என்பதை முன்பே தெரிவித்திருக்கிறேன். எனக்கு வயது மேலிட்டபடியால் இனி இப்படிப்பட்ட கஷ்டமான நாடகங்களில் நடிப்பதில்லையென்று தீர்மானித்திருந்தேன். ஆயினும் எனது நண்பரும் சபையின் காரியங்களில் இன்னும் மிகவும் ஊக்கமுடன் உழைத்து வரும் நாயுடுகாரு வேண்டுகோளை மறுக்கலாகாது என்று இசைந்தேன்.
ஆயினும் இந் நாடத்தில் முன்பு போல் நடிக்க முடியுமோ என்னவோ என்னும் சந்தேகம் மாத்திரம் என்னை விட்டகலவில்லை. நாடக ஆரம்பத்திற்கு முன் எனக்கு அருகிலிருந்து வர்ணம் தீட்டி வைத்த எனது பழைய நண்பராகிய தாமோதர முதலியாரிடம், “நீங்கள் அருகிலிருந்து இந் நாடகத்தைப் பார்த்து, “கடுகு இறந்து போனாலும், காரமாவது கொஞ்மிருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன். அவர் மறுநாள் என்னைப் பார்த்து, “கடுகு இன்னும் சாகவேயில்லை!” என்று பதில் உரைத்தார்.
இவ் வருஷம் மார்ச்சு மாதம் 14ஆம் தேதி எங்கள் சபையின் இங்கிலீஷ் கண்டக்டர், ஷேக்ஸ்பியர் மஹா நாடகக் கவியின் “ஜூலியஸ் சீசர்” என்னும் நாடகத்தை வைத்துக் கொண்டார்; அதில் நான் ஒரு சிறு பாகமாகிய காஸ்கா (Casca) என்பதை நடித்தேன். என்னை இந் நாடகத்தில் இதனிலும் பெரிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளும்படி கேட்டபோதிலும் அப்படிச் செய்ய அசக்தனாயிருந்தேன். இதற்கு முக்கியக் காரணம், தற்காலம் எனக்கு வயது அதிகமாய் விட்டபடியால் புதிய பாகங்களைக் குருட்டுப் பாடம் செய்வது மிகவும் கஷ்டமா யிருக்கிறது; தமிழிலாவது அப்படிச் செய்வது அதிக கஷ்ட மாயில்லை; மற்றப் பாஷைகளில் அப்படிச் செய்வது மிகவும் சிரமமாயிருக்கிறது. நான் இதற்கு முன்பாக எங்கள் சபையில் ஆங்கிலத்தில் பாத்திரங்களைத்தான் நடித்திருக்கிறேன். அவற்றுள் நான் கொஞ்சம் பெயர் பெற்றது ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் “ஒதெல்லோ” என்னும் நாடகத்தில் ஈயாகோ (lago) என்னும் பாத்திரத்தில்; நான் இப் பாத்திரத்தை இரண்டு மூன்று முறை நடித்திருக்கிறேன். ஒரு முறை நடித்தபொழுது, உலகத்தைச் சுற்றிப் பிரயாணம் செய்து வந்த (Globe trotter) ஓர் ஆங்கிலச் சீமான், அச் சமயம் அகஸ்மாத்தாய் சென்னைக்கு வந்திருந்தவர், விக்டோரியா பப்ளிக் ஹாலில் நானிதை நடித்ததைப் பார்த்து, “இந்த ஆக்டர் இங்கிலாந்தில் இருப்பானாயின் நல்ல பணம் சம்பாதிக்கக்கூடும்” என்று தெரிவித்ததாக எனது நண்பர்கள் எனக்குக் கூறினர். சீமைக்குப் போக வேண்டுமென்று மாத்திரம் எனக்கு அநேக வருஷங்களாக ஆவல் உண்டு. ஆயினும் அங்கு போய் நடித்துப் பெயர் பெற வேண்டு மென்றல்ல (அது அசாத்தியம் என்பது நிச்சயம்); அங்கு போய்ச் சிறந்த ஆக்டர்கள் நடிப்பதைக் கண்டு, இக்கலையில் இன்னும் தேர்ச்சியடைய வேண்டுமென்றே. இதை வாசிக்கும் என் இளைய நண்பர்கள் என்னைப் பார்த்து நகைகக்கூடும். அப்படிச் செய்பவர்களுக்கு அடியில் வரும் கதையைத் தெரிவிக்க விரும்புகிறேன். இத்தாலி (Italy) தேசத்தில், மைகெல் ஆங்கிலோ (Michael Angelo) என்னும் உலகம் புகழ்கிற சில்ப சாஸ்திரி ஒருவர் இருந்தார்; அவர் தனது எண்பத்தோராம் வயதில், (அதற்கு மேற்பட்ட வயதிலோ எனக்கு நன்றாய் ஞாபகமில்லை) ஒரு நாள் ரோம் (Rome) நகரத்திலுள்ள பழைய கட்டடமான கொலிசியம் (Coliseium) என்பதைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாராம். இதைக் கண்ட வாலிபன் ஒருவன், “ஓய்! கிழவனாரே! இங்கு என்ன செய்கிறீர்?” என்று வினவ, அதற்கு அவர், “அப்பா, நான் சிற்ப சாஸ்திரம் கற்கிறேன்” என்று விடை பகர்ந்தனராம். நான் இன்னும் அந்த வயதுக்கு வரப் பல வருடங்கள் கழிய வேண்டும்.
நான் இதுவரையில் எழுதி அச்சிட்டுள்ள நாடகங்களுள் இந் நாடக மேடை நினைவுகளில் குறிப்பிடாத நாடகங்கள் இரண்டாம் - அவை: “சந்திரஹரி", “காளப்பன் கள்ளத்தனம்” என்பவை.
முதலில் கூறிய “சந்திரஹரி” என்பது ஆங்கிலத்தில் பர்லெஸ்க் (Burlesque) என்னும் நாடகப் பிரிவினைச் சேர்ந்ததாம். இதை 1923ஆம் வருஷம் எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு இறந்ததும், அத்துயரத்தைச் சற்று மறந்திருக்கும் வண்ணம் என் மனத்திற்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டி, எழுதி முடித்தேன். அவ்வருஷம் டிசம்பர் மாதம் அச்சிட்டேன். இம்மாதிரியான நாடகம் தமிழிலும் கிடையாது, சம்ஸ்கிருதத்திலும் கிடையாது. பர்லெஸ்க் என்பது ஏதாவது ஒரு பிரபலமான கதையை எடுத்துக் கொண்டு, அதிலுள்ள சந்தர்ப்பங்களுக்கு முற்றிலும் மாறாக, வேறு சந்தர்ப்பங்களை நகைப்புண்டாக்கும்படி கற்பனை செய்து கதையைப் பூர்த்தி செய்வதாம். மேல்நாட்டார் இம் மாதிரியான நாடகங்களும் கதைகளும் பல இயற்றி இருக்கின்றனர். தமிழ் நாடக மேடைக்கு அதைப் போன்ற ஓர் உதாரணம் இருக்க வேண்டுமென்று கருதினவனாய் இச் சந்திரஹரியை எழுதினேன். இதற்கு முதல் நூல் ஹரிச்சந்திரன் கதையாகும்; அம் மன்னன் சத்யவிரதன், என்ன இடுக்கண் நேர்ந்தபோதிலும் சத்தியம் தவறாதவன்; இந் நாடகத்தின் கதாநாயகனான சந்திரஹரி, மறவ நாட்டு மன்னன்; என்ன கஷ்டம் நேரிடுவதாயினும் நிஜத்தைப் பேசாதவன்! இதை வாசிக்கும் நண்பர்கள் சற்று ஆலோ சித்துப் பார்ப்பார்களாயின், எப்பொழுதும் சத்தியமே பேசுவதைவிட, எப்பொழுதும் அசத்தியமே பேசுவது மிகவும் கடினம் என்பதைக் கண்டறிவார்கள். கதையின் மாறுதலுக்கிணங்க, பெயர்களையும் தலைகீழாக மாற்றி யுள்ளேன்; ஹரிச்சந்திரன் என்கிற பெயரை மாற்றி சந்திரஹரி என்றாக்கினேன்; சந்திரமதி என்பதை மாற்றி மதிசந்திரை என்று பெயர் வைத்தேன்; விஸ்வாமித்திரன் என்பது இவ்வண்ணமே மித்ராவசு என்றாகிறது; வசிஷ்டர், சிஷ்ட வாசியாகிறார்; மற்றப் பெயர்களுமிப்படியே. இதனால் ஹரிச்சந்திரன் கதையை ஹேளனம் செய்தபடியன்று; அக் கதையானது நமது இந்திய தேசத்திற்கே அள்ளக் குறையாத ஒரு பெறும் நிதியாம்; “பர்லெஸ்க்” என்கிற நாடகப் பிரிவின் படி இதை இவ்வாறு எழுதியதேயொழிய வேறன்று.
இந் நாடகத்தை எழுதுவதில் நான் அதிக சிரமப்பட்டேன். இதை எனது நண்பர்கள் வாசித்துப் பார்ப்பார்களாயின், அக் கஷ்டம் அவர்களுக்குப் புலப்படும். இந் நாடகம் மற்றவர்களால் இதுவரை இரண்டொரு முறை ஆடப்பட்ட போதிலும், எங்கள் சபையாரால் இதுவரையில் ஆடப்படவில்லை.
“காளப்பன் கள்ளத்தனம்” என்னும் மற்றொரு நாடகம், 1931ஆம் வருஷம் எழுதி அச்சிடப்பட்டது என்றால், அவ் வருஷம் நான் மங்களூருக்குப் போயிருந்த பொழுது, அங்கே ஆங்கிலத்தில் ஒரு சபையார் இக் கதையை நடித்ததைக் கண்டேன். இதைத் தமிழில் எழுதினால் மிகவும் நன்றாயிருக்குமென என் மனத்திற்பட, சென்னைக்கு வந்தவுடன், அக் கதையைத் தமிழில் மொழி பெயர்த்து நாடகமாக எழுதினேன். இதன் மூல நாடகம், மாலியர் என்னும் பிரான்சு தேசத்து நாடகக் கவியால் பிரெஞ்சு பாஷையில் எழுதப்பட்டது. இங்கிலாந்து தேசத்தில் எப்படி ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி கொண்டாடப்படுகிறாரோ, அப்படியே பிரான்சு தேசத்தில் மாலியர் கொண்டாடப்படுகிறார். இவர் எழுதியுள்ள பல (Farces) பிரஹசனங்கள் லோகப் பிரசித்தி பெற்றவை. இவரது பிரஹசனங்களை ஆடப் பார்க்கும் பொழுதுதான் அவைகளின் சுவை நன்றாய் நமது மனத்தில் உதிக்கும்; படிக்கும்பொழுது அதன் ருசி முற்றிலும் விளங்குவதில்லை; என் அனுபவமும் அபிப்பிராயமும் அப்படியே. இந் நாடகமாவது இதுவரையில் நானறிந்த வரையில் ஒருவராலும் ஆடப்படவில்லை.
இவ் வருஷம் ஈஸ்டர் (Easter) விடுமுறையில் எனது அத்யந்த நண்பர் நாகரத்தினம் ஐயரும் நானும் மறுபடியும் மதுரை டிராமாடிக் கிளப்பாரால், மதுரைக்கு வரவழைக்கப் பட்டோம். அங்கு “சத்ருஜித்", “லீலாவதி-சுலோசனா” என்னும் இரண்டு நாடகங்களில் இருவரும் முக்கியப் பாகங்களை எடுத்துக்கொண்டு நடித்தோம். முதலிற்கண்ட “சத்ருஜித்” நாடகம் நான் இதற்கு முன் 34 வருடங்களுக்கு முன் சென்னையில் ஆடியது. யாது காரணத்தினாலோ எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு அதில் ஆட மறுபடியும் இச்சை கொள்ளவில்லை. அக் காரணம் பற்றி அந் நாடகத்தை மறுபடியும் ஆடும்படி எங்கள் சபையில் நான் பிரேரேபிக்கவில்லை. மதுரை டிராமாடிக் கிளப்பார், இதை ஆட வேண்டுமென்று தீர்மானித்தபொழுது, இதை ஒரு புதிய நாடகமாகப் பாவித்து நான் கற்க வேண்டியவனா யினேன். முப்பத்து நான்கு வருடங்களுக்கு முன் இதில் நடித்தது எனக்குக் கொஞ்சமும் ஞாபகமில்லாமற் போயிற்று. நான் சிரமப்பட்டு சத்ருஜித் பாத்திரத்தைக் கற்க வேண்டி வந்ததன்றி, இதற்காகச் சேலத்துக்குப் போய் எனது அத்யந்த நண்பர் நாகரத்தினம் ஐயருக்கு, “சதீமணி” பாத்திரத்தைக் கற்பிக்க வேண்டி வந்தது. இந்த நாடகம் ஒரு பெரிய நாடகம். அன்றியும் நடிப்பதும் கஷ்டம். ஆகவே, நாடக தினத்திற்குப் பதினைந்து தினத்திற்கு முன்பாக மதுரைக்குப் போய், ஒத்திகைகள் நடத்த வேண்டி வந்தது. ஆயினும் நான் எடுத்துக்கொண்ட சிரமத்திற்குப் பரிகாரமாக எனது மதுரை நண்பர்கள் மிகவும் நன்றாய் நடித்து, கிளப்புக்குப் பெயரும், எனக்கு மகிழ்ச்சியும் கொடுத்தனர். முக்கியமாக எனது நண்பர் மா. சுப்பிரமணிய ஐயர் கஜவதனனாக; மிகவும் நன்றாய் நடித்தார். அன்றியும் விலாசினி வேடம் பூண்ட மதுரை அட்வகேட்டும், டிராமாடிக் கிளப்பில் ஓர் அங்கத்தினருமாகிய, நாராயணசாமி சாஸ்திரியார் பி.ஏ., பி.எல்., அவர்களின் மைத்துனியாகிய, சுமார் ஒன்பது வயதுடைய ஒரு சிறு பெண் மிகவும் நன்றாய் நடித்து, சபையோரை மகிழச் செய்தது; இச் சிறு பெண் சில இடங்களில் நடித்தது, தேர்ந்த பெரிய ஆக்டர்களும் அவ்வளவு அழகாய் நடித்திருக்க மாட்டார்கள் என்று என்னை நினைக்கச் செய்தது; இவ்வளவு புத்தி சாதுர்யமான பெண் இன்னும் இரண்டொரு வருடத்தில் பெரியவளாகிக் கலியாணமாகி, நாடக மேடையை வெளியிலிருந்துதானே பார்க்க வேண்டும் என்று, நாடகம் முடிந்ததும் வியசனப்பட்டேன். இக்குழந்தைக்கு மீனாட்சி சுந்தரேஸ்வராள், பூர்ணாயுசும் சகல ஐஸ்வர்யத்துடன், இவளது கலை ஞானத்தை மெச்சும்படியான தக்க கணவனையும் கொடுப்பார்களாக என்று பிரார்த்திக்கிறேன்.
இச் சந்தர்ப்பத்தில் நமது தென் இந்திய நாடக மேடை மீது ஸ்திரீகள் நடிப்பதைப்பற்றி என் அபிப்பிராயத்தை எனது நண்பர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். இதைப்பற்றி எனது அபிப்பிராயம் என்னவென்று பல நண்பர்கள் பன்முறை கேட்டிருக்கிறபடியால், சற்று விவரமாய் எழுத வேண்டியவனாயிருக்கிறேன்.
சில வருடங்களுக்கு முன் சென்னை சர்வகலாசாலையார் (University) உத்தரவின்படி, பச்சையப்பன் கல்லூரியில், “நாடகத் தமிழ்” என்பதைப் பற்றி மூன்று நாள் உபன்யாசம் செய்தேன்; இதைப் புஸ்தகமாக அச்சிட்டிருக்கிறேன். இது சம்பந்தமாகப் பூர்வகாலத்தில் தமிழ் நாடகங்களிலிருந்த ஸ்திதியைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டி வந்தது. அந்த ஆராய்ச்சியை யெல்லாம் இங்கு நான் எழுதுவது மிகையாகும். ஆயினும் அந்த ஆராய்ச்சியில் நாடக மேடைக்கும் ஸ்திரீகளுக்கும் உண்டாயிருந்த சம்பந்தத்தை மாத்திரம் இங்குச் சுருக்கி எழுதுகிறேன்.
இன்றைக்குச் சுமார் 1800 வருடங்களுக்குமுன் தென் இந்தியாவில், தமிழ் நாடகங்கள் ஆடப்பட்டன என்பற்குச் சந்தேகமில்லை. அன்றியும் அவற்றுள் பெரும்பாலும் ஸ்திரீகள் நடித்தனர் என்பதும், சிலப்பதிகாரம் முதலிய நூல்களினால் விளங்குகிறது. அக் காலத்தில் நாடகங்களில் ஆடிய ஸ்திரீகள் விலைமாதராயிருந்தனரென்பதும் நன்கு விளங்குகிறது. தமிழ் நாட்டில் அரச குல ஸ்திரீகளும் உயர்குல ஸ்திரீகளும், வடப்பிரதேசத்திலிருந்தது போல் நாட்டியம் அல்லது நாடகமாடக் கற்றனர் என்பது கொஞ்சமேனும் விளங்கவில்லை. தமிழ் நாடகமானது க்ஷணதிசையை அடைந்ததற்கு ஒரு முக்கியக் காரணம் இதுவாயிருக்கலாமென்று தோன்றுகிறது; பிறகு சரித்திர காலத்துக்கு வருங்கால “ராஜராஜேஸ்வரி” நாடகம் முதலியன ஆடியவர்கள் பெரும்பாலும் ஆண் மக்கள் என்று அறிகிறோம். அக்காலத்தில் சில கோயில்களில் தாசிகள் திருவிழாவின் போது நாடகங்களாடியதாக அறிகிறோம் (இவ்வழக்கம் சில கோயில்களில் இன்னும் உண்டு). தற்காலத்து நிலையைக் கருதுங்கால் சுமார் 50 வருடங்களுக்கு முன் தென் இந்தியாவில் நாடகமாடினவர்கள் பெரும்பாலும் ஆண் மக்களாகவே இருந்தனர். ஏகதேசமாக டம்பாச்சாரி விலாசம் முதலிய சில நாடகங்களில், கணிகையர் வேடம் பூண்டு நடித்ததுமுண்டு. ஸ்திரீகளாக நாடகம் நடித்தது முதல் முதல், நானறிந்தவரை பாலாமணி கம்பெனியில்தான். மேற்குறித்தபடி நாடக மேடை ஏறிய ஸ்திரீகளெல்லாம் பெரும்பாலும் கணிகையராக யிருந்தபடியால், நாடகம் பார்ப்பதற்கே அக் காலம் உயர்குல ஸ்திரீகள் போவது இழிவாகக் கருதப்பட்டது. அப்படி யிருக்கவே, ஸ்திரீகள் நாடக மேடை ஏறுவதென்பது கனவிலும் கருதப்படாத விஷயமாயிருந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன், தமிழ் நாடக மேடையின் நிலையைக் கருதுங்கால், ஒருவாறு அதனை, எலிசபெத் (Elizabeth) ராணியின் காலத்தில் இங்கிலாந்தில் நாடக மேடையிருந்த ஸ்திதிக்கு ஒப்பிடலாம் - இரண்டிலும் ஏறக்குறைய எல்லா ஸ்திரீ பாகங்களும், அழகிய ஆண் பிள்ளைகளால் எடுத்துக் கொள்ளப்பட்டன. தற்காலம் தமிழ் நாடக மேடையிருக்கும் ஸ்திதியை இரண்டாவது சார்லெஸ் (Charles II) காலத்தில் இங்கிலாந்திலிருந்த நாடக மேடையுடன் ஒப்பிடலாம் - இரண்டிலும் மேடையின்மீது தோன்றும் ஸ்திரீகளில் பெரும்பாலார் விலைமாதர்களாகவே இருக்கின்றனர். சென்ற இரண்டொரு வருடங்களாகத்தான் குல ஸ்திரீகள் தங்கள் கணவருடனோ அல்லது நெருங்கிய பந்துக்களுடனோ நாடக மேடை ஏற ஆரம்பித்திருக்கின்றனர். இதைப்பற்றி என் அபிப்பிராயம் என்னவென்றால், மேற்கத்திய நாகரிகமானது இங்குப் பரவப் பரவ, கற்றிந்த குல ஸ்திரீகளும் விரைவில் தமிழ் நாடக மேடைமீது ஆட ஆரம்பிப்பார்கள் என்பது நிச்சயம். ஆயினும் ஐரோப்பிய ஸ்திரீகளைப்போல் கல்வி கற்று ஆண் மக்களுடன் சமானமாகக் குலவும் வழக்கம் நமது நாட்டில் பரவும் வரையில்; நமது குல ஸ்திரீகள் நாடக மேடையேறுவது அவ்வளவு உசிதமல்லவென்பது என் அபிப்பிராயம்.
இவ் விஷயத்தைப்பற்றிக் கருதுங்கால், சிலர், நமது நாடக மேடையில் ஸ்திரீகளின் பாகம், ஸ்திரீகளே எடுத்துக் கொள்ள வேண்டுமேயொழிய, ஆண் மக்கள் எவ்வளவு அழகு வாய்ந்தவராயினும், ஸ்திரீ வேஷம் பூண எவ்வளவு பொருத்தமுள்ளவர்களாயிருந்தபோதிலும், ஸ்திரீ வேடம் புனைவது தகுதியல்ல என்று எண்ணுகிறார்கள். அவ்வாறு அவர்கள் எண்ணுவது அவ்வளவு உசிதமல்ல வென்பது என் கொள்கை. கள்ளனைப்போல் ஓர் உயர் குலத்தான் வேஷம் பூண்டு நடிக்கிறான் என்றால், எல்லோரும் பாக்கப் போகிறார்கள், சந்தோஷமடைகிறார்கள்; இதைவிட்டு ஒரு கள்ளனையே அப்பாத்திரமாக நடிக்கச் செய்தால் மேலாகுமோ? எனது நண்பர் பி.வி. ராமானுஜ செட்டியார், பிரதாபருத்ரீயம் என்னும் நாடகத்தில் அசல் வண்ணானைப் போல் நடிக்கிறது எல்லோராலும் புகழப்படுகிறது; அதைவிட்டு வாஸ்தவமான வண்ணானையே அப்பாத்திரத்தை நடிக்கும்படி செய்தால் என்ன பெருமையாகும்? அம்மாதிரியாக அசல் ஒரு பெண்மணியைப்போல் ஓர் ஆடவன் வேடம் பூண்டு நடிப்பதும் சிலாகிக்கத் தக்கதாம் என்பது என் கொள்கை. வேடம் தரித்து நடிக்க வேண்டிய நாடகக் கலையில், ஆடவன் ஸ்திரீ வேஷம் பூணுவது மெச்சத்தக்கதாம் என்பது என் அபிப்பிராயம்.
34ஆவது அத்தியாயம்
இனி 1933ஆம் வருஷம் முதல் 1937ஆம் வருஷம் முடிவு வரையில் நடந்தேறிய விஷயங்களைப் பற்றிக் கூறி இவ்வத்தியாயத்தையும் இந் நாடக மேடை நினைவு களையும் முடிக்கிறேன். கடந்த ஐந்து வருடத்திய சங்கதி களைப்பற்றி எழுதும்பொழுது, எனக்குண்டான ஒரு கஷ்டத்தை இங்கு எழுதுகிறேன். “கடலைக் கடக்கக் கஷ்டப்படவில்லையாம், ஒரு சிறு வாய்க்காலைத் தாண்ட கஷ்டப்பட்டானாம்” என்னும் பழமொழிக்கு இசைந்தபடி, சென்ற நாற்பத்திரண்டு வருடங்களுக்குமுன் நடந்த சமாச்சாரங்களெல்லாம் என் நினைவிற்குச் சுலபமாய் வந்தன. இப்பொழுது, கடந்த ஐந்து வருடங்களில் நடந்த சமாச்சாரங்களெல்லாம் என் நினைவிற்குச் சுலபமாக வரவில்லை ! அவைகளைக் குறிப்பிடப் பல காகிதங்களைப் பரிசோதித்து எழுதவேண்டியதாயிருந்தது! இதற்கு முக்கியக் காரணம், எனக்கு வயது மேலிட்டு ஞாபக சக்தி குறைந்ததேயாம் போலும். தன் முதுமையில் “மறதி என்னும் கள்ளன் கொள்ளை கொண்டனன்” என்று ஒரு தமிழ்ப் புலவர் கூறியது எனக்கு இத் தருணம் ஞாபகத்திற்கு வருகிறது.
1933ஆம் வருஷத்தின் ஆரம்பத்தில், இதுவரையில் எங்கள் சபையில் புகாத ஒரு கெட்ட விஷயம் புகுந்தது; அதாவது பிராமணர் சூத்திரர் என்னும் கட்சியே. இக் கெடுதி புகுந்ததற்குக் காரணம் இருவர். பிராமணர் சூத்திரர் என்னும் கட்சியைப்பற்றிப் பேசவும் கூடாது என்னும் கோட்பாடு உடைய நான், இதைப்பற்றி விவரித்து எழுதுவது நியாமல்ல. இக்கட்சி உண்டானதால் எங்கள் சபை, வர வர, க்ஷண திசையை அடைந்து வந்ததென்பதற்கு யாதொரு சந்தேகமு மில்லை. சென்ற இரண்டு வருடங்களாகத்தான் சபையின் உடலைவிட்டு இவ்விஷம் கொஞ்சம் கொஞ்சமாக அகன்று கொண்டிருக்கிறதென்று எண்ணுகிறேன்; முற்றிலும் இது இடம் தெரியாது அகன்றாலொழிய எங்கள் சபை முன்பிருந்த ஸ்திதிக்கு வராதென்பது என் நிர்ணயமான அபிப்பிராயம்.
இக் காரணம் பற்றி இவ் வருஷம் சபையில் பொதுக் கூட்டம் கூடியபொழுது, நான் சபையின் நிர்வாக சபையில் ஒரு மெம்பராக நிற்கமாட்டேன் என்று மறுத்தேன். சுகுண விலாச சபை ஆரம்பமானது முதல் இதுவரையில் இவ் வருஷம்தான் நிர்வாக சபையில் அங்கத்தினனாக நான் இராமற்போனது.
நிர்வாக சபையில் அங்கத்தினனாக நிற்காமற் போன போதிலும், இவ் வருஷம் என்னை எந்த நாடகத்தில் ஆடும்படி கேட்டபோதிலும் நடித்து வந்தேன். இவ் வருஷம் நடத்திய நாடகங்களில் குறிக்கத்தக்கது, எனது பால்ய நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதிய ‘கீதோதயம்’ என்னும் ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய பால்ய லீலைகளைப்பற்றிய நாடகம் ஒன்றே. அதில் அவர் வேண்டுகோளுக்கிணங்கி, ஒரு சிறு பாகமாகிய “ஜோஸ்யர்” பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நடித்தேன். இந் நாடகம் நடித்த பொழுது அதைப்பற்றி விமரிசனம் எழுதிய ஒரு பத்திராதிபர், முக்கியப் பாத்திரங்களையெல்லாம் விட்டு விட்டு, நான் நடித்த சிறு பாகத்தை மிகவும் சிலாகித்துக் கூறினர். இதை என் புகழ்ச்சியாக இங்கு நான் எழுதவில்லை ; எவ்வளவு சிறிய பாகமாயிருந்தாலும், அதைத் தக்கபடி நடித்தால் எப்படியும் பெயர் எடுக்கலாம் என்பதை, இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே எழுதியுள்ளேன்.
இக் கீதோதயம் நாடகசிரியராகிய எனது நண்பரால் எனக்கு “அர்ப்பணம்” (Dedication) செய்யப்பட்டது. இதுவரையிலும், இதற்குப் பின்னும், பல நாடகாசிரியர்கள் தங்கள் நாடகங்களை எனக்கு அர்ப்பணம் செய்திருக் கிறார்கள். இருந்தபோதிலும், வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எனக்குத் தான் எழுதிய இந் நாடகத்தை அர்ப்பணம் செய்ததையே நான் மிகவும் சிலாகிக்கின்றேன். இதை இங்குக் குறிப்பிடுவது தவிர அவருக்கு நான் வேறு கைம்மாறு செய்ய அசக்தனாயிருக்கிறேன்.
“பயன் நூக்கார்ச் செய்தஉதவி நயந்தூக்கின்
நன்மை கடலினும் பெரிது.”
இவ் வருஷம் எங்கள் சபை ஆயிரத்தாவது நாடகம் நடத்தியது. ஆயினும் அதைக் கவனிப்பாரில்லாதபடி அந்த ஸ்திதிக்கு எங்கள் சபையை, பிராமணன், சூத்திரன் என்னும் பிரிவை சபைக்குட்புகச் செய்தவர்கள், கொண்டு வந்து விட்டனர். சில வருடங்களுக்கு முன் அமெரிக்க தேசத்தில் ஒரு ஆமெடூர் (Amateur) நாடக சபை அறுபதாவது நாடகம் நடத்தினதைப்பற்றி ஒரு மாதப் பத்திரிகையில் மிகவும் கொண்டாடப்பட்டது. எங்கள் சபை ஆயிரம் நாடகம் ஆடி முடித்தபோதிலும் அதைக் கவனிப்பாரில்லாமற் போயிற்று! இதனாலாவது பிராமணர் சூத்திரர் என்னும் கட்சிப் பிரிவின் கெடுதியை அனைவரும் அறிந்து, இக் கெடுதியிலும் கெடுதியை சபையைவிட்டு முற்றிலும் அகற்றுவார்களாக! அன்றியும் இக் கெடுதி நமது தேசத்தை விட்டு அகல வேண்டுமென்பது ஈசனுக்கு என் பிரார்த்தனை! இதைப்பற்றி என் அபிப்பிராயத்தை இன்னும் அதிகமாக அறிய வேண்டுமென்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் விரும்பின், நான் இவ் வருஷம் எழுதி அச்சிட்ட “பிராம்மணனும் சூத்திரனும்” என்னும் தமிழ் நாடகத்தை வாசித்து அறிந்து கொள்வார்களாக. இந்நாடகம் நான் மிகவும் முயற்சி எடுத்துக்கொண்டு எழுதிய நாடகம். இதை வாசித்த, பிராமணன் சூத்திரன் என்னும் துவேஷமில்லாத இரு ஜாதியாரும் என்னைப் புகழ்ந்திருக்கின்றனர்; அத் துவேஷமுள்ள இரு திறத்தாரும் என்னை நிந்தித்திருக்கின்றனர்; ஆயினும் அப்படி என்னை நிந்தித்தவர்களில் ஒருவராவது, நான் எழுதியதில் இது தவறு என்று ஒன்றையும் எடுத்துக் காட்டினாரில்லை. இதையே நான் எழுதிய இந்நாடகத்திற்குப் பெரும் புகழாகக் கொள்கிறேன். இந்நாடகத்தைப்பற்றி இன்னும் ஏதாவது அறிய விரும்பின், எனது நண்பர் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி ஐயர் இதைப்பற்றி “ஹிந்து” பத்திரிகையில் எழுதிய விமர்சனத்தைப் படிப்பார்களாக.
இந்நாடகமானது எங்கள் சபையோரால் நாளது வரையில் நடிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் இதை வாசிப்பவர்கள், நான் கூறாமலே அறிந்து கொள்ளலாம்.
இவ் வருஷம் அவ்விடத்தில் டிஸ்டிரிக்ட் முன்சீபாயிருந்த எஸ். கே. பார்த்தசாரதி ஐயங்கார் பி.ஏ., பி.எல்., அவர்கள் விருப்பத்தின்படி மன்னார்குடிக்குப் போய், அவர் எழுதிய “நளன்” என்னும் தமிழ் நாடகத்தை ஒத்திகைகள் செய்து நடத்தினேன். இந் நாடகத்தில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், இதுதான் தமிழ் நாடக மேடையில் பிரபலமான ஜீவனோபாயமாக நாடகமாடும் நடிகர்களும், (Professional actors) ஆமெடூர்களும் (Amateur) ஒருங்கு சேர்ந்து மேடையின்மீது ஒரு நாடகத்தை நடத்தியதாம். கும்பகோண வாசியாகிய, தமிழ் நாடக மேடையில் பெயர்பெற்ற நடிகரான பி.எஸ். வேலு நாயரும் சென்னைவாசியாகிய பெயர்பெற்ற அயன் ஸ்திரீ பார்ட் நடிகரான அநந்த நாராயண ஐயரும், நளனாகவும் தமயந்தியாகவும் நடித்தனர். நாடகாசிரியராகிய பார்த்தசரதி ஐயங்கார் ஒரு முக்கியப் பாகமாகிய பாஹுகனாக நடித்தார். தேசியத் தொழிலுக்காக மிகவும் பாடுபவரும், தமிழ் நாடகமாடுவதில் கீர்த்தி வாய்ந்தவருமான நடராஜப் பிள்ளை அவர்கள் வேடுவனாக நடித்தார்; நான் ஒரு ஜோஸ்யனாகவும், பிராமணனாகவும் நடித்தேன்; இதர வேடங்கள் எல்லாம் மன்னார்குடியிலிருக்கும் சில வக்கீல்கள் முதலியோர் எடுத்துக் கொண்டனர். ஒரு வாரத்திற்கு முன்பாகவே மன்னார்குடிக்குப் போய் ஒத்திகைகள் நடத்தினேன். நாடகத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் முன்னதாக வேலு நாயரும் அநந்தநாராயண ஐயரும் வந்து சேர்ந்தனர். அன்று சாயங்காலம் நான் அவர்களை நளன் தமயந்தி பிரியும் காட்சியை நடிக்கும்படி கேட்க, அவர்கள் அவ்வாறே செய்தனர். காட்சி முடிந்ததும் “நீங்கள் நடித்தது நன்றாகத்தானிருக்கிறது; ஆயினும் இக்காட்சியை இப்படி நடித்தால் இன்னும் நன்றாயிருக்குமென எனக்குத் தோன்றுகிறது” என்று சொல்லி, அக்காட்சியை என் அபிப்பிராயப்படி நடித்துக் காட்டினேன். அதன் பேரில் அவர்களிருவரும், “மற்றக் காட்சிகளை நாளை காலை உங்களிருப்பிடம் வருகிறோம்; அங்கு உங்கள் அபிப்பிராயப்படி நடித்துக் காட்டுங்கள்” என்று கேட்டனர்; அதன்படியே மறுநாள் பார்த்தசாரதி ஐயங்கார் வீட்டின் மேல் மாடியில் நடித்துக் காட்டினேன். அவர்களிருவரும் நான் சொன்னதையெல்லாம் அன்புடன் கிரஹித்து நாடக தினம் அவ்வாறே நடித்தனர். ஸ்ரீமான் நாடராஜப் பிள்ளையும் அவ்வாறே செய்தனர். நாடகத் தினத்தில் வந்திருந்தவர்களெல்லாம் நாடகம் மிகவும் நன்றாய் நடிக்கப்பட்டதென்று புகழ்ந்தனர். இதையே நாடகத்தின் ஒத்திகை நடத்துவதில் எனக்குக் கொஞ்சம் திறமையுண் டெனப் பிறர் ஒப்புவதாகக் கொள்கிறேன்.
இந் நாடகத் தினம் சுமார் 900 சில்லரை ரூபாய் வசூலாயது; செலவு போக, ரூபாய் 500 சில்லரை அங்குள்ள ஒரு சமாஜத்திற்குப் பார்த்தசாரதி ஐயங்காரால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டது.
1934ஆம் வருஷம் எங்கள் சபை திருவனந்தபுரம் மஹாராஜா அவர்களால் அழைக்கப்பட்டு திருவனந்தபுரம் போய், சில நாடகங்களாடிற்று; இதன் மூலமாக மஹாராஜா அவர்களும் மஹாராணி சேது பார்வதி அம்மாளும் எங்கள் சபைக்கு பேட்ரன்கள் (Patrons) ஆயினர்.
இவ்வாண்டு நான் கல்கத்தாவுக்குப் போய் “சதிசுலோசனா” என்னும் கதையைத் தமிழ் பேசும் படமாகத் தயாரித்தேன். இவ் விஷயத்தைப்பற்றியும், மறுவருஷம் பம்பாய்க்குப் போய் “மனோஹரன்” தமிழ் பேசும் படத்தில் நான் புருஷோத்தமனாக நடித்த விஷயமும், இந் நாடக மேடை நினைவுகளில் எழுதுவதற்கில்லை. ஸ்வாமியின் கருணையினால் அவ் விவரங்களையெல்லாம் “பேசும் படக்காட்சி அனுபவங்கள்” என்று வேறு புஸ்தகத்தில் அச்சிடலாமென்றிருக்கிறேன்.
இந்த சதி-சுலோசனா கதையைப் பேசும் படக் காட்சிக்குத் தயாரித்தபடி, நாடகமாக இவ்வருஷம் அச்சிட் டேன். அன்றியும் “குறமகள்", “வைகுண்ட வைத்தியர்” என்னும் இரண்டு சிறு நாடகங்களை எழுதி இவ் வருடம் வெளியிட்டேன். இவ்விரண்டும் எங்கள் சபையில் பிறகு ஆடப்பட்டன. இவ்வருடம் நான் எழுதிய பெரிய நாடகமாவது “உத்தம பத்தினி” என்பதாம். இதை நான் இதுவரையில் எழுதியுள்ள நாடகங்களில் ஒரு சிறந்ததாக மதிக்கிறேன்; இதை ஆடுவது கொஞ்சம் கஷ்டம்; நாடகக் கதை முழுவதும் இரண்டு மணி சாவகாசத்தில் நடக்கிறது; இது கிரீக் நாடகங்களை ஒட்டி இவ்வாறு எழுதியபடியாம்; அன்றியும் நடிப்பதற்கும் சரியாக இரண்டு மணிதான் பிடிக்கும். இதை எங்கள் சபையைக் கொண்டு நடத்த வேண்டுமென்று ஏற்பாடு செய்தும், எனது நண்பர் கே. நாகரத்தினம் ஐயர் மறுபடியும் வெளியூருக்கு மாற்றப் பட்டபடியால், தவக்கமாயிருக்கிறது; கூடிய சீக்கிரத்தில், ஈஸ்வரன் கிருபையால், இதில் நடிக்கலாமென்று உத்தேசித்திருக்கிறேன்.
1935ஆம் வருஷம் நான் நான்கு மாதத்திற்கு மேல் பம்பாய்க்கு மனோஹரன் பேசும் படக் காட்சிக்காகப் போக வேண்டி வந்தபடியால், சபையின் காரியங்களை அதிகமாகக் கவனிக்க முடியாமற் போயிற்று.
1936ஆம் வருஷம் எங்கள் சபையானது 95,000 ரூபாய்க்கு சென்னை மவுண்ட் ரோட்டிலுள்ள “தியாகராஜ கட்டடங்கள்” என்பதை விலைக்கு வாங்கியது; அதில் ஒரு நாடக சாலை கட்ட ஏற்பாடு செய்து கொண்டு வருகிறோம்; அது எப்பொழுது முடியுமென்பது ஈசன் திருவுள்ளத்திற்குத் தான் தெரியும். இவ்வருடம் நான் “நல்லதங்காள்” என்னும் பழைய கதையைப் புதிய மாதிரியில் எழுதி அச்சிட்டேன். உத்தம ஸ்திரீயான நல்லதங்காள் தன் ஏழு மைந்தர்களையும் கிணற்றில் தூக்கிப் போட்டுக் கொல்வதற்கு ஒரு புதிய காரணத்தைக் கற்பித்துள்ளேன். இந் நாடகம் பேசும் படக்காட்சிக்குத் தக்கபடி அமைக்கப் பட்டுள்ளது. மேலும், இவ்வருஷம் நாடக மேடையில் தேர்ச்சி பெற விரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு என் அனுபவத்தைக் கொண்டும், நான் படித்ததைக் கொண்டும் உபயோகப்படும்படி “நாடக மேடையில் தேர்ச்சி பெறுவதெப்படி?” என்னும் பெயர் கொண்ட ஒரு சிறு புஸ்தகத்தை வெளியிட்டேன்.
1937ஆம் ஆண்டில் “ஏமாந்த இரண்டு திருடர்கள்”, “மாறுவேட விருந்து” அல்லது சபாபதி ஐந்தாம் பாகம்; “சோம்பேறி சகுனம் பார்த்தது", “கண்டவுடன் காதல்", “காவல்காரர்களுக்குக் கட்டளை", “மன்மதன் சோலை” என்னும் ஆறு சிறு நாடகங்களை அச்சிட்டிருக்கிறேன். இவைகள் பெரும்பாலும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்கு உபயோகப்படுமென எண்ணுகிறேன். மேற்கண்டவற்றுள், மூன்றில் ஸ்திரீ பாத்திரமே இல்லாதபடியால் சிறுபிள்ளைகள் எளிதில் நடிக்கக் கூடுமெனக் கருதியே இவைகளை வெளியிட்டேன். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், கன்னடம், மலையாளம், உருது ஆகிய ஏழு பாஷைகளில் நடித்ததுடன், இவ்வருஷம் நான் ஹிந்தி பாஷை கற்க ஆரம்பித்து, தசராக் கொண்டாட்டத்தில் “ஜு மதத்தியப் பெண்” என்னும் ஹிந்தி நாடகத்தில் ரோமாபுரி அரசனாக நடித்தேன்.
என்னிடமுள்ள குறிப்புகளின்படி நான் இதுவரையில் 529 முறை நாடக மேடையின் மீது ஏறியிருக்கிறேன்; “இவற்றுள் நான் வெவ்வேறு நாடகப் பாத்திரங்கள் பூண்டது 109 ஆம்; நான் இதுவரையில் எழுதி அச்சிட்டுள்ள நாடகங்களின் தொகை 68; இந்நாடகங்கள், என் அனுமதியின் மீது 4070 முறை எங்கள் சபையோராலும் மற்றவர்களாலும் ஆடப்பட்டிருக்கின்றன. என் அனுமதி இல்லாது வெளியூர்களில் இவைகள் எத்தனை முறை ஆடப்பட்டனவோ, அது ஈசன் திருவுள்ளத்திற்குத்தான் வெளிச்சம்!
1930ஆம் வருஷம் எனது நண்பராகிய சுதேசமித்திரன் பத்திராதிபர், எனது நாடக மேடை நினைவுகளைத் தன் பத்திரிகைக்கு எழுதியனுப்பும்படி கேட்க, அதற்கிசைந்து அவ்வருடம் ஜூன் மாதம் முதல், வாரம் தோறும் சில வருடங்களாக எழுதி வந்தேன். மூன்று நான்கு வருடங்கள் அவைகளை யெல்லாம் ஐந்து பாகங்களாக அச்சிட்டுள்ளேன். கடைசியாக நாளது வரையிலுள்ள நாடக மேடை நினைவுகளை இந்த ஆறாம் பாகமாக அச்சிட்டிருக்கிறேன்.
1930இல் இதை எழுத ஆரம்பித்தபொழுது, இவற்றை யெல்லாம் எழுதி முடிக்க ஈசன் எனக்கு ஆயுள் அருள்வாராக என்று பிரார்த்தித்து ஆரம்பம் செய்தேன். அப் பிரார்த்தனைக்கிசைந்து, எனக்கு ஆயுளையும், வேண்டிய ஊக்கத்தையும் தேக பலத்தையும் கொடுத்த, எல்லாம் வல்ல ஈசன் கருணையைப் போற்றி, இத்துடன் என் நாடக மேடை நினைவுகளை முடிக்கிறேன்.
ஆறாம் பாகம் முற்றிற்று
நாடக மேடை நினைவுகள் முற்றிற்று